நமது கல்வித் துறையில் பத்து குறைகள்

இத்தனை நல்ல ஆசிரியர்கள் இருந்தும், ஏன் இத்தனை மோசமான மனிதர்கள் உருவாகி இருக்கிறார்கள்?

ஒரு நாட்டில் நல்ல குடிமகன்கள் உருவாக, கல்வியும் கலாசாரமுமே காரணம். இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் சமூகத்தை உருவாக்குகிறது. இரண்டில் ஒன்று பிறழ்ந்து போகும்போது மற்றதும் அவ்வாறே பிறழ்ந்து போகிறது. கல்வியும் கலாசாரமும் ஒருவனுக்கு உயர்வு நோக்கி முயற்சிக்கிற தன்மையை வளர்ப்பதாக இருக்கவேண்டும். எந்தக் கலையானாலும் கற்பவர் அதன் உன்னதத்தை அடையவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் மக்களின்/சமூகத்தின் கலாசாரமே அந்தக் கலையை வளர்ப்பதாக இருக்கும். இப்போது எந்தக் கல்வியை/கலையை/துறையை எடுத்துக் கொண்டாலும், அந்தந்தத் துறையில் உன்னதத்தை அடைவதை வலியுறுத்தும்/பாராட்டும், ஆதரிக்கும் கலாசாரம் இங்கே நசிந்து விட்டது.

ஒருவர் தான் எழுத்தாளன், கவிஞன் என்றெல்லாம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டால், அதைக் கேட்பவருக்கு உடனே மூளையில் உதிக்கும் கேள்வி, ‘எவ்வளவு வருமானம் வரும்?’ என்பதுதான். இதுவே இந்தச் சமூகத்தின் மொத்தக் கலசாரமாக இப்போது வளர்ந்து விட்டது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் எவ்வளவு பணம் வரும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது. அது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது கல்வித் துறையைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

முக்கியமான பத்து குறைகளை கல்வித் துறை மீது காண்கிறேன். இவற்றைக் குறித்து கல்விச்சமூகமே ஒரு ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது.

  1. லாபநோக்கில் கல்வி நிறுவனங்கள் –

லாபமில்லாமல் கல்வி நிறுவனம் நடத்த முடியாது, ஆனால் வணிக வெறியில் மாணவர்களிடம் பணம் வசூல் செய்வது, கற்க சிரமப்படுபவர்களை விலக்கிவிட்டு, ப்ராய்லர் கோழித்தனமாக மார்க்கு வாங்கும் மாணவர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற மாணவர்களைக் கைவிடுவது, ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் தராமல் இருப்பது, தரமற்ற ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்துவது, ஒழுங்காக நடத்த ஒரு பள்ளி போதாதென்று பல பள்ளிகளை ஷாப்பிங் மால் போல நடத்துவது, அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்து, குறைந்த விலைக்கு வாங்கிப் போட்டுப் பள்ளி நடத்துவது என்று பள்ளியை ஒரு வணிகமாகவே நடத்தும் போக்கு.

  1. தரமற்ற கல்வி ஒரு சுமை –

உண்மையிலேயே கற்க வேண்டும் என்று விரும்பி வருகிற மாணவருக்கு இங்கே தரமான கல்வி ஒரு பள்ளிக்கூடத்தில் கிடைக்கிறதா? இங்கே கல்வி என்பது பாடப்புத்தகம், அதனைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் இரண்டையும் குறிக்கிறது. இந்தக் கல்விமுறை ஒரு மாணவனுக்குச் சிந்திக்கும் திறனையோ, தன்னம்பிக்கையையோ, தேர்வில் வெற்றி பெற வேண்டிய உழைப்பையோ ஊக்கப்படுத்துவதாகவே இல்லை. பக்கத்தை நிரப்புகிற பாடப்புத்தகத்தைப் படிக்க முடியாமல் படித்துவிட்டு தேர்விலும் பக்கத்தை நிரப்பிவிட்டுப் போய்விடுகிறார்கள்.

  1. பொறுப்பற்ற ஆசிரியர்கள் –

பனிரெண்டாம் வகுப்புப் பாடத்தில் ஒரே ஒரு சப்ஜெக்டை மூன்றே மாதத்தில் சொல்லிக் கொடுக்க ஓர் ஆசிரியர் ஒன்றரை லட்சம் ரூபாய் ட்யூஷன் ஃபீசாகக் கேட்கிறார். இதைக் கொடுக்கவும் ஒரு கூட்டம் க்யூவில் நிற்கிறது. இன்றைக்குப் பள்ளிக்குச் செல்கிற எந்த மாணவனுக்காவது தன் ஆசிரியர் மீது நல்ல மதிப்பு இருக்கிறதா? ஆசிரியர்களில் பலர் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவர்கள், வேலைக்கு வந்த பின்பு (நிர்மலா தேவி போன்றவர்கள்) வேறு ‘பல’ வேலைகள் செய்தவர்கள், வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குகிறவர்கள் இப்படி எத்தனை பேர்… ஒரு தர நிர்ணயத் தேர்வு அவரவர் துறையில் வைத்தால் எத்தனை ஆசிரியர்கள் தேறுவார்கள்?

  1. நிதானமில்லாத பெற்றோர்கள் –

வயிற்றில் குழந்தை உருவானவுடனேயே ஸ்கூலில் அட்மிஷன் போடும் நிலை, பெற்றோர்கள் தாங்களாகத் தேடிக் கொண்டது. ஒன்றாம் வகுப்பு சேரும்போதே நீட் தேர்வைக் குறித்து யோசிக்கும் பெற்றோர் ஒருபுறம்… ஐந்து லட்சம் ஃபீஸ் கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராக ஒரு கூட்டம்; குழந்தைகளுடன் ஒரு மணிநேரம்கூட செலவிட முடியாத பெற்றோர், லட்சம் லட்சமாக ஸ்கூல் ஃபீஸ் கட்டினால் ஆயிற்று என்று நினைக்கிறார்கள். குழந்தைக்கு என்ன விதமான கல்வி கிடைக்கிறது, நாம் என்ன செய்யவேண்டும் என்ற எந்த விழிப்புணர்ச்சியும் இல்லாத பெற்றோர்கள். விரசமான பாடல்களுக்கு டிவியில் சிறுவர்களை ஆடவிட்டு ரசிக்கும், அதனை ஆதர்சமாகத் தன் குழந்தைகளுக்கு எடுத்துவைக்கும் பெற்றோர் இந்தs சீரழிவுக்கு ஒரு முக்கிய காரணம்.

  1. குறிக்கோளற்ற மாணவர்கள் –

ஒரு மாணவர் தனக்கு எந்தக் கல்வித் துறையில் ஆர்வம் என்று எண்ணிப் பார்த்து அதற்காகவெல்லாம் உழைப்பது இல்லை. அப்படி ஒரு குறிக்கோளை அவருக்கு யாரும் சொல்லித் தருவதும் இல்லை, ஊக்கப்படுத்துவதும் இல்லை, தானாகக் கண்டடைவதும் இல்லை. எது சுலபம், எதில் ஏமாற்றலாம் என்பதை நோக்கியே மாணவர்களும் இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு உதாரணமாக உள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களுமே கரப்டாக இருக்குபோது அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

  1. மாணவர்களிடம் அரசியல் –

இதற்குத் தனிக் கட்டுரையே எழுத வேண்டும். எல்லா கட்சிகளிலும் மாணவரணி வைத்திருக்கிறார்கள். சில கல்லூரிகள் நடப்பதே கட்சிகளுக்கு ஆள் சேர்க்கத்தானோ என்ற சந்தேகமே வருகிறது. படிக்கிற மாணவர்களிடத்தில், காம வெறி, அரசியல் வெறி, சாதி வெறி என்று வெறியூட்டிக் கொண்டேயிருக்கிறது இங்கே இருக்கிற அரசியல். ரவுடிகளே வக்கீல் படிப்பு படிக்கிறார்களோ என்ற சந்தேகமே வருகிறது. படிக்காமலே மார்க், மார்க் வாங்காமலே தேர்ச்சி, தேர்வானாலும் ஆகாவிட்டாலும் வேலை, வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம், சம்பளத்துக்கு மேல் லஞ்சம் என்று மாணவர்களுக்கு அரசியல் போட்டுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாதை மோசமானது.

  1. வாழ்க்கைக்கு உதவாத கல்வி –

அண்மையில் ஐடி நிறுவனம் ஒன்று, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு புரோகிராமர் வேலை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதில் ஆச்சரியமான உண்மை ஒன்று இருக்கிறது. கணினித் துறையில் புரோகிராமராக நுழைய அந்தக் கல்வியே போதும் என்பதுதான். EEE, ECE, MSc, MTech, BE, ME என்று பெரிய பெரிய படிப்பு படித்தவர்களாக புரோகிராமர் வேலைக்கு எடுத்து வந்தனர். இது கணினி நிறுவனங்களுக்கு, வேலை தேடிவரும் பட்டதாரிக் கூட்டத்தை வடிகட்ட ஒரு வழி, அவ்வளவுதான். கல்வி நிறுவனங்களோ இங்கே காலேஜ் படிக்காதவன் எழுதப் படிக்கத் தெரியாதவன் ரேஞ்சுக்கு ஒரு மாயையை ஏற்படுத்திவிட்டிருக்கிறார்கள். அதனால் பெற்றோரும் மாணவரும் அந்த வீணான கல்வியை, பணத்தையும் உழைப்பையும் கொட்டிப் படிக்கிறார்கள். நான் வேலை பார்க்கும் இடத்தில் புகழ்பெற்ற ஒரு ஆர்கிடெக்ட் பி.காம் ஃபெயில். ஆனால் அவரது கூர்ந்த சிந்தனை ஐஐடியில் படித்துவிட்டு வந்தவர்களுக்குக் கூட இல்லை. ஆக ஒருவர் தனக்கு வேண்டிய துறையில் நன்றாக பெயர்பெறத் தேவையான கல்வி இங்கே கிடைப்பதில்லை, தேவையில்லாத சுமையான கல்வியே இங்கே ஏற்றி வைக்கப்படுகிறது.

  1. கல்விக்கு உதவாத சமூகம் –

சரி ஒருவர் தமிழில் எம்.ஏ படித்து ஆழ்ந்த புலமை பெற்றிருக்கிறார் என்றால், அவருக்கு வாழ்க்கை நிம்மதியாக ஓடுமா? தமிழ் என்று உதாரணத்துக்குச் சொன்னேன். பி.எஸ்.சி ஜியாலஜி படிக்கிறார் என்றேகூட வைத்துக்கொள்வோம், அவரால் என்ன செய்ய முடியும்? இங்கே அடிப்படை ஜீவாதாரத்தைப் பெறுவதே மிகக் கடினமாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். மொழி அரசியல், சமூக நீதி அரசியல், லஞ்ச ஊழல் என்று கல்விக்கு மரியாதையே இல்லை. பலர் படிப்புக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ ஏதாவது ஒரு வேலைக்குப் போனால் போதும் என்று நினைக்கிற அளவுக்குக் கல்விக்கு மரியாதை, உரிய அங்கீகாரம், வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கமுடியாத சமூகம் எப்படி உன்னதத்தை அடைய முடியும்? இந்தியாவில் இன்ஜினீயரிங், டாக்டர் தவிர வேறு துறைகள் உபயோகமில்லாதவை என்ற போக்கு வளர்ந்து விட்டது. எல்லோருமே டாக்டராகவும், இஞ்சினீீயராகவும் இருந்தால் என்ன ஆகும்?

  1. கலாசார புரிதல் இல்லாத கல்வி –

நமது கலாசாரத்தைப் பற்றிய ஓர் அடிப்படை அறிவைக்கூட நம் மாணவர்களிடம் காண முடியாது. ஏனென்றால் நமது கல்வி அதைப் பற்றி ஒரு சொல் கூட சொல்லித் தருவதில்லை. இந்திய மண்ணில் எழுந்த தத்துவங்கள், பெரியோர்கள், உன்னத மனிதர்கள், வீரம் செறிந்த மன்னர்கள், அன்னியப் படையெடுப்புகள், அதனை எதிர்கொண்ட மக்கள், வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் பாடம் என்று எதனையும் அப்ஜெக்டிவாக, நேர்மையாக மாணவர்களுக்குச் சொல்லும் கல்வித்திட்டமோ, ஆசிரியர்களோ இங்கே இல்லை. எந்தப் புதிய கருத்தையும் எதிர்கொள்ளும் சிந்திக்கும் திறனற்ற, மேலைநாட்டு மோகம்கொண்ட, காரண காரியங்களை அலசக் கூடிய அறிவு வளர்ச்சிபெறாத மாணவர்களையே இந்தக் கல்வி வளர்க்கிறது.

  1. வரலாற்றைத் திரிக்கும் அரசியல் –

அரசியல் கட்சிகள் தங்கள் இஷ்டத்துக்கு யார் பதவிக்கு வருகிறார்களோ அவர்களுக்குத் தகுந்தபடி, பாடதிட்டங்களை மாற்றுகின்றன. அரசியல் தலைவர்கள் தாங்கள் வாழும் காலத்திலேயே தம்மைப் புகழும் பாடங்களைப் புகுத்துகிற நிகழ்வு இங்கேதான் காணமுடிகிறது. வேண்டுமென்றே ஒரு விஷயத்தை மாணவர்களுக்குச் சேராமல் தடுத்தல், மறைத்தல், மாற்றிச் சொல்லுதல் என்று பாடத்திட்டங்களை அரசியல் வளைக்கிறது. அரசியல் ஆதரவின்றி இன்று ஒருவர் துணைவேந்தராக முடியாத நிலை இங்கே எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆக அரசியல் சார்பில்லாமல் இங்கே கல்வித்துறையில் எந்த விஷயமும் நடப்பதில்லை.

மகாத்மா காந்தி, அதுவரை நமக்கென்ன என்று இருந்த பெருவாரியான மக்களையெல்லாம் அரசியலுக்குக் கொண்டு வந்தார் என்று சொல்வார்கள், இன்று அது ஓவர்டோசாகி எல்லாவற்றிலும் அரசியல், சுயலாபம் என்று இன்னொரு முனையை அடைந்துவிட்டிருக்கிறது. இது குறித்துத் தனிமனிதர்கள் எதுவும் செய்ய முடியாவிட்டாலும் இதைப்பற்றிப் பொதுவான ஒரு உரையாடலையாவது உருவாக்க வேண்டியது இந்நேரத்தில் நம் ஒவ்வொருவரின் கடமை.

4 Replies to “நமது கல்வித் துறையில் பத்து குறைகள்”

  1. I live in Australia and I spend more time on Indian affairs than what happens here. I am shocked to see the standard of education in India. I totally agree with the author here. The youngsters are pretty much oblivious to the affairs of the state and nation and about their own past. My interaction in the social media only confirms this view.

  2. நான் திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரியில் பிஎஸ்சி முடித்த போது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஆழ்வாா் குறிச்சி பரமகல்யாணி கல்லூரி முதல்வா் பேராசிரியா் நாராயணன் அவர்கள் ஆற்றிய உரையில் ” One who does not read has no more advantage than one who cannot read”. என்றாா்.

    படிக்காத..மேலும் மேலும் படிக்காத ஆசிரியா்கள்தான் முதல் சாபக்கேடு. JEE advanced தோ்வு எழுதச் சொன்னால் தோ்ச்சி பெறும் ஆசிரியா்கள் எத்தனை பேர்கள் நமது பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றார்கள் . வெகு குறைவு. பாவம் தமிழக மாணவர்கள்.

  3. ஆணித்தரமனா உண்மை. வரிசைப்படுத்தி அழகாக சொன்னீர்.
    உண்மை எப்பவும் கசக்கும்.
    தெரிந்தவர் சொன்னால் அதிகமாக கசக்கும்.
    ஆசிரியர் மற்றும் மருத்துவர்களை காட்டிலும் நம் நாட்டுக்கு தேவை மனோதத்துவ நிபுணர்கள் மட்டுமே.
    திருத்தம் வீட்டிலிருண்டுதான் வரவேண்டும்.
    24 மணிநேர செய்திகள் மற்றும் , மெகாத்தொடர், ஆட்டம் பாட்டம் பார்ப்பதை குறைத்தாலே பாதி சரியாகும்.

  4. பெரும் பான்மையான மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சிகள் மூலமாகவே இந்த கல்வி முறையானது செயல்படுகிறது. . செயல்படுத்தப்படுகிறது….
    ஆங்கிலேயர் கொண்டு வந்த கல்வி முறையின் வழித் தோன்றலே ….. இப்போது நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்…,
    பெரும்பாலான வரலாறு ஆங்கிலர்களால் எழுதப்பட்டு நமக்கு கிடைக்கப்பட்டுள்ளது.. அதில் மிக முக்கியமான ஒன்று ஹிந்து என்ற வார்த்தை., …. சைவம் வைணவம் போன்ற வார்த்தைகள் மறைந்து போய் ஆங்கிலேயர் கண்ட ஹிந்துவாக மாறிவிட்டோம்.. …. நம்மில் எத்தனை பேர் என்று நம் பிள்ளைகளை பழைய முறையான குருகுல கல்விக்கு அர்ப்பணிக்க தயாராக உள்ளோம்..
    “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் எல்லாருக்கும் இவ்வுலகம் இல்லாகி யா ங்கு” என்ற வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் எண்ணத்துடனே தமது குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்……. மாற்றம் நம்மிடமிருந்து வரவேண்டும்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *