பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?

“ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர், வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?” என்று மனம் வாடிப் பாடிவைத்தான் பாரதி. பல ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நமது புண்ணிய பாரத தேசத்தை மீட்டெடுத்து இங்கு சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திய கையோடு குடியரசாகவும் உருவாக்கிய பெருமை நம்மை வழிநடத்திய மாபெரும் தலைவர்களையே சேரும்.

உலக நாடுகள் பலவும் நாகரிகத்திலும், பண்பாட்டிலும், வரலாற்றிலும் பின் தங்கியிருந்த காலத்தில் நமது பெருமைக்குரிய பாரத தேசம் உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய ஆற்றலும் அதற்குரிய பின்புலமும் அமைந்திருந்தது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. நமது பெருமைக்குரிய இதிகாசங்களும் காப்பியங்களும் உலக இலக்கிய வானில் காணமுடியாத வைரங்களாக இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. நமது மொழிகள் உலக மொழிகளிடையே மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட நாம் 68 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரிடமிருந்து சுயாட்சி உரிமையைப் பெற்ற காலத்தில் எப்படி இருந்தோம் என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். வில்வண்டியில் பூட்டப்பட்ட குதிரையைப் போல கம்பீரமாக ஓடிக்கொண்டிருந்த இளங் காளைகளை, செக்கில் பூட்டி சுற்றவிட்டதைப் போல நாமும் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைகளாக செக்கிழுத்துக் கொண்டிருந்திருக்கிறோம்.

gandhi2நமது பாரம்பரியக் கல்வி முறை அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர்களுக்குச் சேவகம் செய்யக் கூடிய முறையில் நமக்கு அள்ளித் தரவேண்டிய பாரம்பரியக் கல்வியைத் தங்கள் தேவைக்கேற்றாற்போல கிள்ளித் தந்து குதிரைக்கு சேணம் பூட்டியதைப் போல கிணற்றுத் தவளைகளாக ஆக்கி வைத்தார்கள். இந்தியாவில் பண்டைய அறிஞர்கள், மேதைகள் இவர்கள் எல்லாம் கற்ற கல்வி நமக்குக் கிடைக்காமல் போய், அயல் நாட்டார் கற்ற கல்வியைக் கற்று அவர்களோடு போட்டிபோட்டு, அதிலும் நம்மவர்கள் தலைசிறந்து விளங்கியிருக்கிறார்கள். பாணினியும், பாஸ்கராச்சார்யாவும், அகத்தியரும் நமக்குக் கொடுத்ததைப் போல சுயமான அறிவினைக் கற்க முடியாமல், அன்னியர் கொடுத்த கட்டுச்சோற்றை உண்டு வாழும் நிலைமைக்குத் தள்ளப்பட்டோம்.

சுதந்திரம் கிடைத்த அன்று இந்தியாவே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. இதற்காகத் தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் சமர்ப்பணம் செய்த தியாகச் செம்மல்கள் பலர் மாண்டுபோயிருந்தாலும், மீதம் இருந்தவர்கள் இங்கு பாலும் தேனும் ஓடப்போகிறது. இராம ராஜ்யம் தழைக்கப்போகிறது. அதர்மம் ஒழிந்து நேர்மையும், நியாயமும், நீதியும் நிலைநாட்டப்படவிருக்கிறது என்று மனப்பூர்வமாக நம்பினார்கள். நாம் நாட்டுக்காக இழந்ததோ, அல்லது செய்த தியாகங்களோ வீண்போகாது என்ற நம்பிக்கையில் வாழ்ந்து மடிந்தும் போனார்கள். ஆனால் நாம் சுதந்திரம் அடைந்த அந்த 1947 ஆகஸ்ட் 15இல் தேசப்பிதா என்று மக்கள் போற்றி மகிழ்ந்த மகாத்மா வங்கத்தில் நவகாளியில் நிகழ்ந்த கொடுஞ்செயல்களுக்கு மத்தியில் சமாதானம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியும், ஒரு இரவில் இந்தியாவுக்கு விடிவு காலம் வந்துவிடாது; அது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் அதற்காக மீண்டும் சில நூறாண்டுகள் மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று.

இரவில் ஊர் அடங்கிப் போய் அமைதி நிலவுகிறது. பகலில் ‘ஹோ’ ‘ஹோ’ என்று எள் விழ இடமின்றி நாட்டின் நகர்ப்புறங்களில் மக்கள் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அலைந்தவர்கள் இரவில் என்ன ஆனார்கள். அப்படித்தான் சுதந்திரப் போரின் கர்ஜனை ஓய்ந்து முடிந்ததும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போக ஏனையோர் தங்களுக்கு இந்த சுதந்திரத்தால் என்ன ஆதாயம் கிடைக்குமென்பதில் ஆர்வத்துடன் அவரவர்க்கு ஏற்ற துறைகளை நாடி அதில் ஈடுபடலாயினர். இதுதான் உலகம். காலமெல்லாம் உயிரைக் கொடுத்துத் தம் உமிழ்நீரால் மண்ணைக் கரைத்து புற்றை உருவாக்கி கோடிக்கணக்கில் கரையான் வாழ்ந்த அந்த புற்றில் நல்ல பாம்பு வந்து குடியேறுவதைப் போல சுயநலவாதிகளும், பேராசைக்காரர்களும், மக்கள் நலனைப் பேணாதவர்களும் இந்திய மக்களை வழிநடத்திச் செல்ல நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டனர். இவர்களில் யாரை நம்புவது, யாரை நிராகரிப்பது? மக்களுக்குத் தெளிவு ஏற்பட வேண்டாமா?

காலவோட்டத்தில் வேறெந்த துறைகளிலும் வல்லவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அறிவியல் வளர்ச்சி எவருக்கும் நிகராக வானோங்கி வளர்ந்து கொண்டிருக்கையில், நாம் சுதந்திரம் அடைந்தபோது நமக்கு வெகு முன்னே வளர்ச்சி அடைந்து உயர்நிலையில் இருந்த நாடுகளுக்கு இணையாகவோ அல்லது அவர்களுக்கும் மேலாகவோ நாம் வளர்ந்து கொண்டிருந்தும் ஒரே ஒரு குறை அரசியல் ரீதியாக நாம் ஏனைய நாடுகளைப் போல, அதாவது ஜனநாயகம் தழைத்து வளர்ந்த நாடுகளைப் போல அமைதியும் ஒற்றுமையும் நிலவிட, மக்களுக்கு நன்மைகள் செய்வதில் நானா நீயா என்று உண்மையில் பாடுபடுவதை விட்டு, அரசியலால் பிரிந்து, எதிரிகளாக நிலைபெற்று போர்க்களம் போல இந்த நாட்டில் தேர்தல்களை நடத்தும் நிலைமையைக் கண்டு ரத்தக் கண்ணீர் சிந்த வேண்டியிருக்கிறது.

ஜனநாயகத்தில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை, அது உள்ளாட்சித் துறைகளாகட்டும், மாநில அரசுக்காகட்டும், அல்லது மத்திய அரசுக்காகட்டும் அல்லது வேறு எந்த அமைப்புகளுக்காகட்டும் தேர்ந்தெடுத்து அனுப்புவது என்பது மரபு. அந்த மரபின்படி அந்தந்த துறைகளில் பணியாற்ற விரும்பும் கட்சிகளாகட்டும், தனி நபர்களாகட்டும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து சட்ட விதிமுறைகளின்படி மனுச்செய்து, தாங்கள் இன்ன தேர்தலில் இந்தப் பதவிக்காக போட்டியிடுகிறோம் என்பதை மக்களுக்கு விளக்கிச் சொல்லி, தாங்கள் செய்ததையும், செய்யப்போவதையும் விவரித்து வாக்குக் கேட்பது ஜனநாயக முறை. அதெல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. ஆனால் இந்த கட்டத்தைத் தாண்டி மக்கள் கரங்களிலிருந்து வாக்குச் சீட்டை பறித்துக் கொள்வதைத் தவிர மற்ற எல்லாவிதமான ஜகஜாலங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைக் கொடுப்பதற்கும், அதனை பெற்றுக் கொள்வதற்கும் சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவற்றை மதித்து கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் ஒளிவு மறைவில்லாமல் நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் நம் நாட்டுத் தேர்தல்களில் சுயநலக் காரர்கள் தங்கள் காரியங்களை யார் மூலம் சாதிக்கலாம், யார் இருந்தால் தங்கள் குறிக்கோள் நிறைவேறும் என்பதை மனதில் கொண்டு நன்கொடைகளை நேராகவும், மறைமுகமாகவும், கருப்புப் பணத்தை அள்ளிக் கொடுத்து, யாரை வீழ்த்த வேண்டும், யாரைக் கொண்டு வரவேண்டுமென்றெல்லாம் மனதில் கொண்டு நடந்து கொள்கிறார்கள். இதன் மூலம் ஜனநாயகம் அதற்கென்று போடப்பட்ட தண்டவாளத்தில் போகாமல், தரை இறங்கி குறுக்கு வழியில் உருண்டு மண்ணில் புதுயுண்டு போகும் அபாயம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

democracy1

இந்த நிலை மாற வேண்டாமா? நம் மனசாட்சிப்படி யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு வாக்களிக்க சுதந்திரம் இருந்தும் அது பறிக்கப்படுகின்றதே. நம் உரிமை விலைக்கு வாங்கப்படுகிறதே. அச்சுறுத்தலும், ஜாதி, மத, இன, மொழி போன்ற பல பிரிவினைகளைப் பயன்படுத்தி மக்களின் வாக்குரிமை பிடுங்கப்படுகிறதே. இவைகளெல்லாம் மாற வேண்டாமா? ஊழலை ஒழிப்போம் என்பது அனைவருமே ஒருமித்த குரலில் முழக்கமிடுகிறார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேருமே ஊழலை ஒழிக்க மனப்பூர்வமாகப் பாடுபடுவார்களா? நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட கட்சி அமைத்துக் கொண்டு, காலம் காலமாக வளர்ந்து நிற்கும் ஆலமரத்துக்கும் அரச மரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருப்பது எப்படி? எந்த வகையிலும் வருமானம் வர வாய்ப்பில்லாத சிலர் ஒன்றுகூடி கட்சி அமைப்பதும், அவர்களிடம் கோடி கோடியாகப் பணம் கொட்டிக் கிடப்பதும் எப்படி? தெரியவில்லையே.

நமது தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அப்புறம் இருக்கட்டும். நமது மக்கள் மனங்களில், அரசியல் கட்சியினரின் மனங்களில், பதவிக்கென்று ஆலாய் பறக்கும் சுயநலமிகள் மனதிலும், இவர்களது ஆதாயங்களைக் காட்டிலும், இந்த நாட்டின் எதிர்காலமும், மக்களின் வளமும், செல்வமும், பெருமையும் பெரிது, மிகப் பெரிது என்ற எண்ணத்தை முதலில் உருவாக்க வேண்டும். இந்த மாற்றத்தை எந்த சட்டத்தாலும் கொண்டுவர முடியாது. மனமாற்றம் ஒன்றுதான் இதற்கு வழி. இந்த மனமாற்றத்தை மக்களிடம், கட்சிகளிடம், அரசியல் வாதிகளிடம் கொண்டு வந்து நிலைபெறச் செய்யும் வல்லமை யாருக்கு இருக்கிறது? இனிதான் ஒருவர் அதற்காகப் பிறந்து வரவேண்டுமென்றால், அப்படியொருவர் வந்து இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் முறையிடுவோம். அப்போதாவது நாம் விரும்பும் இராமராஜ்யம் நிலைபெறுமா என்று பார்ப்போம். வாழ்க இந்திய ஜனநாயகம்!

17 Replies to “பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?”

  1. இங்கே இப்போது கோலோச்சுவது ஜனநாயகமல்ல். பணநாயகம்.

    ஏழைகளுக்கு ரொட்டித்துண்டுபோல இலவசங்களை அள்ளி வீசி ஓட்டுப் பெற்று
    ஆட்சியில் அமர்ந்து சுரண்டல் காரர்களுக்குத் துணை போகும் அரசியல் வாதிகள்
    மனம் மாறவேண்டும் என்பதெல்லாம் குதிரைக் கொம்புதான்.

    “சம்பவாமி யுகேயுகே”

  2. An idealist view of life 🙂

    மக்கள் மனங்களில் மட்டுமல்ல, சுயநலமிகள், கட்சிக்காரர்கள் மனங்களிலும் மாற்றம் வரவேண்டுமென்கிறார். அம்மாற்றம் எப்படி வரவழைக்க வேண்டுமென்பதற்கு ஆண்டவனிடம் பிரார்த்தித்தால் நடக்குமென்கிறார். மனிதனை மனிதன் ஏமாற்றிப்பிழைக்கும்போது, ஏமாறுபவன் தன்னைக்காத்துக்கொள்ளவேண்டும். உங்களைப்போன்றோ அவனுக்கு எப்படி என்று உபாயங்கள் சொல்லலாம். உங்கள் வேலை நீங்கள் செய்யுங்கள்; கடவுள் வேலையை கடவுள் செய்துகொள்வார். எதைக்கடவுளிடம் கேட்டுப்பெறுவது என்பதற்கும் முறையுண்டு. படிக்காமல் பரீட்சைக்குப்போகும் மாணாவன் பரீட்சையன்று காலையில் பிள்ளையாரிடம் போய் பத்துத்தேங்காய் உடைக்கிறேன். என்னை எப்படியாவது பாஸ் பண்ணவை என்றால், பிள்ளையார் என்ன செய்வார்? அவனாவது சின்னப்பையன். நாம?

    ஜனநாயகத்தைப்புகழ்ந்துகொண்டே ஜனநாயகத்தை வெட்டுகிறாரிங்கே: //நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட கட்சி அமைத்துக் கொண்டு, காலம் காலமாக வளர்ந்து நிற்கும் ஆலமரத்துக்கும் அரச மரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருப்பது எப்படி? //

    காலம்காலமாக நிற்கும் ஆலமரமும் அரசமரமும் புழத்து செல்லரித்து பட்டமரங்களாக ஆகும்போது, புதிய தாவரங்கள் முளைவிட்டு எழுந்து வளர்வதுதான் ஜனநாயகம். பழைமை என்றுமே நின்று நம்மைக்காக்கும்; அல்லது மாறாமல அப்படியே இருந்து காக்குமென்பது, வயதானவர்களுக்கு ஏற்படும் சுய இன்பக் கனவுகள்.

    புதிய கட்சிகள் தோன்றட்டும்; புதிய தலைவர்கள் தோன்றட்டும். இல்லாவிட்டால் பழைய கட்சிகளே உண்டு கொழுத்து பெருச்சாளிகளாக அலைந்து நம்மை ஏமாற்றும்.

    ஒன்று வேண்டுமானால் செய்யலாம்; இரு கட்சி ஜன்நாயகமாக்கிவிட்டால், கட்டுரையாளரின் கனவு நன்வாகலாம். ஆனல அவ்விரு கட்சிகள் எவைஎவை என்பதை அவர் சொன்னால் நல்லது.

  3. தலையான கடமையாகத் தலைநகரை மையம் வைத்து, சம்பவங்களின் பின்னணியாக நாட்டுநடப்பைத் துல்லியமாக கோர்த்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர். நன்றி. பல தளங்களிலே விவரமாக விவாதிக்கப் படவேண்டிய முக்கியமான விஷயம் இது. தத்வமசி – எதை ஆழமாகத் த்யானிக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு சான்று. நம் மஹாகவியே இன்றைய நிலையை எழுதி நமக்கு உணர்த்தி இருப்பதுபோல உணருகிறேன்.
    பதித்த தமிழ்ஹிந்துவுக்கு நன்றி.
    பராசக்தி துணை.
    நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன் .

  4. பாரத தேசத்தில் ஜனநாயகம் வேறு எந்த நாட்டிலும் இருப்பதைப்போலவே ஆரோக்கியமாகவே உள்ளது. நம் மக்கள் வாக்கு சீட்டின் மூலமே இந்தியாவின் முதல் சர்வாதிகாரி இந்திராகாந்தியை எமெர்ஜென்சிக்கு பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு எம் பி கூட ஆகாமல் தோற்கடித்தனர். மூக்கறுந்த இந்திரா கர்நாடக மாநிலத்தில் இருந்த தனது கொத்தடிமைகளை நாடி சிக்கமகளூரு என்ற தொகுதிக்கு ஓடி, 1978- ஆம் ஆண்டு எம் பி தேர்தலில் வென்று, அதன் பிறகு 1980- ஜனவரி வரை வனவாசம் போனார் என்பது வரலாறு.

    அதே சர்வாதிகாரி இந்திரா 1980-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வென்றவுடன் தீய சக்திகளின் கூட்டுறவால், எம் ஜி ஆர் அரசை டிஸ்மிஸ் செய்து சட்டசபையை கலைத்தபோது, தமிழக மக்கள் ஒன்று திரண்டு, அவரது மூக்கை மீண்டும் அறுத்து, எம் ஜி ஆரை மீண்டும் முதல்வர் ஆக்கினர்.காலத்தை வென்ற காவியத்தலைவன் எம் ஜி ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கருமாதி செய்து புதை குழிக்கு அனுப்பினார்.

    ஆந்திராவில் 1983-லே ஆட்சியை பிடித்த என் டி ராமாராவை , பாஸ்கரராவ் என்ற ஒரு கோமாளியின் துணையுடன் சர்வாதிகாரி இந்திரா கவிழ்த்தபோது, ஆந்திர வாக்காளப் பெருமக்கள் மீண்டும் என் டி ராமாராவை வெற்றி பெறச் செய்து, மீண்டும் முதல்வர் ஆக்கி இந்திராவின் மூக்கை மீண்டும் அறுத்தனர்.

    அதன் பிறகு சர்வாதிகாரி இந்திரா காலமான பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 1984-டிசம்பரில் ராஜீவ் பெருவெற்றி பெற்றவுடன் , கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேயை ஏகடியம் பேசினார். ராமகிருஷ்ண ஹெக்டேவுக்கு சவால் விட்ட ராஜீவ் காந்தியின் சவாலை ஏற்று, கர்நாடக சட்டசபையை கலைத்து, தேர்தலை நடத்தி , காங்கிரசை தோற்கடித்து, ராஜீவின் மூக்கை நறுக்கினார் ராமகிருஷ்ண ஹெக்டே. குடும்ப ஆட்சி, உறவினர் கொட்டம் என்று எந்த எந்த மாநிலங்களில் உள்ளதோ, அங்கெல்லாம் மக்கள் கிளர்ந்தெழுந்து, ஊழல் குடும்பங்களை வீட்டுக்கு அனுப்பினார்கள்.

    மிகப்பெரிய ஊழல்களை நிகழ்த்தி வரலாற்றில் பதிவு செய்த இந்திரா காங்கிரஸ் காடையர்களை தோற்கடித்து, அவர்களின் பணபலம், பத்திரிகை, தொலைகாட்சி ஜால்றாக்க்களின் சதி திட்டங்கள் இவை எல்லாவற்றையும் உடைத்து எறிந்து , நரேந்திர மோடியை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தினர். எனவே இந்திய ஜனநாயகம் தேவையானபோது , நன்றாகத்தான் செயல்படுகிறது.ஆரோக்கியமாகவே இருக்கிறது.

  5. பல நேரங்களில் ஜனநாயகம் எனும் போர்வையில் சில கோமாளித்தனங்கள் அரங்கேறுகின்றன. ஆனாலும் பெரும்பான்மை மக்கள் சரியான படிப்பறிவு பெறாமல் இருந்தபோதிலும் அதிசயத்தக்க விதத்தில் தேர்தல் முடிவுகள் அமைகின்றன. ஊழல் அரசியல் வியாதிகள், அதிகாரிகள் பஞ்சம், பசி போன்றவற்றை சகித்துக்கொண்டு ஒரு நாள் விடியும் என்று காத்திருக்கும் சாமாநியர்களினால் தான் இந்த தேசம் ஒரு கொடுமையான ஆயுதம் தாங்கிய போராட்டத்தை எதிர்கொள்ளாமல் இருக்கிறது.மாவோயிஸ்ட்களின் தூண்டுதல் இருந்தபோதிலும் அவை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்களும் தேவை. எடுத்துக்காட்டுக்கு ஒன்று; இடைத்தேர்தல். இதனால் பணவிரயம் , அரசு எந்திரம் முடக்கம் இவைதான் நடைபெறுகின்றன. ஒருதொகுதியில் உறுப்பினரின் மரணம், பதவி விலகல் அல்லது ஸ்ரீரங்கம் தொகுதி போல் அரசியல் சட்ட நிகழ்வு என ஏதேனும் ஏற்பட்டால் தேர்தல் நடத்துவதை விட்டு வெற்றி பெற்றவருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்றவரை நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கலாம். ஜனநாயக நடைமுறை என்ற பெயரில் இடைத்தேர்தல் எனும் பணவிரயம் தேவையில்லை

  6. ஜி.ரங்கநாதன் அவர்களுடைய கருத்து எனக்கு சம்மதம்தான். எதார்த்தத்தை உணர்ந்து கொடுக்கப்பட்டுள்ள பின்னூட்டம். கட்சி காழ்ப்பின்றி உண்மை நிலையை எடுத்துரைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இங்கு சட்டசபைக்குப் போட்டியிட கோடிக்கணக்கில் செலவு செய்தால் முடியுமென்கிற நிலைமை உருவாகிவிட்டது. இதில் சாதாரண மக்கள் எப்படி போட்டியிட முடியும்? பணம் படைத்தவர்கள்தான் தேர்தலில் நிற்க முடியும், வெற்றி பெற முடியுமென்றால் இங்குள்ள நிலைமை ஏழைகளுக்கு எதிரானது அல்லவா? நான் ஒரு புதிய கட்சி தொடங்கி இன்று ஆலம் விருட்சமாய் வளர்ந்திருக்கும் பெரிய கட்சியுடன் போட்டியிட முடியுமா? முடிந்தாலும் அவர்களுக்கு இணையாகப் பணம் செலவு செய்ய முடியுமா? அப்படி முடிகிறதென்றால், எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்று எனக்கு யாராவது பணத்தை அள்ளிக் கொடுத்தால்தான் செலவிட முடியும் அல்லவா? ஆனால் ஒரு விஷயம் மனதுக்கு மகிழ்ச்சி யளிக்கிறது. தேவை ஏற்படும்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக தேர்தல் முடிவு ஏற்பட்டு விடுகிறது. அது எப்படி? துன்பம் தாங்கமுடியாமல், கோபம் தலைக்கேறி மக்கள் ஒரே மாதிரி சிந்தித்தால் எவரையும் தூக்கி எறிந்துவிட முடிகிறது. கல்வியறிவு குறைவான பகுதிகளில்கூட இந்த முடிவை மக்கள் மிக எளிதாக செயல்படுத்தி விடுகிறார்கள். ஜனநாயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது ஏழையும் இங்கு தேர்தலில் நிற்க முடியுமா? (கள்ளப் பணத்தை எதிர்பார்க்காமல்) என்பதுதான் என் கேள்வி. நன்றி திரு ரங்கநாதன்.

  7. g ranganaathan “தேர்தல் நடத்துவதை விட்டு வெற்றி பெற்றவருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்றவரை நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கலா”
    It is a good suggestion Sir though it has some flaws. Let us say a candidate wins by obtaining 75% of the votes. The next candidate gets only 10% of the share of the votes. It will then be a ridiculous situation when the second candidate with only 10% of the vote share becomes the official voice of that electorate. My suggestion? If a MP/MLA is found CRIMINALLY guilty, he not only loses his seat but also penalized, say double the amount of the cost of holding another election.
    By the way, I do not consider Gandhi as the father of the nation. If anything, he was an impediment to the freedom movement.

  8. மக்களாட்சி முகிழ்த்துச் சிறக்கவேண்டும் என்றால், மக்கள் தாங்கள் வேறு, அரசு வேறு என்ற எண்ணத்தைக் கைவிடவேண்டும். அதற்காக, அரசின் சொத்து தனது சொத்து என்ற எண்ணத்துடனும் செயல்படக்கூடாது.

    அரசின் சொத்து பொதுச் சொத்து, அதற்கு நாம் அனைவரும் காவலர்கள் என்ற எண்ணத்துடன் செயல்படவேண்டும்.

    ஒருவர் காசு கொடுக்கிறார் என்று வாக்களித்தால், நமது எதிர்கால வாழ்க்கையையே அந்தக் காசுக்காக ஐந்து ஆண்டுகள் அடகு வைக்கிறோம் என்று அறிந்து, புரிந்துகொண்டு செயல்படாவிட்டால், அங்கு மக்களாட்சி மலராது.

    ஐந்து ஆண்டுகள் காசுகொடுத்து வாக்களித்தவருக்கு அடிமை வாழ்வுதான் வாழவேண்டும்.

    கடைசியாக, மக்கள் அவர்கள் வாக்களிக்கும் முறைப்படியும், பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கும் முறைப்படியும்தான் அரசைப் பெறுவார்கள். ஆங்கிலத்தில் சொன்னால், People get the government they deserve.
    அவ்வளவே!

  9. தஞ்சை வெ.கோபாலன் on February 7, 2015 at 12:21 pm
    “ஜி.ரங்கநாதன் அவர்களுடைய கருத்து எனக்கு சம்மதம்தான். எதார்த்தத்தை உணர்ந்து கொடுக்கப்பட்டுள்ள பின்னூட்டம். கட்சி காழ்ப்பின்றி உண்மை நிலையை எடுத்துரைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி”. நன்றி திரு கோபாலன் . தேர்தல் நடை முறைகளுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினால்(தேர்தல் அதிகாரியாகவும்/மண்டல அலுவலராகவும்) தான் இடைத் தேர்தல் என்பது பணவிரயம் என்ற தீர்மானமான முடிவுக்கு நான் வருகிறேன்.பொதுத் தேர்தலில் மனிதசக்தி அரசு யந்திரம் இவற்றுக்கு பணச் செலவு என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே.(அரசியல் கட்சிகளின் பணச் செலவுபற்றி நாம் கவலைபட வேண்டியதில்லை. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற எந்த வழிகளையும் கைகொள்கிறது, எதிர் கட்சியோ தான் வெற்றிபெற்றால் ஆளும் கட்சி ஆதரவிழந்து விட்டது என்று ஒப்பாரி வைக்கும்.ஆளும் கட்சிக்கோ ஏறக்குறைய கௌரவ பிரச்னை. இதில் யார் வெற்றி பெற்றாலும் பெரிய மாற்றம் வந்து விடாது. கட்சிகளுக்கு ஆதரவு பெருகியதும் குறைந்ததும் புள்ளி விவர விளையாட்டுக்குத்தான் உதவும்.இருந்தும் இடைத்தேர்தல் ஜனநாயகப் போர்வையில் நடத்த படுகிறது.
    ” Rama
    Let us say a candidate wins by obtaining 75% of the votes. The next candidate gets only 10% of the share of the votes. It will then be a ridiculous situation when the second candidate with only 10% of the vote share becomes the official voice of that electorate இப்படி ஒரு கணக்கு போட்டால்: மொத்த ஓட்டுகள் 1200 வேட்பாளர் 1.500 வேட்பாளர் 2 300 , வேட்பாளர் 3 250, வேட்பாளர் 4 150. இதில் வேட்பாளர் 1க்கு எதிராக விழுந்த ஓட்டுகள் தான் அதிகம். ஆனால் அவர் மற்றவர்களை விட அதிகம் ஒட்டு பெற்றதால் வெற்றி பெற்றவர் ஆகிறார். அப்படி இருக்கும் போது இடைதேர்தலுக்கு பதிலாக அடுத்தபடியாக ஓட்டுகள் பெற்றவரை மீதமிருக்கும் சட்டசபையின் பதவிக்காலத்துக்கு நியமிக்கும்படி தேர்தல் விதி முறைகளை மாற்றினால் நன்று. இடைதேர்தல் எனும் கேளிக்கூத்தினை தவிர்க்கலாம்

  10. பலபேர் புலம்பி எழுதுவது எனக்கு நகைப்பை தருகின்றது. ஆட்சியும் அதிகாரமும் நம்மவர்களிடம் உள்ளது. கேஜ்ரிவால் போன்றவர்களுக்கு ஊக்கமளித்து இயக்கும் பின்புல தேசவிரோத அமைப்புகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மத்திய அரசு கடின உழைப்பு செய்கின்றது. அத்தோடு சாதுரியமான உழைப்பும் வேண்டும். சுபிரமனிய சாமி, குருமூர்த்தி போன்றோர்களின் திறமையினை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பாஜக பிரதிநிதிகள் அனைவரையும் தினசரி ஷாகாக்களுக்கு செல்ல அமித் ஷா அறிவுறுத்த வேண்டும். அதுதான் கள நிலவரத்தை அறிய ஏதுவாக இருக்கும். நிறைய ஷாகாக்களை ஆரம்பிக்க முனைப்பு காட்டவேண்டும். அமித் ஷா அவர்களின் உறுப்பினர் சேர்க்கும் யுக்தி சுத்த வேஸ்ட். ஏனெனில் இப்பொழுதெல்லாம் அனேகம்பேர் ஒன்றிற்கு மேற்பட்ட கட்சிகளின் அடையாள அட்டையோடு அலைகின்றனர். மாறன் சகோதரர்கள், கனிமொழி, அன்புமணி, சுரேஷ் ராஜன், ஜெயலலிதா, ஆஸ்ராம் பாபு, லாலு, மாயாவதி ராபர்ட் வதேரா போன்றோர் மேலுள்ள வழக்குகளை விரைந்து நடத்த வேண்டும். ஊழல் வாதிகள் இருக்கும் இடம் எது என்பதை காண்பித்தால் நம் தேசத்தில் பாதி பிரச்சினைகள் தீர்ந்த மாதிரியாகிவிடும்.

  11. டெல்லி சட்டசபைத்தேர்தல் என்றாலே சொதப்புவதை பிஜேபி தொன்றுதொட்டு ஒரு வழக்கமாகவேசெய்து வருகிறது….

    1993ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.பெரும் வெற்றி பெற்று திரு.மதன்லால் குரானா தலைமையில் ஆட்சியமைத்தது.இரண்டாண்டுகளுக்கு பிறகு அவரை நீக்கிவிட்டு திரு.சாஹிப் சிங் வர்மாவை முதல்வராக்கியது.பிறகு இரண்டாண்டுகள் கழித்து அவரையும் நீக்கிவிட்டு லெக் தாதா சுஷ்மா ஸ்வராஜை முதல்வராக நியமித்தது[ இந்த அம்மையார் கால்வைக்கும் இடம்………வெளங்கிடும்……. ].அவர் மூன்ற மாதம்மட்டுமே முதல்வர் பதவி வகித்தார்.பிறகு வந்த தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் தோற்கடித்தனர்.தொடர்ந்தால்போல் மூன்று தேர்தல்களில்
    பிஜேபி தோல்விய சந்தித்தது…..

    2013 தேர்தல்…. காங்கிரசின் மீது உச்சக்கட்ட வெறுப்பில் இருந்த மக்கள் , வெற்றியை தங்கத்தட்டில் வைத்து பிஜேபியிடம் தர தயாராக இருந்தனர்….ஆனால் பிஜேபி வழக்கம் போல் சொதப்பிக்கொண்டிருந்தது….. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் கூட முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை… மறுபக்கம் ஆம் ஆத்மி பிரச்சாரத்தில் தூள் கிளப்பிக்கொண்டிருந்தது….. ஒரு வழியாக தேர்தலுக்கு
    பத்து நாள் இருக்கும் போது விஜய் கோயல் சமாதானம் செய்யப்பட்டு ஹர்ஷ்வர்தன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்…….. குறைந்தது இராண்டு மாத்ங்களுக்கு முன்பாக டாக்டர் ஹர்ஷவர்தன் பெயர் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் செய்திருந்தால் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கலாம்…. ஜஸ்ட் மிஸ்…. .31 தொகுதிகளில் மட்டுமே வெற்றி …ஆட்சி அமைக்க முடியவில்லை…..சட்டசபை முடக்கிவைக்கப்பட்டது….

    2014 தேர்தலில் டெல்லியின் ஏழு தொகுதிகளிலும் பாஜக‌ அபார வெற்றி பெற்றது….. அதிலும் ஒரு மாபெரும் தவறு நடந்தது…. பிஜேபியின் இன்றைய அவல‌ நிலைக்கு அன்றுதான் விதை ஊன்றப்பட்டது…. தேவையே இல்லாமல் ஹர்ஷவர்தன் எம் பி தேர்தலில் நிற்கவைக்கப்ப‌ட்டார்….மத்திய அமைச்சராகவும் ஆக்கப்ப‌ட்டார்….[ பின்னர் காரணம் தெரியாமலே பதவியிறக்கம் செய்யப்பட்டார் ].. மாநில‌த்தலைவரும் , எம் .எல் . ஏ வுமான டாக்டர் ஹர்ஷவர்த்தன் மாநில அரசியலில் தொடர்ந்திருக்கவேண்டும்…. கட்சியின் இன்னொரு முக்கிய தலைவரான விஜய் கோயல் மத்திய அமைச்சர்….ஆக டெல்லி மாநில கட்சிக்கு சரியான தலைவரே இல்லை என்றானது…..

    மோடியை மட்டுமே நம்பி கட்சி நடத்த முடியுமா? வலுவான மாநிலத்தலைவர்கள் இல்லாவிட்டால் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது….. கருணாநிதியோ ., ஜெயலலிதாவோ சந்திக்காத தோல்விகளா? அதற்காக அவர்களை மாற்றிவிட முடியுமா? வெற்றிக்கு மிக அருகே கொண்டு வந்த ஹர்ஷவர்த்தனை வைத்துக்கொண்டே மற்றொரு முயற்சி செய்வதுதானே அறிவுடமை?

    மத்தியப்பிரதேசத்தில் சவுஹானும் , ராஜஸ்தானில் வசுந்தராவும் , சத்தீஸ்கரில் ராமன்சிங்கும் இல்லாவிட்டால் கட்சி வெற்றி பெற்றிருக்குமா? எடியூரப்பா இல்லாமல் கர்நாடகத்தை இழந்ததை அதற்குள்ளாகவா மறந்துவிடுவது?

    நாடு முழுக்க செல்வாக்கு பெற்ற நேரு கூட வலுவான மாநிலத்தலைவர்கள் துணையுடன் தான் வெற்றி பெற முடிந்தது….[ தமிழகம் – காமராஜர் , கர்நாடகம் – நிஜலிங்கப்பா , மராட்டியம் – மொரார்ஜி தேசாய் , மேற்கு வங்கம் – அதுல்ய கோஷ் , ஆந்திரம் – சஞ்சீவ ரெட்டி போன்றோர்… ] மாநிலத்தலைவர்களின் செல்வாக்கை குறைக்க முயற்சி செய்த இந்திராவாலும் , பிந்தைய நேரு குடும்பத்தாராலும் காங்கிரஸ் அடைந்துள்ள‌ கதியை பாஜக நினைவில் கொள்ள வேண்டும்….

    தேர்தலுக்கு சில நாட்கள் இருக்க கிரண்பேடியை கட்சிக்குள் சேர்த்து உடனடியாக முதல்வர் வேட்பாளராக அறிவித்தது மற்றொரு மாபெரும் தவறு…. எனக்குத்தெரிந்து இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை…..அந்தப்பெருமையும் பாஜகவுக்கே…..

    இத்தனை சொதப்பல்கள் செய்த பாஜக வெற்றி பெற்றிருந்தால்தான் ஆச்சரியம்….

    பாசிட்டிவான விஷயம் என்னவென்றால் , பாஜகவின் ஓட்டு குறையவில்லை….எதிரிகள் ஒன்று சேர்ந்த்தால்தான் இந்த வெற்றி….

    போனது போகட்டும்…. கெஜ்ரிவால் அள்ளிவிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற யாராலும் முடியாது…. மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டிவிட்டு , பத‌வியை விட்டு ஓடவே வாய்ப்புகள் அதிகம்….

    அடுத்த தேர்தலிலாவது சரியான முடிவுகளை எடுக்கும் அறிவை பாஜகவுக்கு கொடுங்கள் என்று இறைவனை வேண்டுவோம்…..

  12. //////இடைதேர்தலுக்கு பதிலாக அடுத்தபடியாக ஓட்டுகள் பெற்றவரை மீதமிருக்கும் சட்டசபையின் பதவிக்காலத்துக்கு நியமிக்கும்படி தேர்தல் விதி முறைகளை மாற்றினால் நன்று. இடைதேர்தல் எனும் கேளிக்கூத்தினை தவிர்க்கலாம்/////

    ஐயோ ராம ராமா! பதவிக்கு தேர்ந்தேடுக்கபட்டவர் இறந்துவிட்டால் அடுத்தபடியாக ஓட்டுகள் பெற்றவரை MLA அல்லது MP ஆக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தால் அடுத்தபடியாக ஒட்டு வாங்கியவர் தான் பதவிக்கு வரவேண்டும் என்று நினைத்து அடியாட்களை வைத்து பதவியிலிருப்பவரை கொலை செய்ய திட்டமிடுவார்கள்.. பரவாயில்லையா?

  13. HONEST MAN on February 13, 2015 at 3:57 pm

    “ஐயோ ராம ராமா! பதவிக்கு தேர்ந்தேடுக்கபட்டவர் இறந்துவிட்டால் அடுத்தபடியாக ஓட்டுகள் பெற்றவரை MLA அல்லது MP ஆக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தால் அடுத்தபடியாக ஒட்டு வாங்கியவர் தான் பதவிக்கு வரவேண்டும் என்று நினைத்து அடியாட்களை வைத்து பதவியிலிருப்பவரை கொலை செய்ய திட்டமிடுவார்கள்.. பரவாயில்லையா?”
    ஆஹா ! என்ன நல்ல எண்ணம் HONEST MAN அவர்களுக்கு . அப்படிப் பார்த்தால் தினம் ஒரு கொலை அரங்கேறும். நமது அரசியல் வாதிகள் டில்லி சுல்தான்கள் போலவோ அல்லது ஔரங்கசீப் போலவோ நடந்துகொள்ளமாட்டார்கள் என நம்புகிறோம் (மூட நம்பிக்கை !) எல்லாவற்றிலும் எதிர்மறைகளையே சிந்தித்துகொண்டிருந்தால் எப்படி.

  14. இந்திய தேர்தல் அமைப்பில் , வெற்றிபெற்றவர் இறந்துவிட்டால், இடைதேர்தல் நடத்துவதே சரி. ஹானஸ்ட் மேன்- அவர்கள் தெரிவித்துள்ளது மிக சரியானது.

    இறந்தவருக்கு அடுத்த படி அதிக வாக்கு வாங்கியவருக்கு பதவியை கொடுப்பது என்பது , மேலும் பல கொலைகளுக்கு மட்டுமே வழி வகுக்கும். மேலும் இரண்டாவது இடம் பெற்றவர் என்பவர் , வெற்றி பெற்றவரை விட அதிக வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர். அவருக்கு பதவியை கொடுத்துவிடலாம் என்பது , ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.

  15. தமிழ்ஹிந்து வாசகர்களுக்கு ……

    தயவு செய்து நாம் வாழும் இந்நாட்டை பாரதம் என்றோ இந்துஸ்தானம் என்றோ அழைப்பதை நிறுத்தி, இந்தியா என்று அழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இந்தியா என்னும் சொல்லில் தான் பூரண ஜனநாயகமும் சமத்துவமும் இருப்பதை உணர முடிகிறது, பாரதம் என்பதிலோ அல்லது இந்துஸ்தானம் என்று அழைப்பதில் குறுகிய மத வாதம் தான் தொக்கி நிற்கிறது. ஆகவே, நாம் வாழும் இந்நாட்டை, இப்புண்ணிய பூமியை இந்தியா என்று பெருமையோடு அழைப்போம் நன்றி …

  16. திரு தாயுமானவன்

    திரு அரவிந்த் கேஜரிவால் “பாரத் மாதா கீ ஜெய் !” என்று தான் தன் பேச்சை ஆரம்பிக்கிறார். இவருடைய வெற்றி வகுப்புவாத மதவாத வெறிக்கு விழுந்த பேரிடி என்று பலர் சொல்கின்றனர். ஆனால் இப்படி அவரும் பாரத் என்று கூறுகின்றாரே.

    எம்பெருமான் ஈசன் என்று அடிக்கடி சொல்கின்றீர்களே அது உங்களுக்கு மட்டும் புனிதமில்லை. எல்லாருக்கும்தான். ( அது குறுகிய மதவாதம் என்று திரு வீரமணி சொல்கிறார் – ஏற்றுக் கொள்கிறீர்களா ? ) அது போல் பாரதம் என்ற பெயரை புனிதமாக நாங்கள் கருதுகிறோம். அதற்கு உள்ள அர்த்தங்களில் ‘ அக்னி’ என்று அர்த்தமும் உண்டு. எனவே நீங்கள் சொல்லும் குறுகிய மதவாதம் ஒன்றும் அதில் வரவில்லை. உங்களுடைய கண்ணோட்டம் அது.

  17. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

    \\ தயவு செய்து நாம் வாழும் இந்நாட்டை பாரதம் என்றோ இந்துஸ்தானம் என்றோ அழைப்பதை நிறுத்தி, இந்தியா என்று அழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இந்தியா என்னும் சொல்லில் தான் பூரண ஜனநாயகமும் சமத்துவமும் இருப்பதை உணர முடிகிறது, பாரதம் என்பதிலோ அல்லது இந்துஸ்தானம் என்று அழைப்பதில் குறுகிய மத வாதம் தான் தொக்கி நிற்கிறது. \\

    இதெல்லாம் எப்படி ரூம்பு போட்டு யோசிப்பீங்களா 🙂

    சிவ சிவா.

    *இந்தியா* என்ற சொல் எப்படி அரசியல் சாஸனத்தில் உள்ளதோ அப்படியே *பாரதம்* என்ற சொல்லும். இதை தேசத்துக்கு சமர்ப்பித்தவர் ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர். அவருக்கு *பாரதம்* என்ற சொல்லில் மதவாதம் தொக்கி நிற்கிறது என்று தெரிந்திருந்தால் அவர் அப்படி ஒரு சொல்லை சேத்திருக்கவே மாட்டாரே ஸ்வாமின்.

    அல்லது சிவனடியார் ஸ்ரீமான் தாயுமானவன் அவர்களுக்கு தெரிந்த விஷயம் ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களுக்கு தெரியாது என்று சொல்ல வருகிறீர்களா 🙂

    சாக்ஷாத் எங்கள் தமிழ்த்ரய விநோதப்பெருமானே *முத்தைத்தரு* என்று அடியெடுத்துக்கொடுத்து………….. அசீம க்ருபையுடைய எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய……………

    அவரேஏஏஏஏஏஏஏஏஏ…………………. “முந்து தமிழ்மாலை கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி* என்று தான் பாடியருளிய…………… *மாக்ருதபுஷ்ப மாலை* யாகிய …………..*******அமுதினுமினிய******** *திருப்புகழை* ………… *தமிழ்மாலை* என்று சாதித்தருளிய பின்னரும்

    *சற்போதகப்பதும முற்றே ******தமிழ்க்கவிதை********* பேசிப்பணிந்துருகு நேசத்தை இன்று தர இனிவர வேணும்………….. என்று எங்கள் பழனிப்பதிவாழ் பாலகுமாரனை இறைஞ்சிய படிக்கான பின்னரும்

    முருகப்பெருமானுக்கு உகந்த……………………. ****ச்ருதிதுல்யமான****…………………. *திருப்புகழமுதத்தை*…………..

    தமிழ்த்தாத்தா உ.வேசா அவர்கள் குஹத்திரு வ.த.சுப்ரமண்யபிள்ளையவர்கள், குஹத்திரு தணிகைமணி வ.த.சு செங்கல்வராயபிள்ளையவர்கள் வள்ளிமலை குஹத்திரு சச்சிதானந்த ஸ்வாமிகள் குஹத்திரு வாரியார் ஸ்வாமிகள் அவர்கள் இத்தனை பேரும் திரட்டித்………. தொகுத்து………….. தவமுறைத்யான பத்ததிகளை வகுத்து………… நமக்குப் போட்டியருளி ………………..

    பெருத்த பாருளீர் வாருமே ……….. வந்து மயிலையும் அவன் திருக்கையயிலையும் அவன் கடைக்கணியலையும் நினைந்திருக்க வாருமே…………………

    என்று உலகுளோர் அனைவரையும் வருந்தி அழைத்து

    …………….. போற்றிப்புகழ்ந்த போதிலும்………………

    அப்படிப்பட்ட *திருப்புகழமுதத்தையே*

    இவர்கள் அத்தனை பேர் கொமட்டிலும் குத்தும் படிக்கு தாங்கள் *கொடுந்தமிழ்* என்று சான்றிதழளித்துள்ளீர்கள்.

    உங்களுக்கு இருக்கும் தமிழுணர்வு எங்கள் வள்ளிக்குறமகளுக்கு வாய்த்த தமிழ்த்ரயவிநோதப்பெருமானுக்கு இல்லை என்று கொள்வதா………………. அல்லது நான் இங்கு பட்டியலிட்ட ப்ராதஸ்மரணீயர்களான சான்றோர்களுக்கு உங்களை விட தமிழுணர்வு கொறச்சல் என்று கொள்வதா………………அல்லது முருகப்பெருமானை விடவும் வள்ளல் அருணகிரிப்பெருமானைக்காட்டிலும் இந்த ப்ராதஸ்மரணீயர்களைக் காட்டிலும் எனது மதிப்பிற்குரிய சிவனடியாரான தங்கள் தமிழறிவு மேன்மை வாய்ந்தது என்று கொள்வதா……………

    நீங்களே விளக்குங்கள்.

    சிவப்பரம்பொருளில் நாட்டமுடைய அனைத்து அன்பர்களும் எனக்கு வணக்கத்துக்குரியவர்களே. அதில் தாங்களும் அடக்கம். ஆனால் தங்களை விட நான் பட்டியலிட்டுள்ள ப்ராதஸ்மரணீயர்களை பல கோடி பங்கு வணக்கத்துக்குரியவர்களாகவும் தங்கள் வாழ்க்கையையே தமிழுக்கு அர்ப்பணம் செய்தவர்களாகவும் ……………. முருகப்பெருமானை தமிழ் மொழியின் வடிவமாகவும்…………. கருதுகிறேன். என் உணர்வு தவறானால் தாங்கள் என் அறியாமையை துலக்கவும்.

    அதைப்போன்றதே பாரதம், மற்றும் ஹிந்துஸ்தானம் போன்ற சொற்களும். இதில் மதவாதம் என்பது லவலேசமும் கிடையாது. அதுவும் *ஹிந்து* என்ற சொல்லில் தாங்கள் சுட்டும்படிக்கான *குறுகிய* என்ற அடைமொழியில் விளிக்கத்தக்க கருத்தாக்கத்தை சுமத்துவது………… அறியாமை………….. அறியாமை………………. அறியாமையே.

    *ஹிந்துஸ்தானம்* என்ற சொல்லால் சுட்டப்படுவது ஒரு நிலப்பரப்பு. மதம் இல்லை. இதை ஜகப்ரஸித்தி வாய்ந்த முஸல்மாணியர் வாக்கினாலேயே நிரூபணம் செய்ய முடியும்.

    வாழிய ஹிந்துஸ்தானம். வாழ்க பாரதம். வாழ்க ஆர்யவர்த்தம். வாழ்க இந்தியா……………… இதில் எதிலும் இனம்………… மதம்…………. குறுகல்…… நெடுகல்………இத்யாதி இத்யாதி ஏதும் இல்லை.

    உங்களுடைய தவறான புரிதல் ………… அறியாமையின் பாற்பட்டு……………. தேவையற்ற பீதியின் பாற்பட்டு…………..

    அதைப்போக்க *சிவபுராணத்தில்* சொல்லப்படும் சிவகவச மந்த்ரத்தை த்யானித்து

    துஸ்வப்ன துச்சகுன துர்கதி தௌர்மனஸ்ய
    துர்பிக்ஷ துர்வ்யஸன துஸ்ஸஹ துர்யசாம்ஸி
    உத்பாத தாப விஷபீதிமஸத்க்ரஹார்த்தி
    வ்யாதீம்ஸ்ச நாசயது மே ஜகதாமதீச ………………..

    என இந்த ஜகத்துக்கீசனான சிவபெருமானை அறியாமையை விலக்க இறைஞ்சுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *