ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 2

ஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன்
தமிழாக்கம்: எஸ். ராமன்

முந்தைய பகுதிகள்: பகுதி 1

sri-rama-dharma யுகம் யுகமாக எப்போதெல்லாம் உலகில் தர்மம் பலவீனம் அடைந்து அதர்மம் தலை தூக்குகிறதோ, அதனால் வேதனைக்கு உள்ளான மக்களைக் காத்து, கை ஓங்கிய தீய சக்திகளை அழித்து, சூது கவ்விய தர்மத்தைத் தூக்கி நிறுத்த, அப்போதெல்லாம் பகவான் தானே அவதரிப்பதாக ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தின் ஏழு மற்றும் எட்டாம் ஸ்லோகங்களில் உறுதி அளிக்கிறார். இவ்வாறான பொது நீதியை நிலைநாட்ட, அவரது இராம அவதாரத்திலும் சீரிய ஒழுக்கம் நிறைந்த ஒரு மனிதனாக அவர் சிறப்பாகக் காட்சி அளிக்கிறார். தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் ஒருவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போதும், அது போன்ற சமயங்களில் தான் கடைப்பிடிக்கும் வழிகளாலும் ராமர் நீதி, நேர்மை வழிகளில் ஒருவன் வாழ்வதற்கான ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தர்மத்தின் வழி எதுவென்றால் அது ராமரது வழியே என்று அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் அவர் அந்த அவதாரத்தில் நடந்து காட்டியுள்ளார். அதனால், இராவணனுக்காக இராமரைத் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்த மாரீச்சனே அவரை, ராமோ விக்ரவான் தர்ம (III. 37,13) என்று கூறி ராமரின் மேன்மையைப் புகழ்கிறான்.

அவதாரம் மூலம் இறைவனைத் தங்களுக்கு மிக அருகில் தரிசிக்கவும், அவரிடம் நேரில் வேண்டிக் கொள்கின்ற வாய்ப்பும், அவர் அருகில் வாழும் பாக்கியமும் மானிடர்களுக்குக் கிட்டுகிறது என்பது அவர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் பலன். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதை உணரவேண்டுமே! அவதாரம் எடுப்பதால், “ஸௌலப்ய” எனப்படும் இறைவனை எளிதில் அணுகும் வாய்ப்பானது, அவரையே என்றும் மனத்தில் இருத்தி வாழும் பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இறைவன் எவராலும் அணுக முடியாத பரம்பொருள் என்று சாதாரணமாக நிலவும் கருத்திற்கு எதிர்மாறாக அவதாரத்தில் நிகழ்கிறது. அவதாரம் எடுத்து நம்மிடம் வருபவர் என்று இறைவனை ஒரு குறிப்பிட்ட வடிவில் காணும் சாதாரண பக்தனுக்கு, அவரது அருகாமைக்கும் மேலாக அவரது அவதார லீலைகளைப் பற்றியும் கேட்டு இன்புற்று அவரைத் தொழுவதற்கு மிகவும் எளிதாக ஆகிறது. அவதாரம் என்பதே இறைவனுடைய எளிதில் புரிந்துகொள்ள இயலாத மாயங்கள் கலந்த பல லீலைகளில் ஒன்றாகும். உலகில் அநியாய, அநீதிக் கொடுமைகள் ஏன் அதிகரித்தன என்பதையும், தானே ஓர் அவதாரம் எடுத்து வந்து தலையிடும் அவசியம் இல்லாமல் நீதியை நிலைநாட்டுவது எவ்வளவு கடினமானது என்பதையும் இறைவன் ஒருவரே நன்கு அறிவார். அதில் பொதிந்து உள்ள ரகசியம் கூட, நமக்கு இறைவனிடம் உள்ள பக்தியை அதிகரிக்கவே செய்கிறது.

இறை அம்சத்தையே முதன்மையாக வலியுறுத்திய பலவிதமான புராணங்களிலும், இறைவனைத் தவிர முனிவர்கள், மன்னர்களைப் பற்றியும் எடுத்துச் சொல்லி இவ்வாறு நடந்தது என்று கூறும் இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மஹாபாரதத்திலும் மகாவிஷ்ணுவின் பல அவதாரங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. வால்மீகி முனிவர் ராமாயணத்தில் ராமபிரானைப் பற்றி விவரிக்கும் அழகே ஒரு தனி அழகு. இதிகாசம் என்பதையும் தாண்டி, வால்மீகி ராமாயணம் மிகுந்த இலக்கிய நயம் கொண்டது. பின்னர் வரப்போகும் செய்யுள் நடை இலக்கியத்திற்கு ஒரு முன்னுதாரணம் போல அழகுற அமைந்ததால், அது “ஆதி காவியம்” என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறாக காப்பிய அழகிற்கு அது போற்றப்படுகிறது என்றாலும், அனைத்து புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் போல ராமாயணமும் “ஸ்ம்ருதி” என்று குறிப்பிடப்படும் நீதி, நேர்மையை வலியுறுத்தும் ஒரு முதன்மையான மத நூல் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இராமரது வாழ்க்கைப் பயணம் மற்றும் வாழ்வின் குறிக்கோள்கள் விவரிக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும், அவைகளிடையே காணப்படும் ஓர் ஒழுங்கான, ஒருங்கிணைந்த அமைப்பே ராமாயணத்தைப் படிப்பவர்கள் எவரையும் ஆனந்தத்தில் ஆழ வைக்கும். அந்த விவரங்கள் எவையுமே காவியத்தைப் படைத்தவர் என்ற முறையில் வால்மீகியின் கைவண்ணத்தால் உருப்பெற்று எழுந்தவை அல்ல. அவதாரங்களைப் பற்றி பண்டைய சாத்திரங்கள் கூறுவது போலவே, அன்று நடந்த தெய்வீகச் சரித்திரம் எவ்வாறு நடந்ததோ அவ்வாறே நடந்தவைகளைப் பற்றி அவர் எழுதி வைத்தவைதான் ராமாயணக் காவியம். எளிய எழுத்து நடை, நிகழ்ச்சிகளின் ஒழுங்கான கோர்வை, மற்றும் அதன் வெவ்வேறு அம்சங்களின் பொருத்தமான விகிதாசாரம் என்பவைகள்தான் ராமாயணத்தைப் பற்றிய சிறப்பான அம்சங்கள். இவ்வாறாக அமைந்த ஒரு சீரான அளிப்பின் மூலம் வால்மீகி பின்வரும் சந்ததியினருக்கு நடந்ததை நடந்தபடி கூறுகிறார். தனது கற்பனைக் குதிரையைத் தட்டி எழுப்பி ஒரு கலை மிகுந்த காவியத்தைப் படைக்காமல், ராமரின் வாழ்வில் நடந்ததை ஒரு மாற்றுக் குறையாமல் அப்படியே உள்ளதை விவரித்திருக்கிறார்.

வால்மீகி ஒரு கவின் மிக்க கவிஞர் மட்டும் அல்லாது புகழ் பெற்றதொரு முனிவரும் ஆவார். ராமரது காலத்திலேயே வாழ்ந்து, அவரையே தன் ஆன்மிக குருவாக மனதில் துதித்து, அவருடைய ரசிகராகி, அவரது பூவுலக வாழ்வின் காரணங்களையும், அதன் ரகசியங்களையும் நமக்குத் தெளிவாக்கி, மனிதராகப் பிறந்த எவரும் எவ்வாறு வாழவேண்டும் என்று காட்ட உதவும் ஒரு கருவியாக வால்மீகி விளங்கினார். தனது வாழ்வின் வழிகாட்டியாக விளங்கிய ராமரது வாழ்க்கைப் பயணத்தைப் பலருக்கும் எடுத்துச் சொன்ன முயற்சியில் வால்மீகி முனிவரின் கவித்துவமும் தெய்வாதீனமாக வெளிப்பட்டு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அவரது படைப்பைப் பின்பற்றி, அவருக்குப் பின்பு வெவ்வேறு மொழிகளில் வெளிவந்த ராமாயணப் பதிப்புகளும் அந்தந்தக் கவிஞர்களின் கற்பனை கலந்த காவியத் திறனை வெளிப்படுத்தும் முயற்சிகளாகக் கருதப்படக் கூடாது. நிகழ்ச்சிகளை விவரிக்கும்போது அவர்கள் அங்கங்கு வால்மீகி கூறியதற்கும் மேலாகப் பல விவரங்கள் கொடுத்திருப்பதும், அவைகளை அவர் விவரித்த நடையில் இருந்து விலகி பல மாற்றங்கள் செய்திருப்பதும் உண்மையே. ஆனாலும் அவை அனைத்துமே அவரவர்களுக்கு ராமர் மேல் இருந்த வாஞ்சையாலும், பக்தியாலும் விளைந்தனவே அல்லாமல், மூலத்தில் வால்மீகி சொன்னதற்கு எந்த விதத்திலும் பழுது ஏற்படா வண்ணமே அமைந்துள்ளன.

valmiki-ramayana

வால்மீகி எழுதி வைத்த ராமரின் வாழ்க்கைப் பயணக் கதை மொத்தமாக ஏழு காண்டங்களில் அடங்கும். அவைகளைச் சுருக்கமாகப் பார்த்தோமானால், அதுவே ராமாவதாரத்தின் காரணங்களையும், அவரது வாழ்வின் அர்த்தங்களையும் வேகமாகப் புரிய வைக்கும்.

பால காண்டம் (1) மற்றும் அயோத்தியா காண்டம் (2) ராமரது வருகையின் காரணங்களையும், அவரது பணியின் துவக்கத்தையும் விளக்கும். தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி மகாவிஷ்ணு அரக்கனான ராவணனை அழிப்பதற்காக ராமராக மனித வடிவம் தாங்கி பூமியில் அவதரிக்கிறார். அந்தப் பணியில் மனைவியாக இருந்து அவருக்கு உதவி புரிவதற்காக மகாலக்ஷ்மி சீதையாகப் பிறக்கிறாள். இந்த முதல் இரண்டு காண்டங்களில் வரும் அவரது இளமைக் காலத்தைப் பற்றிய வர்ணனைகள் வேகமாக நகர்ந்து, ராமரின் வனவாசத்தில் போய் முடிகிறது.

ஆரண்ய காண்டம் (3) மற்றும் கிஷ்கிந்தா காண்டம் (4) இரண்டும் மொத்த நிகழ்வுகளின் முக்கியத் திருப்புமுனையான சீதை அபகரிப்பிற்கும், ராமரது துயரத்திற்கும் வாசகர்களை அழைத்துச் செல்கிறது. சுக்ரீவனுடன் ராமருக்கு ஏற்படும் ஒப்பந்தத்துடன் கிஷ்கிந்தா காண்டம் நிறைவடைகிறது.

சுந்தர காண்டம் (5) மற்றும் யுத்த காண்டம் (6) இரண்டும் காவிய நிகழ்வின் முக்கியப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுகிறது. அந்த முடிவின் தொடக்கக் கட்டமாக அனுமனின் சீதையைத் தேடிக் கண்டுபிடிக்கும் படலம் அமைகிறது. அதன் பின்னரே வரும் ராவணனுடனான யுத்தம் அவனது அழிவில் முடிகிறது. அதனால் சீதை ராமருடன் மீண்டும் சேர்வதால், இறுதியில் அயோத்தி வந்தடையும் படலம் வருகிறது.

இவ்வாறாக இராம அவதாரத்தின் பலன் முழுமையடையவே, தனது பத்தினியுடன் மகாவிஷ்ணு தங்களது இருப்பிடம் திரும்பி வந்து சேர்வதே அடுத்த கட்டம் என்பதால், அதுவே இறுதிக் காண்டமான உத்தர காண்டம் (7) பகுதியின் நிகழ்வுகளாக அமைகின்றன.

இராவணனின் சரித்திரம்
(7, சருக்கங்கள்: 1-34)

அவசியம் இல்லாது இறைவன் அவதாரம் எடுப்பதில்லை. பல சீவராசிகளின் தொடர் செயல்கள் அனைவரையும் பாதிக்கும் வேளையில், அவர்களது ஈடுபாட்டினால் மட்டுமே திருத்தி அமைக்க முடியாததோர் அதர்மச் சூழ்நிலை நிலவ வேண்டும். அங்குதான் இறைவன் நேரடியாகத் தலையெடுக்க வேண்டியிருக்கிறது. ராவணனது கொடுஞ்செயல்கள் அவ்வாறான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்தி, ராமாவதாரத்திற்கு ஒரு மூல காரணமாக அமைந்தது. அதனால் ராவணனின் பிறப்பையும், அவனது செயல்களையும் ஆராய வேண்டிய காரணம் உருவாகிறது.

இராவணனின் தோற்றத்திற்கு வெகு காலம் முன்பாகவே, மகாவிஷ்ணு உறையும் ஸ்ரீ வைகுண்டத்தின் வாயில் காப்போர்களாக ஜய மற்றும் விஜய என்னும் பெயர் கொண்ட (கடந்த மற்றும் தற்போதைய தமிழ் ஆண்டின் பெயர்களும் அவைகளே!) இருவர் பணியாற்றினார்கள். ஒரு முறை சனகாதி முனிவர்கள் எனப்படும் தேவ ரிஷிகளான சனகர், சனாதனர், சனத்குமாரர் மற்றும் சனந்தனர் என்ற நால்வரும் மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டம் வந்தனர். (ஆலமரத்தடியில் தக்ஷிணாமூர்த்தியின் காலடியில் எப்போதும் வீற்றிருந்து “நான்மறை, ஆறு அங்கம் கற்கும்” நான்கு முனிவர்கள்தான் அவர்கள்.) அவ்வாறான பழம்பெரும் முனிவர்கள் என்றாலும், தாங்கள் செய்திருந்த மாபெரும் தவத்தின் விளைவாகப் பார்ப்பதற்கு இளைஞர்கள் போல அவர்கள் தெரிந்தனர். அதனால் அவர்களை ஏதோ விளையாட்டிற்காக வந்துள்ள இளம் வயது வாலிபர்கள் என்றெண்ணி, அவர்கள் திருமாலைத் தரிசிப்பதற்கு ஜெயனும், விஜயனும் அனுமதி அளிக்காது மறுத்து விட்டனர். அதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்கள் தவ வலிமையால் அவர்கள் இருவரையும் இனி வரும் மூன்று ஜென்மங்களுக்கு அரக்கர்களாகப் பிறப்பீர்கள் என்று சாபம் கொடுத்துவிட்டார்கள். தங்களது தவறை உணர்ந்து ஜெய-விஜயர்கள் உடனே முனிவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவே, முனிவர்களும் அவர்கள் மேல் கருணைகொண்டு, அந்த மூன்று ஜென்மங்களின் முடிவில் சாப விமோசனம் அடைந்து இறைவனின் அருளால் இருவரும் தங்களது சுய உருவத்தை மீண்டும் பெறுவதோடு அவரவர்கள் பணிக்கும் திரும்புவார்கள் என்று கூறினார்கள்.

அதன்படி மூன்று ஜென்மங்களில் ஜயன் ஹிரண்யகசிபு, ராவணன் மற்றும் சிசுபாலனாகவும், விஜயன் ஹிரண்யாக்ஷகன், கும்பகர்ணன் மற்றும் தந்தவக்ரனாகவும் பிறக்கிறார்கள். இவ்வாறான அவர்களது ஒவ்வொரு பிறவிகளிலும் எண்ணற்ற, நீதிக்குப் புறம்பான பல கொடுஞ்செயல்களை அவர்கள் புரிந்ததால் மகாவிஷ்ணு வெவ்வேறு அவதாரங்களை எடுத்து அவர்களை அழிக்கவேண்டி வருகிறது. வராக அவதாரத்தில் ஹிரண்யாக்ஷகனும், நரசிம்ஹ அவதாரத்தில் ஹிரண்யகசிபுவும் மாய்கிறார்கள். இராம அவதாரத்தில் ராவணனும், கும்பகர்ணனும் அவரது கையாலேயே கொல்லப்படுகிறார்கள். இறுதியாகச் சிசுபாலனும், தந்தவக்ரனும் ஸ்ரீ கிருஷ்ணரால் இறக்கிறார்கள். முனிவர்கள் முன்பு கூறியபடியே, ஸ்ரீ கிருஷ்ணரின் சக்ராயுதத்தால் உயிர் துறக்கும் சிசுபாலன் மற்றும், தந்தவக்ரனின் ஆன்மாக்கள் அடுத்த கணமே பரமாத்மாவுடன் கலந்து பாவ விமோசனம் பெறுகின்றன. இவ்வாறு அவர்கள் இருவரும் மோக்ஷம் அடைவதை யுதிஷ்டிரனும் மற்றவர்களும் ஆச்சரியத்துடன் நேரில் கண்டு அதிசயிக்கின்றனர். இந்த விவரங்கள் எல்லாம் ஸ்ரீமத் பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தம், முதலாவது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கின்றன.

ravana

இப்போது நாம் ராவணனின் கதையைப் பார்ப்போம். புலஸ்தியன் என்றதொரு பிராம்மண ரிஷியும், அவரது மகனும் பிரும்ம ரிஷியுமான விஸ்ரவன் என்றும் இருவர் இருந்தனர். விஸ்ரவனுக்கு வைஸ்ரவணன் என்று பெயர் கொண்ட மகன் ஒருவன் பிறந்தான். குபேரன் என்றும் பெயர் கொண்ட அவனே செல்வங்கள் எல்லாவற்றுக்கும் அதிபதியாக வணங்கப்படுகிறான். பின்னாளில் மனைவியை இழந்த விஸ்ரவனை கைகசி என்னும் அரக்கி மயக்கி, அவன் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றாள். விஸ்ரவனை அசுபமான வேளையில் அவள் விரும்பியதால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அசுர குணங்களுடனும், தோற்றத்துடனும் இருப்பார்கள் என்று விஸ்ரவன் அவளிடம் கூறினான். இராவணன், கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை மூவரும் அவ்வாறே அவர்களுக்குப் பிறந்தவர்கள். நல்ல குணங்களுடனும், நேர்மை ஒழுக்கம் மிகுந்தவனாகவும் ஒரு பிள்ளையாவது வேண்டும் என்று கைகசி விஸ்ரவனிடம் வேண்டிக்கொள்ள அவ்வாறு பிறந்தவன்தான் விபீஷணன். இந்த உறவு முறையால் ராவணன் குபேரனுக்கு மாற்றாந்தாய் வழி வந்த தம்பி ஆகிறான்.

அரக்கர்களின் தலைவனான சுமாலியின் மகள்தான் கைகசி. தந்தை சுமாலியின் தூண்டலில்தான் கைகசி விஸ்ரவனைக் கணவனாக வரித்துக்கொண்டாள். குபேரனிடம் வஞ்சம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே சுமாலியின் எண்ணம். முன்பு சுமாலிக்கு மால்யவன் என்ற அண்ணனும், மாலி என்கிற தம்பியுமாக இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இந்த மூன்று சகோதரர்களும் இலங்கையை ஆண்டுகொண்டு வளமாகவும் வாழ்ந்துகொண்டு இருந்தனர். ஆட்சி செய்கிறோம் என்ற ஆணவத்தில் அவர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். அதனால் தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையே பெரிய போர் ஒன்று நடந்தது. தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி மஹாவிஷ்ணுவே போரில் இறங்கி, அரக்கர்களைத் தோற்கடித்து ஆட்சியை அவர்களிடம் இருந்து கைப்பற்றி, குபேரனை அரசனாக்கி இலங்கையை ஆளவைத்தார். அந்தப் போரில் சுமாலியின் தம்பி மாலி இறந்து போனான். வசதியான இடத்தையும், ஆட்சி பீடத்தையும் இழந்த அரக்கர்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் இங்குமங்குமாக அலைந்துகொண்டு, தேவர்களிடம் வஞ்சம் தீர்த்துக்கொள்ள சரியான சந்தர்ப்பம் ஒன்றைத் தேடிக்கொண்டு இருந்தனர். அந்த நிலையில்தான் சுமாலி விஸ்ரவனை கைகசியின் வலையில் மாட்டிக்கொள்ள வழி வகுத்தான்.

சுமாலியின் திட்டம் அவ்வாறு இருந்ததால், குபேரன் அளவிற்கு அவர்கள் உயரவேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்ட கைகசி தனது மூன்று மகன்களையும் தீவிரமாகத் தவம் செய்து வலிமை பெறுவதற்கு வற்புறுத்தினாள். அவர்களும் வெகு காலத்திற்குத் தவம் செய்து வந்தார்கள். அதன் இறுதிக் கட்டத்தில் பிரம்மா அவர்கள் முன்பு தோன்றி அவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கேட்கச் சொன்னார். கடவுள், தேவர்கள், மற்றும் அரக்கர்கள் எவராலும் தனக்கு இன்னலோ, முடிவோ வரக்கூடாது என்று ராவணன் வேண்டி நின்றான். மாந்தர்களாலும், விலங்குகளாலும் தனக்குப் பிரச்சினை ஏதும் வரமுடியாது என்ற அவனது இறுமாப்பின் மூலம் விளைந்த எண்ணத்தால் அவர்களை அவன் அந்த சாகாவரப் பட்டியலில் இருந்து விலக்கி வைத்தான். அவனாலேயே ஏற்பட்ட இந்த விதிவிலக்கினைப் பின்பு விஷ்ணுவும், தேவர்களும் சரியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தி அவனது அழிவிற்கு வழி கண்டனர்.

கும்பகர்ணன் வரம் கேட்கப் போகும் சமயம், ஏற்கனவே அவனால் மிகவும் அவதியுற்ற கடவுளும், தேவர்களும் அவன் என்ன வரன் கேட்டு எப்படித் தொந்திரவு செய்வானோ என்ற அச்சத்தில் இருந்தனர். அதனால் பிரம்மனின் வேண்டுகோளின்படி சரஸ்வதி தேவி அவனது நாவில் புகுந்து அவன் கேட்கப்போவதைத் திசை மாற்றும்படி செய்தாள். அதன்படி அவனும் தான் தூங்கச் சென்றால் தனது தூக்கம் நீண்ட காலம் நீடிக்கவேண்டும் என்ற வரத்தை வேண்டினான்.
விபீஷணனோ, அவனது இயல்பான தன்மைப்படி, தனது உயிருக்கே ஆபத்து வரும் என்றால் கூட தான் என்றும் நீதி, நேர்மை தவறாது தர்மத்தின் பக்கமே நிற்க வேண்டும் என்ற வரத்தை வேண்டினான். இவ்வாறாக ஒவ்வொருவரும் தாங்கள் வேண்டியதைக் கேட்டுப் பெற்றார்கள்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *