ஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9

“அவித்யா” என்கிற “அஞ்ஞானம்” பற்றி மேலே சொல்லப்பட்டிருப்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன்பாக, நமக்குப் புரிவதற்காக ஒரு பொருளைப் பற்றிய அறிவைப் பற்றி இப்போது பேசுவோம். நமக்குப் பொருளைப் பற்றிய அறிவு இல்லாததால் அந்தப் பொருள் இல்லாமலா போய்விட்டது? நம்மைப் பொருத்தவரை அந்தப் பொருள் இல்லை என்பதுதான் சரியான நிலை. அந்தப் பொருளைப் பற்றிய அறிவை நாம் பெறும்போது எப்போது பெற்றோம், எப்படிப் பெற்றோம் என்பதை விவரிக்க முடியும். ஆனால் அதைப் பற்றி அறியாதிருந்தோமே, அந்த அறியாமை எப்போது வந்தது என்பதையோ அதைப் பற்றிய மேலும் விவரங்களையோ நம்மால் கொடுக்க முடியாது. என்ன சொல்ல முடியும் என்றால் அந்தப் பொருளைப் பற்றிய அறிவு வந்ததும், அதைப் பற்றிய அறியாமை போயிற்று என்று சொல்லி அதுவரை அறியாமை இருந்தது என்றும் சொல்ல முடியும். அறியாமை எப்போது தொடங்கியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அறியாமையைப் போக்க முடியும். இதே மாதிரிதான் ஆன்மாவை பற்றிச் சங்கரர் சொல்கிறார்.

ஆன்மாவைப் பற்றிய காரண சரீரமான “அவித்யா”வை அவர் விவரிக்கும்போது, “அநாதி” என்ற சொல்லைப் பயன்படுத்தி ஆன்மாவைப் பற்றி அது எப்போது தொடங்கியது என்று தெரிந்துகொள்ள முடியாது என்பதையும், “அநிர்வாஸ்யா” என்பதன் மூலம் அது எப்படி இருக்கும் என்று விவரிக்க முடியாது என்பதையும் சொல்கிறார். இதையே ரமணரும் அதை “அஞ்ஞானம்” என்று மொழிபெயர்த்து “ஆதியற்று” என்று சொல்லி அதன் ‘தொடக்கமில்லாத’ தன்மையையும், “இற்றென்று அறையொணா” என்பதனால் அதன் ‘இதுவென்று சொல்லமுடியாத’ தன்மையையும் விளக்குகிறார். அப்படிச் சொல்லப்பட்டதனால் இந்தக் காரண சரீரம் ஆதி உபாதியாய் இருக்கிறது. அதனால் இந்த உபாதி எல்லாவற்றிலும் மிக நுண்ணியதாய் இருந்து அது இருப்பவருக்கும் தெரிவதில்லை, மற்றவர்க்கும் தெரிவதில்லை.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9