வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1

ஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள்

சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் (1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும்  கூட நடத்தி வந்திருக்கிறார். சுமார் இரண்டு வருஷங்கள். தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது. தமிழக அரசியலில் மாத்திரம் இல்லை. இந்திய அரசியலிலும் தான்.  இந்திய அரசியல் கட்சிகள் பெரும் சவால்களை எதிர்கொண்ட கால கட்டமும் அது. அவற்றின் நம்பிக்கை களுக்கும் , கொள்கைகளுக்கும் எழுந்த  பெரும் சவால்கள். அவை தேசீய தளத்திலும் சர்வ தேசீய தளத்திலுமான சவால்கள். தமிழக அரசியலிலோ எழுந்த சவால்கள் அதன் பண்பாட்டு, வரலாற்று, தார்மீக சவால்களாக இருந்தன.  இரண்டு தளங்களிலும் ஒரு பெரும் திருப்பு முனையாக முன்னின்ற கால கட்டம் அது.

samaran-1தேசீய தளத்தில் முன் நின்ற பெரும் சவால், சீன ஆக்கிரமிப்பும் அதன் வரலாற்றிலேயே பதிந்திருந்த ஏகாதிபத்ய முனைப்புகளும் கனவுகளும். இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும் நிபுணத்வமும் உலக வரலாற்று அறிவும் நிறைந்த பெட்டகமாக தன்னை நினைத்துக்கொண்டிருந்த நேருவுக்கு கிடைத்த பலத்த அடி. அதை சீனாவின் நயவஞ்சகமாக, துரோகமாக நேரு பிரகடனம் செய்தார்.  நேரு போன்ற சீனாவின் வரலாறு அறிந்த, ஒரு தேசத்தை ஆளும் பொறுப்பேற்ற, தலைவர்களுக்கு, அதன் ஏகாதிபத்ய குணங்களும் வல்லரசு ஆசைகளும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏமாந்தது நேருதானே ஒழிய, சீனா நட்புத் துரோகம் செய்ததாகச் சொல்ல முடியாது. அது தன் வரலாற்றில் அனேக நூற்றாண்டுகளாக பதிந்திருந்த தன் தேசீய குணத்தின் படி செயல்பட்டது. எப்பொழுதெல்லாம் சீனா ஒன்றுபட்டதோ, அப்போதெல்லாம் அதன் ஆக்கிரமிப்பு குணம் வெளிப்படும். திபெத்தை விழுங்கியதிலிருந்து இன்று ஜப்பானிலிருந்து ஒரு பெரும்  அரைவட்டமாக அஸ்ஸாம் வரை, பின்னும் நீண்டு லதாக் வரை அதன் ஆக்கிரமிப்பு 60 வருடங்களுக்கு மேலாக தொடர்வதைக் காணலாம். நேருவின் வரலாற்று அறிவுக்கும் வெளிநாட்டு உறவு பற்றிய பரிச்சயத்துக்கும் நேருவுடன் போட்டியிடாத, வல்லபாய் படேல், சைனா திபெத்தை ஆக்கிரமித்த அந்த ஆரம்ப கட்டத்திலேயே நேருவை எச்சரித்தும் அதை அலட்சியம் செய்தவர் நேரு.

சைனாவின் ஆக்கிரமிப்பும், அதன் வெளிக்கிளர்ந்த ஏகாதிபத்திய பேராசைகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கின. ஒரு வாய்ப்பாடாக அதற்கு கற்பிக்கப்பட்டிருந்த கொள்கை, ஒரு சோஷலிஸ நாட்டுக்கு ஆக்கிரமிப்பு உணர்வோ எண்ணங்கள் இருப்பது சாத்தியமே இல்லை. ஆக, சீனா ஒரு ஆக்கிரமிப்பு நாடல்ல. அது ஒரு நட்புணர்வு கொண்ட நாடு. என்று கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரம் செய்தது இதைப் போன்ற ஒரு மடமையும் மூர்க்கத்தனமும் ராஜத்துவேஷமும் ஒன்று கலந்த ஒரு வெளிப்பாட்டையும் நடைமுறையையும் எந்த ஒரு அரசியல் கட்சியின் கொள்கை யாக எங்கும் காணமுடியுமா, என்றால், நாம் அன்று  உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் காணமுடிந்திருக்கிறது.

இந்த துரோக கோமாளித்தனத்தின் இன்னொரு உருவமாக, நேரு அமெரிக்காவுடன் அணி சேராது ரஷ்யாவுடன் நட்புணர்வை வளர்த்துகொண்ட காரணத்தால், ரஷ்யாவும் ஒரு புதிய வாய்ப்பாட்டை உருவாக்கிக் கொண்டது. சமயத்துக்கு ஏற்ப பேசுவது தானே ராஜதந்திரம்!  சீனாவுடன் எங்கள் உறவு சகோதர உறவாக்கும்.. இந்தியாவுடனோ எங்கள் உறவு நட்புணர்வு என்று ஒரு புதிய பிரகடனம் வந்தது ரஷ்யாவிடமிருந்து.  ஆக, நேருவின் கண்ணையும் துடைத்தாயிற்று சீனாவுக்கும் ஓரக் கண்ணாலொரு கண் சிமிட்டலும் தந்தாயிற்று. (மார்க்ஸிஸம் ஒரு விஞ்ஞானம்ஜ்யோதி பாசு) இந்த வாத பிரதி வாதங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பிரதிபலித்தன.

இந்நிலை கொஞ்ச காலம் நீடித்தது. அது வரை இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்குள்ளன வாக்கு வாதமே உள்நாட்டுச் சண்டையாக வளர்ந்து வந்தது. இந்த கால கட்டத்தில் தான் சமரன் இதழ் தொடங்கியது. அகில இந்திய தளத்தில் நடந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி வாத விவாதங்களின் பாதிப்புகளை சமரன் இதழிலும் பார்க்கலாம். சமரன் ஒரு புறம் என்றால், தீக்கதிர் என்றொரு தமிழ் பத்திரிகை சமரனின் நிலைப்பாட்டை எதிர்த்து குரல் எழுப்பி வந்திருக்கிறது என்பதையும் அவ்வப்போது சில கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், சீன ஆதரவுக் குரல் எழுப்பி வந்திருக்கிறார்கள் என்பதையும் சமரன் இதழில் காணலாம். இவர்கள் எல்லாம் பின்னர் பிரிந்து கம்யூனிஸ்ட் பார்ட்டி (மார்க்ஸிஸ்ட்) என்று தமக்கு பெயர் சூட்டிக்கொண்டனர். சீனாவுக்கு ரஷ்யாவுடனும் எல்லைத் தகராறு எழவே, (சீனா சகோதர நாடு, இந்தியா நட்பு நாடு என்ற வாய்ப்பாடும் ஒரு சோஷலிஸ நாடு என்றும் ஆக்கிரமிப்பு நாடாகாது என்ற வாய்ப்பாடும், கேலிக்கிடமாகி, கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கூட அரசியல் செலாவணி இழந்து போயின, மறுக்கவில்லை. மௌனம் சாதித்தார்கள். அவ்வளவே.

இவையெல்லாம் உலக தளத்திலும், அகில இந்திய தளத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளாயிற்றே, இதற்கு என்று தமிழில் ஒரு பத்திரிகை தொடங்குவானேன் என்றால், விஜய பாஸ்கரன், ஒரு சுதந்திர உணர்வோடு, சுய சிந்தனை கொண்ட போராளியாக, தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவாடியவர். அந்த சித்தாந்தத்துடன் அவருக்கு ஒட்டுணர்வு உண்டு. சமரன் பத்திரிகை தொடங்கியது, அந்நாளைய தமிழக அரசியலில் தன் குரலை எழுப்பத்தான் என்றாலும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் கொள்கைப் போரிலும் தன் குரலை பதியவேண்டியது முக்கியமாயிற்று. இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சமரன் இதழ்களில் இவ்விரண்டு நிலைகளிலும் சமரனின் குரல் அழுத்தமாகப் பதிவாகியிருப்பதைப் பார்க்கலாம். அதில் பெரும் பகுதி அப்போதைய திராவிட முன்னேற்ற கழகத்தின் குரல், மற்ற எந்த அரசியல் கட்சியின் குரலை விட ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய காரணத்தால் அதையும் எதிர்த்து, குரல் எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. சொல்லப் போனால் தேர்தல் வரவிருக்கும் கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து, குரல் எழுப்புவது தான் சமரனின் தலையாய கடமையும் ஆயிற்று.

சரஸ்வதி என்று ஒரு வித்தியாசமான இலக்கிய மாத இதழை நடத்தி வந்தார். அது முதன் முறையாக, தமிழகத்திற்கும் இலங்கைத் தமிழருக்கும் ஒரு பாலமாக இருந்து, ஒரு சீரிய இலக்கிய தளத்தில் இரு நாட்டுத் தமிழ் இலக்கிய பரிமாற்றத்துக்கு வழி அமைத்திருந்தது. அதில் க.நா. சுவின்  ”திருக்குறள் இலக்கியமல்ல” என்ற பிரகடனத்தையும் படிக்கலாம். சிதம்பர ரகுநாதன் சாகித்ய அகாடமியின் தமிழ் இலக்கிய பரிசுகளின் அவலத்தை எதிர்த்த கட்டுரையையும் படிக்கலாம். மௌனி வெகு கால இடைவெளிக்குப் பிறகு எழுதிய சிறுகதை ஒன்றையும் படிக்கலாம். அது கூட காணப் பொறுக்காத இலங்கை பேராசிரியர் ஏ. ஜெ. கனகரட்னா, மௌனி வழிபாடு என்று காலம் தாழ்த்தாது உடன் எழுதி அனுப்பிய கண்டனக் குரலுக்கும் அதில் இடம் இருந்தது. இப்படி இடது சாரி ஆதரவாளர் ஒருவர், எல்லோருக்கும் இடம் தந்து ஒரு பத்திரிகை நடத்துவதை எப்படி, எந்த நாட்டின்  கம்யூனிஸ்ட் கட்சியும்  அங்கீகரிக்க முடியும்? அதுவும் தமிழ் நாட்டிலா? சுதந்திரமாக இயங்கும் ஒரு இலக்கிய பத்திரிகையைப் பொறுத்துக்கொள்ள முடியாத கட்சித் தலைவர், கம்பனையும் பாரதியையும் போற்றி தமிழ்நாடு முழுதும் முழக்கமிட்டுக்கொண்டிருந்த ஜீவாவாக இருந்தது ஒரு முரண் தான். சரஸ்வதி கடை மூட வைப்பதுதான் உடன் நடந்தது. ஜன சக்தி பிரஸ் சரஸ்வதியை அச்சிடாமல் தாமதம் செய்தது. சரஸ்வதி காலி செய்த இடத்தில், கட்சி சார்பில், ஜீவானந்தத்தின் ஆசியுடன், தாமரை என்று ஒரு புதிய பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. இது எங்கும் எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் நடப்பது தான். விஜய பாஸ்கரனின் சரஸ்வதி இதழை எப்படி ஜீவா ஆறு வருடங்கள் பொறுத்திருந்தார் என்னும் அதிசயம் தான் ஆராய்ச்சிக்கான விஷயம். இந்த தகவலையும் நாம் எந்த வம்புக்கும் சச்சரவுக்கும் போகாத நல்ல பிள்ளையாகவே எண்பத்து சொச்சம் ஆண்டுகள் வாழ்ந்த வல்லிக்கண்ணனிடமிருந்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது. சுவர் மேல் பூனையாக கண்மூடிச் சுகமாய்த் தியானித்து இருந்த அவர் தான் தன் வாழ்விலேயே முதல் தடவையாக கண் திறந்து பார்த்ததும்,  சுவரை விட்டு ஒரு பக்கமாக கீழே குதித்து, இதை வெளிக்கொணர்கிறார். எந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டரோ தலைவரோவும் அல்ல. நம்ப முடிகிறதா? ஆனால் நடந்திருக்கிறது.  வல்லிக்கண்ணனுக்கு நம் நன்றி அரசியலிலும் சரி,  இலக்கியத்திலும் சரி கோமாளிகள் இருக்கும் வரை விடம்பன நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை

சரஸ்வதி மூச்சடைக்கப்பட்டதும், விஜய பாஸ்கரனுக்கு அன்றிருந்த அரசியல் சூழலில், தன் பார்வையிலான அரசியல் வெளிப்பாட்டுக்கு என்றே ஒரு இதழ் வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. சமரன் பிறந்தது. தமிழக அரசியல் களம் இதற்கு முன் என்றும் இல்லாதவாறு பல வேறு சக்திகளின் மோதல் தளமாக மாறியிருந்தது. அனேகமாக எல்லாம் சுயநலத்தையும் தன் தனிமனித அக்கறைகளையுமே, அரசியல் கொள்கைகளாக முன்னிறுத்திய தலைவர்களின், கட்சிகளின் மோதலாக  அது இருந்தது.

சமரன் பத்திரிகையின் இத்தொகுப்பைப் பார்க்கும் போது, தம்மை முற்றிலும் ஒரு அரசியல் கட்சிக்கு தொண்டனாக பாவித்துக் கொள்ளாதவர்களும் அரசியல் தவிர நவீன இலக்கியம், மாற்று சினிமா, கம்பன் போன்று வேறு சீரிய அக்கறைகள் கொண்டவர்களுமே அதிகம் எழுதி யிருக்கிறார்கள் என்று தெரிய வரும். ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், எஸ் ராமகிருஷ்ணன். பின் ஆசிரியருக்குள்ள உரிமையில், தன் பெயரைக் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும், வ.விஜயபாஸ்கரனும், பின், பால தண்டாயுதம், தா. பாண்டியன் போன்ற கட்சி பிரமுகர்களையும் கூட சமரனின் பக்கங்களில் காணலாம்.

விஜயபாஸ்கரன் (1926-2011)
விஜயபாஸ்கரன் (1926-2011)

ஒரு கால கட்ட அரசியல் நெருக்கடி, கம்யூனிஸ்ட் கட்சியில் வெடித்த கருத்து மோதல்கள், சீன, ரஷ்ய, விசுவாச மோதல்கள், கட்சி சார்ந்த நெருக்கடி என்பதற்கும் மேலாக, அம்மோதல்கள், இந்திய இறையான்மைக்கே, கட்சி விசுவாசம் தம் நாட்டுப் பற்றைக் கறைபடுத்தும் விசுவாசமாக மாறிவிடும் போது எழும் நெருக்கடிகள், இவற்றினிடையே கம்யூனிஸ்ட் கட்சியின் எந்த பிரிவுக்கும் தன்னை இழந்து விடாது, பொதுவான இடது சாரி சித்தாந்த ஈடுபாட்டையும் விடாது தன் சுயாதீனத்தையும் விடாது வாழ்வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிறந்தது சமரன் என்று தெரிகிறது. அந்த காலகட்டம் இன்னொரு பரிமாணத்தையும் பெற்றிருந்தது. அந்தப் பரிமாணம் தான் இப்போது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்வம் பெறுகிறது.

அது தமிழக அரசியலில் நிகழ்ந்து வந்த தீவிர குணமாற்றம். அது ஏதோ ஒரு பெரிய புரட்சிகர மாற்றமாக, பேசப்பட்டு வந்தது அதற்குக் காரணமானவர் களால். அதன் ஆரம்பங்களில் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில், அதன் பின் அதன் வளர்ச்சியின் போதும், அதை அலட்சியத்துடன் புறமொதுக்கி வந்தவர்கள், இந்த அலட்சியத்தாலேயே அது எவ்வித தீவிர எதிர்ப்பும் இன்றி வளர்ந்து பலம் பெற்று ஒரு தரங்கெட்ட இயக்கமாக தோற்றம் பெறத்தொடங்கியதும், விஷக் கிருமிகள் என்று வெளிப்படையாக அதன் குணத்தைச் சொன்னவர் பக்தவத்சலம் தான். அவர் சொல்லக் காரணம் அவர் அக்கிருமிகளின் நேரடித் தாக்குதலுக்கு ஆளான போதுதான். அப்போதும் அவர் கட்சி மாச்சரியத்தால் சொன்னதாகவே கருதப்பட்டது. தமிழ் நாட்டின் மற்ற அரசியல் தலைமைகள் அப்படிச் சொல்லவில்லை. பத்திரிகைகள், புத்திஜீவிகள் அப்படிச் சொல்லவில்லை. இந்த அலட்சியத்தின் காரணமாக விஷக் கிருமிகள் என்று சரியாக கணிக்கப்பட்ட திராவிட இயக்கத்தினருக்கு ஒரு அரசியல் மதிப்பும், புத்தி ஜீவிகளின் ஒரு கணிசமான பகுதியினரிடையே மதிப்பும் ஏற்பட்டது. பெரும்பாலான பொது மக்களிடையே ஒரு வியப்பு. மாறுதலுக்கான ஒரு சாத்தியப்பாடு என்றும் ஒரு கருத்து நிலவியது. இது தான் ஒரு பரிதாபகரமான காட்சி.  காரணம், என்றும் தமிழகத்தில் அறிவு ஜீவிகள் மத்தியில் நிலவும், என்ன ஆனாலும் தற்காப்பு யுக்தியாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் குணம்.

நான் திராவிட இயக்கத்தின் வாழ்வை என் பள்ளிப் பருவ காலத்திலிருந்து பார்த்து வருகிறேன். அதன் சிந்தனையும் செயலும், பேச்சும் எழுத்தும் தரங்கெட்டவை. அதன் பெரியார் என்று துதிக்கப்படும் தலைமையிலிருந்து அடிமட்ட தொண்டன் வரை, அண்ணாதுரைதான் அங்கு நான் கணட ஒரே விதிவிலக்கு. அவர் பேச்சில் தான் அலங்காரமும், மென்மையும், நாகரீகமும் இருக்குமே தவிர அவர் சொல்லவரும் கருத்துக்கள் அவர் சார்ந்த இயக்கத்தினரின் தரம் மீறீயதில்லை. இதைக் கேள்வி கேட்டவர் அப்போது யாருமில்லை. காரணம்   அவரது மென்மையான சுபாவம். தளபதியிலிருந்து, அறிஞராகி, பின்னர் பேரறிஞருமாகி பெற்ற ஒளிவட்டம். இதற்கும் மேல்,

காரணங்கள் என்று நான் கருதுவது,  ”நமக்கேன் வம்பு நாகரீகமற்றுப் பேசும் இவர்களிடம் இன்னும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா?” என்று வாய் பொத்தி இருக்கும் சுபாவம். பின் காற்று எப்படி வீசுமோ, அதற்கு ஏற்ப நடந்து கொள்ளலாம் என்ற குணம். இது தமிழ்க் குணம் என்றே சொல்லக் கூடும் அளவு எல்லாத் தளங்களிலும் காணக் கிடைப்பது. ஒரு அலட்சியம் ”இவங்களையெல்லாம் மதிக்கணுமா என்ன?” எனறு மூக்கு வானை நோக்கும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.  இவை அனைத்துக்கும் முழு குத்தகை நம் தம்ழரின் பிறப்புரிமை

இந்த சுபாவங்களுக்கு திராவிட இயக்கத்தினரும், தொண்டனிலிருந்து தலைமைகள் வரை, விலக்கல்ல. சந்தர்ப்பத்திற்கேற்ப இவர்கள் காலில் விழும் வேகம் தீவிரமடையும். சடேரென்று மூக்கு தரையைத் தொடும். குனியும் முதுகின் வளைவும் இன்னமும் குறுகும். தலை அவர்கள் பாதத்தைத் தொடும். இது நெடுங்காலப் பயிற்சியில் கிட்டிய சௌபாக்கியம். .

மிக மிக தரங்கெட்ட அரசியல் சம்வாதம், வாழ்க்கை இவர்களது. ஆயினும், எதிர்ப்பே இல்லாத காரணத்தால், தடையில்லாத வளர்ச்சி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். காட்டு விளைச்சல் இது. கற்றாழை, நெருஞ்சி மாதிரி

இதன் ஆரம்பங்களைப் பற்றியோ, பின் வந்த வருடங்களில் இவர்களது அரசியல் வாழ்க்கையின் குணம் பற்றியோ இன்றைய தலைமுறை யினருக்கும் சற்று மூத்த தலைமுறையினருக்கும் ஏதும் தெரியாது அது பற்றி தெரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு அன்றைய பத்திரிகைகள் ஏதும் சொல்லாது. இவர்களது அன்றைய மேடைப் பேச்சின் தரம் பற்றிச் சொல்லும் பத்திரிகைகளோ, அன்றைய விமர்சனங்கள் கொண்ட எழுத்துக்களோ ஏதும் கிடைக்காது. அது பற்றித் தேடச் சென்றால், இவர்கள் தம்மையே புகழ்ந்து எழுதிக்கொள்ளும் பண்பை வளர்த்துக் கொண்ட இயக்கத்தினரின் பத்திரிகைகள் தான் கிடைக்கும். இது தமிழ் நாட்டின் அறிவு ஜீவிகளின் நிலை. என் பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம். ரமணர் வெகு நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இது பற்றி விடுதலை பத்திரிகை எழுதுகிறது. “அவாள் பகவான் புழுத்துச் செத்தார்” என்று. இத்தகைய கீழ்த்தர வெறுப்பு உமிழும் மன நிலை கொண்ட இயக்கம்  என்று இது பற்றி  எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் செய்தியும் இல்லை. கண்டனமும் இல்லை. இது இன்று ஒரு சிலரின் நினைவில் தான் இருக்குமே தவிர பரவலாக அச்சில் காணமுடியாது

என் நினைவிலிருந்து இதை எழுதுகிறேன். ரமணர் திராவிட கழகங்களின் அரசியலையோ அதன் தலைமைகளையோ எவ்விதத்திலும் பாதித்ததாகவோ அது பற்றி அவர் கவலைப்பட்டதாகவோ ஏதும் இல்லை. விடுதலை பத்திரிகைக்கு அவரிடம் இவ்வளவு வன்மம் இருக்கக் காரணம் அவர் பிராமணர், எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி யிருந்த போதிலும் அவர் காலத்தில் அவர் தனித்த ஆஸ்ரம வாழ்க்கையை மீறி அவர் தமிழக எல்லையையும் மீறி புகழ் பெற்று விட்டது கண்ட வெறுப்புதான் இத்தகைய கீழ்த்தர வெளிப்பாடாகியுள்ளது. இந்த அறிவுக்கு ஏலாத மனப்போக்கு திராவிட ப்ராண்ட் பகுத்தறிவு அரசியலுக்கு, அடித்தளமான ஒன்று. திராவிட அரசியலை ஆராயும் ஒருவருக்கு இந்த நிகழ்வின் சான்று எங்கு கிடைக்கும்? எந்த தமிழ் நாட்டு பத்திரிகையிலும் ஆங்கிலமோ தமிழோ எதிலும் கிடைக்காது. ஒன்று நாகரீகமற்றவர்களோடு விவகாரம் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற வாழ்க்கை நோக்கு. இரண்டு இது பற்றி எழுதவோ, பேசவோ தகுதியற்ற ஒரு நிகழ்வு இது என்ற பார்வை. இப்படி எத்தனையோ விஷயங்கள், நம் வாழ்க்கை தர்மங்களையும் தனிப்பட்ட ஒதுங்கி வாழும் நியதியிலும் இன்று நம் முன் பொன்னாடை போர்த்தி உலவும் தலைமைகளின் நேற்றைய படு பாதாள அவலங்கள் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, இல்லாதனவாகிவிடுகின்றன. இந்த அவலங்கள் நிகழ்ந்த காலத்தில் அவை அவலங்கள் என உணர்த்தப்பட்டு, இன்று அவை பொன்னாடை போர்த்தி உலா வரும்போது, இது பொன்னாடை அல்ல, அதில் மறைந்து உள்ளிருப்பது ஒரு அவலம் என்பது இன்று காணும்போதும் அது நிதர்சனமாக வேண்டும்

சரஸ்வதி இதழ் 1958 (அட்டைப் படத்தில் 25 வயது ஜெயகாந்தன்)
சரஸ்வதி இதழ் 1958 (அட்டைப் படத்தில் 25 வயது ஜெயகாந்தன்)

இத்தகைய பதிவுகளை, அன்று ஒரு அரசியல் போராட்டத்தின் நிர்ப்பந்தமாக சமரன் பத்திரிகை தன் பக்கங்களில் தந்திருந்த பதிலடிகளில் காணலாம்.  ஆனால் அவை வெளிவந்த அன்றோடு பலசரக்குக் கடைகளில் பொட்டலமாக மடிக்கப்பட்டு காலத்தில் கரைந்திருக்க்கும்.  அவையெல்லாம் இன்று தொகுக்கப்பட்டு இன்று மறு ஜீவனம் பெற்று நமக்குத் தரப்படும் போது, தான் நினைத்த போதெல்லாம் குல்லுக பட்டர் என்று கேலிசெய்த ஒரு தலைவரை இன்று அரசியல் சாணக்கியர் என்று தானும், தன் தலைவர் அறிஞர் அண்ணாவும், தன் கட்சித் தொண்டர்களும் போற்றிப் புகழ வேண்டி யிருக்கிறதே. இதை என்ன முரசொலி பத்திரிகையிலா காணமுடியும்? பதிவாகியிருக்கிறதா என்று தேடினாலும் அது கிடைக்காது. அந்த சரித்திரத்தைப் பற்றியெல்லாம், எதைச் சொல்லலாம், எதை மறைக்கலாம், எதை புதிதாக கற்பித்து இன்றைய தேவைக்கு ஏற்ப மறு  உருவாக்கலாம் என்பதை தலைவரே தீர்மானித்து தன் வரலாற்றை எழுதித் தருவார். அது தான் அதிகார பூர்வமானது. மற்றதெல்லாம் கைபர் கணவாய் வழி வந்த பார்ப்பன சதி வேலைகள்.

சமரன் வெளிவந்த அந்த கால கட்டத்தில் தான், திமுக பதவி வேட்டை யாடத் தொடங்கிய காலம். முதலில் முனிசிபல் பதவிகள். பதவி வேட்டையில் தன் தந்திரோபாயங்களை, அதன் பலன்களை அனுபவிக்கக் கற்கத் தொடங்கிய காலம். அப்போது மிகப் பிரபலமான மந்திர வாக்கியம் திமுகவுக்கே ப்ராண்ட் ஆகிப்போன மந்திர வாக்கியம்” காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெற்ற யுத்த தந்திரம். இப்படிச் சூளுரைத்து வெற்றியும் பெற்றவர். அண்ணாதுரை யின் பாராட்டையும் பெற்றவர் திருக்குவளைக் காரர். இந்த அசாத்திய வீரச் செயலுக்காகவே அண்ணாதுரை ஒரு மோதிரமும் பரிசளித்தார் என்று சொல்லப்பட்டது. அது கருணாநிதியே வாங்கி அண்ணாவிடம் கொடுத்து மேடையில் சூட்டிக்கொண்டது என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். “கருணாநிதியே வாங்கி” என்பதில் தான் சந்தேகம் வருகிறது.

ஆக, அன்று தொடங்கியது தான் ஒரு மரபாக, வாழையடி வாழையாக இன்றும் தொடர்ந்து காப்பாற்றப்படுகிறது. 2-ஜி, கலைஞர் டிவி-க்கு 200 கோடி என்று. இடைபட்ட காலங்களில் அது சர்க்காரியா கமிஷன் என்றெல்லாம் பெயர் பெறும். அது ஒரு நீண்ட தொடர்ந்த இடைவெளி இல்லாத வரலாறு. இதையெல்லாம் முரசொலியிலோ, “உடன் பிறப்பே” கடிதங்களிலோ காணமுடியாது. அது வேற்று மொழியில் வந்திருந்தாலும் வந்திருக்கலாம். வேற்று மொழியில் என்றால்….அது சமயத்துக்கு, அவ்வப்போதைய பதவி வேட்கைக்கு ஏற்ப, தற்காப்புக்கு ஏற்ப மொழி மாற்றம் பெறும்.

சமரன் இதழ் மேற்கோள் காட்டும் ஒரு முரசொலி துணுக்கு:

கேள்வி: நாட்டுப் பிரிவினையைத் தடுக்கும் சட்டம் வந்தால் தி.மு.கழகம் தன் விடுதலைக் கொள்கையை விட்டு விடுமா?

பதில்: வரப் போகிற சட்டம் இராணுவ பலத்தோடு வந்தாலும் சரி, பீரங்கி சகிதம் வந்தாலும் சரி, அணுகுண்டுகளை மடியில் கட்டிக்கொண்டு வந்தாலும் சரி, எங்கள் குடும்பங்கள், குழந்தை குட்டிகள் கூண்டோடு அழிய நேரிட்டாலும் சரி, “திராவிட நாடு திராவிடருக்கேஎன்ற முழக்கத்தை, வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி,ஊருக்கு ஊர் ஒலித்தே தீருவோம்.

கேள்வி: கட்சியைத் தடை செய்தால் எத்தனை பேர் சிறை செல்லக் கூடும்?

பதில்: அப்படிக் கேட்காதே. எத்தனை சிறைச் சாலைகள் புதிதாகக் கட்ட வேண்டியிருக்கும் என்று கேள்.

– முரசொலி 8.61

எப்போதும் இவருக்கு கைவருவது தமிழ் சினிமாத்தனமான வீரவசனம் தான். 14 வயதில் தொடங்கியதாக மு.க. சொல்லும் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி, பராசக்தி, மந்திரிகுமாரி எல்லாம் கடந்து நேற்றைய முரசொலி யில் அவரே எழுதி பதில் சொல்லிக்கொள்ளும் கேள்வி பதில், பின் உடன் பிறப்புக்கு எழுதும் கடிதம் வரை.

அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற வசனத்தின் இன்னொரு மொழி மாற்றம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. இதன் இன்னோரு வடிவம், “நேருவென் மகளே வருக, நிலையான ஆட்சி தருக”. இது தன் முதன் மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள.

காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெறும் மாமந்திரத்துக்கு கருணாநிதியின் இன்னொரு விளக்க உரையாகவும் கொள்ளலாம்.

இந்த வீரவசனங்கள் கேலிப்பொருளாகியது சமரன் இருந்த காலகட்டத்தில் தான். இதற்கு சில வருடங்கள் சற்று முன்னும், சிலவருடங்கள் பின்னும்.  சமரன் இன்னம் சற்றுக்காலம் முன்னர் தோன்றி, இன்னம் சற்றுக்காலம் 1965-க்கு பின்னரும் நீடித்திருந்தால் இந்த திராவிட நாடு காமெடியும் முழுதாக பதிவாகியிருக்கும். இருப்பினும் அவ்வப்போது இத்தலைமைகள் வெளியிட்ட கருத்துக்கள் சமரனில் காணக் கிடைக்கும். முதலில் திராவிடர் யார்? திராவிட நாடு? எது என்பதை விளக்குவதிலேயே தவித்துப் போவது தெரிகிறது.  இந்த கருத்துக்கள் எங்கேயோ பிறப்பெடுத்தவை. புழு குளவியான கதை தான். பதவி வேட்டையில் பிறந்த பொறாமையில் வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம். பிராமண துவேஷம். ஒதுக்கீடு. அடுத்து பிராமண துவேஷம் தந்த சுய மரியாதை இயக்கம்.. வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்துகொண்டே சுயமரியாதையை காப்பது எப்படி? பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு என்று வர்ணம் பூசப்பட்டது. பின்னர் நிறையப் படிதத வரலாறு தெரிந்த அண்ணாவின் வாக்கு வளமை பெரியாரை ஈர்க்க, திராவிட நாடு என்ற கருத்தும், கைபர் கணவாய் வழி ஆரியர் என்ற கோஷமும், சூத்திரர் எல்லாம் திராவிடர் என்றும், திராவிட நாடு என்ற கோஷமும் ஒரு சேர ஒரு மாநாட்டில் பிறந்தது பெரியாருக்கு பிராமணன் சூத்திரன் தான் தெரியும். அவர் எங்கே திராவிடனையும் கைபர் கணவாயையும் கண்டார்? அவருக்கு சென்னை மாகாணாம் தான் திராவிட நாடு. அதற்குத் தான் ஜின்னாவிடம் போனார். வெள்ளையனிடம் சென்னை மாகாணத்தை விட்டுப் போகாதே. ஆரிய வலையில் நாங்கள் விழுந்து விடுவோம். என்று சரணாகதி. மொழி வழி நாட்டின் சீரமைப்பு ஏற்பட்டதும், நான்கு திராவிட மொழி பேசும் பிரதேசங்கள் தான் திராவிட நாடு என்று சொன்னார் அண்ணா. (கால்ட் வெல்லுக்கு நன்றி)

கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்குத் தெரியாமலேயே திமுக திராவிட நாடு வரைபடம் வரைந்து கொண்டது, கோமாளித் தனம் இல்லையா? அன்றிலிருந்து இன்று வரை மற்ற திராவிடர்களுக்கு தமிக திராவிடர்களோடு சண்டை. காவிரி, முல்லைப் பெரியாறு கிருஷ்ணா நதி  எல்லாம் நினைவுக்கு வரும். ஒரு சொட்டுத் தண்ணீர் கூட ஒரு திராவிடன் இன்னொரு திராவிடனுக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறான். கடைசியில்  இந்த வரை படம் வரைந்த திமுக வுக்கே இதில் உடன்பாடு இல்லை.  ராஜாஜி இந்த நான்கு மாநிலங்களையும் ஒன்றாக்கி தக்ஷிணபிரதேசம் என்று ஒன்றாக்கிவிடலாம் (இது தானே அன்ணா வரைந்த திராவிட நாடு!) என்று சொன்னதற்கு தீவிர எதிர்ப்பு “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்று கோஷமிட்டவர்களுக்கு அதில் இஷ்டமில்லை. காரணம் சொல்லவில்லை. கூத்து தானே.

(தொடரும்)

3 Replies to “வ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1”

  1. சாமிக்கு ஏன் பால், அதை ஏழைகளுக்கு கொடுக்கலாமே , கருணாநிதி -தி மு க காரர் அன்று சொன்னது , ஆனால் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் கிலோக்கணக்கில் பூமாலை விளம்பரப்பலகை இது வீண் இல்லையா? பால் தீர்த்தமாக பின்பு பக்தர்களுக்கு வழங்கப்படுவது இவருக்கு எங்கே தெரியப்போகிறது (கற்பூர வாசனை தெரியாத) இவருக்கு தெரிந்தது என்னவோ (கடமை கடமை கண்ணியம் கட்டுப்பாடு) பத்மாவதி தயாளு ராசாத்தி .—————————————– ——————– பிறேமதாசன் திருமேனி

  2. //அது கருணாநிதியே வாங்கி அண்ணாவிடம் கொடுத்து மேடையில் சூட்டிக்கொண்டது என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். “கருணாநிதியே வாங்கி” என்பதில் தான் சந்தேகம் வருகிறது.//

    கருணாநிதியே வாங்கி என்று கன்ணதாசனிடம் சொல்லபட்டது அதை அவர் மறைக்கவில்லை, ஆனால் கருணாநிதி அதை எப்படி வாங்கினார் என்று யாரும் சொல்லவில்லை. நெஞ்சுக்கு நீதியில் புருடா விட்டவர் அவர், இதை சொல்லுவாரா ?

  3. //////”அவாள் பகவான் புழுத்துச் செத்தார்”/////

    திருடர் முன்னேற்ற கழகத்தினர் (திமுகவினர்) சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் சரியான பதிலடி கொடுத்து வந்திருந்தால் அது இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது. “அவாள் பகவான் புழுத்து செத்தார்” என்று அவர்கள் சொல்லும்போது நாம் “மூத்திர சட்டி உடைந்து நொறுங்கியது” என்று நாம் ஈவேரா மாண்டபோது சொல்லியிருக்க வேண்டும். நம்ம ஆட்களுக்கு எதுவும் தெரியாது. அதுதான் problem

    சிலை வழிபாடு கூடாது என்பார்கள் ஆனால் ஈவேராவிற்கு சிலை எடுத்து கை எடுத்து கும்பிடுவார்கள். அண்ணா சாமாதியில் கற்பூரம் வைத்து கொழுத்தி 3 முறை வலம் வருவார்கள்.

    பத்மாவதி, தயாளு, ராஜாதி — இவை உலகிற்கிற்கு தெரிந்தவை இன்னும் வெளியே தெரியாதவை எத்தனையோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *