சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1

(இக்கட்டுரைத் தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்)

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிச் செய்த
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி
ஸ்தோத்ரம்
மொழிபெயர்ப்பு: கோவை கவியரசு கு. நடேசகவுண்டர்
விளக்கவுரை: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

adi-shankara-and-disciples

(1)

விஶ்வம் த³ர்பணத்³ருʼஶ்யமாநநக³ரீதுல்யம் நிஜாந்தர்க³தம்
பஶ்யந்நாத்மநி மாயயா ப³ஹிரிவோத்³பூ⁴தம் யதா² நித்³ரயா ।
ய: ஸாக்ஷாத்குருதே ப்ரபோ³த⁴ஸமயே ஸ்வாத்மாநமேவாத்³வயம்
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம் ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ॥ 1॥

பார்க்கின்ற உலகீது கண்ணாடி நிழலினகர்
பகர்மாயை யாற்புறத்தே
பார்க்கின்ற தாகியான் மாவுளே நிற்பதுட்
பயில்கனவு பொய்யா தல்போல்
ஓர்க்கின்ற தாகுமெனும் உண்மையை யுணர்த்தி
உலகுய்ய யோகத் திருக்கும்
சீர்க்கின்ற குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !!

தர்ப்பணமும் சொப்பனமும்

கல்லாலின் புடையமர்ந்து அறமுரைக்கும் தென்முகக் கடவுளைப் போற்றித் துதிக்கும் பாமாலைகளில் ஒன்று பகவத்பாதர்களின் தட்சிணாமூர்த்தி அட்டகம் எனப்படும் தட்சிணாமூர்த்தி தோத்திரம். சைவசித்தாந்திகளை மருளச் செய்யும் கருத்துக்கள் இந்நூலில் பல உள்ளன எனினும், என்ன காரணமோ, நான் இத்தோத்திரத்தினை விரும்பிப் படிக்கின்றேன்.

காணப்படும் இப்பிரபஞ்சம் மித்தை (மித்யை) என்று உணர்த்த பகவத்பாதர்கள் இரு எடுத்துக்காட்டுக்களை (திருஷ்டாந்தம்) முன் வைக்கின்றார். முதலாவது , தர்ப்பண (கண்ணாடி) நகர்; இரண்டாவது சொப்பன நகர். அதாவது, முகம் பார்க்கும் கண்ணாடி பிரதிபலிக்கும் நகர்; பிரதிபிம்ப நகர்; மற்றையது, சொப்பனத்தில் காணப்படும் நகர்.

தர்ப்பணம் அதிஷ்டானம்; அதன் மீது பிரதிபிம்ப நகர் அதிட்டித்துள்ளது; அதாவது, ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. தர்ப்பணம் (கண்ணாடி) ஆதாரம். பிரதி பிம்பம் ஆதேயம். ஆதாரமின்றி ஆதேயமில்லை. பிரதி பிம்ப நகர் போலித் தோற்றமே. அது போன்றே காணப்படும் இப்பிரபஞ்சமும் மித்தையே (இந்த எடுத்துக்காட்டை விளக்கவரும் பெரியோர்கள், பிரதிபிம்பத்தையே நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பிரதிபிம்பத்துக்குக் காரணமான உண்மைப்பொருளை மறந்துவிடுமாறும் கூறுகின்றனர். (Focus only on the mirror and the reflected city). எனக்கென்னவோ, ‘’குரங்கினை நினக்காமல் மருந்து சாப்பிடு’ என அறிவுறுக்கப்பட்டவன், மருந்துப் புட்டியைப் பார்க்கும்போதெல்லாம் குரங்கு நினைவுக்கு வருவதைப் போல, நிஜமான பொருள் இல்லாமல் கண்ணாடி எப்படி ஒன்றைப் பிரதி பலிக்கும் என்ற ஐயமும் உடன் தோன்றுகின்றது.

கண்ணாடி சத்துப் பொருளுக்குக் குறியீடு; அதில் பிரதிபலிக்கும் மாயத்தோற்றமாகிய நகர், மித்தையான, போலியான பிரபஞ்சத்துக்குக் குறியீடு. பிரதிபிம்பம் நீங்கினாலும் கண்ணாடி இருப்பதைப் போல பிரபஞ்சம் நீங்கினால் சத்து என்றும் இருக்கும். எப்படிக் கண்ணாடியாகிய ஆதாரமின்றிப் பிரதிபிம்பமான பொய் நகருக்கு இருப்பு இல்லையோ, அவ்வாறே, சத்தாகிய பிரமத்தின் சார்பின்றி, மித்தையான பிரபஞ்சத்துக்குச் சுதந்திரமான இருப்பு கிடையாது. இவ்வாறு இந்த எடுத்துக் காட்டுச் சத்தான பிரமத்தின் ‘அத்வைதத்துவமான ஏகத்துவதை” (ஒரு பொருள். உள்ளது ஒருபொருளே; வேறு இல்லை) உணர்த்தும் என்பர். (Reflected objects are mithyA, having no existence of their own. Sat only exists – advayatvam)

பிரதிபலிக்கப்படும் பொருளின்றிப் பிரதிபிம்பம் தோன்றுமா? சத்தான பிரமத்தின் மீது பொய்ப்பிரபஞ்சத்தை ஏற்றிக் காண்பவர் யார்? சத்துப் பொருள் ஒன்றே உலதெனில் அது தன்மீது பொய்ப்பொருளை ஏற்றிக் கொண்டு தன்னைத்தானே மித்தையாகக் காணுகிறதா? ஞானியர் வாக்கைப் பொய்ப்படுத்திப் பேசும் கீழ்மைக் குணம் எனக்கில்லை; ஆயினும் பெரியோரிடம் வினவாமல் விளக்கம் பெற முடியுமா?

தர்ப்பண எடுத்துக் காட்டு சைவசித்தாந்தத்திலும் உண்டு. சைவ சித்தாந்தத்தில் மாயை உள்பொருள். அதன் இருப்பு சிவசத்தியாகிய ஆதிசத்தி எனப்படும் திரோதான சத்தி. ஆணவமலத்தால் அறிவு மறைப்புண்ட உயிருக்கு, ஆதிசத்தி மாயாகாரிய, மாயேயங்களாகிய உடல், கருவி, உலகு, அனுபவம் ஆகியவற்றைத் தந்துதவி, அதன் அறிவினை வளரச் செய்கின்றது. உயிர் அறிவுடைப் பொருளென்றாலும், அது வியஞ்சகம் அல்லது கருவியொன்றைப் பற்றியே அறியும். ஆணவ இருளில், சிவப்பிரகாசமாகிய சூரியன் வந்து விடியும் வரைக்கும் உயிருக்கு சிற்றொளி தந்து பொருள்களை அறியும் அறிவைத் தருவது மாயேயங்கள். “மாயா தனுவிளக்கா மற்றுள்ளம் காணாதேல் ஆயாதாம் ஒன்றை” (சிவஞானபோதம் சூ 4.அதி 3). மாயை பொருளை அறியும் அறிவை உயிருக்குத் தந்தாலும் அது அறிவுடைய பொருளன்று. இதனை விளக்க மாயைக்கு உவமையாக எடுத்துக் காட்டாகத் தர்ப்பணம் கூறப்படுகிறது.

கண் காணும் ஆற்றல் கொண்டதுதான். ஆனால் அது தன்னைத் தான் காணுமோ?. கண் தன்னைத்தான் காண வேண்டில் தர்ப்பணம் வேண்டும் தர்ப்பணத்தில் பிரதி பிம்பமாகத்தான் தன்னைத்தான் காணமுடியும். உயிர் அறிவுடைப் பொருள்தான். ஆயினும் தன் அறிவினால் தன்னைக் காண அதற்குத் தர்ப்பணமாகிய மாயாகருவிகள் வேண்டியுளது. தன்னைத் தான் காணமுடியாத கண்ணுக்குக் தர்ப்பணம் கண்ணைக் காணச் செய்து, தான் காணமாட்டாது இருப்பது போல உயிருக்குப் பொருள்களை அறியச் செய்து, தான் அறிவின்றி இருப்பது மாயா காரியம்.
இதனைச் சிவஞானபோத வெண்பா “சார்மாயை அனைத்துமாய் நின்று இன்று தர்ப்பணம்போல் காட்டலால் நீயல்லை” என்று கூறியது. இதன் பொருள்: நிலம் முதலிய காரியம் அனைத்துமாய் நின்னொடு (உயிரொடு) விரவி நின்று இப்பெத்த காலத்துக் கண்ணுக்குக் கண்ணாடிபோல் உனக்கு அறிவை விளக்கி நிற்றல் மாத்திரையே யன்றி (மாயை) அறிவதன்று. ஆகலான் நீ அம்மாயை அல்லை. மாயையான் விளங்கியறியும் நீ அதற்கு அதீதமாகிய சிவமும் அல்லை” என்பதாம்.

இந்த எடுத்துக் காட்டில்,
கண் – உயிர்
கண்ணொளி – உயிர் அறிவு.
தர்ப்பணம் – மாயேயங்கள்
பிரதிபிம்பம்- மாயேயங்களில் சத்த பரிச ரூப ரச கந்தங்களாய ஐம்புலனைவும்
அந்தக்கரணங்களின் அறிவும்.

சொப்பனநகர் (கனவில் தோன்றும் நகர்)

நனவில் காணப்படும் நகர் எனக்கு வெளியே, என் பொறி புலன்களால் அறிந்து அனுபவிக்கப்படுவதாக உள்ளது. சொப்பன நகர் எனக்குள்ளே உள்ளது; புறப் பொருள்களை நுகரும் என் கண் முதலிய கருவிகளால் அறியப்படாமல் எனக்குள்ளே உள்ளது. எனக்குள்ளே உள்ள நகரைச் சொப்பனத்தில் எனக்கு வெளியே உள்ளதைப் போலக் காண்கின்றேன். உண்மையில் இல்லாத ஒன்றை உண்மையில் உள்ளது போலக் கண்கின்றேன். எனக்குள் மித்தையாக, பொய்யாக இருக்கும் நகரை, கனவாகக் காண்கின்றபோது, அதை, எனக்கு வெளியில், உண்மையில் உள்ள பொருளாகக் கண்டு அனுபவிக்கின்றேன்.

இந்த அனுபவம் எனக்கு உறக்கம் இருக்கின்ற வரைதான் நிகழ்கின்றது. உறக்கம் நீங்கி விழிப்பு வந்ததும் அந்த கனவு நகரம் ஒழிந்துபோய் விடுகிறது. கனவில், நான் என்னை, மகாராஜாவாக, எல்லாரையும் ஏவிப் பணிக்கொள்ளும் அதிகாரம் படைத்தவனாகக் காண்கின்றேன். விழிப்பு வந்ததும் , அரசனாக நான் அனுபவித்த அனைத்துச் சுகங்களும் காணாமற் போய்விடுகின்றன. ‘பொய்யாய்ப் பழங்கனவாய் போயிற்று’ என ஒரு உலக வசனமும் உண்டே. எனவே, என் சொப்பன உலகுக்கு என் நித்திரையே ஆதாரம். என்னுடைய உறக்கமே எனக்குள் நிகழ்வதான பொய்யான கனவை, எனக்குப் புறத்தே உண்மையாக உள்ளது போன்ற தோற்றத்தைக் காட்டுகின்றது.

வேதாந்த நூலில் இந்நித்திரை எதனைச் சுட்டுகின்றது? உலக வாழ்க்கையாகிய சம்சார வாழ்க்கையில் உழன்று இன்பத்துன்பங்களை அனுபவிக்கும்போது, நாம் அனைவரும் ‘அவித்தை’ எனும் ‘அஞ்ஞான நித்திரையில்’ ஆழ்ந்து கிடக்கின்றோம்.
உறக்கம் நீங்கி விழிப்பு வரும்போது. உறக்கத்துடன் கனவும் நீங்கி விடுதல்போல ‘, பிரபோத ஞானமாகிய மெய்யுணர்வாகிய விழிப்பு வரும்பொழுது, ‘அஞ்ஞான நித்திரையுடன்’, சமுசார உலக வாழ்க்கையாகிய கனவு நிலையும் பொய்யென நீங்கி விடுகின்றது. வேதாந்தத்தில் நனவு, கனவு இரண்டுமே பொய்; மித்தை. இரண்டையும் அனுபவிக்கும் ஆன்மாவே மெய். ஆத்மா அதிஷ்டானம்; அதன்மீது அதிட்டிக்கப்பட்டது, அஞ்ஞானமாகிய நித்திரை. அதனால் உருவாவது கனவுலகம். ஆத்ம அதிஷ்டானமாகிய அஞ்ஞானமே வேதாந்தத்தில் உறக்கம் எனப்படுகிறது.

கடோபநிஷதம் , ’உத்திஷ்ட! உத்திஷ்ட!!’ (எழுமின் விழிமின்) எனத் தட்டி எழுப்புவது, இந்த அஞ்ஞான, அவித்தியா நித்திரையில் உறங்கிக் கனவுலகத்தை நனவுலகமாக நம்பி வாழ்ந்து உழண்டு கொண்டிருக்க்கின்ற நம்மையே என்பர்.

இந்தக் கருத்தை ஒரு கதையின் வழியே வேதாந்திகள் விளக்குவர். அக்கதை:

ஜனக மகாராஜர் அரசவையில் வீற்றிருந்தார். அச்சமயத்தில் ஒற்றர் தலைவன் வெகு வேகமாக வந்து,” அரசே! பகையரசன் பெரும்படையுடன் நம் நாட்டின்மீது படையெடுத்து வருகின்றான்’ என்று பதைபதைப்புடன் கூறினான். இதை எதிர்பாராத ஜனகமகாராஜன் உடனே தன் படைகளைத் திரட்டிக்கொண்டு பகையரசனைப் போர்க்களத்தில் சந்தித்தான். பெரும்போர் மூண்டது. ஜனகனுடைய படை படுதோல்வியடைந்து, முழுதும் அழிந்தது. ஜனகன் மட்டும் உயிர் பிழைத்து அண்டை நாட்டுக்குத் தப்பியோடினான். அரசன் எனச் சொல்லிக் கொள்வதற்கு எந்த அடையாளமும் அவனிடமிருக்கவில்லை. பலநாட்கள் உணவில்லமல் பட்டினியாக இருந்ததால் உடல் மெலிந்து சோர்வடைந்திருந்தான். மானம் காக்கும் கோவணம் மட்டுமே ஆடையாக இருந்தது. போய்ச் சேர்ந்த இடமும் பட்டினிப்பிரதேசமாக இருந்தது.

அங்கு ஓரிடத்தில் கஞ்சி வார்த்துக் கொண்டிருந்தார்கள். கஞ்சியைப் பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண் டிருந் தார்கள். அந்த வரிசையில் ஜனகனும்போய் நின்றான். கஞ்சி வார்ப்போரிடம் இவன் போய்ச் சேர்ந்தபோது, கஞ்சி காலியாகிவிட்டிருந்தது. இவனுடைய பரிதாபமான நிலையைக் கண்ட கஞ்சிவார்ப்போர் அடிப்பத்தைச் சுரண்டி இவனுடைய கலயத்தில் வார்த்தனர். கொஞ்சம்போலக் கஞ்சிக் கசடிருந்த கலயத்தினை வாயருகில் கொண்டுபோகும்போது எங்கிருந்தோ பசியோடு பாய்ந்து வந்த காகம் கலயத்தைத் தட்டிவிட்டது. கலயம் கீழே விழுந்து உடைந்துபோனது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

ஜனகன் ஐயோ என்று அலறினான். அப்போது “அரசே! அரசே!! ஏன் அலறினீர்கள்?” என்று சேவகன் வினவியபோதுதான், இதுவரைதான் அனுபவித்த அவமானங்களும் சிறுமைகளும் துயரங்களும் உறக்கத்தில் தான் கண்ட கனவு என்று ஜனகன் அறிந்தான்.

கனவனுபவம் அவனுடைய மனநிலையை ஆழமாகப் பாதித்துவிட்டது. இப்போது நினைவோடு நனவில் அரசனாக இருப்பது உண்மையா? கண்டகனவில் அனுபவித்த வேதனைகள் உண்மையா? நனவனுபவம், கனவனுபவம் இவ்விரண்டில் எது உண்மை? கண்ணில் தென்படுவோரிடமெல்லாம் ‘இது நிசமா அல்லது அது நிசமா? எது உண்மை?’ எனக் கேட்கத் தொடங்கி விட்டான். அரசனுக்கு ஏதோ பித்துப் பிடித்துவிட்டது என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். அரசகாரியங்கள் எதுவும் முறையாக நடைபெறவில்லை. மக்கள் கூடுமிடங்களிலெல்லாம் ‘இது நிசமா அல்லது அது நிசமா? எது நிசம்?’ எனும் அரசனின் வினாவே பேச்சாக இருந்தது.

அச்சமயத்தில் அந்நகருக்கு அஷ்டாவக்ரமுனி என்னும் பெரியார் வந்தார். அரசனுடைய நிலைமையைக் கேள்விப்பட்டார். அரசனைக் கண்டார். அரசன் வழக்கம்போல அது நிசமா அல்லது இது நிசமா என அஷ்டவக்ரமுனிவரிடமும் வினவினான். முனிவர், ‘அரசே! நீங்கள் பிச்சைக்காரனைப் போல, வறியவனாக, உணவின்றித் துன்பப்பட்ட காலத்தில், எது உண்மையாக இருந்தது? அப்பொழுது, இப்பொழுது நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அரச அதிகாரபோகங்கள் இருந்தனவா? எனக் கேட்டார். அரசன், அதற்கு, அப்பொழுது பிச்சையெடுக்கும் நிலைமைத் துன்பம் உண்மையாக இருந்தது; அரசபோகம் அப்பொழுது இல்லை எனப் பதிலுரைத்தான்.
இப்பொழுது எந்நிலை உண்மையாகவுள்ளது? எது பொய்யாக உள்ளது? என முனிவர் கேட்க அரசனாக இருக்கும் நிலைமை உண்மையாகவும், கனவிற் கண்ட துயரம் பொய்யாகவும் தெரிகிறது என அரசன் பதிலுரைத்தான். நனவு, கனவு இரண்டையும் கண்டது நீதானே, என முனிவர் கேட்க, அரசன் இரண்டையும் தானே கண்டதாகக் கூறினான்.

அதற்கு முனிவர் ‘நீ கனவில் கண்டதும் உண்மையல்ல, நனவில் நீ கண்டுகொண்டிருப்பதும் உண்மையல்ல; இரண்டும் பொய். இரண்டையும் கண்ட நீயே மெய்’ என என அறிவுறுத்தினார்.

அஞ்ஞான நித்திரை நீங்கி ஞானவிழிப்புப் பெற்றபோது ஆன்மாவுக்குள் முன் இருந்த பொய்யான (சொப்பன) மித்தியா உலகம் மறைந்து சத்துப் பொருளாகியாகிய ‘ஆன்மா’வாம் நானே உளன் வேறு பொருள் ஒன்றும் இல்லை என்ற ஞானம் பிறக்கின்றது. இந்த சொப்பனப் பிரபஞ்சம் முன்னம் என்னுள் இருந்தது; அதற்கு என் அஞ்ஞான உறக்கம் ஆதாரமாக இருந்தது.; ஞான விழிப்பு நிலை பெற்று, அஞ்ஞான உறக்கம் நீங்கிய பின்னர் சொப்பனப் பிரபஞ்சம் பொய்யெனத் தேறினேன்; நனவு கனவு இரண்டனையும் அனுபவித்துக் கழிந்த நானே மெய் எனத் தெளிந்தேன். இந்த உண்மையை ஓர்ந்து (அராய்ந்து சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடி) அறியுமாறு உபதேசிக்கும் குரு, பரமகுருவாம் தக்ஷிணாமூர்த்தி. இந்த உபதேசத்தை வாய் மொழியான சொற்களால் கூறாது, மௌனியாய் இருந்து காட்டிப் போதிக்கும் குருமூர்த்தி தக்ஷிணா மூத்திக்கு என் வணக்கம் என்கிறது தோத்திரம்.

தர்ப்பணமும் சொப்பனமும்

சைவ சாத்திரங்களில் தர்ப்பணம் (முகம்பார்க்கும் கண்ணாடி) பற்றிய மேலும் சில செய்திகள்.

ஆன்மா என்னும் கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பம் (நகரம்) பொய்யினை, சத்தல்லாததை, மித்தையைக் காட்டுகின்றது என ஒரு சாரார் சொல்ல – சைவசாத்திரம், ஆன்மாவாகிய கண்ணாடி சத்தாகிய பரமான்மாவைக் காட்டும் எனக் கூறுகின்றது. சீவான்மாவில் பரம ஆன்மா வெளிப்படுவன்.. அண்டமோர் அணுவாம் பெருமை கொண்டு, கரணங்களெல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றனாகிய இறைவனே, அணுவும் ஓரண்டமாம் சிறுமை கொண்டு, ஆன்மாக்கள் உய்தற் பொருட்டு, “ உள்ளத்துள் ஓங்காரமாய்” நிற்கின்றான். மாயாகாரியமகிய இந்த உடலினுள், “எள்ளிலே எண்ணெயும், நீர் வருமிடத்தில் நீரும் , ஞெகிழிக் கட்டையிலே நெருப்பும்போல நிற்கின்றான். ( “திலேஷு தைலம் ததீநீவசஸ்பிராபஸ் ஸ்ரோதஸ் வரணீஷுசாக்கி: ஏவமாமநி ஜயதே” – சுவேதாச்வதரோபநிடதம்).

அவ்வாறு நிற்கின்ற அவனை, “உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால்” வெளிப்பட்டுத் தோன்றுவான் (அப்பர், திருக்குறுந்தொகை). முறுக வாங்கிக் கடைதல் எதைக் குறிக்கின்றது? ஆன்மாவினுள் இருக்கும் பரமவான்மாவை உள்ளமொன்றித் தியானிக்கும் ஒருமையுணர்வைக் குறிக்கின்றது. அதுவே அந்தர் யாகம் எனவும் அது முத்தி சாதனம் எனவும் பேசப்படுகின்றது. தர்ப்பணத்தைப் பொடியிட்டு விளக்க விளக்க வந்திடும் அவ்வொளியேபோல்” அந்தரியாக வழிபாட்டால்,”அரன் உளத்தே வரவர வந்திடுவன்” என்கிறது சிவஞான சித்தியார். கண்ணாடியின்மீது படிந்துள்ள அழுக்கை நீக்க நீக்க ஒளி பிரகாசிப்பதைப் போல மனப்பசையாகிய அழுக்கு நீங்க நீங்க ஆன்மாவில் பரமான்மா தோன்றும் என்பது கருத்து.

குமரகுருபர சுவாமிகள் அருளியது, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா. அதில், முருகப் பெருமானின் தசாங்கத்தில் ஆணையென்னும் உறுப்பைக் கூறுமிடத்து, “ சந்ததமும் ஆடி நிழலசைப்பான்போற் புவனம் நீக்கமின்றி ஆக்கி அசைத்தருளும் ஆணையும்” என்று அருளினார். ஆடி – தர்ப்பணம்; முகம் பார்க்கும் கண்ணாடி.

அவனின்றி ஓரணுவும் அசையாது என்பது பழமொழி. பிரபஞ்ச இயக்கம் சிவனால் நடைபெறுதலை இப்பழமொழி கூறுகின்றது. சிவன் இப்பிரபஞ்சத்தை எப்படி இயக்குகின்றான்? தன் சக்தி ஆகிய ஆணையால் இயக்குகிறான்.

கண்ணாடியில் தோன்றும் பிம்பத்தை இயக்க நினைப்பவன் அதன் பொருட்டுத் தான் அக்கண்ணாடியின் முன் இயங்குகின்றான். அதைப் போல, உலகங்களை விட்டு ஒருபோதும் நீங்காமல், ‘பின்னமற நின்ற பெருமான் ‘படைத்தல் முதலாகிய ஐந்தொழில்களையும் தன்னுடைய ஆணையாகிய திரோதான சத்தியால் இயற்ரி அசைத்தருளுகின்றான். உலக இயக்கம் அவனுடைய ஆணையாகிய திரோதான சத்தியால் நடைபெறுவதால் அவன் விகாரமுறுவதில்லை. இவ்வெடுத்துக் காட்டில் தர்ப்பணத்தில் தோன்றும் பிரபஞ்சமும் அதன் இயக்கமும் பொய்யல்ல; மித்தை யல்ல; உண்மையே.

தட்சிணாமூர்த்தி தோத்திரத்தில் தர்ப்பணம் பிரமம்; அதில் தோன்றும் நகரமாகிய பிரதி பிம்பம் பொய்; மித்தை. கந்தர் கலிவெண்பாவில் தர்ப்பணம் மாயை; அதில் தோன்றும் பிரபஞ்சம் உண்மை; அப்பிரபஞ்சத்தை விட்டுச் சிவம் பின்னமற அத்துவிதமாக உள்ளது; தன்னுடைய தாதான்மிய சத்தியின் அமிசமான திரோதானசத்தியை அசைத்துப் பிரபஞ்சத்தினைச் சிவம் இயக்குகின்றது. இவ்வேறுபாட்டினை அறிக.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *