இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பல கோயில்களில் புனரமைப்பு, சீரமைப்பு, கும்பாபிஷேகம் செய்கிறோம், வசதி செய்து தருகிறோம் என பல்வேறு காரணங்களைச் சொல்லி கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு வருகின்றன. பல கோயில்கள் மொத்தமாக இடிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற கோயில்கள் முதல் கிராம கோவில்கள், குலதெய்வ கோயில்கள், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளவை, தனியார் கோயில்கள் என அனைத்துக் கோயில்களும் இந்த சதிக்கு பலியாகி வருகின்றன.

temple-mandapam-thiruvaiyaru

 இங்கே நடக்கும் தவறு என்ன..?

கோயிலின் பழமையும் பாரம்பரியமும் ஒரு அளப்பரிய சொத்து. அதன் புராதனம் கட்டடக்கலை, கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் போன்றவை விலைமதிப்பற்றவை. கோயிலின் ஆன்ம சக்தி மற்றும் அதன் அதிர்வலைகள் அங்குள்ள கோயில் அமைப்பு, ஸ்தானம் முதலிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயங்குகிறது. கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள், சாசனங்கள் போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றை அழிப்பதன் மூலம் கோயிலின் புராதனமும், வரலாற்று ஆதாரங்களும், கோயிலின் ஆன்ம சக்தியும் அழிக்கப்படுகின்றன.

 யார் செய்கிறார்கள்?

இந்த மாஃபியா பல மட்டங்களில் இருக்கிறது. வெளிநாட்டு மதவாதிகள்- தொண்டு நிறுவனங்கள், சிலைக் கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு அவற்றுக்கு ஏஜென்ட்களாகச் செயல்படும் சில பெரிய மனிதர்கள், சிறிய குறைகளைப் பெரிதுபடுத்தி இடிக்கச்சொல்லும் சில சாமியார்கள், கேரள மந்திரவாதிகள், அறிந்தோ அறியாமலோ அவர்களுக்குத் துணை போகும் ஸ்தபதிகள், இவர்கள் அறிவுரையில் இயங்கும் சில அறங்காவலர்கள் போன்றோர் ஆவர்.

 ஏன் செய்கிறார்கள்?

  • இந்திய பாரம்பரியத்தையும் தொன்மையையும் கண்டு பொறாமை.
  • மதம் பரப்பும் நோக்கத்திற்கு இந்தியாவின் பாரம்பரிய தர்மம் சார்ந்த  வாழ்க்கை நெறி இடையூறாக உள்ளது. அதற்கு அடித்தளமாக உள்ள கோவில்கள், சமயநெறிகள், பண்பாட்டு வழக்கங்கள் போன்ற  ஆணிவேர்களை அறுக்க நினைக்கும் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதி – கோயில்கள் அழிப்பு
  • கலாசார உலகமயமாக்கலுக்கு (அமெரிக்க மயமாக்கலுக்கு) பாரம்பரியம் ஒரு தடையாக உள்ளது. அதை அழிக்க வெளிநாட்டுப் பெருமுதலாளிகளும்- தொண்டு அமைப்புக்களும்- மதவாத சக்திகளும், எழுத்தாளர்களுக்கு பணம் கொடுத்து மக்கள் சிந்தனையில் விஷம் கலந்து கொண்டிருப்பது போல, பாரம்பரிய மரபுகளை திரிக்க நடத்திகொண்டிருக்கும் நாடகத்தின் ஒரு பகுதி. கலாசார மாற்றத்தால் இந்திய சமூகத்தை பெரு நுகர்வு சமூகமாக மாற்றி தங்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பன்மடங்கு பெருக்கும் திட்டம்.
  • இந்தியாவின் வரலாற்றைத் திரிக்க நினைக்கும் வெளிநாட்டு- உள்நாட்டு சக்திகளுக்கு இடையூறாக, உண்மை வரலாற்றுக்குச் சான்றாக இருக்கும் கோவில் கல்வெட்டுக்களும் சாசனங்களும் உள்ளன. எனவே அவற்றை அழிப்பது அவசியமாகிறது.
  • இந்திய சிற்ப வேலைகளுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி. கடத்திச் செல்வோரின் நோக்கமும் அதுவே.
  • ஸ்தபதிகளுக்கு, இருப்பதை சீரமைப்பதை விட இடித்துக் கட்டினால் வருமானம் அதிகம். அதன் பொருட்டு அவர்களும் துணை போகிறார்கள்.
  • சில அறங்காவலர்கள்- பெரிய மனிதர்கள், விளம்பர மோகத்தால் தங்கள் பெயர் கோயில் கல்வெட்டில் இடம்பெற பழமையான கோயிலை இடித்து புதிதாகக் கட்ட நன்கொடை அளித்துத் தூண்டுகிறார்கள்.  கோயில்களை தங்கள் கௌரவம் வளர்க்கும் இடங்களாக எண்ணியதன் விளைவு.
  • பல இடங்களில் ஸ்தபதிகளும் அறங்காவலர்களும் இந்த கோயில் சிதைப்புக் கும்பலின் பணத்திற்கு- சதிக்கு மயங்கி துணை போவதும் உண்டு.

 எப்படிச் செய்கிறார்கள்?

  • முதலில் கோயிலில் அது பின்னம்,  இது குறை என்று மாற்றங்களைச் சொல்லும் இந்த மாஃபியா குழு, கோயில் குழுவினரை ‘தெய்வ குற்றம்’ என்பது போல பயமுறுத்தி விடுவர். அதை சீர்படுத்தும் முறைகளைச் சொல்லும்போது, கோவிலுக்கு ஒவ்வாத மாற்றங்களைச் சொல்லி, புராதனச் சின்னங்களை அப்புறப்படுத்துவர். கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்.

sandblasting-3

  • சில இடங்களில் கும்பாபிஷேகம் செய்கிறேன் என்று பழமையான கோயிலையே இடித்துத் தள்ளிவிட்டு ஆடம்பரமாக கோயில்கள் என்னும் பெயரில் கட்டடங்கள் கட்டுகிறார்கள்.
  • சுத்தப்படுத்துகிறேன் என்னும் பெயரில், கோயிலின் சுவர்களிலும்,  தூண்களிலும் சேண்ட் பிளாஸ்டிங் எனப்படும்  (Sand Blasting) எனப்படும் முறையால் மணல் துகள்களை மிகை அழுத்த காற்றின் மூலம் வேகமாக அடிக்கச்செய்வர். அதனால் கல் சுவரும், கல்வெட்டுக்களும் சிற்பங்களும் கொத்தி விடப்பட்டது போல விகாரமாகிவிடும்; காலப்போக்கில் வலுவிழந்து சிதைந்து விடும்.
  • வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்.
  • கருவறைக்குள் டைல்ஸ் ஓட்டுவது, கருவறைக்குள் ஃபோகஸ் லைட் போட்டு மூலவர் மேல் ஒளிவெள்ளம் பாய்ச்சுவது,  கற்சுவர்களுக்கு மேல் கிரானைட் ஓட்டுவது, கோயில் விக்கிரகங்களின் இடங்களை மாற்றி வைப்பது (ஸ்தான பேதம்) என கணக்கில் அடங்காத தவறுகளால் கோயிலின் ஆன்ம சக்தி சிதைக்கப்படும்.

இப்படி என்னென்ன வழி இருக்கிறதோ அத்தனை வழிகளாலும் ஆலயங்களின் சாநித்யம் சிதைக்கப்படுகிறது.

சில உதாரணங்கள்:

  • தஞ்சை பெரிய கோயில்–  கல்வெட்டுக்களும், புராதனச் சிற்பங்களும் சீரமைப்பு என்ற பெயரில் நாசம் செய்யப்பட்டன (2008).

(https://janajaati.blogspot.in/2008/08/imminent-danger-to-thanjavur-big-temple.html)

  • திருவொற்றியூர் கோயில் – சிலைகள் உடைக்கப்பட்டு, அகற்றப்பட்டு,  கல்வெட்டுக்கள் சிதைக்கப்பட்டு அராஜகம் அரங்கேறியது  (2013).

(https://www.dinamalar.com/news_detail.asp?id=789444)

  • காளமங்கலம் குலவிளக்கம்மன் கோயில் – கோயிலை விளம்பரத் தளமாக  மாற்றினார்கள். ஆகம விதிமீறல்கள் தலைவிரித்தாடின. கோயில் கதவில் ஈ.வெ.ரா. சிற்பங்கள், கோவிலுக்குள் அறங்காவலர் புகழ்பாடும் கல்வெட்டுக்கள் என அநியாயங்களின் உச்சம் அரங்கேறியது.

(https://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2847)

  • சேவூர் வாலீஸ்வரர் கோவில் –  கல்வெட்டுக்கள் சேண்ட் பிளாஸ்டிங் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோயில் அமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.

(https://sevurwar3.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D)

  • சுமார் முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து புராதனச் சிலைகளை கடத்தி விற்று வந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் வழக்கு என்னவாயிற்று?  கடத்தப்பட்ட சிலைகளின் நிலை பற்றிய வலுவான விசாரணைகள் இன்றி வழக்கு அமைதியாக இருக்கிறது. முறையாக தோண்டப்பட்டால் பல முக்கிய புள்ளிகளும் பல்லாயிரம் கோடி புராதன சொத்துக்களும் மீட்கப்படும்

https://www.aazham.in/?p=1718

https://chasingaphrodite.com/tag/art-of-the-past/

  • சிலைக் கடத்தல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் தங்கைக்கு உள்ள தொடர்பை பற்றி திரு. சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே மேடைகளில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=zOgpYsUf6Ac

இவை சில உதாரணங்கள் மட்டுமே. விலைமதிப்பற்ற பல்வேறு ஆபரணங்கள் உலோகச் சிலைகள் கடத்தப்படுகின்றன. சமீபத்தில் மதுரைக் கோயிலுக்கு சொந்தமான ரூ. 66,000 கோடி மதிப்புடைய மரகத லிங்கம் காணாமல் போனது தமிழகம் முழுக்க பேரதிர்ச்சியை உருவாக்கியது. இவையன்றி எத்தனையோ பெரிய கோயில்கள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பவை முதற்கொண்டு, கிராம குலதெய்வ கோயில்கள் வரை இந்த மாஃபியா கும்பலின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகின்றன.

மக்கள் செய்யவேண்டியது என்ன?

v  நூறு ஆண்டு பழமையான கோயில்களை இடிப்பதோ, சேதப்படுத்துவதோ, கல்வெட்டுகளையோ- சிற்பங்களையோ அழிப்பதோ, சேண்ட் பிளாஸ்டிங் பயன்படுத்துவதோ சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அறநிலையத் துறை முதல் கோயில் ஊழியர் வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.

v  கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் ? என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்.

v  சேண்ட் பிளாஸ்டிங் மூலமோ, இல்லை பிற பணிகள் மூலமோ கோயிலில் கல்வெட்டு, சிற்பங்கள் போன்றவை சேதப்படுத்துவதைப் பார்த்தால் உடனடியாகத் தடுக்க வேண்டும். தன்னார்வ அமைப்புக்கள், தொல்லியல்துறை, உள்ளூர் நிர்வாகம் என எவ்வளவு தூரம் தகவல் தெரிவிக்க முடியுமோ தெரிவித்து, குற்றங்களைத் தடுக்க வேண்டும்.

v  கோயிலின் தொன்மையான தூண்கள்,  சுவர் கற்கள், சிற்பங்கள் போன்றவற்றை எவரேனும் எடுப்பதைக் கண்டால் உடனடியாகத் தடுக்க வேண்டும்.

v  கோயிலின் கருவறையை இடம் மாற்றம் செய்யக் கூடாது. கருவறைக்குள் கழிப்பறை போல டைல்ஸ் ஒட்டக் கூடாது.  கோயிலின் கருவறைகளின் நீள- அகல- உயரங்களை மாற்றம் செய்யக் கூடாது. பழமையான சிலைகளை அகற்ற அனுமதிக்கக் கூடாது. கருவறைக்குள் லைட் போடக்கூடாது.

v  செயற்கை சாம்பிராணி, கெமிக்கல் கற்பூரம், சீமை- கலப்பின மாடுகளின் பால், தயிர், நெய், கெமிக்கல் விபூதி போன்றவற்றை கோயிலில் பயன்படுத்தக் கூடாது. நாட்டுப் பசுவின் பால், தயிர், நெய், பசுஞ்சாணத்தால் செய்யப்பட விபூதி, இயற்கை கற்பூரம், சாம்பிராணி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

திரிபுவனம் ஆலயம்
திரிபுவனம் ஆலயம்

அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?

  • தற்போது நடைபெற்று வரும் அனைத்து கோயில் வேலைகளையும் உடனடியாக நிறுத்த அரசாணை பிறப்பித்து, அக்கோயில்களில் நடக்கும் பணிகள் குறித்தான ஆய்வு தொல்லியல் துறை, தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் ஆன்மிக அமைப்புக்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • கோயில் ஊழியர்கள், நிர்வாகிகளுக்கு கோயிலின் வரலாறு, தொன்மை குறித்த பயிற்சி அளிக்கபட்டிருக்க வேண்டும். கோயிலின் முகப்பில் கோவிலின் வரலாறு, புராதனம் போன்ற தகவல்களைத் தெரிவிக்க தகவல் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
  • சிலைக் கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை ஆய்வு செய்து, வேரோடும்- வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.
  • கடந்த ஆண்டுகளில் நடந்த கோயில் வேலைகளைக் கணக்கெடுத்து அங்கு நடந்த மாற்றங்களைக் கணக்கெடுத்து குற்றவாளிகளை அம்பலப்படுத்தவும் தண்டிக்கவும் வேண்டும்.
  • தொல்லியல்துறை ஆவணப்படுத்திய அனைத்து புராதனச் சின்னங்களையும் மறு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஆணையிட வேண்டும்.
  • தமிழகக் கோயில்களின் நிர்வாகத்தை- கட்டுப்பாட்டை விட்டு அறநிலையத் துறை வெளியேறி, ஆன்மிகக் குழு, கோயிலின் பாரம்பரிய நிர்வாக குழுவினரிடம் ஒப்படைத்து அரசு கண்காணிப்புப் பணியை மட்டுமே செய்ய வேண்டும்.
  • புதிய கோயில் பணிகளை, வல்லுனர் குழு, தொல்லியல்துறை, ஆன்மிக அமைப்புக்கள், பக்தர் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு மேலாண்மை குழுவின் ஒப்புதல் மற்றும் மேற்பார்வையில் நடைபெறச்செய்ய வேண்டும்.

தற்போது நடக்கும் வேகத்தில் கோயில் அழிப்புப் பணிகள் தொடர்ந்தால், வருங்காலத்தில் சுற்றுலாத் தலங்கள் இருக்கும்;  கோயில்கள் இராது. இருந்தாலும் அதில் சாந்நித்யம் இராது. மாலிக் காபூர் ஏற்படுத்திய சேதத்தை விட கொடூரமான சேதங்களை தற்போதைய நவீன மாலிக் காபூர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்கிறார்கள்.

அரசு- மக்கள் என அனைத்துத் தரப்பும் கைகோர்த்து, போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்தப் பாடுபடுவது மிக அவசியம். இல்லையேல் நம் முன்னோர்களில் லட்சக் கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து பாடுபட்டது பலனின்றி போவதோடு, அடுத்த தலைமுறை வரலாற்று அடையாளம் தொலைத்த அனாதைகளாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது.

15 Replies to “இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்”

  1. மன்னர்களும், பிரபுக்களும், கோவில் பக்தர்களும் கோவில் சொத்துக்களாகவும், ஏரி/குளம்/மண்டபம் போன்ற பொது சொத்துக்களாகவும் அளித்த கொடைகளுக்கு சான்றாக கல்வெட்டுக்கள், கோவில் ஆவணங்கள் உள்ளன. தற்போது கோவிலையும், கோவில்-பொது சொத்துக்களையும் கொள்ளையிடும் மாபியாவுக்கு சான்றுகளை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  2. வணக்கம்
    இக்கொடுமை தீரும் நாள் எந்நாளோ? ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்நாளைக் கோயில் இடிப்பு நாளாகக் கருதிக் கருப்பு நாளாகக் கொள்ளவேண்டும்
    அன்புடன்
    நந்திதா

  3. ஸ்ரீ சசிக்குமார் அவர்களின் கட்டுரை சத்திய ஆவேசத்துடன் எழுதப்பட்டுள்ளது. ஆலயங்கள் நமது சமய, பண்பாட்டு மையங்கள், கலைக்கருவூலங்கள் அவற்றை பேணிப்பாதுகாப்போம். இந்தக்கட்டுரை சொல்லிய படி விழிப்போடு இருப்போம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. ஆலயம் காப்பது யாவருக்கும் கடமை.

  4. This is a sickening situation in Tamil nadu. I hate to see old temples painted in all sort of colour paints. Any chemical use in temples corrode the material and will pave way for easy destruction in the near future. People should think that these temples withstood the time for 1000 years without any paint or chemicals. Some groups do propagate use of traditional conservation methods, but most of the damage is already done.

    We should start thinking as the temples which stood prestine for 1000+ years face destruction in just 50-60 years and why its happening. The answer is obvious.

  5. புராதனம் சிதையாமல் கோவில்கள் கட்டவோ/புதுப்பிக்கவோ/புனரமைக்கவோ நினைப்போர் “Reach Foundation” தொடர்பு கொள்ளவும். அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் தருவார்கள். ரீச் பவுண்டேசன் முகவரி:

    Office: A-1/3,Century Enclave, 54, Kalakshetra Road, Thiruvanmiyur, Chennai 600041

    Contact Numbers: +91 9444-441-181/ 9840-762-326

    Email: reach.foundation.india@gmail.com
    https://www.conserveheritage.org/
    https://templesrevival.blogspot.com/
    https://reachhistory.blogspot.com/

  6. நன்றி திரு சசிகுமார் அவர்களே .

    சென்ற ஆட்சியிலும் இப்போதைய ஆட்சியிலும் மிக மிக வேகமாக கோவில் அழிப்பு வேலைகள் நடை பெறுகின்றன. பத்து வருடம் முன்பு பார்த்த கோவிலை இப்போது பார்த்தல் அதிர்ச்சியாய் உள்ளது,.வழ வழப்பாக்கப்பட்ட தரையில் விழாமல் நடப்பதே பெரிய காரியம். கருவறையிலும் இந்த அக்கிரமம் நடப்பது இக்கட்டுரை சொல்லித் தான் தெரியும்.

    அறமற்ற முறையில் நடக்கும் இந்த காரியங்களுக்கு நாத்திக அரசுகளே பொறுப்பு.

    https://articles.timesofindia.indiatimes.com/2013-10-18/chennai/43176895_1_calves-cows-temple-authorities
    மேலுள்ள இணைப்பில் திருவண்ணாமலை கோவிலில் பட்டினி கிடந்தது சாகும் கோசாலை பசுக்களைப்பற்றி உள்ளது. அந்த கோவிலில் வருமானத்திற்கா பஞ்சம்?
    எங்கு போகிறது உண்டியல் பணம்?

    உண்டியலில் பணம் போடாதீர்கள். அது நம்மை அடிக்கவே பயன் படும்.கோவில் புனர் நிர்மாணம் என்றால் விவரங்கள் விசாரித்தல் அவசியம்.

    ஒரு சிவன் கோயிலுக்கு தங்கத்தேர் என்று வசூல் செய்தார்கள். கையில் இருந்த தங்க வளையலை அப்படியே கழற்றி உண்டியில் போட்ட வயதான் பெண்மணி நினைவுக்கு வருகிறார். நம் மக்கள் ரொம்ப உணர்வு பூர்வமாக யோசிக்கிறார்கள்.

    சாய்

  7. கழகங்கள் கையில் கிடைத்த தமிழகம் “குரங்குகள் கையில் சிக்கிய பூமாலை” ஆகிவிட்டது.அந்த சீரழிவுகளில் ஒன்றுதான் இந்த ஆலய புனர்நிர்மாணம். லாபம் இல்லாமல் எந்தஒரு காரியத்தையும் செய்யும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. நமது தேசியக் கலாச்சாரத்தை அழித்து, தேசிய நீரோட்டத்தின் முதுகெலும்பை முறிக்கும் முயற்சிகளாக, படையெடுத்துவந்து, மதமாற்றத்தை விதைத்து, செல்வங்களைக் கொள்ளையடித்துச்சென்றதுடன், மெக்காலே கல்வியைத் திணித்து வைத்திருக்கின்றனர். மெக்காலே கல்வி கற்றுத்தந்த அந்நிய மோகம், கோவிலையும் காட்சிப்பொருள் ஆக்கத்துடிக்கிறது. பெரும்பான்மையான கோவில்கள் அதிர்வுகள் [வைப்ரேஷன்] கொண்டவை,இதை யோகக்கலை கற்றவர்கள் உணர முடியும். அந்த அதிர்வுகள்தான் நமக்கு சக்தியையும், நமக்குள் நல்ல மாற்றங்களையும் தருகின்றன. கோவில்களை நவீனமயமாகும்போது, குறிப்பாக கருவியில் கைவைக்கும்போது, கோயில்கள் தன சுய தன்மையை இழக்கக்கூடும், கோவிலுக்குப் போவதால் பலனில்லை என மக்களிடம் பிரச்சாரம் செய்ய வழி கோலும், இது தடுக்கப்படவேண்டும். கோவில்களில் ஏற்படும் பழுதுகளை, ஐதீக முறைப்படி,கோவிலுக்கு சேதமில்லதவாறு செப்பனிடவேண்டும். அம்மாவிற்கு வயதாகிவிட்டது, தோல் சுருக்கம்விழுகிறது என்பதற்காக தோலை உரித்துவிடுவதில்லை, மாடர்ன்கேர்ள்-அக மாற்றுவதுமில்லை. அதுபோலத்தான் கோவில்களும், வழிபாட்டுத்தலங்கள் வழிபாட்டுத்தலங்களாகவே இருக்கட்டும். மலையாளிகளைப்போல், அந்நிய மதத்தினர் கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு, பரிகாரம் செய்யவேண்டும் என்ற உறுதி அனைவரிடமும் இருக்க வேண்டும். கோவில்களில் கோடி கோடியாய் சொத்து இருந்தாலும் கொள்ளை போய்விடாமல் தடுக்க வேண்டும். நாட்டிற்குப்பணம் தேவையென்றால் சுவிஸ் வங்கிக்குப் போகட்டும். மதச்சார்பற்ற நாட்டிலே இந்துக்களிடம் மட்டும் பணம் வசூலிக்கலாம் என்பது கைந்தேடுத்த அயோக்கியத்தனம். இந்துக்கள் இழிச்சவாயர்களாய் இருப்பதால்தான் இது முடிகிறது.

  8. [அன்னியர்கள்]- இந்த வார்த்தை 6வது வரியில் விடுபட்டுள்ளது. [கருவறையில்]- 10வது வரியில் தவறுதலாக [கருவியில்] என உள்ளது. [இதனால்]- 11வரியில் சேர்க்கப்படவேண்டும். [தன்] தன அல்ல -10வது வரியில், [சேதமில்லாதவாறு] ல அல்ல -வரி 13இல் -[ஆக] அக அல்ல- வரி14இல் [கடைந்தெடுத்த]- கைந்தேடுத்த அல்ல – வரி 19இல்.

  9. கேட்கவும், நினைக்கவும் வருத்தமாக இருக்கிறது, மக்களிடையே இதைக் குறித்த விழிப்புணர்ச்சியை உருவாக்க வேண்டும்.

  10. இதில் அரசை மட்டும் கூறி பயனில்லை. நமது மக்களும் அப்படித்தான் இருக்கின்றார்கள். என் அப்பா பூஜை செய்துவரும் கோவில் கருவறையில் கிரானைட் ஒட்ட முடிவு செய்திருக்கின்றார்கள். கருவறை தரையில் கிரானைட் போடுவது, ஆகம் விதி மீறலா என்பதை விட, நடைமுறையில் எத்தனை பிரச்சினைகளை தரும் என்பது அவர்களுக்கு புரியவில்லை (அபிஷேக நீர் தெறிக்கும், எண்ணை சிந்த வாய்ப்பு).

    இதற்கு முன்னால் யாரோ ஒரு புண்ணியவான் பணம் தந்தார் என்று ஒட்டு மொத்த கோவில் தரை முழுவதும் மொசைக்கையும், மார்பிளையும் ஒட்டி வைத்துள்ளனர். முன்பு அழகான கருங்கல் தரை, தண்ணீர், எண்ணை எது சிந்தினாலும் ஒன்றும் ஆகாது, எப்போது குளிர்ச்சியாக இருக்கும். சுத்தப்படுத்துவதும் எளிது. இன்று கூட்ட நேரத்தில் பயந்து பயந்து நடக்க வேண்டியுள்ளது. ஒரு திருவிழா முடிந்தபின் பார்த்தால், தரை கண்றாவியாக இருக்கின்றது.

    இத்தனைக்கும் எங்கள் கோவிலில் அரசின் தலையீடு சுத்தமாக கிடையாது. கோவிலுக்கு செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. எதைச் செய்வது என்று தெரியவில்லை. எதை செய்தாலும் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்றுதான் செய்கின்றனர். உருப்படியாக தேவையானதை செய்வதில்லை.

    வருத்தமான விஷயம், மார்பிள் தரை போட்டவர் பெயர் அழகாக பொறித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் வெயிலில் நிற்பதை கண்டு அதற்கு கூரை அமைத்து தந்தவர் பெயரை காணவில்லை.

  11. தமிழ் நாட்டில் தமிழன் இல்லை,அவனை கூப்பிடகூடாது,கூப்பிடகூடாது.ஏன் கூப்பிடனும்,கூப்பிட்டா மட்டும் வரவா போறான்.வந்தா மட்டும் தமிழ் நாட்டுல நடக்குற அநியாயத்தை கேக்கவபோறன்.அவனுக்கு டாஸ்மாக விட்டு வெளிய வரவே நேரம் இல்லை.இத எல்லாம் எப்படி கேப்பான்.கோயிலுக்கு போறதே ஏனோ கடமைக்கு போறான்.தயவு செய்து இதெல்லாம் எழுதுறதே விட்டு விடுங்க.இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழ் நாட்டில் தமிழன் மைனாரிட்டி ஆக இருப்பன்.கவலைய விடுங்க.

  12. அறநிலையத்துறை சட்டம், அதனால் நம் கோயில்களுக்கும் ஹிந்து சமூகத்துக்கும் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள், இந்த துறையின் தோற்றம், செய்யும் தவறுகள் என்று அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்கவும் பகிரவும்.
    கோயில் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கோயில் பிரச்சனைகளுக்கு போராடும் ஹிந்து சகோதரர்கள் அனைவருக்கும் இந்த லிங்கை கட்டாயம் அனுப்பவும். பொதுமக்களுக்கு அறநிலையத்துறையால் கோயில்களின் பாரம்பரியம், சொத்துக்கள் எல்லாம் எப்படி அழிந்து வணிக மையங்களாக மாறி வருகின்றன என்பதை எடுத்துரைக்க இந்த வீடியோ கட்டாயம் உதவும்.

    https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

    *கோயில்களை சர்க்கார் அறநிலையாத்துறை என்னும் துறை மூலம் ஆக்கிரமித்து கோயில் சொத்துக்களை “கவனிக்கிறது”. இதுபோல அரசாங்கம் சர்ச்களையோ, மசூதிகளையோ சுரண்டுவதில்லை. ஏன் கோயில்களுக்கு மட்டும் இந்த சாபம்?

    *கோயில் சொத்துக்களை சரிவர பராமரிக்காமல், அவற்றை அரசு வேலைகளுக்கும் அரசியல்வாதிகள் வேலைக்கும் விற்று பயன்படுத்துகிறார்கள்! அக்கிரமங்களின் உச்சம் இது. கோயில் ரெஜிஸ்டர் என்னும் புஸ்தகம் பேணப்பட வேண்டும். அதில் கோயில் சொத்துக்கள் பற்றி விவரங்கள் இருக்க வேண்டும். எந்த கோயிலிலும் அறநிலையாத்துறை முறையாக பராமரிப்பதோ பேணுவதோ இல்லை. இது சட்டப்படி கிரிமினல் குற்றம்.

    *இந்த அறநிலையாத்துறை மதசார்பற்ற அரசால் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் பாரபட்சமாக நடத்தும் கொடுமை ஆகும்.

    *அறநிலையாத்துறைக்கு கோயில் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது. கோயில் பூஜை முறைகளையோ, விழாக்கலையோ, பிற பணிகளையோ கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை.

    *கோயிலுக்குள் பலகாரக் கடையை “பிரசாதக்கடை” என்னும் பேரில் நடத்துவது தவறு மட்டுமல்ல அசிங்கமும் ஆகும்.

    *கோயிலுக்குள் ஆகம விரோதமாக பழைய அமைப்புகளை சிதைப்பது புதிய கட்டிடங்கள் கட்டுவது மிகப்பெரிய குற்றம். குறிப்பாக அறநிலையாத்துறை அதிகாரிகளுக்கு கோயிலுக்குள் அலுவலகம் இருக்கவே கூடாது.

    *அறநிலையாத்துறை கோயிலுக்கு ஒரு வேலைக்காரர்கள். அவ்வளவே. கோயிலை தங்கள் இஷ்டம் போல எடுத்துக் கொள்ள முடியாது. நிர்வாகம் சரியில்லை என்று சட்டப்படி நிரூபித்து கோயிலை எடுத்தாலும் அதிகபட்சம் மூண்டு முதல் ஐந்து வருடத்துக்குள் மீண்டும் நிர்வாகத்தை ஒப்படைத்து கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

    இதுபோல, இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்த அறநிலையாத்துறை பற்றி உள்ளது. அனைவரும் இந்த அறநிலையாத்துறை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட லிங்கில் அறநிலையாத்துறை பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன.கோயிலில் கருத்து வேறுபாடு என்று அறநிலையாத்துறையை உள்ளே கொண்டு வந்து விடுபவர் அந்த கடவுளுக்கே துரோகம் செய்தவனாவார். அப்படி செய்பவர் கோயிலை இடித்து கோயில் சொத்தை தின்றவர்கள் என்ன ஆவார்களோ அதே நிலைக்கு ஆளாவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அந்த புத்தகத்தின் வீடியோ இணைப்பு:https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

  13. நம்முன்னோர்கள் அறிவியல் பூர்வமாக கட்டிய கோவில் அன்று ஆன்மிகம், கலை, கல்வி, ஆயுதகிடங்கு, பாரம்பரிய நெற்களஞ்சியம், நீதி மன்றங்களாகவும், மற்றும் பல அரிய நல்ல விசயங்கலுக்கும். பயன்பட்டது
    ஆனால் இன்று …. நாத்திக தெ பசங்கலுக்கு பனம்சம்பாதிக்கும் இடமாகவும். அரசியல் வாதிகளின் கொள்ளக்ககூடங்கலாகவும் மாரிவிட்டன.. அரசியல்வாதிகல் வயிருவலர்க்க தமிழன் என்று சொல்லி சொல்லி
    நம்மை நாசம் செய்தவை போதும்.. யார் தமிழன் மதம்மாற்றும் கிருஸ்துவர்கள் மற்றும் பயங்கிரவாத இஸ்லாமியர்கள் இவர்கள் தமிழர்கலா …… கல்தோன்றா மன்தோன்ற காலத்திற்கு முன்தோன்றி மதம் இந்து மதம்
    தமிழ்இனம் இந்துவே தமிழன் தமிழனே இந்து இதை உனர்ந்தால் நாம் நம் கலாச்சாரங்களை அழிவில் இருந்து காப்பாறலாம் … . தமிழன் இந்து அல்ல என்னும் அரசியல்வாதிகளின் பிதற்றுதலுக்கு செவி சாய்க்காமல்
    நாம் அனைவரும் ஒன்றினைந்தாகவேன்டும். இதற்கு ஒரே வழி உள்ளது… அது
    இந்துக்கலுக்காக வாதாட* போராட** பரிந்து பேச*** ஆரம்பிக்கபட்ட இயக்கம்..
    கடந்த 35 ஆண்டுகலுக்கு மேலாக அரசியலாக மாறாமல் , சுயலாபத்திற்கா செயல்படாமல், யாரிடமும் பணம் வாங்காமல் இயங்கிவரும் இயக்கம் ***இந்துமுன்னணி*** இனைவோம் … இந்து முன்னணியில் பாரம்பரிய
    கலையான சிலம்பம்.யேகா மற்றும் பல நல்ல சொற்பொழிவுகளும், புராணங்களும். இதிகாசங்கலும் கற்பிக்ப்படுகிறது… மறைக்கப்பட்ட உண்மை வரலாற்று சம்பவங்கையும் கூறுகின்றனர்.. எனவே இந்து முன்னணில் இனைவோம் கோயில்கலை மீட்டெடுப்போம்… ஒன்று பட்டால் உன்டு வாழ்வு …..
    வீர வேல்,,வெற்றி வேல்…….
    பல ஆதங்கத்துடன் அருண்….7200400096

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *