தாய்மதம் திரும்புதலும் சாதியும்

(இது வலம் ஏப்ரல் 2018 இதழில் வந்த  கட்டுரை.  முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறது என்பதனால் வலம் இதழின் அனுமதி பெற்று இங்கும் வெளியிடுகிறோம்.  வலம் இதழில் வரும் அனைத்து முந்தைய இதழ்களின் படைப்புகளையும் இங்கு வாசிக்கலாம்  – ஆசிரியர் குழு) 

தாய்மதம் திரும்புபவர்கள் எந்தச் சாதிக்குள் சேர்வார்கள்?

அடிப்படையில் இது ஒரு இயல்பான, நேரடியான கேள்விதான். சமீபகாலத்திலோ அல்லது சில தலைமுறைகள் முன்போ கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மதம் மாறிய இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் மீண்டும் இந்துமதத்திற்கு மாறும் செயல்பாடு தாய்மதம் திரும்புதல் என்று அழைக்கப்படுகிறது. ஹிந்தியில் Ghar Wapsi, அதாவது வீடு திரும்புதல். இந்த விஷயத்தில் மேற்கண்ட கேள்வி, கேள்வியாக அல்லாமல் நக்கலாகவும் ஏளனமாகவும் கேட்கப்படுகிறது.

இந்த நக்கல் தொனி பெரும்பாலான இந்தியர்களது சமூக வரலாற்றுப் புரிதல் குறைபாட்டையே காட்டுகிறது. இதன் பின்னால் இரண்டு பாமரத்தனமான, தட்டையான முன்முடிவுகள் உள்ளன: ‘முதலாவதாக, சாதி என்பது இந்துக்களிடம் மட்டுமே உள்ளது; இந்திய கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களிடையில் சாதிகளும் சமூகப் பிரிவினைகளும் ஏதும் இல்லை. இரண்டாவதாக, இந்துமதத்திற்குத் திரும்புவது என்பது ஒரு நவீனமான, வழக்கத்தில் இல்லாத சமாசாரம்; சமீபகாலத்தில்தான் நாட்டில் பிரிவினையையும் மதக்கலவரங்களையும் உண்டாக்குவதற்காக ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இப்படி ஒன்றைத் தீவிரமாக பரவலாக்கிக் கொண்டிருக்கின்றன.’

இரண்டுமே முற்றிலும் ஆதாரமற்ற, தவறான கருத்துக்கள்.

இந்துக்கள் அல்லாதவர்களின் சாதி அடையாளங்கள்

மிகப் பெரும்பாலான இந்திய கிறிஸ்தவர்களுக்கு தங்கள் சாதி அடையாளம் நன்றாகவும் தெளிவாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் தெரியும். பலர் அவற்றை வெளிப்படையாகவே அறிவிக்கின்றனர். பல மாநிலங்களில் தங்கள் பெயரின் பின்னொட்டாகவும் (Surname) போட்டுக் கொள்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், பல இந்திய கிறிஸ்தவ சமுதாயங்களில், அதே சாதிக் குழுவைச் சேர்ந்த இந்துக்களுடன் நெருக்கமான தொடர்புகளையும் கிறிஸ்தவர்களும் சர்ச் அமைப்புகளும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலவற்றில் மண உறவுகளும்கூட உண்டு. இதன் மூலம் குறிப்பிட்ட இந்து சமூக மக்களிடையே எளிதாகப் புகுந்து மதப்பிரசாரங்களைச் செய்கின்றனர். குயுக்தியுடன் குடும்பங்களையும் குழுக்களையும் கூட்டாக மதமாற்றம் செய்யவும் தொடர்ந்து முயல்கின்றனர்.

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களின் கடற்கரைப் பகுதிகளைப் போல ஒட்டுமொத்த பிரதேசமே கிறிஸ்தவ மயமாகிவிட்ட இடங்கள் உண்டு. அங்குள்ள மீனவ சமுதாயத்தினரும்கூடத் தங்களது இந்து மூதாதையர்களின் சாதிகளை, உட்பிரிவுகள் உட்பட துல்லியமாக நினைவில் வைத்துள்ளார்கள். அவை சார்ந்த சில சடங்குகளையும் நடைமுறைகளையும் கடைப்பிடிப்பதும்கூட உண்டு. இதனை பரதவர் சமூகத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தனது ‘ஆழிசூழ் உலகு’, ‘கொற்கை’ ஆகிய நாவல்களில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அருகிலுள்ள மற்ற கடற்கரைப் பிரதேசங்களில் இந்து பரதவர்கள் தங்கள் பாரம்பரிய சமூக அடையாளங்களுடன் வாழ்ந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் முற்றிலும் நகரமயமாகிவிட்ட மேல்தட்டு கிறிஸ்தவர்களின் குடும்பங்களில்கூட, அதிகபட்சம் இரண்டு மூன்று தலைமுறைகள் முன்புதான் மதமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதால் அவர்களது சாதியும் குலமும் குடும்ப நினைவில் மறையாமல் உள்ளது.

மேற்சொன்னது அதிகாரபூர்வமாக கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டவர்களுக்கானது. இதுபோக, கிறிஸ்தவ மத நம்பிக்கைகளுக்குத் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டு, அதேசமயம் அதிகாரபூர்வமாக மதம் மாறாமல் இந்துப் பெயர்களுடன் வாழும் ‘இரகசிய கிறிஸ்தவர்கள்’ (Crypto Christians) இருப்பதும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களது இத்தகைய போலித்தனத்திற்குக் காரணம், இந்து மதத்தினருக்கு மட்டுமே உரிய குறிப்பிட்ட சில சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருப்பதற்காகத்தான். இத்தகைய கிறிஸ்தவர்களும்கூட இக்கட்டுரையின் தொடக்கத்திலுள்ள கேள்வியை வீராவேசத்துடன் ஏதோ சவால் விடுவது போலக் கேட்பதுதான் குரூர நகைச்சுவை.

இந்திய முஸ்லிம்களைப் பொருத்தவரை, அவர்களது சாதிகள் மற்றும் சமூகக் குழு அடையாளங்கள் இன்னும் சற்று கூடுதலாக, நீண்ட காலமாக, பல்வேறு பிரதேச மாறுபாடுகளுடன் பரிணமித்து வந்துள்ளன. அரச பரம்பரையினர், நவாப்கள், கான்கள் (Khan), பிரபுக்கள் வழிவந்தவர்கள், பாரம்பரிய செல்வந்தர்கள் என்பதில் வரும் மேல்தட்டு முஸ்லீம்கள் தங்களுக்கு அரேபிய, பாரசீக, துருக்கிய, ஆப்கானிய வம்சாவளிகள் உள்ளன என்று கூறுவதில் பெருமை கொள்கின்றனர். அதிலும் பிரிவுகள் உண்டு. மற்ற பெரும்பான்மையான முஸ்லிம்கள் தாங்கள் வாழும் பிரதேசங்களின் எந்த இந்து சாதிகளிலிருந்து தாங்கள் மதம் மாறியவர்கள் என்பதை சந்தேகமின்றிக் கூறிவிட முடியும். இதனால்தான் ராஜபுத்திர முஸ்லிம்கள் என்ற சாதியினர், தேச எல்லைகளைத் தாண்டி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் உள்ளனர். பெனாசிர் புட்டோ மற்றும் பாகிஸ்தானின் பல அரசியல் தலைவர்கள் இந்தச் சாதியினர்தான் (Rajput Muslims என்று கூகிளில் தேடினால் பார்க்கலாம்.) இந்தியா முழுவதும் பட்டர் (Bhatta), பட் (Bhat) என்ற குலப்பெயர் பிராமணர்களுக்கே உரித்தானது. ஆனால், காஷ்மீரி முஸ்லிம்களிடையே அகமது பட், முகமது பட் போன்ற பெயர்கள் சகஜமாக உள்ளன, அங்கு வாழும்
இந்துக்களான காஷ்மீரி பண்டிட்களின் பெயர்களைப் போல. உயர்த்தப்பட்ட சாதியினர் மட்டுமல்ல, எல்லா சாதிகளுக்கும் இது பொருந்தும். உத்திரப் பிரதேசத்திலுள்ள ஜுலாஹா (நெசவாளர்) முஸ்லிம்கள், மேற்கு வங்கத்திலுள்ள பல கைவினைஞர்களான முஸ்லிம்கள் ஆகியவர்கள் அதே சாதிகளைச் சார்ந்த இந்துக்களுடன் அக்கம்பக்கத்திலுள்ள ஊர்களில் பல நூற்றாண்டுகளாக அப்படியே வாழ்ந்து வருகின்றனர்.

தாய்மதம் திரும்புதலின் வரலாறு

இந்துமதத்தின் வரலாற்றில் அன்னியர்களை சுவீகரித்து ஏற்பதும் மதம் மாறியவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் நீண்ட நெடிய காலமாக நடந்து வந்துள்ளது. இது ஒன்றும் நவீனகாலக் கண்டுபிடிப்பு அல்ல.

இஸ்லாமியப் படையெடுப்புக்கு முந்தைய காலகட்டங்களிலிருந்தே இது நிகழ்ந்து வந்துள்ளது. வடமேற்கிலிருந்து வந்த கிரேக்கர்கள், குஷாணர்கள், சகர்கள், டார்டார்கள், பலூச்சிகள் ஆகிய அன்னிய இனக்குழுக்களை நமது இந்து மூதாதையர்கள் தொடர்ந்து சுவீகரித்து வந்துள்ளனர். புராணங்களில் இது பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. நேரடியான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. ‘வ்ரத்யஸ்தோமம்’ போன்ற வைதீகச் சடங்குகள் இதற்கென்றே உருவாக்கப்பட்டன. இவர்களில் போர்க்குடியினராக உள்ளவர்களை க்ஷத்திரியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான், தொன்மையான சூரிய வம்சம், சந்திர வம்சம் ஆகியவற்றோடு, ‘அக்னி வம்ச க்ஷத்தியர்கள்’ எனக் கூடுதலாக ஒன்றும் புராணங்களில் இணைக்கப்பட்டது என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

இந்தத் தொல்மரபு இஸ்லாமியப் படையெடுப்பின்போதும் மறக்கப்படவில்லை. வட இந்திய மையநிலத்தில் இஸ்லாமிய அரசாட்சி பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தாலும், அங்கு ஒட்டுமொத்தமாகவும் முழுமையாகவும் இஸ்லாமிய மதமாற்றங்கள் ஒருபோதும் நிகழவில்லை. எனவே வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம், வாள்முனையில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் தங்கள் தாய்மதத்திற்குத் திரும்புவதும் நடந்து கொண்டேயிருந்தது. இஸ்லாமிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத இந்து அரசுகள் அங்கங்கு தொடர்ந்து இஸ்லாமிய மைய அரசாட்சியையும் அதன் பிரதிநிதிகளையும் எதிர்த்துப் போரிட்டுக் கலகம் செய்து வந்தனர். சாதுக்களும் சமயத் தலைவர்களும், அருளாளர்களும் பக்தி இயக்கத்தின் மூலம் தொடர்ந்து இந்து ஆன்மீக நெறிகளைப் பரப்பி வந்தனர். இவை இத்தகைய வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டேயிருந்தன. மத்தியகால இந்திய வரலாற்றை எழுதிய கே.எஸ்.லால்[1], எம்.ஏ.கான்[2] போன்ற முக்கிய வரலாற்றாசிரியர்கள் இதனைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

தேவல ஸ்மிருதி (Devala Smriti) என்ற சம்ஸ்கிருத நூல் பொ.பி 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. பாரதத்தின் வடமேற்கு நுழைவாயிலான சிந்து பிரதேசத்தை இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் ஆக்கிரமித்த பின்பு, அவர்களது படைகள் இந்தியாவின் உட்புறப் பகுதிகளில் ஊடுருவிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த நூல் எழுந்தது. மிலேச்சர்களால் கைப்பற்றப்பட்டவர்களையும் மதமாற்றத்தினால் தர்ம நெறிகளிலிருந்து தவறியவர்களையும் மீண்டும் சமுதாயத்திற்குள் சுவீகரிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இந்த நூல் கூறுகிறது. திரும்ப வருபவர்களுக்கு முதலில் சுத்தப்படுத்துதல், பிராயச்சித்தம் ஆகியவற்றுக்கான சடங்குகளைச் செய்யவேண்டும். முஸ்லிம் படைகளால் அபகரிக்கப்பட்டு வன்புணர்வுக்கு ஆளான பெண்களையும், அதன் காரணமாகக் கருவுற்றுக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான பெண்களையும்கூட பிராயச்சித்த சடங்குகளுக்குப் பின் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பல அறிவுறுத்தல்களை இந்த நூல் கூறுகிறது.

பெண்களின் கற்பையும், அதன் புனிதத்துவத்தையும் கௌரவத்தையும் சார்ந்த மிகக் கறாரான, இறுக்கமான வரையறைகள் நிலவி வந்த காலகட்டத்திலும் தேவல ஸ்மிருதியின் இத்தகைய சுதந்திரமான, மனிதநேயபூர்வமான பாராட்டுக்குரிய கண்ணோட்டம் வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது. இன்றைய காலகட்டத்தில்கூட இந்தியச் சூழலில் இத்தகைய ஒரு ஏற்பு மனப்பான்மையைக் கற்பனை செய்ய இயலாது. இப்படி ஒரு நிலைப்பாடு ஒரு பாரம்பரியமான ஸ்மிருதி நூலில் இடம்பெற வேண்டுமென்றால், எந்த அளவுக்குக் கடினமான வாழ்க்கைப் போராட்டத்தையும், துயரமான சூழ்நிலையையும் அக்காலகட்டத்தில் இந்துக்கள் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. வேறு சில மத்தியக் காலத்திய இந்து தர்ம சாஸ்திர நூல்களிலும் (உதாரணமாக, யாக்ஞியவல்கிய ஸ்மிருதிக்கு விக்னேஸ்வரர் எழுதிய விரிவுரை) இதே பாணியிலான சட்ட விதிகள் கூறப்பட்டுள்ளன.

இந்த விதிகள் நூல்களோடு மட்டும் நின்றுவிடாமல் நடைமுறையிலும் கடைப்பிடிக்கப்பட்டன என்பதற்கான சான்றுகளும் கிடைக்கின்றன. வட இந்தியாவில் மட்டுமின்றி, இஸ்லாமியப் படையெடுப்புகள் நிகழ்ந்த தென்னிந்தியப் பகுதிகளிலும் இவை புழக்கத்திலிருந்தன. வரலாற்று அறிஞர் டி.ஆர்.பண்டார்கர் ஒரு சம்பவத்தைத் தனது நூலில் குறிப்பிடுகிறார். இதன்படி, பொ.பி. 1398-99ம் ஆண்டில் விஜயநகர ஆட்சியின் தொடக்க காலத்தில், கர்நாடகத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2,000 பிராமணப் பெண்கள் பிரோஸ் ஷா பாமினியின் படைகளிடமிருந்து மீட்கப்பட்டனர். சுத்தி சடங்குகளுக்குப் பின் அவர்கள் கிராமத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்[3].

விஜயநகரப் பேரரசை நிறுவிய சகோதரர்களில் ஒருவரான புக்கராயரும்கூட இவ்வாறு தாய்மதம் திரும்பியவர்தான் என்று இந்தப் பேரரசு குறித்த காவியப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. காம்பிலி பேரரசின் படைவீரராக இருந்த அவர் இஸ்லாமியப் படையெடுப்பின்போது சிறைப்பிடிக்கப்பட்டு வாள்முனையில் முஸ்லிமாக மதமாற்றப்பட்டிருந்தார். தனது தீரத்தாலும் விவேகத்தாலும் தப்பி வந்து மீண்டும் இந்துவானார். வரலாற்றின் ஒரு மகத்தான திருப்புமுனையாக, அவர் உருவாக்கிய சாம்ராஜ்யம்தான் தென்னிந்தியாவின் இஸ்லாமிய ஆதிக்கம் பரவாமல் கவசமாக நின்று காத்தது. ஸ்ரீரங்கம், மதுரை ஆகிய புனிதத் தலங்களையும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டது.

முகலாய ஆட்சியின் பிந்தைய காலங்களில், மராத்தியர்களும் சீக்கியர்களும் எழுச்சி பெற்று அதற்கெதிராகப் போர்க்கொடி உயர்த்தியபோது அது வலுவிழந்துகொண்டே வந்தது. இந்தக் காலகட்டத்திலும் கணிசமான அளவில், இந்துக்கள் தாய்மதம் திரும்பினர் என்று கருத முடியும். சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில், இஸ்லாமியப் படையின் தளபதிகளாக இருந்தவர்கள் சிலர் தாய்மதம் திரும்பி அவருடன் இணைந்து கொண்டது குறித்த சம்பவங்கள் உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுவாமி தயானந்த சரஸ்வதி நிறுவிய ஆரிய சமாஜம், தாய்மதம் திரும்புதலுக்கான ‘சுத்தி’ சடங்குகளை மிகப் பரவலாக வட இந்தியா முழுவதும் கொண்டு சென்றது. ‘சுத்தி இயக்கம்’ (Shuddhi movement) என்றே இது அழைக்கப்படுகிறது.

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆரிய சமாஜத் துறவி சுவாமி சிரத்தானந்தர் இதனை இன்னும் விரிவாக்கினார். தீண்டாமை ஒழிப்பு, அனைத்து சாதியினருக்கும் கல்வியும் வேத சம்ஸ்காரங்களும் அளித்தல், முஸ்லிம்களைப் பெருமளவில் தாய்மதம் திரும்பவைத்தல் ஆகிய மும்முனைகளில் ஆரிய சமாஜத்தின் பணி நிகழ்ந்தது. டாக்டர் அம்பேத்கரும் கூட ஆரிய சமாஜத்தின் சமுதாய சமத்துவப் பணிகளைப் பாராட்டி எழுதியுள்ளார்.

சுவாமி சிரத்தானந்தர் காந்திஜியுடன்

இவ்வளவு நீண்டகாலமாக இது நடந்து வந்திருக்கிறது என்னும்போது, தாய்மதம் திரும்பும் இந்துக்கள் எந்த சாதிகளுக்குள் இணைந்தார்கள்? விடை மிக எளிது. தங்கள் சாதி அடையாளத்தை அவர்கள் மறக்கவும் இழக்கவும் இல்லை என்பதால் அந்தந்த சாதிகளுக்குள் சென்று சேர்ந்தார்கள். சில நேரங்களில் அவர்கள் புதிய உபசாதிக் குழுக்களை உருவாக்கி அவை காலப்போக்கில் பெரிய, பிரதான சாதிக் குழுக்களுடன் பிரிவின்றிக் கலந்து விட்டிருக்கக்கூடும். தாழ்த்தப்பட்ட சமூகங்களிலும் இதுவே நிகழ்ந்தது. அவர்கள் சமூகப் படிநிலையில் கீழே இருந்தாலும் கூட்டான ஒரு சாதியாக இணைந்திருப்பது என்பது சமூகப் பாதுகாப்பையும் ஒட்டுறவையும் அளிக்கும் விஷயம் என்பதால் அவ்வாறே செய்திருக்கக்கூடும். இதுதான் சுவாமி விவேகானந்தரின் கருத்து. 1899ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘பிரபுத்த பாரத’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் சுவாமிஜி இதைப் பற்றிப் பேசியுள்ளார்[4].

பத்திரிகையாளரின் சொற்களிலேயே அதைக் காண்போம்:

“நம்முடைய ஹிந்து மதத்திலிருந்து வெளியேறினவர்களை மீண்டும் நாம் சேர்த்துக் கொள்ளலாமா என்பது பற்றிப் பேசுவதற்காக உங்களைக் காண வந்திருக்கிறேன்” என்று நான் பேச்சை ஆரம்பித்தேன். “அவர்களை ஏற்க வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா?” என்று கேட்டேன்.

“ஆமாம்; அவர்களைச் சேர்த்தே தீர வேண்டும்; சேர்த்துக் கொள்ள முடியும்” என்று கூறி, சுவாமிஜி ஒருகணம் தீவிரமான சிந்தனையில் மூழ்கினார். பின்பு பேச்சைத் தொடர்ந்தார். “இப்படிச் செய்யாமற் போனால் நாம் ஜனத்தொகையில் குறைந்துகொண்டே போய்விடுவோம்… இதுமட்டுமின்றி ஹிந்து சமயத்தை விட்டு ஒருவன் வெளிச்செல்வானானால் நமது எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டது என்பது மட்டுமல்ல; எதிரியில் ஒருவன் அதிகமாகிவிட்டான் என்று ஆகுமே. முகம்மதிய சமயத்தையோ கிறிஸ்தவ சமயத்தையோ தழுவும் ஹிந்துக்களில் பெரும்பாலோர் வாளுக்குப் பயந்தே மாறியிருக்கவேண்டும். அல்லது அப்படிப்பட்டவர்கள் பரம்பரையில் பிறந்திருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை எந்த விதமான இன்னலுக்கும் ஆளாக்குவது நேர்மையல்ல என்பது கண்கூடு. பிறவியிலேயே அந்நியர்களாக உள்ளவர்களை என்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்கலாம். கூட்டம் கூட்டமாக பண்டைக் காலத்தில் திரும்ப மாற்றப்பட்டிருக்கிறார்களே…”

“சுவாமிஜி! இவர்கள் எந்த ஜாதியினரைச் சேர்ந்தவர்களாவார்கள்?” என்று நான் துணிந்து கேட்டேன். “ஏதாவதொரு ஜாதி இருக்கவேண்டும். இல்லாமற் போனால் பரந்த இந்த ஹிந்து மத உடலோடு அவர்கள் ஒருபோதும் ஒன்றி இணைய முடியாதல்லவா? அவர்களுக்குரிய தக்க இடத்தை நாம் எங்கே தேடலாம்?”

சுவாமிஜி அமைதியாகக் கூறினார்: “நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக்கொள்வார்கள். வைஷ்ணவத்தில் இந்த முறை பின்பற்றப்படுகிறது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். வேறு வேறு ஜாதிகளிலிருந்து வந்தவர்களும் மதம் மாற்றப்பட்ட அந்நியர்களும் அதன் கொடிக்கீழ் இணைந்து ஒரு தனி ஜாதியாக, கௌரவம் வாய்ந்த ஒரு ஜாதியாக வைணவம் உள்ளது. இராமானுஜர் முதல், வங்கத்தில் சைதன்யர் வரையில் திகழ்ந்த பெரிய வைஷ்ணவ ஆசார்யர்கள் இம்முறையையே கடைப்பிடித்திருக்கிறார்கள்.

“புதிதாக வந்த இவர்கள் எங்கே திருமணம் செய்து கொள்வார்கள்?”

“இப்பொழுது செய்துகொள்வது போலத் தமக்குள்ளேயே செய்து கொள்வர்” என்று அமைதியாகப் பதிலளித்தார் சுவாமிஜி.

“அவர்கள் எந்தப் பெயரை வைத்துக் கொள்வார்கள்? அந்நியர்களும் பிற மதத்தைத் தழுவிப் பிறகு திரும்பி வருகிறவர்களும் புதிதாகப் பெயர் வைத்துக்கொள்ள வேண்டுமே. அவர்களுக்கு ஜாதிப் பெயர்களைத் தருவீர்களா அல்லது வேறு ஏதாவது செய்வீர்களா?”

“உண்மைதான். பெயரில் பெரும் பொருள் இருக்கத்தான் இருக்கிறது” என்று சிந்தனையில் ஆழ்ந்த சுவாமிஜி இந்தக் கேள்விக்கு பதிலாக ஒன்றும் கூறவில்லை.

ஆனால் நான் கேட்ட அடுத்தக் கேள்வி அவரை வேகப்படுத்தியது. “சுவாமிஜி! பல வடிவங்கள் வாய்ந்த ஹிந்துமதக் கொள்கைகளிலிருந்து தமக்கு வேண்டிய ஓர் அமைப்பைத் தேர்ந்தெடுக்கும்படிப் புதிதாக வந்த இவர்களை விட்டு விடுவீர்களா அல்லது அவர்களுக்காக ஒரு சமய வடிவத்தை அமைத்துத் தருவீர்களா?

“என்ன கேள்வி கேட்டீர்கள்! அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களே தேர்ந்தெடுத்துப் பின்பற்றாவிட்டால் ஹிந்துமதத்தின் உட்சக்தியே குலைந்து போய்விடும். நம் சமயத்தின் சாரமே இஷ்டதெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற இந்தச் சுதந்தரத்தில்தான் அடங்கியுள்ளது.”

*

இன்றைய சூழலில் தாய்மதம் திரும்புதல் குறித்த பிரசாரங்களையும் நிகழ்வுகளையும் இந்த நீண்ட வரலாற்றின் தொடர்ச்சியாகவே பார்க்கவேண்டும். இந்திய மையநிலத்தில் எப்போதெல்லாம் இந்துக்கள் வலிமை பெற்று தங்கள் பாரம்பரியப் பெருமிதத்தை நிலைநாட்டுகிறார்களோ, அப்போதெல்லாம் இயல்பாகவே நிகழ்வது இது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது. இந்திய அரசியல் சட்டமும் சுதந்திரமாக, விருப்பத்திற்குட்பட்டு ஒருவர் தனது மதத்தைத் தேர்வு செய்யும் உரிமையை அளிக்கிறது. இப்படியிருக்க, இதனை எதிர்மறையாகவும் வெறுப்புணர்வு பிரசாரமாகவும் சித்தரிப்பது என்பது வரலாற்றையே மறுதலிப்பதாகும்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில், 1980களின் தொடக்கத்தில் நிகழ்ந்த மீனாட்சிபுரம் மதமாற்றத்தின் பின்னணியில்தான் தாய்மதம் திரும்புதல் குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டது. பின்பு தனிப்பட்ட அளவிலும் பொது நிகழ்ச்சிகளாகவும் ஆங்காங்கு இந்தப் புனிதப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அவ்வப்போது நாளிதழ்களில் சிறிதும் பெரிதுமாக வரும் செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. ஆரிய சமாஜத்தின் பாணியிலான சுத்தி சடங்கு என்றில்லை, இவற்றை ஏற்பாடு செய்யும் ஆன்மீக, சமூக அமைப்புகள் தங்களுக்கு உகந்த வகையில் இதை நடத்துகின்றன. திருக்குளத்தில் நீராடுதல், விபூதி குங்குமம் அணிந்து கொள்ளுதல், கோயிலுக்குச் சென்று வழிபடுதல், இந்து பெரியோர்கள், துறவிகள், குலமூத்தோர் ஆகியோரிடம் ஆசி பெறுதல் என்று பலதும் இவற்றில் அடங்கும். உதாரணமாக, 2011ல் ஒரு தனிப்பட்ட குழுவாக வாழும் நீலகிரியின் படுகர் சமுதாய மக்களிடையே கிறிஸ்தவ மதப்பிரசாரம் புகுந்தது. அந்த சமூகத் தலைவர்கள் உடனடியாக ஒன்றுகூடி அதற்கு எதிராக இயங்கினர். ஏமாற்றி மதம் மாற்றப்பட்டிருந்த தங்கள் சகோதரர்களை எளிய சடங்குகளின் மூலம் உடனடியாகத் தாய்மதம் திரும்ப வைத்தனர்[5]. தாய்மதம் திரும்புபவர்கள் அதிகாரபூர்வமாக அவற்றை அரசாங்க கெஜட்டில் பதிவு செய்வதும் ஊக்குவிக்கப்படுகிறது.

சாதிய நோக்கும், சாதிசார்ந்த அணிதிரளல்களும் இன்றைய அரசியல் சமூக சூழலில் பல்வேறு விதமான அதிகாரப் போட்டிகளுக்கும், அமைதிக் குலைவுகளுக்கும், அநியாயமான இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளைக் கோரும் போராட்டங்களுக்கும், பரஸ்பர பகைமைகளுக்கும் காரணமாகி வருகின்றன. அது நாம் ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளவேண்டிய சவால்களில் ஒன்று. ஆனால் தாய்மதம் திரும்புதல் என்ற இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில், சாதி எந்த விதத்திலும் தடையாகவோ பிரசினையாகவோ இல்லை என்பதே உண்மை.

சான்றுகள்:

[1] Legacy of Muslim Rule in India, K.S.Lal. மின்னூல் (இலவசம்) – https://goo.gl/js3e52

[2] Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery, M.A. Khan. மின்னூல் (இலவசம்) – https://goo.gl/pxChDq

[3] Some Aspects of Ancient Indian Culture, by DR Bhandarkar, Rev. JM Anthos, Asian Educational Services, 1989. pp 68

[4] Complete Works of Swami Vivekananda, Volume 5, Interviews. தமிழ் வடிவம்: எழுமின் விழிமின், விவேகானந்த கேந்திர வெளியீடு.

[5] https://tamilhindu.com/2011/06/nilgiris-baduga-struggle-against-conversion/

5 Replies to “தாய்மதம் திரும்புதலும் சாதியும்”

  1. எஜ்ஜாதியில் சேர்த்துக்கொள்ள்ப்படுவார்கள் என்ற கேள்விக்குப் பதில் எளிமையாகக் கொடுக்க்ப்பட்டிருக்கிறது. பிறமதத்துக்குபோவதற்கு முன் எஜ்ஜாதியில் இருந்தார்களோ அஜ்ஜாதியிலே சேர்க்கப்படுவார்கள். இதுவும் விமர்சகர்க்ளால் நக்கலாகத்தான் பார்க்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்த்ப்பட்ட ஜாதிகளில்தான் போயடையவேண்டும் எனபதே விதி….பிறமதங்களுக்குச் சென்ற பின்னும் அவர்களின் ஜாதியடையாளம் தொடர்ந்தது. எனபது கிருத்துவத்துக்கு, சீக்கியத்துக்குப் பொருந்தலாம். இசுலாமுக்குமா?

    இதில் இன்னொரு சங்கடம்: சிலர் பிறமதங்களுக்கு 4 அல்லது 5 தலைமுறைகளுக்கு முன்பே மாறினர் அவர்கள் மூதாதையர் என்ன ஜாதி என்றே இப்போது தெரியாது. 100 வருடங்களுக்கு முன் பிஜி தீவுகளுக்குச் சென்றவர்களும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றவர்களுக்கும், முகலாயப்பேரரசின் காலத்தில் மாற்றப்பட்டவர்களுக்கும் தஙகள்தங்கள் ஜாதிகள் தெரியா. அவர்கள் திரும்பும்போது எஜ்ஜாதியில் சேர்க்கப்படுவர்? புதியதாக ஒரு ஜாதியைத்தான் கண்டுபிடிக்கவேண்டும். இவர்கள் போக ஆஃகானிய அகதிகள் இந்துமதத்துக்கு வந்தால் எஜ்ஜாதியாவர்? நீக்ரோக்கள் வந்தால் என்ன ஜாதி? ஹாலிவுட் நடிகை வந்தால் என்ன ஜாதி?

    இவை போக இந்துமதத்தில் ஜாதிகளே கிடையா என்ற ஆர் எஸ் எஸ்சின் பிரச்சாரமென்னவானது? என்னவாகும்?

    தொழில் அடிப்படையில் வரும் ஜாதிகளே பேசப்படுகின்றன நகரசுத்தி தொழிலாளியாக ஒரு அருந்ததியினர் மதம் மாறியும் அத்தொழிலையே தொடர்கிறார். பின்னர் இந்துவாகிறார். அவர் மீண்டும் தாழ்த்தப்பட்ட ஜாதியில்தான் சேரமுடியும் என்பது கட்டுரை சொல்லும் பதில். போகட்டும். பெரிய விசயமில்லை. பெரிய விசயம் என்னவென்றால் ஒரு ஜாதி தன் தொழிலையே பல தலைமுறைகளாக மாற்றிக்கொள்ள அவர்கள் தங்கள் மூதாதையர் தொழிலின் அடிப்படையில் ஜாதி அலாட்மென்ட் கொடுக்கப்படுவரா? இல்லை தற்போதுள்ள தொழிலில் அடிப்படையிலா? இது பிராமணர் என்போருக்குப் பொருந்தும். பிராம்ணர்கள் பலர் இசுலாம், கிருத்துவம் என்று மாறியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் பிராமணருக்கான தொழில் செய்யவில்லை. மற்ற ஜாதியினர் தொழிலை தங்க்ள் தொழிலாக பலதலைமுறைகளாகச் செய்துவருகிறார்கள். இவர்கள் எஜ்ஜாதியில் சேர்க்கப்படுவர்?

    புதிய தமிழகம் என்ற பள்ளர் கட்சி. பள்ளர்களின் பெருவாரியானவர்கள் கிருத்துவர்கள். தலைவர் சொல்வது: நாங்கள் சத்திரியர்கள் என எப்போதே ஆண்ட ஒரு மன்னனின் பெயரைச்சொல்கிறார்கள். இவர்கள் என்ன ஜாதியில் சேர்வர்? இவர்களைச் சத்திரியர்க்ள் எனச்சேர்த்தால், இன்னொருவர் வருவார்: நாங்கள் பிராமணர்கள் முன்பு. விதிவசத்தால் தலித்துகளாக்கப்பட்டோம்; எங்களை பிராமண ஜாதியில்தான்சேர்க்க வேண்டும் என்றால்? விதண்டவாதமாகத் தெரியும்? ஆனால் வெள்ளைக்காரன் முதன்முதலாக ஜாதிவாரியாகக் கணக்கெடுக்கும்போது எல்லாரும் முதன்நிலைச் சாதியில் எங்களைச் சேருங்க்ள் என்றார்கள். இட ஒதுக்கீட்டுக்குப் பின் பி சிகள் எனச்சேருங்கள் என்கிறார்கள்.

    தலித்துக்கள் திரும்பும்போது மதமாற்றத்தை கெஜட்டில் போடுவது ஒரு உபாயம். கெஜட் காப்பியை இணைத்தால்தான் தாசில்தார் ஆஃபிஸ் சாதி சர்டிபேட் தரும்.

    கட்டுரை தரும் பதில் தீர்வைத்தருவதை விட பதில் கேள்விகளையே எழுப்புகிறது.

  2. சாதி வலுவாக்கப்பட்டுள்ளது.சரியான மாற்று அமைப்பினால்தான் சாதிகளை ஒருங்கிணைக்க முடியும் என்பது சரியானதுதான். அந்த அமைப்பை அவர்கள்தாம் உருவாக்க வேண்டும்.சுவாமி விவேகானந்தா் ” அவர்கள் தங்களுக்கென்று தனிசாதியை உருவாக்கிக் கொள்வார்கள் ” என்கிறாா். ஆக பல கலாச்சார அமைப்புகள் கொண்ட இந்த உலகில் ஒரு பிரிவு மற்ற பிரிவை அழிக்காமல்
    பார்த்துக் கொள்வது அவசியம். மநு” பெண்களுக்கும் துறவிகளுக்கும் சாதி இல்லை என்பதுதான் சிறந்த தீா்வு. ஆனால் மக்கள் ஏற்க வேண்டுமே!

  3. பட்டண நாகரீகம் சாதி கட்டமைப்பிற்கு சவாலாக மாறியிருக்கின்றது. இப்படித்தான் தானாக பழுப்பதுபோல் சாதி அமைப்பு புதிய பரிணாமத்தை பெற்று விடும். அதுதான் சமூக பரிணாமம்.

  4. அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ சாஹேப் அவர்களது சமூஹத்திற்கு

    \\ தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்த்ப்பட்ட ஜாதிகளில்தான் போயடையவேண்டும் எனபதே விதி….தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்த்ப்பட்ட ஜாதிகளில்தான் போயடையவேண்டும் எனபதே விதி…. \\

    தமிழகத்தில் மட்டிலுமல்ல. ஹிந்துஸ்தானமுழுதும் ஹிந்துமதத்தில் உள்ள எந்த ஒரு ஜாதிக்கும் பெருமிதம் கொள்ளத்தக்க குலப்பெருமை உண்டு. அந்த ஜாதிகளை நயவஞ்சகமாக தாழ்த்த முற்பட்டது நீங்கள் கொடிபிடிக்க விழையும் ஆப்ரஹாமிய பரங்கிய க்றைஸ்தவமும் அதற்கு கூலிப்படையாக சேவகம் செய்த உங்களது நாசி த்ராவிட இயக்கமும். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல் ஆன்ம அறுவடை எனும் ஆப்ரஹாமிய வ்யாபாரக் கோட்பாட்டை ஒட்டி ஆப்ரஹாமியர் மட்டிலுமே கையாள விழையும் சொல். ஹிந்துஸ்தான அரசாங்கமும் ஹிந்துக்களும் ஹிந்துத்வ பரிவார இயக்கங்களும் கையாளும் சொல் பட்டியலின மக்கள். எமது சஹ ஹிந்து சஹோதரர்களை நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் ஆப்ரஹாமியருக்கு ஆதரவாக நீங்கள் விரும்பும் அவர்களது ஆன்ம அறுவடையைக் குறியாக வைத்துச் சொல்லுவதை மிக மிகக் கடுமையாக ஆக்ஷேபிக்கிறேன்.

    \\ அவர்கள் திரும்பும்போது எஜ்ஜாதியில் சேர்க்கப்படுவர்? \\

    வ்யாசம் இந்த விஷயத்தை தெளிவாக விளக்கியுள்ளது. யாருக்கு தங்கள் முந்தைய ஜாதி தெரியுமோ அதில் சேர்ந்து கொள்ளலாம். யார் புதியதாக ஹிந்துமதத்தின் ஏதாவது சமய வழிமுறைகளில் இணைவார்களோ அவர்கள் புதியதாக ஜாதி உருவாக்கிக் கொள்ளலாம். இஸ்கான் போன்ற வைஷ்ணவ இயக்கங்கள் இப்படியாக இயங்குகின்றன. ஹிந்து மதத்தின் அடிப்படையான சாஸ்த்ரங்கள் நாலு வர்ணங்களை மட்டிலும் சொல்லுகிறது. வன்னியர், கொங்குவேளாளர், ஐயர், ஐயங்கார், கோமுட்டி செட்டியார், நாட்டுகோட்டை செட்டியார் என பல்கிப்பெருகிய ஜாதிகளைப் பற்றி எந்த சாஸ்த்ர நூலும் சொல்லாது. நாசித்தனமான ப்ரசாரம் செய்யும் த்ராவிடம் மட்டிலும் தான் கூசாமல் ஹிந்துமத நூற்கள் ஜாதியை உருவாக்கின என பொய் சொல்லும்.

    \\ அவர்கள் எந்தப் பெயரை வைத்துக் கொள்வார்கள்? \\

    ஸ்வாமிஜி இதற்கு பதிலளிக்காமல் இருந்திருக்கலாம். பதில் உள்ளது. ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் மஹாராஷ்ட்ர ப்ராம்மண பின்னொட்டுப்பெயராகிய அம்பேத்கர் என்ற பின்னொட்டை உபயோகித்திருக்கிறார். தமிழகத்தில் பின்னொட்டு ஜாதிப்பெயரை சேர்த்துக்கொள்வது என்பது வழக்கத்தில் அற்றுப்போய்விட்டது. உத்தரபாரதத்தில் ஹிந்து பட்டியலின சஹோதரர்களில் விருப்பமுள்ள பல அன்பர்கள் சர்மா, உபாத்யாய், சாஸ்த்ரி, சிங்க் போன்ற பின்னொட்டுப் பெயர்களை வெகுவாகச் சேர்த்துக்கொள்ளுகிறார்கள். இவையெல்லாம் தனிப்பட்ட மனிதரின் விருப்பம்.

    \\ இவை போக இந்துமதத்தில் ஜாதிகளே கிடையா என்ற ஆர் எஸ் எஸ்சின் பிரச்சாரமென்னவானது? \\

    ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் 1331வது திருக்குறளை தடாலடியாக டுமீலடித்து திருவள்ளுவர் தலையில் கட்டிவிடுவதால் அது திருக்குறள் ஆகி விடாது. ஆர் எஸ் எஸ் ஹிந்துமதத்தில் ஜாதிகளே கிடையாது என்று எப்போதும் ப்ரசாரம் செய்ததில்லை. ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அப்படி அட்ச்சுவுடுகிறார். அவ்வளவே. ஆர் எஸ் எஸ் ஜாதிகளுக்கிடையில் விவாஹங்கள் நிகழ்வதை ஆதரிக்கிறது. தமிழ் ஹிந்து தளத்தில் அது சம்பந்தமாக வ்யாசமும் வந்திருக்கிறது. அதையடுத்து ஹிந்துத்வத் தரப்பிலிருந்து ஜாதிபற்றி இறுக்கமில்லாத நீக்குப்போக்கான படிக்கு ஸ்ரீமான் சேக்கிழான் அவர்களது வ்யாசமும் தமிழ் ஹிந்து தளத்தில் உள்ளது. ஆர் எஸ் எஸ் ஜாதிகளுக்கிடையில் உயர்வு தாழ்வு பாராட்டுவதை கடுமையாகக் கண்டிக்கிறது. ஹிந்து ஒற்றுமைக்குப் பாடுபடுகிறது.

    அருணகிரிநாதர் கந்தசஷ்டி கவசம் இயற்றினார் என்பது மாதிரிக்கா நீங்கள் டுமீலடிப்பது போல இஷ்டத்துக்கு அட்ச்சுவுடக்கூடாது ஸ்வாமின் 🙂 🙂 🙂 கொஞ்சம் பைய பைய டுமீலடிப்பதை நிப்பாட்டுங்க ஸ்வாமின். பலபலப்பெயர்களில் அவதாரம் எடுப்பதை எப்படி சொல்லிச் சொல்லி நிறுத்தினீர்களோ அவ்வண்ணமே இஷ்டத்துக்கு டுமீலடிப்பதையும் நிறுத்துங்கள். நிறுத்துவீர்கள் என நம்பிக்கை உண்டு 🙂 🙂 🙂

    \\ தொழில் அடிப்படையில் வரும் ஜாதிகளே பேசப்படுகின்றன நகரசுத்தி தொழிலாளியாக ஒரு அருந்ததியினர் மதம் மாறியும் அத்தொழிலையே தொடர்கிறார். பின்னர் இந்துவாகிறார். அவர் மீண்டும் தாழ்த்தப்பட்ட ஜாதியில்தான் சேரமுடியும் என்பது கட்டுரை சொல்லும் பதில். \\

    க்றைஸ்தவ மதத்திலிருந்து தமது தாய்மதமாகிய ஹிந்துமதம் வரும் சஹோதரர் தமது முந்தைய ஜாதியில் இணைந்து கொள்ளுகிறார்கள் என்று ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியதாக வ்யாசம் சொல்லியுள்ளது. ஜாதிப்பின்னொட்டை சேர்ப்பது சேர்க்காதது எந்த ஜாதிப்பின்னொட்டை சேர்ப்பது என்பதெல்லாம் தனிப்பட்ட நபரின் விருப்பம். வ்யாசத்தில் எந்த ஒரு வாசகத்திலும் எந்த ஒரு ஜாதியும் தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்லப்படவில்லை. வ்யாசம் எந்த ஒரு ஜாதியையும் தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்லாது போது தாய்மதம் திரும்பும் நபர் “”””மீண்டும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் தான் சேரமுடியும் என்பது கட்டுரை சொல்லும் பதில்”””” என்று கூசாமல் புளுகுவது ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களது வாக்குதத்த ஆப்ரஹாமிய குசும்புத்தனம்.

    \\ பள்ளர்களின் பெருவாரியானவர்கள் கிருத்துவர்கள். \\

    கூசாமல் புளுகுவதை செயற்பாடாகக் கொண்ட ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஸ்வாமின் இதுக்கு ஆதாரம் சேதாரம் என்று ஏதாவது பகிர்வாரா. மாற்றிக்கொண்ட ஹிந்துப்பெயரில் இடையறாது ஆப்ரஹாமியக் கருத்துக்களைப் பகிர்ந்தது போதாது என்று இப்போது ஒரு சமூஹத்தில் பெருவாரியான மக்கள் க்றைஸ்தவர்கள் என்று கூசாது டுமீல். சில்சாமுக்கு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவதாரத்தில் அளித்த வாக்குதத்தத்தை இப்படியெல்லாம் நிறைவேற்றியாகிறதோ? அல்லது தேவரீருக்கு இதை ஏஸ்ஸப்பா வந்து கெனாவுல சொன்னாரா 🙂 அல்லது சாதுசெல்லப்பா அல்லது மோஹன் லாஸரஸ் போன்றோரின் சுவிசேஷ ஆவியெழுப்பு வேதாகம ப்ரசங்காதிகளில் தேவரீர் இதைக் கேட்டு அப்படி சொல்லுகிறாரா 🙂 என்று சொன்னீர்களானால் தெரிந்து கொள்ளலாம். அல்லது தேவரீர் வழக்கம் போல அட்ச்சுவுடும் நாயன்மார் 64, அருணகிரிநாதர் அருளிய கந்தசஷ்டி கவசம், 1331வது திருக்குறள், 4000 வருஷத்திய சாஸ்த்ரம் என்ற வரிசையில் இன்னொரு அட்ச்சுவுடல் என்று கடந்து விடுவதா 🙂

    \\ நாங்கள் பிராமணர்கள் முன்பு. விதிவசத்தால் தலித்துகளாக்கப்பட்டோம்; எங்களை பிராமண ஜாதியில்தான்சேர்க்க வேண்டும் என்றால்? \\

    ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் பற்பல அவதாரம் எடுப்பது ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கருத்தினைச் சொல்லுவதற்கு. ப்ராம்மணன் என்பது வர்ணம் தான் ஜாதி கிடையாது என்று ஜோ அவதாரத்தில் இருந்து அடுத்தடுத்த ஒவ்வொரு அவதாரத்திலும் அமரர் மலர்மன்னன் மஹாசயர் வெ சாமிநாதன் போன்றோரிடம் வயணமாக பொழுது போகாமல் விதண்டாவாதம் செய்தாகி விட்டது. இப்ப பிஎஸ்வி அவதாரத்தில் ப்ராம்மணர்களை ஜாதியாக மாற்றியாகி விட்டது. அது வேற வாய். இது வேற வாய். க்ஷணச் சித்தம் க்ஷணப்பித்தம். தாங்கள் ப்ராம்மணர்கள் தான் என்று அவர்கள் முடிவு செய்து விட்டால் ப்ராம்மணர்கள் தான். ஹிந்து மதத்தை மனம் போன போக்கில் இழிவு செய்து ஆப்ரஹமியத்துக்கு கொடிபிடிக்கும் ஜோவுக்கு ஏன் நோகுகிறது அதில்?

    \\ கட்டுரை தரும் பதில் தீர்வைத்தருவதை விட பதில் கேள்விகளையே எழுப்புகிறது. \\

    ஜடாயு எழுதியது எல்லாம் தெளிவாகத் தான் இருக்கிறது. தேவரீருடைய நோக்கம் கொக்குக்கு ஒரே மதி என ஹிந்துமதத்தை எப்படி இழிவு செய்வது ஆப்ரஹாமியத்துக்கு எப்படி கொடிபிடிப்பது என்று இருப்பதால் இல்லாத ப்ரச்சினையை இருப்பதாக பொய்கள் புனைசுருட்டுகள் மூலம் வழக்கம் போல் குதர்க்கமாகக் கதையளப்பது.

  5. ஜாதி என்பது இயற்கை. விலங்குகள், தாவரங்கள் என அனைத்திலும் உண்டு. இந்த உண்மையை ஏற்க முடியாதவர்கள் வேறு மதங்களுக்கு செல்கிறார்கள். வேற்று மதங்கள் பைத்தியக்கார மதங்கள். பைத்தியங்களில் உயர்வு தாழ்வு இருக்க முடியாது. ஒருவேளை இருந்தாலும் கூட அதை பொருட்படுத்துவதில் அர்த்தமில்லை. இறை பக்தியே பிரதானமாக கொண்டு ஹிந்து மதத்திற்கு வருபவர்களுக்கு ஜாதி ஒரு பிரச்சனையாக இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *