வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

அண்மையில் ஒரு காணொளியைக் காண நேர்ந்தது. பழ.கருப்பையா என்கிற இனவாதி இப்போது திராவிட-இடதுசாரிகளால் பெரும் அறிவுசீவியாக முன்னிறுத்தப்படுகிறார். வயதில் மூத்தவர். கம்பரில் ஆழங்கால் பட்டவராகவும் தமிழ் பற்றாளராகவும் தன்னைக் காட்டிக் கொள்பவர். நேரத்துக்கு தகுந்தாற்போல அரசியல் அரிதாரம் பூசும் கலையிலும் வல்லவர் என கேள்வி. சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதியை காய்ந்து அவரென்ன கடவுளா என கடுமையாக விமர்சித்து புத்தகம் எழுதி பின் ஏது ஆதாயம் கருதினாரோ கருணாநிதியிடமே போய் மீண்டும் புகுந்தார். தன்னை காந்தியன் என்றென்றும் அவ்வப்போது கூறுவார். ஆனால் சாதியத்தையும் தூக்கிப் பிடிக்க தயங்காதவர். தாம் பிறந்த சாதியில் சாதி மீறி திருமணம் செய்தால் அவர்களை சமுதாயத்திலிருந்து நீக்க வேண்டுமென பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த பண்பாளர்.

இவர் அண்மையில் ‘நக்கீரன்’ பத்திரிகையாளர் ஒருவருக்கு கொடுத்த பேட்டியில் சொல்கிறார். ஹிந்து என்கிற பெயரையே பாரதிதான் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தாராம். வள்ளலார் பயன்படுத்தியிருக்கிறாரா அந்த பெயரை என்று கேட்கிறார். ஜோதி அருள் இராமலிங்க வள்ளல் பெருமான் இந்து என்கிற பெயரை பயன்படுத்தியது மட்டுமல்ல. ஆரியர் எனும் பெயரையும் இனவாதம் மறுத்து அதன் பாரம்பரிய பண்பாட்டு ஆன்மிக பொருளில் பயன்படுத்தியிருக்கிறார். எந்த பொருளில் பாரதி ஆரியர் எனும் பெயரை பயன்படுத்தினாரோ அதே பொருளில் வள்ளலெம் பெருமானும் ஆரியர் எனும் பெயரை பயன்படுத்தியிருக்கிறார். அதே பொருளில் இந்து எனும் பெயரையும் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆரமுதெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி

இது வள்ளல் பெருமான் கூறியது.

வள்ளல் பெருமான் வாழ்ந்த கால கட்டம் 1823-1874. எல்லீஸ் அவர்களின் மொழிக் கோட்பாட்டை கடன்வாங்கி அதனை இனவாதக் கோட்பாடாக கால்டுவெல் மாற்றி தமது ஒப்பிலக்கண நூலை வெளியிட்ட ஆண்டு 1856. வள்ளல் பெருமான் வாழ்ந்த காலகட்டத்தில்தான் ஆரிய திராவிட இனவாதக் கோட்பாடு தமிழரிடையே பரவ ஆரம்பித்திருந்தது. கணிசமான தமிழ் பண்டிதர்கள் தம்மை திராவிட இனத்தவரென்றும் ஆரியர் வேறு இனத்தவரென்றும் காலனியக் கோட்பாடுகளை ஏற்று பிதற்றி திரிந்தனர். ஆனால் அதே காலகட்டத்தில் வாழ்ந்த வள்ளலெம்பெருமான் அக்கோட்பாடுகளை ஏற்காமல் அவற்றை தமக்கே உரிய பாணியில் கண்டித்ததாகவே இப்பாடலை நாம் கருத இடமிருக்கிறது.

மேலும் அருட்பெரும் ஜோதி ராமலிங்க வள்ளலார் கூறுகிறார்:

[ஆங்கிரச ஸ்ரீ புரட்டாசி மாதம் 5 ஆம் நாள்]

வேதாகமச் சிறப்பு

இந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி ஞான சித்தி முதலிய சித்திகளைச் சொல்லியிருக்கின்றது. மற்ற எந்த சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாத கல்வியையும் சொல்லவில்லை. ஒருவேளை அப்படி சொல்லியிருக்கிறதாகக் காணப்படுமாகில், அது இந்த வேதாகமங்களில் சொல்லியிருப்பதன் ஏகதேசங்களென்பது உண்மை.

மேலும் தமிழின் தனிப்பெரும் சிறப்பை சொல்ல வருமிடத்தில் ’தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரை’ எனும் தலைப்பில் வள்ளல் பெருமான் சொல்கிறார்:

‘தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த்,ம்,ழ் : ஜடசித் கலை. அ, இ: சித்கலை.’

ஏற்கனவே சித்திகளை சொல்லியிருக்கும் சமயம் இந்து சமயம் மட்டுமே என்பதை வள்ளல் பெருமான் சொல்லியருளிவிட்டார் என்பதை கவனியுங்கள். இனி தமிழின் தனிச்சிறப்பான ‘ழ்’ எனும் எழுத்துக்கு அவர் சொல்லும் விளக்கம் பாரத ஆன்மிக ஒருமைப்பாட்டுணர்வை சொல்வதாக அமைவதை பாருங்கள்:

‘… ழ்: – இந்தச் சிறப்பியல் அக்கரம் பதினெண் மெய்களில் பக்ஷமுடிபின் எண் குறிப்பில் நின்று, சிவயோக பூமியாகிய பரத கண்டத்தில் பௌராணிக தத்துவதாற் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் சுதேசந்தவிர மற்று ஐம்பத்தைந்து தேச பாஷைகளிலும் இல்லாததாயும் பதினெண்ணிலமாகக் குறிக்கப்பட்ட செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமையுரிமையாயும் முத்துறை தமிழுக்குள் முதன்மை துறையானதும் இருக்கு யஜுர் சாமம் என்னும் சமஸ்கிருத வேதாத்திரயப் பொருள் அனுபவத்தை எளிதில் கற்றுணர்ந்து தெளிந்து அனுபவித்தற்குப் பரமேசுவரனது திருவருளைப் பஞ்சாக்ஷர முத்தொழி காரியமான பஞ்சதசாக்கரியால் பிரத்தியக்ஷனுபவம் சித்திக்க நிலயமானதும், ஸ்ரீ மாணிக்க வாசகர், சம்பந்தர், நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய மகாபுருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச்செய்யப்பட்டிருக்கும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களை உடையதும் …. ஆரியம் மகாராட்டிரம், ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளையும் போலாகாமல் பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும் …. இதன் கருத்து யாதெனின் தமிழ்ப் பாஷையே அதிசுலபமாகச் சுத்தசிவானுபூதியைக் கொடுக்குமென்பதாம். திருச்சிற்றம்பலம்.’

பொதுவாக திக மேடைகளில் ஒன்று சொல்வதுண்டு. இந்த நாடே ஐம்பத்தாறு தேசங்களாக இருந்தது என்றும் அதை பிரிட்டிஷ் காரர்கள்தான் ஒரு நாடாக ஆக்கினார்களென்றும். ஆனால் வள்ளலெம்பெருமான் இந்த ஐம்பத்தாறு தேசங்களென்பது பௌராணிக சொல்லாடல் என்று சொல்வதோடு நில்லாமல் பாரதமே சிவயோக பூமி என்கிறார். தமிழின் பெருமைகளை சொல்லுமிடத்து அதுவே ரிக் யஜுர் சாம வேத த்ரயத்தின் பொருளனுபவத்தை அளிக்க வல்லது என்கிறார்.

அதாவது வேதங்கள் ஆரிய சூழ்ச்சி என்று அவர் சொல்லவில்லை. சமஸ்கிருத வேதங்களும் நால்வர் அருட்மொழிகளும் ஒன்றையே சொல்கின்றன என்பதை அவர் சொல்கிறார். பின்னர் பாரதி ’யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்’ என்று சொல்வதை போலவே தமிழே சுத்தசிவானுபவத்தை அளிக்க வல்லது என்கிறார். இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். வள்ளலாரின் தமிழ் மொழி குறித்த அருளுபதேசம் பாரதியின் வரிகளுக்கு தக்க விளக்கமாக அமைகின்றது. தமிழ் மொழியை அதன் இலக்கிய சுவைக்காக மேன்மையாக சொல்லவில்லை. (…அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய அலங்காரமின்றி எப்பாஷையின் சந்தசுகளையும் தன் பாஷையுள் அடக்கி …அக்கரங்களின் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனாதீதட்தைச் சுட்டற சுட்டும் இயற்கை உண்மை தனித்தலைமைப் பெருமை சிறப்பியல் ஒலியாம்…) அருணகிரிநாதர் முத்தமிழ் அடைவு என எதை சொல்கிறாரோ அதுவே தமிழின் பெருமை – அது ’அருட்பெருஞ் ஜோதி என்னுஞ் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீதவியலால் அனுபவிக்கும் இயற்கை உண்மையே’ என்கிறார்.

பின்னாட்களில் இதையே இந்துத்துவர்கள் இந்த தேசத்தின் ஆன்மநேய ஒருமைப்பாடு என கூறுகிறோம். ஆக வள்ளல் பெருமானும் பாரதியும் இந்துத்துவர்களும் ஒன்றாக இணையும் இடம் இது. இதுவே அருட்ஜோதி வள்ளலாரின் அடிப்படை கோட்பாடும் கூட. எனவே கயமையை அகத்தில் கொண்டு கருத்தென வாய்மையின்மையைப் பிதற்றி, தமக்கிருப்பதாக கருதும் மொழி வன்மையாலும் கிடைக்கும் அரசியல், புகழ் இன்னபிற ஆதாயங்களுக்காகவும் அடாது பேசித்திரியும் திரு. பழ. கருப்பையா போன்ற புல்லியர் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களாகிய எமக்கு, தமிழ் இந்துக்களாகிய எமக்கு உண்மை தெரியும். உம்மைப் போன்ற புல்லுருவித்தனமான புன்மை இருட்கணத்தோர் எமக்கு தேவையில்லை. ஒன்று உண்மையை பேசுங்கள். இயலவில்லை எனில் பேசிய பொய்களுக்கு தமிழர் பாதங்களில் மன்னிப்பு கேட்டு போயகலுங்கள். தமிழ் சமுதாயம் உங்களைப் போன்ற கீழ்த்தரங்களை மறந்துவிடுவது மட்டுமே உங்களைப் போன்ற பொய்யுருவே கொண்டு நடமாடும் பதர்களுக்கு நாங்கள் அளிக்கும் காருண்ய மன்னிப்பு.

16 Replies to “வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை”

  1. பழ க கெட்டுப்போவதற்கு இத்தனை வயசு ஆகும் வரை காத்திருக்காமல் சின்ன வயசிலேயே கெட்டுப்போயிருக்கலாம். இது அவரே பிறருக்குச் சொன்ன வசனம் அவருக்கே மிகப்பொருந்துகிறது. பெரும் பாவத்தை சேர்த்துக்கொண்டு போகிறார். பாவம் . அவருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  2. “சாதியும் மதமும் சமயமும் பொய்யான
    ஆதியில் உணர்த்திய அருட்பெரும் ஜோதி” என்ற அருட்பெரும் ஜோதி அகவல் வரிகளுக்கு அ.நீ. அவர்களின் விளக்கம் என்ன?

  3. This Pazha. Karupaya not an honest fellow. DMK gunds broken his hand, afterward he rushed to ‘Arivalayam’ for joing DMK party. He is nothing but coward.

  4. துக்ளக் ஆண்டுவிழாவில் ஐயா பேசியது வலைதளத்தில் இருக்கலாம் அதையும் வெளியிடலாம்.காசுக்கு குரைக்கும் நபர்கள் குறித்து கொஞசமும் அக்கரை எடுத்துக் கொள்ள தேவையில்லை.ஆனால் இந்துக்கள் மத்தியில் வழிபாடு மற்றும் விழாக்கள் திருமணம் இழவு போன்றவைகளில் விரயம் அதிகம்.இதை எந்த இந்து அமைப்பும் அணுகவில்லை.இது இந்து நலனுக்கு விரோதமானது.ஸ்ரீநாராயணகுரு இதில் பெரும் வெற்றி பெற்றார்.ஆனால் தமி்ழ் இந்து வலைதளம் ஸ்ரீநாராயணகுருவின் பணிகளை ஆய்வு செய்யவில்லை.இந்து சமூகம் விரையமான பழக்க வழக்கங்களை விட்டுவிட ஏதும்செய்யவில்லை.கலாச்சாரம் மறுக்கப்பட்ட மக்களுக்கு கலாச்சாரம் வழங்க வேண்டும்.எளிமையான விழாக்கள் திருமணம் போன்றவை மிக அவசியம்

  5. 1982 ம் ஆண்டு கேரளத்தில் உள்ள ஒரு கோடீஸ்வரா ஈழ நண்பரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டேன். நான் அசந்து விட்டேன். ஒரு விளக்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் எரிந்து கொண்டிருந்தது. மேடையில் கோலம் புக்ககளால் மிகவும் அழகாக அலங்காிக்கப்பட்டிருந்தது.மணமக்கள் ஆளுக்கு ஒரு மாலை அணிந்து வந்தார்கள்.மணமக்களின் கைகள் பிடித்து ஒரு பெரியவா் கொடுத்தார். விளக்கு எரியும் மேடையை 3 முறை சுற்றி வந்தார்கள் மணமக்கள். பின் தாலி கட்டப்பட்டது. பெரியவர்களிடம் ஆசியை பெற்றார்கள்.திருமணம் முடிந்தது. நமது வழிபாடு சுடன் சாம்பிராணி எண்ணெய் என்று அதிக அளவில் வெட்டிச் செலவாக உள்ளது. திருமணங்கள் எளிமைப்படுத்த வேண்டும் என்ற ஒழுக்கத்தை கம்யுனிஸ்டகளும் திக காரர்களிடம் இந்துக்கள் கற்றால் நம்மை அவர்கள் மதிப்பார்களா ?

  6. வழிபாடுமுறைகளில் வீண் செலவும் பிரமாண்டமாக இருப்பது எழைகளுக்கு பொருத்தமானது அல்ல என்று கருதிய வள்ளலார்பிரான் எளிய முறையில் அனைவருக்கும் எட்டும் செலவு அதிகம் பிடிக்காத அருட்பெரும் ஜோதி என்ற வழிபாட்டை பதியதாக ஏற்படுத்தினார்.மக்களை ஒற்றுமைப்படுத்தவம் இந்த வழிபாடு பயன் படும் என்று கருதினார்.வள்ளலாரின் இந்த உணா்வை எந்த மடமும் தமிழ்நாட்டில் முன்நிறுத்தவில்லை.இந்து அமைப்புக்கள் கூட வழிபாடுகளில் எளிமை படுத்த விரும்பவில்லை.சிறு தெய்வங்களை வழிபடுவதை வள்ளலார் முற்றிலும் வெறுத்தார்.பழையவை தொடர வேண்டும் என்ற சோம்பேறித்தனம்தான் உள்ளது. வள்ளலாரின் உணா்வை ஆளுமையை தங்கள் கட்டுரை வெளிப்படுத்தவில்லை.

  7. //எளிய முறையில் அனைவருக்கும் எட்டும் செலவு அதிகம் பிடிக்காத அருட்பெரும் ஜோதி என்ற வழிபாட்டை பதியதாக ஏற்படுத்தினார்.மக்களை ஒற்றுமைப்படுத்தவம் இந்த வழிபாடு பயன் படும் என்று கருதினார்.வள்ளலாரின் இந்த உணா்வை எந்த மடமும் தமிழ்நாட்டில் முன்நிறுத்தவில்லை.இந்து அமைப்புக்கள் கூட வழிபாடுகளில் எளிமை படுத்த விரும்பவில்லை.//

    பின் ஏன் வள்ளலார் வழி வெற்றி பெறவில்லை. தமிழ் மக்கள் நிராகரிக்க காரணம் என்ன?

    ஏன் ”கடை விரித்தேன்; கொள்வாரில்லை” என அரற்றினார்?

  8. பின் ஏன் வள்ளலார் வழி வெற்றி பெறவில்லை. தமிழ் மக்கள் நிராகரிக்க காரணம் என்ன?ஏன் ”கடை விரித்தேன்; கொள்வாரில்லை” என அரற்றினார்?
    ——————–
    மிக நல்ல கேள்ளி. 1) அனைவருக்கும் பொது ஒழுக்கமாக சைவ உணவை முன் வைத்தார்
    02.நடைமுறைக்கு கொஞ்சமம் பொருத்தமில்லாத ” மரணமில்லா பெரும் வாழ்வு” உடலை சாகாமல் வைக்கும் கலை பற்றி அதிக பேச்சு – மக்களை அவரிம் இருந்து பிரித்து விட்டது.அழியும்உடலை அழியாமல் காப்பது என்ற அவரது கருத்து மக்களை பயங்காட்டி விட்டது.
    03. சீர்திருத்தங்களை எந்த சமூகமும் எளிதாக ஏற்காது
    04.சாதி ஒழிப்புக்கு தக்க பக்குவம் மக்களுக்கு இல்லை
    05.சுவாமி விவேகானந்தர் போல் இவருக்கு தக்க சீடர்கள் வாய்க்கவில்லை
    06.இன்றும் இவரது மேற்படி கருத்துக்கள் மக்களை அடையவில்லை.
    07.வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்ற கருத்தின் அடிப்படையில் வள்ளலாரை கருணைக்கு உதாரணமாக மக்கள் அறிவார்கள்.அவரது சமூக சீர்திருத்த கருத்துக்கள்
    திராவிட இயக்கத்வதவராலும்
    மற்றவர்களாலும் முன்நிலைப்படுத்தப்படவில்லை.இன்று கூட அதுதான் நிலை.
    08.சுவாமி விவேகானந்தருக்கும் இன்றும் அதே கதிதான். அவரை ஏதோ நன்கு ஆங்கிலம் படித்தவா் சிறந்த சொற்பொழிவாளா் என்ற கருத்துதான் முன்வைக்கப்படுகின்றது.சாதி ஒருங்கிணைப்பை விரும்பியதையோ தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்டு வேண்டும் என்று விரும்பியதையோ சாதிகள் கலந்து புதிய சாதிகள் தோன்றும் அதற்குஅ வழிவிட வேண்டும் என்று அவர் பேசியதையும் இன்றும் யாரும் முன்னிலை படுத்த மாட்டார்கள்.இருந்தாலும் விவேகானந்தாின் கருத்துக்கள் மக்கள் மனதில் அறிவு தீபம் ஏற்றியுள்ளது.அந்த வகையில் அவருக்கு அதிக வெற்றி
    09.விவேகானந்தருக்கு அடுத்து விவேகானந்தரின் வழியில் மகத்தான வெற்றி பெற்றுவருவது ஸ்ரீநாராயணகுருதான். பிறாமணர்களோடு சண்டையிடாமல் தீண்டாமைக்கு அவர் கண்ட தீர்வு -வெற்றி திராவிட கழிசடைகள் அறியாது.தமிழ்பற்றி ஆரியம் திராவிடம் சாதி ஒழிப்பு அது இது என்று பேசி பேசி தங்களை கோடீஸ்வரா்களாக்கியதுதான் திராவிட கழுதைகள் தமிழ் மண்ணில் செய்த சாகசம்.தமிழன் பணத்தை கொள்ளையடிப்பவன் தமிழ் இன காவலனா ?
    ஈவேரா மட்டும் என்ன கிழித்து விட்டார் ? அவரது கருத்துக்கள் என்னவாயிற்று ? மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்களா

  9. அருமையான பதிவு.கருப்பையா போன்றவர்கள்,
    “பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
    மெய்போலும்மே மெய்போலும்மே ”
    என்ற வரிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
    வள்ளலார் மிக உயர்ந்த ஆன்மீக நிலையில் இருந்தவர். சாதாரண சாதகர் அல்லர். அவருடைய உபதேசங்கள் வாழ்வில் ஆன்மீகக் குறிக்கோள் ஒன்றையே கருதிச் செயல்படும் ஒருசிலருக்கே பொருந்தும். அந்த நிலைக்குத் தயாராகும் வரை ஒருவர் சம்பிரதாய வழிமுறைகளையே பின்பற்ற வேண்டி யிருக்கிறது. எல்லோருக்கும் ஒரே வழி என்று சொல்லத் தொடங்கினால், உயர்ந்த கொள்கைகளும் நாளடைவில் உருக்குலைந்து போகும். புத்தமதம் இதற்குத் தகுந்த உதாரணம்.
    ஆன்மீக விஷயங்களில் மட்டுமின்றி, உலோகாயத விஷயங்களிலும் வள்ளலார் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். இவற்றையாவது அதிகம் பின்பற்றுகிறார்களா?
    மக்கள் பல படித்தரங்களில் இருக்கிறார்கள்.ஒரே சரக்கு அனைவருக்கும் பொருந்தாது.உயர்ந்த உணவும் சிலருக்கு ஜீரணமாகாதே!
    வள்ளலாரின் நூல்களை ஊன்றிக் கற்போருக்கு ஒரு உண்மை விளங்கும். வள்ளலார் எதற்கும் எதிரியல்ல: HE PERSONALLY TRANSCENDED THE WORLD AND ITS DIFFERENCES. But the world and its differences cannot be wished away in normal practical life for people with ordinary level of consciousness.
    உருவ வழிபாட்டிலிருந்து, சம்பிரதாய வழிகளிலிருந்துதான் வள்ளலார் அருட்பெருஞ்சோதி என்ற நிலைக்கு வந்தார். இந்த ஹிமாலயத்தைப் பின்பற்றுவது அனைவருக்கும் சாத்தியமாகுமா? ஹிந்துக்களின் எந்தப்பிரிவினரும் வள்ளலாரின் கொள்கைகளை முழுதும் ஏற்கத் தயங்குவார்கள்.
    தனிப்பட்ட முறையில் தீவிர முயற்சி செய்யும் வெகு சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.ஆனால் இது ஒரு இயக்கமாக மாறவியலாது.ஜீவகாருண்ய ஒழுக்கத்தையே தமிழ் நாட்டினர் ஏற்கவில்லையே!நடைமுறையில் அதிகாரி பேதம் இருந்தே தீரும்.
    ஸ்ரீ ராமகிருஷ்ணரையே எடுத்துக்கொள்வோம். ஸ்வாமி ப்ரம்மானந்தரைத் தவிர அவர் வழியை அப்படியே பின்பற்றியது யார்? இன்று அந்த இயக்கம் கத்தோலிக்கச் சபையின் மாடலில் அல்லவா இயங்குகிறது. இது ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறிய வழி அல்லவே! இயக்கம் என்று வந்தால் அசல் அறிவுரைகளுக்கு இதுதான் நேரும்.

  10. சமயச் சடங்குகளில் வீண் செலவும் ஆடம்பரமும் என்ற கருத்து எழுந்திருக்கிறது. உண்மைதான். ஆனால் இத்தகைய செலவுகளினால்தான் செல்வந்தரின் பணம் சமூகத்திற்குச் சேரும். ஊருணி நிறைந்தால் ஊருக்கு நல்லதுதானே..
    அடைப்படைப் பிரச்சினை அதுவல்ல. வசதிபடைத்தவர்களின் செலவு வசதியற்றவர்களின் வருமானமாகிறது. இதுதான் பொருளாதார முறையின் அடிப்படை.One man’s expenditure is another man’s income. ஆனால் இன்று வசதி படைத்தவர்களின் செலவு பிற வசதி படைத்தவர்களுக்கே வருமானமாகிறது! கிராமப்புறங்களின் செலவு நகரத்துக்கு வருமானமாகிறது! இதனால் கிராமப்புரங்கள் நன்மையடைவதில்லை. நகர்புறச்செலவு கிராமங்களை அடைவதில்லை. கிராமங்கள் -சுரண்டப்படுகின்றன.இது ஒரு பிரச்சினை.
    மற்றது, வசதி படைத்தவர்களின் வழியை பிறரும் பின்பற்ற முயல்வதால் நேரும் பின்விளைவுகள்.
    திருமணம் போன்ற சடங்குகளில் இன்று நேரும் செலவுகளின் பெரும் பகுதி சமய சம்பந்தமானது அல்ல. சமய சம்மதம் பெற்றதும் அல்ல.இவை சமூக அந்தஸ்து பற்றியவை. சில மதத்தலைவர்கள் எடுத்துச்சொல்லியும் கேட்பாரில்லை. கேட்க இயலாத சூழ்நிலை எங்கும் உருவாகிவிட்டது.Peer pressure.

  11. வள்ளல் பெருமானின் எளிமையை இந்து அமைப்புக்கள் இந்துக்களிடம் கொண்டு செல்லாதது இந்துக்களுக்கு மிக பெரும் தூரதிஷ்டம்.
    இன்று வீண் செலவுசெய்வது வீண் ஆடம்பரத்திற்காக பணம் இல்லாதவன் நடுத்தரத்தை சேர்ந்தவன் பணம் கொண்டவன் என்று எல்லா இந்துக்களும் தங்களை தாங்களே அழித்து கொள்கிறார்கள். சமூகத்தில் ஊழல் செய்தாவது இலஞ்சம் வாங்கியாவது எவரையாவது ஏமாற்றி மோசடிகள் செய்தாவது கள்ள கடத்தல் செய்தாவது மிக பெரிய ஆடம்பர திருமணம் விழா நடத்தி மற்றவர்களுக்குதங்களது வீண் ஆடம்பரத்தை காட்ட வேண்டும் என்ற நாசகர சிந்தனைகள் உருவாகி உள்ளது.
    கௌரவமாக டீ விற்று தொழில் செய்வது பகோடா விற்று தொழில் செய்வது அவமானமாகி விட்டன.

  12. சில கோயில்களில் நடக்கும் அன்றாட அபிசேகங்களைப் பார்க்கும் போது எனக்கு மனம் பதைக்கும்.பாலை வாளி வாளியாக அள்ளி அள்ளி ஊற்றுவார்கள்.நான் தலையை குனிந்து கொள்வேன்.சில ஆலயங்களில் அபிசேக பொருட்களை முறையாக கழுவாததால் கோவில் பிரகாரம் கடுமையான நாற்றம் வீசும். சிலைகளுக்கு தங்ககவசம் அபிஷேகங்கள் பட்டு எல்லாம் தேவைதானா ?
    தண்ணீரால் சுத்தம் செய்து ஒரு சிறய உடை மறறும் புக்களால் அலங்கரித்துக் கொணடால் போதாதா ? சிலை வழிபாடு மிக மிக விலை மிக்கதாக உள்ளது.Maintenance is very costly.
    1958 க்கு முன்னர் பிறாமணார்கள் பிற்பட்ட வகுப்பினார் கோவில்களுக்குச் சென்று குமு்பாபிஷேகம் செய்ய மாட்டார்கள்.அன்று மே்றபடி கோவில்கள் சக்தியற்றவைகளாக இருக்கவில்லை. குடமுழுக்கு செய்தால்தான் ஆயிச்சு என்பது ஒரு மூடநம்பிக்கை.இன்று சென்னையில் நாடரா் சமூக திருமணமங்கள் அனைத்தும் பிறாமணா்களை காப்பி அடிப்பதில் போய்கொண்டிருக்கின்றத. பயங்கரமான ஆடம்பரம். மனித வளம்மற்ற செலவுகள். பெண்மாப்பிள்ளை பார்ப்பது சீதனம் போன்றவை தவிர்த்து தாலி கட்டும் நிகழ்ச்சிக்காக 3 வேளை விருந்து மண்டபம் மற்றும் பந்தா பகட்டு என்ற பல லட்சங்களை காலி செய்கின்றாரல்கள். ஆனால் வடபழனி கோவிலில் கோவிலைச்சுற்றி எளிமையாக நடக்கும் திருமணங்கள் காண கண்கொள்ளாக் காட்சி. அங்கே ஸ்ரீநாராயணகுரு வெற்றி பெற்று ஜீவிக்கின்றார். இந்துக்களின் வழிபாடுகளில் எளிமை வேண்டும். சாவும் அப்படிதான். பாலை கொண்டு செத்தவன் கல்லறையில்ஊற்றி என்ன பயன்.உயிரோடு இருக்கும் வரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். பின் அடக்கம் எளிமையாக ஒரு மாலை போட்டு ஒரு வாகனத்தில் எடுத்துச் சென்று புதைக்கலாம் அல்லது எரிக்கலாம். வீடு கட்ட மேஸ்திரிக்கு ஒரு நாள் சம்பளம் 800 என்றால் கல்லறை கட்ட அதுவே இரண்டு மடங்கு.கையாளுக்கும் அப்படியே இரட்டைச் சம்பளம். வேலை பளு அரைநாள்தான்.சனி பிணம் தனியே போகக் கூடாதாம்.எனவே ஒரு கோழியை பாடையில் கட்டிதொங்கவிடுகின்றார்கள். அடக்கதலத்தில் கோழியை சிறிது காயப்படுத்தி சில சொட்டு இரத்தத்தை கீழே சிந்தி விட்டு – இறப்பு சடங்கை செய்யவர் தன் வீட்டுக்கு கொண்டு சென்று விருந்தாக்கிக் கொள்வார். சங்கு ஊத சம்பளம். எனது அம்மா இறந்ததற்கு எனது உறவினர்கள் எனக்கு கோடி துணியாக 18 செட் முழுக் கால் சட்டை மற்றும் மேல்சட்டை தைக்காத துணியாக எடுத்துத்தந்தார்கள். நான்கு வேட்டி தைக்காத சட்டையயும் அதில் அடங்கும். எதற்கு இப்படி பணத்தை விரயம் செய்கின்றீர்கள் என்று கேட்டதற்கு அது தான் நடைமுறை என்கின்றார்கள். எனக்கு துணிகள் தேவையில்லை.ஆனால் 22 செட்ட உடைகள் கஎனக்கு கிடைத்துள்ளது.நான் எனக்கு தெரிந்த ஏழைகளுக்கு அள்ளிக் ககொடுத்து அதை தொலைத்தேன். என்ன முட்டாள்தனம்.இப்படி திருமணம் திருவிழா மற்றும் இறப்பு ஆகிய அனைத்தும் படு பயங்கரமான முட்டாள்தனங்கள் பவிரயங்கள் .யார் காப்பாற்றுவார்கள்.
    சல்லிக்கட்டை முஸ்லிம்கள் விளையாடுவதில்லை.பிறாமணர்கள் விளையாடுவதில்லை.வருடத்திற்கு சில உயிர்கள் மாடு முடடி சாகின்றார்கள்.அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. இன்று சல்லிக் கட்டு விழா ஊருக்கு ஊர நடத்த முயற்றிகள் நடைபெற்று வருகின்றது.
    பாவம் இந்துக்கள்.

  13. இந்து மதம் சார்ந்து ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதும் தமிழ்ஹிந்து கூட இதுபோன்று ஒரு கட்டுரையை கூட வெளியிடவில்லை. இந்துக்களாக வாழும் நெறி யில் விரயம் அதிகம் இருந்தால் மனிதவளம் இல்லையெனில் இந்துக்கள் வாழ்க்கை போராட்டத்தில் தோற்று வீடுவார்கள். நல்ல கனி கொடுக்கும் மரங்களாக மனிதவளம் மிக்கவர்களாக இந்துக்கள் மாற வேண்டும்.
    பல கிராமங்களில் இன்னும் கற்கால வழிபாடுகளைப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்கள். சிறு தெய்வ வழிபாடு அவர்களை தேக்கவிலையில் வைத்துள்ளது.கிடை கோழியின் இரத்தம் பச்சையாக சாப்பிடப்படுகின்றது. கோழியை மலதுவாரம் வழியே ஒரு கூாமையாக ஈட்டியை சொருகி அதை நட்டு வைத்து விடுவார்கள். அது போல் தூத்துக்குடி மாவட்டதம் கூளையன் குண்டு என்ற ஊரில் பீழை ஆடு – அதாவது ஒரு கம்பியை சிறு குட்டி ஆட்டின் இன துவாரத்தின் வழியே குத்தி வாய் வழியே எடுத்து விடுவார்கள். இன்றும் நடைபெறுகின்றது. இந்து முன்னணி இந்து மகா சபை இந்து மக்கள் கட்சி அகில உலக இந்து மகா சபை என்?று லட்டா்பேடு இயக்கங்கள் ஆயிரம் தோன்றி என்ன பயன்? மனித வளம் இந்துக்கள் மத்தியில் காண வில்லையெனில் நாம் இந்துக்களாக வாழ்வது உலகிற்கு நட்டமாக இருக்கும்.

  14. ஒரு கோவிலில் தலையில் தேங்காய் உடைக்கப்படுகின்றது இறைவன் மண்டை ஓட்டை தேங்காய் உடைக்கவா படைத்துள்ளான் ?

  15. //சல்லிக்கட்டை முஸ்லிம்கள் விளையாடுவதில்லை.//

    அதன் காரணமாகவும் வீழ்ந்து இருக்கும் இந்து தமிழர்களை மீண்டும் எழவே முடியாமல் அடிப்பதற்கும்
    திராவிட கட்சிகளும் கம்யுனிஸ்டுகளும் இது தான் உனது வீர வீளையாட்டு என்று தெரிவித்து சல்லிக்கட்டை அவர்கள் தலையில் வெற்றிகரமாக சுமக்க வைத்துள்ளார்கள்.அதை இந்து தமிழர்களின் அரசு கார் பரிசு கொடுத்து ஆதரிக்கின்றது.நிலைமை சூழ்நிலை பயங்கரம்.

  16. அன்புள்ள இந்துவா அவர்களுக்கு நன்றி.தாங்களின் கருத்து சரிதான்.இன்று சல்லிக்கட்டுதான் ஏதோ பெரிய விளையாட்டு போல் அனைத்து ஊர்களிலும் நடத்த முயற்சிகள் முன் எடுக்கப்பட்டு வருகின்றது. சில ஊர்களில் உள்ள காளைகளைக் கொண்டுவந்த ஒவ்வொருஊரிலும் ஜல்லிக்கட்டு நடத்த விரைவில ஏற்பாடுகள் முடிந்து விடும். தமிழன இலக்கணம் இல்லாத ஒரு விளையாட்டை விளையாடித்தீர வேண்டிய அளவிற்கு அவன் மனது குழப்பப்பட்டு விட்டது.ஜல்லிக்கட்டு விளையாட விளையாட தமிழன் உருப்பட மாட்டான். இனிமேல் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கி இளவட்டக்கலலை தூக்கும் ஆண்கள் தான்தி ருமணம் செய்யும் தகுதியைப் பெறுவார்கள் என்ற சட்டம் போட்டால் என்ன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *