சாரதா மோசடி: மக்களைச் சுரண்டிய பிரமுகர்கள்

saradha 9 logoதற்போதைய அரசியல் வானில் சாரதா நிதி நிறுவன சூறாவளியின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. மேற்கு வங்கத்தில் நிலைகொண்ட இந்த  மோசடிப் புயலின் பாதிப்பு இப்போது தில்லியில் மையம் கொண்டிருக்கிறது. இந்த நிதி நிறுவன மோசடியில் தொடர்புடையவர்கள் பெரும்பாலோர் திரினாமூல் காங்கிரஸ் பிரமுகர்களாகவே இருப்பதால், அக்கட்சியின் தலைவியும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நிலைகுலைந்து இருக்கிறார்.

இந்த மோசடியில் அவர் இதுவரை நேரடியாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும், விசாரணை வட்டத்துக்குள் வெகு விரைவில் அவரும் வரக்கூடிய நிலை காணப்படுகிறது. எனவே, இப்போதே தற்காப்புக்காக காற்றில் கத்தி வீசத் துவங்கிவிட்டார். சாரதா நிதி நிறுவன மோசடியை அரசியல் எதிரிகளைப் பழிவாங்க மத்தியிலுள்ள மோடி அரசு பயன்படுத்துவதாக அவர் விமர்சித்து வருகிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இவ்விஷயத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனர். தவிர, ‘வகுப்புவாத’ மோடி அரசுக்கு எதிராக மதச்சார்பற்ற தலைவியாகவும் மம்தா திடீர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

மதச்சார்பின்மையைக் காக்க பாஜக அல்லாத கட்சிகள் இணைய வேண்டும் என்கிறார் மம்தா. நல்ல வேளையாக மேற்கு வங்கத்தில் இவருடைய பிரதான எதிரியான மார்க்சிஸ்ட் கட்சி இந்த மாய்மாலத்தில் மயங்கவில்லை. தவிர, சாரதா நிதி நிறுவன மோசடியில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்துவதிலும் அக்கட்சி உறுதியாக  உள்ளது.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு சாரதா  நிதி நிறுவன மோசடியின் முழு விவரங்களையும் தெரியப்படுத்துவது விஷயம் அறிந்தவர்களின்  கடமையாகும். ஏனெனில், இது ஏதோ மேற்கு வங்க மாநிலம் மட்டும் தொடர்புடைய விவகாரம் அல்ல. சற்று ஏமாந்தால் நமது பகுதியிலும் கூட இத்தகைய மோசடிகள் அரங்கேறக் கூடும்.
.
மோசடியின் பின்புலம்:
.
சாரதா நிதி நிறுவன மோசடி என்பது நமது ஊர்களில் அவ்வப்போது தலைகாட்டும் சீட்டு மோசடியே தான்.  ஆனால், அதன் விஸ்தீரணம் நம் கற்பனைக்கு எட்டாததாக உள்ளது. இதன் ஒட்டுமொத்த உத்தேச மதிப்பீடு ரூ. 30,000 கோடி ஆகும். (இதை விட பல மடங்கு அதிகம் இருக்கலாம். பணச்சலவைக்கு   இந்நிதி நிறுவனம் உதவி இருப்பதால், கணக்கில் வராத கறுப்புப் பணம் பெருமளவில் இதில் புழங்கி இருக்கக் கூடும்).

கொல்கத்தா தலைமையகம்
கொல்கத்தா தலைமையகம்

இதனால் நேரடியாக 17 லட்சம் முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிறுவனத்துக்கு மேற்கு வங்கம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் கிளைகள் இருந்தன.

கொல்கத்தாவை தலைமையிடமாகக்  கொண்டு 200-க்கு மேற்பட்ட கிளைகளுடன் இயங்கிய சாரதா நிதி நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 16,000. இந்நிறுவனம்  2013, ஏப்ரலில் திவாலானதாக அறிவிக்கப்பட்டபோது மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் நிதிச் செயல்பாடுகள் முடங்கின.

இதனை   ‘பணச்சுழற்சி முறை மோசடி’  (Ponzi scheme) என்று சொல்லலாம். அதாவது, நீங்கள் இதில் ஒருமுறை முதலீடு செய்தால், ஒரு முதலீட்டாளராக ஆவீர்கள். பிறகு நீங்கள் ஐந்து பேரை இதற்கு அறிமுகப் படுத்துவதன் மூலமாக நீங்களும் இதன் முகவராக ஆகலாம். உங்களுக்கு 25 சதவீதம் தரகுத் தொகை உடனடியாக வழங்கப்படும். நீங்கள் சேர்த்துவிட்ட முதலீட்டாளர்களும் அதேபோல முகவர்களாக ஆகும்போது நீங்கள் தன கண்காணிப்ப்பாளராகிறீர்கள். அதற்கு தனியே தரகுத் தொகை கிடைக்கும்.

இந்த சங்கிலித் தொடர் அப்படியே தொடரும்போது, நிதி நிறுவனத்துக்கு எந்த முயற்சியும் இல்லாமல் கோடிக் கணக்கில் பணம் கொட்டும். வாடிக்கையாளர்களின் பணத்திலிருந்தே அவர்களுக்கு தரகுத் தொகை லட்சக் கணக்கில் கொட்டப்படும். இது ஒரு மாயவலை.

‘மல்டி லெவல் மார்க்கெட்டிங்’ எனப்படும் இந்தத் தந்திரத்தால், நாட்டில் பல நிறுவனங்கள் திவாலாகி இருக்கின்றன. ஏதாவது ஒரு புள்ளியில் இந்த தொடர் சங்கிலி நின்றுதான் ஆக வேண்டும். அப்போது தான் முதலீட்டாளர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர முடியும். இதிலும் கூட சங்கிலியில் கடைசிக் கண்ணிகளுக்குத் தான் பெரும் பாதிப்பு ஏற்படும்.

காலம் கடந்த பின் ஞானம்
காலம் கடந்த பின் ஞானம்

இது தான் தற்போது நிகழ்ந்திருக்கிறது. இதில் வேதனை என்னவென்றால், இப்படியெல்லாம் நடக்கும் என்று பங்கு வர்த்தக கட்டுப்பாட்டு  அமைப்பான செபி, மத்திய ரிசர்வ வங்கி, அமலாக்கத் துறை ஆகியவை மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளன. ஆனால், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்திய அரசும், மேற்கு வங்க மாநில அரசும் இதனைக் கண்டுகொள்ளவே இல்லை. அதற்கான காரணத்தை  இப்போது தான் மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.

இந்த மோசடியில் தொடர்புடைய பெருந்தலைகள் பலவும் முன்னாள் காங்கிரஸ் கார்கள்; இன்னாள் திரிணாமூல் காங்கிரஸ்காரர்கள். மாநிலத்தை ஆண்ட மார்க்சிஸ்ட் கட்சியிலும் கூட சாரதா நிறுவன அபிமானிகள் இருந்துள்ளனர். எல்லாம் பணம் படுத்தும் பாடு.

ஒரு எல்லைக்கு மேல் நிதி நிறுவனம் வளரும்போது அரசியல்வாதிகளின் தயவு இன்றியமையாததாகி விடுகிறது. அப்போது கையூட்டும், பங்களிப்பும் அரசியல்வாதிகளுக்கு கொடுத்தாக வேண்டியிருக்கிறது. எனவே அரசியல்வாதிகளே நிதிநிறுவனம் நடத்துவது பாதுகாப்பானதாக மாறிவிட்டது. சாரதா நிதி நிறுவனத்தின் பிரமுகர்கள் பலரும் ஆளும் கட்சியின் பிரமுகர்களாக இருப்பதில் வியக்க ஒன்றுமில்லை.

சாரதா நிதி நிறுவன மோசாடியை முழுவதுமாக அறிய வேண்டுமாயின், சில முக்கிய பிரமுகர்களைப் பற்றி அறிந்தாக வேண்டும். இந்நிறுவனத்தின்  இயக்குநர் குழுவில் இருந்த அவர்களைப் பற்றி சொல்லாமல், சாரதா மோசடியைப் பற்றிப் பேச முடியாது. இனி அவர்களைப் பற்றி  காண்போம்.
.
சுதிப்தோ சென்:
.

சுதிப்தோ சென்
சுதிப்தோ சென்

இவர் தான் சாரதா நிதி நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனரும் ஆவார். இவரது பூர்வீகப் பெயர் சங்கர் ஆதித்ய சென். இளமையில் இவர் நக்சலைட் ஆதரவாளராக இருந்தார். (சிங்கூர் விவகாரத்தில் மம்தாவுக்கு நக்சல்கள் ஆதரவு தெரிவித்ததை நினைவில் கொள்ளவும்). 1990-களில் முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, ‘சுதிப்தோ சென்’ என்ற புதிய நாமகரணத்துடன், மேற்கு வங்கத்தில் சீட்டு நிறுவனங்களைத் துவக்கினார்.

பின்னாளில் இவர் பெரும் ஊடக சக்கரவர்த்தியாக  மாறினார். தான் நடத்திய சேனல் 10 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் சேமநல நிதியை செலுத்தாத முறைகேட்டுக்காக இவர் மீது வழக்கு பதியப்பட்டு 2014, பிப்ரவரியில் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். இப்போது சிறையில் ‘பாதுகாப்பாக’ இருக்கிறார்.

2013, ஜனவரியில் இவரது நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு முதலையும் வட்டியையும் தர முடியாமல் போனது. 2013, ஏப்ரல் 6-ல், இவர் சி.பி.ஐ.க்கு எழுதிய தன்னிலை விளக்கக் கடிதத்தில் தன்னை ஏமாற்றிய அரசியல்வாதிகள்  அனைவரையும் பட்டியலிட்டுள்ளார்.

இவர் மீது அதே ஆண்டு ஏப்ரல் 18-ல் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தலைமறைவானாதால் இவரை கைது செய்ய முடியவில்லை.  பெரும் முயற்சிக்குப் பிறகு, காஷ்மீரில் இவரும் இவரது நெருங்கிய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வுத் துறையால் இவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தனது சேனல் 10 நிறுவனத்தை  மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாக, திரிணாமூல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. குணால் கோஷ் மீது இவர் கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

saradha1Debjani
தேவ்ஜனி முகர்ஜி

.2. தேவ்ஜனி முகர்ஜி:
.
நிதி நிறுவன வரவேற்பாளராக பணியில் நுழைந்த இந்த இளம்பெண் (30), வெகு விரைவில் நிறுவனத் தலைவரின் அபிமானத்தைப் பெற்று செயல் இயக்குனராக உயர்ந்தார். மக்கள் பணம் எவ்வாறு களைக்குப் பாய்ந்தது என்பதற்கு இது ஓர்  உதாரணம்.

தேவ்ஜனி முகர்ஜி கையெழுத்திட்டால் தான் சாரதா நிதி நிறுவன காசோலைகள் செல்லுபடியாகும் நிலை இருந்தது. இப்போது சுதிப்தோ சென்னுடன் சேர்ந்து இவரும் சிறையில் இருக்கிறார்.
.
3. குணால் கோஷ்:
.
அடிப்படையில் அரசியல்வாதியான குணால் கோஷ், திரிணாமூல்  காங்கிரஸ் தலைவி மம்தாவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர். கட்சியின் ராஜ்யசபா எம்.பி. இவர் தான் இப்போது சேனல் 10-ன் நிர்வாக இயக்குநர். இதனை சுதிப்தோ சென்னிடம் இருந்து மிரட்டி வாங்கவில்லை என்கிறார்.

குணால் கோஷ்
குணால் கோஷ்

‘சங்க்பத் பிரதிதின்’ , ‘சகல்பேலா’ என்ற தினசரி பத்திரிகைகளுக்கு ஆசிரியரான இவர்,  சாரதா நிதி நிறுவனத்தின் பிரத்யேக ஊடகத்துக்கும் தலைவராக இருந்தார். அதற்காக இவருக்கு மாதம் ரூ. 16 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது.
.
2011 சட்டசபை தேர்தலில் மம்தா வெல்ல இவர் மிக முக்கிய பிரசாரகராக இருந்தார்.  எனினும், இவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து, 2013, செப்டம்பர் 29-ல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிருந்து நீக்கப்பட்டார். தற்போது சி.பி.ஐ. வழக்கில் இவரும் பிரதானக் குற்றவாளி. கைதாகி சிறையில் இருக்கிறார்.
.
4. ஸ்ரீஞ்ஜெய் போஸ்:
.
இவரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்; ராஜ்யசபை எம்.பி. தனது தலைவி மம்தா குறித்து வங்க மொழியில் இவர் எழுதிய ‘மகாகாரணே மம்தா’ பிரசித்தமானது. ‘சங்க்பத் பிரதிதின்’ பத்திரிகையின் ஆசிரியர்  குழு தலைவராகவும் ஸ்ரீஞ்ஜெய் போஸ் இருந்தார். கடந்த நவம்பர் மாதம் இவரை சி.பி.ஐ. கைது செய்தது.
.
5. ரஜத் மஜும்தார்:
.
மேற்கு வங்க முன்னாள் காவல்துறை தலைவரான (டி.ஜி.பி) ரஜத் மஜூம்தார், முதல்வர் மம்தாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். பணி ஓய்வுக்குப் பிறகு சாரதா நிதி நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகரானார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும் இவர் உள்ளார்.  இவரும் இப்போது கைதாகி இருக்கிறார்.
.
6. மதன் மித்ரா:
.
மேற்கு வங்க மாநில விளையாட்டுத் துறை அமைச்சரான மதன் மித்ரா கைதானபோது தான், மம்தா கோபத்தின் உச்சிக்குச் சென்றார். வலை மெல்ல இறுகுவதை அவர் உணர்ந்துகொண்டார். எனவே தான் மோடிக்கு எதிரான போராளியாக தன்னை முன்னிறுத்திக்  கொள்ள முயல்கிறார்.

மதன் மித்ரா சாரதா நிதி நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவராக இருந்ததுடன், புதிய முதலீடுகளை இருப்பதில் மிக்க உறுதுணையாக இருந்தார். இப்போது சுதிப்தோ சென்னுக்கு உறுதுணையாக சிறையில் இருக்கிறார். இவரை கடந்த டிசம்பர் 12-ல் சி.பி.ஐ.கைது செய்தது.

.

மேலும் சில தகவல்கள்:
.

மதன் மித்ரா
மதன் மித்ரா

1. மேற்கு வங்க மாநில ஜவுளித் துறை அமைச்சர் சியாமா பாத முகர்ஜியின் நஷ்டத்தில் முடங்கிய சிமென்ட் தொழிற்சாலையை சாரதா நிதி நிறுவனம் வாங்கியது.

2. மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிறந்த ஓவியர். அவரது ஓவியங்களை ரூ. 1.86 கோடிக்கு வாங்கியுள்ளார் சாரதா நிதி நிறுவனத்தின் தலைவர் சுதிப்தோ சென்.

3. அஸ்ஸாம் மாநில கல்வி அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் (காங்கிரஸ்) மனைவி மதங் சிங்கிற்கு ரூ. 25 கோடி தொகையை எந்தக் கணக்கும் இல்லாமல் வழங்கி இருக்கிறது சாரதா நிதி நிறுவனம்.

4. 2011-ல் சாரதா நிதி நிறுவனம் தனது கையிருப்பில் பெரும் தொகையை திரைப்படத் துறையில் முதலீடு செய்துள்ளது. அதேகாலகட்டத்தில் தான் ‘இந்நிறுவனம் குறித்து எச்சரிக்கை தேவை’ என்று செபி மாநில அரசை எச்சரித்திருந்தது.

5. சாரதா நிதி நிறுவனத்தின் பிரசாரகர்களாக, விளம்பரத் தூதுவர்களாக நடிகை சதாப்தி ராய், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் பெரும் செலவில் நியமிக்கப்பட்டனர்.

நளினி சிதம்பரம்
நளினி சிதம்பரம்

6. கொல்கத்தாவில் கால்பந்து விளையாட்டு மிகப் பிரபலம். எனவே, அங்குள்ள மோகன் பகான் உள்ளிட்ட பல எதிரெதிர் அணிகளுக்கும் ‘ஸ்பான்சர்’ செய்யும் நிறுவனமாக சாரதா நிதி நிறுவனம் மக்கள் பணத்தை வாரி  இறைத்துள்ளது. 2010-ல் மட்டும் இவ்வாறு ரூ. 3.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

7. மேற்கு வங்கம் மட்டுமல்லாது,  ஜார்க்கண்ட், ஒடிஸா, அஸ்ஸாம், சட்டிஸ்கர், திரிபுரா மாநிலங்களிலும் சாரதா நிதி நிறுவனத்தின் வலைப்பின்னல் படர்ந்திருக்கிறது. திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், இதனை சி.பி.ஐ. தீர விசாரிக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார்.

8. முதலீட்டுக்கு பெரும் வட்டி, சுற்றுலாத் திட்டம், நிறுவனத்தின் பங்குதாரர் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பு ஆகியவை மூலமாக சாரதா நிதி நிறுவனம் வளர்ந்துள்ளது.

9. ஒரு நிறுவனத்தில் 50-க்கு மேற்பட்டோர் முதலீட்டாளர்களாக இருக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி,  நிறுவன விதிமுறைகளை சாரதா நிதி நிறுவனம் மீறுவதை 2009-ல் செபி கண்டித்தவுடன், 200 புதிய நிறுவனங்களைத் துவக்கியது அந்நிறுவனம்.

10. செபி, ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, என பல அரசு அமைப்புகள சார்பில் இப்போது சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்கப்படுகிறது. மத்தியில் ஆட்சி மாறிய பிறகே இந்த விசாரணைகள் சூடு பிடித்துள்ளன.

Saradha 10 srinjai Bose
ஸ்ரீஞ்ஜெய் போஸ்

11. பிரச்னையின் வேகத்தைக் குறைக்க மம்தா அறிவித்த 4 உறுப்பினர் விசாரணைக் குழு, சி.பி.ஐ.க்கு ஆதாரங்கள கிடைப்பதைத்  தடுக்கவே முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. 1982-ம் வருடத்திய சீட்டு நிறுவன கட்டுப்பாட்டு சட்டத்தைக் கொண்டு வழக்கை திசை திருப்பவே மாநில அரசு முயற்சிக்கிறது.

12. ரிசர்வ் வங்கி 2012-லேயே மாநில அரசை எச்சரித்த போதும் அப்போது கண்டுகொள்ளாத மம்தாவின் அரசு, இப்போது சி.பி.ஐ.அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாகக் கூறி, விசாரணைக்கு முட்டுக்கட்டை போட முயல்கிறார்.

13. இந்த நிதி நிறுவன மோசடி உச்ச நீதிமன்றம் தலையிடாமல் இருந்திருந்தால் சென்ற ஆண்டே காணாமல் போயிருக்கும். சாரதா நிதி நிறுவன நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட உச்ச நீதி மன்றமே இதுவரை காரணமாக இருந்திருக்கிறது. இதைக் கூட உணராமல், மோடி மீதி பழி சுமத்தும் மம்தாவை என்னென்பது?

14. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சி.யின் மனைவியும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்தை சாரதா நிதி வழக்கறிஞராக சுதிப்தோ சென் நியமித்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி ஊதியம் வழங்கப்பட்டது.   இது தொடர்பாக சி.பி.ஐ. நளினியிடம் விசாரணை நடத்தியுள்ளது.
.
யாருக்கு லாபம்?
.

திசை திருப்பும் திரிணாமூல் எம்.பிக்கள்.
திசை திருப்பும் திரிணாமூல் எம்.பிக்கள்.

இவ்வாறாக, சாரதா நிதி நிறுவன மோசடியைக்  கிளறக் கிளற, அதன் வேரில் ஒளிந்திருக்கும் அரசியல் பின்புலம் அதிர்ச்சியூட்டுவதாக வெளியான வண்ணம் உள்ளது. இதன்மூலம் பயன் அடைந்த பலரும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தான் என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகவே காணப்படுகிறது.

பணச்சுழற்சி முறையால் செய்யப்படும் முதலீடுகள் உடனடியாக கவர்ச்சிகரமான லாபம் அளிப்பதாகத் தோன்றினாலும், இறுதியில் முலீட்டாளர்களுக்கு  பெருத்த நஷ்டத்தையே ஏற்படுத்துகின்றன. இந்த சங்கிலிக் கண்ணி முறையால் லாபம் அடைவோர் வேறு துறைகளில் முதலீடு செய்து தப்பிக் கொள்கின்றனர். அவர்களுக்கு அரசியல் போர்வையும் முகமுடியாகப் பயன்படுகிறது. இதையே சாரதா நிதி நிறுவன மோசடி காட்டுகிறது.

எனவே, நிதி சுழற்சி திட்டங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். நிதி மோசடியில் தொடர்புடைய  அரசியல்வாதிகளின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும். அப்போது தான் நாட்டுன் மக்களின் நம்பிக்கையை மீட்க முடியும். மோடி அரசு, மம்தாவின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் , சிபி.ஐ.யை சுதந்திரமாக இயங்க அனுமதித்து சாரதா நிதி நிறுவன மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

7 Replies to “சாரதா மோசடி: மக்களைச் சுரண்டிய பிரமுகர்கள்”

  1. I was having high regards to Ns Mamata Banerjee…But now I have lost hope and ashamed.
    Hope she would correct herself and join Modi Sahib to develop West Bengal and INDIA.

  2. These blokes are blaming RSS, BJP coupling with Leftist Yechury and et al stalling Parliamentary proceedings for days, simply because Modi Govt is exposing Sharada frauds.

    What a travesty of facts!!. Why don’t they accept no forceful conversion bill and Uniform Civil Laws for all Indians, I mean Indians only!!!!

    2016 in Tamil Nadu it will be BJP as the very Best run State in India.

  3. They ( owners of Sharadha chits) dont know how to operate and ciphon big money? Thats why they got caught.

    If they would have studied the pattern in TN, of how to cheat investors who are common people and survive the big arm of law by colluding with politicians, they would not have bungled.

    Show me in TN, any one person got punished in this chit scam which happened between 1991 and 1996?

    Lets not worry, they will come back with another name in a couple of years. They live longer than us. To quote one example, jayapriya investments of T.Nagar, after closed down in its earlier venture became Easwari chits. We all know how Eswari cheated the common men`s investments.

    They thrive on poor memory of public like DMK and ADMK.

  4. மாண்புமிகு மகாராணி மம்தாவின் கொள்ளை இங்கே செல்வி ஜெயலலிதாவைவிட மோசமாக உள்ளது. இவ்வளவு கேவலமான அரசியல்வியாதி பரிசுத்தமான தலைவர் திரு. மோடியை இகழ்வது வேடிக்கையாக உள்ளது. இவரைபோன்ற அரசியல்வியாதிகளுக்கு மக்கள் தான் நல்ல பாடம் புகட்டவேண்டும்.

  5. Secular People Quality:-
    Enjoy the NGO Money, enjoy the corruption money, get money and allow people to convert religion, political corrupt, criminals.

  6. மக்களின் ஆசையே துன்பத்திற்கு காரணம். பணம் ஒன்றே குறீக்கோள் . ஏமாற்றூக்காரர்கள் கடைசியில் நரகத்திற்கு செல்வர் – தற்பொழுது சிறையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *