அந்த காஷ்மீரப் பாட்டி!

பொதுவாக ஒவ்வொரு இந்திய சுதந்திர தினத்தின்போதும் நியூயார்க் நகரத்தில் ‘இந்தியா டே பெரேட்’ எனப்படும் சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்குபெரும் அந்த அணிவகுப்பை, இந்த வருடம் நானும் காணச் சென்றிருந்தேன்.

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் பாதையின் இரு பக்கமும் இந்தியர், இந்திய வம்சாவளியினர் ஆயிரக் கணக்கில் கூடிநிற்க ஒரு ஹிந்தி நடிகை கொடி இடையை ஆட்டி மன்னிக்கவும்… கொடியை ஆட்டி அணிவகுப்பைத் துவக்குவார். அதற்குப்பின் ‘shaadi.com’, ‘bharatmatrimony.com’ முதலான விளம்பர டீம்கள் ஆடிக்கொண்டோ, மணமக்கள் போன்று உடை அணிந்தோ காரில் வருவர் (மணமகன் வழுக்கையாய் இருத்தல் அவசியம்)..

அப்பறம் ‘ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடன் பிரிவு’, ‘ரெமிட் டூ இண்டியா மணி ட்ரான்ஸ்பர்’ போன்ற கும்பல்கள் காதை செவிடாக்கும் ஹிந்தி ‘தையா தையா’ பாட்டு போட்டுக் கொண்டுவர டிஷ் டிவி விளம்பரங்கள் ( 8 இந்திய சேனல்கள் $90 மட்டுமே என்பது போல் ஏதாவது) காதைக் கிழிக்கும். ஏர்-இந்தியா ஒரு ட்ரக்கில் அட்டையில் செய்யப் பட்ட பெரிய விமானத்தை ஒட்டி, விளம்பரத் தாள்களை வழங்க பின்னாலே கிங்ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் என தொடரும். அடுத்து ஹரே க்ருஷ்ண இயக்கம் ஒரு தேரை இழுத்து பாடி ஆடிக் களிப்புடன் வரும். அடுத்து சில ‘ஜைன மஹராஜ்’ களும், இதர சாமியார்கள், பிரதியங்க குமாரிகள் சங்கம்,பயங்கர குமாரர்கள் சங்கம் என ட்ரக் ஊர்வலம் தொடரும். மலையாளக் குட்டிகள் சிலர் வெண் புடவையுடன் நம்மைப் பார்த்து ‘களுக்’கென சிரித்து ‘ஆயுர் வேத மஸாஜ்’ என விளம்பரத்தாள் கொடுக்க, மஸாஜ் செய்யாமலேயே உடலில் புத்துணர்ச்சி பொங்கும். ஐஸ்கிரீம், பலூன், பஞ்சுமிட்டாய் போன்ற நூற்றாண்டுகளால் மாற்றப் பட முடியாத நடைபாதை விற்பனைப் பொருட்கள் நம்மைக் கடந்து செல்ல பாரத நாள் அணிவகுப்பு முடிவடையும். பொதுவாக எல்லா வருடமும் கொடியாட்டிய ஹிந்தி நடிகை பேச ஆரம்பிக்கும் போது ரசிகர்களுக்கு காற்றை தூதாக்கி முத்தம் அனுப்ப, சுதந்திரத்தின் பயனை ரசிகர்கள் உணருவர். இந்த சம்பிரதாயங்கள் இந்தமுறையும் வழக்கம்போல் நடைபெற்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்பெல்லாம் நிகழ்ந்தது போன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் ஏதும் இந்த இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. கொடியாட்டித் துவக்கிய நடிகை, “ஏர்போர்ட்டில் இருந்து என்னை கூட்டி வரும்போது அந்த மனிதர் என் இடுப்பில்” என ஏதோ சொல்ல எத்தனிக்கும் போது சில நிமிடங்களுக்கு மைக் தடைப்படும். நான்கைந்து இந்திய வம்சாவளிப் பதின்வயதுப் பெண்கள் போனமாதம் நடந்த பர்த்டே பார்ட்டியில் நடந்த கைகலப்புக்கு பழிதீர்க்கும் எண்ணத்துடன் சண்டை போட்டுக் கொள்ள, ஒரு பெண்ணின் பனியன் உரியப்படும். அதற்குப் பின்னும் அந்தப் பெண் வீரம் சற்றும் குறையாமல் சண்டையிட்டு எதிரணிப் பெண்ணின் சாயம் பூசிய கூந்தலிலிருந்து ஒரு மயிர்க் கற்றையைப் பிடுங்காமல் விடமாட்டார். இதுபோன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இந்தமுறையும் நடக்கவில்லை. மேலும் விடாமல் பெய்த மழையும் பேரணியைப் பிசுபிசுக்க வைத்தது.

அதற்குப் பதிலாக இந்த வருடம் மிக வித்தியாசமாக நடந்தது புதிதாக முளைத்த ஹிந்து ‘ஹிந்து மனித உரிமை’ அமைப்பின் விழிப்புணர்வு அணிவகுப்பு. அதிகமில்லை ஜென்டில்மென்… வெறும் 30 பேர்தான். ‘நாங்களெல்லாம் காஷ்மீரிகளா? அநாதைகளா? ஏன் எங்கள் பங்களாக்ககளை விட்டு கூடாரஙகளில் பிச்சைக் காரர்கள் போல் 18 வருடங்களாக தங்கி இருக்கிறோம்?’, ‘அமர்நாத் நிலத்தை திருப்பி கோவிலுக்கே கொடுங்கள்’, ‘அரசியல்வாதிகளே உங்கள் ஒட்டுவங்கியின் கொள்முதல் ஹிந்துக்களின் உயிரா?’, ‘அஹமதாபாத்தில் குண்டு வெடித்து 55 பேர் இறந்து இன்னும் இரண்டு வாரம் கூட ஆகவில்லை… அதற்குள் சிமி இயக்கத்துக்கு தடை நீக்கமா?’.. என்ற லெவலில் பல போஸ்டர்கள் என களை கட்டியது.

ஹிந்து மனித உரிமை அமைப்பின் அணிவகுப்பில் அக்ஷர்தாம் கோவில், அஹமதாபாத் வெடிகுண்டு வைப்பு, அமர்நாத் புனித யாத்ரீகர்களின் உரிமை என ஹிந்துக்களை எதிர்நோக்கி இருக்கும் பல பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கப்பட்டு இருந்தாலும், அணிதிரண்டிருந்த பார்வையாளர்களை உலுக்கியது காஷ்மீர ஹிந்துக்களின் நிலையை விளக்கிய புதினமே:

காஷ்மீர ஹிந்துக்களை சொந்த மண்ணை விட்டு ஓட ஓட விரட்டி அகதியாக்கி அலையவிடும் இஸ்லாமிய பயங்கரவாதமும், ஓட்டு வங்கி அரசியலையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கிய அந்த புதினத்தில் காஷ்மீரப் பண்டிதராக ‘நடித்த’ வரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“சௌக்யமா? உங்கள் காஷ்மீர அகதி வேடம் நன்றாக பொருந்துகிறது”.

” நன்றி. ஆனால் இது வேடமல்ல. உண்மை; காஷ்மீர அகதிதான் நான்”.

“ஒ.. மன்னிக்கவும். மிகுந்த வருத்தம்… உங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு எப்படி இந்த துயரம் நிகழ்ந்தது எனச் சொல்லுங்களேன் ?”

“என் பெயர் ரமேஷ் சுட்ஷி . 1988 ம் ஆண்டு காஷ்மீரப் பண்டிதரான என் தந்தையார், பூனாவில் படித்துக் கொண்டிருந்த என்னைச் சந்திக்க வந்திருந்தார். பின் அவர் காஷ்மீர் திரும்பிய போது அவரை இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஊருக்கு வெளியேயே தடுத்துத் திருப்பி அனுப்பினர். அதைவிட அவரைக் கொன்றிருக்கலாம். அந்த நிலை மனித மனத்தால் புரிந்துகொள்ள இயலாதது. ஒரே நாளில், என்னை தோளில் தூக்கி அவர் நடந்த்த தெருக்கள், ஆண்டாண்டுகளாக எங்களுக்கு சொந்தமான குங்குமப் பூ தோட்டங்கள், அரண்மனை போன்ற பங்களா, எல்லாவற்றையும் விட்டு அவர் துரத்தியடிக்கப் பட்டார். மாளிகையில் வாழ்ந்த அவர், கோணிப்பைகளால் ஆன கூடாரத்தில் வாழ நேர்ந்தது.

“ஒ.. திடீரென எல்லா சொத்துக்களையும் இழந்து விட்டீர்கள். அப்படியானால் வங்கியில் இருப்பு மட்டும்தான் மிஞ்சியதா?”

“இல்லை. அதுவும் இல்லை. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் நாங்கள் கணக்கு வைத்திருந்தோம். அடுத்த வேளை உணவுக்காகவும், என்னுடைய படிப்புக்காகவும் பணம் எடுக்க முயற்சிக்கையில் அந்த பாங்க் மேனேஜர் அனுமதி மறுத்துவிட்டார்”

“என்ன? அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறதே? எதற்காக உங்கள் பணத்தை உங்களிடம் தர மறுத்தார்?”

“அந்தக் காலத்தில் இப்போது போல் தொலைபேசி வசதியில்லை. பலமுறை கடிதமெழுதினாலும், காஷ்மீரில் அமைதி நிகழ்வதாயும், அங்கே திரும்பி வந்து ஆனந்தமாக வாழும்படி அழைத்தும், அங்கே வராமல் பணம் பட்டுவாடா செய்ய இயலாது என்றும் பதில் எழுதுவாரே ஒழிய பணம் தர ஒப்புக் கொள்ளவேயில்லை. பிறகு டெல்லியில் இந்தியன் வங்கியில் கணக்கு ஆரம்பித்து அதில் எங்கள் கணக்கை மாற்றச் சொல்லி மன்றாடிப் பார்த்தோம். அடையாளங்கள், கையெழுத்து மாறுபடுவதாகவும் பணம் தவறானவர்களின் கைக்குச் செல்வதைத் தவிர்க்கவே பணத்தை பட்டுவாடா செய்யாமல் இருப்பதாகவும் சொல்லி இழுத்து அடித்தார். டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும், ஒரு வழியாகப் பணம் கிடைக்க 10 வருடங்கள் ஆகிற்று. என் தந்தையாரோ இதனால் மேலும் நொந்து போய், இதற்கிடையிலேயே உடல் சுகவீனப் பட்டு காலமானார்”

அவர் குரல் உடைய, என் கண்கள் பனித்தன. அதற்கு மேல் கேள்வி கேட்க மனமின்றி அங்கிருந்து நகர்ந்தேன். ரமேஷ் சுட்ஷியிடம் நான் அளவளாவிக் கொண்டிருந்தபோது, ஒரு காஷ்மீர மூதாட்டி என்னை அடிக்கடி உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் சென்றேன்.

“வந்தனம் அம்மா.. நீங்கள் ஏதோ கேட்க விரும்புவது போல் தோன்றுகிறதே?”

“மேரே தூஸ்ரா பேட்டா தேரே ஜெய்ஸெஹி தா”

“ஓ என்னைப் போலவா இருந்தார்? பலர் என்னைப் பார்த்து இவ்வாறு குழம்புவதுண்டு…. அப்படியானால் உங்கள் முதல் மகன்?”

ஓ.. வென அழ ஆரம்பித்தார்.

ஹிந்து உரிமை அணிவகுப்பினூடு பேனருடன் நடந்த குழந்தைகள் மார்பில் குத்தியிருந்த பாரத மூவர்ணக் கொடி மழையில் தொப்பலாக நனைந்திருக்க, மேகமூட்டம் கலையாமல் கனத்து இருண்டு இருந்த வானம் காஷ்மீர அரசியல்வாதிகளின் கல்நெஞ்சினை நினைவுபடுத்தியது. அடுத்த நொடி, குழந்தைகள் அனைவரும் ஒரே சமயத்தில் ‘ஜெய்ஹிந்த்’ என பிஞ்சுக் கைகளை உயர்த்தி கோஷமிட, ஒளிவீசும் முகங்களில், சூர்யனின் தங்கக் கதிர்கள் ஹிந்துக்களை வாழ்த்தி மறுமலர்ச்சிக்கு வித்திடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று தெரிந்தது.

2 Replies to “அந்த காஷ்மீரப் பாட்டி!”

  1. கண்கள் கலங்குகின்றன.
    இனியும் இந்த பூமி கொடுமைகளை தாங்காது. “தமிழன் தமிழன்” என்று கூச்சல் இடாமல் “தமிழ் ஹிந்து” என்று பறைச் சாற்றுவோம். இந்த மாதிரி கட்டுரைகள் மூலம் அறியாமையில் ( நாட்டின் பிற இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை பற்றிய அறியாமையில் ) உழலும் தமிழனை தட்டி எழுப்புவோம். ஜெய் ஹிந்த் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *