கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு

பல அச்சுப் புத்தகங்களிலும் இணையதளங்களிலும் காணப்படும் கந்தர் சஷ்டி கவசம் நூற்பிரதியில் பல்வேறு பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இதைக் கண்ணுற்ற கவிப்பெருஞ்சுடர் ஹரி கிருஷ்ணன் அவர்கள், “கண்ணுக்குத் தெரிந்த பிழைகளைக் களைந்து கூடுமானாவரை பிழையற்ற பதிப்பாக ஒன்றை இணையத்துக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்” என்று ஃபேஸ்புக் மூலம் முன்னெடுத்து, சைவ அறிஞர் ஜாவா குமார் மற்றும் சில நண்பர்கள் உதவியுடன் இந்தத் திருந்திய வடிவத்தை வழங்கியிருக்கிறார். இதனை நமது வாசகர்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம். வெற்றிவேல், வீரவேல்.

_ ஆசிரியர் குழு

தேவராய சுவாமிகள் அருளிய
கந்த சஷ்டி கவசம் (முழுதும்)
திருந்திய வடிவம்

(நேரிசை வெண்பா)

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் — கதித்தோங்கும்
நிஷ்டையும்கை கூடும் நிமல ரருள்கந்தர்
சஷ்டி கவசம் தனை.

(குறள் வெண்பா)

அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்(கு) உதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட

மையல் நடம்செயும் மயில்வா கனனார்
கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து

வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக (10)

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென (20)

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்றனை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்(டு) ஆயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண்(டு) இலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயரையும் கிலியும்

கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலைபெற்(று) என்முன் நித்தமும் ஒளிரும் (30)

சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈரறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத்(து) அழகிய மார்பில்

பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் (40)

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீ ராவும்

இருதொடை யழகும் இணைமுழந்தாளும்
திருவடி அதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண (50)

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்(து) உதவும்

லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதன் என்று (60)

உன்திரு வடியை உறுதியென் றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க்(கு) உயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க (70)

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்இளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம் பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க (80)

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க

பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க

பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணை வேல் காக்க (90)

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க (100)

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமத நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க

தாக்கத் தாக்க தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்களும்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் (110)

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லினும் இருட்டிலும் எதிர்ப்படு(ம்) அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ(டு) அனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என் பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும் (120)

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவை களுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டால் கலங்கிட (130)

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதிகெட்(டு) ஓடப்

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி யுருட்டு கை கால் முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற்செதி லாகச்

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால் (140)

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக

விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனிதொடா(து) ஓட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் (150)

சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப்பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத்(து) அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா(து) ஓட நீயெனக்(கு) அருள்வாய்
ஈரே(ழு) உலகமும் எனக்குற வாகவும்

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்துற வாகவும் (160)

உன்னைத் துதிக்க உன்திருநாமம்
சரவணபவனே சைலொளிபவனே

திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே

அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்

கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா (170)

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா

சமரா புரிவாழ் சண்முகத்தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்னா விருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினே னாடினேன் பரவசமாக
ஆடினே னாடினேன் ஆவின் நன்பூதியை (180)

நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் ரக்ஷி அன்னமும் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலா யுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக் குறமகளுடன் (190)

வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென்(று) அன்பாய்ப் பிரியமளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந்(து) அருளித்

தஞ்சமென்றடியர் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய (200)

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகி

கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒருநாள் முப்பத்தாறு உருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசைமன்னர் எண்மர் சேர்ந்(து)அங்(கு) அருளுவர் (210)

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்

நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்

கந்தர்கை வேலாம் கவசத்தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடியாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சம்ஹா ரத்தடி (220)

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளுள்
வீரலட் சுமிக்கு விருந்துணவாக

சூர பத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத்தேழ்வர்க்(கு) உவந்(து) அமுதளித்த

குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத் தடுத்தாட் கொள்ள என்றன துள்ளம்
மேவிய வடிவுறு வேலவா போற்றி

தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி (230)

திறமிகு திவ்ய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சிப் புனையும் வேளே போற்றி

உயர்கிரி கனக சபைக்கோர் அரசே
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவணபவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம். (238)

முருகாசரணம்.
வெற்றிவேல் வீரவேல்.

எல்லாப் பிழைகளையும் களைந்திருக்கிறேன் என்று நம்புகிறேன். என்னை மீறி பிழைகள் இருக்குமாயின் அன்புகூர்ந்து தெரிவியுங்கள். வெளியிட்ட பதிப்பில் திருத்தி விடுவோம்.

13 Replies to “கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு”

  1. மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.. ஈரோடு மாவட்டம் சென்னிமலைத் திருத்தலத்தில் பாலன் தேவராயன் சுவாமிகள் அரங்கேற்றிய “கந்தர் சஷ்டிக் கவசத்தை” மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளீர்கள் அருமை.. ஏனைய சில பல பதிப்புகளில் வந்துள்ள எழுத்துப்பிழைகளையும் களைந்து சிறப்பாகப் பதிப்பித்துள்ளீர்கள் .. அருமை மகிழ்ச்சி.. அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத அருள்மிகு திருமுருகன் திருவருள் அனைவருக்கும் துணை நிற்க தாங்கள் பதிப்பித்துள்ள கந்தர் சஷ்டி கவசம் உறுதுணையாக அமையும், வேணும் சுபம். சண்முகம் பெரியசாமி

  2. //அமரரிடர் தீர அமரம் புரிந்த // இது சமரம் புரிந்த என்று வர வேண்டும்.

  3. //ஈரறு செவியில் இலகுகுண் டலமும்

    ஈரறு or ஈராறு?

  4. ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க — ஆண்குறி இரண்டு?? ஆண் குறி என்றால் ஒன்றுதானே? விளக்கம் தர முடியுமா? ”ஆண்பெண்குறி இரண்டும் அயில்வேல் காக்க” என்று சில புத்தகங்களில் போடப்பட்டிருப்பது, பொருத்தமாயிருப்பதாகத் தோன்றுகிறது.சரியான சொற்றொடர் எது?

  5. “ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
    உய்யொளி சௌவும் உயரையும் கிலியும்

    கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்” போன்ற வரிகளுக்கு பொருள் தந்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும். ”உயிரையும் கிலியும்” என்றும் சில இடங்களில் படித்ததாக நினைவு. இது தங்களால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் ஒன்றா?

    ”ரஹண பவச ரரரர ரரர
    ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி” உட்பட முழு கவசத்துக்கும் பொருளுரையை தனிப் பதிவாக இட்டீர்களானால், பொருளுணர்ந்து துதிக்க உதவும். நன்றி!

  6. அருமையாக உள்ளது..
    இருந்தாலும் “கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க ”
    “விழிசெவி இரண்டும் வேலவர் காக்க.”
    என்று இருக்கலாமோ…

  7. கந்த சஷ்டி கவசத்தின் ஆசிரியரைப் பற்றி சிறு வரலாற்று குறிப்பை தொடக்கத்தில் கொடுத்திருக்கலாம். எங்கு, எப்போது பிறந்தார்? எந்த ஊர் முருகனிடம் இவ்வேண்டுதல் வைக்கப்பட்டது? எப்போது மறைந்தார்? வேறு ஏதாவது நூல்கள் அவரிடமிருந்து உண்டா? அவர் படமிருந்தால் நன்று.

  8. ஆண்பெண்குறி இரண்டும் அயில்வேல் காக்க” என்று சில புத்தகங்களில் போடப்பட்டிருப்பது, பொருத்தமாயிருப்பதாகத் தோன்றுகிறது

  9. “ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க”. ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க – என்று படித்திருக்கிறேன். இது இரண்டு சாதியினரில் யார் படித்தாலும் வேண்டுதல் சரியாக இருக்கிறதே??????

  10. இடும்பனை அழித்த…or இடும்பனை அளித்த எது சரி.?தயவு செய்து விளக்கவும்.

  11. வெட்சி புனையும் – சந்தி வராதல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *