ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 16

42. एवामात्मारणौ ध्यानमथने सततं कृते |
उदितावगतिर्ज्वाला सर्वाज्ञानेन्धनं दहेत् ||

ஏவாமாத்மரநௌ த்யானமதேனே சததம் க்ருதே |
உதிதாவகதிர்ஜ்வாலா சர்வஞானேன்தனம் தஹேத் ||

ஆன்மாவெனும் அவ்வரணியில் இவ்வித
ஆன்மத் தியான அகமதனம் – தான் முயன்று
சந்ததம் செய்தலால் சார் ஞானத் தீ மடமை
இந்தனம் எல்லாம் எரிக்குமே

(உள்முகப்பார்வை கொண்ட ஜீவான்மாவெனும் அரணிக் கட்டையில் இப்படியாக ஆன்மத் தியானம் என்ற உள்முகக் கடைதலை ஒருவன் இடைவிடா முயற்சியோடு எப்போதும் செய்துவர, அதிலிருந்து கிளம்பும் ஞானம் எனும் தீ அறியாமை என்ற விறகுக்கட்டைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் எரித்துவிடும்.)

divine_lightஆன்மா எத்தகையது என்றும் ஆன்மத் தியானம் எத்தகைய பாவனையுடன் செய்யப்பட வேண்டும் என்றும் இதற்கு முன் நாம் மேலே படித்த ஸ்லோகங்களில் விளக்கப்பட்டிருந்தன. இரண்டு அரணிக் கட்டைகளை ஒன்றின்மேல் ஒன்று வைத்து, இடைவிடாது வெகு வேகமாகக் கடைந்து அதிலிருந்து வரும் தீப்பொறிகளில் நார்களை வைத்து, யஞ்ய வேள்விகளுக்குத் தேவையான அக்னியை அந்தணர்கள் வளர்ப்பார்கள். அதைப்போல ஆன்ம சாதகனும் தன் மனமாகிய கருவியைக்கொண்டு, அதனை வெளியுலகில் உலவ விடாது உள்முகமாக்கி, இடைவிடாத முயற்சியினால் ஆன்மாவைப் பற்றிய தியானத்தைப் பழகவேண்டும்.

தொடக்கத்தில் வெளியுலக விஷயங்களை விடுவதிலும், தான் உடலையும், மனத்தையும் கடந்த ஆன்மா என்று பாவிப்பதிலும் தடைகள் பல வரக்கூடும். அவையெல்லாமே அவரவருடைய பழைய வாசனைகளினால் வரும் தடங்கல்களே. அதனால்தான் இடைவிடாது தொடரும் பயிற்சியும், எடுத்துக்கொண்டுள்ள நோக்கத்தில் வைராக்கியமும் அவசியம் ஆகின்றன. எப்படி அரணிக் கட்டைகளை மிருதுவாக உராசுவதாலும், தொடர்ந்து கடையாமல் விட்டுவிட்டுச் செய்வதாலும் தீப்பொறிகளை உண்டாக்குவதில் பயனிருக்காதோ, அதேபோல ஆன்ம சாதகனின் தொடர் முயற்சியும், மனோபலமும் இல்லாவிட்டால் அவனுக்குத் தேவையான பலன்கள் கிடைக்காது. மனத்தை அரணிக் கட்டையாகவும், இடைவிடாத ஆன்மத் தியானத்தை கடைவதற்கு உண்டான மற்றொரு கட்டையாகவும், அதனால் வரும் ஆத்மாகார மனோ விருத்தியை கடைவதால் கிளம்பும் தீப்பொறியாகவும் இங்கு உருவகப்படுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆத்மாகார மனோ விருத்தி (விருத்தி ஞானம் : perceivable knowledge) பரவி கொழுந்துவிட்டு எரியும் ஞானத் தீயை (சொரூப ஞானம் : existential knowledge) கிளப்பி, இறுதியில் ஆன்மா வேறு தான் வேறு என்ற பாவனையை அழிக்கும்.

இப்படியாக முயற்சியும், பாவனையும் சரிவர அமைந்துவர சாதகனுக்கு அதனால் வரும் ஞானம், தீயானது தன்னைச் சூழ்ந்திருக்கும் கட்டைகளை ஒன்றுவிடாமல் பொசுக்கி சாம்பலாக்கி விடுவதைப்போல, அதுவரை தன்னைப் பற்றி அவன் அறியாதிருந்தது என்று அவன் எண்ணிய நிலையை தவிடுபொடியாக்கி அவனது என்றும் உள்ள உண்மையான நிலையை அனுபவிக்க வைக்கும். ஆன்மா இருப்பதும் அல்லாது அறிவுமயமாயும், ஆனந்தமாயும் இருப்பதை அவனுள் காட்டுவதோடு அல்லாமல், அவனது வெளியுலகமும் அதே அறிவோடும், ஆனந்தமாயும் இருப்பதை உணர்த்தும். எல்லாம் ஒன்றே என்றால் இருமைகளோ, முப்புடிகளோ எப்படி அமையும்?

43. अरुणेनेव बोधेन पूर्व सन्तमसे हृते |
तत आविर्भवेदात्मा स्वयमेवांशुमानिव ||

அருணேனேவ போதேன பூர்வ சந்தமசே ஹ்ருதே |
தத் ஆவிர்பவேதாத்மா ஸ்வயமேவாம்ஷுமானிவ ||

அருணனாலே அல்லகலுதல் போல் முன்
மருவு அறிவால் அம்மடமை – இரியவே
பொங்கும் ஆன்மா பரிபூரணமாகவே
பொங்கும் ஆதித்தனைப் போல்.

(அருணன் இயக்கும் சூரிய ரதம் புறப்பட்டதும் இருள் தானே அகன்று விடுவது போல அதற்கு முன்பு இருந்த மடமையான அஞ்ஞானம் விலகி, ஒளி வீசும் சூரியனைப்போல பரிபூரணமான ஆன்மா தானாகவே பொங்கி ஒளிரும்.)

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல அருணோதயம் என்பது விடியற்காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பாக வரும் வெளிச்சத்தைக் குறிப்பிடுவது. அதை அருணன் சூரியனின் ரதத்தை ஓட்டிக்கொண்டு வருவதாகக் கற்பனையில் கண்டிருக்கின்றனர். சூரியன் வருவதற்கு முன்பாகவே அவனது வரவைக் கட்டியம் கூறுவதுபோல வரும் வெளிச்சத்தினால் இரவு முழுதும் கவிந்திருந்த இருள் சிறிது சிறிதாக அகன்றுகொண்டு இருக்கும். இந்த இயற்கைச் சூழலை உவமையாக எடுத்துக்கொண்டு, சாதகனின் தீவிர சாதனையால் அடையப்பெறும் விருத்தி ஞானத்தால் ஆன்மாவைப் பற்றிய அறியாமை அகலும் நிலையோடு சங்கரர் ஒப்பிடுகிறார். முதலில் கிளம்பும் தீப்பொறி அதனைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் சுட்டு எரிக்க முடியாது. அது சுற்றி இருப்பதைப் பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரியும்போதுதான் அதற்கு வலிமை கூடும். அதேபோல இங்கும் விருத்தி ஞானம் கிளம்பியதும் அது சொரூப ஞானமாகி அனுபவத்தில் கொண்டு செல்லுமுன் உள்ள நிலை பற்றி கூறப்பட்டிருக்கிறது.

முன்பே நாம் பார்த்த மாதிரி அறியாமை என்ற ஒரு நிலைக்கு இருப்பு என்பது தனியே கிடையாது. ஆன்மாவைப் பற்றிய அறிவு இல்லாமையே அறியாமை. அப்படி ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் நமது வாசனைகளாகிய திரைகள் ஒவ்வொன்றாக அகலும் நிலைதான் இங்கு குறிப்பிடப்படும் அருணோதய நிகழ்ச்சிகள். வாசனைகள் முற்றும் அகலவே, திடீரென்று கண்ணைக் கூசும் அளவு ஒளி மிகுந்த சூரியன் உதிப்பதுபோல ஆன்மா தானே ஒளிர்ந்து, அதுவரை இடைவிடாத தியானத்தால் சாதகன் முயன்று அடைந்த விருத்தி ஞானத்தையும் அழித்து அவன் தானே தானாக இருக்கும் சொரூப ஞானத்தை அளிக்கும்.

அந்த நிலை ஓர் அறிவுபூர்வமான நிலையாக இல்லாது ஓர் அனுபவ நிலையாதலால், அதை அனுபவிப்பவனுக்கு தான் வேறு, தான் காணும் காட்சி வேறு என்று இல்லாத பரிபூரண ஞானம் கிட்டுகிறது. ராம ராஜ்ஜியத்தில் எவரும் உண்மையைத் தவிர வேறு எதுவும் பேசியதில்லை என்பதால் அங்கிருந்தோருக்கு உண்மை என்றால் என்ன என்றும் தெரியாது என்பதைப் போல, அனைத்தையும் உள்ளடக்கும் ஆன்மாவிலேயே லயித்துள்ளவனுக்கு எல்லாமே ஆன்மாதான். அதனால் அனுபவிப்பவன் என்றும் தனியாக ஒருவன் அங்கு கிடையாது. எல்லாம் ஒன்றே, அதுவே அறிவு, அதுவே அன்பு, அதுவே ஆனந்தம் என்பதால், அது மட்டுமே இருக்கிறது என்பதுதான் உண்மை. அதுவே இப்போதும் எவரும் உள்ள நிலை என்பதும் உண்மை. அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதைத்தான் ஆன்றோர்கள் “இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே” என்றார்கள். ஆம், ஆன்மீகம் புரிந்தவர்களுக்கு அனைவரும் எப்போதுமே ஞானத் தங்கம் தான்.

44. आत्मा तु सततं प्राप्तोsप्यप्राप्तवदविध्यया |
तन्नाशे प्राप्तवद्भाति स्वकण्ठाभरणं यथा ||

ஆத்மா து சததம் ப்ராப் தோப்யப்ராப்தவதவித்யயா |
தன்னாஷே ப்ராப்தவத்பாதி ஸ்வகண்டாபரணம் யதா ||

ஆன்மா எப்போதும் அடைந்துளதே ஆனாலும்
தான் மடமையால் அடையாதாய் அமரும் – மால் மடிய
எய்தப் பெற்றார் போல் இலகும் தன் கண்ட அணி
எய்தப் பெற்றார் போலவே

(ஆன்மாவானது எப்போதும் நம்மால் அடையப்பட்டதே ஆனாலும், நமது அஞ்ஞானத்தினால் நாம் அதை அடையவில்லை என்று தோன்றும். தன் கழுத்திலே இருக்கும் நகையொன்று தொலைந்து போய்விட்டதே என்று எண்ணித் தேடுபவன் அது தன் கழுத்திலேயே இருப்பதைக் கண்டது போல, அஞ்ஞானம் அழிந்தவனுக்கு ஆன்மா புதிதாக அடையப்பட்டது போலப் பிரகாசிக்கிறது.)

எண்ணங்களே மனம் என்பார் ரமணர். மனம் என்று ஒன்று வந்துவிட்டால் அது நம்மைப் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இருப்பதை இல்லாததாகக் காட்டும்; இல்லாததை இருப்பதாகவும் காட்டும். நமக்கு வேண்டியது என்றால், அது நல்லதல்ல என்று எல்லோரும் சொன்னாலும், அதை எப்பாடுபட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பெற்றதை வைத்துக்கொண்டு ஆளுமை செலுத்தவும் தோன்றும். நமக்கு வேண்டாதது என்றால், அது கிடைப்பது நல்லது என்றாலும், அதுவே நம் வீட்டு வாயிற்கதவைத் தட்டிக்கொண்டு தானே உள்ளே புக நினைத்தாலும், நம் முகத்தை வேறு பக்கம் திருப்பி அது இல்லாதது போல நடிக்கும். இன்று ஒன்றைத் தேடி அலையும் மனது, நாளை காரணம் ஏதும் அறியாமலேயே அதை வெறுத்து ஒதுக்கும். இவை யாவும் மனத்தின் குணங்கள்.

ramana1112தன்னிடம் என்ன இருக்கிறது என்பதைக்கூட அறிய முடியாதபடி தடுப்பதும் அந்த மாதிரியான மனத்தின் திருவிளையாடல்களில் ஒன்றுதான். தன்னிடம் ஆயிரமாயிரம் செல்வம் இருக்கலாம். ஆனால் தான் ஓர் ஏழை என்று மனது நினைத்தால் அவன் ஏழைதான். இருக்கும் செல்வமெல்லாம் அவன் கண்ணுக்குத் தெரியாது. அதேபோல விலை மதிக்க முடியாத பொக்கிஷம் ஒன்று தன்னிடம் இருக்கிறது என்பதையும் அறிய முடியாது தடுப்பதும் அந்த மனம்தான். அதனால் ஒருவன் தான் போட்டுக்கொண்டிருக்கும் நகை காணாது போய் விட்டதே என்று நினைத்தால், அது அவன் மேல் இருந்தும் அது காணாமல் போன நகைதான். அப்போது அவன் எங்கெங்கு சாதாரணமாக நினைத்துக்கூடப் பார்க்கமாட்டோனோ, அங்கு கூட புகுந்து அவன் தவறவிட்டு விட்டதாக நினைத்த நகையைத் தேடி அலைவான். அப்போது அவனுக்கு எல்லாமே போய்விட்டதாகவும் தோன்றும். ஆனால் அவன் காதிலோ, கழுத்திலோ அந்த நகையைப் பார்த்த வேறொருவன், அவன் தேடுவதை விசாரித்து, அவன் தேடும் நகை அவனிடமே இருக்கிறது என்றும் சொல்லி, அவனது கையைக் கொண்டோ அல்லது ஒரு கண்ணாடி கொண்டோ அவன் தேடுவதைக் காட்டுவான் என்றால், அப்போது அவன் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடும்.

நகையோ தொலையவில்லை ஆனால் அது தொலைந்து விட்டதே என்று விசனப்படுவதும், தொலைந்து போனதாக நினைத்த நகை மீண்டும் கிடைத்து விட்டதாக மகிழ்வதுமான இந்த உவமையை எடுத்துக்கொண்டு, ஆன்மாவைத் தேடி அலையும் சாதகனின் மனநிலையை சங்கரர் இங்கு விவரிக்கிறார். நகை தொலைந்ததும், திரும்பக் கிடைத்ததுமான இரண்டு நிகழ்வுகளும் உண்மையல்ல. ஆனாலும் அவை நடந்தது போல நினைப்பது மனத்தின் லீலைகள். இல்லையென்றால் முதலில் துக்கமும், பின்பு களிப்பதும் நடக்குமா? ஆக இறுதியில் தொலைந்தது மனத்தின் காட்சிகளே. சாதகனின் பயிற்சிகளும், முயற்சிகளும் அதே போல இல்லாத நினைப்புகளை அகற்றுவதற்கே என்று இங்கு காட்டுகிறார்.

ஒருவன் பலவிதமாகத் தோன்றும் உலகக் காட்சிகளைப் பார்த்து அவைகளில் உள்ள வேற்றுமைகளை எண்ணி, எல்லாவற்றிற்கும் மூல காரணமாக இருக்கும் ஆன்மா ஒன்றினைத் தேடி அலைகிறான். எப்போது எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒன்று என்று ஆத்மாவைப் பற்றி நினைத்து அந்த ஆன்ம பாவனையில் மூழ்கிறானோ, அப்படி நினைப்பவனும் மூழ்குபவனும் அந்த ஆன்மா இல்லாது வேறு எதுவாக இருக்க முடியும் என்று முதலில் அவனுக்குத் தோன்றுவதில்லை. அதனால் அவன் வந்த வழியே திரும்பிச் செல்லுமாறு அவனுக்கு வழி காட்டப்படுகிறது. அதனாலேயே எல்லாவற்றிலும் காணும் வேற்றுமைகளைக் களைவதே அவன் செய்ய வேண்டிய முதல் வேலை என்று அறிவுறுத்தப்படுகிறது. அதை அவன் செய்யவில்லை என்றால் மறுபடியும் அவன் வேற்றுமைகளையே பார்த்துக் கொண்டிருப்பான் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின்பே, அவனையும் அடக்கும் ஒரே பொருளான ஆன்மாவைத் தியானிக்கச் சொல்லி அவனுக்கு வழி காட்டப்படுகிறது. இப்படியாக அவனது மனத்தின் வாசனைகள் ஒவ்வொன்றாகப் போவதற்கு உதவப்படுகிறது. அப்படி வாசனைகள் அகல அகல அவனுக்குத் தான் தானாக இருக்கும் உண்மையான நிலை காட்டப்படுகிறது. உள்ள நிலை எவருக்கும் பொதுவானதே என்றுணர்ந்த அவன் தான் முன்பும் அப்படியே இருந்ததையும் அறிகிறான் என்று அப்படி வாழ்ந்து அறிந்த ஆன்றோர்கள் நமக்கு அருள்கின்றனர்.

நகை தொலையவில்லை, அது இருந்த இடத்திலேயே இருக்கிறது என்பதை அறிந்தவன் போல, சாதகனும் தான் ஆன்மாவன்றி வேறு எதுவாகவும் இருப்பதில்லை என்று உணர்கிறான். அவன் ஆன்மாகவாகவே இருந்துகொண்டு ஆன்மாவைத் தேடி முயன்று ஆன்மாவை அடைந்துவிட்டதாக எண்ணுகிறான். உண்மையில் ஆன்மா அப்படியேதான் இருக்கிறது. மாற்றங்கள் எல்லாம் “தான் ஆன்மா இல்லை” என்று அஞ்ஞானத்தினால் எண்ணிய இவனுக்குத்தான். அஞ்ஞானம் அகல ஞானம் புதிதாக வந்திருக்கிறது என்று சொல்வதை விட, தான் எப்போதும் அப்படியே இருக்கிறோம் என்றுணர்ந்ததால், தானாக வரவழைத்த அஞ்ஞானம் தொலைந்தது என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கிறது?

45. स्थाणौ पुरुषवद्भ्रान्त्या कृता ब्रह्मणि जीवता |
जीवस्य तात्विके रूपे तस्मिन्दृष्टे निर्वतते ||

ஸ்தாநௌ புருஷவத்பரான்த்யா க்ருதா ஜீவதா |
ஜீவஸ்ய தாத்விகே ரூபே தச்மின்த்ருஷ்டே நிர்வததே ||

பிரமத்தில் சீவன் பிராந்தியால் கட்டை
புருடன்போல் கற்பிதன் பொய்யாம் – உருவத்தின்
தத்துவம் யாது என்று உணரின் அவ்வுருவம்
வத்து ஆகாது மதி

(இருட்டில் இருக்கும் மரக்கட்டை ஒன்று மனிதனாகத் தோன்றுவது போல, மனப்பிராந்தியால் பிரம்மத்தில் ஜீவன் கற்பிக்கப்படுகிறான். கற்பனையில் உருவான இந்தப் பொய்யாகிய உருவத்தின் உண்மை எதுவெனத் தான் உணரும்போது அந்தக் கற்பனையுருவம் பொருளற்றது என்று அறிவாய்.)

அந்தி சாய்ந்ததும் இருள் பரவத் தொடங்கும்போது, நிலவு மற்றும் விளக்குகள் தரும் ஒளி தவிர, பொதுவாக எங்குமே இருள் கவிந்திருக்கும். அத்தகைய சூழலில் ஒரு மரக்கட்டையைப் பார்த்துவிட்டு ஏதோ ஓர் ஆள் நிற்பதுபோலத் தோன்றினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நம் மன நிலைக்குத் தகுந்தவாறு அந்த ஆள் திருடனோ வேறு யாரோ? ஒரு மனிதன் நிற்கும்போது எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரிந்த உருவகத்தை நாம் அந்த மரக்கட்டை மேல் ஏற்றிப் பார்க்கும் நம் பார்வைதான் அதுவே தவிர, உண்மையில் அங்கு ஒருவன் இல்லை; இருப்பது மரக்கட்டைதான். இந்த உவமையை எடுத்துக்கொண்டு சங்கரர் இருக்கும் பிரம்மத்தின் மேல் இல்லாத ஜீவனை ஏற்றிப் பார்ப்பதை விளக்குகிறார். இருளில் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு போனால் அது யார் அல்லது என்ன என்று தெரிந்துவிடும். இருள்தான் நமது அறியாமை. அங்கு ஆன்ம அறிவு என்னும் விளக்கை ஏற்றினால் நாம் காண்பதன் உண்மை என்ன என்று தெரிந்துவிடும்.

GuruSishyaஎவரும் தாம் இருப்பதை அறிந்துள்ளனர். அதேபோல தன் விழிப்பு நிலையில் தம் புலன்கள் மூலம் உலகம் இருப்பதையும் அறிகின்றனர். இரண்டும் தனக்கு உண்மையாகத் தோன்றுவதால், மனிதர்களில் பலரும் அதற்கு மேல் தனது அனுபவங்களைப் பற்றி மேலும் சிந்திப்பதில்லை. வெகு சிலரே தாம் காண்பது, அனுபவிப்பது என்பது எல்லாம் தனது கனவு மற்றும் உறக்க நிலைகளில் அதேபோல ஏன் தோன்றுவதில்லை என்பதைப் பற்றி யோசிக்கின்றனர். மற்றவரெல்லாம் காணப்படுவதுதான் உண்மை என்றும், தானும் உலகமும் இருப்பதால் அவைகள்தான் அந்த உண்மையின் அங்கங்கள் என்று நிச்சயித்து விடுகின்றனர். அதற்கும் மேல் சிந்திக்கும் சிலருக்குத்தான் சீவராசிகளின் படைப்பில் காணப்படும் வேற்றுமைகள் உண்மையல்ல; அந்த வேற்றுமைகளைக் கடந்து அனைத்து சீவராசிகளுக்கும் அடிப்படையான மூல காரணம் ஒன்று உண்டு என்று தெளிகின்றனர்.

தங்கள் வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் அந்த மூலத்தை வெவ்வேறு வடிவில் குறிப்பிடுகின்றனர். அனைத்தையும் கடந்தும் அதே சமயம் அனைத்தின் உள்ளும் இருப்பதால் அதைக் கடவுள் என்று சொல்லி சிலர் அதை வணங்குகின்றனர். அனைவரிடமும் இருப்பது ஒன்றே, அதுவே பலப்பலவாகக் காணப்படுகிறது என்று சிலர் அந்த இருப்பை ஆன்மா என்று சொல்கின்றனர். ஒன்றாய் இருப்பது பரமாத்மா என்றும், தனித்தனியாய் காணப்படுவது ஜீவாத்மா என்றும் கூறி, தனி என்று சொன்னாலும் அந்தப் பரம்பொருள் இருப்பதால்தான் ஜீவன் இருக்கிறது என்று விளக்குகின்றனர்.

இந்த விளக்கங்களைச் சரியாக அறிந்திடாதவர்கள், காணப்படும் ஜீவன்தான் இருக்கும் ஒன்றே என்று கட்டையில் காணப்படும் மனிதனைப்போல ஜீவனை பரத்தின் மேல் ஏற்றிக் காண்கின்றனர். இப்படி அவர்கள் தவறாக அறிந்துள்ளதைப் புரியும் காலம் அவர்களுக்கு வரும்போது, தான் கண்டது கற்பனையே என்றும், உண்மையில் உள்ளது பரம்பொருளான ஆத்மா ஒன்றே என்றும் அறிகின்றனர்.

(தொடரும்)

2 Replies to “ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 16”

  1. இன்றைக்கு இந்தத் தொழிலில் முன்னணியாக இருக்கும் குருநாதர்களுக்கு முகத்தில் எவ்வளவு முடி இருக்கிறதோ, அதற்கு மயிரளவும் குறையாமல் எனக்கும் முகம் நிறைய முடி இருக்கிறது. எனவே இந்தத் தகுதியைப் பொறுத்தவரை நான் தேர்வில் நான் பாஸ் ஆகி விட்டேன். ஆனால் குருநாதர் ஆவதும், குருநாதராகத் தொடர்ந்து நீடிப்பதும் வெறும் முடிவறம் அல்லவே.! (முடிவறம் என்ற சொல்லின் பொருள் என்ன என்று திகைககிறீர்களோ! குருநாதர்களைக் கூர்ந்து கவனித்து வந்த ஆதி நாட்களில் நான் கற்றுக்கொண்ட தந்திரங்களில் இதுவும் ஒன்று. அன்றாட வாழ்வின் உப்புச் சப்பில்லாத விசயங்களைப் பற்றிப் பேசும்போது, புரியாத மொழியில் புதிரான சொற்களைப் பயன்படுத்த வேண்டும். அதனால்தான் வெறும் முடி சமாச்சாரம் என்று சொல்லியிருக்க வேண்டிய அற்ப விசயத்தை முடிவறம் என்று குறிப்பிடுகிறேன்.)

    இந்தத் தொழிலில் இறங்குவது குறித்து நான் தீவிரமாக யோசித்து வந்தேன் என்ற காரணத்தினால், சந்தையில் விற்பனையாகும் குருநாதர்களைப் பல ரகங்களாக வகைப்படுத்தியிருக்கிறேன். முதலாவதாக இத்தகைய குருநாதர்களை பேசுபவர்கள், பேசாதவர்கள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். முடி விசயத்தைப் பொருத்தவரை அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வளர்கிறதா, நல்லது. வளர மறுக்கிறதா, பரவாயில்லை. மழுங்கச் சிரைத்து விடலாம். முகத்தை மட்டுமல்ல, தலையையும். உங்கள் தலையை நீங்கள் மொட்டையடித்துக் கொள்கிறீர்கள், அடுத்தவன் தலையை மொட்டையடிக்கவில்லையே!

    பேசும் குருநாதர்களைக் காப்பி அடிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியம். இந்த ரகத்தைச் சேர்ந்த குருநாதர்கள் ‘சுட்டு’ பேசுவதற்கு உதவியாக ரஜனீஷின் சரக்குகள் போதுமான அளவு இருக்கின்றன என்ற போதிலும், அதிகம் பிரபலமாகாத ஏதாவது சில மத இலக்கியங்களின் பெயர்களையாவது இத்தகைய குருநாதர்கள் தொடர்ச்சியாகப் படித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தங்களது ஞானோபதேசத்தைத் தடையின்றித் தொடர்ந்து வழங்க இது அவசியம். இது கொஞ்சம் சிக்கலான ஆட்டம்தான். இதில் கொடி நாட்ட வேண்டுமானால் முடி மட்டும் போதாது. மொழி ஆளுமையும் பேச்சுத் திறனும் வேண்டும்.

    guru-p1பேசாக் குருநாதர் ஆவதற்கும் சில சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *