ஸ்ரீலங்காவில் படுகொலை செய்யப்படும் தமிழ் இந்துக்கள்

tamils-lankaஇலங்கைவாழ் தமிழனின் கதை மிகத் துயரமானது. நெடுங்காலமாக நடந்து வருவது. கண்ணீர்த்துளி வடிவிலிருக்கும் இலங்கை அங்குள்ள தமிழர்களின் குருதித் துளியாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆம், அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது இனப்படுகொலை!

அந்த நாட்டின் ஆதிகுடி மக்கள் நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழ் இந்துக்களே. ஆனால் ஆளும் சிங்களவர்கள் கையில் சிக்கி அவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக ஆக்கப்பட்டனர். கல்லூரியில் இடம் கிடையாது. அரசுப் பணி கிடையாது. அடிப்படை வாழ்வாதாரம் கிடையாது. உரிமைகள் மறுக்கப்படுகின்றன. வெளிநாட்டில் புலம் பெயர்ந்தால்தான் அவர்களுக்கு வாழ்வு என்னும் நிலை இன்று.

அதுமட்டுமல்ல, ஓடிக்கொண்டிருக்கும் பஸ் நள்ளிரவில் நிறுத்தப்படும். அதிலிருந்து தமிழர்கள் மட்டும் கீழே இறக்கப்படுவர். இரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்படுவர். பஸ் கிளம்பித் தன்வழியே போகும். பஞ்சாபில் காலிஸ்தான் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் இந்துக்களுக்கு நடந்த அதே கதை, அதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே ஸ்ரீலங்காவில் தமிழ் இந்துக்களுக்கு நடந்தது. வரலாற்று ரீதியாக சிங்கள பௌத்த மதக் கோட்பாடுகளில் உதித்து, காலனியத்தால் உருவாக்கப் பட்ட பிரிவினைக் கொள்கைகளில் வளர்ந்து, பின்னர் காட்டுத் தீயெனப் பரவிய சிங்கள இனவாதமும், அத்துடன் இணைந்து கொண்ட பௌத்த மதவெறியும் தமிழ் இந்துக்களை என்றென்றும் தங்கள் ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்று கருதிச் செயல்பட்டதே காரணம். நாம் பேசுவது 50 ஆண்டுப் பழைய கதை. அதை நமது பாரதி பார்த்திருந்தால்

நாட்டை நினைப்பாரோ? – எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? – அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே இந்துத் தமிழர் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? – அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர்

என்று பாடியிருப்பான்.

இந்த அவலமான சூழ்நிலையில்தான் அங்கே பல போராட்டக் குழுக்கள் தோன்றின. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ENLF), தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (TELO), ஈழப் புரட்சி மாணவர் அமைப்பு (EROS), தமிழ் ஈழ விடுதலைக்கான மக்கள் அமைப்பு (PLOTE), ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி (EPRLRF) என்று வெவ்வேறு பெயர்களில் ஒரே நோக்கத்துடன் அமைப்புக்கள் தோன்றவேண்டுமானால் மக்கள் எத்தனை துன்பங்களுக்கு ஆளாகியிருக்க வேண்டும்!

தமிழ் நாட்டில் முதல்வரோடு சேர்ந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் முஸ்லிம்கள் அங்கே தம்மைத் தமிழராகக் காட்டிக்கொள்ளவோ, போராட்டத்தில் தோள்கொடுக்கவோ இல்லை. மாறாக, வழக்கம்போல இந்து வழிபாட்டிடங்களை அவமதிப்பதிலும், இந்துக்களைப் புண்படுத்துவதிலும் தமக்கிருந்த ஆர்வத்தையும் திறமையையும் முழுவீச்சில் காண்பித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வந்தனர்.

தமிழ் இந்துக்கள் முதலில் கேட்டது சமத்துவம்தான், தனி ஈழமல்ல. அதைத் தர மனமில்லாத பௌத்த சிங்களவர்கள் அரசு எந்திரத்தின் மூலம் கட்டற்ற வன்முறையைத் தமிழ் மக்கள் மீது அவிழ்த்து விட்டனர். அரசின் வன்முறை பொறுக்க முடியாத நிலையை எட்டிவிடவே, நிலையில் மேற்கூறிய அமைப்புகள் வன்முறையைக் கையிலெடுத்தன. ‘ஐந்து கிராமமல்ல, ஐந்து ஊசிமுனை இடம்கூடத் தரமுடியாது’ என்று பாண்டவர்களிடம் அடாவடியாகப் பேசி மறுத்த துரியோதனர்களுக்கும் இவர்களுக்கும் சற்று வித்தியாசமில்லாத நிலை ஏற்பட்டது. தமிழ் இந்து சமத்துவக் கோரிக்கை தமிழீழப் போராக மாறியது.

காலக்கிரமத்தில் ஈழ விடுதலை அமைப்புகள் ஒன்றிணைந்தன. தனித்துப் போராடுவோம் என்று சொன்ன போட்டி அமைப்புகளைத் தீர்த்துக்கட்ட பிரபாகரன் தயங்கவில்லை. ‘ஆயுதம் தாங்கிய பெரும் போராட்டமே’ வழி என்று இறங்கிவிட்ட வேலுப்பிள்ளை பிரபாகரனின் செவிகளுக்கு மிதவாதம் கசந்தது. கசப்பதில் தவறில்லை, ஆனால் மிதவாதிகளையும் ஒழித்துக்கட்டுவதே தீர்வு என்றும் கருதினார். தமிழ் மண்ணிலேயே வேறு அமைப்பைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்த் தலைவர்களைப் புலிகள் சுட்டுக் கொன்றது சரித்திரம். படிப்படியாகப் பிற அமைப்புகள் புலிகளோடு சங்கமமாகிவிட்ட பின், ‘ஈழத் தமிழர் பாதுகாவலனாக’ வரித்துக்கொண்ட எல்.டி.டி.ஈ. என்ற வேலியே பயிரை மேய்ந்த கதையும் நிறைய வெளியானதுண்டு.

எண்ணெய்ச் சட்டிக்கும் எரியும் அடுப்புக்கும் இடையே எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற கேள்விதான் இப்போது.

tamil-refujeesபுலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைக் கருணையற்ற, எந்த வரைமுறைகளுமற்ற தாக்குதலால் கையகப்படுத்திக் கொண்டே வந்த ஸ்ரீலங்கா அரசு, முல்லைத்தீவின் ஒரு சிறிய பகுதிக்குள் அவர்களை நெருக்கிக் கொண்டு சென்று அடைத்திருக்கிறது. நிலவறைகளில் (பங்கர்) புலிகளோடு சாதாரணத் தமிழர்கள் – பெண்கள், முதியவர், குழந்தைகள் உட்பட – பதுங்கியிருக்கிறார்கள். ‘போராளியல்லாதவர்கள் தப்பித்துப் போகட்டும்’ என்று கூறி இரண்டு நாள் போர்நிறுத்தத்தை ராஜபக்சே அறிவித்தார். சாதாரண மக்கள்தாம் தமக்குக் கேடயம் என்பதை நன்குணர்ந்த புலிகள் அவர்களைத் தப்பிப் போகவிடவில்லை. மற்றொன்று, அப்படியே போனாலும், தப்பிவந்த எல்லோரையும் சாதாரண மக்கள் என்று ஸ்ரீலங்கா அரசு நம்பாது. தகவல் பெறுவதற்காக அவர்களில் பலர் கொடுமைப்படுத்தப் படுவார்கள். அந்த அச்சமும் இருந்திருக்கும்.

ஆயிரத்துக்கு அருகிலுள்ள எண்ணிக்கையிலான புலிகளும், ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் குடிமக்களும் இப்போது மீண்டும் வரைமுறையற்ற தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதில் மருத்துவமனைகளும் அடங்கும். மருத்துவமனையைத் தாக்கியதில் 5 பேர் இறந்திருக்கிறார்கள், ஏராளமான பேர் காயமுற்றிருக்கிறார்கள்.

நமக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. சாதாரணமாகப் பசு வதையைக் கண்டிக்கும் இந்து சாத்திரங்களும் ‘தன்னைத் தாக்க வரும் பசுவையும் கொல்லலாம்’ என்று கூறுகின்றன. இன்றைய சட்டமும் அதை அனுமதிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் LTTE கையில் ஆயுதம் எடுத்தது என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

பிரபாகரன் மலேசியாவில் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்ற வதந்தி கிளம்பிய உடனே அந்த அரசு “நாங்கள் இந்தியா, ஸ்ரீலங்கா ஆகியவற்றோடு இணைந்து இதை ஆய்வு செய்வோம்” என்று கூறியது. அதன் ஆர்வத்துக்குக் காரணம் பிரபாகரனைப் பிடிப்பதோ, ஸ்ரீலங்காவில் அமைதி கொண்டுவருவதோ அல்ல. மலேசியாவிலும் இந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களது வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மாறாக, மலேசியாவில் தமிழ் இந்துக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் HINDRAF அமைப்புக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக மலேசிய அரசு கருதுவதே காரணம். “எங்களை ஒடுக்குகிறார்கள், உதவி செய்யுங்கள்” என்று ஹின்ட்ராஃப் பிரதிநிதி தமிழகத்துக்கு வந்து கேட்டபோது தோழர் தா. பாண்டியன் “முதலில் உங்கள் அமைப்பின் பெயரில் இருக்கும் ‘ஹிந்து’ என்ற சொல் இருக்கும்வரை உங்களை யாரும் ஆதரிக்கமாட்டார்கள்” என்று அறிவுரை கூறியது நினைவிருக்கலாம். ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழருக்கு விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களை இந்திரா காந்தி அம்மையார் போட வழிசெய்தபோது, “காஷ்மீரில் பாகிஸ்தானோ சவூதி அரேபியாவோ உணவுப் பொட்டலங்களைப் போட்டால் ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்ட அதே புண்ணியவான்தான் இவர்.

tamils-deadஇன்று ஸ்ரீலங்காவில் இந்துத் தமிழன் முழுவதுமாக அழிக்கப்படப் போகிறான் என்ற நிலைமை வந்துவிட்டதோ என்று நம் மனதில் ரத்தம் கசிகிறது. தமிழகத்தில் மழையில் கொண்டுவந்து ஒன்றும் புரியாத மழலைகளை நிறுத்தும் மனிதச் சங்கிலிகளாலோ, தனிமனிதர்கள் தம்மைத் தாமே நெருப்பிட்டுக் கொள்வதாலே ராஜபக்சேவின் மனம் மாறப்போவதில்லை. ‘இங்கே நடப்பது ஹிட்லர் நடத்தியது போன்ற இன அழிப்பு’ என்ற சரியான வாதத்தை, சரியான ஆதாரங்களோடு, தக்க இடத்தில் அமர்ந்திருக்கும் நபர்கள் மூலம், ஐ.நா. சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் எடுத்துக் கூறி, உலக நாடுகளின் கண்களைத் திறக்க தமிழக முதல்வரும் பாரதப் பிரதமரும் முயற்சி எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வெறும் உண்ணாவிரத நாடகங்களும், வீராவேசப் பேச்சுகளும், எரிகின்ற உடல்களில் குளிர்காய்வதும் கணந்தோறும் உயிர்விட்டுக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் இந்துக்களின் உயிரைக் காக்காது.

23 Replies to “ஸ்ரீலங்காவில் படுகொலை செய்யப்படும் தமிழ் இந்துக்கள்”

  1. // வெறும் உண்ணாவிரத நாடகங்களும், வீராவேசப் பேச்சுகளும், எரிகின்ற உடல்களில் குளிர்காய்வதும் கணந்தோறும் உயிர்விட்டுக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் இந்துக்களின் உயிரைக் காக்காது//

    ஆம். நிச்சயமான உண்மை. ஆனால் இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான். அங்கே எம் இன மக்கள் ஒடுக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களோ அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதும், அறிக்கைகள் விடுவதும், கட்சி வளர்ப்பதுமாக இருக்கிறார்கள்.

    தற்கொலைகளினாலோ, தீக்குளித்தினாலோ எந்தப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை. ஆனாலும் அந்த உயிரிழப்புகளைக் கூட வறுமையால் இறந்தார், குடும்பப் பிரச்சினையால் இறந்தார் என்றெல்லாம் திரித்தும், மறுத்தும் கூறி அரசியல் ஆதாயம் பெற்று வருகின்றனர். இத்தகைய சுயநல அரசியல்வாதிகளை, தமிழ்ப்போலிகளை இறந்தவர்களின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது. இது போன்ற புரட்ட்ர்களின் பொய் வார்த்தையை நம்பி தற்கொலை செய்து கொண்டதற்கு தம்மை தாமே அவை நொந்து கொள்ளும்.

    தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் தம் அதிகார பலத்தினாலும் அனைத்து மக்களுக்குமான நன்மைகளைச் செய்ய முயல வேண்டும். அதை விடுத்து தம் மக்கள் நலன் மட்டுமே கருதிச் செயல்பட்டால்…. ????

    ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ இளங்கோவின் வாக்கு இவர்களுக்கும் பொருந்தும்.

    எப்படியாவது, ஏதாவது மாயம் நிகழ்ந்தாவது எம் தமிழ்ச் சகோதரர்களுக்கு அமைதியான வாழ்வு கிட்டிடாதா என்ற ஏக்கத்தில்….

    அநங்கன்

  2. அண்மையில் உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் குடும்பத்துக்கு உதவர எந்த இயக்கமோ/ அமைப்போ உங்க பார்வைக்கு வந்தா சொல்லுங்க.

    மனசு ரொம்ப பாரமா இருக்கு – பாவம். இந்த காலத்திலும், உண்மையான தமிழ் பற்று உள்ள ‘idealists’ இருக்காங்க.

    ஆழ்ந்த வருத்தத்துடன்,

    ஸ்ரீ

  3. //ஹின்ட்ராஃப் பிரதிநிதி தமிழகத்துக்கு வந்து கேட்டபோது தோழர் தா. பாண்டியன் “முதலில் உங்கள் அமைப்பின் பெயரில் இருக்கும் ‘ஹிந்து’ என்ற சொல் இருக்கும்வரை உங்களை யாரும் ஆதரிக்கமாட்டார்கள்” என்று அறிவுரை கூறியது நினைவிருக்கலாம். ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழருக்கு விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களை இந்திரா காந்தி அம்மையார் போட வழிசெய்தபோது, “காஷ்மீரில் பாகிஸ்தானோ சவூதி அரேபியாவோ உணவுப் பொட்டலங்களைப் போட்டால் ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்ட அதே புண்ணியவான்தான் இவர். //

    தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவரும், இலங்கைப் பிரச்சினை குறித்து இந்த முறை முதன் முதலில் பேசி இவ்வளவு தீவிரமான பிரச்சினையாக அதை மாற்றியவருமான தோழர். தாமஸ் பாண்டியன் இலங்கைத் தமிழருக்கு உணவளிக்கக்கூடாது என்று ஒரு காலத்தில் பேசியிருக்கிறார் என்பதைக் கேள்விப்படுகையில் ஆச்சரியம் அடைகிறேன்.

    எதனால் இப்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்?

  4. உள்ளதுக்குள் தமிழருக்கு ஆதரவாக அவர்கள் எதிர்காலத்தை கணக்கில் எடுத்து அவர்களை வளப்படுத்தவும் அவர்களுக்கு ஆதரவாக இந்தியா எப்போதும் களமிறங்கவும் வசதியாக அமைக்கப்பட்ட ஒப்பந்தம் ராஜீவின் ஒப்பந்தம். அதில் குறைகளும் இருந்திருக்கலாம் இல்லை என சொல்லவில்லை. அதனை அமுலாக்கவிடாமல் செய்வதில் பல மேற்கத்திய நாடுகளுக்கு முனைப்பிருந்தது. அத்தகைய நாடுகளின் கைப்பாவையாக விடுதலைப்புலி அமைப்பு மாற்றப்பட்டது (இதில் ஆண்டன் பாலசிங்கம் மற்றும் அவரது ஆஸ்திரேலிய மனைவியின் பங்கு முக்கியமானது.) ராஜீவின் ஒப்பந்தம் அமுலாகியிருந்தால் இலங்கை தமிழர்களுக்கு இந்த அழிவு ஏற்பட்டிருக்காது.

  5. இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதலை இந்தியா உட்பட, மனித நேயம் கொஞ்சமாவது மிச்சமிருக்கும் ஒவ்வொரு நாடும் வன்மையாகக் கண்டித்து, போரில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டும், இதில் வேறு பேச்சுக்கு இடமில்லை.

    இந்த தமிழ்ஹிந்து.காம் கட்டுரை கூறுவது போல, இது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு என்று ஐ.நா உட்பட உலக அரங்குகளில் பேசி, இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அதைச் செய்யவேண்டி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தத்தம் ஜனநாயக நாடுகளில் குரல் கொடுக்க வேண்டும்.

    ஆனால் தமிழ்நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது உணர்ச்சிகளைக் கொந்தளிக்க விட்டு அரசியல் வாதிகள் குளிர்காயும் நாடகம்.

    இந்த சூழலை இந்திய அரசு/ இந்திய தேசிய எதிர்ப்பாக மாற்ற ஏற்கனவே தமிழகத்தில் சில கழுகுக் கூட்டங்கள் காத்திருக்கின்றன. உருப்படியாக வளர்ச்சிப் பாதையில் செல்ல முயன்று கொண்டிருக்கும் தமிழகத்தை இத்தகைய போக்குகள் வன்முறை, அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும்.

  6. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.
    மீண்டும் தர்மமே வெல்லும்…
    உலகின் முதல் மூத்த நாகரீகத்துக்கு சொந்தக்காரர்கள், அமைதியையும், ஆன்மீகத்தையும் உலகிற்க்கு தானமாக தந்த தனிப்பெருங்குடி தமிழ்க்குடி. பெருமைபட்டுக்கொள்ளும் வேளையிலே, சத்தமின்றி ஒரு இனப்படுகொலை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. எப்படி ஆபிரகாம நிறுவனம் அவர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட பூர்வீக மக்களின் வரலாற்றை சிதைத்து அல்லது அவர்களை கொன்று குவித்தாவது தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்துகிறார்களோ அதற்க்கு சற்றும் இளைக்காமல் பெளத்த ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஈழத்தின் பூர்வீக குடிகளாகிய இந்து தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள். இந்திய தமிழன் தான் தமிழன் என்பதையே மறந்துவிட்டான், அவனது எழுத்தும் பேச்சும், நடையும், பாவனையும், கொண்டாடும் திருவிழாக்களும் வடக்கையும், மேற்க்கத்திய கலாச்சாரத்திற்க்கு போய்விட்டது. இது ஒரு இன படுகொலை மட்டுமல்ல மொழிப்படுகொலையும் ஆகும்.
    வேலியே பயிரை மேய்ந்தது என்பது சப்புக்கு சொல்லப்படும் வாதம். நெல் பயிரிடும் போது ஊடே நிற்க்கும் களைகளை பிடுங்குவது இயற்க்கை. அவை சுயனல விஷச்செடிகள். அடிபட்டவனுக்கு மட்டுமே அதன் வலியை உணர முடியும். மற்றவர்கள் வேண்டுமானால் பரிதாபப்பட்டுக்கொள்ளலாம்.
    முடிவு தமிழ் ஈழம் ஒன்றுதான். இது தர்மத்திற்க்கும் அதர்மத்திற்க்கும் நடக்கும் போர். இங்கு தர்மம் வெல்ல வேண்டும்.
    பாலாஜி….

  7. முதலில் தமிழ் நாட்டில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு இவர்கள் என்ன செய்தனர்?

  8. I have fully accepted mr balaji statement, so far tamil people fighting for the freedom only not for the war,srilanka contry is not falling on hindu formalities ,every hindu defanatily be a humain beings,also in srilanka people or government dont know ahimisha .this will not solve the problem, Nethji started fighting followed by ahimsa people got freedom otherwise india will not get freedom. prabakaran fight for tamil community,not for his food or politics,if he wants became to rule, he can also do the same way of karuna. But his feeling is something different. tamil eelam is only one solution.tommrow tamileelam will come to us one day……

  9. “முடிவு தமிழ் ஈழம் ஒன்றுதான்.”‍‍~ பாலாஜி….

    நண்பரே, முடிவல்ல ஆரம்பம் ~ தெற்கில் இந்தியாவின் நிரந்தர தலைவலி ஆரம்பம். வேண்டுமானால் தமிழகத்தமிழர்களின் ‘முடிவு’ என்று முடிவு செய்து கொள்ளலாம்.

    பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, நலவரோ அல்லாதவரோ, நமக்கென்று தேர்ந்தெடுத்துக் கொள்ள கருணாநிதி, ‘செ’யலலிதா, ராமதாசு, திருமாவளவன், வைகோ, இளங்கோவன், சிதம்பரம், இல. கணேசன் என்று வரிசையாக தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களும் இன்னும் சிறந்தவர்களும் தோன்ற வேண்டும் வளர வேண்டும்; வற்றாத தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தமிழக மக்களுக்கு எப்போதும் வேண்டும். எல்.டி.டி.ஈ அங்கே அரியணை ஏறினால், இன்று பங்களா தேசத்தினால் அஸ்ஸாமிற்கு ஏற்படும் அவலம் தமிழகத்திலும் வளரும். இங்கு அராஜகர்கள் ‘அரியணய்’ ஏறுவார்கள். சன நாயகம் குழியில் இறக்கப்படும். பிரபாகரன் ஈழம் கொண்டு தமிழகம் வென்ற பதினேழாம் ராஜ ராஜ சோழ சக்ரவத்திகளாக அறிவிக்கப்படுவார். இப்படித்தான் நமது எதிர்காலம் என்று கண்டு சொல்ல நான் தீர்க்க தரிசியாக இருக்க வேண்டுமென்படில்லை; கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.

    சரி, “ராஜீவின் மரணம் முடிந்து்போன துன்பியல் நிகழ்வு, வேலையைப் பார்” என்றாவது சொன்னார்கள்.

    “சிங்கள இன வெறியன் பிரேமதாசா! தமிழினத்தை அழிக்க வந்தவன் பிரேமதாசா” என்றெல்லாம் இவர்களாலேயே வர்ணிக்கப்பட்டவரின் தோளை அணைத்துக்கொண்டு “நாங்கள் சகோதரர்கள்; இந்திய நாயே வேளியே போ” என்று இந்த தமிழின காப்பாளர், தமிழீழ சக்ரவர்ததி சொன்னாரே. அதற்கு, இது வரை எந்த விளக்கமும் வருத்தமும் இல்லாமல் இந்தியா தலையிடவேண்டும் என்று இன்று சொல்கிறார்களே! அது எப்படி.

    நேதாஜி, முத்துராமலிங்க தேவர் இவர்களுக்கும் காந்திஜி, ராஜாஜி ஆகியோருக்குமிடையே விடுதலைக்கான வழிமுறைகள் குறித்து கடுமையான கருத்து வேற்றுமைகள் ~ நேர் எதிறான கருத்துக்கள் இருந்தன. ஆனால் நேதாஜியின் ஐ.என்.ஏ துப்பாக்கி காந்திஜியை குறி வைக்கவில்ல; தேவர் திருமானார் ராஜாஜியை வேல் கம்பெறிந்து கொல்லவில்லை. ஆனால் ஈழத்தில் நடந்தது ‍~ நடப்பது என்ன ? அமிர்தலிங்கம், பத்மனாபா, மாத்தையா, பிணயக் கைதிகளாக லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இப்படி போய்க்கொண்டேயிருக்கிறதே பட்டியல்.

    சக போராளிகளைக் கொன்றாகிவிட்டது, தன் மக்களுக்கு ஆதரவாய் நின்ற அண்டை நாட்டையும் எட்டி உதைத்தாயிற்று, அகம் கொண்டு நுனி மரத்தில் நின்று அடி மரத்தை வேட்டியாயிற்று; உப்பைத் தின்றவன் தண்ணீ ர் குடிக்கவேண்டுமென்பது இயற்கையின் நியதியாயிற்றே என் செய்வது !

    ஐயா ! தாயகத் தமிழர்களே பாம்புக்கு பால் வார்க்க வேண்டாம்; ராஜபட்சேக்கும் பிரபாகரனுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. தனக்கு மிஞ்சித்தான் தான தர்மம். “கற்றுக் கொடுக்கும் இனமான” நாமும் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள முயற்சிப்போமே!

    ~கண்ணன்

  10. அன்பு கண்ணன் அவர்களுக்கு, எத்தனை வருடங்களாக இந்தியனாக இருக்கிறீர்கள்? அதிகம் போனால் 65 வருடங்களாக. ஆனால் அதற்க்கு முன் நீங்கள் தமிழ்ப்பேசும் தமிழ்னாகவே இருந்துரிப்பீர்கள் இருந்தோம். தமிழ்மக்களை பெண்களை குழந்தைகளை கொன்றுகுவிக்கும் போது மனதில் ஆதங்கம் யாருக்கு வரும், உண்மையான தமிழனுக்குத்தான், ச்ற்று நகர்ந்து மேற்க்கே கேரளாவிலுள்ள அல்லது தமிழகத்தின் உப்பைத்தின்று வாழும் அடுத்த மானிலத்தவனுக்கு ஈழமும் ஒன்றுதான், பாலஸ்த்தீனமும் ஒன்றுதான, யாரும் இலங்கை தமிழர்களைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். யார் கவலைப்பட வேண்டுமோ அவர்கள் இன்று அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தீர்வு தமிழ் ஈழம் மட்டுமே என்று அறுதியிட்டு கூறுவேன். இதனால் இந்திய ஒருமைப்பாட்டிற்க்கு ஒரு பங்கமும் ஏற்ப்படப்போவதில்லை.
    பாலாஜி…

  11. கண்ணன் அவர்கண்டைய கண்ணோட்டம் மிக்த் தெளிவானது! இராணுவம் என்பது போருக்கு மட்டுமே பயண்படுதப்படவேண்டும். ஈழப் போராளிகள் அதை ஒரு கொலைக் கருவியாக் பயண்படுத்தியதன் வெளிப்பாடே இராஜீவ் காந்தியின் கொலை.

    நாளடைவில் ஈழப்போர் ஒரு திணிக்கப்பட்ட போராகிவிட்டதே உண்மை. பிளவுகள், போராளிகளின் குறிக்கோளற்ற அரசியல் போக்கைக் காட்டுகிறது. இந்திய தேசிய விடுதலைப் போரில் மென்முறை, வன்முறை என இருமுனைப் போர் இருந்தாலும் நோக்கம் ஒன்றே. ஈழப்போரின் நோக்கமும் தமிழினத்தின் விடுதலையானாலும், சொந்த நலன் கொண்ட குழுக்களாக போரிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் வேதனையளிக்கிற்து.

  12. “அன்பு கண்ணன் அவர்களுக்கு, எத்தனை வருடங்களாக இந்தியனாக இருக்கிறீர்கள்? அதிகம் போனால் 65 வருடங்களாக” ~ பாலாஜி.

    நண்பரே, நான் யுகயுகாந்திரமாக இந்த தேசத்தவனாக இருக்கிறேன். மீனவப்பெண்ணின் மகன் வேத வியாசனும், யாதவ குல கிருஷ்ணனும், மறவர்~க்ஷத்ரிய குல ராமனும், நாராயண குருவும், பசவேஸ்வரரும், விவேகானந்தனும் என் முன்னோன்கள்.

    அன்று நான் வங்காளி பேசியிருப்பேன், மலயாளம் பேசியிருப்பேன், போஜ்புரி பேசியிருப்பேன், இன்று தமிழ் பேசுகிறேன். இன்று என் பெயர் இந்தியன் (65 வருடங்களோ, 250 வருடங்களோ; தேரியாது) அன்று என் பெயர் பாரதன்.

    தமிழனாகப் பிறந்ததாலேயே அராஜகர்களுக்கு ஆலவட்டம் சுற்றவேண்டுமென்ற அவசியமில்லை. பாவப்பட்ட தமிழ் மக்களை அரணாக வைத்துக்கொண்டு போர் நடத்தும் அந்த மாவீரர், அந்த மாசற்ற மனிதாபிமானி மட்டும் மனம் வைத்தால் அப்பாவி மக்கள் படும் துன்பம் உடனே விலகுமே; அதை யார் தடுத்தார்? தமிழின தலைவர்களும் மனித உரிமை பேசும் மனிதாபிமானிகளும் அந்த விஷயத்தில் வாயடைத்து இருப்பது ஏன்?

    ~கண்ணன்.

  13. இங்கு சொல்லப்பட்ட ஒரு தகவல் முக்கியமானது. தோழர் என்ற சொல்லிலும், பாண்டியன் என்ற தமிழ்ப் பெயரிலு ஒளிந்து கொண்டு இந்த தாமஸ் தம் கிருஸ்தவ மதத்தினடிப்படையில் இந்து சமயத்தின் மீதும், இந்து மக்கள் மீதும் உள்ள காழ்ப்பை அன்புடன் வெளிப்படுத்தி இருக்கிறார். இதே போல தமிழகத்தில் பல கிருஸ்தவர்கள், தம் முதல் பெயரான கிருஸ்தவப் பெயரை ஆங்கில எழுத்து ஒன்றில் ஒளித்துக் கொண்டு இந்து மதத்தையும், இந்து நம்பிக்கைகளையும், இந்து சமுதாயத்தையும் தொடர்ந்து இழிப்பதை எந்த எதிர்ப்புமின்றி செய்து வருகின்றனர். அ.மார்க்ஸ் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் அந்தோனிசாமி மார்க்ஸ் இப்படி ஒரு கிருஸ்தவப் பார்வை கொண்ட கோமாளிப் பொயயர். வரலாற்று ஆய்வாளர் எனற பெயரில் அரங்கநாதனின் திருவுருவைக் கேலி செய்த எம்.எஸ்.ஏஸ். பாண்டியன் இன்னொரு கிருஸ்தவர். சினிமாவில் விவேக் என்ற இந்துப் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் ஒரு கிருஸ்தவர். தமிழ் திரையுலகில் நிறைய கிருஸ்தவர்கள் தங்கள் பெயர்களை இந்துப் பெயர்களாக வைத்துக் கொண்டு தொடர்ந்து இந்து சமுதாயத்தைத் தாக்கிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு முஸ்லிம் ஆர்யா என்றே பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார். இதையே ஒரு இந்து முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு முஸ்லிம்களைக் கேலி செய்தோ, தாக்கியோ நடித்தால் அல்லது திரைப்படத்தை இயக்கினால் என்ன நடக்கும் என்று யோசியுங்கள். முன்பு பிராம்மணர்களைக் கேலி செய்வதை வழக்கமாககிக் கொண்டிருந்த திராவிட/ இஸ்லாமிய/ கிருஸ்தவப் ‘போராட்ட வீரர்களை’ இதர இந்துக்கள் கொண்டாடினர். இன்று இந்து சமயத்தின் மொத்த சமுதாயத்தையே எந்த பயமும் இல்லாமல் தாக்க அவர்களால் முடிகிறது. வரலாற்றுணர்வு இல்லாதவருக்கும், வரலாற்றின் வசதியான கோணல் வடிவுகளை மட்டும் நம்புபவர்களுக்கும் வரலாற்றுப் போக்கு என்ன பாடம் கற்பிக்கிறது என்பதை இந்த இலங்கைத் தமிழரின் சோகக் கதையில் காண்கிறபடியே நாளை தமிழக இந்துக்களுக்கும் ஒரு துயர சகாப்தம் காத்திருக்கும். கிருஸ்தவ மாயையை நம்பி வாக்களித்துக் கொண்டிருக்கும் த்மிழர் திடஈரென்று விழிக்கையில் வீடு பறிபோய் வாழ்வும் பண்பாடும் அழிந்து இருக்கும் எனபது என் அச்சம்.
    மைத்ரேயா

  14. என்னுடைய முந்தைய மறுமொழி ஏனோ படிக்க முடியாதபடி பதிவாகி இருக்கிறது. வலைத் தளத்தின் அமைவில் ஏதோ குளறுபடி. பார்த்து சரி செய்வீர்களா? நன்றி.
    மைத்ரேயா.

  15. வழுவைச் சுட்டியமைக்கு நன்றி. தற்போது சரியாகத் தெரிகிறதா என்பதை உறுதி செய்யக் கோருகிறோம்.
    மர்ஃபியின் விதிகளின்படி ஏதேனும் “குண்டக்க முண்டக்க” நிகழ்ந்துவிடுகிறது!
    ஆசிரியர் குழு.

  16. சரியாகத் தெரிகிறது. நன்றி. ஆனால் இன்னொரு கோளாறு. நான் செந்நரி உலவியை (firefox browser) பயன்படுத்துகிறேன். என் மறுமொழியைப் பதித்து அனுப்பிய பிறகு வேறு கட்டுரைகளைப் படிக்கப் போனால் அந்தப் பக்கங்களிலும் கீழே மறுமொழிக்கான இடத்தில் என் பெயரும், என் மின்னஞ்சல் முகவரியும் தெரிகின்றன. நேற்று அனைத்துக் கட்டுரைகளிலும் போய்ப் பார்த்த போது என் முகவரியோடு அந்த மறுமொழிக் கட்டங்கள் தெரிந்தன. என் எந்திரத்தில் மட்டும்தான் இப்படித் தெரிகிறதா, அல்லது எனக்கு அப்புறம் இந்த வலைப் பக்கத்தைத் திறந்தவர்களுக்கு எல்லாம் என் முகவரிதான் தெரிந்ததா என்பது எனக்குத் தெரியாது. இப்படி ஒரு கட்டுரையில் இருந்து இன்னொரு கட்டுரைப் பக்கத்திலும் என் முகவரி தெரிவது freakiஷ் ஆக இருக்கிறது. இதையும் அகற்றினால் மகிழ்வாக இருக்கும். நன்றி.
    மை___யா

  17. மைத்ரேயா,
    அதற்கு உங்கள் கணினியில் இருக்கும் cache மற்றும் cookies தான் காரணம்.
    If you want to prevent this from happening, you’ll have to set your browser preferences accordingly.
    You may also clear private data from options menu to flush this frequently.
    It is your system and browser specific. It has nothing to do with the web site’s server.

    Hope this helps.
    Editor

  18. ஈழத் தமிழர்களுக்காக பாரதீய ஜனதா கூட ஆதரவாக‌க் குரல் விடுகிறது. காங்கிரசோ இன்னமும் ராஜீவ் கொலையையே மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கும் அரசியலைத் தொடர்கிறது.

    மத்தியில் பாஜக ஆட்சியிலிருந்தால், ஈழத்தமிழனுக்கு இந்த அவல நிலை வந்திருக்காது; சிங்களன் கொழுப்பெடுத்து வன்முறையை ஏவியிருக்க மாட்டான். புலிகளும், புலி-ஆதரவாளர்களும் கூட இந்துத்வவாதிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சித்ததாக நாமும் வாசித்ததில்லை, இல்லையா?

  19. mr.hareshkumar,wish and well,your statemment 100% correct if bjp rulling india means srilanka will never get an idea firstofall,now all because of congress government only,mahatmaganthi congress made mistaken pakistan terrorisiom came in the view of mumbai.sonia ganthi congress doing mistaken our own blood falling down,so bjp without doubt great they fight for india atlest like kargil.

  20. I support Tamils in Srilanka and if the Lankan army is causing genocide of the Tamils, Indian govt/ International communities should act fast to stop this. But, I do not support LTTE, which is a terrorist organisation. I feel they are using the poor, innocent Tamils, including women and children, as human shield, against the advancing Lankan army, similar to Hamas using Palaestinians against the Israel. If this is true, then Indian army should join with the Lankan army to free the civilian Tamils. I read the news this am that a woman LTTE member blew up herself at a check point, killing several Srilankan soldiers and numerous innocent Tamils, who were trying to flee from the war zone. Enough said about LTTE.

  21. ஒரு போரும் நடைபெறாத தமிழ் நாட்டிலேயே தெருவிற்கு ஒரு அரசியல் கட்சி,ஜாதிக்கு ஒரு அரசியல் கட்சி இங்கே ஒற்றுமை இல்லை.தேர்தலில் யாருடன் கூட்டு சேர்ந்தால் தமிழ்நாட்டை பங்கு போடலாம் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ் சாடிக்கொண்டு பல வருடங்களாக நாடகமாடி கொண்டிருக்க்கிறார்கள்.நான்கு மாடுகள் ஒன்றாக இருந்து சிங்கத்தை எதிர்க்காமல் தனி தனியே கூச்சல் போட்டு கொண்டு இருப்பதால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை.
    இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை அரசு தமிழ் இனத்தை இன்னும் சில மாதங்களில் முழுமையாக அழித்துவிடும் போல் தெரிகிறது.பிறகு இங்கிருக்கும் இந்த அரசியல்வாதிகள் அவர்கள் பேரை சொல்லி பிழைப்பு நடத்துவார்கள். திரைப்பட தயாரிப்பாளர்கள் படம் எடுத்து காசு பண்ணுவார்கள்.
    தற்ப்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதற்கான கூட்டணி,வேட்பாளர்கள் முடிவு செய்வதிலும் தேர்தலில் என்னே இலவசங்கள் அறிவிக்கலாம் என்று வியூகங்கள் வகுக்க அணைத்து அரசியல் கட்சிகளும் சென்றுவிடும். தேர்தல் முடிவதற்குள் இலங்கையில் எல்லாம் முடிந்துவிடும்.

  22. ஒரு சந்தேகம்
    இலங்கை மற்றும் மலேசியா ஆங்கிலயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது அங்குள்ள தமிழர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
    அவர்கள் உரிமையை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லையா?
    இல்லை வழக்கம் போல் சில்லறையை தேத்திகொண்டால் போதும் என்று தங்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவில்லையா?
    இதுதான் தமிழனின் அடிப்படை குறைபாடு
    தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு இருப்பதை கோட்டை விட்டு ஐயோ குய்யோ என்று புலம்பி சாவது?
    இவர்கள் என்றும் திருந்தமாட்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *