போகப் போகத் தெரியும் – 18

‘அரெஸ்டு பாட்டுக்கு ஆதரவு’

king george vஐந்தாம் ஜார்ஜ் மன்னவரும்
அவர் மனைவி மேரியளும் மைந்தருடன்
பூவுலகில் மகாராஜர் வாழ்கவுமே
கவர்னர் வைசிராயவரும்
கனம் மாண்டேகு மந்திரியும்
புவனமெலாம் போற்ற புண்ணியர்கள் வாழ்கவுமே.

திக்கெங்கும் போர் படைத்த தியாகராஜன் புகழும்
மிக்க புகழ் நாயர் முதல் மேலவர்கள் வாழ்கவுமே.
புதுக்கோட்டை பிரின்ஸ் அவர்கள் பூமான்துரை ராஜா
மதிப்பாயுலகினிலே மன்னவரும் வாழ்கவுமே
ராஜா வெங்கடகிரி ராவ்பகதூரா ராஜரத்தினம்
தேசாபிமானியெல்லாம் தேவரொக்க வாழ்கவுமே
வாழ்க திராவிடரும் வாழ்க அவர் சங்கமதுவும்
வாழ்க பொதுவிற்குழைப்போர் வாழ்க வாழ்க வாழ்கவுமே

– ஹோம் ரூல் கண்டன, திராவிட முன்னேற்ற, இராஜ விசுவாசக் கும்மி

[சேலம் ஆசுகவி தி.சு. கணபதி பிள்ளையால் எழுதப்பட்டது (1918).]

-பக்.274, முச்சந்தி இலக்கியம், ஆ.இரா. வேங்கடாசலபதி,
காலச்சுவடு பதிப்பகம்.

சுயமரியதைக்கு ஆதரவாகவும் ஆங்கில அரசின் பாதம் தாங்கவும் பாடப்பட்டதுதான் இந்த இராஜ விசுவாசக் கும்மி.

மலிவாக விற்கப்பட்ட இத்தகைய பாடல்கள் சென்னை ‘குஜிலி பஜாரில்’ விற்பனை செய்யப்பட்ட்ன.

Kanda Kottamசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது கந்தகோட்டம் என்ற கந்தசாமிக் கோவில். இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள பகுதி “குஜிலி பஜார்” என்றழைக்கப்பட்டது. குஜிலி என்பது இந்தப் பகுதியில் வசித்த குஜராத்திகளைக் குறிக்கும் என்றும் குஜிலி என்பது உருதுமொழிச் சொல் என்றும் ஒரு சர்ச்சை இருக்கிறது. லெக்சிகன்களையும் பேரகராதிகளையும் மூளையில் சுமப்பவர்களுக்கு அதை விட்டுவிடலாம். நமக்கு வேறு வேலை இருக்கிறது. குஜிலி பஜார் என்பதை மாலை நேரக் கடைத்தெரு என்று வைத்துக் கொள்ளலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து 1960கள் வரையும் கூடப் பாட்டுப் புத்தகங்கள், கதைப் பாடல்கள் போன்ற வெகுஜன நாட்டார் இலக்கியங்கள் இங்கே கிடைக்கும்.

புகைவண்டி, மின்சார விளக்கு, மண்ணெண்ணெய், சிகரெட், தேநீர் போன்ற புதுப்பொருட்களின் வருகை இந்தப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் விலை அரையணாவாக இருந்தது.

அன்றாடம் நிகழ்ந்த கொலை, கொள்ளை, அரசியல் தொடர்பான செய்திகள் உடனக்குடன் பாடலாக்கப்பட்டன. ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் சில ஆயிரம் படிகளே விற்ற காலத்தில் இந்தப் பாடல்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது.

1920 களிலும் 1930 களின் தொடக்கத்திலும் கிராமபோன் இசைத்தட்டுகள் மூலம் இசைப் பாடல்கள் பரவின. அது ரேடியோ இல்லாத காலம். எச்.எம்.வீ., கொலம்பியா, ஓடியன் போன்ற இசைத் தட்டுக் கம்பெனிகள் பிரபல நாடக மேடைப் பாடகர்களைக் கொண்டும், பிரபலம் ஆக வேண்டியவர்களைக் கொண்டும் நூற்றுக்கணக்கில் இசைத் தட்டுக்களை வெளியிட்டன.

குஜிலிக் கடைக்காரர்கள் கிராமபோன் பாடல்களை அச்சிட்டு விற்றனர். எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ், எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், என்.எஸ். பபூன் சண்முகம் போன்றோருக்கு தனிப் புத்தகங்கள் உண்டு.

குஜிலிக் கடைகளில் கூட தேசபக்திக்கே வரவேற்பு அதிகம் இருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தேசியத் தலைவர்கள் கைதான போது ‘அரெஸ்டு பாட்டு’ என்றே பாடல்கள் எழுதப்பட்டன. இவை சுடச்சுட விநியோகம் செய்யப்பட்டன. எதிர்த்தரப்பிலிருந்து “இராஜ விசுவாசக் கும்மி” போன்ற சில புத்தகங்களும் வந்தன.

வெகுஜனங்களின் விஷயஞானத்திற்காகவும் பொழுது போக்கிற்காகவும் பயன்பட்ட குஜிலிக் கடைகளைப் பார்த்தோம். இதே காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சினிமாவைப் பற்றியும் சிறிது பார்க்கலாம்.

அதற்கு, கந்தசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வால்டாக்ஸ் ரோடில் நிதானமாக நடந்து சென்ட்ரலைக் கடந்து விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு வரவேண்டும். அந்தக் காலத்தில் இத்தனை வாகனங்கள் இல்லை என்பதால் காலாற நடக்கலாம்.

Victoria Public Hallவிக்டோரியா பப்ளி ஹால் அரங்கில்தான் 1897 ஆம் ஆண்டு முதன்முதலில் சலனப்படக் காட்சி திரையிடப்பட்டது. இதைச் செய்தவர் எட்வர்டு என்ற ஆங்கிலேயர்.

இதற்குப் பிறகு மெளன்ட்ரோடில் ‘எலக்ட்ரிக் தியேட்டர்’ என்ற அரங்கை வார்விக் மேஜர் என்ற ஆங்கிலேயர் கட்டினார். இந்தக் கட்டிடம் இப்போதைய அஞ்சலக வளாகத்தின் உள்ளே இருக்கிறது.

வெங்கையா என்பவர் 1914 இல் கெயிட்டி திரையரங்கைக் கட்டினார்.

‘ஹரிஷ்சந்திரா’ போன்ற பம்பாய் நகரத்துத் தயாரிப்புகள் சென்னையில் வெளியிடப்பட்டன.

தென்னிந்தியாவில் திரைப்படத்துறை முன்னோடி என்று நடராஜ முதலியாரைச் சொல்லலாம். இவர் மோட்டார் உதிரி பாகங்களை விற்று வந்தார். இவருடைய முயற்சியில் வெளிவந்த ‘கீசகவதம்’ (1916) தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெளனப்படம்.

ஏ. நாராயணன் தயாரித்த படங்களின் கவர்ச்சி பற்றியும் முத்தக் காட்சிகள் பற்றியும் இந்தத் தொடரின் துவக்கத்திலேயே சொல்லியிருக்கிறேன்.

1931 இல் வெளிவந்த ‘குறத்தி பாட்டும் டான்சும்’ என்ற நான்கு ரீல் கொண்ட குறும்படம்தான் தமிழில் வெளிவந்த முதல் டாக்கி, அதாவது பேசும் படம்.

எச்.எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த ‘காளிதாஸ்’ (1931) முதல் தமிழ் முழு நீளத் திரைப்படம் என்ற பெருமைக்குரியது.

சினிமாத் தொழிலைத் தன் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக பிரிட்டிஷ் அரசு 1918 இல் ‘இந்திய சினிமாடோகிராப் சட்டத்தின் மூலம் தணிக்கை முறையை அமல்படுத்தியது என்பதையும் குறித்துக் கொள்ளவும்.

சினிமாவைப் பார்த்தோம். பாமர மக்களின் வாசிப்பையும் பார்த்தோம். அன்றைய அரசியல் சூழலைப் பார்க்க வேண்டாமா?

Pandit Mdan Mohan Malaviyaஅரசியல் சூழலைப் பார்ப்பதற்காக வடக்கே போக வேண்டும். ரயிலேறி காசிக்குப் போக வேண்டும். அங்கே 1916 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பனாரஸ் இந்து பல்கலைக் கழக கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. திருமதி. அன்னிபெசன்ட் அம்மையாரும், மதன்மோகன் மாளவியாவும் சேர்ந்து நடத்திய நிகழ்ச்சி இது. தர்பங்கா மகாராஜா சர். ராமேஷ்வர் சிங் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

இந்த மேடையில் மகாத்மா காந்தி ஆற்றிய உரையை இப்போது பார்க்கலாம் (07.02.1916):

எந்த விதமான காகித மூலமான தீர்மானமும் ஒருபோதும் நம் நாட்டுக்கு சுயராஜ்ஜியத்தைப் பெற்றுத்தர முடியாது. எத்தகைய மேம்பாடான சொற்பொழிவுகளும் நம்மை சுயராஜ்ஜியத்திற்குத் தகுதியுடையவர்களாக ஆக்காது. நம்முடைய செயல்பாடுகள் மூலமாகவே நம்மை நாம் தகுதியுடையவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்….

மேன்மை தாங்கிய மகாராஜா அவர்கள் நேற்றைய தினம் தலைமை தாங்கி தனது உரையில் இந்தியாவின் வறுமையைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். மற்ற சொற்பொழிவாளர்களும் அக்கருத்தை மிகவும் வற்புறுத்த வரவேற்றுப் பேசினார்கள். ஆனால் வைஸ்ராய் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட இம் மாபெரும் விழாவில் அமைக்கப்பட்ட பந்தலில் எதைக் காண்கிறோம்? உண்மையிலேயே மிகப் பெரிய பகட்டான விழா – பாரிஸ் மாநகரிலிருந்து வரவழைக்கப்பட்ட நகைகள் கண்காட்சியைக் காண்பது போன்ற ஒரு உணர்ச்சியை அன்றோ இது தோற்றுவிக்கிறது. இந்தப் பகட்டான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து காட்சி தரும் மகாராஜாக்களையும் பணக்காரப் பிரபுக்களையும் வறுமையில் வாடும் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நான் இந்த மகாராஜாக்களுக்கும் பணக்காரப் பிரபுக்களுக்கும் கூறிக் கொள்வேன். நீங்கள் இந்த தங்க வைர ஆடை ஆபரணங்களையும் மக்கள் நல்வாழ்விற்காக எடுத்துக் கொடுத்து மக்களுக்குப் பாதுகாவலர்களாக இருந்தாலொழிய – இந்தியாவுக்கு விமோசனம் ஏற்படுவதற்கு வேறு வழியே கிடையாது….

காந்திஜி பேசிக் கொண்டே போனபோது அன்னி பெசன்ட் குறுக்கிட்டார். மேடையிலிருந்த அரசர்கள் வெளியேறினர். காந்திஜியின் பேச்சில் குறுக்கிட்டதற்காக நாடெங்கும் அன்னி பெசன்ட்டுக்குக் கண்டனம் எழுந்தது.

1917 இல் இங்கிலாந்து அரசில் இந்தியச் செயலாளராக எட்வின் மாண்டேகு இருந்தார். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியா குறித்த அறிக்கை ஒன்றை (20.08.1917) அவர் தாக்கல் செய்தார். இந்தியாவிற்குப் பொறுப்பாட்சி தரவிருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

ரெளலட் சட்டம், பஞ்சாப் படுகொலை, கிலாஃபத் இயக்கம் ஆகியவற்றின் விளைவாக வெள்ளையர்களுக்கு எதிரான கிளர்ச்சி இந்தியாவின் எல்லாப் பகுதிகளும் பரவியது.

Lokamanya Bal Gangadhar Tilak‘சுயராஜ்யம் நமது பிறப்புரிமை’ என்று முழங்கிய லோகமான்ய பாலகங்காதர திலகர் 1920 ஆம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி மறைந்தார். அரசியலில் வெற்றிடத்தை மகாத்மா காந்தியின் ஆளுமை நிரப்பியது.

1920 செப்டம்பரில் லாலா லஜபதிராய் தலைமையில் கல்கத்தாவில் காங்கிரஸ் விசேஷ மாநாடு (Special Session) கூட்டப்பட்டது; ஒத்துழையாமைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Salem Vijayaraghavachariar1920 டிசம்பரில் நாகபுரியில் காங்கிரசின் வருடாந்தரக் கூட்டம் நடந்தது. சேலம் விஜயராகவாச்சாரியார் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ஒத்துழையாமைத் தீர்மானம் உறுதி செய்யப்பட்டது.

மாண்ட்போர்டு சீர்திருத்தம் என்ற பெயரில் 1920 ஆம் ஆண்டில் இந்திய மாகாணங்களில் ‘இரட்டையாட்சி முறை’ நடைமுறைக்குக் கொன்டுவரப்பட்டது; மாகாணங்களில் சட்டசபையும் அமைச்சரவையும் ஏற்பட்டன; மாகாண அரசின் அதிகாரங்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலிருந்து அமைச்சரவை உருவாக்கப்பட்டது. ஆளுநரால் தனியாக ‘நிருவாக சபை’ நியமிக்கப்பட்டது. அரசின் அதிகாரங்கள் இந்த இரண்டு அவைகளிடமும் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

1921-ம் ஆண்டில் தடையுத்தரவை மீறியது, ராஜ துவேஷம் போன்ற குற்றங்களுக்காக நாடெங்கும் 25 ஆயிரம் பேர் சிறை சென்றனர்.

சென்னை மாகாணத்தில் முதல் கூட்டமன்றம் 1921 ஜனவரி 12 இல் துவக்கி வைக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி 1920 நவம்பரில் நடந்த தேர்தலைப் புறக்கணித்தது. மொத்தத் தொகுதிகள் 98. 63 தொகுதிகளில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. ஆளுநர் 18 நீதிக்கட்சியினரை நியமன உறுப்பினர்களாக ஆக்கினார். ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராகப் பதவியேற்றார். பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட பி. இராமராய நிங்காரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் அமைச்சர்களானார்கள். சிறிது காலத்திற்குள் உடல்நிலை காரணமாக ஏ. சுப்பராயலு ரெட்டியார் பதவி விலகினார். பனகல் அரசர் முதல்வரானார்.

சட்ட மன்றத்திற்கான இரண்டாவது பொதுத் தேர்தல் 1923, அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்தது. மீண்டும் நீதிக்கட்சி ஆட்சியைப் பிடிக்க, பனகல் அரசர் முதலமைச்சரானார்.

1920 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சியும் அரசுக்கு ஆதரவான சுயேச்சைகளும்தான் ஆட்சி செய்தனர்.

மொத்த மக்கள் தொகையில் 2.9 விழுக்காட்டினருக்குத்தான் வாக்குரிமை இருந்தது. அதிலும் கால் பகுதியினர்தான் வாக்களித்தனர்.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்த காலத்தில் தமிழர்கள் எத்தனை விதமான கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதற்கு இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.

சென்னைக்கு அருகே உள்ள பரங்கிமலையில் மாவட்ட காவல்துறை சூபரின்டெண்ட் இ.எஸ். ஸ்கின்னர் தொடர்பான ஒரு சம்பவத்தைப் பற்றி ‘தி ஹிந்து’ எழுதுகிறது.

1911 டிசம்பர் 15 மாலை 3 மணி.

போலிஸ்காரர்களோடு மார்ச் செய்து கொண்டிருந்த தலைமைக் காவலரை ஸ்கின்னர் கவனித்தார். யூனிபார்ம் அணிந்திருந்த அந்தத் தலைமைக் காவலரின் நெற்றியில் நாமம் போட்டிருந்தார். ‘யூனிபாரத்தில் இருக்கும் போது நாமம் போட்டுக் கொள்ளக் கூடாது’ என்று சில நாட்களுக்கு முன்னர் அந்தத் தலைமைக் காவலர் எச்சரிக்கப்பட்டிருந்தார்; தண்டனையாக டிரில்லும் தரப்பட்டது.

இப்போது எச்சரிக்கையை மீறி நாமம் அணிந்ததற்காக தலைமைக் காவலர் விசாரிக்கப்பட்டார். ‘ஐந்து வருடங்களாக அரசுப் பணியில் இருக்கும் தமக்கு நாமம் அணியக் கூடாதென்ற அரசு விதிமுறை சொல்லப்படவில்லை’ என்றார் அந்தத் தலைமைக் காவலர்.

தலைமைக் காவலரின் செய்கை, கடமை தவறியதாகக் கருதப்பட்டது. அவர் புலிகாட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

நாமம் அணிந்த குற்றத்தைவிட ‘குட்மார்னிங்’ சொன்ன குற்றம் இன்னும் விசித்ரமானது. அது ஒரு சிறுவனைப் பற்றியது.

ஜாக்சன் என்ற செங்கல்பட்டு மாஜிஸ்ட்ரேட் சைக்கிளில் போகும் போது எதிரே வந்த ஏழு வயதுச் சிறுவன் ‘குட்மார்னிங்’ என்று சொல்லி அவருக்கு வணக்கம் செய்தான். சிறுவன் சத்தமாக வணக்கம் தெரிவித்தது மாஜிஸ்ட்ரேட்டுக்குக் குற்றமாகத் தென்பட்டது.

சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரனைக்குப் பிறகு சிறுவனுக்கு 5 ரூபாய் அபராதமும் அதைக் கட்டத் தவறினால் ஒரு வாரக் கடுங்காவலும் விதிக்கப்பட்டது.

சிறுவன் தரப்பில் அபராதம் செலுத்தப்பட்டது. நீதிபதியின் தீர்ப்பு தவறானது என்று கருதிய சிறுவனின் தந்தை அப்பீலுக்கான நடவடிக்கைகளில் இறங்கினார். ஜாக்சன் 5 ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இப்படிப்பட்ட கோமாளித்தனத்திற்கும் கொடுங்கோலுக்கும் பெயர் போன பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தொடர வேண்டும் என்று பல்லக்கு தூக்கிய பயில்வான்கள்தான் நீதிக்கட்சியினர் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

மேற்கோள் மேடை:

“We ought to play with them (Indians), humour them in politics and discuss with them industrial development education and social reform; but there is no necessity for doing anything.”

– Montague was told by Lord Pentland, the Governor of Madras / Montague’s Diary 1917.

5 Replies to “போகப் போகத் தெரியும் – 18”

  1. மேற்கோள் மேடையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள லார்ட் பெண்ட்லேண்டின் வரிகள் ஆங்கிலேயரின் அகம்பாவத்திற்குச் சிறந்த உதாரணம் என்றால், யுனிபார்மில் நாமம் போட்டதற்கும், சத்தமாக குட்மார்னிங் சொன்னதற்கும் தண்டனை அளித்தது அவரகளின் அராஜகத்தையும் காண்பிக்கிறது.

    மேலும் இவர்களுக்கு ஜால்ரா போட்ட நீதிக்கட்சியினரின் சிஷ்யகோடிகளான தற்போதைய திராவிட கழகக் கண்மணிகளை நீங்கள் தோலுரித்துக் காட்டும் பணிக்கு பாராட்டுக்கள்.

    நன்றி, அன்புடன்

    தமிழ்ச்செல்வன்

  2. கலக்கல் தொடர். திராவிட பம்மாத்துக்களை தோலுரித்த கண்டுகொளவோம் கழகங்களை தொடரை மிஞ்சிவிட்டீர்கள் அய்யா…வாழ்த்துக்கள்.

  3. //…பல்லக்குத் தூக்கிய பயில்வான்கள்///

    பொருள்பொதிந்த அருமையான சொற்றொடர்.

    தொடருங்கள்.

  4. மலையாளத்தேசத்தையும், ஆந்த்ரத்தையும், கர்நாடகத்தையும் த்ராவிடக்குடும்பம் என்று கதையளந்த கண்மணிகள் தான் கழகத்தினர் என்று விவரமறிந்தோர் கூறிவந்தனர். . தேசப்பற்றுக்கும் இவர்களுக்கும் காததூரம் என்று பழைய ஜனசங்கத்துக்காரரான திருக்கோவிலூர் சுந்தரம் ஒருமுறை கூறியது நினைவுக்கு வருகிறது. அவ்ர்கள் பகுத்தறிவாளர்கள். விதியை நம்பமாட்டார்கள். ஆனால் நாம் நம்புகிறோம். தமிழ்நாட்டின் தீவினையே இவர்கள் கையில் ஆட்சி கிடைத்தது. காலம் மாறும். எல்லா வல்ல இறைவன் நம்மைக் காப்பாற்றுவானாக.

  5. வரலாறு அருமையாகத் தொகுக்கப் பட்டுள்ளது. உண்மையை என்றும் மறைக்க முடியாது. இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை ஒன்றே நம்மைத் தேற்றுகின்றது. நன்றி தொகுப்புக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *