அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி

devi_the_mother_goddess_wd29
Mother

புனிதமான நவராத்திரி தினங்கள் துவங்கிவிட்டன. உலகெங்கும் ஒரு காலத்தில் இருந்து, இன்று பெரும்பாலும் இந்தியாவில் மட்டுமே எஞ்சியிருக்கிறது தொன்மையான அன்னை வழிபாடு. கத்தோலிக்க கிறிஸ்துவம், வஜ்ராயன பவுத்தம், சீனாவின் தொன்மை கலாச்சாரங்கள் என்று மற்ற மதங்களில், கலாச்சாரங்களில் ஆங்காங்கே உருக்குலைந்த வடிவத்திலும், முழுமைபெறாமல் பகுதியான வடிவிலும் இருக்கும் அன்னை வழிபாடு, தனது முழுமையான வடிவில் மகோன்னத நிலையில் நமது இந்து மதத்தில் மட்டுமே இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

இந்த வழிபாட்டின் உன்னதத்தை விளக்கும் மாதா அமிர்தானந்தமயி மிஷனின் முன்னுரையின் ஒரு பகுதி கீழே தரப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, அகவழிபாட்டு முறையை எளிமையாக, அழகாக விளக்கும் மாதா அமிர்தானந்தமயி தேவியவர்களின் உரையும் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அன்னையைப் பற்றிய கேள்விக்கெல்லாம் எளிமையாக மாதா அமிர்தானந்தமயி விடையளிக்கிறார், இந்த பிரபஞ்ச தோற்றத்தில் முதன்மையாக வெளிப்பட்டது ஒரு சக்தி. அதுவே முதல் தோற்றம். அச் சக்தி நம்மை காத்து அருள் புரிகிறது என்று. “எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவளே என் தாய்” என்கிறார் மாதா அமிர்தானந்தமயி.

அன்னையின் அருள் பெற்றவர்கள் கோடானுகோடி மானுடர்கள். மகான்கள், சித்த புருஷர்கள் நேரடியாக தரிசித்து அன்னையிடம் உரையாடியுள்ளதை விவேகானந்தர், இராமகிருஷ்ணர் போன்ற மகான்களின் வாழ்க்கையில் காண்கிறோம். மகான்கள் மட்டுமல்ல, எண்ணற்ற பாமரர்களுக்கும் அவர்களது நெஞ்சின் அடியாழத்திலிருந்து புறப்படும் பிரார்த்தனையின், வேட்கையின் சக்தியையொட்டி அன்னை வெளிப்படும் சம்பவங்களை நாம் பலமுறை கேட்டும் உள்ளோம்.

அன்னை வழிபாடென்பது இந்த ஆதிசக்தியை, நாம் அறிந்து உணர்ந்திருக்கும் தாயின் வடிவில் வழங்கும் வணக்க முறையாகும். மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட வடிவங்களில் இருந்தும், உலகின் பல பகுதிகளில் கிட்டும் வடிவங்களில் இருந்தும், இவ்வழிபாட்டின் தொன்மையை, அதை களங்கமில்லா ஆதி மனிதன் உணர்ந்திருந்ததை குறிக்கிறது.

அடிப்படையில் நம்முள் துலங்குகிறாள் அன்னை. பரத்தை மறைத்த பார் முதல் பூதத்தின் (திருமூலரின் வரிகள்) துணையைக் கொண்டே பரத்தை அணுகும் கலையை நம் முன்னோர்கள் அறிந்து அதை செம்மைப் படுத்தி நமக்கு அளித்தனர். அந்த உள்ளார்ந்த பயணத்திற்கு புற வடிவங்கள், புற சடங்குகள் துணை புரிகின்றன. இந்த அகவழிபாட்டு முறையை அற்புதமாக விளக்குகிறது இந்த மாதா அமிர்தானந்தமயி தேவியின் உரை.

நமது திருக்கோவில்கள் இப்படியான அகவழிபாட்டிற்கு நம்மை இட்டுச் செல்பவைதான்.  நமது வாழ்க்கையோடு ஒட்டிய விஷயங்களை ஆன்மீக உணர்வுடன் செய்யும்போது மனம் அதில் ஒருமைப் படுகிறது. இயல்பாகவே அலைபாயக் கூடியதாக இருக்கும் மனது இதனால் ஒருமுகப்பட்டு, தியான நிலையை அடைந்து அமைதியாகிறது. இந்த தியானம் தொடரும்போது, யோகத்தின் இறுதி நிலையான சமாதி எனும் இறைவனுடன் ஒன்றினைவது அல்லது நாம் வழக்கில் சொல்லும் இறைவனின் திருவடி சேரல் என்பது கைகூடுகிறது.

மானஸ பூஜை எனப்படும் இந்த அகவழிபாட்டை விளக்கும் மாதா அமிர்தாந்தமயி தேவியவர்களின் திருவிளக்கு வழிபாட்டு முறை பற்றிய விளக்கத்தையும் இந்த நன்னாட்களின் முதல் நாளில் தமிழ் இந்து சமூகத்திற்கு அர்ப்பணிக்கிறோம். இந்த நவராத்திரி தினங்களில் இறையை அன்னையாக வழிபட்டு நமது மன அரக்கர்களை அழித்து, இருளில் இருந்து விடுபட்டு ஒளியை நோக்கிச் செல்வோம், பொய்மையிலிருந்து உண்மையை நோக்கிச் செல்வோம், பிறந்திறந்து உழலும் நிலையிலிருந்து பிறவா நிலைக்கு செல்வோம். அன்னை அருள் புரிவாளாக!

அன்னை வழிபாடு

meenakshi1உலகியல் நிலையில் தலையாயது தாயன்பு. எல்லா உயிர்களுக்கும் தாயும், தந்தையுமாக இருப்பவன் இறைவன். அவனது அன்பிற்கு எல்லையே இல்லை என்பது அவனை அனுபூதியில் அறிந்தவர்களது அனுபவமாகும். அவனை அடைய முயல்பவர்கள் அவனைத் தாயாக கருதி பக்தி செய்யும்போது, அவனோடு நெருங்கிய உறவு கொள்வது சுலபமாகிறது. நம் குறைகளையும், குற்றங்களையும் இறைவியிடம் தயங்காது கூறலாம். அவளது தாயன்பு அவற்றை மன்னித்து, நம்மை திருத்துகிறது.

கடவுள் ஒளிமயமானவர். நம்மைத் தூய்மைப் படுத்துவதில் ஞான ஒளிக்கு நிகரானது எதுவுமில்லை. இந்த ஒளியின் சின்னமாக அழகுற அமைந்தது குத்துவிளக்கு. இவ்விளக்கையே இறைவியாக கருதி பூஜை செய்வது மிகச் சிறந்த வைபாடகிறது. இவ்வழிபாட்டின் அம்சமாகத் தேவியின் திருநாமங்களைக் கூறி அர்ச்சனை செய்வதால் நமது மனமும், சொல்லும், செயலும் பூரணமாக இறைத் தொண்டில் ஈடுபடுகின்றன.

– மாதா அமிர்தாந்தமயி மிஷன்

mother_goddess_chandi

திருவிளக்கு வழிபாட்டு முறை

அருளியவர்: ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி

முதலில் பூமாதேவியைத் தொட்டு வணங்கவும். பின்னர் நீண்டநேரம் அமர்வதற்கு சவுகர்யமான ஓர் ஆசனத்தில் அமர வேண்டும்.

மூன்று முறை “ஓம்” ஜபிக்கவும். கண்களை மூடி, நாபியிலிருந்து ஓங்கார நாதம் எழும்பித் தலை உச்சியிலுள்ள ஸஹஸ்ராரத்தைச் சென்று அடைவதாக பாவனை செய்யவும். ஓங்காரம் ஜபிக்கும்போது நமது தீய இயல்புகளும், கெட்ட எண்ணங்களும் வெளியேறுவதாகவும், நல்ல எண்ணங்களும், நல்லியல்புகளும் நம்முள் நிறைவதாகவும் எண்ண வேண்டும். மேலும், உள்ளத்திற்கும் உடலுக்கும் புத்துணர்வும், உற்சாகமும் ஏற்படுவதாக பாவனை செய்யவும்.

பின்னர் உங்கள்முன் ஒரு முக்கோணம் வரைந்து,அதன் நடுவில் ஒரு புள்ளி வைக்கவும். இவ்வாறு செய்யும்போது பக்தியுடன் மனம் நெகிழ்ந்து, ‘அம்மா, அம்மா’ எனக் கூறியபடியே இருக்கவும்.

அடுத்ததாக அவரவர்களுடைய இதயத் தாமரையிலிருந்து மிகவும் அழகான ஒரு தேவியின் விக்ரஹத்தை(அவரவர்களுக்குப் பிடித்தமான தேவியின் திருவடிவத்தை)  இரு கைகளாலும் எடுத்து முக்கோணத்தின் நடுவிலுள்ள புள்ளியில் பிரதிஷ்டை செய்வதாகப் பாவனை செய்யவும்.  ஒரு நிமிடம் அந்த தேவியின் பாதம் முதல் சிரசு வரை ஒவ்வொரு பாகத்தையும் மனதில் கண்டு மகிழுங்கள். பிறகு குனிந்து வணங்கவும். அவ்வாறு வணங்கும்போது தேவியின் திருப்பாதங்களை நம் தலை தொடுவதாக உணர வேண்டும். இவ்வாறு செய்யும்போது, ‘அம்மா, அம்மா’ என மனமுருக ஜபிக்க வேண்டும்.

பிறகு தேவிக்குத் தண்ணீர், பால் தயிர், நெய், தேன், சந்தனம், திருநீறு, பன்னீர், புஷ்பம் இவைகளால் அபிஷேகம் செய்வதாகப் பாவனை செய்யுங்கள். இறுதியாகத் தண்ணீரால் அபிஷேகம் செய்து, சுத்தமான ஒரு துணியால் தேவியின் திருமேனியைத் துடைத்துவிடுவதாக எண்ணவும். தேவியின் நினைவு உள்ளத்திலிருந்து நீங்கிவிடாதபடி இடைவிடாமல், ‘அம்மா, அம்மா’ என்று ஜபித்தபடியே இருக்க வேண்டும்.

பிறகு அவரவர்களுக்குப் பிடித்த நிறத்திலுள்ள ஒரு சேலையை தேவிக்கு அணிவிக்கவும். தேவியின் திருமேனியில் வாசனைத் திரவியத்தைப் பூசிவிடவும். காலில் தங்கச் சலங்கைகளையும், காதில் குண்டலங்களையும், கழுத்தில் ஆபரணங்களையும், மாலையையும் அணிவிக்கவும். திருமுடியில் கிரீடத்தைச் சூடிவிடவும். மோதிர விரலால் தேவியின் நெற்றியில் குங்குமப் பொட்டு வைப்பதாகப் பாவனை செய்யவும்.

பின்னர் தேவியின் அழகை மீண்டும் மனதில் கண்டு ரசிக்கவும். தேவியின் திருவடி முதல் திருமுடிவரை ஒவ்வொரு அங்கத்தையும் மாறிமாறி உள்ளத்தில் சிறிது நேரம் கண்டு, மீண்டும் தேவியின் திருப்பாதங்களில் நமஸ்காரம் செய்யவும். அப்போது, “அம்மா, நீயன்றி எனக்கு வேறு கதி இல்லை, நீயே நித்தியமானவள், என்னை உண்மையாக நேசிப்பவள் நீயே. மற்றவர்கள் என்னை நேசிப்பது அவரவர்களின் சுகத்திற்காக மட்டுமே. நூறு நல்ல செயல்கள் செய்துவிட்டு ஒரு தவறு செய்தால் கூட உலகம் என்னை ஒதுக்கிவிடும். ஆனால்,நூறு தவறுகள் செய்துவிட்டு ஒரு சிறு நன்மை செய்தால்கூட நீ என்னை ஏற்றுக் கொள்வாய். உன்னால் மட்டுமே எனக்கு நித்தியமான சாந்தியைத் தர இயலும். அம்மா, உன் குழந்தையாகிய என்னை எடுத்து, உன் மடியில் வைத்து ஞானமாகிய பாலை எனக்கு ஊட்டுவாய் அம்மா” என்றெல்லாம் உள்ளமுருகிப் பிரார்த்தனை செய்ததில் தேவி மகிழ்ந்து சிரித்தபடி நம்மை, ‘குழந்தாய் வா’ என்று அன்புடன் அழைப்பதாகப் பாவனை செய்யவும்.

அடுத்ததாக ஒரு துதிப்பாடலைப் பாடவும். அதைக் கேட்டு அம்மா ஆனந்த நடனமாடுவதாக எண்ணிக் கொள்ளவும். அம்மாவை வலம் வந்தபடி நாமும் அம்மாவுடன் நடனம் செய்வதாகவோ அல்லது அம்மாவின் நடனத்தை ரசிப்பதாகவோ எண்ணிக் கொள்ளலாம். கண்ணீர் மல்க பக்தியுடன் பாடவேண்டும். நம் இதய முடிச்சுகள் ஒவ்வொன்றாக அறுபடுவதாகவும் உள்ளம் தூய்மையடைவதாகவும் பாவனை செய்யலாம்.  ஊதுபத்தியை ஏற்றி அம்மாவைச் சுற்றி மூன்றுமுறை காண்பிக்கவும். தாம்பூலமும் எடுத்து வைக்கவும்.

அதன் பின் அர்ச்சனையை ஆரம்பிக்கவும். நம் இதயத்தில் இலைகளற்ற, வெள்ளைப் பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கும் ஒரு மரம் இருப்பதாக எண்ணவும். ஒவ்வொரு மந்திரம் சொல்லும்பொழுதும், அந்த மரத்திலிருந்து ஒவ்வொரு பூவாக பக்தியுடன் பறித்தெடுத்து அம்மாவின் பாதங்களில் அர்ச்சனை செய்வதாக எண்ணவும். அர்ச்சனை செய்யும்பொழுது அம்மாவின் முழு உருவத்தையும் உள்ளத்தில் காண முடியாவிட்டால் பாதங்களையாவது காண முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு பூவும் அம்மாவின் பாதங்களில் சென்று விழுவதை தெளிவாக காண வேண்டும்.

அர்ச்சனைக்குப் பின் முக்கோணத்தில் வீற்றிருக்கும் தேவிக்கு பேரன்பாகிய பாயசத்தை இதயத்திலிருந்து எடுத்து ஊட்டிவிடுவதாகவும், அந்தப் பாயசத்தை தேவி மிகவும் சந்தோஷத்துடன் சுவைத்து உண்ணுவதாகவும் பாவனை செய்ய வேண்டும். பிறகு தேவியை வணங்கி, மீண்டும் ஒரு துதிப்பாடலைப் பாடவும். பின் கற்பூரத்தை ஏற்றித் தீபாராதனை காண்பிக்கவும். கற்பூரம் எரிந்து தீருவதுடன் நம் அகங்காரமும் எரிந்து நாம் தேவியுடன் ஐக்கியமாவதாகப் பாவனை செய்யவும். பின் தேவியை மூன்றுமுறை வலம் வருவதாக எண்ணி வணங்கவும். அடுத்ததாகப் பின்வரும் சாந்தி மந்திரங்களைக் கூறவும்: “லோகா: சமஸ்தா: சுகிநோ பவந்து”, ” ஓம் அஸதோ மா ஸத் கமய, தமஸோ மா ஜ்யோதிர் கமய, ம்ருத்யோர் மா அம்ருதம் கமய, ஓம் சாந்தி: சாந்தி:  சாந்தி:”. மீண்டும் சில நிமிடங்கள் தேவியின் திவ்யமான திருவுருவத்தை ஒவ்வொரு அங்கமாகவும், முழுமையாகவும் மனதில் கண்டு மகிழவும்.

பின் இரண்டு கைகளாலும் தேவியின் விக்ரஹத்தை எடுத்து மீண்டும் நம் இதயத்தில் பிரதிஷ்டை செய்துகொள்வதாகப் பாவனை செய்யவும். சற்றுநேரம் தேவியைத் தியானம் செய்யவும். கடைசியாக எழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு பூஜையை நிறைவு செய்யலாம். முடியுமானால் தேவியின் உருவத்தை அதிகநேரம் தியானிக்கலாம்.

9 Replies to “அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி”

  1. Pingback: tamil10.com
  2. அழகாக விளக்கி உள்ளார்கள்! அன்னைக்கு பதிலாக அவரவர்களின் இஷ்ட தெய்வத்தையே கூட எல்லோரும் பயிற்சி செய்தால், மனம் அமைதி அடைந்து, நல்வாழ்வு பெற முடியும்!

  3. பரம்பொருளை அன்னையாக வழிபடுதலே இயல்பானாது; தொன்மையானது. அங்கயற்கண்ணி, இராஜேஸ்வரி,சிவகாமேஸ்வரி போன்ற கருணை வடிவாயினும், மகிடாசுர மர்த்தனி, கொற்றவை போன்ற கோரவடிவாயினும் அனைத்தும் அன்னையின் அருள்வடிவே.அவளை மகிழ்விக்கும் எளிய பூஜையை ‘அம்மா’என்னும் எளிய மந்திரத்தை அம்மா அவர்கள் அருளியிருக்கின்றார்கள். இந்தக்கட்டுரையைப் படிக்கும்போதே அம்மாவின் பாசத்தையும் அனுபவிக்கச் செய்கிறார்கள்.

    கெளலோபநிஷத் என்னும் உபநிடதநூல், “அந்த: சாக்த; பஹிஸ் சைவ: சபாப்யாம் வைஷ்ணவ:ததா” என்று கூறுகின்றது. ஒருவன் சமய ஒழுக்கத்தில், அந்தரங்கத்தில் சத்தி உபாசகனாகவும், புறத்தே சைவக் கோலத்தினனாகவும் சபையில் வைஷ்ணவனைப் போல சுவைபடப் பேசுவோனாகவும் இருக்கவேண்டும்” எனக் கூறுகின்றது.
    அந்த முறையில் திருஞானசம்பந்தரும் ‘தோடுடைய செவியன்’ என்றும், ‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய பெருமான்’ எனவும் தம்முடைய தேவாரப் பதிகங்களில் அம்மையையே துதித்துள்ளார் எனக் கருதப்படுகிறது. திருமந்திரத்திலும் திருமூலநாயனார் ஸ்ரீசக்ரங்களைப் பற்றிப் பேசும்போது அன்னை வழிபாட்டையே கூறியுள்ளார். திருப்புகழிலும் அன்னையின் எண்ணற்ற திருநாமங்கள் பேசப்படுகின்றன.

    “ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்தங்கோன்
    போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுநி
    காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல்
    சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே” என அபிராமபட்டர் கூறுவதுபோல் பெரியோர்களும், ஆதிவாசிகளும், வனவாசிகளும், பாமர மக்களும் , ஏழையரும் போற்றுவது அன்னையையே. இந்திய ஒருமைப்பாட்டுக்கும் பாமரர்களின் பண்பாட்டு மேன்மைக்கும் முதற்படி சத்தி வழிபாடு

    தமிழ் இந்து செய்துவரும் பணி ஓங்குக.

  4. மதிப்பிற்குரிய முத்துக்குமாரசாமி அய்யா அவர்களுடைய கருத்துக்களைப் பார்க்கும்போது கண்கள் பனிக்கின்றன. சான்றோர் தம் உறவைவிட இனியதும் இறைவிக்கு அருகாமையில் நம்மை இட்டுச்செல்லக் கூடியதுமான பாக்கியம் வேறேதும் உண்டோ.

    நமது இந்து தருமத்தைப் பொறுத்தவரை, கோரவடிவங்கள் தத்துவங்கள். அவற்றிற்கு வரலாற்றுத் தன்மை கிடையாது. இந்த தத்துவங்களும் அருள் வடிவங்களே. மற்றொரு திரியில் இது குறித்த விவாதமொன்றைப் படித்தேன். அங்கே யேசு கிறிஸ்து எனும் பிண வழிபாட்டையும், காளி வழிபாட்டையும் ஒருவர் ஒப்பிட்டிருப்பதைக் கண்டு மனம் புண்பட்டேன்.

    யேசு கிறிஸ்து என்பவர், அப்படி ஒருவர் இவர்கள் நம்புவது போல வாழ்ந்திருந்தால், ஒரு வரலாற்று புருஷர். அந்த மனிதரின் சடலத்தை வணங்குவதையும் நமது நித்திய கடவுள்களின் வணக்கத்தையும் கனவிலும் கூட ஒப்பிடக்கூடாது.

    கால சூழ்நிலையினால் ஏற்படும் aberrationகளான ஆபிரகாமிய வன்முறை வழிபாட்டு கலாச்சாரங்களை நமது தூய, உயரிய, தத்துவ அடிப்படையிலான,சித்தர்களின் ஞான தரிசனங்களின் விளைவாக மனிதகுலம் அடையாளம் கண்ட நித்திய, சத்திய தருமமாம் இந்து மதத்துடன் ஒப்பிடவே கூடாது.

    ஆபிரகாமிய கலாச்சாரங்களை மதம் என்று குறிப்பிடுவதே தவறு. அவை அரசியல் இயக்கங்கள். அவ்வியக்கங்கள் கொண்டாடும் நபர்களை கடவுள்களாகவோ, கடவுளின் மகன், தூதன், மெசயா என்றெல்லாம் நாம் ஏற்பதும் கூட தவறு.

    உலக வரலாற்றில் எத்தனையோ மதங்கள் தோன்றி, வளர்ந்தோங்கி, அழிந்துவிட்டன. ஆனால், நமது தருமமே என்றும் இருக்கிறது, எதிர்காலத்திலும் இருக்கும். ஸ்வாமி விவேகானந்தர் தெளிவாக சொல்கிறார்,’இந்த தேசத்தில் என்றும் காளி வழிபாடு நிலவும்’ என்று. எத்தனை யுகங்கள் வந்து மறைந்தாலும், எத்தனை பிரளயங்கள் வந்து சென்றாலும் இந்த பூமி இந்து பூமியாகவே இருக்கும். இடையிடையே தோன்றி மறையும் கருமேகங்களைப் போன்றவையே இந்த பிணம் வணங்கி கல்டுகள்.

  5. // அன்னை வழிபாடு, தனது முழுமையான வடிவில் மகோன்னத நிலையில் நமது இந்து மதத்தில் மட்டுமே இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. //

    ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் – அதை
    அன்னை எனப் பணிதல் ஆக்கம்
    சூதில்லை காணுமிந்த நாட்டீர் – பிற
    தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்

    என்கிறார் பாரதி.

    உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
    எமையும் தமக்கன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச்
    சமயங்களுமில்லை ஈன்றெடுப்பாளொரு தாயுமில்லை

    என்கிறார் அபிராமி பட்டர்.

    பரம்பொருளைத் தாயாக வழிபடுவது உன்னதமான ஆன்மிக நெறி. அதனை நடைமுறையில் கடைப்பிடிக்க வழிகாட்டும் பூஜை முறை பற்றி அருமையாக எழுதியிருக்கிறார் மகேந்திரன்.

    அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

  6. அனைவருக்கும் நவராத்திரி நல வாழ்த்துக்கள்
    சீக்கிரமே விஜயதசமி வெற்றித் திருநாள் வரட்டும்

  7. மிகவும் யதார்த்தமாக மானசிக வழிபாடு என்னும் கடுமையான விசயத்தை எளிமையாக அம்மா அவர்கள் சொல்கிறார் .

  8. அம்மாவிற்கு நன்றி மேலும் பூஜைக்கு இடையூறாக ஏற்படும் எதிர்மறை எண்ணங்களை எப்படிகளைவது ,மனம் அலையாதிற்க செய்யவேண்டியை யாவை ? இது என்னை போல அரபு நாட்டில் பணிபுரிபவருக்கு மிகுந்த மன சாந்தி தருவதாக கருதுகிறேன் .

  9. //பூஜைக்கு இடையூறாக ஏற்படும் எதிர்மறை எண்ணங்களை எப்படிகளைவது ,மனம் அலையாதிற்க செய்யவேண்டியை யாவை ? //

    இதற்கு பதில் சொல்ல வேண்டியது அம்மா தான். ஆனால், எனக்கு தோன்றும் ஒரு சிறு விசயம் – இந்த சஞ்சலங்களையும் கடவுளிடமே சொல்லிவிட்டு கடவுளிடம் பிரச்சினையை ஒப்படைத்துவிட்டு நாம் நிம்மதியாக இருக்கலாமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *