டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்

இந்தக் கட்டுரை கீழ்க்கண்ட நூலைக் குறித்த அறிமுகம் அல்ல, நூலை முன்வைத்து சில குறிப்புகள்.

வடகிழக்கு ஆயுதப் போராளிகளுடன் ஒரு ரகசிய சந்திப்பு
மூலம்: ராண்தவூ வித் ரிபல்ஸ் -: ராஜீவ் பட்டாச்சார்யா
தமிழில்: வெற்றி வேல் 
கிழக்கு பதிப்பக வெளியீடு.

அஸ்ஸாம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்குப் பிரிவினைவாதங்களின் தேவையற்ற எழுச்சியையும் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியையும் விவரிக்கும் புத்தகம். ராஜீவ் பட்டாச்சார்யா எழுதிய இந்தப் புத்தகம் நமக்கு இரண்டு வகையில் மிகவும் முக்கியமானது.

முதலாவதாக, இந்திய ஒட்டு மொத்த அடையாளத்தில் இருந்து சற்று விலகிய தனி அடையாளத்தை முன்னெடுக்கக் குறைந்தபட்ச நியாயமும் (அது ஒருவகையில் இந்தியாவின் அனைத்து மொழி வழி மாநிலங்களுக்குமே உண்டு) அதிகபட்ச வசதி வாய்ப்பும் (சீனாவுக்கும், கிழக்கு பாகிஸ்தானுக்கும் அருகில் இருப்பதாலும், கிறிஸ்தவப் பெரும்பான்மை பெற்றிருப்பதாலும், கொடு வனாந்தரமாக இருப்பதாலும்) கொண்ட வட கிழக்குப் பகுதி தனது தனித்தன்மையை வன்முறைப் பிரிவினை என்ற அளவுக்குக் கொண்டு சென்றதால் அந்த முயற்சியில் எப்படிப் பரிதாபகரமாகத் தோற்றுவிட்டிருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விவரிக்கிறது; தமிழக நிலப்பரப்பில் வசிப்பவர்களை, மொழியைவிட வலுவாக ஒன்றுபடுத்தியிருக்கும், இந்து மற்றும் இந்திய அம்சங்களை எதிர்க்க எந்தவொரு நியாயமான காரணமும் வசதி வாய்ப்பும் இல்லாத நிலையிலும் தனியாகப் பிரிந்தே தீரவேண்டும் என்ற கூக்குரல்களால் சூழப்பட்டுவரும் நமக்கு வடகிழக்கின் அந்தப் போராட்டத்தின் வீழ்ச்சி பற்றிய வரலாறு ஒரு நல்ல பாடம்.

இரண்டாவதாக, குளிரூட்டப்பட்ட அறைகளில் மேஜைகள் மேலே கவிழ்ந்து படுத்துக்கொண்டு புலனாய்வுக் கதைகளும், அரசியல் ஆருடங்களும் எழுதித் தள்ளும் பத்திரிகைகளையும் நிருபர்களையும் பார்த்துப் பார்த்து பயந்துபோயிருக்கிறோம் நாம். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தன் உயிரைப் பணயம் வைத்துச் செய்திருக்கும் பயணம் ஊடகச் செயல்பாடுகளுக்கு ஓர் நல்ல முன்னுதாரணம். இந்தியாவின் மிக மிகப் பயங்கரமான, வலைவீசித் தேடப்படும் பிரிவினைவாத இயக்க தலைவர்களின் கிடைத்தற்கரிய பேட்டிக்காக கிழக்கு நாகாலாந்தின் அழகிய, அபாயகரமான அத்துவானக்காட்டுக்குள் சுமார் 110 நாட்கள் 800 கி.மீ (அதில் பெரும் பகுதி நடந்தே) பயணம் செய்திருக்கும் ராஜீவ் பட்டாச்சார்யா இந்திய ஊடக உலகில் மாபெரும் சாதனையொன்றை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.

உல்ஃபாவின் ராணுவத் தலைவர் பரேஷ் பரூவா, கிழக்கு நாகாலாந்து விடுதலை இயக்கத்தின் தலைவர் காப்லாங் இருவருடைய விரிவான பேட்டி… இவை இரண்டுக்காகத்தான் இந்தப் புத்தகம்.


நம் சைமன் செபாஸ்டியன் போலவோ வைகோ போலவோ ஊருக்குள் உலவ அனுமதிக்கப்பட்டிருந்தால், இந்த வடகிழக்குத் தலைவர்கள் டிப்ளமேட்டிக் என்ற போர்வையில் பொத்தாம் பொதுவாக வழங்கியிருக்கும் இந்தப் பேட்டிகளை பத்திரிகைகள் பெட்டிச் செய்தியாகக் கூட வெளியிட்டிருக்காது. செய்தி சேனல்கள் நள்ளிரவு 12 மணிக்குப் பிந்தைய ஸ்லாட்டில் கூட ஒளிபரப்பியிருக்காது. ஆனால், பச்சிளம் பள்ளிக் குழந்தைகளை சுதந்தர தின நாளில் கொன்று குவிப்பதில் ஆரம்பித்து பல பிரிவுகளாகப் பிரிந்து இந்திய ராணுவத்தைவிட அதிக எண்ணிக்கையிலானவர்களைத் தமக்குள்ளாகவே சுட்டுக் கொன்றும் மரண தண்டனை கொடுத்தும் காட்டாட்சி நடத்திவந்ததால் ஊருக்குள் நுழைய முடியாமல் உலகமே தேடும் குற்றவாளிகளாக ஆகியிருந்தனர். அதனால் இந்தப் பேட்டிகள் அரிதினும் அரிதான அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகி ஒரு புத்தகமாகவும் ஆகிவிட்டிருக்கின்றன.

கூடவே அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூரி என அனைத்து வட கிழக்குப் பிரிவினைவாத இயக்கங்களும் ம.ந.கூ. போல் கூட்டணி அமைத்ததாகவும், ஆயுதங்கள் வெகுவாகக் குவிந்துவிட்டதாகவும், மியன்மர் ராணுவ அரசு, பாக், சீன சர்வாதிகார அரசுகள் எல்லாம் வட கிழக்குப் பிரிவினைக்கு ஆதரவாக வந்து நின்றுவிட்டதாகவும் பொய்யான தகவல்களை முன்வைக்க விரும்பியவர்கள் அதற்காக மிகவும் சிரமப்பட்டு பெரிய காரியம் செய்திருக்கிறார்கள். அதன் விளைவே இந்தப் புத்தகம். அமெரிக்காவின் திருவிளையாடலின் அங்கமாக சீன-இந்திய சண்டை 2012—–/2013 வாக்கில் மூளும் என்றும் 1962-போல் தவறு செய்யாமல் இந்த முறை சீனாவுக்கு அஸ்ஸாமியர்கள் உதவினால் அஸ்ஸாமின் விடுதலைக்கு சீனா உதவும் என்றும் உல்ஃபா தலைமை நம்பவும் செய்திருக்கிறது. 2012 வாக்கில் முன்னெடுக்கப்பட்டதாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட அந்தக் கூட்டிணைவு கோடைக் காற்றில் கலைந்து சென்ற வெண் பஞ்சு மேகக்கூட்டமாக இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது (மோதியின் அரசு அமைந்த பிறகு சீனாவும் வாலைச் சுருட்டிக்கொண்டுவிட்டிருக்கிறது).

இந்தியா வலைவீசித் தேடும் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களான இவர்கள் கிழக்கு நாகாலாந்து காடுகளில் மறைந்து திரியும் கிழவர்கள்… (இப்போது காப்லாங் உயிருடன் இல்லை. அவருடைய இடத்துக்கு மேற்கு நாகாலாந்தில் இருந்து ஒருவரைத் தலைவராக நியமித்ததைத் தொடர்ந்து அந்த இயக்கத்துக்குள்ளும் விரிசல் விழுந்துவிட்டிருக்கிறது). இந்திய அரசியல்வாதிகள், ஊடகங்கள், பண முதலைகள் எனப் பலருடனும் ரகசிய உயர் மட்டத் தொடர்புகளை உடையவர்கள் என்றாலும் உரிமை உமிழ் நீரைப் பிரிவினை விஷமாக்கிக் கொண்டதால் மறைந்து வாழ விதிக்கப்பட்ட நாகங்கள்.

பிரிட்டிஷ் வல்லாதிக்க சக்திகள் இந்தியாவை காலனியாக்கிச் சுரண்டி அழித்ததுபோல் இந்திய வல்லாதிக்க சக்திகள் (?!) வடகிழக்கு மாநிலங்களை அடக்கிச் சுரண்டுவதாக உலக வல்லாதிக்க சக்திகளின் ராஜ குருக்களான பாஸ்டர்(ட்)கள், அமெரிக்க ஐரோப்பிய எலும்புத் துண்டுகளுக்காக இந்தியாவைப் பார்த்து குரைப்பதையே உயிர் பணியாகக் கொண்ட பாக் இஸ்லாமிய சக்திகள், ”ஜனநாயகம், சுதந்தரம் என்றால் என்ன’ என்று கேட்கும் மாவோயிஸ சக்திகள், அவர்களுடைய இந்தியக் கையாள்களான இடதுசாரி சக்திகள் ஆகியோரின் மந்திர மகுடிகளுக்கு மயங்கிக் காடுகளில் ஊர்ந்து திரியும் விஷ ஜந்துகள்.

வட கிழக்கு மாநிலங்கள் மைய இந்திய/-இந்து ராஜ்ஜியத்திலிருந்து விலகி நிற்கக்கூடியவையே. வடகிழக்கில் வசிக்கும் மங்களாய்ட் இனத்தினர் சிந்து சரஸ்வதி மற்றும் கங்கை நதி தீர மக்கள் திரளில் இருந்து மாறுபட்டவர்கள். அவர்களுடைய பாரம்பரியத்தில் ராமாயண மகாபாரதத்துக்குப் பெரிய இடம் எதுவும் இல்லை. கயிலையின் காலடியில் இருந்தும் சைவ வழிபாடும் பெரிதாக இல்லை என்பதுபோன்ற வாதங்களினடிப்படையிலும் பிரிட்டிஷார் வட கிழக்கு மாநிலப் பிரதிநிதிகளைக் கேட்காமலேயே அந்தப் பகுதியை இந்தியாவுடன் சேர்த்துவிட்டார்கள் என்று சொல்லியும் வட கிழக்கு தனியாகப் பிரிய நூறு சதவிகித நியாயம் இருப்பதாக மேற்கத்திய மேதைகளாலும் அவர்களுடைய க்ளோன்களாலும் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால் வலுவான கலாசார ஒற்றுமை, பண்பாடுப் பிணைப்பு, அனைத்து மன்னர்களிடையேயும் கொடுக்க வாங்கல் (மஹாபாரதப் போரில் கௌரவ பாண்டவ சேனைகளுக்கு விருந்து படைத்தது நம் தமிழக மன்னன்) இருந்தபோதிலும் இந்தியா ஏராளமான சமஸ்தானங்களாலும் பஞ்சாயத்துகளாலும் நிறைந்த தன்னிறைவு பெற்ற தன்னாட்சி அமைப்புகளின் தொகுப்பு என்பதே உண்மை. அந்த வகையில் தமிழகமேகூட ஒற்றை மன்னரின் கீழ் ஒருபோதும் இருந்தது கிடையாது. ஜாதி சமூகங்களாகப் பிரிந்தே கிடந்தது. அதையும் பிரிடிட்ஷார்தான் ஒன்றிணைத்தார்கள் என்று அசட்டுத்தனமாகப் பேச முடியும்.

ஒன்று மட்டும் நிச்சயம், வடா அது பனிபடு நெடுவரை… என குமரி முதல் இமயம் வரை என இந்தியாவின் எல்லையை முதன் முதலில் வகுத்துச் சொன்ன தமிழகமே கூட இந்தியாவில் இருந்து மாறுபட்டது என்று முழங்கும் அறிவீனத்தைவிட வட கிழக்கின் தனித்தன்மை வாதம் கொஞ்சம்போல அறிவார்ந்ததுதான். ஆனால், வட கிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஓர் அங்கமே என்பதற்கு அங்கு நிலவும் இந்து மதத்தின் ஆரம்ப கட்ட வடிவமான இயற்கை வழிபாடும், கயிலையின் இப்பக்கம் அமைந்திருக்கும் நிலவியலுமே முக்கியமான காரணங்கள். அதோடு, பிரிட்டிஷாரை விரட்டியடித்த பிறகு அந்த ஏழு சகோதரிகளும் இந்தியத் தாயின் பிற குழந்தைகளுடன் இணைந்து வாழவே முடிவெடுத்துவிட்டிருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான தேசியத்தில் வேற்றுமைகள் இருப்பதென்பது முழுக்க முழுக்க இயல்பே. அந்தத் தனித்தன்மைகளை இணைக்கும் சரடுகளே இந்து/இந்திய கலாசாரங்கள். வடகிழக்கில் பசுவைப் புனிதமாகக் கருதுவதில்லை என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுவதுண்டு. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் கடைநிலை சாதியினரில் கூட பெரும்பாலானவர்கள் அவ்வகையிலானவர்களே… இந்து மதத்தின் வேர் போன்ற அவர்களின் குலத்தில் பிறந்த மாமேதை உருவாக்கியதுதான் இந்திய அரசியல் சாசனமே. எனவே அதைச் சொல்லி வடகிழக்கைப் பிரிப்பது அறிவீனமே. சூரிய சந்திரரை வழிபடும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் இந்து மதத்தின் ஓர் அங்கம் என்ற கூற்றில் அதைவிட நூறு மடங்கு உண்மையும் நியாயமும் உண்டு.

கத்தோலிக்கர்களுக்கும் ப்ராட்டஸ்டண்டுகளுக்கும் இடையிலேயே ஒற்றுமையை உருவாக்க முடியாத கிறிஸ்தவமும் ஷியா சன்னிகளுக்கு இடையிலேயே கூட நட்புறவை உருவாக்க முடியாத இஸ்லாமும் உலகளாவிய ஒற்றுமையைக் கொண்டுவர உகந்தவை என்று ரத்தச் சரித்திரங்கள் எழுதப்பட்டுவருகின்றன. அதே கையோடு இந்து மதத்துக்கும் இயற்கை வழிபாட்டுக்கும் இடையிலான தொடர்புகளையெல்லாம் மறுதலித்து வட கிழக்கு இயற்கை வழிபாட்டாளர்களைத் தனி பிரிவினராகக் காட்டும் இவாஞ்சலிக்க முயற்சிகள் பல நூற்றாண்டுகளாக நடந்தும்வந்திருக்கின்றன.

நாகாலாந்தின் பிரிவினைவாதக் கூக்குரலுக்கு கிறிஸ்தவ தூபமிடலும் அஸ்ஸாமிய அராஜகங்களுக்கு மேற்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தானின் (அது வங்கதேசமாக ஆனதாக நம்புவது படு முட்டாள்த்தனமே) தூண்டுதலும் முக்கிய காரணமாக இருந்துவருகின்றன. இந்திய மைய அரசு தொலைதூர மாநிலங்களைப் புறக்கணிப்பது தொடர்பான புகார்கள் எல்லாம் மிகவும் பலவீனமானவை. சாலைகளில் ஆரம்பித்து மைய அரசின் திட்டங்கள் எதையும் வரவிடாமல் தடுக்கும் போராளிகள் அதன் பிறகு மைய அரசு எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று புலம்புவது அயோக்கியத்தனம். அதுமட்டுமல்ல… இந்தியர்கள் எங்களுக்கு அந்நியமானவர்கள் என்ற கோஷத்தை எழுப்பும் தார்மிக உரிமை பக்கத்து கிராமத்தினரின் தலையை வெட்டுவதையே வீரமாகக் கொண்டாடி வந்த நாகா இனக்குழுக்களுக்குக் கிடையாது.

”Nagaland for Christ”

1980கள் வரையிலும் இந்த தலைவெட்டிப் பாரம்பரியம் தொடர்ந்திருக்கிறது. நூலாசிரியர் பட்டாச்சார்யா அப்படி பக்கத்து கிராமத்தில் இருந்து ஐந்து பேரைக் கொன்று அதன் நினைவாக ஐந்து மண்டையோட்டு டாலர் அணிந்த நாகா கிராமத் தலைவர் ஒருவரைப் பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறார். குழந்தைகள், பெண்கள் என யாரையும் விட்டு வைப்பதில்லையாம். தனியாக மாட்டினால் ஒரே வெட்டு… ஆநிரை கவர்தல் என நம் பூமியில் நடந்த போரைப் போல் நாகாலாந்தில் தலையை வெட்டுவது மரபாக இருந்திருக்கிறது. பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவருடைய தலையைக் கூட வெட்டாத ஆண்களுக்கு மனைவி கிடைப்பது அரிதாம். அதிலும் பக்கத்து கிராமத்துப் பெண்களின் தலையை வெட்டுவது மிக பெரிய சாதனையாக மதிக்கப்பட்டதாம். ஏனென்றால் ஒவ்வொரு கிராமத்தினரும் பெண்களைத்தான் பொக்கிஷமாக மதித்துக் காவல் காத்திருக்கிறார்கள். பெண்களை வெட்டுவது அந்த கிராமத்து ஆண்களுடைய ஈகோவுக்கு விடப்படும் பெரிய சவாலாக இருந்திருக்கிறது.

தலையை வெட்ட காரணமெல்லாம் கிடையாது. தமிழகத்தில் சாதி விட்டு ஜாதி திருமணம் செய்யும் நாலைந்து சதவிகிதத்தினரில் ஏதோ ஓரிரு நபர்கள் வெட்டிக் கொல்லப்படுவதுண்டு. நாகாலாந்து கிறிஸ்தவர்கள் பக்கத்து கிராமத்து மனிதர்களை அவர்கள் பக்கத்து கிராமத்து மனிதர்கள் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே தலையை வெட்டி ஊர்வலமாகக் கொண்டு சென்று வீட்டு முகப்பில் தொங்கவிடுவார்கள். 1980கள் வரை இதுதான் நடைமுறை யதார்த்தம். இந்து ஜாதிய வன்முறைகளைப் பற்றி விமர்சிப்பதற்கு முன் இத்தகைய கிறிஸ்தவ, இஸ்லாமிய கையாலாகாதனத்தையும் அராஜகத்தையும் பேசும் அறிவு நேர்மை ஒருவருக்குத் தேவை. அதிலும் இந்து ஜாதிய வன்முறைகளை அறவே ஒழிக்கத் துடிக்கும் இந்துத்துவ அரசியல் சக்திகளைப் பழித்தபடியே பிற மதங்களின் சமரசங்களையும் உள்-வன்முறைகளையும் மவுனமாகக் கடப்பது அறிவுலகத் தீவிரவாதமே.

இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், நாகாலாந்து முழுக்க முழுக்க கிறிஸ்தவ மாநிலமாக எப்போதோ ஆகிவிட்டிருந்தது. இங்கிலாந்தை அடியொற்றி நாகா-லாந்து என்று பெயர் சூட்டிக்கொண்டிருந்தார்கள்; இந்தியாவிடமிருந்து விடுதலை வேண்டும் என்று வன்முறைகளில் இறங்கத் தொடங்கியிருந்தார்கள்; அதன் பின்னாலும் பக்கத்து கிராமத்தினரின் தலையை வெட்டும் பாரம்பரியம் தொடரத்தான் செய்தது. தலையை வெட்டுவது நாகா பழங்குடியினரின் பாரம்பரியம் என்பதால் அதில் தலையிடவேண்டாம் என்று போப்பாண்டவர் சொல்லிவிட்டதால் அவர்கள் அதை அப்படியே 1980 வரை நடக்கவிட்டிருக்கிறார்கள். பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து துரத்தப்படுவதற்கு முன்பாக இந்திய நாய்களுடன் எங்களைச் சேர்க்காதீர்கள் என்று பிரிட்டிஷ் மகாராணிக்கு மடல் அனுப்பிய நாகா கிறிஸ்தவ சர்ச்சுகள் அக்கம் பக்கத்து கிராமத்தினர் வெட்டிக் கொண்டு சாவதைத் தடுக்க எதுவுமே செய்திருக்கவில்லை. செத்தவனுக்கு சிலுவைக் கல்லறை வைக்கப்படும்வரை அவர்களுக்கு எதுவுமே பிரச்னையில்லைதானே. சதி வழக்கத்தை இந்து மரபோடு வலிந்து இணைக்க வாய்ப்பு இருந்ததால் அதைத் தடுக்க சட்டமியற்றிய கிறிஸ்தவர்கள் தம்மால் ரட்சிக்கப்பட்ட மாநிலத்தில் தலைவெட்டிப் படுகொலைகள் நீடித்து வந்ததை கண்டுகொள்ளவே இல்லை. அது சரி… சீர்திருத்தமா அவர்களுடைய இலக்கு… இந்துவை இழிவுபடுத்துவதுதானே இலக்கு. நாகலாந்தில் அதற்கான வாய்ப்பு இல்லாததால் வெண்ணுடை வேந்தர்கள் ஜெபமாலையை உருட்டுவதிலேயே குறியாக இருந்துவிட்டார்கள்.

*

இந்தப் புத்தகம் உல்ஃபா இயக்கத்தின் தோல்விக்கான காரணங்களைத் தெளிவாக முன்வைக்கிறது. முதலில் அஸ்ஸாம் அஸ்ஸாமியர்களுக்கே என ஆரம்பித்த இயக்கம் வன்முறைப் பாதையில் நகர ஆரம்பித்ததும் பங்களாதேஷில் அதன் தலைவர்கள் அடைக்கலம் தேடினர். பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு சும்மாக் கிடைக்குமா… மெள்ள பங்களாதேஷில் இருந்து வந்த இஸ்லாமியக் குடியேறிகள் அனைவரையும் ”அஸ்ஸாமின் வளர்ச்சிக்குக்குப் பங்களித்தவர்களாக’ அரவணைக்கும்படியாக மாறி பிஹாரி, பெங்காலி முதலான இந்தியர்களைக் கொன்று ஒழிக்கும் இயக்கமாக ஆனது. ஒரு கட்டத்தில் மேல் அஸ்ஸாம் மாவட்டங்கள் கீழ் அஸ்ஸாம் மாவட்டங்களை ஒடுக்கும் இயக்கமாகத் திரிந்தது. போடோக்கள் இந்த அஸ்ஸாமியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட ஆரம்பித்தனர். கைகளில் புரள ஆரம்பித்த சர்வ தேசக் கோடிகள், காவல்துறையோ நீதித்துறையோ ஊடகங்களோ யாரும் தட்டிக் கேட்க முடியாத கலகக்காரர்களாகிவிட்ட மமதை, ”அண்டை நாடான’ இந்தியாவில் யாரை எதிர்த்துப் போராட என்பது தெரியாத நிலை… போலி அதிருப்திகளின் மேல் கட்டப்பட்ட பிரிவினைவாத மாளிகை பொலபொலவென இடிந்து சரிந்தது.

அஸ்ஸாமில் வாக்குப்பதிவு, 2011

அஸ்ஸாம் மக்கள் எல்லா இந்திய மாநில மக்களைப் போலவே தமது தனித்தன்மையைப் போற்றும் மனநிலையில் இருந்தனர். ஆனால் அதை முன்வைத்து பிரிவினையை அதுவும் வன்முறை வழியில் கேட்கும் அமைப்புகளுக்கு ஆதரவு தரத் தயாராக இல்லை. உல்ஃபா அமைப்பில் இருந்து ஏராளமான உறுப்பினர்கள் ராணுவத் தலைமையின் மீது அதிருப்தி கொண்டு இந்திய அரசிடம் சரணடைந்தனர். நூலாசிரியர் பேட்டிக்குப் போயிருந்த 2012-ல் அவரை பத்திரமாக அழைத்துச் சென்று திரும்பி அனுப்பிய ”சைனீஸ்’ பிஜோய் என்ற உல்ஃபா தளபதி கூட புத்தகம் வெளி வருவதற்குள் சரண்டைந்துவிட்டார்.

நாகாலாந்தை எடுத்துக்கொண்டால் அருணாச்சல் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் நாகாக்கள் வசிக்கும் பகுதியையும் சேர்த்து அகண்ட நாகாலாந்து கேட்டுப் போராடும் குழு, மியான்மர் கலகக் குழுக்களுடன் சேர்ந்து கிழக்கு நாகாலாந்தில் ஒரு தனி குழு என நாகாலாந்து கிளர்ச்சியாளர்களுக்கிடையே இருந்துவரும் மோதல்களை விவரிக்கிறது. பொது எதிரியான இந்தியாவை அழிக்கும் நோக்கிலாவது நீங்கள் அனைவரும் ஒன்று சேருங்களேன் என்று சர்வ தேச ரவுடிகள் தலையாலடித்துக் கொண்டு தவிக்க, வட கிழக்கு வஸ்தாதுகள் தாமும் அழிந்து தன்னைச் சார்ந்தவர்களையும் எப்படி அழித்துவருகிறார்கள் என்பதை இந்தப் பகுதி விவரிக்கிறது.

ஒட்டு மொத்த வட கிழக்குப் பகுதியையும் கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் போல் தனி நாடாகப் பிரித்துவிட்டுச் செல்லவேண்டும் என்றுதான் சர்ச்சில் போன்றவர்கள் விரும்பியிருக்கிறார்கள். ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சி அதை விரும்பியிருக்கவில்லை. எனவே வட கிழக்கு முழுவதையும் இந்தியாவுடன் இயல்பாக இணைத்துவிட்டுச் சென்றது. நாகாலாந்தினர் அதற்கு அப்போதே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். பத்து வருடங்கள் கழித்து நிலைமையைப் பார்த்து முடிவு செய்துகொள்ளலாம் என்று ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. பத்து வருடங்கள் கழித்துப் பிரிந்து செல்ல உரிமை உண்டு என்று அந்த ஒப்பந்தம் சொல்வதாக நாகா கிறிஸ்தவப் போராளிகள் கருதினர். பத்து வருடங்கள் கழித்து இந்தியாவுடன் இணையவேண்டும் என்பதாக புது தில்லி சொன்னது. இது தவிர நாகாலாந்தில் ஒவ்வொரு கிராமமும் தனித்தனித் தீவாக தனிக் குடியரசாகவே இருந்திருக்கின்றன. அண்டை கிராமம் என்பது அண்டை நாடு போலவே அதுவும் பகை நாடு போலவே கருதப்பட்டுவந்திருக்கிறது. எனவே இந்தியாவுடன் நாகாலாந்தைச் சேர்த்தது தொடர்பான கோபத்தைவிட அண்டை கிராமத்துடன் சேர்த்ததுதான் பெரும் கோபத்துக்குக் காரணமாக இருந்தது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை படு மோசமாகவே இருந்திருக்கிறது. இன்று லேசாக சாம்பல் படர்ந்துவிட்டிருக்கிறது என்றாலும் உள்ளுக்குள் அந்த நெருப்பு கனன்று கொண்டுதான் இருக்கிறது.

அஸ்ஸாமைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இஸ்லாமியக் குடியேற்றம் அங்கு தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கிறது. அது தொடர்பான எதிர்ப்புகள் அஸ்ஸாமின் பூர்வ குடிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்திருக்கின்றன. அஸ்ஸாம் அஸ்ஸாமியருக்கே என்று போர்க்கொடி தூக்கிய உல்ஃபா பங்களாதேஷ், பாகிஸ்தான் உதவியைப் பெற்றாக வேண்டிய நிலைக்குப் போனபோது மெள்ள வந்தேறி இஸ்லாமியர்களை அஸ்ஸாமியர்களாக ஏற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. அது அஸ்ஸாமியப் போராளிகளிடையே விரிசலை உருவாக்கியது. சீனா வேறு தன் பங்குக்கு கம்யூனிஸ சித்தாந்தத்தைக் கடை விரிக்க முயன்றது. பொது எதிரி இந்தியா என்ற வகையில் சீனாவின் உதவியை ஏற்றுக்கொண்ட உல்ஃபாவினர் சீன கம்யூனிஸப் பரவலை விரும்பவில்லை. அதனாலும் அந்த இயக்கம் மேலும் பலவீனப்பட்டது.

நாகாக்களுடனும் நெருங்கிய உறவைப் பேண முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் சிலுவையைத் தூக்கி உல்ஃபா போராளிகள் மேல் சுமத்தத் தயாரானார்கள். கிழக்கு/-மேற்கு பாகிஸ்தானால் தூண்டப்பட்ட உல்ஃபா போராளிகளுக்கு இதுவும் பிடிக்கவில்லை. இதனிடையில் நாகாக்களின் இந்திய எதிர்ப்புக்கு உதவி வந்த பர்மா -/மியான்மர் ராணுவ அரசு மெள்ள கிழக்கு நாகாலாந்தில் பவுத்தத்தைப் பரப்ப முயன்றது. அது நாகா கிறிஸ்தவர்களை கோபமுறச் செய்யவே பர்மிய ராணுவத்துக்கும் கிழக்கு நாகாலாந்தினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இப்படியாக ஏராளமான ஊடுபாவுகள், உதவிக் கரங்கள், உள் நோக்கம் கொண்ட உதவிகள், வன்முறைகள் என போராளி இயக்கங்கள் சிதைந்து சின்னாப்பின்னமாகின. சீனாவில் இருந்து ஆயுதங்கள் எளிதில் கிடைத்ததால் சின்ன சின்ன விரிசல்கள் கூட வன்முறைத் தாக்குதல்களாக மாறி புதிய புதிய கட்சிகளாகப் பிரிந்து சென்றன.

நூலாசிரியர் கடைசி வாக்கியமாகச் சொல்லி முடிக்கும் விஷயம் மிகவும் அர்த்தம் பொதிந்தது: வட கிழக்கில் தீவிரவாதம் குறைந்துவிட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்தியா வென்றதாகச் சொல்ல முடியாது.

உண்மைதான். சீன, இஸ்லாமிய கிறிஸ்தவ, பிராந்திய அடையாள சக்திகள் ஒவ்வொன்றும் தத்தமது முழு வெற்றியை இலக்காக வைத்துக்கொண்டு பிற சக்திகளை அதற்கான துணை சக்திகளாக மட்டுமே பயன்படுத்த விரும்புகிறார்கள். உல்ஃபா தலைமை நாகா தலைவரை பிஹூ கொண்டாட வற்புறுத்துகிறது. நாகா தலைவர் பதிலுக்கு உல்ஃபா வீரர்களை கிறிஸ்மஸ் கொண்டாட வற்புறுத்துகிறார். இவையெல்லாம் வேண்டா வெறுப்புடன் ஒரு தற்காலிக சமரசம் என்ற அளவில் அதுவும் பலவீனதொனியில் மட்டுமே பொறுத்துக்கொள்ளப்படுகின்றன. விடுதலை பெற்றுவிட்டால் எப்படியான ஆட்சியை வழங்குவீர்கள் என்ற கேள்விக்கு இரண்டு பிரிவினைவாதத் தலைவரிடமும் எந்த பதிலும் இல்லை. உண்மையில் பதில் இல்லாமல் இல்லை. அதைச் சொன்னால் அடுத்த நிமிடமே கூட்டிணைவு உடைந்து சிதறும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இஸ்லாமிய வந்தேறிகள் பிரச்னையை எப்படிச் சமாளிப்பீர்கள்…
சுதந்தரம் கிடைத்த பின் அதைப் பார்த்துக்கொள்ளலாம்.

கம்யூனிஸ சித்தாந்தப் பரவலை எப்படிப் பார்க்கிறீர்கள்…
சுதந்தரம் கிடைத்த பின் அதைப் பார்த்துக்கொள்ளலாம்.

உங்கள் ஆட்சியின் அடிப்படை சித்தாந்தம் என்னவாக இருக்கும்?
நாங்கள் விஞ்ஞான சோஷலிஸத்தை அமல்படுத்துவோம்…

க்ரேட்டர் நாகாலிஸமா..? கிறிஸ்தவமா… கிழக்கு மேற்கு நாகா தனித்தனியா… வட கிழக்கு மொத்தமும் ஒரே தேசமா..? என்ற கேள்விக்கெல்லாம் எந்த பதிலும் இல்லை. பூசி மொழுகுகிறார்களே தவிர தெளிவான திட்டம் யாரிடமும் இல்லை. அவர்கள் அனைவரிடமும் இருக்கும் ஒரே ஒரு குறிக்கோள்: இந்தியாவே நம் எதிரி என்பதுதான். சீன, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பிராந்திய சக்திகளிடையே இருக்கும் இந்த உள் மோதல்களினால்தான் அவை தோற்றுவிட்டிருக்கின்றன. எனவே இதை இந்திய தேசியத்தின் வெற்றி என்று நிச்சயம் நினைத்துவிடக்கூடாது. பி.ஜே.பி. வட கிழக்கில் மெள்ளக் கால் ஊன்றும் இந்த நேரத்தில் அந்தப் பகுதி மக்களை எவ்வளவு சீக்கிரம் மைய நீரோட்டத்தில் இணைக்க முடியுமோ அதைச் செய்தாகவேண்டும். ஏனென்றால் எளிய மக்கள் இந்திய அரசின் மீது எந்தவித வெறுப்பும் எதிர்ப்பும் இல்லாமல்தான் இருந்துவருகிறார்கள். அவர்களுடைய கிராமங்கள் வழியாகக் கடந்து செல்லும் போராளிகளுக்கு சுமை தூக்கியாகவும் தங்க இடம் கொடுப்பவர்களாகவும் இருப்பது போராளிகளிடம் இருக்கும் துப்பாக்கிக்குப் பயந்து மட்டுமே. அப்பறம் மைய நீரோட்ட இந்திய அதிகாரியைவிட நாகா போராளி மீது நாகா கிராமத்தவருக்கு இருக்கும் பாசம் என்பது குலப் பாசமே தவிர கொள்கைப் பாசமல்ல. எனவே, போராளிக்கு இரும்புக்கரம்… எளிய மக்களுக்கு பஞ்சுக் கையுறை கை குலுக்கல் என பஞ்சாபில் பின்பற்றிய வழிமுறையைப் பின்பற்றவேண்டும்.

மியான்மர் ராணுவ அரசிடம் இருந்து உதவியைப் பெறத் தயாராக இருக்கும் கிழக்கு நாகாலாந்து தலைவர், அவர்கள் நடத்தும் பள்ளிக்கூடத்தின் மேல் மியான்மர் கொடியைப் பறக்கவிடத் தயாராக இருக்கும் அவர் இந்திய அரசு உதவ முன்வரும்போது மட்டும் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடு… நாங்கள் சிலுவையை நாட்டிக்கொண்டு அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்திக் கொள்வோம் என்று சொல்பவர்களாக இருக்கிறார்கள். இதை பாஜக அரசு விரைவில் மாற்றி தேவையான நலத்திட்டங்களை முன்னெடுத்து தேசியக் கொடியை அங்கு பட்டொளி வீசிப் பறக்கச் செய்தாகவேண்டும்.

வன் மிருகங்கள் உலவும் காடுகள், கீழே விழுந்தால் எலும்புகூட மிஞ்சாத மலைகள், பள்ளத்தாக்குகள், கடக்க முடியாத ஆறுகள், முழுக்க முழுக்க நடந்தே கடந்தாகவேண்டிய நெடுந்தொலைவுகள், பூச்சிக்கடிகள், ரத்தம் உறிஞ்சும் அட்டைகள், சுவையான உணவோ சுகமான உறக்கமோ கிடைக்காத பயணம், ராணுவமோ எதிரிக் கிளர்ச்சிக் குழுவோ பார்த்துவிட்டால் அந்த நொடியே மரணம் என்ற அபாய நிலை இத்தனையையும் கடந்து இரண்டு பத்திரிகை நிருபர்கள் எடுத்த இந்தப் பேட்டி ஒரு முக்கியமான சாதனையே. அதிலும் தினமும் காவல் நிலையத்துக்குச் சென்று அங்கு அவர்கள் தரும் ரிப்போர்ட்களை சம்பவ இடத்தில் சம்பவ நேரத்தில் தானே பார்த்து எழுதியதுபோல் செய்திகளை கற்பனை வளத்துடன் எழுதும் தமிழக பத்திரிகை உலகுக்கு இப்படியான உண்மையான புலனாய்வு ரிப்போர்ட்டிங் ஒரு நல்ல பாடமாக இருக்கும். கூடவே, இந்தியத் துணைக்கண்டத்தின் முன்னணி மாநிலமாக இருக்கும் நிலையிலும் அதிருப்தி எண்ணங்களை மிகைப் போராட்டங்கள் மூலம் தூண்ட முயலும் தமிழகப் பிரிவினை கோஷ்டிகள் கற்றுக்கொண்டு திருந்தவும் நிறைய பாடங்கள் உண்டு. நம் மக்கள் புரிந்துகொண்டு இந்தப் போராளிகளை உரிய குப்பைக்கூடைக்குத் தள்ளவும் பாடங்கள் உண்டு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், மே 2018

தமிழகத்திலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, கம்யூனிஸ சக்திகள் தத்தமது அஜெண்டாக்களுடன் களம் இறங்கியிருக்கின்றன. இந்து அடிப்படை சக்திகள் தமிழக கிறிஸ்தவர்களையும் தமிழக முஸ்லிம்களையும் தமிழர்களே அல்ல என்று சொல்லி எதிர்க்க 90 சதவிகிதக் காரணங்கள் இருக்கும் நிலையிலும் அவர்கள் மவுனமாக இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளும் கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகளும் ”தமிழர்கள் இந்துக்கள் அல்ல… இந்துக்கள் தமிழர்கள் அல்ல’ என்ற ஒரு சதவிகித நியாயம் கூட இல்லாத ஒரு கதையாடலை உருவாக்கிப் பேயாட்டம் போட்டுவருகிறர்கள். ஊடகங்கள் அவர்கள் கையில் இருப்பதால் ஏதோ அதுதான் தமிழர்களின் குரல் போல் ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழன் என்ற போர்வையை எத்தனை காலம்தான் அவர்களால் போர்த்திக்கொள்ள முடியும் என்பது தெரியவில்லை.

அல்லது தமிழர்களின் அடையாளங்களான ஜல்லிக்கட்டு, வேட்டி (தமிழ்ச் சேலைக்கு ஏன் இன்னும் போராட்டம் ஆரம்பமாகவில்லை (!?), பொங்கல் என தமிழ் அடையாளங்களை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று தமிழக கிறிஸ்தவர்களையும் தமிழக இஸ்லாமியர்களையும் மிரட்டி வெற்றிகண்டிருக்கும் தமிழ் பிரிவினைவாதிகள் இப்படியே நாகஸ்வரம், கோலம், தாலி, கொழுக்கட்டை, தமிழ்த் தாய் வணக்கம், முப்பாட்டன் என பிற அனைத்துத் தமிழ் அடையாளங்களையும் கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் ஏற்க வைப்பதில் வெற்றி பெறுவார்களா..? அப்படியானால் இந்துவை எதிர்க்கிறேன் என்று சொல்லியபடியே இறுதியில் இந்துவாகத்தான் ஆ(க்)கப் போகிறார்களா..? இயேசுவும் மேரியும் அல்லாவும் இன்னொரு பரிவார தெய்வமாக இருந்துகொள்ள தமிழ் இந்து சங்கப் பலகையில் இடம் உண்டுதானே.

ஆனால், இந்தப் பிரிவினைக் கோஷங்களை வைகோவில் தொடங்கி சீமானில் முடிவதாக நினைத்தால் அதுபோன்ற பிழை வேறு எதுவும் இருக்க முடியாது. ஒரே மொழி பேசுபவர்களும் ஒரே மதத்தை பின்பற்றுபவர்களும் கூட தனி அடையாளத்தைக் கண்டுபிடித்து சண்டையிடும் இந்த உலகில் எந்த இடத்திலும் இல்லாத வகையில் பல்வேறு மொழித் தேசியங்களை இதமாக ஒருங்கிணைத்து தேசமாக்கிக் காட்டியிருக்கும் இந்தியா உலகின் கண்ணை உறுத்துவதாகவே இருந்துவருகிறது.

சர்வதேசச் சிறுபான்மை மதமான இந்து மதத்தினால் இணைக்கப்பட்ட இந்தியத் தேசியத்துக்கு வல்லாதிக்க கிறிஸ்தவ, இஸ்லாமிய, கம்யூனிஸ சக்திகள் மூலம் ஏற்பட்ட, ஏற்பட்டு வரும் இடையூறுகள், தாக்குதல்கள் மிக மிக அதிகம். ஆனால், இஸ்லாமிய படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, கிறிஸ்தவ ஆங்கிலேய அழித்தொழிப்பு போன்றவற்றையெல்லாம்விட இன்று நம் தேசத்துக்கு ஏற்படத் தொடங்கியிருக்கும் ஆபத்துகள் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. ஏனென்றால், இஸ்லாமியத் தாக்குதலையும் கிறிஸ்தவ ஆங்கிலேய அழித்தொழிப்பையும் மீறி ஏற்கெனவே இருந்த பாரதத்தின் இந்து கலாசார ஒற்றுமையையும் மொழி வழித் தேசிய நல்லிணக்கத்தையும் பயன்படுத்தி இந்திய தேசியமாகக் கட்டமைப்பதில் வெற்றி பெற்றே வந்திருக்கிறோம். ஆனால், உலகம் சிறு கிராமமாகச் சுருங்கி, பொருளாதாரம் உலகம் முழுவதற்கும் திறந்துவிடப்பட்டிருக்கும் நிலையில், தேசத்தின் எல்லைகள் மங்கத் தொடங்கி சர்வ தேச சமூகம் உருவாகத் தொடங்கும் இந்த நேரத்தில், மொழி வழித் தேசியக் கதையாடல்கள் உருவாக்கப்பட்டு இந்திய ஒற்றுமைக்கு ஏற்படத் தொடங்கியிருக்கும் உள் பகை மிக மிக மோசமானது.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடக்கத் தொடங்கியிருக்கும் போராட்டங்கள் (அல்லது இந்தப் போராட்டங்கள் நடக்கத் தோதாக அவருடைய மரணம் நடத்தப்பட்டதா) பனி மலையில் சிறு நுனி மட்டுமே.

தமிழ் தேசிய சித்தாந்தம் தெளிவாக இல்லை…
யார் தமிழர்… யார் தமிழர் இல்லை என்பதில் தெளிவில்லை…
உறுதியான ஒற்றைத் தலைவர் இல்லை…
ஃப்ரின்ஜ் குழுக்கள் மட்டுமே பேசிவருகின்றன…
அவர்களிடையே பல குழுக்கள் இப்போதே தோன்றிவிட்டன…
மக்களிடையே இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு இப்போது இல்லை; எப்போதும் கிடைக்கவும் செய்யாது…
இந்திய அரசின் ராணுவம் மிக மிக பலம் வாய்ந்தது

என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி இந்தப் போராட்டங்களை கொஞ்சம் எள்ளலுடன் எகத்தாளமாகப் பார்க்கும் போக்கே இருக்கிறது.

ஆனால், இவை அனைத்துமே எளிதில் சரி செய்யப்படும்; அல்லது இவை எல்லாமே இந்திய-/இந்து தேசிய சக்திகளை மெத்தனமாக இருக்கவைக்க மேற்கொள்ளப்படும் தந்திரங்கள் மட்டுமே. கம்யூனிஸ, இஸ்லாமிய, கிறிஸ்தவ, மொழி வெறி சக்திகள் அனைத்தும் வட கிழக்கைப் போலவே இங்கும் ஒன்று கூடியிருக்கின்றன. வட கிழக்கைப் போலவே புறமுதுகிட்டு ஓட நேர்ந்தால் (அதுதான் நடக்கும்) நல்லதுதான். ஆனால், வட கிழக்கைப் போல் 30/-40 வருடங்கள் பேயாட்டம் ஆடிவிட்டு அதன் பின் அடக்கப்படுவதில் எந்த நன்மையும் நமக்கு இல்லை. இவை முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். ஏனென்றால், வட கிழக்குப் பகுதிகளைப்போல் தமிழகம் பின் தங்கிய மாநிலம் இல்லை. எல்லாவற்றுக்கும் மத்திய அரசை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் தமிழகத்துக்கு இல்லை. எனவே, இந்திய தேசியத்தின் மூலம் நல்ல அஸ்திவாரம் இடப்பட்டிருக்கும் தமிழகம் அதை வைத்தே அதை எதிர்க்கும் பலத்தையும் பெற்றுவிட்டிருக்கிறது. இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே என அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் நோக்கில் பிரிவினை சக்திகளைப் பலப்படுத்தும் நாசகாரக் கும்பல் நாக்கைத் தொங்கப் போட்டபடி காத்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்திய தேசியவாதிகளும் இந்து தேசியவாதிகளும் இந்திய அதிகாரவர்க்கமும் செய்யப்போகிற (செய்யவைக்கப்படப்போகிற) தவறுகளையும் மீறி தமிழ் தனித்தன்மை என்பது தமிழ் பிரிவினையாக பலம் பெறாமல் காப்பாற்றப்பட்டாக வேண்டும். மொழியால் தமிழர்களாகவும் கலாசாரத்தால் இந்துக்களாகவும் தேசத்தால் இந்தியர்களாகவும் இருக்கும் இம் மாநில மக்களுக்கு அது மட்டுமே நன்மை பயப்பதாக இருக்க முடியும்.

One Reply to “டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்”

  1. பைபிளில் ஒரு முரண்பாடு உண்டு, பழைய ஏற்பாட்டு கடவுள் பொல்லாதவர். ஏதும் தவறு செய்தால் மன்னிக்கவே மாட்டார், மகா பயங்கர கோபக்காரர்

    உண்ணாதே என சொன்ன ஒரு பழத்தை ஆசைபட்டு உண்டதற்காக ஆதாமையும் ஏவாளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் அந்த கோபக்கார‌ கடவுள்

    ஆனால் புதிய ஏற்பாட்டில் மகா அப்பாவியாக அடிவாங்கி சிலுவையில் மரித்தவரும் அவரே

    காலங்கள் மாற மாற கடவுளும் மாறியிருக்கின்றார், சரி விஷயம் கடவுள் அல்ல அந்த தொடக்க காட்சி

    ஆம், மனிதன் அன்று அறிவில்லாமல் பகுத்தறிவு இல்லாமல் விலங்கோடு விலங்காக இருந்தான், கடவுளுக்கு அவனுக்கு அறிவு வருவது பொறுக்கவில்லை, அவன் விலங்காக இருக்கவே ஆசைபட்டார்

    அவன் ஆடை அணிவதை கூட அவர் விரும்பவில்லை, இதனால் அறிவு கொடுக்கும் பழத்தை உண்ணாதே என மிரட்டி வைத்திருந்தார்

    Advertisements

    REPORT THIS AD

    ஆனால் பாம்புதான் அவன் அறிவுபெற விரும்பி பழம் சாப்பிட சொன்னது, அதை உண்டதும் மனிதனுக்கு அறிவு வந்து தான் ஆடையின்றி இருப்பதை உணர்ந்து ஆடை அணிந்தான், மனிதனுக்கு அறிவும் மானமும் வந்ததை பொறுக்க முடியா கடவுள் அவனை வெளியே விரட்டினார்

    இது பைபிளில் தொடக்க காட்சி, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தின் தொடக்க காட்சி இதுதான்

    நிச்சயம் பாம்பு மனிதனுக்கு பழம் கொடுத்திருக்காவிட்டால் இப்பூமியில் மனிதனும் விலங்கோடு விலங்காக வாழ்ந்திருப்பான், அவனுக்கு மானமும் அறிவும் புத்தியும் வந்திருக்காது, உலகம் இப்படி மாறியிருக்காது

    இன்று காணும் உணவும் கலையும் விஞ்ஞானமும் வந்திருக்காது, குரங்கு போல் அவனும் திரிந்திருப்பான்

    அதை மாற்றி மனிதனுக்கு அறிவு கொடுத்து சிந்திக்க வைத்து உலகை மாற்றியது சாத்தான் எனும் பாம்பு, ஆம் அவனே மானிட குலம் அறிவுபெற ஆசைபட்டான், உலகம் அவனால் மாறியது

    கடவுளின் அடிமைதனத்தில் இருந்து மானிடனை மீட்டு அறிவும் சிந்தனையும் கொடுத்தவன் அவனே, சிந்திக்க சொன்னவன் அவனே

    சரி, இந்த பகுத்தறிவு திராவிட கோஷ்டிகள் என்றாவது இதை படித்து உணர்ந்து மனிதனுக்கு அறிவு கொடுக்கா கடவுள் ஒழிக, அறிவும் மானமும் கொடுத்த சாத்தான் வாழ்க என ஊர்வலம் போகுமா?

    மனிதனுக்கு அறிவு கொடுக்காமல் அவனை விலங்காய் வைத்தவன் எப்படி கடவுளாவான்? என ஊர்வலம் போகுமா?

    மானிடன் அறிவும் மானமும் பெற்று வாழவிரும்பிய சாத்தான் எனப்படும் பாம்பே கடவுள், அறிவு கொடுக்க விரும்பா கடவுளே சாத்தான் என கிளம்புமா?

    கிளம்பமாட்டார்கள்

    காரணம் கிளம்பினால் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தின் மூல கதையான இச்சம்பவம் அவர்களை புண்படுத்தும் அவர்கள் இவர்கள் முதுகு தோலை உரிப்பார்கள்

    இதனால் பைபிளின் மகா முக்கிய பகுத்தறிவு காட்சி கண்முன் இருந்தும், மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என சாத்தான் போதித்த காட்சி இருந்தும் அதை எல்லாம் ஏறேடுத்தும் பார்க்கமாட்டாகள்

    இந்த கள்ள அறிவின் பெயர் திராவிட புரட்சி, இந்த அயோக்கியதனத்தின் பெயர் ஈரோட்டு ராம்சாமியின் சிந்தனைகள்

    ராமன் அயோக்கியன் ராவணன் நல்லவன் என கிளம்பும் கோஷ்டி, தேவர்கள் அயோக்கியர்கள் அசுரர் நல்லவர்கள் என கிளம்பும் கோஷ்டி, பைபிளில் கடவுள் கெட்டவர் சாத்தான் நல்லவன் நாங்கள் சாத்தான் சாதி என கிளம்பாதது ஏன்?

    அசுரன் என ஒப்புகொள்ளும் கூட்டம் தங்களை சாத்தான் என ஒப்புகொள்ள தயங்குவது ஏன்?

    இதனால்தான் சொல்கின்றோம்

    ஈரோட்டு ராம்சாமியின் இந்துவெறுப்பு சுயநலம் மிகுந்த காட்டுமிராண்டிதனம்

    இந்து இதிகாசங்ளை மட்டும் அவர் குறி வைத்தது சுயநலம் மிகுந்த அயோக்கியதனம்

    ஈரோட்டு ராம்சாமி உண்மையான கடவுள் மறுப்பாளன் இல்லை, இல்லை இல்லவே இல்லை. இந்துமதம் ஒன்றே அவரின் எதிரி

    அவரை நம்புவன் முட்டாள், அவரை சரி என பின்பற்றுபவன் அயோக்கியன், அவருக்காக ஊர்வலம் செல்பவன் மடையனிலும் அடி மடையன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *