நாற்குலம்

bharatiசாதுர்வர்ண்யம்: திலகர் விளக்கம்
~ மகாகவி பாரதியார் எழுதியது

சென்ற காங்கிரஸ் ஜனசபை ‘லக்நௌ’ நகரத்தில் கூடிக்கலைந்த பிறகு, ஸ்ரீமான் லோகமான்ய பாலகங்காதர திலகர் தமது இஷ்டர்களுடன் கான்பூருக்கு வந்தார். அங்கு ராமலீலை நாடக வெளியில் பதினையாயிரம் ஜனங்கள் சேர்ந்த பொதுக்கூட்டம் ஒன்றுகூடி அவரை ஸ்வராஜ்ய பேச்சுக்கிடையே அவர் ஜாதிக்கட்டை முறித்துச் சொல்லிய சில வார்த்தைகளை இங்கு மொழிபெயர்த்துக் காட்டுகிறேன்.

திலகர் சொன்னார்: ‘பழைய காலத்து நான்கு வர்ணப் பிரிவுக்கும் இப்போதுள்ள ஜாதி வேற்றுமைக்கும் பேதமிருக்கிறது. திருஷ்டாந்தமாக, இப்போது ஒரே பந்தியில் இருந்துண்ண விரும்பாதிருத்தல் சாதிப் பிரிவுக்கு லட்சணம் என்று பலர் நினைக்கிறார்கள். பழைய காலத்து விஷயம் இப்படியில்லை.

”நான்கு வர்ணங்கள் பிறப்பினாலேயல்ல, குணத்தாலும் தொழிலாலும் உண்டாயின” என்று கீதை சொல்லுகிறது. அதன்படி பார்த்தால் இப்போது நமக்குள் சத்திரியர் எங்கே இருக்கிறார்கள்? நம்மைக் காப்போர் ஆங்கிலேயர்கள்; ஹிந்துக்களுள் சந்திரியரைக் காணோம். இந்த கான்பூர் பெரிய வியாபார ஸ்தலம். ஆனால் இங்குள்ள வைசியர் பிறதேசத்து வியாபாரிகளின் வசத்தில் நிற்கிறார்கள். செல்வத் தலைமை நமக்கில்லை; இப்போதுள்ள பிராமணர் தாமே தேசத்தின் மூளையென்று சொல்லுகிறார்கள். ஆனால், இந்த மூளை மண்ணடைந்து போய், நாம் வெளியிலிருந்து அதிக மூளை இறக்குமதி செய்யும்படி நேரிட்டிருக்கிறது.

”நான்கு வர்ணத்தாருக்குரிய நால்வகைத் தொழில்களும் ஹிந்துக்களல்லாத பிறர் நியமனப்படி நடக்கின்றன. நாமெல்லோரும் தொண்டர் நிலையிலே இருக்கிறோம். தேசம் கெட்ட ஸ்திதியிலே இருக்கிறது. உங்களுடம்பில் பிராமண ரத்தம் ஓடுவதாகவும் சத்திரிய ரத்தம் ஓடுவதாகவும் நீங்கள் வாயினால் சொல்லலாம். ஆனால், உங்களுடைய வாழ்க்கை அப்படியில்லை.

இவ்வாறு திலகர் சொல்லியதிலிருந்து நமது தேசத்திற்கு மிகுந்த நன்மை உண்டாகக் கூடும். ஏனென்றால், இவர் தேசம் முழுவதிலும் சுதேசியக் கட்சியாருக்குத் தலைவராக இருப்பது மாத்திரமேயன்றி மகாராஷ்டிரத்து வைதீகப் பிராமணர்களின் தலைவராகவும் விளங்குகிறார். வேத சாஸ்திர ஆராய்ச்சியில் உயர்ந்த கீர்த்தி பெற்றவர். நெடுங்காலமாக இடைவிடாது செய்துவரும் ஆராய்ச்சியினாலும், உயர்ந்த மேதையினாலும் நமது பூர்வீகமான ஜாதி தர்மத்தின் உட்கருத்தை நன்றாகத் தெரிந்து கொண்டு நமது தற்காலப் பிரிவுகளைக் கண்டிருக்கிரார். புராதன தர்மமே பின்பற்றத்தக்கது. ஹிந்துக்களாகிய நாமெல்லாரும் இவருடைய உபதேசப்படி நடந்தால் நன்மையுண்டாகும். இப்போதுள்ள ஜாதிவிரோதங்களும் தாழ்வுகளும் நீங்கி எல்லோருக்கும் மேன்மை உண்டாகும்.

ஏனென்றால், எல்லாச் செய்கையும் ஈசனுடைய செய்கை, சோம்பல் ஒன்றுதான் இழிவு; அதுதான் சண்டாளத்தனம். எந்தத் தொழிலையும் நேரே செய்வோர் மேன்மக்கள்.

ஒருவன் தான் பிராமணானக வேண்டும் என்று கருதினால், அவன் உண்மை ஆராய்ச்சியே முதற்காரியமாகக் கொண்டு வாழக்கடவான். சத்திரிய பதவி வேண்டுமானால், தன்னுயிர்க் கிரங்காமல் மன்னுயிரைக் காப்பதே விரதமாகக் கொண்டு வாழக் கடவான். இங்ஙனமே மற்றவையும் கொள்ளுக. குணத்தாலும் தொழிலாலும் ஏற்படுகிற மேன்மையைக் கண்டு யாரும் பழிகூற இடமில்லை. குணத்திலும் தொழிலிலும் கடைப்பட்ட ஒருவன் பிறப்பைக் காரணமாக வைத்துக் கொண்டு ”நான் மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவன்” என்று சொல்லும்போது, மற்றவருக்குக் கோபம் உண்டாகிறது.

”செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலாதார்”

என்று, தாம் வள்ளுவர் மரபில் பிறந்தாலும் நமது முன்னோரால் பிரமதேவனுடைய அவதாரமென்று போற்றப்பட்ட திருவள்ளுவ நாயனார் சொல்லுகிறார்,

ஒருவன் குணகர்மங்களால் பிராமணனாக இருப்பானாகில், அவனுக்கு நாட்டில் முதலாவது மதிப்புண்டாதல் பொதுவாக எல்லாத் தேசங்களிலும் இயற்கையாக நடந்துவரும் நெறி. ஏனென்றால் எல்லாத் தொழில்களுக்கும் சாஸ்திரமே நேத்திரம். சரீர இன்பங்களைத் தேடுவதே முதற்காரியமாகக் கொண்ட மனிதர் மிகுந்து போயிருக்கும் இவ்வுலத்தில், சிலர் அந்தப் படியைக் கடந்து மேல் ஏறிப்போய் உண்மை தேடுவதே முதற்காரியமென்றும், மற்றதெல்லாம் அதற்குப் பிறகுதான் என்றும் உணர்ந்து நடப்பாராயின், அவரே தலைமக்கள். மற்ற வருணத்து நெறிகளையும் இப்படியே வகுத்தறிந்து கொள்ளுதல் எளிது.

6 Replies to “நாற்குலம்”

  1. மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

    இதந்திரு மனையின் நீங்கி,
    இடர்மிகு சிறைப்பட்டாலும்,
    பதந்திரு இரண்டும் மாறி,
    பழிமிகுந்து இழிவுற்றாலும்,
    விதந்தரு கோடி இன்னல்
    விளைந்தெனை அழித்திட்டாலும்,
    சுதந்திர தேவி! நின்னைத்
    தொழுதிடல் மறக்கிலேனே.

    – தேசியக் கவி சுப்ரமணிய பாரதி

    பாரதி பற்றிய என் முழுக்கட்டுரையையும் ”நெஞ்சின் அலைகள்” வலைப்பதிவில் வாசிக்கவும்.

  2. பாரதி பற்றி மிகச் சிறப்பாக நீங்கள் எழுதியுள்ள கட்டுரைக்கு என்னை இட்டுச் சென்றதற்கு மிக்க நன்றி, திரு. ஜெயபாரதன்.

  3. இந்த கட்டுரை மிகவும் அருமை. இதை தமிழில் தெரிவிக்க முடிந்தது அதைவிட அருமை.
    இப்படிக்கு
    ரமாகுருமூர்த்தி

  4. அற்புதமான சத்திய வரிகள். திலகரின் ஆழ்ந்த அறிவு வரிகளினால், இந்து மதத்தின் அடிப்படை உயர்வை உணர முடிகிறது. எடுத்துப்போட்டதற்கு நன்றி.

    /// இப்போது ஒரே பந்தியில் இருந்துண்ண விரும்பாதிருத்தல் சாதிப் பிரிவுக்கு லட்சணம் என்று பலர் நினைக்கிறார்கள். பழைய காலத்து விஷயம் இப்படியில்லை. ///

    வாஸ்தவம்தான். எப்போதும் சகபந்தி போஜனம் என்பதெல்லாம் சகஜமாக இருந்தது பாரதத்தில். எந்த வர்ணமும் பிரிந்து பழகியதில்லை. இந்த ஒரு சூட்சமான உண்மையை எடுத்துக்காட்டியதற்கு நன்றி.

    /// ”நான்கு வர்ணங்கள் பிறப்பினாலேயல்ல, குணத்தாலும் தொழிலாலும் உண்டாயின” என்று கீதை சொல்லுகிறது. ///

    இது சரியல்ல. நேரிடையாக இல்லாமல் திரிசமன் கலந்து திலகர் சொன்னது. திலகரின் கீதை பாஷ்யத்தில் இப்படி ஏகப்பட்ட திரிசமன்கள் இருக்கின்றன. திலகரின் பல ஆராய்ச்சிகளில் இப்படி உடான்ஸ்களை புகுத்தியவர் அவர். உதாரணமாக, தேவர்கள் என்போர் மேற்காசியர்கள் என்றெல்லாம் உடான்ஸ் விடுகிறார் திலகர். இம்மாதிரி விஷயங்களால், அவரின் கீதை உரை நிராகரிக்கப்பட்டது.

    ஆனால் என்ன, இவர் சொன்ன வரிகள் நமக்கு இப்போது சாதகமாக இருப்பதால் இப்படிப்பட்ட புரட்டு வார்த்தைகளை நாம் ரொம்ப ஆட்சேபணை செய்வதில்லை. கடமையைச்செய், பலனை எதிர்பார்க்காதே என்று கீதாசார்யன் சொன்னதாக பரவலாக ஒரு புரட்டு நிலவுகிறதல்லவா, அதுபோல இதுவும் பத்தோட பதினொன்று.

    பி.கு. நீங்கள் புதிசாக போட்ட பின்னூட்டப் பெட்டி ரொம்பவும் சொதப்புகிறது. தூக்கி கடாசிவிட்டு பழைய பொட்டியையே போடுங்கள்.

    நன்றி

    ஜயராமன்

  5. ///// ”நான்கு வர்ணங்கள் பிறப்பினாலேயல்ல, குணத்தாலும் தொழிலாலும் உண்டாயின” என்று கீதை சொல்லுகிறது. ///

    இது சரியல்ல. நேரிடையாக இல்லாமல் திரிசமன் கலந்து திலகர் சொன்னது. //

    May we know what is the correct meaning?

  6. /// ”நான்கு வர்ணங்கள் பிறப்பினாலேயல்ல, குணத்தாலும் தொழிலாலும் உண்டாயின” என்று கீதை சொல்லுகிறது. ///

    இது சரியல்ல. நேரிடையாக இல்லாமல் திரிசமன் கலந்து திலகர் சொன்னது. //

    ஜயராமன், திலகரின் மொழிபெயர்ப்பு சரிதான். தாங்க‌ள் சொல்வது தான் சரியில்லை. கீதை மூல சுலோகம் ‍

    “சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:”

    “நான்கு வர்ணங்கள் குணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் என்னால் படைக்கப் பட்டன” என்பது பொருள்.

    திலகரின் கீதாரஹஸ்யம் கீதை பற்றீய நவீன புரிதலுக்கு வித்திட்ட முதல் நூல். அதற்கு ஒரு பெரிய வரலாற்றுத் தேவையும் இருந்தது.

    ஆரியர்கள் ஆர்டிக் பிரதேசத்தினர் என்பது போன்ற திலகரின் ஆய்வுக் கொள்கைகள் பின்னர் நிராகரிக்கப் பட்டன – அது எந்த ஒர்ரு ஆய்வாளனுக்கும் நேர்வதே. ஆனால் அவர் செய்தது கண்டிப்பாக திரிசமன் அல்ல, ஒரு ஆய்வுப் பார்வை, அவ்வளவே.

    மேலும், எந்த இடத்திலும் கீதை பிறப்பின் அடிப்படையில் வர்ணம் அமைவதாகக் கூறவில்லை. சொல்லப் போனால் வர்ணம் பற்றி அது பேசுவதே 2-3 இடங்களில் தான். மேற்சொன்னது ஒன்று. இன்னொன்று 18-ஆம் அத்தியாயம் ஒவ்வொரு வர்ணத்தின் இயல்பான செய்கைகளைப் பற்றிக் கூறுவது. அங்கும் “கர்ம ஸ்வபாவஜம்” (இயல்பாக அமைந்த செயல்) என்ற சொல்லாட்சி தான் உள்ளது.

    நீங்கள் தான் ஏதோ திரிசமன் செய்வதாக எனக்குப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *