
அந்த நண்பர் விவசாயி மகன் . அக் கணம் நான் அந்த நண்பர் மீது பொறாமைப் பட்டேன். ஒரே ஒரு கடி – அதன் வழியே அக்காய் விளைந்த மண், அதன் பின்புலமான இயற்கை, மற்றும் விவசாய அமைப்பு, அதன் பகுதியான மனிதர்களின் உழைப்பு வியர்வை, அனைத்தையும் ருசிக்கும் அந்தப் பேரனுபவம், எல்லா மனிதர்களுக்கும் சாத்தியப் படாதது… நமது வேளாண்மை வரலாற்றின் அனைத்துக் கூறுகள் மீதும், நேற்று இன்று நாளை என அது எதிர்கொண்டு முன்னகர வேண்டிய சவால்கள் மீதும் கவனம் குவித்து, திறன்வாயந்த அடிப்படை நூலாக வந்திருக்கிறது சங்கீதா ஸ்ரீராம் அவர்கள் எழுதிய ”பசுமைப் புரட்சியின் கதை”. நூலின் சில பகுதிகளை கண் கலங்காமல் , குரல்வளை அடைக்காமல் கடக்க முடியாது… உலகப் போருக்கு கண்டடையப் பட்ட ரசாயனம் அம்மோனியா. உரமாக மாறி இங்கு வந்து குவிகிறது. ஓரினப் பயிரும், கைவிடப்பட்ட பயிர் சுழற்சி முறையும் , கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையும், கன ரக உழவு முறைகளின் தாக்கமும் எவ்வாறு நமது விவசாயத்தை மொத்தமாக சீர்குலைத்ததென்று நூல் பல்வேறு ,தரவுகள் வழியே சொல்லிச் செல்கிறது….