குழவி மருங்கினும் கிழவதாகும் – 6

குறிப்பு:  இத்தலைப்பில் முதல் ஐந்து பகுதிகள் முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி அவர்களால் எழுதப்பட்டு, ‘தமிழ் ஹிந்து’வில் வெளிவந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியை முனைவரின் அனுமதியுடன் மீனாட்சி பாலகணேஷ் எழுதுகிறார்.

        (வருகைப்பருவம்)

            ‘ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ

          ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடீ,’ என்றார் பாரதியார்.

சின்னஞ்சிறு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதனைக் காண்பது, அதனை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி, உவகைகொள்வது என்பது ஒரு தெய்வீக அனுபவம். சிவந்த தாமரைமலர் போலும் சின்னஞ்சிறு பாதங்கள் தத்தித் தத்தி நடந்துவரும் அழகை, தான் கீழே விழுந்து விடுவோமே எனும் அச்சமேயின்றி ஓடிவரும் இனிய செயலை, காண ஆயிரம் கண்களும் போதாது!

வரிசைக்கிரமமாக அமைந்த பிள்ளைத்தமிழின் ஆறாவது பருவம் வருகை அல்லது வாரானைப் பருவம் எனப்படும். குழந்தையின் பன்னிரண்டாவது மாதத்தில் இது நிகழ்வதாகக் கொள்ளப்படும்.

நம் மனதுக்கினியவர்களின் நடையும், அதன் அழகும், அதுவே குழந்தையானால் அதன் கால் சதங்கை, சிலம்பு, இவற்றின் ஒலியும் மானிடர் அனைவருக்குமே மிகுந்த உற்சாகத்தைத் தருவதாகும்.

Image result for mother and child paintingதத்தித்தத்தித் தளர்நடை பயிலும் குழந்தையை அருகில் நின்று பார்க்கும் தாயின் உள்ளம் பாசத்தில் விம்முகின்றது. அந்தக்கால்களால் அவன் என்ன செயலெல்லாம் செய்யப்போகிறான், எங்கெல்லாம் செல்லப்போகிறான், அதை எவ்வாறெல்லாம் அழகுபடுத்திப் பார்க்கலாம் என்றெல்லாம் அவள் எண்ணங்கள் சிறகடிக்கின்றன. தன் குட்டனை, குழந்தையை, அழகுநடை பயிலும் மயிலாக, அசைந்து நடந்து வரும் அழகு யானைக்குட்டியாக, துள்ளிவரும் மானாக, எனவெல்லாம் பார்க்கிறாள்.

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை

          செவிமடுத்து எந்தன் மனம் களித்திடுமே,’ எனும் ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யரின் பாடல் வரிகள், கண்ணனின் காற்சதங்கை ஒலியை மனதில் நிரப்பி மகிழ்விக்கின்றன.

‘நன்னுபாலிம்ப நடசி வச்சிதிவோ?’ என, (என்னைக் காக்கவேண்டி நீ நடந்து வந்தனையோ?) தியாகராஜரும் தமது கீர்த்தனை ஒன்றில் ஸ்ரீராமனைக் கேட்டு உருகுகிறார். ‘உயர்வான பரம்பொருளாகிய நீ ஏழை அடியேனுக்காக, தேரிலன்றி, குதிரை மீதிலன்றி, வெறும் கால்களால் நடந்து வந்தனையோ?’ எனும்போது உள்ளம் ஆனந்தத்திலும், பச்சாதாபத்திலும் விம்முகிறது அவருக்கு.

இதனைப் பெரியாழ்வாரும் தமது பாசுரங்களில் பாடி மகிழ்ந்துள்ளதனைக் காணலாம். கண்ணன் நடப்பது சிறிய யானை மெல்ல அசைந்து நடப்பது போலிருக்குமாம். யானை தனது மதங்களைப் பெருக விட்டுக்கொண்டும், தனது காலில் இடப்பட்டுள்ள சங்கிலி ‘சலார்பிலார்’ என ஒலி எழுப்பும்படியும் தன் உடலின் இருபுறங்களிலும் தொங்கும் மணிகள் ஒலிக்குமாறும் நடப்பதுபோலக் கண்ணன் நடக்க வேண்டும் எனும் தாயின் ஏக்கத்தைப் பாடுகிறார்.

‘தொடர்சங் கிலிகை சலார்பிலார் என்னத்

                   தூங்கு பொன்மணி ஒலிப்ப

          படுமும் மதப்புனல் சோர வாரணம்

                   பைய நின்று ஊர்வது போல்…’ திருவடிச் சதங்கைகள் ஓசை எழுப்ப, அரைச்சதங்கையின் மணிகள் ஒலிக்க, சார்ங்கபாணி தளர்நடை நடவானோ! என ஆவலாக வேண்டுகிறார்.

ஆயினும் இவ்வாறெல்லாம் தான் போற்றி வேண்டிக்கொள்ளும் சிறுகுழந்தை, தான் வழிபடும் திருமாலே சிறு கிருஷ்ணனாக வந்த வடிவம் என அவருக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துள்ளது. ஆகவே அடுத்த பாடலில் அந்தக் குழந்தையான இறைவடிவே வந்து தன் வீடெங்கும், வீதியெங்கும் தன் பிஞ்சுப்பாதங்களின்  முத்திரையைப் பதிக்க வேண்டுவது மற்றொரு சிலிர்க்க வைக்கும் அழகு.

‘ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம்

                   உள்ளடி பொறித்து அமைந்த

          இருகாலும் கொண்டு, அங்கங்கு எழுதினாற்போல்

                   இலச்சினை படநடந்து….’ எனப் பெரியாழ்வாரின் தாயுள்ளம் விழைகின்றது.

பிள்ளைத்தமிழ் நூல்களின் பாடல்கள் அனைத்துமே தாய், செவிலித்தாய் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் கூற்றாக அமைவது அதன் தனிச்சிறப்பாகும். அடியார்கள் தம்மை இத்தகைய நிலைகளில் இருத்திக்கொண்டு தாம் விரும்பும் இறைவடிவங்களைப் பாடிப்பரவுகின்றனர்.

கிருஷ்ணனுடைய பாதங்களின் சிறப்பில் ஆழ்ந்துவிட்ட லீலாசுகர் எனுமடியார்ஆனந்த பரவசமாகி அவற்றை வர்ணிப்பது படிக்கின்ற நமக்கும் களிப்பைத் தருகின்றது:

‘வேறு புகல் இல்லாதவர்களுக்கு இத்திருவடிகள்  ஒன்றே புகலிடமாக ( அசரண-சரணாப்யாம்) உள்ளன.  குழலூதியபடி கிருஷ்ணன் இத்திருவடிகளால் நடந்து வருகிறான் (ஆயாதி),’ என நெகிழ்கிறார்.

கிருஷ்ணனின்  கல்யாண குணங்களில் ஆழ்ந்துவிட்ட நாராயண பட்டத்ரி, நாராயணீயத்தின் ஈற்றயல் ஸ்லோகத்தில் கிருஷ்ணனின் திருவடிகளை வழுத்தி, ஆத்மார்ப்பண லயிப்பில் உருகிக் கரைந்து தன்னையே இழந்து விடுகிறார்.

‘உனது சரீரத்திலேயே யோகிகளால் மிகவும் விரும்பப்படுவன உனது திருவடிகளே! ஆதரவற்றவர்களுக்கு அவையே புகலிடம். அடியார்களுக்கு அவை வேண்டியன அனைத்தையும் தரும் கற்பகத்தரு. கிருஷ்ணா! குருவாயூரில் உறைபவனே! (பவனபுரபதே) கருணைக்கடலே! இந்த உனது திருவடிகள் எனது இதயத்தில் எப்போதும் பதிந்து நின்று, எனது துயரங்களை விடுவித்து என்னை மிக உயர்வான பேரின்பச் செல்வத்தில் ஆழ்த்தட்டும்.’

‘வேண்டிக்கொள்ள வேண்டிய’வற்றின் உச்சநிலை வேண்டுதல் இது!

பி. லீலா எனவொரு பாடகி இருந்தார். அவருடைய இனிய குரலில், உள்ளத்தை உருக்கும் இந்த ஸ்லோகத்தினைக் கேட்கும்போது பட்டத்ரியின் தேடுதலை, ஆனந்த லயிப்பை ஒருவாறு புரிந்துகொள்ள இயலும். ‘ஒருவாறு’ என்றதன் காரணம், நாமே அந்த நிலைக்குச் சென்றால் தான்  துல்லியமாக உணர இயலும். நாமெங்கே, பட்டத்ரி எங்கே?

‘யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ,’ என்பன ஸ்லோக வரிகள்.

பிள்ளைத்தமிழுக்குத் திரும்பலாம்!!

முருகப்பெருமானை, கதிர்காமத்திலுறையும் கந்தவேளை, தளர்நடை பயிலும் குழந்தையாக்கி, தாமே அன்னையாகி, தம்மிடம் நடந்து வருமாறு கைகளை நீட்டி வேண்டுகிறார் இதனை இயற்றிய சிவங். கருணாலயப் பாண்டியப் புலவர்.

தெய்வத்தன்மையினால் முருகனுக்குப் பட்டால் செய்த சிறு ஆடை இயல்பாகவே அமைந்ததாம்; அது நூலால் நூற்கப்படாமலும், ஊசியால் தைக்கப்படாமலும் விளங்குவது. அது நோன்பிருந்து நின்னையே நினைந்துருகும் அடியாரின் உள்ளம்போல அசைந்தாடுகிறது என்றார் புலவர்.

‘நூலாத நூலாடை ஊசியொடு குயிலாத

                   நொய்யசின் மெய்யுறையது

          நோன்பிற்ற ழும்பிநின் னுள்ளுமுள மெனவாட…’

மிகவும் உயர்வானவையே தன் தெய்வக்குழந்தைக்குப் பொருந்தும் என எண்ணும் தாயுள்ளத்தின் அன்பு இதில் புலப்படுகின்றது. இன்னும் கூறுவார்: அழகான பூச்செண்டு முடிக்கப்பட்ட கொண்டை ஆடுகிறது; (அவனருளால்) பூமியில் அறம் வழுவாமல் நடமாடுகிறது; உணவே அருந்தாது தவம் செய்வோர் உள்ளம் இறை எண்ணத்தில் அசைந்தாடுகின்றது; தளர்நடை நடக்கும் குழந்தையின் உடலும் தள்ளாடுகிறதாம். எட்டுக்கரங்களையும், நான்கு முகங்களையும் கொண்ட பிரமனின் பெருமிதம் சிதைந்தோட, தேவர்கள் சிறைநீங்கி ஓட, அசுரர்கள் படை தோற்று ஓடிடுமாறு செய்து, நாய்போன்ற எமது அவலம் தெறித்தோடுமாறும், உன்மீது அன்புகொண்டு நாங்கள் மெழுகுபோல உள்ளம் கசிந்து என்புருகிக் கண்களில் மழைநீர் போலக் கண்ணீர் பெருகி ஓடுமாறும் நீ எம்முன்பு நடைபயின்று வரவேண்டும்,’ எனும் வேண்டுதல்.

தளர்நடை நடக்கும் குழந்தை ஆடி அசைந்து வருவதும் ஒரு தனியழகு. அதைக்கண்டு உள்ளம் மகிழ்வது அன்னையின் இயல்பு; கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பாடுவது அடியார் மரபு!

‘மாலாகி யாம் அழல் மெழுகின் நெக்கென்புருகி

                   மழையோடவே வருகவே.’

பிள்ளைத்தமிழ்ப் பாடல்களின் சிறப்பு தெய்வத்தின் பெருமையை குழந்தைப்பருவங்களுக்கான செயல்களில் வைத்துப் போற்றுவது. குழந்தையின் தெய்வத்தன்மையை உணராத அடியார் இல்லை!  ஆகவே தாம் போற்றும் குழந்தையை, தெய்வத்தின் சிறப்புகளைக்கூறித் தம்முன் வருமாறு வேண்டுதல் இன்னொரு அழகு.

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் தடாதகைப்பிராட்டியாகிய சிறு பெண்மகவை, குமரகுருபரனார் ‘வருக’வென அழைக்கும் பாடல்கள் நமது உள்ளத்தைக் கசிய வைப்பனவாகும்.

‘தேன்சிந்தும் மலர்கள் பொருந்திய நறுமணம் மிகுந்த கூந்தலை உடைய பெண்யானையே! வருக! முழுமையான ஞானவெள்ளமே வருக! பிறைசூடிய பெருமானின் மூன்று கண்களுக்கும் விருந்தாக அமைந்தவளே வருக!

‘பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மூவருக்கும் மூலமாக விளங்கும் சத்தியே வருக! விதை இல்லாமலே விளைகின்ற பரமானந்தம் எனும் தெய்வீக விளைவே வருக!

‘பழமையான மறைகள் எனும் வேதங்களின் இளந்தளிரே வருக! அருள் பழுத்துக் கனிந்துள்ள கொம்பாயுள்ளவளே வருக! நின் அழகான கடைக்கண்ணின் கோடியில் பெருகிய அருள்வெள்ளத்தில் மூழ்கியுள்ள அடியார்களின் பிறவியாகிய நோய்க்கு மருந்தாக விளங்குபவளே வருக! இனிய பசிய குதலைமொழி பேசும் கிளியே வருக! மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே!’

‘பெருந்தேன் இறைக்கும் நறைகூந்தற்

                   பிடியே வருக முழுஞானப்

              பெருக்கே வருக பிறைமௌலிப்

                   பெம்மன் முக்கண் சுடர்க்கிடுநல்

          விருந்தே வருக…..’ என்பது பாடல்.

தான் வழிபடும் அன்னை தெய்வத்தை ஒரு சிறு பெண்மகவாக்கி, தாமே தாயாகி, அவளுடைய அருமைபெருமைகளையெல்லாம் பாடி, அவளை ‘வருக’வென அழைத்துச் சீராட்டும் அடியாரின் உள்ளம் எப்படிப்பட்ட பேரானந்தத்தில் மூழ்கித் திளைக்கின்றதென்பதனைப் பிறிதொரு பாடலிலும் காணலாம்.

‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்

                   தொடையின் பயனே நறைபழுத்த

              துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும்

                   சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து

          எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு

                   ஏற்றும் விளக்கே வளர்சிமய

              இமயப் பொருப்பில் விளையாடும்

                   இளமென் பிடியே எறிதரங்கம்

          உடுக்கும் புவனம் கடந்துநின்ற

                   ஒருவன் திருவுள்ளத் திலழ

              கொழுக எழுதிப் பார்த்திருக்கும்

                   உயிரோ வியமே மதுகரம்வாய்

          மடுக்கும் குழற்கா டேந்துமிள

                   வஞ்சிக் கொடியே வருகவே..’ என்றார். இதில் ‘அகந்தையெனும் ஆழ்ந்த வேரோடிய ஆணவக் கிழங்கை, அகழ்ந்து எடுத்து  எறிந்து விடும் ஞானிகளின் உள்ளத்தில் ஏற்றிவைக்கப்படும் ஒளிவிளக்காக இருப்பவளே,’ என அன்னையின் பெருமையை உணர்த்தியது எண்ணவொண்ணாததொரு நயம் எனலாம்.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *