வன்முறையே வரலாறாய்… – 19

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

’அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்குமான காலகட்டத்தில் இஸ்லாம் தென்-கிழக்கு ஆசியாவில் பரவியது. அந்த நேரத்தில் தென்-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மூன்று வலிமையுள்ள அரசாங்கங்கள் ஆண்டு கொண்டிருந்தன. மலேசியாவில் ஸ்ரீவிஜயர்களும், இந்தோனேஷியாவில் மஜாபஹித்களும், தாய்லந்தை சயாமிய அரசர்களும் ஆண்டு கொண்டிருந்தார்கள். அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பொதுவாக இந்து, பவுத்த மற்றும் பழங்குடி நம்பிக்கைகள் கொண்டவர்கள்.

காலிஃபா ஒத்மான் (656) காலத்தில் சீனாவுடன் வணிகம் செய்யச் சென்ற இஸ்லாமியர்கள் வழியிலிருந்த இந்தோனேஷியாவுடன் முதன் முதலாக தொடர்பு கொள்ள ஆரம்பித்தார்கள். அதற்கு பல வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீவிஜய அரசர்களுடன் தொடர்பு கொண்ட முஸ்லிம் வணிகர்கள் சுமத்திராவின் துறைமுகங்களை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். 904-ஆம் வருடத்திலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை இந்தத் தொடர்பு மேலும் கூடியது. இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிலைபெற்ற பின்னர், இந்தியாவின் குஜராத், வங்காளம், மற்றும் தென் இந்தியாவிலிருந்து முஸ்லிம் வணிகர்கள் இந்தோனேஷியாவிற்கு பெருமளவில் வருகை தர ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு இந்தியாவிலிருந்து சென்ற முஸ்லிம் வியாபாரிகள் இஸ்லாமை அங்கு (இந்தோனேஷியாவில்) பரப்பி, நிலை நிறுத்தும் எண்ணத்துடனேயே சென்றார்கள். கரையோர துறைமுக நகரங்களான மலாக்கா மற்றும் வடக்கில் சுமத்ராவிலிருக்கும் சமுத்ராவில் (அல்லது பசாய், ஜாவா) சென்று தங்கினார்கள். அங்கிருந்த காஃபிர் பெண்களை மணந்து இஸ்லாமிய குடும்பங்களைப் பெருக்கினார்கள். இவ்வாறு சிறு அளவில் பத்தாம் நூற்றாண்டில் ஆரம்பித்த முஸ்லிம் குடியேற்றம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் சுமத்ரா பகுதியில் பல்கிப் பெருகியிருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இரண்டு சிறு நகர ராஜ்ஜியங்களை – சமுத்ராவில் (பசாய்) மற்றும் பெர்லாக்கில் – உருவாக்கியிருந்தார்கள். மொராக்கோ நாட்டுப் பயணியான இப்ன்-பதூதா 1345-46-ஆம் ஆண்டுகளில் முஸ்லிம் நகர அரசுகளில் ஒன்றான சமுத்ராவிற்கு சென்றதாகக் குறிப்பிடுகிறார்.

பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் இந்தோனேஷிய காஃபிர்கள் எவரும் பெருமளவிற்கு இஸ்லாமிற்கு மதம் மாறவில்லை. காஃபிர்களின் சகிப்புத்தன்மையை உபயோகித்துக் கொண்ட முஸ்லிம்கள் பெருமளவிலான காஃபிர் பெண்களை மணந்து தங்களின் எண்ணிக்கையைக் கூட்ட ஆரம்பித்தார்கள். ஓரளவிற்குத் தங்களின் எண்ணிக்கையை கூட்டிக் கொண்ட முஸ்லிம்கள் அதனைத் தொடர்ந்து அங்கிருந்த காஃபிர்களின் மீது பயங்கரமான ஜிகாதினை (“புனிதப் போர்”) நடத்தா ஆரம்பித்தார்கள். சுல்தானிய நகரான சமுத்ராவிற்குச் சென்ற இப்ன்-பதூதா, அப்போது அதனை ஆண்டு கொண்டிருந்த சுல்தான் அல்-மாலிக் அஸ்-ஜாகிரை “மிகச் சிறந்த மற்றும் திறந்த கரங்களை” உடையவராக வர்ணிக்கிறார்.

“சுல்தான் அல்-மாலிக் தொடர்ந்து காஃபிர்களின் மீது “புனிதப் போர் (ஜிகாத்)” செய்பவராக இருந்தார்….காஃபிர்களின் வாழ்விடங்களின் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் அவரால் மேற்கொள்ளப்பட்டன….சுல்தானின் படைகள் அந்தப் போரில் மிகவும் உற்சாகம் உடையவர்களாக அவருடன் இந்தப் புனிதப் போரில் பங்கெடுத்தார்கள். அங்கிருந்த காஃபிர்களின் மீது தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தி, அவர்கள் அமைதியாக வாழ வேண்டுமானால் வரி (ஜிஸியா) கொடுக்கும்படி வைத்தார்கள்”

இருப்பினும் பதினான்காம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தோனிஷிய இஸ்லாம் பெருமளவிலான காஃபிர்களை மதம் மாற்றம் செய்ய இயலாமல், அங்கிருந்த சில சிறு பகுதிகளில் மட்டுமே செல்வாக்குடன் இருந்தார்கள். ஆனால் அந்த நிலைமை அப்போது இந்தோனேஷியாவை ஆண்டு கொண்டிருந்த ஸ்ரீவிஜய அரசனான பரமேஸ்வரன் மோசடியான முறையில் மதம் மாற்றப்பட்ட பின்னர் முற்றிலுமாக மாறியது.

Malaka-islamization

ஸ்ரீவிஜய அரசனான பரமேஸ்வரன் இந்தோனேஷியாவின் பாலம்பெங்கிலிருந்து ஆண்டுகொண்டிருந்தான். வலிமை குன்றிய ஸ்ரீவிஜய அரசின் அதிகாரம் தாழ்ந்து அவரகளின் எதிரிகளான மஜாபாஹித்கள் வலிமை பெற ஆரம்பித்திருந்தார்கள். மஜாபாஹித்களுடனான சச்சரவுகள் காரணமாக, பரமேஸ்வரன் தனது தலைநகரை பாலெம்பெங்கிலிருந்து தெமாசெக் தீவிற்கு (இன்றைய சிங்கப்பூர்) மாற்றிக் கொண்டான். பின்னர் அங்கு நடந்த ஒரு சண்டையில், மஜாபாஹித்களின் நண்பர்களான சயாமியர்களின் இளவரசன் தெமாகியை பரமேஸ்வரன் கொன்றுவிட்டான். இதனால் கோபமுற்ற சயாமிய அரசன், மஜாபாஹித்களுடன் சேர்ந்து கொண்டு ஸ்ரீவிஜயத்தின் மீது படையெடுத்தான். பரமேஸ்வரனைக் கொல்வதே அந்தப் படையெடுப்பின் நோக்கம்.

அதன் காரண்மாகவே பரமேஸ்வரன் தெமாசிக் தீவிலிருந்து தப்பி முவாருக்கும் அதன் பின்னர் மலாக்காவிற்கும் செல்ல வேண்டியதாயிற்று. அதனைத் தொடர்ந்து 1402-ஆம் வருடம் மலாக்கா ஸ்ரீவிஜயத்தின் தலைநகராகியது.

இதற்கிடையில், பல நூற்றாண்டுகள் நடந்த தொடர்ச்சியான முஸ்லிம் குடியேற்றங்கள் காரணமாக மலாக்கா முஸ்லிம்களின் பிடியில் இருந்தது. இந்தியாவுடனான கடல் வாணிபத்தில் அந்த முஸ்லிம்களின் பங்கு மிக முக்கியமானதாகவும் இருந்தது. பரமேஸ்வரனின் அரசவைக்குள் மெல்ல மெல்லப் புகுந்த முஸ்லிம்கள் பின்னர் அவனது ஆட்சியின் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறினார்கள். முக்கியமாக முஸ்லிம்கள் ஸ்ரீவிஜய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, சயாமிய மற்றும் மஜபாஹித்களுக்கு எதிரான போர்களில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இருப்பினும் ஸ்ரீவிஜய அரசு இந்தப் போர்களைச் சமாளிக்க இயலாமல் திணறிக் கொண்டிருந்தது.

இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட முஸ்லிம்கள் பரமேஸ்வரனை அணுகி, அவன் முஸ்லிமாக மதம் மாறினால் தாங்கள் மேலும் பல முஸ்லிம் படைவீரர்களை அவனுக்கு உதவியாக அனுப்புவதாக பேரம் பேசினர். ஆனால் பரமேஸ்வரன் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். அதே சமயம் மஜாபாஹித்களுடான தொடர்ச்சியான போர்களின் காரணமாக பரமேஸ்வரன் நாளுக்கு நாள் பலவீனமடைந்து கொண்டிருந்தான்.

இப்படியிருக்கையில் ஒரு நாள், அரேபிய முஸ்லிம் வியாபாரிகள் பேரழகியான ஒரு பஸாய் கலப்பினப் பெண்ணை பரமேஸ்வரனுக்குப் பரிசளித்தார்கள். அரேபிய தந்தைக்கும் இந்தோனேஷிய தாய்க்கும் பிறந்தவள் அப்பெண். பரமேஸ்வரன் அந்த அடிமைப் பெண்ணைக் கண்டவுடன் காதலுற்றான். அவனால் அந்தப் பெண் கருவுற்றாள். தனக்கென ஒரு வாரிசு உருவாகாமல் இது நாள் வரை தவித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரனுக்கு மகிழ்ச்சி கட்டுக்கடங்கவில்லை. எனவே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய பரமேஸ்வரனிடம், அவன் முஸ்லிமாக மதம் மாறினால் மட்டுமே திருமணம் நடக்கும் என்று சொல்கிறாள் அந்தப் பெண்.

இந்த நேரத்தில் தொடர்ந்த தோல்விகளால் மிகவும் மோசமான நிலையிலிருந்த பரமேஸ்வரன் அவனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முஸ்லிம் படைவீரர்களை முழுவதும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தான். தனக்கென ஒரு வாரிசு இல்லாத வருத்தத்திலுமிருந்த பரமேஸ்வரன் உடனடியாக அதற்குச் சம்மதிக்கிறான். மதம் மாற்றப்பட்ட பரமேஸ்வரன் அந்தப் பெண்ணை மணந்து தனது அரசியாக்கினான்.

1410-ஆம் வருடம் முஸ்லிமாக மதம் மாறிய பரமேஸ்வரன், ஸ்ரீவிஜய அரசினை ஒரு முஸ்லிம் சுல்தானிய நாடாக – சுல்தானேட் ஆஃப் மலாக்கா – அறிவித்ததுடன் அவனது பெயரையும் சுல்தான் இஸ்கந்தர் ஷா என மாற்றி கொண்டான். அவன் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்ணும், அவனைச் சுற்றியிருந்த இஸ்லாமியர்களும் அவனை ஒரு முழு இஸ்லாமிய நம்பிக்கையாளனாக மாற்றினர்.

1414-ஆம் வருடம் சீனப் பேரரசர் யங்-லோவின் பிரதிநிதியாக மலாக்காவிற்கு விஜயம் செய்த சீன இஸ்லாமியரான மா-ஹுவான், “சுல்தான் மிகக் கண்டிப்பான நம்பிக்கையாளராக” மாறியிருந்தார் எனக் குறிப்பிடுகிறார்.

பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்-கிழக்கு ஆசியாவில் காஃபிர்களின் மீதான வன்முறை சிறிதளவு அதிகாரம் பெற்ற சுமத்ராவில் நிகழ்ந்ததாக இப்ன்–பதூதா கூறியதைப் பார்த்தோம். மலாக்கா சுல்தானிய ஆட்சி நிறுவப்பட்ட பின்னர் இந்த வன்முறை (ஜிகாத்) பெருமளவில் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது. இஸ்லாமின் ஆக்கிரமிப்பை அந்தப் பகுதிகளில் பரப்பும் நோக்கத்துடன் சுல்தானேட்டைச் சுற்றியிருந்த நாடுகளின் மீதான ஜிகாத் பெருமளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது. மத அடிப்படைவாதம் கொண்ட சுல்தானியப் படையினர் “காஸி”களாகும் (காஃபிரை கொல்பவர்கள்) நோக்கத்துடன் சுற்றியிருந்த நாடுகளின் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.

Malaya-sea-trade

பெரும் அழிவினை எதிர் நோக்கியிருந்த பரமேஸ்வரனும் (சுல்தான் இஸ்கந்தர் ஷா) அவனது வாரிசுகளும் பின்னர் வலிமையுடையவர்களாக, அந்தப் பிராந்தியத்தின் தலைவிதியை மாற்றும் வல்லமையுடையவரகளாக மாறினார்கள். இன்றைய மலேசியாவின் பெரும்பகுதியும், சிங்கப்பூரும், கிழக்கு சுமத்ராவும், போர்னியாவும் சுல்தானேட்டின் கீழ் வந்தன. பின்னர் போர்னியோ தனியே பிரிந்து சுதந்திர சுல்தானிய நாடாக மாறியது. அதனைத் தொடர்ந்த பல நூற்றாண்டுகளுக்கு தென் கிழக்கு ஆசிய இஸ்லாமிய பிராந்தியங்களின் – மலேசியா, அசே, ரியூ, பலெம்பங்க், சுலவாசி போன்ற – தலைமையகமாக மலாக்கா இருந்து வந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டில் மலாக்கா சுல்தானிய அரசுகள் அதனைச் சூழ்ந்திருந்த சயாமிய மற்றும் மஜபாஹித் அரசுகளின் மீது ஜிகாதினைத் தொடர்ந்து நடத்தி வந்தன. 1526-ஆம் வருடம் இஸ்லாமியர்கள் ஜாவாவின் மீது படையெடுத்து வென்றதுடன் மஜபாஹித் அரசின் ஆட்சி முடிவிற்கு வந்தது. ஓரளவிற்கு தப்பிப் பிழைத்த சயாமிய அரசுடன் தொடர்ந்து போரிட்டு வந்த மலாக்கா சுல்தானியர்கள், தாய்லாந்தின் தெற்குப் பிராந்தியத்தையும் வென்றார்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இஸ்லாமியர்கள் தாய்லாந்தின் தலைநகரான அயுத்யாவின் மீது படையெடுத்து ஏறக்குறைய அதனைக் கைப்பற்றும் நிலைக்குச் சென்றார்கள்.

ஆனால் எதிர்பாரமல் அந்த நேரத்தில் மலாக்காவினை நோக்கிச் சென்று கொண்டிருர்ந்த போர்ச்சுக்கீசிய வியாபாரக் கப்பல்கள் அங்கு வந்தடைந்தன. போர்ச்சுக்கீசியர்களுக்கும், மலாக்கா சுல்தானுக்கும் நடந்த கடுமையான போரின் காரணமாக சயாம் (தாய்லாந்து) பேரழிவிலிருந்து தப்பியது.

1509-ஆம் வருடம் போர்ச்சுக்கீசிய கப்பல்படைத் தளபதியான அட்மிரல் லோபாஸ்-டி-சிகுரா ஒரு பெரும் கப்பல் படையுடன் மலாக்காவை சென்றடைந்தார். அங்கு ஆட்சியிலிருந்த சுல்தான் மகமூத் ஷா, போர்ச்சுக்கீசியர்களைத் தாக்கி அவர்களை பின் வாங்க வைத்தான். பின்னர், 1511-ஆம் வருடம் வேறொரு பெரும் போர்ச்சுக்கீசிய கப்பல்படை இந்தியாவின் கொச்சியிலிருந்து வைசிராய் அல்ஃபோன்ஸோ டி’அல்பர்குர்கி தலைமையில் மலாக்காவின் மீது படையெடுத்தது. அதனைத் தொடர்ந்து நாற்பது நாட்கள் நடந்த போரின் பின்னர், ஆகஸ்ட் 24-ஆம் தேதி மலாக்கா போர்ச்சுக்கீசியர்களிடம் வீழ்ந்தது. சுல்தான் மஹ்முத் ஷா மலாக்காவை விட்டுத் தப்பியோடினான்.

அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகள் முஸ்லிம் படைகளுக்கும், போர்ச்சுகீசியர்களுக்குமான மோதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. இந்தப் பிரச்சினையின் காரணமாக இஸ்லாமியர்கள் சயாமின் மீதான படையெடுப்பைத் தொடர முடியாமல் போனது. சயாமிய ஆட்சியாளர்கள் போர்ச்சுக்கீசியர்களுடனும், டச்சுக்காரர்களுடனும் ஒப்பந்தங்கள் இட்டுக் கொண்டு, இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடினார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் சயாமியர்கள் மலாக்கர்களின் மீது படையெடுத்து, முந்தைய போர்களில் தாங்கள் இழந்திருந்த பகுதிகளை மீட்டெடுத்துக் கொண்டார்கள். முஸ்லிம் சுல்தானேட்டாக இருந்த பட்டானியையும் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்கள்.

அடுத்து, இன்னொரு தென்-கிழக்கு ஆசிய நாடான ஃபிலிப்பைனில் முஸ்லிம் ஆக்கிரமிப்பு எவ்வாறு பரவியது என்று பார்க்கலாம்.

(தொடரும்)

6 Replies to “வன்முறையே வரலாறாய்… – 19”

  1. புதிதாக மதம் மாறுபவர்கள் மிகவும் தீவிரவாதிகளாக மாறிவிடுகிறார்கள் என்பதற்கு பரமேஸ்வரன் ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறான்.

  2. அதே சமயத்தில் குடல் உருவப்பட்டு பதினைந்து நாள்களுக்கும் மேலாகச் சித்திரவதைப்பட்டும் இந்துவாகவே வாழ்ந்து, அவுரங்கசீப்பினால் மரணம் அடைந்த வீரத் திருமகன், மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜியின் வாரிசு சாம்பாஜியை நாம் நினைவு கூறத்தான் வேண்டும்.

  3. அன்பின் ஸ்ரீ ரூபன், நீண்ட உழைப்பின் பாற்பட்டு இப்படியொரு நெடிய அருமையான சரித்ர பூர்வமான தொடரை தாங்கள் சமர்ப்பித்து வருவதற்கு வாழ்த்துக்கள். நன்றிகள்.

    வன்முறையும் இஸ்லாமும் இணைபிரியா நண்பர்கள் என்பதனை தொடர் தெளிவாகப் பகிர்கிறது.

    இஸ்லாமின் ஆக்ரமிப்பு மற்றும் ரத்தவெறிக்கு பலியாகி பல தேசங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்லாமிய மயமாகின. இதற்கு முன் இந்த வன்முறைக்குக் கொஞ்சமும் குறையில்லாத படிக்கு inquisition மற்றும் crusade – சிலுவைப் போர் – ரத்தக்களரிகளால் — இந்த மதத்தின் முந்தைய அவதாரமான க்றைஸ்தவமும் உலகை க்றைஸ்தவ மயமாக்குதலில் பெரும் வெற்றி பெற்றது.

    இஸ்லாமின் சரித்ரம் என்பது வன்முறை மற்றும் ரத்தவெறியின் மூலம் பரவியது என்பதுடன் நிற்கிறது.

    க்றைஸ்தவப் பரவல் என்பது இரண்டு முகங்களுடையது.

    ஒன்று வன்முறை மற்றும் ரத்தவெறி சார்ந்த பலவந்தப்பரவல்.

    மற்றொன்று மிஷ நரித்தனம், பித்தலாட்டம், ஐந்தாம்படை வேலை போன்ற இழிவு முறைகள் சார்ந்து மதம் பரப்பியமை.

    இஸ்லாமின் பரவலின் சரித்ரத்தை அருமையாகப் பகிர்ந்து வருவது போல் க்றைஸ்தவத்தின் பரவல்களும் வன்முறை சார்ந்து ஒரு தொடராகவும் பித்தலாட்டங்கள் சார்ந்து இன்னொரு தொடரகவும் பகிரத் தக்கது.

  4. Law of diminishing returns என்றொரு கோட்பாடு உண்டு.

    இஸ்லாம் என்ற — வன்முறையை மற்றும் சகிப்புத்தன்மையின்மையை அடிப்படையாகக் கொண்ட மதம் – சரிவுப்பாதையில் பயணிக்கும் சமயம் இது.

    ஆசியப்பகுதிகளில் இஸ்லாம் சுலபமாக நுழைய முடிந்தது ஹிந்துக்களின் ஜம்பமடித்துக்கொள்ளத்தக்க ( ஆனால் ஜம்பத்துக்குக் காரணமாகாது குறைபாடு என்றறியப்படவேண்டிய) சகிப்புத்தன்மை மற்றும் பெருந்தன்மை போன்ற உயர்ந்த கொள்கைகளால்.

    பார்ஸிகள் மற்றும் யஹூதிகள் போன்று ஹிந்துஸ்தானத்துக்கு வந்து இங்கு சஹோதரர்களாகப் பழகி வாழ்ந்தவர்களைப் போல ஆப்ரஹாமிய வன்முறை பயங்கரவாதிகளையும் அப்படியே நினைத்து ஹிந்துஸ்தானம் தன்னில் ஏற்றுக்கொண்டிருக்கலாம். நிழலுக்கு தலையை கூடாரத்துக்குள் நுழைக்க விரும்பிய ஒட்டகத்துக்கு இடம் கொடுத்து கூடாரத்தையே ஆக்ரமித்த ஒட்டகத்தினைப் போன்ற செயற்பாடுடைய கயமை மிக்கவை ஆப்ரஹாமிய மதங்களின் செயல்பாடுகள்.

    இஸ்லாம் எப்படி வளர்ந்தது என்பது எப்படி ஆய்வுக்குறியதோ அதே போன்று ஆய்வுக்குறியது இந்த வன்முறை ரத்தவெறி மதத்தின் சரிவும்.

    ஒட்டோமன் சாம்ராஜ்யம் சரிய ஆரம்பித்துமே இந்த வன்முறை மதத்தின் சரிவு ஆரம்பித்து விட்டதா அல்லது யஹூதியர்கள் பைபள் க்ரந்தத்தில் சொன்னபடி தாங்கள் மீட்டெடுத்த இஸ்ரேல் தேசத்தின் எழுச்சியிலிருந்து இஸ்லம் என்ற வன்முறை மதம் அதல பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்ததா என்பது ஆய்வுக்கு உரியது.

    ஆனால் இஸ்ரவேலின் எழுச்சிக்குப் பிறகு இஸ்லாத்தின் புதை குழி நோக்கிய பயணம் துரிதப்பட்டு வருகிறது என்றால் மிகையாகாது. காரணம் மித மிஞ்சிய இஸ்லாமிய தேசத்தினரின் மதவெவெறி. அடிமுட்டாள் தனம். பிற்போக்குத் தனம். வெள்ளந்தித் தனம்.

    இஸ்ரேல் 1947 மே மாதம் உருவாகி ப்ரிட்டிஷ் படை வெளிப்போந்த போது இஸ்ரேலைச் சுற்றி இருந்த பாலஸ்தீனம், ஜோர்டான், எகிப்து, சிரியா, லெபனான் போன்ற தேசங்களும் ஈராக், சவூதி போன்ற தேசங்களும் — ஒரே வாரத்தில் இஸ்ரேலை ஒழித்து விட முடியும் என்று பகற்கனவு கண்டது ஒரு புறம்.

    மற்றொரு புறம் டேவிட் பென் குரியன், கோல்டா மெய்ர் போன்ற யஹூதியர்கள் மிகுந்த ஆக்ரஹத்துடன் — என்ன வந்தாலும் சரி இஸ்ரேலை விட்டுத்தர முடியாது என்று ஒரு பக்ஷமாகவும் — மேலும் ஜெருசலேமில் இருந்து ஒரு இஞ்ச் நிலப்பரப்புக்கூட விட்டுத் தர முடியாது என்றும் செயல்பட்டது.

    முதலிலிருந்து கிட்டத்தட்ட ஒரு சமமான மனநிலையுடன் நிதர்சனத்துடன் ஒத்துப்போய் செயல் பட்டது ஜோர்டான் மட்டும். நன்றாக இஸ்ரேலிடம் உதை வாங்கி பின்னர் வழிக்கு வந்தது எகிப்து. மற்றதெல்லாம் சூப்பர் கைப்புள்ளகள் என்றால் மிகையாகாது. இந்தக் கந்தறகோள கண்றாவி தேசங்கள் 1947 லும் 1967 லும் இஸ்ரேலிடம் வாங்கிய உதையில் யெஹோவாவுக்கே நோவு வந்திருக்கும்.

    ஆனால் …………….. மனிதர்கள் மாறினாலும் சரித்ரம் மாறுவதில்லை என்பது — இந்த கைப்புள்ளகளின் இன்றைய நிலை — என்றால் மிகையாகாது.

    அதே நாடுகள்……………

    லெபனான், சிரியா, எகிப்து, ஈராக் — இந்தக் கண்றாவிகளின் இன்றைய முட்டாள் தனமான தலைமைகளின் பாற்பட்ட முட்டாள் நிலைமை பரிதாபத்திற்குறியது.

    ஜோர்டான் மட்டும் அன்று போல இன்றும் மிகக் கவனமாக உள்ளது.

    ஆனால் அவலமான முட்டாள் செயல்பாட்டு இஸ்லாமிய வைரஸ் யேமன், லிபியா, ஈரான் முதல் சவூதி, சூடான், இந்தோனேஷியா, நைஜீரியா வரை பரவி வருகிறது.

    யஹூதியர் மற்றும் க்றைஸ்தவ பயங்கரவாத மிஷ நரி – குள்ள நரி செயல்பாடுகளுக்கு இந்த தேசங்கள் பலியாகி வருகின்றன. இந்த தேசத்து இஸ்லாமியரின் அடிமுட்டாள் தனமோ எனில் தங்கள் எதிரிகளுடன் போராடாது ஷியாக்கள் சுன்னிகளைப் போட்டுத்தள்ளியும் சுன்னிகள் ஷியாக்களைப் போட்டுத் தள்ளிய படியும் உள்ளனர்.

    க்றைஸ்தவ யஹூதிய கூட்டணி இந்தோனேஷியா என்ற இஸ்லாமிய தேசத்தைப் பதம் பார்த்து அதிலிருந்து கிழக்கு திமோர் என்ற தேசத்தைப் பிளந்தது.

    அடுத்து அதே போல் தெற்கு சூடான்.

    ஈழத்தையும் க்றைஸ்தவமயமாக்கி தனி க்றைஸ்தவ நாடாக்க விழைதல் யஹூதிய க்றைஸ்தவ கூட்டணியின் இலக்கு.

    யஹூதிய க்றைஸ்தவ கூட்டணி ஹிந்துஸ்தானத்தையும் பதம் பார்த்து வருகிறது. இஸ்லாமிய தேசங்களில் கிடைத்தது போன்றதொரு வெற்றியை இது வரை ஹிந்துஸ்தானத்தில் பெற முடியவில்லை என்பது. நிதர்சனம்.

    ஹிந்துஸ்தானத்துக்கு வெளியே இருக்கும் முட்டாள் இஸ்லாமிய தேசத்தவரைப் போன்ற செயல்பாடுடையவர்கள் அல்ல ஹிந்துக்கள் என்பதும் தொடர்ந்து கிட்டத்தட்ட ஆயிரம் வருஷங்களாக ஆப்ரஹாமிய பயங்கரவாதம் மற்றும் வன்முறையை துணிவு கொண்டு எதிர்த்து வருபவர்கள் ஹிந்துக்கள் என்பதும் காரணமாக இருக்கலாம்.

  5. திரு. க்ருஷ்ணகுமார்,

    நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது தமிழ் ஹிந்து குழுவினருக்குத்தான். எனக்கல்ல. இங்கே நான் வெறும் கருவி மட்டுமே. இதுபோன்றதொரு தொடரை எழுத அனுமதி கேட்டவுடன் மறுக்காமல், தயங்காமல் அனுமதியளித்தார்கள். எனவே உங்களின் நன்றிகளும், பாராட்டுதல்களும் அவர்களுக்குதான் சென்று சேர வேண்டும்.

    🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *