மேட்டிமைவாதமும் மிருகபலியும்: ஒரு சிறுகதையை முன்வைத்து..

சுஜாதா தேசிகன் எழுதிய அபார்ட்மென்ட் எண் : ஈ505 என்ற இந்தக் கதையை சமீபத்தில் இணையத்தில் படித்தேன். கல்கி இதழிலும் இக்கதை வெளிவந்துள்ளது.

கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் எல்லாம் கற்பனையே என்பது கதாசிரியர்களும், பத்திரிகைகளும் சொல்லக் கூடிய வழக்கமான ஒரு disclaimer தான். ஆனால், கதைகள் நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புகள் என்பதோடு, அவை படிக்கப் படும் சூழலில் ஒரு கருத்து அலையையும் கட்டாயம் உருவாக்குகின்றன என்பதே உண்மை. ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் மட்டுமல்ல, வணிக எழுத்தின் மூலம் தமிழ்ச் சிந்தனையில் புதுரத்தம் பாய்ச்சிய சுஜாதாவின் கதைகளும் கூட அப்படித் தான் இருந்திருக்கின்றன. சமூகவியலாளர்களும் ஆய்வாளர்களும் கூட கதைகளைத் தங்கள் கண்ணோட்டங்களுக்கு சான்றுகளாக சுட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இந்த நோக்கில் தான் இக்கதை பற்றிய என் பார்வையை எழுதுகிறேன்.

கதை இது தான். விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதியில், வனகாளியம்மன் கோயிலில் தொடர்ந்து அம்மக்கள் வழிபாடு செய்யும் இடத்தில் உள்ள நிலத்தின் ஒரு பகுதியை எடுத்து (பெரும்பாலும் அபகரித்து) அங்கு கட்டப் பட்டிருக்கும் அபார்ட்மெண்ட் ஒன்றை நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் என் ஆர் ஐ ஒருவர் வாங்குகிறார். அமெரிக்காவில் அவர் வேலை காலியாக, வேறு வழியில்லாததால் பெங்களூரில் கரையொதுங்கி, அந்த அபார்ட்மெண்டில் வசிக்கவும் நேர்ந்து விடும் துர்ப்பாக்கியத்திற்கு ஆளாகி விடுகிறார். என்.ஆர்.ஐக் காரரின் உணர்வுகளை அவர் பால்கனியிலிருந்து பார்க்கும் கோயில் மிருகபலிக் காட்சிகள் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. கோயில் இருக்கிறது என்றால் அங்கு சுப்ரபாதம் மட்டும் தானே ஒலிக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பு தகர்கிறது. நிம்மதி கெடுகிறது. வீட்டை மாற்றிவிடலாமா என்று கூட யோசிக்கிறார். பிரசினையை சமாளிக்க அவரது சாதுரிய மாமனார் (இவர் தான் மாப்பிள்ளையை அபார்ட்மெண்ட் வாங்க வைத்தவர்) ஒரு பிள்ளையார் சிலையை இரவோடிரவாக அம்மன் கோயிலுக்கு அருகிலேயே கமுக்கமாகக் கொண்டு வந்து வைத்து விட்டு, அவர் வெஜிடேரியன் சாமி என்று பரப்பி விடுகிறார். அவர்களின் “பிரசினை” தீர்ந்து விடுகிறது. மங்களம். சுபம்.

கதாபாத்திரங்களின் இயல்பு கவனிக்க வேண்டியது. தினந்தோறூம் சுப்ரபாதம் கேட்க ஆசைப்படும் பக்த சிரோன்மணிகளுக்கு வனகாளியம்மன் ஒரு தெய்வமே அல்ல, அவளது பூஜை நின்று போவது அவர்களுக்கு ஒரு பொருட்டும் அல்ல. அதே போலத் தான் பிள்ளையாரும். ஒவ்வொரு அரசமர நிழலிலும் தெருமுக்கிலும் அமர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கையும் ஆசியும் வழங்கும் பிள்ளையார் அல்ல இவர். மாறாக அம்மக்களின் அப்பாவித் தனத்தையும், பக்தியையும் பயன்படுத்தி அவர்களை ஏய்ப்பதற்கும் ஒடுக்குவதற்கும் ஆன ஒரு யுக்தி சாதனமாகவே இருக்கிறார் “சஷ்யஹரி பிள்ளையார்”. இது பற்றிய எந்தக் குற்ற உணர்வும் கூட அந்த பால்கனி பக்திமான்களுக்கு இல்லை.

ஆனால், இந்தக் கதை எழுதப் பட்ட விதம், இந்த ஆன்மிகப் போலித் தனத்தை சுட்டவில்லை. சொல்லப் போனால், அந்தப் பக்கமே இது போகவில்லை, அந்த விஷயம் கோடி காட்டப் படக் கூட இல்லை. தட்டையான, வார-இதழ் மொழியில் எழுதப் பட்ட ஒரு சாதாரண ஃபார்முலாக் கதையில் அதை எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும், கதையின் இயல்பான சமநிலை கருதிக்கூட, அது பேசப் படவில்லை என்பது சொகுசு அப்பார்ட்மெண்ட் வர்க்கத்தினரின் மனச்சாட்சியின்மையை மட்டுமல்ல, கதாசிரியரின் ஒரு பக்கச் சார்பையும் காட்டுகிறது.

கொஞ்சம் நுண்ணுணர்வு கொண்ட சிறுகதை வாசகனுக்குக் கூட கதையில் இருந்து பெறப்படும் சமூக கண்ணோட்டம் என்ன என்று தெளிவாகப் புரிந்து விடும். ஒரு புறம் ரியல் எஸ்டேட் எளிய மக்களின் வாழ்விடத்தை, அவர்களது பொருளாதாரத்தை கபளீகரம் செய்கிறது. மறுபுறம் மேட்டிமைவாத இந்துமதம் அவர்களது சமய, ஆன்மீக உணர்வுகளை மதிக்காதது மட்டுமல்ல, அவற்றை ஒடுக்கி, அழித்தொழிக்கிறது. ஆனால் இக்கண்ணோட்டம் உண்மைக்கு முற்றிலும் மாறானது என்பதில் ஐயமில்லை.

இக்கதையில் சித்தரிக்கப் படும் மிருக பலி குறித்த ஒவ்வாமைக்குக் காரணம் அகிம்சையோ, ஜீவகாருண்யமோ, கருணையோ அல்ல. அது அந்த “பக்திமான்களது” இயல்பிலேயே உள்ள ஒன்று என்ற ரீதியில் அது நியாயப் படுத்தப் படுகிறது. மிருகபலி மத உணர்வின் ஒரு பகுதியாக இருப்பது கடுமையாக நிராகரிக்கப் படுகிறது. அவதார புருஷரான ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னை காளிக்கு அளிக்கப் பட்ட பலி பிரசாதத்தினை தன் தலைமீது வைத்துக் கொண்டாடியதும், மகாகவி பாரதி போன்ற மனித நேய ஆன்மீக வாதி மகா காளியையும் முத்துமாரியையும் போற்றியதும், இன்றும் ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களில் மிருகபலிச் சடங்குகள் தொடர்வதும் எல்லாம் இந்த நிராகரிப்பு வாதிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு ”கற்றதும் பெற்றதும்” கட்டுரையில் சுஜாதா எழுதியிருந்தது இங்கு ஞாபகம் வருகிறது. “ஆழ்வார்கள் அன்பில் தோய்ந்து அரங்கனைப் பாடி உள்ளார்ந்த பக்தியுடன் வழிபடுவது ஸ்ரீரங்கம்; ஆவேசமாக, காட்டுமிராண்டித்தனமாக பக்தர்கள் நேர்த்திக் கடன் செய்யும் இடம் சமயபுரம். இரண்டும் அருகருகில் இருப்பது தான் என்ன முரண்?” என்ற ரீதியில் அவர் எழுதியிருந்தார். அதே பார்வையின் நீட்சி தான் இக்கதையிலும்.

இது ஒரு இயல்பான வைணவப் பார்வையா என்று கேட்கலாம். கட்டாயமாக இல்லை என்று நினைக்கிறேன். வைணவம் ஒருபோதும் விளிம்பு நிலை மக்களை ஒடுக்கவில்லை, புறம் தள்ளவில்லை. அவர்களது விடுதலையின் வாயிலாகவே அது இருந்தது. மீனவர்களையும், வேடர்களையும் அரவணைத்தது வைணவம். விளாஞ்சோலைப் பிள்ளையும், அழகர் கோயில் பதினெட்டாம் படி கருப்ப சாமியும் இன்றளவும் வைணவத்திற்கு உள்ளே தான் இருக்கிறார்கள். இது அடிப்படையில் ஒரு மேட்டிமைவாத பார்வை மட்டுமே. என்ன தான் வெளித்தோற்றங்கள் மாறினாலும், அமெரிக்காவும் பெங்களூரும் அபார்ட்மெண்டுகளும் எதுவுமே, சில பேர்களிடத்தில் அத்தகைய ஆசாரவாத, மேட்டிமைவாதப் பார்வைகளை மாற்றுவதில்லை என்பது தான் உண்மையில் இந்தக் கதை சொல்ல வரும் செய்தி. ஆனால் அமெரிக்காவில் ஸ்டீக்குகளும், பீஃப் பர்கர்களும் விற்கும் உணவகங்களில் போய் சாப்பிடுவதையும், அவற்றையே முக்கிய உணவாகக் கொண்டோரின் கீழ் சேவகம் செய்வதையும் சத்தமில்லாமல் மௌனமாக ஜீரணித்து சாந்தப் படுத்திக் கொண்ட இந்த ஆசார மேட்டிமை வாத மனம்,  அம்மன் கோயிலில் அமாவாசைக்கு அமாவாசை மட்டுமே நடக்கும் ஒரு சடங்கை அருவருப்பாக நினைத்து அதை ஒழித்துக் கட்ட ஒரு குயுக்தியை நாடுகிறது என்பது சுவாரஸ்யமான முரண்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தக் கதையின் கண்ணோட்டம் இந்து மத அளவில் பொதுமைப் படுத்தப் படக் கூடிய அபாயம் இருக்கிறது. அதனாலேயே இந்த விமர்சனத்தை எழுதுகிறேன். சுஜாதா தேசிகன் எனது நல்ல நண்பர். அவரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்றே கருதுகிறேன்.

அப்படியானால் மிருக பலி என்ற சடங்கை அப்படியே இந்து மதத்தின் அங்கமாக என்றென்றைக்கும் கட்டாயமாக ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டுமா? அதைக் கண்டனம் செய்யவோ அது குறித்து விவாதிக்கவோ கூடவே கூடாதா என்று கேட்கலாம்.

கட்டாயம் அதைச் செய்யலாம். இந்துமதத்தில் அதற்கான வெளியும், முழு சுதந்திரமும் உண்டு. திருக்குறள் முதல் வள்ளலார் வரை “கொல்லா விரதம்” என்ற நெறியை வலியுறுத்திய நீண்ட பாரம்பரியம் நம்மிடம் உண்டு. சமீப காலங்களில், கிருபானந்த வாரியார் பல கிராமக் கோயில்களில் மிருக பலிச் சடங்குகளை நிறுத்தியுள்ளார். மேலும், காலங்காலமாக இறைச்சி உணவுப் பழக்கம் கொண்ட இந்து சமூகக் குழுக்களிலேயே மாபெரும் மகான்களும், சீர்திருத்தவாதிகளும் தோன்றி அச்சமூகங்களுக்கு உள்ளிருந்தே இதற்கு எதிராகக் குரலெழுப்பியுள்ளார்கள்.

இரு உதாரணங்கள். ஸ்ரீநாராயண குரு ஈழவ சமுதாய விழாக்களில் இருந்து மிருக பலி சடங்குகளை முற்றாக நீக்கினார். ரத்தவெறி கொண்ட வீரத் தெய்வங்களின் வழிபாட்டுக்குப் பதிலாக சரஸ்வதியையும், சிவபெருமானையும் வணங்கும் மரபுகளை ஏற்படுத்தினார். இதே போன்று, பாபாசாகேப் அம்பேத்கர் தோற்றுவித்த நவயான பௌத்தம் என்ற புத்தமதப் பிரிவில் புலால் உண்ணாமை என்பதனைக் கட்டாயமான நெறிமுறையாக அவர் ஆக்கினார். வியட்நாம் முதல் இலங்கை வரை உலகெங்கும் உள்ள பல புத்தமதப் பிரிவுகள் இறைச்சி உணவை அனுமதித்துள்ளன. ஆயினும், அம்பேத்கர் தனது அற உணர்வின் அடிப்படையிலும், இந்தியாவின் தலித் மக்கள் புலால் உணவில் இருந்து விடுபட்டு மரக்கறி உணவை உண்பது அவர்களது மனப்பாங்கை இன்னும் அமைதி உடையதாக்கும் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலும் இவ்வாறு செய்தார்.

மிருக பலிக்கும் புலால் உணவுக்கும் எதிரான கருத்தாக்கங்கள் மேட்டிமைவாத, சாதிய நோக்கில் அல்லாமல், ஆன்மீக உணர்வின், அற உணர்வின் அடிப்படையில் இருந்தால் தான் அது ஒரு சமூக இயக்கமாக அர்த்தமுள்ளதாகும். அப்போதும் கூட, அத்தகைய குரல்கள் இந்து மதத்திற்குள் ஒரு முக்கியமான பிரிவாக இருக்குமே அல்லாது, அனைத்து இந்துக்களுக்குமான மதரீதியான சட்டமாகவோ நெறிமுறையாகவோ ஆகவே ஆகாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

112 Replies to “மேட்டிமைவாதமும் மிருகபலியும்: ஒரு சிறுகதையை முன்வைத்து..”

  1. சரியான இந்து சமூகப் புரிதலோடு எழுதப்பட்ட விமர்சனம் இது. உண்மையிலேயே ஜடாயுவின் மனதில் இந்துத்துவத்தைப் பற்றிய புரிதல் மிக அதிகம் என்பது வெளிப்பட்டிருக்கிறது இக்கட்டுரையின்மூலம். நாம் யாருமே பாதிக்கப்படுபவர்களின் -விமர்சனத்திற்கு உட்பட்டவர்களின் மனநிலையில் இருந்து எதையுமே ஆராய முற்பட்டதில்லை. இதற்கு விதிவிலக்காக ஜடாயு திகழ்கிறார். மற்றுமொரு விவேகானந்தர் பெங்களூரிலிருந்து கிளம்பியிருக்கிறார். வளர்க அவர் பணி.
    அன்புடன்
    ம.வெங்கடேசன்

  2. மிக அருமையான வ்யாசம் ம்ருகபலிக்கு எதிர்ப்பு என்பது ஜீவகாருண்யம் அல்லது அறநிலை இதன் அடிப்படையில் அமைவது மட்டும் தான் சமூஹத்தால் ஏற்கப்பட்டு அந்த அறநிலை அடுத்து தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்படும் என்பதற்கு பூஜ்ய ஸ்ரீ நாராயணகுரு அவர்களின் முயற்சியையும் பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களது முயற்சியையும் எடுத்துச்சொன்னமை மிக அழகு. இதே போன்று குஜராத்தில் ஹரிவ்யாசர் என்ற மஹான் ம்ருகபலியை மாற்றியமையும் வங்காளத்தில் சைதன்ய கோஷ்டியில் இருந்த அத்வைதாசார்யர் ம்ருகபலி சம்ப்ரதாயத்தை மாற்றியதும் சரித்ரம்.

    சைதன்ய மஹாப்ரபு அவதரித்து சாத்வீகமான மார்க்கமான கண்ணனின் வழிபாட்டை மக்களுக்கு ஆதுரத்துடன் போதித்ததால் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தில் ஒரு அலை போல லக்ஷோப லக்ஷம் ஜனங்கள் ( பல முஸல்மான் கள் உட்பட) கௌடிய சம்ப்ரதாயம் எனப்படும் அவரது வழிமுறையைப் பின்பற்றினர். இன்று உலகமளாவி இருக்கும் இச்சம்ப்ரதாயத்தில் வைஷ்ணவ போஜனம் (சைவ உணவு) உண்ணுதல் என்பது ஒரு முக்யமான கோட்பாடு. அப்படி இருப்பினும் கூட இன்றும் வங்காளம், ஒடிஸ்ஸா, ஆஸாம், பீஹார் மற்றும் பூர்வ உத்தரப்ரதேசம் அடங்கிய கௌட தேசத்தில் மிகவும் ப்ரசலிதமாய் இருப்பது சக்தி வழிபாடு. அதன் முக்ய அங்கம் ம்ருகபலி. ராம க்ருஷ்ண பரமஹம்சர் ம்ருகபலியைத் தன் தலைமீது ஏற்றமையை உள்ளபடி நீங்கள் சொல்லியுள்ளது நோக்கத்தக்கது.

    அஹிம்சா பரமோ தர்ம: என்று வைதிக சமயம் சொன்னாலும் ஹிம்சை என்பதை அதர்மம் என்று எங்கும் சொன்னதில்லை. ஹிம்சை எவ்வெப்பொழுது அதர்மம் ஆகும் என்பது சாஸ்த்ர விசாரத்திலுள்ளது.ம்ருகபலி என்ற விஷயம் ஏதோ சில ஜாதிகளுக்கு மட்டும் உரித்தானது என்பதும் ஏற்கக்கூடிய விஷயமில்லை. யாக யக்ஞங்களில் விதிதமான ம்ருகபலி சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்டு அந்தந்த யாகத்திற்குறியதான ம்ருகபலியுடன் நடந்து வந்துள்ளது நடந்து வருகிறது என்பதை ஒதுக்க இயலாது.

    \\\அம்பேத்கர் தோற்றுவித்த நவயான பௌத்தம் என்ற புத்தமதப் பிரிவில் புலால் உண்ணாமை என்பதனைக் கட்டாயமான நெறிமுறையாக அவர் ஆக்கினார்\\\

    எனக்குப் புதிய செய்தி. மிக்க நன்றி.

    லே, கர்கில், லாஹௌல், ஸ்பிட்டி, சிக்கிம் பகுதிகளில் வஜ்ரயான பௌத்தம் ப்ரசலிதமாய் உள்ளது.

    இந்த பௌத்தப் பெருமக்கள் முனைந்து மாம்சம் உண்ணுவதில்லை.

    ஆனால் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற நிலை உண்டு. அதாவது வேறு யாரேனும் வெட்டிய மாம்சத்தை புஜிப்பது பாவமாகக் கருதப்படாது.

    சீனத்திலிருந்து சமீபத்தில் திடீரென ஹிந்துஸ்தானம் வந்த “கர்மபா” அவர்கள் கூட இது சம்பந்தமாய் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட புலால் உண்ணாமை என்ற விஷயத்தை ஏற்றல் நன்று என்ற படிக்கு இருந்தது அவர் கருத்து.

    அவரவர் வழிபாட்டு முறைகளை அனுசரித்து வழிபாடுகளில் ம்ருகபலியை கொள்ளல் அல்லது கொள்ளாது இருத்தல் என்பது வழிபாடு சார்ந்த ஒரு ஒழுக்கமுறை. ஆயினும் காலங்காலமாய் பின்பற்றப்பட்டு வரும் ஒழுக்கமுறைகள் சமுஹத்திலும் ஜீவகாருண்யத்திலும் அக்கறையுள்ள சான்றோர்களால் மாற்றத்திற்கு உள்ளானால் சமூஹம் அதை தலையீடு எனக்கருதாது தலைவணங்கி ஏற்பதோடு அல்லாது தன் அடுத்த தலைமுறைக்கும் அந்த அறவுணர்வை எடுத்துச்செல்ல விழையும் என்பது நிதர்சனம்.

  3. அருமையான விமர்சனம். ஜடாயுவின் நுட்பமான பார்வை மிகுந்த மன நிறைவைத் தருகிறது. நம் எழுத்தாளர்கள் பலரிடையே கூட நம் பாரம்பரியக் கோட்பாடுகள் குறித்து எவ்விதப் புரிதலும் இல்லை என்பதை ஜடாயுவின் விமர்சனம் வருத்தத்துடன் பதிவு செய்கிறது.

    பொழுதுபோக்கு வணிக இதழ்களை நான் கண்ணால் பார்த்தே பல காலமாகி விட்டது. ஆனால் கல்கியில்தான் நான் அதிகம் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கி.ராஜேந்திரன் கேட்டுத்தான் எழுதினேன்..

    ஸாஃப்ட் போர்ன் என்று சொல்லும்படியான கதைகளை எழுதி ஏராளமான வாசகர்களைச் சுண்டி இழுத்துப் பொழுது போக்கு இதழ்களில் இடம் பிடித்தவர் சுஜாதா. அறுபது வயதுக்கு மேல்தான் ஆழ்வார்கள் பாசுரம் பற்றி எல்லாம் எழுதத் தொடங்கியவர். ஒருமுறை, நான் எழுதிய சில சிறுகதைகளை இப்போது படித்துப் பார்த்தால் அப்படி எல்லாம் எழுதியிருக்க வேண்டாமோ என்று சொல்லி வருந்தியவர். நமது தத்துவ ஞானம், கலாசாரம், ஆன்மிகம் இவை பற்றியெல்லாம் ஏதும் அறியாதவர், ஆழ்ந்த புரிதல் இல்லாதவர்.

    இந்தக் கதையை எழுதியவர் பெயர் சுஜாதா தேசிகன் என்று ஜடாயு குறிப்பிடுவதிலிருந்து இவர் சுஜாதாவின் சிஷ்யப் பிள்ளை என்று தெரிகிறது. குருவின் லட்சணமே நமது பாரம்பரிய விழுமியங்கள் எதையும் அறியாதவர் என இருக்கையில் சிஷ்யர்களின் போக்கு எப்படி இருக்கும்? ஒருகாலத்தில் நமது ஆன்மிகம், கலாசாரம், சமூகக் கட்டமைப்பு எல்லாவற்றையும் நன்கு அறிந்து நம் பாரம்பரியத்தில் காலூன்றி நின்று எவ்வித சமரசமும் செய்துகொள்ளாத கல்கி பத்திரிகை இன்று தரம் தாழ்ந்து எவ்வித சுயமும் இன்றிச் சீர்குலைந்து போயிருப்பது வருத்தமளிக்கிறது.
    -மலர்மன்னன்

  4. ஆரிய சமாஜத்தில் தாவர உணவு ஒரு கண்டிப்பான நிபந்தனையாக இருந்தது. ஆனால் பஞ்சாபில் அது வேர் பிடித்தபோது இந்த நிபந்தனைக்குச் சோதனை ஏற்பட்டது. பஞ்சாபியர் பலரும் இறைச்சி உணவில் நாட்டம் மிக்கவர்களாக இருந்ததுதான் காரணம். தென் ஆஃப்ரிக்காவில் ஒருமுறை அங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்நந்துவரும் தமிழர்களில் ஒருவர் தட்டுத் தடுமாறும் தமிழில், துண்றதுக்காக வெளிலே வெட்டறே இல்லே, அத இங்க வெட்டித் துண்ணு. எப்டியும் திங்கப் போறே, ஆத்தாளுக்குப் படைச்சுட்டுத் துண்ணு என்றார்! இதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. வழிபாட்டு முறைகளிலும் வேள்விகளிலும் காலப் போக்கில் எவ்வளவோ மாற்றங்களை மிகவும் இயல்பாகக் கொண்டு வந்துவிட்டோம். இதிலும் இயல்பாக மாற்றம் வரும். மற்றபடி நமது வழிபாட்டு முறைகளில் உயர்வு தாழ்வு ஏதும் இல்லை.
    -மலர்மன்னன்

  5. திருவள்ளுவரே கற்பனை செய்திருக்கமாட்டாத அளவு திருக்குறளுக்கு பல உரைகள் எழுந்துவிட்டன. அதை போன்று உள்ளது கதை விமர்சனம், மேட்டுக்குடி,மேட்டடிமைவாத அய்யங்கார் பார்வை என படிக்கும்போது , இதை எழுதியவர்கள் கம்யூனிச வாதிகளா, அல்லது ஈவேரா சிஷ்ய கேடிகளோ என எண்ணவேண்டியுள்ளது. பிராமண எதிர்ப்பு போன்று குறுப்பிட்ட ஜாதி மக்கள் பற்றி செய்யப்பட்ட குரூர விமர்சனம். உண்மயாக ராமானுஜ தரிசனத்தினை கைகொண்டவன் எந்த ஜாதி யானாலும் , அவன் மரக்கறி உண்பாவனாகத்தான் இருந்திடுவான், அது உறங்காவலி தாசருக்கும் கூட பொருந்தும். மேல்ஜாதி மேட்டுக்குடி இவர்களை தொடாமல் மதி கார்ட்டூனும் இல்லை , விளம்பரமும் இல்லை, ஜடாயு விமர்சனம் கூட இல்லை, திருமண் என்னும் மத சின்னம் துக்ளக் சோ வுக்கும் குருமூர்த்தி மாமாவுக்கும் ஏமாற்றத்தின் அடயாளம். ஜடாயுவுக்கு மேட்டுக்குடி பார்வை. பிள்ளை யார் சிலைக்கு பதில் பெருமாள் சிலை என எழுதி இருந்தால் பொருத்தம் இருக்கும்…. போலி ஹிந்த்துத்துவா வாதிகளின் வக்கிர புத்தி…

  6. அன்புள்ள ஜடாயு,

    மிக சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை. மனமார்ந்த நன்றிகள்.

    எனக்கு இந்த வரிகளில் ஒரு ஐயம் :

    // ஸ்ரீநாராயண குரு ஈழவ சமுதாய விழாக்களில் இருந்து மிருக பலி சடங்குகளை முற்றாக நீக்கினார். ரத்தவெறி கொண்ட வீரத் தெய்வங்களின் வழிபாட்டுக்குப் பதிலாக சரஸ்வதியையும், சிவபெருமானையும் வணங்கும் மரபுகளை ஏற்படுத்தினார்.//

    ஆனால் இது உயிர்ப்பலி சடங்கை தவிர்ப்பதற்காக அன்றி, ஈழவ சமூகம் கல்வியில் கவனம் செலுத்தி அதன்மூலம் சமூக மேம்பாடு அடையவேண்டும் என்பதற்கான – எதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்பதற்கான – குறியீட்டு ரீதியாக கொண்டுவந்த மாற்றம்தானே ?

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்.

  7. சுஜாதா அவர்களை தரம் குறைந்த எழுத்தாளராக சித்தரிப்பது தவறான கருத்து. ஒரு கதையோ, கவிதையோ ezhuthappadum காலகட்டத்தின் அடிப்படையில் தான் வுருப்பெருமே தவிர வேறு அடிப்படையில் வுருவாக. சங்க இலக்கியங்கள் கூட சில இடங்களில் பாலியல் வுணவை தூண்டும் படியாக ஆய்ந்துள்ளன. அதன்மூலம் அக்க்கவிகள் எல்லோரும் தரம் குறைந்தவர்கள் என்று மதிப்பீடு செய்தல் தவறான முடிவாகும். திரு சுஜாதா அவர்கள் எழுத்துக்கள் நவீன கால அடிப்படையில் கதைகளை வுருவக்கியவர். தயவு செய்து அந்த அடிப்படையில் கருத்து தெறித்தல் நலம்.

  8. பழந் தமிழ் இலக்கியங்கள் பாலியலைக் கையாண்டதற்கும் சுஜாதா போன்றவர்கள் வக்கிரமாகப் பாலியல் உணர்வைத் தூண்டி எழுதியதற்கும் ஒப்புமை காண்பது அறியாமை. எனது காலஞ் சென்ற நண்பர் சுஜாதா பல காரணங்களுக்காகப் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்காகத் தமிழ்ப் பத்திரிகைகளை ஆபாசக் குப்பையாக்கிய அவரது தவறை மறைக்க இயலாது. சுஜாதா சிறு இலக்கிய இதழ்களில் மட்டுமே எழுதுகிறவராக இருந்திருந்தால் அப்படி ஒருவர் இருப்பதே யாருக்கும் தெரிந்திருக்காது! புகழுக்காகவும் பிரபலத்துக்காகவும் சாஃப்ட் போர்ன் உத்தியைப் பயன்படுத்தி பொழுதுபோக்கு வணிகப் பத்திரிகைகளீல் இடம் பிடித்தவர் சுஜாதா. ஜயமோஹன், எஸ் ராமகிருஷ்ணான் போன்றவர்களுந்தான் அவ்வப்போது அத்தகைய இதழ்களில் எழுதுகிறர்கள். ஆனால் இடம் பிடிக்க அங்கு அவர்கள் ஓடுவதில்லை. அவர்களைத் தேடி வந்து விண்ணப்பிப்பதாலேயே அவர்கள் அவற்றில் சமயா சமயங்களில் எழுதுகிறார்கள். சுஜாதா கெட்டிக்காரர். எதையும் எவரும் படிக்கத் தக்கவகையில் எழுதும் சாமர்த்தியக்காரர். அந்த சாமர்த்தியத்தை வியர்த்தமாக்கியவர். தனிமையில் பேசுகையில் ஹிந்துத்துவ பிரக்ஞையை அபரிமிதமாக வெளியிட்டு பொதுவில் பேசுகையில் மாற்றிப் பேசுபவர், துணிச்சல் இல்லாதவர்.
    -மலர்மன்னன்

  9. ஜடாயுவின் இந்த அருமையான கட்டுரை மிக மிக சிறப்பான பண்புடனான எதிர்வினை. ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயத்தின் உண்மை உணர்வினை, சத்தியமான ஆன்மிக உணர்வை அதன் சமுதாய இலக்கிய பார்வையை தெள்ளத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.

  10. கதை எழுதுவதற்கு மட்டும் அல்ல, கதை படிப்பதற்கும் ஒரு நுண்மான் நுழைபுலம் அவசியமாகிறது.

    சுஜாதா தேசிகனின் இந்தக் கதை நகர நாகரிகமானது இயற்கைச் சூழலை நேரடியாக அழிப்பதையும், சாதிய மேட்டிமை கிராமியப் பண்பாட்டை மறைமுகமாக அழிப்பதையும் நுணுக்கமாக விவரிக்கிறது. இந்தக் கதையின் மூலம் சட்ட வலைக்குள் சிக்க முடியாத கலாச்சாரக் கற்பழிப்புக்களை சுஜாதா தேசிகன் வாசகரின் பார்வைக்குக் கொண்டு வருகிறார்.

    இந்தக் கதை எவற்றைக் கண்டனம் செய்கிறதோ, அவற்றை ஆதரிப்பதாகப் புரட்டு விமரிசனங்கள் செய்வது கூடக் கலாச்சாரக் கற்பழிப்பில் அடங்கும்.

    தேவை இல்லாமல் கதை ஆசிரியரின் சாதி, கதை ஆசிரியரின் அபிமானத்துக்கு உரியவரின் சாதி, மரபியல்பாக இந்தச் சாதிக்கு வந்துவிடும் மேட்டிமை வாதம், இத்தகைய கதைகளை வெளியிடும் கல்கியின் மறைமுக நோக்கம் என்றெல்லாம் கோர்த்துவிட்டு தனது சாதி வெறியை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை இத்தகைய விமர்சனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

    கோஷங்களைத் தாண்டிச் செல்ல முடியாத கோஷதாரிகளுக்கும், வேஷங்கள் போட்டு பிரபலம் அடைய விரும்பும் வேஷதாரிகளுக்கும் அடிப்படை நேர்மை கிடையாது.

    அடிப்படை நேர்மை இருப்பவர்கள் மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும் என்று கட்டாயம் செய்யவும் முடியாதுதான். அதனால்தான் கழிப்பறைச் சுவர்களில் பிரபலங்கள் பற்றியும், பக்கத்து வீட்டுப் பெண்கள் பற்றியும் விமர்சனங்கள் படிக்கக் கிடைக்கின்றன.

    இந்த விமர்சனங்களின் மூலம் விமர்சிக்கப்படும் பிரபலங்கள் பெண்கள் பற்றி அறிந்துகொள்வதை விட, விமரிசகனின் தேவைகள் என்ன என்பதை உடனடியாக அறிந்துகொண்டுவிடலாம்.

    கழிவறைகள் அவசியமானவை. கழிவுகளால் கூட பலன்கள் உண்டு. கழிவறை விமர்சனங்கள் நல்ல பொழுதுபோக்கு.

    போழுதுபோக்கினால் பிரபலம் ஆகிவிடலாம் என்பது கோஷதாரிகளுக்கும் வேஷதாரிகளுக்கும் நன்கு தெரியும். அதனால், பொதுக் கழிவறைகளின் தரைகள் உடற்கழிவுகளாலும், சுவர்கள் மனக்கழிவுகளாலும் நிறைகின்றன.

    இத்தகைய நிறைவைத் தரும் விமரிசனங்களை அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு போன்ற கோஷதாரி-வேஷதாரிகள் தொடர்ந்து தருவார்கள். நம்புங்கள். அவர்கள் நம்பிக்கை தரும் சிந்தனையாளர்கள்.

  11. அன்புள்ள வரதாச்சாரி அவர்களுக்கு,

    // சுஜாதா தேசிகனின் இந்தக் கதை நகர நாகரிகமானது இயற்கைச் சூழலை நேரடியாக அழிப்பதையும், சாதிய மேட்டிமை கிராமியப் பண்பாட்டை மறைமுகமாக அழிப்பதையும் நுணுக்கமாக விவரிக்கிறது. //

    கதையைப் படித்தால் அப்படியெல்லாம் எதுவுமே தோன்றவில்லையே. பிரசினை எப்படி ஒரு எளிமையான பிள்ளையார் ட்ரிக் மூலம் தீர்க்கப் பட்டது என்பது மட்டுமே கதையில் உள்ளது.

    இப்படி ஒரு விமர்சனம் வந்த பிறகு தான், கதையில் இல்லாத புதிய விஷயங்களை எல்லாம் இருப்பதாக கண்டுபிடித்து நீங்கள் சொல்கிறீர்கள். பயங்கர சமாளிப்பு & மழுப்பல்.

    // இந்தக் கதை எழுதப் பட்ட விதம், இந்த ஆன்மிகப் போலித் தனத்தை சுட்டவில்லை. சொல்லப் போனால், அந்தப் பக்கமே இது போகவில்லை, அந்த விஷயம் கோடி காட்டப் படக் கூட இல்லை // என்பது தான் சரியான விமர்சனம்.

    இந்த நல்ல விமர்சனத்தில் அனாவசியமாக ஐயங்கார் என்ற சாதி குறித்த சொலவடையை பயன்படுத்தியிருக்க வேண்டாம். ஆனால் அதன் மூலமும் ஒரு நல்ல பயன் ஏற்பட்டுள்ளது. ஐயங்கார் கண்ணோட்டமும் வைணவ கண்ணோட்டமும் ஒன்று அல்ல, இரண்டுக்கும வித்தியாசம் உள்ளது என்ற புரிதலை அது உண்டாக்கி உள்ளது.

  12. கருத்துக் கூறும் நண்பர்களுக்கும், பெரியோர்களுக்கும் மிக்க நன்றி.

    பொன்.முத்துக்குமார்,

    // ஆனால் இது உயிர்ப்பலி சடங்கை தவிர்ப்பதற்காக அன்றி, ஈழவ சமூகம் கல்வியில் கவனம் செலுத்தி அதன்மூலம் சமூக மேம்பாடு அடையவேண்டும் என்பதற்கான – எதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்பதற்கான – குறியீட்டு ரீதியாக கொண்டுவந்த மாற்றம்தானே ? //

    இல்லை. ஸ்ரீநாராயண குரு அடிப்படையில் ஒரு வேதாந்த ஞானி, அத்வைதி, மகான். அவரது மானுட சமத்துவம் குறித்த கொள்கைகள் தட்டையான சமூக சீர்திருத்த கோஷம் மட்டுமல்ல, அவற்றுக்குப் பின் ஆழ்ந்த தத்துவப் பின்புலமும் உள்ளது. வீ்ரயுக குல தெய்வங்களை வழிபடுவது வன்முறை எண்ணத்தையும் தாமச-ராஜச குணங்களையும் வளர்க்கிறது என்று அவர் கருதினார். அதனால் தான் ராஜச-சத்துவ குணங்களை வளர்க்கும் வழிபாட்டு முறைகளை பரிந்துரைத்தார். அவர் மாமிச உணவுக்கு எதிராக பெரிய அளவில் பிரசாரம் செய்யவில்லை என்றே நினைக்கிறேன், ஆனால் மிருகபலி சடங்குகளை முற்றாக நிராகரித்தார்.

  13. நண்பர்களுக்கு,

    ஐயங்கார் என்ற சாதியினருக்கு எதிராக நான் ஏதாவது இங்கு பொதுமைப் படுத்தி எழுதியிருக்கிறேனா? தயவு செய்து மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கவும். அனாவசியமாக நான் சொல்லாவதற்றை என் மீது சுமத்த வேண்டாம். இந்தக் குறிப்பிட்ட கதையில் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயர், சுப்ரபாதம் மற்றும் பேச்சுமொழி ஆகியவற்றை வைத்து கதாபாத்திரங்கள் ஐயங்கார் சாதியினர் என்று தோன்றியது, அதனாலேயே அப்படி எழுதினேன்.

    ஐயர் ஐயங்கார் முதல் தலித் சாதிகள் உட்பட, எல்லா சாதியினரிலும் மேட்டிமைவாத, சாதிய பார்வை கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை. அவை அனைத்தையும் சுட்டிக்காட்டுவதும் விமர்சிப்பதுமே உண்மையான இந்துத்துவ கண்ணோட்டம். அதைத் தான் நான் செய்கிறேன்.

    ஆரியத் தமிழன் அவர்களுக்கு,

    // உண்மயாக ராமானுஜ தரிசனத்தினை கைகொண்டவன் எந்த ஜாதி யானாலும் , அவன் மரக்கறி உண்பாவனாகத்தான் இருந்திடுவான், அது உறங்காவலி தாசருக்கும் கூட பொருந்தும். //

    அன்றும் சரி, இன்றும் சரி. இது நடைமுறையில் சாத்தியமாகக் கூடிய ஒன்றா என்று கொஞ்சம் அறிவுபூர்வமாக யோசித்துப் பாருங்கள் ஸ்வாமி. மீனவர்களில் கூட வைணவத்தை ஏற்றவர்கள் இருக்கிறார்களே, கள்ளழகரின் அடியார்களான மறவர் குலத்தினர் மதுரையைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் இருக்கிறார்களே, அவர்கள் மரக்கறி உணவாளர்கள் அல்லவே.. இவர்களெல்லாம் உண்மையான திருமால் அடியார்கள் அல்ல என்பது தான் உங்கள் முடிவா? வைணவத்திலிருந்து இவர்களையெல்லாம் கைகழுவி விட்டு விடலாமா?

    ராமனுஜர் காலத்திற்கு முற்பட்டவர்களில் கள்ளர் குல திலகமான திருமங்கையாழ்வார் இருக்கிறாரே, காரிமாறன் திருமகனாய் உதித்த நம்மாழ்வார் இருக்கிறாரே, சேரர் குல சத்திரியரான குலசேகரர் இருக்கிறாரே, திருப்பாணாழ்வார் இருக்கிறாரே – இவர்கள் எல்லாம் மரக்கறி உணவு என்ற அளவீட்டில் எங்கு வருகிறார்கள் என்று தயை செய்து விளக்கவும்.

  14. இந்த பிளாட் கதையில் மிக தெளிவாக நாணயத்தின் மற்றொரு பக்கம் காட்டப்பட்டிருக்கிறது. தேனியைக் கொன்று, பட்டுப் புழுவைக் கொன்று என்று, வைதீகத்தை மிக சரியாக, எவ்விதத்திலும் பலியிடுதலுக்கு மேம்பட்டதல்ல என்று நேரடியாகவே ஆசிரியர் எழுதி விட்டார். பிள்ளையார் சிலை விவகாரமும் சாமர்த்தியமான வஞ்சகம் என்றே சொல்லப்பட்டிருகிறதே தவிர, இப்படி செய்வது சரியானது என்று வாதிடப் படவில்லை.

    அதனால் இந்தக் கதையை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாய்க்குத் தகுந்ததுபோல் மென்று கொள்ளலாம். சிலர் நன்றாக காற்றுள்ளபோதே தூற்றலாம் என்று தூற்றி இருக்கிறார்கள்.

    மற்றபடி சுஜாதாவும், சுஜாதா தேசிகனும் சற்றும் மென்னுணர்வு அற்றவர்கள் என்பது இக்கதையின் மூலம் நிரூபணமாகிறது.

  15. ஏதோ ஒரு கால இயந்திரம் அந்த பிளாட் காரரை வீட்டோடு அப்படியே தூக்கி ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு சென்று கங்கை ஆற்றங்கரையில் வைத்து விட, அவர் பால்கனியிலிருந்து பார்கிறார், ஒரு அம்மணி ஆயிரம் மது குடங்களுடன், நல்ல பதப்படுத்திய இறைச்சியுடன் ஆற்றை வழிபட்டுக் கொண்டிருக்கிறாள். நம்மவர் ’சரியான காட்டுமிராண்டி பொம்பளையா இருக்கும் போலிருக்கு’ என்ற படி அந்த பெண்ணை பார்த்த பாவம் தீர வால்மீகி ராமாயணம் படிக்கிறார், அயோத்தியா காண்டத்தின் ஸ்லோகங்களை. தம் தருமத்தின் பெயர் தாங்கிகளான சாத்திய வைணவர்களை எண்ணி எங்கேயோ ஸ்ரீ ராமானுசர் சிரிக்கவா அழவா என தெரியாமல் பரிதவிக்கிறார். சுபம். ( 2:52: 87-88)

  16. // ஒரு அம்மணி ஆயிரம் மது குடங்களுடன், நல்ல பதப்படுத்திய இறைச்சியுடன் ஆற்றை வழிபட்டுக் கொண்டிருக்கிறாள். நம்மவர் ’சரியான காட்டுமிராண்டி பொம்பளையா இருக்கும் போலிருக்கு’ என்ற படி அந்த பெண்ணை பார்த்த பாவம் தீர வால்மீகி ராமாயணம் படிக்கிறார், அயோத்தியா காண்டத்தின் ஸ்லோகங்களை. //

    அரவிந்தன், “மாம்ச பூத ஓதனம்” என்றால் “மாம்ச ரூபமாக அன்னம்” என்று பொருள். பிராட்டி இறைச்சியைக் கொண்டு கங்கையை வழிபட்டார் என்று அர்த்தம் ஆகாது.

  17. //சென்னை அண்ணாசாலை நடுராத்திரி கியூவில் நின்று, விசா கிடைத்தால் திருப்பதிக்கு குடும்பத்தோடு வருகிறேன் என்று வேண்டிக்கொண்டு, திருப்பதி பெருமாள் கருணையால் அமெரிக்கா சென்று//
    // வருடத்துக்கு ஒருமுறை டிசம்பர் சீசனுக்கு இந்தியா வந்து அம்பிகா அப்பளம் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு// கதையிலிருந்து
    ஜடாயு இந்த வரிகளிலிருந்து என்ன புரிந்து கொள்கிறீர்கள். கதை மாந்தர்களின் நெஞ்சார்ந்த பக்தியையா? இந்து மதத்தின் ஆழ்ந்த தத்துவ விசாரனையையா? ஒவ்வுருவருக்கும் ஒரு ஒவ்வாமை. புலால் மரக்கறி உணவு ஒவ்வாமை வெவ்வேறு வடிவம் பெரும். கதை அதில் ஒன்றை சொல்கிறது. அதிலும் நமது வழிபாடு மனநிலையையும் நகையாடுகிறது. நல்ல கேளிக்கைக்கிடையே இவையே போதும். கதையில் நீங்கள் கொண்ட விமர்சனங்களை என்னால் ஏற்க இயலவில்லை.
    பாருங்கள் ம.வெங்கடேசன் உங்களை விவேகானந்தர் என்கிறார். (எனக்கு மறுப்பு ஏதுமில்லை). – வழிபாடு மனநிலை!!
    தேசிகனின் நடை நல்ல நகல்! (அவருக்கு இந்த தளத்திலிருந்து பாராட்டு.) அதனால் கோபம் புரைக்கேறி சுஜாதா வரை சென்றுவிட்டீர்கள்.

  18. ஜடாயு
    நீங்கள் அப்படி ஒன்றும் பொங்குபவரல்ல! தேசிகன் உங்கள் நண்பர் வேறு! ஏதும் மேட்ச் fixinga ?

  19. திரு ஜடாயு அவர்களுக்கு,

    //ராமனுஜர் காலத்திற்கு முற்பட்டவர்களில் கள்ளர் குல திலகமான திருமங்கையாழ்வார் இருக்கிறாரே, காரிமாறன் திருமகனாய் உதித்த நம்மாழ்வார் இருக்கிறாரே, சேரர் குல சத்திரியரான குலசேகரர் இருக்கிறாரே, திருப்பாணாழ்வார் இருக்கிறாரே – இவர்கள் எல்லாம் மரக்கறி உணவு என்ற அளவீட்டில் எங்கு வருகிறார்கள் என்று தயை செய்து விளக்கவும்.//

    ஆழ்வார்களுக்கு ஜாதி சொல்லுவது பாவம்! சக்ரவர்த்தி திருமகனும், ஆயர்பாடிக்கு அணிவிளக்கும் மரக்கறி தவிர்த்து உண்டார்கள் என்பதற்கு ஸ்ரீ ராமாயணத்திலும், ஸ்ரீமத் பாகவத்திலும் எங்கும் ஒரு சுட்டியும் இல்லை! பொதுவாகவே புலால் உண்ணுதல் வைணவத்தில் கிடையாது! இங்கு வைணவம் என்பது ‘சக்கரபொறி ஒற்றிகொண்ட அடியவர்களின் குழாத்தை குறிக்கிறது’ இதையே தொண்டர்களும் என்று ஸ்ரீ பெரியாழ்வார் பாடினார்! தாங்கள் குறிப்பிட்டபடி ஏனையோரும் திருமால் அடியவர்களே, ஆயின் அவர்கள் பழுக்கும் போது போது வைணவ சின்னங்களாய் மிளிர்வது கண் கூடு! தங்கள் எல்லாவற்றையும் சரியாக அறிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைப்பது தவறாகவும் இருக்காலம்! ஸ்ரீ நம்மாழ்வார் இந்த புவியின் மிசை ஒரு பருக்கையும் ஒரு கை நீரும் கூட அருந்தாதார் என்று வைணவ நூல்கள் போற்றுகின்றான! எவ்வாறு ஈரோட்டு பாசம் மிக்கவர்களுக்கு சாதியை பற்றிய புரிதல் இல்லையோ, அவ்வாறே பல சமயங்களில் ஹிந்தைவ ஆர்வலர்களுக்கும் சறுக்குகின்றது என்பது கண்கூடு!
    முதல் ஆழ்வார்கள் அயோநிஜர்கள் என்பதும் அறிய கிடைக்கிறது! தாங்கள் ஆழ்வார்களை பற்றிய வைணவ நூல்கள் கூறும் கருத்துக்களை ஏற்று கொண்டீர்கலாயின், அந்த பார்வையிலேயே பார்க்க வேண்டும்! அல்லேல் தங்கள் ஐரோப்பிய ஆய்வாளர்களின் பார்வையில் பார்த்தால் பெரும்பான்மையான அர்த்தங்களை இழந்து போய் விடுவீர்கள்! புரிதலை வளர்ப்போம்!

  20. //ராமனுஜர் காலத்திற்கு முற்பட்டவர்களில் கள்ளர் குல திலகமான திருமங்கையாழ்வார் இருக்கிறாரே, காரிமாறன் திருமகனாய் உதித்த நம்மாழ்வார் இருக்கிறாரே, சேரர் குல சத்திரியரான குலசேகரர் இருக்கிறாரே, திருப்பாணாழ்வார் இருக்கிறாரே – இவர்கள் எல்லாம் மரக்கறி உணவு என்ற அளவீட்டில் எங்கு வருகிறார்கள் என்று தயை செய்து விளக்கவும்.//

    இந்த வரிகள் ஆழ்வார்களையே தெய்வமாக கொண்டாடும் எங்கள் மனங்களை மிகவும் புண் படுத்துகின்றன என்பதே தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறேன்! திருமிகு ஜடாயு மற்றும் திருமிகு அநீ போன்றோர் பூர்வச்சரியர்களின் படிகளை நினைவு கூறுவது தக்கது! அமலனாதிபிரான் பாடிய எங்கள் திருபானாழ்வாரை தயவு கூர்ந்து ஆபாத சூடம் சேவிக்கவும்! ஞானம் வளரும்!

  21. மிக நல்ல விமர்சனம். திரு ஜடாயு அவர்களின் விளக்கம் மிக அருமை.

  22. ஆழ்வார்களுக்கு சாதி சொல்வது பாவமென்றால் மற்ற வைணவர்களுக்கு சாதி சொல்வது மட்டும் சரியா? அதென்ன சாத்தாத வைணவர்கள் – அது சாதி பார்ப்பதில்லையா? இந்துக்கள் தங்கள் சாமியையே விட்டாலும் விடுவார்கள் தங்கள் சாதி திமிரை விடமாட்டார்கள் என்பதுதான் இதிலெல்லாம் தெரியக்கூடிய விசயம். ராமர் இறைச்சி சாப்பிட்டார், இதில் தவறொன்றும் இல்லை. பாண்டவர்கள் இறைச்சி சாப்பிட்டனர். அப்படி இறைச்சி சாப்பிட்டவனுக்குத்தான் விஸ்வ ரூபதரிசனத்தை மாட்டிடையன் தந்ததாக நம்பிக்கை. பௌத்தத்தின் தார்மிக ஜீவ ஹிம்சையின்மையை ஜீவ ஹிம்சையை அடிப்படையாக கொண்ட வேத வேள்வி சமயத்தவர்கள் உள்வாங்கிய போது புரோகித வகுப்பினர் மேற்கொண்ட ஒரு வாழ்க்கை முறைதான் புலால் மறுப்பு உணவு. துரதிர்ஷ்ட வசமாக அதை ஏதோ தங்கள் குலபெருமையாக மற்றவர்களை ஒதுக்கும் அல்லது கீழாக நினைக்கும் கருவியாக இந்த புரோகிதக் குழுவினர் பயன்படுத்துவது இந்துக்களுக்கு நன்மை பயக்காது. பௌத்த சார்புடையவன் என்றாலும் ஹிந்துவாகவே இன்று இருக்கும் எனக்கு நிச்சயமாக ஆழ்வார்கள் மீது அன்பும் எம் பண்பாட்டின் பிதாமகர்கள் என்கிற மதிப்பும் உண்டு. இந்த புரோகித குழுவினருக்கு அவர்கள் மீது எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை எமக்கும் அவர்கள் மீது உண்டு. எனவே இந்த புரோகிதர்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் நீங்கள் இந்து அல்லது வைணவத்தின் அதிகாரபூர்வ குரல்களோ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்களோ அல்ல. சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய்.

  23. ” துக்ளக் சோ வுக்கும் குருமூர்த்தி மாமாவுக்கும் ஏமாற்றத்தின் அடயாளம். ”

    அய்யா ஆரியத்தமிழரே,

    ஏனய்யா சம்பந்தமின்றி சோ, குருமூர்த்தி என்று வீணாக இழுக்கிறாய். இந்த கட்டுரைக்கும் , அவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

  24. ” எனவே இந்த புரோகிதர்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் நீங்கள் இந்து அல்லது வைணவத்தின் அதிகாரபூர்வ குரல்களோ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்களோ அல்ல. சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய். “-

    அன்புள்ள அ.நீ ,

    நமது மதத்திலிருந்து யாரும் ஒதுங்க கூடாது. யாரையும் ஒதுக்கி வைக்கவும் முடியாது/ மற்றும் கூடாது. ஏனெனில் இந்து என்றாலே, (all inclusive) அனைத்தையும் உள்வாங்கும், அனைத்தையும் கிரகிக்கும் என்பதே உண்மையான பொருளாகும். தன்னுடைய வழிபாட்டுமுறை மட்டுமே உயர்வு, மற்றவை எல்லாம் மட்டம்/ தாழ்வு என்று சொல்வது, நினைப்பது ஆபிரகாமிய மதங்களின் இழிவான சிந்தனை. நமது சம்பிரதாயங்கள் பல வழிகள் உள்ளன, உனக்கு எது வசதியாக இருக்கிறதோ அதனை பின்பற்று, உனக்கு வசதியானது இல்லை என்றால், வசதியான, உனக்கு ஏற்ற ஒரு புதிய முறையை உருவாக்கு என்பதே உபநிஷத குருமார்கள் நமக்கு தெளிவாக உபதேசித்துள்ளார்கள். எனவே, இந்த அரைகுறைகளை தயவுசெய்து பொருட்படுத்த வேண்டாம். ஏனெனில், அவர்களும் நமது சகோதரர்களே ஆவார்கள். காலம் எல்லோருக்கும் தேவையான தீட்சண்யமான பார்வைகளை நிச்சயம் தரும். புத்தர் இந்து மதத்தின் ஒரு பிரிவினர் தான். வட இந்தியாவில் புத்தர் , பாற்கடல் பள்ளி கொண்ட விஷ்ணு பிரானின் ஒரு அவதாரமாக கருதப்படுகிறார். ( நான் அவ்வாறு கருதவில்லை.) ஆனால் புத்தபிரான் ஒரு உன்னதமான பிறவியாக அனைவரும் ஒத்துக்கொள்வார்கள் என்றே நான் நம்புகிறேன். புத்தர் சொன்னதை நாம் ஏற்கலாம். ஆனால் புத்தர் செய்ததை நாம் செய்யக்கூடாது. ஏனெனில், அவர் பெண்டாட்டியை மற்றும் கைக்குழந்தையை விட்டுவிட்டு , அரண்மனையிலிருந்து சொல்லாமல் ஓடிய பெருமகனார். நாம் அப்படி செய்யக்கூடாது.

    ஜைன, மற்றும் புத்த பிரிவுகள் இந்து மதத்தின் பலவேறு பிரிவுகளில் சிலவே ஆகும். வேத வேள்விகளில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுவது ஒரு உண்மை தான். ஆனால் , பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் – என்ற வள்ளுவனின் வாக்கையும், ” தன் ஊண் பெருக்கற்கு தான் பிறிது ஊண் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள் ? “: என்ற குரல் அமுதத்தை ஏற்பது நம் அனைவருக்கும் நல்லது. இதில் திணிப்பு எதுவும் இல்லை.கருத்து மட்டுமே.

    புத்தரின் தவறான அஹிம்சை பிரச்சாரத்தினால் தான், இஸ்லாமியர்களின் படை எடுப்பின் போது, நாலந்தா பல்கலைக்கழகமும், பல்லாயிரக்கணக்கான புத்த துறவியரும், வீணாக உயிர் துறந்தனர். எதிரிகளிடம் அஹிம்சை பேசுவது முட்டாள்தனம்.

  25. பொதுவாக நம் ’பக்த’ ஆனால் சாதிய மேலாதிக்கவாதிகளின் பண்பாட்டு சிதைவுகள் எப்படி இலக்கிய கொலைகளை செய்கின்றன என்பதை கே.எஸ்.ஸ்ரீனிவாஸன், ‘காவ்ய ராமாயணம்’ முன்னுரையில் அழகாக விளக்குகிறார்: “ஒரு உதாரணம், ஹனுமான் ஸீதையை அசோகவனத்தில் கண்டு ராமனைப் பற்றிச் சொல்லி மனதில் தைரியம் ஊட்டுகிறான். ‘பிரிவால் தவிக்கும் நாயகன் மாமிசம் உண்பதில்லை. மது அருந்துவதில்லை. எளிய உணவையே உண்டு எப்போதும் உன் நினைவாகவே இருக்கிறான்’ என்று சொல்கிறான். ஸீதையின் உள்ளம் பெருமிதம் கொள்கிறது. ஆனால் புராண ரீதியில் பொருள் சொல்பவருக்கு ‘ராமன் மாமிசம் சாப்பிடவாவது? மது அருந்துவது கடவுள் செய்யும் காரியமா?’ என்று தோன்றுகிறது. வால்மீகியின் ‘ந மாம்ஸம் ராகவோ யுங்தே ந சாபி மது ஸேவதே’ என்ற ஸ்லோகத்துக்கு வேறு ஏதோ பொருள் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார். தேடிக் கண்டுபிடிக்கிறார். ‘மாம்ஸம்’ என்றால் மாம்பழத்தின் கதுப்பு; ‘மது’ என்றால் தேன். ‘இவ்விரண்டையும் எம் பெருமான் தவிர்க்கிறார்’ என்கிறார். இதன் விளைவு என்ன? உடலுக்கு ஊட்டம் தரும் உணவைத் தவிர்த்து உன்னையே நினைத்து உருகினான் உன் கணவன் என்கிற அழகிய கருத்து அடியோடு மறைந்துவிட்டது.” வெறும் நம்பிக்கை உணர்வு என்பதையெல்லாம் மீறி உணவுப்பண்பாட்டின் அடிப்படையில் மக்களை கீழ் மேலாக பிரிப்பதற்கு நம் உண்மையான பண்பாட்டில் இடமில்லை.

  26. அத்விகா,

    தங்கள் அறிவுரைக்கு நன்றி. வெளிப்பார்வைக்கு நயத்தக்க நாகரிகமும் உள்ளே வெறுப்பும் அதில் கொப்பளிக்கின்றன. உதாரணமாக //ஆனால் புத்தர் செய்ததை நாம் செய்யக்கூடாது. ஏனெனில், அவர் பெண்டாட்டியை மற்றும் கைக்குழந்தையை விட்டுவிட்டு , அரண்மனையிலிருந்து சொல்லாமல் ஓடிய பெருமகனார். நாம் அப்படி செய்யக்கூடாது.// பௌத்தம் சித்தார்த்தரின் இச்செயலை எப்படி நோக்குகிறது என நீங்கள் அறிவீர்களா? இந்து மத புராணங்களை கொச்சைப்படுத்தி பேசும் திக மனப்பான்மைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? பகவான் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என்பதை என் மனதிற்கினிய நவ்யான பௌத்தமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறேன். ’சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய்’ என்பதில் ஒதுங்கி என்கிற வார்த்தையை பிடித்து கொண்டு ‘நமது மதத்திலிருந்து யாரும் ஒதுங்க கூடாது. யாரையும் ஒதுக்கி வைக்கவும் முடியாது/ மற்றும் கூடாது’ என்றெல்லாம் ஓதுகிறீர்களே… இதை நீங்கள் உபதேசிக்க வேண்டியது என்னிடமல்ல.

  27. //ஐயர் ஐயங்கார் முதல் தலித் சாதிகள் உட்பட, எல்லா சாதியினரிலும் மேட்டிமைவாத, சாதிய பார்வை கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை.//

    தலித்துகளிடமும் மேட்டிமை வாதம் உண்டு என்று வாய்வார்த்தையாகச் சொன்னது சந்தோஷம். தலித்துகளிடம் ஜடாயு கண்ட மேட்டிமை வாதம் பற்றி எப்போது இந்தத் தளத்தில் கட்டுரை எழுதப் போகிறார் ?

    //நீங்கள் இந்து அல்லது வைணவத்தின் அதிகாரபூர்வ குரல்களோ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்களோ அல்ல. சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய்.//

    சம்பந்தம் இல்லாதவற்றை சம்பந்தம் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு சுய தம்பட்டம் அடிப்பதை, தனக்குத் தெரிந்ததை எல்லாம் வாந்தி எடுக்கும் வாய்ப்பாகப் பயன்படுத்துவதை, நீர் முதலில் நிறுத்தும் பிள்ளாய்.

    //ஜடாயுவின் நுட்பமான பார்வை மிகுந்த மன நிறைவைத் தருகிறது. நம் எழுத்தாளர்கள் பலரிடையே கூட நம் பாரம்பரியக் கோட்பாடுகள் குறித்து எவ்விதப் புரிதலும் இல்லை என்பதை ஜடாயுவின் விமர்சனம் வருத்தத்துடன் பதிவு செய்கிறது.//

    விமரிசனத்தைத் தலைமேல் தூக்கிக் கொண்டாடும் மலர்மன்னன் அந்தக் கதையை முதலில் படித்தாரா என்று சொல்ல வேண்டும்.

  28. கங்கைப் படலம் பாடல் 1967 : நாமும் உண்டனேம் அன்றோ என்றான். இதை TKC யும் நீக்கவில்லை.
    புலால் உண்பவர்கள் கிடாபொங்கல் தவிர மற்ற விரத நாட்களில் உண்பதில்லை. இது உயர்வெண்ணம் காரணமாகவா?

  29. திருமிகு அநீ திருமிகு அத்விகா அவர்களுக்கு,
    அடியேன் தெரிவித்திருக்கும் கருத்துக்களில் ஜாதி எங்கிருந்து வந்தது? வைணவத்தில் பாகவதநிர்க்கும் பர்ப்பனநிர்க்கும் என்ன பேதம் என்றால், குலமகளுக்கும் விலைமகளுக்கும் உண்டான பேதம் என்பது பெரியோர் மொழி! இங்கு பாகவதன் என்பது ‘பகவானை’ வணங்குபவன் என்றே பொருள், தமிழில் ‘பண்டைகுலத்தை தவிர்த்து.. தொண்டர் குலத்தில் உள்ளீர்’ என்ற ஸ்ரீ பெரியாழ்வாரின் வாக்கில் இருந்து அறியலாம்! அடியேனது குரல் அய்யங்காரினுடயது அன்று! இன்றைய ஐயங்கார்களில் பலர் பார்ப்பனரும் இல்லை, பாகவதரும் இல்லை! தொண்டக்குலத்தை சேர்ந்த எவரும் பாகவதரே! பாகவதன் என்றும் ‘மறந்தும் புறம் தொழாதிருத்தல் இயல்பு’, ஆயின் பார்ப்பனனோ வேள்வி,வந்தனைகளில் பிற தேவதா சம்பந்தம் உள்ளவநாயின் அவன் விலை மகளுக்கு ஒப்பாகின்றான்! மேலும் ஸ்ரீ ஆழ்வார்கள் அனைவரும் உயர்வற உயர்நலம் கொண்ட நித்யர்களாதலால், அவர்களுக்கு ஜாதி இல்லை! இறைவனும் கீதையில் வர்ணத்தையே காண்பிக்கின்றான் அன்றி ஜாதியை இல்லை! ஸ்ரீ திருமங்கை மன்னனும் ‘நெறிமுறை நால் வகை வருணமுமாயினை’ என்றே பகர்கிறார்! ஸ்ரீ திருப்பாணாழ்வார் குல சம்பந்தம் அற்றவர்! அவரை குலங்களுடன் முடிச்சு போடுவது அபத்தம்! நிற்க!
    இறைவன் தனது ‘விபவ’ அவதரிகைகளில் சாத்வீக ஆகாரத்தை கழித்து பிறவற்றை அமுது செய்தான் என்பதே இங்கு வாதம்! இதற்கு பூர்வர்களின் பக்ஷம் இல்லை ஆதலால் ‘விபரீத’ அர்த்த பிரயோகம் விரோதம்! ‘கமப் யாச புண்டரீகம்’ என்ற பதத்துக்கு விபரீத பொருள் தோன்றியதே ஸ்ரீ உடையவரை உலகிற்கு காட்டிற்று, தாங்களும் ஸ்ரீ ராமாயணத்திற்கு விபரீத அர்த்தம் காண்பித்தால் அது கண்டிக்க தக்கது! புத்தம் அத்வைதம் சார்வாகம் கபிலம் கனாதம் வய்யாகரணம் சமணம் கௌதமம் உள்ளிட்ட பல மார்கங்களை பற்றியும் அவற்றிலிருந்து ஸ்ரீ எம்பெருமானார் தரிசனம் மாறுபடுவது பற்றியும் பூர்வர்களில் ரத்னமான சுவாமி ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ‘பர மத பங்கம்’ ‘சததூஷணி’ ‘ஸ்ரீ தேசிக பிரபந்தம்’ முதலிய கிரந்தங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்! தாங்கள் புத்த சார்புடன் வைணவத்தை பார்த்தலில் தவறில்லை, விபரீத ஞானம் தவறு! நிற்க!
    ஓதல் ஓதுவித்தல் இரண்டும் வைணவம் காட்டும் வேத மார்கத்தின் இரு கண்கள்! இதில் ஓதல் அனைவர்க்கும் அதிகாரமும் கடமையும் ஆகும்! ஓதுவித்தல் ஆச்சர்ய புருஷர்களான (அன்றைய) பார்ப்பனர்களின் கடமை ஆகும்! வைணவ ஆலயங்களில் அழ்வர்களுக்கு அடுத்து கொண்டாடப்படும் ஆச்சர்யர்களில் ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் தவிர அனைவரும் (அன்றைய) பார்ப்பனர்களே, இது இறைவன் காடும் ஓரான் வழியை அனுசரித்து வருகிறது! ஸ்ரீ திருக்கச்சி நம்பிகளுக்கு திருவுரு சமைத்து ‘ஸ்ரீ மாரநேர் நம்பியை’ விடுத்தல் ஏன் என்றால், நித்யசூரிகளை தவிர பிறரை பற்றுதல் வைணவத்தில் இல்லை! வசிஷ்டர் வால்மீகி ஆங்கிரசர் போன்ற கல்ப சூத்ரம் படைத்த மகரிஷிகளுக்கும் இது பொருந்தும்! இது ஸ்ரீ ராமாயணத்தை கொண்டாடி ரகுவம்ச மகாகாவ்யத்தை ஏற்றி சொல்லாததற்கு ஒப்பாம்! இதில் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ தேசிகர் தவிர ஏனைய பார்ப்பன ஆச்சர்யர்களுக்கும் விக்ரகம் சமைத்து வணங்காததில் காண்க! (ஸ்ரீ லோகச்சர்யர் ஸ்ரீ முனிகள் முதாலாநோரின் விக்ரகங்கள் பிற்கால சேர்க்கை ஆதலின் ஸ்ரீ பெரிய கோயிலின் க்ரமம் இவர்களுக்கில்லை)! நிற்க!
    முப்பிரி நூல் அணிதலில் வைணவம் யாரையும் தடுக்க வில்லை! இன்றைய அய்யங்கார்களை போல, அன்று இருந்த சிலரின் தீய வழக்கமே ‘சாத்தாத முதலிகளின் தோற்றம்’ ஆயின் சாத்தாத முதலிகள் அன்றிலிருந்து இன்று வரை ஒரு தனி ஜாதியாக தான் இருக்கிறார்களே அன்றி தாங்கள் குறிப்பிடுவது போல் அனைவரையும் அரவணைத்து இல்லை! தன்மை கெடுதலோ திரிதலோ இல்லாத இந்த தமிழ் சமயம் ஏனைய கௌடிய, மாதவ, நிம்பாரக, வல்லப வைணவங்களில் இருந்தும் வேறு பட்டது! ஆயின் கௌடிய வைணவத்திலே அன்றிலிர்ந்து இன்று வரை யார் வேண்டுமானாலும் ‘முப்பிரி அணிந்து’ கருவறை தெய்வத்தை தீண்டுதல் காண கிடைக்கிறது! ஆகவே வைணவத்தின் புரிதலை இன்றைய ஐயங்கார்களும், ஹைந்தைவ ஆர்வலர்களும் வளர்த்து கொள்ளல் நலம்!

  30. வால்மீகி ராமாயணத்தில் பல இடங்களில் ராம லட்சுமணர்கள் மாமிச உணவு உண்டது குறித்து வருகிற,து. சித்திரகூட பர்ணசாலை கட்டி முடித்ததும், கருப்பு மானை லட்சுமணன் வேட்டையாடி வர, அதைக் கொண்டு ஸ்ரீராமன் பலிச்சடங்கு செய்வதாகவே வருகிறது. சொல் விளையாட்டுக்கள் மூலம் இவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது பொருளற்றது. சமீபத்தில் சிறந்த ராமாயண அறிஞரும் யோக ஆசாரியருமான டாக்டர் ரங்கன் ஜி (கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் குமாரர்) அவர்கள் செய்த வால்மீகி ராமாயணத்தின் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் ஒரு விரிவான முன்னுரையும் எழுதியிருக்கிறார். அந்த முன்னுரையிலும் இதைச் சுட்டியிருக்கிறார். அக்காலத்திய உணவுப் பழக்கத்தின் படி ராமன் உணவுண்டதாக வால்மீகி எழுதியிருக்கிறார்; இதனால் “அறத்தின் திருவுருவம் ராமன்” என்ற கருத்தாக்கம் சிறிதும் குறைபடாது என்றும் விளக்கியிருக்கிறார்.

    கம்பனது காலத்தில் புலால் மறுத்தல் என்பது கட்டாயமான தவ நெறியாக ஆகி விட்டிருந்ததால், அதற்கேற்றவாறு குகன் கொணர்ந்த தேனையும் மீனையும் ராமன் “யாமும் உண்டனம் அன்றே” என்று அருள் செய்வதாக கம்பன் எழுதியிருக்கிறான்.

    சம்பிரதாயவாதிகளுக்கு இக்கருத்து ஏற்க முடியாதிருக்கலாம். ஆனால் இதை இவ்வாறு நாம் புரிந்து கொண்டு விளக்குவதே நீண்ட கால நோக்கில் சரியான அணுகுமுறை என்று நான் கருதுகிறேன். காரணம்? சில பத்தாண்டுகள் முன்பு கூட, வால்மீகி ராமாயண மொழிபெயர்ப்பை நேரடியாக படிக்கும் வாய்ப்பு என்பது மிக அரிதாகவே இருந்தது. பெரும்பாலான மக்கள் கதாகாலட்சேபம், உபன்யாசங்கள் மூலமே அதை அறிந்தனர். எனவே, சொற்பொழிவாளரது கருத்துக்களால் வடிகட்டப் பட்டே அது மக்களை வந்தடைந்தது. ஆனால், இன்று அப்படியல்ல, வால்மீகி ராமாயணம் அதன் அனைத்து பாஷ்யங்களுடன், ஆங்கில மொழிபெயர்ப்புடன் முழுமையாக இணையத்தில் கிடைக்கிறது. தேடல் உள்ள ஒருவர் உடனடியாக அதை எடுத்துப் படித்து விட முடியும். காலங்காலமாக பூட்டி வைக்கப் பட்டிருந்த அறிவுத் துறைகளின் கதவுகளை இணையமும் தொழில்நுட்பமும் தகர்த்து விட்டன என்பதையாவது இங்கு வந்து நீட்டி முழக்கும் ஆசாரவாதிகள் (orthodox people) புரிந்து கொள்ளட்டும்.

  31. அருளாளர்களையும், மகான்களையும் அவர்களது சாதி குலம் போன்றவற்றை சுட்டுவது தவறு என்பதை நான் அறிவேன். ஆனால், வைணவம் என்றால் மரக்கறி உணவு மட்டுமே என்ற வாதத்திற்கு எதிர்வினையாகவே அதை நான் சொல்ல நேர்ந்தது. சமுதாய நலன் கருதியே நான் இதைச் சொல்ல நேர்ந்ததால், இதில் எந்த அபசாரமும் இல்லை.

  32. \\திருக்குறள் முதல் வள்ளலார் வரை “கொல்லா விரதம்” என்ற நெறியை வலியுறுத்திய நீண்ட பாரம்பரியம் நம்மிடம் உண்டு. சமீப காலங்களில், கிருபானந்த வாரியார் பல கிராமக் கோயில்களில் மிருக பலிச் சடங்குகளை நிறுத்தியுள்ளார். மேலும், காலங்காலமாக இறைச்சி உணவுப் பழக்கம் கொண்ட இந்து சமூகக் குழுக்களிலேயே மாபெரும் மகான்களும், சீர்திருத்தவாதிகளும் தோன்றி அச்சமூகங்களுக்கு உள்ளிருந்தே இதற்கு எதிராகக் குரலெழுப்பியுள்ளார்கள்.

    மிருக பலிக்கும் புலால் உணவுக்கும் எதிரான கருத்தாக்கங்கள் மேட்டிமைவாத, சாதிய நோக்கில் அல்லாமல், ஆன்மீக உணர்வின், அற உணர்வின் அடிப்படையில் இருந்தால் தான் அது ஒரு சமூக இயக்கமாக அர்த்தமுள்ளதாகும்.//

    கோவில்களில் மிருக பலியை நிறுத்த துறவிகள், ஞானிகள், கற்றுணர்ந்த பெரியவர்கள் வேண்டும். அவர்கள் அதைச் செய்வதே சரி…நாராயண குரு, வாரியார் சுவாமிகள், அடிகளார்கள் ஆதீனகர்த்தர்கள் இவர்களே புலாலுண்ணாமை போதிக்கவும் நடைமுறைப்படுத்தவும் தகுதியானவர்கள். சாதாரண ஒரு ஸ்கைப் மாமனாருக்கு எதற்கு இந்த யுக்திகள் எல்லாம். ஞானியர் செய்தால் மட்டுமே மாற்றம் வரும்…. மாமனார் செய்தால் மேட்டிமை தான் வரும்….

    சொல்வதும் செய்வதும் என்ன என்பது முக்கியமல்ல. சொல்பவர் செய்பவர் யார் என்பதைப் பொறுத்தே ஏற்பதும் மறுப்பதும் செய்யவேண்டும்….மிகச் சரியான முடிவு…

    விந்தியம் குமரியிடை

    விளங்கும் திருநாடே

    வேலேந்தும் மூவேந்தர்

    ஆண்டிருந்த தென்னாடே..

    எங்கள் ’திராவிடப்’ பொன்னாடே

  33. ஜடாயு அவர்களுக்கு,

    ஒரு உயிர், நெல் மணியோ மிருகமோ தனது உயிரை இழப்பதற்கும், அதனை கொல்வதற்கும் தருமமிகு கரணம் இருந்தே ஆகவேண்டும் என்பது எனது கலாச்சாரத்தின் வெளிப்பாடு. (எனது என்று சொல்வது ஏனெனில் இங்கு யார் நமது கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடிக்கும் நேரத்தை ஏன் வீணாக்குவது) நமது கால்களில் மிதிப்பட்டு இறக்கும் ஒரு ஈறும்பின் இறப்பையும் அதன் வலியையும், தனது காதலியின் தலையில் வாடும் ஒரு மலரின் வாழ்வையும் பொருட்படுத்தாது கிராம கோவில்களில் நிகழும் பலிகொடுக்கும் சடங்கை ஒரு அவசியமான அறிவுப்பூர்வமான நிகழ்வை குறை கூறும் மேம்போக்கு வாதிகள் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை.

    துரித உணவு போல தயாராகும் கதைகளுக்கு நீங்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஆயினும் நீங்கள் சொல்லவந்த கருத்து காலத்திற்கு தேவையானதே. இந்த கதை இப்படியாவது பயன் பெற்றதே ஆசிரியர் புண்ணியவான்தான்.

    வணக்கத்துடன்,
    க வ கார்த்திகேயன்.

  34. “அந்த சாமர்த்தியத்தை வியர்த்தமாக்கியவர். தனிமையில் பேசுகையில் ஹிந்துத்துவ பிரக்ஞையை அபரிமிதமாக வெளியிட்டு பொதுவில் பேசுகையில் மாற்றிப் பேசுபவர், துணிச்சல் இல்லாதவர்.”

    AAchariyamana vishayam.. sujatha always writes derogatory things about hindutva , BJP and the related entities..very surprising when some experienced and knowledgable like Thiru.Malarmannan states that sujatha was indeed a supporter in his personal life at-least.. i still remember one of his short story where a gal (presumably brahmin going by the dialect) is in luv with a muslim guy. The father opposes the marriage.. but the gal “Bravely” goes ahead and marries the guy. The whole story is set in US and deals with a NRI father who aspires to win over jewish votes to run for congress…and the father is so “narrow-minded” about the love affair.. whereas the guy is a palestinian supporter (and yet in love with a kaafir gal).

    some useless story, but when Malarmannan-ji says about sujatha , suddenly this story crosses the mind..

  35. அன்புள்ள ஜடாயு, அரவிந்தன்,

    //
    ஜீவ ஹிம்சையை அடிப்படையாக கொண்ட வேத வேள்வி சமயத்தவர்கள் உள்வாங்கிய போது புரோகித வகுப்பினர் மேற்கொண்ட ஒரு வாழ்க்கை முறைதான் புலால் மறுப்பு உணவு
    //

    சபாஷ்! வேதத்தில் ஜீவ காருண்யம் இல்லை, அது பௌத்தர்களது கண்டுபிடிப்பு என்று பௌத்தத்திற்கு முன்பு பிராம்மணர்கள் அனைவரும் ஜீவ இம்சையை அடிப்படையாக வைத்திருந்தனர் என்பது உங்கள் புரிதல் போலும்!

    இங்கே ஒரே குழப்பமோ குழப்பம்….

    ஆழ்வார்கள் மீது எங்களுக்குத் தான் ‘உரிமை’ என்று யார் கூறினார்? உண்மை என்ன என்பது தானே கேள்வியாக எழுப்பப்பட்டது. இந்த ‘உரிமை’ பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது.

    சில ஆழ்வார்கள் புலால் மறுப்பை எந்தக் கட்டத்திலும் கடைபிடிக்கவில்லை என்று கூறுகிறீர்கள்… இதற்கென்ன ஆதாரம்?

    நம்மாழ்வார் எதையுமே உண்பதை மறுத்தார் என்ற ஐதீகம் உள்ளது – இந்த ஐதீகத்திற்குப் பின்னணியாக ஆகார நியமங்களைக் கடைபிடித்திருந்தார் என்ற வரலாற்று இருப்பது சாத்தியமல்ல என்கிறீர்களா?

    சக்கரவர்த்தித் திருமகனார் மது அருந்தினார் என்கின்றனர். ‘மது’ என்ற வார்த்தையை ‘தேன்’ என்று கொள்வதே பொருத்தம். “மது மூல ஃபலைஹி ஜீவன் ஹித்வா முனிவத் ஆமிஷம்” – இந்த இடத்தை கவனிக்க வேண்டும் (2.20.29). இந்த இடத்தில் “தேன், வேர், பழம்” என்று அர்த்தம் செய்து கொள்ளவே இடம் உள்ளது. “கள், வேர், பலம்” – இது பொருந்தாது.

    ஆம், அவர் மாமிசம் உண்டார்… கோவிந்தராஜர் என்கிற ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியார் கூட தனது இராமாயண பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார் (மற்ற பாஷ்யகாரர்களும் இதையே சொல்லியிருக்கிறார்கள்). இந்த உண்மை ஒன்றும் “ஆசாரவாதப் பூட்டு போட்டு பூட்டப்பட்ட” ஒன்றல்ல. உபந்யாசகர்கள் இதைச் சொல்லவில்லை – ஏனெனில் உபன்யாசங்கள் இராமனுடைய குணங்களைப் பற்றியது – அவன் என்னென்ன விதமான உணவுகளை உண்டான் என்பதைப் பற்றியதல்ல.

    ‘உபநிடதத்தைப் பற்றிய சொற்பொழிவில் குரு யாஞவல்க்யருக்கு இரண்டு சம்சாரம் இருந்ததைப் பற்றிச் சொன்னாரா?’ என்று கேட்பது அபத்தமாயிற்றே.

    இன்னொரு விஷயம்: அயோத்யா காண்டத்தில் இராமன் (நான் காட்டிய சுலோகம்) “பதினான்கு வருடங்கள் மாமிசம் உண்பதைத் தவிர்ப்பேன்” (‘ஹித்வா முனிவத் ஆமிஷம்’) என்கிறான். இவ்விடத்தில் பாஷ்யகாரர்கள் “போகப் பொருளாகிய விதவிதமாகச் சமைக்கப்பட்ட மாமிசத்தைத் தான் இங்கு கூறுகிறான். வேறு இடங்களில் அவன் மாமிசம் உண்டதாக வருகிறது. அதை போகப் பொருளாகக் கொள்ளவில்லை, ஏனெனில் அது தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் அளிக்கப்பட்டது; ருசியாக சமைக்கப்பட்டதன்று” என்று விளக்கியுள்ளனர்.

    இப்படிப் பொருள் கொள்ளவில்லை என்றால் இராமன் சத்தியத்தைக் காப்பவன் என்பதும் அடிபடும்! இங்கு அவர்களே இராமன் மாமிச உணவு உண்டதாக வரும் வேறு சில சுலோகங்களையும் காட்டியுள்ளனர். இங்கு எதையுமே ஆசாரவாதப் பூட்டு போட்டு மறைக்கவில்லையே. இதுவல்லவோ அறிவு சார்ந்த நேர்மை (intellectual honesty)!

    இங்கு கவனிக்கவும் – வேள்விச் சடங்குகளில் மாமிசம் இருந்தது மறுக்கப்படவில்லை. ஆனால், போகத்திற்காக மாமிச உணவை உண்பதை மகாபாரதம் உட்பட அனைத்து இந்துமத நூல்களும் தூஷித்துள்ளன.

  36. ” பார்ப்பனனோ வேள்வி,வந்தனைகளில் பிற தேவதா சம்பந்தம் உள்ளவநாயின் அவன் விலை மகளுக்கு ஒப்பாகின்றான்!”-

    மித்திரன் என்ற பெயரில் கடிதம் எழுதிய அன்பர் தனது வக்கிர புத்தியை வெளிப்படுத்தி உள்ளார். முதல் கேள்வி – பிற தேவதைகளை வந்தனம் செய்வது விலைமகளை போல என்ற அழுக்கு வர்ணனை. ஒரே பரம்பொருளே பல வேறு உருவங்களிலும் , உருவமற்றும் ( மனித புலன்களுக்கு புலப்படாமலும்) உள்ளது என்பதே உண்மை. விஞ்ஞானமும் இதனையே , இன்று உறுதிப்படுத்தி வருகிறது. சோதனை சாலைகளில் எலேக்டிரான்களை , பாசிட்றான் ( positron) களாக மாற்ற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

    எனவே, பார்ப்பனர்கள் வணங்கும் பிற தேவதைகள், அந்த பரம்பொருளின் பல்வேறு அம்சங்களில் அமைந்தவையே என்பதை ஒத்துக்கொள்ள மறுப்பவர்கள் , அந்த பரம்பொருள் எங்கும் நிறைந்தது என்ற இலக்கணத்தை நிராகரித்து, பரம்பொருளை தவிர வேறு சக்திகள் இருப்பதை தங்களை அறியாமலேயே ஒத்துக்கொண்டு, பரம்பொருளையே இழிவு படுத்துகிறார்கள். எனவே, பதிலுக்கு இவர்தான் விலைமகள் என்று மற்றவர்கள் லாவணி பாட மாட்டார்கள். பிற வழிகளை இழிவுபடுத்துவது ஆபிரகாமிய சிந்தனை. அதனை எதிரொலிக்கும் மித்திரன் உண்மையில் ஆபிரகாமியராய் இருக்க வாய்ப்பு உள்ளது.; போலி முகமூடிகள் தான் இப்படி எழுத வாய்ப்பு உள்ளது.

    அன்புள்ள அ.நீ .,

    இராம பிரான் மனைவியை காட்டுக்கு அனுப்பினார் என்பதால் அவர் தன் மனைவியாம் சீதாபிராட்டிக்கு அநியாயம் செய்தவர் ஆகிறார். எனவே, அவரை ஆதர்ச கணவர் ஆக கொள்ள முடியாது. என்று திரு ராம் ஜெத்மலானி அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அதனை ஏற்காத காரணம் , ராமாயணங்கள் பல நூறு உள்ளன. இவற்றில் எது சரி என்பது யாருக்கும் தெரியாது. எங்களது ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியது, அன்றைய ஊர்வம்புக்கு பயந்து தான். மன்னன் என்ற முறையில் தவிர்க்கமுடியாமல் செய்த செயல். அரசியின் மீது அவதூறு பரவுமானால், நாட்டை ஆளும் மன்னனின் ஆணைகளுக்கு யாரும் மதிப்பு தரமாட்டார்கள். எனவே, கணவன் என்ற முறையில் , சீதையை காட்டுக்கு அனுப்ப விரும்பாவிட்டாலும், மன்னன் என்ற முறையில் , நாடு நலன் கருதி , சீதாபிராட்டியை காட்டுக்கு அனுப்பினான் என்பது மூத்தோர் கருத்து. சீதையை பிரிந்த ராமன் வேறொரு பெண்ணை கொள்ளவில்லை. அசுவமேத யாகம் செய்தபோதுகூட , தங்கத்தால் செய்த சீதையின் உருவத்தை வைத்தே , யாகம் செய்தான் என்கிறது ராமாயணம்.

    ஆனால், சித்தார்த்த கவுதமருக்கு , தன் மனைவியை விட்டு பிரிய , இதுபோன்ற நியாயம் எதுவும் இல்லை. நவ்யான புத்தம் இதுபற்றி என்ன கூறுகிறது என்று திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் தெரிவித்தால், அனைவரும் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும்.

    பிற தெய்வம் தொழுவோன் விலைமகளுக்கு சமம் என்ற கருத்து மன்னிக்க முடியாதது. இதனை எந்த இழி பிறவி கூறியிருந்தாலும், ஏற்கமுடியாது. இது அப்பட்டமான ஆபிரகாமிய அடிமைப்புத்தியின் கருத்தே ஆகும்.

    புத்தரை வசை பாடுவது எனது நோக்கம் இல்லை. அவர் மனைவிக்கு அவர் நீதி வழங்கவில்லை என்பதே உண்மை.

    வைணவத்தில் கவுடியா மடத்தினால் பின்பற்றப்படும் வைணவமே அனைவரையும் முப்புரிநூல் அணிய அனுமதிக்கிறது என்பது திரு மித்திரன் அவர்களின் கடிதத்திலிருந்து தெரிகிறது. அவர்கள் வாழ்க, அவர்களது குழு மேலும் வளர்க. அவர்கள் மட்டும் அல்ல, கவிஞன் சுப்பிரமணிய பாரதி கூட கனகலிங்கம் என்ற ஆதிதிராவிட அன்பருக்கு முப்புரிநூல் அணிவித்தவர் தான். பொதுவாகவே, தமிழனுக்கு ,நம் ஊரில் இருக்கும் நல்ல விஷயங்கள் தெரியாது. எவனாவது வெளிநாட்டு வெள்ளைக்காரன் வந்து, நம் நாட்டில் இருக்கும் நல்ல விஷயங்களை சுட்டிக்காட்டினால் தான் , அப்படியா என்று வாய் பிளப்பான். நம் மாநிலத்தில் உள்ள நல்ல விஷயம் தெரியாமல், மேற்குவங்காளத்தில் உருவான கிருஷ்ண பக்தி இயக்கம் செய்துள்ள செயல்களை நம் மாநிலத்திலேயே செய்துள்ளனர் என்பதை உணர்வோமாக.

  37. இப்போது சென்னை வாழ் ஆரிய/திராவிட பெருங்குடி மக்கள் அடுக்கக கலாசாரத்தில் மூழ்கி விட்டனர். வாடகைக்கு வருபவர்கள் புலால் உண்ணிகளா என்று கேட்டே வாடகைக்கு விடப்படுகின்றன. ப்ளாட் சொந்தக்காரர்கள் புலால் விரும்பிகளாக இருந்தாலும் வீட்டில் சமைப்பது இல்லை. புதிய மனை பரப்புகள் வருமிடங்களில் வழியில் கசாப்புக் கடை இருக்கிறதே பிள்ளைகள் அருவருப்பு அடைகிறார்கள் என்று புலம்புவதும் அசைவர்களே. உயிர்ப்பலி நடைபெறும் கோயில்கள் ஊருக்கு வெளியே உள்ளவரை பிரச்சினை ஏதுமில்லை. நகரம் விரிவடையும்போது இந்தப் பிரச்னை எழுவது இயற்கையே. அதை எதிர்கொள்வது என்பது ஐயங்கார் ஆகா இருந்தாலும் வேறு எவராயினும் அது தலைவலிதான். நான் குடியிருந்த ஒரு தெருவில் ஒரு சிறிய அம்மன் கோவில். ஆடி மாதங்களில் மிகப்பெரிய ஒலிபெருக்கிகளை வைத்து பாடல்கள் இசை(?)க்கப்படும் . தலைவேதனைதான். நான் பின்னர் கோவில் பொறுப்பாளரை சந்தித்து குறைந்த அளவு ஒலியில் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தபின்னர் ஒலியளவை குறைத்தனர். மற்ற ஒரு தெருவாசி போலிசுக்கு போனார் புகார் செய்ய. நிலைமை சற்று விபரீதமானது. சிறிய பஞ்சாயத்திற்குப் பின்னர் விழா நிர்வாகிகள் புகார் செய்தவரிடம் “யோவ் ஐயரு எவ்வளுவு டீசெண்டா டீல் பண்ணாரு ” என்று புலம்பினார்கள். பிரச்னைகளை அணுகும் போது தனிப்பட்ட/பொது நலனும் கலந்தால் கொஞ்சம் diplomatic ஆகத்தான் அணுகவேண்டியுள்ளது. அதைத்தான் சுஜாதா தேசிகனின் கதை சொல்லவந்ததாய் கொள்ளலாம். தமிழ் ஹிந்து அன்பர்கள் எனது கருத்துக்கு மாறுபடலாம். நாம் ஒன்றும் சீனாவில் இல்லை. கருத்து சுந்ததிரம் வாழ்க!

  38. கருத்தை ஏற்காதவர்களை ஒட்டுமொத்தமாக சம்பிரதாயவதிகள் என்று தொகுத்த பிறகு வாதங்களுக்கு இடமில்லை. திராவிட அரசியல் நிகர்த்த அரசியல்!

  39. //
    நீங்கள் இந்து அல்லது வைணவத்தின் அதிகாரபூர்வ குரல்களோ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்களோ அல்ல. சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய்.
    //

    ததா ஆஸ்து ஆநீ அவர்களே.

    ஆழ்வார்களை தெய்வமென வணங்கும் நாங்கள் மனம் நொந்தோம் என்று ஒருவர் சொன்னதற்கா இவ்வளவு.

    ஜடாயு ஆழ்வார்களை வரிசை கட்டியதை போல பரம பூஜநியர்களை வரிசை கட்டினால் நாங்கள் சும்மா (பேசாமல்) இருப்போம் என்று சொல்பவர்களா நீங்கள். அழகிய தமிழில் ஒரு கட்டுரை எழுதி விடமாட்டீர்களா?

    அதென்னா சாத்திய வைணவர்கள் சாத்தாத வைணவர்கள்? – இது ராமானுஜர் பயன்படுத்திய பிரயோகமே. எல்லாரையும் வைணவர்களாக பார்க்கும் பாவம் தப்போ?

    பேதங்கள் இருக்கக் கூடாது என்று வேண்டுமானால் சொல்லிக்கொண்டும் நம்பிக்கொண்டும் இருக்கலாம் கம்முனிஸ்டு போல. இந்த பூமி உள்ள வரையோ அல்லது எல்லோரும் அத்வைத சித்தி அடையும் வரையோ 🙂 பேதம் இருக்கத்தான் போகிறது.

    இந்த பேதத்தை ஒரு நேர்மையான முறையில் எதிர்கொள்ளும் வாக்கியமே சாத்திய வைணவர் சாத்தாத வைணவர்.

    எல்லாரும் சாத்திக் கொண்டு விட்டால் இந்த பேதம் அழிந்துவிடும் இல்லையேல் எல்லோரும் கழட்டி விட்டால் இந்த பேதம் அழிந்துவிடும். வசதிக்கேற்ப செய்துகொள்ளலாம்.

    ஹிந்து புரிதலை கொண்ட விவேகானந்ததுல்ய ஆநீயும் ஜடாயுவும் இதை புரிந்து கொள்ளபோவதில்லை. மற்றோரை எல்லாம் சற்று ஒதுங்கி இருக்கச்சொல்லி ஹிந்து மதம் வளர்ப்பீர்.

    இந்த சாத்திய வைணவர் சாத்தாத வைணவர் சம்பாஷனையை முன் ஒரு முறை ஜடாயு ச்லாகித்தார் இப்போது ஆநீ கோபிக்கிறார்.

    வேளுக்குடி கிருஷ்னாதிகள் ராமர் மாமிசம் உண்டதை சொல்ல தவிர்கின்றனர் ஆசார்வாத பூட்டு போடுகின்றனர் என்று அடித்து நொறுக்கி. அதை செய்து முடித்த நொடியில் தமிழ் ஹிந்துவில் பீப் பர்கர் செய்ய ஆயிரம் லிட்டர் தண்ணி விரயமாகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது என்றும் எழுத முடிகிறது நம்மால். இது எப்பேற்பட்ட நிர்அத்வைத பாவம்.

    வேண்டுமெனில் வேளுக்குடி கிருஷ்ணனிடம் சொல்லி, ராமர் மாம்சம் உண்டார் நீங்களும் எல்லாரும் சாப்டுங்கோன்னு சொல்ல சொல்லலாமா. நல்லாருக்குமா

    விவேகானந்தரும் ராமக்ரூஷ்ணரும் சொன்னதுதான் வாக்கு என்ற ஆசாரத்தை கடைபிடிக்கும் நீங்கள் கூட அசார வாதிகளே. நாங்கள் அவ்வன்னமில்லை என்று சொல்லிக்கொள்ளலாம், வ்யவஹாரம் அப்படி தோன்றவில்லை.

    மற்றவர் மனதில் நின்று எதையும் நோக்கி பழகிய நீங்கள் இதையும் கொஞ்சம் மற்றவர் நோக்கில் பார்க்கலாம் என்பது எனது தாழ்வான அபிப்ராயம்.

    ஓபன் சோர்ஸ் மதம் என்று ஒரு அன்னியர் சொல்ல அதில் ருத்ரன் சிவனாக கீ முவில் தான் நிலை கொண்டார் என்று எழுத, அதை தாளாமல் இங்கு சிலர் மனம் நோக. ஆம் இப்படி நோவது சரியே, எப்படி இப்படி சொல்லலாம் என்று கேள்வி எழுப்ப முடியும் நமக்கு, ஆழ்வார்களை பற்றி சொன்னதை வைத்து மனம் நொந்த ஒருவரை எப்படி தள்ளி இருக்க சொல்ல நேர்கிறது பாருங்கள்.

    மேலும் ஜடாயு அவர்களே

    கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், ஜெயராமன், ராமஜயம், சீதாராமன் என்றெல்லாம் தமிழ்நாட்டு அய்யங்கார்கள் பெயர் வைத்துக் கொள்வதில்லை. சுப்ரபாதம் எல்லோரும் கேட்கிறார்கள், எங்கள் வீட்டரிகில் இருக்கும் குப்பத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சுப்ரபாதமும் சஹாஸ்ரனாமமும் ஒளிபரப்பாகிறது.

  40. 1. இங்கு பேசப்படும் சிறுகதையை நான் படிக்கவில்லை. படிக்க வேண்டியது அவசியம் எனக் கருதவில்லை. ஏனெனில் நான் விமர்சனம் பற்றிய என் கருத்தையே வெளியிட்டேன். விமர்சனத்திலேயே கதையைப் பற்றிப் போதிய விவரங்களை ஸ்ரீ ஜடாயு தந்துள்ளார். எனக்கு அதுவே போதுமானது. ஏனெனில் ஜடாயுவின் புரிதலில் எனக்குப் பூரண நம்பிக்கை உள்ளது. எது குறித்தும் உடனடியாகக் கருத்துக் கூறிவிடாமல் நிதானமாக ஆழ்ந்து சிந்தித்து அதன் பிறகே கருத்தைத் தெரிவிப்பவர் ஜடாயு. அவசரப்பட்டு எதையும் விமர்சித்து விடமாட்டார். ஆனால் எவ்வளவுதான் பூடகமாக எழுதப்பட்டாலும்/ சொல்லப்பட்டாலும் அதன் உள்நோக்கத்தைக் கூடப் புரிந்துகொண்டு நமக்கும் அதைப் புரிய வைத்துவிடுவார். ஆகையால் சம்பந்தப்பட்ட சிறுகதையை அவர் படித்துப் புரிந்துகொண்டு விமர்சித்ததே எனக்குக் கருத்துச் சொல்லப் போதுமானது எனக் கொண்டேன். பொதுவாக நான் பொழுது போக்கு வணிக இதழ்களில் வரும் எதையும் படிப்பதில்லை. போகும் இடங்களில் காத்திருக்கையில் கையில் கிடைக்கும் அம்மாதிரி இதழ்களைப் புரட்டுவதோடு சரி.
    2. நான் ஜீவ காருண்ய அடிப்படையில் வள்ளலார் அறிவுரைப்படி தாவர உணவு மட்டுமே உட்கொண்டு வருபவன். கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் வனவாசிகளிடையே பழகுகையில் அவர்களிடமிருந்து அந்நியப் படலாகாது என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுடன் சேர்ந்திருந்து அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்ட உணவு எதுவாயினும் அது என்ன என்று விசரிக்காமலேயே உட்கொண்டு அதன் பிறகே அது என்ன என்று கேட்டுப் பழகியவன். தற்சமயம் அதுவும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஒடிஸா சென்று வனவாசிகளிடையே பழக நேரிட்ட போது ஸ்ரீ லட்சுமணானந்தர் அவர்களைத் தாவர உணவு மட்டுமே உட்கொள்ளப் பழக்கிவிட்டிருந்ததால் எனக்கு உணவு விஷயத்தில் புலால் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. லட்சுமணானந்தர் படுகொலை தொடர்பாகவே நான் இருமுறை ஒடிஸா சென்று பல நாட்கள் அவர் நடத்தி வந்த ஆசிரமத்தில் தங்கிவிட்டு வந்தேன்.

    3. ஆலயங்களில் மிருக பலியை அனுசரிப்போர் அவர்களாகக் கைவிட முன்வருமாறு நமது பண்பான பேச்சின் மூலம் செய்ய வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. நானே பல கோயில்களில் அவ்வாறு அவர்களாக விரும்பிக் கை விடச் செய்துள்ளேன். ஆனால் அது இழிவானது என்று சொல்லி அல்ல. திருட்டுத்தனமாகப் பிள்ளையாரைக் கொண்டு வந்து வைத்து ஏமாற்றியும் அல்ல. பொய் பித்தலாட்டங்கள் மூலமாகவோ மேட்டிமை ஹோதாவிலோ அல்லவே அல்ல. உயர்வு தாழ்வு பேதம் பேசியும் குற்ற உணர்வு ஏற்படச் செய்தும் அல்ல.
    4. சுஜாதா உள்ளிட்ட என் சமகாலப் பிரபல எழுத்தாளர்கள் பலரும் என் நண்பர்களே. இவர்களில் பலரும் என்னிடம் பேசுகையில் எனது கருத்தை ஏற்பதாகவே காட்டிக்கொள்வார்கள். ஆனால் பொதுவில் பேசுகையில் மாற்றிப் பேசுவார்கள். ஒருவேளை இவனிடம் எதற்கு விவகாரம் என்று அப்படி நடந்து கொள்கிறார்களோ என்னவோ! நீங்கள் எழுதுவதை வாசிப்பதில்லை; வாசித்தால் எங்கே மனம் மாறிவிடுமோ என்று தயக்கமாக உள்ளது என்று சொல்பவர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள்தான்! இரு தரப்பினரிடமும் புன் சிரிப்புக் காட்டிவிட்டுப் போய்க்கொண்டே இருகிறேன்!
    -மலர்மன்னன்

  41. //புத்தரை வசை பாடுவது எனது நோக்கம் இல்லை. அவர் மனைவிக்கு அவர் நீதி வழங்கவில்லை என்பதே உண்மை.
    //

    அப்பா ராமானுஜர், ராகவேந்திரர், யாஞவல்கர் போன்றோர்யும் இந்த லிஸ்டில் சேத்துகோங்க அத்விகா. இவர்களும் மனைவிக்கு துரோகம் செய்தவர்கள்.

    மிற்றனுக்கு தெரியுமா அவர்களது வம்சாவழியின் வர்ணம். அவர் தன்னை சுத்த ரிஷி வம்சம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்.
    இன்றைக்கு சாத்திக்கொண்டு இருக்கும் 99% மக்களின் மூதாதையர் அன்று சாத்ததவரே.

    நடுவில் லோகாசார்யர், ஸ்ரீமுணிகள் விக்ரகம் எல்லாம் பிற்சேற்கை என்று சொல்லிவிட்டார் – என்ன ஒரு ரெண்டாயிரம் வருஷம் கேப் இருக்குமா?
    இப்படி அவர்களுக்கு விக்ரக நியமம் இல்லையாதலால் எவ்வளவு தாழ்ந்து விட்டார்கள் அவர்கள் அச்சோ அச்சோ.

  42. இந்த விவாதம் திசை மாறி செல்கிறது. நமக்குள் அடித்துக்கொண்டால் மற்றவர்க்கு கொண்டாட்டம் என்பதை கவனத்தில் வைத்தால் நல்லது.

  43. திருமிகு அத்விகா,

    வாயில் வருவதை எல்லாம் உளறுதல் எம் வழக்கமன்று! ‘திறம் பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம், மறந்தும் புறம் தொழா மாந்தர், இறைஞ்சியும் சாதுவராய் போதுமிங்கள் என்றான் நமனும் தன தூதுவரை கூவி செவிக்கு’ என்பது ஸ்ரீ திருமழிசை பிரானின் வாக்கு! மேற்கத்தைய பார்வையையும் அவர்கள் வேண்டியபடி திரிக்கும் வாதங்களையும் உண்மை என்று நம்பி வீழ்வதை காட்டிலும் ஸ்ரீ வடிவழகிய நம்பியின் பால் ஈடுபடுதல் பெருமை சேர்க்கும்! நாம் புதிதாய் ஏதும் சொல்அறியோம், நன்மையும் தீமையும் நமக்குரைத்த நல்லோர் பலர் ஆச்சர்யர்கலாய் வாய்க்கும் பெருமை கொண்டோம்! ஸ்ரீ சங்கர பகவத் பாதரையும், ஸ்ரீ எம்பெருமானரையும் ஸ்ரீ மாத்வரையும் முதலில் கற்கை பல குழப்பங்களின் பால்நின்று நம்மை காக்கும்! புரிதலை வளர்ப்போம்! ‘பிறர் வேண்டுவது போல் அமைந்தது’ என நாம் பேச கூசுகின்றோம்! அமைவுடைய அருளாளர் பலரின் வழியே வைணவம், அதை வைணவமாய் பார்த்தல் அறம்!

  44. இந்தப் பதிவில் வரும் ’ஐயங்கார்’ என்ற சாதி குறித்த சொல்லாடல் ஆதாரமில்லாதது என்றும் அவசியமில்லாதது என்றும் சில வாசகர்கள் கருதுகின்றனர். ஒரு கதையின் பின்னணியுடன் கதாசிரியர் குறித்த விவரங்களும் சேர்ந்து தான் பொதுவாக எல்லா கலை, இலக்கிய விமர்சனங்களும் எழுதப் படுகின்றன. இது இயல்பானதே. ஆயினும் இக்கட்டுரை ஆசிரியர் இவ்விஷயத்தில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் குழு கருதுகிறது. அந்த சொல்லாடலை பதிவிலிருந்து நீக்கி விட்டோம்.

    மிருக பலி, உணவுப் பழக்கம் சார்ந்த மேட்டிமை வாதம் ஆகியவை குறித்த இந்துத்துவ பார்வையினை முன்வைக்க சுஜாதா தேசிகன் எழுதிய சிறுகதை ஒரு முகாந்திரமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது, அவ்வளவே. சுஜாதா தேசிகன் அவர்கள் இந்தத் தளத்திலேயே பக்தி குறித்த கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் சில வருடங்கள் முன்பு தமிழ்ஹிந்து தளத்திற்கு நட்பார்ந்த முறையில் உதவியும் உள்ளார். இக்கட்டுரை கட்டாயம் தனிப்பட்ட ரீதியில் அவரையோ அல்லது மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களையோ எந்த விதத்திலும் தாக்குதல் செய்யவில்லை. சிறுகதையைக் குறிப்பிட்டு ஆரம்பிக்கும் கட்டுரை, இதனை ஒரு பொது விவாதமாக மாற்றி, அது குறித்த ஒரு பார்வையையும் முன்வைத்து முடிகிறது என்பதையும் வாசகர்கள் நன்கு உணரலாம். ஏற்கனவே பல வாசகர்கள் இதனைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

    விவாதத்திற்குப் பங்களிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது நன்றியும் அன்பும்.
    – ஆசிரியர் குழு

  45. \\\\அவர்களது விடுதலையின் வாயிலாகவே அது இருந்தது. மீனவர்களையும், வேடர்களையும் அரவணைத்தது வைணவம். விளாஞ்சோலைப் பிள்ளையும், அழகர் கோயில் பதினெட்டாம் படி கருப்ப சாமியும் இன்றளவும் வைணவத்திற்கு உள்ளே தான் இருக்கிறார்கள். இது அடிப்படையில் ஒரு மேட்டிமைவாத ஐயங்கார் பார்வை மட்டுமே.\\\

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜடாயு,

    முதற்கண் நீங்களோ அல்லது ஸ்ரீமான் அ.நீ அவர்களோ ஏதேனும் ஜாதியைக் குறித்துத் தவறாக கருத்துக்களை கொண்டிருப்பீர்கள் என்ற ரீதியிலான கருத்துப்பரிமாற்றங்கள் தவறானவை. தளத்தில் சிலப்பல வருஷங்கள் உங்களது கருத்துக்களை வாசிப்பவர்கள் இதனை அறிவார்கள். தனிப்பட்ட நபரைத் தாக்கும் கருத்துக்கள் பதியப்படாது என்ற பின்னும் வேஷம் கோஷம் இத்யாதி கருத்துக்கள் ஏன் பதியப்பட்டன தெரியவில்லை.

    பின்னும் எனது சில கருத்துக்கள்:-

    நமது தளத்தில் மூத்த எழுத்தாளர்களின் ப்ரயோகத்தில் இருக்கும் சில சொல்லாடல்களில் எனக்கு சம்சயம் உண்டு. அவை கலந்துரையாடப்படவேண்டியவை; தெளிவு படுத்தப்பட வேண்டியவை என்பது என் அவா. ஒன்றை கீழே ப்ரஸ்தாபிக்கிறேன்.

    நான் ஸ்ரீ வைஷ்ணவனோ ஐயங்காரோ இல்லை. பின்னும் ஸ்ரீ வைஷ்ணவம் சைவம் இரண்டையும் தங்களைப் போலவே ஆழ்ந்து மதிப்பவன். ஸ்ரீ வைஷ்ணவ பரிபாஷைகளில் அதிகம் பரிச்சயம் இல்லை. அடைக்குறியிட்ட மேற்கண்ட வாசகம் பலருக்கு பல அர்த்தங்களை கொடுக்க வல்லது என நினைக்கிறேன். அனைத்து சமூஹ மக்களையும் அரவணைத்துச்செல்லும் பாங்கு அன்று இருந்தது இன்று அது இல்லை என எனக்குத் தொனிக்கிறது.

    அது போன்ற கருத்தில் எனக்கு ஒப்புமை இல்லை..

    காரணம் கீழ்க்கண்ட இரண்டு சுட்டிகள். நமது தளத்து வாசகர்கள் அனைவரும் இவ்விரண்டு சுட்டிகளையும் வாசிக்க வேணுமாய் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    https://dajoseph.com/PDFs/Unforgetable_Saint.pdf

    https://dajoseph.com/PDFs/My_Experiences_with_my_Guru.pdf

    ஜாதி என்ன வேற்று மத பெற்றோருக்கு பிறந்த ஒரு க்றைஸ்தவ மாணாக்கனுக்கு ஒரு நாள் இரண்டு நாள் என இல்லாது கிட்டத்தட்ட இருபது வருஷம் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை, தமிழை, சம்ஸ்க்ருதத்தை, ஹிந்து மதத்தை போதித்து அவரை உலகோரெல்லாம் போற்றும் வண்ணம் “ஜோஸஃப் பாகவதர்”, “ப்ரவசன பாஸ்கரன்”, “ஸ்ரீ வைஷ்ணவச்சுடராழி” மற்றும் “ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமி” என்றெல்லாம் அறிய வைத்த

    பூஜ்யஸ்ரீ உ.வே. திருமாளிகை ரெ.வீர ராகவ அய்யங்கார் ஸ்வாமிகளும் அவரது பேரன்புக்கு பாத்ரமாகி பூஜ்ய ஸ்ரீ வரதயதிராஜ ஜீயரால் “ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமி” என ச்லாகிக்கப்பட்ட பூஜ்ய ஸ்ரீ ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமி அவர்களும் தான் எனக்கு ஆசாரவாதத்தின் ப்ரதிநிதிகள்.

    ஆசாரம் என்ற சொல்லுக்கு “ஒழுங்கு” “ஒழுகுமுறை” என சான்றோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒழுகப்படவேண்டியது ஆசாரம். ஒழுகப்பட வேண்டிய ஆசாரத்தை வலியுறுத்துவது தான் ஆசாரவாதம். இதனுடன் “சிஷ்ட” என்ற சொல்லை சேர்த்து “சிஷ்டாசாரம்” – சான்றோர்களால் ஒழுகப்படும் ஆசாரம் என சொல்லை மெருகு படுத்தியவர் சான்றோர்கள்.

    ஆனால் ஆசாரத்திலிருந்து பிறழும் லௌகிகர்களின் மதமாத்சர்யங்களை “ஆசாரம்” என்ற சொல்லில் அடைத்து அச்சொல்லை அறுவறுக்கத்தக்கதாக ஆக்கி அவர்களுடைய dirty tricks ஒழுகுமுறைகளை ஜபர்தஸ்தியாக “ஆசாரவாதம்” என நூதனமாக ஒரு சப்தப்ரயோகம் செய்வது தவறானது என்பது என் தாழ்மையான அபிப்ராயம். சரியான சொல்லாடலில் சரியான மற்றும் தவறான ஆசாரங்களை பெரியோர் ஸதாசாரம் மற்றும் துராசாரம் என குறிக்கின்றனர். prefix சேராத ஆசாரம் என்ற சொல் சுட்டுவது ஸதாசாரம். எதிர்க்கப்பட வேண்டியது மற்றும் கண்டிக்கப்பட வேண்டியது துராசாரம் மற்றும் துராசாரவாதம்.

    இது எனது அபிப்ராய பேதம் மட்டுமே. தயவுசெய்து ஆரோபிக்கும் கும்பலோடு கும்பலாக இது என்ன இன்னொரு ஆரோபம் என தவறாக எண்ண வேண்டா.

  46. \\\\\பௌத்தத்தின் தார்மிக ஜீவ ஹிம்சையின்மையை ஜீவ ஹிம்சையை அடிப்படையாக கொண்ட வேத வேள்வி சமயத்தவர்கள் உள்வாங்கிய போது புரோகித வகுப்பினர் மேற்கொண்ட ஒரு வாழ்க்கை முறைதான் புலால் மறுப்பு உணவு. துரதிர்ஷ்ட வசமாக அதை ஏதோ தங்கள் குலபெருமையாக மற்றவர்களை ஒதுக்கும் அல்லது கீழாக நினைக்கும் கருவியாக இந்த புரோகிதக் குழுவினர் பயன்படுத்துவது இந்துக்களுக்கு நன்மை பயக்காது. பௌத்த சார்புடையவன் என்றாலும் ஹிந்துவாகவே இன்று இருக்கும் எனக்கு நிச்சயமாக ஆழ்வார்கள் மீது அன்பும் எம் பண்பாட்டின் பிதாமகர்கள் என்கிற மதிப்பும் உண்டு. இந்த புரோகித குழுவினருக்கு அவர்கள் மீது எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை எமக்கும் அவர்கள் மீது உண்டு. \\\\

    ஸ்ரீமான் அ.நீ அவர்களது மேற்கண்ட வாசகங்களில் எனக்குப் பல அபிப்ராய பேதங்கள்.

    முதலில் புரோகிதம் என்பது ஏதோ ஒரு ஜாதியினர் தொழில் என்பதும் மேலும் புலால் மறுப்பது என்பது புரோகித வகுப்பினரின் வாழ்க்கை முறை என்பதும். அப்படிப்பார்த்தால் எனது நண்பர்களில் சம்ப்ரமமாக மாம்சாஹாரம் சாப்பிடும் மைதிலி மற்றும் வங்காள ப்ராம்மணர்கள் உண்டு. அதே சமயம் வெங்காயமும் உள்ளிப்பூண்டும் கூட சாப்பிடாத ஆசாரமான தலித் சஹோதரர்களும் உண்டு.

    தாங்கள் ததாகத புத்த பெருமானின் கோட்பாடுகளில் ஈடுபாடு உடையவர் என்றறிந்ததில் மகிழ்ச்சி. ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் நவயான பௌத்தம் என்று சொல்லியுள்ளார். எனக்குப் புதிதே. நமது தளத்து வ்யாசங்கள் பலவற்றிலும் ஹிந்து என்று சொல்லில் வைதிகத்தை மட்டும் சுட்டாது வைதிகம், அவைதிகம், ஜைனம், பௌத்தம், சீக்கியம் போன்ற பல சமயக்கூறுகளை உள்ளடக்கியது ஹைந்தவம் என்பதை ஸ்ரீமான் கந்தர்வன் அவர்களது வ்யாசத்தில் எழுதிய உத்தரத்திலிருந்து பலப்பல வ்யாசங்களில் கருத்துப்பரிமாறும் போதும் சொல்லி வந்திருக்கிறேன்.

    அபரிமிதாயு: என்ற மஹாயான சூத்ரத்தை வாசிக்க நேர்ந்தது.

    ॐ नमो भगवते अपरिमितायुर्ज्ञानसुविनिश्चिततेजोराजाय तथागतायार्हते सम्यक्संबुद्धाय, तद्यथा, ओं पुण्यमहापुण्य अपरिमितपुण्य अपरिमितायुपुण्यज्ञानसंभारोपचिते, ओं सर्वसंस्कारपरिशुद्धधर्मते गगणसमुद्गते स्वभावपरिशुद्धे महानयपरिवारे स्वाहा।

    ஓம் நமோ பகவதே அபரிமிதாயு: க்ஞானஸுவிநிஸ்சித தேஜோராஜாய ததாகதாய அர்ஹதே ஸம்யக் ஸம்புத்தாய, தத்யதா, ஓம் புண்யமஹாபுண்ய அபரிமிதபுண்ய அபரிமிதாயுபுண்ய க்ஞானஸம்பாரோபசிதே, ஓம் ஸர்வ ஸம்ஸ்கார பரிசுத்த தர்மதே ககண ஸமுத்கதே ஸ்வபாவ பரிசுத்தே மஹாநயபரிவாரே ஸ்வாஹா

    கடபடவெனும் மேற்கண்ட வாசகத்தில் ஸ்வாஹாகாரத்தை மட்டும் பிடித்துக்கொண்டு மஹாயான பௌத்தர்களெல்லாரும் ஆயுசு அபிவ்ருத்திக்காக ஹோமகுண்டத்தில் உட்கார்ந்து கொண்டு நெய்யையும் ஹவிசையும் அக்னியில் ஆஹுதியாகக் கொடுத்தார்கள் என்று சொல்வது எப்படி தவறோ

    அதை விட அதிகமான தவறு புலால் உண்ணாதவர்கள் புலால் உண்ணாததை ஒரு விஷயமாகக் கருதி அடுத்தவர்களை கீழாகக் காணும் விஷயத்தை மேட்டிமை வாதம் என்று சொல்லாது புரோகிதகுழுவினரின் செயல் என்று இடித்துரைப்பது.

    முதலில் பௌரோஹித்யம் ப்ராம்மணர் என்று ஒரு ஜாதிக்காரர்களிடம் இருக்கிறது என்று அடித்துச்சொல்வது தவறு. இன்று எத்தனையோ ஆஸ்ரமங்களில் எல்லா ஜாதியினருக்கும் அதுவும் பெரு நகரங்களில் ஆண் பெண் என இருபாலருக்கும் பௌரோஹித்யம் சொல்லிக்கொடுக்கின்றனர். ச்ரத்தை உள்ள க்ருஹஸ்தர்கள் அவர்களுக்கு விருப்பமான புரோஹிதர்களை அணுகி தங்கள் சடங்குகளை நடத்திக்கொள்கின்றனர்.

    பௌரோஹித்யத்தில் சில சமயம் சில அன்பர்கள் பணத்தை ப்ரதானமாக வைத்து சடங்குகளைத் தவறாக அல்லது சுருக்கமாக நடத்துவதை சரியான வார்த்தைகளால் கண்டிப்பது வேண்டுமானால் ந்யாயம். ஆனால் புரோஹிதம் என்ற சொல்லே ஏதோ ஒரு குழுவினருக்கு உரித்தானது என்ற வாதமும் அதற்கு மேல் மேட்டிமை செயல்பாடுகள் உடைய ஒரு சிலரைக் கண்டிப்பதற்குப் பதில் ஒட்டுமொத்த ஒரு குழுவினரையே கண்டிப்பதும் மிகவும் தவறானது. Is that stereotyping.

    பௌரோஹித்யம் என்பது வைதிக சமயத்தில் மிகவும் பவித்ரமான கார்யம். சுப, அசுப, நைமித்திக, காம்ய என பல வைதிக சடங்குகளை நடத்தி வைக்க பாடம் கற்று வைதிக சடங்குகளில் நம்பிக்கை ச்ரத்தை உள்ள அன்பர்களுக்கு அவற்றை நடத்தி வைப்பவர் புரோஹிதர். இத்தகைய ஸ்தானத்தில் இருப்பவர் ப்ருஹஸ்பதி என கௌரவப்படுத்தப்படுகிறார். பௌத்தர்களுக்கு பௌரோஹித்யம் ஜீர்ணமாகாது என்றால் வைதிக சமயத்தில் ஒழுகுபவர்கட்கும் ஆகக்கூடாது என்பது ந்யாயமல்ல. சடங்குகள் என்பது வைதிக சமயத்தில் மிக முக்யமான அங்கம். சடங்குகளை நம்பாதவர்கள் சடங்குகளை செய்யாமல் இருக்கலாம். ஆனால் சடங்குகளையோ அல்லது சடங்குகள் நடாத்துபவர்களையோ நிந்தனை செய்யாமல் இருக்கலாமே

    ந தேவா: அபி து மானுஷோஹம் போதிஸத்வபூத:
    ஏவம் ஹீன தீனானுகம்பகோ போதிமார்க்கம் உபதர்சக:

    தேவனில்லை மனுஷ்யன் யான்; போதிசத்வனாக ஆனேன்
    தாழ்ந்த மற்றும் தீன தசையில் இருக்கும் மக்களுக்கு போதிமார்க்கத்தை உபதேசிப்பதன் மூலம்

  47. \\\இங்கு கவனிக்கவும் – வேள்விச் சடங்குகளில் மாமிசம் இருந்தது மறுக்கப்படவில்லை. ஆனால், போகத்திற்காக மாமிச உணவை உண்பதை மகாபாரதம் உட்பட அனைத்து இந்துமத நூல்களும் தூஷித்துள்ளன.\\\

    அன்பார்ந்த ஸ்ரீமான் கந்தர்வன் அவர்களுக்கு, மிக முக்யமான caveat சேர்த்ததற்கு மிக்க நன்றி.

    “லோகோ பின்ன ருசி:” – உலகத்தின் எண்ணப்பாடுகள் பலவிதம் என்பது ஆன்றோர் வாக்கு. எல்லோரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று ஆப்ரஹாமியர் தான் சொல்ல முடியும். அப்படி இல்லை என்பது வேறு விஷயம்.

    மிக அழுத்தம் திருத்தமாகச்சொல்ல வேண்டிய விஷயம்.

    ம்ருக பலி மற்றும் புலால் உண்பது என்ற வழக்கத்தை ஜீவகாருண்யம் என்ற ஒரு ஆதாரத்தை வைத்து மாற்ற விழைவது என்பது காலங்காலமாய் சான்றோர்கள் பலரும் செய்து வருவது என்பது உண்மை தான்.

    ஆனால் ம்ருகபலி மற்றும் புலால் உண்பது என்பது கீழானது அல்லது தர்மத்திற்கு விரோதமானது போன்ற எண்ணப்பாடுகள் தவறான புரிதலின் பாற்பட்டதால் கடுமையாக கண்டிக்கப்படவேண்டியவை.

  48. அன்புள்ள கிருஷ்ணகுமார்,

    இதே போன்றதொரு கட்டுரையை ஒரு மார்க்சியரோ அல்லது திராவிட இயக்கத்தினரோ அல்லது ஒரு கல்விப்புலம் சார்ந்த (அகாடமிக்) சித்தாந்தியோ எழுதியிருந்தால் எத்தகைய சொல்லாடல்கள் இருக்கும் என்பதைக் கொஞ்சம் யோசியுங்கள். வைதீக / பார்ப்பனீய / பிராமணீய / இந்து பாசிச மேட்டிமைவாதம் என்றெல்லாம் இருந்திருக்கும்.

    வேத நெறியைக் குறிக்கும் வைதீக என்ற சொல் அவ்விடத்தில் தவறானது என்றும் அதனுடன் உள்ள ஏனைய சொற்கள் காழ்ப்புணர்வின் பால் பட்டவை என்றும் நாம் அறிவோம். அந்தச் சொற்களை எப்படிப் பயன்படுத்த முடியும்? எனவே, மேட்டிமைவாதம் குறித்து இந்துத்துவம் சார்ந்து எழுதும் எழுத்தாளன் அதற்கான புதிய கலைச்சொல்லையும் சொல்லாடலையும் (discourse) சேர்த்தே உருவாக்க வேண்டியுள்ளது. ஆசாரவாதம் போன்ற பொதுவான சொற்களுக்கே இப்படியெல்லாம் நீங்கள் ஆட்சேபம் சொன்னால் பிறகு எங்கு போவது? சமய சம்பிரதாய வியாக்கியான மொழியும், நவீன சிந்தனைகளுக்கும், கருத்தியல்களுக்குமான மொழியும் முற்றிலும் வேறுபட்டவை. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    துரதிர்ஷ்டவசமாக தமிழில் இந்துத்துவ இயக்கம் இதுவரை எந்த நீடித்த, தொடர்ச்சியான சிந்தனாபூர்வ படைப்புகளையும் சொல்லாடலையும் உருவாக்கவே இல்லை. கடந்த சில வருடங்களாக, அநீயையும், தமிழ்ஹிந்துவையும் முன்னோடியாகக் கொண்டு தான் லேசாக ஒரு நவீன இந்துத்துவ அறிவியக்கம் துளிர்விடவே ஆரம்பித்திருக்கிறது. அதனால் உங்களுக்கும், கட்டுரை பேசும் அடிப்படையான சமூக பிரசினையை காற்றில் பறக்கவிட்டுவிட்டு அபசாரம் அபசாரம் என்று இங்கு விதவிதமான பரிபாஷைகளில் மறுமொழியிடும் சம்பிரதாய அன்பர்களுக்கும் இதெல்லாமே ஏதோ புதுசாக தோன்றுகிறது போல.

    Communal feeling என்றால் 1930-40களில் 60களில் கூட கூட்டாக சேர்ந்து வாழ்வது என்று அர்த்தம் இருந்தது. Communalism என்பது அதனுடன் தொடர்புடையதாக பார்க்கப் பட்டது, இப்போது? பாஜகவை communal கட்சி, அதாவது மதவெறி கொண்ட கட்சி என்று எல்லா ஊடகங்களும் சொல்ல, இல்லை நாங்கள் communal இல்லை என்று பாஜக மறுத்துக் கொண்டே இருக்கிறது. நவீன சூழலில் சொற்களுக்கான நீடித்த பொருள் என்பது பயன்பாட்டாலேயே உருவாகி வளர்ச்சியுறுகிறது. இத்தகைய சொல்லாக்கங்கள் அதன் ஒரு பகுதியே.

  49. அன்புள்ள அத்விகா அவர்களுக்கு,

    மித்ரன் அவர்கள் கூறிய அந்த உபமானத்தை அந்தக் குறிப்பிட்ட வியாக்கியானத்தின் ஒரு பகுதியாக பார்ப்பதே உசிதமானது. அவற்றைப் போன்ற பல உவமைகள் நமது சமய நூல்களில், குறிப்பாக தர்க்கத்தை விட உணர்ச்சிக்கு அதிக மதிப்பளிக்கும் பக்தி நூல்களில் உள்ளன. நவீன அரசியல் சரிநிலைகள் (political correctness) சார்ந்து அவற்றைப் பார்த்தால் விபரீதமான அர்த்தங்களே வரும்.

    கள்ளக் காதலனை நாடிச் செல்லும் பெண் போன்ற ஆதுரத்துடனும், பதைபதைப்புடனும் கிருஷ்ணனை நாட வேண்டும் என்கிறார் ஒரு பக்தர் (ரூப கோஸ்வாமி என்று நினைக்கீறேன்). பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் ஒருவன் தான் ஆண் என்று நினைத்தேன், வேறூ ஆண்கள் கூட இருக்கிறார்களா? என்று தன்னை பெண் என்று கருதி சந்திக்க மறுத்த துளசிதாசருக்கு அன்னை மீராபாய் கடிதம் எழுதியதாக ஒரு சரிதம் உண்டு (ஜீவாத்மாக்கள் அனைவரும் நாயகிகள், கிருஷ்ணன் ஒருவனே புருஷன் என்பது கருத்து). இவையெல்லாம் தீவிர பக்தியை விளக்குவதற்காக சொல்லப் பட்டவை. மித்ரன் கூறிய அந்த உபமானமும் இத்தகையதே. அதன் பொருள் உலகியல் சார்ந்தது அல்ல, ஆன்மீகத் தளம் சார்ந்தது.

    (இதை உண்மையிலேயே இவ்வளவு எளிதாக விளக்கியிருக்கலாம். இதை விடுத்து, மித்ரன் வளவளவென்று வைஷ்ணவ பரிபாஷையில் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டு போகிறார். அதுவும், ஆட்சேபம் எழுப்பிய பெண்ணியம் சார்ந்த மனநிலையில் இருந்து அதைப் பார்க்கவே மறுக்கிறார். இது தான், இது தான், இத்தகைய சம்பிரதாய வாதிகளின் உண்மையான பிரசினையே. அதனால் தான் இவர்களால் எந்த உருப்படியான சமூக விமர்சன கண்ணோட்டத்தையும் உருவாக்க முடிவதில்லை).

  50. g ranganathan அவர்கள் நடைமுறையில் இத்தகைய கலாசார வேற்றுமை / மத உணர்வு சார்ந்த பிரசினைகளை எப்படித் தீர்க்கலாம் என்று அழகாக சொல்லியுள்ளார். மிக்க நன்றி. இந்தக் கதையில் வரும் பாத்திரம் இந்துத்துவ நோக்கு கொண்டவராக இருந்தால், இதே போன்று அந்த வனவாசி சமூகத்தினரிடம் பேசிப் பழகி, அவர்களுடன் கூட நல்லுறவை வளர்த்திருப்பார். பிள்ளையாரை வைத்து ஏமாற்ற மாட்டார்.

    கந்தர்வன், மாமிச உணவு / பலி குறித்து வேத நெறி கூறுவதில் உளள நுட்பமான பார்வையை அளித்தீர்கள். மிக்க நன்றி. இதையே தான் முழு சைவ உணவாளரான ஸ்ரீராமகிருஷ்ணர் காளியின் பலி பிரசாதத்தை உச்சி மீது வைத்து உகந்த போதும் கூறினார். “உன்னுடைய வாழ்க்கையும் புகழும் செல்வமும் எல்லாம் அன்னையின் பலிபீடத்தில் வைக்கப் பட்டுள்ள நிவேதனம் என்று உணர்வாயாக” என்று விவேகானந்தர் கூறியதன் பொருளும் இதுவே தான்.

  51. திருமிகு ஜடாயு அவர்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் பணிவார்ந்த வணக்கங்கள்! இங்கு அடியேன் எழுதியிருக்கும் மறுமொழிகளில் எங்கேயும் இந்த கட்டுரையை கண்டித்தோ எதிர்த்தோ எழுதவில்லை என்பதை சுட்டி காட்ட விழைகிறேன்! மேலும் ஸ்ரீ வைணவத்தின் பால் கொண்ட பற்றால் கற்றறிந்த சான்றோர் பலரின் துணை கொண்டு, அடியேன் கூற விரும்பியது, ஸ்ரீ உடையவரின் தரிசனத்தில் இத்தகைய கருத்துக்கள் ஏற்புடையன அல்ல என்பதே! சாத்துவிக ஆகாரங்களை தவிர ஏனைய வற்றை அழ்வர்களோ, சமஸ்காரங்களை கைகொண்ட பாகவதர்களோ அன்றிலிருந்து இன்று வரை கைகொண்டதில்லை என்பதே அடியவனின் வாதம்! மேலும் இறைவனும் இத்தகைய தன்மையுடன் இறங்கி வந்தனன் என்பதும் ஆச்சார்யர்களின் கூற்று! ராஜச தமோ ஆகாரங்களை கைகொண்ட பலர், திருச்சின்னங்களை தரிக்கும் பொழுதிலிருந்து இவற்றை கைவிட்டனர் என்பதும் பல வரலாறுகளின் மூலம் வெள்ளிடை மலை! ஸ்ரீ வள்ளலாரின் வழி பற்றும் ஒருவர் எவ்வாறு உணவின் முறையை அதற்க்கு தகுந்தார் போல மாற்றுவார்களோ அத்தகைய மாண்பே இங்கும் இருந்தது என்றே குறிப்பிட்டுள்ளேன்! நிற்க!
    ஆசிரியர் குழுவினர் ‘அய்யங்கார்’ என்ற வார்த்தையை நீக்கியதில் அடியவநிர்க்கு உடன்பாடில்லை! தாங்கள் இவர்கள் (இன்றைய அய்யங்கார் பார்பனர்கள்) செய்யாத ஒன்றை குறிப்பிடவில்லை! இது கண்டு பொங்கும் ஏனையோர் இத்தகைய எதிர்ப்பை ஏன் ‘திராவிட வாதிகளிடமும் கம்முனிச வாதிகளிடமும்’ காட்ட மாட்டேன் என்கின்றனர்? ஹைந்தைவ ஆர்வலர்கள் இவர்களையும் மனிதர்களாக மதித்து இவர்களுக்கு பதிளிடுவதை இவர்கள் ‘ஆதிக்க’ போக்கில் எடுத்துகொள்ளல் தகாது! திருமிகு அநீ அவர்கள் தற்காலத்தை சேர்ந்த ஒரு சிறந்த ஹைந்தைவ அறிஞர், அடியவநிர்க்கு அவருடைய எழுத்துக்களில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவ சார்புடைய சிலவற்றில் இருக்கும் மாறுபாடு அவரின் அறிஞர் என்ற தன்மையை எக்காலத்திலும் மறுப்பது ஆகா! திருமிகு அத்விகா அவர்கள் ஐரோப்பிய சிந்தனையை ஒற்றி ஏன் சர்ச்சை போன்று நமது ஆலயங்களையும் மாற்ற கூடாது என்று கேட்பது, எங்களை போன்ற (பிறவி பார்ப்பனர்) என்று சொல்லிகொள்ளும் மக்களின் தவறாலேயே! (இங்கு தவறு என்பது இவர்களின் ‘மேட்டிமையும்’ ‘சம்பிரதாய ஞானமின்மையும்’ ஆகும்). இறைவனை சில வடிவத்தில் தொடுபவனே ஞானவான் என்றாயின் அத்தனை மகநீயர்களும் ‘அர்ச்சக’ குலத்தில் உதிதவர்கலாக இருந்திருப்பார்! ஆயின் அவர்களில் ஒருவர் கூட இக்குலத்தில் சார்புடையவர் இல்லை! மேலும் ஞானமும் பக்தியும் வைராக்யமுமே மனிதரை தெய்வ நிலைக்கு உயர்த்துவதே அன்றி, சிலையை தொடுதல் அன்று! தென்னக ஆலயங்களில் ஆகமங்களுக்கும் பாரம்பரியத்திற்கும் உட்பட்டே சில அதிகாரங்கள் இன்றும் உள்ளன)ஆயின் இன்று ‘துர்பாக்ய’ நிலைக்கு தள்ள பட்டுள்ள நமது ஆலயங்களையும், அவற்றை தெரிந்தே கெடுக்கும் பார்பன அர்ச்சக, அய்யங்கார்களையும் (எல்லோரும் அல்ல- குறிப்பில் பெரும்பான்மையினர்) காட்டில் உண்மையான பாகவதோதமர்கள் ( நல்ல அய்யங்கார் பார்ப்பனரும் ஏனையோரும்) ஆழ்வார்களுக்கும் ஆச்சர்யர்களுக்கும் உகப்பானோர்!

  52. ஸ்ரீ ஜடாயு அவர்களின் கட்டுரையையும் அதனால் விமரிசிக்கப்படும் சிறுகதையையும் வாசித்தேன். ஸ்ரீ ஜடாயு சைவ உணவுப்பிள்ளையாரை வைத்து வனகாளியம்மனுக்கு உயிர் பலியை நிறுத்துவத்தை மேட்டிமை வாதம் என்றுகூறுவது மிகமிக சரி. அது ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ நாராயண குரு சுவாமி, அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் சீர்திருத்த முயற்சிகளுக்கு மாறுபட்டது என்பதை மிகச்சிறப்பாக பாராட்டுக்குரிய வகையில் எடுத்துக்காட்டியுள்ளார் ஸ்ரீ ஜடாயு. இந்த மேட்டிமை ப்போக்கினை அத்தகு மேட்டிமை வாதிகளின் போலித்தனத்தினை அவர் சாடியுள்ள விதமும் ஏற்புடையதே.
    ஸ்ரீ சைவ உணவுப்பிள்ளையாரை பக்கத்தில் வைத்தால் ஸ்ரீ வனகாளிக்கு பலியை நிறுத்திவிடுவார்கள் என்பது அபத்தம். கதாசிரியருக்கு தமிழகத்தில் பூணூல் போட்ட ஸ்ரீ ஐயனாரும் பலி ஏற்கும் ஸ்ரீ கருப்பண்ணசுவாமியும் ஒரே கோயிலில் இருப்பது தெரியவில்லை போலும். ஸ்ரீ ஐயனாருக்கு திரையைப்போட்டுவிட்டு ஸ்ரீ கருப்பருக்கு பலிகொடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதை சுஜாதா தேசிகன் போன்றவர்கள் உணரவேண்டும்.
    சிவஸ்ரீ.

  53. தமிழ்நாட்டில் உள்ள நூறு நூறு ஜாதியினருக்கும் தங்கள் வழிபாடு முறைகளை ப்பற்றி ஒரு பார்வை இருக்கிறது. ஆனால் எவரும் என் பார்வையில் தான் நீ பார்க்க வேண்டும் என்று ஒருவர் மற்றவரை கட்டாயபடுத்துவது இல்லை.
    அப்படி உண்மையில் சூது எவரேனும் செய்தால் கண்டிக்க வேண்டியதே .

    இது எள்ளல் நடையில் ஒரு கதை .தமிழ் கூறும் நல்லுலகத்தின் நாடி அறிந்த கதை மட்டுமே. a tried and tested formula .

    ஆனால் உண்மை நடப்பு என்ன, நம் அனைவரின் கண்ணை பிடுங்க மாற்றி மாற்றி கழக அரசுகள் கோயில்களில் பூந்து வெளையாடுகின்றன ..

    விளிம்பு நிலை மனிதர்களின் கங்கை அம்மன் கோயிலோ, “மேட்டிமை” வாதிகளின் அல்லிக்கேணி பெருமாள் கோயிலோ , சமீபத்து செய்திகள் வேதனை அளிப்பதாக உள்ளன.

    யோசித்துப்பார்த்தால் உண்மையில் இந்த இந்திய நாட்டின் அனைத்து ஜாதி ஹிந்துக்களே விளிம்பு நிலை மனிதர்கள். !
    நாம் எல்லாரும் தான் நண்பர்களே .! எத்தனை சதவிகிதம் கோயில்கள் தனியார் வசம் உள்ளன?
    அரசுகளின் கோரப்பிடியில் நாம் எல்லாரும் பெறற்கரிய கோயில் செல்வங்களை இழந்து கொண்டுள்ளோம்.

    என் போன்றோருக்கு சம்பிரதாயமும் தெரியாது. நவீன கலைச்சொற்களும் சரிவர புரியாது.எனக்கு வேண்டுவதெல்லாம் நம் முன்னோர் நம் எல்லர்காகவும் விட்டு சென்ற கோயில்கள். கங்கை அம்மன், முனிஸ்வரன் , பெருமாள், சிவன் கோயில்கள். எல்லாரும் என் போன்றோருக்கு வேண்டும்.

    தற்சமயம் இந்த எல்லா கோயில் கலைசெல்வங்களும், சொத்துக்களும் சூறையாடப்பட்டு வருகின்றன. எல்லா கழகங்களும் நம்போன்ற விளிம்பு நிலை
    [ அதான் ஹிந்து] மக்களை பொறுத்தவரை ஒன்று தான் .பல மாநிலங்களிலும் இதே நிலை. கேரளத்தில் அனந்த பத்மநாபா சுவாமி கோயிலின் நிலை என்ன இன்று?

    ஊடகங்கள் இது பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்கின்றன.

    நாம் எல்லாரும் நமது சக்தியை இது போன்ற ஒற்றுமையை வளர்க்காத கதைகள், இவற்றில் செலவு செய்வதோடு கண் முன்னே இருக்கும் கோயில்கள் சார்ந்த பிரச்சினைகளை பற்றி விவாதித்து ஒரு தெரிதல் ஏற்பட்டால் நல்லது.

    இல்லபோனால் விவாதம் செய்யக்கூட நாளை கோயில்கள் மிஞ்சாது.

    சாய்

  54. அன்புள்ள மித்ரன் அவர்களுக்கு,

    தங்கள் எண்ணங்களை தெளிவாக முன்வைத்ததற்கு மிக்க நன்றி. நான் எழுதியதில் ஏதேனும் தங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

  55. ஜடாயு on November 22, 2012 at 6:42 pm
    “g ranganathan அவர்கள் நடைமுறையில் இத்தகைய கலாசார வேற்றுமை / மத உணர்வு சார்ந்த பிரசினைகளை எப்படித் தீர்க்கலாம் என்று அழகாக சொல்லியுள்ளார். மிக்க நன்றி. இந்தக் கதையில் வரும் பாத்திரம் இந்துத்துவ நோக்கு கொண்டவராக இருந்தால், இதே போன்று அந்த வனவாசி சமூகத்தினரிடம் பேசிப் பழகி, அவர்களுடன் கூட நல்லுறவை வளர்த்திருப்பார். பிள்ளையாரை வைத்து ஏமாற்ற மாட்டார்”

    திருமிகு ஜடாயுவுக்கு நன்றி.கற்பனைக் கதையில் வரும் பாத்திரம் எந்தத்துவ நோக்கு கொண்டவரென்று நாம் எவ்வாறு அறிந்துகொள்ளமுடியும்? நகர வாசிகளின் ரெண்டும் கெட்டான் நிலைமை என்று வேண்டுமானால் கொள்ளலாம். மேலும் பெரும்பாலான விவாதங்கள் பார்பனர்/அல்லாதார் விவகாரமாகவே போய் விகாரமாகிவிட்டது, மாறிவரும் சமூக சுழலில் அகப்படுவோர் அய்யங்காரோ அல்லது மற்ற வகுப்பினரோ சரியான வழி காட்டுதல் இல்லாமல் தடுமாறுவது பொதுவானப் பிரச்னை. இதில் இராமனையும் ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும், கொணர்வது வீண் வேலை மற்றும் நேரம்/சொல் விரயம்தான். ஆரோக்யமான விவாதத்திற்கு வித்திடும் இந்து சமூகம் சார்ந்த விஷயங்களை இனி வெளியிட்டால் நல்லது என்பது எனது பணிவான கருத்து.

  56. சிவஸ்ரீ அவர்களே

    //ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ நாராயண குரு சுவாமி, அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் சீர்திருத்த முயற்சிகளுக்கு மாறுபட்டது என்பதை மிகச்சிறப்பாக பாராட்டுக்குரிய வகையில்
    //

    இதில் சங்கரரை ஏன் சேர்கிறீர்கள் – விவேகனந்தர் சொல்படி சங்கரர் சீர்திருத்தம் ஏதும் செய்யவில்லை. சங்கரரின் பேச்செல்லாம் மேட்டடிமைவாத பேச்சே. சங்கரர் பாஷ்யாரர், சீர்திருத்தவாதி என்ற நவீன சொல்லாடல் கொண்ட கோட்பாட்டிற்குள் அவரை எப்படி சேர்ப்பீர்கள்.

  57. “மேலும் பெரும்பாலான விவாதங்கள் பார்பனர்/அல்லாதார் விவகாரமாகவே போய் விகாரமாகிவிட்டது, மாறிவரும் சமூக சுழலில் அகப்படுவோர் அய்யங்காரோ அல்லது மற்ற வகுப்பினரோ சரியான வழி காட்டுதல் இல்லாமல் தடுமாறுவது பொதுவானப் பிரச்னை. இதில் இராமனையும் ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும், கொணர்வது வீண் வேலை மற்றும் நேரம்/சொல் விரயம்தான். ஆரோக்யமான விவாதத்திற்கு வித்திடும் இந்து சமூகம் சார்ந்த விஷயங்களை இனி வெளியிட்டால் நல்லது என்பது எனது பணிவான கருத்து.”

    திரு g ranganathan அவர்கள் சொல்வதை முழுமையாக ஆமோதிக்கிறேன் .

    சாய்

  58. // உண்மயாக ராமானுஜ தரிசனத்தினை கைகொண்டவன் எந்த ஜாதி யானாலும் , அவன் மரக்கறி உண்பாவனாகத்தான் இருந்திடுவான், அது உறங்காவலி தாசருக்கும் கூட பொருந்தும். // எங்கள் கோவைக்குப் பக்கத்தில் மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் காரமடை என்பதொரு தம் உண்டு அங்கு அரங்கநாதர் வீற்றிருக்கின்றார். காரமடை அண்மைக் காலத்தில் பாஞ்சராத்திர ஆகமக் கோயிலாக மாற்றம் பெற்று விட்டது. இந்தத் திருக்கோயிலுக்கு வழிவழி பாகவதர்கள் சமுதாயத்தில் கீழ்நிலையில் வழும் அரிசனங்கள், போயர்கள், ஒட்டர்கள், குறும்பர்கள் முதலிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. எந்த வைணவ ஆகம்த்திலும் இல்லை என்று கூறப்படுகின்ற பந்த சேவை , தண்ணீர் சேவை, என்ற வழிபாடுகளை இம்மக்கள் காரமடை அரங்கநாதருக்குச் செய்வர். முன்னர் பட்டாச்சாரியர்கள் கிடையாது. இவர்கள் புலால் உண்ணும் சாதியினரேயாயினும் பந்த சேவை, தண்ணீர் சேவை செயுங்காலங்களில் புலால் உண்ணாமை, உடல் தூய்மை ஆகியவற்றைக் கைக்கொள்வர். இவர்களின் குலதெய்வங்கள் வேறு; அந்தத் தெய்வங்களுக்குப் பலியிட்டே வழிபாடு செய்வர். இவர்கள் அனைவரும் இராமாநுசரின் செல்வாக்கால் தான் ஸ்ரீவைஷ்ணவர்களாக தாசரிகளாக, சங்கு சேகண்டி சேவிப்பவர்களாக மாறினர். இந்தத் தாசரிகளை காரமடை, இடிகரை, பெரியநாயக்கன் பாளையம் போன்ற கிராமங்களில் வாழும் பெருந்தனக்கரர்களாகிய கம்மவார் நாயுடுகள், ஒக்கிலியக் கவுண்டர்கள் முதலியோர் மரியாதையுடன் நடத்தி அவர்களுடைய விரதத்துக்கு உதவும் போக்கு இன்றும் உள்ளது. இந்து சமுதாயத்தின் ஒரு பிரிவினரை ஒதுக்குவது மேட்டிமை. ஜடாயு அவர்களின் இந்த சொல்லாட்சி பொருத்தமானதே.

  59. ஜடாயு அவர்களே

    //
    இதை உண்மையிலேயே இவ்வளவு எளிதாக விளக்கியிருக்கலாம். இதை விடுத்து, மித்ரன் வளவளவென்று வைஷ்ணவ பரிபாஷையில் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டு போகிறார். அதுவும், ஆட்சேபம் எழுப்பிய பெண்ணியம் சார்ந்த மனநிலையில் இருந்து அதைப் பார்க்கவே மறுக்கிறார். இது தான், இது தான், இத்தகைய சம்பிரதாய வாதிகளின் உண்மையான பிரசினையே. அதனால் தான் இவர்களால் எந்த உருப்படியான சமூக விமர்சன கண்ணோட்டத்தையும் உருவாக்க முடிவதில்லை).
    //

    இந்த கட்டுரைக்கு எவ்வளவு எதிர்வினைகள் வந்ததன (பாராட்டுக்களும் சேர்ந்துதான்) என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தீர்களா. அதற்கு காரணம் கட்டுரையின் பரிபாஷையா அல்லது வேறா?

    பெண்ணியத்தில் நின்று மித்திரன் பேசவில்லை இருக்கட்டும், உங்களால் தான் ஸ்ரீவைஷ்ணவ நோக்கில் பார்க்க இயலுமே, அப்புறம் ஏன் அதை செய்யாமல் மற்றவரை செய்ய தூண்டாமல் இருக்கிறீர்கள்.

    வைஷ்ணவம் என்றால் தமிழ் ஹிந்துவுக்கு லேசாக கசப்பு இருக்கத்தான் செய்கிறது. இருக்ககூடாது என்றில்லை. நாம் எவ்வளவு தான் முயன்று அப்படி இல்லை என்று சொன்னாலும் அது ஸ்வப்ரகாசமாய் தன்னை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது.

    இந்த சம்பிரதாயவாதிகள் பலரும் சம்பிரதாயத்தில் நின்று கொண்டே பல சமூகம் சார்த்த பிரச்சனைகளை தெளிவாக உள்வாங்கி அதை சரி செய்துள்ளார்கள். செய்தது கொண்டும் உள்ளார்கள். நீங்கள் இயங்கும் தளத்தில் அவர்கள் வேலை செய்திருக்கவில்லை என்றால் தவறா? உடனே அவர்களை சம்பிரதாய வாதிகள் என்று தூக்கி எறிவதா. உங்களது trade mark புரிதல்களை அவர்கள் மீது காட்டலாமே.

    வேளுக்குடி கிருஷ்ணன் கண்ணன் ஒன்னுக்கு போனதை சொல்ல தவிர்க்கிறார் வெட்கபடுகிறார் அவர் வெறும் சம்ப்ரதாயவாதி என்று சொல்வதை தவிர்த்து ஏன் அப்படி என்று சிந்திக்கலாமே. பெரியவாச்சான்பிள்ளை சின்னக் கண்ணன் கலவி செய்தான் என்றே எழுதி வைத்திருக்கும் போது, பூர்வாசாயர்கள்பால் அபரிமித மரியாதை கொண்ட இந்த சம்ப்ரதாயவாதிகள் அவர்கள் வழி நின்று பேசாமால் சில விசயங்களை ஏன் தவிர்க்க வேண்டும்? சிந்திக்கலாமே?

    சுஜாதா தேசிகனின் கதையை இப்படி கூட பார்க்கலாமே.

    உங்கள் கடவுளுக்கு மிருக பலி கொடுக்காதீர்கள் என்று நாராயண குரு அறவழியில் சொன்னால் கேட்பார்கள் அவர் குரு. ஒரு ப்லாட்டுகாரன் அவரது அய்யங்காராக இருக்கக்கூடிய மாமனாருடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் என்ன ஆகும் என்று சிந்திக்கலாமே. யாராவது ஒத்துக்குவாங்களா? இதை அறிந்த அந்த புத்திசாலி மாமனார் வம்பு தும்புக்கு போகாமல் பிள்ளையாரை வைத்திருக்கலாமே. அவர் இப்படி ஒரு யுக்தியை கைகொண்டதால் உடனே மேட்டக்குடி சம்பிரதாய நோக்கு என்று ஆகிவிடுமா. உண்மையில் சம்பிரதாயவாதிகள் இதை பொறுத்துக்கொண்டே வேற பிளாட்டில் குடியேறியோ அல்லது ப்லாட்டோட அந்தாண்ட பக்க கடவு வழியாகவோ பயணிப்பார்கள்.

    அம்மன் கோவிலில் ஆடி மாசம் உச்ச த்வனியில் ( சம்ஸ்க்ருததின் பயனை இங்கு நன்கு உணர்ந்தேன்) வைக்கப்படும் பாடல்களை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை இருக்கும். எனக்கு தெரிந்து யாரும் அதை பார்த்து ஆஹா ஹிந்துத்வம் எப்படி மிளிர்கிறது பார் என்று ச்லாகிப்பதாக தெரியவில்லை. தனக்கு பிரச்சனை வந்தால் அதை ஏதாவது வழியில் தீர்த்துக் கொள்கிறான். சிலர் கெஞ்சிப் பேசி சவுண்டை குறைக்க வைக்கிறார்கள், சிலர் மிரட்டுகிறார்கள், சிலர் பொருத்துக்கொள்கிரார்கள், சிலர் இதை ப்ளாகில் நையாண்டி செய்கிறார்கள் சிலர் வேறு யுக்திகளை கையாளுகிறார்கள்.

    பலியிடுதலை அது தொடர்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள். ஆதரிகிறீர்கள் என்றால் உங்கள் கட்டுரை சரியே (யாராவது நவ பவுத்தன் வந்த பிறகு இந்த மக்களும் பலியிடுதலை கைவிட்டு அதை வைத்தே தங்களை மேன்மை தட்டிக்கொள்ளும் காலம் வரலாம்) .
    ஆதரிக்கவில்லை என்றால் அதற்கு நீங்கள் சொல்லும் வழி எது. அதை பற்றி கட்டுரையில் சொல்லலாமே.

    மாமனார் மிருகபலியை எதிர்பவராக இருந்தோ அல்லது த்வேஷிப்பவராக இருந்தோ அவருக்கு தெரிந்த உக்தியை கையாண்டிருக்கலாம். அவர் ஏன் சார் ஊர் பிரச்சனையை எல்லாம் சரிசெய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவரது மருமகனுக்கு ஒரு பிரச்சனையை அதை சரி செய்தார். அதை எப்படி செய்திருக்கலாம் என்று நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

    அம்மன் கோவில் ஆடி மாச பாட்டுக்கள் உச்ச த்வான்யில் இருக்கத்தான் செய்யும் அதை பொறுத்துக் கொண்டே ஆக வேண்டும் என்றும் நான் சொல்ல முடியாதல்லவா? நான் பொறுத்துக் கொள்கிறேன், பக்கத்து வீட்டுக்காரனுக்கு பொறுமை இல்லை, அவன் எதோ செய்கிறான். அவர் ஹிந்து பாரம்பரியத்தை உணர்ந்து அதன் படி நின்று சரி செய்ய வேண்டும் என்றால் ஒரு நூறு வருஷம் ஆகும்.

    விஷயம் சத்தம் நமக்கு ஓகேவா இல்லையா என்பதுதான். ஓகே என்றால் பேச்சே வேண்டாம். ஓகே இல்லை என்றால் மேலே எப்படி கையாளலாம் என்று விவரிக்கலாம்.

    இந்த சவுண்டு வைக்கிறது, இறுதி ஊர்வலத்தின் போது ரோடெல்லாம் பூமாரி பொழிவது, கண்ணீர் அஞ்சலி கட் அவுட் வைப்பது, புறப்பாட்டின் போது நடு ரோட்டில் வேட்டு வைப்பது, இந்த ப்ரோகிதாலேல்லாம் பும்மாள பத்து வீட்டுக்கு கேக்கராமாதிரி சுப்ரபாதம் வைப்பது இதெல்லாம் ஹிந்துத்வத்தின் பிரிவிலா அங்கங்கள் என்றால் நாம் அத்வைத சித்தி அடைந்து விட்டோம் என்று அர்த்தம், புரிதல் அடைந்தோம் என்று அர்த்தம், கர்மம் (ஆசாரம்) விட்டோம் என்று அர்த்தம், ஜீவன் முக்தர்கள் என்று அர்த்தம்.

    இப்படி ஜீவன் முக்தர்கலாக தகுதி இல்லாத மேட்டுக்குடிகளும், சம்பிரதாயவாதிகளும் இருக்கத்தான் செய்வார்கள், அவர்கள் சிருமனிசர்கள், விலக்கிடுவோம்.

  60. தமிழ் இந்து – இந்துமதத்தின் பல பிரிவினரும் கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ளும் தளம். இங்கே , பல்வேறு பிரிவினரும் தங்கள் பிரிவின் சிறப்புக்களை சொல்வது நல்லது.

    அதே சமயம், தன் வழிபாட்டு முறையுடன் ஒத்துப்போகாத மற்றப்பிரிவினரை – விலைமாதர் போன்றோர் என்று மறுமொழி இடுவது நியாயமா ? அப்படி எவராவது உளறியிருந்தாலும் , அதனை இந்த தளத்தின் பொறுப்பாளர்கள் எடிட் செய்து , வெளியிடுதல் நன்று அல்லவா ?

    மேலும் ஜடாயு அவர்களே

    ” கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், ஜெயராமன், ராமஜயம், சீதாராமன் என்றெல்லாம் தமிழ்நாட்டு அய்யங்கார்கள் பெயர் வைத்துக் கொள்வதில்லை.”- sarang.

    எனக்கு தெரிந்து கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு தமிழ் நாட்டு அய்யங்கார் நண்பர் அரசு வங்கியின் மேலாளராக இருந்தார். அவரிடம் தான் நான் வீடு வாங்க கடன் விண்ணப்பித்து, கடன் பெற்றேன். எனவே , தமிழ் நாட்டு அய்யங்கார்களில் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயர் உண்டு. மற்ற பெயர்கள் ஏன் தமிழ் நாட்டு அய்யங்கார் வகுப்பில் வைப்பதில்லை என்பது எனக்கு தெரியாது.

  61. // உண்மயாக ராமானுஜ தரிசனத்தினை கைகொண்டவன் எந்த ஜாதி யானாலும் , அவன் மரக்கறி உண்பாவனாகத்தான் இருந்திடுவான், அது உறங்காவலி தாசருக்கும் கூட பொருந்தும். //

    //
    இந்தத் தாசரிகளை காரமடை, இடிகரை, பெரியநாயக்கன் பாளையம் போன்ற கிராமங்களில் வாழும் பெருந்தனக்கரர்களாகிய கம்மவார் நாயுடுகள், ஒக்கிலியக் கவுண்டர்கள் முதலியோர் மரியாதையுடன் நடத்தி அவர்களுடைய விரதத்துக்கு உதவும் போக்கு இன்றும் உள்ளது. இந்து சமுதாயத்தின் ஒரு பிரிவினரை ஒதுக்குவது மேட்டிமை. ஜடாயு அவர்களின் இந்த சொல்லாட்சி பொருத்தமானதே.
    //

    இதை இவ்வளவு கஷ்டப்படுத்தணுமா. ஒருவர் அவருக்கு தெரிந்து சமஸ்க்ராரம் ஆனா வைணவர்கள் மரக்கறி உண்பர் என்று சொன்னால் – நீ மேட்டிமைவாதி என்பதா. விஷயம் முழுதும் தெரியாதவன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதற்கெல்லாம் பெயர் ஒதுக்கி வைத்தலா. ஏன் இதை இப்படி எசகு பிசக நாம புரிஞ்சிக்கணும். எவ்வளவோ மாம்சம் உண்ணும் வன்னியர்கள் வைணவர்களாக உள்ளனர்.
    மித்திரன் கிராம வாழ் வைணவர்களை மட்டும் ஒதுக்கவில்லை பாவம் – கமலஹாசனையும்னா சேத்தே ஒதுக்கிட்டார் 🙂

    பெங்காலில் எவ்வளவு வைணவர்கள் சமுத்ர புஷ்பம் என்று அடித்துவிட்டு மீன் சாப்பிடுகிறார்கள்.

    இப்படி எடுத்துப்போம். ஒருவர் சொல்றார் பிராமணன் எவனும் மீன் சாப்பிடமாட்டான். உடனே நாம் பொங்கி எழுந்தது நீ ஒரு ஆசாராவாதி இத்யாதி, உனக்கு தெரியுமா காஷ்மீர வங்காள பிராமணர்கள் மீன் சாப்பிடுவார்கள் என்று.

    மாத்வர்கள் எல்லாரும் பொதுவில் கன்னடர்கள் என்று தெரியாமல் சொன்னால் போடா நீ மொழிவாதி மராட்டிய மாத்வர்கள் நிறைய உண்டுன்னு சொல்வது போல.

    எனக்கு ரெம்ப பயம்மா இருக்கு. இங்கு சொல்லப்படும் நியமங்களின் படி நான் எல்லா வாதியும் (அசாரவாதி, பழமைவாதி) ஆகிவிடுகிறேன்.

  62. \\\\Rama
    // ” There is no animal sacrifice in Vedas”

    they are in poorva mimamsa is it\\\\

    And it is in vogue.

    \\\ஆசாரவாதம் போன்ற பொதுவான சொற்களுக்கே இப்படியெல்லாம் நீங்கள் ஆட்சேபம் சொன்னால் பிறகு எங்கு போவது?\\\ மேட்டிமைவாதம் குறித்து இந்துத்துவம் சார்ந்து எழுதும் எழுத்தாளன் அதற்கான புதிய கலைச்சொல்லையும் சொல்லாடலையும் (discourse) சேர்த்தே உருவாக்க வேண்டியுள்ளது. \\துரதிர்ஷ்டவசமாக தமிழில் இந்துத்துவ இயக்கம் இதுவரை எந்த நீடித்த, தொடர்ச்சியான சிந்தனாபூர்வ படைப்புகளையும் சொல்லாடலையும் உருவாக்கவே இல்லை. கடந்த சில வருடங்களாக, அநீயையும், தமிழ்ஹிந்துவையும் முன்னோடியாகக் கொண்டு தான் லேசாக ஒரு நவீன இந்துத்துவ அறிவியக்கம் துளிர்விடவே ஆரம்பித்திருக்கிறது. \\\\

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜடாயு, என்னுடைய தெளிவிற்காகத் தான் இதை எழுதுகிறேன். மத்தளத்திற்கு இருபுறமும் அடி என்று சொல்வார்கள். புதிய சொல்லாடல்கள் அல்லது பழைய சொல்லாடல்கள் இவற்றை முதிய எழுத்தாளர்கள் கையாளும் போது ஒரு புறம் எதிர் சிந்தனையாளர்களும் மறுபுறம் ஹிந்துக்களும் அதை அவரவர் பாங்கில் நோக்குவர். நான் வாதத்தை வீணாக வளர்த்துவதாக எண்ண வேண்டாம்.

    என்னுடைய ஆதங்கமெல்லாம் புதிதாக புழக்கத்தில் வரும் சொல்லாடல்கள் நமது ஹைந்தவ மதத்தின் ஒரு அங்கமாகிய வைதிக சமய கலாசார தொடர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கத் தக்கவையா என்பதே?

    ப்ராம்மணர்களில் சிலர் தவறு செய்கின்றனர் என்றால் அவர்கள் செய்யும் தவறை நிச்சயம் யார் வேண்டுமானால் கண்டிக்க வேண்டும் தான். கண்டிக்கப்பட வேண்டியது தவறுகள். கண்டிக்கப்பட வேண்டியவர்கள் தவறிழைக்கும் ப்ராம்மணர்கள். ஆனால் த்ராவிட கழகங்கள் இதற்கு நேர் எதிர் நிலையை எடுத்திருந்தனர். நாங்கள் ப்ராம்மணர்களுக்கு எதிரி இல்லை ஆனால் பார்ப்பனீயத்திற்கு எதிரி.

    பார்ப்பனீயம் என்று சாஸ்த்ரங்கள் (உடனே கலியுகத்திற்கு என்று விதிதமாகாத மனுதர்ம சாஸ்த்ரம் பற்றி இறங்காமல் இருக்கலாம்) முதல் திருவள்ளுவர் வரை சொல்வது ஒன்று. இவர்கள் வைத்த வ்யாக்யானம் முற்றிலும் வேஊ. வடக்கே எல்லா ஜாதியினரும் ஆண் பெண் என்று லிங்க வித்யாசம் கூட இல்லாது ஓதுதல் ஓதுவித்தல் இவற்றில் முன்னே முன்னே சென்று கொண்டிருக்கையில் தமிழகத்தில் வேதமாகட்டும் திருமுறையாகட்டும் பௌரோஹித்யமாகட்டும் ஜாதிதாண்டி பளிச்சிட்டிருக்கிறதா சொல்லுங்கள்? ஏன்? பார்ப்பனீயம் என்ற வார்த்தையை அசிங்கப்படுத்தியதில் சில ப்ராம்மணர்கள் செய்த அக்ரமங்களை மட்டும் அசிங்கப்படுத்தவில்லை. ஒட்டு மொத்தமாக வைதிக கலாசாரமான ஓதல், ஓதுவித்தல், பௌரோஹித்யம் இவை எல்லாம் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளன. புணே மற்றும் காசியில் பெண் புரோஹிதர்கள் இன்று மிகவும் உத்ஸாஹத்துடன் கார்யத்தில் உள்ளனர். ஹரியாணா, பஞ்சாபில் ஆர்ய சமாஜிகளால் தயார் செய்யப்பட்ட அனைத்து ஜாதியினரும் பௌரோஹித்யத்தில் உள்ளனர். தமிழகத்தில் எப்படி?தக்ஷிண பாரதத்தில் எப்படி?

    ஆசாரம், பௌரோஹித்யம் இவை வைதிக சமயத்தின் முக்யமான அங்கங்கள். தவறுகளை கண்டிப்பாக சுட்ட வேண்டும். May be in better words. I can surely understand that my respected senior writers take utmost care. I just hope for, may be, still better care.

    புனிதமான வார்த்தைகளை இழிவு படுத்துவதன் மூலம் வெறும் வார்த்தைகள் இழிவு படுத்தப்படுவதில்லை. மாறாக அந்த வார்த்தைகள் மூலம் பொதுவில் புரிந்து கொள்ளப்பட்ட கலாசாரக் கூறுகளும் சேர்ந்தே இழிவு படுத்தப்படுகின்றன.

    முதுமையை நோக்கி பயணத்தில் இருக்கும் எனக்கு வைதிக ஆசாரங்களும் அதன் முக்யமான அங்கமாகிய பௌரோஹித்யமும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும் என்பதில் anxiety உண்டு. சர்வ ஸ்ரீமான் கள்ன வீர ராகவ ஐயங்கார் ஸ்வாமி, ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமி, செம்பை வைத்யநாத ஐயர், ஏசுதாஸ் போன்ற குரு சிஷ்யர்கள் நமது சிஷ்டாசாரம் எப்படி பகிரப்பட வேண்டும் என்பதில் எனது ஆதர்சங்கள். நான் எழுதியதில் தவறேதும் இருந்தால் தாங்களோ ஸ்ரீமான் அ.நீ அவர்களோ என்னை க்ஷமிக்கவும்.

    இதே தெளிவின்மை, பழங்குடி என்ற வார்த்தை ப்ரயோகம். நரசிங்கம் வ்யாசத்தில் எழுதியிருந்தேன். விவாதம் முடிகையில் நீரிலிட்ட உப்பாகி விட்டது. கீழே அதுவும்.

    மூத்த எழுத்தாளர்களால் பழங்குடி என்ற பதப்ரயோகம் நமது தளத்தில் தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

    \\\\பழங்குடி வழிபாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இத்தெய்வ வடிவம் மிகத் தொன்மையான ஒன்று என்பதில் ஐயமில்லை.\\\

    சில விளக்கங்களும் அளிக்கப்பட்டன. வேறு ஒரு கோணத்திலிருந்து இப்பதப்ரயோகத்தை நான் புரிந்து கொள்ள விழைகிறேன். என் புரிதலில் பிழை இருந்தால் விளக்கவும்.

    ஹிந்துத்வ இயக்க பரிபாஷைகளில் பழங்குடி என்ற பதப்ரயோகத்தை நான் கண்டதில்லை. ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், க்றைஸ்தவர்கள் இவர்கள் அனைவரையும் ஹிந்துஸ்தானியராகத்தான் ஹிந்துத்வ இயக்கங்கள் கருதுகின்றன.

    ஆதிவாசி, பழங்குடி போன்ற பதப்ரயோகங்கள் இடதுசாரி சரித்ர ஆய்வாளர்களால் உள்நோக்குடன் ஜபர்தஸ்தியாகச் சொருகப்பட்ட பதப்ரயோகம் என்பது என் புரிதல். ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பது போன்ற வ்யாபார யுக்தி போன்று பழங்குடி என்ற திணிக்கப்பட்ட சொல்லுடன் இலவசமாய் இணையும் இன்னொரு பதம் வந்தேறி.

    இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவம் ஹிந்துஸ்தானத்தில் வந்தேறிய மதங்கள். மதக் கோட்பாடுகள் எப்படியிருப்பினும் கலாசாரத்தால் இங்கிருக்கும் முஸல்மான் களும் க்றைஸ்தவர்களும் ஹிந்துக்கள் தான் என்பது ஹிந்துத்வ கோட்பாடு. இதை நீர்த்துப்போகச் செய்வதற்காக த்ராவிடர்கள் என்பவர்கள் இத்தேசத்து மக்கள் எனவும் ஆரியர்கள் என்பவர்கள் இங்கு வந்தேறியவர்கள் என்றும் குசும்பு சரித்ரம் புனைந்தவர்கள் இடதுசாரிகள். இப்பொய்யின் அஸ்திவாரம் ஹிந்துத்வ இயக்க எழுத்தாளர்களின் ஆய்வுகளால் அசைக்கப்பட்டமையும் எதிர் தளத்தினர் விஷயத்தை புத்திபூர்வமாக அணுகாது அச்சுறுத்தல் மற்றும் சம்பந்தமில்லாத விளக்கங்கள் போன்ற ஹாஸ்ய யுக்திகளால் அணுகியதையும் தளத்து வாசகர்கள் கவனித்திருக்க வேண்டும்.

    மலைப்ரதேசத்து மக்கள் காட்டில் வாழும் மக்கள் இவர்களை ஹிந்துத்வ இயக்கங்களில் பஹாடி (பர்வதவாசி) வனவாசி என்றே குறிப்பிடுவதை முக்யமாக நினைவு கூர்கிறேன். வனவாசி கல்யாண் ஆச்ரம் – tribals – என்று அறியப்படும் ஹிந்து சஹோதரர்களின் சமுதாய முன்னேற்றத்திற்காக ஹிந்துத்வ இயக்கங்களால் நடத்தப்பெறும் இயக்கம்.

    பழங்குடி என்ற சொல்லை தொடர்ந்து மூத்த எழுத்தாளர்கள் பயன்படுத்தி வருவதால் தயவு செய்து ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் அல்லது இருந்த பழங்குடிகள் யார். மேலும் அதன் இலவச இணைப்பு சுட்டும் ஹிந்துஸ்தானத்தில் வந்தேறிய சமூஹத்தினர் என ஹிந்துத்வ இயக்கங்கள் யாரைச் சொல்லும் என அறிய விழைகிறேன்.

  63. The acrimonious exchanges here excited me to go to the story. Read and commented on the concerned blog. The same are pasted here.

    “‘Style of the story is an imitation of his guru Sujatha. It is quite natural for an infatuation to finally become embedded. Desikan needs to break free from the grips of the guru. He may blossom into a writer on his own.

    The story cant be brushed aside as a mere fiction to read and relish. Such stories make deep inroads into the psyche of the readers, so Arvavindian Neelakantan is fairly correct to say the story is politically or religiously or socially incorrect.

    The story presents two sides: one the classes; the other the masses. The masses are of the lowest in social hierarchy. The classes want to have a life of their own and the masses become a nuisance on their way to pursuit of pleasure. But it is not possible to weed out through fair means. The dad in law does it through indirect and unfair means. His concern is for his daughter too. He commits it in order to help the son in law to get a life he wants, thereby the family boat wont be rocked jettisoning her daughter”s welfare..

    Usurpation of places and driving the indigenous tribes away is universal and historical. And further it is the Darwin theory of Survival of the fittest. Here, the fittest survive through crooked and unfair means. U need brilliant brain to expropriate the innocent through such means. The robber needs to be cleverer than the police.

    Aravindan Neelakantan, although justified in voicing his concern for …read my second para.., yet he sees the wood for the trees: i.e. the story cages the classes and pillories them showcasing their wily nature in attempting piggy back ride on the weak masses. But he sees it is a gratuitous attack on the masses. Partly true.

    Sujatha has done this style of attack on classes. His chela finely imitated it.

    So, for the fine imitation, congrats. Keep it up…”

    TAMIL in Balhanuman blog

  64. Sarang
    As I said earlier, I have very limited knowledge on Vedas. Agniveer promotes Vedas and I presume they know what they are writing about, hence the link. I could be wrong here.
    By the way, did you go through the article?
    I would love you to take up Agniveer on meat in Vedas. Many ignorant people like me would hopefully understand Vedas better if you do this. As it stands, you BOTH cannot be right. This discussion will enlighten us poor dummies.
    I will pass on your comment to Agniveer.

  65. ஸ்ரீ ராமானுஜ வைணவர்கள் யாரும் புலால் உண்பதில்லை என்று ஸ்ரீ மித்ரன் கூறியிருக்கிரார். அது உண்மையல்ல என்று பல அன்பர்கள் மறுமொழியிட்டிருக்கிரார்கள். குறிப்பாக முனைவர் முத்துகுமாராசுவாமி ஐயா கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற வைணவத்தலங்களில் ஒன்றான காரமடை ஸ்ரீ ரங்கனாதர் ஆலயத்தின் தாசர்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு வைணவமும் புலால் உண்பவர்களுக்கு திருவடி சம்பந்தம் என்னும் முத்திரை வைப்பதை(சக்ரான்னிகம் எனப்படும்) மறுக்கவில்லை என்று நிறுவியிறுக்கிறார். ஐயாவின் சொன்ன செய்தியில் ஒரே திருத்தம் இப்படிப்பட்ட தாசர் குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட குடியிலுருந்து மட்டுமல்ல, கவுடர், நாயக்கர், வேளாண் போன்ற குடிகளிலும் உண்டு.வேளாண் குடியில் பிறந்த அடியேனின் தாய்வழித்தாத்தா தெய்வத்திரு திம்மப்பா அவர்கள் ஒருதாசராக இருந்தார் அவர் புலால் உணவை இறுதிவரைக்கை விடவில்லை. இந்த தாசர் முறை ஸ்ரீ ரங்கத்திலும் காணப்படுவதாக என்னுடைய கொங்கு கவுண்டர் நண்பர் சொன்னார். அவரது குடும்பமும் தாசர்கள் என்றும் பெருமையோடு சொன்னார். இந்த தாசர்களில்லாம் எந்த நல்லது கெட்டதும் காரமடையை சுற்றி உள்ள கிராமங்களில் நடப்பதில்லை. தாசருக்கும்(திருமாலடியார்) ஆண்டி(சிவனடியார்)க்கும் தானம் வழங்குவதும் இந்தப்பகுதியில் வாழும் வேளாண்குடியினரால் காலம் காலமாகப் போற்றப்படுகிறது. இந்த தாசர் முறையை சாதிகளுக்கு அப்பால் மக்களை இணைக்கும் ஒரு சிறந்த முறை.
    அன்புக்குறிய அன்பர் நண்பர் ஸ்ரீ சாரங்கன் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பதை திருமாலின் அம்பு போல குறிப்பாக சொல்லுங்கள். அடியேன் வீரசைவன் எனினும் சைவம் வைணவம் ஆகிய இரு சமய தத்துவங்கள் ஆகியவற்றை அறிய முயல்பவன். தமிழ் ஹிந்து அனைவருக்கும் பொதுவானது. அது வைதீக அவைதீக ஹிந்து சமயங்களை ஏற்றுகொள்கிறது. வைணவத்தை அது சரியாக மதிப்பதில்லை என்பது தவறு.
    ஸ்ரீ சாரங்கன் நீங்கள் ஸ்ரீ சங்கராச்சாரியார் என்ன சீர்திருத்தவாதியா என்கிறீர்கள். அதிலென்ன ஐயம் உங்களுக்கு. ஸ்ரீ சங்கரர் ஒரு பெரும் சமயசீர்திருத்தவாதி. ஸ்ரீ சக்கரத்தை காஞ்சியில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் திருமுன் பிரதிஸ்டை செய்து மக்களுக்கு கருணையை போதித்து ம்ருகபலியை நிறுத்தியவர் அவரே. சாமான்ய மக்களுக்கு சமயத்தினை ஆன்மீகத்தை அளித்த புரட்சியாளர்கள் அவருக்குப் பின்வந்த ஸ்ரீ ராமானுஜரும் ஸ்ரீ பசவரும் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. அடியேனைப்பொறுத்தவரையில் இந்த பெரியோர்கள் யாவரும் போற்றுதற்குரியவர்களே.
    சிவஸ்ரீ

  66. விவாதம் முற்றுபெற்றது என்று ஆசிரியர் குழு அறிவித்தால் மிக்க நல்லது. எந்த மாநில பிராமணர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்ற விவரம் இனித் தேவையில்லை.

  67. “சீர்திருத்தவாதி என்ற நவீன சொல்லாடல் கொண்ட கோட்பாட்டிற்குள் அவரை எப்படி சேர்ப்பீர்கள்”

    ஏன் சேர்க்க முடியாது? ஏற்றுக்கொள்ள முடியாத சிலவற்றையும் அவர் சொல்லியிருக்கலாம்; இன்றைக்கும் ஹிந்துத்வத்தை ஒரு பரந்த பார்வையாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஷண்மத ஸ்தாபனமும், அவரது பரதகண்ட முழுமையான் நோக்கும், பணியும் நிச்சயம் உதவுகிறது; மேலும், அத்வைதம் என்ற ஒரு உன்னதமான சித்தாந்தம் இன்றைய சாதீய சமூக பிரச்சனகளைத் தீர்க்க சக்தி மிக்கதொரு கருவியாக நிச்சயம் உதவும், பன்முகத்தை உறுதி செய்யும் ஹிந்துத்வத்தை மேலெடுத்துச் செல்வதற்கு மிக வாய்ப்பான சித்தாந்தம் அது இல்லையா!

    எந்த மாமனிதர்களிடமும், தனி மனிதர்களின் வித்விதமான பார்வைகளினால் நிச்சயம் உறுதியான் குறைகளைக்காண முடியும்; ஆனால் அது ஆக்கபூர்வமான சிந்தனையல்ல, நிந்தனைக்கு உதவலாம்.

    மற்றும், ‘போலி ஹிந்துத்வ வாதிகள்’ என்ற வசவை ஆரியத் தமிழன் பயன்படுத்துகிறார்; இது மிகவும் கண்டனத்திற்குரியது; நாம் ஏற்காத விஷயங்களை முன் வைக்கலாம், விமர்சிக்கலாம்; மாறாக, நோக்கங்கள் கற்பிப்பது, ஏசல் சொற்களை உபயோகிப்பது ஆகியவை நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்வதாகும்.

    ஊடகங்களில் ஹிந்துத்வ நோக்கில் விஷய்ங்களை எடுத்து எழுதுபவர்களே மிக் சொற்பம்; இதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

    -கண்ணன்.

  68. ‘புணே மற்றும் காசியில் பெண் புரோஹிதர்கள் இன்று மிகவும் உத்ஸாஹத்துடன் கார்யத்தில் உள்ளனர். ஹரியாணா, பஞ்சாபில் ஆர்ய சமாஜிகளால் தயார் செய்யப்பட்ட அனைத்து ஜாதியினரும் பௌரோஹித்யத்தில் உள்ளனர். தமிழகத்தில் எப்படி?தக்ஷிண பாரதத்தில் எப்படி?”-

    பெருமதிப்பிற்குரிய திரு கிருஷ்ணகுமார் அவர்களின் மேற்சொன்ன வரிகள் சிந்திக்கத்தக்கவை. தென்னிந்திய திருக்கோயில்களில் மற்றும் பௌரோஹித்யத்தில் அனைத்து ஜாதியினரும் ஈடுபடுத்தப்படவேண்டும் என்பது நல்ல கருத்து. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்துவிட்டு, வேலை கொடுக்காமல் ஏமாற்றி வரும், திராவிட திருட்டு இயக்கங்கள் இன்னும் எவ்வளவு காலம் நம் மக்களை ஏமாற்றுவார்களோ ?

  69. ஆதி சங்கரர் தான் அறுவகை சமயத்தின் தொகுப்பாக இன்றைய இந்து சமயம் உருவெடுத்த மூல காரணி. பிற கருத்துக்களை எப்படியாவது அழித்துவிட்டு, தங்கள் கருத்தினை மட்டும் நிலைநிறுத்த பாடுபட்ட அறிவிலிகளின் மத்தியில், எல்லாம் ஒரே சக்தியின் பல்வகை தோற்றங்களே என்ற விஞ்ஞான உண்மையை , விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலக்கட்டங்களிலேயே எடுத்தோதிய பெருமகன். அவர் இல்லாவிட்டால் இன்றைய இந்துமதம் தனது தத்துவ சிறப்பில் , பலவற்றை பலிகொடுத்திருக்கும். அவர் நிச்சயம் சீர்திருத்த செம்மலே.

    புத்த மதத்தின் கருத்துகளையும் தேவையான இடங்களில் உள்வாங்கி , இந்து மதத்தை செப்பனிட்டார். இதன் மூலம் ” பிரசன்ன பௌத்தர்” என்று சிலரால் தூற்றப்பட்டதையும் , பொருட்படுத்தாது , துணிந்து செயல்பட்டார். கடவுள் சக்தி என்னும் அளப்பரிய சக்திக்கு எல்லை வகுக்க முயலும் மூடர்கள் மத்தியில் , அதன் எல்லைஅற்ற தன்மையை தெளிவாக விளக்கியவர் அவர். அவரை படிக்காதவர்கள் அவரை பற்றி விமரிசனம் செய்வது , அவர்களது விருப்பம். ஏனெனில் இந்து என்றாலே திறந்த கதவும், திறந்த மனமும், எல்லை இல்லாமையும் அடிப்படையான விஷயம். மூடிவைக்கப்பட்டவை அழுகிப்போகும். இந்து மதம் என்றும் சிரஞ்சீவியாய் பல அவதாரங்கள் எடுத்து மேலும் மேலும் வளரும். புதிய கருத்துக்களும், புதிய வழிமுறைகளும் காலத்துக்கு ஏற்றவாறு , மேலும் பன்முகப்பட்டு வளரும்.

  70. சிவஸ்ரீ. விபூதிபூஷண் :
    //ஸ்ரீ ராமானுஜ வைணவர்கள் யாரும் புலால் உண்பதில்லை என்று ஸ்ரீ மித்ரன் கூறியிருக்கிரார். அது உண்மையல்ல என்று பல அன்பர்கள் மறுமொழியிட்டிருக்கிரார்கள். குறிப்பாக முனைவர் முத்துகுமாராசுவாமி ஐயா கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற வைணவத்தலங்களில்…//

    இங்கு திருமால் அடியார்கள் என்னும் பதமும் ஸ்ரீ வைணவர்கள் என்னும் பதமும் குழப்பிக்கொள்ளபடுகின்றன, பஞ்ச சமஸ்காரங்கள் கைகொண்டோரை பற்றியே அடியேன் கூறியது! அவர்களிலும் உணவு பழக்கங்களை பற்றி மாற்றம் கொள்ளாதொரை எங்கும் நிர்பந்திதலும் கிடையாது! அவர் அவர், அவர் அவர் வழி பற்றி அடியாரையும், வைணவராயும் மிளிர்தல் கண்கூடு!

    தங்கள் புரிதலுக்காய்:

    ஸ்ரீ கண்ணப்ப நாயனார் ஈசனுக்கு படைத்ததும், சம்பந்த பெருமான் படைத்ததும் ஒன்றல்ல என்பதே இங்கு அறிதல்! ஆயின் இருவரும் அடியார்கள் என்பதில் பேதமில்லை! ஆயின் ஸ்ரீ கண்ணப்பர் படைத்ததே ஆகம ஆலயங்களிலும் படைக்க வேண்டும் என்றால் அது முரண்! அதைபோன்று ஈசனும் பைரவ சன்யாசிகளின் உணவின் முறை கொண்டு ஒழுகுகிறான் என்றல் இவ்விடத்தே தகாது என்பதே இங்கு குறி!

    திருமிகு அத்விகா,

    பாகவதர்க்கும் இதர பார்பனர்க்கும் உள்ள பேதமாக கூறபட்டுள்ளதைதான் இவ்விடத்தில் அர்த்தம் செய்து கொள்ள வேண்டுமே அல்லாது லோகயதமாக எடுத்துக்கொள்ள கூடாது! இங்கு பரத்வ கேள்வி எங்கும் இல்லை! இவை அனைத்தும் ஆழ்ந்த புரிதலிற்கு அடிப்படையானது! ஸ்ரீ சங்கரர் செய்த ஷன்மதம் என்பது ஷட் தரிசனங்கலையே (ந்யாயம் உள்ளிட்ட) குறிப்பிடுவது தானே அல்லாது தாங்கள் குறிப்பிட்டபடி அல்ல!
    //…அளப்பரிய சக்திக்கு எல்லை வகுக்க முயலும் மூடர்கள் மத்தியில்..// வார்த்தையை அளந்து பேசுதல் நலம்! சமய ஹிந்துத்வம் புரியவில்லை என்றால் பரவாயில்லை, சமூக மற்றும் அரசியல் ஹிந்துத்வத்தை புரிந்து கொள்ள முயலுதல் நலம்! திருமிகு அத்விகா, போன்றோர் நம் தற்காலத்தைய புரிதல் மற்றும் செயலாற்றுதல் குறைவாயுள்ள.. வார்த்தை நிரம்ப உள்ள ஹைந்தைவர்களுக்கு உதாரணம்! ஸ்ரீ புத்தரில் இருந்து, ஸ்ரீ சங்கரர் வரை தாங்கள் பார்வை மிகவும் வளர்த்து கொள்ள வேண்டும் என்பதை தங்களின் மறுமொழிகள் புலப்படுத்துகின்றன!

  71. அன்புள்ள மித்திரன்,

    ” //…அளப்பரிய சக்திக்கு எல்லை வகுக்க முயலும் மூடர்கள் மத்தியில்..// வார்த்தையை அளந்து பேசுதல் நலம்! சமய ஹிந்துத்வம் புரியவில்லை என்றால் பரவாயில்லை, சமூக மற்றும் அரசியல் ஹிந்துத்வத்தை புரிந்து கொள்ள முயலுதல் நலம்! “-

    அளப்பரிய சக்திக்கு எல்லை வகுக்க முயலுவோர் அறிவாளிகளே என்பது உங்கள் கருத்து. அது உங்கள் கருத்து என்பதால் , அதை வெளிப்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு. ஹிந்துக்களுக்கு சமய ஹிந்துத்வம், புரிய வைக்க, மித்திரன் போன்றோர் முயலுவது பரிதாபம். எங்களுக்கு எல்லைகள் எதுவும் இல்லை. இது தான் புத்தகம், இதைமட்டுமே படி, இதை மட்டுமே வணங்கு, வேறு ஏதாவது படித்தால் அல்லது வணங்கினால் உனக்கு நரகம், நீ விபச்சாரிக்கு சமமாகி விடுவாய் என்ற உதார்களை மேலே சிலர் மறுமொழிகளாக இட்டிருப்பது வெள்ளிடைமலை.

    சமய ஹிந்துத்துவம் புரியாதவர்கள் ,சமூக மற்றும் அரசியல் ஹிந்துத்வத்தை நிச்சயம் புரிந்துகொள்ள முடியாது.

  72. பஞ்சகச்சம் கட்டுக்குடூமி இவற்றுடன் பஜனை மார்கழியில் நடக்கும்போதும் திருமண் இட்டுக்கொண்டு போகும் போதும் மாடிசார் மாமிகளை பார்க்கும்போதும் கிண்டல் செய்யும் சமூகத்தினை பற்றி கீழ்தட்டு வாதம் என ஜடாயு குறிப்பிடுவாரா?

  73. அத்விகா

    //
    புத்த மதத்தின் கருத்துகளையும் தேவையான இடங்களில் உள்வாங்கி , இந்து மதத்தை செப்பனிட்டார்
    //

    🙂 அப்போ ஹிந்து மதம் பிராசீன புத்த மதம் என்கிறீர்கள். அதாவது ஹிந்து மதம் புத்த மதம் கொண்டது செப்பனிடப் பட்டுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி.

    நிறைய பேர் சங்கரர் அவர்கள் ஹிந்து மதம் சார்ந்த வேதாந்தத்தை தழுவி பாஷ்யம் எழுதினார் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அத்வைதம் புத்தம் மாதிரி இருப்பது சங்கரர் தப்பல்ல, அது உண்மையில் கவ்டபதரின் சிந்தனையே [படிக்க மாண்டுக்ய காரிகைகள்].

    நீங்கள் நிறைய தமிழ் பேசிய அளவு (ஏசிய) உண்மை பேசவில்லை (அதாவது உண்மை அறியாமல் பேசி உள்ளீர்கள்)

    //
    எல்லாம் ஒரே சக்தியின் பல்வகை தோற்றங்களே என்ற விஞ்ஞான உண்மையை , விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலக்கட்டங்களிலேயே எடுத்தோதிய பெருமகன். அவர் இல்லாவிட்டால் இன்றைய இந்துமதம் தனது தத்துவ சிறப்பில் , பலவற்றை பலிகொடுத்திருக்கும். அவர் நிச்சயம் சீர்திருத்த செம்மலே
    //

    இதை எல்லாம் உண்மையில் செய்தது உபநிஷத்களே. சங்கரர் அதற்கு அத்வைத முகம் தந்தார். உங்கள் பாராட்டுக்களை பெரவேண்டியவர்கள் உபநிஷத் கர்தாக்களே. சங்கரரின் மகத்தான பங்கு உண்மையில் வேறே. அதை சொல்லி அவரை பூஜிப்பது நன்று.

    சங்கர பகவத்பாதாள் இல்லாவிட்டால் இந்தியா தனது தத்துவ சிறப்பை இழந்திருக்கும் என்று சொல்வது மற்றவர்களின் பணியை குறைத்துக் கூறுவதாகும். யார் இல்லாவிட்டாலும் தத்துவம் தழைக்கும்.

    //
    பொருட்படுத்தாது , துணிந்து செயல்பட்டார். கடவுள் சக்தி என்னும் அளப்பரிய சக்திக்கு எல்லை வகுக்க முயலும் மூடர்கள் மத்தியில் , அதன் எல்லைஅற்ற தன்மையை தெளிவாக விளக்கியவர் அவர்.
    //
    அப்போ பிரம்ம சூத்திரக்காரர் ஒன்னும் செய்யலை செய்திருந்தார். உபநிஷதேல்லாம் சும்மா புரியாத பாலிஷ் மொழில இருந்தது,.

    கண்ணன்
    //
    சீர்திருத்தவாதி என்ற நவீன சொல்லாடல் கொண்ட கோட்பாட்டிற்குள் அவரை எப்படி சேர்ப்பீர்கள்”
    //

    உங்களுக்கு நான் என்ன எழுதினேன் எதற்கு எழுதினேன் என்று புரியாது. விட்டு விடுங்கள். இதை கட் செய்து எழ்டின நீங்கள் அதற்கு முன் இருந்த வரியை விட்டது ஏன்.
    இன்று ஒரு புது சந்நியாசி தோன்றி பாரதம் முழுவதும் சென்று நாம் கடைபிடிக்கப் பட வேண்டிய சத்தியம் என்று ஒன்றை சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்., அவரை நவீன சொள்ளடலலான சீர்திருத்தவாதி என்ற சொல்லால் உங்களால் குறிக்க முடியுமா என்பதுதான் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது.

    அத்வைதம், ஜாதி இல்லா சமத்துவம் :-). ஒரு முறை சங்கர பாஷ்யங்களை படிப்பீராக. அத்வைதம் என்ற சித்தாந்தம் ஜாதியை சமூக பிரச்சனைகளை திடீர் என்று எப்படி ஒழிக்கும் என்று சொல்ல முடியுமா?.

    சங்கரர் ஷன்மத ஸ்தாபகர் என்றால், பரிபாடல்கள் , சங்க இலக்கியங்களில் வரும் வழிபாட்டு முறைகள் எதை குறிக்கின்றன ? ஷன்மத ஸ்தாபனம் என்பதற்கு நவீன புராணங்கள் தவிர்த்து ஏதாவது அதாரம் உண்டா?

  74. கண்ணன் அவர்களே! சோ வும், குருமூர்தீயும் வைஷ்ணவர்களின் திருமண்ணை ஏமாற்றத்தின் அடயாளமாக எழுதும் போதும் அது (போலி) ஹிந்த்துத்வா வாதிகளின் வக்ரபுத்திதான், அ.நீ, ஜடாயு போன்றோர் தலித் ஆதரவு மட்டும்தான் ஹிந்த்துத்வம் என்றோ, பிரமணர்களை கிண்டல் செய்யும் போதோ அது வக்கிரபுத்திதான்.பஜனை செய்வதையும் திருமண் இட்டுக்கொண்டு போவோரையும் கிண்டல் செய்வதையும் கீழ் தட்டு வாதிகளின் பார்வை எனலாமோ?

  75. அத்விகா அவர்களே! சங்கரர் ஆறு மதத்தினை ஸ்தாபித்தார் என சொல்வது முற்றிலும் தவறு. ஆதி சங்கரர் 6 மதத்தினை உண்டாக்கினார் எனில் அவரது காலத்துக்கு முன்னே வைஷ்ணவம் போன்ற மதங்கள் இருந்ததே. விரிவான விளக்கம் வேண்டுமெனில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபகரா? அத்வைதம் குறித்து சில கேள்விகள் எனும் நூல் காண்க – வெளியீடு ஸ்ரீ வைஷ்ணவ சுதர்சனம் 3b, புத்தூர் அக்ரஹாரம், புத்தூர்-திருச்சி-17 விலை ரூ10

  76. இக்கதை ஒரு நல்ல உண்மையை புதினமாகச் சொல்கிறது. அதையே கட்டுரையும் பிரதிபலிக்கிறது. கதை சொல்லும் உண்மையை உணர்ந்தால் இந்துமதத்துக்கு நல்லது என்று கட்டுரையாளரும் தெளிவுபடுத்துகிறார்.

    திருட்டுத்தனமாக பிள்ளையாரைக் கொண்டுவந்து வைக்கக்கூடாது என்று சொல்ல இக்கதை நிகழ்வுகள் உண்மையாக இருந்தால் சரி. இது கற்பனைக்கதை. உண்மையிலும் இப்படி நிகழ்வுகள் உண்டு. ஆனால் அது இன்னொரு மக்க‌ள் வாழ்க்கை முறையையும் வழிபாட்டு முறையையும் அழிக்கவன்று. அதாவ‌து, சில‌ர் பிள்ளையார் கோயில் க‌ட்டுகின்ற‌ன‌ர். பிள்ளையார் விக்கிர‌ஹ‌த்தை அவ‌ர்க‌ள் வேறிட‌த்திலிருந்து திருடிக்கொண்டு அவ‌ர்க‌ள் கோயிலில் ந‌ட்டுவைத்து விடுவார்க‌ள். இது திருட்ட‌ன்று; ஒரு ந‌ம்பிக்கை. திருட்டுப்பிள்ளையார் அவ‌சிய‌ம்.

    இக்க‌தையில் மாம‌னார் செய்ததை பல‌ரும் த‌வ‌றாக‌ப் புரிந்து கொண்டார்க‌ள். மாமனார் க‌தையில் தொட‌க்க‌த்திலிருந்து இறுதிவ‌ரை வ‌ருகிறார். அவ‌ர் பேச்சும் செய‌லும் அவ‌ர் ம‌க‌ளின் ந‌ல்வாழ்வை – அதாவ‌து ம‌ரும‌க‌னோடு இணைந்த‌ குடும்ப‌ வாழ்க்கையை – ஸ்திர‌ப்ப‌டுத்த‌வே. பெங்க‌ளூரில் பெரிய‌ வீடொன்று வாங்கி த‌ன் ம‌க‌ளை ந‌ன்கு வாழ‌ வைக்க‌ ம‌ரும‌க‌னைப் ப‌ய‌ன‌படுத்துகிறார். அப்ப‌டி அவ‌ர் திட்ட‌ம் வெற்றிய‌டைகையில் கீழ்த்தட்டு ம‌னித‌ர்க‌ள் குறுக்கிடுகிறார்க‌ள். அவர்கள் வாழ்க்கைமுறை ம‌ரும‌க‌னைத் துன்புறுத்துகிற‌து. அவன் ஒருவேளை மீண்டும் அமெரிக்காவுக்கு மகளை இட்டுச்சென்று விடுவானோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது. அப்ப‌டி அவ‌னைச் செய்யாதிருக்க‌ அவ‌ர் க‌ண்ட‌ வ‌ழியே அத்திருட்டு.

    அம்ம‌க்க‌ளை விர‌ட்ட‌ முடியாது. அவ‌ர்க‌ளுக்கு வேறுப‌ல‌ம் இருக்கும். என‌வே பிள்ளையார் வ‌ழியைக் க‌ண்டுபிடிக்கிறார். பிள்ளையார் வ‌ழிபாடு அம்ம‌க‌க‌ளின் பிற‌வ‌ழிபாட்டு முறையை விழுங்கிவிடும் என்ப‌தாக‌ அவ‌ர் நினைத்த‌து ந‌ட‌க்கிற‌து. அவ்விழுங்குத‌ல் அவ‌ர் விரும்பியது அன்று. அவர் விருப்பம்: ம‌க‌ளின் வாழ்க்கையே வேண்டும். பிள்ளையார் is a brilliant strategy : that’s all!

    இக்க‌தைக்கும் இந்து ம‌த‌த்துக்கும் தொட‌ர்பில்லை. இருப்பினும் இங்கு க‌ட்டுரை அப்ப‌டி பார்க்கிற‌து. அத‌ற்கு என் ப‌தில் ஆங்கில‌த்தில் போட‌ப்ப‌ட்டுவிட்ட‌து. அத‌ன்ப‌டி, இது ஒரு வ‌ர்க்க‌ப்போராட்ட‌ம். பாட்டாளி வ‌ர்க்க‌த்தை பணக்கார வர்க்கம் த‌ன்வ‌ச‌ப்ப‌டுத்தி த‌ன் வாழ்க்கையை வ‌ச‌திப்ப‌டுத்திக்கொள்வ‌து ஆதிகால‌ம் முத‌ல் ம‌னித‌வாழ்க்கையில் காண்ப‌து. இங்கே ப‌ண‌க்கார‌ வ‌ர்க்க‌ம் பாட்டாளி வ‌ர்க்க‌த்தை விர‌ட்டுவ‌த‌ன் மூல‌ம் த‌ங்க‌ள் விரும்பிய‌ வாழ்க்கையை அடைய‌ முய‌ற்சிக்கிறார்க‌ள். பாட்டாளிவர்க்கத்தினரால் வ‌ரும் தொல்லையை – வ‌ழிபாட்டுத் தொல்லை, உண‌வுப்ப‌ழ‌க்க‌த் தொல்லையை – ம‌ல‌ர்ம‌ன்ன‌னின் டெக்னிக்கான‌ ‘பண்‌பாக‌ பேசி ஆட்கொள்ளுத‌ல்’ வைத்து வெற்றி பெற‌ முடியாது. அப்படியே முடியுமென்றால் நாட்கள், ஆண்டுகளாகும். மேலும் அவர்களூடே சென்று அதைச்செய்ய வேண்டும். இதை மேல் வர்க்கம் செய்யுமா? முடியாது என‌த்தெரிந்து பிள்ளையாரை வைத்து வெற்றிகொள்கிறார்க‌ள். ஒரு சூழ்ச்சி. அவ‌ர்க‌ளிட‌ம் செல்லாம‌லே ஒரே நாளில். Double whammy!.

    ஒரு ம‌க்க‌ளின் வாழ்க்கையை எம்முறையை வைத்து அழித்தாலும் த‌வ‌றே. குறிப்பாக‌ வ‌ழிபாட்டு முறையை. இசுலாமிய‌ர் த‌ம் வ‌ழிபாடு முறையிலிருந்து மாறியிருப்போரை கொத்து கொத்தாக‌க் கொல்கிறார்க‌ள். அத‌ற்குச் ச‌ம‌ம்தான் இப்ப‌டி இன்னொரு ம‌க்க‌ளின் வாழ்க்கையை அழிப்ப‌து; அதைப்ப‌ண‌பாக‌ப்பேசி அழித்தாலும் பிள்ளையாரை வைத்து அழித்தாலும் த‌வ‌று த‌வறே. குறிப்பாக‌ இந்து ம‌த‌த்தில் அம்ம‌தக்கொள்கைக்கு எதிரான‌தே. ஏனெனில் இம்ம‌த‌ம் ப‌ல‌வ‌கைக‌ளை த‌ன்னுள் அட‌க்கியிருக்கும்போது ஏன் ஒருவ‌கையை ம‌ட்டும் அழிக்க‌ வேண்டுமென்ப‌து தெரிய‌வில்லை. Can anyone tell me? Why shd we need to kill the rural workship of Hindu gods and goddesess?

    ஆனால் இக்க‌தை அப்ப‌டிப்ப‌ட்ட‌ அழித்த‌லைச் செய்ய‌வில்லை. அது செய்வ‌தெல்லாம் வ‌ர்க்க‌ப்போராட்ட‌த்தில் த‌ன் வெற்றியை அடைவ‌து ம‌ட்டும்தான். ம‌த‌த்துக்கு அப்பால் ப‌ட்ட‌து. ஆனால் ம‌த‌ம் வ‌ழிச்சட‌ங்குக‌ளையும் த‌ங்க‌ள் கொண்ட‌தே மேலான‌து பிற‌வ‌ற்றை அழிக்க‌ வேண்டுமென்ப‌து மேல்வ‌ர்க்க‌த்தில் குறிக்கோளும் செய‌லும் ஆகும்.

    க‌ட்டுரையின் த‌லைப்பு அதையேதான் சொல்கிற‌து. வாழு, வாழ‌ விடு.

    If a good lesson can be learnt from this story – which is the intention of this Tamil.com essay by Jadayu – I welcome it wholeheartedly. Not only that. It is an important lesson and ruffles many idyllic feathers here, as seen from the comments. Never mind them. Go ahead strongly. Bring the religion to the struggling and working masses too – IN THEIR OWN WAY. Never forget that. It is the best way to make the religion flourish fantastically

    -.

    – இனி குல‌சேக‌ர‌ன் என்ப‌தே என் புனைப்பெய‌ராக‌ த‌மிழ் டாட் காமில் வ‌ரும். கார‌ண‌ம் என் ப‌ழைய‌ ஐடிக‌ள் ஹேக் செய்ய‌ப்ப‌ட்டு விட்ட‌ப‌டியால்.‌

  77. ஸ்ரீ மித்ரன்
    “இங்கு திருமால் அடியார்கள் என்னும் பதமும் ஸ்ரீ வைணவர்கள் என்னும் பதமும் குழப்பிக்கொள்ளபடுகின்றன, பஞ்ச சமஸ்காரங்கள் கைகொண்டோரை பற்றியே அடியேன் கூறியது! அவர்களிலும் உணவு பழக்கங்களை பற்றி மாற்றம் கொள்ளாதொரை எங்கும் நிர்பந்திதலும் கிடையாது! அவர் அவர், அவர் அவர் வழி பற்றி அடியாரையும், வைணவராயும் மிளிர்தல் கண்கூடு!”
    ஸ்ரீ மித்ரன் ஐயா திருமாலடியார் என்பது ஸ்ரீ வைணவர் என்பதும் வேறன்று. ஏன் என்றால் விஷ்ணு என்பதும் திருமால் என்பதும் ஒருவரையே குறிக்கும். பஞ்ச சம்ஸ்காரங்களைக் கைகொண்டவர்களை ஸ்ரீ வைணவர் என்றால் காரமடை தாசர் பெருமக்களும் சங்கையும் சக்ரத்தையும் தமது தோள்களில் முத்திரையாக குருனாதரிடம் பெற்றவர்கள். காரமடைத்தலத்தில் இந்த முத்திரைவைத்தல் அனைத்து சாதியினருக்கும் வழங்கப்படுகிறது. இந்த முத்திரை வைத்தலில் சைவ உணவு பழக்கம் வலியுறுத்தப்படுகிறதா இல்லையா என்பதை அடியேன் அறியமாட்டேன்.
    இதில் அடியேன் வலியுறுத்துவது ஒன்றே சைவ உணவு கொள்வோர் மட்டுமே சைவர் என்றோ வைணவர் என்பதோ ஒதுக்குதல்(Exclusionary approach) அணுகுமுறை அது நமக்குவேண்டாம் என்பதே. ஸ்ரீ ராமானுஜரை எம்மைப் போன்ற சைவர்களும் போற்றுவது இந்த அனைவரையும் அணைத்துக் கொள்ளும் அவரது விசாலப்பார்வை அணுகுமுறைக்காகத்தான்(inclusive). சைவ உணவை கட்டாயப்படுத்தியதால் சைவ சித்தாந்தம், வீரசைவம் போன்றவற்றில் தீக்ஷை பெறாமலே பலர் சிவனடியார்களாக இருக்கிறார்கள். அனால் புலால் உண்ணுகிற சாமானியர் திருமாடியாராக சம்ஸ்காரார்த்தமாக விளங்குகின்றார்கள் என்பது ஸ்ரீ வைணவத்தின் சிறப்பே அன்றி தாழ்வில்லை. ஆனால் அவர்களுக்கு தாம் ஸ்ரீ ராமானுஜர் வழி வந்தவர்கள் என்பது பெரும்பாலும் தெரியாது என்பதும் உண்மை.
    ஸ்ரீ கண்ணப்ப நாயனார் வழிமுறை எல்லோருக்கும் எளிதன்று. ஏன் என்றால் கண்ணப்பரொப்ப அன்பு என்பது அரிது. ஸ்ரீ கண்ணப்ப நாயனார் இறைவனுக்கு ஊண் படைத்தார், ஸ்ரீ ராமச்சந்திரர் ஊண் உண்டார், ஸ்ரீ க்ருஷணர் ராசலீலை செய்தார் என்றால் இன்றும் நாம் அப்படி செய்யவேண்டியது அவசியமில்லை. அவர்கள் நிலை வேறு நம் நிலைவேறு.
    ஸ்ரீவஸ்ரீ.

  78. ஸ்ரீ சாரங்கர்
    “அத்வைதம், ஜாதி இல்லா சமத்துவம் . ஒரு முறை சங்கர பாஷ்யங்களை படிப்பீராக. அத்வைதம் என்ற சித்தாந்தம் ஜாதியை சமூக பிரச்சனைகளை திடீர் என்று எப்படி ஒழிக்கும் என்று சொல்ல முடியுமா?.
    ஐயா சாரங்கரே இருப்பது ஒன்றே என்றால் அங்கே சாதி வர்ண ஏற்ற தாழ்வுகளை எப்படி நியாயப்படுத்தமுடியும். ஆனால் பரம அத்வைதியான் ஸ்ரீ சங்கராச்சாரியார் சமூக சமத்துவத்தை ப்பேசவில்லை என்பது உண்மை. ஆனால் அத்வைதத்தின் சமத்துவக் கூறுகளை பிற்காலத்தில் தோன்றிய மகாராஸ்டிர பக்தி இயக்கப் பெரியோர்களான ஸ்ரீ ஞானேஸ்வரர் போன்றோர்கள் பயன்படுத்தினர். ஸ்ரீ விட்டல் விட்டல் என்று இன்று பஜனை பாடும் சம்பிரதாயத்தினர் அதாவது இறைநாமத்தை பக்தியை சாதிகடந்ததாக மாற்றிய பெரியோர்கள் அனைவரும் அத்வைதிகளே. கடந்த நூற்றாண்டில் ஸ்ரீ நாராயணகுருசுவாமி அத்வைத வேதாந்தத்தை சமூக சமத்துவத்திற்காக சித்தாந்தமாகப் பயன்படுத்தினார். நவீன இந்தியா ஏழை மக்களின் தாழ்த்தப்பட்டமக்களின் குடிசையிலிருந்து வெளிப்படும் என்று முழங்கிய வீரத்துறவி வேதாந்த சிங்கம் ஸ்ரீ விவேகானந்த அடிகளும் அத்வைதவேதாந்தியே.
    ஆக ஸ்ரீ சாரங்கர் சிரிக்கக்கூடாது சிந்திக்கவேண்டும்
    ஸ்ரீ சாரங்கர்
    சங்கரர் ஷன்மத ஸ்தாபகர் என்றால், பரிபாடல்கள் , சங்க இலக்கியங்களில் வரும் வழிபாட்டு முறைகள் எதை குறிக்கின்றன ? ஷன்மத ஸ்தாபனம் என்பதற்கு நவீன புராணங்கள் தவிர்த்து ஏதாவது அதாரம் உண்டா?
    ஐயா ஷண்மத ஸ்தாபனம் என்ற கருத்தாகத்தை சரியாக விளங்கிக்கொள்ளவேண்டும். ஸ்ரீ சங்கரர் ஆறுமதங்களை தொகுத்து வகுத்தவர் அல்லர். இந்த ஆறும் அவருக்குமுன்பே இருந்தன. இந்த ஆறும் தனித்தனி என்றே விளங்கி ஒருவரோடு ஒருவர் மோதி ஒற்றுமையற்ற நிலை அவர் காலத்தில் இருந்தது. அதை மாற்றி வேதத்தினை சிரமேற்கொண்ட இந்த ஆறும் ஏற்புடையவை என்று ஒற்றுமையை ஏற்படுத்த முயன்ற பெரியார் ஸ்ரீ சங்கரர். பல்வேறு வழிபாடுகள் உடையவரும் அதனை விடாமலே ஞானையாக அத்வைதியாக வழிசெய்தவர் அவர்.
    சிவசிவ
    சிவஸ்ரீ

  79. சிவஸ்ரீ அவர்களே

    //
    ஐயா சாரங்கரே இருப்பது ஒன்றே என்றால் அங்கே சாதி வர்ண ஏற்ற தாழ்வுகளை எப்படி நியாயப்படுத்தமுடியும்.
    //

    அய்யா அது வெறும் பரமார்த்திக நிலையில். அந்த நிலையில் தான் அத்வைதம் அத்வைதம் என்று அத்வைதம் ஒத்துக் கொள்கிறது. வ்யாவஹாரிக நிலையில் எல்லாமே உண்மை (மித்யா பூதம்) தான் என்பதே அத்வைதத்தின் கொள்கை. ஆகையால் வ்யாவஹாரிக நிலையில் அத்வைதத்தால் சாதி வர்ண ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முடியாது – இன்னும் நீங்க கேட்டால் அத்வைதம் சொல்லும் வர்ணக் கோட்பாடுகளை பாஷ்யங்களிரிந்து எடுத்து தருகிறேன்.

    //
    ஒருவரோடு ஒருவர் மோதி ஒற்றுமையற்ற நிலை அவர் காலத்தில் இருந்தது. அதை மாற்றி வேதத்தினை சிரமேற்கொண்ட இந்த ஆறும் ஏற்புடையவை என்று ஒற்றுமையை ஏற்படுத்த முயன்ற பெரியார் ஸ்ரீ சங்கரர்.
    //
    மன்னிக்கவும் இது வெறும் அபிப்ராயம் அவ்வளவு தான். இதற்கு எங்குமே சான்றுகள் கிடையாது.

    இதற்க்கு மேல் இதை பற்றி இங்கே விவரிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். கட்டுரை வேற விஷயத்தை பேசுவதால்.

  80. நண்பர் குலசேகரரே,

    கதைக்கரு பணக்கார ஏழை சண்டை என்று அருதியிட்டுள்ளீர்கள். இந்த கட்டுரை அதை விட்டு விட்டு ஹிந்துத்வத்தை முன்னிறுத்தி (உண்மையில் மேட்டிமைவாத ஒருவித ஹிந்துத்வா உட்பிரிவை நோக்கி) எழுதப்பட்டது என்றும் சொல்கிறீர்கள். கதைக்கும் கட்டுரைக்கும் விஷய சம்பந்தம் குறைவு என்றும் சொல்கிறீர்கள், கடைசியில் கதை என்ன நினைத்ததோ அதை தான் கட்டுரையும் சொல்கிறது வாழ்த்துக்கள், தொடருங்கள் என்கிறீர்கள்.

    ரொம்ப கொழப்பமா இருக்கு.

  81. பெருமதிப்பிற்குரிய சாரங்கர்,

    பல ஞானிகளும் , மேதைகளும் , நமது பாரத திருநாட்டில் தத்துவ வளர்ச்சிக்கு தங்கள் தங்கள் பங்கினை செவ்வனே ஆற்றியுள்ளனர் என்ற கருத்து உண்மையே. ஆனால் அவர்கள் வளர்த்து எடுத்த சித்தாந்தங்கள் , சனாதன இந்து தர்மத்தின் பல்வேறு பிரிவினருக்கிடையே, என் கருத்து மட்டுமே உயர்வு, என்று வீண் கர்வத்துடன் சென்ற நூற்றாண்டின் வீர சைவ, வீர வைஷ்ண சண்டைகளை போல, ஒருவருடன் ஒருவர் மோதி, நாடு முழுவதுமே நாசமாகாமல் தடுத்தவர் ஆதி சங்கரர். ஆதி சங்கரர் தம் பணியை செவ்வனே ஆற்றாமல் இருந்திருந்தால், எவ்வளவோ தத்துவங்கள் நம் நாட்டில் இருந்தும், பின்பற்றுவோரின்றி அனாதையாய் மடிந்திருக்கும். நீங்கள் சொல்லுகிற ஆறுவகை தர்சனங்கள், மேட்டுக்குடியினர் , வளர்த்தவை. அவையும் inclusive விதிப்படி இந்து தர்மத்தின் ஒரு சிறந்த பங்கே. இந்து தர்மம் முழுவதையும் எந்த மனிதரும் தன் வாழ்நாளில் முழுவதுமாக கற்கவோ, கற்பிக்கவோ முடியாது. ஏனெனில் மனிதனின் வாழ்நாள் மிக மிக குறைவு. எனவே, பின்பற்றுவோரின்றி, நமது வேதங்களின் பல சாகைகள் காணாமல் போய்விட்டதாக , வரலாறு கூறுகிறது.

    சுவாமி விவேகானந்தர் அமெரிக்க மற்றும் மேலைநாடுகளில் உரை ஆற்றி , சனாதன இந்து தர்மத்தின் சிறப்பினை மேலைநாட்டினர் உணரச்செய்தார் என்பது உண்மை. அதற்காக , அவர் சாதனையை சிறப்பிக்கும் ஒருவர், விவேகானந்தர் இல்லாவிட்டால், இந்துமதத்துக்கு இவ்வளவு பிராபல்யம் வந்திருக்காது என்று சொன்னால், உயர்வு நவிற்சி அணி விதிப்படி கூறுகிறார் என்று நாம் விட்டுவிடுவோம். விவேகானந்தரை சற்று முக்கியப்படுத்தி சொன்னால், மற்ற பெரியோரை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் ஆகாது. அதே கருத்தின் அடிப்படையில், ஆதி சங்கரரின் பணியை நான் சற்று உயர்த்தி சொல்லிவிட்டதாக தாங்கள் கருதினால் , தங்கள் கருத்தினை நான் ஏற்கிறேன். ஆனால், பிற பெரியோரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அப்படி தாங்கள் கருதினால், எனக்கு என் கருத்தினை சரியான வார்த்தைகளில் வெளிப்படுத்த தெரியாத குற்றமே என்று ஒத்துக்கொண்டு, மனமார்ந்த மன்னிப்பினை கேட்டு கொள்கிறேன்.

    கம்ப ராமாயணத்தில், வானளாவிய மதில்கள் என்று அரண்மனை மதில்களை பல இடங்களில் சிறப்பித்து சொல்லியுள்ளார். அது எப்படி உயர்வு நவிற்சியோ, அப்படியே என் கருத்தையும் கொள்ள வேண்டுகிறேன்.

  82. சிவஸ்ரீ அவர்களே

    //
    ஸ்ரீ விட்டல் விட்டல் என்று இன்று பஜனை பாடும் சம்பிரதாயத்தினர் அதாவது இறைநாமத்தை பக்தியை சாதிகடந்ததாக மாற்றிய பெரியோர்கள் அனைவரும் அத்வைதிகளே. கடந்த நூற்றாண்டில் ஸ்ரீ நாராயணகுருசுவாமி அத்வைத வேதாந்தத்தை சமூக சமத்துவத்திற்காக சித்தாந்தமாகப் பயன்படுத்தினார். நவீன இந்தியா ஏழை மக்களின் தாழ்த்தப்பட்டமக்களின் குடிசையிலிருந்து வெளிப்படும் என்று முழங்கிய வீரத்துறவி வேதாந்த சிங்கம் ஸ்ரீ விவேகானந்த அடிகளும் அத்வைதவேதாந்தியே.
    ஆக ஸ்ரீ சாரங்கர் சிரிக்கக்கூடாது சிந்திக்கவேண்டும்
    //

    அடியேனும் கிட்டத்தட்ட அத்வைதியே. விசயம் advaitham Vs rest இல்லை ன்பதை விளங்கிக்கொள்ளுங்கள், ஒரு விஷயம் எழுதினால் அதை பெரிதுபடுத்தி எதோ நான் அத்வைதத்தை தூஷிப்பதை போல தயவு செய்து எண்ணிக் கொள்ள வேண்டாம். எதற்காக.நீங்கள் சொன்ன லிஸ்டில் உள்ளவர்கள் அத்வைதத்தை கொண்டா சமூக மாற்றத்தை கொண்டு வந்தார்கள்? அப்படிபார்த்தால் வடக்கில் மாபெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவர்களும் தென்னிந்தியாவில் இன்று ஹிந்துத்வம் சிறந்த விளங்க காரண பூதர்கலான அரச பரம்பரையும் த்வைதிகளே. உடனே த்வைதம் தான் அத்வைதத்தை விட அதிக சமூக மாற்றங்கள் கொண்டுவந்தது என்றா சொல்ல முடியும்? ரெண்டையும் முடிச்சு போட முடியாது இல்லையா?

  83. அத்விகா

    ரொம்ப வருத்தபடுகிறீர்கள் போல இருக்கிறது.

    முதலில் நான் எதற்காக அப்படி எழுதினேன் என்று உங்களுக்கு தெறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் குழப்பம்.
    சீர்திருத்தவாதி என்ற நவீன சொல்லாடல் என்றெல்லாம் பில்ட் அப் இருந்ததை நீங்கள் விட்டுவிட்டு பின் சொன்னதை பிடித்திகொண்டு என்னை போட்டு துளைத்தால் நான் என்ன செய்வது. மென்மேலும் வந்த பின்னூட்டங்களில் நானும் உங்கள் போக்கிலே தான் பேசிக்கொண்டிருதேன் அவ்வளவே. மேட்டிமைவாதம் போல இது கும்பகோனவாதம்.

    சங்கரின் சேவை என்ன என்பதை நன்கு ஏற்கனவே அறிந்திருப்பதால், தயவு செய்து பரஸ்பர போதனையில் நாம் இறங்க வேண்டாமே என்று விண்ணப்பிக்கிறேன். நாம் பூஜை அனுபவத்தில் விஷயத்தை கோட்டை விட்டு விடுகிறோம் என்பது ஒன்று தான் எனது வருத்தம்.

  84. // அய்யா அது வெறும் பரமார்த்திக நிலையில். அந்த நிலையில் தான் அத்வைதம் அத்வைதம் என்று அத்வைதம் ஒத்துக் கொள்கிறது. வ்யாவஹாரிக நிலையில் எல்லாமே உண்மை (மித்யா பூதம்) தான் என்பதே அத்வைதத்தின் கொள்கை. ஆகையால் வ்யாவஹாரிக நிலையில் அத்வைதத்தால் சாதி வர்ண ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முடியாது – இன்னும் நீங்க கேட்டால் அத்வைதம் சொல்லும் வர்ணக் கோட்பாடுகளை பாஷ்யங்களிரிந்து எடுத்து தருகிறேன். //

    சாரங், அத்வைதம் என்னும் உண்மையான ஆன்மிக, மானுட நேய தத்துவத்தை கேவலப் படுத்தி, அதை வீரியமிழக்கச் செய்யும் வாதம் இது. இந்தத் தளத்தை தொடர்ந்து படித்து விவாதங்களில் பங்கெடுத்து வரும் உங்களைப் போன்ற ஒருவர் கடைசியில் இந்த மாதிரி ஒரு வாதத்தை எடுத்து வைப்பது எனக்கு கடும் ஏமாற்றத்தையும் அயர்ச்சியையுமே அளிக்கிறது.

    கற்றறிந்த பிராமண்னும், நாயும், அதை உண்பவனும் முற்றுணர்ந்த ஞானியின் பார்வையில் ஒன்றே என்று கீதை சொல்லும் நிலை, ஏதோ க்வாண்டம் இயற்பியல் போன்றதான “பாரமார்த்திக” நிலை அல்ல. அது முழுமுற்றான நடைமுறை அத்வைதம்.. மானுட சமத்துவத்திற்கான வேதாந்தத்தின் அறைகூவல்… அந்த அறைகூவல் தான் சங்கரரை சண்டாளன் காலில் விழ வைத்தது,. தாயுமானவரை தெருவில் நிற்கும் அபலைப் பெண்ணுக்கு இரங்க வைத்தது. ஸ்ரீராமகிருஷ்ணரை தலித் சகோதரரின் கழிவறையைத் தன் தலைமயிரால் சுத்தம் செய்ய வைத்தது. ”மீனவர்களும் தோட்டிகளும் மாணவர்களும் தங்களுள் உறையும் ஆன்மாவை உணரட்டும்” என்று முழங்கிய விவேகானந்தரை தலித் சகோதரர் வீட்டிலும் உணவுண்ண வைத்தது. அன்னை சாரதா தேவியை விலை மாதர்களுக்கும் அருள் செய்ய வைத்தது. அய்யா வைகுண்டரையும், ஸ்ரீ நாராயண குருவையும் சமத்துவப் போராளிகள் ஆக்கியது. ஸ்ரீரமண மகரிஷியின் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமாகவும் மிளிர்ந்தது.. இந்த இழவெடுத்த பாரமார்த்திக/ வியாவஹாரிக பிரசினை எப்படி இவர்களுக்கு மட்டும் இல்லாமல் போச்சு?

    ஒரு பாரதியை விட, மடாதிபதி என்றும் ஆச்சாரியர் என்றும் பேர் போட்டுக் கொண்டு அத்வைதத்தை அவமதிக்கும் போலிகள், ஆன்மீக நிலையில் எந்த வகையில் உயர்ந்தவர்கள்? உண்மையான அத்வைதத்தை இவர்களிடமிருந்து விடுவிக்கத் தான் மேற்சொன்னவர்கள் எல்லாம் பாடுபட்டிருக்கிறார்கள். அத்வைதம் ஒரு சட்டம் அல்ல, ஒரு அரசியல் சித்தாந்தம் அல்ல தான்,. ஆனால், அடிப்படையில் உயரிய மானுட வாழ்க்கைத் தத்துவம் என்ற அளவில் தனிமனித, சமூக வாழ்வில் அதன் வழிகாட்டுதல் பல தளங்களில் இயங்கி வருகிறது என்பதற்கு மேற்சொன்னது போன்று எத்தனையோ சான்றுகள் உள்ளன. இது தான் ஒரு இந்துத்துவ வாதியின் அத்வைதமாக இருக்க முடியும்.,

    மற்றபடி அத்வைதம் என்பது சர்க்கரைப் பொங்கலை விழுங்கி விட்டு புளிச்ச ஏப்பத்துடன் கொட்டகையில் உட்கார்ந்து கதைக்கும் வறட்டுப் பேச்சாகவும், தங்களது மத அதிகாரங்க்ளை நியாயப் படுத்த ஒரு கருவி மட்டும் என்றும் உள்ளூர எண்ணுபவர்கள் தான், அவர்கள் மட்டும் தான் பிறப்படிப்படையிலான சாதி வேறுபாடுகளை *அத்வைதத்தின் பெயரால்* நியாயப் படுத்துவார்கள்.. ஒரு கோட் சூட் போட்ட ஆசாமியோ அல்லது நகர வாசியோ எளீய மக்கள் மீது கொள்ளும் வெறுப்புணர்வுக்கு ”லௌகீக”: கார்ணங்களையே அளிப்பார்கள்.. ஆனால் இத்தகைய போலிகள் அத்வைதம் போன்ற உயரிய ஆன்மீக தத்துவத்தைக் கொண்டு வெறுப்புணர்வையும், அதிகார அடுக்குகளையும் நியாயப் படுத்துகிறார்கள்,. முன்னதை விடக் கேவலமான செயல் இது.

    வேதாந்த பாஷ்யங்களில் உள்ள சாதிய ரீதியிலான கருத்துக்கள் பற்றீ ஏற்கனவே இங்கு விவாதிக்கப் பட்டுள்ளது.. சுவாமி சித்பவானந்தர் இது குறித்து எழுதிய மிகத் தெளிவான விளக்கம் ஏற்கனவே தமிழ்ஹிந்துவில் வந்துள்ளது – https://tamilhindu.com/2009/11/veda-belongs-to-all-castes/

  85. திருமிகு ஜடாயு அவர்களுக்கு, இங்கு திரு சாரங் அவர்கள் சொன்னது திரு விபூதி பூஷன் அவர்களுக்கு மறுப்புரையான வழிபாடு நோக்கில் நிற்கும் அத்வைதத்தையே! எவ்வாறு ஹைந்தைவம் போன்று அத்வைதமும் பல பரிமாணங்களில் இயங்குதல் உண்டோ அவ்வாறே இக்கருத்தை நோக்க வேண்டும்! ஆயின் தாங்கள் மற்றும் இங்கு உரை இடுவோர் தங்களின் ஸ்ரீ ராமானுச தரிசனத்தின் பார்வை சிறிது வித்யாசமாய் உள்ளதாக பலர் கருத இடம் அளிக்கும் வகையிலேயே தங்களின் பதில்கள் எதிரொலிக்கின்றன! ஸ்ரீ ராமானுச தரிசனம் விசிஷ்ட அத்வைதம் அதாவது சிறப்பு அத்வைதம் என்று கோணம் கொள்கிறது! அத்வைதத்தை உணராத பொது விசிஷ்ட அத்வைதம் கைவராது! அதை போல திரு விபூதி அவர்கள் கூறுவதைப்போல அத்வைதம் ‘ஏகம்’ என்பதை கூறவில்லை, அது ‘அ த்வைதம்’ என்கிறது! அதாவது எதுவும் இரண்டல்ல… அனால் எல்லாம் ஒன்று என்று நிறுவவில்லை!திருமிகு அத்விகா மற்றும் திரு விபூதி பூஷன் போன்றோர்கள் வழிபாடு மனநிலையிலிருந்து தத்வ,தர்க்க விசாரங்களுக்கு வரும் போதே இது புரியும்! பக்தி, வேதாந்த, சித்தாந்த, ஞான, கர்ம, யோக முறைகளை தாண்டி வரும் போதே அத்வைதம் புரியும்! அத்வைத அர்த்தம் சிந்திக்கும் போது அடுத்தது அக்கடலில் ஒரு துளி பிறதுளிகளில் ஒன்றாய் கடலும் இதவும் இரண்டல்ல என்று புரிந்து கடலாகி பிற துளிகளையும் அக்கடலில் சேர்ப்பது விசிஷ்ட அத்வைதம் காட்டும் நிலை! ‘பிரபத்தி’ என்கிறோம் இதை! அனால் தத்வ ஹித புருஷார்த்தங்கள் நோக்கி செல்வது என்பது வேறு, வழிபாட்டு ரீதியில் காணுதல் என்பது வேறு! அனால் அரசியல் மற்றும் சமூக ஹிந்துத்வம் யாரையும் தன்னியல்பு கொண்டோராய் கண்டு மக்களை ஒருங்கிணைக்கும் காலை, வழிபாட்டு மற்றும் பரிபக்குவம் நோக்கி பயணம் செய்யும் திருமிகு அத்விகா திருமிகு விபூதி பூஷன் சில இடங்களில் தாங்கள், உணர்ந்து கொள்ள வேண்டியது நமது சார்பு உடைய பார்வை பிறரை ஒன்று சேர்ப்பதில் விரோதமாய் முடியாமல் இருக்க வேண்டும்! என்பதே! திருமால் அடியார்கள் என்றும் ஸ்ரீ வைணவர்கள் என்றும் அடியன் எழுதி இருக்கும் கருத்தின் உட்பொருள் உணராது மேம்போக்காய் காணுவோரை என் என்பது! திருமால் அடியார்கள் எக்குலம் எவ்வியல்வு எது பிறப்பு என்பது இல்லை! அன்பிற்கினிய குகன் போன்றோரும் உறங்கவில்லி தசர்களும் கொற்றம்மை மார்களும் இன்னும் பலரும் அடியவர்களில் அடங்குவர்! இவர்கள் சம்ஸ்காரங்களை கைகொண்டோராகவும், இலைச்சினை கொண்டோராகவும் விளங்குவர்! ஆயின் ஓதல் ஓதுவித்தல் கைகொண்ட ஆச்சார்யர்கள் சிற்சில நியமங்களுக்கும் தீவிரமான கருதியல்வுக்கும் உட்பட்டு, பல வழிகளும் கற்று தேர்ந்து உலகிற்கு வழிகாட்டும் குன்றில் இட்ட தீபமாய் விளங்குவர்! இலைச்சினை கொண்டோர் எல்லாம் சம்ஸ்காரங்கள் கொண்டோர் ஆகா மாட்டார்! அவர்களை யாரும் விலக்குவது இல்லை! யாவரும் தொண்டக்குலதொரே! ஸ்ரீ வைணவம் என்னும் சொல்லாடலே ஸ்ரீ ராமானுச தரிசனம்! ஏனைய வைணவ பிரிவுகளுக்கு முறையே கௌடிய, குமார, ருத்ர, நிம்பரக, சுத்தத்வைத போன்ற பெயர்கள் விளங்கி வருகின்றன! முதலில் ஒருவர் கூறும் கருத்துக்களை நமது கோணத்தில் இல்லாது சொல்ல பட்ட கோணத்தில் காணும் ‘சம தர்சன’ பார்வை முக்கியம்! மேலும் பணிவும், நைசியமும் மிகவும் அத்யவச்யமானது!

  86. Dear Jatayu Sir,

    I think this website’s purpose and intention is to unite the Hindu people though they are varied in terms of their sub divisions within the religion. I request you not to take this kind of stories for your criticism why because there is the evident proof that people will get irritated when negative traits of a particular character belonging to a particular community when criticized. The same will happen if this story speaks about an Iyer of upper class mentality too. If the protagonist of this story is either a Shaivite or a vaishnavite, there will be the same reactions from the readers community. I am after all an ordinary working class individual who unfortunately born in a brahmin lineage. Having seen very much nasty politics within brahmin community against brahmis by the brahmins, I sincerely request you not to initiate any animosity against your own brothers. When you particularly point out an author and trace about his community and then come to an understanding about the moral of the story, you will definitely jump in to conclusions. Please dont hurt any communities’ sentiments by pulling them down!

    All of us should understand that Dvita, Advaita & Vishistadvita accept Bhagavat Gita and its teachings. The foremost teaching from Bhagavat Gita as far as I am concerned is the one – “Kadamaiyai Sei, Palanai edirparathey”. It looks like Mr. Sujatha Desigan expected some results out of writing this story. And it is very clear that you also have expected some outcomes for your criticism. Whatever it is, if your expectations are really good hearted, let me pray the almighty that the utmost purpose of this website gets fulfilled. If you think your criticism deviates from the purpose of this website, please be generous in accepting it and kindly don’t do the same in future.

    I dont have any personal animosity over anyone. Just thought of sharing this.

    Kind Regards,
    Prasanna.

  87. திரு ஜடாயு,

    சாரங் அவர்கள் கூறியதை நீங்கள் எப்படியெல்லாம் தவறாகப் புரிந்துக் கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் புரிந்துக் கொண்டு எழுதி உள்ளீர்கள்.

    சாரங் சொல்வது என்னவென்றால் “‘பரமார்த்தத்தில் எல்லாம் ஒன்று’ (இது தான் சங்கரர் எழுதி வைத்தது) என்பதிலிருந்தே மனித நேயம் வளர்ந்தது” என்பது உண்மையல்ல என்று தான். நீங்கள் ‘அத்வைதத்தில் மனித நேயத்திற்கு இடமில்லை’ என்று அவர் கூறுவதாகப் புரிந்து விட்டீர்கள்! இராமானுஜர் காட்டிய மனித நேயம் சங்கரருடைய அத்வைதத்திலிருந்தா தோன்றியது?

    // /கற்றறிந்த பிராமண்னும், நாயும், அதை உண்பவனும் முற்றுணர்ந்த ஞானியின் பார்வையில் ஒன்றே என்று கீதை சொல்லும் நிலை, ஏதோ க்வாண்டம் இயற்பியல் போன்றதான “பாரமார்த்திக” நிலை அல்ல. //

    “ஜீவான்மாக்கள் அனைவரும் ஒரே ஜாதி. ஆன்மாக்களுக்குப் பிறப்படிப்படையில் பேதம் கிடையாது” என்ற வியாக்கியானமும் உள்ளது. இதுவும் மனித நேயத்தை வலியுறுத்துவதாகக் கொள்வதுண்டு. ஆனால் இது சங்கரர் கூறும் அத்வைதம் அல்ல! சங்கரர் கூறும் ‘ஒரே ஆன்மா தான் உள்ளது, அவித்யையால் பல ஆன்மாக்கள் உள்ளதாக ஜீவன் எண்ணுகிறது’ என்னும் கோட்பாட்டிற்கும் அந்த சுலோகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    இங்கு சங்கர பகவத்பாதர் பாஷ்யங்களில் கையாண்டிருக்கும் அத்வைதத்தையே சாரங் அவர்கள் காட்டியிருக்கிறார். பாஷ்யத்தில் அவர் சொன்னதற்கும் நீங்கள் சங்கர திக்விஜயத்திலிருந்து எடுத்துக் காட்டும் “காசியில் சண்டாளனை சந்தித்தது” எனும் anecdote-க்கும் (இந்தக் கதை உண்மை நிகழ்ச்சியாக இருந்தால்) எந்த விதமான முரணும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்திருந்தால், அவரே ‘என் பாஷ்யத்தில் சொன்னதை மாற்றிக் கொள்கிறேன்’ என்று எழுதி வைத்திருப்பார் — அவருக்குப் பின் வந்தவர்களும் முன்னே எழுதியதை ஆதரிக்காமல் பின்னே அவர் சொன்னதையே ஏற்றிருப்பார். குறிப்பாக, அவருக்குப் பின் வந்த பாஷ்யகாரர்கள் பிரம்ம சூத்ரத்தில் வரும் ‘அபசூத்ராதிகாரணத்திற்கு’ வேறு விதமாக பாஷ்யம் எழுதியிருக்க வேண்டும். ஆனால், உண்மை அப்படி அல்ல (பாமதி, பிரகடார்த்த விவரணம் முதலானவற்றில் காணலாம்).

    சித்பவானந்தர் (ஒரு சீர்திருத்தவாதி) கட்டுரையில் சங்கர பாஷ்யங்களை அவர் நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தானே சாறங்கும் கூறியுள்ளார் – சங்கரர் (சித்பவானந்தரைப் போன்று) ஒரு சமூக சீர்திருத்தவாதி அல்ல என்று!

    நீங்கள் கூறும் “சர்க்கரைப் பொங்கலை விழுங்கி விட்டு புளிச்ச ஏப்பத்துடன் கொட்டகையில் உட்கார்ந்து கதைக்கும் வறட்டு” மனிதர்களைப் பற்றி இங்கு யாரும் இங்கு பேசவில்லை.

  88. கந்தர்வன், சங்கரரும் சரி, அவரது சீடர்களும் சரி, சமூக சமத்துவ / சீர்திருத்த கருத்துக்கள் எதையுமே கூறவில்லை என்று ”நிரூபிப்பதற்காக”, சாரங் அளித்த விளக்கத்தை நான் தவறாகப் புரிந்து கொண்டதாக நீங்கள் வந்து மேல் விளக்கம் அளிக்கிறீர்கள்.. இது இன்னுமே கொடுமையாக இருக்கிறது.

    சார்ங் அளித்த அந்த ”வாதம்”, பரவலாக நாம் சம்பிரதாய குருமார்களின் திருவாய் மலரல்களின் வழியாக தொடர்ந்து கேட்டு வருவது. அதனாலேயே அதை காட்டமாக விமர்சித்தேன். வாதத்தில் ஒருவரை மடக்குவதற்காக, ஒரு damaging கருத்தை கூறினால், அது சரியாகி விடும் என்று அர்த்தமல்ல.

    சங்கரர் சீடர்களின் பாஷ்யங்கள் மட்டுமல்ல, எல்லா சம்பிரதாய ஆசாரியர்கள் எல்லா பிரம்ம சூத்திர பாஷ்யங்களிலும், அந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்திற்கான வியாக்கியானம் அதே ரீதியில் தான் உள்ளது. *மாற்றுக் கருத்து* என்று எதுவும் இல்லை. ஏன், பிரம்ம சூத்திரம் என்ற *தத்து*வ நூலின் மூலவடிவத்திலேயே திடீரென்று :சூத்திரனின் வேத அதிகாரம் பற்றிய ஒரு அத்தியாயம் ஏன் வருகிறது என்றும் நாம் யோசிக்கலாம்.. வர்ண வேறுபாடுகள் இறுகிவிட்ட ஒரு காலகட்டத்தில், பிரம்ம சூத்திரம் போன்ற ஒரு சுருதிப் பொருளை விளக்கும் நூலில் கூட, ஸ்மிருதி-வகையிலான இத்தகைய சமாசாரங்கள் நுழைந்து விட்டன என்றே நான் புரிந்து கொள்கிறேன். பிறகு அதை நியாயப் படுத்துவதற்காக சத்யகாம ஜாபாலன், ரைக்வன் போன்ற உபநிஷத ஞானிகளின் வரலாறுக்கெல்லாம் வினோதமான, சிடுக்குப் பிடித்த விளக்கங்கள் அளிக்கப் படுகின்ற்ன்.. இப்போது நீங்கள் அளிக்கும் மயிர் பிளக்கும் (hair splitting) விளக்கங்கள் போல.

    ஆனால், இது எல்லாவற்றுக்கும் நடுவில், அத்வைதம் மானுட விடுதலைக்கான ஒளி விளக்காக விளங்கியபடியே தான் வருகிறது.

    சுவாமி சித்பவானந்தர் அடிப்படையில் ஒரு வேதாந்தி, அத்வைதி. மாபெரும் வேத, உபநிஷத அறிஞர். இன்றுவரை தமிழில் எழுதப் பட்ட மிகச் சிறந்த கீதை உரை அவர் இயற்றீயது.ஆனால் அவரை ஒரு “சீர்திருத்தவாதி” என்று முத்திரை குத்தி ஒரு ஓரத்தில் வைத்து பேசுகிறீர்கள். இதனால் அவரது கருத்து *ஆதாரபூர்வமானது அல்ல* என்று கொசு அடிப்பது போல் அடித்து விட்டு போய்விடலாம் அல்லவா? பலே.

    மேலும், அவர் சங்கர பாஷ்யங்களையே நிராகரிக்கவில்லை, அவற்றில் உள்ள சாதியக் கருத்துக்களை *மட்டுமே* நிராகரிக்கிறார், அதுவும் உரிய முறையில் அவற்றை அலசிய பிறகு. இது போன்ற சாதியக் கருத்துக்கள் எந்தப் பழைய பாஷ்ய நூல்களில் இருந்தாலும், இதே அடிப்படையில் அவை எல்லாவற்றையும் அவர் நிராகரிக்கிறார். இன்று கூட தமிழ் நாட்டு “ஆன்மீக”: இதழ்களில் ”காயத்ரி மந்திரத்தை ஸ்திரீகள் ஏன் சொல்லக் கூடாது” என்று வைதீக சிகாமணிகள் அரற்றிக் கொண்டிருக்கும் அவலம் தொடர்கையில், பல பத்தாண்டுகள் முன்பே காயத்ரீ மந்திரம் அனைவருக்கும் பொதுவானது என்றூ நூல் எழுதிய மாபெரும் மகான் சுவாமி சித்பவானந்தர். அவரை எனது மானசீக குருவாகவே கருதி வருகிறேன்.

    உண்மையான, தூய அத்வைதியான சங்கரரின் நூல்களில் கூட, அந்தக் காலகட்டத்தின் கசடுகளாக ஒரு சில கருத்துக்கள் உள்ளன , இன்று அவை பொருந்தாது என்று கூறிவிட்டு மேல்செல்வது தான் நாம் செய்ய வேண்டியது.. விவேகத்தையும், அறிவுத் தேடலையும் வலியுறுத்திய ஞான சீலரான சங்கரருக்கும் மற்ற ஆசாரியர்களுக்கும் நாம் செய்யக் கூடிய மரியாதையும் அதுவே.

    அதைத் தவிர்த்து, மற்ற விதவிதமான வளவளாக்களும், சமாளிப்புகளும் அர்த்தமற்றவை. அவற்றை செய்பவர்கள் உண்மையில் சமுதாய சமத்துவம் என்ற கருத்து இந்துத்துவ சிந்தனை வட்டாரங்களில் வளர்வதை உள்ளூர விரும்பாதவர்கள். அவர்களது பேச்சும் எழுத்தும் எல்லாம் அதை முடக்குவதற்காகத் தான் செலவழியுமே அல்லாது, அதனால் உருப்படியான பயன் ஏதும் விளைவதில்லை,

    இதோ இந்தக் கட்டுரையில் கூட, அது பேசும் உண்மையான பற்றி எரியும் பிரசினையை விட்டு விட்டு, கட்டுரையில் உள்ள ஒன்றிரண்டு வரிகளைப் பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டு அவதூறு, அபசாரம் ஆ ஊ என்று குதிப்பவர்களைப் பார்க்கிறேனே..

  89. வனகாளிக்கு மிருக பலி கொடுத்து, வழிபடுவது வெகு காலமாக உள்ள பழக்கம். அந்த மக்களிடம் பேசி பக்குவமாக எடுத்து சொல்லி, மிருக பலியை பல சான்றோர்கள் மாற்றிவிட்டனர். தடுக்கவில்லை, மாற்றிவிட்டனர்.இது போன்ற மாற்றங்கள் பக்குவகமாக நடை பெறுவதே நல்லது. திடீரென ஒரு பிள்ளையாரை வைத்து, குறுக்கு புத்தியில் செய்த காரியம் சரியல்ல. வனகாளிதான் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்த தாய். அனைத்து ஜீவராசிகளும் அவளுடைய குழந்தைகளே ஆகும். எனவே ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளில் ஒரு குழந்தையை , மற்ற குழந்தை கொன்று பலி கொடுப்பதை நிச்சயம் விரும்பமாட்டாள் என்ற உண்மையை எடுத்து சொல்லி பிரச்சாரம் செய்தால், காலப்போக்கில் இது நின்று விடும்.

    2 . இன்னொரு முக்கிய காரணம், மேட்டிமை குலத்து ஆணாதிக்க வெறியர்கள் , ஒரு பெண்வடிவ தெய்வத்தின் வழிபாடுகளில் எப்படி குறுக்கு புத்தியுடன் செயல்படுவார்கள் என்பதை தெள்ளென விளக்கிய திரு சுஜாதா தேசிகனுக்கு நமது பாராட்டுக்கள். அழகாக திறனாய்வு செய்த தோழர் ஜடாயு, அவர்களுக்கும் நமது நன்றியும் பாராட்டுக்களும்.

    3 .இந்து திருக்கோயில்களை ஆணாதிக்க வெறியர்களின் பிடியிலிருந்து மீட்டு, ஐம்பது சதவீதம் பெண்கள் இட ஒதுக்கீடு செய்தால் தான் இது போன்ற மேட்டிமை குலத்து குறுக்கு புத்திகள் ஒழியும்.

  90. ” உண்மையான, தூய அத்வைதியான சங்கரரின் நூல்களில் கூட, அந்தக் காலகட்டத்தின் கசடுகளாக ஒரு சில கருத்துக்கள் உள்ளன , இன்று அவை பொருந்தாது என்று கூறிவிட்டு மேல்செல்வது தான் நாம் செய்ய வேண்டியது..”-

    சபாஷ் ஜடாயு அவர்களே, சுவாமி சித்பாவனந்தரின் கருத்துக்களுடன் நான் நூறு சதவீதம் உடன்படுபவன். அவர் ஒரு ஆன்மீக தென்றல், சத்திய ஆவேசம் பெற்ற ஒளிவிளக்கு என்பதை நான் அறிவேன். அவருடைய பகவத் கீதை , மற்றும் திருவாசக விளக்க உரைகள் ஒரு மாஸ்டர் பீஸ் ஆகும். உண்மையான அத்வைதியான அவருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது.

    ” தமிழ் நாட்டு “ஆன்மீக”: இதழ்களில் ”காயத்ரி மந்திரத்தை ஸ்திரீகள் ஏன் சொல்லக் கூடாது” என்று வைதீக சிகாமணிகள் அரற்றிக் கொண்டிருக்கும் அவலம் தொடர்கையில், பல பத்தாண்டுகள் முன்பே காயத்ரீ மந்திரம் அனைவருக்கும் பொதுவானது என்றூ நூல் எழுதிய மாபெரும் மகான் சுவாமி சித்பவானந்தர். “-

    இந்த வைதீக அழுக்குகளை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். காலம் இந்த கசடுகளை உருட்டி சென்றுவிடும். பெண்கள் அனைவரும் தினசரி காயத்திரி மந்திரத்தை ஒரு அரை மணி நேரமாவது தியானித்தல், நாட்டுக்கும், மனித இனம் முழுவதற்கும் நல்லது.கோயில்வழிபாட்டில் பெண்களுக்கு ஐம்பது சதவீதம் விழுக்காடு கொடுத்தால் தான் , ஆணாதிக்க வெறியர்கள் அடிக்கும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த முடியும்.

    இந்துக்கள் சுய சிந்தனை உடையவர்கள். எனவே, எதிர்காலத்தில் நல்ல மாற்றங்கள் வரும். மூடத்தனமான பொய்களை சொல்லி,பெண்களை விலக்கி வைக்க முயலும் மடி சஞ்சிகளை நல்ல வழிக்கு திருப்புவோம்.

  91. மதிப்பிற்குரிய ஜடாயு,

    மீண்டும் சொல்ல வருவது என்ன என்று பார்க்காமல் ஒரே ஆதங்கத்துடன் மறுமொழி இட்டிருக்கிறீர்கள்.

    // சார்ங் அளித்த அந்த ”வாதம்”, பரவலாக நாம் சம்பிரதாய குருமார்களின் திருவாய் மலரல்களின் வழியாக தொடர்ந்து கேட்டு வருவது. அதனாலேயே அதை காட்டமாக விமர்சித்தேன். //

    உங்கள் குழப்பம் தெள்ளத் தெளிவாக மேலே தெரிகிறது. சந்கரரைச் சீர்திருத்தவாதி என்று ஒருவர் சொன்னார். சாரங் (என் கருத்தும் இதுவே) சொல்ல வருவது என்னவென்றால்:

    (1) ஜீவாத்மா எல்லாம் ஒரே இனம் (சங்கரருடைய அத்வைதம் ஒரே பரமாத்மாவின் பிரதிபிம்பங்கள் என்று விளக்குகிறது, மற்ற சம்பிரதாயங்கள் ஒரே பரமாத்மாவின் குழந்தைகள் என்றும் ஞானமே வடிவானவர்கள் என்றும் விளக்குகின்றன) என்பது சுருதியிலும் பகவத் கீதையிலுமே உள்ளது. இந்த சீர்திருத்த வாதக் கருத்தின் கர்த்தா சங்கரர் அல்லர். சங்கரருக்கு முன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் முன்பும் இது ஹிந்து தர்மத்தில் உண்டு என்பது தெளிவு.

    (2) சங்கரரைப் பற்றி நாம் அதிகாரப் பூர்வமாக அறிவது அவருடைய தத்துவவியல்-இறையியல் தளத்தில் செய்த மாபெரும் பணிகளே. அவர் சமூக நலன் கருத்துக்களைச் சொல்லியிருப்பது புதியதொரு புரட்சியில்ல, அவருக்கும் முன் இருந்த பாஷ்யகாரர்கள் அப்படியே ஆதரித்திருப்பது. மற்ற பாஷ்ய காரர்களுக்கும் அவருக்கும் இருந்த வேற்றுமை தத்துவ ரீதியிலான தளத்திலேயே, அதனாலேயே அவர் பாஷ்யம் செய்ய முற்பட்டார் — இதையும் அவரே கூறியுள்ளார்.

    // சுவாமி சித்பவானந்தர் அடிப்படையில் ஒரு வேதாந்தி, அத்வைதி. மாபெரும் வேத, உபநிஷத அறிஞர். இன்றுவரை தமிழில் எழுதப் பட்ட மிகச் சிறந்த கீதை உரை அவர் இயற்றீயது. ஆனால் அவரை ஒரு “சீர்திருத்தவாதி” என்று முத்திரை குத்தி ஒரு ஓரத்தில் வைத்து பேசுகிறீர்கள். //

    ஐயா, ஒருவர் “சீர்திருத்தவாதி” என்பதற்காக அவர் அறிவு/தத்துவ துறைகளில் செய்த பணி வீண் என்று அர்த்தமாகி விடாது. இடதுசாரிகள் தான் அப்படி நினைப்பர் (உதாரணம்: “ஒருவர் ஹிந்துத்வ வாதி என்றால் அவர் சொல்லில் உண்மை இருந்தாலும் கேட்கக் கூடாது”). இதைத் தெளிவு செய்கிறேன்.

  92. ஜாடாயு அவர்களே,

    முதலில் மன்னிப்பு கேட்டுவிடுவது எல்லாவிதத்திலும் நன்மை என்று தோன்றுவதால் அதை செய்கிறேன் முதலில்.

    எப்படிவேண்டுமானாலும் எடுத்துகொள்ளும்படிக்கு நான் எழுதியதால் வந்த பிரச்சனையை இது. தெளிவாக எழுத இன்னும் தெரியவில்லை எனக்கு என்பது உண்மையே.

    //
    சாரங், அத்வைதம் என்னும் உண்மையான ஆன்மிக, மானுட நேய தத்துவத்தை கேவலப் படுத்தி, அதை வீரியமிழக்கச் செய்யும் வாதம் இது. இந்தத் தளத்தை தொடர்ந்து படித்து விவாதங்களில் பங்கெடுத்து வரும் உங்களைப் போன்ற ஒருவர் கடைசியில் இந்த மாதிரி ஒரு வாதத்தை எடுத்து வைப்பது எனக்கு கடும் ஏமாற்றத்தையும் அயர்ச்சியையுமே அளிக்கிறது.
    //

    நீங்கள் கூறும் ஆன்மீக மானுட நேய அத்வைதம் என்பவது உபநிஷத்களில் காணப்படுவது. பாஷ்யங்களிலும் வார்திகங்களிலும் டீகாகளிலும் அல்ல என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். இப்படி இருக்கையில் சங்கர பகவத் பாதாளை சீர்திருத்தவாதியாக பார்க்க எனக்கு தோன்றவில்லை. மறுபடியும் இதை படியுங்கள் “பரமார்த்திக நிலையில் தான் அத்வைதம் அத்வைதம் என்று அத்வைதம் ஒத்துக் கொள்கிறது” – இது உபநிசத்துக்களின் கருத்து இல்லை. உபநிஷத்துக்களில் இப்படிப்பட்ட இரண்டு நிலை இல்லை. (தத்ர மாதா அமாதா பிதா அபிதா, வேதா அவேதா என்ற ப்ரிஹு வாக்கியம் சுஷுப்தி அவஸ்தையை மட்டுமே காட்டுகிறது.)

    இப்படிப்பட்ட விஷயத்தை வைத்துக் கொண்டு சாதியத்தை ஒழிக்க முடியாது என்பது தான் என் கருத்து. மேலும் சிவஸ்ரீ அவர்கள் சொன்னதை பாருங்கள் -“சாரங்கரே எல்லாம் ஒன்றே என்று அத்வைதம் கூறும் போது சாதிக்கு எங்கே அங்கு இடம்” – இதற்குதான் பதில் சொல்லப்பட்டது மற்றபடி பொதுவில் அல்ல. அதை விளக்குவதற்காகதான் பாஷ்யங்களில் உள்ள வர்ண கோட்பாடுகளை காட்டுவதாக சொல்லப்பட்டது, இதுவும் பொதுவில் அல்ல. மேலும் விவாதம் எங்கு தொடங்கியது என்று பாருங்கள், சங்கரர் சீர்திருத்தவாதி என்று நாம் இன்று பயன்கொள்ளும் வார்த்தையை அவர் மீது ஆரோஹித்து கூறியதால். சங்கர பகவத்பாதாள் நிச்சமாக இப்படிப்பட்ட சீர்திருத்தவாதி இல்லை. அவருக்கு நிச்சயமாக கருணை அதிகம் இருந்திருக்கத்தான் செய்திருக்கிறது. (பிரம்ம சூத்ர பாஷ்யம் முதல் சூத்ர பாஷ்யம் கடைசி நாலு வரிகள் இதை சொல்லும்).

    அவர் ஒரு மாபெரும் பாஷ்யக்காரர். வேதாந்த விசாரத்தை அவர் நோக்கில் சீர்திருத்தி இருக்கலாம் மற்றபடி சமூக சீர்திருத்தவாதி அல்ல என்பதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்களே. எல்லாரும் சீர்திருத்த வாதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அப்படி இருந்தாதால் மேன்மை என்றும் இல்லை. பிரம்ம சூத்ரம் எழுதிய பாதராயனர் சீர்த்திருத்தவாதியா? இல்லை தானே? இதே நோக்கில் எனது வார்த்தைகளை கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

    பாஷ்யங்களில் விவரிக்கப்படும் அத்வைதம் கிட்டத்தட்ட quantum physics (quantum consciousness) விவரணம் போன்றே காணப்படுகிறது. இது எனக்கு பிடித்திருப்பதும் கூட. (இது எழுதும் போதே, ஆநீயை நினைத்து எனக்கு கொஞ்சம் பயமும் வருகிறது). இது ஏன் எனில் சங்கர (உபநிஷத்) பாஷ்யம் முழுக்க முழுக்க சாங்க்யத்தை மனதில் வைத்தே எழுதப்பட்டது (விசேஷமாக சத்வித்யா பாஷ்யம்), அதை முறியடிக்கும் பொருட்டே விஸ்வருபம் எடுப்பது போல உள்ளது. இது ஒரு அசாதாரண அமானுஷ்யப் பனி. புத்தம் சாங்க்யத்தின் ஒரு புத்திசாலியில்லா பிள்ளை போலதான் இருந்திருக்கிறது.

    ராமகிருஷ்ண மடத்தை அலங்கரித்தவரே, பாஷ்யங்கள் யாவிலும் தம் சொந்த மதத்தின் அபிப்ராயத்தை (அபிமதத்தை) நிலை நிறுத்த எல்லா ஆசாரியர்களும் முனைந்தனர் என்று சொல்கிறார்.

    “சார்ங் அளித்த அந்த ”வாதம்”, பரவலாக நாம் சம்பிரதாய குருமார்களின் திருவாய் மலரல்களின் வழியாக தொடர்ந்து கேட்டு வருவது.”

    அப்படி எனில் எல்லா பக்கத்திலும் சம்பிரதாய குருமார்கள் உள்ளனரே. அந்த சம்பிரதாய குருமார்களுக்கு இந்த சம்பிரதாய குருமார்கள் சொல்லும் பதில் அப்படிதான் இருக்கும். பாஷ்யகாரகளின் அத்வைதம் வைக்கும் முக்கிய வாதமே அதுதான் “அத்யாச பிரகரணம்” என்பது தான் அத்வைதத்தின் கிரீடமாக கொண்டாடபடுகிறது. பாமதி, அத்வைத சித்தி எல்லாம் இதை சுற்றிதான் வளம் வருகின்றன இல்லையா?

    உண்மையில் இப்படிப்பட்ட கோட்பாடுகளை வைத்து சீர்திருத்தங்கள் கொண்டுவர முடியாது என்பது தான் எனது கருத்தாக சொன்னேன்.

    தமிழ் ஹிந்துவில் நீங்கள் கைகொள்ளும் அத்வைதத்தின் பொருள் வேறே. அது நிச்சயமாக சீர்திருத்தப்பாதையில் எல்லாரையும் இட்டுச் செல்லும் என்பது அனைவரும் அறிந்ததே. நீங்கள் சுத்த அத்வைதம் பழகுகிறீர்கள் என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டுமல்லவா. நீங்கள் மாற்றி மாற்றி போடும் அற்புதமான “banner” அதற்கு சாட்சி சொல்லும். உங்களுக்கு எல்லாவற்றையும் சமநோக்குடன் எதிர்கொள்ளும் பார்வை எதிலிருந்து வந்தது? சம்பிரதாய அத்வைதத்தில் இருந்து நிச்சயமாக இருக்க முடியாது. வாஸ்தவத்தில் நாம் அனைவரும் இன்று கைகொள்ளும் கோட்பாடு த்வைதமாகதான் இருக்கிறது. இதன் காரணமாகவே சீர்திருத்தங்கள் வேண்டும் என்ற முனைப்பும், சீர்திருத்தம் செய்யும் ஒரு குழு, அந்த சீர்திருத்தங்கள் யாவரின் பொருட்டு என்ற ஒரு குழு இருப்பதாக நமக்குப் படுகிறது.
    இந்த மன நிலையே நாம் என்றும் கைவிட முடியாது. எவ்வளவு பெரிய வேதாந்தியாக இருந்தாலும், மனதின் மூலமாகத்தான் நாம் பார்த்தாக வேண்டும் (இது மாபெரும் அத்வைதியான சுரேஸ்வராசார்யர் சொல்வது) .

    சமூக சீர்திருத்தங்கள் என்பது இந்த வேதாந்த பாஷ்யங்களின் கோட்பாடுகளை தாண்டியதே அல்லவா. ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒருவனுக்கு, நீ அடிபட்டு கிடப்பது மித்யா பூதம், ந ஹந்தி ந ஹன்யதே என்று சொல்லி விட்டு நாம் போவதில்லையே. த்வைத நிலையில் நின்று உதவி செய்துவிட்டு போகிறோம். (நான் த்வைதி இல்லை என்று சொல்லிவிடுகிறேன்). வேதாந்ததின் நோக்கம் சமுதாய மேன்மை என்பது நாம் எல்லோரும் அறிந்ததே, அதை அத்வைத நிலையாக கொண்டு அதை மட்டுமே வைத்துக் கொண்டு எப்படி சமுதாயத்தின் எல்லா பேதங்களையும் பிரச்சனைகளையும் தீர்க்க முயல முடியும் என்று எனக்கு புரியவில்லை. பரமார்த்திக நிலையில் தான் பேதங்கள் மறையும். அதுவரை இருக்கத்தானே செய்யும், ஜாதியை கை விட்டால், அது வேறு ரூபமாக வரும். பூமி உள்ள காலம் மட்டும் இது தொடரும் என்பது நிதர்சனம் அல்லவா. பேதங்கள் இருக்கும் என்று எண்ணித்தானே குணத்தை பொருட்டு நாலு வருணங்கள் ஸ்ருச்டிக்கப்பட்டது என்று கீதை சில்கிறது. இந்த பேதங்களை பெரிதாக எண்ணாமல், அடுத்தவனுக்கு தொல்லை தராமல் எப்படி கொண்டுசெல்ல முடியும் என்பதை தான் நம்மால் செய்யமுடியம் வாஸ்தவிகமான காரியம் இல்லையா? எல்லோரையும் மதிக்க கற்றுக் கொள்ளலாம். பேதம் இல்லா மன நிலையை அடைய கற்றுக் கொள்ளலாம், முயற்சி செய்யலாம், அதை அழிக்க முடியா என்பது எனக்கு தெரியாது. இல்லை அந்த பேதத்தை அழித்து விட முடியும் என்றால் அது எப்படி என்று எனக்கு உண்மையாகவே புரியவில்லை.

    எனக்கு புரிந்தவரை தமிழ் ஹிந்து இந்த பேதம் கொள்ளாமல் வாழும் மன நிலையை அடையும் ஒரு தளத்தில் இயங்குகிறது என்று எண்ணம். இல்லாமல் இருக்கலாம், அது வேற விஷயம். சின்மயா, சங்கம், ராமக்ருஷ்ண மடம், சித்பவானந்தர், நாராயண குரு போன்றவர்களின் அத்வைத (போன்ற) பார்வை வேறு, பாஷ்யங்களில் உள்ள சுத்த அத்வைத பார்வை வேறு அல்லவா? முன்னது புரட்சிகரமான சமத்துவ சீர்திருத்தவாதம் சார்ந்தது, பின்னது சம்பிரதாயத்தை ஒட்டி வருவது. முன்னவர் செய்யும் பணிகள் அத்வைதத்தை நிலை நிறுத்தி செய்யப்படுவன இல்லை, அது ஹிந்துத்வ நோக்கு. சித்பாவானந்தரோ, மற்றும் பலரோ வேதாந்த வழியில் நின்று தான் பனி செய்தார்கள் என்பது உண்மை தானே, சங்கர பகவத் பாதால் வழியில் நின்று இல்லை தானே? சிவஸ்ரீயின் பார்வை சம்பிரதாயத்தை ஒட்டி வருவதாக எண்ணி தான் அவருக்கு பதில் சொன்னேன்.

    எனக்கு மற்றவைகளை விட அத்வைதம் தான் கிரமமாக கொஞ்சம் தெரியும், குருவின் அதீத காருண்யத்தால். படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பது போல இல்லாமல், குருவுக்கு துரோகம் செய்யாமலே தான் என்னால் இருக்க முடியும், அதனால் அத்வைதத்தை கேவலப் படுத்தும் எண்ணம் எனக்கு வராது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

    கடைசியாக சங்கரரை எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவரை விட சுரேஸ்வரரை ரொம்பப் பிடிக்கும் (இங்கு பிடிக்கும் என்பதை முறுக்கு பிடிக்கும் என்பதை போல எடுத்துக் கொள்ளாமல் ப்ரீதி என்று கொள்ளவேண்டுமாய் பணிக்கிறேன்). வர்ணக் கோட்பாடுகளை தாண்டி ஸுரேஸ்வரர் செயல்படுகிறார். அத்வைத பூர்வ மீமாம்சகர்களுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தவர். இவர், தான் வர்ணத்தை கடந்தவன் என்றும், மீமாம்சியான நீ வர்ணத்தில் உழல்வதாக சொல்கிறார் (நைஷ்கர்ம்ய சித்தி). இது சீர்திருத்தவாத நோக்கு. இவர் பரமார்த்திக, வ்யாவஹர பேதங்கள் இல்லாமல் அத்வைதத்தை அழகாக மீமாம்சிகளுக்கு விளக்குகிறார்.

    எசகு பிசகாக நிறைய எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன், இதை கோர்வையாக எடுத்துக் கொள்வது எப்படி என்று எனக்கு புரியவில்லை. என்னை எல்லாம் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்றும் வேண்டுகிறேன்.

  93. எழுதலாமா வேண்டாமா என யோசித்தேன்.

    இங்கே உள்ள வாத பிரதிவாதங்கள் எதுவுமே படிக்க தெரியாத / படிக்க மனமற்ற பணம் படைத்த இளைஞர் கூட்டம் ஒன்று உள்ளது.

    இதில் ஒரு நண்பர் எனக்கு திரு தேவதத் பட்நாயக் , மற்றும் திரு அமிஷ் திரிபாதி புத்தகங்களை பரிசளித்தார். மேலும் ஷிவ் என்ற விஜய் தொலைகாட்சி தொடரை வேறு பரிந்துரைத்தார். அதன் மூலம் ஸ்டார் டீவீயில் மகாதேவ் என்ற பெயரில் காட்டப்படுகிறது.

    அதில் தட்சன் வைஷ்ணவராக காட்டபடுகிறார். மேனியெலாம் திருமண் அணிந்து! iஇது திரு தேவதத் பட்நாயக்கின் நூலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டதாக விக்கிபீடியா சொல்கிறது .

    புலவர் கீரன் மற்றும் வாரியார் சுவாமி சொற்பொழிவுகள் கேட்டு வளர்ந்த நான் இத்தகைய கருத்தாக்கத்தை இதற்கு முன் கேட்டதில்லை.
    ராமபிரான் என்ன உண்டார் என்பதை விட அவர் கல்யாண குணங்களையே கேள்வியுற்றிருக்கிறேன். நான் அதனால் நன்மையே அடைந்திருக்கிறேன்.

    பழைய பௌராணிகர்கள் சில விஷயங்களை சொல்லாமல் விட்டாலும் அவர்கள் நோக்கம் பக்தியை வளர்ப்பதே.

    திரு திரிபாதி [ சிவபெருமான் மனிதராக இருந்து பின் தெய்வமாக்கப்பட்டவர் என்பது போல் சொல்கிறார்] மற்றும் திரு பட்நாயக் போன்றோர் நியோ காலட்சேபர்கள் .

    இவர்கள் புராணிகர்கள் என்று இல்லாமல் மைதாலஜிச்த்ஸ் [ பழன்கதைக்காரர்கள் எனலாமா ? ] என்று வெகுஜன ஊடகங்களால் போற்றப்படுகிறார்கள்.

    இவர்கள் உண்மையில் எந்த அளவு ஆராய்ச்சி செய்தவர்கள்? திடீர் என்று இவர்கள் புகழ் பெற்று சொந்த மொழி படிக்க மனமில்லா சோம்பேறி இளைஞர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

    சீரியலோ , டீவீயில் காண்பிப்பதை அப்படியே நம்பும் ” நிஜம்” விரும்பிகளை கவர்ந்து இழுக்கிறது.

    தெரிந்தே ஹிந்துக்களிடையே சில பிளவுகளை உண்டு பண்ண சில திரித்தல்களை வெகுஜன ஊடகங்கள் மூலம் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது.

    நாம் விவாதிக்க வேண்டியது இது பற்றியும் கூடத்தான். இங்கே குறிப்பிடப்படும் கதையை விட அதிகம் பேர்களை இந்த நியோ “பௌராணிகர்கள்” சென்று அடைந்திருக்கிறார்கள்.

    சாய்

  94. Dear Editor,
    “தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம்”

    This is the disclaimer that you have given for responses. Then why does the attack on writer Late Mr. Sujatha by Mr. Malar Mannan is published? He was reigning the tamil literature for the last 2, 3 decades. He had done a lot of contribution by providing variety of novels in science fiction, comedy, crime thrillers, romance and articles on devotion, music, cinema etc., He was the legend who made so many complicated subjects easier to be understood by adopting a simple way of writing with wit. Some one who is attempting to portray this kind of a Top class writer as merely a Soft Porn writer is having a poisonous intention and purpose of seducing a legend’s name and fame who is passed away. When Mr.Sujatha is not here with us, it is always good to avoid such kind of stomach burning criticism.

    I understand this site some time back published the interview of Nathuram Kotse’s Brother and attempted to tarnish the image of Mahatma Gandhiji. But whatever is said and done, both Mahatma and Sujatha will live long in the mind’s of people by their contribution to the society. On the other hand Mr. Jatayu had unnecessarily taken a stright story for a discussion and interpretes it with the community of the Author, his guru, the community of his Guru and there by pulling the people who are silently watching this site. Now the debate has taken a turn to another topic – Advaita vs Vishistadvita.

    In Mahabharata, during the Vana parva when Arjuna wants to obtain Pasupatha, meets Lord Shiva in the form of a Kirata. (Mahabharata, Vana Parva, Section XXXIX, the translation by Kisari Mohandas Ganguly – Vaisampayana continued, “Phalguna then beheld him–Mahadeva–that god of blazing splendour-that wielder of the Pinaka-that one who had his abode on the mountains (of Kailasa)–accompanied by Uma. Bending down on his knee and bowing with his head, that conqueror of hostile cities-the son of Pritha-worshipped Hara and inclined him to grace. And Arjuna said, ‘O Kapardin, O chief of all gods, O destroyer of the eyes of Bhaga, O god of gods, O Mahadeva, O thou of blue throat, O thou of matted locks, I know thee as the Cause of all causes. O thou of three eyes, O lord of all! Thou art the refuge of all the gods! This universe hath sprung from thee. Thou art incapable of being vanquished by the three worlds of the celestials, the Asuras, and men. Thou art Siva in the form of Vishnu, and Vishnu in the form of Siva. Thou destroyedest of old the great sacrifice of Daksha. O Hari, O Rudra, I bow to thee. Thou hast an eye on thy forehead. O Sarva, O thou that rainest objects of desire, O bearer of the trident, O wielder of the Pinaka, O Surya, O thou of pure body, O Creator of all, I bow to thee. O lord of all created things, I worship thee to obtain thy grace. Thou art the lord of the Ganas, the source of universal blessing, the Cause of the causes of the universe. Thou art beyond the foremost of male beings, thou art the highest, thou art the subtlest, O Hara! O illustrious Sankara, it behoveth thee to pardon my fault. It was even to obtain a sight of thyself that I came to this great mountain, which is dear to thee and which is the excellent abode of ascetics. Thou art worshipped of all
    worlds. O lord, I worship thee to obtain thy grace. Let not this rashness of mine be regarded as a fault–this combat in which I was engaged with thee from ignorance. O Sankara, I seek thy protection. Pardon me all I have done.”

    As I said earlier if Mr. Jatayu’s sole purpose of writing in this site is to unite the tamil speaking hindus, that is an utter failure by his article about Sujatha Desigan’s story. I also have read that story which clearly point outs the wrongful upper class mentality but Mr. Jatayu had given a different colour to that story in his criticism and attempted to portray that the Author’s intention is completely wrong. Mr. Sujatha Desigan had clearly depicted the plot and just leaves the reader to think about the upper class mind set and just moves away. It is not mandatory for a writer to particularly stick on to the moral of the story. If we expect a story writer to do so, then it will become more of an article than a story.

    I request you to stop antagonising eminent people by finding loop holes to degrade them. Stop debating about the philosophies of Advaita and Vishistadvita. If you do so, the purpose of this site will get fulfilled.

  95. திரு சாரங்

    தங்கள் எழுதியிருக்கும் இந்த வரிகள் எனக்கு சரியாகவே படுகின்றன.

    “பரமார்த்திக நிலையில் தான் பேதங்கள் மறையும். அதுவரை இருக்கத்தானே செய்யும், ஜாதியை கை விட்டால், அது வேறு ரூபமாக வரும். பூமி உள்ள காலம் மட்டும் இது தொடரும் என்பது நிதர்சனம் அல்லவா. பேதங்கள் இருக்கும் என்று எண்ணித்தானே குணத்தை பொருட்டு நாலு வருணங்கள் ஸ்ருச்டிக்கப்பட்டது என்று கீதை சில்கிறது. இந்த பேதங்களை பெரிதாக எண்ணாமல், அடுத்தவனுக்கு தொல்லை தராமல் எப்படி கொண்டுசெல்ல முடியும் என்பதை தான் நம்மால் செய்யமுடியம் வாஸ்தவிகமான காரியம் இல்லையா? எல்லோரையும் மதிக்க கற்றுக் கொள்ளலாம். பேதம் இல்லா மன நிலையை அடைய கற்றுக் கொள்ளலாம், முயற்சி செய்யலா”

    ஒரு விளையாட்டு க்ளப் ஒன்றில் சில காலமாக நண்பர்களை சந்திக்கிறேன். முதலில் எல்லாரும் ஒன்றாக ஒரு பெரிய குழுவாக பழகினோம்-பின் காலப்போக்கில் சிறு சிறு குழுவாக -கலாசார ரீதியா அல்ல -குண ரீதியாக பிரிந்து பழகுகிறோம். பிரிவு மனதில் இல்லை. சிலருடன் சில விஷயங்கள் பேச முடிகிறது அவ்வளவு தான்.

    அவரவர் ஒத்து போகும் நண்பர்களுடன் அவரவர் மனம் விட்டு பேசுதல் – மற்றோருடன் பொதுவில் இணக்கம். இது உலகின் ஒரு சிறு மாதிரி வடிவம் தானே? [ அதாவது சண்டைகள், போர்கள் இல்லாத]

    சாதாரண ஹிந்துவிற்கு இந்த புரிதல் சிறு வயது முதலே இயற்கையாக வருகிறது. அடி தடிகள் அறியாமையால் நம்மை ஆள்வோர் வசதிக்காக நாம் அவ்வபோது செய்வது.

    என் எல் கே ஜி புரிதலில் ஸ்ரீ சங்கரர் அவர் வாழ்ந்த காலத்தின் சில காரணங்களால் சீர்கெட்டிருந்த ஒரு நல்ல பாதையை செப்பனிட்டார். அந்த பாதை அவர் கண்டுபிடித்ததல்ல -ஆனால் சீர்செய்தது -இன்றைக்கும் நமக்கு வழி காட்டுகிறது.
    இப்படியே பின் வந்த ஆச்சார்யர்களும். அவ்னைவரும் நம் போற்றுதலுக்கு உரியவர்களே.

    சாய்

  96. Dear Mr. Sai,

    “இங்கே உள்ள வாத பிரதிவாதங்கள் எதுவுமே படிக்க தெரியாத / படிக்க மனமற்ற பணம் படைத்த இளைஞர் கூட்டம் ஒன்று உள்ளது.”

    Who is that Devadutt patnaik? Who is Amish tripati? We dont know. Please dont affend out all the youngsters by a generalising statement. I have not even watched the advertisements of these TV serials. If you take Advaita as a philosophy deal with it completely. If you take Vishishtadvaita, please analyze it fully. Without that if you expect the youngsters to read and interpret these arguements rightly, I pity that you don’t realise the fact that how two different philosophies shared here and there just for the sake of arguement will confuse a new mind goes through its contents.

    Both might be right in their own views. But taking the references from Advaita, Vishistadvita teachings here and there will lead to further confusions for a new readers. With all due respect I am requesting these tamilhindu writers not to go back to olden days when Advita & Vishistadvita combated for superamacy.

    We have already been divided by so many things. There is no need for further damages to this Great Hindu Religion.

    “இவர்கள் உண்மையில் எந்த அளவு ஆராய்ச்சி செய்தவர்கள்? திடீர் என்று இவர்கள் புகழ் பெற்று சொந்த மொழி படிக்க மனமில்லா சோம்பேறி இளைஞர்களை கவர்ந்திருக்கிறார்கள்.”

    It is not that we can’t read our mother language or we are lazy to go through complicated stuff. Just because we dont have tamil font installed we are sharing thoughts in English. FYI – Nangallam moonam classlaye murugar vesham pottu avvaiyarukae advice pani vasanam pesi nadichavanga! Englisha vida tamizh dan ella slang layum varum. So sanskrit mixed tamil avalavu onum peria kashtam illai.

  97. இல்லாத ஒன்றை கற்பித்து, அதில் அமரர் ஆன நல் எழுத்தாளரையும் சாடி, மலர்வன்னன் போன்றோரரை அரை வேக்காட்டு வசை பாட வைத்து, இது தேவையா?

  98. சாரங்கருக்கு!

    //இக்கதை ஒரு நல்ல உண்மையை புதினமாகச் சொல்கிறது. அதையே கட்டுரையும் பிரதிபலிக்கிறது. கதை சொல்லும் உண்மையை உணர்ந்தால் இந்துமதத்துக்கு நல்லது என்று கட்டுரையாளரும் தெளிவுபடுத்துகிறார்.//

    இப்படித்தான் தொடங்கினேன். ஏழை பணக்காரன் என்று சொல்லாமல் ஏழை வர்க்கம் பணக்கார வர்க்கம் என்றேன். ஒரு நல்ல உண்மை என்றேன். இந்துத்வா என்றேன். எல்லாமே உங்களைக் குழப்பி விட்டது என்கிறீர்கள்.

    விளக்குகிறேன்.

    ஒரு நல்ல உண்மையென்பது:-

    சிறியதை பெரியது விழுங்கும் என்ற இயற்கை உண்மையாகும். இயற்கை உலகில் இது நடக்கும்போது இறைவனின் திருவிளையாடல். ஆனால் இதே உணமை மனித உலகில். அதாவது நாகரிமடைந்த மனித உலகில், நடந்தால், செயற்கையாகும். அது நிகழாமல் தடுத்து சிறியதை (நலிந்தோரை) காப்பதுவே நல்லோர் கடமை. மதத்தில் அது நடக்கும்போது அந்தக்காத்தலைச் செய்வதே இந்துத்வாமாகும். (This does not mean that we must discriminate against and give up the other section, the mighty. It is only to be conscious of the fact that mighty can save and protect themselves, and the poor cant; further, the mighty can, or indeed, is ever ready to overwhelm the poor to their advantage.)

    அசைவ உணவு உட்கொள்வோர் கோடி. காட்டுவாசிகளும், ஏழை கீழுத்தட்டு வர்க்கமும் கோடானு கோடி. இவர்களையும் இவர்கள் வழிபாட்டு முறையையும் ஏற்று மதித்து, அவற்றை மேட்டு வர்க்கம் விழுங்காமல் காப்பதுவே இந்துத்வமாகும். கதையில் தெளியவரும் நல்ல உணமை என்று சொன்னது அதே. அதைத்தான் இக்கட்டுரை பிரதிபலிக்கிறது நான் முன்னர் கூறியது. எனவே சபாஸ் போட்டதுமட்டுமன்றி, தொடர்ந்து செல்லுங்கள் அக்காத்தலைச்செய்ய என்றேன்.

    இன்னும் குழப்பமா சாரங்கர்?

  99. கந்தர்வன், சாரங் – நீங்கள் கூறிய கருத்து தத்துவார்த்த தளத்தில் என்றூம், வேதாந்த தத்துவத்தை சாதிய, அதிகார செயல்பாடுகளுக்காக பயன்படுவதை நீங்களும் எதிர்க்கிறீர்கள் என்றும் சொல்ல வந்ததாகப் புரிந்து கொள்கிறேன், மிக்க நன்றி.

    சாரங் – சங்கரர் அத்வைதம் வேறு, இன்றைய நவீன இந்து இயக்கங்களின் அத்வைதம் வேறு என்பது சரியான பார்வை அல்ல.. பிந்தையது முந்தையதன் நீட்சி என்றூ கொள்வதே சரியாக இருக்கும – ரா.கி. மடம், சின்மயா மிஷன், நாராயண குரு மடம் ஆகியவற்றின் ஸ்தாபர்களே அப்படித் தான் சொல்லியுள்ளார்கள். இந்துப் பண்பாட்டின் பொது இயக்கமே அப்படிப் பட்ட தன்மை கொண்டது தான். . ஒவ்வொரு காலகட்டத்திலும் நித்ய சத்தியமான அதே தத்துவங்களை ஞானிகள் மீள் எடுத்துரைக்கிறார்கள் – Sages restate (and re-interpret) the same perennial philosophy at every age, again and again.

  100. சாய் அவர்களே,

    Devdutt Pattanaik புராணங்களின் பேருண்மைகளை கார்ப்பரேட் உபதேசங்களாக மாற்றி முன்வைப்பதையே தன் நிபுணத்துவமாக கருதுபவர்.. Amish Tripathi, புராணங்களை கச்சாப் பொருளாகக் கொண்டு தன் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, சாகசங்களும், சூப்பர் ஹூரோக்களுக்கும் நிறைந்த pulp fiction வகையறா படைப்புகளை வழங்குபவர்..

    பெரும்பாலான வாசகர்கள் புராணங்களை அவற்றின் நேரடியான அல்லது உண்மையான வடிவங்களில் படித்து அவற்றின் குறியீட்டுத் தன்மைகளை தத்துவப் பின்னணியுடன் இணைத்து கற்கும் பயிற்சியும் அதற்கான சரியான வழிகாட்டுதலும் இல்லாதவர்கள். எனவே, இத்தகைய புத்தகங்கள் அவர்களை வசீகரிக்கின்றன..

    இன்றைய இணைய யுகத்தில் இவற்றுக்கும் ஒரு தேவை இருப்பதாகவே நான் கருதுகிறேன். இவற்றை வாசித்து அதனால் உருவாகும் ஆர்வத்தினால் மூல நூல்களைத் தேடி அதில் ஒரு சிறூபகுதியினராவது வரலாம் அல்லவா?

  101. இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில் பிள்ளயாரால் விளைந்த ஒரு நற்செய்தி

    எங்கள் வீட்டருகில் யாதவ குலத்தவர் பலர் வாழ்கின்றனர். இவர்களை மதமாற்ற கும்பல் துளைத்து எடுத்துகொண்டிருன்தது. இவர்களை விரட்ட இந்த மக்கள் கையாண்ட யுக்தி, முச்சந்தியில் ஒரு சின்ன தூண் கட்டி அதில் பிள்ளாயரை கொண்டு வந்து வைத்தனர் (பிரதிஷ்டை கூட செய்யவில்லை). தூணை சுற்றி tiles போட்டனர்.

    இங்கே டேரா போட்டு பிரயோஜனம் இல்லை கொத்தாக யாதவர்களை மதம் மாற்ற முடியாது என்று வெறுப்படைந்து, இது வேலைக்காகாது என்று மதமாற்ற கோஷ்டி ஓட்டம் பிடித்தது. பிள்ளையார் இப்படிப்பட்ட விக்னங்களையும் களைகிறார்.

    ஜடாயு அவர்களே

    இன்றைய பொது ஜன அத்வைதம் என்பது முந்தயத்தின் வளர்ச்சி, நீட்சி இல்லை. இப்பொழுது பொதுவாக த்வைதமே தென்படுகிறது. நாம் பழகும் த்வைத்ததேயே அத்வைதம் என்று பெரியோர்களால் அத்தியாசம் செய்யப்படுகிறது.

    //ஒவ்வொரு காலகட்டத்திலும் நித்ய சத்தியமான அதே தத்துவங்களை ஞானிகள் மீள் எடுத்துரைக்கிறார்கள்//

    முன்னர் இதை தார்கீகமாக நிரூபணம் செய்யவேண்டிய நிர்பந்தம் இருந்தது. இன்றுள்ள வழக்கங்கள் தர்கத்தின் முன் நிற்காது.

    உதாரணமாக ஸ்ரீ யோகானந்தரின் கீதா வியாக்யானம் படிக்க நிச்சயமாக நன்றாகவும், சில விஷயங்கள் பிரம்மிப்பூட்டும் படியும் இறக்கிறது. அனால் இது தர்கத்தின் முன் ஒரு வினாடி கூட நிற்காது. இன்று சொல்லப்படும் செய்யப்படும் கீதா விஷயங்கள் எல்லாம் உபன்யாச பூதமாக உள்ளன வியாக்யான பூதமாக இல்லை. முன்னதில் ஏதும் ஓட்டும், பின்னது ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து பரீட்சை பண்ணி எழுத வேண்டும்.

    இதை இப்பொழுது விடுவோம். எனக்கு பொதுவாக இன்று பழகத்தில் உள்ள அத்வைதத்தில் உங்கள் அளவு அதிக பரிச்சயம் கிடையாது. தெரிந்து கொள்கிறேன்.

  102. Bottom line for an ignorant dumb wit like me: The Advaita propagated/practiced by the great Mahans like Vivekanada, Naryana Guru, Swamy Sithbhavananthar is entirely different to the Adavita found in age old textbook commentaries ( Bhasyas, etc).
    Am I right?

  103. வைதீக மதத்தில், வேதத்தின்படி, மாமிச உணவு சாப்பிடவே கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. பழங்கால பிராமணர்கள் மாமிச உணவு உண்டிருக்கிறார்கள்.புராண இதிகாசங்களும் இதற்க்கு சாக்ஷி. இந்திய தர்மங்களில் ஜைனம் மட்டுமே அஹிம்சையை கடுமையாக வலியுறுத்தி சொன்னது. ஜைனம் மட்டும்தான் புலால் உண்பவர்க்கு மோக்ஷமில்லை என்றது. அதை வைதிக ஹிந்துக்களும் ஏற்றனர். ஏதற்காக என்பது வேறு கதை. [ “அஹிம்சா பரமோ தர்ம”, & “வாழு வாழவிடு” என்று சொன்னது பகவான் மகாவீரர். ]

    உணவின் அடிப்படையில் ஒருவரை முக்தி அடைய முடியும் என்றோ முடியாது என்றோ ஹிந்து மதம் பேத படுத்தி பார்த்ததில்லை. (நான் ஜைன தத்துவத்தை குறைத்து மதிப்பிடவில்லை – அதன் நோக்கில் அது சரியே ). எனவே மாமிச உணவு சாப்பிடுபவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்தினை விடுங்கள். உங்கள் செயல்களில் அடுத்தவரை சொல்லாலும், செயலாலும் “கீழ்மைபடுத்துவதை” விட்டொழியுங்கள். அப்போதுதான் ஹிந்து மதம் வளரும். இந்திய மதங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போடுவதை நிறுத்துங்கள்

  104. திரு பிரசன்னசுந்தர்

    இளைஞர்கள் எல்லாரும் என்று பொதுவாக நான் சொல்லவில்லை ஒரு சில படித்த , பள பள புத்ததகங்கள் படிக்கிற , ஆனால் தங்கள் கலாச்சாரத்தை தான் உணராத இளைஞர்கள் சிலர் தான் இப்படி செய்கிறார்கள்.

    ஆங்கிலத்திலும் ராமகிருஷ்ண மடம் நல்ல புத்தகங்கள் எல்லா வயதினருக்கும் பதிப்பிக்கிறார்கள். அதை படிக்கலாம். அடிப்படையில் நம் நெறியை ப்பற்றி நாம் கொஞ்சம் தெரிந்து கொண்டால் இது போன்று அலைகளில் அகப்படுவது தவிர்க்கலாம்.

    நான் குறிப்பிட்ட எழுத்தாளர்களை பற்றி நானும் முதலில் அவ்வளவு கேள்விப்பட்டதில்லை. இந்த புத்தகங்கள் படித்தால் தான் ஹிந்து மதம் பற்றி நன்றாக புரியும் என்ற ஒருவர் என்னிடம் கொடுத்தார். திரு பட்நாயக் ஒரு லீடர்ஷிப் ஆலோசகர் கூட .

    நான் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் இருவரும் best selling authors. நான் குறிப்பிட்ட சீரியல் நிறைய பேர் பார்க்கும் ஒன்று. முக்கியமாக வயது முதிர்ந்த தாய்மார்கள்.

    இவர்களைப்பற்றி தாங்கள் இதுவரை கேள்விப்பட்டிருகாவிட்டால் நல்லது தான். பெரிய நஷ்டம் ஒன்றும் இல்லை.

    யாரும் சீரியல் பார்க்கும் பொது என்ன இப்படி சொல்கிறார்களே இது சரியான ஒன்றா , ஆதாரம் என்ன என்ற யோசனை எல்லாம் செய்வது இல்லை. புத்தகங்களை விட சீரியல் சக்தி வாய்ந்தது.

    இங்கே நடப்பது ஒரு சிறுகதையை பற்றி விவாதம . அதில் நம் வெகு ஜன ஊடகங்கள் தற்போது என்னென்ன செய்கின்றன என்று சொல்வது பொருத்தமானதே.

    சாய்

  105. கணையாழியின் கடைப்பக்கம் என்று நினைக்கிறேன். எப்போதோ படித்தது, இணையத்தில் தேட சமயம் வேண்டியிருந்தது.அதைப்பற்றி ஒரு கட்டுரை.

    https://www.blog.beingmohandoss.com/2007/02/blog-post_20.html

    திரு சுஜாதா அவர்களின் ஆராய்ச்சியில் திருப்புகழ் பற்றி.

    அவர் சிறந்த எழுத்தாளர் தான்,. பெரியவர்கள் எங்கள் கண்களில் பட வேண்டாமென்று ஒளித்து வைக்கும் அவரது புத்தகங்களை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். அவரது நடை வசீகரித்தது அப்போது. அவரது பிராண்ட் மெல்லிய நகைச்சுவை அப்போது தமிழில் அதிசயம்,

    ஆனாலும் இது திருப்புகழ் பற்றி அவரின் தவாறான புரிதலின் விளைவே. அதை அப்படியே நம்பும் ரசிகனோ தான் அசலை தேடிப்படிப்போமே என்று பெரும்பாலும் நினைப்பதில்லை.

    அருணகிரி பெருமான் உண்மையில் காமத்தினால் பீடிக்கப்பட்ட சாமானியனுக்கு முகத்தில் அறைந்தாற்போல் சொல்கிறார். திருப்புகழ் எத்தகைய பொக்கிஷம் என்பதை வருடங்கள் கழித்து தற்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறேன். அதற்காக இங்கே எழுதும் திரு கிருஷ்ணகுமார அவர்களுக்கும் இந்த தளதிற்குமே நான் நன்றி சொல்ல வேண்டிஉள்ளது.

    மேலும் திரு ஜடாயு அவர்களின் கட்டுரைகள் மூலம் பழம் தமிழ் இலக்கியங்கள் எவ்வளவு அர்த்தமும் ஆழமும் கொண்டவை என்று சிறிது சிறிதாக உணரதொடங்கியுள்ளேன். நம் பண்பாட்டில் எத்தனை உயர்ந்த விஷயங்களை தவறான புரிதல் காரணமாக இழந்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள எனக்கு சில காலம் பிடித்தது.

    அது அசிங்கம் இது porn என்றெல்லாம் புகழ் பெற்ற வெகுஜன எழுத்தாளர்கள் தவறான புரிதலில் எழுதும்போது அதை நம்புவோர் நிறைய பேர். நானும் அப்படிதான் ஒரு காலத்தில்.

    [ அண்மையில் இந்த தளத்தில் திரு அரவிந்தன் அவர்கள் எழுத்தாளர் பா ராகவன் திருப்பாவை பற்றி எழுதிய கட்டுரைக்கு நல்ல ஒரு எதிர் வினையாற்றி இருந்தார் . ]

    திரு ஜடாயு அவர்களுக்கு

    தாங்கள் சமீபத்து ஆங்கில “மைதாலஜிச்டுகள் ” பற்றி சொல்வது ஓரளவு உண்மையே. ஆனால் மூல நூல்களைத்தேடி வருவோர் வெகு சிலரே. மனதில் ஓரத்தில் அட நம் பண்பாடு இப்படியா என்ற உறுத்தல் இருக்கும். ஆனால் தெரிந்து கொள்ள சமயம் இருக்காது.

    சொந்த அநுபவத்தில் சொல்கிறேன். மிக பலர் தவறான பபுரிதல்களுடன் தங்கள் பண்பாடு பற்றய தேவையற்ற குழப்பத்துடன் இருக்கிறார்கள்.
    best seller , என்று முன்னிறுத்தப்படும் ஒருவரை பலர் படிக்கிறார்கள். அவர் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். வெகு சிலரே அசலை தேடி ப்படிக்கிரார்கள்.

    . இணையத்தின் புண்ணியத்தில் பல கோணங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
    இத்தளத்தின் கட்டுரைகள் , மறுமொழிகள் ஒரு சாதாரண வாசகன் அறிந்திராத பல கோணங்களை காட்டுகின்றன. இத்தளம் பலரை சிந்திக்க வைக்கும் சிறந்த பணியை செய்து வருகிறது. வாழ்த்துக்கள்.

    சாய்

  106. விவாதம் வெகுதூரம் சென்று இருக்கிறது. ஹிந்து ஒற்றுமை மற்றும் பாரததேசத்தின் தேசிய ஒருமைப்பாடு ஆகிய நோக்கில் ஸ்ரீ சங்கராச்சாரியாரின் சமயப்பணி சமய சீர்திருத்தம் என்பதில் ஐயமில்லை. ஆனால் சமத்துவ நோக்கில் ஸ்ரீ சங்கரர் சீர்திருத்தவாதி அல்லர். பாரமார்த்திக நிலையில் மட்டுமே அத்வைதம் வ்யவாகாரிக நிலையில் த்வைதம் என்பது மெய்யான அத்வைத வேதாந்தம் அன்று. அங்கு ஸ்ரீ சங்கரருடைய ஹ்ருதம் விசாலமானதாக இல்லை. அத்வைத வேதாந்தந்ததினை புரிந்துகொள்ள ஸ்ரீ நாராயண குரு சுவாமி, ஸ்ரீ விவேகானந்தர், ஸ்ரீ சித்பவானந்தர், ஸ்ரீ சின்மையானந்தர் உரைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதன் வழி அத்வைதம் சமூக சமத்துவத்திற்கும் வலுவூட்டும். ஸ்ரீ சங்கர பாஸ்யத்தினை மட்டுமே கொண்டால் வேதாந்தம் எல்லோருக்கும் கிட்டாததாகிவிடும்.
    ஸ்ரீ சாய் அவர்கள் விஜை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிவம் பற்றி சில ஆட்ஷேபங்களை எழுப்பியுள்ளார். அத்தொடரினையும் அதன் மூல ஹிந்தி தொடரான தேவாதி தேவன் மஹாதேவன் லைஃப் ஓகே டிவியில் இரண்டுமாதங்களாகக் கண்டுவருகிறேன். இதில் பிறவா யாக்கைப் பெரியோனாகிய ஸ்ரீ சிவபெருமான் காலம் கடந்தவராகவே காட்டப்படுகிறார். மனிதராயிருந்து தெய்வமானவராக அல்லர். ஸ்ரீ தக்ஷ பிரஜாபதி வைணவராகக் காட்டப்படுகிறார் என்பது உண்மை. அவர் அணிந்துள்ள திருமண் ஸ்ரீ ராமானுஜரால் அறிமுகப்படுத்தப்பட்டது தக்ஷபிரஜாபதி க்காலத்தில் ஊர்த்துவ புண்ட்ரம் கூட விபூதியாலேயே தறிக்கப்பட்டது என்பது செய்தி. ஆனால் தக்ஷன் வைணவர் என்பதற்கு ஆதாரம் உண்டு. ஆனால் அவரது சிவனிந்தனையை திருமாலும் ஏற்கவில்லை என்பது உண்மை.
    புராணங்கள் இதிகாசங்களை காலத்திற்கு ஏற்றபடி புதுமையாக சொல்லுதல் தவறில்லை. ஆனால் பேதம் ஏற்படுத்த அதனை செய்யாதிருக்கவேண்டும். இதில் எச்சரிக்கை த்தேவை என்ற ஸ்ரீ சாய் அவர்களின் கருத்து ஏற்புடையதே.
    சிவஸ்ரீ

  107. சிவஸ்ரீ அவர்களே,

    ஏனோ தெரியவில்லை உங்களுக்கு இந்த திருமண் விஷயத்தை மீண்டும் மீண்டும் கிளறுவது ரொம்பப் பிடித்திருக்கிறது.

    // திருமண் ஸ்ரீ ராமானுஜரால் அறிமுகப்படுத்தப்பட்டது //

    ஸ்ரீ ராமானுஜர் திருமண்ணை ‘அறிமுகப்படுத்தியதாக’ எவரும் எழுதி வைத்ததில்லை. மாறாக, திருமண் முன்பே பழக்கத்தில் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு.

    ஆழ்வார்களின் பிரபந்தங்களில் உள்ள சான்றுகளைத் தவிர, வைத்யநாத தீட்சிதர் என்கிற ஸ்மார்த்தர் எடுத்திருக்கும் அதர்வண சுருதி உள்ளது.

    // ஊர்த்துவ புண்ட்ரம் கூட விபூதியாலேயே தறிக்கப்பட்டது என்பது செய்தி //

    திருமண் விபூதியால் அணியப்பட்டது என்பதற்கு எந்தவித சான்றும் இல்லை. திருவாய்மொழியில் (4.4.5) “தவளப் போடி” என்று தான் இருக்கிறது. இது “பஸ்மம்” என்று பொருள் படாது.

  108. நமது தளத்தில் கருத்துப்பரிமாற்றம் செய்துவரும் பல நண்பர்களின் மறுமொழிகளை நான் கடந்த மூன்று வருடமாக கண்ணுற்று வருகிறேன். மாற்று கருத்து உடையவர்களின் கருத்துக்களை, பிற மதங்களை சேர்ந்த நண்பர்கள் இடும் மறுமொழிகளையும் கூட , தயக்கமின்றி வெளியிடுவது நமது தளத்தின் சிறப்பு.

    நமது இந்து சமூகத்தை ஒருங்கிணைத்தால், எதிர்காலத்தில் உலகம் மேலும் அமைதியாக வாழ வழி பிறக்கும். வரலாற்று சான்றுகளின் அடிப்படையில் , காலத்தால் எது முந்தையது என்று வீண் விவாதம் அடிக்கடி நடக்கிறது. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளிலும், பல வரலாற்று சான்றுகள் , எதிரிநாட்டவரின் படையெடுப்பின் போது , இடிக்கப்பட்டும், கொளுத்தப்பட்டும் , அழிக்கப்பட்டுவிட்டன. இவை தவிரவும் இயற்கை இடர்பாடுகளாகிய வெள்ளம் , புயல், பூமி அதிர்ச்சி ஆகியவையும் பல சான்றுகளை அழித்துவிட்டன/ சிதைத்துவிட்டன. எனவே, வரலாறு என்பது, வெள்ளையன் தன் வசதிக்காக எழுதிவைத்த பொய்க் களஞ்சியம், அதில் சில உண்மைகளும் கலந்துள்ளனவே என்று நம்மில் சிலர் நினைக்கலாம். முழுவதும் பொய்களாக எழுதினால் , யாருமே நம்ப மாட்டார்கள் என்ற எச்சரிக்கை உணர்வே அதற்கு காரணம்.

    இந்து மதம் என்பது கடவுள் நம்பிக்கை உடையவர்களின் சங்கமம் என்று நம்மில் பலரும் கருதுகிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இந்துக்களே என்பதே உண்மை. எனவே ,இந்து மதம் என்பது , கடவுள் நம்பிக்கை, உள்ள, இல்லாத, மற்றும் கடவுள் நம்பிக்கை பற்றி எவ்வித கருத்தும் இல்லாத பலரின் சங்கமம் என்பதே உண்மை. காலத்தால் மூத்தது என்ற ஒரு காரணத்தாலேயே எதுவும் உயர்ந்தது அல்ல. காலத்தால் பிற்பட்டது என்ற ஒரு காரணத்தாலேயே எதுவும் தாழ்ந்தது அல்ல.

    நமது மதத்திலேயே காலப்போக்கில், தேவைக்கேற்ப பல மாறுதல்கள் அனைத்து துறைகளிலும் வந்துள்ளன. நமது மதத்தின் சிறப்பே, காலப்போக்கில் பல மாறுதல்களையும் தன்னகத்தே அப்சார்ப் செய்துகொள்ளும், தன்மைதான். மாறுதல்களுக்கு இடம் கொடுக்காதது எல்லாமே , காலவெள்ளத்தில் அடித்து செல்லப்படும்.

    நமது மதத்தில், நான் இன்றைய தேதியில், இரண்டு முக்கிய அம்சங்களை கவனிக்கிறேன்.

    ௧. பெண்களுக்கு இறைவழிபாட்டில் , திருக்கோயில் பூஜை முறைகளில் ஐம்பது சதவீத ஒதுக்கீட்டை , அனைத்து திருக் கோயில்களிலும் வழங்கவேண்டும். சமய சடங்குகளிலும் பெண்களுக்கு ஐம்பது சதவீதம் ஒதுக்க வேண்டும்.

    ௨. வேதக்கல்வி, ஆகம கல்வி ஆகிய இரண்டிலும் ஆண், பெண், அலி என்ற பேதமும், எவ்வித சாதி பேதமும் இன்றி , அனைத்து சாதி யினருக்கும் அளிக்கப்படவேண்டும்.

    மேலே சொன்ன இரண்டு செயல்களையும் நாம் செய்தால், நமது மதம் மேலும் வலுப்பெறும். உலகெங்கிலும் மட்டுமல்ல, நமது நாட்டில் உள்ள போலி மதச்சார்பின்மை வியாதிகளும் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *