வானம்பாடிகளும் ஞானியும் – 2

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

vanmabadi-1இப்போது ஞானி, வானம்பாடிகள், அவர்கள் கவிதைகள், அவர்களை ஒன்றிணைத்து செயல்பட தான் முனைந்தது, அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழ் கொண்டு வரும் முன் அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழில் அவர்கள் வெளிப்படுத்திய கவிதைகளின் பண்புகள், தான் அவர்களிடம் எதிரார்த்த ஒன்றுபட்ட கருத்தாக்கமும், அவர்களது செயல்பாடுகளும் என்று எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து வானம்பாடி இதழும் இயக்கமாக தான் அதைச் செயல்படுத்த விழைந்ததும், இடையே அவர்களுக்கிடையே எழுந்த முரண்பாடுகள், பின்னர் வானம்பாடி இதழ் செயல்பட முடியாது போனதும் , இன்று சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அது பற்றிய அவரது சிந்தனைகள் எல்லாம் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், கடிதங்களை எல்லாம் தொகுத்து அளித்திருக்கிறார், படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. வெளியில் சொல்லப்பட்டதும்,சொல்லிக்கொண்டதும் தன் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களுமாக நம் முன் அவை விரியும்போது, இவற்றினிடையே ஞானியின் மாறிவரும் அபிப்ராயங்களையும் மாறாது அவர் வலியுறுத்தும் பார்வைகளையும் பார்க்க முடிகிறது.

ஞானி தன் அளவுக்கு தனக்கு உண்மையாகத்தான் இருக்கிறார். அவ்வப்போது அவர் தன் சக கவிஞர்களைப் பற்றியும் அவ்வப்போது தன் மாறி வரும் அபிப்ராயங்களையும் சொல்லிச் சொல்லும் போது , எல்லோரும் கூட்டாக செயல்படும்போது சில விஷயங்கள் மனதுக்கு ஒத்து வராவிட்டாலும் பாராட்டாது கூட்டுச் செயல்பாட்டிலேயே கவனம் செலுத்தும் காரணத்தாலா, இல்லை, பின்னர் எல்லாம் சரியாகிவிடும், மார்க்ஸிஸம் தான் இந்த முரண்களைச் சரி செய்துவிடும் சர்வரோக நிவாரணி என்ற நம்பிக்கையா, எதுவென்று ஏதும் புரிவதில்லை. ஆனால் இந்த முரண்களை யெல்லாம் தானே முன் வந்து முன் வைக்கும்போது, அவரை நாம் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார் என்று கருத முடிவதில்லை. எனினும் ஒவ்வொரு கூட்டு இயக்கத்தின் பின்னும், கூட்டாக செயல்பட வருபவர்களின் அவரவரது உள்நோக்கங்களும், எதிர்பார்ப்புகளும், பலவாக வேறுபடும் போது, அது அவருக்குத் தெரிந்த போதிலும் அதை மார்க்ஸிஸம் சரி செய்துவிடும் என்று அவர் நம்பினாலும் அந்த முரண்களும் தனி நபர் ஆசைகளும் இல்லாமலாகி விடுவதில்லை. அவரவர் கவித்வ மகுடமும், ஒருமித்த செயல்பாட்டில் கிடைக்கும் பிராபல்யமும் இல்லாமலாக்கி விடுவதில்லை. அவரவர் தனியாகவும் சரி, கூட்டாகவும் சரி, தம் பிம்பத்தை வளர்த்துக் கொள்வதிலேயே கருத்தாக இருப்பார்கள் போலும். போலும் என்ன?. அது தான்

இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் ஞானியுடையனவே. அவ்வப்போது எழுதியவை. வானம்பாடி இயக்கம், வானம்பாடி கவிஞர்களோடு ஞானியின் உறவுகள். வானம்பாடி iஇயக்க கவிதைகள்,கவிஞர்கள் பற்றிய ஞானியின் மாறிவரும் அபிப்ராயங்கள், இவரது எதிர்பார்ப்புகள் என வானம்பாடி இதழ்கள், பின்னர் வானம்பாடி கவிஞர்களிடமிருந்து ஞானி விலகியதும் அதன் விளைவாக தன் தரப்பைச் சொல்லுமுகமாக அவர் வெளியிட்ட வேள்வி என்ற பத்திரிகையில் வெளிவந்தவை, வானம்பாடி இதழ் தொடங்குமுன் பூம்பொழில் இலக்கிய வட்டத்தில் பரிமாறிக் கொண்டவை என 1971 முதல்,2010 வரையிலான ஞானியின் மார்க்ஸிஸத்தில் தோய்ந்த கவிதைப் பார்வை இத்தொகுப்பில் நமக்குக் கிடைக்கின்றன. இது ஏதும் 40 வருடகால தொடர்ந்த பதிவுகள் அல்ல. வானம்பாடி கவிதைகளின் தொகுப்புக்கு ஞானி எழுதிய முன்னுரை இதில் இல்லாதது பெரிய குறை. இரண்டாவது வெளிச்சங்கள் ஏன்னும் தொகுப்புக்கு நான் எழுதிய விமர்சனம் தெறிகள் இதழ் 4 1975-ல் வெளியானதை வைத்துக்கொண்டு அனுமானமாக வெளிச்சங்கள் 1974-ல் வெளிவந்திருக்க வேண்டும். ஆக, ஞானியின் வெளிச்சங்கள் அறிமுகக் கட்டுரையை 1974 அல்லது 1975 எனக்கொள்ள வேண்டும். இத்தொகுப்பில் உள்ள ஞானியின் கட்டுரைகளையும் அது சார்ந்து ஞானி கொடுத்துள்ள மற்ற கட்டுரைகளையும் கால வரிசைப் படுத்தினால், 1971, 1975, 1978, பின் ஒரு தாவல் 1994, பின் மறுபடியும் இரண்டு தாவல்கள் 2001, 2010. இதை பெரிது படுத்துவதில் அர்த்தமில்லை. ஞானி எப்போதெல்லாம் வானம்பாடியுடனான தன் உறவாடலைக் கொள்ள நேர்ந்ததோ அவற்றையெல்லாம் தொகுத்துத் தந்துள்ளார். வெளிச்சங்களுக்கான அறிமுகக் கட்டுரை தவிர. அதில் அவர் வானம்பாடிக் கவிதைகளை வெகு உற்சாகத்தோடும், எதிர்பார்ப்போடும் புகழ்ந்து வரவேற்றுள்ளார்.

ஞானி எதையும் மறைக்கவில்லை. தான் உறவாடியதும், பின்னர் ஒதுக்கி விலக்கப் பட்டதும் ஆன காலகட்டத்திலும் இப்போது முப்பது வருடங்களுக்குப் பின் தன் சிந்தனை அவற்றில் தோய்ந்து விடும் போதும் அலை மோதும் முரண்கள் எதையும் அவர் மறைக்கவில்லை. தமிழ்ச் சூழலில் இது மிகப் பெரிய விஷயம். ஆனால் இம்முரண்கள் பற்றிக் கவலைப் படாத, அது பற்றி பிரக்ஞையே இல்லாதவர்கள் எல்லா தலைமுறைகளிலும் உண்டு. அவர்கள் தமக்குச் சாதகமானவற்றையே கண்டு உற்சாகம் ததும்ப ஆரவாரத்தில் ஆழ்வார்கள். ஒன்றை வைத்துக்கொண்டு அதற்கு எதிரான முன்னதை அலட்சியப்படுத்தி எறிந்து விடுவார்கள். கருத்துக்கள் மாறும் தான். ஆனால் முன்னர் கொண்ட கருத்தையும் கூறி, பின்னர் நிகழ்ந்த மாற்றத்தையும் சொல்லி, மாற்றத்திற்கான காரணங்களையும் சொல்ல வேண்டும். அது தான் நேரிய கருத்துலகின் பண்பாகும். இல்லையெனில் அது நேர்மையற்ற சந்தர்ப்ப வாதம். அது அறிவுலகையோ, இலக்கிய கலை உலகையோ சார்ந்த தல்ல.

ஞானியின் முரண்கள், அவ்வப்போதைய உணர்ச்சி வசப்பட்ட முரண்கள். என்றும், அவருள் நிலவும் குழப்பமான மனநிலையோ என்றும் ஒரு அல்லாடல்.. 1970 களில் அவர் கருத்துக்களில் காணும் முரண்கள் தான், 2010-ளிலும் காணும் முரண்கள். சில சமயம் ”இப்போதைக்கு தட்டிக் கொடுப்போம், இல்லையெனில் வளர்ச்சி கெடும்,” என்ற ஆசிரிய/பெற்றோர் மனோ பாவமாகவும் இருக்கலாம்.

ஞானி அடிக்கடி சொல்லும் தாரக மந்திரம் மார்க்ஸிஸம். அவர் விவாதிக்கும் எப்பொருளுக்கும் அடித்தளம் மார்க்ஸிசம் என்னும் மந்திரச் சொல் தான். 1971 லும் சரி, 2011லும் சரி. 1971 லேயே ரஷ்யாவிலும் சரி, சைனாவிலும் சரி, மார்க்ஸ் என்ற பெயர் மறையத் தொடங்கிவிட்டது அல்லது மறைந்து விட்டது.. 1971-ல் ப்ரெஷ்ன்யேவும் சரி, மாவோவும் சரி மார்க்ஸ் என்ன, லெனின், ஸ்டாலின் பெயர்களை உச்சரித்ததாகக் கூட பத்திரிகைகளில் படித்த நினைவு எனக்கில்லை ஒருத்தர் க்ருஷேவைத் திட்ட, இன்னொருவர் தன்னையே முதன்மைப் படுத்திக்கொண்டார். மோ சே துங் சிந்தனைகள் கையில் இருக்கவேண்டும். எப்போதும். ரயில் ஓட்டினாலும் வயல்களில் நாற்று நட்டாலும். நம்மூர் கம்யூனிஸ்டுகளே கூட மார்க்ஸை அடியோடு மறந்தாயிற்று தா பாண்டியனோ, ஜி ராமகிருஷ்ணனோ மார்க்ஸ் பெயரை உச்சரித்து எத்தனை தலைமுறைகளாயிற்று என்று கேளுங்கள். இன்று கம்யூனிஸ்ட் அரசே எங்கும் இப்பூவலகில் இல்லை. சைனாவிலும் சரி, ரஷ்யாவிலும் சரி. நிலவுவது முதலாளித்துவம். மந்திரிகளே திருட்டுச் சொத்து சேர்த்த குற்றத்துக்கு உயிரிழக்கிறார்கள். தமிழ் நாட்டின் இவ்விரு கம்யூனிஸ்ட் தலைவர்களும் அதிகம் பேச நான் கேட்டது அவர்கள் சார்ந்திருக்கும் கூட்டணியைப் பொருத்து எதிர் அணி கூட்டணியின் ஊழல் பற்றித் தான். இவரகள் கவலை எல்லாம் தமக்குக் கிடைக்க விருக்கும் பதவி வாய்ப்பு பற்றித் தான். ஏதோ ஒரு சட்ட/நாடாளுமன்றத்தின் உறுப்பினர் நாற்காலி. மார்க்ஸை மறந்து எத்தனையோ ஜன்மங்களாயிற்று.

vanamabadi-2ஆக, ஞானி ஏதோ உலகத்தில் தான் இன்னமும் இருந்து வருகிறார். மார்க்ஸிசத்தில் கால் பதிக்காதவர்கள் என்று ஞானி அன்று குற்றம் சாட்டிய சிற்பி, மு. மேத்தா தமிழன்பன் போன்றோர் வாழும் வாழ்க்கையும் கொண்டுள்ள பார்வை வேறு. இல்லாத ஒரு மார்க்ஸிசம் கற்பனையான ஒன்று யாரை கடைத்தேற்றியது?.

அந்த மார்க்ஸீயத்தை கொடியில் வரைந்து வைத்துக்கொண்டு கம்யூனிஸ்ட் என்று பெயர் சொல்லிக்கொண்டு கட்சி யதேச்சாதிகாரம் செய்த ப்ரெஷ்னயேவ் நாடு கடத்திய சால்செனிட்ஸின் பற்றி ஒரு இடத்தில் பேசும்போது ஞானியின் சகா, ஜன சுந்தரம் அவர் எழுதிய Gulag Archipelago என்னும் ரஷ்ய கட்டாய வேலைத் தளங்கள் என்னும் சிறை முகாம்களில் தள்ளப்படுவோர் அனுபவிக்கும் வாழ்க்கையின் கொடுமை பற்றி ஜனசுந்தரத்திடமிருந்து என்ன எதிர்வினை வருகிறது? தேசத்துரோஹி, எகாதிபத்தியத்துக்கு தன்னை அடிமைப் படுத்திக்கொண்டவர் ரஷ்யா அவரை நாடு கடத்தியது மனிதாபிமான செயல்.

பிறகு இந்த இடத்தில் லெனினின் மேற்கோள் உதவுகிறது ஜன சுந்தரத்துக்கு.

நீங்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பற்றி இடைவிடாது பேசுகிறீர்கள் இது வெறும் ஏமாற்று வேலை. வெறும் விளம்பர போர்டு. உங்கள் ஆவேசம் நீசத்தனமானது. உங்களது கல்வி, பண்பாடு பெருநோக்கு எல்லாம் வெறும் விபச்சாரத்திற்காகத்தான். ஏனெனில் நீங்கள் உங்கள் ஆன்மாவை விற்கிறீர்கள்……” (பக்கம் 172).

வானம்பாடி இதழ் நின்றதும், ஞானியும் அவரது நண்பர்கள் ஜனசுந்தரம் போன்றோர் கூட்டாகத் தொடங்கியதுதான் வேள்வி. அதில் தான் ஞானி என் இரண்டு கட்டுரைகளூக்கு அவரது பதிலைப் பிரசுரித்துள்ளார்.

வானம்பாடி தொடங்கும்முன் பூம்பொழில் வட்டத்தில் இளமுருகு என்னும் அன்பர்/கவிஞர் பேசியதன் சுருக்கத்தை ஒரு கடிதத்தில் சொல்கிறார் ஞானி.

“தாகூரிலிருந்து விரிவான மேற்கோள் காட்டி (இளமுருகு) சொன்னது கவிதை உணர்ச்சியின் மொழி இது இவ்வாறு என் மனதில் தோன்றுகிறது என்பதைக் கவிஞர் எடுத்துரைப்பது கவிதை. நேரிடையாகக் கூறமுடியாததற்கு கவிதை மொழி, உணர்ச்சி மொழி பயன்படுகிறது. எல்லையற்றது பற்றி எல்லையுடைய சொற்களைக் கொண்டு விளக்க முடியாது அப்போது எல்லைக்குட்பட்ட மொழியை உடைப்பது தேவையாகிறது. இதற்கு உருவகம் தேவைப்படுகிறது…… (இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகும் இளமுருகு கடைசியில் இவ்வாறு முடிக்கிறார்.)

“இலக்கியத்தில் இசையும் ஓவியமும் கலக்கின்றன. சொல்லுக்கு அப்பாற்பட்ட அழகைச் சொல்லுக்குள் நிலை நிறுத்த இவை தேவை. ஓவியம் உடல், இசை உயிர்”

இதைப் படிக்கும் போது எனக்குத் தோன்றியது, இந்த இளமுருகு, இந்த கூட்டத்தில் எப்படி வந்து சிக்கினார்.? எவ்வளவு நாளைக்கு இவர் தாக்குப் பிடிக்க முடியும்? என்று எனக்குள் ஒரு சந்தேகம்.

இது வெறும் மாயாவாதம் என்று ஞானி தீர்மானிக்கிறார். அதற்கான அவரது காரணங்களும் சொல்கிறார் தான். அதன் பிற்கு அவர் சொல்கிறார்.

“இளமுருகுவின் கருத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியது ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம்.

முதலில் மார்க்ஸீயத்தில் காலூன்றி நிற்கவேண்டும்.. பிறகு இச்சோதனகள் செய்து பார்க்கலாம்.:

படிமங்கள் அழகு சேர்ப்பவை. ஆகவே அவை தேவை. என்ற முறையில் அவர் கருத்து அமையுமானால் நல்லது. ஆனால் படிமங்களுக்கே மரியாதை முழுதும் என்பதை நாம் ஏற்பதற்கில்லை………

அப்படியானால் தாகூரைப் பற்றி என்ன சொல்கிறாய் என்று கேட்கலாம்.

தாகூரைப் பற்றி மிக விரிவாக ஆராய்வு செய்யவேண்டியது. நிச்சயமாக தாகூர் ஒரு மேதை. கவிஞர்க்கு வழிகாட்டி. மேதை. ஐயமில்லை.

தாகூரை நாம் முழுமையாக எடுத்துப் பார்க்கவேண்டும். கடினமான நீண்ட கால பணி. மார்க்சீயம் தாகூரை செரிக்கும் ஆற்றலுடையது. நமக்கு தாகூர் வழித்துணையாகக் கூட இருக்கலாம். வழிகாட்டியாக முடியாது. (பக்கம் 146-47)

கடைசி இரண்டு பாராக்களைப் பார்க்கவும். முதலில் அவர் ஒரு மேதை. கவிஞர்க்கு வழிகாட்டி. கடைசி வரியில் அவர் வழித்துணையாகக் கூட இருக்கலாம். வழிகாட்டியாக முடியாது.

இது தான் ஞானியிடம் ஆரம்பத்திலிருந்து காணும் குழப்பம். குழம்பிய மனநிலையை நான் முரண் என்று தவறாக எடுத்துக் கொள்கிறேனோ என்னவோ தெரியவில்லை. ஏன்? அவர் எல்லாவற்றையும் முன் வைத்து விடுகிறார். முரணாக இருப்பின் அது தெரியாதவாறு வெட்டிக் கழித்து ஏதும் செய்வதில்லை.

இதெல்லாம் ஆரம்ப காலத்தில் ஞானிக்குத் தெரியவில்லை. அல்லது தெரிந்தும், இப்போது அதையெல்லாம் சொல்லி, கூட்டியக்கத்தைக் கெடுக்க வேண்டாம் என்ற நல்லெண்ணமாக இருக்கவேண்டும். ஆனால் எல்லாம் சிதைந்து ஒரு தலைமுறைக் காலம் கடந்து நஷ்டக் கணக்கு பார்க்கும் போது (2014-ல்) ஞானி எழுதுகிறார்

’அழுகி நாறிக்கொண்டிருக்கும் உடமை வர்க்க சமூகத்தின் இறுதிக்கால விளைச்சல்கள் இவர்கள். மார்க்ஸீயம் தெரியாதவர்கள். இவர்கள் மாமேதைகள். கவிதை அறியாதவர்கள் மத்தியில் இவர்கள் பாரதிக்குப் பேரர்கள்..

“இவர்கள் சிதைந்ததில் இழப்பு ஏதும் இல்லை. இவர்கள் ஒரு காலத்தின் கெட்டகனவு இவர்களை மறப்பது நல்லது. இவர்கள் கவிஞர்களாகவே இருப்பது என்று முடிவு கட்டிக் கொண்டவர்கள்………..கவிதைச் சூழலில் முளைத்த காளான்கள்………எதிர் நீச்சலில் வலிமை பெற்றிருக்க வேண்டியவர்கள் சுகக் குளியலில் சொக்கிக் கிடந்தார்கள்.

இந்த விமர்சனத்துக்கு உரியவர்கள் முதன்மையாக, தமிழ்நாடன், கங்கை, சிற்பி, ;புவி, மேத்தா, இவர்களின் சகபாடிகள், ஆதரவாளர்கள் (இவர்கள் உற்பத்தி செய்திருக்கிற பாப்ரியாக்கள், சூரிய காந்தன்கள், இவர்களைத் தூக்கி நிறுத்த முயலும், முயன்ற, விமர்சகர்கள்…………

மார்க்ஸிய போக்கு தாங்கிய கட்சிகள் தமக்கென கூத்தாடிகளைத் தேடிய போது இவர்கள் அந்த இடங்களை அலங்கரித்தார்கள்……சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்தியமாகக் கொழுத்த சமயத்தில்தான் இவர்கள் சினேக புஷ்பங்களை அதற்கு அணிவித்தார்கள்.

வசந்தத்தின் இடிமுழக்கத்தின் ஓசைநயத்தில் தான் இவர்கள் கவிதைக்குரல் தொடங்கினார்கள். நெருக்கடி நிலையில் அரக்கர்களின் காலடி நிழலில் பதுங்கி அரக்கிக்கு தம் கவிதையை அலங்காரமாக்கினார்கள். கலை இலக்கிய மன்றமும் இவர்களது சந்தர்ப்பவாத பயணத்தில் ஒரு தங்குமிடம் தான்,

இவர்கள் தான் நெருக்கடிகாலத்தின் போது, “இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா” என்று நூல் வெளியிட்டனர். (பக்கம் 118)

தமிழ்க் கவிதையில் இவர்கள் சாதனை சிறிதளவு தான். தொகுத்தால் ஒரு நூறு பக்கங்களுக்குள் அடக்கி விடலாம். பிறகெல்லாம் வார்த்தைக் குவியல்கள், அடுக்குகள், ஆரவாரங்கள் இவை பெரும்பகுதி உண்மை சொல்ல வில்லை. சொற்கோவைகளைக் கவிதை என்று மயங்கும் ரசிகர்களுக்கு மத்தியில் இவர்கள் தமிழ் வாணிகம் சிறப்பாக நடந்ததில் வியப்பில்லை…….. சந்தர்ப்பவாதத்தையும், திருத்தல் வாதத்தையும் தமக்கான பலமாகக் கொண்ட கட்சி, இவர்களோடு கூட்டு சேர்ந்ததில் வியப்பில்லை.(பக்கம் 122)

இவர்கள் கூறிக்கொண்டது என்ன?…,,,,தங்களுக்கு சலுகை வேண்டும். தங்கள் விருப்பத்திற்கேற்ப, கவிதை எழுத, வாசிக்க, பெருமை கொள்ள, வெளியிட, பாராட்டுப் பெற, உயர்பீடங்களை அலங்கரிக்க, அதிகாரத்தில் உள்ளவர்களோடு சமமாகக் கொஞ்சநேரம் அமர்ந்திருக்க, பெரிய மனிதர்களின் அருள் பெற, சந்தர்ப்பவாதிகளின் உறவில் ஒளி பெற — இவற்றைத் தான் செய்து கொண்டார்கள்.,,(பக்கம் – 124)

சில ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மார்க்ஸியக் கட்சி வட்டாரத்தைச் சார்ந்த கலை இலக்கிய வாதிகள் புதுக்கவிதை முறையை வெட்கமில்லாமல் ஏற்கத் தொடங்கினர் பாரதியின் வாரிசு, பேரன் என்றெல்லாம் கவிஞர் பரிணாமனைப் பாராட்டி வானமாமலை எழுதினார். தொடக்கத்தில் வானம்பாடிகளை முற்றாக ஒதுக்கிய கட்சி வட்டாரத்தினர் மெல்ல மெல்ல வானம்பாடி இயக்கத்தினுள் ஊடுருவி இயக்கத்தின் பிளவுக்கும் ஓரளவு காரணமாயினர். தி,க.சி மிகச் சாதுர்யமாய் இந்தப் பணியைச் செய்தார். அப்புறம் வானம்பாடியினரின் இடது சாரியினருக்கும் வலது சாரியினருக்கும் பகை இன்றளவும் தொடர்கிறது (பக்கம் 119 – வருஷம் 2004)

வானம்பாடிகளுடன் சேரும் முன்னரே வார்த்தைகளைக் கவர்ச்சிகரமாக தொகுத்து அடுக்குவதில் அவர்(சிற்பி) தனித்திறமை கொண்டிருந்தார்……..இவரது ஒரு பக்கச் சாய்வு காரணமாக கூட்டம் இயக்கமாகாததற்கு இவர் முக்கிய காரணமானார். ’எங்களைத்தாங்க எந்தக் கூண்டிற்கும் சக்தி இல்லை,’ என்ற ஆரவாரமான பிரகடனம் சிற்பியுடையது தான். கடைசியாகக் கிடைத்த கலை இலக்கியப் பெருமன்றக் கூண்டு இவருக்கு வசதியாக இருக்கக் கூடும். நெருக்கடி நிலைக் காலத்தில் கிழிந்த தங்கள் முகத்திரையை மீண்டும் தைத்துப் போர்த்திக்கொள்வதற்கான வசதியை இது தந்திருக்க வேண்டும். இது சிற்பிக்கு மாத்திரம் இல்லை. வேறு சிலருக்கும் கூட (பக்கம் 121)

 இதே 2004-ம் வருஷம், இதே கட்டுரையில் சில பக்கங்கள் முன்னர் (பக்கம் 113)

இவர்கள் அனைவருக்குள்ளும் இயல்பாகவே கோவைச் சூழலில் உருவான மார்க்ஸீயத்தின் தாக்கமும் நக்ஸல் பாரி இயக்கத்தின் வீறும் நுழைந்து கவிதைகளில் உருப்பெற்றன. வானம்பாடி கவிதைகளை ஒரு முறை புரட்டிப்பார்க்கிற அனைவரும் மேற்குறிப்பிட்ட கவிஞர்களுக்குள் நக்ஸர் பாரி இயக்கத்தின் ஆற்றல் மிகுந்த சில இழைகளையேனும் காணமுடியும்.

மார்க்ஸீயத்தின் சம தர்மம் என்ற ஊற்று இவர்களுக்குள் மக்கள் திரளின் பிரச்சினைகளை உணர்வோடு வெளிப்படுத்தும் முறையில் கவிதைகளாய்ப் பொங்கின. வானம்பாடி இயக்கத்தின் இந்த பேராற்றலை இன்று வரை யாரும் மறுப்பதற்கில்லை.”

மறுபடியும் இத் தொகுப்பின் முன்னுரையில் ஞானி அழுத்தமாகச் சொல்வதை நான் குறிப்பிடவேண்டும்:( முன்னுரை பக்கம் iii)

“கோவையில் 1970 களின் தொடக்கத்தில், நெடுங்காலத் தமிழ்க் கவிதை வரலாற்றில் இன்னொரு கவிதை இயக்கம் என்ற முறையில் வானம்பாடிகளின் கவிதை இயக்கம் சிறப்பாகச் செயல் பட்டதை தமிழ்க் கவிஞர்களும் தமிழ் ஆய்வாளர்களும் இன்றும் நினைவு கூர்கின்றனர். வானம்பாடி இயக்கம் சில காலமே செயல்பட்ட போதிலும் வானம்பாடி இயக்கத்தில் இருந்த கவிஞர்கள், மற்றும் திறனாய்வாளர்கள் பலரும் இன்றும் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.”

என்ன சொல்லட்டும்? இன்னும் நிறைய மேற்கோள்கள் கொடுத்துக் கொண்டே போகலாம். ஆனால் நான் அதிகம் கொடுத்துவிட்டேனோ என்றும் ஒரு எண்ணம். நானே இது பற்றியெல்லாம் என் வார்த்தைகளிலேயே சொல்வதைக் காட்டிலும் புத்தகத்திலிருந்து ஞானியின் சொற்களையே தருவது தான் சரி என்று கொடுத்துள்ளேன். ஞானியின் கருத்துக்கள் எதுவும் ஸ்தாபனம் சார்ந்ததல்ல. யாரும் கொடுத்து நிர்ப்பந்திததல்ல. அவரது படிப்பிலும் சுய சிந்தனையிலும் வரித்துக் கொண்டது என்பது நிச்சயம். அவர் யாரையும் புண்படுத்தும் சுபாவத்தினரும் இல்லை. மிக அடங்கிய குரலில் தன் தரப்பு வாதங்களை விடாது முன் வைப்பவர். எல்லோருடனும் நட்பு பாராட்டுபவர். சினேக பாவம் கொள்பவர் அதனாலேயே அவர் எவ்வளவு தான் நட்பு பாராட்டினாலும் அது கிடைப்பதில்லை என்பது இந்த புத்தகத்திலிருந்தும் மேலுள்ள மேற்கோளிலிருந்தும் தெளிவாகும்.

அவர் தன் சிந்தனைகளோடு தனித்து நிற்கலாமே தவிர, அதை முன்வைத்து அடித்தளமாகக் கொண்டு ஒரு இயக்கத்தை, ஸ்தாபனத்தை எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் கவிஞர்களாக ஆசைப்படுவர்களையும் கொண்டு ஸ்தாபித்து விட முடியாது. உண்மையான கவிஞர்கள் தனித்தே வாழ்பவர்கள். கட்சி சேவகம் செய்பவர்கள், ஸதாபனம் சார்ந்தவரகள் தான் கூட்டாக செயல்பட முடியும். அவர்கள் கவிஞர்களாக மாட்டார்கள்.

ஞானியின் மார்க்ஸியமும் சரி, அவரது இலக்கிய சிந்தனைகளும் சரி அவருக்கே சொந்தம். அதற்கு என் மரியாதை. ஒரே கட்டுரையில் முரண்பட்ட கருத்துக்களை அவர் கூறினாலும். அது அவர் சிந்தனைகளின் குழப்ப நிலை என்று தோன்றுகிறது. உலகத்தின் மறுகோடியிலிருந்து தான் (கனடா, டோரண்டோ) அவரைக் கொண்டாடி மரியாதை செய்பவர்களைக் காணலாம். அவர்கள் ஞானியின் இடம் தேடி வருவார்கள். வந்தார்கள். இங்கு அதை அவர் எந்த கட்சியிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது.. கவிஞன், எழுத்தாளன் என்றும் தனியன் தான்.

வானம்பாடிகளின் கவிதை இயக்கம்: வரலாறும் படிப்பினைகளும்

ஞானி

காவ்யா வெளியீடு

பக்கம் 238

விலை ரூ 200

(முற்றும்)

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

20 Replies to “வானம்பாடிகளும் ஞானியும் – 2”

  1. கார்ல் மார்க்சை ஒரு குருவாகவும் மார்க்சியத்தினை சமூகப்பொருளாதார அரசியல் விடுதலைக்கு உள்ள ஒரே வழியாகவும் கருதும் கோவை ஞானி அவர்களின் வானம்பாடிகளின் கவிதை இயக்கம்: வரலாறும் படிப்பினைகளும் நூலை மிக ஆழமாக உணர்ந்து வெங்கட் சாமிநாதன் எழுதியுள்ளார். ஒரு சில மார்க்சிய நண்பர்கள் மூலம் கோவை ஞானி அவர்களை அறிவேன். பலமுறைப்படித்துப் படித்துப்புரிந்துகொள்ள வேண்டியக்கட்டுரைகள். நன்றி. ஐயா தொடர்ந்து தமிழ் ஹிந்துவில் எழுதவேண்டும்.

  2. கம்யூனிசத்தில் அடிப்படையே மிகவும் பலஹீனமான ஒன்று.

    1. அது மனித இனத்தில் பிரிவினைகளை உருவாக்கி ஒரு பிரிவு மற்ற பிரிவின் எதிரி என்ற கற்பனையை போதிக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியின் மறுவடிவம் தான் கம்யூனிசம்.

    2. வர்க்க மோதல் என்ற கற்பனையை திணித்து மக்களை ஏமாற்றியது.

    3. அரசாங்கம் என்ற ஒன்றே இருக்காது என்பதே கம்யூனிசக் கொள்கை என்று மார்க்ஸ் படத்தை போட்டுக்கொண்டே, ரஷ்யா , சீனா, கியூபா, மற்றும் அந்தக் காலத்தில் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த பல்வேறு நாடுகளும் ( கிழக்கு ஜெர்மனி, போலந்து, யூகோஸ்லாவியா போன்றவை ) கம்யூனிஸ்டுகளின் சர்வாதிகாரத்தை , சர்வாதிகார நடத்திக்கொண்டு இருந்தன.

    4. மாற்றுக்கருத்து வெளியிட்டோர் – அது எழுத்துமூலமோ அல்லது பேச்சு மூலமோ – எப்படியாயினும் சைபீரியாவில் உள்ள முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு , அங்கிருந்து மேலே அனுப்பிவைக்கப்பட்டனர்.

    5. எந்த ஒரு நாட்டின் முன்னேற்றமும் பல்வேறு துறைகளின் உற்பத்தியை அதிகரிப்பதில் தான் அடங்கி இருக்கிறது. இதில் எவ்வித ரகசியமும் இல்லை.

    6.ஆனால் கம்யூனிசம் ஒரு உற்பத்தியை முடங்கச் செய்யும் இயக்கமாக மாறிப்போனது. எதற்கு எடுத்தாலும் வேலை நிறுத்தம் ,கதவடைப்பு, கட்டிடம் அடைப்பு, பென்டவுன் ஸ்டிரைக், உள்ளிருப்பு வேலை நிறுத்தம், கோ ஸ்லோ , வெளியிருப்பு வேலைநிறுத்தம் ,மறியல் என்று பல்வேறு பெயர்களில் பொருளாதாரத்தை பாழ்படுத்தும் கூறுகள் கம்யூனிசத்தின் உள்ளே அடங்கி இருக்கும் வைரஸ்கள்.

    7.பூர்ஷ்வாக்களையும், நிலசுவாந்தாரர்களையும் , ஜமீன்தார்களையும் ஒழிப்போம் என்று கோடி பிடித்த இயக்கமும் அதன் சுப்ரீம் சோவியத்தும் , தாங்களே மன்னர்களாக மாறிப்போய் கம்யூனிசத்தின் வேரில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றி அழித்தனர்.

    8. தனி மனித உணர்வுகளுக்கு சிறிதும் மதிப்பு அளிக்காமல் , மனித சமுதாயத்தையே ஒரு இயந்திரம் போலவே கருதி நடத்தி தோல்வி கண்டனர். மக்களுக்காக அரசு என்பது போய், அரசுக்காகவே மக்கள் என்று புதிய அடக்குமுறைகளை உருவாக்கினார்கள்.

    9.கம்யூனிசம் என்பது தட்டுப்பாடு, பற்றாக்குறை , சர்வாதிகாரம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மறுபெயர் என்ற உண்மையை நிரூபித்தனர்.

    10. தமிழ் நாட்டில் அறிவுஜீவிகள் என்று தங்களை தாங்களே அழைத்துக்கொண்ட சில எழுத்தாளர்கள் ஒரு மாயை மற்றும் போதையில் கம்யூனிசத்தை ஆதரித்து , ஒரு கவர்ச்சிகரமான பிம்பத்தை உருவாக்கியவர்கள் கடைசியில் உண்மை வெளிப்பட்டவுடன் வேறு வியாபாரங்களுக்கு போய்விட்டனர். கம்யூனிசம் என்பது ஒரு காற்று இறங்கிய பலூன் ஆகிப்போனது.

    11. உலகில் எந்த நாட்டிலும் இனி கம்யூனிசம் என்ற கற்பனை சரக்கு எடுபடாது. ஏனெனில் அது ஒரு மோசடி. ஊமை கண்ட கனவு. பொருளாதாரத்தின் அடிப்படை என்ன என்று புரியாத குறைப்பிரசவம்.

  3. கம்யூனிசத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க முடியாது.அதே சமயம் அதை அப்படியே ஏற்கவும் முடியாது. கம்யூனிச கோட்பாடுகளில் மனித குல பரிணாம வளர்ச்சிக்கு அவசியமான சில நல்ல அம்சங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதே சமயம் பல தவறான, மனித இயல்புக்கு மாறான, மனித குல பரிணாம வளர்ச்சியை கீழே இழுக்கின்ற பல கோட்பாடுகளும் கம்யூனிசத்தின் அடிப்படை கோட்பாடுகளாக இருக்கின்றன. காரல் மார்க்ஸ் தொகுத்த கம்யூனிச கோட்பாட்டில் உள்ள குறைகளை நீக்கி ஆன்மீக அடிப்படையில் புதிய கோட்பாட்டை உருவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

  4. //கம்யூனிசத்தில் அடிப்படையே மிகவும் பலஹீனமான ஒன்று.//

    முதலில் கம்யுனிசத்தின் அடிப்படை என்னென்பதை தாங்கள் அறிந்தவரை கூறுங்கள். பலகீனமா இல்லையா என்பதை பிறகு விவாதிப்போம்.

    //1. அது மனித இனத்தில் பிரிவினைகளை உருவாக்கி ஒரு பிரிவு மற்ற பிரிவின் எதிரி என்ற கற்பனையை போதிக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியின் மறுவடிவம் தான் கம்யூனிசம்.//

    ஏற்கனவே இங்கு மனித இனம் சாதியால் பல நூறு கூறுகளாக பிரிந்து தான் கிடைக்கிறது. இதில் கம்யுனிஸ்டுகள் புதிதாக பிரிப்பதற்கு என்ன இருக்கிறது.

    //2. வர்க்க மோதல் என்ற கற்பனையை திணித்து மக்களை ஏமாற்றியது.//

    வர்க்கப் போராட்டம் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாள்தோறும் மக்கள் இந்த அரசுக்கு எதிராகவும், மலைகள் ஆறுகள் தொடங்கி நாட்டின் குப்பைகளை கூட விட்டு வைக்காத பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

    //3. அரசாங்கம் என்ற ஒன்றே இருக்காது என்பதே கம்யூனிசக் கொள்கை என்று மார்க்ஸ் படத்தை போட்டுக்கொண்டே, ரஷ்யா , சீனா, கியூபா, மற்றும் அந்தக் காலத்தில் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த பல்வேறு நாடுகளும் ( கிழக்கு ஜெர்மனி, போலந்து, யூகோஸ்லாவியா போன்றவை ) கம்யூனிஸ்டுகளின் சர்வாதிகாரத்தை , சர்வாதிகார நடத்திக்கொண்டு இருந்தன.//

    முதலில் கம்யுனிசத்திற்கும் சோஷலித்திற்க்குமான வேருப்பாட்டினை தெரிந்துக் கொள்ளவும்..

    சோசலிசம் என்பது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி உற்பத்தியை பெருக்கியும் முதலாளித்துவ வடிவங்களை ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கி கம்யுனிசத்திற்கு செல்லுகிற வரலாற்று இடைக்கட்டம் ஆகும். கம்யுனிசம் என்பது வர்க்கங்களற்ற சமுதாயம். ஆனால் சோசலிசத்தில் வர்க்கப்போராட்டம் முனைப்பாக ஓயாது நடைபெறுகிறது. இங்கே உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கப்பட்டாலும் மூலதனம் மறைந்துவிடவில்லை. ஆக கல்வியாளர் ஜெனரல் மேனஜர், கூலி உழைப்பு செய்வோர் ஆகியோர் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுகின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால் நிறைய சம்பளம் என்ற கருத்தும் பணக்காரன் ஏழை என்று ஏற்றத்தாழ்வும் பெருகும் வாய்ப்புகள் சோசலிசத்தில் முற்றாக அழிந்துவிடவில்லை. சோஷலிச புரட்சி ஏற்ப்பட்ட பின்னரும் மக்கள் தொடர்ந்து நீண்ட கால வர்க்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

    கம்யுனிசம் ஆட்சிக்கு வந்தாலும் வர்க்கப்போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கும்! தோழர் மாவோ சுட்டிக்காட்டுவதைப் போல முரண்பாட்டை நேரான வழியில் திசைதிருப்பும் இயக்கவியலில் பாட்டாளிகள் தங்கள் தரப்பு தாக்குதலை அரசியல் அதிகாரத்தின் மூலமாக நிலைநிறுத்துகிறார்கள். பாட்டாளிகளுக்கு அரசியல் அதிகாரம் என்பது முன்னெப்பொழுதையும் விட ஆட்சியில் முதலாளித்துவத்திற்கு எதிரான ஈவு இரக்கமற்ற போராட்டங்களைத் தொடுப்பதே!

    //5. எந்த ஒரு நாட்டின் முன்னேற்றமும் பல்வேறு துறைகளின் உற்பத்தியை அதிகரிப்பதில் தான் அடங்கி இருக்கிறது. இதில் எவ்வித ரகசியமும் இல்லை.

    6.ஆனால் கம்யூனிசம் ஒரு உற்பத்தியை முடங்கச் செய்யும் இயக்கமாக மாறிப்போனது. எதற்கு எடுத்தாலும் வேலை நிறுத்தம் ,கதவடைப்பு, கட்டிடம் அடைப்பு, பென்டவுன் ஸ்டிரைக், உள்ளிருப்பு வேலை நிறுத்தம், கோ ஸ்லோ , வெளியிருப்பு வேலைநிறுத்தம் ,மறியல் என்று பல்வேறு பெயர்களில் பொருளாதாரத்தை பாழ்படுத்தும் கூறுகள் கம்யூனிசத்தின் உள்ளே அடங்கி இருக்கும் வைரஸ்கள்.//

    உற்பத்தி என்றால் என்ன? உற்பத்தி என்பது யாருக்கானது என்பதை பற்றி கொஞ்சமும் தெரியாத முதிர்சியற்ற பேச்சு இது.

    ஒரு சோசலிச தொழிற்சாலையின் உற்பத்தி பெருகினால் அதனால் கிடைக்கிற இலாபத்தில் தொழிற்சாலையை புணர்நிர்மாணம் செய்வதற்கு பயன்படுத்தவும், தொழிலாளர்களின் உடல் உழைப்பிற்கு விடுதலை அளித்து இயந்திரமயமாக்கவும் செய்கிறது. கவனிக்க; முதலாளித்துவம் இயந்திரங்களுக்காக தொழிலாளர்களை தூக்கி எறிகிறது. ஏனெனில் அதற்கு இலாபம் மட்டுமே முக்கியம். ஆனால் சோசலிசம் தொழிலாளர்களின் வாழ்விற்கும் பண்பாட்டிற்கும் இயந்திரங்களை ஊக்குவிக்குகின்றன. உற்பத்தியை ஒருங்கே குவிக்கின்றன. இவ்விதம் உற்பத்தியும் தொழிலாளர் நலனும் சோசலிசத்தில் ஒரு சேர பெருகுகின்றன. முதலாளித்துவத்தை விட சோசலிசம் உற்பத்தியை பெருக்குகின்றன. இயந்திரத்தையும் புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்துகின்றன.

    இந்தியாவில் கூட ரயில்வே மருத்துவமனை, ரயில்வே குடியிருப்புகள், ரயில்வே விளையாட்டு மைதனாங்கள் என்று வாழ்வின் அடிப்படையை கூட்டுச்சமுதாயம் பொறுப்பேற்று நிறைவேற்றுவதை சோசலிச சமூகம் தான் கற்றுக்கொடுத்தது. சோசலிச நாடுகளில் கூலி முறை இவ்விதம் ஜெனரல் பேமண்ட் முறையில் தான் இருந்தது. அதாவது இலாபத்தின் பகுதி இப்படித்தான் கட்டுமானங்களை எழுப்பின.

    உழைப்பை விற்காத தொழிலாளிவர்க்கச் சமுதாயத்திற்குத் தான் இது முற்றிலும் சாத்தியம். ஆனால் இங்கோ நமது உழைப்பிற்கு 30000 பெற்றுக்கொண்டு அனைத்தையும் இதில் சமாளி என்கிறது டாடா. வீட்டு லோன் வாங்காத டிசிஎஸ் காரனைக் காட்ட முடியுமா? இருக்கப்பட்டவன் வாழ்க்கையே இப்படி இருந்தால் இந்தியாவில் 80 சதவீதமக்களின் மாத வருமானம் 10000 ரூபாய்க்கும் கீழே! அவர்கள் என்ன செய்வார்கள்?

    டாடாவில் பணிபுரிகிற ஒரு தொழிலாளி சுரண்டப்பட்டு 30000 பெற்றுக்கொண்டாலும் தன் சம்பளத்தின் ஒரு பகுதியை மருத்துவமனைக்கு செலவழிக்கிறார். ஆனால் டாடாவின் புராபிட் எங்கு போகிறது? மருத்துவமனையிலும் டாடா தான் நிற்கிறது. இவர்களிடமே சம்பாரித்துவிட்டு இவர்களிடமே போய் மருத்துவத்திற்காக நிற்கிறோம். முதலாளியோ இலாபத்தை ஒரே பீரோவில் தான் அடுக்குகிறான்.

    ஆக நாம் வாழ்வதற்காக சம்பாரிக்கிறோமா அல்லது சம்பாரிப்பதற்காக வாழ்கிறோமா என்று கேட்டால் முதலாளித்துவம் சம்பாரிப்பதற்காக வாழச் சொல்கிறது. வீட்டுக்கடன் கட்ட, கல்யாணம் முடிக்க, ஆப்ரேசன் செய்வதற்காக, படிப்பதற்காக நாம் ஒவ்வொருவரும் நாயாய் உழைக்கிறோம். வாழவேண்டும் என்று நினைப்பதற்குள்ளேயே வாழ்க்கை முடிந்துவிடுகிறது. நமது உழைப்பின் பலனில் சிறு பகுதி பயன்படுத்தப்பட்டாலே தனியார்மயம் ஒழிக்கப்பட்டாலே தரமான கல்வி, நல்ல மருத்துவம், சிறந்த குடியிருப்புகள், நாட்டின் கட்டுமானங்கள் என்று ஒவ்வொருவருக்கும் உறுதிப்படுத்த முடியும். மனிதர்கள் ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை இதற்குப்பிறகுதான் கணக்கே எடுக்கமுடியும்.

    உங்களுடைய மட்டற்ற கேவிகளுக்குகான பதிகள் இனி அடுத்த பதிவில் தொடரும்…

  5. இந்த நாட்டில் பல ஆயிரம் வருஷங்களாக இருந்த வர்ணாச்ரம முறை தொழில் புரட்சி வந்த சிறிது காலத்தில் மறைந்தது. பின்னர் கம்யூனிசம் வந்தது. அது வந்த வேகத்தில் உலகம் முழுவதும் வரும். அனைவரும் சமம். முதலாளிகள் இல்லாத உலகம், வறுமை கிடையாது, போட்டி என்பது ஓடிவிடும் இன்னும் என்ன்னவோ நினைத்தோம். என்ன ஆயிற்று ? இன்று கம்யூனிசம் எந்த நாட்டில் இருக்கின்றது ? கியூபா அதிலிருந்து வேகமாக வெளியே வந்து கொண்டிருக்கின்றது. வட கொரியாவைப் பற்றி எந்த கம்யூனிஸ்டும் பேசுவது கூட இல்லை.

    இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கம்யூனிசம் இருந்தாலும் அவை முதலாளித்துவ நாடுகள். இந்தியாவில்தான் கம்யூனிஸ்ட்கள் அதிகம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

    சரி ஏன் உலகம் முழுக்க இன்று பரவ முடியவில்லை என்று வர்ணாச்ரமம் சரி என்றோ ( கதா காலக்ஷேபங்களில் கேட்கலாம் ) அல்லது கம்யூனிசம் சரி என்றோ கூறுபவர்கள் ஆராய்ந்தால் “FREE WILL” (தமிழில் சரியான வார்த்தை எனக்குக் தெரியவில்லை மன்னிக்கவும்) என்ற சொல்லாடலை சந்திக்க வேண்டியிருக்கும். முதலாளித்துவத்தில் அது உண்டா ? கண்டிப்பாக உண்டு – அது மறுக்கப் படும்போதெல்லாம்
    சட்டம் துணைக்கு இருக்கின்றது. ஆனால் தயவு செய்து சொல்லுங்கள் எந்த சர்வாதிகாரத்தில் – ( கம்யூனிசம் ஒரு சர்வதிகாரம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை ) “FREE WILL” உள்ளது ?

  6. //சரி ஏன் உலகம் முழுக்க இன்று பரவ முடியவில்லை என்று வர்ணாச்ரமம் சரி என்றோ ( கதா காலக்ஷேபங்களில் கேட்கலாம் ) அல்லது கம்யூனிசம் சரி என்றோ கூறுபவர்கள் ஆராய்ந்தால் “FREE WILL” (தமிழில் சரியான வார்த்தை எனக்குக் தெரியவில்லை மன்னிக்கவும்) என்ற சொல்லாடலை சந்திக்க வேண்டியிருக்கும். முதலாளித்துவத்தில் அது உண்டா ? கண்டிப்பாக உண்டு – அது மறுக்கப் படும்போதெல்லாம் சட்டம் துணைக்கு இருக்கின்றது.//

    முதலாளித்துவம் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை கொடுக்கிறது. அதுதான் அதனுடைய மிகப்பெரும் நல்ல அம்சம். ஆனாலும் இந்த சுதந்திரம் முழுமையானது அல்ல. அது ஒரு வரையறைக்குள் மட்டுபடுத்தப்படுகிறது.

    //ஆனால் தயவு செய்து சொல்லுங்கள் எந்த சர்வாதிகாரத்தில் – ( கம்யூனிசம் ஒரு சர்வதிகாரம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை ) “FREE WILL” உள்ளது ?//

    சர்வாதிகாரம்தான் சோஷலிச கோட்பாட்டின் மிகப்பெரும் தீய அம்சம். ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இல்லாமல் சோசலிசத்தை நிர்மாணித்து, அதன்மூலம் கம்யூனிசத்தை அடைய முடியாது என்று கம்யூனிஸ்டுகள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை வர்க்க பார்வையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரமும் வர்க்க கண்ணோட்டமும் இருக்கும்வரை சோசலிசம் நிலை நிற்க முடியாது, கம்யூனிசத்தை அடையவே முடியாது.

  7. சுவனப்பிரியன்,

    கடவுள் கொள்கையை பற்றி இறையில்லா இஸ்லாம் தளத்தில் என்னுடன் கலந்துரையாட முன்வருகிறீர்களா? கடவுளை பற்றிய நம்முடைய கருத்துக்களை, நம்பிக்கைகளை பகிர்ந்து கொள்வோம். அதை படிக்கிற வாசகர்கள் எது அறிவுக்கு ஏற்புடையது என்று அவர்களே முடிவு செய்யட்டும். என்ன, நீங்கள் தயாரா?

  8. @ஆனந்த் சாகர் ……………

    //சர்வாதிகாரம்தான் சோஷலிச கோட்பாட்டின் மிகப்பெரும் தீய அம்சம். ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இல்லாமல் சோசலிசத்தை நிர்மாணித்து……//

    வர்க்க கண்ணோட்டம் தான் சோஷலிசம் நீடித்து நிலைப்பதற்கான மிக முக்கியமான அம்சம் என்கிற பொழுது, வர்க்க உணர்வு இருப்பதனால் தான் சோஷலிசம் பின்னடைவு ஏற்பட்டது என்று எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன? சோஷலிசம் என்பது யாருக்கானது? கொஞ்சமாவது இதனை விளக்கி விட்டு பிறகு அவதூறு பிரசாரத்தை மேற்கொள்ளலாமே. முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் தேர்ந்தெடுக்கும் சுதந்த்திரத்தை?!!! நீங்கள் சிலாக்கிபதிலேயே உங்களின் வர்க்க கண்ணோட்டம் இங்கு அம்பலமாகிறது..

  9. @தாயுமானவன்,

    //வர்க்க கண்ணோட்டம் தான் சோஷலிசம் நீடித்து நிலைப்பதற்கான மிக முக்கியமான அம்சம் என்கிற பொழுது, வர்க்க உணர்வு இருப்பதனால் தான் சோஷலிசம் பின்னடைவு ஏற்பட்டது என்று எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்.//

    சித்தாந்த அடிப்படையில் மனிதர்களை பிரித்து அவர்களுக்குள் பகைமையை ஏற்படுத்தும் எந்த இசமும் நீண்ட காலம் தாக்கு பிடிக்காமல் தோல்வியைத்தான் அடையும். நான் ஒன்றை கூறுகிறேன். அது உங்களுக்கு நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும். இருந்தாலும் இதுதான் நடைமுறை சாத்தியம். அதாவது, சோஷலிச த்தின் மூலம் கம்யூனிசத்தை அடைய முடியாது, மாறாக, முதலாளித்துவத்தின் மூலம் மட்டுமே கம்யூனிசத்தை அமைக்க முடியும்.

    // பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன?//

    உழைக்கும் மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் ஏகபோக அதிகாரத்தை செலுத்துவதே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது லெனின் வகுத்த கொள்கை. இது நீங்கள் அறிந்ததே.

    // சோஷலிசம் என்பது யாருக்கானது? கொஞ்சமாவது இதனை விளக்கி விட்டு பிறகு அவதூறு பிரசாரத்தை மேற்கொள்ளலாமே.//

    சோஷலிசம் என்பது உழைக்கும் மக்களுக்கானது என்று நினைக்கிறேன். முதலாளிகள் உழைப்பதில்லை என்று யார் சொன்னது. என்னுடையது மாறுபட்ட சிந்தனை. அதை கூறுகிறேன். மற்றபடி, அவதூறு பேசுவது என் நோக்கமல்ல.

    // முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் தேர்ந்தெடுக்கும் சுதந்த்திரத்தை?!!! நீங்கள் சிலாக்கிபதிலேயே உங்களின் வர்க்க கண்ணோட்டம் இங்கு அம்பலமாகிறது..//

    சுதந்திரம்தான் மனித இனத்தின் மிகப்பெரும் பேறு. சுதந்திரம் அளிக்காத எந்த சித்தாந்தமும் நிராகரிக்கப்பட வேண்டியதே. சந்தை பொருளாதாரத்தில் வர்க்க கண்ணோட்டம் இல்லை. எவர் வேண்டுமானாலும் வாய்ப்பும் தகுதியும் இருந்தால் முதலாளி ஆகலாம். முதலாளித்துவமும் மனித பரிமாணத்தின் இடைப்பட்ட காலத்துக்கான தற்காலிக ஏற்பாடுதான். ஆன்மீக விழிப்புணர்வு உலகில் மேலோங்கும்போது மேம்பட்ட மனித இனம் தோன்றும். அப்போதுதான் அரசாங்கம் அற்ற, உலகின் வளங்கள் அனைவருக்கும் பொதுவானதாக ஆக்கப்பட்டு சிறு குழுக்களாக மனிதர்கள் வாழும் கம்யூனிசம் சாத்தியமாகும்.

  10. பேரன்பிற்குரிய ஸ்ரீ ஆனந்த் சாகர்

    ஸ்ரீமான் தாரிக் ஃபதஹ் சாஹேப் பற்றி உங்களுக்கு அறிமுகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    குரான் – ஏ – கரீம் படி ஜிஹாத் என்றால் என்ன என்று அவர் ஒரு புஸ்தகத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.

    அதை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டியையும் கொடுத்திருக்கிறார்.

    https://tarekfatah.com/everything-you-wanted-to-know-about-jihad-from-the-quran-and-sunnah/

    ஸ்ரீ தாரிக் ஃபதஹ் அவர்கள் மேற்கு பஞ்சாபில் பிறந்து இன்று கனடாவில் வாழ்கிறார். தன்னை ஒரு ஹிந்துஸ்தானியாகவே உலகமெங்கும் அறிமுகம் செய்கிறார். இடதுசாரி சார்பாளர். அயான் ஹிர்ஸி இஸ்லாத்தை துறந்து விட்டார். இவர் இஸ்லாத்தை துறக்கவில்லை. ஆனால் புர்க்கா, மதவெறி வஹாபி பயங்கரவாதம் போன்றவற்றை முற்று முழுதாக நிராகரிக்கிறார். மிச்சம் மீதி உள்ள பாக்கி ஸ்தானத்தையும் உடைக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளார். பலோசி மற்றும் சிந்தி குழுவினர் இந்த பாக்கி ஸ்தானை உடைக்க விழையும் முயற்சிகளுக்கு சர்வ தேச ஆதரவை ஒருங்கிணைக்கிறார்.

    மேற்கண்ட தரவில் ஜிஹாத் பற்றி நேர்மறையாகச் சொல்லப்பட்டிருக்கிறதா எதிர்மறையாகச் சொல்லப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. இஸ்லாம் பற்றி நீங்கள் ஆழ்ந்த புரிதல்கள் உள்ளவராதலால் உங்களுக்கு உபயோககரமாக இருந்தால் மேற்கண்ட நூலை பதிவிறக்கம் செய்து வாசித்துப்பார்க்கவும்.

  11. //சுவனப்பிரியன்,

    கடவுள் கொள்கையை பற்றி இறையில்லா இஸ்லாம் தளத்தில் என்னுடன் கலந்துரையாட முன்வருகிறீர்களா? கடவுளை பற்றிய நம்முடைய கருத்துக்களை, நம்பிக்கைகளை பகிர்ந்து கொள்வோம். அதை படிக்கிற வாசகர்கள் எது அறிவுக்கு ஏற்புடையது என்று அவர்களே முடிவு செய்யட்டும். என்ன, நீங்கள் தயாரா?//

    கடவுள் சம்பந்தமாக முன்பே பலமுறை விவாதித்தாகி விட்டது. எனது பழைய பதிவுகளை பார்த்தாலே தெரியும்.

    கோழி முதலா? முட்டை முதலா? என்ற பல வருடத்திய கேள்விக்கு கோழிதான் முதல் என்று தற்போதய அறிவியல் சொல்கிறது!

    அப்படியானால் கோழி உருவானது எவ்வாறு? ::-)

  12. சுவனப்பிரியன்,

    //கடவுள் சம்பந்தமாக முன்பே பலமுறை விவாதித்தாகி விட்டது. எனது பழைய பதிவுகளை பார்த்தாலே தெரியும்.//

    உங்களுடைய பழைய பதிவுகள் ஒருபுறம் இருக்கட்டும். அது உங்கள் கருத்தை நீங்கள் உங்களுக்கு, உங்களை போன்றவர்களுக்கு சொல்லிக்கொண்டது! நம் இவருடைய கடவுள் கொள்கையை பற்றி நாம் பொது தளத்தில் கலந்துரையாடலாம். நீங்கள் இதுவரை அறிந்திராத மாற்று கருத்தை அறிந்து கொள்ள உங்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு! இதை பயன்படுத்திக்கொள்வீர்களா? இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்து நீங்கள் செய்யும் அலப்பரை எவ்வளவு அபத்தமானது என்பதை நான் நிரூபிக்கிறேன்.

  13. சுவனப்பிரியன்,

    //கடவுள் சம்பந்தமாக முன்பே பலமுறை விவாதித்தாகி விட்டது. எனது பழைய பதிவுகளை பார்த்தாலே தெரியும்.//

    உங்களுடைய பழைய பதிவுகள் ஒருபுறம் இருக்கட்டும். அது உங்கள் கருத்தை நீங்கள் உங்களுக்கு, உங்களை போன்றவர்களுக்கு சொல்லிக்கொண்டது! நம் இருவருடைய கடவுள் கொள்கையை பற்றி நாம் பொது தளத்தில் கலந்துரையாடலாம். நீங்கள் இதுவரை அறிந்திராத மாற்று கருத்தை அறிந்து கொள்ள உங்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு! இதை பயன்படுத்திக்கொள்வீர்களா? இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்து நீங்கள் செய்யும் அலப்பரை எவ்வளவு அபத்தமானது என்பதை நான் நிரூபிக்கிறேன்.

  14. அன்புள்ள திரு.கிருஷ்ணகுமார்,

    தாரிக் பதாஹ்வை பற்றி முன்பு எனக்கு தெரியாது. இப்பொழுதுதான் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

    //இவர் இஸ்லாத்தை துறக்கவில்லை.//

    இஸ்லாத்தை துறக்கவில்லை என்றால் அவர் இன்னும் முஸ்லிம்தான்.

    // ஆனால் புர்க்கா, மதவெறி வஹாபி பயங்கரவாதம் போன்றவற்றை முற்று முழுதாக நிராகரிக்கிறார்.//

    இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. வஹாபியர்கள் முஹம்மதின் வழிமுறையை அப்படியே பின்பற்றவேண்டும் என்கிறார்கள். பயங்கரவாதம்தான் அவர் விட்டு சென்ற உண்மையான இஸ்லாம் என்கிறார்கள். இது கசப்பான உண்மைதான். அதாவது பயங்கரவாதம்தான் முஹம்மதின் வழிமுறை. இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும் நான் பயங்கரவாதத்தை ஏற்கவில்லை என்றும் சொல்லிக்கொண்டே முஸ்லிமாகவும் இருப்பேன் என்று கூறுவது முஸ்லிமல்லாதவர்களை முட்டாளாக்க செய்யப்படும் தக்கியா விளையாட்டு. இப்படிப்பட்டவர்களை நம்பவே கூடாது.

    //மிச்சம் மீதி உள்ள பாக்கி ஸ்தானத்தையும் உடைக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளார். பலோசி மற்றும் சிந்தி குழுவினர் இந்த பாக்கி ஸ்தானை உடைக்க விழையும் முயற்சிகளுக்கு சர்வ தேச ஆதரவை ஒருங்கிணைக்கிறார்.//

    இது தேவை இல்லாத வேலை. இதற்கு பதில் அவர் இஸ்லாத்தை ஒழிப்பதற்கு வேலை செய்தால் அது உலகத்துக்கு நல்லது.

  15. சுவனப்பிரியன்,

    //கோழி முதலா? முட்டை முதலா? என்ற பல வருடத்திய கேள்விக்கு கோழிதான் முதல் என்று தற்போதய அறிவியல் சொல்கிறது!

    அப்படியானால் கோழி உருவானது எவ்வாறு? ::-)//

    இதைத்தான் பட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்வது என்பார்கள்!

  16. @ ஆனந்த சாகர் …………

    //அது உங்களுக்கு நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும். இருந்தாலும் இதுதான் நடைமுறை சாத்தியம். அதாவது, சோஷலிச த்தின் மூலம் கம்யூனிசத்தை அடைய முடியாது, மாறாக, முதலாளித்துவத்தின் மூலம் மட்டுமே கம்யூனிசத்தை அமைக்க முடியும்.//

    //ஆன்மீக விழிப்புணர்வு உலகில் மேலோங்கும்போது மேம்பட்ட மனித இனம் தோன்றும். அப்போதுதான் அரசாங்கம் அற்ற, உலகின் வளங்கள் அனைவருக்கும் பொதுவானதாக…..//

    நீங்கள் “ஓஷோ” பாணியிலான பிரசாரத்தை முன்னெடுக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கம்யுனிசம் தொடர்பாக ஓஷோ உதிர்த்த அனைத்தும் பயன் தராதவை. இருந்தாலும் உங்களின் ஆன்மிகம் குறித்த பார்வையை கண்டிப்பாக பரிசீலிப்போம் அதற்க்கு முன்பாக தங்களின் கருத்துக்களை பார்ப்போம்..

    //சித்தாந்த அடிப்படையில் மனிதர்களை பிரித்து அவர்களுக்குள் பகைமையை ஏற்படுத்தும் எந்த இசமும் நீண்ட காலம் தாக்கு பிடிக்காமல் தோல்வியைத்தான் அடையும். //

    கம்யுனிசதிர்க்கு பொருந்தும் இந்த வாய் பந்தல், இந்துயிசதிற்க்கு மட்டும் பொருந்தாமல் போனது எப்படி. மனிதனை பல்வேறு சாதிகளாக பிரித்து மேய்ந்ததில் இந்து மதத்தின் பங்கு என்னவென்று உலகுக்கே தெரியும் என்கிற பொழுது, அதை மறைத்து விட்டு கம்யுனிசத்தை கை காட்டுகிறீர்கள் என்றால் உங்களுக்குள் விறைத்துக் கிடக்கும் பிழைப்புவாதம் எப்பேற்பட்டது என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை என்று தெரிகிறது..

    //சோஷலிசம் என்பது உழைக்கும் மக்களுக்கானது என்று நினைக்கிறேன். முதலாளிகள் உழைப்பதில்லை என்று யார் சொன்னது. என்னுடையது மாறுபட்ட சிந்தனை. அதை கூறுகிறேன். //

    இந்த சிந்தனை தங்களுடையது என்று யார் சொன்னது? தனி நபர் சிந்தனை என்ற ஒன்றே இந்த சமுகத்தில் கிடையாது. எங்க முதலாளி நல்லவர் என்பது. முதலாளியும் தானே உழைக்கிறான் என்று கூறுவது, இதெல்லாம் மார்க்ஸ் காலத்திலேயே பேசப்பட்டு காலாவதியான ஒன்று. அத்யாவசிய தேவைகளுக்காக தன்னுடைய இரவையும் பகலையும் தொலைத்து உழைக்கும் ஒரு ஆலை தொழிலாளியின் உழைப்பிற்கு முன்பு முதலாளியின் உழைப்பு என்றுக் கூறப்படும் உதாரெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

    //சுதந்திரம்தான் மனித இனத்தின் மிகப்பெரும் பேறு. சுதந்திரம் அளிக்காத எந்த சித்தாந்தமும் நிராகரிக்கப்பட வேண்டியதே.//

    ஆகவே தான் சொல்கிறோம் அந்த சுதந்திரம் என்பது உழைக்கும் மக்களின் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று. ஏழை விவசாயிடம் இருந்து நிலத்தை பிடுங்கி அதை பன்னாட்டு ஏக போக நிறுவனங்களுக்கு தாரை வார்க்க துடிக்கும் அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு சுதந்திரத்தை பற்றி நீங்கள் பேசுவது தான் வக்கிரத்தின் உச்சம்.

    //சந்தை பொருளாதாரத்தில் வர்க்க கண்ணோட்டம் இல்லை.//

    இந்து மதத்தில் சாதிய கண்ணோட்டம் இல்லை என்பது எப்படி அய்யோக்கிய தனமானதோ அதை விட கொடுமையானது சந்தை பொருளாதரத்தில் வர்க்கம் இல்லை என்பதும்.. சமுகத்தில் உன்னுடைய நிலை என்ன என்பதை புரிய வைப்பதே சந்தை பொருளாதாரம் தான். சொல்லப் போனால் நவீன தீண்டாமையின் மறு வடிவம் தான் சந்தை பொருளாதாரம். 60,000 ரூபாய் ஆப்பில் ஐ போன் வைத்திருப்பவனும் 600 ரூபாய் நோக்கியா 1100 மாடல் போன் வைத்திருப்பவனும் ஒன்றுதான் என்று எந்த முதலாளித்துவ சந்தை பொருளாதார வாதியும் கூற மாட்டன். அப்படிக் கொண்டு வந்தால் முதலாளிய சந்தை பொருளாதாரம் அப்பொழுதே அழிந்து விடும். மனிதனுக்குள் ஏற்ற தாழ்வு நீட்டிக்கும் வரை தான் சந்தை பொருளாதாரத்தாலும் நீட்டிக்க முடியும். ஏற்ற தாழ்வுகள் தான் சுதந்திர பொருளாதாரத்தின் ஆணி வேர்.

    நீங்கள் சொல்லுவதும் உண்மை தான். முதலாளித்துவத்தில் தான் வர்க்க கண்ணோட்டம் இல்லை. சுரண்டலுக்கு எப்போதுமே வர்க்கம் கிடையாது என்பது தானே உண்மை.

    மற்றப்படி நீங்கள் ஆன்மிகம் மூலம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றுக் கூறுவதெல்லாம் பித்தலாட்டமே. முதலில் எளிமை, நேர்மை இதையெல்லாம் கற்றுக் கொள்ளவேண்டியது இங்கிருக்கும் ஆன்மீக கார்பரேட்சாமியார்கள் தான். ஆன்மிகம் என்பதே இன்று ஏகாதிபத்தியத்தோடு நகமும் சதையுமாக தான் இருக்கிறது.

  17. கட்டுரைக்கு தொடர்பாகத் தான் நான் என்னுடைய மறுமொழியை பதிவு செய்துள்ளேன். எவ்வித தனி நபர் தாக்குதலும் இதில் இல்லை. எந்த காழ்புணர்ச்சியும் இல்லாமல் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். கருத்து சுதந்திரத்தை மதித்து வெளியிடவும்.

  18. @ அத்விகா

    //8. தனி மனித உணர்வுகளுக்கு சிறிதும் மதிப்பு அளிக்காமல் , மனித சமுதாயத்தையே ஒரு இயந்திரம் போலவே கருதி நடத்தி தோல்வி கண்டனர். மக்களுக்காக அரசு என்பது போய், அரசுக்காகவே மக்கள் என்று புதிய அடக்குமுறைகளை உருவாக்கினார்கள்.

    9.கம்யூனிசம் என்பது தட்டுப்பாடு, பற்றாக்குறை , சர்வாதிகாரம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மறுபெயர் என்ற உண்மையை நிரூபித்தனர்.//

    ரொம்ப டெரரா கேள்விபட்டிருக்கீக! உழைப்பவனுக்கு அதிகாரம் என்பதை கண்காணித்து நடைமுறைப்படுத்தியது சோசலிசம் தான் என்பது சரி. இதனால் மக்கள் பயப்படுவார்களா? அல்லது முதலாளிகளும் நிலப்பிரப்புகளும் பயப்படுவார்களா? நடுநிலை என்பதை விட்டுவிட்டு ஒரு பக்கத்தை தேர்வு செய்யுங்கள். நீங்கள் பயப்படும் வர்க்கமா? அல்லது பயமுறுத்தும் வர்க்கமா? மேலை நாடுகளில் கம்யுனிசத்தால் கண்ணீர் வடிக்கிற நிலப்புரக்களின் குரல் ஜனநாயகத்தின் அழுகுரலாக இன்றைக்கும் தண்டி தண்டியாக புத்தகங்களாக வருகின்றன என்பதை மேற்கொண்டு கேள்விப்படுங்கள்!!!!!

    தோழர் லெனின் அழகாகச் சொல்வார் இப்படி;

    “”ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குவோர்களுக்கும், சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் என்பது இல்லை. அப்படி ஏற்படவும் முடியாது.

    ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான தனி உரிமைகளால் பெண்குலம் பாதிக்கப்படும் வரை மூலதனத்திலிருந்து தொழிலாளிக்கு விடுதலை கிடைக்காத வரை, முதலாளி நில உரிமையாளர் வணிகர் ஆகியோரின் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் விவசாயிக்கு விடுதலை கிடைக்காத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது.”

  19. @ ஆனந்த சாகர் …………

    //அது உங்களுக்கு நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும். இருந்தாலும் இதுதான் நடைமுறை சாத்தியம். அதாவது, சோஷலிச த்தின் மூலம் கம்யூனிசத்தை அடைய முடியாது, மாறாக, முதலாளித்துவத்தின் மூலம் மட்டுமே கம்யூனிசத்தை அமைக்க முடியும்.//

    //ஆன்மீக விழிப்புணர்வு உலகில் மேலோங்கும்போது மேம்பட்ட மனித இனம் தோன்றும். அப்போதுதான் அரசாங்கம் அற்ற, உலகின் வளங்கள் அனைவருக்கும் பொதுவானதாக…..//

    நீங்கள் “ஓஷோ” பாணியிலான பிரசாரத்தை முன்னெடுக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கம்யுனிசம் தொடர்பாக ஓஷோ உதிர்த்த அனைத்தும் பயன் தராதவை. இருந்தாலும் உங்களின் ஆன்மிகம் குறித்த பார்வையை கண்டிப்பாக பரிசீலிப்போம் அதற்க்கு முன்பாக தங்களின் கருத்துக்களை பார்ப்போம்..

    //சித்தாந்த அடிப்படையில் மனிதர்களை பிரித்து அவர்களுக்குள் பகைமையை ஏற்படுத்தும் எந்த இசமும் நீண்ட காலம் தாக்கு பிடிக்காமல் தோல்வியைத்தான் அடையும். //

    கம்யுனிசதிர்க்கு பொருந்தும் இந்த வாய் பந்தல், இந்துயிசதிற்க்கு மட்டும் பொருந்தாமல் போனது எப்படி. மனிதனை பல்வேறு சாதிகளாக பிரித்து மேய்ந்ததில் இந்து மதத்தின் பங்கு என்னவென்று உலகுக்கே தெரியும் என்கிற பொழுது, அதை மறைத்து விட்டு கம்யுனிசத்தை கை காட்டுகிறீர்கள் என்றால் உங்களுக்குள் விறைத்துக் கிடக்கும் பிழைப்புவாதம் எப்பேற்பட்டது என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை என்று தெரிகிறது..

    //சோஷலிசம் என்பது உழைக்கும் மக்களுக்கானது என்று நினைக்கிறேன். முதலாளிகள் உழைப்பதில்லை என்று யார் சொன்னது. என்னுடையது மாறுபட்ட சிந்தனை. அதை கூறுகிறேன். //

    இந்த சிந்தனை தங்களுடையது என்று யார் சொன்னது? தனி நபர் சிந்தனை என்ற ஒன்றே இந்த சமுகத்தில் கிடையாது. எங்க முதலாளி நல்லவர் என்பது. முதலாளியும் தானே உழைக்கிறான் என்று கூறுவது, இதெல்லாம் மார்க்ஸ் காலத்திலேயே பேசப்பட்டு காலாவதியான ஒன்று. அத்யாவசிய தேவைகளுக்காக தன்னுடைய இரவையும் பகலையும் தொலைத்து உழைக்கும் ஒரு ஆலை தொழிலாளியின் உழைப்பிற்கு முன்பு முதலாளியின் உழைப்பு என்றுக் கூறப்படும் உதாரெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

    //சுதந்திரம்தான் மனித இனத்தின் மிகப்பெரும் பேறு. சுதந்திரம் அளிக்காத எந்த சித்தாந்தமும் நிராகரிக்கப்பட வேண்டியதே.//

    ஆகவே தான் சொல்கிறோம் அந்த சுதந்திரம் என்பது உழைக்கும் மக்களின் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று. ஏழை விவசாயிடம் இருந்து நிலத்தை பிடுங்கி அதை பன்னாட்டு ஏக போக நிறுவனங்களுக்கு தாரை வார்க்க துடிக்கும் அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு சுதந்திரத்தை பற்றி நீங்கள் பேசுவது தான் வக்கிரத்தின் உச்சம்.

    //சந்தை பொருளாதாரத்தில் வர்க்க கண்ணோட்டம் இல்லை.//

    இந்து மதத்தில் சாதிய கண்ணோட்டம் இல்லை என்பது எப்படி அய்யோக்கிய தனமானதோ அதை விட கொடுமையானது சந்தை பொருளாதரத்தில் வர்க்கம் இல்லை என்பதும்.. சமுகத்தில் உன்னுடைய நிலை என்ன என்பதை புரிய வைப்பதே சந்தை பொருளாதாரம் தான். சொல்லப் போனால் நவீன தீண்டாமையின் மறு வடிவம் தான் சந்தை பொருளாதாரம். 60,000 ரூபாய் ஆப்பில் ஐ போன் வைத்திருப்பவனும் 600 ரூபாய் நோக்கியா 1100 மாடல் போன் வைத்திருப்பவனும் ஒன்றுதான் என்று எந்த முதலாளித்துவ சந்தை பொருளாதார வாதியும் கூற மாட்டன். அப்படிக் கொண்டு வந்தால் முதலாளிய சந்தை பொருளாதாரம் அப்பொழுதே அழிந்து விடும். மனிதனுக்குள் ஏற்ற தாழ்வு நீட்டிக்கும் வரை தான் சந்தை பொருளாதாரத்தாலும் நீட்டிக்க முடியும். ஏற்ற தாழ்வுகள் தான் சுதந்திர பொருளாதாரத்தின் ஆணி வேர்.

    நீங்கள் சொல்லுவதும் உண்மை தான். முதலாளித்துவத்தில் தான் வர்க்க கண்ணோட்டம் இல்லை. சுரண்டலுக்கு எப்போதுமே வர்க்கம் கிடையாது என்பது தானே உண்மை.

    மற்றப்படி நீங்கள் ஆன்மிகம் மூலம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றுக் கூறுவதெல்லாம் பித்தலாட்டமே. முதலில் எளிமை, நேர்மை இதையெல்லாம் கற்றுக் கொள்ளவேண்டியது இங்கிருக்கும் ஆன்மீக கார்பரேட்சாமியார்கள் தான். ஆன்மிகம் என்பதே இன்று ஏகாதிபத்தியத்தோடு நகமும் சதையுமாக தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *