அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி

மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன் முதலாம் பராந்தகன் என்னும் சோழ மன்னன் காலத்தவன். இவன் காலம் பொ.பி. 10 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி பொ.பி. 920 வரை ஆண்டதாக சொல்கிறார்கள். இவன் கல்வெட்டுகள் தான் சடைய மாறன் என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இன்றைக்கிருந்து 1100 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் திருமூலநாதர் கோயிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அந்த கல்வெட்டு படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் தெளிவாக இல்லாததால் அதை நானே இங்கு தருகிறேன்.

முள்ளிநாட்டு இளங்கோய்க்குடிக்கு மேற்கே புற்றும் தெற்றுமாக இருந்த ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அந்த பாழ் நிலத்தைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான். பூவன் பறையனேன் என்று கல்வெட்டில் பெயரும் உள்ளது.

அரையன் அணுக்கர் என்பவர் அரசனின் மெய்க்காவல் படை வீரர்கள் அதாவது அந்தரங்க காவலர்கள். அரசனோடு அரண்மனை உட்பட அவன் போகும் இடம் அனைத்திலும் இருந்து அவனை காக்கும் பொறுப்பை ஏற்றவர்கள். இத்தகைய உயர்ந்த இடத்தில் இருப்பவன் இந்த பூவன் பறையன். இவன் தன் பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதை தானமாக கோயிலுக்கு அளித்து, அதை கல்லில் வெட்டிக்கொள்ளும் உரிமையும் பெற்றுள்ளான். ஆக பறையர் சாதியினர் குறைந்தது 10 ஆம் நூற்றாண்டு வரை சமூகத்தில் நல்ல நிலையில் தான் இருந்துள்ளனர்..

தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள். வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும், 18 வகை இசை கருவிகளை வாசித்துக்கொள்ளவும் உரிமை பெற்றவர்களாய் இருந்தனர். இப்படி இருந்தவர்கள் தான் ஏதோ ஒரு கால மாற்றத்தில் சமூகத்தில் தாழ்வு நிலையை சந்தித்துள்ளனர்.  தமிழகத்தின் மற்றொரு முக்கிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக பள்ளர்களைக் குறித்தும் இதே போன்ற வரலாற்றுச் சான்றுகளைக் காண்பிக்க முடியும்.

ஆக இன்று பட்டியல் சாதி அல்லது தலித் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொரு சாதியும் வரலாற்று காலம் முதல் ஒடுக்கப்பட்ட சாதிகளாக இல்லை. அவர்களின் தாழ்ந்த நிலை என்பது கடந்த 3-4 நூற்றாண்டுகளில், அதுவும் குறிப்பாக இஸ்லாமிய, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் காலகட்டத்திலேயே ஏற்பட்டது என்று கருத இடமிருக்கிறது.  இது வட இந்தியாவின் வால்மீகிக்கள், நிஷாதர்கள், புலிந்தர்கள் ஆகிய பல குடியினருக்கும் பொருந்தும்.

”பண்டைய இந்தியாவில் சாதி கூட்டுறவு சித்தாந்தமாகவும், கலாசார அடையாளமாகவும் இருந்தது. ஆனால் இன்று அது மாபெரும் சமூக மோதல்களுக்கான சித்தாந்தமாக உருமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது… தற்போதைய தோட்டி சாதியினரின் பெயர்களையும், அவற்றின் உட்பிரிவுகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கையில், இந்த சாதியின் உருவாக்கம் முகமதிய ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது…”

–  சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி?  என்ற கட்டுரையில் அறிஞர் ராம் ஸ்வரூப்

கால வெள்ளத்தினால் தங்கள் வலிமையை இழந்த சாதிகள், மீண்டும் அதே வாய்ப்புகளை பெற்று மெல்ல மேலேறி வரும்போது தங்கள் மக்களில் வாய்ப்பற்றவர்களை தூக்கி விடுவதும், மேலெழுந்தவர்கள் தாங்கள் ஒதுங்கிக்கொள்வதுமே இயற்கை. மானுட இயல்பு. அதை விடுத்து, இடையில் நடந்த சில அலங்கோலங்களைக் காரணம் காட்டி, “தொடர்ச்சியான வாய்ப்புகளை ஒரு சிலரே பரம்பரையாக அனுபவித்தனர்; மற்றவர்களுக்கான வாய்ப்பை மறுத்தனர்; எனவே தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட சமூகம்” என்று கூறிக்கொள்வாராயின், அது அடிப்படை பித்தலாட்டம் அன்றி வேறென்ன? அது, உண்மையில் சமூக நீதி என்று பேசப்படுவதற்கு முற்றிலும் எதிரானதாக இருக்கும் என்பதே நிதர்சனம்.

இயற்கை எழில் கொஞ்சும் மேற்குலைத்தொடரின் அடிவாரத்தில் பசுமை கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது அம்பாசமுத்திரம் திருமூலநாதர் திருக்கோயில்.


இக்கோயிலுடன்  ஊர்காடு  திருக்கோஷ்டியப்பர், வல்லநாடு  திருமூலநாதர் ஆகிய மூன்று கோயில்களையும் சேர்த்து தென்பாண்டி நாட்டின் முப்பீடத் தலங்கள் என்று வழங்குகிறார்கள்.  தாமிரபரணி நதிக்கரையிலுள்ள் 274 சிவத்தலங்களின் பட்டியலையும்  அவை அமைந்துள்ள இடங்களையும் இந்த கூகிள் வரைபடத்தில் காணலாம்.

 

2 Replies to “அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி”

  1. //இடையில் நடந்த சில அலங்கோலங்களைக் காரணம் காட்டி, “தொடர்ச்சியான வாய்ப்புகளை ஒரு சிலரே பரம்பரையாக அனுபவித்தனர்; மற்றவர்களுக்கான வாய்ப்பை மறுத்தனர்; எனவே தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட சமூகம்” என்று கூறிக்கொள்வாராயின், அது அடிப்படை பித்தலாட்டம் அன்றி வேறென்ன?//

    இதைப் பித்தலாட்டம் என்று கூறும் நீங்கள் அதற்கான விளக்கத்தை கட்டுரையில் அளிக்கவில்லை. தொடர்ச்சியாக (அது கடந்து மூன்று நூற்றண்டுகளாக இருந்தாலும் தொடர்ச்சியாகத்தான்) ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதில் ஐயமே இல்லை.

  2. Dear Natarajan ji,

    I perceive that the Author is expressing that harmony prevailed in the Hindu society in spite of many communities being existent. But the classification and discrimination on the basis of caste came into existence only after Muslim and British raj. It is as simple as that.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *