நினைவஞ்சலி: குன்னக்குடி வைத்தியநாதன்

வயலின் மேதைவயலின் மேதை குன்னக்குடி திரு. வைத்தியநாதன் மறைந்துவிட்டார். கர்நாடக இசைக் கச்சேரியில் பக்கவாத்தியமாக இருந்த வயலினுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை வைத்தே கச்சேரிகளை நடத்தி அதை முன்னிலைப் படுத்தியவர்களில் முக்கியமானவர் குன்னக்குடி வைத்தியநாதன். வயலினோடு பக்கவாத்தியமாக பரவலாக மிருதங்கம் இருந்த நிலையில், தவிலுடன் வயலின் கச்சேரிகளை இணைத்து, தவில் வித்வான் வலையப்பட்டி சுப்ரமணியத்துடன் இவர் நடத்திய கச்சேரிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

கர்நாடக இசையின் நுணுக்கங்களை, ராகங்களை அறிந்து ரசிக்கத் தெரிந்த ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதைவிட, தன் வயலின் கச்சேரிகள் மூலம் பாமரர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றவர் குன்னக்குடி. இவரது வயலின் கச்சேரிகள் எளிமைப்படுத்தப் பட்டவை என்ற விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், எளிய ரசிகர்களின் உள்ளத்தையும் தனது மயக்கும் வயலின் இசையால் கொள்ளை கொண்டவர் குன்னக்குடி. ராகங்களில் புதிய முயற்சிகள், இசை வேள்வி நடத்தி மழைபெற வாசித்தல், மக்களுக்குப் புரித்த பாடல்கள் அனைத்தையும் வயலினில் வாசித்தல் என்று தொடர்ந்து தமிழகத்தின் பாமர, பண்டித ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.

வயலின்மூலம் கர்நாடக இசைப் பாடல்கள் மட்டுமன்றி மக்களுக்கு பரிச்சயமான திரையிசைப் பாடல்களையும் வாசித்து ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தார். இறைவனிடத்தில் ஆழ்ந்த பக்தி உடைய வைத்தியநாதன் எண்ணற்ற பக்திப் பாடல்களுக்கு இசையமைத்து இந்துக்களின் பக்தி உணர்வுகளைத் தூண்டியவர். அவர் இசையமைத்த ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்’ என்ற தேனினும் இனிய பக்திரசம் சொட்டும் பாடல்களைக் கேட்டு உருகாத தமிழ் நெஞ்சங்கள் இருந்திருக்க முடியாது. பக்தியை இசைமூலம் வெளியிடும் முயற்சியில் பெரும் வெற்றிகண்டவர் வைத்தியநாதன்.

வயலின் மேதையாகத் திகழ்ந்த குன்னக்குடி வைத்தியநாதனிடம் இருந்த இசையமைக்கும் திறமையைச் சரியாக இனங்கண்டு பயன்படுத்தியவர் தமிழ்த்திரை உலகில் நமது இந்துக் கடவுள்களின் மேன்மையையும், புராண பாத்திரங்களையும், தம் திரைப்படங்கள் மூலமாக மக்களிடம் கொண்டுசென்று பெரும்புகழ் பெற்ற திரு. ஏ.பி. நாகராஜன். தன் படங்களுக்கு குன்னக்குடி அவர்களின் இசைத் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவுசெய்து அதில் பெரும் வெற்றியும் பெற்றார். தனது வெற்றிப் படமான ‘வா ராஜா வா’வில் குன்னக்குடி வைத்தியநாதனை வெற்றிகரமான திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தினார். அதில் வரும் ‘கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா’ போன்ற பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து ஏ.பி.என். அவர்கள் தயாரித்த ‘கண்காட்சி’, ‘திருமலை தென்குமரி’, ‘அகத்தியர்’, ‘மேல்நாட்டு மருமகள்’ போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து மக்களிடையே ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் அறியப்பட்டார் குன்னக்குடி வைத்தியநாதன்.

ஏ.பி.என். அவர்களின் ‘மேல்நாட்டு மருமகள்’ நம் இந்திய இந்துக் கலாசாரத்தின் மேன்மையைச் சித்தரிக்கும் திரைப்படமாகும். அதில் மேல்நாட்டுக் கலாசாரத்தை ஒட்டிய ஒரு பாப் பாடலுக்கு குன்னக்குடி இசையமைக்க வேண்டும். பெரிய குங்குமப் பொட்டுடன் இசையமைக்கத் தயாராக இருந்த வைத்தியநாதனைக் கண்ட பிரபல பாப் பாடகி உஷா உதுப் முதலில் இவர் இசையில் எப்படி தான் பாடுவது என்று தயங்கியிருக்கிறார். மெட்டை முதலில் கேளுங்கள் என்று ஏ.பி.என். வற்புறுத்த, வேண்டா வெறுப்பாக பாடத் துவங்கிய உஷா பாடலில் மெய்மறந்து பாடி முடித்தவுடன், உருவம் கண்டு எள்ளிய தன் சிறுமைக்கு வெட்கி, குன்னக்குடி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். குன்னக்குடியின் இசையமைப்பில் உஷா உதுப் பாடிய ‘கம் அலாங் சிங் வித் மீ’ என்ற பாடல் இன்றும் தமிழில் பெரிதும் விரும்பிக் கேட்கப்படும் ஒரு பிரபலமான பாப் பாடலாக அமைந்து விட்டது.

‘திருமலை தென்குமரி’க்காக இவர் இசையமைத்த பக்திப் பாடல்கள் அனைத்தும் தேனினும் இனியவை. குன்னக்குடியின் திரையிசை முயற்சியின் உச்சம் என்று சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பாத் தேவர் இயக்கிய தேவரின் ‘தெய்வம்’ அமைந்தது. முருகப் பெருமானின் பரிபூரண அருள் குன்னக்குடி அவர்களிடம் நிரம்பியிருந்தது அந்தத் திரைப்படத்தின் பாடல்கள் மூலம் தெளிவாகியது. கர்நாடக இசையை மக்களிடம் வயலின் கச்சேரிகள் மூலம் மட்டுமல்லாது தனது திரையிசை மூலமாகவும் பிரபலப்படுத்தியவர் குன்னக்குடி.

‘தெய்வம்’ திரைப்படத்துக்காக, வழக்கமான திரையிசைப் பின்ணணிப் பாடகர்களைத் தவிர்த்து, பாமரர்களிடம் அதிகம் அறிமுகமாயிராத கர்நாடக இசை வித்தகரான மதுரை சோமசுந்தரம், பஜனைப் பாடல்கள் மூலம் மட்டுமே அறிமுகமாயிருந்த பித்துக்குளி முருகதாஸ், கம்பீரமான குரலுடைய பெங்களூர் ரமணி அம்மாள், மதுரை விஜயா ஆகியோரைத் தமிழ் நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் அறிமுகப்படுத்தி அவர்களது பக்தியிசைச் சேவைகளுக்குரிய பெருமையைப் பெற்றுத் தந்தவர் குன்னக்குடி. தன் கச்சேரிகள் மூலமும், தன் திரையிசை மூலமும் இந்துக்களிடம் இசை சார்ந்த பக்தி எழுச்சியை உருவாக்கிய மேதைகளில் குன்னக்குடி வைத்தியநாதனின் பங்கு முக்கியமானது.

‘கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை’ எனறு கம்பீரமான மதுரை சோமு அவர்கள் பாட அதை அருகில் இருந்து கேட்டு ரசிக்க வேண்டும் என்று தானே வயலின் வாசிக்கும் பக்கவாத்தியக்காரராக குன்னக்குடி அருகில் இருந்து வாசிக்க எடுக்கப் பட்ட அந்தப் பாடலை யாரால் மறக்க முடியும். “நாடறியும் நூறு மலை நானறிவேன் சுவாமி மலை” என்று பித்துக்குளி முருகதாஸ் பாடிய பாடலில் நெக்குருகாத நெஞ்சம் இருக்க முடியாது. தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக அதிக பொருட்செலவில் உருவானதும் தமிழின் முதல் 70MM வரலாற்றுத் திரைப்படமுமான ‘ராஜராஜ சோழ’னுக்கு இசையமைக்கக் குன்னக்குடி வைத்தியநாதனையே தேர்வு செய்தார்கள். அந்தப் பிரம்மாண்டத்திற்குத் தன் இசையால் மேலும் பிரமிப்பு சேர்த்தவர் குன்னக்குடி.

தான் இசையமைத்த பாடல்களில் கர்நாடகம், மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை என்று எண்ணற்ற பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்து வந்தவர் குன்னக்குடி. பிற்காலத்தில் இவரே இசையமைத்துப் பாடிய கொட்டாம்பட்டி ரோட்டிலே என்ற பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்ற வெகுஜனப் பாடலானது.

ஆண்டுதோறும் சங்கீத மும்மூர்த்திகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து இசைக் கலைஞர்களையும் திருவையாறுக்கு அழைத்துச் சென்று தியாகையருக்கு உற்சவம் எடுத்து நடத்தியவர் குன்னக்குடி. இவரது வயலின் பேசும், பாடும். அதில் இவர் செய்யாத வித்தைகள் இல்லை. தன் வயலின் இசையும், பாண்டித்யமும் சாதாரண மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்பதில் முனைப்புக் காட்டிய மேதை குன்னக்குடி. தொடர்ந்து தமிழ் பக்தி இசைக்குப் பெரும் தொண்டாற்றியவர் குன்னக்குடி.

தன் வாழ்நாள் முழுவதும் இசைக்கும் இறைவனுக்கும் அர்ப்பணித்த அந்த மேதை இன்று நம்மிடம் இல்லை. அவர் ஏற்படுத்திச் சென்ற பாரம்பரியத்தை வருங்கால இசைக் கலைஞர்கள் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும், அதற்கு எல்லாம் வல்ல முருகன் அருள் புரிய வேண்டும். குன்னக்குடி வைத்தியநாதன் மறைந்தாலும், அவர் உருவாக்கிய அற்புதமான இசை நம்மை விட்டு அகலாது. தமிழின் பக்தி இசை மரபுக்கு அவர் ஆற்றிய பணி அவருக்கு என்றும் காலத்தால் அழியாப் புகழை ஏற்படுத்தியுள்ளது. அன்னார் ஆத்மா சாந்தியடைய தமிழ் இந்து சார்பாகப் பிரார்த்திக்கிறோம். அன்னாரின் குடும்பத்தார்க்கு தமிழ் இந்து தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது. “யூட்யூப்” தளத்தில் அன்னாரின் கச்சேரிகளில் சிலவற்றைக் கேட்டு ரசிக்கலாம்

4 Replies to “நினைவஞ்சலி: குன்னக்குடி வைத்தியநாதன்”

  1. அந்த காலத்தில் மாட்டு வண்டி ஓட்டுபவரும், வயலில் வேர்வை சிந்தி பிழைப்பவரும், முடிதிருத்துபவரும்கூட கர்நாடக இசை குறித்து அறிவு கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த இசையை அழிக்க ஆங்கிலேயர்களும், அவர்களது அல்லக்கைகளும் முயன்றதால் உழைக்கும் வர்க்கத்திற்கும் உரிமையாக இருந்த இந்த இசை அவர்களிடம் இருந்து மறைந்தது.

    அதை அந்த பாட்டாளி வர்க்கத்திற்கு மீண்டும் உரிமையாக்க கொண்டு செல்ல உழைத்தவர்களில் மிக மிக முக்கியமானவர் குன்னக்குடி வைத்தியநாதன் முதன்மையானவர்.

  2. …….கர்நாடக இசையின் நுணுக்கங்களை, ராகங்களை அறிந்து ரசிக்கத் தெரிந்த ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதைவிட, தன் வயலின் கச்சேரிகள் மூலம் பாமரர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றவர் குன்னக்குடி……..

    நன்றாகச் சொன்னீர் திருமலை அவர்களே. எந்தக் கலையாயிருந்தாலும் அது பாமர மக்களையும் சென்ற‌டைய வேண்டும். அதுதான் கலைகளின் சிறப்பு, கலைங்கர்களுக்கும் மதிப்பு. இல்லாவிட்டால் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு ஒன்றுமே புரியாமல் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருக்கும் கூட்டத்திற்க்கு போய்ச் சேர்ந்தால் மட்டும் என்ன பிரயோசனம்?

    திரு குன்னக்குடி வைத்தியநாதன் ம‌றைந்தாலும், பாடிய, பேசிய, அவ‌ர‌து வயலின் இசை மட்டும் நம்மிடமிருந்து மறையாது.

    நன்றி,
    பார்த்தசாரதி

  3. குன்னக்குடி அவர்களின் ஆளுமையில் எதிரும் புதிருமான விஷயங்கள் பல உண்டு. ரசனையற்ற பாமரன் கேலி செய்யத்தூண்டும் அம்சங்களும் அவரிடம் உண்டு. அது பற்றியெல்லாம் அவர் கவலைப் பட்டவர் இல்லை. தன் சங்கீத் மேதமையை இழக்காது எல்லோரையும் கவரும் உத்வேகமும் அவரிடம் உண்டு. அவரை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும், கேலி செய்வதும், அலட்சியப்படுத்துவ்தும், அவரவர் குணத்தின் பிரதிபலிப்புத் தான். எம் எஸ் மறைந்தபோது அலங்காரமாக எழுதிவைத்த இரண்டு வரிகளைப் படித்த தமிழினத்தலைவருக்கு குன்னக்குடி ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை என்றால், இரண்டும் சங்கீத ரசனையின் பாற்பட்டதல்ல என்ப்தைத் தான் அந்த எதிர்வினைகள் சொல்லும். ஒரு பாமரன் கலைஞர் என்று தான் கொண்டாடப்பட விரும்புவதன், கொண்டாடப்படுவதன் கொடுமை;

    ராஜன் மிக நன்றாக எழுதியிருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது.

  4. திரு.குன்னக்குடி அவர்களின் மறைவு எடு செய்யமுடியாதது…
    அவர் வளர்த்த இசை கலையை நாம் அழியாமல் பாதுகாப்பதே நாம் அவருக்கு செலுத்தும் காணிக்கையாகும்..

    நன்றி!

    முகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *