மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபாவளியை கொண்டாடுவதற்கு பல ஐதீகங்கள் மற்றும் வரலாற்று, ஆன்மீக காரணங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.

1. தனிமனித அற உணர்வின் வெற்றித் திருநாள் தீபாவளி:

இராமபிரான் அரசதிகாரத்தை உதறி சத்தியத்துக்காக வனவாசம் சென்றவர். இராவணன் பிறப்பால் அந்தணன். சாமவேத அறிஞன். பெரும் சக்கரவர்த்தி. அவனால் அநீதி இழைக்கப்பட்ட ஒரு தனிமனிதனாக வானரங்களையும் கரடிகளையும் தனது துணையாகக் கொண்டு ஒரு பெரும் சாம்ராஜ்ஜிய அதிபதியை எதிர்த்து போராடி வென்று தருமத்தை நிலைநாட்டினார் இராமபிரான்.

ஒரு தனிமனிதன் கூட அறத்தினைக் கை கொண்டால் பெரும் அழிவு சக்திகளை எதிர்த்துப் போராடி வெற்றி க஡ண முடியும் எனும் உண்மையை தீபாவளி நமக்கு உணர்த்துகிறது.

2. உலகப் பேரழிவிலிருந்து விடுதலை அளிக்கும் திருநாள்:

பூமித் தாய்க்கும் திருமால் எனும் தெய்வீக சக்திக்கும் பிறந்தவன் நரகாசுரன். நரகாசுரன் அதிகார வெறியால் உலகெங்கிலும் உள்ள பெண்களை தனது அடிமைகளாக சிறையிலிட்டான். திருமால் ஸ்ரீ கிருஷ்ணராகவும் பூமித்தாய் சத்தியபாமாவாகவும் நரகாசுரன் மீது போர் தொடுத்தனர். இறுதியில் சத்தியபாமாவினால் கொல்லப்பட்டான் நரகாசுரன். சிறைப்பட்ட பெண்கள் விடுதலையடைந்தனர். இந்நாளே தீபத்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைக்கு உலகம் அனைத்துமே சுற்றுச் சூழல் பிரச்சனைகளால் பேரழிவுகள் குறித்து மனத்துயர் கொண்டுள்ளன. பல சூழலியல் அறிஞர்கள் நமது ஆதிக்க மனப்பான்மையே இதற்கு காரணம் என கருதுகின்றனர். அத்துடன் தாயுணர்வு கொண்ட ஆன்மிகம் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட சிந்தனைகளால் பின் தள்ளப்பட்டதும் இத்தகைய சூழலியல் அழிவுகளுக்கான காரணமாக கருதப்படுகிறது. இறையுணர்வு கூட ஆதிக்க மனப்பான்மை கொள்ளும் போது அரக்கத்தன்மை கொண்ட அதிகார பீடங்களாகிவிடுகின்றன.

இச்சூழலில் விழித்தெழும் புவியுணர்வுடன் இணைந்த இறைச்சக்தியே ஆதிக்க மனப்பான்மை கொண்ட அதிகார பீடங்களை அழித்து சிறைப்பட்டிருக்கும் தாயுணர்வு இறையியலை மீட்டெடுக்க முடியும் – அத்தகைய தாயுணர்வு கொண்ட ஆன்மிகமே பூமியின் காயங்களுக்கும் மானுட நல்வாழ்வுக்கும் அருமருந்தாக அமையும் என்பதே நரகாசுர வதம் எனும் தொன்மம் இன்றைய சூழலில் நமக்கு அளிக்கும் திருசெய்தியாகும். இதனை நாம் ஏற்று இத்தீப திருநாளில் சுற்றுப்புற சூழலுணர்வு இன்னும் மேம்பட உழைக்க உறுதியேற்போம்.

3. இயற்கையுடன் இணைந்த ஆன்மிகத்துக்கு இறைவனே சான்றுரைத்த திருநாள்:

பொதுவாக ஆன்மிகம் என்பது இன்று தவறாக கண்ணுக்குத் தெரியாத கடவுள் ஒருவரை நம்பும் விசுவாசமாக சீரழிந்துவிட்டது. இத்தகைய மதமானது படைப்புக்கு அப்பால் ஒரு படைத்தவன் இருப்பதாக நம்பி அந்த படைத்தவனை நாம் வணங்காவிட்டால் அவன் நம்மை தண்டிப்பான் என்கிற அச்ச உணர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். ஆனால் இறை என்பது இயற்கையுடன் இணைந்ததோர் தத்துவமே அன்றி படைப்பிலிருந்து விலகி நிற்கும் படைப்பாளி அல்ல என்பதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரத மண்ணில் ஸ்ரீ கிருஷ்ணர் வலியுறுத்தினார்.

மானுடம் என்பது இயற்கையுடன் இணைந்ததோர் இழையே அன்றி அதிலிருந்து வேறுபட்டதன்று என்பதனை எடுத்துரைத்த ஸ்ரீ கிருஷ்ணர் கண்ணுக்கு தெரியாத படைப்பாளி எனும் கற்பனையைக் காட்டிலும் இயற்கை தோற்றமான கோவர்த்தன மலையை வணங்க ஆயர்பாடி மக்களுக்கு அறிவுரை கூறினார். பின்னாட்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களிலிருந்து அம்மக்களை கோவர்த்தன கிரி எனும் மலை உறைவிடம் வழங்கி காப்பாற்றியது. தீபாவளியே கோவர்த்தன கிரியை ஸ்ரீ கிருஷ்ணர் இறைநிலைக்கு உயர்த்திய நாளாக கருதி கொண்டாடப்படுகிறது. இயற்கையோடு இணைந்த இறைவணக்கமே மானுடத்துக்கு இன்றைய தேவை என்பதனை இந்து தருமம் உலகுக்கு எடுத்துக்கூறிய நாள் தீபாவளி.

4. மாசற்ற செல்வம் தோன்றிய திருநாள் தீபாவளி:

அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் உண்டாயிற்று. அதனை உண்டு உலகை காத்தவர் சிவபெருமான். பின்னர் அதிலிருந்து செல்வங்களின் தேவியான லஷ்மி தேவி தோன்றினாள். அந்நாளே தீபாவளியாகும்.

பாரதத்தின் பாரம்பரிய வழக்கில் எந்த ஆழ்ந்த ஆராய்ச்சியும் ‘சமுத்திர மந்தனம்’ – பாற்கடலை கடைதல் என அழைக்கப்படுவது வழக்கம். பொதுவாக எந்த ஆராய்ச்சியிலும் தீயவிளைவுகளும் இருக்கும். அணுசக்தி ஒரு நல்ல உதாரணமாக திகழ்கிறது.

தியாக மனப்பான்மையும், அதிகார ஆசையினால் தீமையான சக்தியினால் கவர்ந்திழுக்கப்படாமல் இருக்கும் மனநிலையும் கொண்ட அற சக்தியே ஒரு ஆராய்ச்சியின் தீயவிளைவுகளை நீக்கி அதனை அனைத்து உயிர்களுக்கும் சாசுவதமான நன்மையை அளிக்கும் திசைக்கு கொண்டு செல்ல முடியும்.

அந்த சக்தியே சிவ பெருமான்.

ஆலகால விஷம் பருகப்பட்டில்லாமல் திருமகளும் அமிர்தமும் உலகுக்கு கிடைக்காது. இன்றைக்கு வளரும் நாடுகளுக்கு அத்தகைய தீயவிளைவுகள் அற்ற நல்ல தொழில்நுட்பங்களை அளிக்கும் தேசமாக பாரதம் விளங்குகிறது.

ஜெய்ப்பூர் செயற்கை கால்கள் முதல் சாண எரிவாயு கலன்கள் வரையாக பாரதம் வளரும் நாடுகளுக்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறது.

‘எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன்’
என்றுரைத்தான் கண்ண பெருமான்:
எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்’

எனும் பாரதியின் இறைவாக்கை நிறைவேற்ற சூளுரைக்கும் நாளாக திருமகள் பாற்கடலிலிருந்து தோன்றிய நாளான தீபத் திருநாள் நமக்கு அமையட்டும்.

5. அனைத்துயிருடத்தும் அன்பினைக் கொண்டாட ஒரு திருநாள்:

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐப்பசி திங்களின் அமாவாசை நாளிலேதான் மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்தார்.

சக மானிடர்களிடத்து மட்டுமின்றி கொடிய விஷ நாகங்களிடம் கூட அன்பினையும் அஹிம்சையையும் போதித்த தீர்த்தங்கரர் மகாவீரர்.

அவரது பரிநிர்வாண திருநாளாக சமண மார்க்கத்தினரால் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

அதே அஹிம்சையை உணர்வுப்பூர்வமாக கடைப்பிடிக்க நம்மை இத்திருநாள் தூண்டிட மகாவீரரை இந்நாளில் வணங்கித் தியானிப்போம்.

 

6. இறைவீரர்கள் கூடி குரு அருள் பெறும் நாள்:

குரு அமர்தாஸ் தீபாவளித்திருநாளை அனைத்து சீக்கியர்களும் குருவினிடம் வந்து அருள் பெறும் நாளாக அறிவித்தார். தீபாவளித் திருநாளின் போதுதான் ஹரி மந்திர் எனும் சீக்கிய பொற்கோவிலின் அடிக்கல் இடப்பட்டது. தீபாவளித் திருநாளின் போதுதான் குரு ஹரிகோவிந்தரின் ஆன்மிக பலத்தின் முன்னர் முகலாய சாம்ராஜ்ஜிய பலம் மண்டியிட்டது. ஹரி கோவிந்தரின் அருட் சக்தியை உணர்ந்த மொகலாய பேரரசன் தான் கைது செய்திருந்த குருவை விடுவிக்க முன்வந்த போது குரு தமது விடுதலையை மறுத்தார், தன்னோடு சிறை வைக்கப்பட்டிருந்த 52 இந்து தலைவர்களையும் விடுவித்தாலே தாம் விடுதலையாவதாக குரு கூறியதை மொகலாய பேரரசால் தட்டமுடியவில்லை. தீபாவளித் திருநாள் அன்று குருவும் அவரது அருளால் 52 இந்து தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டதால் தீபாவளி சீக்கிய சம்பிரதாயத்தில் ‘விடுதலை திருநாள்’ (பந்தி சோர் திவஸ்) என்றும் கொண்டாடப்படுகிறது.

7. பலிதானத்தை நினைவு கொள்வோம்:

1737 இல் அமிர்த சரஸில் தீபாவளி கொண்டாட அன்னிய ஆட்சியாளர்கள் தடை விதித்திருந்தனர், அதனை மீறியவர் குரு கோவிந்த சிம்மரின் சீடரும் பாலிய தோழருமான குரு பாயி மணிசிங் ஆவார். அவரை அன்றைய ஆட்சியாளர்கள் தீபாவளி தினத்தன்று கைது செய்தனர். கட்டாய மதமாற்றம் செய்ய சித்திரவதை செய்து ஒவ்வொரு மணிக்கட்டாக விரல்களை வெட்டி மதம் மாற நிர்ப்பந்தித்தனர். தன்னை அவ்வாறு சித்திரவதை செய்தவரே பொறுக்க முடியாமல் அவரை முழுமையாக கொல்ல நினைத்த போது பாயி மணிசிங் கருணையுடன் அவரை தன்னை சித்திரவதை செய்தே கொல்லும்படியும் இல்லாவிட்டால் சித்திரவதையாளர் அரச தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் கூறினார். பின்னர் ஏக ஓங்கார தியானத்தில் ஆழ்ந்த பாயி மணிசிங் தீபாவளித்திருநாளின் பலிதியாகியானார். அவரது தியாகத்தை கேட்டு வளர்ந்த அடுத்த தலைமுறை வீரர் மகாராஜா ரஞ்சித் சிங் அன்னியர் ஆட்சியை அகற்றி ஆப்கானிஸ்தான் வரை தருமத்தின் கொடியை பறக்க செய்தார்.

8. காலனிய எதிர்ப்பு போரில் மகாத்மாவின் முன்னோடியாக தீபாவளி:

1860கள் முதல் கொத்தடிமைகளாக ஆயிரக்கணக்கான இந்து குடும்பங்கள் பிரிட்டிஷினரின் ஆப்பிரிக்க காலனிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காலனிய பிரதேசங்களில் இந்து தருமம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை (இத்தாலி போன்ற நாடுகளில் இன்றைக்கும் தொடரும் நிலை இது). எனவே தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகள் கொண்டாட அங்கெல்லாம் கொத்தடிமை இந்திய தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் 1860களிலிருந்தே இந்து தொழிலாளர்கள் இப்பண்டிகையை கொண்டாடுவதை காலனிய-இனவாதத்துக்கு எதிரான ஒரு போராட்ட குறியீடாகவே கொண்டிருந்தனர்.

‘கொத்தடிமை வாழ்க்கைக்கு உள்ளிருந்து’ (Inside indenture) எனும் தம் நூலில் வரலாற்றாசிரியர்களான அஸ்வின் தேசாயும் கூலம் வஹீதும், ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கொத்தடிமை தொழிலாளர்களின் போராட்டத்தில் தீபாவளியின் முக்கிய இடத்தை பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்: வெள்ளைக்கார காலனிய அதிகாரிகள் இந்து தருமத்தையும் ஒரு மதமாக ஏற்றுக்கொள்ளவும் அதன் மூலம் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கான உரிமையை பெற்றிட கொத்தடிமைத் தொழிலாளர்களும் இதர இந்துக்கள் பலரும் செய்த தியாகங்களையும் கடும் உழைப்பையும் (தீபாவளி வெளிப்படையாக கொண்டாட அனுமதிக்கப்பட்ட) நூறாவது ஆண்டின் கொண்டாட்டங்களின் போது நினைவு கூர்ந்து அவர்களுக்கு நாம் அஞ்சலி செய்ய வேண்டும்.”

மகாத்மாவின் சத்தியாகிரகத்தின் முன்னோடியாக விளங்கிய தீபாவளி இந்திய கொத்தடிமை தொழிலாளர்களின் தொடர்ந்த ஏறத்தாழ அரை நூற்றாண்டு போராட்டத்தினால் 1906 இல்தான் கொண்டாட அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டில் தான் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி எனும் இளம் குஜராத்தி வழக்கறிஞர் அவமானப்படுத்தும் இனவாத சட்டமொன்றுக்கு எதிராக சத்தியாகிரகம் எனும் புதிய போராட்ட வழிமுறை ஒன்றை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

நூறு ஆண்டுகளுக்கு பின்னர் தென்னாப்பிரிக்காவின் க்வாஸூலூ-நடால் மாகாண முதல்வர் ஸிபூஸிஸோ நெட்பெலே (Sibusiso Ndebele) தமது தீபாவளி வாழ்த்துரையில் குறிப்பிடுவார்:

“தீபாவளிக்காகப் போராடியவர்கள், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் ஆப்பிரிக்காவில் இந்து தருமமும் அதன் போதனைகளும் வாழ வழிவகுத்த – அதற்காக உழைத்த அதற்காக தியாகங்கள் செய்தவர்களின் நினைவுகளுக்கு அஞ்சலி செய்வதே எனது விருப்பம். இந்த மாகாண அரசு காலனியத்துக்கு எதிரான பாம்பதா கிளர்ச்சியின் நூறு ஆண்டுகளை கொண்டாடியது. அத்துடன் சத்தியாகிரகம் இந்த மண்ணில் பிறந்ததற்கான நூறு ஆண்டுகளைக் கொண்டாடியது. அத்துடன் தீபாவளி நூற்றாண்டு கொண்டாட்டத்தையும் கொண்டாடுவதென்பது நிச்சயம் பொருத்தமானதாகவே இருக்கும். இவையெல்லாம் காலனியத்தையும் இனதுவேஷ பாகுபாட்டையும் எதிர்த்த நமது பரந்ததோர் முயற்சிகளின் பாரம்பரியமாக இம்மாகாண சமுதாய மக்கள் உணர வேண்டும். இந்துக்களின் ஆன்மிக பண்டிகை தீபாவளி என்பதை கருத்தில் கொள்ளும் அதே நேரத்தில் தீபாவளி இம்மாகாண மக்களின் தென்னாப்பிரிக்காவின் வரலாற்றிலும் கலந்துவிட்டது. உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.”

தீபாவளித் திருநாள் விடுதலையின் சின்னமாக விளங்கும் இந்த சிலிர்ப்பூட்டும் வரலாற்று நிகழ்வினைப் பற்றிய தமிழ் பவர்பாயிண்ட் ப்ரசண்டேஷனை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தக் கட்டுரையின் அனைத்து விவரங்களையும் சுருக்கமாகத் தரும் ஆங்கில பவர்பாயிண்ட் ப்ரசண்டேஷனை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவற்றைத் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் தீபாவளித் திருநாளில் அனுப்பலாமே!

14 Replies to “மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா”

  1. ஐயா,

    இந்த கட்டுரை இந்தியர் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒன்று. மிக எளிமையான முறையில், அருமையாக எழுதப்பட்டுள்ளது.

    இதைப் படித்தவுடன் தீபாவளியை ஏன் கொண்டாட வேண்டும் என்று தெரிந்தது. என் குடும்பத்தாரையும், சுற்றத்தாரையும் எந்த அளவு மகிழ்ச்சியுடன் அந்த நாளில் வைக்க என்னால் முடியுமோ, அவை அனைத்தையும் செய்வேன்.

  2. எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  3. அழகான, அருமையான தொகுப்பு. ஆசிரியர் குழுவுக்கு என் பாராட்டுக்கள்.

    தமிழ் இந்து இணைய தளத்தின் ஆசிரியர் குழுவிற்கும் வாசகர் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். அனைவருக்கும் சிறப்பான தீபாவளி அமைந்து வாழ்வில் ஒளி வீச ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவைப் பிரார்த்திக்கிறேன்.

    நன்றி, அன்புடன்,

    ப.இரா.ஹரன்.

  4. அருமையான கட்டுரை அச்சடித்து ஒவ்வொரு இந்துவிடமும் கொடுத்துப் படிக்கச் சொல்ல வேண்டும். இந்த தீபாவளியிலாவது பகவான் கிருஷ்ணன் அதர்மத்தை அழிக்க அவதாரம் எடுப்பாரா? தர்மத்தைக் காப்பாரா?

    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    அன்புடன்
    விஸ்வா

  5. Sir The article about Deepavali is superb containing all information.We requires NEYA BHAKTHI NOT BHAYA BAHKTHI, Let us lit NALLAENNAI VILAKU having NALLA ENNAM praying for good social atmoaphere Bharathi Ramachandran

  6. I RECALL THE POST Aravindan Neelakandan last year.

    விடுதலை ஒளி தரும் தீபாவளி

    1737 இன்றைக்கு சற்றேறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் தர்மாச்சார்யர் பாயி மணிசிங் எனும் சீக்கிய ஞானி அன்னிய மதவெறியால் தடை செய்யப்பட்ட தீபாவளி திருநாளை கொண்டாட தன் உயிரையே தர்மத்துக்கு தர்மமாக ஈன்றார். அவரது பலிதானம் வீண் போகவில்லை. மகாராஜா ரஞ்சித் சிங்கின் பேரரசு ஆப்கானிஸ்தானத்தையே காவிக்கொடியின் சுதந்திர ஒளிக்கு பணிய வைத்தது. இன்றைக்கும் இருட்சக்திகள் மானுட எதிர்ப்பு சக்திகள் தீபாவளியை எதிர்க்கின்றன. 2005 இல் ஜிகாதி வெறியர்கள் தில்லியில் தீபாவளி அன்று நிகழ்த்திய கொடுமை நமக்கு நினைவிருக்கிறது. தீபத்திருநாளாம் தீபாவளி குறித்த இக்கட்டுரை தீபாவளியின் பலிதானிகளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
    தமஸோ மா ஜோதிர்கமய என்கிறது உபநிடதம். ‘இருளிலிருந்து ஒளிக்கு’. ஒளி பாரத கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. புற ஒளி அக ஒளிக்கு ஒரு குறியீடாக விளங்குகிறது.

    ஜோதி வள்ளல் பெருமானார் இதனைக் குறித்து கூறுகையில்:

    வல்லப சக்திகள் வகையெலாமளித்தன
    தல்லலை நீக்கியவ ருட்பெருஞ் ஜோதி
    ஆரியலகம் புறமகப்புறம் புறப்புறம்
    ஆரமுதெனக்கருளருட் பெருஞ் ஜோதி
    சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
    றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி

    எஞ்சேலுலகினில் யாதொன்று பற்றியும்
    அஞ்சேலென்றருளருட் பெருஞ் ஜோதி
    என்று அருளிச்செய்தார். ஆம். ஆரியர் என்றால் ஒரு இனம் அவர் வடவர் என்கிற கீழ்த்தர இனவாதக் கோட்பாடு அருள் ஜோதி வள்ளல் பெருமானை அண்டவேயில்லை. எனவே தீபாவளி வடவர் பண்டிகை ஆரியர் பண்டிகை என கூறும் பண்பாட்டு அறிவிலிகள் தமிழரின் உன்னத ஆன்மிக பண்பாட்டின் எதிரிகளே ஆவர்.
    தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து பல தொன்மங்கள் வழங்குகின்றன. அவை இன்றைக்கும் பொருந்தும் இன்றைக்கும் நமக்கு பல பாடங்களை தரும் தன்மை கொண்டவை. அவற்றுள் சில:
    1.நரகாசுர வதம்:

    நரகாசுரன் விஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன். தெய்வீகமும் மண்ணில் நிலை கொள்ளும் போது அது அதிகார அசுரமாகிவிடுவதுண்டு. அவனை பூமாதேவியின் அம்சமான கிருஷ்ண பத்தினியான சத்தியபாமாவே அழிக்கிறாள். இதில் நம் அனனவருக்கும் ஒரு பாடம் இருக்கிறது. நரகாசுரனை போல அனைத்தையும் அடக்கி ஆண்டிட விழையும் எந்த அதிகார சக்தியும் அது என்னதான் இறைத்தன்மை கொண்டதாக இருப்பினும் பூமியினால் அழிக்கப்படும்.

    2. கோவர்த்தன பூஜாதினம்:

    ஸ்ரீ கிருஷ்ணன் வானில் உறையும் தேவனுக்கு அச்சப்பட்டு பூஜைகள் செய்திட வேண்டாம். மறுமையில் நரகம் தண்டனைகள் என அச்சத்தின் அடிப்படையில் வணக்கத்தை விரும்பும் தேவனுக்கு பதிலாக இயற்கையின் படைப்பினை வழிபட்டால் மதித்தால் போதும் என உபதேசித்த நாள் இது.

    3.லஷ்மியின் உதயம்:

    பாற்கடலை கடைந்தனர் தேவரும் அசுரரும். அப்போது அதிலிருந்து வெளிப்பட்டாள் அன்னை லஷ்மி. அவள் விஷ்ணுவை நாடினாள். அதன் பின்னர் பாற்கடலிலிருந்து எழுந்தது ஆலகால விஷம். அதன் பின் எழுந்தது அமுதம். எந்த தொழில்நுட்பமும் அறிவும் இப்பிரபஞ்ச கடலைக் கடைவதால் ஏற்படுவதே ஆகும். இக்கடைதலில் அசுர சக்திகளும் தெய்வீக சக்திகளும் ஈடுபடுகின்றன. இதிலிருந்து வரும் வளமும் சரி தீமைகளும் சரி ஆன்ம பலத்தினாலேயே தாண்டிசெல்லப்பட வேண்டும்.அப்படி சென்றால் மானுடம் அமர நிலல அடையும் என்பதனை விளக்கும் தொன்மத்தின் நிகழ்வு நாள் இது.

    4.ராமர் அயோத்தி திரும்பிய நாள்:

    சூரிய குல திலகனான ராமர் பிறப்பால் அந்தணனாகவும் நடத்தையால் அரக்கனாகவும் விளங்கிய இராவணனை அழித்து அயோத்தி திரும்பிய நாள் இது.

    5.மகாவீர நிர்வாண நாள்:

    மகாவீரர் ஜைன தீர்த்தங்கரர். கொடிய விஷ பாம்புகளிடமும் அஹிம்சையை கடைபிடித்த இந்த ஞானியின் நிர்வாண நாள் இதுவாகும்.

    6. சீக்கிய பாரம்பரியத்தில்

    குரு அமரதாஸர் தீபாவளியன்று அனைத்து சீக்கியரும் குருவிடம் வந்து ஆசி வாங்கி செல்லும் பாரம்பரியத்தை உருவாக்கினார்.

    குரு ஹரிகோவிந்தர் ஜஹாங்கீரால் சிறை வைக்கப்பட்டார். அவரை விடுவித்த போது அவருடன் சிறையில் வாடிய 52 இந்துக்களை விடுவித்தாலே தான் விடுதலை ஆவேன் என கூறிவிட்டார் குரு ஹரிகோவிந்தர். முஸ்லீம் மன்னன் குருவின் காவி மேலாடையை எத்தனை இந்துக்கள் பிடிக்க முடியுமோ அத்தனை பேரை விடுவிப்பதாக கூறவே தன் மேலாடையை 52 ஆக கிழித்து அவர்களை ஒவ்வொரு நுனியையும் பிடித்துவர செய்து விடுதலை அடைய செய்த தினமாகவும் தீபாவளி சீக்கிய தருமத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் தீபாவளி தினத்தன்றுதான் பொற்கோவில் என அறியப்படும் ஹரிமந்திருக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
    7.தென்னாப்பிரிக்க இனவெறிக்கு எதிராக தீபாவளி:

    பிரிட்டிஷ் காலனியவாதிகளால் 1860 முதல் இந்திய தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக ஆப்பிரிக்கா கொண்டு செல்லப்பட்டனர். இத்தொழிலாளிகள் 1860 முதலே தீபாவளி கொண்டாட அனுமதி கேட்டு போராடி மறுக்கப்பட்டனர். ஏனெனில் பிரிட்டிஷ் காலனியவாதிகள் பார்வையில் இந்து தருமம் ஒரு மதம் இல்லையாம் எனவே தீபாவளி ஒரு மதப்பண்டிகை இல்லையாம். ஆனால் இந்த தொழிலாளர்கள் தளரவில்லை. இந்து மக்கள் அமைப்பு என ஒரு அமைப்பினை ஏற்படுத்தி போராடினர். இறுதியில் 1907 ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது. ஆம். நெல்சன் மண்டேலா மகாத்மா காந்தி ஆகிய சமூக நீதி போராளிகளின் போராட்டங்களுக்கு முன்னோடி சங்கொலியாக விளங்கியது கொத்தடிமையாக வந்த இந்து தொழிலாளிகளின் தீபாவளி போராட்டம்.

    இதனை ‘Inside Indenture’எனும் வரலாற்று ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளனர் அஷ்வின் தேசாயும் கோலம் வாஹீதும். இதனைக் குறித்து விளக்கிய தேசாய் கூறுகிறார்:
    “தீபாவளி திருவிழா தென்னாப்பிரிக்காவில் கொண்டாடப்படும் இந்நூற்றாண்டு தருணத்தில் கொத்தடிமைகளாகக் கொணரப்பட்ட பல இந்துக்கள் காலனிய வெள்ளையரை இந்து தருமம் ஒரு மதமென ஏற்க வைக்கவும் தீபாவளி கொண்டாடவும் செய்த முயற்சிகளை தியாகங்களை நாம் நினைவு கூர்வது நம் கடமையாகும்”
    https://arvindneela.blogspot.com/2007/11 … st_08.html
    உங்களுக்கு உங்கள் குடும்பத்தவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

  7. சங்க இலக்கியமான அகநானூறு 141-ஆம் பாடலில் தீபாவளி.

    மழை கால் நீங்கிய மகா விசும்பில்
    குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
    அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
    மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
    பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
    விழவுடன் அயர வருகத்தில் அம்ம !
    அகநானூறு 141-ஆம் பாடல் இயற்றியவர் நக்கீரர்

    அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்- என்பது அமாவாசை நாளாம்.

    கொல்லப்பட்ட அரக்கன் – தீமை வெல்லப்பட்டது.
    இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.
    அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.

  8. இந்து மதம் தமிழர்களை சாகடிக்கிறது இலங்கையில். இந்துக்கோயில்கள் பல இடிக்கப்படுகின்றன இந்துக்கள் கொல்லப்படுகின்றனர். இவை யாவும் நடப்பது இந்தியாவின் உதவியுடன். தமிழ்நாட்டில் உள்ள ஒரு இந்துக் குழு இதன்பின்னால் நின்று செயல் படுகிறது. இலங்கையில் வாழும் எந்த இந்துவும் சொல்வான் தனது முதலாம் எதிரி சிங்களவனல்ல இந்த இந்துக் குழுவே என்று. இதில் முன்னின்று செயலாற்றுவத்து இந்து எனும் பெயர் கொண்ட பத்திரிகை. கோவிலில் தொழுது கொண்டிருந்த தமிழ் இந்து பாராளமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். இதை எதிர்த்து எத்தனை இந்து அமைப்புகள் குரல் எழுப்பின? கொழும்பில் பூசை நடந்துகொண்டிருந்த கோயிலுக்குள் சென்ற சிங்களவர் கோயில் சிலையை அடித்து நொருக்கினர். இதை எதிர்த்து எத்தனை இந்து அமைப்புகள் குரல் எழுப்பின? வேல்ஸில் நோய் வாய்ப்பட்ட பசுவை கொல்வதற்கு எதிராக பிரித்தானிய இந்து அமைப்பு குரல் கொடுத்தது. இல்ங்கையில் கொல்லப்படும் இந்துக்களுக்கு ஆதரவு கொடுக்கச்சொல்லி இரு முறை அனுப்பிய கடிதத்திற்கு அவர்கள் பதிலே போடவில்லை.

  9. ///தர்மா
    30 October 2008 at 6:14 pm
    இந்து மதம் தமிழர்களை சாகடிக்கிறது இலங்கையில். இந்துக்கோயில்கள் பல இடிக்கப்படுகின்றன இந்துக்கள் கொல்லப்படுகின்றனர். இவை யாவும் நடப்பது இந்தியாவின் உதவியுடன். தமிழ்நாட்டில் உள்ள ஒரு இந்துக் குழு இதன்பின்னால் நின்று செயல் படுகிறது. இலங்கையில் வாழும் எந்த இந்துவும் சொல்வான் தனது முதலாம் எதிரி சிங்களவனல்ல இந்த இந்துக் குழுவே என்று. இதில் முன்னின்று செயலாற்றுவத்து இந்து எனும் பெயர் கொண்ட பத்திரிகை.///

    சும்மா பிதற்றக்கூடாது. இலங்கையில் இப்போது சாகடிப்பது இந்தியா என்றால் ஆண்டுகொண்டிருப்பது இத்தாலி நாட்டுக்காரி என்பதை மறக்ககூடாது. இந்து பத்திரிக்கை நடத்தும் ராமின் மனைவி ஒரு கிறுஸ்துவ பெண் என்பதையும் மறக்ககூடாது. இலங்கை இந்துக்களை சாகடித்துக் கொண்டிருப்பது வாட்டிகனே அன்றி அயோத்தி இல்லை.

  10. தீபாவளி பற்றிய பல்வேறு செய்திகளையும் சிறப்பாக ஒருங்கமைத்துத் தந்திருக்கிற இக்கட்டுரையைப் போற்றுகிறேன்..

    சிறிய ஆவல் ஒன்று.. இந்த தீபத்திருநாளில் முக்தி நிலை பெற்ற ஸங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதரைப் பற்றிய செய்தியையும் இங்கே இணைத்திருக்கலாம் (சிறியேன் தீட்சிதர் குறித்து தமிழ்ஹிந்துவுக்கு ஆக்கம் ஒன்று அனுப்பியிருக்கிறேன். அனை ஆசிரியர் குழு பரிசீலிக்கும் என்றும் நம்புகிறேன்.)

    அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.. நமது பரதகண்டம் (இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஹிந்துக்களின் பாரம்பரியப் புனித பூமி) அமைதியில் சிறக்க இத்தீபத் திருநாள் வழி செய்ய வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதியான பகவானைப் பிரார்த்திக்கிறேன்..

  11. நண்பர் தர்மர் இலங்கைப் பிரச்சினையையும் தீபாவளிப் பண்டிகையையும் ஏன் ஒன்றாக்கிக் குழப்புகிறாரோ..! தீபாவளி பற்றித் தரப்பட்டுள்ள அற்புதமான விளக்கங்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

    எந்த ஒரு ஹிந்துப் பண்டிகையானாலும் அதை ஏழ்மை, வறுமை, வன்முறை, பஞ்சம், அறிவீனம் ஆகியவற்றோடு தொடர்புப் படுத்தும் இது போன்ற அறிவுக்குப் புறம்பான விமரிசனங்களை எல்லாத்தரப்பு மக்களும் கண்டிக்க வேண்டுகிறேன்.

    ஹிந்துக்கள் தங்கள் பாரம்பரியமான தீபாவளியைக் கொண்டாடுவதால்தான் இலங்கையில் வன்முறை நடக்கிறதா என்ன? அல்லது தீபாவளி கொண்டாடுவதை நிறுத்திவிட்டால் வன்முறைகள் நின்றுவிடப் போகின்றனவா?

    வெடி மருந்துகளைக் கொண்டாட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் மக்கள் ஹிந்துக்கள். மற்றவர்களைப்போல் உயிர் பலி வாங்கப் பயன்படுத்தும் வழக்கம் அவர்களுக்கில்லை. அர்த்தமற்ற விமரிசனங்களைத் தவிர்த்துவிடுங்கள் நண்பர் தர்மரே..!

    மகிழ்ச்சிகரமான தீபாவளித் திருநாள் உங்களுக்கும் நன்மைகளைக் கொண்டுவந்து சேர்க்கட்டும்.

  12. இலங்கையில் இந்து கோயில் இடிக்கப்படுவதற்கு ராஜபக்சேயும், சோனியாவின் கொள்ளை அரசுமே காரணம். இந்து ராம் ஒரு இந்தியனல்ல. இதில் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு எவ்வித பொறுப்பும் இல்லை. ராஜ பக்சே போன்ற புத்த வெறியனால், புத்தமதம் அழியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *