வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]

<< முந்தைய பகுதி

1. 300 ராமாயண வ்யாசத்தில் ஸ்ரீ ராமானுஜன் சொல்லும் முக்யமான சர்வ சம்மதமான விஷயம் என்ன?

வாசிப்புகளை ICONIC, INDEXICAL மற்றும் SYMBOLIC என்று ஸ்ரீ ராமானுஜன் வகைப்படுத்துகிறார். இதை முறையே மறுவாசிப்பு, மாற்று வாசிப்பு மற்றும் மறுப்பு வாசிப்பு என்ற படிக்கு வ்யாசத் தொடரின் முந்தைய பகுதியில் எளிமைப் படுத்த விழைந்தோம். ஒரு ராமாயண வாசிப்பின் மையக்கருத்தை அறியும் படிக்கு அதை வகைப்படுத்த முனைதல் மிகவும் அவச்யமானது. ஸ்ரீ ராமானுஜன் அவர்களது வ்யாசம் இதனை முதன்மைப்படுத்தி மேற்கொண்டு விவாதத்தினை தொடர்ந்துள்ளார். வ்யாசத்தின் தலைப்பிலும் இது தெளிவுபடுத்துள்ளது ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

2. 300 ராமாயண வ்யாசத்தில் ஸ்ரீ ராமானுஜன் சொல்லும் விஷயங்களில் ஏற்றுக்கொள்ளவியலா விஷயம் என்ன?

a. “I have come to prefer the word tellings to the usual terms versions or variants because the latter terms can and typically do imply that there is an invariant, an original Ur-text” (134)

b.”…no text is original, yet no telling is a mere retelling – and the story has no closure, although it may be enclosed in the text.”

அ. ஒவ்வொரு ராமாயண நூலையும் ஒரு தனிவாசிப்பு என்று கருத வேண்டுமே (telling) அல்லாது பாடாந்தரம் என்றோ மாறுபட்ட வாசிப்பு என்றோ அவதானிக்கலாகாது. அவ்வாறு அவதானிக்க விழைவது இப்படிப்பட்ட தனிவாசிப்புகளுக்கெல்லாம் ஏதோ ஒரு நூல் மூல நூல் (Ur-Ramayana) என்று எந்த நூலையாவது உருவகிக்கச் செய்யும். (அஃதாகப்பட்டது மூல நூல் (Ur-Text) என்ற கருத்தாக்கத்தை முற்றிலுமாக மறுக்க விழைகிறார்.

ஆ. வெவ்வேறு ராமாயண காவ்யம் சொல்லும் வாசிப்புகளும் தனிவாசிப்புகள் என்று கருதப்படவேண்டுமேயன்றி மறுவாசிப்புக்களல்ல ( Version or Variant)

இ. அசல் படைப்பு (original) என்று எந்த ஒரு படைப்பையும் சொல்லலாகாது. ஒவ்வொறு ராமாயணக் கதையையும் தனிக்கதையாகப் பார்க்க வேண்டுமேயன்றி மறுவாசிப்பாகப் பார்க்கலாகாது. ஒரு ராமாயணக்கதை பகிரும் ஒரு கதை அதில் முடிவு பெற்றாலும் கூட ராமாயண கதை இன்னது தான் என்று முடிவு பெற்ற கதையும் கிடையாது. (எதிர்காலத்திலும் பல ராமாயணக்கதைகள் சொல்லப்படக்கூடும்.)

rama_pattabhishekamமனித சமுதாயத்துக்கு ராமாயண கதை என்ற பெயரில் முதன் முதலில் கிட்டும் ஒரு கதைத் தொகுப்பு ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்பதில் யாருக்கும் வேறு கருத்து இருக்க முடியாது. வால்மீகி ராமாயணம் இயற்றப்படுவதற்கு முன்னர் இந்தக் கதை பாணர்களால் பாடல்களாகப் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்த நூலை படைப்பாய்வுக்கு உட்படுத்திய இந்தியவியலாளர்கள் அபிப்ராயப்படுகின்றனர். ஆனால் அப்படி வால்மீகி ராமாயணத்துக்கு முன்னால் பாடப்பட்ட எந்த ஒரு பாடற் தொகுப்பும் மறுதலிக்கவியலா ஆதாரங்களின் பாற்பட்டு கிடைக்கவில்லை என்பதும் நிதர்சனம். ஆகையால் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூல் மூல ராமாயணம் என்பது கிட்டத் தட்ட நூறாண்டுகளுக்கு மேற்பட்டு இந்த நூலை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி அதன்பாற்பட்டு ஆய்வாளர்களால் எட்டப்பட்ட ஆய்வு பூர்வமான முடிபு.

ஸ்ரீ ராமானுஜன் அவர்களின் வ்யாசம் இப்படிப்பட்ட ஒரு ஆய்வுபூர்வமான முடிபினை மறு ஆய்வுக்கு உட்படுத்தி முறையான ஆய்வுக்கூறுகள் அவற்றினை நிறுவ வேண்டிய விளக்கங்கள் அதன் மூலம் எட்டிய முடிபுகள் என்ற படிக்கு செயற்படாது வெறும் அபிப்ராயமாக மூல ராமாயணம் என்ற கருத்தாக்கத்தை புறந்தள்ளுவது அறவே மறுதலிக்கப்பட வேண்டிய விஷயம். ஆய்வு மூலம் எட்டப்படாத ஒரு தனிநபரின் விருப்பு வெறுப்பு சார்ந்த ஒரு அபிப்ராயம் என்று சுட்டப்பட வேண்டிய விஷயம். ஆகையால் புறந்தள்ளப்பட வேண்டிய விஷயம்.

3. வ்யாசத்தில் காணப்படும் சுய முரண்பாடு என்ன?

300 ராமாயண வ்யாசம் வெவ்வேறு வாசிப்புகளை அதன் மையக்கருத்தை அறியுமுகமாக வகைத்தொகைப் படுத்தியுள்ளது. அதனில் ஒரு வகை ஏற்கனவே அறிமுகமாகி உள்ள நூலிலிருக்கும் கதைக்களனையும் கதாபாத்ரங்களையும் உள்வாங்கி ஆனால் முற்றிலும் முரணான ஒரு கதையை முன்வைக்க விழைவது.

பின்னால் எழுந்த நூல் காலத்தினாற் பின்பட்டது என்றும் அதன் நோக்கம் முந்தைய நூலினை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மறுதலிக்க விழைவது என்று தெரிந்தும், அது அடையாளப் படுத்தப்பட்ட பின்னரும், முந்தைய நூலையும் பிந்தைய நூலையும் ஒரே தராசில் ஒருசேர நிறுப்பது மதிஹீனமல்லவா?

ஏசுபிரானின் சரித்ரம் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் சுவிசேஷிகளால் பகிரப்படுகிறது. அதில் பல முரண்கள் காணப்படுகிறது என்பதனை பைபிளியல் அறிஞர்களின் ஆய்வுகளினை அடியொற்றி ஸ்ரீ சீதாராம் கோயல் அவர்கள் ஏசு கிறிஸ்து: ஒரு ஆதிக்கத்தின் கருவி (Jesus Christ: An Artifice of Aggression) என்ற நூலில் விவரிக்கிறார். ஏசுபிரானின் வாழ்க்கை சரிதம் சிற்சில மாறுபாடுகளுடன் குரான்-ஏ-கரீமிலும் காணப்படுகிறது. ஹிந்துமஹாசபையின் ஸ்ரீ பாபுராவ் சாவர்க்கர் அவர்கள் எழுதிய நூலான க்றிஸ்துவின் பரிச்சயம் என்ற நூல் ஏசுபிரானை ஹிந்துஸ்தானத்திற்கு வந்தவராகவும் யோக முறைகள் பயின்றவராகவும் சிவபெருமானை வழிபட்டவராகவும் காண்பிக்கிறது.

ஏசுபிரான் என்ற ஒரு நபர் சரித்ரத்தில் வாழ்ந்து மறைந்தாரா என்பது சரித்ர வல்லுனர்களால் விவாதிக்கப்பட்டு மறுதலிக்கப்பட்டுள்ளது. அக்கருத்தாக்கத்தை ஒருபுறம் ஒதுக்கி ஏசுபிரானின் சரித்ரம் பகிரும் விவிலியத்தையும் குரான்-ஏ-கரீமையும் ஸ்ரீ பாபுராவ் சாவர்க்கரின் நூலையும் ஸ்ரீ ராமானுஜனின் வாசிப்பு அலகீடுகளின் படி நிறுக்க முனைவோம். இவைகளில் குரான்-ஏ-கரீம் ஏசுபிரானின் வாழ்க்கை சரிதம் பற்றி ஒரு மாற்று வாசிப்பு கொடுப்பதையும் ஸ்ரீ பாபுராவ் சாவர்க்கர் அவர்களது நூல் கிட்டத்தட்ட ஒரு மறுப்பு வாசிப்பு அளிப்பதையும் வாசகர்கள் எளிதில் அவதானிக்கலாம். ஸ்ரீ ராமானுஜன் அவர்கள் கோட்பாடு சார்ந்து பார்ப்போமானால் விவிலியம் என்பது ஏசுபிரானின் சரித்ரம் பகிரும் மூல நூல் என்று ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது. அது மட்டிலுமல்ல ஏசுபிரானின் வாழ்க்கை சரிதத்தைப் பகிரும் நூற்களில் விவிலியமும் குரான்-ஏ-கரீமும் ஸ்ரீ பாபுராவ் சாவர்க்கர் அவர்களது நூலும் ஒரேதராசில் நிறுக்கப்பட வேண்டும் என்பது நகைப்புக்குறிய வாதமாகத் தென்படவில்லை? அது மட்டுமல்ல, “no text is original, yet no telling is a mere retelling – and the story has no closure, although it may be enclosed in the text” என்ற அவர் கூற்றின் படி இது போன்ற கதையளப்புகளுக்கு முடிவும் கூட கிடையாது. தொடர்ந்து எப்படி வேண்டுமானாலும் திடீரெக்ஸ் நூற்கள் எதிர்காலத்திலும் எழுதப்படலாம். திடீரெக்ஸ் மஹிஷாசுர கதையளப்புக்களின் பாற்பட்டு நாளைக்கு வேறொரு அன்பர் ஏசுபிரான் சிவபெருமானை வழிபட்ட அன்பர் என்று மட்டிலும் உருவகிக்காது, உலகத்திலே க்றைஸ்தவ மதத்தை வேரும் வேரடி மண்ணுமாக சிதைக்க விழையும் ஒரு சான்றோராக உருவகப்படுத்திக் கூட ஒரு நூலை எழுத முனையலாம் தான். அப்படிப்பட்ட ஒரு நூலையும் விவிலியத்தையும் ராமானுஜன் கோட்பாடு சார்ந்து ஒரே தராசில் நிறுவ முனைவது நகைப்புக்குறியதாக அறியப்படுமா இல்லையா?

4. மூல நூல் (Ur-Ramayana) ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்றால் அதற்குப் பின்னால் எழுந்த நூற்கள் தரத்தில் தாழ்ந்தவையா அல்லது மாற்றுக்குறைந்தவையா?

இராமாவதாரம் என்ற கம்பநாட்டாழ்வாரின் நூல் ஆதிகவி வால்மீகியின் ராமாயண நூலை அடியொற்றி எழுதப்படும் நூல் என்று கம்பநாட்டாழ்வார் தனது நூலின் வாயிலாகவே தன்னுடைய அபிப்ராயமாகவே வெளிப்படுத்துகிறார் என்று பார்த்தோம் இல்லையா?

இதனை ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் தனது கீழ்க்கண்ட விளக்கங்களால் மேலும் அழகாகத் தெளிவு படுத்துகிறார் –

“கம்பர் மட்டுமின்றி காளிதாஸன், பவபூதி போன்ற பலரும் வால்மீகி முனிபுங்கவரின் ராமாயணத்தை அடியொற்றி எழுதுவதால் வால்மீகி முனிவரின் நூலுடைய தரத்துக்கு ஒருமாற்று குறைந்தது இவர்களுடைய படைப்புகள் என்பது யாருடைய வாதமும் கிடையாது. இந்த அனைத்துப் புலவர் பெருமக்களும் அவர்களுடைய கவிதா மேதாவிலாஸத்துக்கும் காவியம் படைக்கும் அவர்களது கற்பனைத்திறனுக்கும் ராமாயண காவ்யத்தினை தங்களது திறமையால் அழகாக தனித்துவத்துடன் வடித்த மாண்பிற்கும் போற்றப்பட வேண்டும். இவர்களெல்லோரும் வால்மீகி முனிவரை அடியொற்றுபவர்களாகப் பார்க்க வேண்டுமேயல்லாது அவருடைய போட்டியாளர்களாகப் பார்க்க விழைவது பிழையான புரிதல்.

ராமாயண நூற்களின் புராதனம் மற்றும் நம்பகத்தன்மை சார்ந்த முதல் கதைத் தொகுப்பு என்ற வினாவின் பாற்பட்டு இந்த விஷயத்தை அணுகமுனைந்தால் ஹிந்துஸ்தானத்தின் சரித்ரம், பண்பாடு, சமூஹவியல் போன்ற நோக்குகள் சார்ந்து ஆதிகவி வால்மீகி இயற்றிய வால்மீகி ராமாயணமே மூத்த மற்றும் மூல ராமாயணம் என்று அறியப்பட வேண்டும். ஏனெனில் ராமாயணக் கதை பகிரும் மற்றைய அனைத்து நூற்களும் காலத்தால் இதற்குப் பிந்தியவை என்பது மறுதலிக்கப்பட முடியாது என்பதால் என்ற கருத்து ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய கருத்து.

ஆகவே பிற்காலத்திய படைப்பாளர்கள் வால்மீகியின் விவரணைகளிலிருந்து மாறுபடுவது என்பது தங்களது காலத்திய சூழலையும் அறநெறிகளையும் தங்களது படைப்பில் வடிக்க முனையும் முயற்சியாகத் தான் கருதப்படவேண்டும். வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யத்தில் காணப்பட்ட பிழைகளையும் தவறுகளையும் களையும் படிக்கு பிற்காலப் படைப்பாளர்கள் தங்களது படைப்பினை சமைத்தார்கள் என்று சில அறைகுறை அறிஞர்கள் கருத்துப் பகிர்வது நகைமுரணான கருத்து என்று புறந்தள்ளப்படவேண்டிய கருத்து”

எனது கூடுதல் விளக்கம்:

ஹிந்துஸ்தானத்தில் ராமாயணத்தை வெவ்வேறு பாஷைகளில் காவியச்சுவை மிளிர படைத்த எண்ணிறந்த கவிஞர்களும் தாங்கள் வால்மீகி முனிவரை அடியொற்றுவதாக அவர்கள் தரப்பிலிருந்தே அதைப் பகிருகிறார்களே அன்றி அவர்கள் அப்படியொரு கருத்தைச் சொல்லுவதாக ஆதாரமின்றி அப்படி ஒரு கருத்து அவர்கள் மீது சுமத்தப்படவில்லை என்பது நோக்கத் தக்கது. சதாவதானி டாக்டர் ஆர் கணேஷ் வால்மீகி அவர்களை ஆதி கவி என்று சுட்டும் அதே வேளையில் வேறெந்த கவிஞரையும் மாற்றுக்குறைவாக தனது வ்யாசத்தில் சுட்டவில்லை என்பது அழுத்தம் திருத்தமாகச் சுட்டப்பட வேண்டிய விஷயம்.

5. நாட்டார்வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் பற்றிய சர்ச்சை.

ramayana_folk_dollsஇந்த விவாதத்தை தனது பக்கத்தில் அறிமுகம் செய்யப்புகும் போது ஸ்ரீ ஜடாயு அவர்கள் நாட்டார்வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகள் பலவற்றையும் தேடித் தொகுத்து அவற்றை ஆவணப்படுத்த முனைந்த ஸ்ரீ ஏ. கே. ராமானுஜன் அவர்களது முயற்சியை விதந்தோதுகிறார்.

மேற்கொண்டு விவாதத்தில் இப்படிப்பட்ட நாட்டார்வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகள் பற்றி ஸ்ரீ ஜடாயு அவர்கள் பகிரும் கருத்துக்களைப் பார்ப்போம்.

மகேஷ் சங்கர் என்ற அன்பர் விவாதத்தின் போது பற்பல நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகள் மூல நூலாகிய ராமாயணக் கதைக் களனை தாறுமாறாக்கி கவிழ்க்கும் தன்மையவை என்ற கருத்தினை முன்வைக்கிறார். (கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கோஷமிட விழையும் விடலைகள் சிலர் நாட்டார்வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகளின்ன் தொன்மையைப் பற்றியும் கூட கூசாது கதைக்க முயலுவதை கூர்ந்து அவதானிக்க வேண்டும் – என் விளக்கம்)

அதனை ஸ்ரீ ஜடாயு மறுதலிக்கும் கருத்துக்கள் கருத்தாழம் பொதிந்தவை –

“தொன்மையான நாட்டார் வழக்கு ராமாயணக் கதைகள் என்று பரப்புரை செய்யப்படும் கதைகளுடைய தொன்மையின் உண்மைத்தன்மை எத்தகையது என்பது முதற்கண் நோக்கத் தக்கது. எந்த வடிவத்தில் இவையெல்லாம் ஸ்ரீ ராமானுஜன் போன்ற அன்பர்களால் படியெடுக்கப்பட்டனவோ அதை அவதானித்து இவையெல்லாம் அதிக பக்ஷமாக 200 வருஷங்களுக்கு முற்படாத காலத்தில் சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது துலங்கும்.

புழக்கத்தில் இருந்துள்ள நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகளுக்கு மூல நூலாகிய வால்மீகி ராமாயணம் என்ற நூலைப் பற்றி ஒரு அறிமுகம் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது முக்யமாக அவதானிக்கத் தக்க விஷயம். அப்படியிருக்கையில் மூல நூலான வால்மீகி ராமாயணத்தை தாறுமாறாக்கி அவை கவிழ்ப்பதற்கு முயற்சி செய்தன என்பது நகை முரணான விஷயம். தாங்கள் அறியக்கூட இல்லாத ஒரு நூலை தாறுமாறாக்கி அவற்றை கவிழ்ப்பதற்கு இவர்கள் முனைந்தார்களா 🙂

நாட்டார் வழக்குக் கதைகள் பலவும் அந்தந்த உள்ளூர் / க்ராமத்து கற்பனைகளை உள்ளடக்கியவை. பற்பல சிந்தனைகளை உள்ளடக்கியவை அப்படிப்பட்ட கற்பனைகள். மிக உயர்வான சிந்தனைகளும், அதோடு வக்ரமான மற்றும் கோணலான சிந்தனைகளும் கூட இப்படிப்பட்ட கதைகளில் காணக்கிட்டுகின்றன என்பதை மறுக்க இயலாது. உள்ளூர்களில் சொல்லப்படும் கதைச் சொற்பொழிவுகளிலிருந்தும் நாட்டிய நிகழ்ச்சிகளிலிருந்தும் சிற்பங்களிலிருந்தும் ராமாயணங்கள் என்று தாங்கள் புரிந்து கொண்ட ஒரு கதை /பல கதைகளின் மீது தங்கள் கற்பனையின் பாற்பட்ட புரிதல்களை சுமத்தி அதனையொட்டி சமைக்கப்பட்டவை இப்படிப்பட்ட உள்ளூர் நாட்டார் வழக்கு வாய்வழி ராமயணக் கதைகள். இவ்வாறான புதிய சேர்த்தல்கள் காலப்போக்கில் இப்படிப்பட்ட கதைகளுடன் தொடர்ந்து இணைந்து கொண்டு வந்தன. ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் போன்ற ஒருவர் இவற்றைத் தொகுக்கும் காலத்தில், மூல வடிவத்திலான ராமாயணக்கதையுடன் சேர்த்து,  உயர்வான, கோணலான மற்றும் வக்ரமான உள்ளூர் கற்பனைகளைக் கலந்து வடிக்கப்பட்ட ஒரு கலவையாகவே நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் இருந்தன.  காலக்கணிப்பின் பாற்பட்டு 200 வருஷங்களுக்கு முற்படாத ஒரு கலவை இது என்று கருதுவதற்கே  இடமுள்ளது”.

(சதாவதானி டாக்டர் ஆர்.கணேஷ் அவர்கள் இப்படிப்பட்ட ராமாயணக்கதைகளை இலக்கிய வடிவம், மொழியியல் மற்றும் குரிப்பிட்ட பாஷாசைலிகளைச் சார்ந்து தனது வ்யாசத்தில் காலக்கணக்கின் அதிக பக்ஷத்தை 500 வருஷங்களுக்கு முன் வைக்கிறார் – என் விளக்கம்)

6. மூல நூல் வால்மீகி ராமாயணம் என்றால் கம்ப ராமாயணம் மற்றும் தாய்லாந்திய ராமாயணம் போன்ற பிந்தைய நூல்களின் தனித்தன்மை, நம்பகத்தன்மை , காவிய / இலக்கியச் சிறப்பு (தனித்துவம் ) போன்றவை குறைத்து மதிப்பிடப்பட வேண்டுமா?

நாலாவது வினாவில் ஸ்ரீ ஜடாயு அவர்களால் இந்த விஷயம் முன்னமேயே தர்க்க பூர்வமாகத் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. பின்னிட்டும் மேற்கொண்டு அவர் பகிரும் சில தகவல்கள் –

“வால்மீகி ராமாயணத்துக்கும் கம்ப ராமாயணத்துக்கும் ஏதோ பிணக்குகள் இருப்பது போன்ற ஒரு சித்திரத்தைக் கட்டமைக்க விழைவது சரியில்லாதது. ஏனெனில் கம்பர் ஆதிகவி வால்மீகி முனியின் அடியொற்றித் தனது காலகட்டத்து சூழலையும் அறநெறிகளையும் அதன் வடிவத்தில் புகுத்தி அதற்கு ஒரு வடிவம் தந்தார் என்பது நிதர்சனம்.

மூல நூலான வால்மீகி ராமாயணத்தின் அடியொற்றி கால கதியில் அதன் சூழலையும் அறநெறிகளையும் பின்னர் வடிக்கப்பட்ட நூற்களில் புகுத்திய படிக்கு பிந்தைய நூற்கள் அனைத்தும் அதன் தனித்துவம் மற்றும் நம்பகத்தன்மையை தன் வசம் கொண்டவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் கிடையாது. தாய்லந்திய அறிஞர்கள் வால்மீகி ராமாயணத்தின் மூலத்தன்மையை / அதன் புராதன மேன்மையை வெகுவாகக் கொண்டாடுபவர்கள் என்பதில் எந்த சம்சயமும் இல்லை. சாரமற்ற இடதுசாரிக்கயமைக் கருத்துக்களை தாய்லாந்திய அறிஞர்கள் புறந்தள்ளுவதால் தான் ஹிந்துஸ்தானத்தின் மேன்மையான ராமாயண அறிஞர் பெருமக்களை தங்களது ராமாயண நூல் விளக்க விவாதக் களன்களுக்கு அவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து ஹிந்துஸ்தானத்து ராமாயண அறிஞர் பெருமக்களது விளக்கங்களை ஆர்வமுடன் கேழ்க்கிறார்கள்”.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற ஒரு நூல் ஹிந்துஸ்தானத்திலும் உலகின் மற்றைய பகுதிகளிலும் புழங்கும் நூற்கள் அனைத்துக்கும் மூல நூலானது என்றும் மற்றவை அனைத்தும் அதன் அடியொற்றி அதனின்று இணங்கியும் மாறுபட்டும் சமைக்கப்பட்ட நூற்கள் என்ற தர்க்கத்தின் பாற்பட்ட ஒரு பார்வையை மறுதலிக்க விழையும் இடதுசாரிக்கயமைத் தனத்தினை உருவகித்துக் கட்டமைக்கப்பட்ட கருத்தானது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒரு கருத்து.

எந்தவொரு மையக்கருத்தோ அச்சோ இல்லாமல் பற்பல மக்களால் பற்பல ப்ரதேசங்களில் பற்பல விதத்தில் சொல்லப்படும் பற்பல கதைக்களன்களால் அறியப்படும் அனைத்து விதமான ராமாயணங்களும் ஒரே தராசில் ஒரு சேர நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து இடதுசாரிக் கயமைக்காரர்களது. இது தர்க்கத்திற்கும் யதார்த்தத்திற்கும் நிதர்சனத்துக்கும் மாறுபட்டது.

1980-90 களில் முன்னெடுக்கப்பட்ட ஸ்ரீ ராமஜன்மபூமி இயக்கத்தை நீர்க்கச் செய்ய இதுபோன்ற உளுத்துப்போன வாதங்களை முன்வைக்க விழைந்தனர் இடதுசாரிக் கயமையாளர்கள் என்பது கவனிக்கத் தக்கது. புராதன காலத்திலிருந்து இன்றுவரை ஹிந்துஸ்தானத்து கலாசாரம், பண்பாடு மற்றும் சரித்ரத்தில் ராமபிரான் மற்றும் ராமாயண நூலினைப் பற்றித் தொடரும் ஒரு மதிப்பினை அழித்தொழிக்கவும் அதனை இழிவு செய்யுமுகமாகவும் தான் இடதுசாரிச் சதி மற்றும் கயமைத்தனத்தை ஒட்டிய இப்படிப்பட்ட நிலைப்பாடுகள் எடுக்கப்படுகின்றன. இதில் தர்க்கபூர்வமான அல்லது அறிவுபூர்வமான நிலைப்பாடுகள் ஏதுமில்லை என்பது கவனிக்கத் தக்கது.

இது போன்ற தீயதான சாரமற்ற இடது சாரி வாதங்கள் தர்க்கபூர்வமாக முற்றிலுமாக மறுதலிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பலவித இந்து விரோத கும்பல்கள் அறிவுஜீவிகள் என்ற போர்வையில் இந்த உளுத்துப்போன வாதங்களை மீண்டும் தூசிதட்டி எடுத்து ஹிந்துஸ்தான அறிவியக்கத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். அதனால் தான் ராமாயணத்தை இழிவு செய்யும் பல சாரமற்ற கூச்சல்களும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியது.

(முற்றும்)

52 Replies to “வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]”

  1. க்ருஷ்ணகுமார் ஸ்வாமின்,

    1. நான் என்ன அட்ச்சுவிட்டேன் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் இருந்தேன். சர்ப்பத்துக்கும் கீரிக்கும் சண்டை விடப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பதோடு நிறுத்திக் கொள்ளும் பாம்பாட்டி போல இப்படி புஸ்வாணமாக்கிவிட்டீர்களே!

    2. உங்கள் இந்தப் பத்தியின் வாதங்களுக்காகத்தான் போன பகுதிக்கான பின்னூட்டத்திலேயே எப்படி இந்தியர்களுக்கு ராமாயணத்துக்கான பிரதி – ur-text – இருக்காது, ஆனால் ur-ராமகதை இருக்கும் இருப்பது இயல்பு, ஆனால் அது தாய்லாந்துக்காரர்களுக்கு பொருந்தாது என்று விளக்கி இருந்தேன். அடுத்த பகுதி வரை பொறும் பிள்ளாய் என்று எழுதி இருந்தீர்கள். அதுவும் புஸ்வாணம்தானா?

    3. இன்னொரு உதாரணமாக பெருவெள்ளத்துக்கான ur-text மாறுபடும் என்று எழுதி இருந்தேன். அதையும் படிக்கவில்லையா?

    4. கில்கமேஷ் காவியமே உலகின் ஆதி காவியம் என்று அறியப்படுகிறது. (குறைந்த பட்சம் கி.மு. 2000). மச்சாவதாரக் கதை சதாப்த பிராமணத்தில் (அதிக பட்சம் கி.மு. 700) முதல் முதலாகத் தெரிகிறது. உட்னாபிஷ்டிம்தான் மச்சாவதாரத்தின் ur-text-ஆ? இதைத்தான் மூல காவியத்துக்கும் ஆதி காவியத்துக்கும் உள்ள வித்தியாசம் என்று விளக்கி இருந்தேன். அதையும் படிக்கவில்லையா?

    5. ஸ்வாமின், உம் நடையைப் படிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. அப்படி தாவு தீர்த்து படித்து பதில் எழுதினாலும் அதைப் படித்த மாதிரியே தெரியவில்லை. புஸ்வாணத்துக்கு மேல் புஸ்வாணம் வேறு. நான் சொல்லும் அற்ப விஷயங்களே புரியவில்லை என்றால் ராமானுஜன் ராமாயணத்தில் திளைத்திருப்பதையோ, அல்லது ராமாயணத்துக்கு ur-text இல்லை என்று ராமானுஜன் சொல்வது உங்களுக்கு கயமைத்தனமாகத் தெரிவதிலோ வியப்பென்ன?

    6. உங்களுக்கு நான் சொல்லக் கூடியது ஒன்றுதான் – தாய்லாந்து ராமாயணமான ராமகியனைப் படித்துப் பாருங்கள். மச்சாவதாரத்துக்கும் நோவாவின் பெருவெள்ளத்த்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் ராமகியனுக்கும் வால்மீகிக்கும் நடுவே உள்ளது. இதில் ராமகியன் பின்னால் வந்தது என்பது ஒரு பொருட்டே அல்ல. பௌமாசார்யாவைப் படித்தாலே இது புரிய வேண்டும்தான். ஆனால் பௌமாசார்யாவின் காவிய நயம், அது இது என்று நீங்கள் வேறு எங்கோ போய்விட்டீர்கள்.

  2. ஒருவர் எழுதியதை அடைப்புக்குறிகளுக்குள் போடும்போது, எச்சொல்லையும் மாற்றக்கூடாது.

    ‘சமசயமும் இல்லை
    ‘கேழ்க்கிறார்கள்”

    என்றா எழுதினார்? அவருக்குத்தான் நன்கு தமிழ் தெரியுமே? கேட்கிறார்கள் என்று சரியாக எழுதியிருப்பாரே? Quote exactly. Don’t attempt to distort their words.

    ராமானுஜன் எழுதியிருப்பதாக அடைப்புக்குறிகளுக்குள் போடப்பட்டிருக்கும் வாசகங்களும் பிழையாகப் போடப்பட்டிருக்கின்றன. செய்வன திருந்தச்செய் என்றவர்களின் நோக்கம், அப்படிச் செய்யாவிட்டால், பிழையேற்படும் என்பதால்.

    ராமானுஜன் எழுதிய வாசகங்களை கிருஸ்ணகுமார் மொழிபெயர்த்தது பிழையாக இருக்கிறது. அப்பிழையான மொழிபெயர்ப்பினால் பிழை மேல் பிழை போட்டு தன் கட்டுரைத்தொடரை முடித்திருக்கிறார்.

    ஜடாயு எழுதியதையும் சரியாகப்புரியவில்லை. ராமானுஜன் எழுதியதையும் சரியாகப்புரியவில்லை. Unless you quote them exactly, it is dangerous to agree with you.

    பலவிடங்களில் சொல்ல நினைத்தக்கருத்துக்களையும் குழப்பியிருக்கிறார்.

    கட்டுரைத் தொடராக வெவ்வேறு நாட்களின் வெளியானதால், இறுதிப்பத்தியில் தன் முடிவுகளை நான்கைந்து வரிகள் வரிசைப்படுத்தியிருந்திருக்கலாம்.

    அவர் செய்யாவிட்டாலும் தளத்தார் ஒரு பெட்டிக்குள் அவ்வரிகளைப்போட்டிருக்கலாம். இத்தெளிவு கிருஸ்ணகுமார் போன்றோர் எழுதும் கட்டுரைக்கு அவசியம்.

  3. ஒன்றை மறந்துவிட்டேன். ஜடாயு சொன்னதாக நீங்கள் காட்டும் மேற்கோள்:
    // தொன்மையான நாட்டார் வழக்கு ராமாயணக் கதைகள் என்று பரப்புரை செய்யப்படும் கதைகளுடைய தொன்மையின் உண்மைத்தன்மை எத்தகையது என்பது முதற்கண் நோக்கத் தக்கது. எந்த வடிவத்தில் இவையெல்லாம் ஸ்ரீ ராமானுஜன் போன்ற அன்பர்களால் படியெடுக்கப்பட்டனவோ அதை அவதானித்து இவையெல்லாம் அதிக பக்ஷமாக 200 வருஷங்களுக்கு முற்படாத காலத்தில் சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது துலங்கும்.

    புழக்கத்தில் இருந்துள்ள நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகளுக்கு மூல நூலாகிய வால்மீகி ராமாயணம் என்ற நூலைப் பற்றி ஒரு அறிமுகம் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது முக்யமாக அவதானிக்கத் தக்க விஷயம். அப்படியிருக்கையில் மூல நூலான வால்மீகி ராமாயணத்தை தாறுமாறாக்கி அவை கவிழ்ப்பதற்கு முயற்சி செய்தன என்பது நகை முரணான விஷயம். தாங்கள் அறியக்கூட இல்லாத ஒரு நூலை தாறுமாறாக்கி அவற்றை கவிழ்ப்பதற்கு இவர்கள் முனைந்தார்களா 🙂 //
    வால்மீகி ராமாயணம் பற்றி அறிமுகம் கூட இல்லாத நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் அனேகம். ஆனால் அவற்றுக்கும் வால்மீகி ராமாயணம்தான் மூல நூலா? ur-text-ஆ? ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் என்ன தர்க்கம்!

  4. அழகான ஆய்வு பூர்வமான பதிவு… தொடர்ந்து நம் தர்மம் சார்ந்த விடயங்களை எழுதும் தங்கள் பணி ஸ்ரீராமன் அருளால் மேலும் பொலிவுடன் தொடரட்டும்…

  5. மதிப்பிற்குரிய திரு. கிருஷ்ணகுமார் அவர்களுக்கும், திரு ஆர்வி அவர்களுக்கும் இடையிலான இந்த உரையாடல்கள் வாயிலாக நான் புரிந்து கொள்வது யாதெனின், ஒரு கதையின் மூலத்தை, கதாபாத்திரங்களின் மனஅமைப்பையும், அவர்களின் நிலைப்பாடுகளையும் மாற்றாமல், பல விதமாக திரைக்கதை அமைப்புகளுடனும், சிற்சில வேறுபாடுகளுடனும்,கற்பனையான அழகியலுடனும் புதிது புதிதாக மாற்றி தந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று மதிப்பிற்குரிய அய்யா, திரு கிருஷ்ணகுமார் அவர்கள் நிலைப்பாடாக புரிந்து கொள்கிறேன்.

    திரு ஆர்வியின் நிலைப்பாடாக ஒரு கதையின் தோற்றமே கேள்விக்குரியதாக இருக்கும் போது அதன் மூலத்தை மாற்றியமைத்தால் என்ன? மாற்றாமல் விட்டால் என்ன? மனித சமூகம் பல்வேறு நிலைகளில், தளங்களில், ஒரே கதையை எப்படி தமக்கு வேண்டியவாறெல்லாம் நடித்தும், அமைத்தும் பார்த்திருக்கிறார்கள்! இப்படி தொடர்ச்சியாக ஒரு கதை பலவிதமாக அணுகப்பட வேண்டுமெனில் அதன் தொன்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? என்று சிலாகிக்கும் தரப்பாகவும் பார்க்கிறேன்.

    இந்த ஆர்வியின் நிலைப்பாடு தான் சற்றைக்கும் சிறிது அதிகமான ஆச்சாரவாதியாக விளங்கும் ஐயா திரு. க்ரிஷ்ணகுமாரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒரு கதையின் மொத்த அமைப்பையே மாற்றுகிறார்கள் ஐயா இந்த காலத்தில். 3 வருடங்களுக்கு முன்பு சென்னை லாய்ட்ஸ் காலனி தெருவில் ஒரு விசிக கூட்டத்தில் ஒரு ஜீன்ஸ் பேண்ட் அணிந்த பேச்சாளர் பேசுகிறார். “உங்களுக்கெல்லாம் ராமாயணம் நல்லா தெரியும், அதுல சீதை அவங்களா விரும்பி தான் ராவணன் கிட்ட போனாங்க. ஏன்னா, ராவணன் சாதாரண ஆளு இல்ல. தமிழன், உலகத்தையே அடக்கி ஆண்ட பெரிய ஆள். ராமர் அயோத்திய கூட ஆள முடியாம காட்டுல வாழ்ந்தவரு. ஆன அவரு பொண்டாட்டி சீதை அவரை விட்டு போனதுக்கு அனுமார்னு ஒரு குரங்கு இலங்கையை எரிச்சது. அதே போல, இப்ப காடுவெட்டி குருனு ஒன்னு ஊர கொளுத்திகினு இருக்குது.” இப்படியாக பாட்டாளி மக்கள் கட்சியின் முழுநிலவு மாநாட்டில் நிகழ்ந்த மரக்காணம் சண்டையை ஒட்டி மேற்கண்டவாறு பேச்சாளர் பேசினார். இவரை போன்ற அரைவேக்காடுகள் மணிரத்னம் எடுத்த படம் தான் ராமாயணம் என்று நினைத்துக் கொண்டுள்ளனர்.

    இது போன்ற தவறான புரிதல் கொண்ட ஆட்களின் தரப்பைக் கேட்டால் ஐயா திரு. கிருஷ்ணகுமார் போன்றோரின் மனக்கவலையை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். ராமாயணத்தின் ஜீவனே சீதை ஒரு கற்பின் கனலானவள் என்பது தான். அதையே திரித்து ராமாயணங்கள் சொல்லப்பட்டால் அது ராமாயணம் இல்லை அல்லவா? 300கும் மேற்பட்ட ராமாயணங்களிலும் இது போல பல்வேறு மாறுபாடுகள் உண்டு. ஒரு கதையின் ஆன்மாவை சிதைக்கும் வேலை ஒரு பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கப்பட்டு சிலாகிக்கப் பட்டால் அது அந்த கதையை முதன் முதலாக எழுதியவுனுக்கு இழைக்கப்படும் துரோகமல்லவா?

  6. அன்பின் ஆர் வி ஸ்வாமின். ஸ்வாகதம். ஸுஸ்வாகதம்.

    இங்கு நான் என்னுடைய மெய்யான வாழ்க்கையில் ஏதேதோ முஸ்தீபுகளில் இருக்கையில்………. அவகாசம் குறைந்த படியால்………. சந்திலே சிந்து பாடி விடுவீர்களே 🙂 நான் எங்கும் போகவில்லை ஆஜராகி விட்டேன். கொஞ்சம் கேப்பு கெடச்சா போதுமே. கெடா வெட்டிவிடுவீங்களே 🙂

    கசாப்புக்கடைக்காரன் ஆட்டுக்குட்டிக்கு கத்தை கத்தையாக பச்சிலைகளைக் கொடுப்பான். அதைப் பார்த்துவிட்டு ஆர் வி போன்றவர்களால் மட்டிலுமேயே ………….. ஆஹா கசாப்புக்கடைக்காரனுக்குத் தான் எத்துணை ஜீவகாருண்யம் என்று சொல்லும் நெஞ்சழுத்தம் இருக்க முடியும்.

    யதார்த்த வாதிகளுக்கு………….. வெகு நிச்சயமாகத் தெரியும்……….. இவன் இப்படி பச்சிலைக்கத்தைகளை ஆட்டுக்கு கொடுப்பது அதைக்கொழுக்க வைத்து அதைப் பொலி போடுவதற்கு என்று.

    300 ராமாயண வ்யாசம் ராமாயணக்கொண்டாட்டமாம்………….. ஆர் வி அவர்கள் அட்ச்சுவுட்டமாதிரிக்கு 🙂

    மூன்று விதமான வாசிப்பு என்று ஸ்ரீ ராமானுஜன் விவரிப்பது ………….வெகு நிச்சயமாக ராமாயணம் மட்டுமின்றி வேறு எந்த ஒரு தொன்மையான ……………… ஒரே அடிப்படை விஷயத்தை அடிப்படையாகக் கொண்ட …………. ஆனால் பலபேரால் பேசப்பட்ட ஒரு நூலினைப்பற்றி அறிவதற்கு …………….. ஒரு அருமையான விளக்கம்.

    அப்படிப்பட்ட விளக்கம் ராமானுஜனின் 300 ராமாயண வ்யாசம் பகிருவது அதன் சிறப்பு.

    ஆனால் …………..

    அப்படி ஒரு விளக்கத்தைக் கொடுத்த பின்னரும் கூட…………..

    பெயரளவில் கதாபாத்ரங்களை மட்டிலும் உள்வாங்கி ஆனால் முற்று முழுதாக மூலக்கதையை தாறுமாறாகச் சிதைக்கும் ஒரு பின்னால் இயற்றப் பட்ட வாசிப்பையும் கூட ……………. மூல கதையுடன் ஒரே தராசில் நிறுவ முனைவது என்பது………… அடிமுட்டாள் தனமில்லை………….. மிக நயவஞ்சகமான கயமைத் தனம்.

    அந்தக் கயமைத் தனத்தை வெகு உயரத்தில் ஒரு கருத்தாக்கம் போல முன்வைக்க ஏதுவாக மூலநூல் என்று எத்தையாவது முன்வைத்தால் இடைஞ்சலாகிவிடுமே என்று…………ராமாயணமா?…………அதற்கு ஒரு மூல நூலா?………. அப்படியென்று ஏதுமே கிடையாதே என்று பச்சையாக பொய் சொல்லுவது ராமானுஜ வ்யாசத்தின் கயமைத்தனத்தின் உச்சம்.

    ராமாயணப்படைப்பாய்வு என்பது நூறு வருஷத்திற்கும் மேற்பட்ட தொன்மை உடைய ஒரு ஆய்வுத் துறை. ராமாயண கதைக்களனை ஆய்ந்தவர்கள் ஹிந்துஸ்தானத்து அறிஞர்கள் மட்டிலுமல்லர். உலகின் வெவ்வேறு தேசங்களையும் சார்ந்த பல்வேறு அன்பர்கள். வால்மீகி ராமாயணம் என்ற ஒரு நூலின் வெவ்வேறு பாடாந்தரங்களை மட்டிலும் அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. ராமகதை பேசும் பற்பல நூற்களையும் அவர்கள் வால்மீகி ராமாயண படைப்பாய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

    இதையெல்லாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அவர்கள் பல ஆய்வுக்கூறுகளை முன்வைத்து அவற்றை வெகு ஆழமாக விசாரம் செய்து முன்னெடுத்த முடிபு வால்மீகி ராமாயணம் என்பது ஆதிகாவ்யம். ராமகதை சொல்லும் நூற்களுக்கெல்லாம் ஒரு மூல நூல். என்பது.

    எந்த ஒரு ஆய்வுக்கூறும் இல்லாமல் நோகாமல் நொங்கெடுத்து சும்மனாச்சுக்கும் அட்ச்சுவுடப்பட்ட ஒரு வெற்று அபிப்ராயம் ராமகதை என்பதற்கு எந்த ஒரு மூலநூலும் கிடையாது என்பது. அதற்கு வெகு நிச்சயமாக ஒரு காரணம் உண்டு.

    ராம கதாபாத்ரங்களை முன்னெடுத்து ராமகதையை முற்றிலுமாகச் சீரழித்து சமைக்கப்படும் ஒரு நூலை………. அது ராமகதை பேசும் கதாபாத்ரங்களை மட்டிலும் முன்னடக்கியது என்ற ஒரே காரணத்தை மட்டிலும் முன்வைத்து …………

    அதை ராம கதை என்று கும்மியடிக்க முனைவது நயவஞ்சகம் மிகுந்த ஒரு கயமைத்தனம்.

    அதை கொண்டாட்டம் என்று சொல்லுவது………….

    என்ன என்பதனை வாசகர்களின் அவதானத்துக்கு விட்டு விடுகிறேன்.

  7. அன்பின் ஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயர் அவர்களுக்கு

    தங்களது ஆதரவான கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

    உண்மை ஒரு சில அடிகள் நடப்பதற்கு முன்னால் பொய் என்பது வாயு வேகம் மனோவேகம் என்று பாய்ச்சலாகப் பாய்ந்து விடுமாம். ஒரு பொய்யை அது பொய் என்று சொல்லுவதற்கு நிரூபணம் செய்வதற்கு தர்க்கங்களை முன் வைப்பதற்கு எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை.

    தங்களைப் போன்றோரின் ஆதரவு எனக்கு நிச்சயம் உத்வேகமளிக்கும். வெற்றிவேல்.

  8. \\ வால்மீகி ராமாயணம் பற்றி அறிமுகம் கூட இல்லாத நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் அனேகம். ஆனால் அவற்றுக்கும் வால்மீகி ராமாயணம்தான் மூல நூலா? ur-text-ஆ? ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் என்ன தர்க்கம்! \\

    ஆர் வி தூங்குபவர்களை எழுப்பி விட முடியும். உங்களைப் போன்று………… தூங்குவது போல நடிப்பவர்களை எக்காரணம் கொண்டும் எழுப்பி விடவே முடியாது…………

    உங்களுக்கு நிச்சயம் புரியாது தான்………… ஆனால் வாசிக்கும் வாசகர்களுக்கு உங்களது குதர்க்கத்தில் உள்ள ஃபேலஸி என்ன என்பதை நிச்சயம் சுட்ட வேண்டும் தான்.

    உலக முழுதிலும் ******ராமகதை****** பேசும் நூற்களில் மூத்த நூல் என்பது ஆதிகாவ்யமான ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்பதில் யாருக்கும் எந்த விதமான சந்தேஹமும் கிடையாது.

    அதையடுத்தடுத்து ஹிந்துஸ்தானத்திலும் தேசாந்தரங்களிலும்…………… பற்பல பாஷைகளிலும் எழுந்த நூற்கள் ஒன்றினையொன்று அடுத்தடுத்து ………… ஒன்றினையொன்று அடியொற்றி……….. இணங்கி ………… வேறுபட்டு…………. அல்லது பிணங்கி எழுந்த நூற்களே என்பதிலும் கூட யாருக்கும் எந்த விதமான சந்தேஹமும் கூட இருக்கமுடியாது…………

    ராமகதை என்பது வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஆரம்பிக்கும் ஒரு வஸோர்த்தாரை………. அதாவது அந்த ஒரு புள்ளியிலிருந்து இடையறாது கொட்டும் ஒரு நீர்வீழ்ச்சி போன்றது…………

    நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் பேசுபவர்களுக்கு ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூல் அறிமுகம் கூட இல்லாமல் இருக்கலாம்…………… அவை அந்த நூலிலிருந்து காலத்தால் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டு பின்னால் வந்தவையாகவும் கூட இருக்கலாம்………. ஆனால் வெகு நிச்சயமாக அவர்களுக்கு ராம கதை என்பது நிச்சயமாக அறிமுகமான ஒன்று தான்………..அதற்கு நிச்சயமாக ஒரு ஆச்ரய ஸ்தானம் உண்டு………… LOCUS ……….. அது அந்த ப்ராந்திய பாஷையில் அறிமுகமாயுள்ள ஒரு ராமாயணமாகக் கூட இருக்கலாம்……….. அந்த ப்ராந்திய ராமாயணத்துக்கு ஆச்ரயம் எது?

    வேறொன்று? அதற்கு ஆச்ரயம் வேறொன்று. அதற்கு ஆச்ரயம்?………….இப்படியான ஆச்ரயச் சங்கிலி முடிவடையும் இடம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் தான்…………. அதாவது ஆதாரங்களின் பாற்பட்டு………… சான்றுகளின் பாற்பட்டு…………

    கற்பனையின் பாற்பட்டு அல்ல.

    இந்தியவியல் அறிஞர்கள் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் எழுதப்படுவதற்கு முன்னர் பாணர்கள் ராமாயணம் இயற்றியிருக்க வேண்டும் என்று அபிப்ராயப்படுகிறார்கள். ஆனால் மறுக்க முடியாத சான்றுகளின் பாற்பட்டு அப்படி ஒரு ராமகதை ……….. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்துக்கு முந்தைய ராமகதை என்று ஏதும் இன்று வரை கிட்டவில்லை…………..அது ஒரு அனுமானம் மட்டிலுமே. சான்றுகளால் ருஜுவாகாத அனுமானம்.

    நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகள் ……………திவ்ய த்ருஷ்டியால் ………அல்லேலூயா என்று ஆயிரம் முறை ஜெபம் செய்து……… பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவின் அனுக்ரஹாதி சுவிசேஷ க்ருபையால்……….. அல்லது சரித்ரத்தில் இல்லாத ஏஸ்ஸுவின் மெய்ப்பாட்டால் விளைந்த அற்புதம் ………. என்று நீங்கள் ஃபத்வா விதிக்க முனைந்தால்……….. அது உங்கள் வரையில் தர்க்க பூர்வமானது தான் 🙂

    பொலிக தேவரீரது தர்க்கம். பொலிக பொலிக ஆர் வி ஸ்வாமின் 🙂

  9. ஆர் வி தன்னுடைய மேதகு குதர்க்க வ்யாக்யானாதிகளால் பாடாய்ப் படுத்தியெடுத்திருக்கும் ஒரு ஒரு சொற்றொடர் Ur-text.

    இந்த வ்யாசம் நெடுக Ur என்ற விகுதியுடன் தொடங்கும் சொல் பன்முறை வந்திருக்கிறது.

    இது என்ன என்று உர்ரென்று அறிய விழையும் வாசகர்களுக்கு …………

    ரொம்ப எளிமையாக…………

    ***மூல***

    உதாரணத்திற்கு

    Ur-Ramayana…………….ராமாயண நூற்களில் மூத்த நூல்……….. எல்லா ராமகதைகளுக்கும் மூத்த அதற்கு மூலமான ராமாயணம்…………Ur-Ramayana…………அது ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்.

  10. எனது பேரன்பிற்குரிய மேதகு பீ எசு ஐயா

    \\ ஜடாயு எழுதியதையும் சரியாகப்புரியவில்லை. ராமானுஜன் எழுதியதையும் சரியாகப்புரியவில்லை. Unless you quote them exactly, it is dangerous to agree with you. \\

    ராமானுஜனை நான் புரிந்துகொள்ளவில்லை என்று தேவரீர் சொல்லுகிறீர்கள்.

    ராமானுஜனுடைய வ்யாசத்திலிருந்து அவருடைய வரியை quote செய்யவும் என்னுடைய விளக்கத்தையும் quote செய்யுங்கள். அவர் விளக்க விழையும் கருத்தாக்கத்திலிருந்து என்னுடைய கருத்தாக்கம் எப்படி வேறுபடுகிறது என்று சொல்லுங்கள். உங்களது விளக்கங்கள் தர்க்க பூர்வமானதாக இருந்தால்………. என்னுடைய புரிதல் தவறாக இருந்தால் நிச்சயமாக அதனைத் திருத்திக்கொள்வேன்………

    அதுவே ஜடாயுவின் ஆங்க்ல விளக்கங்களை நான் தமிழாக்கம் செய்தமைக்கும். வ்யாசத்தின் முந்தைய பாகத்தில் என்னுடைய விளக்கங்கள் அவர்களது அபிப்ராயங்களிலிருந்து வேறுபட்டிருந்தால் அதற்கு நானே ஜவாப்தாரி என்று சொல்லியிருக்கிறேன். தங்களுடைய மீள் கவனத்திற்கு.

    கேழ்வி. சம்சயம் இதெல்லாம் மொழிநடை சார்ந்த விஷயங்கள். வ்யாசம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் முடிந்த பின்னர் …………. கட்டேக் கடசியாக அதையும் நிச்சயமாக விசாரிப்பேன்.

    கருத்துலோ ஏமீ வித்யாசமண்டி. தானி செப்பண்டி பீ எசு காரு.

    300 ராமாயணம் என்ற மோசடி தங்களுக்கு மிகவும் தேவையான கருத்து என்பது வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்.

    வெறுங்கையில் முழம் போட வேண்டாமே. மிகக் குறிப்பாக விளக்க வேற்றுமைகளை விவரிக்க முனையுங்களேன். வாசகர்களையும் அடியேனையும் தங்களது விளக்கங்களால் தெளிவு படுத்துங்களேன்.

  11. சற்று நீண்ட பதிவு. க்ஷமிக்கவும்.

    ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சொல்லும் மூல ராம கதையாகப் பட்டது வேறு ஒரு பாஷையில் மூலக்கதை பேசும் கதாபாத்ரங்களைத் தாங்கி முற்றிலும் வேறான ஒரு ராமகதை சொல்லுவதை ராமானுஜன் வ்யாசம் ஸிம்பாலிக் என்று சொல்லுகிறது.

    வ்யாசத்தின் இரண்டாவது பாகத்தில் ஜைன ராமாயணம் மற்றும் தாய்லாந்திய ராமாயணத்தைப் பற்றிய விபரங்களைப் பகிருகையில் இப்படிப்பட்ட மாறுபட்ட …………… மறுப்பு வாசிப்புக்களைப் பற்றி அவதானிக்கையில் நான் பகிர்ந்த கருத்துக்களை மீள் கவனத்திற்கு கொணர்கிறேன்………

    ………………………………………………………………………………………………….

    8. இந்த புராணத்தின் (ப வு மா ச ரி அ எனும் ஜைன ராமாயணம்) ப்ரதான உத்தேசம் ஜைன தர்மத்தின் தத்வார்த்தம் மற்றும் அறவிழுமியங்களை உபதேசம் செய்வது என்றும் அதை ஸ்ரீ விமலசூரி தெளிவாகவும், சரளமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் செய்தமையை ஸ்ரீ ஜேக்கபி குறிப்பிடுகிறார். ஆனால் ஒட்டு மொத்த வடிவத்தை அவதானிக்கையில் விவரணைகள் மந்தமாகச் செல்வதையும் பதிகிறார்.

    9. ஜைன சமயத்தைப் பின்பற்றும் அன்பர்களைப் பொறுத்த வரையில் ஜைன ராமாயணங்கள் ஜைன நியமன சாஸ்த்ரங்களில் பேசப்படும் பேசுபொருள் அன்று என்று பத்தி ஐந்தில் குறிப்பிடப்பட்டதைப் பார்த்தோம். ஆயினும் இவற்றை ஜைன தர்மங்களை விளக்குமுகமாக ஜைன சமயத்தின் முக்யமான நூற்களுள் ஒன்றாகக் கருத முகாந்திரம் இருக்கிறது. ஆக இவற்றை ப்ரத்யேகமாக ஜைன தர்மப்ரசார நூலாக மட்டிலும் கருதுதல் முறையாகும்.

    10. ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணக் கதைக்களனிலிருந்து மாறுபடும் ஜைன ராமாயணங்களை ……………பொதுவினில் ஒப்பிடப்படும் ராமாயணக் கதைகளின் ஒரு பகுதியாக ஏற்க முடியாது. ஏனெனில் இவை மிகக் குறிப்பாக ஆதிகாவ்யத்தை மறுத்துப் பேச வேண்டும் என்ற வெளிப்படையான நோக்கத்துடன் சமைக்கப்பட்டவை என்பதனால். ஆயினும் ஆதிகாவ்யத்தின் கதைக்களனுடன் அணுக்கமான ஜைன ராமாயணங்களை ………….. பொதுவினில் ஒப்பிடப்படும் ராமாயணக் கதைகளுடன் ஏற்கலாம். ஏனெனில் இவை ஆதிகாவ்யத்தின் கதைக்களனுடன் பெருமளவு அணுக்கமானவை என்பதனால்.

    11. ஆதிகாவ்யமான ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்துடன் உடன்படும் ராமாயணமாக இருந்தாலும் சரி அதற்கு எதிர்மறையான ராமாயணமாக இருந்தாலும் சரி…………. ஜைன ராமாயணங்கள் ஹிந்து மதத்தின் முக்யமான நூற்கள். ஜைன தர்மப்ரசார சாதனங்கள். ஆக ஹிந்து மதத்தின் மதிப்பு மிகுந்த நூற்தொகுப்பில் முக்யமானவை.

    12. ஆயினும் ராமகதை என்று பேசப்படுகையில் முக்யமான அலகீடு ஆதிகாவ்யமான வால்மீகி ராமாயணத்தின் கதைக்களனுடன் உடன்பாடு அல்லது முரண் என்பது முக்யமாக அவதானிக்க வேண்டிய விஷயம்.

    ……………………………………………………………………………………………………………………………….

    இன்னொரு மறுப்பு வாசிப்புக்கான உதாரணம் .

    என்னுடைய வ்யாசத் தொடரில் ராமானுஜனின் ஐந்து வாசிப்புக்களில் ஸ்ரீமத்வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், ஜைன ராமாயணம், தாய்லாந்திய ராமாயணம் என நாலு ராமாயணங்கள் மட்டிலும் ராமானுஜன் வ்யாசம் சார்ந்தும் மேலதிக நூற்களின் துணை கொண்டும் விளக்கப்பட்டிருந்தன.

    ஐந்தாவது விஷயமான நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணங்கள் பற்றி விபரமாகப் பேசப்படவில்லை. நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணங்கள் என்பவையும் பல்விதமானவை என்று அறியமுடிகிறது. உள்ளபடி எனக்கு இவை பரிச்சயமான விஷயமன்று.

    ஸ்ரீ ஜடாயு அவர்கள் தனது ஃபேஸ் புக் உரையாடலில் இவற்றைப் பற்றிக் குறிக்கையில்

    “”””””””””” நாட்டார் வழக்குக் கதைகள் பலவும் அந்தந்த உள்ளூர் / க்ராமத்து கற்பனைகளை உள்ளடக்கியவை. பற்பல சிந்தனைகளை உள்ளடக்கியவை அப்படிப்பட்ட கற்பனைகள். மிக உயர்வான சிந்தனைகளும், அதோடு வக்ரமான மற்றும் கோணலான சிந்தனைகளும் கூட இப்படிப்பட்ட கதைகளில் காணக்கிட்டுகின்றன என்பதை மறுக்க இயலாது. உள்ளூர்களில் சொல்லப்படும் கதைச் சொற்பொழிவுகளிலிருந்தும் நாட்டிய நிகழ்ச்சிகளிலிருந்தும் சிற்பங்களிலிருந்தும் ராமாயணங்கள் என்று தாங்கள் புரிந்து கொண்ட ஒரு கதை /பல கதைகளின் மீது தங்கள் கற்பனையின் பாற்பட்ட புரிதல்களை சுமத்தி அதனையொட்டி சமைக்கப்பட்டவை இப்படிப்பட்ட உள்ளூர் நாட்டார் வழக்கு வாய்வழி ராமயணக் கதைகள்.””””””””””

    உயர்வான சிந்தனைகளைப் பேசும் நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகளுக்கு நமது உளமார்ந்த வணக்கங்கள்.

    ஆனால் வக்ரமான கோணலான தாறுமாறான விஷயங்களைப் பேசும் ………….. ராமகதாபாத்ரங்களை உள்ளடக்கிய நாட்டார் வழக்கு கதைகளை………… வெறும் பொழுதுபோக்காகக் கருதலாமே ஒழிய ………….. ராமகதையைப் பற்றிய கதையாடல்களில் இவற்றையும் ஒரு பொருட்டாகக் கருதவே முடியாது.

    ராமானுஜன் வ்யாசத்தில் ஸந்தாலி வனவாசிகளது ( இடதுசாரி ஆதிவாசி) கதை ஒன்றை ராமானுஜன் பட்டியலிடுகிறார். நான் பகிர்ந்துள்ள ராமானுஜன் வ்யாசம் சொல்லும் பிடி எஃப் கோப்பில் இது பக்கம் 13ல் காணப்படும். ராமானுஜன் வ்யாசம் பற்றிப்பேசும் புஸ்தகத்தில் பக்கம் 155.

    இதன் படி ஹிந்துக்கள் வெகுவாக உயர்வாக மதிக்கும் சீதாபிராட்டி லக்ஷ்மணனாலும் ராவணனாலும் துய்க்கப்படுகிறாள் என்று கூறப்பட்டுள்ளதை அறிந்தால் ஹிந்துக்கள் அதிர்ச்சியில் உறைவார்கள் என்று ராமானுஜன் சொல்லுகிறார்.

    இது ஒரு உதாரணம் மட்டிலுமே………….

    ………………………………………………………………………………………………..

    ஜைன ராமாயணங்களில் சில கூட (எல்லாம் அல்ல) மறுப்பு வாசிப்பு தான். ப்ரதி புராணம். Anti-Counter-Purana. ஸ்ரீ விமலசூரி அவர்களது பவும சரி அ போன்ற ஜைனராமாயணம் அதனது அவதாரிகையிலேயே………… இது புழக்கத்தில் இருக்கும் (=வால்மீகி ராமாயணம்………… அக்காலத்தில் ஏற்கனவே வெகுவாக அறிமுகமாயுள்ள என்று அறியப்பட்ட) ராமாயணம் சொல்லும் கதைகளுக்கு எதிரானது என்று சொல்லுகிறார். மறுக்க விழையும் விஷயங்களின் ஜாபிதாவைப் பார்க்கும் போது எல்லோருக்கும் புரியும் இவை ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சொல்லும் நிகழ்வு ஜாபிதா என்று.

    ஆயினும் ……………. மறுப்பு வாசிப்பு என்ற போதிலும் கூட……….. தெளிவான ஒரு கொள்கைக்காக………. அதாவது ஜைனக் கோட்பாடுகளை விளக்குவது என்ற கொள்கைக்காக எழுதப்பட்டது என்று துலங்குகிறது.

    கதைக்களன் வெகுவாக மாறுபடுகிறது. ஆனால் ஹிந்துக்கள் வெகுவாக மதிக்கும் கதாபாத்ரங்கள் தாறுமாறாகச் சீரழிக்கப்படுவதில்லை. அவர்களது உயர்வு மாறுபட்ட ஒரு கதைக்களன் வாயிலாகச் சொல்லப்படுகையிலும் அவர்களது நடவடிக்கைகள் முற்று முழுதாக இழித்துப் பழித்துப் பேசப்படுவதில்லை என்பது அவதானிக்கத் தக்கது.

    அந்த வரைக்கும் அது மதிப்பிற்குரியதே………… ஆயினும் மூல ராமாயணம் பேசும் ராமகதையை தன் வசம் பெயரளவுக்கு மட்டிலும் கொள்வதால்………… அது ராமகதையாடலின் ஒரு பகுதியாகக் கருதப்படாமல்………….ஜைனக்கோட்பாடுகளை அறிவதற்கான ஒரு தகவற் பெட்டகமாக மட்டிலுமே கருதப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

    ……………………………………………………………………………………………………………………………………………………………………………….

    அதே போன்று மூல ராமகதையை தாறுமாறாக்கி சீரழிக்கும் ஸந்தாலிக் கதை.

    இதன் பின்னணி என்ன என்பதும் இதன் காலம் என்ன என்றும் தெரியாது.

    ஸ்ரீ ஜடாயு அவர்கள்………… பொதுவிலே …………. நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணங்களின் மொழிநடை அவற்றின் இலக்கிய வீச்சு இவைகளை அவதானிக்கையிலே………. இவை 200 வருஷங்களுக்கு உட்பட்டவை என அபிப்ராயப்படுகிறார்.

    சதாவதானி டாக்டர் ஸ்ரீ கணேஷ் அவர்கள் இது போன்ற நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணங்களை அதே அலகீட்டின் பாற்பட்டு 500 வருஷங்களுக்கு உட்பட்டவை என அபிப்ராயப்படுகிறார்.

    ஹிந்துஸ்தானத்தில்…………..ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதற்காக அதையே குறிகிகோளாக வைத்து இயங்கும் மிஷ நரிகள் ஒவ்வொரு ஹிந்து நம்பிக்கையையும்………… ஹிந்து நூற்களையும் முனைந்து சீரழிப்பது……….. துஷ்ப்ரசாரம் செய்வது………. என்ற கதியில் இயங்கி வருகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே………….

    எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு

    என்பது திருவள்ளுவ நாயனாரின் வாக்கு.

    மூல ராமகதையை சீரழித்து தாறுமாறாகச் சமைக்கப்பட்ட ராம கதைகள்……….. இயற்றப்பட்ட காலம் எது…….. அதன் பின்னணி என்ன? அது இயற்றப்பட்ட சமயத்தில்…………. பரங்கிக் கும்பினிய மிஷ நரிகளின் பங்கு………. அந்த ப்ராந்தியத்தில் என்ன? இது போன்ற படைப்புகளுக்கு மிஷ நரிகளின் பங்களிப்பு என்ன?

    என்ற விஷயங்கள் விரிவான ஆய்வுக்கு உரியவை என்பது என் அபிப்ராயம்.

    இது போன்று மூல ராமகதையை சீரழிக்கும் ஒரு கதைக்களனை *****ராமகதை***** என்று அடையாளப்படுத்துவது வெகு நிச்சயமாக உள் நோக்கம் கொண்டது துலங்குகிறது.

    இப்படிப்பட்ட மதிப்பு மிக்க ராம கதாபாத்ரங்களை இழித்துப் பழித்துப் பேசும் ராமகதைகளையும் ஒரு ராமாயண வாசிப்பு என்று ஆதிகாவ்யமான மூலராமாயணத்துடன் ராமானுஜன் வ்யாசம் முன்வைப்பது கயமைத் தனமானது என்பது இச்சமயம் வாசகர்களுக்கு நிச்சயமாகத் துலங்கியிருக்கும்…………….

    இப்படியான ஒரு கருத்தாக்கத்தை முன்வைக்கும் ஒரு வ்யாசத்தில் ……………….

    இப்படியும் கூட ஒரு விஷயம் சொல்லப்பட்டுள்ளது என்று ஆர் வி நிச்சயமாகப் பகிர மாட்டார்.

    அவர்தான் அண்ணனுக்கு ஜே. ராமானுஜனுக்கு ஜே…………… என்று முன்னாடியே தீர்மானம் செய்து விட்டாரே 🙂

    ராமானுஜன் வ்யாசமாக இருந்தால் என்ன? ராமாயணப்படைப்பாய்வு என்றால் என்ன?

    அவருக்கு வேண்டியதெல்லாம்……….. அவரது குதர்க்கத்துக்கு வேண்டிய பாயிண்டுகள் மட்டிலுமே…………

    அவருக்கு ஒரு முழுமையான சித்திரம் என்பது சர்வ நிச்சயமாகத் தேவையே இல்லை………….

    ஆனால் உண்மையை அறிய விழையும் ஒரு வாசகருக்கு ஒரு முழுமையான சித்திரம் நிச்சயமாகத் தேவை……….

    அதை என்னுடைய வ்யாசத் தொடர் நிச்சயமாகச் செய்திருக்கிறது.

  12. இதுவும் FAQ என்ற படிக்கு வினாக்களை எழுப்பி விஷயங்களை விளக்க முனையும் ஒரு நீண்ட உத்தரம். நீளத்திற்கு க்ஷமிக்கவும். மேற்கொண்டு சாரமில்லாமல் கதையாட விழைபவர்களுக்கு கீழ்க்காணும் பட்டியலின் எண் நெம்பர் இத்தனையைப் பாருங்கள் என்று குறிப்பிட எனக்கு சற்று எளிதாக இருக்கும். தட்டச்சி தட்டச்சி கை நோகாமல் இருக்கும். இன்னொரு நீள் பதிவிற்கு க்ஷமிக்கவும்.

    கண்டமேனிக்கும் ராமாயணக் கதையின் மீது குப்பை கூளங்களை அறிவு சீவித்தனம் என்ற படிக்கு கடாசும் விடலைகள் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கோஷ்டங்கள் அள்ளி வீசத்தான் வீசுவார்கள்.

    அதை மறுதலிக்க வேண்டுமானால் …………. ராமாயண நூற்களைப் பற்றியும் 300 ராமாயண வ்யாசம் பற்றிய புரிதல்களையும் FAQ என்ற படிக்கான குறுவினாக்களாக அமைத்து விட்டால் விதண்டாவாதங்களை ஓரளவிற்காவது குறைக்க முடியும் என்பது என் நம்பிக்கை.. நம்முடைய புரிதல்களை ஒட்டுமொத்தமாக அவதானிப்பதற்கு இப்போது பகிரும் FAQ உதவும் என்பது என் அவா.

    1. ராமாயண கதை பேசும் நூற்களுள் மூத்த நூல் என்று ஏதும் உண்டா? உண்டென்றால் அது யாது.

    ஆம் உண்டு. அது ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம். அக்கருத்து முறையான ஆய்வுக்கூறுகள், அதை விசாரித்தமை, அதன் மூலம் முடிபுகள் எட்டியமை ………….என்ற விஷயங்களை உள்ளடக்கி …………கிட்டத்தட்ட ஒரு நூறு வருஷங்களாக ஹிந்துஸ்தானத்தைச் சார்ந்த அறிஞர்கள் மற்றும் விதேசங்களைச் சார்ந்த அறிஞர்கள் போன்றவர்கள் எட்டிய ……….முறையான ஆய்வின் பாற்பட்டு எட்டிய ஒரு முடிபு.

    2. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூல் இயற்றப்படுவதற்கு முன் ராமகதை பேசப்பட்டுள்ளதா? அவற்றுக்கு ஆதாரங்கள் உண்டா?

    இரண்டு புரிதல்கள்.

    மிக விஸ்தாரமான ஒரு ராமாயண நூல் உண்டு என்பது மரபாளர்களின் தரப்பு.

    இந்தியவியலாளர்கள் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் இயற்றப்படுமுன்னர் அது பாணர்களால் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று அபிப்ராயப்படுகிறார்கள்.

    ஆனால் இரண்டும் நம்பிக்கை மற்றும் யூகங்கள் மட்டிலுமே. இரண்டிற்கும் மறுக்கவியலா ஆதாரங்கள் என்று ஏதும் கிடையாது.

    3. இப்போது கிட்டியிருக்கும் ராமகதை பேசும் நூற்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட நூல் எது?

    ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்.

    4. ராமானுஜனின் முன்னூறு ராமாயணங்கள், மூன்று வாசிப்புகள், ஐந்து உதாரணங்கள் வ்யாசத்தில் 300 ராமாயணம் என்று சொல்லப்படுகிறதே. அப்படி பட்டியல் ஏதும் உண்டா?

    இல்லை. அவரது வ்யாசத்தின் ஆரம்பத்திலேயே அதைத் தெளிவு படுத்தி விடுகிறார். கணக்கற்ற என்று சுட்டுவதை 300 என்ற எண்ணிக்கையை ஔபசாரிகமாக / சும்மனாச்சுக்கும் சுட்டி அவரது வ்யாசம் துவங்குகிறது.

    5. மூன்று வாசிப்புக்கள் என்னென்ன?

    ICONIC, INDEXICAL, SYMBOLIC

    6. ஐகானிக் என்ற நூலின் அடையாளம்?

    ஒரு நூலை ஒட்டி அமையும் இன்னொரு நூல் அச்சு அசலாக வேறொரு மொழியில் மொழியாக்கம் செய்யப்படுகையில் முன்னர் சொல்லப்பட்ட நூலின் கதைக்களனை அப்படியே உள்வாங்கி ………….. முன்னர் சொல்லப்பட்ட செய்யுட்களின் அதே பாவைகையில் பின்னர் சொல்லப்படும் நூலும் இயற்றப்பட்டு………… முன்னர் சொல்லப்பட்ட நூலில் உள்ள செய்யுட்களின் எண்ணிகையளவுக்கே பின்னர் சொல்லப்படும் நூலின் செய்யுட்களும் அமைவது ஐகானிக் என்று சொல்லப்படும்.

    7. ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலை ஒட்டி ஐகானிக் என்ற முறையில் வேறொரு நூல் இயற்றப்பட்டுள்ளதா?

    இல்லை.

    8. இண்டெக்ஸிகல் எனப்படும் அல்லது மறுவாசிப்பு எனப்படும் நூல் எத்தகையது?

    ஒரு மூல நூலை அடியொற்றி அதில் சொல்லப்படும் கதாபாத்ரங்களை கையாண்டு அதில் சொல்லப்படும் கதைக்களனை அப்படியே கையாண்டு………… ஆனால் நிகழ்வு விவரணைகளில் மாறுதல்களை உள்ளடக்கி ………… சொல்லப்படும் விதம் சொல்லப்படும் சூழல் போன்றவற்றில்……….. சொல்லப்படும் ப்ராந்தியத்தின் சூழல், மொழியழகு, சொல்லப்படும் காலகட்டத்து இலக்கியச் செறிவுகள், கவிதைச் செறிவுகள் இவற்றை உள்ளடக்கி இயற்றப்படும் நூல்.

    9. இது மூல நூல் என்றறியப்படும் நூல் ஒன்றுக்கு மாற்றுக் குறைந்ததா?

    இல்லை. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூலை மூல நூலாகக் கொள்கையில் அதற்கு பற்பல நூற்றாண்டுகள் பின்னர் இயற்றப்பட்ட நூற்கள்…………. அக்கால கட்டத்திய இலக்கியச் செறிவு……….. அவை இயற்றப்பட்ட காலகட்டத்திய புதிது புதிதான விருத்தப்பாக்கள் …… அந்தந்த ப்ராந்திய மொழியின் அழகியல்…….. ப்ராந்திய சூழல் போன்றவற்றை உள்ளடக்கி மூல நூல் என்ற ஒரு மிகவும் பழையதான என்றும் இளமையான ஒரு அழகிய செடியினை ஒட்டி அதனுடன் வளரும் ஒரு அழகு மிகுந்த ……… அதே போன்று என்றும் இளமை ததும்பும் மலர்ந்து விகஸிக்கும் அதீத குணாதிசயங்கள் கொண்ட இன்னொரு அழகிய செடி. ராமாயணப் பூந்தோட்டம் என்று ராமகதை பேசும் நூற்களை உருவகித்தால். மூலநூலான ஸ்ரீமத் ராமாயணம் என்ற மிகவும் புராதனமான ஆனால் என்றென்றும் இளமையான மலர்ந்து மணம் பரப்பும் அரிய குணங்களுள்ள ஒரு பொலிவான செடியினை மையமாக வைத்து அதனைச் சுற்றி அந்தப்பூந்தோட்டத்தில் மலர்ந்து மணம் பரப்பும் அழகிய செடிகள் மற்றைய மறுவாசிப்புகளான இண்டெக்ஸிகல் ராமாயணங்கள்.

    10. 300 ராமாயண நூல் வ்யாசத்தை எதிர்க்கும் தரப்பினைச் சார்ந்தவர்கள் இண்டெக்ஸிகல் என்ற படிக்கு இவ்வாறு வெவ்வேறு பாஷைகளில் இயற்றப்படும் நூற்களை எவ்வாறு அணுகுகிறார்கள்?

    300 ராமாயண நூல் வ்யாசத்தை எதிர்க்கும் தரப்பினைச் சார்ந்தவர்களில் இண்டெக்ஸிகல் என்ற படிக்கு இவ்வாறு வெவ்வேறு பாஷைகளில் இயற்றப்பட்ட உயர்வான நூற்களை ஆர்ஷ வசனம்………ஆன்றோர் வாக்கு என்று தலைமீது வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
    தமிழில் கம்பநாட்டாழ்வார் இயற்றிய இராமாவதாரம், ஹிந்தியில் கோஸ்வாமி துளசிதாசர் இயற்றிய ராமசரிதமானஸ், பாங்க்ளா, தெலெகு, கன்னடம், தாய்லாந்திய ராமாயணம் என மூல நூலை ஒட்டி இண்டெக்ஸிகல் என்ற படிக்கு இயற்றப்படும் ராமாயண நூற்களை 300 ராமாயண வ்யாசத்தை எதிர்க்கும் தரப்பினைச் சார்ந்தவர்கள் வெகுவாகக் கொண்டாடுகிறார்கள்.

    11. ஸிம்பாலிக் என்று சொல்லப்படும் மூன்றாவது வாசிப்பு எத்தகையது?

    ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் எனும் மூல நூலை உதாரணமாக அவதானிக்கையில்……..அதனுடைய கதாபாத்ரங்களை அப்படியே உள்வாங்கி……… ஆனால் மூல நூலில் சொல்லப்பட்ட கதைக்களனிலிருந்து வெகுவாக விலகி …………. மூல நூலின் கதைக்களனுடன் பெயரளவு ஒட்டி……….. அல்லது மூல நூலில் உயர்வாகச் சொல்லப்படும் கதாபாத்ரங்களை இழித்துப் பழித்து அவர்களை சீரழித்து சொல்லப்படும் ஒரு கதைக்களன் ஸிம்பாலிக் எனப்படும்.

    12. அப்படியானால் ஸிம்பாலிக் என்று சொல்லப்படும் எல்லா நூற்களும் மூல நூலையும் அதில் உயர்வாகச் சொல்லப்படும் கதாபாத்ரங்களை இழித்துப் பழிக்கும் நூற்களா?

    இல்லை.

    13. அப்படியானால் இதை எப்படிப் புரிந்து கொள்வது?

    ராமானுஜன் வ்யாசம் வெளிப்படையாகத் தெளிவு படுத்தாத………. ஆனால் அவர் சொல்லும் உதாஹரணங்கள் மூலமாக ………ராம கதை பேசும் ஸிம்பாலிக் நூற்களை இரு விதமாகப் பிரிப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

    அ, சித்தாந்தம் சார்ந்த ஆனால் மூல நூலின் கதாபாத்ரங்களை இழித்துப் பழிக்காத மறுப்பு வாசிப்பு :-

    ஸ்ரீ விமலசூரி மற்றும் அவரது கதைக்களனை ஒட்டிய ………… ஆனால்……..மூல நூலான வால்மீகி ராமாயணத்துடன் மாறுபடும் கதைக்களனை மையமாகக் கொண்ட ஜைன ராமாயண நூற்கள். இவை மூல நூலின் கதாபாத்ரங்களை உள்வாங்கி ஆனால் ஜைனக் கோட்பாடுகளை விளக்க வேண்டி அவற்றை மையமாக வைத்து ஆனால் மூல நூலில் உயர்வாகச் சொல்லப்பட்ட கதாபாத்ரங்களை இழித்துப் பழித்து செயற்படாத நூற்கள்.

    ஆ. (சித்தாந்தம் சார்ந்த ? ) ஆனால் மூல நூலின் கதாபாத்ரங்களை இழித்துப் பழிக்கும் மறுப்பு வாசிப்பு :-

    ஒரு சில ( எல்லாம் அல்ல) நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் ராமாயண கதாபாத்ரங்களை உள்வாங்கி ஆனால் மூல ராமாயண நூலில் சொல்லப்பட்டுள்ள உயர்வான கதாபாத்ரங்களை இழித்துப் பழிக்கும் தன்மையவை. மேலும் இப்படிப்பட்ட ஒரு படைப்பு ஹிந்து மதத்தை இழித்துப் பழிப்பதை கொள்கையாகவும் செயற்பாடாகவும் கொண்ட மிஷ நரிகளின் இயக்கத்தால் சமைக்கப்பட்டவையா? அப்படிப்பட்ட பரங்கிக் கும்பினிய மிஷ நரிகளின் ஆப்ரஹாமிய சித்தாந்தத் தாக்கம் உள்ளவையா? அவற்றின் பங்களிப்புகளால் உருவாகியவையா என்பது ஆய்வுக்கு உரியது.

    14. மேற்கண்ட இருவிதமான ஸிம்பாலிக் படைப்புகள் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்துக்கு மட்டிலும் உரித்தவையா?

    இல்லை.

    இல்லை என்பது மட்டுமல்ல.

    கவலைக்கு உரிய தெளிவான உள்நோக்கமுள்ள இப்படிப்பட்ட ஸிம்பாலிக் படைப்புகள் ஒவ்வொரு ஹிந்து நூற்களுக்கும் எதிராகக் கிளம்பியவை.

    உதாஹரணத்திற்கு ஸிம்பாலிக் மஹாபாரத மறுப்பு வாசிப்புகளில் கௌரவர்களை கதாநாயகர்களாகவும் பாண்டவர்களை வில்லன் களாகவும் சித்தரிக்கும் முயற்சி. மஹிஷாசுரன் கதையில் மஹிஷாசுரனை நல்லவனாகவும் மஹிஷாசுரமர்த்தினி எனும் தேவியை விபசாரியாகவும் சித்தரிக்கும் கயமைத் தனம்.

    15. இருவிதமான இப்படிப்பட்ட ஸிம்பாலிக் நூற்களை எப்படி உருவகிக்கலாம்.

    மூல நூலில் இருந்து வேறுபடும் கதைக்களனைக்க் கொண்ட சில ஜைன ராமாயண நூற்களை (எல்லம் அல்ல. பல ஜைன ராமாயணங்கள் மூல நூலின் கதைக்களனுடன் ஒத்துச்செல்பவை என்பதறிக) போன்ற மறுப்பு வாசிப்புக்கள் மூல நூல் என்ற அழகிய செடியுடன் ஒட்டி வளரும் வேறு விதமான அழகான மணம் கொண்ட அல்லது மணமில்லாது ஆனால் வேறு வித குணாதிசயங்கள் கொண்ட பயனுள்ள செடி. ராமாயணம் எனும் பூந்தோட்டத்தில் காணப்படும் பற்பல மணங்கள் உள்ள அல்ல குணங்கள் கொண்ட செடிகளுடன் காணப்படும் மற்றொரு பொலிவான செடி.

    மூல நூலில் இருந்து வேறுபடும் கதைக்களனைக் கொண்ட ஆனால் மூல நூலில் உயர்வாகச் சொல்லப்படும் கதாபாத்ரங்களை இழித்துப் பழிக்கும் தன்மையைக் கொண்ட மறுப்பு வாசிப்புக்கள் ………… அது ராமாயணப் பூந்தோட்டமாகட்டும்……. மஹாபாரதப் பூந்தோட்டமாகட்டும்………..அல்லது தேவியின் கதைகளைப் பேசும் பூந்தோட்டமாகட்டும்………. அவற்றினூடே ……….ஒவ்வொன்றாக அப்பூந்தோட்டங்களை அழித்தொழிப்பதன் மூலம்………… எண்ணற்ற மணம் பரப்பும் அருமையான குணாதிசயங்கள் அடங்கிய மலர்ந்து பூத்துக்குலுங்கும் ………… ஒட்டுமொத்த ஹிந்துமதம் எனும் ஒரு பெரும் வனப்பரப்பையே அழித்தொழிக்கும்…………… பெரும் பேரழிவினை வித்தாகக் கொண்ட ஒட்டு மொத்த மானுட அழிவினையும் பன்மைத்துவத்தையும் அழிக்கும் வல்லமை கொண்ட ……….. கொடுமையான விஷம் பொருந்திய………… ஆனால் செடியுடன் வளர முயற்சிக்கும் …………… களைகள்.

    16. 300 ராமாயண ஆதரவாளர்கள் தரப்பிலான செயற்பாடுகள் எத்தகையவை?

    நிறைய பொய்க்கருத்துக்களால் நிரம்பியவை.

    17. உதாரணங்களாக?

    ராமாயணப் பூந்தோட்டத்தில் மணம் பரப்பும் செடிகளூடே அவற்றை அழிக்க வேண்டி தீய நோக்கத்துடன் விதைக்கப்பட்ட களைகளைப் பற்றி வாயே திறவாது மௌனம் சாதித்தல். அல்லது ஒரு படி மேலே சென்று………. ராமானுஜன் வ்யாசம் சித்தரிக்க முனைவது போல ………….இப்படிப்பட்ட விஷ வித்தாக செடிகளினூடே முளைத்தெழும் மணமிலா குணமிலாக் களைகளையும் ……………மணம் பரப்பும் குணமுள்ள செடிகளாக உருவகம் செய்து பொது விவாதத்தை மயக்க முனைதல்.

    மறுப்பு வாசிப்புகளாக அன்றி மறு வாசிப்புகளாக ராமாயணப் பூந்தோட்டத்தில் மலர்ந்து குலுங்கும் வெவ்வேறு பாஷைகளால் ஆன வெவ்வேறு மணம் பரப்பும் குணாதிசயங்கள் கொண்ட மறு வாசிப்புச் செடிகளையும், மணம் கொண்ட அல்லது கொள்ளாத ஆனால் அதீத குணம் கொண்ட முதல் வகை ஸிம்பாலிக் செடிகளையும் கூட……….. 300 ராமாயண ஆதரவாளர்கள் எதிர்க்கிறார்கள் அல்லது அவற்றை மாற்றுக்குறைவானதாகச் சொல்லுகிறார்கள் ……………என்று *****துஷ்ப்ரசாரம்*****செய்வது.

    300 ராமாயண வ்யாசம் சொல்லாத நல்ல விஷயங்களை அவை சொல்லுவதாகக் கதைப்பது அவை சொல்ல வரும் மிகவும் தீயதான விஷயங்களை முழுப்பூசணிக்காயை கபள சோற்றில் மறைப்பது போலச் செயல்படுவது இவையும் 300 ராமாயண வ்யாசத்தின் ஆதரவாளர்களின் செயற்பாடுகள்.

    300 ராமாயண வ்யாசத்தின் எதிர்ப்பாளர்கள் 300 ராமாயண வ்யாசத்தின் நிறைகளையும் குறைகளையும் அவதானிக்கும் போது கூட ………….. 300 ராமாயண வ்யாச எதிர்ப்பாளர்கள் இந்த வ்யாசத்தை முற்று முழுதாக நிராகரிப்பதாகப் பொய் சொல்லுவது.

    18. 300 ராமாயண வ்யாச ஆதரவாளர்களின் இன்னொரு முக்யமாக அவதானிக்கப்பட வேண்டிய பொய் :-

    300 ராமாயண வ்யாச ஆதரவாளர்கள் மிகச் சாதுர்யமாகப் பொய் பேசக்கூடிய வல்லமையாளர்கள்.

    நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணம் என்பது இவர்கள் சாதுர்யமாக அரசியல் செய்வதற்கு ஏற்ற ஒரு களன்

    19. நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணங்களை வைத்து 300 ராமாயண வ்யாச ஆதரவாளர்கள் எப்படி அரசியல் செய்வார்கள்?

    நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணங்கள் மூன்று வகையாக அமைந்திருக்கலாம். மணமும் குணமும் பரப்பும் மிக உயர்வான பொலிவான செடிகளுள் ஒன்றாக அவை அமையலாம். மணம் உள்ள அல்லது இல்லாத ஆனால் அதீத குணம் உள்ள முதல் வகை ஸிம்பாலிக் செடியாக அவை அமையலாம். மணமும் இல்லாத குணமும் இல்லாத தீய நோக்கம் உள்ள இரண்டாவது வகையான விஷம் பொருந்திய ஸிம்பாலிக் களையாகவும் அவை அமையலாம்.

    உண்மை அப்படி இருக்கையில் 300 ராமாயண வ்யாச ஆதரவாளர்களாகப்பட்டவர்கள் தங்கள் எதிர்தரப்பினரின் கருத்துக்களை சாதுர்யமாக சிதைப்பதாக எண்ணிக்கொண்டு …………. 300 ராமாயண எதிர்ப்பாளர்கள் அனைவரும் எல்லா நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணங்களையும் களைகளாக அவதானிப்பதாகக் கூசாது பொய் சொல்லுவார்கள்.

    ஆனால் 300 ராமாயண வ்யாச எதிர்ப்பாளர்கள் ஒவ்வொரு ராமகதையையும் மூல நூல் என்ற ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சொல்லும் ராமகதை என்பதை அலகீடாகக் கொண்டு அதனுடன் ராமாயணப்பூந்தோட்டத்தில் வளர விழையும் செடியா அல்லது அந்தப்பூந்தோட்டத்தை அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டு அங்கு விதைக்கப்பட்ட விஷம் பொருந்திய களையா என்று தரம் பார்த்தே ………..

    நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணம் என்று மட்டிலும் அல்ல……….. ஒவ்வொரு ராம கதை பேசும் நூற்களையும் அவதானிப்பார்கள்.

    சுருக்கமாக………… 300 ராமாயண வ்யாசத்தின் ஆதரவாளர்களது செயற்பாடுகள் கருத்தாக்கங்களால் அன்று வெற்று கோஷங்களால் கட்டமைக்கப்பட்டவை…….. பொய்களால் கட்டமைக்கப்பட்டவை……….. தீய நோக்கத்தால் கட்டமைக்கப்பட்டவை………. அல்லது தீய நோக்கம் அன்றி போலியான மேட்டிமை வாதம் மற்றும் அறியாமையால் கட்டமைக்கப்பட்டவை.

    300 ராமாயண வ்யாசத்தின் எதிர்ப்பளர்களது தரப்பு பெரும்பாலும் ஆழ்ந்த விசாரங்களால் தரவுகளுடன் கட்டமைக்கப்பட்டவை.

    20. 300 ராமாயண வ்யாசத்தின் நிறைகள் யாவை?

    அ. பலராலும் பேசப்படும் ஒரு பொதுவான தொன்மையான கதையை புரிந்து கொள்ள அதை மூன்று வித வாசிப்புகளாக மிகத் தெளிவாக விளக்கியமை 300 ராமாயண வ்யாசத்தின் அருமையான செயற்பாடு.

    ஆ. அந்த விளக்கங்களை செம்மையாக புரிந்து கொள்வதற்கு ஐந்து விதமான உதாரணங்களை விரிவாக விவரிப்பது இதன் அருமையான செயற்பாடு.

    21. அப்படியானால் 300 ராமாயணத்தில் உள்ள மிகப்பெரும் குறை?

    அ. அது ராமாயணமாக இருந்தாலும் சரி………. எந்த கதை பேசும் வேறொரு நூலாக இருந்தாலும் சரி………. அவை எல்லாவற்றுக்கும் வித்தாக தரவின் பாற்பட்ட ஒரு மூல நூல் இருப்பது என்பதை மறுதலிப்பது.

    ஆ. மூன்று விதமான வாசிப்புக்களை வெகு அழகாக விவரித்த பின்னரும்………மூல நூல் சொல்லும் வெகுவாக அறியப்படும் கதைக்களனுடன் வேறுபடும்……….மூல நூல் உயர்வாகப் பேசும் கதாபாத்ரங்களை இழித்துப் பழித்துப் பேசும்…….. காலத்தினால் பன்னூற்றாண்டுகள் பிற்பட்டஒரு நூலை…….. தொன்மையான மூல நூலுடன் ஒரே தராசில் நிறுத்த முனையும் அவலம் ராமானுஜன் வ்யாசத்தின் வெளிப்படையான நகை முரண்.

    22. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை 300 ராமாயண வ்யாச எதிர்ப்பாளர்கள் வஹாபியர்களைப் போன்று ஒரு இறுக்கமான சட்டகத்தினுள் அடைக்க முற்படுகிறார்களா?

    இல்லை.

    ஆனால் 300 ராமாயண ஆதரவு கோஷ்டி விடலைகளுள் சிலர் அவ்வாறு அடைக்க முயலுவதாகக் கூசாமல் நிச்சயமாகப் பொய் சொல்லுவார்கள்.

    மிக உயர்வான சில கருத்தாக்கங்களை சொல்லுவதற்காக பல கதாபாத்ரங்களை உள்ளடக்கி சில கதாபாத்ரங்களை உயர்வான் குணங்களைக் கொண்ட (அல்லது இக்காலத்தில் ஏற்கவொண்ணா சில வேண்டாத நிலைப்பாடுகளைக் கொண்டவர்களாகவும் கூட) நாயகர்களாகவும் சில கதாபாத்ரங்களை தீய மற்றும் சில நல்ல குணாதிசயங்களின் உருவகங்களாகவும் சில கதாபாத்ரங்களை மிகப்பல தீய குணாதிசயங்களின் உருவகங்களாக உருவகப்படுத்தியபடிக்கு ஒரு முக்யமான அலகீடு ஆதி காவ்யமான ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூல் என்பது மட்டிலுமே 300 ராமாயண எதிர்ப்பாளர்களின் தரப்பு.

    மூல நூலின் கதைக்களனை ஒட்டி இண்டெக்ஸிகல் முறையில் இயற்றப்பட்ட வெவ்வேறு பாஷைகளில் இயற்றப்பட்ட அனைத்து நூற்களையும் 300 ராமாயண வ்யாச எதிர்ப்பாளர்கள் தலைமீது வைத்து ஆர்ஷ வசனம் என்று கொண்டாடுகிறார்கள் என்பது முக்யமாக அவதானிக்க வேண்டியது.

    ஒட்டுமொத்தமாக ராமகதையைச் சீரழிப்பதை கொள்கையாகக் கொண்ட கதைக்களன் களை மட்டிலுமே ராமகதையாகச் சித்தரிப்பதை 300 ராமாயண வ்யாச எதிர்ப்பாளர்கள் எதிர்க்கிறார்கள்.

    அதுமட்டுமன்று ராமகதை மட்டுமின்றி ஒவ்வொரு ஹிந்துப் புராணக் கதைகளையும் போலி மேட்டிமைவாதம் மற்றும் அறிவு சீவித்தனம் என்ற கோஷ்டங்களின் பாற்பட்டு சீரழிப்பது என்பதனை மையமாகக் கொண்டு ஒரு பெரும் இயக்கமாகவே ………..ஆப்ரஹாமிய ஆதரவாளர்கள் இயங்குகிறார்கள் என்பதும் முக்யமாக அவதானிக்க வேண்டியது.

    300 ராமாயண வ்யாசம் சார்ந்து பொய்கள் ………. மிகைப்படுத்தல்கள் போன்ற யுக்திகளை ……… 300 ராமாயண கோஷ்ட விடலைகள் பொழுது போக்காக கையாள விழைகையில் கை நோக அவர்களுக்கு மெனக்கெட்டு பதிலளிப்பதற்குப் பதிலாக ……….. சம்பந்தப்பட்ட பல விஷயங்களை………. புள்ளி புள்ளியாக பட்டியலிட விழைந்தது இந்தப் பதிவின் நோக்கம்………

    வெற்று கோஷ்டங்கள் எழுப்புபவர்களுக்குப் பதிலாக பாயிண்டு ஸங்க்யை இத்தனையைப் பார் என்று சொல்ல சற்று எளிதாக இருக்கும்.

    ஸ்ரீ ராம ஜெயம்.

  13. விளக்குகிறேன். ஆனால் அதற்கு முன், ஜடாயு எழுதியதாக அடைப்புக்குறிகளுக்குள் போடப்பட்டதில், சம்சயம், கேழ்க்கிறார்கள் என்ற இரு சொற்கள் இருக்கின்றன. ஜடாயு, இவ்விரு சொற்களையும் எழுதினாரா?

    அடைப்புக்குறிகளுக்குள் போடப்படும் பிறரது சொற்றொடர்கள், அப்படியே போடப்படவேண்டும் என்பது விதி. இதுவே தர்மம். அப்படிப்போடும்போது, எச்சொல்லையும் மாற்றுவது குற்றம். ஏனெனில், மாற்றும்போது, அவரின் புகழுக்கோ, கருததுக்கோ கலங்கம் வரலாம். நீங்கள் மாற்றியிருக்கிறீர்கள் எனப்து என் முடிவு. காரணம், ஜ்டாயு இவ்விரு சொற்களையும் போட மாட்டார். சமஸ்கிருதத்தை தன் கட்டுரைகளில் வலிந்து திணித்ததாக நான் இதுவரை கண்டதில்லை. தமிழைப் பிழையாக எழுதுவது கிடையாது. இத்தளத்தாசிரியர்களுள் ஒருவரே தமிழ்ப்பிழை போட்டால், வேலியே பயிரை மேய்ந்ததாகும் என்று அவருக்குத் தெரியும்.

    அதே வேளையில் அடைப்புக்குறிகளை நீக்கிவிட்டு நீங்கள் போட்டிருந்தால் மாற்றலாம். மொழி விதிப்படி சரியே.

    எனவே உண்மையைக்கூறுக. அல்லது எங்கிருந்து எடுத்துப்போட்டீர்கள் என்பதைச் சொன்னால் கூட போதும். அங்கு போய் பார்த்துக்கொள்வேன்.

    பின்னர் நீங்கள் கேட்டவைகளுக்குப் பதிலகள் போடுகிறேன்.

  14. திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பது எப்படி?

    ஆர் வி அவர்கள் ராமானுஜனுக்கே அல்வா கொடுப்பது மாதிரி.

    ராமானுஜன் வ்யாசத்தின் ஒரு பகுதியின் உரல் முன்னமேயே கொடுக்கப்பட்டுள்ளது.

    அவருடைய விசாரங்களை முழுமையாக விசாரிக்கும் இன்னொரு முக்யமான உரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    https://300ramayanas.wikispaces.com/

    இப்போது மேதகு ஆர் வியார் அவர்கள் எப்படியெல்லாம் கதையளந்திருக்கிறார் என்று பார்ப்போம். RV’s Quote and Ramanujans Unquote

    https://300ramayanas.wikispaces.com/Key+Points+and+Summary

    Quote :- RV :-

    “””””””””””””” ராமகதைக்கு ஒரு அடிப்படை வடிவம் இருக்கிறது. அந்த ராமகதை அனேகமாக வால்மீகி எழுதிய கதையை ஒட்டி இருக்கிறது. “”””””””””””

    இது 300 ராமாயண வ்யாசத்தின் கருத்தாக்கங்களை எதிர்க்கும் எங்களைப் போன்றவர்களுடைய நிலைப்பாடு. ஆனால் ராமானுஜன் வ்யாசம் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாடு.

    Unquote :- Ramanujan’s Essay :-

    “”””””””””””””I have come to prefer the word tellings to the usual terms versions or variants because the latter terms can and typically do imply that there is an invariant, an original Ur-text………..no text is original, yet no telling is a mere retelling – and the story has no closure, although it may be enclosed in the text.”””””””””””””””””””””””

    Ramanujan corrupts the Rama’s Story by implying :-

    No texi is original…………………. Even if not the detailed contents on which there are differences amongst scholars…….. there is absolute agreement amongst them out of 100 years of research….. that the various versions of Shrimad Valmiki Ramayana…………… contains a common story line. Thats an undisputed fact.

    RV says Rama’s story has a basic structure :- We too agree that. And we along with Shri RV agree that the same is on the basis of the Adi Kavya Shrimad Valmiki Ramayana…………. But Ramanujan’s Essay says that Rama’s story has no closure……….by which he means any story comprising of charecters contained in the Adi kavya………. is and if reproduced in another ***version****………… nope………. another telling of Ramayana……… that breaches the basic structure of Adi kavya………… that too carries equal weight according to Ramanujan. Example Santhali Ramayana as explained by Ramanujan in his 5th example.

  15. மேதகு ஆர் வியார் ராமானுஜனுக்கு மேற்கொண்டு எப்படி அல்வா கொடுக்கிறார் என்பதனையும் கூட அவதானிக்கத் தான் வேண்டும்.

    Quote RV :-

    “””””””””””””” அனேக இந்தியர்களுக்கு ராமாயணத்துக்கு ur-text இல்லாமல் இருக்கலாம், ஆனால் ராமகதைக்கு ஒரு அடிப்படை வடிவம் இருக்கிறது. அந்த ராமகதை அனேகமாக வால்மீகி எழுதிய கதையை ஒட்டி இருக்கிறது. ஆனால் இந்தப் பொதுவான அடிப்படை வடிவம் என்பது தாய்லாந்துக்காரர்களுக்கு பொருந்தவே பொருந்தாது. “””””””””””” நம்முடைய தனிப்பட்ட ur-text – அனேகமாக வால்மீகியை ஒட்டித்தான் இருக்கிறது. ***********புதிதாக பௌமாசார்யாவையோ ராமகியனையோ படிக்கும்போது இது நம் மனதில் இருக்கும் ur-text-இடம் இருந்து எப்படி எப்படி வேறுபடுகிறது என்று நம் அடிமனதில் ஒரு எண்ண ஓட்டம் இருப்பது இயல்புதான்.””””””””””””””””””

    ஸ் ஸப்பா………… கண்ண சுத்துது……….. ஆர் வி ஸ்வாமின் பாவம் இந்த உர்ருக்கு தயவு செய்து கருணை கூர்ந்து முக்தி கொடுத்து விடுங்கள். உர்ரென்ற சமாசாரமெல்லாம் 300 ராமாயண வ்யாசத்தை எதிர்க்கும் எங்களைப் போன்றோர்களது. உங்களைப் போன்று ராமானுஜன் சொன்னதையும் சொல்லாததையும் அவர் தலையில் கட்ட விழையும் அன்பர்களுக்கு அது உடம்புக்கு ஆகாது.

    Unquote :- Ramanujan’s Essay :-

    ************I have come to prefer the word tellings to the usual terms versions or variants because the latter terms can and typically do imply that there is an invariant, an original Ur-text”**************

    Ramanujan Categorically denies not just Ur-text he even refuse to recognise the various versions of Ramayana as version……….. he calls them as tellings………as against a long line various versions of Ramayana composers in unequivocal terms very clearly expresses the fact that they compose their version of Ramyana taking cue from the Adi Kavya Shrimad Valmiki Ramayana………..composed by Adi kavi Valmiki muni.

  16. the last sentence may please be read as :-

    Ramanujan Categorically denies not just Ur-text he even refuse to recognise the various versions of Ramayana as version……….. he calls them as tellings………as against a long line of various versions of Ramayana composers themselves who say in unequivocal terms very clearly expressing the fact that they compose their version of Ramyana taking cue from the Adi Kavya Shrimad Valmiki Ramayana………..composed by Adi kavi Valmiki muni.

  17. க்ருஷ்ணகுமார் ஸ்வாமின்,

    சொன்னதையே சொல்கிறீர்களே தவிர நான் கேட்பவற்றை அனேகமாக (முழுமையாக அல்ல) கண்டுகொள்ளாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறீர்களே? எனக்கு வேலை இருக்கிறது ஐயா…

    சரி நீங்கள் பதில் சொல்லி இருக்கும் கேள்வியைப் பற்றியாவது பேசுவோம். (அதிலும் தலைவலி ஆச்ரயம், ருஜூ என்று கொலைவெறியோடு அலைகிறீர்கள்.)

    // நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் பேசுபவர்களுக்கு ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூல் அறிமுகம் கூட இல்லாமல் இருக்கலாம்…………… அவை அந்த நூலிலிருந்து காலத்தால் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டு பின்னால் வந்தவையாகவும் கூட இருக்கலாம்………. ஆனால் வெகு நிச்சயமாக அவர்களுக்கு ராம கதை என்பது நிச்சயமாக அறிமுகமான ஒன்று தான்………..அதற்கு நிச்சயமாக ஒரு ஆச்ரய ஸ்தானம் உண்டு………… LOCUS ……….. அது அந்த ப்ராந்திய பாஷையில் அறிமுகமாயுள்ள ஒரு ராமாயணமாகக் கூட இருக்கலாம்……….. அந்த ப்ராந்திய ராமாயணத்துக்கு ஆச்ரயம் எது?

    வேறொன்று? அதற்கு ஆச்ரயம் வேறொன்று. அதற்கு ஆச்ரயம்?………….இப்படியான ஆச்ரயச் சங்கிலி முடிவடையும் இடம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் தான்…………. அதாவது ஆதாரங்களின் பாற்பட்டு………… சான்றுகளின் பாற்பட்டு…………

    கற்பனையின் பாற்பட்டு அல்ல.

    இந்தியவியல் அறிஞர்கள் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் எழுதப்படுவதற்கு முன்னர் பாணர்கள் ராமாயணம் இயற்றியிருக்க வேண்டும் என்று அபிப்ராயப்படுகிறார்கள். ஆனால் மறுக்க முடியாத சான்றுகளின் பாற்பட்டு அப்படி ஒரு ராமகதை ……….. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்துக்கு முந்தைய ராமகதை என்று ஏதும் இன்று வரை கிட்டவில்லை…………..அது ஒரு அனுமானம் மட்டிலுமே. சான்றுகளால் ருஜுவாகாத அனுமானம்.
    //

    அப்படி எல்லாவற்ற்றுக்கும் மூலம் உண்டென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரியும் உண்மை என்பதுதான் உங்கள் வாதம் என்றால் வால்மீகி ராமாயணத்துக்கும் மூலம் இருக்க வேண்டும். கிடைக்கவில்லை என்பதால் அது அனுமானம் ஆகிவிட முடியாது. காலத்தால் மூத்தது என்பதற்கும் மூல காவியத்துக்கும் என்ன வித்தியாசம் என்பதை நிறைய விளக்கி இருக்கிறேன், படித்துப் பாருங்கள்…

  18. அன்பின் ஆர் வி உங்களைக் குறை கூறுவதற்காக உங்களது கருத்துக்களில் உள்ள தோஷங்களை அடுக்குவதாக எண்ணாதீர்கள். நீங்கள் சொல்லும் பல விஷயங்கள் யதார்த்தத்துக்கு புறம்பானவை என்பதனை யதார்த்தத்தில் உள்ள ராமானுஜன் வ்யாசம் மற்றும்

    \\\ பாடாந்தரங்களுக்குள் 33 சதவிகிதம் வேறுபாடு. 37 சதவிகிதம்தான் வால்மீகி எழுதியது. ஆனால் சில பல ஆண்டுகளுக்கு முன் – நூறாண்டு கூட இருக்காது – அறிஞர்களால் தொகுக்கப்பட்ட பிரதி ur-text! \\\\ நம் மனதில் இருப்பது பல பாடாந்தரங்கள் அடுக்குகளாகப் படிந்த ஒரு கதை. \\\\\

    மீண்டும் Ur-Text. சலிப்பாக இருக்கிறது ஆர் வி எதற்காக இப்படி படுத்துகிறீர்கள்? சொற்களின் அதற்குண்டான பொருட்களை சகட்டு மேனிக்கு எதற்காக சிதைக்க விழைகிறீர்கள்?

    https://tamilhindu.com/2014/01/ramayana-research-in-birds-view-3/

    1. பல பாடாந்தரங்களை பரிசீலனை செய்தபடிக்கு பதிப்பாசிரியர் குழுவினர் சர்வ சம்மதத்துடன் இரண்டு பாடாந்தரங்களை மட்டிலும் அங்கீகாரம் செய்தனர். உத்தர மற்றும் தக்ஷிண (Northern, Southern). இந்த இரண்டு பாடாந்தரங்களும் ஒன்றுடன் ஒன்று பெருமளவு வேறு பட்டாலும் தங்களிடையே பொதுவிலான ராமாயண கதையை பாதுகாத்து வைத்திருந்தது அவதானிக்கப்பட்டது. இந்த பொதுமையான குணாதிசயம் தான் மூலராமாயணம் (Ur-Ramayana) என்ற நூல் இந்த பாடாந்தரங்களின் ஆதாரமாக இருக்கவேண்டும் என்ற முக்யமானதொரு முடிபை எட்ட ஆய்வாளர்களுக்கு ஹேதுவாக இருந்தது என்றால் மிகையாகாது.

    2. நமக்குக் கிடைத்த புராதனமான ஏட்டுச்சுவடி ப்ரதி பொ.யு. 1020 என்ற தொன்மையுடையது. தக்ஷிண பாரதத்தில் இந்த நூலுக்கான வ்யாக்யானங்கள் இதற்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பின் படைக்கப்பட்டன. ஆனால் மூல காவ்யம் இதற்கு சற்றேறக்குறைய 1500 வருஷங்கள் முன்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தொன்மையான ப்ரதிக்கும் முந்தைய ப்ரதி ஏதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் அப்படியேதும் ஒரு ப்ரதி இருக்குமானால் அது அடுத்த க்ரிடிகல் எடிஷனில் கையாளப்பட வேண்டும் என பதிப்பாசிரியர் குழுவினர் கருத்துத் தெரிவிக்கின்றனர். பதிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கையில் மேற்கொண்டு கிட்டிய சுவடிப்ரதிகளையும் – அது நம்பகத்தன்மையும் முழுமையும் வாய்ந்ததாகக் கருதப்பட்டால் – அவை பதிப்புப்பணியில் கையாளப்பட்டன என்பதனை சில உதாரணங்களுடன் விளக்குகின்றனர்.

    3. அறுதியாக தக்ஷிண பாடாந்தரமே மூல ராமாயணத்தின் தொன்மை மற்றும் வடிவத்தை அப்படியே பாதுகாத்துள்ளது என்பதாலும் மாறுதல்களுக்கு உட்படாததாலும் பஹு சம்மதமான (பலராலும் ஏற்கப்படும்) ப்ரதி (Vulgate) எனக்கொள்ள வேண்டும் எனவும் ஒருமனதாகப் பதிப்பாசிரியர் குழுவினர் கருதுகின்றனர்.

    ……………………………………………………………………………………………………………………………………………….

    1. பாடாந்தரம் என்பது ……….. ஒரே நூலின் வெவ்வேறு Recension களைச் சுட்ட விழையும் ஒரு சொல். நீங்கள் வெவ்வேறு பாஷாந்தரங்களில் அமைந்த ராமாயண நூற்களையும் கூட பாடாந்தரம் என அடுக்க விழைகிறீர்கள். இது சரியல்ல.

    2. மிக சமீபத்தில் சில தசாப்தங்கள் முன்னர் (1960-75) பதிப்பிக்கப்பட்டது ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலின் க்ரிடிகல் எடிஷன் பதிப்பு. அது படைக்கப்பட்டது பெரும்பாலும் எல்லோராலும் ஏற்கப்பட்ட ஸ்ரீமத் வால்மீகி ராமாயண என்ற நூலின் தக்ஷிண பாடாந்தரத்தை ஒட்டி. தக்ஷிண பாடாந்தரத்தில் அமைந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் மீதான வ்யாக்யானாதிகள் மிகவும் புராதனமாகக் கண்டெடுக்கப்பட்ட நேபாள நூலகத்தின் பொது யுகம் 1020ம் வருஷத்தைச் சார்ந்த ப்ரதிக்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் படைக்கப்பட்டவை. க்ரிடிகல் எடிஷன் ப்ரதி தக்ஷிண பாடாந்தரம் என்ற பாடாந்தரத்தை ஒட்டி சமைக்கப்பட்டால் அது 1000 வருஷம் பழமையானது. Ur-Ramayana……..Ur-text………. Vulgate Version………. இவையெல்லாம் வெவ்வேறு விஷயங்களை விளக்கும் சொற்கள்…….. The one Ramayana which is the source of Various other Ramayanas is supposed to be the Ur-Ramayana………The one text which is supposed to be the Source of Various other Texts is Ur-text ( in general)..And there is no such specific text that has been identified by the researchers as a source text for all ramayanas……. only the basic story line……. the basic structure as you rightly call is identified as Ur-Ramayana by scholars and Ramanujan categorically denies Ur-Ramayana )…….. in Ramanujan’s essay …… he uses Ur-Text to mean Ur-Ramayana………..

    நீங்கள் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் சமீபமாகப் பதிக்கப்பட்ட க்ரிடிகல் எடிஷன் பதிப்பு அல்லது வேறு ஏதோ ஒரு பதிப்பை யாரோ Ur-text என்று கருதுவதாக ஒரு கருத்தினை முன் வைக்க விழைகிறீர்கள். அப்படியான கருத்து யாருடையதும் அல்ல. அது உங்கள் கற்பனை மட்டிலுமே.

    3. அறிஞர்கள் தக்ஷிண பாடாந்தரத்தை அடியொற்றி பதித்த (அதிலும் சிலவற்றை கழித்துக் கட்டியிருக்கிறார்கள்) க்ரிடிகல் எடிஷன் பதிப்பை யாரும் Ur-text என்று சொல்லவில்லை. க்ஷமிக்கவும். அதை அவர்கள் Vulgate Version அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். பஹுஸம்மதமான ப்ரதி. பலராலும் ஏற்கப்படும் ப்ரதி.

    4. நான் என்னுடைய தரப்பினை மிகத் தெளிவாக மரபார்ந்த நம்பிக்கைகளால் ஆன ஒரு தரப்பு என்றே தான் அடையாளப்படுத்தியிருக்கிறேன். அது பிற்போக்குத் தரப்பு என்று சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு தரப்பைச் சார்ந்த எனக்கு என்னுடைய தரப்பிற்கு மாறுபடும் தரப்பினை காய்த்தல் உவத்தல் இல்லாமல் பகிரும் ஒரு முறைமை எனக்கு இருக்கிறது. ஆனால் தங்களுடைய கருத்துக்கள் காய்த்தல் உவத்தலில்லாமல் பகிரப்படாமல் ……….. Cherry picking முறையில் உங்களது கருத்தாக்கங்களுக்கு வலு சேர்ப்பவற்றை மட்டிலும் பகிரக் கூடியவையாக அமைந்திருக்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட ஒரு தரப்பு முற்போக்கு என்று முன்னிறுத்தப்படுகிறது.

    5. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 37 சதமானம் தான் அவர் எழுதியது என்பது ஸ்ரீ ப்ராக்கிங்க்டன் அவர்களது தரப்பாக இருக்கலாம். ஆனால் இந்தியவியல் அறிஞர்களின் தரப்புகளில் ஒரு தரப்பு தான் அவருடைய தரப்பு. ராமாயண மஹாகாவ்யம் மற்றும் மொழியியல் போன்றவற்றில் ஆழ்ந்த புரிதல் உள்ள க்ரிடிகல் எடிஷன் ஆசிரியர்கள் பெருமளவு எண்டார்ஸ் செய்துள்ளது டாக்டர் ஸ்ரீ ஜேக்கபி அவர்களது கருத்தினையே என்பதனை அவதானிக்கவும். மேலும் அவரால் எழுதப்பட்ட 37 சதமானம் என்பது வால்மீகி ராமாயண நூலின் கதைக்களனை உள்ளடக்கியுள்ளதா இல்லையா என்பது தான் அவதானிக்க வேண்டிய விஷயம். உள்ள படி நான் ஸ்ரீ ப்ராக்கிங்க்டன் அவர்களது மூல ஆய்வேடுகளை வாசித்தவனில்லை. அறிஞரான ஸ்ரீ ராம் ஆஷ்ரய் ஷர்மா அவர்கள் பகிர்ந்த வ்யாசத்தில் அவர் அவதானித்த படிக்கு என்னுடைய கருத்தினை முன்னெடுத்துள்ளேன். நீங்கள் ப்ராக்கிங்க்டன் அவர்களது ஆய்வேட்டை வாசித்திருந்தால் அதன்படி 37 சதமானம் என்று அவர் சுட்டும் பகுதியின் பாற்பட்டு இருக்கும் ஒரு நூற்தொகுப்பில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற படிக்கு நாம் அறியும் ஒரு கதைக்களன் அதில் காணக்கிட்டவில்லை என்றால் நிச்சயமாக அதை வெர்பேடிம் கோட் செய்யவும். என்னுடைய புரிதலை மேம்படுத்திக்கொள்வேன்.

    6. வெவ்வேறு பாடாந்தரங்கள் மூன்றில் ஒரு பங்கு ஒன்றினில் ஒன்று வேறுபட்டாலும் கூட………. தங்களிடையே பொதுவிலான ராமாயண கதையை பாதுகாத்து வைத்திருந்தது அவதானிக்கப்பட்டது. இந்த பொதுமையான குணாதிசயம் தான் மூலராமாயணம் (Ur-Ramayana) என்ற நூல் இந்த பாடாந்தரங்களின் ஆதாரமாக இருக்கவேண்டும் என்ற முக்யமானதொரு முடிபை எட்ட ஆய்வாளர்களுக்கு ஹேதுவாக இருந்தது என்றால் மிகையாகாது.

    Qluote :- RV :-

    “”தமிழ் ஹிந்து தளத்தின் பொறுப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். வெறும் அரசியல் நிலைக்காக இலக்கியத்தையும் ராமாயணத்தையும் சிறுமைப்படுத்தாதீர்கள்.”””

    தங்களுடைய தவறான புரிதல்களால் இலக்கியத்தையும் ராமாயணத்தையும் சிறுமைப்படுத்துவது யார் என்பதனை வாசகர்களது முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

  19. அன்பின் ஆர் வி.

    \\\ ராமானுஜன் ராமாயணத்தை, அதன் எண்ணற்ற வடிவங்களை எப்படி கொண்டாடுகிறார் என்று புரியும். கம்பனின் அகல்யாவையும் வால்மீகியின் அகல்யாவையும் அவர் ஒப்பிடும் இடம் ஒன்று போதும். \\

    உங்களுடைய பார்வையினை படம் பிடிக்கும் விஷயங்களை மட்டிலும் நீங்கள் அவதானிக்க விழைவது நிச்சயம் ஒரு சரியான முறைமையே அல்ல. ராமானுஜன் உள்ளபடி நிறைய விஷயங்களை வெகு அழகாக விவரணம் செய்திருக்கிறார் தான். அது அவருடைய வ்யாசத்தின் நிறை தான். ராம கதாபாத்ரங்களை இழிவு செய்யும் படிக்கான ஸந்தாலி ராமாயணத்தை கமுக்கமாக ஆதி கவி வால்மீகி ராமாயணத்தை அடுத்த இன்னொரு வாசிப்பாக அவர் அவதானிப்பதை நீங்கள் மறைக்க விழையலாம். ஆனால் நீங்கள் பரிந்துரை செய்யும் படிக்கு அவருடைய வ்யாசத்தை கூர்ந்து வாசிக்கும் வாசகர்கள் அதை அவதானிக்காது போக முடியாது.

    \\ ராமானுஜனை விளக்கும் அளவுக்கு எனக்கு மொழித் திறமை இல்லை. ஆனால் படித்துப் பாருங்கள்! முடிந்தால் க்ருஷ்ணகுமாரின் தொடரைப் படிப்பதற்கு முன்னாலேயே படித்துப் பாருங்கள், படிக்காமல் பின்னூட்டம் எழுதாதீர்கள். \\\

    ஒரு பெரும் எழுத்து ஜாம்பவானான உங்களுக்கு ராமானுஜனை மொழியாக்கும் திறமை இல்லை.

    ஸம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம், ஆங்க்லம் என பலமொழிகளில் சமைக்கப்பட்ட பற்பல விஷயங்களை ஆங்க்லத்தில் சொன்னபடிக்கு ஒன்று திரட்டி அவற்றை என் எண்ணப்பாங்குப் படி என்னுடைய இயல்பான நடையில் நான் மொழியாக்கம் செய்தமை………………. ………….. …………. …………… ………………

    ஆம் நீங்கள் சொல்லுவதற்கு முன்னரேயே நான் சொல்லும் ஒவ்வொரு விஷயத்திற்கும் அதன் சுட்டியை கொடுத்திருக்கிறேன்.

    வேறொருவர் சொல்ல விழையும் விஷயத்தை என்னுடைய மொழியாக்கம் தெளிவாக விளக்கவில்லை என்று குறிப்பாகச் சுட்டினால் …………. அதை முறையாக விளக்கினால்……………..நிச்சயமாக நான் ஏற்றுக்கொள்வேன்.

    சுப ராத்ரி.

    ஸ்ரீ ராமஜெயம்.

  20. பிரசுன்ன சுந்தர்,

    // ராமாயணத்தின் ஜீவனே சீதை ஒரு கற்பின் கனலானவள் என்பது தான். அதையே திரித்து ராமாயணங்கள் சொல்லப்பட்டால் அது ராமாயணம் இல்லை அல்லவா? 300கும் மேற்பட்ட ராமாயணங்களிலும் இது போல பல்வேறு மாறுபாடுகள் உண்டு. ஒரு கதையின் ஆன்மாவை சிதைக்கும் வேலை ஒரு பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கப்பட்டு சிலாகிக்கப் பட்டால் அது அந்த கதையை முதன் முதலாக எழுதியவுனுக்கு இழைக்கப்படும் துரோகமல்லவா? // என்று கேட்டிருந்தீர்கள்.

    பொதுவில் ஏற்கப்பட்ட ராமாயணங்களில் – வால்மீக், கம்பன், ராம்சரித்மானஸ் ஆகியவற்றில் சீதை கற்பின் கனல் என்பது முக்கியமான கருத்து. ஆனால் ராமாயணங்களுக்கு ஊற்றுக்கண் ராமகதை அல்லவா? ராமனின் கதை வாய்மொழியாக பல காலம் பேசப்பட்ட பின்பே வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்த வாய்மொழிக் கதை உலகின் பல இடங்களில் – குறைந்த பட்சம் இந்தியா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் எப்படி எல்லாம் பரிணமித்தது என்பதை யார் உறுதியாகச் சொல்ல முடியும்? சீதைக்கு ராமன் சித்தப்பா என்று கூட ஒரு கதை உருவாகி இருக்கலாம். எழுதப்படும்போதே வால்மீகியிடமிருந்து ஆரம்பிக்கிறேன் என்று சொன்னாலொழிய (கம்பன் சொல்லி இருப்பது போல, துளசியும் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன்), இந்த ராமாயணத்துக்கு இதுதான் மூல நூல் என்று சொல்ல முடியாது. நீங்கள் குறிப்பிட்டது போல சீதை கற்பின் கனல் அல்ல என்று ஒரு ராமாயணம் இருந்தால், அது வால்மீகியிலிருந்து துவங்கப்பட்டதல்ல என்று மட்டும்தான் உறுதியாக சொல்ல முடியும். உதாரணமாக மண்டோதரி கற்பின் கனலாகத்தான் அனேக இந்திய ராமாயணங்களில் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் தாய்லாந்து ராமாயணத்தில் ஹனுமான் மண்டோதரியோடு உறவு கொள்கிறார்!

  21. க்ருஷ்ணகுமார்,

    நிறைய வளவளவென்று எழுதுகிறீர்களே தவிர சொல்லப்படுவதையே படித்த மாதிரி தெரியவில்லை. அதிலும் நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் உங்கள் கட்டுரையை விட வளவளவென்று இருக்கின்றன. அடுத்தவர்கள் நேரத்துக்கு கொஞ்சம் மதிப்பு கொடுங்கள், கொஞ்சம் சுருக்கமாக எழுத முயலுங்கள்.

    ஆனாலும் ஒன்றை தெளிவுபடுத்திவிடுகிறேன். நீங்கள் நான் சொன்ன கருத்துகளுக்கு பதிலளிக்க முய்ற்சிப்பதற்கு பாராட்டுக்கள். பதிலளிப்பது சுருக்கமாக எழுதுவதை விட முக்கியமானது என்றே நான் கருதுகிறேன். உங்கள் பதில்களைப் படித்த பிறகு நீங்கள் உண்மையாகவே தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, அதனால் மீண்டும் ஒரு முறை என் தரப்பை விளக்க முயற்சிக்கிறேன்.

    உங்கள் பிரச்சினை இதுதான். // ராமகதை என்பது வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஆரம்பிக்கும் ஒரு வஸோர்த்தாரை………. அதாவது அந்த ஒரு புள்ளியிலிருந்து இடையறாது கொட்டும் ஒரு நீர்வீழ்ச்சி போன்றது…………// என்று சொல்கிறீர்கள். அதாவது ராமகதை வால்மீகி ராமாயணத்தில்தான் ஆரம்பிக்கிறது, வால்மீகிக்கு முன்னால் ராமகதையே இல்லை என்று கருதுகிறீர்கள். என் போன்றவர்களோ ராமகதையை வடிவப்படுத்திய முயற்சிகளில் இன்று காலத்தால் மூத்தது வால்மீகி ராமாயணம் என்று கருதுகிறோம். அதாவது எங்களுக்கு வால்மீகி ராமாயணத்துக்கு அப்பாற்பட்ட ராமகதை உண்டு. வால்மீகியே அப்படித்தான் சொல்கிறார். நீங்கள் ராமாயணம் வால்மீகியின் காவியம், அதற்கு முன்னால் ராமகதை இருந்தததாக அறிஞர்கள் கருதினாலும் அதற்கு சான்றுகள் இல்லை, அதனால் ராமகதை வால்மீகியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று கருதுகிறீர்கள். ஆனால் வால்மீகிக்கு முன்பே ராமகதை இருந்திருந்தால் அது வால்மீகி வழியாகத்தான் ராமகியனாக வேண்டும், ஜைன ராமாயணம் ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ராமகியன், ஜைன ராமாயணங்கள், சில பல நாட்டார் வழக்கு வாய்மொழி ராமாயணங்களுக்கும் வால்மீகிக்கும் உள்ள பெரும் வித்தியாசங்கள் வால்மீகிக்கு முன்னாலேயே ராமகதை இருந்தது, அது வேறு விதமாகப் பரிணமித்திருக்கிறது என்ற வாதத்துக்கு வலு சேர்க்கின்றன. வால்மீகியே உத்தம, உதாரண புருஷனின் வாழ்க்கையை எழுத வேண்டும் என்றுதான் விழைந்தார், உத்தம, உதாரண புருஷன் ஒருவன் வாழ்க்கையை தன் கற்பனையில் உருவாக்கி அதை காவியமாக வடிக்க வேண்டும் என்றல்ல. நானும் ராமானுஜனும் வால்மீகியின் கட்சி, நீங்கள் எதிர்க்கட்சி அவ்வளவுதான்.

    ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் மதுரை வீரனை கடவுளாகக் கும்பிடுபவர் உண்டு. அவனைப் பற்றிய நாட்டுப் பாடலின் காலம் 1800 வாக்கில் என்று வைத்துக் கொள்வோம். ஊர் ஊராகப் போய் மதுரை வீரன் கூத்தின் பல வடிவங்களை ஒரு ஆய்வாளர் தொகுக்கிறார். அந்தக் கூத்தின் வடிவங்களுக்குள் ராமானுஜன் வரையறைப்படி பல ‘symbolic’ வித்தியாசங்கள் இருந்தால், 1800-இன் நாட்டுப்பாடல்தான் மூலப்பிரதி என்று கொள்ள முடியாது. சில நூறு வருஷங்களுக்கு முன்னால் உருவான ஒரு ‘ஏறக்குறைய-தொன்மத்துக்கே’ இந்த நிலை என்றால் பல ஆயிரம் வருஷங்களாக வாய்வழி தொடர்ந்து வரும் ஒரு தொன்மத்துக்கு மூலப்பிரதி ஒன்றை வரையறுக்க முயல்வதை என்னவென்று சொல்வது?

    நீங்கள் தரும் தகவல்களையே வைத்தே பேசுவோம். Critical edition வந்து ஐம்பது ஆண்டுகளாகின்றன என்கிறீர்கள். ஆனால் அதற்கு முன்னும் ஒரு ur-text உண்டு என்கிறீர்கள். அந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மூல ராமாயணத்தை, அந்த ur-text-ஐ படிக்க விரும்புபவர்கள் என்ன செய்திருப்பார்கள், எதை நாடுவார்கள்? தென்னிந்தியப் பாடாந்தரமா? அது 13-14-ஆம் நூற்றாண்டு வாக்கில் தொகுக்கப்பட்டது என்கிறீர்கள். அதற்கு முன் மூலகாவியம் என்று எதுவும் கிடையாதா? நமக்கு கிடைத்திருக்கும் சுவடிகளில் பதினோறாம் நூற்றாண்டு சுவடிதான் காலத்தால் பழையது, இந்தத் தென்னிந்திய பாடாந்தரம் அதிலிருந்து பிரதி எடுக்கப்பட்டது என்கிறீர்கள். கி.பி. 1000-ஆம் ஆண்டுக்கு முன் ராமாயணம் கிடையாதா? வால்மீகிக்கு முன்னால் பாணர்கள் பாடி இருக்கலாம், ஆனால் அதற்கு சான்று இல்லை, அதனால் வால்மீகி எழுதியதுதான் மூலகாவியம் என்றால், இந்த மூல ஓலைச்சுவடிக்கு முன்னால் ஒரு மூல ராமாயணம், வால்மீகி எழுதிய ராமாயணம் இருந்தது என்பதற்கு என்ன ஆதாரத்தை முன் வைக்கிறீர்கள்? நான் செய்வது விதண்டாவாதம் என்று நீங்கள் கருதலாம். ஆனால் பாணர் பாடியதற்கு சான்று இல்லை அதனால் வால்மீகி ராமாயணத்துக்கு முன் ராமகதையே இல்லை என்ற வாதமும் இதே போலத்தானே இருக்கிறது?

    சுவடிகள் இருந்திருந்தாலும் அதைப் படிக்க முடியாதவர்கள்தான் பெரும்பான்மையினராக இருந்திருப்பார்கள். அவர்களெல்லாம் வாய்மொழியாகத்தானே இவற்றை அறிந்திருக்க வேண்டும்? அப்படி வாய்மொழியாகவே ராமகதை சொல்லப்பட்டு வந்தது என்றால் அந்த வாய்மொழி ராமகதை வால்மீகிக்கு முன்னால் ஏன் இருந்திருக்காது? வால்மீகியே உண்மையான மனித குல ராமனின் கதையை எழுதுவதாகச் சொல்கிறார்; அதை நீங்கள் முழுமையாக ஏற்கிறீர்களோ இல்லையோ அப்படி இருப்பதற்கான சாத்தியக்கூறு உண்டு என்பதையாவது புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நடந்த கதை ஏன் பல விதமாக பரிணமிக்கக் கூடாது?

    மூலகாவியம் வால்மீகி ராமாயணம்தான், எல்லா ராமாயணங்களும் அதை வெட்டியும் ஒட்டியும்தான் உருவாகின்றன என்று நீங்கள் வாதாடினால் நீங்கள் கயமைத்தனம் என்று கருதும் symbolic ராமாயணங்கள் எப்படி உருவாகின்றன? சந்தால் பழங்குடியினருக்கு வால்மீகியிடம் ஏதாவது விரோதமா? அவர்களுக்கு ஏன் சீதையின் கற்பு நிலை என்பதை ஒரு பொருட்டாக இல்லை? ஒரு பழங்குடி மரபே வால்மீகியை இழிவுபடுத்த விரும்பிய கயவர்கள் என்பதை விட அவர்கள் சமூக நிலையில் கற்பு என்பதற்கு நாம் பொதுவாகக் கொள்ளும் அர்த்தமில்லை என்பதுதான் காரணமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள பெரும் முயற்சி தேவையில்லையே?

    மனிதனுக்கும் குரங்குகளுக்கு ஒரு பொது மூதாதை உண்டு என்பார்கள். அந்தப் பொது மூதாதையிலிருந்து மனிதனும் சிம்பன்சியும் பரிணமித்தது போல ராமகதையிலிருந்து வால்மீகியும் ஜைன ராமாயணங்களும் ராமகியனும் மற்ற symbolic ராமாயணங்களும் வந்தன, மனித இனம் கறுப்பர்கள், வெள்ளையர்கள், மங்கோலியர்கள் என்று பரிணமித்தது போல indexical ராமாயணங்கள் பரிணமித்தன என்பது ராமானுஜனின் கருத்து. நீங்கள் வால்மீகி என்ற பொது மூதாதையிலிருந்துதான் எல்லா ராமாயணங்களும் வந்தன என்று கருதுகிறீர்கள், அவ்வளவுதான் வித்தியாசம். ராமானுஜனின் கருத்து வால்மீகயிலிருந்து பெரிதளவு வேறுபடும் ராமாயணங்கள் எப்படி உருவாகின என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. அப்படிப்பட்ட பெரும் வேறுபாடுகளுக்க்கு எந்த விதமான விளக்கமும் உங்கள் வாதங்களில் தெரியவில்லை. பெரும் வேறுபாடுகள் கயமைத்தனம், அவற்றை வால்மீகியோடு – மூலகாவியத்தோடு – இணையாக வைப்பது இடதுசாரி கயமைத்தனம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறீர்கள்.

    வால்மீகிக்கு முன்னால் ராமகதை இருந்தது என்று நம்புகிறீர்களோ இல்லையோ, இருந்திருப்பதற்கான சாத்தியக் கூறு உண்டு என்பதையாவது ஏற்கிறீர்கள் பாணர்கள் பற்றி நீங்கள் சொல்வதை வைத்துப் புரிந்து கொள்கிறேன். அப்படி சாத்தியக்கூறு இருக்கிறது என்பதை ஒரு வாதத்துக்காவது ஏற்று, உங்கள் கோணத்தை மீண்டும் ஒரு முறை பரிசீலனை செய்து பாருங்கள். ராமானுஜன் சொல்ல வருவது புரியலாம்.

    கடைசியாக ஒரு வார்த்தை – ராமகியனை படிக்காமலே எழுதாதீர்கள். உங்கள் பாணியில் சொன்னால் ராமகியன் ‘indexical’ ராமாயணம் என்பது ‘அட்ச்சுவிடுவது’.

  22. தமிழ் ஹிந்து பொறுப்பாளர்களுக்கு: மூலப்பிரதி, மூலகாவியம் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் குழப்பமாக இருக்கலாம். என்னுடைய முந்தைய மறுமொழியில் ‘நீங்கள் தரும் தகவல்களை’ என்று தொடங்கும் பாராவுக்கு பதிலாக கீழே உள்ளவற்றை பிரசுரிக்க முடியுமா? மாற்றி பிரசுரிப்பதுதான் குழப்பத்தை குறைக்கும், இரண்டு தனித்தனி பின்னூட்டங்களாகப் போட்டால் குழப்பம் இருக்கத்தான் செய்யும் என்று நினைக்கிறேன். தயவு செய்து மாற்றி பிரசுரியுங்களேன்! (பின்னூட்டங்களை திருத்தும் வாய்ப்பு இருந்தால் இன்னும் சுலபமாக இருக்கும்)

    (ஆர்.வி அவர்களுக்கு: நீங்கள் கேட்டுக் கொண்டபடி முந்தைய பின்னூட்டம் எடிட் செய்து வெளியிடப் பட்டுள்ளது – ஆசிரியர் குழு).

  23. அன்பின் ஆர் வி

    மரபார்ந்த நம்பிக்கையாளனாக சதகோடி ப்ரவிஸ்தரம் என்று சொல்லும்படிக்கு மிக விஸ்தாரமான ஒரு ராமாயணம் இருக்கின்றது என எனக்கும் கூட நம்பிக்கை உண்டு. அது வால்மீகிக்கும் முந்தையது.

    இங்கு நாம் நம்பிக்கைகளின் பாற்பட்டு வாதங்கள் முன்வைக்கவில்லை. தரவுகளின் பாற்பட்டு.

    தரவுகளின் பாற்பட்டு ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் மட்டிலுமே மூத்த ராமாயணம். மூல ராமாயணம்.

    இந்தியவியலாளர்கள் சொல்லும் பாணர்கள் பாடியிருக்கக்கூடிய ஒரு ராமாயணமும் கூட ஒரு யூகம் மட்டிலுமே. இன்னொரு ராமாயணம் அதற்கு முன்னதாக என்றால்…….. முதலில் அது முன்வைக்கப்பட வேண்டும். அதன் காலம் கணிக்கப்பட வேண்டும்.

    ரொம்ப சிம்பிள்…………

    \\ ராமகியன், ஜைன ராமாயணங்கள், சில பல நாட்டார் வழக்கு வாய்மொழி ராமாயணங்களுக்கும் வால்மீகிக்கும் உள்ள பெரும் வித்தியாசங்கள் வால்மீகிக்கு முன்னாலேயே ராமகதை இருந்தது, அது வேறு விதமாகப் பரிணமித்திருக்கிறது என்ற வாதத்துக்கு வலு சேர்க்கின்றன. \\

    விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று சொல்லுவதற்கும் இதற்கும் எந்த வித்யாசம் கிடையாது.

    வால்மீகி ராமாயணத்தின் காலம் ஸம்ஸ்க்ருத மொழி மற்றும் இந்தியவியல் வல்லுனர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

    இன்னொரு ராமாயணம் என்று நீங்கள் சொல்லும் ஒவ்வொரு ராமாயணத்துக்கும் ஒரு காலக்கணக்கு உண்டு. அது வால்மீகி ராமாயணத்துக்குப் பிந்தையது என்பதும் துறை சார்ந்த வல்லுனர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

    \\ ஆனால் அதற்கு முன்னும் ஒரு ur-text உண்டு என்கிறீர்கள். \\

    Ur-text உண்டு என்று நானும் சொல்லவில்லை. வேறு யாரும் சொல்லவில்லை

    திரும்பத் திரும்ப குழம்புகிறீர்கள்.

    இந்தியவியல் அறிஞர்களும் க்ரிடிகல் எடிஷன் பதிப்புக்காரர்களும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் வெவ்வேறு பாடாந்தரத்துக்கான ப்ரதிகளையும் ஆராய்ந்து ……… அதுவும் வடக்கு தெற்கு என்று ஹிந்துஸ்தானத்தின் வெவ்வேறு கோடியில் புழங்கிய பாடாந்தரங்களை ஆராய்ந்து……….. அதனிடையே இருக்கும் வேறுபாடுகளையும் மீறி அதனில் காணப்படும் பொதுவான கதைக்களனை அவதானித்து………. முடிவுக்கு வந்தது ……………ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் ராமகதை……… மூல ராமாயணக் கதை………… Ur-Ramayana…………

  24. \\\ சுவடிகள் இருந்திருந்தாலும் அதைப் படிக்க முடியாதவர்கள்தான் பெரும்பான்மையினராக இருந்திருப்பார்கள். அவர்களெல்லாம் வாய்மொழியாகத்தானே இவற்றை அறிந்திருக்க வேண்டும்? அப்படி வாய்மொழியாகவே ராமகதை சொல்லப்பட்டு வந்தது என்றால் அந்த வாய்மொழி ராமகதை வால்மீகிக்கு முன்னால் ஏன் இருந்திருக்காது? \\\

    வாய்மொழிக் கதை ………… சுவடிக்கதை………. அந்தக் கதை………. இந்தக் கதை…………

    எந்தக் கதையாக இருந்தாலும்………… அதனுடைய இலக்கியச் செறிவு……….. மொழிச் செறிவு……… அந்த நூல் தரும் பலப்பல அகச்சான்றுகள் போன்றவற்றை வைத்து அந்த நூல் இயற்றப்பட்ட காலம் கணிக்கப்படுகிறது.

    ராமகதை பேசும் ஒவ்வொரு நூலுக்கும் அறிஞர்கள் காலக்கணக்கை வரையறுத்துள்ளார்கள். மேற்பட்ட அலகீடுகளின் பாற்பட்டு.

    நீங்கள் சொல்லும் நாட்டார் வழக்கு வாய்வழி ராமகதைகளின் சைலிகளை வைத்து ………….. அதனுடைய காலக்கணக்கு மிக அதிக பக்ஷமாக சதாவதானி டாக்டர் ஸ்ரீ கணேஷ் சொல்லும் படிக்கு ………… ஐநூறு வருஷங்களுக்கு மிகாது.

    நீங்கள் வெறுங்கையாலேயே முழம் போட முனைகிறீர்கள்.

    நீங்கள் ஒரு ராமாயணம் என்று முன்வைத்தால்……….. அதனுடைய கால கட்டம் இன்னது என்பது அறிஞர்களால் கணக்கிடப்படும் என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அது ராமாயணத்துக்கு மட்டிலுமன்று………… ஒவ்வொரு தொன்மையான நூலுக்கும். காலக்கணக்கு சில சமயம் காத்ரமான விவாதங்களுக்கு உட்படுவதுண்டு. துல்லியமாகக் கணக்கிடப்படுவதும் கிடையாது……… ஆனால் அதற்கு இந்தியவியல் ஆய்வுகளில் அதீத முக்யத்துவம் உண்டு.

    காலக்கணக்கு இல்லாமல் ………… கடனேயென்று ……… கற்பனையாக என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கதையளந்து சென்றால்………..அதற்கு கற்பனைக்கு விஞ்சி வேறு ஏதும் இல்லை.

  25. \\\\ ராமானுஜனின் கருத்து வால்மீகயிலிருந்து பெரிதளவு வேறுபடும் ராமாயணங்கள் எப்படி உருவாகின என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. \\\\

    அது ஸப்ஜக்டிவான சமாசாரம். மற்ற ராமாயணங்கள் எப்போது இயற்றப்பட்டன என்பது மிக முக்யமான கூறு.

    அந்தக் கூற்றினை ராமானுஜன் வ்யாசமும் பேசாது நீங்களும் பேச மாட்டீர்கள். ஏனெனில் உங்களுடைய விளக்கமாற்றுக்குப் பட்டுக்குஞ்சலம் சாற்றும் படிக்கான சப்ஜக்டிவ்வான ஜோடனைகள்…………சாயம் போட்ட புடைவையை மழையில் நனைத்த மாதிரிக்கு………. காலக்கணக்கு என்ற ஆப்ஜக்டிவ்வான விஷயத்தால் வெளுத்துப் போகும்.

    \\\ அப்படிப்பட்ட பெரும் வேறுபாடுகளுக்க்கு எந்த விதமான விளக்கமும் உங்கள் வாதங்களில் தெரியவில்லை. \\\

    ஆப்ஜக்டிவ்வாக அணுகப்பட வேண்டிய விஷயத்தை……….. அப்படி அணுகுவதற்குப் பதில் ஸப்ஜக்டிவ்வாக ஜவ்வு மாதிரி அணுகுவதில் எந்த விதமான ப்ரயோஜனமும் கிடையாது.

    காலக்கணக்கு என்பது கணிக்கப்பட்டு விட்டால்…………. அது முற்றிலுமான வேறு ஒரு ஸப்ஜக்டிவ்வான விவரணங்களை ஜோடிப்பதற்குக் கூட ஏதுவாகும்.

  26. \\ உங்கள் பதில்களைப் படித்த பிறகு நீங்கள் உண்மையாகவே தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, \\

    மிக முக்யமாக உங்களுக்கு சொல்ல வேண்டிய விஷயம்…………

    காலத்தால் முந்திய மற்றும் பிந்திய ராமாயணம் என்ற விஷயத்தை இந்த விவாதத்திலிருந்து விலக்கவே முடியாது.

    இது உங்களுக்கு நிச்சயமாகப் புரியும். இதை வாசிக்கும் வாசகர்களுக்கும் புரியும்.

    ஆனால் காலக்கணக்கு என்பது வெறுங்கையால் முழம் போடுவது போல ஜோடனை சமாசாரம் இல்லை. அதன் பின்னணியில் ஒரு பெரும் ஆய்வு உண்டு. ராமானுஜனுடைய வ்யாசத்தைப் போன்ரு ஜோடனைகளால் மட்டிலுமான வெற்று அபிப்ராயப் பந்தல் அல்ல அது.

    நூறு வருஷ கால இந்தியவியல் அறிஞர்களுடைய ஆய்வுக்கும் ( க்ரிடிகல் எடிஷன் வரை) ராமானுஜனுடைய ஆய்வுக்கும் இடையேயான பெரும் வித்யாசம் இந்த விஷயம்.

  27. உங்களுடைய ஒவ்வொரு கூற்றினையும் ராமானுஜன் மூல வ்யாசத்துடன் சம்பந்தப்படுத்தி…………

    நீங்கள் ராமானுஜன் சொல்லாத விஷயங்களைச் சொல்லியதாக அலம்பல் செய்தமை போன்ற விஷயங்களை verbatim quote செய்திருக்கிறேன்.

    FAQ………….. முழுமையாக இந்த விஷயம் பற்றி புரிவதற்கு………. புள்ளி புள்ளியாக. அது நிச்சயம் நீளம் தான்……… ஆனால் ஒவ்வொரு புள்ளியும் அதன் அளவில் தேவையானவை……….. சுருக்கமானவை…….அவச்யமானவை…….. ஆப்ஜக்டிவ்வானவை.

    உங்களுடைய கருத்துக்கள்……… ராமானுஜன் கருத்துக்கள்…….. வேறுபாடுகள் ……… இவற்றை ஒவ்வொரு கூற்றாகத் தான் விளக்கியிருக்கிறேன்………….

    அறவே புரிதலற்ற கருத்துக்கள் உங்களுடையதா? என்னுடையதா?

    என்பது வெர்பேடிம் கோட் களையும் அதற்கான விளக்கங்களையும் வாசிக்கும் யாருக்கும் நிச்சயமாகப் புரியும்.

    ஜோடனைகளாக………….. தரவுகள் இல்லாத கருத்துக்களாக……… கதைத்துக்கொண்டே போகிறீர்கள்……….

    தரவுகள் சார்ந்து நீங்கள் விவாதிக்க முனையவும் இல்லை.

    \\ கடைசியாக ஒரு வார்த்தை – ராமகியனை படிக்காமலே எழுதாதீர்கள். உங்கள் பாணியில் சொன்னால் ராமகியன் ‘indexical’ ராமாயணம் என்பது ‘அட்ச்சுவிடுவது’. \\

    ராமகீன் தாய்லாந்திய ராமாயணத்தையோ ……….. ஏன் பௌமாசரி அ ராமாயணத்தையோ ……….. நான் படிக்கவில்லை…….. நான் இவற்றைப் பற்றிய விவரணங்களை அவதானித்துள்ளது…………..ராமானுஜன் வ்யாச விவரணைகள்……. மற்றும் பௌமாசரி அ பொறுத்தவரை………மேலதிகமாக டாக்டர் ஜேக்கபி அவர்களது அறிமுகங்களை வைத்து என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

    என்னுடைய வ்யாசத்தின் இரண்டாம் பாகத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

    \\ வ்யாசம் சித்தரிக்க முனையும் சில முரண்களைப் பார்க்கையில் தாய்லாந்திய ராமாயணம் அல்லது பல தாய்லாந்திய அரசர்கள் எழுதிய ராமாயணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் பகிரப்படுதல் நன்று என்று படுகிறது. \\

    நீங்கள் ராமகீன் ராமாயணத்தை வாசித்திருந்தால் உங்களிடமிருந்து அதனைத் தெரிந்து கொள்ளுவதற்கு எனக்குத் தயக்கமேதுமில்லை.

    ஆனால் நீங்கள் என்னுடைய கருத்து என்னது என்று தெரியாமல் மட்டிலுமல்ல………. ராமானுஜனது கருத்துக்கள் என்னது என்றும் தெரியாமல் நிறைய அட்ச்சுவுட்டு இருக்கிறீர்கள்……… 🙂

    அதையெல்லாம் கமுக்கமாக சாய்ஸிலும் விட்டு விட்டீர்கள் 🙂 பொலிக.

  28. அன்பின் ஸ்ரீ ப்ரசன்னா சுந்தர்,

    300 ராமாயணம் வ்யாசத்தைப் பற்றி அறிய முதலில் அதை முழுமையாக வாசியுங்கள்.

    நான் என் உத்தரங்களினூடே பகிர்ந்திருக்கும் விக்கி பேஜஸிலும் ……… ஐந்து உதாரணங்களை விளக்கும் சுட்டி வ்யாசத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

    300 ராமாயண வ்யாசம் எனும் ராமானுஜனின் மோசடிக் கருத்தாக்கத்தை எளிமையாக அறிய FAQ வடிவத்தில் இங்கு பகிரப்பட்டிருக்கும் குறுவினாக்களையும் அதற்கான பதில்களையும் வாசித்து அறியுங்கள்.

    ஆர் வி போன்றோர் அறியாமையின் பாற்பட்டு அல்லது வெகு சாதுர்யத்தின் பாற்பட்டு ………… அறவே பார்க்க விழையாத ஒரு முக்யமான காரணி ………. மிகவும் தொன்மையான ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்திற்கும்……….. முன்னதானது என்று ………..
    வெற்று ஜோடனைகளால்………. அவர்களது தரப்பு அட்ச்சுவுடும்………. ராமாயணங்களுக்கும் ஒரு காலக்கணக்கு உண்டு என்பது………

    கற்பனையில் மட்டிலுமே………. யூகத்தின் அடிப்படையில் மட்டிலுமே அப்படியொரு கருத்து அவதானிக்கப்பட்டுள்ளது…….. யதார்த்தங்களின் பாற்பட்டு அல்ல……… தரவுகளின் பாற்பட்டு வெகு நிச்சயமாக இல்லவே இல்லை………….தரவுகள் என்று முன்னெடுக்கப்பட்டால்……….. காலக்கணக்கு என்ற ஆஸிட் டெஸ்டுக்கு இப்படிப்பட்ட தொன்மைக் கற்பனை ராமாயணங்கள் உட்படுத்தப்பட்டால்………… அவை மூலகாவ்யமான ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்துக்கு வெகு பிந்தையவை என்பது தெளிவாகத் துலங்கும்.

    ராமானுஜன் வ்யாசத்தின் அபத்தமான கூறுகள் வரிசையாக என் FAQ ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வ்யாசத்தின் இந்த பாகத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. அதை நைஸா ஆர் வி சாய்ஸில் விட்டு விட்டார். நீங்கள் அதை சாய்ஸில் விட்டு விடாதீர்கள் 🙂

  29. அன்பர் பீ எசு…….

    \\ ஒருவர் எழுதியதை அடைப்புக்குறிகளுக்குள் போடும்போது, \\\

    ஸ்………..மூலம் ஆங்க்லத்தில்

    https://www.facebook.com/jataayu.blore/posts/589066394579897

    அடைப்புக்குறி சமாசாரம் நீங்கள் குறை சொல்லுவது சொல்லுவது சரிதான். தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டிய சமாசாரம். தெளிவின்மைக்கு காரணம் உண்டு. ஆனால் இப்போது அதற்கு அவச்யமில்லை.

  30. தமிழ் ஹிந்து தளத்தின் பொறுப்பாளர்களுக்கு: பின்னூட்டத்தை திருத்தி வெளியிட்டதற்கு நன்றி!

    க்ருஷ்ணகுமார், நோவாவின் பெருவெள்ளம், மச்சாவதாரம், உட்னாபிஷ்டிம் பற்றி நான் எழுதியவற்றை நீங்கள் படித்ததாகத் தெரியவில்லை. படித்தால் என்ன சொல்ல வருகிறேன் என்பது மேலும் தெளிவாகலாம்.

    மீண்டும் ஒரு முறை – வஸோர்த்தாரை போன்ற வார்த்தைப் பயன்பாடுகளைத் தவிருங்கள். அவற்றைப் பயன்படுத்தத்தான் வேண்டுமென்றால் தமிழை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தில் எழுதுங்கள். ஜடாயு சொன்னதைப் போல அது உங்களுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் கோமாளித்தன பிம்பத்தைத்தான் தருகிறது, அதைத் தாண்டிப் படிப்பது கஷ்டமான வேலை. இன்றும் வஸோத்தாரையைப் பார்த்ததும் உங்கள் கருத்துகளைப் பற்றி விவாதிக்கும் எண்ணம் உடனே செத்துவிட்டது. அதை உயிர்ப்பிக்க நிறையவே சிரமப்பட வேண்டி இருந்தது.

    இருநூறு பேருக்காவது புரியக் கூடிய, அப்படி புரியவில்லை என்றால் இணையத்தில் சுலபமாக அர்த்தம் கண்டுபிடிக்கக் கூடிய, நீங்கள் பல முறை பயன்படுத்திய ur-Ramayana என்ற சொற்றொடருக்கு மிக அருகே உள்ள ‘ur-text’ என்ற வார்த்தைப் பிரயோகமே உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்றால் உங்களைத் தவிர வேறு யாருக்கும் புரியாத வஸோத்தாரை என்ற வார்த்தைப் பிரயோகத்தை பார்க்கும்போது எங்கள் மனநிலை என்ன என்பது உங்களுக்கு புரியாமல் இருக்க முடியாது. இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்த உங்களை உந்துவது என்ன? உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியும் என்று காட்டிக் கொள்ளும் வெட்டி பந்தாவைத் தவிர வேறு ஏதாவது உண்டா? இது உங்களுக்கு கௌரவத்தைத் தரவில்லை கோமாளி பிம்பத்தைத்தான் தருகிறது என்று நீங்கள் இன்னும் உண்ராததுதான் துரதிருஷ்டம்…

  31. // ராமானுஜன் வ்யாசத்தின் அபத்தமான கூறுகள் வரிசையாக என் FAQ ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வ்யாசத்தின் இந்த பாகத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. அதை நைஸா ஆர் வி சாய்ஸில் விட்டு விட்டார். //
    இல்லை. உங்கள் கருத்துகளில் பலவற்றை மேலே பேச தகுதி இல்லாதவை என்று புறம் தள்ள வேண்டி இருக்கிறது. அதற்காக மேலே விவாதிக்க தகுதி உள்ளவை என்று நான் கருதும் அனைத்தையும் நான் விவாதித்துவிடவில்லை. கருத்து வேறுபாட்டின் ஊற்றுக்கண் என்று நான் நினைப்பதை மட்டும் முன் வைத்திருக்கிறேன். இது தெளிவானால் மற்றவை அனைத்தும் தானாக தெளிவாகிவிடும் என்று நினைக்கிறேன். இதை முன்பே எழுதி இருந்தேன், எப்படியோ பின்னூட்டத்தில் அந்தப் பகுதி விட்டுப் போயிருக்கிறது.

    இந்த ஊற்றுக்கண் பற்றி மேலும் சிலவற்றைத் தெளிவுபடுத்திவிடுங்கள்.

    1. // தரவுகளின் பாற்பட்டு ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் மட்டிலுமே மூத்த ராமாயணம். மூல ராமாயணம். // என்று எழுதி இருந்தீர்கள். ராமாயணம் வால்மீகியின் கற்பனையில் உருவான காவியம் என்று கருதுகிறீர்களா? இல்லை ராமன் என்ற உத்தம புருஷனின் கதையை – அப்படி ஒருவன் வாழ்ந்ததற்கு தரவுகளே இல்லாவிட்டாலும் – வால்மீகி காவியமாக எழுதி இருக்கிறார் என்று கருதுகிறீர்களா? தரவு தரவு என்கிறீர்கள், நீங்கள் இந்தக் கேள்விக்கு பதிலாக எந்த நிலை எடுத்தாலும் அதற்காக ஏதாவது தரவுகளைத் தர முடியுமா?

    2. வால்மீகியே தான் நடந்த கதையைத்தான் எழுதுகிறேன் என்று சொல்லும்போது நீங்கள் எதிர்நிலை எடுப்பதற்கான காரணங்களை விளக்கமுடியுமா? அப்படி வால்மீகி சொல்வது ஒரு இலக்கிய உத்தி, வெறும் காவியச் சுவைக்காகத்தான் என்று கருதுகிறீர்களா?

    3. கி.பி. 1000-த்துக்கு முன் ராமாயணம் சரி வேண்டாம் மூல ராமாயணம் என்று ஒன்று இருந்ததற்கு ஏதாவது சான்றுகள் உண்டா?

    4. இன்று கிடைக்கும் பிரதிகளைப் பற்றி பல அறிஞர்கள் பலவிதமாக கருதுகிறார்கள் என்று நீங்களே மேற்கோள் காட்டி இருந்தீர்கள். அப்படி என்றால் இன்று critical edition என்று சொல்லப்படுவதின் அசல்-தன்மை பற்றி, கிடைத்திருக்கும் சுவடிகளின் அசல்-தன்மை பற்றி கேள்விகள் எழும் சாத்தியக் கூறு உண்டு என்பதை ஏற்கிறீர்களா இல்லையா?

    5. சந்தால் பழங்குடியினர் வால்மீகி ராமாயணத்தை ‘திரிக்க’ என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? கயமைத்தனம்தானா இல்லை வேறு ஏதாவது சாத்தியக்கூறு உண்டா? அப்படி கயமைத்தனம்தான் என்று நீங்கள் சொன்னால் காலத்தால் மிக மூத்த உட்னாபிஷ்டிமின் தொன்மம் மச்சாவதாரத் தொன்மமாகத் ‘திரிக்கப்ப்ட்டிருப்பதைப்’ பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? சதாப்த பிராமணாவை எழுதியவர்கள் கயவர்கள் என்று கருதுகிறீர்களா இல்லையா என்று தெளிவுபடுத்த முடியுமா?

    6. காலத்தால் மூத்தது என்பது மட்டுமே முக்கியம் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். உட்னாபிஷ்டிம் தொன்மம் (குறைந்த பட்சம் கி.மு. 2000), நோவாவின் பெருவெள்ளம் (கி.மு. 1000 வாக்கில்), மச்சாவதாரம் (சதாப்த பிராமணா: அதிகபட்சம் கி.மு. 700) ஆகியவை ‘எழுதப்பட்ட’ காலத்தை வைத்து உட்னாபிஷ்டிம் தொன்மமே மச்சாவதாரத்தின் மூலநூல் என்பதை ஏற்கிறீர்களா?

    இவை தெளிவுபடுத்தப்பட்டால் கருத்து வேறுபாடுகள் சுலபமாகத் தீர்ந்துவிடும், அல்லது தீர்க்க முடியாத வேறுபாடுகளாக நிலைத்துவிடும் என்று கருதுகிறேன்.

    மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக இருந்தால் தயவு செய்து நடைமுறைத் தமிழில் எழுதுங்கள்.

  32. ஆர் வி

    நீங்கள் முன்வைக்கும் பல வாதங்கள் எந்த ஆதாரமும் அற்றவை. நீங்கள் பகிர விழையும் விஷயங்களைப் படிக்காமலேயே படித்தது மாதிரி வெட்டிப்பந்தா காண்பித்து தாறுமாறான கருத்துக்களை முன்வைத்து…………….. அவற்றை ஆதாரத்துடன் மறுக்கையில் ……………… உங்களுக்கு லகுவாகக் கிடைக்கும் ஒரு சாக்குபோக்கு, என் பின்னூட்டத்தில் ஏதாவது ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு ……………… என்னைத் தனிநபர் தாக்குதலில் இறங்க விழையும் போக்கு.

    என் மொழிநடை சம்பந்தமான தனிநபர் தாக்குதல் இது முதலும் கிடையாது கடைசியும் கிடையாது. அது எனக்கு ஒரு பொருட்டும் கிடையாது.

    என்னுடைய மொழிநடை சம்பந்தமான தனிநபர் தாக்குதல்களுக்கு………….. என்னுடைய வ்யாசம் சம்பந்தமான விவாதங்கள் கிட்டத்தட்ட முடிந்தது என்று நான் எண்ணிய பின்னரே பதிலளிப்பேன்.

  33. RV,

    நான் இங்கே அரசியல் பேசவில்லை. ராமாயணத்தின் மீது வால்மீகிக்கு உண்டான காப்பிரைட் பற்றியும் பேசவில்லை. ஆனால் ஒரு “Innocence of Muslims” எடுத்தவனை கண்டிக்கிறேன் பேர்வழி என்று இங்கே அண்ணாசாலையில் அமெரிக்கா எம்பஸி வாசலில் பொதுமக்களை வழிமறித்து போக்குவரத்து இடையூறு செய்தவர்கள் இருக்கும் நாட்டில், அதை நியாயப்படுத்தும் நடுசென்டர்கள் இருக்கும் நாட்டில், பெரும்பான்மை மக்கள் கடவுளாக வழிபடும் ஒரு கதாபாத்திரத்தை சிதைப்பதும் அதை சிலாகிப்பதும் தான் அறிவுஜீவித்தனம் போல! கிரகம். இதைக்கேட்டால் என்னை முற்போக்கு லிஸ்டில் இருந்து நீக்கி விடுவார்கள்.

    //பொதுவில் ஏற்கப்பட்ட ராமாயணங்களில் – வால்மீக், கம்பன், ராம்சரித்மானஸ் ஆகியவற்றில் சீதை கற்பின் கனல் என்பது முக்கியமான கருத்து. ஆனால் ராமாயணங்களுக்கு ஊற்றுக்கண் ராமகதை அல்லவா? ராமனின் கதை வாய்மொழியாக பல காலம் பேசப்பட்ட பின்பே வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.//

    இந்த யூகங்களில் எனக்கு அக்கறை இல்லை. இப்படி மூல காவியத்தை வைத்து பலபேருக்கு ரீமிக்ஸ் செய்து வெளியிடும் ராமாயன்களினால் ஏற்படும் தவறான புரிதல்களினால் ஏற்படும் அபாயம் பற்றி தான் நான் பேசினேன். ராமாயணங்களுக்கு ஊற்றுக்கதை ராமகாதை என்றால் அது எப்படி தானாக வானிலிருந்து குதித்து விட்டதா? அதை வால்மீகி இயற்றியபின்பு தானே அச்சுப்பிரதிகள் இல்லாத காலத்தில் ஊர் ஊறாகப் பாட பட்டிருக்கும்? ஆளாளுக்கு தாறுமாறாக யோசித்து ஒரு ராமகாதையை உருவாக்கி விட்டார்களா? அதை வால்மீகி எழுதி வைத்தார் என்கிறீர்களா? கதையின் ஆத்தரையே சந்தேகத்துக்கு உள்ளாக்குகிறீர்களே போகிற போக்கில்.

    //தாய்லாந்து ராமாயணத்தில் ஹனுமான் மண்டோதரியோடு உறவு கொள்கிறார்!// இதுவரை கேட்டிராத இந்த தகவலுக்கு நன்றி. அதை எழுதிய புண்ணியவான் போல இந்நாட்டில் இனியொருவர் ராமனுக்கு 7 செட்டப்கள் இருந்தன என்று எழுதி வைத்தால் அதையும் படித்து சிலாகிக்க ஆளுண்டு போலும்!

  34. ஆர் வி

    \\ மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக இருந்தால் தயவு செய்து நடைமுறைத் தமிழில் எழுதுங்கள். \\

    உங்களுக்கு பதில் முக்யமில்லை. அது எப்படி அளிக்கப்பட வேண்டும் என்பது முக்யம் என்றால் எதற்காகக் கேழ்வியெழுப்பி என்னுடைய நேரத்தை வீணாக்குகிறீர்கள்? Sheer Hypocrisy. என்ன பதில் அளிக்க வேண்டும் என்பதும் அது எப்படி அளிக்க வேண்டுமென்பதும் என் உரிமை. அதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உரிமை.

    உங்களுடைய தகுதியற்ற வெட்டிக் கேழ்விகளுக்கு பதில் அளிக்கப்படா விட்டால் அதற்கு தகுதி கிடைத்து விட்டதாக ஒரு போலியான பிம்பம் கிடைத்து விடும் என்பதால் மட்டிலும் உங்களது புறந்தள்ளப்பட வேண்டிய கேழ்விகளை வெளுப்பதற்கு ப்ரயாசிக்கிறேன்.

    \\ கருத்து வேறுபாட்டின் ஊற்றுக்கண் \\

    ம்…………….

    \\ வால்மீகியே தான் நடந்த கதையைத்தான் எழுதுகிறேன் என்று சொல்லும்போது \\

    மரபார்ந்து நான் நிச்சயமாக அப்படித் தான் நம்புகிறேன். ஆனால் ஹிந்து மரபுகள் என்றும் ஆய்வுகளுக்குத் தடை விதிப்பதில்லை. அதனுடைய முடிபுகளால் கலங்குவதுமில்லை. போலி முற்போக்கு வாதிகளைப் போன்று நாங்கள் போலியான இறுக்கமான சட்டகங்களுள் அடைபடுவதில்லை.

    ஆனால் ஆராய்ச்சி என்று வரும் போது அதனுடைய அலகீடுகளுக்கு உட்பட்டு ஒரு விஷயம் அணுகப்பட்டு அதன் முடிபுகள் வெளிவந்தால் அது நிச்சயமாக வரவேற்கத் தக்கதே. வெறுமன நம்பிக்கையின் பாற்பட்டது மட்டிலும் அல்ல ஆராய்ச்சி.

    ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலின் தொன்மையை அதனுடைய பாஷா சைலி, செய்யுள் யாக்கப்பட்ட முறைமை மற்றும் பல அலகீடுகளை வைத்து ஆராய்ந்த இந்தியவியல் அறிஞர்கள்……………….. இது 2500 வருஷம் முற்பட்ட ஒரு நூல் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆய்வாளர்களின் கருதுகோள்கள் என்ன? ஆராயப்பட்ட விஷயங்கள் என்ன? முடிபுகள் என்ன என்பது தான் பறவைப்பார்வையாக முன்னால் (இதற்கு முந்தைய வ்யாசத்தொடரில்) விளக்கப்பட்டுள்ளதேயன்றி…………. அதன் நுட்பங்கள் பேசப்படவில்லை.

    இதே தளத்தில் சங்கரர் கால ஆராய்ச்சி நடந்துள்ளது. அது போல இந்த நூலின் தொன்மையை நிச்சயமாக கேழ்விக்கு உள்ளாக்கலாம்.

    \\ கி.பி. 1000-த்துக்கு முன் ராமாயணம் சரி வேண்டாம் மூல ராமாயணம் என்று ஒன்று இருந்ததற்கு ஏதாவது சான்றுகள் உண்டா? \\

    ஸ்ரீ விமலசூரியின் பௌமாசரி அ பொதுயுகம் மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று அதன் பாஷா சைலி அதில் உள்ள முக்யமான அகச்சான்றுகளான மஹாவீரர் பரிநிர்வாணமான திகதி ஆகியவற்றை வைத்து மூத்த இந்தியவியல் அறிஞரான ஸ்ரீ ஜேக்கபி கருத்து தெரிவிக்கிறார். ஓரிரு சதாப்தங்கள் காலக்கணக்கு தொன்மையான ஒவ்வொரு நூலுக்கும் முன் பின் அபிப்ராய பேதத்தில் அடங்கும்.

    அதில் அதற்கு முன் இருந்த ராமாயணத்தின் வடிவினை (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் காட்டும் வடிவு) அவர் குறிப்பிட்டு அதை நிந்தனை செய்கிறார்.

    காலக்கணக்கு ஒரு சங்கிலி.

    இந்த விஷயத்தை மட்டிலும் அடிப்படையாக வைத்து தகவல் சேகரம் செய்தால் இன்னமும் பல சான்றுகள் கொடுக்கலாம்.

    \\ இன்று கிடைக்கும் பிரதிகளைப் பற்றி பல அறிஞர்கள் பலவிதமாக கருதுகிறார்கள் என்று நீங்களே மேற்கோள் காட்டி இருந்தீர்கள். அப்படி என்றால் இன்று critical edition என்று சொல்லப்படுவதின் அசல்-தன்மை பற்றி, கிடைத்திருக்கும் சுவடிகளின் அசல்-தன்மை பற்றி கேள்விகள் எழும் சாத்தியக் கூறு உண்டு என்பதை ஏற்கிறீர்களா இல்லையா? \\

    ம்……………………

    சுவடிகளின் நம்பகத் தன்மை க்ரிடிகல் எடிஷன் வல்லுனர்களால் ஆராயப்பட்டு அதன் பின்னரே அவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்று தன்னுடைய வ்யாசத்தில் ஸ்ரீ ராம் ஆஷ்ரய் ஷர்மா சொல்லியிருக்கிறார். என்னுடைய முந்தைய வ்யாசத்தொடரில் இது தெளிவாகப் பகிரப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆய்வு மற்றும் ஆய்வு முடிபுகள் பொது தளத்தில் அனைவரின் பார்வைக்கும் உள்ளது என்பதும் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

    \\ சந்தால் பழங்குடியினர் வால்மீகி ராமாயணத்தை ‘திரிக்க’ என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? \\

    ராமாயண நூல் மட்டிலுமா. ஒவ்வொரு ஹிந்து புராணங்களையும் திரித்து அவற்றை சிறுமைப்படுத்துவதை இழிவு படுத்துவதை பரங்கிய க்றைஸ்தவ ஸ்தாபனங்கள் இடதுசாரிக் கயமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து தங்கள் கொள்கையாகக் கொண்டு அதற்காகத் திட்டமிட்டு வேலை செய்கின்றன.

    சந்தால் பழங்குடியினரின் பெயரில் புழங்கும் ராமாயணம் திரிக்கப்பட காரணம் மிஷ நரிகளின் பங்களிப்புகளாலா என்பது அவர்களின் தொடர்ந்த செயற்பாடுகளால் எழும் சம்சயம் மட்டிலுமே.

    ஆய்வுக்கு உரிய விஷயம். முறையான ஆய்வின் பாற்பட்டு கிடைக்கும் முடிபினை ஏற்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

    \\ மிக மூத்த உட்னாபிஷ்டிமின் தொன்மம் மச்சாவதாரத் தொன்மமாகத் ‘திரிக்கப்ப்ட்டிருப்பதைப்’ பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? சதாப்த பிராமணாவை எழுதியவர்கள் கயவர்கள் என்று கருதுகிறீர்களா இல்லையா என்று தெளிவுபடுத்த முடியுமா \\

    ஒரு விஷயத்தைப் பற்றி அவதானிக்க நான் கால அவகாசம் எடுத்து …………சம்பந்தப்பட்ட தரவுகளைத் திரட்டி என்னளவில் ஒரு முழுமையான பார்வையை அடைய முயற்சிக்கிறேன்……………. அதற்குப் பின்னரே கருத்துப் பகிருகிறேன். அதற்குப் பின்னிட்டும் பகிர்ந்த கருத்துக்கள் தரவுகள் சார்ந்து மறுக்கப்பட்டால் எனக்கு ஏற்பதில் எந்த தயக்கமும் கிடையாது.

    ராமானுஜன் சொல்லாத விஷயங்களை அவர் சொல்லியதாக நீங்கள் அடுக்கிச் சென்று ……………. Ur-Ramayana…….Ur-Text………..Vulgate Edition போன்ற விஷயங்களை சகட்டு மேனிக்கு குழப்படித்து கால விரயம் செய்து…………நகைக்கத் தக்க வகையில் கருத்துக் கந்தசாமியைப் போல கருத்துப் பகிர்ந்தது போல என்னால் கருத்துப் பகிர முடியாது. க்ஷமிக்கவும்.

    மதங்கள் கடந்து ப்ராந்தியங்கள் கடந்து பொதுமையான தொன்மையான கருத்தாக்கங்கள் மக்கள் சமூஹத்தில் இருந்துள்ளன என்ற அளவில் மட்டிலும் நான் இந்த விஷயங்களை புரிந்து கொண்டிருக்கிறேன். அதற்கு மேற்பட்டு இந்த விஷயங்கள் பற்றி சொல்ல எனக்கு இது பற்றி நிறைய வாசிக்க வேண்டும்.

    \\ காலத்தால் மூத்தது என்பது மட்டுமே முக்கியம் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். \\

    Tortally rubbish and purposefully mis interpretted opinion. நான் சொல்லாத விஷயத்தை நீங்கள் நான் சொல்லுவதாகச் சாதிக்கிறீர்கள். ராமானுஜனையும் வாசிக்க மாட்டீர்கள். நான் எழுதியதையும் வாசிக்க மாட்டீர்கள். ஆனால் சகட்டு மேனிக்கு இரண்டையும் திரிப்பதில் உங்களுக்கு எந்த விதமான தயக்கமும் கிடையாது. FAQ points 9,10,22 as written above by me shows that what you ascribe to be my opinion are nothing but your own bias and prejudice

  35. //மூலம் ஆங்க்லத்தில்

    https://www.facebook.com/jataayu.blore/posts/589066394579897

    அடைப்புக்குறி சமாசாரம் நீங்கள் குறை சொல்லுவது சொல்லுவது சரிதான். தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டிய சமாசாரம். தெளிவின்மைக்கு காரணம் உண்டு. ஆனால் இப்போது அதற்கு அவச்யமில்லை.//

    நல்ல சமாளிப்பு. ஆனாலும் தவறு மீண்டும்.

    ஜடாயு எழுதியது ஆங்கிலத்தில். அடைப்புக்குறிகளுக்குள் அவர் எழுதிய ஆங்கில வரிகளைத்தான் போட முடியும். அதை தமிழ் மொழிப்பெயர்ப்பில் போட மொழி விதியில்லை. மொழி பெயர்க்கும்போது போடும் சொற்கள் அம்மொழிபெயர்ப்பாளரின் விருப்பத்தின் பேரில். அதன்படி உங்கள் சொற்களே சம்சயம்; மற்றும் கேழ்கிறார்கள்.
    அடைப்புக்குறிகளுக்குள் போட்டதால், சம்சயம் என்ற எவருக்கும் புரியாத சமஸ்கிருதச்சொல்லையும், கேழ்கிறார்கள் என்ற தமிழ்ப்பிழையையும் ஜ்டாயு போட்டதாக அனைவரையும் நம்ப வைக்கும் அவ்வடைப்புக்குறிகள். அவர் வலிந்து திணிப்பவர், தமிழை பிழைபோட்டு எழுதுபவர் என்ற கலங்கம். மன்னிப்பக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச்செய்ய ஒருவன் பெரிய மனதுக்காரனாக இருக்க வேண்டும்.

    இராமானுஜன் ஆங்கிலத்தில்தான் எழுதினார். அவர் ஆஙகிலச் சொற்களை நீங்கள் அடைப்புக்குறிகளுக்குள் போட்டிருக்கிறீர்கள். உங்கள் சொந்த சொற்களாக அவையிருக்க முடியா. எனினும் அங்கு கூட எழுத்து, இலக்கணப்பிழைகள்.

    பின்னூட்டத்தில் எப்படியும் எழுதலாம். கட்டுரையாளன் என்ற தகுதிக்கு இன்னும் நீங்கள் உழைக்க வேண்டும். மொழி மீது கவனம் வைப்பய்தை கட்டுரையாளன் உதாசீனப்படுத்த முடியாது. நல்ல தமிழைத் தேடி படிப்பவர்கள் இத்தளத்திற்கு வருகிறார்கள். அது போக, பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் தெரிந்து கொள்ள. Double whammy!

    நினைவில் வைத்துக்கொண்டு கட்டுரையாளனாக வலம் வரலாம்.

  36. //…மீண்டும் ஒரு முறை – வஸோர்த்தாரை போன்ற வார்த்தைப் பயன்பாடுகளைத் தவிருங்கள். அவற்றைப் பயன்படுத்தத்தான் வேண்டுமென்றால் தமிழை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தில் எழுதுங்கள்.//

    சுவரில் எறிந்த பந்தினைப்போல திரும்ப வரும் சொற்கள் இவை. கட்டுரையாளரின் பிடிவாதம் – முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா – என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. எனவே அவருக்கு சொல்லவேண்டிய அல்லது விடுக்க வேண்டிய விண்ணப்பம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

    //எப்படியும் எழுதுங்கள். ஆனால் பல சொற்கள் படிப்போருக்குப் புதியவை. அவற்றுக்கு அவர்கள் தமிழகராதியில் தேடினாலும் பொருட்கள் கிடைக்கா. படிப்போர் படும் சிரமத்தைச் சிரமேற்கொண்டீர்களாயின், கட்டுரையின் இறுதியில் ஒரு அருஞ்சொற்பொருள் சேர்க்கை ஒன்றைப்போட்டு ஒவ்வொரு சமஸ்கிருதச் சொல்லுக்கும் தமிழில் பொருளைத்தந்து விடுங்கள். //

    //எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதன்றி வேறொன்றும் யாமறியேன் பராபரமே// …இன்னினைப்பு வரும் நாள் பொன்னாள்

  37. க்ருஷ்ணகுமார்,

    உங்கள் கடந்த சில பல பின்னூட்டங்களில் முன்முடிவுகள் நிறைந்திருக்கின்றன. முன்முடிவுகளோடு விவாதிப்பது இயலாத ஒன்று. உங்கள் பாணி மாறாவிட்டால் இத்தோடு நிறுத்திக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் எந்தப் புள்ளியில் கருத்து வேறுபாடு ஆரம்பிக்கிறது, அதை எப்படி துல்லியமாக வரையறுப்பது ஆகியவற்றில் என் கவனத்தை செலுத்தவே விரும்புகிறேன்.

    நீங்களோ // உங்களுக்கு பதில் முக்யமில்லை. அது எப்படி அளிக்கப்பட வேண்டும் என்பது முக்யம் என்றால் எதற்காகக் கேழ்வியெழுப்பி என்னுடைய நேரத்தை வீணாக்குகிறீர்கள்? Sheer Hypocrisy. என்ன பதில் அளிக்க வேண்டும் என்பதும் அது எப்படி அளிக்க வேண்டுமென்பதும் என் உரிமை. அதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உரிமை. // என்று ஆரம்பிக்கிறீர்கள். மன்னிக்கவும் கிருஷ்ணகுமார், எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? பதில் எப்படி இருக்க வேண்டும் என்பது முக்கியம் என்று நான் நினைப்பது எப்படி உங்கள் மனதில் பதில் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம், பதில் ஒரு பொருட்டே அல்ல என்று மாறுகிறது? உங்கள் ஊகங்களுக்கும் முன்முடிவுகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும், நான் என்ன செய்ய?

    என் நேரம் உங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம் – உங்கள் நடையைப் பற்றி உங்களுக்கு இருக்கும் பிடிவாதம் அதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது. ஆனால் அது எனக்கும் அப்படி இருக்க முடியாது என்பதையாவது உணருங்கள். கடைசி முறையாக முயன்று பார்க்கிறேன், ஆனால் உங்கள் பாணி மாறாவிட்டால் என் நேரத்தை நான் மீண்டும் வீணடிப்பதற்கில்லை.

    என் கேள்விகள் எவற்றுக்கும் நீங்கள் தெளிவான பதில் அளிக்கவில்லை. உங்கள் வார்த்தைகளுக்குள் புகுந்து படித்து நான் புரிந்து கொண்ட வரையில்:
    1. நம்பிக்கை சார்ந்து நீங்கள் ராமன் உண்மையில் வாழ்ந்த உத்தம புருஷன் என்று கருதினாலும் ராமாயணம் வால்மீகியின் கற்பனையில் உதித்தது என்பதுதான் அறிவுபூர்வமான வாதம்.
    2. இன்று அறிஞர்கள் தொகுத்திருக்கும் வடிவம் வால்மீகி அன்று எழுதிய ராமாயணத்திலிருந்து வேறுபடும் சாத்தியக்கூறு உள்ளது. ஆனால் அவர்கள் ஆய்வுகள் நம்பகத்தன்மை உள்ளவை.
    3. உட்னாபிஷ்டிம், மச்சாவதாரம் இத்யாதி பற்றி அதிகம் தெரியாததால் எதுவும் சொல்வதற்கில்லை.
    4. சந்தால் பழங்குடியினரின் ராமாயணம் மிஷனரிகளின் தாக்கத்தால் எழுதப்பட்டிருக்கலாம்.
    5. / காலத்தால் மூத்தது என்பது மட்டுமே முக்கியம் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். \\

    Tortally rubbish and purposefully mis interpretted opinion. // என்று நீங்கள் சொல்லி இருப்பது என்னை மிகவும் குழப்புகிறது. இதைத்தானே மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறீர்கள்? மூலகாவியம் என்பதை நிர்ணயிப்பது காலத்தான் மூத்தது என்பது மட்டும்தான் என்றுதான் பல பின்னூட்டங்களில் சொல்லி இருக்கிறீர்கள் என்பதுதான் என் புரிதல். ஒரு வேளை உங்கள் நடை என்னை குழப்பிவிட்டதா? வேறு யாராவது “மூலகாவியம் என்பதை நிர்ணயிப்பது காலத்தான் மூத்தது” என்றுதான் கிருஷ்ணகுமார் சொல்கிறார் என்று நான் புரிந்து கொண்டிருப்பதை ‘Tortally rubbish’ என்று கருதுகிறீர்களா?

    உங்களிடம் மூன்று வேண்டுகோள்கள்.
    1. என் புரிதல் தவறென்றால் அதை சரிப்படுத்துங்கள்.
    2. முடிந்தால் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளியுங்கள்.
    3. நடைமுறைத் தமிழில் எழுதுங்கள்.

  38. பிரசன்ன சுந்தர்,
    // நாட்டில், பெரும்பான்மை மக்கள் கடவுளாக வழிபடும் ஒரு கதாபாத்திரத்தை சிதைப்பதும் அதை சிலாகிப்பதும் தான் அறிவுஜீவித்தனம் போல! // என்று எழுதி இருந்தீர்கள். நீங்கள் இன்றைய மறுவாசிப்புகளை மனதில் வைத்து இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறீர்களோ என்று தோன்றுகிறது. இந்தக் கட்டுரைத் தொடர் குறைந்தது இருநூறு முன்னூறு வருஷம் வயதுள்ள ராமாயணங்களைத்தான் பேசுகிறது.

    // இப்படி மூல காவியத்தை வைத்து பலபேருக்கு ரீமிக்ஸ் செய்து வெளியிடும் ராமாயன்களினால் ஏற்படும் தவறான புரிதல்களினால் ஏற்படும் அபாயம் பற்றி தான் நான் பேசினேன். // என்ன அபாயம், என்ன தவறான புரிதல் என்று எனக்குத் தெரியவில்லை. நான் வழிபடும் கடவுளான ராமனை சிறுமைப்படுத்தும் சக்தி, அபாயத்துக்குள்ளாக்கும் சக்தி அற்ப மனிதர்களுக்கு உண்டு என்று நான் ஒரு நாளும் ஏற்பதற்கில்லை. அப்படி ஏற்றால் நான் ராமனை வழிபடுவதையே நிறுத்த வேண்டி இருக்கும். ராமாயணம் என்ற இலக்கியத்தை யார் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மறுவாசிப்பு செய்வதை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். நல்ல மறுவாசிப்பு காலத்தைத் தாண்டி நிற்கும்; அல்லாதது இரண்டு நாளில் மறைந்து போகும். இதில் நான் எந்த அபாயத்தையும் காணவில்லை.

    // ராமாயணங்களுக்கு ஊற்றுக்கதை ராமகாதை என்றால் அது எப்படி தானாக வானிலிருந்து குதித்து விட்டதா? அதை வால்மீகி இயற்றியபின்பு தானே அச்சுப்பிரதிகள் இல்லாத காலத்தில் ஊர் ஊறாகப் பாட பட்டிருக்கும்? // இது என்னங்க கேள்வி? வால்மீகியே ராமன் என்ற உத்தம புருஷனின் வாழ்க்கையைத்தான் தான் காவியமாக வடிக்கிறேன் என்கிறார். அப்படி என்றால் ராமனின் வாழ்க்கைதானே ஊற்றுக்கதை? கட்டபொம்மன் பற்றிய புத்தகங்களுக்கு கட்டபொம்மன் கூத்துப்பாடல் ஊற்றுக்கண்ணா இல்லை அவன் வாழ்க்கையா?

    //இந்நாட்டில் இனியொருவர் ராமனுக்கு 7 செட்டப்கள் இருந்தன என்று எழுதி வைத்தால் அதையும் படித்து சிலாகிக்க ஆளுண்டு போலும்! // ஜைன ராமாயணத்தில் ராமனுக்கு மூன்று மனைவிகள் என்று நினைவு. 🙂

  39. RV

    //என்ன அபாயம், என்ன தவறான புரிதல் என்று எனக்குத் தெரியவில்லை. நான் வழிபடும் கடவுளான ராமனை சிறுமைப்படுத்தும் சக்தி, அபாயத்துக்குள்ளாக்கும் சக்தி அற்ப மனிதர்களுக்கு உண்டு என்று நான் ஒரு நாளும் ஏற்பதற்கில்லை. அப்படி ஏற்றால் நான் ராமனை வழிபடுவதையே நிறுத்த வேண்டி இருக்கும்.//

    என்ன அபாயமா? அதற்கு தான் விசிக பொதுக்கூட்ட நிகழ்வை உதாரணமாக சொன்னேனே! நீங்கள் கண்டதையும் படித்துவிட்டு ராமனை வழிபடுவது பற்றி மற்றவர்களுக்கு என்ன கவலை? உங்களை போல விஸ்தாரமான வாசிப்பு இல்லாத குடியானவனுக்கும், சேரியில் வாழ்பவனும், இது போன்ற ரீமிக்ஸ் ராமாயணங்களை படிப்பதால் வரும் விளைவுகளை அல்லவா சீர் நோக்க வேண்டும்? தன்னைப் போலவே மற்றவர்களையும் எண்ணிக் கொள்வது சரியாக இருக்காது. சரியான வழிகாட்டுதல் இல்லாத இப்போதைய தலைமுறை இதையெல்லாம் படித்தால் அனுமன் மண்டோதரி கூட ஜல்சா பண்ணிருக்காருடானு தான் படிப்பினை எடுத்துக்கொள்வார்களே தவிர எது சரி எது தவறு என்று பகுத்துணர்ந்து பார்க்கும் படிப்பினையை விட்டு விடுவார்கள். பின்னர் நீங்கள் சொல்வது போல, ராமனை வழிபடுவதையே நிறுத்த வேண்டி இருக்கும்.

    கொஞ்சம் மற்றவர் நிலையிலிருந்தும் யோசியுங்கள்.

  40. // கொஞ்சம் மற்றவர் நிலையிலிருந்தும் யோசியுங்கள். //
    பிரசன்ன சுந்தர்,

    உங்கள் ஆதங்கங்களை, நிலையைப் புரிந்து கொள்கிறேன்; ஆனால் அந்த வருத்தங்களால் நீங்கள் எடுக்கும் முடிவு நிலை எனக்கு இசைவானதில்லை. இது தீர்க்க முடியாத கருத்து வேறுபாடு என்று நினைக்கிறேன். என் வாதங்களில் உங்களுக்கு இசைவு இல்லாவிட்டாலும் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

    என் தரப்பிலிருந்து கடைசியாக: // விஸ்தாரமான வாசிப்பு இல்லாத குடியானவனுக்கும், சேரியில் வாழ்பவனும் // எதைப் படிக்கலாம், எதைக் கேட்கலாம் என்று நிர்ணயிக்கும் உரிமையை நானோ நீங்களோ கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். அப்படி அடுத்தவரை நாம் கட்டுப்படுத்தலாம் என்பது ‘உனக்கு எது நல்லது என்று உனக்குத் தெரியாது எனக்குத்தான் தெரியும்’ என்ற மேட்டிமைத்தனத்தின் வெளிப்பாடாகத்தான் எனக்குத் தெரிகிறது.

    இதே காரணங்களால்தான் சல்மான் ரஷ்டி, தஸ்லிமா நஸ் ரீன், டாவின்சி கோட் போன்றவற்றின் மீதான தடையையும் கடுமையாக எதிர்க்கிறேன்.

  41. //நான் இங்கே அரசியல் பேசவில்லை. ராமாயணத்தின் மீது வால்மீகிக்கு உண்டான காப்பிரைட் பற்றியும் பேசவில்லை. ஆனால் ஒரு “Innocence of Muslims” எடுத்தவனை கண்டிக்கிறேன் பேர்வழி என்று இங்கே அண்ணாசாலையில் அமெரிக்கா எம்பஸி வாசலில் பொதுமக்களை வழிமறித்து போக்குவரத்து இடையூறு செய்தவர்கள் இருக்கும் நாட்டில், அதை நியாயப்படுத்தும் நடுசென்டர்கள் இருக்கும் நாட்டில், பெரும்பான்மை மக்கள் கடவுளாக வழிபடும் ஒரு கதாபாத்திரத்தை சிதைப்பதும் அதை சிலாகிப்பதும் தான் அறிவுஜீவித்தனம் போல! கிரகம். இதைக்கேட்டால் என்னை முற்போக்கு லிஸ்டில் இருந்து நீக்கி விடுவார்கள்.//

    Mr Prasanna Sundar

    அறிவுஜீவித்தனத்துக்கும் அதில்லாதவருக்கும் உள்ள வேறுபாடு. முன்னவர் எப்பொருளின் எல்லாப்பக்கத்தையும் பார்த்து சிந்திக்கத் தயங்குப்வர் அன்று. பின்னவர் தன்க்கு பிடிக்காதவைகளை ஏர்நோக்கார்.

    உங்களை முற்போக்குவாதி லிஸ்டிலிருந்து நீக்குவாரோ இல்லையோ தெரியாது. கண்டிப்பாக நீங்கள் மேலே சொன்ன பின்னவருள் ஒருவர். அதை ஒத்துக்கொண்டுவிட்டால் உங்களிடம் வாதமில்லை. ரிலிஜியஸ் ஸ்லேவ்ஸ், ஃபனாடிக்ஸ் இவர்களிடம் வாதம் செய்பவன் முட்டாள்.

    அப்படியெல்லாம் கேட்டக்ரிக்குள் வர உங்களுக்குப்பிடிக்காதல்லவா?

    எனவே கொஞ்சம் நீங்கள் எழுதியதையே பார்ப்போம். இசுலாம் ஒரே இறைக்கொள்கை, ஒரே தீர்க்கதரிசி, ஒரே புனித நூலைக்கொண்டது. எனவே அவர்கள் தங்கள் மதக்கருத்துக்கள்; கொள்கை, தலைவர் இவைகளின் இருண்ட பக்கங்களை எவரேனும் வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டால் தாங்கார். எனவேதான் பாரீசு படுகொலைகள்; திரைப்படங்கள் எடுக்க முடியாது; டைரக்டர் கொல்லப்படுவார். (டச் திரைப்பட டைரகடர் கொல்லப்ப்ட்டார்); தஸ்லீமா மற்றும் ருஸ்டிகள் என்று பட்டியல் நீளும்.

    அவர்களை எடுத்துக்காட்டி, நாங்களும் அப்படித்தான் என்கிறீர்கள். இறுதியாக இங்கு நிற்கும் ஆர் வியின் பதிலில் இராமாயணம் இலக்கியமாகவும் பார்க்கப்படுகிறது என்கிறார். இப்படி இசுலாமிய தீர்க்கத்ரிசியின் வாழ்க்கை வர்லாற்றப்பார்க்க முடியாது. அல்லது இசுலாமிய வர்லாற்றில் வரும் கதாபாத்திரங்களின் வாழ்க்கை எழுதப்ப்ட்டு பார்க்கப்பட முடியாது. இராமனை, சீதையை, அனுமனை, அல்லது இராவணை பார்க்க முடியும்.

    இராமனினின் கதை புனிதமாக இந்துக்களால் பார்க்கப்படுகிறது. அதே வேளையில் அவர்களால் மட்டுமே படிக்கப்படவேண்டுமென்று இந்துக்களே தடை செய்ய அங்கு ஓர் அதிகார மேடையில்லை. எனவேதான் தாய்லாந்தின் கதை இந்தியக்கதையோடு மாறுபடுகிறது.

    வால்மீகியே இராமனின் கதையை உருவாக்கி உலாவ விட்டார் என்பதற்கு அடித்துச்சொல்லும்படி ஆதாரம் உண்டா? அவருக்கு முன் அக்கதை உலாவவில்லையா? வால்மீகி எழுதினார். அதற்மு முன் ஆரல் ட்ரடிஷன் வழியாக பரவவில்லையா? கர்ணபரம்பரை கதைகள் இன்று எழுத்து வடிவில் கிடைக்க அன்று எப்படி?

    மற்றுமொரு குறிப்பென்னவென்றால், வால்மீகி சமஸ்கிருதத்தில் – அதுவும் கவிதை வடிவில் எழுதினார். உண்மையா ? பொய்யா? அவர் காலத்தில் மக்களிடையே கல்வி அறிவு அப்படியா ப்ரவிக்கிடந்தது? காட்டு வாசிகளுக்கு எப்படி இராம கதை பரவிக்கிடந்தது ? வால்மீகி மூலமா அவர்கள் தெரிந்தார்கள் ? அப்படி அவர்களிடையே புழங்கிய இக்கதை எப்படி வால்மீகி சொன்னதைப்போல்வஏ இருக்க முடியும் என்று சிந்தித்தீர்களா? அவர்கள் போக, நாட்டுவாசிகளில் எத்தனை பேருக்கு சமஸகிருத அறிவு, அதுவும் கவிதை படிக்க இருந்திருக்கும்? ஒன்று தெரியுமா? வால்மீகி இராமாயணத்தாலன்று இராமன் பாப்புலரானான்! துள்சிதாசின் ராம் சரித்ர மானஸாலேயே. வால்மீகி பண்டிதத்தனமான சமஸ்கிருதம் மக்களுக்கு இராமனைக்கொண்டு செல்ல இடையூறாகவே இருக்கிறது என்று சிறுவ்யதிலேயே மனம்புழுங்கிய துள்சிதாஸ் எனற் அனாதைச்சிறுவன், பின்னர் தானறிந்த கீழை ஹிந்தியில் எழுத இராமனின் கதை வெகுவிரைவாக பரவி, இன்று உ பி மக்களின் வீடுகளில் வாசிக்கப்படுகிறது.

  42. RV,

    மிகச்சரியாக சொன்னீர்கள். இது தீர்க்க முடியாத கருத்து வேறுபாடு தான். நீங்கள் கட்டற்ற சுதந்திரத்தின் அவசியம் குறித்து நிற்கிறீர்கள். நான் நிலையான பொறுப்புணர்வின் தேவை குறித்து நிற்கிறேன். இதில் எது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவரவர் குணநலன் முடிவு செய்கிறது. மற்றபடி உங்களை நானோ, என்னை நீங்களையோ மாற்ற முடியாது என்பது புரிகிறது.

    பகிர்வுக்கு நன்றி.

  43. நான் சிவனே என்று RV அவர்களிடம் விவாதத்தை முடித்தாலும், நடுவில் BSV என்பவர் எனக்கு அறிவில்லாதவன் பட்டமளித்து கௌரவப்படுத்தி விட்டார்.

    //அறிவுஜீவித்தனத்துக்கும் அதில்லாதவருக்கும் உள்ள வேறுபாடு. முன்னவர் எப்பொருளின் எல்லாப்பக்கத்தையும் பார்த்து சிந்திக்கத் தயங்குப்வர் அன்று. பின்னவர் தன்க்கு பிடிக்காதவைகளை ஏர்நோக்கார்.
    உங்களை முற்போக்குவாதி லிஸ்டிலிருந்து நீக்குவாரோ இல்லையோ தெரியாது. கண்டிப்பாக நீங்கள் மேலே சொன்ன பின்னவருள் ஒருவர். அதை ஒத்துக்கொண்டுவிட்டால் உங்களிடம் வாதமில்லை. ரிலிஜியஸ் ஸ்லேவ்ஸ், ஃபனாடிக்ஸ் இவர்களிடம் வாதம் செய்பவன் முட்டாள்.//

    //இசுலாம் ஒரே இறைக்கொள்கை, ஒரே தீர்க்கதரிசி, ஒரே புனித நூலைக்கொண்டது. எனவே அவர்கள் தங்கள் மதக்கருத்துக்கள்; கொள்கை, தலைவர் இவைகளின் இருண்ட பக்கங்களை எவரேனும் வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டால் தாங்கார். எனவேதான் பாரீசு படுகொலைகள்; திரைப்படங்கள் எடுக்க முடியாது; டைரக்டர் கொல்லப்படுவார். (டச் திரைப்பட டைரகடர் கொல்லப்ப்ட்டார்); தஸ்லீமா மற்றும் ருஸ்டிகள் என்று பட்டியல் நீளும்.
    அவர்களை எடுத்துக்காட்டி, நாங்களும் அப்படித்தான் என்கிறீர்கள்.//
    நான் முற்போக்குவாதி இல்லாமல் இருந்தாலும் இந்த ரிலீஜியஸ் பானடிக்ஸ் குரூப்க்குள் உங்களால் தள்ளப்படுவது பற்றி எனக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை. நான் 300 ராமாயணத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி பொதுநல இம்சை செய்தேனா? அல்லது அந்த புத்தக எழுத்தாளரை லாரி விட்டு தூக்க முயன்றேனா? ஒன்றும் இல்லை. என் அதிருப்தியை ஒரு பதிவின் பதிலின் மூலம் தெரிவித்தேன். இதற்க்கே எனக்கு அறிவில்லாதவன் பட்டம் என்றால், உங்களைப்போன்ற ஆட்கள், ஒரு சிறு எதிர்ப்புக்குரலுக்கே எஸ்ட்ரா லார்ஜ் எபக்ட்டை போடுவதை என்ன சொல்வது? எங்களின் இந்த சகிப்புத்தன்மை காந்தியோ, நேருவோ சொல்லிக்கொடுத்து வந்தது இல்லை. ராமானுஜரும், ஜைனரும், புத்தரும், விவேகானந்தரும் சொல்லிக் கொடுத்து வந்தது. நீங்களே அறிவு ஜீவி லிஸ்டில் இருந்து கொள்ளுங்கள்.

  44. //விஸ்தாரமான வாசிப்பு இல்லாத குடியானவனுக்கும், சேரியில் வாழ்பவனும், //

    திரு பிரசன்ன குமார்!

    அறிவு ஜீவி என்ற பதத்தை உருவாக்கி காய்தல் உவத்தலின்றி தனக்குப்பட்டதை தைரியமாகச் சொல்வோரை கிண்டலடிப்பது இக்கால தமிழ்நாட்டு வழக்கம். அக்காலத்தில் அவர்கள் மதிக்கப்பட்டார்கள். புலவர்களைப் போற்றியது. அவரகளும் இடித்துரைத்தார்கள்.

    தங்கள் கொண்டதே உண்மை; அதை எவரும் மாற்றக் கூடாது என்ற மூர்க்கத்தன்முடையோரால் கண்டுபிடிக்கபப்ட்டு இழிசொல்லாக உலாவருவதே அறிவுஜீவி என்ற சொல்.

    அறிவு ஜீவி என இழிவு படுத்தப்படுவோர் மூர்க்கர்களிடம், ‘நீங்கள் கொண்ட கருத்து பல பரிமாணங்களை நோக்காமல் விடுவதால் அது தவறாக முடிகிறது’ என்பதால் வெறுக்கபப்டுகிறார்கள். கிண்டலடிக்கபப்டுகிறார்கள். இவ்வுலகில் எவர் தம் தவறை பிறர் எடுத்துச்சொன்னால் விரும்புவார்?

    இராமாயணத்தைப் பொறுத்தவரை ஓர் அறிவுஜீவியின் கருத்துக்களாக இவற்றைக்கொள்ளலாம்:

    இராமாயணம் ஒரு பழங்கால வாய் வழி வந்த கதை எப்போது எவரால் முதன்முதலாகச் சொல்லப்பட்டது என்று அறுதியிட முடியாது.

    மக்களிடையே பரவலாகக் கேட்கப்பட்டதால், வால்மீகி எடுத்து எழுத்தாக நிறுத்தினார். அவ்வெழுத்து உயரிலக்கிய நடையில் காவியமாக இருந்தபடியால் வடமொழி இலக்கியமும் ஆனது.

    இராமாயணம் இந்துக்களின் ஒரே புனித நூல் அன்று. இந்துக்களுக்கு அபபடி ஒரே புனிதநூல் என்று எதுவுமே இல்லை.

    இராமாயணத்தைப்படிக்கவேண்டும்; கேட்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இராமாயணத்தை மறுதலித்துக்கொண்டு (அதாவது இது வெறும் கற்பனையே என்று) வைணவராக இருக்க முடியாது. ஆனால், இந்துவாக இருக்கலாம். தடையேதுமில்லை.

    உங்கள் குடியான்வர்கள், சேரிமக்கள் கல்லாமாந்தர்கள்; இவர்கள் இராமாயணம் வாசிப்பதில்லை. கேட்பார்கள். எனினும் இவர்களிடையே இராமாயண காலச்சேபங்கள் இன்று நடைபெறுவதில்லை.

    வேள்விக்குடி கிருஸ்ணன் உரைகள்; இராமாயணம் விசிடிக்கள்; காலச்சேபங்கள் எல்லாம ஹை சொசைட்டிக்குத்தான். இவர்களுக்கு இல்லை. உஙக்ள் வாழ்க்கையும் அவர்கள் வாழ்க்கையும் வெவ்வேறானவை. உங்கள் வட்டத்துக்குள் அவர்களைக்கொண்டு வர நீங்களும் விரும்புவதில்லை. அவர்களும் வரமாட்டார்கள்.
    கிருஸ்ணகுமாரின் கட்டுரைகள் ஹை சொசட்டிக்குத்தான். அவர்கள் கூட படிக்க முடியாதபடி புரியா சொற்களை அள்ளிவீசுகிறார் like Don Quixote tilting at the windmills.

    இராமாயணம் இலக்கியம் என்று பார்க்கும் போது எவர் எப்படிச்சொன்னாலென்ன என்று போக்கின்படிதான் நீங்கள் போக முடியும். இராமானுஜன் என்ன சொன்னாலென்ன? என்று போக வேண்டும். அவர் எழுதியதால் நான் இராமனை கடவுளாக அணுக முடியாதெனப்து உஙகள் ஞான முதிர்ச்சியின்மை..

    அம்முதிர்ச்சின்மையுடன் ஆன்மிகத்தை அணுகும்போது குரங்கு கை பூமாலைதான்.

    குடியானவர்கள், சேரிமக்கள் – வால்மீகி இராமாயணத்தையும் இராமனுஜனின் 100 இராமாயணஙகளையும் கிருஸ்ண்குமாரின் தொடர்கட்டுரைகளையும் படிக்க முடியாது. எனவே அவர்கள் இராமானுஜனின் மாற்றுக்கதையை மட்டுமே எடுத்துக்கொண்டு இராமனை நமபமாட்டார்கள் என்ற பயம் தேவையில்லை. ஈ வே ரா வந்து போனபின்பும் இந்துக்கள் எண்ணிக்கை இருக்கிறது. எனவே எதை எப்படி அணுகவேண்டும் என்பதில் அவர்களுக்கு மனப்பக்குவமிருக்கிறது.

    மேலேயெழதியதுதான் அறிவுஜீவித்தனம்.

  45. BSV sir! ரயிட்டு அறிவுஜீவிகள் சொன்னா கரிக்ட்டா தான இருக்கும்.
    //இராமாயணம் இலக்கியம் என்று பார்க்கும் போது எவர் எப்படிச்சொன்னாலென்ன என்று போக்கின்படிதான் நீங்கள் போக முடியும். இராமானுஜன் என்ன சொன்னாலென்ன? என்று போக வேண்டும்.// போது அவர் எழுதியிருக்க வேண்டாமோ என்று சொல்வதற்கு திரு. க்ரிஷ்ணகுமாருக்கு உரிமை இல்லையா? நீங்கள் தான் அறிவு கொழுந்தாயிற்றே! திரு. கிருஷ்ணகுமார் சொன்னால் சொல்லி விட்டு போகிறார் என்று கம்மென்று வேறு வேலையை பார்க்க போக வேண்டியது தானே! மெனக்கெட்டு ஏன் பதிலெழுதணும்? நீங்க எழுதுன அறிவுஜீவிதனம்! நாங்க எழுதுனா மதவாதமா?

    //அவர் எழுதியதால் நான் இராமனை கடவுளாக அணுக முடியாதெனப்து உஙகள் ஞான முதிர்ச்சியின்மை//
    நான் ராமனை கடவுளாக அணுக முடியாது என்பதை பற்றியே பேசவில்லையே. மனிதனாக பிறந்தால் எவ்வாறு சரியான வழியில் போக வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்தவே இவ்வாறு இதிகாச புராணங்கள் படைக்கப்பட்டனவே அன்றி, சரோஜா தேவி புத்தகம் போல “இலக்கியமாக” படிப்பதற்கு அல்ல. அப்படிப்பட்ட ஒரு கண்ராவி சுதந்திரத்தை மட்டும் லைட்டாக கேள்வி தான் கேட்கிறோம். எங்களையும் இஸ்லாமியர்களையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கும் முட்டாள் இடதுசாரி மனநிலை உங்களிடம் நிரம்பவே உள்ளது. நீங்கள் தான் அறிவுஜீவியாயிற்றே! எதிர்ப்பை நீங்கள் தெரிவித்தல் அது வழிநடத்தல். அதையே சிறிய அளவில் நாங்கள் தெரிவித்தால் இசுலாமியர்களின் போராட்டங்களோடு சாப்பிடுவீர்கள். டிபிக்கல் இடதுசாரி மனநிலை. நீங்கள் ராமாயணத்தை எவ்வாறு வேண்டுமானாலும் பாருங்கள். அதை நாங்கள் கேள்விக்கு உள்ளாக்கும் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள். ஊருக்கு மட்டும் உபதேசம் வேண்டாம். உங்களுக்கும் அது கொஞ்சம் இருக்கட்டும்.

    வேளுக்குடி கிருஷ்ணன் பற்றியெல்லாம் நான் பேசவே இல்லை. அண்ணன் கிருஷ்ணகுமார் எழுதியதை பற்றி மட்டும் தான் பேசுகிறேன். உங்க இஷ்டத்துக்கு நான் high society ஆ ? தரை லோக்கலா? என்ற judgement க்கு போக வேண்டாம். உங்களை ஏரியார் என்று நான் சொன்னேனா? பெரியாரை இங்கே என் இழுக்கிறீர்கள்? நீங்களும் பெரியாரும் ஒன்றா? இல்லை, 300 ராமாயணம் எழுதியாவரும் பெரியாரும் ஒன்றா? நீங்களெல்லாம் சேர்ந்து அசிங்கப்படுத்தினாலும் ஹிந்து மதம் வாழும் என்று சொல்கிறீர்களா? கொஞ்சம் உங்க தரப்பை மறுபரிசீலனை செய்து கொண்டு தெளிவாக பேசுவது நல்லது. கண்டதையெல்லாம் உளறுவதற்கு நான் வெட்டியாக பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன்.

    நீங்கள் ஏன் ஒரு சிறு எதிர்ப்புக்குரலுக்கே எஸ்ட்ரா லார்ஜ் எபக்ட்டை போடுகிறீர்கள் என்று தான் கேட்கிறேன். உங்களுக்கு உள்ள சுதந்திரம் மற்றவர்க்கு இல்லையா?

  46. //இப்படி மூல காவியத்தை வைத்து பலபேருக்கு ரீமிக்ஸ் செய்து வெளியிடும் ராமாயன்களினால் ஏற்படும் தவறான புரிதல்களினால் ஏற்படும் அபாயம் பற்றி தான் நான் பேசினேன். ராமாயணங்களுக்கு ஊற்றுக்கதை ராமகாதை என்றால் அது எப்படி தானாக வானிலிருந்து குதித்து விட்டதா? அதை வால்மீகி இயற்றியபின்பு தானே அச்சுப்பிரதிகள் இல்லாத காலத்தில் ஊர் ஊறாகப் பாட பட்டிருக்கும்? // ஒரு கதையின் ஆன்மாவை சிதைக்கும் வேலை ஒரு பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கப்பட்டு சிலாகிக்கப் பட்டால் அது அந்த கதையை முதன் முதலாக எழுதியவுனுக்கு இழைக்கப்படும் துரோகமல்லவா?//
    //அதை எழுதிய புண்ணியவான் போல இந்நாட்டில் இனியொருவர் ராமனுக்கு 7 செட்டப்கள் இருந்தன என்று எழுதி வைத்தால் அதையும் படித்து சிலாகிக்க ஆளுண்டு போலும்!//
    //சரியான வழிகாட்டுதல் இல்லாத இப்போதைய தலைமுறை இதையெல்லாம் படித்தால் அனுமன் மண்டோதரி கூட ஜல்சா பண்ணிருக்காருடானு தான் படிப்பினை எடுத்துக்கொள்வார்களே தவிர எது சரி எது தவறு என்று பகுத்துணர்ந்து பார்க்கும் படிப்பினையை விட்டு விடுவார்கள். பின்னர் நீங்கள் சொல்வது போல, ராமனை வழிபடுவதையே நிறுத்த வேண்டி இருக்கும்.//
    //உங்களை போல விஸ்தாரமான வாசிப்பு இல்லாத குடியானவனுக்கும், சேரியில் வாழ்பவனும், இது போன்ற ரீமிக்ஸ் ராமாயணங்களை படிப்பதால் வரும் விளைவுகளை அல்லவா சீர் நோக்க வேண்டும்?//

    Mr Prasannasundar!

    ராமாயணங்களுக்கு ஊற்றுக்கதை ராம காதை. அவ்வூற்றுக்கதை பரவலாக பேசப்பட்டும், கேட்கப்பட்ட்டும் இருந்தபடியால், வால்மீகி அதை எழுத்தாக்கினார் என்றேன். பலபல ராமாயணம் பின்னாளின் எழுதியோர் வால்மீகி ராமாயணததைச்சி தைக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. காட்டுவாசிகளுக்கு எப்படி இராமாயணம் தெரியவந்தது? வால்மீகி இராமாயணத்தினாலா?

    முதன் முதலாக எழுதியவன் வால்மீகி. முதன்முதலாக இக்கதையைச்சொன்னவன் வால்மீகி அன்று. அவனுக்கு முந்தியவன். அவன் யாரென்று வால்மீகிக்குக்கூட தெரியாது. கர்ணபரம்பரை கதையென்றாலே முகந்தெரியா முதல் படைப்பாளி ஒருவன். வாய்வழிவரும். கண்டிப்பாக சிதைக்கப்படும். சிதைத்தார் எவரெனென்று அறிய முடியாது. நிலைமை இப்படி இருக்க, பின்னாளின் இராமாயணத்தைத் தங்கள்தங்கள் விருப்பத்துக்குத் தக்க‌ மாற்றியோர் வால்மீகிக்குத் துரோஹமிழைத்தார் என்று எப்படி சொல்ல முடியும்?

    இராமாணனுக்கு ஒரு மனைவியா, பல மனைவியரா என்று எவருக்குமே தெரியாது. புனித நூலாக எடுக்கும்போது மட்டுமே ஒரு மனைவி. இலக்கியமா எடுக்கும்போது எப்படியும் வரும் என்பதைச் சான்றுகளோடு சொன்னார் ஆர் வி.

    இராமன் சத்திரியன். சத்திரிய வமச்த்தில் நாடாண்டோர் – ஒருவனுக்கு ஒருத்தி – என்ற பணபை நியாயப்படுத்தியவரும் அல்லர்; செயல்பாட்டில் கொண்டரும் அல்லர். ஊரறிந்த வரலாறு.

    ஒருவர் இக்கருத்தைக்கொண்டு இராமனுக்கு ப்ல மனைவிகள் உண்டென்று இலக்கியம் எழுதினால், அதைப்படித்துவிட்டு சிலாகிக்க ஆட்கள் இருப்பது கண்கூடு.

    இலக்கியமென்றால் அப்படித்தான். பிடித்தவ்ருக்குத்தான் இலக்கியம். இராமனுக்குப் பல மனைவிகள் இருந்தார்கள் என ஒரு இலக்கியமெழுதப்பட்டால், அஃதொன்னும் ஆபாசமில்லை. ஒரு சத்திரிய இராஜனுக்கு பல மனைவிகள் அந்தப்புரத்தில் இருபபது என்ன ஆபாசமா?

    இப்போதையை தலைமுறை இப்படிப்பட்ட கற்பனைகள்ப்படித்து இராமனை வழிபடுவதையையே நிறுத்திவிடுவார்கள் எனறால், தவறு உங்கள் மேலே. பிள்ளைகளுக்கு எதை எப்படி எடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. சரியான மனப்பக்குவத்தைக் கொடுத்தால், அவர்களால் இராமாயணம் இலக்கியாக எடுத்துப்படித்து (கம்பராமாயணம் அபப்டித்தான் படிக்கபப்டுகிறது) இரசிக்கவும், துள்சிதாசரின் ராம சரித்ர மானசைப்படித்து இராமனைப்பூஜிக்கவும் தெரியும். இல்லாவிட்டால் சினிமாவில் காட்டும் காதலை வாழ்க்கையை உண்மை என்று நம்பி, பட்டணத்துப்பெண்ணை காதல் பண்ண மறுக்கும்போது, ஆசிட் வீசி, அல்லது அருவாளால் போடும் முட்டாள்களோடு உங்கள் வளரும் தலைமுறையைச்சேர்க்க வேண்டும். சாமியை எப்போது வேண்டுமோ அப்போதெல்லாம் நன்கு திட்டி விட்டு, பின்னர் பக்தியாக சாமியைக்கும்பிடும் நமக்கு இருப்பது மனப்பக்குவம். இந்துமதத்தில் சாமிகள் பக்தர்களின் திட்டுபடுவதும், புராணங்கள் சில சாமிகள் இப்படிசெய்திருக்கக்கூடாது; அபப்டிச்செய்திருக்ககூடதென்றெலலம் சொல்வதும் இருக்கிறதே? The matter is simple: it is all in the ability to know where to keep what. It is possible in a religion like Hinduism.

    இராமாயணம் இலக்கியாகவும் இருக்கிறது என்று சொல்ல கம்பராமாயணமே இருக்க கைப்புண்ணை கண்ணாடி கொடுத்தால்தான் பார்க்க முடிய்மென்று என்ன வாதம்?

    வால்மீகி இராமாயணமோ, கம்பராமாயணமோ, அல்லது இராமனுஜன் சொன்ன 100 நூறு இராமாயணங்களோ, குடிசைவாசிகள், சேரி மாந்தர், காட்டுவாசிகளுக்குத் தெரியாது. எனவே அவர்கள் இதையெல்லாம் படித்து கெட்டுவிடுவார்கள் என்பது நம்பமுடியாத கற்பனை.

    பக்திக்கு அறிவும் வேண்டும். அறிவினால் தெளிநது வரும் பக்தி சாகும்வரை நிலைக்கும் ஒருவருக்கு – எப்பேர்ப்பட்ட புயலிலும்ந்த உடையா நாணலைப்போன்றது அது.

    அறிவுள்ளவனுக்கு இராமன் ஒரு தெயவம். மற்றவருக்கு அவன் பல மனைவிகள் கொண்ட சத்திரிய இராஜன். இருவர் மேலும் குற்றமில்லை எனப்து அறிவுஜீவித்தனம்.

  47. BSV,

    பிரசன்னசுந்தரின் கருத்துகளோடு எனக்கு வேறுபாடு உண்டு. ஆனால் அவர் கோணத்தை, கருத்தைப் புரிந்து கொள்வது அவ்வளவு கஷ்டமா என்ன?

    ராமாயணம் இலியடோ ஆடிசியோ அல்ல. இலியடும் ஆடிசியும் இன்று வெறும் இலக்கியமாக மட்டுமே நிலைத்திருக்கின்றன. ஆனால் ராமாயணம் கோடிக்கணக்கானவருக்கு புனித நூல்; குறைந்தபட்சம் புனிதமான கதை. அது இப்படித்தான், இந்த வடிவத்தில்தான் இருக்க வேண்டும், ராமன் ஏகபத்தினிவிரதனாகத்தான் சித்தரிக்கப்பட வேண்டும், சீதை கற்பின் கனலாகத்தான் சித்தரிக்கப்பட வேண்டும், ஹனுமனை பெண்பித்தனாக சித்தரிப்பது மாபெரும் தவறு, இன்றைய, நாளைய தலைமுறைகளுக்கு அப்படிப்பட்ட ராமாயணத்தைத்தான் முதலில் அறிமுகப்படுத்த வேண்டும், அதற்கு மேல் ஆர்வம் உள்ள ஏ.கே. ராமானுஜன்கள், ஜடாயுகள், ஆர்விகள், BSVகள் மேலே எதை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளட்டும் என்று அவர் நினைப்பதில் என்ன வியப்பிருக்கிறது? சரியான வார்த்தை கிடைக்கவில்லை, ஒரு ‘ஆசாரமான’ ஹிந்து அப்படி உணர்வது இயல்பானதே. என் கண்ணோட்டத்தில் அதை தவறு என்று கூட சொல்ல முடியாது; எனக்கு இசைவில்லாத கருத்து, அவ்வளவுதான்.

    இந்த நிலை எடுப்பதற்காக அவரை ‘அறிவில்லாதவர்’ என்று குறிப்பிடுவதை கண்டிக்கிறேன். அவரே ஒரு முறை சொன்னது போல மற்றவர் கோணத்திலிருந்தும் யோசிப்பது நல்லது…

  48. இன்று அ.ச. ஞானசம்பந்தம் கம்பனைப் பற்றி ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். கம்பன் பாயிரத்தில் எழுதி இருப்பது:
    தேவபாஷையின் இக்கதை செய்தவர
    மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
    நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
    பாவினால் இது உணர்த்திப் பண்பரோ

    அதாவது மூன்று பேர் எழுதி இருக்கிறார்கள். அ.ச.ஞா. அந்த மூவருள் முந்தையவர் வால்மீகிதான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார். குறிப்பாக வசிஷ்ட ராமாயணம் வால்மீகிக்கும் முந்தையதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார். மேலும் இந்த மூவருக்கு முன்பும் பலரும் வாய் வழிச் செய்தியாக, நாட்டுப்புற வழக்காகப் பாடிய ராமாயணக் கதை பற்றிய பல பாடல்களும் கதைகளும் உண்டு என்றும் அவைகளை ஆதாரமாகக் கொண்டும் கம்பன் பாடினான் என்றும் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

  49. பல வருஷங்களுக்குப் பிறகு இன்று ராஜாஜியின் “சக்ரவர்த்தி திருமகன்” புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். அவர் வார்த்தைகளில்:

    வால்மீகி பகவான் ராமாயணம் பாடிய காலமும், ஸ்ரீராமச்சந்திரன் அவதரித்து இம்மண்ணுலகில் வாழ்ந்த காலமும் ஒன்றே உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால் என்பது புராணம் வாசிப்பவர்களுடைய பரம்பரைக் கொள்கை. உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால், வால்மீகி ரிஷியானவர் ராமாயணத்தை பாடியதற்கு முன்னமேயே, அதாவது புராதனக் காலந்தொட்டே, சீதாராம சரித்திரம் மக்களிடை எழுத்து வடிவம் பெறாமலே பல நூற்றாண்டுகள் வாய்வழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது. கர்ண பரம்பரையாக, முன்னமேயே இருந்த ராமசரிதத்தை எடுத்துக் கொண்டு அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தாற்போல் தோன்றுகிறது. அதனாலேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதென்றும் ஊகிக்கலாம். வாலியைக் கொன்ற முறை – அதில் காணும் நியாயக் குறை, சீதையை காட்டுக்கு அனுப்பிய அநீதி, இவை போன்ற இன்னும் பல சிக்கல்கள்.

    க்ருஷணகுமார் கண்ணில் கூட ராஜாஜி ஹிந்து மத விரோதி ஆகிவிடமாட்டார் என்று நம்பிக்கை இருக்கிறது. இப்போதாவாது வால்மீகிக்கு முன்பும் ராமகதை இருந்தது – குறைந்தபட்சம் இருக்க வாய்ப்பிருகிறது என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *