பாவை நோன்பும் தைந் நீராடலும் – 1

kolamமார்கழியும் திருப்பாவையும் நமக்கு நினைவூட்டுவது பாவை நோன்பென்னும் பண்டைய வழக்கம். மார்கழி மாதம் பாவை நோன்புக்குப் பெயர் பெற்றது. தைந் நீராடல் என்பதும் பிரசித்தி பெற்ற ஒன்று. மார்கழியிலும் நீராட்டம் உண்டு. இந்தச் செய்திகளை எல்லாம் அரைகுறையாகக் கேட்டுள்ளோம். இவை குறித்த இலக்கியச் செய்திகளைத் தொகுத்துத் தருவதே இக்கட்டுரை.

பாவை நோன்பின் முக்கிய அம்சமே இளம் சிறுமியர், மார்கழி மாதம் விடியலுக்குமுன் எழுந்து, ஆற்றங்கரை சென்று, சில்லிடும் ஆற்று நீரில் நீராடி, ஆற்று மணலில் பாவை எனும் பொம்மை செய்து, அதற்குப் பூச்சூட்டி விளையாட்டாக வழிபடுதலே ஆகும். சற்று யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் தேவையா என்று தோன்றும். இளம் சிறுமியரை பகல் நேரத்தில் விளையாட அனுப்பக் கூடாதா? விடியலுக்கு முன்னால் எழுப்பி, குளிரில் ஏன் அனுப்ப வேண்டும்? அதுவும் ஆற்றங்கரைக்கு அனுப்பி, ஆற்றில் இறங்கிக் குளிக்கச் சொல்வது நல்லதா என்றெல்லாம் எண்ணத் தோன்றும். ஆனால் இந்தப் பாவை நோன்பில் பொதிந்துள்ள சில கருத்துகள், பொதுநலத்தையும், அக வாழ்வின் நன்மையையும் இணைத்து, மக்கள் சமூகத்தின் ஒரு முக்கியக் கடமையாகவே பாவை நோன்பினைக் காட்டுகின்றன.

அக வாழ்வு என்னும் பொழுது, மனம் நிறைந்த வாழ்க்கையை, கண் நிறைந்த கணவனுடன் இப்பிறப்பு மட்டுமில்லாமல், அடுத்த பிறவியிலும் வாழ வேண்டும் என்னும் வேண்டுதல் செய்யப்படுகிறது.

பொது நலம் என்னும் பொழுது, வரப்போகும் மாரிக்காலம் தப்பாமல் மழை கொடுக்க வேண்டுமெனில் மார்கழி மாதம் ஆற்றங்கரையில் நோன்பிருக்க வேண்டும். மாதம் முப்பது நாள்களும் செய்யும் இந்த நோன்பினை பெரியவர்கள் செய்தாலும்கூட, சில குறிப்பட்ட விதங்களில் இளம் சிறுமியர் செய்வதே பலனளிக்கும் வண்ணம் இருக்கும். இது எப்படி என்று பார்பதற்குமுன், இந்த வழக்கம் எப்பொழுது ஆரம்பித்திருக்கக் கூடும் என்று பார்ப்போம்.

பெண்பால் பிள்ளைத் தமிழ் இலக்கணத்தைக் கூறுமிடத்தே, பிங்கலந்தை நிகண்டு, சூத்திரம் 1369 இவ்வாறு கூறுகிறது:

பேணும் சிறப்பின் பெண் மகவாயின் …..
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும்
ஐங்கணைக் கிழவனை யார்வமொடு நோற்றலும்
பனி நீர் தோய்தலும் பாவை யாடலும்.

ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான பருவத்தில் உள்ள சிறுமியர் பனி நீர் தோய்ந்து, பாவை ஆடி, ஐங்கணைக் கிழவன் எனப்படும் ஐந்து பாணங்களை உடைய காம தேவனுக்கு ஆர்வமோடு நோன்பு நோற்பர் என்பது இதன் பொருள்.

இதுவே தமிழ் மரபென்றால், வட நாட்டில் மார்கழி மாதத்தில், யமுனை ஆற்றங்கரையில், கார்த்யாயினி என்னும் பெண் தெய்வத்தைக் குறித்து பாவை செய்து, நோன்பு நோற்பர் என்னும் குறிப்பு ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. இங்கே காமதேவன், அங்கே கார்த்யாயினி. ஆனால் குறிக்கோள் ஒன்றே. கண்ணன் போல, திருமால் போல, மனம் கவர் கணவனை அடைதல் என்பதாகும்.

இதைச் செய்யும் பருவம், கணவன் என்பதும் திருமணம் என்பதும் என்னவென்றே அறியாத சிறார்ப் பருவம்! அப்பருவத்தில் எதற்கு இப்படி ஒரு நோன்பு என்று நோக்கினால், அங்கேதான் புலப்படுகிறது, ஒரு பொதுநலம்.

வசிஷ்டர், காஷ்யபர் போன்ற முனிவர்கள் சொன்ன ஒரு கருத்து, பின்னாளில், வராஹமிஹிரரால் மனித குலம் அறியும்வண்ணம் எழுதி வைக்கப்பட்ட ஒரு கருத்து-  மார்கழி மாதம் வைகறைப் பொழுது தொடங்கி காணப்படும் சில இயற்கைச் சூழ்நிலைகள், ஆறு மாதங்கள் கழித்து, வளமான மழைக்காலம் வருவதற்கு ஏதுவாகும் என்பது. இந்த இயற்கைச் சூழ்நிலைகள் உண்டாவதற்கு, ஆண்டாள் கூறுவது போன்ற ‘கீசு கீசு’ என்னும் ஆனைச் சாத்தான், சிலும்பும் புள்ளினங்கள், கொட்டில் விட்டு வெளி வரும் எருமைக் கன்றுகள் எழுப்பும் ஓசைகள் – அவை தவிர ஆற்று நீரில் கூக்குரலிட்டு நீராடி, பாவை விளையாடும் சிறுமியர் எழுப்பும் இனிய குரலோசை போன்றவை முக்கியத் தேவைகள்.

paavai-nonbuமூவகையில் கவனிக்கப்படும் இயற்கைச் சூழ்நிலையில், முதல் வகை மேலே கூறப்பட்ட வைகறைப் பொழுதின் சலசலப்புகள். நீர் சம்பந்தப்படும்படி, விடியலுக்கு முன்னரே வாசல் தெளித்துக் கோலமிடுவதும் இதில் அடக்கம். மக்கள் கூட்டத்தையும் சேர்த்து உயிரினங்கள் பலவும் வைகறைக் குளிரை வெப்பப்படுத்த வேண்டும். நடமாடுவதன் மூலமும் நீரை அளைப்பதன் மூலமும் ஓசையின் மூலமும் இது செய்யப்படுகிறது. மக்கள் தொகுதியைப் பொருத்த மட்டில், காவலும் கண்டிப்பும் இல்லாத நிலையில் கூவித் திரிந்து விளையாடும் இளம் சிறுமியரின் பொம்மை விளையாட்டும், மணல் விளையாட்டும், ஆற்று நீராட்டமும் இந்த இயற்கைச் சூழலுக்கு ஒத்துப் போகின்றன. இதனால்தான், பெண் குழந்தைகளை ஈடுபடுத்தும் வண்ணம் விளையாட்டாக இந்த நோன்பினை முனிவர்கள்அமைத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

maargazhi-skyஇரண்டாவது வகை, காற்று மண்டலம், மேகக்கூட்டம், வைகறையின் வண்ணங்கள் முதலியன. கீழ் வானம் வெள்ளென்று இருக்கும் நிலையை ஆண்டாள் சொல்வது, முக்கிய இயற்கைக் குறிப்பு. மார்கழி மாதம், விடியல் நேரத்தில் வானம் வெண்ணிறமாக இருக்க வேண்டும், மாறாக சிவந்து இருந்தால் மாரிக் கால மழை ஓரளவேனும் அடிபடும் என்று அறியப்பட வேண்டும். சிவந்த விடியல் வானம் தை, மாசி மாதங்களில் நல்லது. ஆனால் மார்கழியில் வைகறை வானம் தூய்மையாய், வெண்ணிற மலர் போல இருக்க வேண்டும் என்பது முனிவர்கள் கருத்து. காற்று மெலிதாக வீச வேண்டும். மெல்லிய மேகக் கீறுகள் வானில் தென்பட வேண்டும். முக்கியமாக பனிப் படலம் கூடாது. தை பிறந்தபின் பனி வர வேண்டும். மார்கழியில் அல்ல. தற்சமயம், நம் நாட்டின் பல பகுதிகளில் பனிப் படலம் தென்படுவது, அடுத்த மழைக்காலம் குறைவுடையது என்பதை முன்கூட்டியே காட்டும் ஒருகாலம்- காட்டி.

milkywayமூன்றாவது வகை வான்வெளியில் உள்ள கிரக அமைப்புகள். ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று ஆண்டாள் கூறியது சாதாரணச் செய்தி அல்ல. மார்கழி மாத சூழ்நிலை வகை தெரிந்துதான் அவள் ஒவ்வொன்றையும் பாடியிருக்கிறாள். மார்கழி விடியல் நேரத்தில், ஒரு கிரகம் உதித்து, மற்றொரு கிரகம் அஸ்தமனம் அடைவது விண்வெளி குறித்த நல்ல காரணியாகும். வரப் போகும் மாரிக் காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இது ஒரு முன்-காட்டி. கிரகங்கள் நீச்சமடையாமல் இருப்பதும், கிரக யுத்தம் என்று சொல்லும்படி கிரகங்கள் கூடி இல்லாமல் இருப்பதும், கிரஹணங்கள் ஏற்படாமல் இருப்பதும், அடுத்த மாரியின் வளப்பமான பொழிதலை உறுதிப்படுத்துவது ஆகும்.

தற்சமயம் மார்கழியில் இருக்கும் இம்மூவகை நிலையை எண்ணிப்பார்த்தே, அடுத்த ஆண்டின் மழை எப்படி இருக்கும் என்று வாசகர்கள் கணித்துவிடலாம். இந்த் வகையில் கணித்தவர்கள்தான் நம் தமிழ் முன்னோர்.

பாவை நோன்புக்கும், மழைக்கும் உள்ள தொடர்பு அறிந்த நம் முன்னோர், சரியான காலத்தில், சரியான அளவில் மழைக் காலம் தொடங்கி விட்டது என்று திருப்திபடுவதுடன் அல்லாமல், அடுத்த மார்கழியையும் சரியாகவே வரவேற்போம் என்று வரவேற்றனர். பாவை நோன்பைப் பற்றி பரிபாடல் பாடியுள்ள ஆசிரியர் நல்லந்துவனார், ஆவணித் திங்கள் அவிட்ட நாளில் கோள்கள் நிலை சொல்லி, இவ்வாறு அமையப் பெறவே, சைய மலையின்கண் மழை துவங்கும் என்பது உறுதி என்னும் விதிப்படி, மழை பெய்யலாயிற்று என்றார். அதனுடன் நில்லாமல், அதற்கடுத்த மார்கழியில், எவ்வாறு மக்கள் ஆர்வத்துடன் பாவை நோன்பிருந்தனர் என்றும் விவரிக்கின்றார்.

பாவை நோன்பு செய்யும் முறை

athiraiyaanமார்கழி மாதம் பௌர்ணமியன்று பாவை நோன்பைத் தொடங்குவர். அன்று திருவாதிரை நட்சத்திரத்தில், நிலவு பூரணம் அடையும். ஆதி இறை என்பதாலும், திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி என்பதாலும், ஆதிரையான் என அழைக்கப்பட்ட முக்கண்ணன், திருவாதிரையன்று வணங்கப்படுபவன். அக்கடவுளே மழை பொழிய அருள்பவன். அதனால், திருவாதிரை நட்சத்திரத்தில், சந்திரனானது முழுமை அடையும் மார்கழி மாதப் பௌர்ணமியன்று, ஆற்றங்கரைதோறும் ஹோமத்தீ வளர்த்து, ஆதிரையானுக்கு பூசை செய்து, பாவை நோன்பினைத் துவக்குவர். அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து, அதே ஆதிரை நட்சத்திரத்தில், சூரியன் நுழையும் போது இருக்கும் கால, நேரம், நாள், ஓரை ஆகியவற்றின் அடிப்படையில், மாரிக்காலம் எப்படி இருக்கும் என்று மீண்டும் கணிக்கப்பட்டு, உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில்தான் என்ன பயிரிடுவது, எப்பொழுது பயிரிடுவது என்று முடிவு செய்வர். பாவை நோன்பின் போது, சரிவர பூசனைகள் செய்வதாலும் நேர்த்தியாக நோன்பிருப்பதாலும் வரப்போகும் மாரிக்காலம் வளமாக இருக்கும் என்பது இந்த நோன்பில் பிணைந்துள்ள பொதுநலக் கருத்து.

இந்தக் கருத்தினை திருப்பாவையிலும் காணலாம்.

“நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்” என்ன பயன் என்று ஆரம்பித்திலேயே ஆண்டாள் தெரிவிக்கிறாள். அதன் பயன், “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தல்” என்பதே. பாவை நோன்பிருந்தால் மாதம் மூன்று முறை மழை பொழியும்.

praying-varunaஅது மட்டுமல்ல, அடுத்த பாசுரத்தில் (‘ஆழி மழைக் கண்ணா’), மாரிக்காலத்தில் இருண்டு திரண்டு மேகங்கள் மழை பொழிவதைக் குறிப்பிட்டு, “வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்” என்று மார்கழி நீராட்டத்திற்கும், மழைக் காலத்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறாள். ஆக, பாவை நோன்பின் முதல் நோக்கம், பொதுநலம் அல்லது நாட்டு நலம் என்னும் மழை வளம் வேண்டுதல்.

இந்த நோன்பை விவரிக்கையில், பரிபாடல் 11-இல் நல்லந்துவனார் இவ்வாறு கூறுகிறார்.

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை விரிநூல்
அந்தணர் விழவு தொடங்க, புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!’ என
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,

பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர,
உறை சிறை வேதியர் நெறி நிமிர்
நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.

full-moonகதிரவன் அதிகம் காயாத, குளிர்ந்த கடை மாரியையுடைய மார்கழித் திங்களில், சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் முழுமை பெற்ற அந்தப் பௌர்ணமி நன்னாளில், விரி நூல் அந்தணர் விழவு தொடங்குவர். முப்புரி நூலை உடைய அந்தணர் (அந்தணர் என்றால் வேதாந்தத்தை அணவினவர் என்பது நச்சினார்க்கினியர் கருத்து) இறைவனுக்கு பலிப் பொருள் (நைவேத்தியப் பொருள்) பெய்த பொற்கலங்களை ஏந்தி நிற்க, “வெப்பமடையாமல் இந்நில உலகம் குளிர்வதாக!” என்று வாழ்த்தி, “அம்பாவாடல்” என்னும்படி, அம்பா என்று சொல்லப்படும் தாயோடு, இளம் கன்னியர் ஆற்றினில் நீராடி வர, அவர்களுக்கு, ‘முனித் துறை முதல்வியர்’ எனப்படும், சடங்குகள் அறிந்த முதிய பார்ப்பனப் பெண்டிர் நோன்பு செய்யும் முறையைச் சொல்லிக் கொடுக்க, நோன்பு நோற்கும் கன்னிப் பெண்கள், குளிர்ந்த ஆற்று நீரில் குளித்தமையாலும், குளிர் தாளாததாலும், உடுத்தின ஈரத் துணியுடனே இருப்பதாலும், அந்தக் குளிர் தணியும் வண்ணம், ஹோமத் தீயின் அருகே வந்து, தங்கள் ஈரத்துணியைக் காட்டி உலர்த்தும் வண்ணம் இருப்பர். அந்தத் துணியிலிருந்து கிளம்பும் நீராவியானது, வைகை ஆற்றுக்குத் தரும் அவிப் பொருள் போன்று இருக்கும். ‘வையை! நினக்கு மடை வாய்த்தன்று’ என்று , கன்னியர் ஈரத் துணியில் கிளம்பும் நீராவியே வைகை உண்ணும் ஹவிஸ் என்னும் ஹோமப் பொருள் என்று புலவர் கூறுகிறார்.
 
அடுத்து ஒரு முக்கியக் குறிப்பைத் தருகிறார்.

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,
அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
 

poyyaadalஇவ்வாறு ஹோமமும், நோன்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மறுபுறம், இளம் பெண்கள் நடனம் ஆடுவர். இங்கே சிறுவர்கள் பற்றியும் புலவர் குறிப்பு தருகிறார். மையோலை பிடித்து கவி பாடும் மழ புலவர் என்றால் முதன் முதலாக ஓலைச் சுவடி பிடித்து பாடம் பயில ஆரம்பிக்கும் சிறுவர் என்பது பொருள். அவர்கள் படிக்கும் பாடலுக்கு மாறாக, அந்தப் பெண்கள் பொய்யாடல் ஆடுவர் என்கிறார். பூசையின் பகுதியாக, அந்தக் குளிரிலும், அபிநயம் பிடித்து அவர் ஆடுவர். அது பொய்யாடல் என்கிறார். கள்ளமில்லாப் பருவத்தினராக இருப்பதால், அந்தப் பாடல்களுக்குக் காமக் குறிப்பின்றி ஆடுதல் ‘பொய்யாடல்’ எனப்படும் என்கிறார் உரை ஆசிரியர் பரிமேலழகர். இதன் மூலம் அந்தப் பாடல்களில் காதல் ரசம் அல்லது, நல்ல கணவனை விரும்பும் விழைவு இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் கள்ளமிலா அந்தச் சிறுமியர் அபிநயித்தபோது, அது வைகைக்கு வைக்கும் ஒரு விண்ணப்பம் ஆகிறது.

அது என்ன விண்ணப்பம் என்றால், நீரின் கண் ஆடியும், தீயின் கண் (ஹோமத் தீ) நின்றும், பொறியையும், புலனையும் அடக்கி இந்தச் சிறுமியர் ஆடுவது, இவர்தம் முன் பிறப்புகளிலும், இவ்வாறு ஆடினமையின் காரணமாகவோ? இந்தப் பேறுக்குரிய காரணத்தை நீயே சொல்வாய் வைகை நதியே- இவ்வாறு கூடியிருப்போர் நினைப்பர், கேட்பர். புலவரும் கேட்கிறார்.

“தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?” என்னும் இந்த வரிகளின் மூலம், தைந் நீராடுதல் என்பது, ‘தவத்தை நீராடுதல்’ என்னும் சொற்களின் சேர்க்கையே என்று தெரிகிறது. இந்த வரிகள் சொல்லப்படும் காலமும் இடமும், மார்கழி மாதத்து பாவை நோன்பு ஆரம்பிக்கும் முதல் நாள். தை மாதம் இன்னும் வரவில்லை. ஆனால் மார்கழி மாதத்து பாவை நோன்பின் நீராட்டத்தையே, தைந் நீராடல் என்று புலவர் கூறுகிறார். பொதுநலம் கொண்ட பாவை நோன்பில் பிணைக்கப்பட்டுள்ள அக நலம் காட்டும் பகுதி இது.

சிறு வயதிலேயே புலன்கள் அடக்கி, ஆண்டாள் சொன்னது போல, மை இடுதலையும், மலர் சூடுதலையும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதையும் விடுத்து, நெய் சோறும், பால் சோறும் விரும்பி உண்ணும் அந்தப் பருவத்தில் அவற்றையும் விட்டொழித்து, இனிய தூக்கத்தையும் கலைத்துக் கொண்டு, குளிரையும் பொருட்படுத்தாமல், சில்லிடும் ஆற்று நீரில் குளித்து நோன்பிருக்கிறார்களே, இதுவே தவம். ‘தவமும் தவமுடையார்க்காகும்’ என்பது முதுமொழி. ஒருவர் வழி வழியாக தவம் மேற்கொண்டிருந்தால்தான், இப்பிறப்பிலும், தவத்தை மேற்கொள்வர். ஆகவே அந்தச் சிறுமியரும் முன்னரே இருந்த தவத்தைப் பற்றியே இன்று, வைகையே, உன் முன்னரும் தவத்தை ஆகும் பேறு பெற்றனரோ, நீ கூறு என்கிறார் புலவர்.

தை என்றால் பிணைத்தல் அல்லது தைத்தல் என்பது பொருள். தைந் நீராடல் என்பது, பிறவி தோறும் கடைபிடித்த தவத்தை, இப்பிறவியிலும் பிணைக்கும் ஒரு நீராடல், எனவே அதை ‘தவத் தைந் நீராடல்” என்கிறார் புலவர். மார்கழிப் பாவை நோன்பே தைந் நீராட்டமும் ஆகும் என்பது இதன் மூலம் புலனாகிறது.

அந்தப் பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை.

(தொடரும்…)

பாவை நோன்பும் தைந் நீராடலும் – 2

5 Replies to “பாவை நோன்பும் தைந் நீராடலும் – 1”

  1. Wonderful. Really interesting to know how great our ancestors were. They have thought about every aspect of life and every ritual of ours have a social meaning.

    Eagerly awaiting your next part madam.

    Thanks.
    Satish

  2. இந்துக்கள் அனைவருமே தமிழ் ஹிந்து விற்கு கடமைப்பட்டுள்ளோம்!
    எத்தனை நன்றி சொல்ல! நன்றி சொல்வதை விட இன்னும் எல்லா ஹிந்துக்களும் இதை படிக்குமாறு செய்ய வேண்டும்!

  3. உங்களுடைய இந்த வலை தளம் மிகவும் பாராட்டுக்குரியது நாங்கள் உங்களுடைய சேவைக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறோம்.
    எங்கும் நிறைந்து உள்ள இறைவன், உங்களுடைய இந்த சேவை நன்கு செயல் பட
    – பொருளாதாரம் மற்றும்
    – வாசகர்களின் மனநிறைவு பெற்று
    உங்களின் இந்த சேவை தொடர்ந்து மேலும் மேலும் முன்னேற்றம் அடையவேண்டும் என்று ஆசிர்வதிக்கட்டும்.

    அன்புடன்
    மேகநாதன். த

  4. Pingback: Happy Margazhi
  5. மிக அருமையான பதிவு . நல்ல ஆராய்ச்சி. தெளிவான விளக்கங்கள். வாழ்க வளமுடன். வாழிய பல்லாண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *