கொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்

ஶ்ரத்3த4யா தே3யம் | அஶ்ரத்3த4யாSதே3யம் | ஶ்ரியா தே3யம் | ஹ்ரியா தே3யம் | பி4யா தே3யம் | ஸம்’விதா3 தே3யம் ||

கொடுப்பதை, சிரத்தையுடன் கொடுத்திடுக. அசிரத்தையுடன் கொடுத்தல் தகாது. செல்வத்திற்கேற்பக் கொடுத்திடுக. நாணத்துடன் கொடுத்திடுக. அச்சத்துடன் கொடுத்திடுக. சம்மதத்துடன் கொடுத்திடுக

– தைத்திரிய உபநிஷத், 1.11

சிரத்தை என்பது மிக ஆழமான சொல். நம்பிக்கை (faith, belief, trust), விசுவாசம் (loyalty), மன உறுதி (confidence), மதிப்பு (reverence), மன இயைபு (composure), தார்மீக ஆவேசம் (zeal) இந்த அனைத்துப் பண்புகளையும் அச்சொல் ஒருங்கே குறிக்கிறது. சிரத்தை இல்லாதவர்களுக்கும் கூட, கொடுப்பவர் சிரத்தையுடன் கொடுக்க வேண்டும் என்று சுரேஸ்வரர் தனது வார்த்திகத்தில் கூறுகிறார் (श्रद्धयैव च दातव्यं अश्रद्धाभाजनेष्वपि ).

இரண்டாம் வாக்கியத்தை, அஶ்ரத்3த4யா அதே3யம் (அசிரத்தையுடன் கொடுத்தல் தகாது) என்று மட்டுமல்லாது, அஶ்ரத்3த4யா தே3யம் (அசிரத்தையுடனும் கொடுத்திடுக) என்றும் பதம் பிரித்துப் பொருள் கொள்ளலாம். சம்ஸ்கிருத மொழியின் அலாதியான தன்மை இது ! சிரத்தையுடன் செய்யப் படுவதே சாத்விக இயல்புடைய தானம், அசிரத்தையுடன் செய்யப் படுவது ராஜஸ, தாமஸ இயல்புடையது என்று கீதை கூறுகிறது. அப்படியானாலும், தானம் தானம் தான். அதற்குண்டான பலனைத் தரும்.

செல்வத்திற்கேற்பக் கொடுப்பது என்பதைப் பலர் அறிவதில்லை. ஒரு புடலங்காய் வியாபாரி தன் கஷ்டஜீவனத்திலும் தினந்தோறும் ஒரு புடலங்காயைத் தானமாகக் கொடுத்து வந்தானாம். அந்தப் புண்யபலத்தால் அடுத்த பிறவியில் பெரும் செல்வந்தர் வீட்டில் பிறந்து வளர்ந்தான். அவனுக்கு முற்பிறவியையும் புண்யபலனையும் பற்றிய சிறு போதமும் இருந்ததால், அந்தப் பிறவியிலும் தினந்தோறும் ஒரு புடலங்காய் தானம் செய்தானாம். விளைவு, அதற்கடுத்த பிறவியில், மீண்டும் புடலங்காய் வியாபாரியாகவே பிறந்து விட்டானாம் 🙂 சாதாரணமான கதை தான். ஆனால் அது உணர்த்தும் விஷயம் முக்கியமானது.

நாணத்துடன் – கொடுப்பதற்கான பேறு வாய்த்துள்ளது என்ற அடக்கத்துடனும், பணிவுடனும் என்பது பொருள். A civil denial is better than a rude grant.

அச்சத்துடன் – கொடுப்பதால் நமக்கு அகம்பாவம் ஏற்பட்டு விடக் கூடாதே, நல்ல உள்ளத்துடன் நாம் கொடுத்தாலும் பெறுபவன் மனம் புண்பட்டு சிறுமையடைந்துவிடக் கூடாதே என்பதான அச்சம். Wise fear begets care.

“விளையாட்டுக்காகவோ, பாவனைக்காகவோ கூட, ஒருபோதும் அவமதிப்புடன் தானம் செய்ய வேண்டாம். தானம் செய்தவனை, அச்செயல் சந்தேகத்தற்கிடமின்றி அழிக்கும்” என்கிறது வால்மீகி ராமாயணம். अवज्ञाय न दातव्यं कस्यचित् लीलयापि वा | अवज्ञानकृतं हन्यात् दातारं नात्र संशय: ||

சம்மதத்துடன் – தானம் பெறுபவர் அதைப் பயன்படுத்தப் போகும் நோக்கமும் விதமும், கொடுப்பவருக்கு சம்மதமானதாக, ஏற்புடையதாக இருக்க வேண்டும். உதாரணமாக, இந்துப் பண்பாட்டின் மீது குறைந்தபட்சப் பற்றும் அன்பும் கொண்ட ஒரு ஹிந்து, சமூகசேவை என்று சொல்லிக் கொண்டு வரும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு ஒருபோதும் நன்கொடை அளிக்கக் கூடாது. அத்தகைய நன்கொடை மனிதாபிமானமானது அல்ல, மாறாக, தர்மத்திற்கே விரோதமானது. ‘சம்மதம்’ என்ற கருத்து உடன்பாடு இல்லாததால் தான், துரியோதனன் அளித்த வரவேற்பையும் உபசாரத்தையும் தூதனாக வந்த கிருஷ்ணன் மரியாதை நிமித்தமாகவோ இங்கிதத்திற்காகவோ கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அதை மறுத்து விதுரனின் இல்லம் சென்றான்.

‘ஸம்வித்3’ என்பதற்கு ‘நட்புணர்வுடன்’ என்று சங்கர பாஷ்யம் தரும் பொருள் சிறப்பானது. அதாவது, கொடுப்பவர் பெறுவரைக் கீழானவராகக் கருதாமல், நண்பர் என்ற கருத்துடன் எண்ணி தானம் செய்யவேண்டும் என்பது குறிப்பு.

கொடையைப் பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த ஆறு உபநிஷத வாக்கியங்கள் அளித்து விடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *