இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

11.1 யானைக்கும் அடி சறுக்கும்

இராமர் விந்திய மலைத்தொடரைத் தாண்டி சீதை, மற்றும் லக்ஷ்மணனுடன் அகஸ்தியர் ஆஸ்ரமத்தை சென்றடைந்தார். அவர்களை அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்று கோதாவரி நதிக்கரையில் உள்ள பஞ்சவடி அவர்கள் தங்குவதற்கு ஒரு நல்ல இடம் என்று சொன்னார். அகஸ்தியர் ஒரு தீர்க்கதரிசியாதலால் அரக்கர்கள் அவர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடும் என்று எதிர்பார்த்து, அவர்களுக்கு வில், அம்பு ஆயுதங்களைக் கொடுத்து அரக்கர்களை எதிர்ப்பதற்கென்று வைத்துக்கொள்ளச் சொன்னார். அரக்கர்களை எதிர்க்கும் தருணம் ஒருவேளை வந்துவிட்டால், அப்போது கூட இருக்கும் பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். பொதுவாகப் பெண்களின் மனம் குறுகிய காலத்தில் அடிக்கடி திடீரென்று மாறக்கூடியது; அதனால் அவர்கள்கூடத் தங்குபவர்களுக்கு உதவியாக இருப்பதற்குப் பதிலாக பிரச்சினைகளைத் தோற்றுவிப்பார்கள். ஆனால் சீதை ஒரு சாதாரணப் பெண்ணைவிட மனோதிடம் கொண்டவளாய் இருப்பதால், இடர்கள் வரும்போது அவள் அவர்களுக்கு உதவுபவளாகத்தான் இருப்பாள் என்று சொல்லி, இந்த விஷயத்தில் அவள் வசிஷ்டரின் மனைவி அருந்ததி போல என்று இருவரைப் பற்றியும் மிக்க பெருமையுடன் பேசினார்.

 

ஸ²தஹ்ரதா³னாம்ʼ லோலத்வம்ʼ ஸ²ஸ்த்ராணாம்ʼ தீக்ஷ்ணதாம்ʼ ததா²|

க³ரூடா³னிலயோஸ்²ஸை²க்⁴ர்யமனுக³ச்ச²ந்தி யோஷித:|| 3.13.6||

 

யோஷித: = women in general,பொதுவாகப் பெண்கள்

ஸ²தஹ்ரதா³னாம் =  of the lightnings, மின்னலைப்போல

லோலத்வம் =  instability, நிலையில்லாத

ஸ²ஸ்த்ராணாம் =  of weapons, ஆயுதங்கள்

தீக்ஷ்ணதாம் =  sharpness, கூரானதாக

ததா²  = like that, போல

க³ரூடா³னிலயோஹொ = of king of birds and wind, கருடன் அல்லது வாயு

ஸை²க்⁴ர்யம் = speed, வேகம்

அனுக³ச்ச²ந்தி =  will follow, இருக்கும் , வரும்.

பொதுவாகப் பெண்கள் மின்னலைப்போல நிலையில்லாததாகவும், ஆயுதங்களைப்போல கூரானதாகவும், கருடன் அல்லது வாயுவைப் போல வேகமானதாகவும் மாறும் மனம் கொண்டவர்கள்.

 

பெண்களைப் பற்றிப் பொதுவாக இங்கு கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள், தற்காலத்துப் பெண்களால் ஒத்துக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். காலம் வெகுவாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் இப்படிப்பட்ட பெண்களைப்பற்றிய கருத்துக்களை நம்மில் பெரும்பாலோரும் நிச்சயமாக ஆதரிப்பதில்லை. ஆனால் இங்கு அவர் சொன்னதையும், பின்பு நடந்ததையும் பாருங்கள். அகஸ்தியருக்குத் தான் சொன்ன கருத்துக்களுக்கு முற்றிலும் மாறான குணங்களை உடைய பெண்களைப் பற்றியும் தெரியும் என்பதை, அவரே சீதையும், அருந்ததியும் அப்படி அல்லாத மனோதிடம் கொண்ட பெண்கள் என்பதைச் சொல்லிக் காட்டுகிறார். தீர்க்கதரிசியான அவரது இந்தக் கூற்று யானைக்கும் அடி சறுக்கும் என்பதைக் காட்டுகிறது. ஏனென்றால் அவரால் அப்படிப் புகழப்பட்ட சீதைதான் ஒரு அரக்கன் தங்க மான் போல வரும்போது அதன் அழகால் கவரப்பட்டு ஏமாறுகிறாள். அப்படி அவள் ஒரு சாதாரணப் பெண்மணியைப்போல ஏமாந்ததினால்தான், அவள் இராமரை மட்டுமன்றி அவர் கூட இருந்தோர் அனைவரையும் மிகுந்த துயரத்திற்கும், துன்பத்திற்கும் உள்ளாக்குகிறாள்.

11.2 வீசும் காற்றும் வெப்பநிலை தோற்றமும்

கவின் மிக்க இயற்கைச் சூழ்நிலை இருக்கும் ஓர் இடத்தில் லக்ஷ்மணன் ஒரு அழகான குடிலைக் கட்டினான். நல்ல உணவாகும் கனிந்த பழங்கள், பூஜைக்கு வேண்டிய மணம் மிக்க பூக்கள், மற்றும் குளிப்பதற்கு தெள்ளிய நீர் இவை எல்லாம் கிடைக்கும் இடமாகவும் அது இருந்தது. குளிர் காலமும் விரைவில் வந்து சேர்ந்தது. பருவ காலங்களைப் பற்றி நன்கு விவரித்து எழுதும் வால்மீகி முனிவரும், இக்குளிர் காலம் பற்றியும் நன்கு எழுதியிருக்கிறார். அதில் ஒரு செய்யுளில், இயற்கையின் குளிர் காலப் பருவத்தில் வீசும் காற்று தட்பவெப்பத்தை இருமடங்கு குறைப்பது போல் காட்டுகிறது என்று சொல்லியிருக்கிறார். ( இந்திய விமானப் படையில் வானிலை தொடர்பான வேலையில் முதன்மை அதிகாரி என்பதால், மூல ஆசிரியர் இதைத் தேர்ந்தெடுத்ததில் வியப்பு ஏதும் இல்லை.)

 

ப்ரக்ருʼத்யா ஸீ²தலஸ்பர்ஸோ² ஹிமவித்³த⁴ஸ்²ச ஸாம்ப்ரதம்|

ப்ரவாதி பஸ்²சிமோ வாயு: காலே த்³விகு³ணஸீ²தல:|| 3.16.15|

 

ப்ரக்ருʼத்யா = by nature, இயற்கையில்

ஸீ²தலஸ்பர்ஸோ² =  cold feel, உணரப்படும் குளிர்

ஸாம்ப்ரதம் =  at this time, இந்த சமயம்

ஹிமவித்³த⁴ஸ்²ச =  hit by snow, பனி வீச்சு

பஸ்²சிமோ வாயு: = wind from the western direction, மேலைக் காற்று

காலே =  at this time, இந்த சமயம்

த்³விகு³ணஸீ²தல: = double the cold, குளிர் இரண்டு மடங்காக

வாதி = blowing, வீசுகிறது.

 

குளிர் காலத்தில் பொதுவாக காற்று சில்லென்றும், பனி பெய்தவாறும் இருக்கும். அதற்கும் மேலாக மேற்குப் பக்கத்தில் இருந்து பலத்த காற்றும் வீசுவதால் குளிர் இரண்டு மடங்காகத் தெரிகிறது.

 

வீசும் காற்று ஒருவரின் உடல் வெப்பத்தைத் தணிப்பதால், காற்று இருக்கும் நாட்களில் ஒருவருக்குக் குளிர் தெரிகிறது. காற்று பலமாக வீசும்போது குளிரும்  இன்னும் அதிகமாகத் தெரிகிறது. தற்காலத்தில் காற்று வீச்சின் அளவைக்கொண்டு வெப்பநிலையை அறியும் முறைக்கு “காற்றால் மாறும் தட்பவெப்பக்  குறியீடு” (Wind chill factor) என்று பெயர். வால்மீகியின் காலத்தில் வெப்பத்தை அளக்கும் முறையும் தெரியாது, உஷ்ணமானியும் (thermometer)  கிடையாது. ஆனாலும் அந்தக் காலத்திலேயே, வெப்பநிலை ஒன்றாய் இருந்தாலும் வீசும் காற்றிற்கு ஏற்ப அதை உணர்வது வேறாக இருக்கும் என்கின்ற தத்துவத்தை அறிந்து, அதை எழுதியும் வைத்திருக்கும் வால்மீகி போன்றோர்களுக்கு தற்காலத்து வானிலை ஆய்வாளர்கள் வணக்கத்துடன் நன்றி கூறாவிட்டாலும், இதைப் பற்றிய அறிவு அன்றே இருந்திருக்கிறது என்றாவது தெளியவேண்டும்.

11. 3 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

பஞ்சவடியில் ஒரு நாள் அவர்கள் கடுங்குளிரைத் தாங்கமுடியாது அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, லக்ஷ்மணனுக்கு முன்னாள் ஞாபகம் வர ஆரம்பித்தது. அப்போது அவன் தங்களுக்குத்தான் அப்படி அமைந்தது விதி என்றால், சகல போகங்களுடன் அயோத்தி அரண்மனையில் வசதியாய் இருக்கவேண்டிய பரதனும், தன்னிச்சையாக நம்மைப்போலவே இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, குளிரைப்போக்க எந்தவித ஏற்பாடுகளையும் செய்யாமல் தவிக்கிறானோ என்று ஏங்கினான். பரதன் எப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவன், அவன் தாயாயிருந்தும் கைகேயி எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறாள், சாதாரணமாக தாயைப்போல பிள்ளை என்பார்கள், ஆனால் பரதனோ வேறுமாதிரி இருக்கிறானே என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். கைகேயியைப் பற்றிக் குறைவாகப் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த இராமர் அதை ரசிக்கவில்லை. உடனே அவர் கைகேயிப் பற்றித் தாறுமாறாகப் பேசாதே என்று லக்ஷ்மணனைக் கோபித்துக் கொண்டார்.

 

ஸ தே(அ)ம்பா³ மத்⁴யமா தாத க³ர்ஹிதவ்யா கத²ஞ்சன|

தாமேவேக்ஷ்வாகுனாத²ஸ்ய ப⁴ரதஸ்ய கதா²ம்ʼ குரு|| 3.16.37||

 

தாத = dear, அன்பார்ந்த

மத்⁴யமா = middle, நடு

(அ)ம்பா³ = mother, தாயார்

கத²ஞ்சன = somehow, கண்டபடி

தே = to you, உனக்கு

ந க³ர்ஹிதவ்யா = not to be criticized, குறைகூறக் கூடாது

இக்ஷ்வாகுனாத²ஸ்ய = of the lord of Ikshvaku, இஷ்வாகு குல அரசனனைப் பற்றி

ப⁴ரதஸ்ய = Bharata’s, பரதனைப்

தாம் கதா²மேவே = about him, அவனைப் பற்றி

குரு = you may, பேசலாம்.

 

அன்பார்ந்த லக்ஷ்மணா! நம் சிறிய தாயார் கைகேயியைப் பற்றிக் கண்டபடி குறைகூறி எப்போதுமே பேசாதே. இஷ்வாகு குல அரசனான பரதனைப் பற்றி நீ பேசலாம்.

 

ஒருவரைப் பற்றிப் புகழும்போது மற்றவரை மட்டம் தட்டிப் பேசுவது ஒரு அருவருக்கத்தக்க செயல். இங்கு இராமர் சொல்வதும், “யாரைப் பற்றியும் எப்போதும் இகழ்ந்து பேசக் கூடாது” என்பதாகும்.

11.4 விளையாட்டு வினை ஆகக்கூடாது

பஞ்சவடியில் இருந்த மிக மகிழ்ச்சிகரமான நாட்கள், சூர்ப்பனகையின் வரவிற்கு அப்புறம் திடீரென்று ஒரு முடிவுக்கு விட்டது. தண்டகாரண்யத்தில் அரக்கர்களின் கொட்டம் இருந்தாலும், விராதன் என்ற ஒரு அரக்கனைத் தவிர வேறெந்த அரக்கர்களிடம் இருந்தும் நல்லவேளையாக இராமருக்கு எந்தத் தொல்லைகளும் வரவில்லை. அவரது நல்லவேளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதுபோல், சூர்ப்பனகை என்ற ஒரு அரக்கி வந்து சேர்ந்தாள். அவள் கொடூரமான அரக்கர் வம்சத்தில் வந்த இலங்கை அரசனான ராவணனின் தங்கை. எந்த உருவத்தை விரும்புகிறாளோ அந்த உருவத்தை எடுக்கும் வல்லமை கொண்ட அரக்கியான அவள், இங்கு ஒரு அழகிய பெண் வடிவில் வந்து நிற்கிறாள். பார்த்ததுமே இராமரின் அழகில் மயங்கிய அவள், சீதையை விலக்கிவிட்டு தன்னை அவரது மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறாள். அதற்கு ஒத்துக்கொள்ள முடியாது என்றால், மனிதர்களின் மாமிசத்தை விரும்பும் அவள் ராம-லக்ஷ்மணர்களைக் கொன்று தின்றுவிடுவதாக எச்சரிக்கிறாள். அப்படி அவள் சொன்னது அவளது உண்மை சொரூபத்தைக் காட்டிவிட்டது.

 

இராமர் தனக்கு ஏற்கனவே மணமாகி விட்டதால், அவள் கையைப் பிடிக்க இன்னும் மணம் புரியாத தன் தம்பியிடம் கேட்கும்படி சொல்ல, அவளும் லக்ஷ்மணனிடம் அப்படியே கேட்கிறாள். எனக்கு வேண்டாம் இந்தப் பூசணிக்காய் என்று உருட்டுவதுபோல, லக்ஷ்மணனும் தன் பங்கிற்கு தன்னைவிட அண்ணன் ராமனே அவளுக்குத் தகுதியானவர் என்று அவர் பக்கம் கை காட்டுகிறான். அதைக் கேட்ட அவளோ தன் விருப்பத்திற்குத் தடையாய் இருக்கும் சீதை இல்லாது போய்விட்டால், இராமர் தன்னை ஒருவேளை மணம் புரியக்கூடும் என்று நினைத்து சீதையைக் கொல்வதற்கு தயார் ஆகிறாள். விளையாட்டு வினையாகிக் கொண்டிருப்பதைப் பார்த்த இராமர் பதட்டம் கொண்டு, லக்ஷ்மணனிடம் வேடிக்கைப் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாத ஞான சூன்யங்களிடம் இம்மாதிரிப் பேசுவதில் அர்த்தம் இல்லை என்று சொல்லி, நிலைமை இன்னும் விபரீதம் ஆகும் முன்பாக சூர்ப்பனகையை தடுத்து நிறுத்தச் சொல்கிறார்.

 

க்ரூரைரனார்யை ஸ்ஸௌமித்ரே பரிஹாஸ: கத²ஞ்சன|

ந கார்ய: பஸ்²யவைதே³ஹீம்ʼ கத²ஞ்சித்ஸௌம்ய ஜீவதீம்|| 3.18.19||

 

ஸௌம்ய = O Gentle one, மென்மையானவனே!

ஸௌமித்ரே = Lakshmana, லக்ஷ்மணா!

க்ரூரை = by the cruel ones wicked, கொடூரமானவர்களிடமும்

அனார்யை = by the unrespectable one, மதிக்க முடியாதவர்களிடமும்

கத²ஞ்சன = indeed, நிச்சயமாக

பரிஹாஸ: = fun, வேடிக்கை न not,

கார்ய: = not proper, சரியல்ல

கத²ஞ்சித் = somehow, எப்படியோ

ஜீவதீம் = a living lady, காப்பாற்ற

வைதே³ஹீம் = Sita, சீதையை

பஸ்²ய = see., பார்.

 

லக்ஷ்மணா! கொடூரமானவர்கள், எவ்விதத்திலும் மதிக்க முடியாதவர்கள் போன்றோரிடம் வேடிக்கைப் பேச்சு என்பது நிச்சயமாக வினையாகவே விளையும். உடனே சீதையைக் காப்பாற்றுவதில் உன் கவனம் இருக்கட்டும்.

 

ஆழ்ந்த கருத்துக்களுக்கும், சாதாரண பேச்சுக்களுக்கும் வேற்றுமை புரியாதவர்களிடம் பேசப்படும் வேடிக்கைப் பேச்சு வினையில்தான் கொண்டுவிடும். ஆதலால் அத்தகைய பேச்சுக்களை தெரியாமல் ஆரம்பித்துவிட்டாலும் உடனுக்குடன் முடிக்கவேண்டும். இல்லையேல் அதன் விளைவு மோசமாக இருக்கும். வால்மீகி சொல்லும் கருத்துப்படி ஒருவன் வேடிக்கையாகப் பேசுகிறான் என்றால் கலாச்சார அளவில் அவன் முன்னேறி இருக்கிறான் என்று அர்த்தம். அதில் பின்தங்கி உள்ளவர்களுக்கு அத்தகைய பேச்சின் நுணுக்கங்கள் பற்றித் தெரியும் வாய்ப்பு அதிகம் இல்லை.

11.5 வருமுன் காப்போன்

கொலை செய்யும் எண்ணத்துடன் சீதையை நெருங்கிக்கொண்டிருக்கும் சூர்ப்பனகையின் மூக்கையும், காதுகளையும் லக்ஷ்மணன் வாளால் துண்டித்து விட்டான். அந்தத் தாக்குதலிருந்து அவளுக்கு அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல என்று தெரிந்துவிட்டது. அவள் உடனே ஜனஸ்தானில் பதினான்காயிரம் ஆட்கள் உள்ள படைக்குத் தளபதியாய் உள்ள தனது சகோதரன் கராவிடம் சென்று, தனக்கு மானிடர்களால் நேர்ந்த அவமானகரமான

கதியைச் சொல்லிப் புலம்பி அழுதாள். கோபம் கொண்ட அவனும் தாக்கியவர்களைக் கொல்வதற்கு, சூர்ப்பனகையுடன் பதினாறு ராக்ஷச வீரர்களையும் அனுப்பி வைத்தான். அந்தப் பதினாறு வீரர்களும் இராமரால் கொல்லப்படவே, அவள் மறுபடியும் கராவிடம் ஓடி வந்தாள். அங்கே அரக்கர்களின் ஆட்சிக்கே உலை வைக்கப்படக் கூடிய ஆபத்து இருப்பதை உணர்ந்த கரா மிகுந்த கோபத்துடன், மானிடர்களை பூண்டோடு ஒழிக்க தன் பதினான்காயிரம் வீரர் படையைத் தூஷனா என்ற தளபதியின் தலைமையில் பஞ்சவடிக்கு அனுப்பி வைத்தான். அவர்கள் போர் முரசு கொட்டி வரும் ஆரவாரத்தைக் கேட்ட இராமர், சீதையை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்க எண்ணினார். அவர் லக்ஷ்மணனிடம் சீதையை அருகில் இருக்கும் மலை ஒன்றின் குகைக்கு அழைத்துக்கொண்டு போய், தான் அரக்கர்களிடம் போர் புரியும் வரை அவளுக்குக் காவலாகவும் இருக்கச் சொல்கிறார். ஒரு பெண்மணி போர்க்களத்தில் இருப்பது உசிதம் அல்ல என்றும், பஞ்சவடியில் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் அவளைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போகவேண்டும் என்பதே அவர் எண்ணம்.

 

அனாக³தவிதா⁴னம்ʼ து கர்தவ்யம்ʼ ஸு²ப⁴மிச்ச²தா|

ஆபத³ம்ʼ ஸ²ங்கமானேன புருஷேண விபஸ்²சிதா|| 3.24.11||

 

ஆபத³ம் = danger, அபாயம்

ஸ²ங்கமானேன = by a person expecting it, வரப்போவதை உணர்பவனால்

ஸு²பம் = good, நல்ல

இச்ச²தா = by one desirous of, செய்யவேண்டும் என்பவனால்

விபஸ்²சிதா = by a learned one, அறிவுள்ளவனால்

புருஷேண = by a man, மனிதனால்

அனாக³தவிதா⁴னம் = before the onset of danger, அபாயம் வருமுன்னால்

கர்தவ்யம் ஹி = should be planned, யோசித்துச் செய்யவேண்டும்.

 

வரப்போகும் அபாயத்தை உணர்ந்து அதற்கு மாற்று வழிகளை யோசித்துச் செய்வதே, நல்ல பலன்களை எதிர்பார்க்கும் ஒரு அறிவார்ந்த மனிதனின் செயல்.

அபாயம் வருமுன்னே செய்யவேண்டியதைப் பற்றி நன்கு யோசித்து அதைச் செய்யவும் வேண்டும். துன்பம் வந்தபின் கைகளைப் பிசைந்துகொண்டு என்ன செய்வது என்று முழிக்கக் கூடாது. அதாவது, வருமுன் காப்போனாக இருக்க வேண்டும்; வந்தபின் முழிப்போனாக இருக்கக் கூடாது.

11.6 இன்னா செய்பவர்க்கு இன்னல் வரும்

தூஷனா தலைமையில் வந்த அரக்கர் படை இராமரைத் தாக்க, அவரும் ஒரே ஆளாக நின்று பதில் தாக்குதல் நடத்தி அந்தப் படையை நிர்மூலமாக்கினார். அடுத்து திஷிரா என்ற அரக்கன் வந்து தாக்க, அவனும் அவரால் கொல்லப்பட்டான். கடைசியில் எஞ்சியிருந்த தளபதி கரா ஒரு தேரில் அந்தப் போர்க்களத்துக்கு வந்தான். கையில் கதை ஒன்று ஏந்தி தேரில் இருந்து குதித்து அவரைத் தாக்க அவன் பாய்ந்து வரும்போது, இராமர் அவன் அங்கு செய்ததைப்பற்றிச் சொல்லி அவன் ஏன் அப்படிச் செய்தான் என்றும் கேட்கிறார். பாவச்செயல் என்று ஏதும் அறியாத அங்கிருந்த ஞானிகளையும், மற்றும் எந்தத் தொல்லையும் அவனுக்குத் தராத தபஸ்விகளையும் அவன் இரக்கமின்றிக் கொன்று குவித்த அவன் மகா பாவம் செய்தவன் ஆகிறான். எந்தப் பாவம் செய்பவர்களும் தான் தண்டனையிலிருந்து  தப்பித்து விடலாம் என்றே தவறாக நினைக்கின்றனர். இன்றில்லாவிட்டாலும் என்றாவது அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறார்.

 

நசிராத்ப்ராப்யதே லோகே பாபானாம்ʼ கர்மணாம்ʼ ப²லம்|

ஸவிஷாணாமிவான்னானாம்ʼ பு⁴க்தானாம்ʼ க்ஷணதா³சர|| 3.29.9|
க்ஷணதா³சர O! Rakshasa, அரக்கனே!

லோகே = in the world, இந்த உலகில்

பாபானாம் = of sinful, பாவத்துடன்

கர்மணாம் = of actions, கூடிய செயல்களை

ப²லம் = result, பலன்

பு⁴க்தானாம் = eaten, சாப்பிட்ட

ஸவிஷாணாம் = poisonous, விஷத்துடன்

அன்னானாமிவ = like the food, உணவைப் போல

நசிராத் = soon, சீக்கிரம்

ப்ராப்யதே = will obtain, அடைவார்கள்.

அரக்கனே! இந்த உலகில் எவரும், விஷம் கலந்த உணவினால் அனுபவிக்கும் முடிவைப்போல, தாங்கள் செய்த பாவத்திற்கு உண்டான பலனைச் சீக்கிரம் அனுபவிப்பார்கள்.

பாவங்கள் செய்யும் எவருக்கும் ஒரு கொடூர மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் கூடிய சீக்கிரம் அதற்குண்டான கசப்பான பலன்கள் அவர்களைத் தண்டனையாக வந்தடைகிறது.

(தொடரும்)

One Reply to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *