திருப்பாணாழ்வார்

Thiruppanazhwarஎம்பெருமானின் ஸ்ரீவத்சம் என்னும் மறுவின் அம்சமாகத் தோன்றியவர் திருப்பாணாழ்வார். இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. பாணர் குலத்தில் அவதரித்ததால் பாணர் என்றழைக்கப்பட்டார். தாழ்ந்த குலமாகிய பாணர் குலத்தில் பிறந்ததால் பூலோகவைகுண்டமாம் திருவரங்கத்தைத் தம் கால்களாலும் தீண்டக் கூடாதென்று காவிரியின் தென்கரையிலிருந்தபடி யாழ்மீட்டிப் பெரிய பெருமாள் அரங்கநாதனைத் துதித்து வந்தார்.

பாணரின் தியானம்

ஒருநாள் இவர் கண்களை மூடிக் கருத்தினில் அரங்கனை நினந்து கவனந்தனை மறந்து அரங்கனையே தியானித்துக் கொண்டிருந்தார். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்ய நீர் கொண்டு செல்வதற்காக அங்குவந்த லோகசாரங்க முனிவர், இவரை தூரத்தில் விலகும்படி சொன்னார். ஆனால் அரங்கனையே நினைத்துக் கொண்டிருந்த பாணர் காதில் இது விழவில்லை. அவர் கவனம்தான் பெருமாளிடம் சென்று விட்டதே! அதனால் கோபம் கொண்ட லோகசாரங்கர் ஒரு கல்லைத் தூக்கிப் பாணர்மேல் எறிய பாணர் முகத்தில் இரத்தம் வழிந்தது. பாணர் கண்களைத் திறந்து பார்த்தார். ‘ஐயோ, அரங்கனுக்குத் திருமஞ்சனம் கொண்டு செல்லும் இம்முனிவரின் கைங்கர்யத்துக்குத் தடங்கலாக இருந்து விட்டோமே’ என்று வருந்தி விலகிச் சென்றார்.

திருமஞ்சன தீர்த்தம் எடுத்துக்கொண்டு, குடை, சாமரம், மேளதாளங்களோடு கோவில் சன்னதிக்குச் சென்றார் லோகசாரங்கர். அங்கே கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. பெருமாளின் திருமுக மண்டலத்தில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. லோகசாரங்கர் பெருமானின் நிலைகண்டு பதறினார்.

அன்றிரவு லோகசாரங்கரின் கனவில் காட்சியளித்த பெருமாள் “லோகசாரங்கரே, பாண்பெருமாளின் பெருமையை நீர் அறியவில்லை. பாண்பெருமாள் நமக்கு அத்யந்த பக்தர். நாளைக்காலையில் பாண்பெருமாளைத் தோள்களிலே ஏற்றிக்கொண்டு இங்கு அழைத்து வரவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

முனிவாஹனம்

மறுநாள் லோகசாரங்கர் பாணரிடம் சென்று பெருமானின் உத்தரவைப் பற்றிச் சொன்னார். அதைக்கேட்ட பாணர் உள்ளம் பதறி “அபசாரம், அபசாரம், நான் தங்கள் தோள்களில் ஏறுவது மிகவும் அபசாரம், மஹாபாபம்” என்றார். ஆனால் முனிவர் இது பெரிய பெருமாளின் கட்டளை. அதை மீறமுடியாது என்று வற்புறுத்திப் பாணரைத் தம் தோள்களின் மேல் எழுந்தருளச் செய்து பெருமானின் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். அழகிய மணவாளன் சன்னதிக்குள் சென்ற பாணருக்குத் தன் திவ்யமங்கள வடிவத்தைக் காட்ட பாணர் தம் கண்ணார அரங்கனின் பாதாதிகேச அழகை அனுபவித்தார். அவருடைய அனுபவம் ‘அமலனாதிபிரான்’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களாக வெளிப்பட்டது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இவர் பாடியுள்ளவை பத்துப் பாசுரங்கள் மட்டுமே என்றாலும் அவை ஒவ்வொன்றுமே நல்மாணிக்கங்களக விளங்குகிறது. ஒவ்வொரு பாசுரத்திலும் பெருமானின் ஓர் அங்கத்தின் அழகை வருணிக்கிறார்.

1. திருவடி அழகு

அமலன், ஆதிபிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன், விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன், நின்மலன், நீதிவானவன், நீள்மதில் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே

அவன் பரிசுத்தமானவன். உலகுக்கெல்லாம் மூலகாரணமானவன். உலகப் பற்றுக்களில் மயங்கிக் கிடக்கும் என்னைத் தன்னுடைய அடியார்களுக்கு ஆட்படுத்தியவன். நித்ய சூரிகளுக்குத் தலைவன். அவன் மணம்மிகுந்த சோலைகள் சூழ்ந்த திருமலையிலே (திருப்பதி) தங்கி நான் விரும்பாமலே, நான் கேட்கும் முன்பாகவே எனக்கு அருள் செய்தவன். உயர்ந்த மதில்களை உடைய திருவரங்கத்தில் கண்வளரும் அப்பெருமானின் திருவடித் தாமரைகள் தாமே வந்து என் கண்களுக்குள்ளே புகுந்தது போலிருந்தது.

அடியவர்களுக்கு ஆதாரமாயிருக்கும் திருவடிகளின் அழகு தம்மை ஆட்கொண்டதை முதல் பாசுரத்தில் பேசுகிறார்.

2. பீதக ஆடை அழகு

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற
நிவந்த நீள்முடியன், அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன், கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தையே

எப்பொழுதும் ஆனந்தத்தோடு கூடிய மனத்தை உடையவன். அண்டங்களைக் கடந்துசெல்லும் உயர்ந்த திருமுடி உடையவன். தன்னை எதிர்த்துவந்த அசுரர்களையெல்லாம் கொடிய அம்புகளால் உயிர் வாங்கிய இராமபிரானாக விளங்குபவன். மணம்பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருள்பவன். அப்பெருமானின் திருவரையில் சார்த்திய பீதாம்பரத்தின் மேல் என்சிந்தை சென்றது. முதல் பாசுரத்தில் அவனுடைய திருவடித் தாமரைகள் தாமே வந்து என் கண்ணுள் புகுந்தன என்றார். தலைச்சன் கன்றை ஈன்ற பசு தன் கன்றுக்குட்டிக்குப் பழக்கம் இல்லாததால் முதலில் தானே வலியப்போய் தன் மடுவை கன்றின் வாயில் கொடுக்கும். பால் குடித்துப் பழகியபின் அக்கன்று தாய்ப்பாலின் ருசி அறிந்தபின், தாய்ப்பசு காலாலே உதைத்தாலும் ஓடிச்சென்று பால்குடிக்கும். எம்பெருமானின் திருவடி முதலில் தானே வலியவந்து ஆழ்வாருக்கு அருட்சுவையை ஊட்டியதை முதல் பாடலில் தெரிவிக்கிறார். இப்பாடலில் அருட்சுவைப் பாலின் ருசியறிந்த கன்றைப்போல தனது நெஞ்சு தானே தேடிச் சென்றதைத் தெரிவிக்கிறார்.

3. நாபிக்கமல (உந்தி) அழகு

மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்திசெய்ய நின்றான், அரங்கத்(து) அரவின் அணையான்
அந்திபோல் நிறத்தாடையும், அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்(து) இன்னுயிரே

திருமலையில் பெண்குரங்குகள் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவியபடி இருக்கும். தேவர்கள் பூக்களைக் கொண்டு பெருமாளை
ஆராதனை செய்துகொண்டே யிருப்பார்கள். அப்படி ஆராதனை செய்ய வரும்போது திருமலையின் சிகரங்களில் கொஞ்சம் இளைப்பாறுவார்கள். அவ்வளவு உயர்ந்தமலை அது! அரங்கத்தில் திருவனந்தாழ்வான் மேல் பள்ளிகொண்ட பெருமானுடைய பட்டாடை செவ்வானம் போன்ற நிறமுடையது. பிரமனைப் படைத்த அழகிய நாபிக்கமலமும் செந்நிறப் பீதாம்பரம் இவற்றின்மேல் என் உயிர் படிந்துவிட்டது.

4. உதரபந்தம்

சதுரமாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்தும்
உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன், ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட, மாமயிலாட, அரங்கத்தம்மான்
திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

நாலு பக்கங்களிலும் உயர்ந்திருக்கும் மதில்களல் சூழப்பட்ட இலங்கை மாநகரத்தின் அரசனான இராவணனை முதல்நாள் போரில் தோல்வியுறச்செய்து வெறுங்கையோடு இலங்கைக்கு அனுப்பிவைத்தான் இராமன். அதுமட்டுமல்லாமல் இன்றுபோய் போர்க்கு நாளை வா என்றும் சொன்னான். சீதையை விட்டுவிட மனமில்லாமல் மறுபடியும் போர்செய்ய வந்தவன் தலைகள் பத்தையும் உதிரும்படியாகக் கணைதொடுத்தவன் தலைகளை வெட்டி வீழ்த்த என்று சொல்லாமல் இலேசாக அதிக முயற்சி இல்லாமல் உதிரும்படியாகத் தலைகளை உதிர்த்தான், கணைவிட்டான் என்று நயமாகச் சொல்கிறார். வண்டுகள் இசை பாட, மயில்கள் ஆடும் திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் அரங்கநாதன் திருவயிற்றில் அணிந்திருக்கும் உதரபந்தம் என்னும் திருவாபரணம் என் நெஞ்சினுள் எப்போதும் நிலைத்திருக்கும்.

[உதரபந்தம் – அரைஞாண் கயிறு]

5. திருஆர மார்பழகு

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே

என்னுடைய மிகப்பாரமான, சுமக்க முடியாத பாபங்களை என்னிடமிருந்து தொலைத்தான் அதனால் நான் பாபங்களனைத்தும் நீங்கப் பெற்றவனானேன். என்னைத் தன்னிடம் அன்புடையவனாகப் பண்ணிவைத்தான். அதுமட்டுமா, அரங்கநாதன் என் மனத்தினுள்ளும் வந்து புகுந்து விட்டான். சாதாரணமாகக் கதவை திறந்து வா என்று அழைத்தபின் வருவதற்கும் வந்து புகுவதற்கும் வித்தியாசம் உண்டு. இடித்துத் தள்ளிக்கொண்டு புகுதல். ‘வந்து புகுந்து இருந்தாள் பழைய இருப்பிடமாக’ என்பார் அபிராமி பட்டர். இப்படி அரங்கநாதன் வந்து என்னுள்புக நான் என்ன தவம் செய்தேனோ!முற்பிறவியில் பெரிய தவத்தைச் செய்திருப்பேனோ? தெரியவில்லை. பிராட்டியும் முத்தாரமும் வீற்றிருக்கும் அந்தத் திருமார்பு என்னை ஆட்கொண்டது.

6. கண்டத்தழகு

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன், அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்
அண்ட பகிரண்டத்து ஒருமாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே

வெண்மையான பிறைச்சந்திரனைச் சடையில் தரித்த சிவன், பிரும்ம கபாலத்தில் பிக்ஷை எடுத்துத் திரிந்த பாபத்தைப் போக்கிய பெருமான். வண்டுகள்
வாழும் சோலைகளால் சூழப்பட்ட திருவரங்கத்தில் பள்ளி கொண்டவன். அண்ட பகிரண்டங்களையும் பூமியையும் ஏழு குலமலைகளையும் அமுது செய்தருளிய
திருக்கழுத்து என்னை சம்சார சாகரத்தில் அகப்படாமல் உய்யக் கொண்டதே!

7. திருவாயழகு

கையினார் சுரிசங்கு அனல் ஆழியார் நீள்வரை போல்
மெய்யனார், துளப விரையார், கமழ்நீள்முடி எம்
ஐயனார், அணிஅரங்கனார், அரவினணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

சுழியை உடைய சங்கையும் அனல் கக்கும் சக்கரத்தையும் தனது திருக்கைகளில் தரித்தபடி இருக்கிறான் அரங்கன். அவன் மேனி நீண்ட மலை போல விளங்குகிறது. மணம் கமழும் துளப மாலைகள் அவனுடைய நீண்ட முடியை அலங்கரிக்கின்றன. என் ஐயன் திருவனந்தாழ்வான்மேல் சயனிப்பவன். அந்த மாயனின் சிவந்த திருவாய், ஐயோ! அதன் அழகை என்னென்று சொல்வேன்! அந்தச் சிவந்தவாய் என்னை, என் சிந்தையைக் கொள்ளை கொண்டுவிட்டதே! பெண்களின் கொவ்வைச் செவ்வாயில் ஈடுபட்டிருந்த என்னைத் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டதே!

இந்த வாயழகிலே கோதை நாச்சியாரும் ஈடுபட்டிருக்கிறாள். இவர் ஒவ்வொரு பாட்டில் ஒவ்வொரு அழகைச் சொல்ல அவள் அரங்கனின் அத்தனை அழகையும் ஒரே பாசுரத்திலே சொல்லிவிடுகிறாள்

எழிலுடை அம்மனையீர்! எனனரங்கத்து இன்னமுதர்
குழலழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழகர், எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினாரே

என்று அரங்கனின் சௌந்தர்ய சோபையில் ஈடுபடுகிறாள்

8. கண்ணழகு

பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன் முகத்து
கரியவாகிப், புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே

மிகப் பெரிய வடிவோடு தன்னை எதிர்த்து வந்த இரணியனின் குடலைத் தன் நகங்களால் கிழித்த நரசிங்கன், பிரமன் முதலிய தேவர்களுக்கும் அணுகவும் அனுபவிக்கவும் அரியவனாக இருப்பவன். எல்லோருக்கும் முன்னால் முதலில் தோன்றி முதல் காரணமான ஆதிப்பரம்பொருள். அரங்கமாநகரில் கண்வளரும் அழகிய மணவாளன். அவனுடைய திருமுக மண்டலத்தில் கறுத்து, விசாலமாகப் பரந்து, ஒளிவீசும், செவ்வரியோடிய, காதளவோடிய கண்கள் என்னை அவனிடம் பித்தேறும்படி செய்துவிட்டன. கல்நெஞ்சனான என்னையும் அவன் கண்கள் தன் பக்கம் இழுத்துக்கொண்டு விட்டன.

இந்தக் கண்களின் அழகிலே ஈடுபட்ட நம்மாழ்வாரும் நாயகி பாவத்தில் பராங்குச நாயகியாகி

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன்
ஆழியங் கண்ணபிரான் திருக் கண்கள்கொலோ அறியேன்

இவை திருக் கண்களா அன்றி மங்கையர்களின் உயிரைக் கவரும் கூற்றமா? தெரியவில்லையே! என்று அக்கண்களின் அழகிலே ஈடுபடுகிறார்.

9. நீலமேனி எழில்

ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்
கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே

பிரளய காலத்தில் ஆலமரத்தின் சிறிய இலையிலே தன்னந்தனியே சின்னஞ்சிறு பாலகனாய் பள்ளிகொண்டான். ஏழு உலகங்களையும் தன் திருவயிற்றிலே அடக்கியவன். திருவரங்க நகரில் திருவனந்தாழ்வானை அணையாகக் கொண்டு பள்ளிகொண்டவன். அவனுடைய இரத்தின ஆரமும், முத்து மாலையும் எல்லாவற்றுக்கும் மேலாக எல்லைகாண முடியாத அந்த நீலமேனி அழகும், ஐயோ! அதை எப்படிச் சொல்வேன்! என் நெஞ்சு பூராவும் வியாபித்து விட்டதே.

கம்பரும் இதை அடியொற்றி இராமன் அழகை வருணிக்கும் பொழுது

மையோ! மரகதமோ! மறிகடலோ! மழைமுகிலோ!
ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்

என்று வியந்து போகிறார். ஐயோ என்ற அவச்சொல் இங்கு அதிசயத்தைக் காட்டும் சொல்லாகி விடுகிறது.

10. மற்றொன்றைக் காணாத கண்கள்

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்டவாயன், என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன், அணியரங்கன், என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே

நீலமேக வண்ணன், ஆயர்குலத்தில் பிறந்த வெண்ணையுண்ட வாயன், அவன் என் நெஞ்சைக் கொள்ளை கொண்டான். அண்டங்களுக்கெல்லாம் தலைவனான அவன் திருவரங்கத்தில் அழகாகக் கண்வளர்பவன். உண்ண உண்ணத் தெவிட்டாத அமுதம்போன்ற அவனைக் கண்டு சேவித்த கண்கள் வேறெதையும் சேவிக்குமா? ஆரா அமுதனான அவனுடைய அழகைக் கண்டு களித்த கண்கள் வேறு எதையும் கண்டு களிக்குமா? கண்டு களிக்கவும் பாணர் விரும்பவில்லை.
மற்ற ஆழ்வார்கள் தங்கள் ஊரையும் பெயரையும் (முத்திரை) பாசுரக் கணக்கையும் கூறியதுபோல இவர் தம் பெயரையோ ஊரையோ குறிப்பிட வில்லை.

’உற்றாரை யான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர் வேண்டேன்’ என்ற மனோபாவம்! அவருடைய கண்ணும் கருத்தும் அரங்கனிடமே, அவன் அழகிலேயே ஈடுபட்டன. அவர் தன்னை மறந்தார். இத்தனை காலமாகக் கோயிலுக்குள்ளே வந்து தரிசிக்க முடியமல் இருந்ததால் இன்று அரங்கநாதனை மிக அருகிலிருந்து தரிசித்த ஆனந்தக் களிப்பில் தன்னையே இழந்தார். தன் நாமமும் கெட்டார், தலைப்பட்டார் தலைவன் தாள். ‘அரங்கநாதா, உன்னைக் கண்ணாரக் கண்டபின்,உன்னைக் கண்ட கண்கள் வேறு எதையும் பார்க்க விரும்புமா?’ என்று கேட்டவுடன் அரங்கன் திருப்பாணாழ்வாரைத் தன் மேனியோடு சேர்த்துக் கொண்டார். காந்தம் இரும்பை ஈர்ப்பதுபோல, காய்ந்த இரும்பில் விழுந்த நீர் போல ஆழ்வார் அரங்கனோடு ஐக்கியமானார். அமுதமே கிடைத்தபின் பால் எதற்கு?

4 Replies to “திருப்பாணாழ்வார்”

  1. நெடுமாலின் அழகை அடி முதல் முடி வரை மிக அழகாக வர்ணிக்கும் அமலன் ஆதிபிரான் பாடலை நல்ல முறையிலே கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் தூய பணியை.

  2. பாடல்களின் விளக்கம் எளிய நடையில் மிகவும் அருமை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *