களரி – தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம்

மூத்த கூத்துக் கலைஞரும் மற்றும் மணல் வீடு இதழாசிரியருமான மு.ஹரிகிருஷ்ணன் அவர்களிடமிருந்து  நமக்கு வந்த மடலை அப்படியே கீழே தருகிறோம் –

கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல,அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமும் ஆகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய்உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு.

மரபார்ந்த தொல்கலைக் கூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப் படுத்திக் கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும், அக்கறையையும், அதிகாரங்களுக்கு எதிரான போர்க் குணங்களையும், கலகக் குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெறவேண்டியிருக்கிறது. அத்துடன் ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வேறெந்த கொம்பு முளைத்த கலையிலக்கிய உற்பவனங்களும் தந்து விட முடியாது. சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக் கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம், உடல்,பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்.

நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும் அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச்செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும்.கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அவற்றின் தொன்மம் மாறாது பாரம்பர்யம் வழுவாது ஒப்பற்ற நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்கு கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது. மேற்சொன்ன களப்பணிகளில் கடந்த ஐந்தாண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும் களரி தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம், கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம், சேவாட்டம் முதலிய நிகழ்த்துக் கலைகளை பயிற்றுவிக்கும் படியான பயிற்சிப் பள்ளியை சேலம்மாவட்டம் ஏர்வாடியில் தொடங்கவிருக்கிறது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏலவே செயலாக்கம் பெற்றுவிட்டன. பெரும் நிதி வேண்டும் இக்களப்பணிக்கு அன்பர்கள் உற்ற நிதியுதவி செய்து உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்,
மு.ஹரிகிருஷ்ணன்.

குறிப்பு:

(நிதி கேட்டு இங்கிட்ட கோரிக்கை இரண்டாயிரத்து எண்ணூறு சதுரடி பரப்பில் அமைந்த பள்ளி மற்றும் அதனையொட்டிய வளாகத்திற்கானது மட்டும்) நிதியளிப்பவர்கள் வசதிக்காக வங்கி கணக்கு எண் குறித்த விபரமும் களரியின் செயற்பாடுகள் பற்றிய விபரமும் பின் இணைப்பாகச்சேர்க்கப்பட்டுள்ளது.

களரி தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம்:

தொன்மைக்கலையான கூத்து நிலைபெற்று நிற்க வேண்டுமெனில் அதன் நிகழ்த்துனர்கள் வாழ்வியல் பொருளாதார மேம்பாடுடையதாகவும் கலைஞர்கள் உளப்பாங்கு இடுக்குகள், சிணுக்கங்களற்றதாகவும் இருக்கவேண்டும் என்பதைத் தெளிந்து அதன் வழி அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்கும் பொருட்டும் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அவற்றின் ஆதார படிவம் மாறாது ஒப்பற்ற நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்கு கையளிக்கும் பொருட்டும் கடந்த இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு ஜனவரி மாதம் களரி தொடங்கப்பட்டது. இரண்டாயிரத்து பத்து மார்ச் மாதம் அரசு பதிவும் செய்தாகிவிட்டது. பதிவு எண் – 310|2010.

மேலாண்மை அறங்காவலர் – மு.ஹரிகிருஷ்ணன், ஜிந்தால் இரும்பாலை தொழிலாளி. கூத்துக்கலைஞர், சிறுகதையாளர், மற்றும் மணல் வீடு இதழாசிரியர்.

நிதி அறங்காவலர் – இர.தனபால், ஜிந்தால் இரும்பாலை தொழிலாளி. கூத்துக்கலை ஆர்வலர், செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு: 9894605371, 9677520060

களரி -களப்பணிகள்

முதற்கட்டமாக கொங்கு மண்டல கலைவடிவங்களான கூத்து, பாவைக்கூத்து, கட்ட பொம்மலாட்டம் ஆகியனவற்றை கலை நுகர்வுப் பரப்பில் கவனப் படுத்தும் படியாக சங்கீத் நாடக அகாதமி சார்பில் சென்னை, டில்லி, கௌகாத்தி உட்பட பிற மாநிலங்களில் நிகழ்வுகள் நடத்தியது.

சேலம் மண்டல கலைபண்பாட்டு மையம் வாயிலாக ஈரோடு மாவட்ட கூத்துக் கலைஞர்கள் நாற்பது பேர்களுக்கு வீட்டு மனை பெற்றுத் தந்தது.

கலைகளோடு கலைஞர்கள் வாழ்வியலையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் அருங்கூத்து என்றதோர் தொகைநூற் பிரதியையும், விதைத்தவசம் என்றதோர் ஆவணப் படத்தையும் வெளியிட்டிருக்கிறது.

மூத்த கலைஞர்களுக்கு அரசு வழங்கும் நல உதவிகள் பெற்றுத்தருவது உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட நிகழ்த்துக்கலைஞர்களை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச்சேர்த்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் பெற களப்பணி ஆற்றியிருக்கிறது.

கலைஞர் பெருமக்களை உத்வேகப்படுத்தும் கடப்பாட்டில் கடந்த ஐந்து வருடங்களாக விழா எடுத்து பாராட்டுக்களோடு பரிசத்தொகைகள் வழங்கி கௌரவித்திருக்கிறது.

களரி முன்னெடுத்துள்ள மற்றும் சில செயற்பாடுகள்:

பெண் பொம்மலாட்டக் கலைஞர் பெரிய சீரகாப்பாடி சரோஜா – முத்துலட்சமி அவர்கள் குறித்த ஆவணப் படத் தயாரிப்பு.

உலக பிரபஞ்சத்தில் மாசுமருவற்றதும், கலப்படமற்றதும், கேட்கின்ற பேரை மனிதனாக பண்படுத்தும் இசையாகப்பட்டது கூத்தில் இடைவெளியை இட்டு நிரப்புவதற்கும், ஒட்டு போடுவதற்கும், கதை கட்டங்களை நிகழ்வுக் கோர்வையை தளர்த்தி முறுக்குவதற்கும், வேடதாரிகள் பேசுகின்ற வசனங்களை அடிக்கோடிட்டு பார்வையாளர் இதயத்தில் அழுந்த பதிப்பதற்குமானதன்று! அது அம்பலக்கலையின் உயிர்த்தளம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் முகவீணை, மிருதங்கம் தாளம், ஹார்மோனியம் முதலிய பக்க இசைக்கலையில் விற்பன்னரான கூத்திசை மேதை அம்மாபேட்டை செல்லப்பன் அவர்களை குறித்த ஆவணப்படத்தயாரிப்பு.

ஆதியில் புழக்கத்தில் இருந்து தற்பொழுது அருகிவிட்ட கூத்து பனுவல்களை சேகரித்து பிரதியாக்கம் செய்யும் முயற்சியில் சபையலங்காரம், உடாங்கனையின் கனவு நிலை முதலிய பிரதிகளின் அச்சாக்கப் பணிகள்.

நிதி திட்ட வரைவு:

இரண்டாயிரத்து எண்ணூறு சதுரடியில் அமைந்த பள்ளிக்கட்டிடம் மற்றும் வளாகத்திற்கானது, மராமத்து பணிகள் மூன்று அறைகளுக்கு ஓட்டுக்கூரை வேய்தல், மின் இணைப்பு,கழிவறைஅமைக்க: ரூபாய் பதிநான்கு இலட்சத்து இருபதாயிரம் மாத்திரம் (14,20000).

நன்கொடைகள் வழங்க:

Kalari Heritage and Charitable Trust
A/c. No.31467515260
SB account, State Bank of India, Mecheri branch (branch code-12786)

IFSC code- SBIN0012786
MICR code- 636002023

2 Replies to “களரி – தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம்”

  1. 80G வருமான வரி விளக்கு, sec 23 அல்லது 10 (ஆராய்ச்சி) வரிவிலக்கு பெறப்பட்டுள்ளதா?

    நல்ல முயற்சி, வெற்றியடைய வாழ்த்துக்கள்

  2. இந்த நிகழ்வுகளை தமிழகமெங்கும் மூன்றுமணி நேர நிகழ்ச்சிகளாக்கி கட்டணம்
    திரட்டலாம். மேலும் அரசு அனுமதியோடு பள்ளிகூடம்களிலும் , கல்லூரிகளிலும்
    கட்டணத்தோடு கூடிய நிகழ்சிகளை நடத்தி பொருள் செற்பதொடு , இந்த சிறந்த
    கலைகளின் பெருமைகளை பரப்பி மகிழலாம்.

    தமிழக அரசு நிச்சயம் உதவும் என்பதில் ஐயம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *