ஞானமெனும் அடர்காட்டில்: பிரகதாரண்யக உபநிஷதம் – 1

இரண்டாவது அத்தியாயம், நான்காவது பிராம்மணம்

யாக்ஞவல்கியர் வேறோர் இடத்துக்கு கிளம்புகையில் கூறினார்: ‘மைத்ரேயி, வீட்டிலிருந்து (வனம் நோக்கி) செல்கிறேன். உனக்கும் காத்யாயனிக்கும் (இன்னொரு மனைவி) இடையில் பங்கீடு செய்து முடித்து விடுகிறேன்’.

மைத்ரேயி கேட்டாள்: ‘சுவாமி, நிரம்பிய செல்வத்தோடு இந்த பூமி முழுவதும் எனக்கு சொந்தமானால், நான் அழிவற்ற அமுத நிலை அடைவேனா?’

‘இல்லை,’ என்றார் யாக்ஞவல்கியர், ‘எல்லா செல்வந்தர்கள் போலவும் இருக்கும் உன் வாழ்க்கை. செல்வத்தினால் அழிவற்ற நிலை அடைவது என்பது சாத்தியமே இல்லை’.

மைத்ரேயி சொன்னாள்: ‘அழிவற்ற நிலையை அளிக்காத ஒன்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? சுவாமி, அது குறித்து தாங்கள் அறிந்தவற்றைக் எனக்குக் கூறுங்கள்’.

யாக்ஞவல்கியர் கூறினார்: ‘நீ உண்மையிலேயே எனக்கு அன்பானவள். அதனால் அன்பான சொற்களைப் பேசுகிறாய். வந்து உட்கார், அதை உனக்கு விளக்குகிறேன். நான் சொல்வதைக் கவனம் சிதறாமல் கேட்டு பின் எண்ணிப் பார்’.

அவர் சொன்னார்: ‘அடியே, மனைவி கணவனை விரும்புவதனால் கணவன் அன்பிற்குரியவனாவதில்லை. தன்னை (ஆத்மாவை) விரும்புவதாலேயே கணவன் அன்பிற்குரியவனாகிறான். கணவன் மனைவியை விரும்புவதனால் மனைவி அன்புக்குரியவளாவதில்லை. தன்னை விரும்புவதாலேயே மனைவி அன்பிற்குரியவளாகிறாள். மகன்களை விரும்புவதனால் மகன்கள் அன்புக்குரியோர் ஆவதில்லை. தன்னை விரும்புவதாலேயே மகன்கள் அன்பிற்குரியோர் ஆகிறார்கள். செல்வத்தை விரும்புவதனால் செல்வம் அன்புக்குரியது ஆவதில்லை. தன்னை விரும்புவதாலேயே செல்வம் அன்பிற்குரியது ஆகிறது. பிராமணனை விரும்புவதனால் பிராமணன் அன்புக்குரியோன் ஆவதில்லை. தன்னை விரும்புவதாலேயே பிராமணன் அன்பிற்குரியோன் ஆகிறான். க்ஷத்திரியனை விரும்புவதனால் க்ஷத்திரியன் அன்புக்குரியோன் ஆவதில்லை. தன்னை விரும்புவதாலேயே க்ஷத்திரியன் அன்பிற்குரியோன் ஆகிறான். உலகங்களை விரும்புவதனால் உலகங்கள் அன்புக்குரியவை ஆவதில்லை. தன்னை விரும்புவதாலேயே உலகங்கள் அன்பிற்குரியவை ஆகின்றன. தேவர்களை விரும்புவதனால் தேவர்கள் அன்புக்குரியோர் ஆவதில்லை. தன்னை விரும்புவதாலேயே தேவர்கள் அன்பிற்குரியோர் ஆகின்றனர். உயிர்களை விரும்புவதனால் உயிர்கள் அன்புக்குரியவை ஆவதில்லை. தன்னை விரும்புவதாலேயே உயிர்கள் அன்பிற்குரியவை ஆகின்றன. அனைத்தையும் விரும்புவதனால் அனைத்தும் அன்புக்குரியன ஆவதில்லை. தன்னை விரும்புவதாலேயே அனைத்தும் அன்பிற்குரியவை ஆகின்றன.

அடியே, அந்த ஆத்மாவைக் காண வேண்டும், கேட்க வேண்டும், உணர வேண்டும், எண்ணிப்பார்க்க வேண்டும். மைத்ரேயி, ஆத்மாவின் தரிசனத்தால், கேள்வியால், உணர்ச்சியால், அறிதலால் இவை அனைத்தும் அறியப் பட்டதாகி விடுகின்றன.

பிராமணனை தன்னில் அன்றி வேறாக அறிவோரை பிராமணன் விலக்குகிறான். க்ஷத்திரியனை தன்னில் அன்றி வேறாக அறிவோரை க்ஷத்தியன் விலக்குகிறான். உலகங்களைத் தன்னில் அன்றி வேறாக அறிவோரை உலகங்கள் விலக்குகின்றன. தேவர்களைத் தன்னில் அன்றி வேறாக அறிவோரை தேவர்கள் விலக்குகின்றனர். உயிர்களைத் தன்னில் அன்றி வேறாக அறிவோரை உயிர்கள் விலக்குகின்றன. அனைத்தையும் தன்னில் அன்றி வேறாக அறிவோரை அனைத்தும் விலக்குகின்றன. இந்த பிராம்மணனும், இந்த க்ஷத்திரியனும், இந்த உலகங்களும், இந்த தேவர்களும், இந்த உயிர்களும், இவை அனைத்தும் ‘தான்’ என்கிற ஆத்மாவே.

துந்துபி முரசம் அறையப்படும்போது அதன் பிரத்யேக அதிர்வுகள் புறத்தே உணரப் படுவதில்லை. அவை துந்துபி நாதத்தில் இணைந்துள்ளன. பல்வேறு விதமாக துந்துபியை அறையும்போது எழும் ஓசைகளும் அவ்வாறே உணரப் படுகின்றன. அது போல.

சங்கொலி முழங்கும்போது அதன் பிரத்யேக அதிர்வுகள் புறத்தே உணரப் படுவதில்லை. அவை சங்கநாதத்தில் இணைந்துள்ளன. சங்கை பல்வேறு விதமாக முழங்கும்போது எழும் ஓசைகளும் அவ்வாறே உணரப் படுகின்றன. அது போல.

வீணை இசைக்கப் படும்போது அதன் பிரத்யேக அதிர்வுகள் புறத்தே உணரப் படுவதில்லை. அவை வீணையின் நாதத்தில் இணைந்துள்ளன. வீணையைப் பல்வேறு விதமாக இசைக்கும்போது எழும் ஓசைகளும் அவ்வாறே உணரப் படுகின்றன. அது போல.

ஈர விறகில் எரியும் நெருப்பில் வேறுவேறு விதமான புகைகள் எழுவது போல, அடியே, அந்தப் பேருயிரின் சுவாசத்தில் பிறந்தன ரிக்வேதமும், யஜுர்வேதமும், சாமவேதமும், அதர்வாங்கிரசமும், இதிகாசமும், புராணமும், வித்யைகளும், உபநிஷதமும், சுலோகங்களும், சூத்திரங்களும், வியாக்கியானங்களும், விளக்கங்களும். இவையனைத்தும் விளைந்தது அந்த சுவாசத்தில்.

அனைத்து நீர்களுக்கும் ஒரே இலக்கு கடல். அனைத்து தீண்டல்களின் ஒரே இலக்கு தோல். அனைத்து மணங்களுக்கும் ஒரே இலக்கு நாசி. அனைத்து வண்ணங்களின் ஒரே இலக்கு விழி. அனைத்து ஓசைகளின் ஒரே இலக்கு செவி. அனைத்து உணர்வுகளுக்கும் ஒரே இலக்கு மனம். அனைத்து அறிவுகளுக்கும் ஒரே இலக்கு இதயம். அனைத்து செயல்களுக்கும் ஒரே இலக்கு கரங்கள். அனைத்து இயக்கங்களுக்கும் ஒரே இலக்கு கால்கள். அனைத்து வேதங்களுக்கும் ஒரே இலக்கு வாக்கு.

நீரில் போட்ட உப்புக் கட்டி, அதைத் திரும்ப எடுக்க முடியாதபடி அந்த நீரிலேயே கரைந்து விடுகிறது. எப்பகுதியை சுவைத்தாலும் அது உப்பாகவே இருக்கும். அது போல, மைத்ரேயி, அந்தப் பேருயிர் முடிவற்றது, அளவிட முடியாதது, தூய அறிவே உருக் கொண்டது. இப்பொருள்களினின்று ஆத்மா (தனிப்பட்டு) தோன்றுகிறது, அவற்றிலேயே (தனிப்பட்ட தன்மை) அழிகிறது. (ஒருமையை) அடைந்தபின், அதற்கு அடையாளமில்லை, பெயரில்லை’

என்றார் யாக்ஞவல்கியர்.

பிறகு மைத்ரேயி கேட்டாள்: ‘சுவாமி, (ஒருமையை) அடைந்தபின் அடையாளமுமில்லை, பெயருமில்லை என்று கூறி இங்கு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்’.

அவர் கூறினார் – ‘நான் சொல்வதில் குழப்பம் ஏதுமில்லை. இது நிறைந்த அறிவு, மைத்ரேயி. இருமை என்பது இருக்கையில், வேறொன்றைப் பார்க்கிறான், வேறொன்றை முகர்கிறான், வேறொன்றைக் கேட்கிறான், வேறொன்றை வணங்குகிறான், வேறொன்றை உணர்கிறான், வேறொன்றை அறிகிறான். ஆனால், அனைத்தும் ஆத்மாவே என்கையில் எவ்வாறு வேறொன்றை நுகர்வான், எவ்வாறு வேறொன்றைக் காண்பான், எவ்வாறு வேறொன்றைக் கேட்பான், எவ்வாறு வேறொன்றை வணங்குவான், எவ்வாறு வேறொன்றை உணர்வான், எவ்வாறு வேறொன்றை அறிவான்? இவை அனைத்தையும் அறிவது எவனாலோ, அவனை அறிவது எங்ஙனம்?

மைத்ரேயி, அறிவோனை அறிவது எங்ஙனம்?’

*********

உபநிஷதங்களிலேயே மிகப் பெரியதான பிரகதாரண்யக உபநிஷதம் சுக்ல யஜுர்வேதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பிரகதாரண்யகம் என்ற சொல்லின் பொருள் பெருங்காடு என்பதாகும்.யாக்ஞவல்கிய மகரிஷியின் உபதேசங்களே இந்த உபநிஷதத்தின் பெரும்பகுதியாக உள்ளன.

“அழிவற்ற நிலையை அளிக்காத ஒன்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?” என்று மைத்ரேயி யாக்ஞவல்கியரிடம் தொடுக்கும் கேள்வி இந்திய ஞான மரபில் காலங்காலமாக ஞானம் தேடி அலைந்தோர் கேட்ட கேள்வியின் எதிரொலியே ஆகும். இது குறித்து எழுதும் போது அறிஞர் வில் டுரான்ட் (Will Durant) கூறுகிறார் –

“.. and in the plea of his wife Maitreyi that he should take her with him, we catch some feeling of the intensity with which India has for thousands of years pursued religion and philosophy” (Our Oriental Heritage).

தனது அன்பு மனைவியான மைத்ரேயியை அருகமரச் செய்து அன்பு ததும்பும் மொழிகளில் தன் உபதேசத்தைத் தொடங்குகிறார் ரிஷி.

உலகில் நாம் காணும் எல்லா வகை ஈடுபாடுகளுக்கும் உறவுகளுக்கும் அடிப்படையானது ஒருவர் தனது சுயம் மீது கொள்ளும் அன்பேயாகும். “ஆத்மனஸ்து காமாய” – ஆத்மாவின் மீதான காமம். இந்த சத்திய தரிசனத்தை பல வாக்கியங்களில் மீண்டும் மீண்டும் மைத்ரேயிக்கு விளக்குகிறார் ரிஷி. “மற்ற விஷயங்கள் மீது நாம் கொள்ளும் அன்பு அனைத்தும் அவை சுயத்தின், ஆத்மாவின் இன்பத்திற்குக் காரணமானவை என்ற காரணத்தினால் தான். எனவே ஆத்மா மீது கொள்ளும் அன்பே முதன்மையானது, மற்றவை அனைத்தும் அதன் இரண்டாவது பிரதிபலிப்புகள் மட்டுமே” என்று இந்த மந்திரங்களுக்கு உரையெழுதுகையில் சங்கரர் அழகாகக் குறிப்பிடுகிறார்.

இந்த சத்தியம் சாதாரண மனங்களைத் திடுக்கிட வைக்கிறது. தன்னலம், பிறர் நலம் என்று நாம் பொதுவாகப் பேசும் கருத்தாங்களைக் குலைத்து அவை குறித்து ஆழமாகச் சிந்திப்பதற்கு நமக்கு சவால் விடுகிறது. இன்றைக்கு நவீன நரம்பியலும், உளவியலும், மரபணு விஞ்ஞானமும் கண்டறிந்து விளக்கும் ‘சுயம்’ (Self) என்ற கருத்தாக்கத்திற்கு மிக நெருக்கமாக இந்த உபநிஷத ஞானம் உள்ளது.

அந்த ஆத்மா ஏதோ பூடகமானதோ ஏழு வானங்களுக்கு அப்பாலிருப்பதோ ஆன வஸ்து அல்ல. மனித ஞானத்தாலும் தியானத்தாலும் அனுபூதியாலும் அதை உணர முடியும் என்று உறுதியும் அளிக்கிறார் ரிஷி. “ஆத்மா வா அரே ச்’ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய:” – அடியே, அந்த ஆத்மாவைக் காண வேண்டும், கேட்க வேண்டும், உணர வேண்டும், எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆத்ம போதத்திலிருந்து வேறுபட்டு, வெவ்வேறான பிரபஞ்ச போதங்களுக்கு உண்மையில் இருப்பு இல்லை. வீணை நாதம், துந்துபி ஓசை, சங்கொலி என்று அழகிய உவமைகள் மூலம் இதனை ரிஷி விளக்குகிறார். உபநிஷதங்களில் பரவலாகக் காணப் படும் கடல் – நதி, உப்புத் தண்ணீர் ஆகிய படிமங்களும் வருகின்றன.

அறிவோனை அறிவது எங்ஙனம்? (விக்ஞாதாரம் அரே கேன விஜானீயாத்) என்ற கேள்வியே இறுதி உபதேசமாக, இந்தப் பகுதி நிறைவடைகிறது.

*******

மூன்றாவது அத்தியாயம், எட்டாவது பிராம்மணம்

பிறகு கார்கி வாசக்னவி கூறினாள்: மரியாதைக்குரிய பிராமணர்களே, நான் அவரிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன். அவற்றுக்கு அவர் விடையளித்தார் என்றால், உங்களில் யாரும் பிரம்மத்தைப் பற்றிய எந்த விவாதத்திலும் அவரைத் தோற்கடிக்க முடியாது.

யாக்ஞவல்கியர்: கேள் கார்கி.

அவள் கூறினாள்: யாக்ஞவல்கியரே, காசியையோ விதேகத்தையோ சேர்ந்த வீரமகன், தனது வில்லை இழுத்து நாண்பூட்டி, எதிரிகளைக் கொல்லும் இரண்டு கூரிய அம்புகளைக் கையிலேந்தி போர் செய்ய எழுவது போல, இந்த இரு கேள்விகளுடன் உங்களுக்கெதிரில் எழுகிறேன். இவற்றுக்கு விடையளியுங்கள்.

யாக்ஞவல்கியர்: கேள் கார்கி.

அவள் கூறினாள்: யாக்ஞவல்கியரே, வானுக்கும் மேலுள்ளது, பூமிக்கும் கீழுள்ளது அது. வானுக்கும் பூமிக்கும் இடையிலுள்ளது அது என்பர். கடந்தவையும் நிகழ்பவையும், வருபவையும் ஊடும் பாவும் போல விரவியுள்ளது அதில். அது எது என்று எனக்குக் கூறுங்கள்.

யாக்ஞவல்கியர்: வானுக்கும் மேலுள்ளதும், பூமிக்கும் கீழுள்ளதும், வானுக்கும் பூமிக்கும் இடையிலுள்ளதும், கடந்தவையும் நிகழ்பவையும், வருபவையும் ஊடும் பாவும் போல விரவியுள்ளதும் ஆகாசம் (வெளி).

அவள் கூறினாள்: உம்மை வணங்குகிறேன், யாக்ஞவல்கியரே. எனக்கு விடை சொல்லிவிட்டீர்கள். இதோ இன்னொன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

யாக்ஞவல்கியர்: கேள் கார்கி.

அவள் கூறினாள்: அப்போது, அந்த ஆகாசம் ஊடும் பாவும் போல விரவியுள்ளது எதில்?

யாக்ஞவல்கியர்: கார்கி, பிராமணர்கள் அதை ‘அழிவற்றது’ (அக்ஷரம்) என்று அழைக்கிறார்கள். அது தூலமானதல்ல, துகளுமல்ல. நீளமானதல்ல, குறுகியதுமல்ல. செந்தீயல்ல, நீருமல்ல. நிழலற்றது, இருளற்றது, வளியற்றது, வெளியற்றது (அனாகாசம்), பற்றற்றது, ரசமற்றது, மணமற்றது, விழியற்றது, செவியற்றது, வாக்கற்றது, மனமற்றது, ஒளியற்றது, மூச்சற்றது, முகமற்றது, அளவற்றது, உள்ளும் வெளியும் அற்றது. அது எதையும் உண்பதில்லை. எதுவும் அதை உண்பதில்லை.

அந்த அழிவற்றதன் ஆணையால், கார்கி, நிலவும் ஞாயிறும் நிலைபிறழாது நிற்கின்றன. அந்த அழிவற்றதன் ஆணையால், கார்கி, வானமும் பூமியும் நிலைபிறழாது நிற்கின்றன. அந்த அழிவற்றதன் ஆணையால், கார்கி, நிமிஷங்களும் முகூர்த்தங்களும் நாட்களும் அரைமாதங்களும் மாதங்களும் பருவங்களும் வருடங்களும் நிலைபிறழாது நிற்கின்றன. அந்த அழிவற்றதன் ஆணையால், கார்கி, வெண்மலையினின்று சில நதிகள் கிழக்காக ஓடுகின்றன, சில மேற்காக ஓடுகின்றன, மற்றவை வேறு திசைகளில் ஓடுகின்றன. அந்த அழிவற்றதன் ஆணையால், கார்கி, மனிதர் தானம் தருவோரைப் புகழ்கின்றனர். தேவர்கள் வேண்டுவோரையும், பித்ருக்கள் பலிச்சோற்றையும் தொடர்கின்றனர்.

கார்கி, அந்த அழிவற்றதை அறிந்திடாமல், இவ்வுலகில் அவி தருவோன், வேள்வி செய்வோன், ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிவோனின் செயல்களுக்கு இறுதி இங்கேயே. அந்த அழிவற்றதை அறிந்திடாமல் இவ்வுலகை விட்டுச் செல்பவன் தளைப்பட்டவன். அந்த அழிவற்றதை அறிந்து இவ்வுலகை விட்டுச் செல்வோன், அவனே பிரம்மத்தை அறிந்தவன், பிராமணன்.

அந்த அழிவற்ற பொருள், கார்கி, காணப் படாதது, ஆனால் காண்பது. கேட்கப் படாதது, ஆனால் கேட்பது. உணரப் படாதது, ஆனால் உணர்வது. அறியப் படாதது, ஆனால் அறிவது. வேறெதுவுமல்ல, அதுவே காண்கிறது. வேறெதுவுமல்ல, அதுவே கேட்கிறது. வேறெதுவுமல்ல, அதுவே உணர்கிறது. வேறெதுவுமல்ல, அதுவே அறிகிறது. அந்த அழிவற்றதில், கார்கி, ஆகாசம் ஊடும் பாவும் போல விரவியுள்ளது.

அவள் கூறினாள்: மரியாதைக்குரிய பிராமணர்களே, இவர் முன்பு தலைவணங்குவது மகத்தானது. பிரம்மத்தைப் பற்றிய விவாதத்தில் இவரை யாரும் வெல்ல முடியாது.

பிறகு கார்கி வாசக்னவி அமைதியாக அமர்ந்தாள்.

*******

வேத, உபநிஷத காலத்தில் பெண்கள் நிலை மிக உயர்வாக இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளன என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ரிக்வேத சம்ஹிதையில் 26 பெண் ரிஷிகள் (ரிஷிகாக்கள்) அருளிய சூக்தங்கள் உள்ளன. பிரம்மவாதினி என்றழைக்கப் பட்ட பெண் ரிஷிகள் உபநிஷத ஞான விவாதங்களில் பங்கு கொண்டனர். மைத்ரேயியும் கார்கியும் எப்படி எந்த தயக்கமும் இன்றி யாக்ஞவல்கியர் போன்ற ஒரு மகரிஷியிடம் தங்களது கேள்விகளைத் தொடுக்கின்றனர் என்பதையும் இந்தப் பகுதிகளிலிருந்து அறிய வருகிறோம்.

காலம், இடம் இரண்டையும் இணைக்கும் தொடர் நிகழ்வாக (space time continuum) ஆகாசம் என்ற கருத்தாக்கத்தை யாக்ஞவல்கியர் முன்மொழிகிறார். பின்னர் அந்த ஆகாசமும் நிலைபெற்றிருக்கும் ஒற்றைப் புள்ளியாக (singularity) “பிரம்ம” தத்துவத்தை முன்னிறுத்தி அதனை அக்ஷரம் என்ற பெயரால் குறிக்கிறார். பிறகு பிரம்ம தத்துவத்தை குணங்கள் ஏதும் அற்றதாகவும் (நிர்குணம்), பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்தளிக்கும் குணங்கள் கொண்டதாகவும் (சகுணம்) என்று இரண்டு விதமாகவும் வர்ணிக்கிறார்.

மைத்ரேயி உடனான சம்வாதத்தில் வேறொன்றில்லாத ஒருமை என்பதாக ஆத்ம தத்துவம் கூறப் பட்டது. கார்கி உடனான சம்வாதத்தில் வேறொன்றில்லாத ஒருமை என்பதாக பிரம்ம தத்துவம் கூறப் படுகிறது. இதன் மூலமாக  ஜீவ பிரம்ம ஐக்கியம் என்ற தூய அத்வைத தத்துவத்தை இந்த உபநிஷப் பகுதிகள் அறுதியிட்டுக் கூறுகின்றன என்று அத்வைத பரமான உரையாசிரியர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

“அந்த அழிவற்றதை அறிந்திடாமல் இவ்வுலகை விட்டுச் செல்பவன் தளைப்பட்டவன்” என்ற வாக்கியம் மூலமாக, ஞானத் தேடலும் ஆத்ம தரிசனமுமே மனித வாழ்க்கையின் இறுதி விடுதலை இலக்கு என்பதையும் உபநிஷதம் கூறுகிறது.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

– திருமூலர்

(தொடரும்)

7 Replies to “ஞானமெனும் அடர்காட்டில்: பிரகதாரண்யக உபநிஷதம் – 1”

  1. வணக்கத்திற்குரிய ஜடாயு அவர்களுக்கு,

    உங்களின் இந்த படைப்பிற்கு எனது கோடான கோடி நன்றிகள். உங்களின் முயற்சியால் நமது எல்லா பொக்கிஷங்களும் தமிழுறு பெற்று உலகில் உள்ள எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டுகிறேன்.

    வணக்கத்துடன்,
    க. வ. கார்த்திகேயன்.

  2. ஜடாயு,

    கலக்குகிறீர்கள்! இந்த மொழிபெயர்ப்புகளை தமிழ்ஹிந்து புத்தகமாக வெளியிட வேண்டும்…

  3. வேறொன்றில்லாத ஒருமை”- மிகவும் அற்புதமான வரிகள் இந்த தொடர் முடிந்ததும் தொகுத்து புத்தக வடிவம் தந்தால் மிக நன்றாயிருக்கும்.

    ஜடாயுவின் பணி மேலும் தொடரட்டும்.

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  4. Excellent one. Sri Jadayu god gives you good health for this continuing this type of seva.

  5. ஸ்ரீ ஜடாயு கேவலாத்வைத நோக்கில் தொடங்கியுள்ள கட்டுரை அருமையாக உள்ளது. கொஞ்சம் ஒப்பாய்வு நோக்கில் அதாவது த்வைத விஷிஷ்டாத்வைத அத்வைத விளக்கங்களை ஒப்பிட்டு வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். இருப்பது ஒரே மெய்ப்பொருள் என்பதை ஒத்துக்கொள்ளாத நிலையில் நம்மில் நூற்றுக்கு தொன்நூறு பேருக்கு மேல் இருக்கையில். வெறும் அத்வைத விளக்கம் போதாது.
    இன்னும் ஒன்று கட்டுரையின் தலைப்பில் ஒரு குறை. ஞானம் எப்படி அடர்ந்த பெரும் காடாக இருக்கமுடியும். அடர்ந்த பெருங்காட்டில் பேரொளியாக வே ஞானம் விளங்கும். ஞானம் இல்லாத வாழ்வே பெரும்காடு.
    விபூதிபூஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *