பேயம்மை

morning_hindutvaத்யஜித் ராயின் பதேர் பாஞ்சாலி திரைப்படத்தில் “இந்திர்” என்று ஒரு மூதாட்டி வருவார். கண்கள் குழிந்து முதுகு வளைந்து எலும்புக் கூடாக முகம் முழுதும் சுருக்கங்கள் மண்டிய இந்திர் பாட்டி.  அந்தப் படத்தின் அழியாத கதாபாத்திரமான இளம்பெண் துர்காவைப் போலவே ரசிகர்கள் எல்லார் மனதையும் தனது “அழகால்” கொள்ளை கொண்டவர். இந்தப் பாத்திரத்தில் நடிக்க ஆள் கிடைக்காமல் அலைந்து திரிந்த ராய்,  கடைசியில் கல்கத்தாவின் விலைமாதர்கள் குடியிருப்பில் அவர்களோடு ஒண்டிக் கிடந்த  சுனிபாலா தேவி என்ற பழைய நாடக நடிகையைக் கண்டுபிடித்தார். 80 வயதில் அவர் நடித்த இந்தப் படம் சுனிபாலா தேவியின் பெயரை இந்தியத் திரையுலக வரலாற்றில் என்றென்றைக்குமாக நிறுத்தி விட்டுப் போய் விட்டது.

Pather_Panchali_old_women

இந்திர் பாட்டியின் தோற்றம் எனக்கு காரைக்கால் அம்மையாரைத் தான்  நினைவுக்குக் கொண்டு வந்தது. சிவன் கோயில்களில் அலங்காரம் செய்திருக்கும் கோலத்தில் அம்மையாரின் உண்மையான திரு வடிவம் நமக்குப் புலப்படுவதில்லை. ஆனால் பஞ்சலோக சிற்பங்களில் அந்த வடிவைத் தெளிவாகக் காண முடிகிறது. ஆம், அவர் விரும்பிக் கேட்டுப் பெற்ற “பேய்” வடிவம்.

அம்மையாரின் வரலாறு தமிழர்கள் பலருக்கும் நன்கு தெரிந்தது தான்.  காரைக்காலில் பெரிய வணிகர் குடும்பத்தில் புனிதவதியாகப் பிறந்தவர். பிறந்தது முதலே சிவ பக்தியில் அவர் மனம் தீவிரமாக ஈடுபடுகிறது.  செல்வந்தரான பரமதத்தன் அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். இல்வாழ்க்கையில் மனம் செல்லாது எப்போதும் சிவனருளையே சிந்தித்திருக்கிறார் புனிதவதி. “மாம்பழத் திருவிளையாடல்” மூலம் சிவபெருமான் அவரை ஆட்கொள்கிறார். நன்மனம் கொண்ட கணவரும் அவர் தெய்வத் தன்மை உடைய பெண் என்று அறிந்து கொள்கிறார். பிறகு மறுமணம் செய்து கொண்டு தனக்குப் பிறக்கும் மகளுக்கு புனிதவதி என்றே பெயர் வைக்கிறார்.

karaikkal_ammaiyarஇல்வாழ்க்கையில் இருந்து விடுபட்டவுடன், புனிதவதி தனது எழில் மிகுந்த இளமைக் கோலத்தை அகற்றி பேய் உருவத்தை சிவபெருமானிடம் வேண்டிப் பெறுகிறார்.

ஊனடை வனப்பை எல்லாம்
உதறி எற்புடம்பே ஆக
வானமும் மண்ணும் எல்லாம்
வணங்கு பேய் வடிவமானார்.

ஊன் உடல் கொண்ட வனப்பு எல்லாவற்றையும் உதறி எலும்பே உடம்பாக ஆன பேய் வடிவம்!

தன் உடல் மீது கொண்ட வெறுப்போ, கணவன் அனுபவிக்காத உடலழகால் என்ன பயன் என்ற தன்னிரக்கமோ இதற்குக் காரணம் அல்ல. தன்னிச்சையாக சுதந்திரமாக வாழ விரும்பும் இளம் பெண்ணுக்கு இந்த முரட்டு ஆணாதிக்க சமூகத்தில் அவள் உடலே ஒரு தளையாகவும், பாதுகாப்பின்மையாகவும் ஆகி விடுகிறது; அதனால் தான் புனிதவதி பேயாகவும், ஔவை தொண்டு கிழவியாகவும் மாறி நடமாட வேண்டியிருந்தது  என்று சில பெண்ணிய வாதிகள் இதற்கு விளக்கம் அளிக்கலாம். ஆனால், அதுவும் முழுமையான விளக்கம் அல்ல.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்? பிறப்பறுக்கல்
உற்றார்க்கு, உடம்பும் மிகை.

என்கிறது திருக்குறள்.

உலக பந்தங்களை உதறி ஆன்மீக விடுதலையை  நாடிச் சென்ற புனிதவதிக்கு உடலும் ஒரு சுமையாகத் தோன்றியிருக்கிறது. புத்த பகவான் போதி மர நிழலில் தியானத்தில் அமர்ந்து எழுந்தபோது அவரது உடலில் ஊன் அனைத்தும் கரைந்து எலும்புக் கூடு மட்டுமே எஞ்சியிருந்தது என்கின்றன பௌத்த நூல்கள்.

பேய் என்றால் ஒருவிதமான ‘தீய ஆவி’ என்ற நினைப்பு தான் எல்லாருக்கும் தோன்றும். இறந்தவர்கள் உயிரோடு இருப்பவர்களை பயமுறுத்துவதுடனும், மனப் பிராந்திகளுடனும் தான் இந்தச் சொல்லை தற்போது அடையாளப் படுத்துகிறோம். கிறிஸ்தவ தாக்கம் தமிழ் மொழிக்குள் எந்த அளவு ஊடுருவியுள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஆனால், தமிழில் பேய் என்ற சொல் இத்தகைய முற்றிலும் தீய பொருளைக் கொண்டிருக்கவில்லை. பேய் என்பது உடல் கடந்த ஒரு நிலை – அதில் பிற உயிர்களுக்குத் தீங்கிழைத்து வாழும் பேய்களும் உண்டு. “வானமும் மண்ணும் எல்லாம்  வணங்கு பேய்” வடிவமும் உண்டு. சிவனையே பேயன் என்பார்கள். பேயாழ்வார் என்று ஒரு ஆழ்வாருக்குப் பெயரே உண்டு.

திருவாலங்காடு என்ற தலத்துக்கு காரைக்கால் அம்மையார் வருகிறார். அங்கே சிவபெருமான் பேய்கள் சூழ ஆடும் திரு நடனத்தை அகக் கண்ணால் தரிசித்து “மூத்த திருப்பதிகம்” என்ற பத்து பாடல்கள் பாடுகிறார். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் நம்மை மயிர்க் கூச்செறியச் செய்பவை அந்தப் பாடல்கள்.

கொங்கை திரங்கி, நரம்பு எழுந்து
குண்டு கண், வெண்பல், குழி வயிற்று
பங்கி சிவந்து, இரு பற்கள் நீண்டு,
பரடு உயர் நீள் கணைக்கால் ஓர் பெண் பேய்
தங்கி அலறி உலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கம் குளிர்ந்து அனல் ஆடும், எங்கள்
அப்பன் இடம் திரு ஆலங்காடே.

(திரங்கி – வற்றி, பங்கி – தலைமயிர், பரடு – புறங்கால், கணைக்கால் – கணுக்கால், உலறுதல் – பசியால் மெலிதல்).

தொங்கிய முலைகளும்,  குழி வயிறும், சிவந்த சடை மயிரும் கொண்ட பெண் பேய் இங்கு ஓர் பித்து நிலையின் குறியீடாக வருகிறது. உலகின் முட்டாள் தனங்களை எல்லாம் பார்த்து சிரித்து, உன்மத்தம் கொண்டு ஆடும் பித்து.

avvaiyar1மேற்கத்திய கதையாடல்களில் பொதுவாக இத்தகைய உருவம் கொண்ட கிழவிகள் சூனியக் காரிகளாக மட்டுமே சித்தரிக்கப் படுகிறார்கள். Dark Ages என்று ஐரோப்பிய வரலாற்றில் குறிக்கப் படும் காலகட்டத்தில், நிறுவன கிறிஸ்தவம் கோலோச்சிய போது, ஆயிரக் கணக்கான ஒன்றுமறியாத அப்பாவிப் பெண்கள் சூனியக் காரிகள் (Witches) என்று முத்திரை குத்தப் பட்டு வேட்டையாடப் பட்டார்கள். ஊர் நடுவில் சித்ரவதை செய்து கொல்லப் பட்டார்கள். தொடக்கத்தில் ஆண் பெண் மாந்திரீக (occult) செயல் பாட்டாளர்கள் எல்லாருக்கும் தண்டனை வழங்கப் பட்டது. ஆனால் விரைவில் Witchcraft என்பது பெண்களுடன் மட்டுமே அடையாளப் படுத்தப் பட்டு ஒரு முழுமையான பெண் வதையாகவே பல நூற்றாண்டுகள் தொடர்ந்தது. இந்த மன நிலையின் எச்சங்கள் இன்று வரை மேற்கத்திய கலாசாரத்தில் ஊடுருவியுள்ளன. இதற்கு கிறிஸ்தவ இறையியலில் அடிப்படையாக உள்ள பெண் இகழ்ச்சிப் பார்வையே காரணம் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆனால், அதே காலகட்டங்களில் நம் தமிழ் மரபில் ஔவை, காரைக் காலம்மையார், ஆண்டாள் போன்ற சுதந்திரப் பெண்கள் அரசர்களுக்கே அறிவுரை கூறுபவர்களாகவும், உயர் ஆன்மீக நிலையை அடைந்தவர்களாகவும் கருதப் பட்டார்கள். அவர்களது  விதிவிலக்கான வாழ்க்கை முறை அருவருக்கப் படவில்லை, போற்றப் பட்டது. தமிழ் இலக்கியத்தின் அழியாத முத்திரைகளாக அவர்களது கவிதை வெளிப்பாடுகள் இன்றும் உள்ளன.

இன்னும் சில பேய்களையும் காட்டுகிறார் அம்மையார். தன் குழந்தைக்கு அன்போடு ஊன் சோறு ஊட்டுகிறது அந்த அம்மா பேய். காளி என்று குழந்தைக்குப் பேரும் வைத்திருக்கிறது.  உடம்பைத் துடைத்து விட்டு, முலையூட்டி விட்டு வெளியே போன தாயைக் காணவில்லையே என்று கொஞ்ச நேரம் அழுது விட்டு அப்படியே உறங்கி விடுகிறது குழந்தைப் பேய்.

விழுது நிணத்தை விழுங்க இட்டு,
வெண்தலை மாலை விரவப் பூட்டிக்
கழுது தன் பிள்ளையைக் காளி யென்று
பேரிட்டுச் சீருடைத்தா வளர்த்துப்
புழதி துடைத்து, முலை கொடுத்துப்
போயின தாயை வரவு காணாது
அழுது உறங்கும் புறங்காட்டில் ஆடும்
அப்பன் இடம் திரு ஆலங்காடே.

(விழுது நிணம் – திரட்டி எடுத்த கொழுப்பு; விரவ –  கழுது – பேய், சீருடைத்தா – சீராக, புழதி – புழுதி)

உடல் கடந்த உணர்வு நிலையில் பேயாக அலைந்த போதும், புனிதவதியிடம் மறையாமல் இருப்பது தாய்மை. அதுவே அவரது பெண்மையின், ஆன்மீகத்தின் சாரம்.  அதனால் தான், சிவபெருமானே கயிலை மலையில் அவர் தள்ளாடி நடந்து வருவதைப் பார்த்து, “அம்மையே” என்று அழைக்கிறார். காரைக் காலம்மையார் நடந்து சென்ற திருவாலங்காட்டில் தன் பாதம் படுவது கூட அபச்சாரம்  என்று கருதி திருஞான சம்பந்தர் வெளியிலேயே நின்று பதிகம் பாடிவிட்டுச் சென்றார் என்கிறது புராணம்.

பேயவள் காண் எங்கள் அன்னை –  பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை

என்று தொடங்குகிறது பாரதியாரின் ஒரு பாடல். பாரத மாதாவை ஒரு உன்மத்தம் கொண்ட பெண்ணாக, பேயம்மையாக இப்பாடலில் காண்கிறார் கவிஞர். அனைத்து பாரத புதுமைப் பெண்களின் உருவமாகவும்.

அவள் உலகெங்கும் கல்வியின் ஒளியை எடுத்துச் செல்வாள். பார்த்தன் வில்லேந்தி அக்கிரமக் காரர்களை ஒழித்தது போல, அநீதியைக் கண்டு சீறி அநியாயம் செய்பவர்களை ஒழிப்பாள்.

வேதங்கள் பாடுவள் காணீர் – உண்மை
வேல் கையில் பற்றிக் குதிப்பாள்
ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்து
ஓதி உலகெங்கும் விதைப்பாள்.

பாரதப் போர் எனில் எளிதோ? விறல் –
பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடி வந்தாலும் கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள்.

இந்தப் பாடலுக்கு பாரதியார் கொடுத்திருக்கும் தலைப்பு “வெறி கொண்ட தாய்”. ஆம், சத்தியத்தின் மீது, நீதியின் மீது, கல்வியின் மீது, போர்க் குணத்தின் மீது வெறி கொண்டவள். அந்தத் தாயின் சன்னதம் இந்நாட்டின் பெண்கள் அனைவரின் மீதும் இறங்கிடுக. அவள் எழுக !

நாளை மீண்டும் சந்திப்போம்.

21 Replies to “பேயம்மை”

  1. . சுவாரசியமான விஷயம் இது. எங்கள் ஊரில் பேயன் குழி என ஊர் உண்டு. பேயன் பழமும் உண்டு. இந்த வாழை பழம் சிவனை குறிப்பதாக சொல்வார்கள். பேய் என்பதற்கான தொல்-ஆங்கில வார்த்தை Fay இதிலிருந்தே Fairy என்பது வருகிறது. (பார்க்க: https://en.wikipedia.org/wiki/Fairy) கிறிஸ்தவம் வந்த பிறகு அழிந்த அல்லது அடக்கப்பட்ட பாகன் பண்பாட்டு பெண் சக்திகள். சமணம்-பௌத்தம் ஆகியவற்றில் கீழ்மை அடைந்த தமிழக பண்பாட்டு பாகன் பெண் சக்திகள் காரைகாலம்மையாரால் சைவ புத்தெழுச்சியின் மூலம் மீண்டும் உயர்நிலை அடைந்திருக்கலாம்.

  2. நான் காலையில் காப்பி குடிக்கும் வழக்கமுடையவன். பரவாயில்லை. இந்தத் தேநீரும் நன்றாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் பழகினால் சரியாகிவிடும் என எண்ணுகிறேன்…:)

    “தகிக்கும் அறிவு” என்று ஒரு சொல்லாடல் தமிழில் இருக்குமாயின், அவ்வாறு “தகிக்கும் அறிவு” கொண்டவர்களாக மதிக்கப்படும் தகுதி உடையவர்களாக நண்பர்கள் ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களை வகைப்படுத்துவேன்.

    அன்புடன்,
    அ. ரூபன்.

  3. //கொங்கை திரங்கி, நரம்பு எழுந்து
    குண்டு கண், வெண்பல், குழி வயிற்று
    பங்கி சிவந்து, இரு பற்கள் நீண்டு,
    பரடு உயர் நீள் கணைக்கால் ஓர் பெண் பேய்
    தங்கி அலறி உலறு காட்டில்
    தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
    அங்கம் குளிர்ந்து அனல் ஆடும்,//

    இப்படி ஆடினால், உடலிலுள்ள சக்திகளனைத்தும் வெளியேறி, வறண்ட நிலத்தில் பல மைல்கள் நாய் துரத்தி வந்தவனின் தாகம் போல உடல். உயிர் சக்தி வேண்டி துடித்துக் கொண்டிருக்கும். இந்தச் சூழலில் இயற்கை சக்திகளை உள்ளிழுக்கும் வித்தை தெரிந்து சக்தியைக் கிரகிக்கும் போது ஏற்படுவதையே பேரானந்தம் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. (யார் சொன்ன கருத்துனு கேட்கப்படாது. ஏன்னா அது என் கருத்து தான்.).

    மேலும், இத்தகைய ஆட்டம், பேட்டரி போல டிஸ்சார்ஜ் & ரீசார்ஜ் செய்து கொண்டே இருக்கும் பட்சத்தில் உயிர் நீட்சிக்கான வாய்ப்பு மிக அதிகம். (பாபா 400 வருடங்கள் வாழ்ந்தார் என்பது போன்ற செய்திகள் கவனிக்கவும்). நம் உடலானது 200 வருடங்கள் கேரண்டி கொடுக்கப்பட்ட மெஷின். நாம் அதைச் சரியாகப் பராமரிக்காமல் விடுவதால் அல்பாயுசான 85ல் கூட இறந்து போகிறோம் :).

    சரி தலைப்பிற்கு வருவோம். பேய் என்பது பாரதி சொன்னது போல உக்கிரமான என்ற பதத்தையே குறிக்கிறது.

    பாலை நிலத் தாயொருத்தி தன் குழந்தைக்கு அமுதூட்டவும் பால் பற்றாமல் சுற்றி அலையும் போது அவளின் மனநிலை எப்படியிருக்கும்? அந்நியன் வந்து தன் வீட்டையும் குழந்தைகளையும் ஆக்கிரமித்து கொடுமை செய்வதைக் கண்ட பாரதத் தாயின் மனநிலை எப்படியிருக்கும்? அது போலவே தான் அடைய வேண்டிய இலக்கினை அடைய உக்கிரமாக இறைவனை வேண்டி தன் ஊன் உடலை வருத்தி ஆடும் காரைக்காலம்மை ஒரு பேயே!

    நன்றி!

  4. நல்ல பதிவு. தமிழகத்தில் என்றில்லை, உலகெங்கிலும் பாகன்மார் ‘crone’ என்று இன்று அழைக்கும் கிட்டத்தட்ட பேய்வடிவிலான முதுபெண்மையை வணங்கி வந்திருக்கிறார்கள். குறிப்பாய் கெல்தியர். கிறுத்துவம் எவ்வளவு முயன்று அழித்தாலும் இந்தத் தொன்மம் இன்றும் சில இடங்களில் கிட்டுகிறது.
    https://www.facebook.com/photo.php?fbid=172961492857537&set=pb.100004310615340.-2207520000.1386128948.&type=3&theater

  5. பேய் என்பது பயங்காட்டும் விஷயமானாலும் பாரதமாதா, சிவபெருமான் என வணங்கித் துதிக்கப்பெறுபவர்களை *பேய்* என்ற படிக்கு சித்தரித்து ஆனால் அதில் பொதிந்துள்ள தத்துவார்த்த விஷயங்களை விளக்கியது அருமை.

    அ.நீ யுடன் தேநீர் சாப்பிடுவது மகிழ்ச்சியே. தேநீருடன் அரட்டையில்லாமல் விட்டு விடுவோம்!!!!

    \\\\ தமிழக பண்பாட்டு பாகன் பெண் சக்திகள் \\\\

    ஸ்………மேற்கத்திய பாகனிய சொல்லை தமிழ் பண்பாட்டோடு இடைச்செருகல் செய்து காலயந்த்ரத்தில் எங்கேயோ ஏன் ப்ரயாணம் செய்கிறீர்கள் =D

  6. “தன் உடல் மீது கொண்ட வெறுப்போ, கணவன் அனுபவிக்காத உடலழகால் என்ன பயன் என்ற தன்னிரக்கமோ இதற்குக் காரணம் அல்ல. தன்னிச்சையாக சுதந்திரமாக வாழ விரும்பும் இளம் பெண்ணுக்கு இந்த முரட்டு ஆணாதிக்க சமூகத்தில் அவள் உடலே ஒரு தளையாகவும், பாதுகாப்பின்மையாகவும் ஆகி விடுகிறது; அதனால் தான் புனிதவதி பேயாகவும், ஔவை தொண்டு கிழவியாகவும் மாறி நடமாட வேண்டியிருந்தது என்று சில பெண்ணிய வாதிகள் இதற்கு விளக்கம் அளிக்கலாம். ஆனால், அதுவும் முழுமையான விளக்கம் அல்ல.”

    நன்றி திரு ஜடாயு அவர்களே. இதே பெண்ணியக் கோணத்தில் முன்பு நானும் சிந்தித்தது உண்டு. அம்மை பாதுகாப்பிற்காக பேயுருவம் கொண்டார்களோ என்று.நாம் நம் காலத்திய கண்ணாடி மட்டுமே கொண்டு பார்க்க , இப்படித் தோன்றலாம்.

    அப்படி இல்லவே இல்லை என்பது தான் இப்போது என் புரிதல். பாதுகாப்பு பற்றிய அச்சம் என்ற விளக்கமே முழுத் தவறு எனத தோன்றுகிறது.

    காரணம் இதுவே. பெரியோர் சொல்வது போல ஆணுக்கு மண், பெண், பொன் இவற்றின் மேல் ஆசை.அப்படியானால் பெண்ணுக்கு ?

    கணவன் , புத்திரன் என்ற பாசம் ஆத்மிகத்தை அடைய பெருந்தடை. அம்மையின் கணவன் அவரைத் துறந்து விட, பிள்ளைகள் இல்லாத நிலையில் மிச்சம் இருப்பது எது. ?
    உடல் கடந்து போக அம்மைக்கும் அவ்வைக்கும் தடையாக இருப்பது அவர்களது அழகும் இளமையுமே. மூப்பும், பேயுருவமும் சுற்றி பல பயணங்கள் செய்து இறைவனைப் பாட ஒரு தடையாக இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால் இது எல்லாருக்கும் முடியாது.

    இல்லறத்தில் இருந்து கொண்டே சிவனருள் பெற்ற மாதரசிகளையும் பெரிய புராணம் காட்டுகிறது. நாயன்மார்களில் பலரும் தான். கண்ணப்பரும் உண்டு. மணம் புரிந்து வாழ்ந்து சிவனுடன் மீண்டும் சென்று சேர்ந்த சுந்தரரும் உண்டு.

    அம்மையை நினைக்க வைத்த கட்டுரைக்கு மீண்டும் நன்றி.

    சாய்

  7. பேயம்மை என்று காரைக்காலம்மையாரை அழைத்து அருமையான சித்திரத்தினை வடித்துள்ளார் ஸ்ரீ ஜடாயு. பேய் என்ற கருத்தாக்கத்தில் அபிராஹாமியத்திற்கும் நமக்கும் உள்ளவித்தியாசம் மிகமுக்கியமானது என்ற ஜடாயுவின் கருத்து சிந்திக்கத்தகுந்தது. ஹிந்து நம்பிக்கைப்படி இறந்தவர்கள் பேயாகின்றனர். ஆனால் அபிராஹாமிய மதங்கள் இறுதித்தீர்ப்பு நாளை நம்பியுள்ளதாலும் மறுபிறப்பில் நம்பிக்கை கொள்ளாததாலும் அவர்கள் கருத்துப்படி மறைந்த மனிதர்கள் பேயாவதில்லை. மாறாக இறைவனுக்கு எதிரான தேவதைகள் சபிக்கப்பட்டு சாத்தானாகின்றன. அவர்கள் கருத்துப்படி பேயும் சாத்தானும் ஒன்றுதான்.

  8. /////ஆம். சத்தியத்தின் மீது………………………………………………………….வெறி கொண்டவள்///
    நாட்டில் ஊழல் மீதும் பதவி மீதும் வெறி கொண்டவர் ஒருவர்(Antonia Mino ) அராஜகம் அட்டூழியம், அயோக்கியத்தனம், அடாவடி என்று “””பேயாட்டம்””” ஆடிக் கொண்டிருக்கிறார். அதைபற்றி எல்லாம் கட்டுரை எழுதுங்கள் என்றால் “இந்திர்” பாட்டி பற்றி பாட்டிகதையும் பழங்கதையும் எழுதுவதில் எள்ளளவும் பயனில்லை. Electron அளவும் நயனில்லை.

    தமிழ்நாட்டில் பிஜேபி சார்பாக காட்சி ஊடகமோ (Visual media ) அச்சு ஊடகமோ (Print media ) எதுவுமில்லை. எதோ “தமிழ் ஹிந்து” என்ற இணையம் ஒன்று உள்ளது. மோடி பற்றி அன்றாடம் 1)திக் விஜய் சிங் 2) மனிஷ் திவாரி 3)ராகுல் வின்சி 4) Antonia Mino ஆகியோர் அடுக்குக்காக குற்றங்களை சுமத்துகின்றனர். அவற்றையெல்லாம் மெருகிட்டு முலாம் பூசி தக தகவென்று பளபளப்பாக்கி
    இந்து போன்ற தமிழ் செய்திதாள்கள் வெளியிட்டு மோடி மீதும் பிஜேபி மீதும் சேறை வாரி ஊற்றுகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்க ஒரு “தினசரி” இல்லை.அப்படியானால் பாமர மக்கள் அந்த “இந்து” சொல்வதை நம்பிதானே ஆகவேண்டும். குறைந்த பட்சம் இந்த இணையத்திலாவது பதிலடி கொடுப்பீகள் என்று நினைத்தால் ஒரு செய்யுளை எழுதி அதற்கு பொழிப்புரையை அருஞ்சொற்களோடு கொடுத்து வருகிறீர்கள்.பள்ளி மாணவர்களுக்கு Tuition ஆ எடுக்கிறீர்களா? இதை “ஆஹா, ஓஹோ” என்று பாராட்டுவதற்கேன்றே சிலர் காலங்காத்தாலயே காத்துகொண்டிருகின்றனர் ஊர் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்! பாரத நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கையில் நீரோ (திரு ஜடாயு) இசைகச்சேரி நடத்துகிறீர்கள். சபாஷ்! அதற்கு பக்க்பாட்டு படுபவர்கள் உங்களை விஞ்சுகிறார்கள். சரியான போட்டி!

    வரும் தேர்தலில் நம் வலிமையை காட்டவேண்டுமென்றால் தற்போதைக்கு நாம் பக்தியை கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டும் .நமக்கு பக்தி பெருகினால் முக்தி கிடைக்கும். ஆனால் யுக்தியோடு நடந்தால்தான் பாராளுமன்றத்தில் நமக்கு சக்தி (power ) கிடைக்கும். ஆட்சியில் அமர்ந்தபின் காலையில் மட்டும் அல்ல மாலையில் கூட ஒரு தேனீர் அருந்துங்கள் யார் வேண்டாம் என்றது? “work while work and play while play ” என்றொரு proverb உள்ளது. இப்போது தேர்தல் work இருக்கிறது அதை செய்வோம்.முடிந்தவுடன் நமது கடவுளிடமும் உங்கள் பேயுடனும் நாமனைவரும் சேர்ந்து விளையாடுவோம். இந்த முறை (கும்பகர்ணன்) குறட்டை விட்டு (செங்)கோட்டையை கைவிட்டு விட்டால் அப்புறம் கட்டிய மனக்கோட்டை எல்லாம் தவிடு பொடிதான். நேரமறிந்து செயலாற்றுங்கள். I can impel. But I cannot compel. That’s what I can tell.

  9. திரு, ஹானஸ்ட் மேன், நீங்கள் சொல்ல வருவது – காரைக் காலம்மையார் வேண்டாம். வெறும் சோனியா வசை மழை போதும். அன்றாட தெருச்சண்டை அரசியலைத் தாண்டி வேறு எதுவுமே பேசத் தேவையில்லை. நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? சதா சர்வகாலமும் காங்கிரசைத் திட்டிக் கொண்டிருப்பது, எதிர்த் தரப்பு என்றூ கருதுபவைகளை வசைபாடிக் கொண்டே இருப்பதற்குப் பெயர் தான் ஹிந்துத்துவம் என்றா? அது ஒருவிதமான மூர்க்கத் தனம் மட்டுமே.

    தமிழ்ஹிந்து வெறும் அரசியல் தளமோ, பிரசார பீரங்கியோ *மட்டும்* அல்ல. இது ஹிந்து அறிவியக்கத்திற்கான ஒரு தளம். இங்கு அரசியலோடு, அறிவியல், வரலாறு, கலை, கலாசாரம், ஆன்மீகம், சினிமா, இலக்கியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச் சூழலியம் எல்லாமே பேசப் படும். பேசப்பட வேண்டும்.

  10. திரு . ஜடாயு ….

    //இது ஹிந்து அறிவியக்கத்திற்கான ஒரு தளம். இங்கு அரசியலோடு, அறிவியல், வரலாறு, கலை, கலாசாரம், ஆன்மீகம், சினிமா, இலக்கியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச் சூழலியம் எல்லாமே பேசப் படும். பேசப்பட வேண்டும்.//

    இதையெல்லாம் பேசவேண்டாம் என்றி திரு . ஹானஸ்ட் மேன் கூறவில்லை … நன்றாக பேசுங்கள் .ஆனால் அவர் சொல்லவருவது என்னவென்றால் இந்திய நாடு வெள்ளையனிடம் அடிமை பட்டு கிடந்த போது எப்படி நம் முன்னோர்கள் கலை, இலக்கியம் என்று அனைத்தையும் சுதந்திர வேள்விக்காக மட்டுமே அர்பணித்தார்களோ. அதே போன்று இப்போது காங்கிரசிடமும் இத்தாலிய மாதிடமும் அடிமை பட்டு வெள்ளையன் ஆட்சியே பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு கெட்டழுகி நாறும் நம் இந்திய தேசத்தை காப்பாற்ற மக்களை தயார் செய்ய வேண்டும் … அதற்க்கு எதுவாக நம் தமிழ்இந்து தளத்தில் கட்டுரைகள் மட்டுமே இப்போதைக்கு அதிக அளவில் வெளிவர வேண்டும் என்கிறார் . காங்கிரசு ஆட்சி ஒழிய வேண்டும் மோடியின் ஆட்சி மலர வேண்டும் அதற்க்கு ஏதுவான சிந்தனைகளையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தங்களின் கட்டுரைகள் அமையட்டுமே என்கிறார்… நியாயமான கோரிக்கை தானே. பரிசீலிக்கவும்.

    ஆகையால், காங்கிரசிடம் இருந்து நாட்டை காப்பாற்றியவுடன் .. காரைக்கால் அம்மையார் பேய் உருவம் கொண்ட புராணம் … அவ்வை கிழவியான கதை … நரி எப்படி பரியானது என்பதற்கு நாத்திகர்களே திணறி பொய் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு விஞ்ஞான ரீதியான வியாக்கியானம் எழுதுவது போன்றவைகளை பின்பு பார்த்து கொள்ளலாம் …

  11. ஐயா நேர்மையாளர்
    “ஊர் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்! பாரத நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கையில் நீரோ (திரு ஜடாயு) இசைகச்சேரி நடத்துகிறீர்கள். சபாஷ்! அதற்கு பக்க்பாட்டு படுபவர்கள் உங்களை விஞ்சுகிறார்கள். சரியான போட்டி!”
    கொஞ்சம் நாகரிகம எழுதுங்கள்.
    உங்களுக்கு சரியான பதிலை ஸ்ரீ ஜடாயு வழங்கிவிட்டார். உங்களது மேற்கண்ட பின்னூட்டத்திலிருந்து ஹிந்துத்துவத்தினை நீங்கள் சரியாகப்புரிந்துகொள்ளவில்லை என்று புரிகிறது. ஹிந்து சமயம், பண்பாடு, தத்துவம், இலக்கியம் ஆகியவற்றைப்பற்றி ஆழ்ந்து புரிந்துகொள்ளுதல் இன்றி அதை வெறும் அரசியல் மாற்றத்தால் மட்டும் பாதுகாத்துவிட முடியாது. ஹிந்து உணர்வென்றால் பிரச்சினை வந்தால் வரும் கோபம் போல் அன்று. கிராமத்து திருவிழாவில் மேளம் அடித்தால் சாமி வருவது போலவும் அன்று. எப்பொழுதும் நெஞ்சத்தில் நிற்கும் உணர்வு. அந்த உணர்வினை இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கு நம்முடைய இலக்கியங்களைப்பற்றிய புரிதல் பயன்படும். அதைத்தான் ஸ்ரீ ஜடாயு தொடர்ந்து செய்துவருகிறார். ஸ்ரீ அ நீ செய்துவருகிறா. ஸ்ரீ வெங்கடேசன் செய்துவருகிறார்.
    ஹிந்துத்துவம் பல பரிணாமங்களைக்கொண்ட ஆலமரம் அதை வெறும் தேர்தல் அரசியலாய் சுருக்கிட முயலவேண்டாம் ஸ்ரீ ஆனஸ்டு மேன். காங்கிரசின் முகத்திரையை கிழிக்க கட்டுரை எழுதவிரும்பினால் எழுதி தமிழ் ஹிந்துவின் ஈமெயிலுக்கு அனுப்பலாமே.
    ஈமெயில் இதுதான்: tamizh.hindu@gmail.com.
    அதைவிட்டு நீரோ பிடில் என்றெல்லாம் விமர்சிப்பது அழகாக இல்லை. ஹானஸ்டாக இருங்கள் ஆத்திரப்படவேண்டாம்.

  12. அன்பார்ந்த ஸ்ரீ ஹானஸ்ட்மேன்

    நடப்பு அரசியல் நிகழ்ச்சிகளில் நம் கவனம் அதிகமாகச் செல்ல வேண்டும் தான். ஆனால் அத்துடன் நமது வாழ்வு முடிந்து விடுவதில்லை.வாழ்க்கையின் பல பரிமாணங்களிலும் நமது அறிவு பூர்வமான உரையாடல்கள் தொடர வேண்டும்.

    பொது ஊடகங்களில் அரைத்த மாவையே அரைக்கும் உரத்து உச்சாடனமிடும் போக்குகள் தொடர்கின்றன. இணைய தளங்களிலும் அறிவு சார்ந்து உரையாடாது உரத்துப் பேசும் போக்குகள் பெருமளவில் காணக்கிடைக்கின்றன.

    தமிழ் ஹிந்து தளம் இதிலிருந்து விலகி தன் வ்யாசங்கள் தன் உரையாடல்கள் இவற்றில் கூர்மையான பார்வை, கண்யமான உரையாடல்கள் இவற்றால் மெருகு கூடி வருகிறது.

    இந்த உரையாடல்களில் தங்களது பங்கும் கணிசமானது.

    அதைத் தொடரவும். அரசியல் தவிர்த்த மற்ற திரிகளிலும் கூட தங்கள் உத்தரங்கள் விஷய பூர்த்தியுடன் இருக்கின்றன. தங்களுக்குப் பிடிக்காத திரிகளை தாங்கள் புறக்கணிக்கலாம். எங்கெல்லாம் தங்களுக்கு அறிவு பூர்வமான அபிப்ராய பேதங்கள் தென்படுகின்றனவோ அவற்றைப் பதிவு செய்யலாம். ஆனால் இந்த திரியே வேண்டாம் என வாசகர்களான நாம் முடிவெடுக்க முடியாது அல்லவா? அதை தளத்தின் ஆசிரியர் குழுவிடம் விட்டு விடுவோமே….

  13. திரு ஜடாயு அவர்களுக்கு பதில்:—– சதா காங்கிரஸ் மற்றும் சோனியாவை வசைபாடவேண்டும் என்றா சொல்லுகிறேன். அவர்கள் நம் மீது குற்றம் சுமத்துகிறார்கள். அந்த குற்றசாட்டுகளுக்கு பதில் சொல்ல நமக்கு newspapers எதுவுமில்லை. அதனால் இந்த இணையதளததிலாவ்து பதில் கொடுங்கள் என்றால் நீங்கள் என்ன நினைத்து கொண்டிருக்கிறீர்கள்? என்று மிரட்டும் பாணியில் கேள்வி கேட்கிறீர்கள். தமிழ் இந்து தளத்தில் அரசியல் அறிவியல் ஆன்மிகம் சினிமா “”””அனைத்தையும்”””” பேசவேண்டும்.என்று சொல்கிறீர்கள். யார் வேண்டாம் என்று சொன்னது? தாராளமாக பேசுங்கள். ஒரு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அந்த குழந்தைக்கு பாலூட்டும் தாய் தனக்கு பிடித்த “”””அனைத்தையும்”””” சாப்பிடமாட்டாள் அந்த நேரத்தில் குழந்தைக்கு எது நல்லதோ அதை மட்டும் சாப்பிடுவாள்.அவள்தான் நல்ல தாய். நாளை மறுநாள் ஆண்டுத்தேர்வு என்று இருக்கும்போது அவனது தந்தை டிவி பார்க்காதே சினிமாவுக்கு போகாதே என்று கூறுவார் அவர் “””””தாயுமானவர்””””போன்ற நல்லவர்.. ஆனால் அதற்கு முன்னோ அல்லது தேர்வு முடிந்தோ அப்படி அவர்கள் சொல்லமாட்டார்கள். நல்லதை சொன்னால் அது மூர்க்கதனமாகுமா?

    திரு சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களுக்கு என் பதில்::—– நல்லதை சொன்னால் நான் அயோககியனா? (அதாவது dishonest man ஆ?) . காங்கிரஸ் ஆட்சியின் அராஜகம் அழிய எப்படி ஒருமுனைப்பாட்டு உழைக்கவேண்டும் என்பதை மாத்திரம் சொல்லியிருக்கிறேன், அதற்கு பெயர் ஆத்திரம் அல்ல. அவ்வளவுதான்..தத்துவம், இலக்கியம் ஆகியவற்றை அரசியல் மாற்றத்தால் மட்டும் பாதுகாக்கமுடியாது.என்று கூறுகிறீர்கள். தீயவர்களின் கையில் அரசியல் சிக்கினால் (தீய)மாற்றம் ஏற்பட்டே தீரும். அரசியல் மாற்றத்தால் நாலந்தா பல்கலைகழகம் அழிந்த விவரத்தை மறந்து விட்டீர்களா? வெறும் கட்டிடம் மட்டுமா அழிந்தது? பல அரிய நூல்களும் சேர்ந்தே அழிந்தன. வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மதகலவர தடுப்பு சட்டம் வரட்டும். அப்புறம் தெரியும் நமது நிலை. மெல்ல மெல்ல இந்துக்கள் அழிக்கப்பட்டபின் இலக்கியம் இருக்குமிடம் இல்லாமல் போகும். .தத்துவம் தடுமாறும்.பண்பாடு படாத பாடுபடும்.

    திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு பதில்:—–:: வட்டாட்சி அலுவலகம் என்பது பட்டா மாற்றம், ரேஷன் கார்ட் வழங்கல், சாதி சான்று வழங்கல் என்று பலபல பணிகளை செய்யும் அலுவலகமாகும். ஆனால் தேர்தல் நேரம் வந்துவிட்டால் அலுவலகத்தில் உள்ள அனைவரும் தேர்தல் பணியிலேயே அதி தீவிரமாய் இருப்பார்கள். நீங்கள் சொல்வது போலத்தான் “”””””தற்போது””” அரசியலில் தீவிர கவனம் செலுத்துங்கள் என்று சொல்கிறேன். ஆனால் அத்தோடு வாழ்வு முடிந்துவிடாது என்பது உண்மை. அதற்கு பின்னர் ((((வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாளர்கள் தேர்தல் முடிந்தபின் மற்ற normal பணிகளில் ஈடுபடுவது போல)))) அரசியல் தவிர்த்து மீதி அனைத்தை பற்றியும் எழுதலாமே!நான் ஆட்சேபனையா செய்யபோகிறேன்? இந்த உரையாடல்களில் எனது பங்கும் கணிசமானது என்று கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா. வாசகர்கள் முடிவெடுக்கமுடியாது என்பதை நானும் நன்கு அறிவேன். அதனால்தான் எனது மறுமொழியில் “”I can ………………………compel ” என்று சொன்னேன். ஆகவே இந்த இணையதளத்தினர் என்ன முடிவெடுக்கிறார்களோ அதை தடுக்க நான் யார்? ஆனால் மத்தியில் தாமரை மலரும். இந்துக்கள் கண்ணீர் உலரும் என்று நரேந்திர மோடியை நம்பி நாம் நம் மனதில் கட்டியுள்ள மனக்கோட்டையானது மண்கோட்டை போல சரிந்து அதனால் பிஜேபிக்கு மானக்கேட்டை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ஆசையில்தான் இப்படி அலறுகிறேன். ஆனால் இந்த அலறல் உங்களுக்கு எரிச்சலூட்டுகிறது. அப்படித்தானே?

  14. திரு.Honest Man,

    இது பா.ஜ.க-வினரை பார்த்து கேட்கவேண்டிய கேள்வி – சொல்லவேண்டிய அறிவுரை. இந்த இணைய தளத்தை படிப்பவர்களுக்கு காங்கிரஸ் கும்பல் ஆடும் பேயாட்டத்தை பற்றியோ – அவர்கள் முழுமுற்றாக துடைத்தெறியப்படவேண்டியது ஏன் என்பது பற்றியோ புதிதாக எதுவும் சொல்ல வேண்டிய தேவை இல்லை. அல்லது இந்த இணைய தளத்தில் “மட்டும்” காங்கிரஸ் கும்பலுக்கு பதிலடி கொடுப்பதன் மூலம் எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. தமிழகத்தில் இன்றைய நிலையில் காட்சி ஊடகத்தால் மட்டுமே பெரிதாக எதையும் செய்யவேண்டும். அதற்கு பா.ஜ.க-வினர் முதலில் தங்களது காட்சி ஊடகத்தை வலுப்படுத்தி பெரும்பான்மை மக்களை சென்றடைய முயற்சிகள் எடுக்கவேண்டும்.

    உண்மையிலேயே தமிழக பா.ஜ.க-வினர் தங்களது கட்சி குறித்தும் அடுத்த லோக்சபா தேர்தலில் வெல்லவேண்டிய அவசியம் குறித்தும் அக்கறையோடுதான் இருக்கிறார்களா என்றே எனக்கும் ஐயமாகத்தான் உள்ளது. ஆனால் அதுபற்றி உரையாடவேண்டிய தளம் வேறு.

    அதற்காக அவர்கள்தான் முக்காடு போட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்களே, நீங்களாவது அவர்களது பணியை இங்கு ஆற்றுங்களேன் என்பது, கொல்லன் பட்டறையில் ஊசி விற்கக்கோருவது போன்றது.

  15. திரு பொன் முத்துகுமார் அவர்களே! உங்கள் கருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள். அவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை.No Doubt

    1) இந்த இணையத்தில் மோடி பற்றி ஓடி ஓடி கட்டுரைகளை ( மோடி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்) எழுதினார்கள் அதனால் பிஜேபி மீது அக்கறை உள்ளது என்று எண்ணி கேட்டேன் பல கேள்வி. ஆனால் அதில் நான் அடைந்தது முழு தோல்வி

    2)உமது பிஜேபிகாரர்கள் தூங்குகிறார்கள் (ஊமை தொண்டர்கள் ஏங்குகிறார்கள்)என்று சொல்கிறீர்கள். இந்த இணையதிற்கும் அது தெரியுமா? அப்படியானால் இவர்கள் அதை அவர்களுக்கு கூறலாமே! ஏன் அவர்களுக்கும் இவர்களுக்கும், ஆகாதோ? இவர்கள் கூறும் வார்த்தைகள் அவர்கள் காதுக்குள் போகாதோ? இவர்கள் பப்பும் அங்கு வேகாதோ?

    4)கூறும் குற்றசாட்டுகளுக்கு யாரும் பதில் சொல்லாமல் மயான அமைதி காத்தால் “SILENCE MEANS CONSENT ” என்ற அடிப்படையிலும் ஒரு பொய் திரும்ப திரும்ப சொன்னால் அதுவே மெய்யாகிவிடும் என்ற ஜோசப கோயபல்ஸின் தத்துவத்தின் அடிப்படையிலும் காங்கிரஸ் கூறும் குற்றசாட்டுகள் அனைத்தும் உண்மைதான் என்று அப்பாவி மக்கள் நம்பி விடுவார்களே என்ற பயத்தில் கோரிக்கை வைத்தால் அவரவர்கள் என்னை வைதால் நான் என்ன செய்ய? (ஆனால் திரு தாயுமானவனுக்கு மட்டும் நன்றி) “கொல்லன் பட்டறையில் ஊசி விற்றார் போல”. இது இங்கே.சற்றேனும் பொருந்துகிறதா? இந்த பழமொழியை இன்னொரு வாசியுங்கள் அதன்பின் நன்கு யோசியுங்கள். பேய் கதை நாய் கதைதான் படம் பிடித்து எழுதுவோம் என்று அடம் பிடித்தால் எனக்கென்ன வந்தது நஷ்டம்? 100 கோடி (இந்து) மக்கள் படப்போகிறார்கள் கஷ்டம். அதை நானும் பட எனக்கும் இஷ்டம்.

    4)இவ்வளவு பெரிய பெரிய ஊழல்கள் செய்தும் விலைவாசிகள் விண்ணை முட்டிநிற்கும் நிலையிலும் காங்கிரஸ் ஆராஜக ஆட்சி மீண்டும் வருமானால் மோடி ஏழேழு ஜென்மம் எடுத்து வந்தாலும் PM ஆகவே.முடியாது ஆகவே இந்துக்களுக்கு நல்ல காலம் விடியவே விடியாது. மோடியை தலை மீது ஏற்றி வைத்து பேசியவர்கள் காங்கிரஸ் அவரை தூற்றி பேசும்போது கை கொடுக்க வருவார்கள் என்று நினைத்தேன். என் நியாயம் யார் கண்ணுக்கும் புலப்படவில்லை.ஆனால் என் காலை உடைக்கவும் என் வாயை அடைக்கவும் தான் பலரும் தங்கள் மூளையை பயன்படுத்துகின்றனர்.

    5)ஒருவனுக்கு பசி வயிறை கிள்ளும்போது சுடு சோறு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது இருக்கும் பழஞ்சோறாவது (=COLD RICE ) போடுங்கள் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவது போல தற்போது கைவசம் இருக்கும் இந்த இணையத்திலாவது எழுது அதன் மூலம் ஏதாகிலும் பாருங்கள் பழுது என்று அழுது தொழுது பார்த்தேன்.. இந்த இணையத்தில் மட்டும் எழுதினால் (மக்கள் கும்பகர்ணம் தூக்கம் கொண்டிருப்பதால்) பெரிய தாக்கம் ஏற்படாது .என்று கூறுகிறீர்கள். இந்த இணையத்தை 1000 பேர் படித்தால் அவர்கள் ஒவ்வொருவரும் தலா 10 பேருக்கு எடுத்து சொன்னாலும் அது பூதாகரமாக விரியாதா? இது உமக்கு புரியாதா? பிதுங்குகிறதா உமக்கு விழி? அப்புறம் வேறு என்னதான் வழி? சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பம்பூ தான் சர்க்கரை என்பது போல இந்த இணையத்தின் மீது தான் விழும் பழி. கூட இருந்தே மோடிக்கு பறிக்கப் போகிறதா குழி?

    காங்கிரஸ் போடும் பேயாட்டத்தை பற்றி புதிதாக எதுவும் சொல்ல இல்லை. எங்களுக்கு பழைய பேய்களை பற்றி பேசவே போதிய நேரம் இல்லை என்று சொல்கிறீர்களா? “”வேப்பமர உச்சியிலே பேயொன்னு ஆடுதினனு”” என்ற கருத்துள்ள பாட்டொன்று என் காதுகளில் கேட்கிறது. நான் அதை கேட்டுவிட்டு அப்புறம் வந்து உங்களோடு வாதாடுகிறேன். வட்டமா?

  16. நல்ல பதிவு.

    “HONEST MAN”, உங்கள் அக்கப்போரை தயவு செய்து நிறுத்துகிறீர்களா? ஏதோ தமிழ் ஹிந்து 2 நாள் மோடியைப் பற்றி எழுதாவிட்டால் பாஜகவுக்கு தேர்தலில் 20 சீட் குறைந்து விடும் என்பது போல எகிறி குதிக்கிறீர்களே.. அந்த மாதிரி பிரசாரங்களை இணையத்தில், பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் அல்லும் பகலும் பாஜக ஆதரவாளர்கள் செய்து கொண்டே தானே இருக்கீறார்கள்.. உங்களுக்கு அது பற்றி எல்லாம் தெரியாதா? இங்கு மட்டும் தான் நீங்க கும்மியடிப்பீங்களா? தமிழ்ஹிந்து சில இலக்கிய – ஆன்மீக – வரலாறு கட்டுரைகளை வெளியிட்டு விட்டதால் “100 கோடி (இந்து) மக்கள் படப்போகிறார்கள் கஷ்டம்” என்றெல்லாம் கதறுகிறீர்கள்.. உங்களைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா அல்லது பரிதாபப் படுவதா என்று தெரியவில்லை. அவ்வளவு கருத்துள்ள ஆள் என்றால் நீங்கள் ஏன் தமிழக பாஜக காரர்களிடம் போய் தேர்தல் பிரசாரத்துக்காக 3 – 4 தமிழ் இணைய தளங்களை அவர்கள் நடத்த வேன்டும் என்றூ சண்டை போடக் கூடாது.., கட்சியில் பணம் இல்லையா? ஆள் இல்லையா? ஏன் தமிழ்ஹிந்து மட்டும் தான் அதை செய்ய வேன்டுமா?

    // பேய் கதை நாய் கதைதான் படம் பிடித்து எழுதுவோம் என்று அடம் பிடித்தால் // என்ற வார்த்தைகளில் உங்கள் மொண்ணைத் தனமும் மடமையும் தெரிகிறது. இந்தக் கட்டுரை சொல்ல வரும் விஷயம் என்ன என்பது உங்கள் மண்டையில் ஏறவே இல்லை போல 🙁

    நான் 4 வருடங்களாக இந்தத் தளத்தை படித்து வருகிறேன். அரசியல் பிரசாரங்களை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் ஹிந்துத்துவத்தின் ஆதார கொள்கைகளை கற்றுக் கொடுக்க தமிழ் ஹிந்து மட்டும் தான் இருக்கிறது. அது தான் முக்கியம்.

    ஆசிரியர் குழுவுக்கு ஒரு வேண்டுகோள் . தயது செய்து பதிவுக்கு சம்பந்தமே இல்லாத இத்தகைய பயனற்ற கமென்ட்களை வெளியிடாதீர்கள். வாசகர்க்ளின் நேரத்தை வீணடிக்காதீர்கள். நன்றி.

  17. திரு சக்திவேல் அவர்களே! கடந்த 4 வருடங்களாக இந்துத்துவா கொள்கை படித்து வந்தவர் இப்படித்தான் “மடமைத்தனம்” “மண்டையில் ஏறாது போல” என்ற வார்த்தைகளை பயன் படுத்துவார்களா? நாகரிகத்தை பற்றி திரு கிரூஷ்ணகுமார் என்ற Gentleman இடம் கற்று கொள்ளுங்கள். நான் இந்துத்துவாவை படிக்காதவன் நான் அப்படி பேசினாலும் தவறில்லை..ஆனால் நீர்?? பேய் கதைகளை படித்ததின் விளைவோ என்னவோ? என் அக்கப்போரை நான் நிக்கவைக்கத்தான் போறேன். ஆனால் அது உமக்காக அல்ல.. நிர்வாண நாட்டில் கோவணம் கட்டியவன் பைத்தியகாரன். என்பார்கள். நான் கோவணம் கட்டியதால் பைத்தியகாரன் ஆனேன் என்பதை உணர்ந்து இந்த subject லிருந்து விலகுகிறேன்.

  18. அன்புள்ள Honest Man !!

    உங்கள் ஆதங்கம் புரிகிறது, ஆனால் எதற்காக இப்படி பொங்குகிறீர்கள் ? டி.ராஜேந்தர் பாணியில் வெளுத்து வாங்குகிறீர்கள் போங்கள் 🙂

    1. ஆமாம், ஒடி ஓடி எழுதினார்கள் மோடியை ஆதரித்து. ஆனால் அது அரசியல் செயல்பாடு அல்ல. அரசியல் ஆர்வலர்களாக, தேசத்தை வழிநடத்தும் சரியான தலைமை என்று கட்டுரை ஆசிரியர்கள் தாம் நம்புவதை காரண காரியங்களோடு விரிவாக விளக்கி எழுதப்படும் பதிவுகள் அவை. பா.ஜ.க-வின் மீது அக்கறை இல்லாமலா மோடியை ஆதரிக்கிறார்கள் ?

    2. அதென்ன “உமது பிஜேபிகாரர்கள்” ?? 🙂 தமிழ் ஹிந்து இணைய தளத்தாரின் பா.ஜ.க தொடர்பு பற்றி யானறியேன். எனவே இந்த ஆகாதோ / போகாதோ / வேகாதோ கேள்விக்கு அவர்கள்தான் விடையளிக்கவேண்டும்.

    3. நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் நிஜமாகவே உண்மைதானா ? காங்கிரஸின் பொய்களை தோலுரித்துக்காட்டவே இல்லையா ? சமீபத்திய பாட்னா குண்டு வெடிப்பு சம்பந்தமான காங்கிரசின் பித்தலாட்டம் தொடர்பான கட்டுரைகளும் வந்துள்ளனவே. அப்புறமும் ஏன் இப்படி ‘எதுவுமே இல்லை’ என்பது போல சொல்கிறீர்கள் ?

    யோசித்துத்தான் அந்த பழமொழியை சொன்னேன். இந்த தளத்தை வாசிப்பவர்களுக்கு காங்கிரசின் மக்கள் விரோத போக்கு குறித்து புதிதாக சொல்ல ஏதும் இல்லை. எனவேதான் இங்கு அதையே திரும்ப திரும்ப எழுதுவது என்பது கொல்லன் பட்டறையில் ஊசி விற்பது போல என்று எழுதினேன்.

    4. மோடி பற்றிய காங்கிரசின் அவதூறுகளுக்கு இங்கும் பதில் கட்டுரைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. மேற்சொன்ன பாட்னா குண்டுவெடிப்பு பற்றிய கட்டுரைகள் உதாரணம். மேலும் இது பா.ஜ.கட்சி ஊடகமல்ல. அரசியல், ஆன்மீகம், இலக்கியம், தத்துவம் என்று பல்வேறு தளங்களில் இந்து மதத்தை விவாதிக்கும் / உரையாடும் ஒரு இணைய தளம். அதில் எல்லா பக்கங்களுக்கும் இடம் உண்டு. ‘இது தேர்தல் காலம், என்வே மற்ற தள உரையாடல்களை நிறுத்திவிட்டு மோடி தொடர்பான விவாதங்களை மட்டுமே முன்னெடுக்கவேண்டும்’ என்று எதிர்பார்ப்பதை எப்படி புரிந்துகொள்வதென்று தெரியவில்லை. ஏன், நீங்களேதான் ஒரு கட்டுரை எழுதுங்களேன், வேண்டாமென்றா சொல்லிவிடப்போகிறார்கள் ? (சாமி, இதை கிண்டல் என்று எடுத்துக்கொள்ளவேண்டாம், நிஜமாகத்தான் சொல்கிறேன்)

    5. // இந்த இணையத்தை 1000 பேர் படித்தால் அவர்கள் ஒவ்வொருவரும் தலா 10 பேருக்கு எடுத்து சொன்னாலும் அது பூதாகரமாக விரியாதா? இது உமக்கு புரியாதா? // உங்களது மகத்தான தன்னம்பிக்கைக்கு நன்றி. 🙂 விழி, வழி, பழி, குழி …. யப்பப்பா … 🙂

  19. சமீபத்தில் வாசித்து மிகபிடித்த கட்டுரை இதுதான் .நன்றி ஜடாயு சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *