அதிகாரத்தின் முகமூடி

morning_hindutva

காந்தியை குறித்து எந்த விதமான பார்வையை நீ முன்வைக்கிறாய்? அவர் செல்வச்சீமான், மோசடிக்காரர் என்றா? என கேட்கப்படுகிறது.

இந்தியாவை மீட்டெடுத்ததில் காந்தியின் பங்கு சாமானியமானதல்ல. அவருடைய எந்த தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும் அவரது பங்களிப்பின் முக்கியத்துவத்தை குறைத்துவிட முடியாது. பாரதத்தின் வருங்காலத்தை உருவாக்குவதில் காந்தியின் வழிகாட்டுதல் உதாசீனப்படுத்தப்பட்டால் அதனால் வறுமையடைவது நாமாகவே இருக்கும். கல்வி, சுற்றுச்சூழலியல், வருங்கால தொழில்நுட்பத்துக்கான மதிப்பீடுகள் – என நாளைய உலகை நிர்ணயிக்கப் போகும் எந்த ஒரு விஷயத்தை எடுத்து கொண்டாலும் அதில் காந்தியின் குரலை புறக்கணித்து எதையும் ஆக்கப்பூர்வமாக நிகழ்த்திவிட முடியாது”

rg0இதை இந்த கட்டுரைத் தொடர்களின் ஆசிரியனே பலமுறை எழுதியுள்ளான்.

ஆனால் இன்று ராமச்சந்திர குஹா தூக்கிப் பிடிக்கும் அல்லது முன்வைக்கும் காந்தியின் பிம்பம் எப்படி கட்டமைக்கப்படுகிறது? நேருவியத்தை நியாயப்படுத்துவதற்கான ஒரு முகமூடியாக மட்டுமே காந்தி பயன்படுத்தப் படுகிறார். இந்த சந்தைப் படுத்தப்பட்ட காந்தி நவீனத் துவத்தை மட்டுமே பிரதிநிதிப் படுத்துபவராக காட்டப்பட வேண்டிய அவசியம் உள்ளது. என்வே முடிந்த அளவு இவர் இந்திய பண்பாட்டு வேர்களிலிருந்து அப்புறப் படுத்தப்பட்டு காட்டப் படுவார். மிகத் தெளிவாக அவரே சொன்னாலும் கூட உண்மையில் அதெல்லாம் நவீனத் துவத்தை இந்திய மனதுக்கு கொண்டு வர காந்தி மேற்க்கொண்ட உக்திகள் என்றே அடையாளப் படுத்தப்படும். இந்த காந்தியின் பிம்பம் பொய்களாலும் புனைவுகளாலும் திரிபுகளாலும் ஆனது.

சில மாதங்களுக்கு முன்னர் ‘தி இந்து’ பத்திரிகையில் ராமச்சந்திர குஹா ஒரு கட்டுரை எழுதினார். இந்துக்கள் உண்மையில் எதற்காக பெருமைப்பட வேண்டும்? ‘ இந்திய மறுமலர்ச்சியின் உச்சத்து திரிமூர்த்திகளாக மூவரை அவர் முன்னிறுத்துகிறார். காந்தி-நேரு-அம்பேத்கர். rg1இம்மூவருமே ஹிந்து மத விலகல் கொண்டவர்கள் என்கிறார். ஆனால் இந்தியாவில் பெருமைப்படத் தக்க ஜனநாயக விழுமியங்கள் அனைத்தும் இவர்கள் தந்தது என்கிறார்.

இதில் காந்தி அனாச்சார ஹிந்து (heterodox Hindu) என்கிறார். சங்கராச்சாரியார்கள் காந்திக்கு எதிராக பிரிட்டிஷாரிடம் அவர் இந்துவே அல்ல என புகார் செய்தார்கள் என்கிறார். குஹா முதல் அ.மார்க்ஸ் வரை இந்த விஷயம் காந்தியை இந்துத்துவர்களுக்கு எதிராக தூக்கிப் பிடிக்கும் போது கூறப்படும். காந்தி சாதியத்தை எதிர்த்தார். ஆலய பிரவேசங்களை பெரும் மக்கள் இயக்கமாக நடத்தினார். எனவே இந்து ஆச்சாரவாதிகள் எதிர்த்தனர். அந்த எதிர்ப்பின் நீட்சிதான் இன்று இந்துத்துவர்கள் காந்தியை எதிர்ப்பது. காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஆதரவில் வெளியான பத்திரிகை ஒன்று அப்போது காந்தி வர்ண சங்காரம் செய்வதாக அவரை குற்றம் சாட்டியது – என்கிறார் அ.மார்க்ஸ். கோட்ஸே காந்தியை கொன்றது இதன் நீட்சி என்பதாக அவர் காட்டுகிறார்.

காந்தி கொலை எனும் களங்கம் என்றும் இந்துத்துவர்கள் மீது தொடர்ந்து வீசப்படுவது. காந்தியை கொன்றவன் ஒரு இந்துத்துவன் என்பது நிச்சயமாக ஒரு பெரும்பாவமே. அதன் விளைவுகளை நேர்மையாக சந்தித்தே ஆக வேண்டும். இந்துத்துவர்கள் அதை வரலாற்றில் சந்தித்திருக்கிறார்கள்.

rg5குருஜி கோல்வல்கர் அந்த சூறாவளியின் மையத்தில் நின்று அதை சந்தித்தார். நேர்மையாகவும் நேரடியாகவும் சந்தித்தார். காந்தி கொலையை பயன்படுத்தி நேருவிய அதிகார வர்க்கமும் காந்திய ஹிந்துத்துவ வெறுப்பாளர்களும் கட்டவிழ்த்து விட்ட வன்முறையையும் அடக்கு முறையையும் காந்தியின் தன்மையுடன் ஒரு துளியும் வெறுப்பு இல்லாமல் சந்தித்தார். காந்தியத்தின் ஏற்றமிகு விழுமியங்கள் காந்திய அதிகார வர்க்கத்திடமிருந்து இந்துத்துவர்களிடம் நிலை பெயர்ந்து சென்ற தருணம் அது.  “இன்னா செய்தாரை ஒறுத்தல்” எனும் வள்ளுவன் பாரம்பரியத்தின் தொடர்ச்சி.

1962 சீனப் படையெடுப்பு சமயம். தேசமே நேருவை எதிர்த்த போது  நேருவை எதிர்க்கவில்லை குருஜி. அன்று நேருவின் மிக பலவீனமான அரசியல் தருணத்தில் ஆர்கனைசர் பத்திரிகையில் வெளிவந்த நேருவுக்கு எதிரான கட்டுரைத் தொடர்களை விமர்சனங்களை நிறுத்த பெரும் முயற்சி எடுத்தார் குருஜி கோல்வல்கர். இதற்காக இயக்கத்துக்குள்ளேயே கசப்பை அவர் சந்தித்தார். ஆனால் தேசத்தின் நலனை விட நேரு எதிர்ப்பு முக்கியமானதல்ல என்றே அவர் கருதினார்.

சீனாவுக்கு எதிரான இந்திய போரில் இந்துத்துவரான ஸ்வயம் சேவகரின் பங்கு எத்தகையதாக இருந்தது என்றால் – எந்த ஸ்வயம் சேவகர்களின் ஷாகா நடக்க ஒரு அடி மண் கூட இந்த நாட்டில் கொடுக்கப்படாது என எந்த நேரு சொன்னரோ… அதே நேரு, அதே ஸ்வயம் சேவகர்களை, இந்திய குடியரசு தின விழாவின் டெல்லி அணிவகுப்பில் பங்கு கொள்ள அழைத்தார்.

ஆனால் இன்றைய காந்தியர்கள், சமயம் கிடைக்கும் போதெல்லாம் காந்தி கொலையை இந்துத்துவர்கள் முகத்தில் வீசத் தயங்க மாட்டார்கள்.

சரி. விஷயத்துக்கு வரலாம்.  “காந்தி அனாச்சார இந்து. இந்துத்துவர்களின் காந்திய விமர்சனம் என்பது இந்து ஆச்சாரவாதிகளின் காந்தி எதிர்ப்புடன் தொடர்புடையது” –  இது குஹாவின் வாதம். ஆனால் உண்மை என்ன? இந்த விதத்தில் குஹாவின் நிறமாற்றங்களையும் அறிந்து கொண்டால் சுவாரசியமாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் குஹாவுக்கு காந்தி வேறுவிதமாக தெரிந்தார் என்று குஹாவை இன்று வாசிக்கும் நியோ காந்தியர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?

கிறிஸ்தவ காந்தி?

காந்தியின் மிக முக்கியமான பாரதத்தன்மை கொண்ட பங்களிப்பு நடந்த விஷயத்தில் – அதில் தான் காந்தி குஹாவுக்கு வேறு விதமாகத் தெரிந்தார்.

மக்கள் இயக்கமாக நவீன சூழலியலை முன்னெடுத்தால், அதில் காந்தியின் பங்களிப்பு இல்லாமல் முன்னெடுப்பது இயலாத காரியம். இந்தியாவின் சூழலியல் களப்பணியாளர் அனைவருக்கும் காந்தியின் சிந்தனைகள் இன்றியமையாதவை. அவை இந்திய பண்பாட்டின் நீட்சி என்பது தெளிவு.

rg2மேற்கில் சூழலியலுக்கான ஒரு அடிப்படை தத்துவ தளத்தின் தேவை மிகவும் உள்ளது. நார்வேஜிய தத்துவியலாளர் அர்னே நயீஸ் (Arne Naess). இவர் ஆழ்-சூழலியல் (Deep ecology) எனும் பார்வையை முன்வைக்கிறார். இதற்கு அவர் காந்தியை தம் முக்கிய அறிவார்ந்த முன்னோடி சிந்தனையாளராக முன்வைக்கிறார்.  காந்தியின் இந்தப் பார்வைக்கு அவரது அத்வைத வேதாந்தம் அடிப்படையாக அமைவதாகவும் கூறுகிறார்.

ராமச்சந்திர குஹா தீர்க்கமாக தீவிரமாக நயீஸை மறுக்கிறார். ஒன்று: இந்த ஆழ்-சூழலியல் என்பதே இந்திய சூழலுக்கு ஒத்துவராத ஒன்று. இரண்டு: காந்தியின் சூழலியல் பார்வைக்கும் இந்து மத கோட்பாடுகளுக்கும்,  ஏன் கீழை நாட்டு ஆன்மிக கோட்பாடுகளுக்குமே முடிச்சு போடுவது சரியில்லை என்கிறார் குஹா.

ஆழ்-சூழலியல் செய்யும் தவறு என்னவென்றால் ”ஹிந்து மதம், பௌத்தம், தாவோயிஸம் என சிக்கலான, தமக்குள் மாறுபடும் அமைப்புகளை எல்லாம், பொத்தாம் பொதுவாக  இயற்கை மையத்தன்மை கொண்டவை என சேர்த்து சொல்வது” – என்கிறார் குஹா.  கிழக்கத்திய தத்துவ மரபுகளை தமக்கு காலத்தில் முன்னோடியாகவும், தற்காலத்தில் தம் செயல்பாட்டுடன் இணைவதாகவும் தொடர்ந்து ஆழ்-சூழலியலாளர் கூறுவதை அவர் விமர்சிக்கிறார். இறுதியாக ‘அரசியல் தீவிரத்தன்மைக் கொண்ட, யதார்த்தவாதியும், கிறிஸ்தவத்தால் தாக்கமடைந்த சிந்தனையாளருமான காந்திக்கு ஆழ்-சுழலியலில், அவருக்கு முழுக்க தகுதியேயற்ற முக்கிய இடம் அளிப்பதை’ விமர்சிக்கிறார் குஹா.

நன்றாக கவனியுங்கள். சூழலியலில் இந்து மதத்தை மட்டுமல்ல, கிழக்கத்திய ஆன்மிக மரபுகளை கொண்டு ஒரு தத்துவ அடிப்படை அமைவதே குஹாவுக்கு ரசிக்கவில்லை. காந்தியின் தீவிர அரசியல் செயல்பாடு, யதார்த்தத்தன்மை ஆகியவற்றை கிழக்கத்திய மரபிலிருந்து வேறுபட்டவர் காந்தி என காட்ட குஹா முன்னிறுத்துகிறார். கிறிஸ்தவ தாக்கம் கொண்ட சிந்தனையாளர் என்ற முறையில் ஆழ்-சூழலியலின் தத்துவ பிதாமகராக காந்தியை கொள்வது அவருக்கு முழுக்க தகுதியற்ற ’totally undeserved’ இடத்தை அளிப்பதாகும் என்கிறார். (Ramachandra Guha, Radical American Environmentalism and Wilderness Preservation: A Third world Critique, in Technology and Values: Essential Readings,Ed.Craig Hanks, John Wiley & Sons,2009. பக்.463)

உண்மை என்ன?

உண்மையில், காந்தியின் சூழலியல் சிந்தனைகளில் ஆழ்-சூழ்நிலைத் தன்மையின் பரிமாணங்களை, அவரது காலகட்ட சிந்தனையோட்டங்களிலேயே கூட, அவரது சமகால இந்திய வேர்களிலிருந்து கண்டடையலாம். rg8சுவாமி விவேகானந்தரின் வேதாந்த தாக்கம் ஜகதீஷ் சந்திர போஸிடமும், ஜகதீஷ் சந்திர போஸின் இணைப்பு பார்வை அதன் தாக்கத்தை தாகூரின் இயற்கை பார்வையிலும் உருவாக்கியது. தாகூரின் தாக்கம் காந்தியின் இயற்கை குறித்த சிந்தனைகளில் அபரிமிதமானது. காந்தியின் சூழலியல் சிந்தனை பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும், வளம் குன்றா வளர்ச்சியிலும்  ஜே.சி.குமரப்பாவால்  (ஜோசப் கர்னீலியஸ் குமரப்பா) முன்னெடுக்கப் பட்டது.

இன்று குமரப்பாவை மேற்கோள் காட்டுவோர் – அவரது கிறிஸ்தவ எதிர்ப்பிற்காக மட்டுமல்ல- பெரும்பாலும் இந்துத்துவர்களே. அவரது சாண எரிவாயு தொழில்நுட்பத்தை இன்று எந்த இயக்கங்களால், எந்த களப் பணியாளர்களால் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது  என்பதை ‘இன்றைய காந்தி’யர்களும் இணைய காந்தியர்களும் கவனிக்கலாம்.

ஆனால், இந்த பாரத சிந்தனை மரபை முழுமையாக அழித்து, காந்திக்கு ஒரு நவீனத்துவ முலாம் பூச,  காந்திக்கு சூழலியல் சிந்தனையில் அவருக்கு உரிய இடத்தை கூட மறுக்க குஹா தயங்கவில்லை.

காந்தியின் சூழலியல் சிந்தனைகளையும் இந்திய சூழலியல் இயக்கங்களையும் ஆராய்ச்சி செய்தவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக அய்வாளர் டேவிட் கோஸ்லிங். சுவாமி விவேகானந்தர் ‘பிரபஞ்ச முழுமையுடன் தன்னை ஒருமைப் படுத்துதல்’ என கூறுவதும்,  இந்த உலகின் யதார்த்தத்தை மறுக்காத வேதாந்தத்தை முன்வைத்ததும், கீதையின் கர்மயோகத்துக்கு அவர் கொடுத்த பார்வையும் காந்தியின் சிந்தனைகளில் கடும் தாக்கம் ஏற்படுத்திய கருத்தாங்கள்.   சூழலியலுக்கு உகந்த காந்தியின் பார்வைகளின் உருவாக்கத்துக்கு இது ஒரு முக்கிய காரணம் என்கிறார் கோஸ்லிங். (David Gosling, Religion and Ecology in India and Southeast Asia, Routledge 2001, பக்.49)

காந்தி-சங்கராச்சாரியார் இந்து முஸ்லீம் ஒற்றுமை

இந்துத்துவ சிந்தனையில் காந்தியின் மீதான மிகப்பெரிய மதிப்பு அவரது சூழலியல் கோட்பாட்டுக்கு என்றால், காந்தி மீதான மிகப் பெரிய இந்துத்துவ விமர்சனம் அவரது இஸ்லாமிய மதவாதத்தை தாஜா செய்யும் போக்குக்கு.

காந்தியை ஆலய பிரவேச விஷயத்தில் எதிர்த்த சங்கராச்சாரியார்கள் அனைவருமே காந்தியின் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பதில் அளவுக்கதிகமான ஆதரவுடன் இருந்திருக்கின்றனர் என்று கருத சில ஆதாரங்கள் உள்ளன.

rg6ரா.கணபதி எழுதுகிறார்:

சந்திப்பு நடந்தது 1927 அக்டோபர் 15-ஆம் தேதி. அதற்கு சில மாதங்கள் முந்தி 1926 டிசம்பரில் ஆரிய சமாஜத் தலைவரும் துறவியுமான ஸ்ரீ சிரத்தானந்தரை ஒரு முஸ்லீம் துப்பாக்கியால் சுட்டு அவர் சாயுஜ்யம் பெற்றிருந்தார்… ஹிந்து மதப் பிரிவொன்றின் தலைவரை ஒரு முஸ்லீம் கொன்று விட்டதைப் பார்த்த பின்னர் இவ்விரு சமுதாயங்களுக்குள் ஐக்கியம் ஏற்படுத்துவது சாத்தியமா என்றே தமக்கு மனத் தளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக காந்தி கூறினார். உடனே நமது ஆச்சார்யாள் பளிச்சென்று ‘யாரோ ஒரு முஸ்லீம் இப்படி செய்ததற்கென்று எல்லா முஸ்லீம்களையும் ஏன் ஹிந்துக்கள் த்வேஷிக்க வேண்டும்? நாளைக்கே உங்களையோ என்னையோ ஒரு ஹிந்துவே கொலை செய்தால் அப்போது?’ என்றார். (ரா.கணபதி, மைத்ரீம் பஜத, திவ்ய வித்யா பதிப்பகம், பக். 213-4)

மற்றொரு பீடத்தின் சங்கராச்சாரியாரோ இன்னும் ஒரு படி மேலே போய் காந்திஜியின் இஸ்லாமிய ஆதரவு கிலாபத் இயக்கத்தில் கலந்து கொண்டு ஜெயிலுக்குப் போயிருக்கிறார். சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்தர் கராச்சியில் கிலாபத் மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரைக்காக கைது செய்யபப்ட்டிருக்கிறார். 26-டிசம்பர்-1922 இல் இந்த சங்கராச்சாரியார் மீண்டும் கைது செய்யப்பட்டார். பிரிட்டிஷ் அரசாங்கம் அவர் சங்கராச்சாரியார் என்பதால் அவர் மீண்டும் இப்படி அரசாங்க விரோத பேச்சுகள் பேசாவிட்டால் விடுதலை செய்துவிட தயாராக இருந்தது. ஆனால் சங்கராச்சாரியாரோ சிறை செல்ல தயாராக இருந்தார். பகல்பூர் சிறையில் அவர் ஒரு வருடம் வைக்கப்பட்டார்.

இரண்டு சங்கராச்சாரியார்களுமே காந்தியின் இந்து முஸ்லீம் ஒற்றுமையின் கடும் ஆதரவாளர்கள். ஆனால் சாதி எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள். காந்தியின் இந்துத்துவ விமர்சகர்களில் முக்கிய தலைவர்களான சுவாமி சிரத்தானந்தரும் வீர சாவர்க்கரும் கடும் சாதிய எதிர்ப்பாளர்கள்.ஆனால் காந்தியின் முஸ்லீம் தாஜா போக்கின் கடும் விமர்சகர்கள்,  எதிர்ப்பாளர்கள்.

ஆனால் நவீன குஹாத்தனமான  நியோ காந்தியர்கள் இந்த இரண்டையும் குழப்பி ஒரு மாயையை உருவாக்குகிறார்கள் –   ”சங்கராச்சாரியார் காந்தியை எதிர்த்தார் தெரியுமா? இந்துத்துவர்களான நீங்களும் காந்தியை எதிர்க்கிறீர்கள். எனவே நீங்கள் ஆச்சாரவாதிகள்”. இது நேர்மையற்ற நேருவிய பிரச்சாரத்தின் தொடர்ச்சி.

காந்தியே பல இடங்களில் தன்னை சனாதனி இந்து என்றுதான் கூறுகிறார். காந்தியே சொன்னாலும், காந்திய சிந்தனைகள் இந்து மரபிலிருந்து வந்தவை என்பதை குஹாவால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. ஏனெனில், குஹா காந்தியை எத்தனை படோடபமாக முன்வைத்தாலும் அவர் உண்மையில் முன்வைப்பது நேருவைத்தான்.

நேரு எனும் அதிகார மைய அரசியல்வாதியின் அரசியலுக்கு குஹா அளிக்கும் ஒரு முகமூடிதான் காந்தி. இந்த அவலத்திலிருந்து காந்தியை மீட்டு, சிந்திக்கும் திறனுள்ளோரிடம் வருங்காலத்தின் ஒரு முக்கிய வழிகாட்டியாக காந்தியை மாற்றி அளிப்பது இந்துத்துவர்களின் கடமை ஒருவகையில் பரிகாரமும் கூட.

குஹாவின் புரட்டுகளையும் அடுத்த காலை தேநீருடன் காணலாம்.

14 Replies to “அதிகாரத்தின் முகமூடி”

  1. சுவாமி ஸ்ரத்தானந்தர் படுகொலையை பற்றி சற்று விரிவாக எழுதுங்கள்.அவர் எதற்காக ,யாரால் கொல்லப்பட்டார் என்றறிய ஆவலாக இருக்கிறது.அவருடைய புகைப்படம் ஏதேனும் இருந்தாலும் வெளியிடலாமே…ஆரிய சமாஜத்தின் தலைவராக இருந்தார் என்பதை தவிர பிற விவரங்கள் பலரும் அறியாத ஒன்று.காந்தி ஸ்ரத்தானந்தரை மிகவும் மதித்தார் என்று படித்திருக்கிறேன்.அவரை குறித்து இன்னும் விரிவாக எழுதினால் உபயோகமாக இருக்கும்.

  2. 1) 15-1-2000 ல் The Statesman ” என்ற ஆங்கில நாளிதழில் A G Noorani என்ற முஸ்லிம் எழுத்தாளர் “RSS தான் காந்தியை கொன்றது” என்று எழுதினர் அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தபோது கோர்ட் அனுப்பிய சம்மனுக்கு அந்த முஸ்லிம் ஆஜராகவில்லை. அதனால் கோர்ட் Non -bailable warrant னை பிறப்பித்தது 25-2-2002 ல் RSS மீது அபாண்டமான கட்டுரை எழுதியமைக்கு unconditional apology யினை கோர்ட்டில் தெரிவித்ததோடு அல்லாமல் 3-3-2002 ல் அதே நாளிதழ் மன்னிப்பையும் வெளியிட்டது.

    2)காந்தி கொலையுண்டபோது நேரு சாஹிப் பெருமகனார் RSS ஐ 4.2.1948 ல் தடை செய்தார். கொலையை விசாரித்த Justice Kapur Commision “காந்தி கொலைக்கும் RSS க்கும் சம்பந்தம் இல்லை” என்று தீர்ப்பளித்தது. (இந்த ரிப்போர்ட் 1970 ல் இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது (Vide Volume இ page 165) இந்த தீர்ப்பை ஏற்று Supreme Court RSS மீதான தடையை நீக்கியது.

    3) 1962 ல் இந்திய சென போரில் RSS தொண்டர்களின் அர்ப்பணிப்பை கண்டு மனம் நெகிழ்ந்த ((((RSS க்கு தடை விதித்த அதே))) நேரு 1963 ல் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

    4)இந்திய பாக் போரின் போது டெல்லியில் போக்குவரத்தை கட்டுபடுத்த லால் பகதூர் RSS உதவியை கோரினார்.

    5) 1992 ல் மச்சொதி இடிக்கப் பட்டபோது நரசிம்ம ராவ் RSS ஐ தடை செய்தார். Unlawful Activities (Prevention ) Act ன் கீழ் அமைக்கப்பட்ட Tribunal “RSS சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எந்தவித ஆதாரமும் இல்லை” என்று தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து 1993 ல் RSS மீதான தடை நீக்கப்பட்டது.

    எல்லாம் சரியே! ஆனால் கீழே கண்ட வார்த்தைகள் தான் வேதனையாக உள்ளது.///////////இரண்டு சங்கராச்சாரிகளுமே சாதி எதிர்ப்பு மற்றும் தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றிற்கு எதிரானவர்கள்.///////// அதாவது இந்து முஸ்லிம் ஒற்றுமையை கூட அந்த இருவர் ஏற்று கொள்வார்கள் . ஆனால் இந்துக்களில் இருக்கும் தலித்துகளையும் அவர்கள் மற்ற இந்துக்களோடு ஒன்றி வாழ்வதையும் ஏற்று கொள்ளமாட்டார்களா? இந்து மதம் உருப்படுமா? சத்தியமாக உருப்படாது.

    சாதி இரண்டொழிய வேறு இல்லை ( அது “Male ” ஜாதி “Female ” ஜாதி என்பதுதானே ஒழிய “மேல்” ஜாதி “கீழ்” ஜாதி என்பதல்ல) என்று அவ்வையார் சொன்னதும் தவறா? பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று வள்ளுவர் கூறியதும் தவறா? ஜாதியால் மக்களை பிரிப்பது மகா மட்டமான எண்ணம், சாதி ஒழிந்தாலன்றி இந்து மதம் பிழைக்காது என்பது திண்ணம்.

  3. அன்புள்ள HONEST MAN ,

    ஆர் எஸ் எஸ் மீதான வழக்கு பற்றி , சுருக்கமாக ஆனால் தெளிவாக தந்துள்ள உண்மைகளுக்காக நேயர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    முஸ்லீமால் சிரத்தானந்தர் கொல்லப்பட்டது ஆங்கில ஆட்சியில் நடந்த நிகழ்வு. இன்றைக்கு ஆரிய சமாஜ் போன்ற இயக்கங்கள் மிகப் பிரபல்யம் அடைய முடியாமை ஏனென்று நான் யோசித்தேன். சுவாமி தயானந்த சரஸ்வதியின் சத்யார்த்தப் பிரகாசம் முழுவதையும் வாசிக்க இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டு முடித்தேன். அவருடைய கருத்துக்களுடன் 95 விழுக்காடு ஒத்துப்போகும் என்னால், அவரது உருவவழிபாடு பற்றிய எதிர்ப்புக் கருத்துக்களை ஏற்க இயலவில்லை. உலகம் முழுவதும் உருவ மூலமான வழிபாடு என்பதே , நிறைந்துள்ளது. இஸ்லாமியர்கள் கூட, உருவமற்ற வழிபாடு என்று சொல்லிக்கொண்டு காபாவை சுற்றி பிரதட்சிணம் வருவதுடன், அங்குள்ள ஒரு கருப்பு கல்லை முத்தம் இடுகின்றனர். சாத்தான் மீது கல் எரிகின்றனர். கிறித்தவர்களுக்கோ கேட்கவே வேண்டாம், சிலுவை, அன்னை மேரி, மற்றும் ஏசுநாதரின் உருவங்கள் எங்கும் நிறைந்துள்ளன. இப்படி இருக்கும் போது, ஆரிய சமாஜ போதனையான உருவமற்ற வழிபாடு என்பது, 98 விழுக்காடு மக்களுக்கு ஏற்புடையது அல்ல. அதாவது எளிதில் கைவரப்பெறாது. உருவம் மூலமான வழிபாடு ஒரு மிக சிறந்த கருவி ஆகும்.

  4. //////////////////ஆலய பிரவேசம் விஷயத்தில் எதிர்த்த சங்கராச்சாரிகள்////////////////

    நான் இந்து மதத்திற்காகவும் பிஜேபிக்காகவும் வலுவாக வாதாடுபவன் என்பாதை எனது மறுமொழிகளை படித்தாலே நன்கு அறிந்து கொள்ளலாம் . உலகில் இருக்கும் மதங்களில் better ஆன மதம் இந்துமதம் தான் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை . அந்த மதம் உலகிலேயே best ஆன் மதமாக மாறவேண்டும் எனின் இந்துக்களுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பாராபட்சத்தை காட்டும் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை விட்டொழிக்க வேண்டும்.

    நாயுடுக்கு ஒருவிதமான நாக்கும் முதலியாருக்கு ஒருவிதமான மூக்கும் பார்ப்பனருக்கு ஒருவிதமான பல்லும் தலித்துக்கு ஒருவிதமான தலையும் கவுண்டருக்கு ஒருவிதமான கண்ணும் ஆண்டவன் படைக்கவில்லை. எல்லோருடைய உடம்பிலும் ஓடும் ரத்தமும் சிகப்பு நிறம்தான். எல்லோருடைய உருவத்தின் நிழலும் கருப்பு நிறம்தான் . பார்ப்பானின் ரத்தத்தில் மட்டும் A , B , O , AB என்று Blood groups களும் தலித்துக்களின் ரத்தத்தில் மட்டும் X Y Z என்று Blood Groups களுமா இருக்கின்றன? அவன் சேற்றில் “”கால்”” வைக்கவில்லை என்றால் பார்ப்பனர்கள் சோற்றில் “”கை”” வைக்கமுடியுமா? அவன் உழைக்கும்போது சிந்தும் வேர்வை மணிகள்தான் நிலத்தில் நெல்மணிகளாக மாறுகின்றன. அவன் கஷ்டப்பட்டு சிந்திய வேர்வை துளிகள் தான் cement மணல் மற்றும் செங்கல் ஆகியவற்றுடன் கலந்து கம்பீரமான வீடாக நிற்கிறது. அப்போது தீட்டு இல்லையா?

    உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்தவன் ஆண்டவன் என்றால் அந்த ஆண்டவனால் படைக்கப்பட்ட தலித்துகள் மட்டும் உங்கள் (பாழும்) கண்களுக்கு ஒரு ஜிவராசியாக தெரியவில்லையா? நாயும் குரங்கும் காகமும் யானையும், மயிலும் போகும் கோவிலுக்குள் ஒரு ஆறறிவு படைத்த மனிதன் போக கூடாது என்று “”ஆலய பிரவேசத்திற்கு”” எதிர்ப்பு காட்டுவது ஏன்? காந்தியை திட்டுங்கள் நேருவை திட்டுங்கள். அவற்றை மிகச்சரி என்பேன். அவர்கள் இந்த நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள். ஆனால் திருப்பதிக்குள் ஒரு Antonia Mino என்ற இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பெண் போகலாம் ஆனால் முருகன், கோவிந்தன், ராமன், கிருஷ்ணன் என்று இந்துப் பெயரை வைத்துககொண்டு இருப்பவன் கோவிலுக்குள் போக கூடாது அவன் தேரை இழுக்கக் கூடாது என்று சொல்வதேன்? மாட்டுக்குகூட லாடம் அடிக்கிறோம். ஆனால் நிலத்தில் மாடாய் உழைக்கும் தலித்து மட்டும் செருப்பு போட கூடாது என்று சொல்வது என்னையா நியாயம்? சட்டத்தின் முன் சமம் ஆனால் சாமி முன் சமமில்லை என்றால் அந்த சாமி நல்ல சாமிதானா? இது சாமிகள் செய்யும் வேலையா? இல்லை சங்கராச்சாரியார்கள் போன்ற ஆசாமிகள் செய்யும் வேலையா? மனிதாபிமானம் உள்ளவன்தான் மனிதன். அது இல்லாதவன் கேடுகெட்ட மிருகம்.

    கடைசியாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். சாதி சாதி என்று எதற்கு சாக்கைடையில் விழுந்து சாக விரும்புகிறீர்கள்? ஒருவன் என்ன சாதி என்று பார்க்காதீர்கள். அவன் “”ஜாத்தியானவனா?”” என்று பாருங்கள். ஜாதியை வைத்து ஒருவனை எடை போடாதீர்கள். அவன் சாதித்ததை வைத்து எடை போடுங்கள். செக்கிழுத்த தியாக செம்மல் வ.உ,சி யை இந்தியர் எல்லோரும் சேர்ந்து கொண்டாட வேண்டும். அவரது ஜாதிகாரர்கள் மட்டும் கொண்டாடுவது ரொம்ப தப்பு. ஜாதிகள் ஒழிக்கப் படவில்லை என்றால் இந்து மதம் நம் கண் முன்னேயே அழியும்.

  5. நேரு காந்தி இவர்களை முற்றிலும் மறந்துவிட்டோம் ஞாபகபடுத்த தேவையில்லை. தற்போது நும் முன் நிற்பது ஹிந்து மதம் பிற மதத்தினரால் பாதிக்கபடுவதில்லை நம்மிடை உள்ள உயர்ந்தவன் தாழ்ந்தவன். என்ற கோட்பாடுதான். இதனை நம்மிடே உள்ள நல இயக்கம் ஆர் ஆர் எஸ். இதன் பணிகளை விவரித்து எழுதினால் நம்மிட எழுச்சி தோன்றும்.

  6. இந்த என்.ராம், இராமசந்திர குஹா, பர்கா தத் போன்ற எழுத்தாளர்கள்/பத்திரிக்கயாளர்களுக்கு இந்து மதத்தின் மீது ஏன் இவ்வளவு காழ்புணர்ச்சி? எப்படியாவது இந்து மதத்தை, குறைந்தபட்சம் இந்து இயக்கங்களை, இந்து இயக்கத்தவர்களை சிறுமைப்படுத்தி பொய்களை பரப்பி அழிக்கவேண்டும் என்று ஏன் இவ்வளவு முனைப்புடன் இருக்கிறார்கள். பவுண்டு கணக்கில் பவுண்டும், கிலோ கணக்கில் டாலர்களும், டன் கணக்கில் தினார்களையும் கொடுத்தால் உண்மையை விற்றுவிடுவார்களா?

    இதுபோன்ற தர்மத்ரோகிகளை, தேசத்ரோகிகளை எதிர்த்து சீதாராம் கோயல் போன்றவர்கள் தங்களது வாழ்கையையே அற்பனித்துகொண்டு பேனாபோர் செய்தது போதாது என்று இன்று அரவிந்தன் நீலகண்டன், ஈரோடு ஆ.சரவணன், எஸ்.குருமூர்த்தி, சுப்ரமணியம் சுவாமி மற்றும் பலர் தங்களது பொன்னான நேரத்தை வீணடித்து மீண்டும் பேனாபோர் செய்யவேண்டி உள்ளதே!

    இறைவான் எப்போது கண்திறப்பான்? தர்மம் உண்மையில் வெல்லுமா?
    நடப்பதைப் பார்க்கும்போது தர்மத்தின் மீதே நம்பிக்கை குறைகிறது!

  7. அன்பார்ந்த ஸ்ரீ ஹானஸ்ட் மேன்

    தங்களது உத்தரங்கள் அனைத்தையும் ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன். ஆரம்பத்தில் பல பெயரில் எழுதும் அன்பர் ஒருவருடைய உத்தரமோ என சம்சயித்ததும் உண்டு. ஆனால் உத்தரங்களின் த்வனியை தொடர்ந்து அவதானித்ததில் இந்த தளத்தின் பெருமை மிகு கருத்துப் பகிர்வாளர்களில் ஒருவர் என அடையாளம் கண்டு கொண்டேன்.

    தாங்கள் உதிரி உதிரியாக பற்பல வ்யாசங்களில் கருத்துப் பகிர்வது அல்லாமல் தங்கள் கருத்துக்களைத் தொகுத்து தனி வ்யாசங்களாக பதிப்பித்தீர்கள் என்றால் பொருத்தமாக இருக்கும். இதைப் பரிசீலிக்கவும்.

    ஆப்ரஹாமிய மதங்கள் பற்றிய கருத்தாக்கங்கள்; தேசப் பிரிவினை; தேச விடுதலைப் போராட்டம்; பற்பல காலங்களில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தேச முன்னேற்ற கார்யங்களில் பங்களிப்பு – என்பது எழுதி மாளா விஷயம்.

    ஸ்ரீ அ.நீ, ஜடாயு போன்ற மூத்த எழுத்தாளர்கள் தங்கள் பங்கை அளித்து வருவதைத் தொடர்ந்து மற்றையவர்களும் தங்கள் பங்களிப்பு செய்தல் அவச்யம்.

    ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டுமே.

    தங்களது பங்களிப்பு இனி தனியான வ்யாசங்கள் சமர்ப்பிப்பது என்ற படிக்கும் இருக்க வேண்டும் என்பது என் விக்ஞாபனம்.

  8. மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது. விவரம் தெரியாதவர்களும் + அரைகுறை அறிவுஜீவிகளுமே பெரும்பான்மை என்கிற அந்தஸ்த்தை எட்டி இருக்கிறோம் நமது பாரத தேசத்திலே என்பது புரிகிறது. கிலாபத் இயக்கம் குறித்து மேலும் புரிந்து கொள்ள அவசியம் இருக்கிறது என்னைப் போன்றவர்களுக்கு. மலர்மன்னன் எழுதின கிலாபத் இயக்கம் குறித்த் கட்டுரை எங்கேயாவது படிக்கக் கிடைக்குமா ? விவரம் தெரிந்தவர்கள் உதவ வேண்டுகிறேன். நன்றி.
    ஸ்ரீநிவாசன்.

  9. திரு . ஹானஸ்ட் மேன்…

    //ஆனால் திருப்பதிக்குள் ஒரு Antonia Mino என்ற இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பெண் போகலாம் ஆனால் முருகன், கோவிந்தன், ராமன், கிருஷ்ணன் என்று இந்துப் பெயரை வைத்துககொண்டு இருப்பவன் கோவிலுக்குள் போக கூடாது அவன் தேரை இழுக்கக் கூடாது என்று சொல்வதேன்?//

    சோனியா மட்டுமா திருப்பதி கோவிலுக்கு சென்றார் …. 1 லட்சம் தமிழர்களை துடிக்க துடிக்க கொன்ற சிங்கள இன வெறியன் ராஜபட்சே என்னும் மிருகத்தினும் மிக கேவலமான ஒரு கொடுரனும் தான் திருப்பதிக்கு சென்று வணங்கினான்… எந்த வெட்கமும் இல்லாமல் தமிழ்இந்துக்களாகிய நாம் அணைவரும் அந்த கொடுமையை எந்த சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருந்தோம் .

    இத்தனைக்கும் படுகொலை செய்யபட்டு இறந்த தமிழர்களில் 90 விழுக்காட்டினர் இந்துக்கள்தான் . என்ன செய்ய முடிந்தது நம்மால் …அதுவும் சிகப்பு கம்பள மரியாதையுடன் அந்த மிருகம் கோயிலுக்குள் சென்று திருப்பதி ஏழுமலையானை வணங்கிவிட்டு கோயில் பிரசாதமான லட்டை தின்றுகொண்டே இலங்கைக்கு சென்றது… இங்கிருக்கும் இந்துமத அமைப்பு எதாவது திருப்பதிக்கு சென்று போராடியதா. இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ் ,இந்துமுன்னனி என்கிற எந்த அமைப்பாவது திருப்பதிக்கு சென்று ராஜபட்சே வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததா. அட… அங்கு சென்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்.. ஆயிரகணக்கான இந்து சகோதரர்களை கொன்ற ராஜபட்சே திருப்பதி கோயிலுக்கு வருவதை எதிர்த்து கண்டனமாவது கூறினார்களா … இல்லையே …

    அந்த ரத்த வெறிபிடித்த சிங்கள மிருகம் என்ன வழிபட்டு சென்றிருக்கும்… “திருப்பதி ஏழுமலையானே உன் தயவால்… உன் அருளால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை வெற்றிகரமாக அழித்து அவர்கள் போராட்டத்தை நசுக்கி விட்டேன் .. இப்போது ஏதோ போர்குற்ற விசாரணை என்கிற பெயரில் நான் போர் குற்றவாளி என்கிற உண்மையை அம்பலபடுத்தி சர்வதேச சமுகம் என்னை தூக்கில் இட பார்க்கிறது. இந்த சிக்கலில் இருந்தும் என்னை காப்பாற்று உன் சன்னதிக்கு ஒரு லட்சம் பொற்காசுகள் காணிக்கையாக தருகிறேன்” என்று பிரார்த்தனை செய்து போயிருப்பான் … அங்கு அவன் வேண்டுதலை கேட்டு கொண்டு புன்முறுவலோடு அமைதியாக இருந்தது அங்குறையும் வெங்கடேச பெருமான் மட்டும் அல்ல நாமும் தான் …. ஒருவேளை எம்பெருமானும் இத்தாலிய சரக்கிற்கு அடிமையாகி அமைதியாக கருணாநிதி போன்று மௌன சாட்சியாக இருந்தாரோ …

  10. I see shades of Brahmin hatred from “HONEST MAN”. Please remember that discrimination against Dalits was practiced by EVERY CASTE, including Brahmins. Why isolate and blame one community alone? I feel, percentage wise, more had been done by the Brahmin community against caste discrimination than any other community. But Brahmins are easy target for everyone to step on and spew venom.
    Sorry for going off the topic.

  11. அன்புக்குறிய அ நீ அவர்கள் அருமையாக எழுதியுள்ளார். இன்றைக்கு பிரபலமாக இருக்ககூடிய சமூக வரலாற்று அறிஞர்(சமூக சூழலியல் அறிஞர் என்றும் அறியப்படுபவர்) ராமச்சந்திர குஹாவின் எழுத்துக்கள் எப்படி நேருவியத்தினை முதன்மைப்படுத்துதலை நோக்கமாககொண்டுள்ளன என்று விவரிக்கிறார் அ நீ. அவரது ஒரு சிலக்கட்டுரைகளை நூல்களை ஒரு சமூக ஆராய்ச்சியாளன் பழங்குடி ஆராய்ச்சியாளன் என்ற வகையில் வாசித்தது உண்டு. நவீன இந்தியாவின் சிற்பிகளாக காந்தியடிகள், நேரு மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை குஹா முன்னிறுத்துகிறார் என்பதைப்படித்தபோது அதிர்ந்தேன். ஏன் எனில் இன்றைய பாரதத்தின் ஏற்றத்தில் காந்தியடிகள், பாபாசாஹிப் இவர்களது பங்கு மகத்தானது என்றாலும் நாடு சந்தித்துவரும் முக்கிய சமூக ப்பொருளாதாரசிக்கல் களுக்கும் மூலகாரணமான நேருவை முதன்மைப்படுத்துவதை என்னால் ஏற்கமுடியவில்லை.
    அண்ணல் காந்தியை அதே குஹா அனாச்சார ஹிந்து என்று கருதுவதை அழகாக ஸ்ரீ அநீ அழகாக மறுத்து வாதிட்டுள்ளார். அவர் தாம் ஒரு சனாதனி என்று வெளிப்படையாக அடையாளப்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டி அருமையாக வாதத்தினை வைத்துள்ளார் ஸ்ரீ அ நீ. பாராட்டுக்கள்.
    நவீனத்துவத்தினை நிராகரிக்கின்ற அண்ணல் காந்தியடிகளை விட்டால் ஹிந்துசமயத்திற்கே அன்னியப்படுத்திவிடுவார்கள்.
    எம்மைப்போன்று சமூக அறிவியல் வரலாறு ஆகிய துறைகளில் பயில்பவர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆசிரியர்கள் மேலை நவீனத்துவத்தின் நேருவிய நாயக்கரிய, மார்க்சிய தாக்கம்) மாயையில் மூழ்கிவிடாமல் இருப்பதற்கு ஸ்ரீ அ நீ அவர்களின் எழுத்துக்கள் கலங்கரைவிளக்கமெனில் ஐயமில்லை.

  12. அருமையான கருத்துக்களைத் தெளிவாக விளக்கிய திரு. ஹனேஸ்ட் மேன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

  13. காந்தி காந்தி காந்தி.. இருக்கட்டும்.. உங்க தலையிலையே தாங்குங்கள்..
    அது சரி. அதென்ன இரண்டு சங்கராச்சாரியர்கள் சாதி எதிர்ப்பு கொள்கையுடன் உடன்பாடில்லை? எந்தெந்த சங்கராச்சாரியர்கள்? எதை வைத்து இதனை கூறுகிறீர்கள்? அ.நீ சார்? விளக்கமளிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *