பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்

முந்தைய கட்டுரைகள்:

1.  அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்

2. வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்

3. பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்

 

(தொடர்ச்சி….)

கொப்பூழ் தாமரையில் அமர்ந்த நான்முகப் பிரம்மன் படைத்தலைத் தொடங்குகிறார். இந்தத் தொடக்கத்திலேயே இரண்டு விஷயங்கள் முடிவாகி விடுகின்றன. ஒன்று, ஆரம்பம் முதல் முடிவு வரை என்னென்ன, எப்படி எப்படி இருக்க வேண்டும் என்கிற ப்ரோக்ராம். மற்றொன்று, எவ்வளவு காலம் இந்த ப்ரோக்ராம் நீடிக்க வேண்டும் என்பது.

ப்ரோக்ராமை அமைத்துக் கொடுப்பது வேத அறிவு. இது அழியாத விஞ்ஞான விதிகள் கொண்ட அறிவு. எவ்வளவு முறை இந்தப் பிரபஞ்சம் அழிந்து, மீண்டும் தோன்றினாலும், இந்த அறிவைக் கொண்டு மீண்டும் மீண்டும் ப்ரோக்ராம் அமைத்துக் கொள்ளலாம். அந்த அறிவை, படைப்பின் ஆரம்ப கட்டத்தில், நாராயணன் தன் கொப்பூழில் தோன்றிய பிரம்மனுக்கு உபதேசம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. பிறகு எப்பொழுதெல்லாம் உலகங்கள் அழிந்து, மீண்டும் பிறப்பிக்கப்பட வேண்டுமோ, அப்பொழுதெல்லாம் இந்த அறிவை நான்முகப் பிரம்மன் நினைவுக்குக் கொண்டு வந்து படைத்து விடுகிறார். இந்தக் காரணத்தினாலேயே, வேத மத அறிவை, நாமும் ஓரளவேனும் புரிந்து கொண்டால், நாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே, ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்லிவிட முடியும்.

மற்றொரு விஷயம், எவ்வளவு காலம் இந்தப் பிரபஞ்சம் ஓடிக் கொண்டிருக்க முடியும் என்பது. பிரபஞ்சங்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் ஒவ்வொரு பிரபஞ்சமும், நான்முகப் பிரம்மனின் ஆயுள் வரைதான் ‘தோன்றும்’ (manifest) பிரபஞ்சமாக இருக்க முடியும். நான்முகப் பிரம்மனின் ஆயுள் முடியும்போது, அவர் படைத்து வரும் பிரபஞ்சத்தின் ஆயுளும் முடிந்து விடும். நான்முகப் பிரம்மனின் ஆயுள் முதலிலேயே முடிவாகி விடுகிறது. அது நூறு வருடம்.

 

ஆயுள் காலம் நூறு

தோற்றத்தின் போதே பிரம்மனின் ஆயுள் முடிவாகி விடுகிறது என்பதால் இந்தப் பிரபஞ்சம் தோன்றும்பொழுதே எப்பொழுது முடிந்துவிடும் என்பதும் முடிவு செய்யப்பட்டு விடுகிறது என்று புலனாகிறது. இதெல்லாம் அறிவுக்கு உகந்ததல்ல என்று தள்ளி விடுவதற்கு முன்னால், இன்றைய விஞ்ஞானம் இதுவே மனிதனுக்கும் பொருந்தும் என்ற சாத்தியகூறைக் காட்டும் மரபணுவை அறிந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

சாலமன் மீன்களும், தேனீக்களும் தங்களது அடுத்த தலைமுறையை உருவாக்கியவுடன் இறந்து விடுகின்றன. இதற்குக் காரணம் ஒரு மரபணு. எப்பொழுது இறப்பு நேரிடும் என்ற செய்தி இந்த மரபணுவில் உள்ளது. இந்த மரபணு வேலை ஆரம்பித்தால், இறக்கும் நேரம் வந்து விட்டது என்று பொருள். இப்படி ஒரு செய்தியைத் தாங்கியுள்ள மரபணு ஒன்று நம் உடலிலும் இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பிட்ட கால அளவே வாழவேண்டும் என்னும் Apoptosis அல்லது Programmed cell death என்ற ஒரு விஷயம் செல்களுக்கு உண்டு. அதன் விவரம் நம் உடலில் மரபணுவுக்குள் ஒளிந்துள்ளது. கருவில் இருக்கும்போதும், வெளியில் நடமாடும்போதும், அவ்வப்பொழுது இதற்கு வேலை உண்டு. இந்த மரபணுவுக்கு மனிதனின் இறப்பை நிர்ணயிப்பதிலும் வேலை இருக்கிறதா என்ற ஆய்வு நடந்து கொண்டிருக்கின்றது. கருவிலேயே மரபணுவில் ஆயுள் நிர்ணயம் செய்யப்படுவது சாத்தியமானதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மரபணு கொண்டுள்ள செய்தியை நம்மால் மாற்ற முடிந்தால் இறப்பை வெல்ல முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள்.

இமயமலைக் குகைகளில் இன்றும் கூட சிலர் முன்னூறு, நானூறு வருடங்கள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்று சொல்கிறார்கள். சித்தர்கள் பலரும் பல நூறு, ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. சித்தர்கள் என்றாலே சித்தி அடைந்தவர்கள்; அதாவது நினைத்தது கைகூடப் பட்டவர்கள் என்று பொருள். அவர்கள் பெற்ற சித்தி வல்லமையால் பௌதிகமான மரபணுவை மாற்ற முடிந்திருக்கிறது.

பல நூற்றாண்டுகள் அவர்கள் உடலுடன் வாழ்ந்திருந்தாலும், பிரம்மனின் ஆயுளைத் தாண்டி யாரும் வாழ முடியாது. ஆயுள் முடிந்தவுடன், ‘ஆட்டம் க்ளோஸ்’ என்று அவரும் புறப்பட்டு விடுவார். முக்தியும் சித்தியும் அடைந்தவர்களும் அவருடன் இந்தச் சக்கரத்தை விட்டே நீங்கி விடுவார்கள். அதற்கப்புறம், பரம்பொருளுடன் ஐக்கிய நிலைதான்.

நான்முகப் பிரம்மன் ஆயுள் நூறு என்பதால், நூறு என்னும் ஆயுள் கணக்கு மனிதனுக்கும் விசேஷமாகிறது.  பிரம்மனின் நூறு வயதை ஒட்டியே, வேத நூல் பிராயம் நூறு என்கிறார்கள். இதை ஒட்டியே நூறு ஆண்டுகள் வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனர். நூறு வருடங்கள் ஜீவிக்க வேண்டும், நூறு வருடங்கள் சூரியனைப் பார்க்க வேண்டும், நூறு வருடங்கள் புகழும், மகிழ்ச்சியும் பொங்க வாழ வேண்டும் என்று மந்திரங்கள் உள்ளன. ராம தூதனாக வந்த அனுமனைப் பார்த்ததும் சீதை இவ்வாறு கூறுகிறாள் – “ஒருவன் பிழைத்து மாத்திரம் இருந்தால், நூறு வருடங்களுக்குப் பிறகாவது சந்தோஷத்தை அனுபவிக்காமல் இருக்கமாட்டான் என்னும் உலக வழக்கு என் விஷயத்தில் உண்மை ஆயிற்று,” என்று நூறு வருஷம் பிழைத்திருப்பது பற்றிக் கூறுகிறாள். (வால்மீகி ராமாயணம்- 5-34-6)

இங்கு ஒரு கேள்வி வருகிறது. ராமர் 11,000 வருடங்கள் வாழ்ந்ததாக வால்மீகி கூறுகிறார். தசரதன் போன்றோரும் பதினாயிரம் ஆண்டுகள், அறுபதனாயிரம் ஆண்டுகள் என்று ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்தனர் என்று சொல்லியிருக்கிறார்களே. இவையெல்லாம் எப்படிச் சாத்தியமாகும்? ஆகாது. எனவே இவை கட்டுக்கதைகள் என்று எண்ணத் தோன்றும்.

ஆனால் சீதை கூறியிருப்பதைப் பாருங்கள். மனிதனின் உடல் தாக்குப் பிடிக்கும்படியான நூறு வயது வாழ்க்கைதான் உலக வழக்கில் அன்றும் இருந்திருக்கின்றது என்பது அவள் கூறுவதிலிருந்து தெரிகிறது. அப்படியிருக்க ஆயிரக்கணக்கான வருடங்கள் என்று கூறியது கற்பனையா?

இல்லை. அற்புதமான இந்த வேத மதத்தில், பல ட்ரில்லியன் வருஷங்கள் ஓடும் ‘தோன்றும்’ பிரபஞ்சத்தில், பலவிதக் கணக்கு வழக்குகள் இருக்கின்றன. அதில் ஒன்று ராம ராஜ்ஜியம் சொல்லப்பட்ட வருடக் கணக்காகும். இந்தக் கணக்கின் அடிப்படையில் நூறு வருட மனித ஆயுளில், ஆயிரக்கணக்கான வருடங்கள் எப்படி சொல்லப்படுகிறது என்று விளக்கலாம். அதைப் பிறகு பார்ப்போம். வேறு சில அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால் அதை விளக்குவது சுலபம். அதனால் அடிப்படைகளிலிருந்து ஆரம்பிப்போம்.

 

அடிப்படைப் பரிமாணக் கூறுகள்

brahmaநாராயணனின் கொப்பூழில் தோன்றிய பிரம்மன் படைப்பை ஆரம்பிக்கிறார். வேத அறிவின்படி, தன் தியானத்தில் உற்பத்தி செய்த படைப்பு, எல்லாத் திசைகளிலும் சரியானபடி சென்று கொண்டிருக்கிறதா என்று சரிபார்க்க நான்கு திசைகளிலும் பார்க்கிறார். இதைக் காட்டவே அவருக்கு நான்கு பக்கங்களிலும் முகங்கள் உள்ளனவாக சித்தரிக்கப்படுகிறது. எல்லாம் திருப்தியாகச் சென்று கொண்டிருக்கிறது என்று மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். 

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், திசைகள். விண்வெளியில் திசைகள் எப்படி இருக்கும்? சூரியனை முன்னிட்டு, பூமியில் திசைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆகாயத்தில் போனால் திசை ஏது என்ற கேள்வி வருகிறது.

ஆகாயத்திலும் திசை இருக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.

கால, தேச (இட), பரிமாணம் என்பதை மட்டுமே இன்றைய விஞ்ஞானம் அறிந்துள்ளது. வேத மதப் பிரபஞ்சவியலில் இது முக்கூட்டுப் பரிமாணமாக உள்ளது. அது திக்கு, தேச, காலம், பரிமாணம் எனப்படும். இதை ‘த்ரிப்ரச்னாதிகாரம்’ என்பர். திக்கு இல்லாமல் தேசம் அதாவது இடம் கிடையாது. இடம் என்றால் அதற்கு ஒரு திக்கு இருக்கும். இடம் என்றால் கூடவே காலப் பரிமாணமும் வந்து விடும். இவை மூன்றும் ஒன்றுக்கொன்று இயைந்தவை.

திக்கு என்றால் நாம் திசை என்று பொருள் கொண்டு விடுகிறோம். திக்கு என்பது அதற்கும் அப்பாற்பட்டது. ஒருவன் வழி தெரியாமல் தவித்தால், எப்படி, எங்கு போவது என்று தெரியாமல் விழித்தால் அவனை ‘திக்கற்றவன்’ என்கிறோம்; ‘திக்கற்று நிற்கிறான்’ என்கிறோம். ஆகவே திக்கு என்பது வழி அல்லது செல்ல வேண்டிய பாதை என்பதாகும். பாதை வகுக்காமல் பயணத்தை எப்படி பிரம்மன் தொடங்க முடியும்?

இந்தத் திக்கை இன்றைய அறிவியலார் யோசிக்கவில்லை. ஒளிக்கீற்று தேச-காலப் பரிமாணத்தில் வளைந்து செல்கிறது. அந்த வளைவு அதன் பாதை- அதன் Direction– அதை திக்கு எனலாம். ஈர்ப்பு விசை உள்ள ஓர் இடத்தை நெருங்கும் ஒளிக்கீற்று பாதையை மாற்றிக்கொள்கிறது. திக்கு, தேச, காலம் இவை ஈர்ப்பு விசையால் மாறுபாடு அடையக்கூடியவை என்னும் அடிப்படை விதியில் வேதம் கூறும் பிரபஞ்சவியல் அமைந்துள்ளது.

இதை ஒட்டியது பிரபஞ்சங்களின் அமைப்பும் சுழற்சியும். பல பிரபஞ்சங்கள் (Multiverses) இருப்பதை இன்றைய அறிவியலார் ஒத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அவை எப்படிப் பயணிக்கின்றன என்பதைக் கற்பனையாகத் தான் சொல்லியுள்ளனர். ஒவ்வொரு பிரபஞ்சமும் ஒரு குமிழியாக உப்பிக்கொண்டே போகின்றன என்பது அவர்களது சமீபத்தியக் கருத்து. குமிழியாக ஆக்கும் மூல காரணம் எப்படியிருக்கும்? தெரியாது. குமிழி எத்தனை காலம் உப்பிக் கொண்டே போகும்? ஒரு நாள் வெடித்துவிடும் அல்லவா? அப்பொழுது என்ன ஆகும்? அவர்களிடம் விடை கிடையாது. அந்தக் குமிழிகள் போகும் வழிப்பாதை என்ன? விடை இல்லை.

வேதம் கூறும் பிரபஞ்சவியலில் விடை இருக்கிறது. மேல்சொன்ன இரண்டு விஷயங்களையும் (திக், தேச, காலம், மைய ஈர்ப்பு விசை + பிரபஞ்சங்கள்) ஒன்றே இணைக்கிறது இந்தப் பிரபஞ்சவியல்.

சக்கரத்தில் பயணிக்கும் பிரபஞ்சத்தில் திக்கு இருக்கிறது.
 
potters-wheelமுன்பு நடராஜர் ரூபத்தில் காட்டிய சக்கரத்தில் எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் சுழலுகின்றன என்று பார்த்தோம். இந்த அமைப்பை குயவனின் பானை வனையும் சக்கரத்திற்கு ஒப்பிடலாம்.
 
அந்தச் சக்கரத்தின் நடுவில் ஓர் அச்சு உண்டு. அதை ஆதாரமாகக் கொண்டு சக்கரம் சுழலும். குயவனின் சக்கரத்தில் எண்ணிலடங்கா வட்டங்களை இணைத்துக் கொள்ளுங்கள். சக்கரத்தின் ஒவ்வொரு வட்டமும் ஒவ்வொரு பிரபஞ்சம் செல்லும் பாதை. அதில் ஒரு வட்டத்தில் நம் பிரபஞ்சம் இருக்கிறது என்று கொள்வோம். இந்தச் சக்கரத்தில் பல வட்டங்கள், முன்னும் பின்னும், மேலும் கீழும் என்று கணக்கில் அடங்காமல் இருக்கும் அமைப்பே பல பிரபஞ்சங்களின் அமைப்பாகும்.

குயவன் சுழற்றி விடுவது போல, இந்தச் சக்கரம் அச்சான இறைவனால் எந்நேரமும் சுழற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதைத்தான் அவன் எந்நேரமும் கர்மம் செய்து கொண்டே இருக்கிறேன் என்று கீதையில் கூறுகிறான். இந்த அச்சான ஆதாரம்தான் ஈர்ப்பு மையம். சுழலும் வட்டங்களில் நாமிருக்கும் பிரபஞ்சங்களும் பயணிக்கின்றன.

இங்கே ஒரு செய்தி மறைந்திருக்கின்றது. பிரபஞ்சங்கள் பயணிப்பது வட்டத்தில். அப்படியென்றால், பிரபஞ்சங்கள் அந்தரத்தில் பயணிக்கவில்லை. ஓர் ஆதாரத்தில், அதாவது base ஒன்றில் பயணிக்கின்றன என்றாகிறது. வட்டம் சுழல, அதன் மீது பிரபஞ்சமும் ஓடுகிறது. இந்தக் கருத்தில், இன்றைய அறிவியலாரின் குழப்பம் ஒன்று தீர்கிறது.

Big Bang என்று வெடித்துச் சிதறலினால் அண்டங்கள் உருவாகி சென்று கொண்டேயிருக்கின்றன என்பது பிரசித்தமான கருத்து. வெடிப்பினது வலிமையைப் பொருத்துதான் சிதறலின் ஓட்டமும் இருக்கும். அதன்படி, போகப்போக அண்டங்களின் ஓட்டம் குறைய வேண்டும். அப்படிக் குறையக் காணோம், குறையும் என்ற சாத்தியமும் இருக்கக்காணோம். இதுவே அந்தக் குழப்பம்.

நாம் எடுத்துக்கொண்ட குயவன் சக்கரத்தைப் பார்ப்போம். குயவன் சக்கரச் சுழற்சியில், வட்டம் இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது. வட்டங்களைச் சுழலச் செய்வது அச்சு. அந்த அச்சு போல் ஆதாரமாக இருக்கும் சக்தியை இறைவன் என்கிறோம். சக்கரத்தின் வேகத்தை நிர்ணயம் செய்வது இறைவன் என்னும் அச்சு. ஆதாரமான அச்சின் (இறைவனின்) இயக்கத்தால் எழும் வேகம், வட்டங்களையும் (base) அவற்றில் பயணிக்கும் அண்டங்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போகிறது. சுழலும் அண்டங்களுக்கும் உள்ளிடை சக்தி (charge) இருந்தால், அந்த சக்தியுடன்,  base- ஆக அமைந்த வட்டத்தின் சுழலும் வேகமும் சேர்த்து, இப்பொழுது இருப்பது போல் எப்பொழுதும் ஓடிகொண்டே இருக்கும்.

இதில் தெரியும் இன்னொரு சமாசாரம், வட்டங்கள் திரவத் தன்மை (fluidity) கொண்டதாக இருக்க வேண்டும் என்பது. அதில்தான் இந்த அண்டங்கள் அடித்துச் செல்லப்படுவதைப் போல் அமைய முடியும். இந்த ஆதாரத் திரவத் தன்மை வாயு ரூபத்தில் இருப்பதாக பிரபஞ்சவியல் கூறுகிறது. இந்த வாயு, ஸப்த வாயு என்று ஏழு வாயுக்களாக உள்ளன. அவற்றில் ஐந்து பூமியில் உள்ளன. மீதி இரண்டும் பிரபஞ்சச் சுழற்சியில் உதவுகின்றன.

அவை:

(1) ஆவஹன் :- மேகங்கள் மிதக்க ஆதாரமாக இருப்பது.
(2) ப்ரவஹன் :- உயிர் தரும் பிராணனாக இருப்பது.
(3) உத்வஹன் :- கடல் நீரை ஆவியாக்கி மேகமாக்குவது.
(4) சம்வஹன் :- மேகங்களுக்கு இடையே இருந்து மழை பொழிய ஏதுவாவது
(5) விவஹன் :- சூறாவளி போன்ற வேகக் காற்றில் நிலை பெற்றிருப்பது.

இனி வருபவை உலகிற்கு வெளியே இருப்பவை.

(6) பரிவஹன் :- பால் வெளி என்னும் நாம் இருக்கும் கலக்சிகள் போன்றவை செல்ல ஆதாரமாக இருப்பது.
(7) பராவஹன் :- பிரபஞ்சம் முழுவதையுமே தாங்கிக் கொண்டு செல்லும் ஆதார வாயு இது. உடுக்கையில் ஆரம்பித்த பிரபஞ்சத்தை அக்னி வரை இழுத்துக் கொண்டு செல்கிறது இந்த வாயு. இதில்தான் மொத்தப் பிரபஞ்சமும், அதன் இயக்கமும் நடைபெறுகின்றன.
 
பராவஹன் சென்று கொண்டிருப்பதால் அதில் பயணிக்கும் பிரபஞ்சங்களும் அது செல்லும் திக்கிலே செல்கின்றன! இது சுழல் பாதை என்று பிரபஞ்சவியல் கூறுகிறது.

எப்படி இது சுழல் பாதை என்பதை இன்றைய அறிவியல் மூலமாகவும் சொல்லலாம். இங்கே வேலை செய்வது Centripetal force போன்ற சக்தி.

 
centripetal-forceஇந்தப் படத்தில் உள்ள நபர் போல் இறைவனை அச்சாக உருவகிக்கலாம். நடுவில் நிற்கும் நபர் ஆதாரமான அச்சு போன்றவர். அவரது கையில் தான் சுழற்றுகின்ற வலிமையையும் ஆதாரமும் இருக்கிறது. அவர் கயிற்றைச் சுழற்றும் போது அது வட்டப் பாதையில் சுழல்கிறது. சுழற்றும் கயிற்றின் நுனியில் இருப்பது அண்டங்கள். இந்த அமைப்பை பிரம்மச் சக்கரம் என்றும் அதில் உள்ள ஆரங்கள் (spokes) என்று பலவற்றையும் உபநிடதங்கள் விவரிக்கின்றன.

நடுவில் உள்ள மைய சக்திக்கு செங்குத்தாக உள்ள ஆரங்களில் அண்டங்கள் என்னும் charged particle செல்லும்போது, பாதை வட்ட வடிவில் அமைகிறது. எனவே இடைவிடாது சுழலும் பிரம்மச் சக்கரத்தில் அண்டங்கள் அந்தச் சுழல் பாதையில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கின்றன.

இங்கேயும் ஒரு கேள்வி வருகிறது. ஆதார அச்சு இறைவன் என்று சுழற்றும் அவன் சக்தியைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சுழலும் அண்டத்திற்கும் ஓர் உள்ளிடை சக்தி இருக்க வேண்டும். அது எங்கிருந்து வருகிறது?

இதை விளக்க, குழந்தை பிறப்பில் நிகழ்வதை உதாரணமாகக் காட்டலாம்.
 
சிசேரியன் ஆபரேஷன் மூலமாகக் குழந்தை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வயிற்றைத் திறந்தாயிற்று. குழந்தை, கர்பப்பை நீரில் இன்னும் மூழ்கி இருக்கிறது. சில நேரங்களில், சிக்கலான பிரசவங்களில் பல நிமிடங்கள் திறக்கப்பட்ட வயிற்றில் குழந்தை இருக்கும். ஆனால் அக்குழந்தை பிறப்பது எப்போது என்று சொல்கிறோம்? சாதாரண பிரசவமானால் தலை தெரிவது, பூமியில் விழுவது, வெளிக் காற்று படுவது, அழுவது என்று பலரும் பல வித பதில்கள் வைத்திருப்பார். முடிவான பதில் என்ன என்று ஆராய்ந்தால், மூச்சு நிற்பது என்பது இறப்பு என்றால் மூச்சு ஆரம்பிப்பது பிறப்பு ஆகும். அந்தக் குழந்தையை வெளியே எடுத்து, அது அழ ஆரம்பித்தவுடன், காற்று நுரையீரலை அடைந்தவுடன் உயிர்க் கணக்கு ஆரம்பிக்கிறது.

இங்கே ஒன்றைப் பார்க்க வேண்டும். அக்குழந்தை வயிற்றைத் திறந்தும் பல நிமிடங்கள் இருந்ததே, அப்பொழுது உயிர் இல்லையா? அப்பொழுதும் அது ஜீவிதத்தில்தானே இருந்தது? ஆம். அதுவரை ஜீவிதத்தைத் தந்தது கொப்பூழ்க் கொடி! படைப்பு ஆரம்பிக்கும் வரை இறைவனின் கொப்பூழில் காப்பாற்றப்பட்ட பிரபஞ்சம் போல், அந்தக் குழந்தையும் தாயின் கொப்பூழ்க் கொடியின் மூலம் ஜீவிதத்தில்தான் இருந்தது. கொப்பூழைவிட்டுப் பிரிந்தவுடன் தோன்றும் பிரபஞ்சம் போல் அதுவும் பிறக்கிறது. அங்கேயும் ஜீவிதத்தை அதுவாக உண்டாக்கிக் கொள்ளவில்லை. வெளியில் இருந்த காற்று (ப்ரவஹன்) கொப்பூழ் தந்த சத்துக்கு ஒரு substitute ஆக ஜீவிதத்தைத் தருகிறது.

koppoozh thaamaraiபிரபஞ்சப் படைப்பில், கருவறையில் இருக்கும் வரை இறைவன். வெளியில் வந்தவுடன் வாயு தேவன்! இறைவனின் கொப்பூழ் தந்த ஜீவிதத்தைத் தருவதால், காற்றும் ப்ரத்யக்ஷ பிரம்மம் ஆகிறது. காற்றை கண்ணுக்குத் தெரிந்த கடவுள் அல்லது பிரம்மம் என்கிறோம். இதை எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம், பரம்பொருள் திருமாலாகப் பாம்பணையில் படுத்துக்கொண்டு, கொப்பூழ் கொடி வெளிப்பட, அதில் முதல் பிறப்பாக நான்முகப் பிரம்மனைக் காட்டுகிறார். அந்த பிரம்மன் தோன்றும் பிரபஞ்சத்தின் சுவாசம் போன்றவன். தோன்றும் பிரபஞ்சம் அவர் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது- மூச்சுக் காற்று நம் ஜீவிதத்தை நடத்துவது போல.

 
குழந்தையைப் போல, தோன்றும் பிரபஞ்சத்தின் அத்தனை படைப்புகளுமே இப்படி இறைவன் கருவிலும், கருவை விட்டு வெளியே இருக்கும் போது (தோன்றும் பிரபஞ்சத்தில்) அவனது மற்றொரு பிம்பமான பராவஹன் என்னும் வாயுவாலோ, அல்லது நாம் அறியாத ஏதோ ஒரு வஸ்துவினாலோ charged– ஆகப் போய்க் கொண்டிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

நாம், நமக்கு என்று எதுவும் இல்லை. இருப்பவை எல்லாம் அவன் உண்டாக்கி (கருவில் இருப்பதுபோல), அவன் உமிழ்ந்து (தோன்றும் பிரபஞ்சத்தில் பிறப்பித்து), அவன் நடத்திச் சென்று, அவனே அதை உள்வாங்கி என்றென்றும் பிரம்மச் சக்கரத்தில்- அந்தப் பிரம்மச் சக்கரம் அமைந்த தன் கர்ப்பத்தில் வைத்திருக்கிறான்.

இதிலிருந்து தெரியும் மற்ற வேத மதக் கருத்துகள்:-

  • அவனன்றி ஓரணுவும் அசையாது. அவன்தான் ஒவ்வொரு அசைவையும் செய்பவன். அவன்தான் பிரபஞ்சச் சக்கரத்தைச் சுழலச் செய்பவன். அதில் அண்டங்களைச் செலுத்துகிறவன. அங்கே நம்மையும் பிறப்பித்து, நம் ஜீவிதத்தையும் நடத்துபவன்.
  • பிறக்கும் முன் அவனில் நாம் நிலை பெற்றிருக்கிறோம். பிறந்த பின்னும், அவன் நம்முள் நிலை பெற்றும் (சுவாசக் காற்றாக), நம்மைச் செலுத்தியும், நமக்கு ஆதாரமான அடித் தளமாகவும் இருக்கிறான். நம்மை அவன் விடுவதில்லை – ஒழிக்க ஒழியாத உறவாக நமக்கும் அவனுக்கும் இருக்கிறது.
  • இந்த உறவை நாம் மறந்து விடலாம். அவன் மறப்பதில்லை. மறப்பது அவன் மரபணுவில் இல்லை எனலாம், அவனுக்கு மரபணு என்பவை இருந்தால்!!
  • நம்மை விடாமல் பிடித்துகொண்டிருப்பது அவன். அதனால நம்மைச் செம்மைப் படுத்தி எப்படியேனும் தன்னிடம் சேர்த்துக் கொண்டு விடுவான்.

மேல்சொன்ன உதாரண விளக்கத்தின் மூலம் தெரியும் மற்றொரு முக்கிய விஷயம் பித்ரு காரியம் ஏன் செய்ய வேண்டும் என்பது. ‘பெற்றோர் இறந்தவுடன் அவர்களுக்கு பித்ரு காரியம் செய்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியவா போகிறது? அது அவர்களை அடையப் போகிறதா என்ன? அதற்குப் பதிலாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டால் போதும். இறந்த பிறகு ஸ்ராத்தம் என்று சடங்குகள் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்யவில்லை என்றால் அதனால் நம் பிள்ளைகளையும், பேரன்களையும் பாதிக்கும் என்பதெல்லாம் சும்மா புருடா.’– இதுவே இன்றைக்குப் பரவலான கருத்து.

பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இங்கே கொடுக்கல்-வாங்கல் (give and take) என்னும் இயற்கையின் நியதி வருகிறது. அக்னி ஹோத்திரம் ஹோமத்திலும் இந்தக் கொடுக்கல்-வாங்கல் இருப்பதைக் காணலாம். நல்ல காற்றை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதற்குப் பதிலாக அசுத்தக் காற்றைத் திருப்பித் தருகிறோம். இங்கே இயற்கையின் சமன்பாடு (equilibrium) பாதிப்படைகிறது. திருப்பிக் கொடுத்த காற்றை சுத்தப்படுத்தவில்லை என்றால், நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கிடைப்பது அசுத்தக் காற்றுதான். அதைத் தவிர்க்க அக்னி ஹோத்திரம் செய்யப்படுகிறது.

அதைப் போல பெற்றோர் நமக்குச் செய்வதால் நாம் பட்ட கடனை, நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும். பெற்றோர் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அவரிடமிருந்து ஒன்றைப் பெற்றால் அதைத் திருப்பித் தர வேண்டும். இல்லை என்றால் நாம் கடன் பட்டவர்களாகி விடுவோம். கடன்பட்ட ஒருவனால், மற்றோருவனுக்குக் கடன் அளிக்க முடியாது. உயிருடன் உலவும் காலத்தில் யாரிடம் கடன் பட்டாலும், அந்தக் கடனைத் திருப்பித் தரவில்லை என்றால், வேறொரு பிறவியிலாவது அந்தக் கடனை அடைத்து விட முடியும்.

இவையெல்லாம் பிறந்தபிறகு – அதாவது வாழும் காலத்தில் நடப்பது.

ஆனால் பிறக்கும் முன் பட்ட கடனுக்கு நாம் எப்பொழுது, எப்படித் திருப்பி அடைக்கிறோம்?

pithru-karmaதாய், தந்தையரது செல்களின் ஒடுக்கத்தில் நுழைந்து பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்கிறோமே, அப்பொழுது கடன் படவில்லையா? அவர்களது மரபணு மூலமாக, ஐம்பூதங்களிளிருந்தும், சத்தினை இழுத்து நம் உடலை வளர்க்கிறோமே, அந்த ஐம்பூதங்களுக்கும் கடன் படவில்லையா? இழுக்கும் மூச்சுக் காற்றுக்கே, திருப்பித் தந்தால்தான் நம் வாழ்கை நோயற்று இருக்கும். பலப் பலவிதமான உடல் பகுதிகளுக்காக ஐம்பூதங்களிலிருந்து ஓயாது பத்து மாதங்கள் தேவையானவற்றை தாயின் கொப்பூழ் கொடி மூலமாகப் பெற்றிருக்கிறோமே, அது கடன் இல்லையா? அதை எப்படி, எப்பொழுது திருப்பித் தருகிறோம்?

அங்குதான் வேத மதத்தின் மிக உயர்த்த இயற்கை சமன்பாடு சிந்தனை தெரிகிறது. பிண்டமாக, உதகத்தில் (நீரில்) நிலைபெற்று கர்ப்பத்தில் நாம் பெற்றதை, உதகத்தில் பிண்டத்தை இணைத்து, பிண்டோதகக் கிரியையாக, யார் மூலமாகப் பெற்றோமோ, அவர் மூலமாக, அவர் நாம் பிறக்கும் முன் இருந்த நிலையை ஒத்த நிலையை இறப்பில் அடைந்தவுடன், திருப்பித் தருகிறோம்.
 
இங்கே கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் Medium பெற்றோர். கடன் பட்டது இயற்கைக்கு.
 
உதகத்தில், பிண்டம் வளரக் கடன் வாங்கினோம். பிண்டத்தை உதகத்தில் கரைத்து அதைத் திருப்பிச் செலுத்துகிறோம்.

நம் பெற்றோர், பாட்டன்கள், அவர்தம் பெற்றோர் என்று குறைந்தது மூன்று தலைமுறை வரை மரபணுவை கருவில் கடன் வாங்குகிறோம். அதன் அடிப்படையில் இயற்கையிலிருந்து நமக்குத் தேவையானதை எடுத்துக்கொள்கிறோம். அதைத் திருப்பித் தரவில்லை என்றால், நம்மிடம் உள்ள இருப்பு குறைந்து விடும். குறைந்த இருப்பிலிருந்து நம் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் எந்த அளவு எடுத்துக் கொள்ள முடியும்? சொத்து இருந்தால்தானே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியும்? கடன் வைத்திருந்தால் கடன் கொடுத்தவன் (இயற்கை) நம் பிள்ளைகளை விடுவானா? அல்லது அவர்கள் கடன் கேட்டால் கொடுப்பானா? இல்லையே! இயற்கை நமக்குத் தருவது நோயற்ற வாழ்வு. நாம் இயற்கைக்குக் கடன் பட்டால், நம் பிள்ளைகளுக்குக் தேவையான கடன் (நோயற்ற வாழ்வு) இயற்கையிலிருந்து கிடைக்காமல் போகும்.

மேலே கூறப்பட்ட சிசேரியன் குழந்தை உதாரணத்தைப் பாருங்கள். வயிற்றைத் திறந்தும், அது ஜீவிதத்தில் இருக்கிறது. அந்த ஜீவிதம் வளர இடம் தந்தது தாய் வயிறு. ஜீவிதம் பெற்றது அவள் கொப்பூழ் கொடி மூலமாக; அது அவள் இயற்கையிலிருந்து பெற்ற உணவு. இன்றைக்குப் பரிசோதனைக் குழாயில் கருவை உண்டாக்கினாலும், கரு வளர வேண்டியது தாயின் கர்ப்பத்தில். அதற்கு மாற்று என்றுமே வர இயலாது.

பெற்றோர் மூலமாக நாம் பஞ்ச பூதங்களுக்கும் பட்ட கடனை, தீவிர சிந்தனையுடன் (ஸ்ரத்தையுடன்) பிண்டம் வைத்து நீர் மூலமாகத் திருப்பித் தருகிறோம்.

பிரபஞ்சங்களை கர்ப்பத்தில் வைத்துள்ள இறைவனை இதே எண்ணத்தில் பாருங்கள். அவனுக்கும் நாம் கடன் படவில்லையா? நம்மை உருவாக்கி, பிறப்பித்து, கர்ம வினையை முடிக்க உதவி, இந்தக் கர்மச் சக்கரத்திலிருந்து விடுபட உதவுகிறானே, அவனுக்கு என்ன திருப்பிச் செய்கிறோம்?

அவன் எதிர்பார்க்க மாட்டான்; எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் சொல்லலாம். பெற்ற தாயும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் பிள்ளைகளான நமக்குக் கடமை உண்டல்லவா? அவளுக்கு ஏதேனும் செய்து அவளை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்ய வேண்டும்; நாம் செய்வதில் அவள் பெருமை அடைய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? அதைத்தான் கடவுளுக்கும் நாம் செய்ய வேண்டும். அவனை உயர்த்திப் பேசுவதில், புதிதாக அவனுக்குப் பெருமை வந்து விடுவதில்லை. அப்படிப் பேசுவது நமக்குத் தான் பெருமை- எப்படிப்பட்ட தாயை நான் அடைந்துள்ளேன் என்று பிள்ளைகள் பெருமிதத்துடன் சொல்வதைப் போல…..

(தொடரும்…)

54 Replies to “பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்”

  1. திரு ஜெயஸ்ரீ சாரநாதன்

    அற்புதமான தெளிவான கட்டுரை அதைவிட அருமை படங்களின் தேர்வும், விளக்கங்களும் மிகவும் எளிதாக பாமரனுக்கும் ஒர் அளவு புரியும் விதத்தில்
    கூறியுள்ளது. நமது முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்பதில் நான் தீவிர நம்பிக்கை உடையவன். எனவே ஆண்மிகத்தை பற்றி சில வெளிபாடன விஷயங்களை பற்றி தெளிவுறுவதுடன் நின்றுவிடுவேன். காரணம் மேலும் படிப்பதற்கு பொருமை இல்லை, புரிதல் கடினமாய் உள்ளது, அது தேவையில்லை என்ற அலஷ்சியபோக்கு வேறு . இப்படி பட்டவர்களையும் இழுத்து படிக்கவைத்துவிட்டடது உங்கள் கட்டுரை. பணி மேன் மேலும் தொடர இறைவனை வேண்டக்கொள்கிறேன்.

  2. Really Super!!! There is no word to praise you. God must bless you. Thank you for providing more valuable things. I wish you to continue this type of work for ever.

  3. ஜெயஸ்ரீ அவர்களே,

    மிக அற்புதமான கட்டுரைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். – பல ஆழ்ந்த கருத்துக்களை தெரிந்து கொண்டேன்

    ஒரு சிறிய கேள்வி – சர்வேஸ்வரனானவர் படுத்துக்கொண்டு கயிற்றை சுழற்றுகிறார் என்று கொள்ளலாமா? இப்படி வைத்துக்கொண்டால் அந்த வட்டப்பாதை அவரையே diameter ஆகா கொண்டிருக்கும் (அல்லது அவர் தன்னையே சுற்றிக்கொல்கிறார் என்றும் கொள்ளலாம்) – மேலும் குயவன் சுற்றும் போது ஏற்படும் வட்ட பிம்பங்களும் அவரது பிம்பக்காட்சியே என்றும் கொள்ள முடியும் – அவர் எங்கும் எப்படி பறந்து உளார் என்பததும் விளங்கிவிடும்

  4. Thirumathi Jayasree

    Thankyou very much for this informative, needed article.

    I read somewhere that Kanchi periyavar said the offerings reach our ancestors in whatever form they need them-like how money is sent thru a money exchange-like for eg., how dollars get converted to rupees when it reaches India.

    I am going to send this article link to people I know- I am sure they’ll realise the importance of thithi and do the needful if not for them but for their progeny.

    Thank you again
    Saravanan

  5. பின்னூட்டம் எழுதிய அனைவருக்கும் நன்றி.

    சாரங் அவர்களே:-
    இந்த சுற்றும் சக்கரம், நிறைய இடங்களில் சொல்லப்படுகிறது. To quote from memory, ஷ்வேதாச்வர உபநிஷத்தில் நிறைய தாத்பர்யங்களுடன் வருகிறது. சகஸ்ர நாமத்தில் வருகிறது. ஆனால் படுத்துக்கொண்டு சுற்றுகிறார் என்பது போல சொல்லப்படவில்லை. கடவுளை, இதுதான் அவரது posture என்று கட்டுப்படுத்திவிட முடியாது.
    நிறைய பாவங்கள் / கோலங்கள் அவருக்கு உண்டு – அந்தந்த இடத்துக்கு ஏற்றார்போல.
    படுத்துள்ள நிலையில் இன்னும் ஒரு முக்கியக் கருத்து உள்ளது. அதைப் பற்றி இனிவரும் கட்டுரைகளில் விளக்கம் இருக்கிறது.

    அவர் எங்கும் , எதிலும் பரவி உள்ள்ளார் என்பது அவர் கர்ப்பத்தில் எல்லாமே உள்ளன என்பதில் சொல்லப்படுகிறது. இன்னொரு விளக்கம் உங்களுக்கே தெரியும், அது கீதையில் வருவது.

    அவரே சுழல்வதுபோல என்று நினைக்க முடியவில்லை. தலை சுற்றாதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நாம் சுற்ற வேண்டும் என்று, அவருமா சுற்ற வேண்டும்? அலட்டிக்கொள்ளாமல் காரியம் செய்பவர் அவர். அதனால் இவர் சுழற்றுவார், அதில் அவரே இருப்பார் என்று சொல்வதுதான் உயர்வான நிலையாக இருக்கும்.

  6. Dear Mr V. Saravanan,

    Yes, what Kanchi Periyavaa has said can be further fine tuned with the help of Brahma sutras, Rig vedic hymns on Pithrus and Upanishads, particularly Chandokya.

    சுருக்கமாகச் சொல்வதென்றால், பெற்றோர், பாட்டன்- பாட்டி,
    முப்பாட்டன்-பாட்டி என்று மூன்று தலைமுறைகளிலிருந்து முறையே, physical (Bhoo tattwa), vital (bhuvah tattwa), mental (swah tattwa) என்று
    உடல் ரீதியானது,
    இரத்தம் போன்ற திரவ ரீதியானது,
    மனம் என்னும் அறிவு, மனநிலை ரீதியானது
    என்றவாறு மூன்று நிலைகளில் பெறுகிறோம்.
    மருத்துவ ஆராய்ச்சியிலும் இது தெரியவந்துள்ளது –

    அதாவது physical – உருவம் சம்பந்தமான எலும்பு போன்றவற்றின் அமைப்பு பெற்றோரை ஒட்டி அமைகிறது.

    இரத்தம், ஹார்மோன்கள் போன்றவை பாட்டன்மாரிடமிருந்து வருகிறது. உதாரணமாக, ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் வந்தால், அவரது பிள்ளைக்கு அந்த நோய் வரும் சாத்தியத்தை விட, பேரனுக்கு வரும் சாத்தியம் அதிகம்.

    மனநிலை சம்பந்தப்பட்டவை, அறிவு கூர்மை முதலியன, முப்பாட்டன்மாரிடமிருந்து வருகின்றன.

    அவர்களுக்கு பித்ரு காரியம் செய்யும்போது, இந்த மூன்று நிலைகளில் நாம் அவர்களிடமிருந்து பெற்றது, அவர்களைத் திரும்பி அடைகிறது.

    அவர்கள் மறு பிறவி எடுத்திருந்தாலும், அவர்களை அடைகிறது. உதாரணமாக மறு பிறவி எடுத்த முப்பாட்டனுக்கு, நாம் தரும் தர்ப்பணம், அவரது, அப்போதைய மனோ நிலையில் ஒரு செறிவைக் கூட்டித் தருகிறது. ஒரு செயலை எப்படிச் செய்வது என்ற தவிப்பில் அவர் அப்பொழுது இருந்தால், சட்டென்று ஒரு idea உதயமாகி மனம் சரியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

    இதுபோல பாட்டனுக்கு அவரது மறு பிறப்பில் ஒரு நோய் கண்டிருந்தால், நாம் தர்ப்பணம் செய்யும் போது, அவருக்கு அதிலிருந்து ஒரு நிவாரணம் கிடைக்கும்.

    பெற்றோர் இன்னும் பிறப்பெடுக்காமல் இருக்கலாம். நாம் கொடுக்கும் தர்ப்பணம், அவருக்கு credit போல ஆகி, அவர் மறு பிறவி எடுக்கும்போது உடல் வன்மையோடு பிறக்க உதவும்.

    நமக்கே எதிர்பாராத நேரங்களில், திடீரென, தன்னிச்சையாக ஒரு புத்துணர்வும், தெளிவும், உடல் துன்பம் நீங்குதலும் நடை பெறுவது உண்டு.
    காரண- காரிய முகமாக இயங்கும் இவ்வுலகில், இவை தானாக நடக்க முடியாது. சில நேரங்களில் நமக்குக் கடன் பட்ட, நம் முற்பிறவி சந்ததியர் செய்யும் நீர்க்கடன் நமக்கு உதவி இருக்கலாம்.

    இவை எப்படி நடக்கின்றன என்றும், அவை குறித்த பிற செய்திகளையும் இங்கே விளக்கியுள்ளேன்:-

    https://jayasreesaranathan.blogspot.com/2008/03/origins-of-tarpanam.html

  7. ஜெயஸ்ரீ அவர்களே

    தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி

    படுத்துக்கொண்டு சுற்றுவதாக எண்ணியது ஒரு கற்பனையே – அது சில கேள்விகளுக்கு விடை அள்ளிப்படாக நினைத்துக் கொண்டேன் – உங்கள் பதில் சரியாக அர்த்தம் கொள்ள உதவிற்று
    – படுத்துக்கொண்டு சுற்றும் posture என்பதற்கு பிரமாணம் இல்லை அதனால் இப்படி இருக்கும் என்று கட்டுப்படுத்த முடியாது மேலும்
    – இந்த கேள்விகளுக்கு வேறு விதமாகவும் விடை கண்டுகொள்ள முடியம் (ஹிரண்யகர்பன், சத்) என்பதால் ஒரு posture என்ற நிர்ணயம் தேவை இல்லை

  8. அருமையானக் கட்டுரை..

    ஆசிரியரிடம் ஒரு கேள்வி.. பிழையிருப்பின் மன்னிக்கவும்.

    // ..பிரபஞ்சங்களை கர்ப்பத்தில் வைத்துள்ள இறைவனை இதே எண்ணத்தில் பாருங்கள். அவனுக்கும் நாம் கடன் படவில்லையா? நம்மை உருவாக்கி, பிறப்பித்து, கர்ம வினையை முடிக்க உதவி, இந்தக் கர்மச் சக்கரத்திலிருந்து விடுபட உதவுகிறானே, அவனுக்கு என்ன திருப்பிச் செய்கிறோம்?… //

    நாம் ஏன், எப்போது, எவ்வாறு கர்மச்ச்சக்கரத்தில் அகப்பட்டோம்?.. இதன் காரணம் முன்வினைக்கர்மங்கள் என்றால், அந்த முன்வினைக் கர்மங்களை எதற்க்காக எந்த சந்தர்ப்பத்தில் செய்யத் தொடங்கினோம்? ஏனெனில் ஏதாவது ஒரு முன் தருணத்தில் நாம் கர்மங்களைச் செய்யத்தொடங்காமல், கர்மச்ச்சக்கரத்தில் அகப்படாமல் இருந்திருப்போம் அல்லவா?

    நன்றி..

  9. Srimathi Jayashree Saranath.

    It is explained nicely. to get the depth awaiting full article series. in a printed book(?)
    or if not i have to print and read in full again to get the depth of the same.

    Also please quote your references for the posts in the end of the post if possible, for us people like to continue reading further and discuss/debate also.

    Also i got your valubale analyses from your blog and google links.

    namaskaram

    sahridhayan

  10. ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே!
    தெளிவான சொற்களால் பின்னப்பட்ட அருமையான கட்டுரை.
    எனக்கு ஒரு சந்தேகம்.

    பித்ரு கடன் என்பதை ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மூத்த மகன்
    செய்வதாகவே பழக்கம் உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு மகள்
    இருப்பதாக வைத்து கொள்வோம் (இப்பொழுது ஒரு குழந்தைதானே
    பெற்று கொள்கிறார்கள்). அந்த மகளும் திருமணத்திற்கு பின் கோத்ரம்
    மாறி வேறு குடும்பத்தின் பித்ரு கடனில் சம்பந்த பட்டு விடுகிறாள்.

    அந்த மகளின் பெற்றோருக்கு பிண்டம் எங்கிருந்து கிடைக்கும்?
    இது ஒரு மதகுருமாரிடம் கேட்க வேண்டிய கேள்வி! இருந்தாலும் எனக்கு
    முக்கியமாக பட்டது. ஆகவே இங்கேயே கேட்டு விட்டேன்.

    பெண்ணுரிமைவாதிகள் இதை வைத்து அடுத்த கட்ட போராட்டத்தை
    ஆரம்பிக்க நானே காரணமாகவும் ஆகிவிட்டேன்.

  11. மிகச்சிறந்த கட்டுரை. மிக உயர்ந்த சிந்தனை. நன்றி.

  12. ஜெயஸ்ரீ அவர்களே

    பெரிய விஷயங்களை மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும்படி தந்துள்ளீர்கள்

    //அவர்களுக்கு பித்ரு காரியம் செய்யும்போது, இந்த மூன்று நிலைகளில் நாம் அவர்களிடமிருந்து பெற்றது, அவர்களைத் திரும்பி அடைகிறது//

    ஆஹா அருமையான விளக்கம். எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

    சுந்தரராஜன் சே

  13. பாலாஜி அவர்களைப் போலவே எனக்கும் ஒரு சந்தேகம். பெண்கள் கடன் படவில்லையா? அவர்கள் ஏன் பிண்டம் வைப்பதில்லை?

  14. லோகநாதன்
    >>>>>>>>அருமையானக் கட்டுரை..

    ஆசிரியரிடம் ஒரு கேள்வி.. பிழையிருப்பின் மன்னிக்கவும்.

    நாம் ஏன், எப்போது, எவ்வாறு கர்மச்ச்சக்கரத்தில் அகப்பட்டோம்?.. இதன் காரணம் முன்வினைக்கர்மங்கள் என்றால், அந்த முன்வினைக் கர்மங்களை எதற்க்காக எந்த சந்தர்ப்பத்தில் செய்யத் தொடங்கினோம்? ஏனெனில் ஏதாவது ஒரு முன் தருணத்தில் நாம் கர்மங்களைச் செய்யத்தொடங்காமல், கர்மச்ச்சக்கரத்தில் அகப்படாமல் இருந்திருப்போம் அல்லவா?<<<<<<<<<
    **************

    நன்றி.
    உங்கள் கேள்வியில் பிழை இல்லை. காலம் காலமாகக் கேட்கப்படும் கேள்வி இது.

    இந்தக் கர்மச் சக்கரம் ஆதி, அந்தம் இல்லாதது. From beginning less beginning காலம் தொட்டு இந்தக் கர்மச் சக்கரத்தில் நாம் சிக்கியுள்ளோம். இருந்தாலும், முக்தி அல்லது மோக்ஷம் என்று ஒரு நாள் விடுபட முடியும் என்னும் சாத்தியம் உள்ளதால், ஆரம்பம் என்பதும் வரையறுக்கத் தக்க ஒரு காலமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
    அந்த ஆரம்பம் பற்றி ஆச்சர்ய புருஷர்கள் கூறியுள்ளனர். இந்தக் கட்டுரையை செல்லும் ஒழுக்கில் அதுவும் சொல்லப்படும். சட்டென்று இது இப்படி என்று சொல்ல முடியவில்லை.

    இந்தக் கேள்வியைப் போல இன்னொரு முக்கியமான கேள்வியும் உள்ளது. அது – ஏன் இதையெல்லாம் இறைவன் செய்ய வேண்டும்? மோடிவ் என்ன? இதுவும் விளக்கப்படும்.

  15. @ sahridhayan

    Thanks for your comment.
    I have written the sources then and there, for my derived interpretations. Example :- how the manifest Universe is quarter part as shown in Nataraja’s figure. Nataraja’s dandava interpretation is my original, that I developed from an understanding of how Creation is explained in different contexts such as Nasadeeya sooktham of Rik Veda, purusha sooktham and Srimad Bhagavatham.

    Where I have not mentioned, know that they are commonly available ones. Eg:- Saptha vayu given in this article. It is explained in Bheeshma parva in Mahabahratha by Bheeshma , also available in Jyothisha siddhanthas like Siddhnatha Shiromani.

    This is not a planned series originally. The first article was an explanation for அடி -முடி காணா விஷயம் . After that, when I came across diverse opinions from readers, I decided to do some explanation on a spate of Hinduism- issues, using the Creation model which I derived from Hindu Thought.

    You wont find anywhere what I write here in this series on the Hindu model of Creation. This is not a work of a day or a month. This is what I have been imbibing right from my childhood, with an interest in diverse branches of knowledge and Hinduism. What I am presenting here is through a bird’s eye so that issues that look diverse and absurd will start looking meaningful. The end result I am looking for is that a common man must find Hinduism in its true splendor. Hope I succeed in achieving this.

    I am planning a series on Vedic model of Creation in my blog after I finish this series here. That will be in the nature of reaching to general audience than to be addressing the concerns of a Hindu.

  16. திரு பாலாஜி & armchaircritic

    நீங்கள் கேட்டுள்ளதில் இரண்டு கேள்விகள் வருகின்றன.
    * ஆண் சந்ததி இல்லா வீட்டில் மற்றும், பெண் குழந்தை விஷயத்திலும் எப்படி கடன் அடைகக்படுகிறது?
    * பெண்கள் பிண்டம் வைக்கலாமா?

    பதில்:-
    மூத்த மகன் செய்வது, தன் சகோதர, சகோதரிக்களுக்கும் சேர்த்தே செய்யப்படுகிறது. வருடாந்திர திதி செய்யும் பொது, அனைத்து மகன், மகளும் ஒன்றாகக் கூட வேண்டும். இந்தக் கடனை அடைப்பதில் மூத்தவனுக்கே பங்கு உள்ளதால், அவன் ஐங் குரவர்களுள் ஒருவனாக ஆகிறான். அவனுக்கு தந்தை ஸ்தானம். அவனுக்கே வீட்டுப் பொறுப்பும் கூட. சொத்து பாத்யதை etc etc. இந்த சிஸ்டம் இன்று மாறிவிட்டது.

    மூன்று தலைமுறைக்குச் செய்யப்படும் பித்ரு காரியம், மூன்று தலைமுறையிலும் தாய், தந்தை என்று இருவருக்குமே செய்யப்படுகிறது. பெண் விஷயத்தில் அவள் மகன் செய்கிறான். பெண்ணுக்குப் பிறந்த பிள்ளை, தன் தாய் (இந்தப் பெண்) இறந்தவுடன், அவளுக்குச் செய்யும்போது, முதல் தலைமுறை அவளுக்கும், பாட்டன் தலைமுறை என்று அவள் பெற்றோருக்கும் செய்வான். பெண் விஷயத்தில் அவளுக்குப் பிறக்கும் பிள்ளை மூலமாக இவ்வாறு கடன் அடையும்.

    பித்ரு காரியம் செய்ய மொத்தம் 35 பேருக்கு அதிகாரம் இருக்கிறது. அதில் முதல் அதிகாரம் மூத்த மகனுக்கு. அவர் இல்லை என்றால் அடுத்தது இவர் என்று இந்த லிஸ்ட் நீளுகிறது. அப்படி ஐந்தாவதாக வருபவர், மகனுக்குப் பிறந்த மகன் (பேரன்). ஒன்பதாவதாக வருவது மகள் வயிற்றுப் பிள்ளை. 12 ஆவதாக வருபவர் மனைவி!! ஆம். இந்த லிஸ்டில் மற்றவர்கள் இல்லாத நிலையில், மனைவி பித்ரு காரியம் செய்யலாம்.

    புறநானுறு 234 -இல் வேள் எவ்விக்கு, அவன் மனைவி பிண்டம் வைத்ததாக குறிப்பு வருகிறது.
    “தன்மனார் காதலி புன்மேல் வைத்த இச்சிறு பிண்டம்” என்று மனைவியைக் காதலி என்று சொல்லி, அவள் பிண்டம் வைத்ததாக வந்துள்ளது.

    தமிழர்களும் நூறு சதவீதம் வேத மரபை இந்த விஷயத்திலும் பின் பற்றி உள்ளனர். My article on this :-
    https://jayasreesaranathan.blogspot.com/2008/03/women-offering-pindam-tamils-followed.html

    மேலும் அறப்போர் புரிந்த அந்நாட்களில், பசு, பெண்டிர் ஆகிய பலரைக் கொல்லக் கூடாது. இந்த வரிசையில், இறந்தோருக்குச் செய்ய வேண்டிய பிண்டோதககிரியை செய்ய பிள்ளை பெறாதவர்களையும் கொல்லக் கூடாது. பஹுருளி ஆறு ஓடிய தமிழ்க் தேசத்தை ஆண்ட பாண்டியன் பல் யாக சாலை முது குடுமிப் பெரு வழுதி அவ்வாறு இருந்தான் என்று புறநானூறு 9 கூறுகிறது.

    ” தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இருக்கும்
    பொன் போல் புதல்வர் பெறாதீரும் ..”

    திருவள்ளுவரும் தென் புலத்தார் பற்றி சொல்லியிருப்பதைப் பலரும் அறிந்திருப்பர்.

    அது என்ன தென் புலம்? அடுத்த கட்டுரையில் விளக்கம் தருகிறேன்.

  17. பித்ரு காரியம் செய்ய யாருமே இல்லை என்றால், அந்த ஊர் அரசன் செய்யலாம் என்று ‘தர்ம சிந்து’ என்னும் தர்ம சாத்திர நூல் சொல்கிறது.
    ஏதோ ஒரு கோவில் தெய்வமே, தன பக்தனுக்கு திதி செய்கிறார். எந்தக் கோவில் என்று நினைவுக்கு வரவில்லை. சாரங் அவர்கள் எடுத்துக் கொடுப்பார் என்று நினைக்கிறேன்.

    வருடாந்திர திதி செய்ய யாருமே இல்லாமல் போனவர்களுக்கும், மற்றவர்கள் செய்யும் திதியில் ஒரு பங்கு கொடுக்கப்படுகிறது. தர்ப்பணம் செய்யும் போது இப்படி ஒரு மந்திரம் சொல்லி, யார் யார் எல்லாம் கடன் அடைக்கப்படவிலையோ அவர்களுக்கும் சென்று அடையட்டும் என்று தரப் படுகிறது. இதில் பிற மதத்தவர்களும் அடக்கம்.
    இப்படி உலக நன்மையையும், இயற்கைச் சமன் பாடும் சேர்ந்தது நமது மதம்.

  18. Chinna kelvi.. apart from yearly one what is the need of thithi in every amavasai ?.. can you give me proper link or mp3 download so that I can do that ammavasai thithi myself.. even when I go to temple and ask none of the preist are showing interest on that..

  19. அமாவாசை குறித்து –

    நான் கொடுத்த இணைப்பில் பித்ரு தர்ப்பணம் குறித்த எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கின்றன. .

  20. ஜெயஸ்ரீ அவர்களே

    எனக்கு அவ்வளவெல்லாம் அறிவு கிடையாது

    இந்த பிண்டம் வைக்கும் பகவான் மாயாபூர் கோபிநாத்.

    கோவிந்த கோஷரின்(சைதன்யா பிரபுவின் சிஷ்யர்) மகன் (மனைவியும்) இறந்துவிட்ட பின் – பகவான் கோபிநாத் கோஷரிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வார் அதாவது மகன் ஸ்தானத்தில் அவர் கோஷர்க்கு பிண்டம் வைப்பதாகவும், அதற்க்கு மாறாக தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கோஷர் நித்யம் பிரசாதம் செய்து தனக்கு கொடுக்க வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்

    இதில் யார் பாக்யசாலி என்றே சொல்ல முடியவில்லை

  21. திரு சாரங்,
    கண்டு பிடித்து விட்டேன்.
    அவர் உங்கள் பெயர் கொண்ட பெருமாள்.
    பக்தனுக்கு ஈமக் கிரியையும், வருடாந்திர திவசமும் செய்யும் பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் என்னும் ஆராவமுதன் ஆவார். நாராயண சுவாமி என்னும் தன பக்தனுக்கு இவ்வாறு செய்கிறார்.

    https://www.trsiyengar.com/id170.shtml

  22. ஜெயஸ்ரீ அவர்களே

    பகிர்ந்துகொண்டதற்கு நன்றி – இதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்

  23. செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் உள்ள நென்மேலி என்ற கிராமத்திலிருக்கும் பெருமாளும் தன் பக்தனுக்குப் பிண்டம் கொடுக்கிறார். இதைப் பற்றி திரு AMR அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் எழுதியிருந்தார்.இந்தக் கோயிலுக்குச் சென்று நானும் தரிசித்திருக்கிறேன்.

  24. ஜெயஸ்ரீ அவர்களே,

    Brih உபநிஷத்தில் யாஞவள்கரின் சொல்லும் நீங்கள் ஆய்வு செய்து எடுத்த முடிவும் ஒத்துப்போகிறது

    அவர் புவியில் இருந்து ஆரம்பித்து அனைத்தையும் வாயு தான் தாங்குகிறது என்கிறார், வாயுவை unmnifest ஆகாசமும், இந்த ஆகாசத்தை அக்ஷரமான சர்வேஸ்வரனும் தாங்குகிறான் என்று கார்கியின் கேள்விக்கு பதில் சொல்கிறார் – உங்களின் கட்டுரைகளை synthesize செய்து பார்த்தல் அவர் சொல்வது சரியாக வருகிறது – மேலும் பிரம்மத்தின் இரண்டு விதமான தோற்றங்கள் (அவயவங்கள் கூடின – ப்ரித்வி முதலியவை) – அவயவம் இல்லாத வாயு மற்றும் ஆகாசம் என்றும் brih உபநிஷத் கூறுகிறது

    யாஞவள்கர் அச்வலாவின் கேள்விக்கு பதில் கூறுகையில் உத்காதா சாக்ஷாத் வாயு என்கிறார் – நான் சாம வேதம் என்று கண்ணன் கூறுவது நினைவுக்கு வருகிறது – நான் வாயு மயமானவன் என்று சொல்வது போல் உள்ளது

    புஜ்யு ப்ராம்மனத்தில் – பரிக்ஷித்தின் பிள்ளைகளின் கதியை பற்றி கூறுகையில் – அவர்களை இந்திரன் வாயுவிடம் கொடுத்தான் – சமஷ்டி வாயு அவர்களை பிரம்ம லோகத்திற்கு கொண்டு சென்றான் என்கிறார் – இந்திரன் செல்ல இயலாத இடத்திற்கும் unevolved வாயு தான் செல்ல முடியும் என்கிறார் பிரம்ம லோகத்திற்கு மேல் வாயு சமஷ்டி வாயுவாகதான் இருக்கிறது என்பது ஒரு செய்தி – இவை அனைத்தும் உங்களின் ஆராய்ச்சியுடன் ஒத்துப் போகிறது

    உங்கள் கட்டுரை படித்த பின் தான் ப்ரிஹ் உபநிஷத் புரிகிறது – உங்களின் கடின ஆராய்ச்சியை மிக எளிய முறையில் புரிந்து கொள்ளும் படி எழுதி இருக்கிறீர்கள் – இதற்க்கு கைமாறே இல்லை

    மேலும் வேறு ஒரு பின்னூட்டத்தில் நீங்கள் ஜிஞாசு நிலையில் உள்ளதாக சொன்னீர்கள் – அப்போதே எனக்கு பட்டது நீங்களே இந்த நிலையில் என்றால் நானெல்லாம் முதல் நிலை கூட இல்லை என்று – காம்ய விஷயத்திர்காகவாவது ஒரு unflinching நம்பிக்கை இருக்க வேண்டும் அல்லவா – இருக்கிறதா இல்லையா என்ற நெருடல் மட்டுமே இருக்கிறது – எவ்வளவோ நம்பிக்கை வைத்தாலும் இல்லை உநிஷ்டம் என்று விட்டாலும் ஒரு distance இருந்து கொண்டுதான் இருக்கிறது. மிக நெடுந்தூர பயணம் இருக்கிறது. உங்களது கட்டுரைகள் இந்த பயணத்தை பற்றி பல புரிதல்கள தருகின்றன

  25. திரு சாரங், ரிஷி அவர்களுக்கு நன்றி.

    தெய்வமே முதல் பித்ரு காரியம் செய்தவர் என்று மகாபாரதம் (சாந்தி பர்வம்- 355 அத்தியாயம்) கூறுகிறது. நர-நாராயணர், நாரதருக்குச் சொல்வதாக இது வருகிறது.

    வராஹ அவதாரத்தில் பூமியைக் கடலிலிருந்து வெளியே கொண்டுவந்த போது, மத்தியானம் வந்து விட்டது. மத்யாநிஹம் செய்ய வேண்டி வராகர் ஆயத்தம் செய்த போது, தெற்றுப் பல்லில் கொஞ்சம் மண் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். தலையை ஆட்டி அவர் உதறின போது அவை மூன்று உருண்டைகளாக பூமிக்குத் தென்புறத்தில் போய் விழுந்தன. அவையே மூன்று தலைமுறை பித்ருக்களாக ஆகினர். அவர்களுக்கு வராகர் பிண்டம் வைத்து பித்ரு காரியம் செய்தார். பித்ரு காரியத்தை ஸ்தாபித்தவரும் அவர்தான். அதை நடத்தி உலகுக்கு வழி காட்டியரும் அவர்தான்.

    சரீரம் இல்லாதவர்களுக்குப் பிண்டம் தர வேண்டும் என்றும், பித்ருக்களுக்குத் தருவது தன்னையே அடைகிறது என்றும் (அவரே இயற்கை, எல்லாம் அவரிடமே சென்று சேர்க்கிறது) இன்ன பிற நலன்களையும் வராகர் எடுத்துரைத்தார்.

    இங்கே ஒரு விசேஷம் இருக்கிறது. இந்த ஒரு கதையிலேயே, வராகர், கோவிந்தர், வ்ருஷாகபி என்று மூன்று பெயருடன் தெய்வம் வருகிறது. ஒரே தெய்வம் ஒவ்வொரு செயல்பாட்டுடன் இணையும் போதும், ஒவ்வொரு பெயரைப் பெறுகிறது. ஒரே தெய்வம், பல தெய்வமாக இருப்பதைத் தெளிவு படுத்துவது இது.

    அதாவது, ஆதியில், பூமி எங்கிலும் நீர் நிறைந்திருந்த போது, நிலப் பகுதிகளை வெளியே கொண்டு வந்த அந்த இறை சக்தி, வராஹம் எனப்பட்டது.

    குகை போன்ற பூமிக்குள் நுழைந்து, அதை வெளியே கொண்டு வந்ததால் அந்த தெய்வம் கோவிந்தன் எனப்பட்டது. கோ என்றால் பூமி. அவிந்தம் என்றால் அதை அடைந்து வெளிக்கொணருதல் என்று பொருள். கோவிந்தா என்றால் இருளாகிய குகையிலிருந்து, நம்மை வெளிக் கொணருபவன் என்று பொருள்.

    பூமியை வெளியே கொண்டு வந்தவுடன் உலகத்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தர்மத்தை உபதேசிக்கவே அவர் வ்ரிஷாகபி எனப்படுகிறார். அவர் சொன்ன முதல் மற்றும் முக்கிய தர்மம் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்பதே.

    இன்றைய அறிவியல் பார்வையில் இதில் சில சுவாரசியமான சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆதியில் நிலப்பகுதி முழுவதும் நீருக்குள் மூழ்கி இருந்தது. பிறகு அது வெடித்துச் சிதறி வெளிக் கிளம்பியது. அந்தச் சிதறல்கள் அதீதமாக இருந்தன. மலைகள் எல்லாம் சிறகுகள் கொண்டு பறந்தன என்று மைனாக மலை அனுமனிடம் கூறுவது, இப்படி வெடித்துச் சிதறிய நிலையை ஒத்தது.

    முதல் சிதறலில், மூன்று பெரும் நிலப்பகுதிகள் பூமிக்கு வெளியே வெகு தூரத்தில் விழுந்திருக்கலாம். அது தென் பகுதியில் விழுந்திருக்கலாம். (தென் பகுதி பற்றி அடுத்த கட்டுரையில் வருகிறது.) பூமியைச் சேர்ந்த பகுதிகளாக இருக்கவே, அவை நம் முன்னோர் என்னும் பித்ருக்கள ஆயினர் என்று சொல்லலாம். அவை சரீரம் இல்லாமல் உள்ளன என்றும் வ்ருஷாகபி சொல்லவே, அங்கு ஸ்தூல சரீரம் இல்லாத ஜீவர்கள் வசிக்க ஏதுவானது எனலாம்.

    இங்கு வரும் அறிவியல் விஷயம் என்னவென்றால், பூமி வெடித்து, நில பாகங்கள் எங்கோ சிதறிவிட்டன என்று அறிவியலார் ஒத்துக் கொள்கின்றனர். பூமி வெடித்ததால் ஏற்பட்ட பெரும் பள்ளங்கள்தான் தற்சமயம் கடல் என்று ஆகியிருக்கிறது என்கின்றனர். பசிபிக் கடல் ஒரு பெரும் பள்ளமே.

    அப்படி வெடித்து வெளியேறின பாகம் நிலவாக இருக்கலாம் என்று ஒரு காலத்தில் நினைத்தனர். இல்லை என்று ருசுவாகிவிட்டது. அது செவ்வாய் கோளாக இருக்கலாமோ என்று நினைத்தனர். ஆனால் செவ்வாய் உருவில் பெரிது. அதனால் முடியாது என்று ஒத்துக் கொண்டனர்.

    இங்கே, நம் வேத மதம் கூறும் அறிவியலை வைத்து என்ன ஆகியிருக்கும் என்று ஊகித்துச் சொல்கிறேன்.

    செவ்வாய் கிரகம் ‘பௌமன்’ எனப்படுகிறது. அபப்டி என்றால் ‘பூமி புத்திரன்’ என்று பொருள். அதாவது பூமியிலிருந்து பிறந்தவன் என்று பொருள்.

    முதலில் பூமி முகப் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டும். அது உடைந்து அதிலிருந்து பிரிந்த பகுதி தனியே ஒரு பாதையைப் பிடித்து செய்வாய் கிரகம் என்றாகி இருக்க வேண்டும்.
    இந்த சிதறல் அக்னிக் கோளாக இருந்த ஆரம்ப நிலையில் நடந்திருக்க இருக்க வேண்டும். நிலப் பகுதி என்று திடப் பகுதி வராத காலம் அது. அக்னிக் கோளாக செவ்வாயும் இருந்திருக்க வேண்டும் – பூமி குளிர்ந்தார் போல், விரைவில் அது குளிர்ந்திருக்காது.

    செவ்வாயின் மேல்பகுதியில் iron oxide அதிகம். செவ்வாய், பூமியை விட பல காலம் எரிந்து கொண்டு இருந்திருந்தாலே இந்த விளைவு ஏற்படும். ஆனால் பூமியில் இரும்பானது, இரும்பு குழம்பாக உள் மத்தியில் சேர்ந்து விட்டது. பூமி சீக்கிரம் குளிர்ந்து விட்டது என்பதை இது காட்டுகிறது.

    வெடித்துச் சிதறின வேகம் அல்லது, வெடித்தப் பகுதியைப் பொறுத்து, அக்னி நீண்ட காலம் செவ்வாயில் இருந்திருக்கும். செவ்வாயை அக்னிக் கிரகமாகச் சொல்வதற்கு இதுவே காரணம். பூமியிலிருந்து தோன்றவே செவ்வாய் ‘பூமி புத்திரன்’ ஆனது.

    மேலை நாட்டவர் பூமியையும், வெள்ளி கிரகத்தையும் twin planets என்பர். ஆனால் நம்மைப் பொறுத்த வரை பூமியும், செவ்வாயும் twin planets – தாய் – புத்திரன் உறவு. இவை twin planets என்பதை அறிவியல் உலகம் இன்று ஒத்துக் கொண்டிருக்கிறது.

    புத்திரன் என்றதால், இந்தக் கிரகம் பித்ரு கிடையாது. வராகர் கதையில் வரும் பூமியை ஒத்த இயல்பு உடைய மூன்று பகுதிகள் வேறு எங்கோ இருக்க வேண்டும்.

  26. திரு ஜெயஸ்ரீ அவர்களுக்கு,
    சிறந்த கட்டுரை. நன்றி.
    திருமூலரின் திருமந்திரத்தில் (ஏழாம் தந்திரம்) கிரியை பற்றி பல பாடல்கள் உள்ளன.
    சோமசுந்தரம்

  27. திரு சாரங் அவர்களே,

    இந்த சப்த வாயு விஷயமும், பராவஹன் விஷயமும் அம்புப் படுக்கையில் இருந்தவாறு பீஷம்ர் கூறும் பல விஷயங்களில் ஒன்று. (பீஷ்ம – யுதிஷ்டிர சம்வாதத்தில் நிறைய விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளலாம்.) சப்த வாயு எல்லா ஜோதிட சித்தந்தங்களிலும் வருகிறது. இதைப் பற்றிய என்னுடைய பதிவு:-
    https://jayasreesaranathan.blogspot.com/2009/10/seven-types-of-air-currents_26.html

    ஸ்நானம் செய்வது பற்றி வரும் பண்டைய குறிப்புகளிலும் சப்த வாயு வருகிறது. மாற்றி உடுத்த வேறு வஸ்திரம் இல்லை, உடுத்திக் கொண்டு குளித்த வஸ்திரத்தையே மீண்டும் உபயோகப் படுத்த வேண்டும், ஆனால் ஈர வஸ்த்ரம் கொண்டு பூஜை செய்யக் கூடாது என்றால், அதற்கு ஒரு ஸ்லோகம் இருக்கிறது. அதைச் சொல்லி ஏழு முறை காற்றில் அந்த ஈர வஸ்திரத்தை உதறினால் அது உலர்ந்த வஸ்திரத்துக்கு ஒப்பாகும். சப்த வாயுக்கள் உலர்த்துகின்றன என்பது தாத்பர்யம். சப்த வாயுக்களும் நம்மைத் தழுவிக் கொண்டுதான் செல்கின்றன.

    ப்ரிஹதாரன்யாக உபநிஷத்திலிருந்து நீங்கள் எடுத்துக் கொடுத்தது சந்தோஷமாக இருக்கிறது. படைப்பு பற்றி ப்ரிஹதாரன்யாக, சந்தோக்ய, தைத்த்ரீய, ஐதரேய உபநிஷத்துக்களின் ஒன்றிய கலவையே நான் தரும் கருத்துக்கள். சாவித்திரி, பிரச்நோபநிஷத்தும் ஒரு இடத்தில் கொண்டு வருவேன். அவை வரும் இடங்களில் மூலம் என்று quote செய்கிறேன். இவற்றை எல்லாம் திருப்பித் திருப்பி மனதில் போட்டுப் புரட்டிக் கொண்டே இருந்தால், at some point of time, you will find things falling in place. எல்லாம் ஏதோ பின்னப்பட்டது போல கனெக்ஷன் தெரியும், அதைத் தான் நான் செய்கிறேன். இதெல்லாம் வெத்து என்று சொல்பவர்களும் உண்டு. அவர்களையும் பார்த்துள்ளேன்:)

    வாயுவைப் பற்றி சொல்லும்போது , வாயுவே ப்ரத்யக்ஷ பிரம்மம் என்பது தைத்த்ரீய உபநிஷத்
    (த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாசி)
    பிரம்மனுடைய First expansion is space – ஆகாசம். ஆகாசமும், வாயும் பிரம்மத்தை ஒத்தவை.
    பிரம்மத்தை விளக்குவதற்கு நிறைய ஒற்றுமைகள் இவற்றில் உள்ளன.
    அவை அடிப்படைகள் என்று சொல்லலாம்.

    இந்த விளக்கங்களில் பிரகிருதி பற்றி பேசும்போது அணுவையும், அண்டத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவற்றில் உள்ள ஒற்றுமைகள் மூலப் பிரக்ருதியில் இருக்கும். .

    புருஷன் ( ஜீவன் ) பற்றுப் பேசும்போது, தாய்- குழந்தை உறவை வைத்து ஆராயுங்கள். இவர்களுக்கிடையே உள்ள உறவு, பாசம், சண்டையும் கூட -என்ற வழியில் தெய்வத்துக்கும், நமக்கும் உள்ள உறவை ஒப்பிட்டு விளக்கலாம்.

    அப்புறம் இந்த ஜின்ஞாசு விஷயம். அது ஒண்ணும் அரிய விஷயம் அல்ல.
    எப்படி என்று சொல்ல இங்கும் தாய் அல்லது பெற்றோர் – குழந்தை உறவைக் கொண்டு சொல்லலாம்.

    இந்த உறவில் 4 stages உள்ளன – கீதாசாரியன் சொன்ன நால் வகை பக்தர்கள் போல.
    முதல் ஸ்டேஜில், குழந்தை தன அப்பாவைப் போல ஒருவர் இல்லை என்று நினைக்கும். அப்பாதான் superman. அவருக்கு எல்லாம் தெரியும் . எல்லாம் முடியும். அவருடன் சொல்லி விட்டால் எல்லாம் செய்து கொடுத்து விடுவார். பக்தனுக்கும் இது முதல் ஸ்டேஜ்.

    இரண்டாம் ஸ்டேஜில், குழந்தை கொஞ்சம் பெரியதாகி இருக்கும். அப்பாவிடம் சொன்னதெல்லாம் நடந்திருக்காது. தன்னாலும் எல்லாம் சாதிக்க முடியும் என்ற எண்ணங்கள் தூக்கலாக வந்து விடும். அப்பாவுக்கு என்ன தெரியும், அவர் என்ன கிழித்தார் என்றெல்லாம் சொல்லும் பருவம் பல வருடங்கள்.அப்பாவை மதிக்காமலும் போகலாம். கிருஷ்ணர் சொல்லும் முதல் இரண்டு வித பக்தர்கள், தாங்கள் வேண்டிக்கொண்டது நடக்கவில்லை என்றால் இப்படி நினைக்க சாத்தியம் உண்டு.

    இப்படிப் பல வருடங்கள் கழிந்த பின், வாழ்க்கையில் அடி பட்டு, அதனால் பண்பட்டு ஒரு ஞானம் வரும். அப்பொழுது நினைப்போம் அப்பாவைப் பற்றி. அவர் அருமையும் அப்பொழுது தெரியும். அவர் எப்படி வாழ்ந்தார், நம்மை வளர்த்தார் என்றெல்லாம் ஆச்சரியப் படுவோம். அவரைப் போல ஒருவர் உண்டா என்றும் நினைப்போம். அது மூன்றாவது ஸ்டேஜ். அதை நான் ஜின்ஞாசு என்பேன்.

    இந்த ஸ்டேஜில், அப்பாவிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எதிர்பார்த்து, ஆடி, அலைந்து, அலுத்து, ஒரு பக்குவம் வரும்போது, நாம் அப்பாவிடம் இதைத் தா அதைத் தா என்று கேட்டு நிற்க மாட்டோம். நமக்கே தெரியும், எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்க வேண்டாம். ஒன்று கிடைக்கவில்லை என்றால் ஏன் கிடைக்கவில்லை என்று புரிந்து கொள்ளும் பக்குவம் அப்பொழுது இருக்கும். அப்பொழுது அப்பாவிடம் – ஒன்றுமறியாத குழந்தையாக இருந்தபோது தோன்றியதே அந்த பிரமிப்பு இருக்கும். எப்படிப்பட்ட அப்பா, எவ்வளவு திறமையானவர். அவரளவுக்கு நம்மால் ஒன்றும் முடியவில்லை என்றெல்லாம் தோன்றும். அவரைப் பற்றி உயர்வாகப் பேசுவோம். அந்த நிலை ஜின்ஞாசு என்கிறேன்.

    அதற்கும் அப்பால், நன்கு வயது முதிர்ந்தவுடன், அப்பாவைப் பற்றி ஒன்றும் பேச மாட்டோம். ஆனால் ஒரு திருப்தி இருக்கும். அவர் பெரியவர். அவர் இருக்கிறார் என்பதே நமக்கு ஒரு தெம்பு. என்று நினைப்போம். நம் பிள்ளையே அவரைக் குறைவாகப் பேசினால், கண்டிப்போம் -உனக்குத் தெரியுமா அவரைப் பற்றி, தெரிஞ்சா பேசு. இல்ல சும்மா இரு என்று நம் பிள்ளையைக் கண்டிப்போம். அப்பா அதைக் கேட்டுக் கொண்டு புன்னகைத்துக் கொள்வார். இந்த ஸ்டேஜில் இருப்பவன் ஞானி நிலை.

    இந்தப் படிகளை கடக்க பல பிறவிகள் ஆகின்றன. இன்னும் பல பிறவிகள் செல்ல வேண்டும். ஆனால் இந்த உறவைப் புரிந்து கொண்டால் கடப்பது எளிது.

    கடைசியாக, ஒரு விஷயம்.
    இறைவன் மீது ‘நம்பிக்கை’ என்பது நம் மதத்தில் கிடையாது என்பது என் எண்ணம்.
    அதற்குப் பதிலாக ‘பற்றுதல்’ என்ற வார்த்தை இருக்கிறது.
    அவனைப் பற்றுங்கள் என்றுதான் பெரியோர் கூறியுள்ளனர். அவனை நம்புங்கள் என்று கூறவில்லை.
    நம்பிக்கை என்றால், ஒரு எதிர்பார்ப்பு வந்து விடும்.
    நிறைவேறவில்லை என்றால் ஏமாற்றம் வந்துவிடும், அதன்தொடர்பாக கேள்விகளும், வெறுத்தலும் வந்து விடும்.

    ஆனால் பற்றுதலில், அவன் செய்வான் அல்லது செய்ய மாட்டான் என்ற சந்தேகங்கள் கிடையாது. அவனை நான் விட மாட்டேன். கஷ்டமோ, நஷ்டமோ அவன் தான் எனக்கு எல்லாம் என்ற உறுதி பற்றுதலில் உண்டு. இதைத்தான் நம் மதம் போதிக்கிறது.

    ‘அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் – மற்று
    அவள்தான் அருள் நினைந்து அழும் குழவி போல் இருந்தேனே”
    என்று ஆழ்வார் வித்துவக் கோட்டம்மானைப் பற்றி பாடியுள்ள குழந்தை நிலைதான் நமக்கு வேண்டும்.

  28. excellent article Mrs.Jayasree … There is no word to appreciate your talent.
    you have God’s blessings ..

    awaiting for your next article ..

    superbbbb…..

    thanks
    Krishna

  29. உங்கள் பதில்கள் மிக தெளிவாஹவும் , கருத்துடனும் இருக்கிறது
    நன்றி

  30. ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே!
    நல்ல விளக்கங்கள். கடைசியாக நம்பிக்கை என்பதற்கு பதில் பற்றுதல்
    என்பதை முன்னோர்கள் கூறியுள்ளதாக எழுதியுள்ளீர்கள்.

    தவறாக நினைத்து கொள்ளாதீர்கள். இது வைஷ்ணவ சம்பிரதாய தத்துவத்தை நோக்கி செல்வது போல் இருக்கிறது. பற்றுதல் என்பது
    கொஞ்சம் திவ்யபிரபந்த தத்துவத்தில் வருவது போல் உள்ளது. பக்தன்
    செய்வதற்கு ஒன்றுமில்லை. பகவானை பற்றிவிட்டால் போதும் என்று
    வரும் தத்துவம் போல உள்ளது.

    சிரத்தை அதாவது நம்பிக்கை என்பதை வைத்துதானே சிராத்தம் என்கிற பித்ரு காரியமே வந்திருக்கிறது. மனிதன் முதிர்ச்சி அடையாத ஆரம்ப காலகட்டத்தில் நம்பிக்கை என்பதே சரியான பதமாக இருக்கும்
    என்றே நினைக்கிறேன். வெள்ளைகாரர்கள் கூட Religion என்பதை
    Faith என்றுதானே அழைக்கிறார்கள். ஸாதன சதுஷ்டயம் என்பதிலும்
    சிரத்தை என்பது ஒரு தகுதியாக வருகிறது.

    நம்பிக்கையில் ஆரம்பித்து கடவுள் இருப்பில் சந்தேகமே இல்லை என்றவுடன் ஆழ்வார்கள் கூறும் பற்றுதல் நிலையை அடையலாம்
    என்பதில் சந்தேகம் இல்லை.

  31. ஜெயஸ்ரீ அவர்களே

    உங்களின் பொறுமையான பதிலிற்கு மிகவும் நன்றி

    இந்த நமோ பிரம்மனே நமோ வாயு, த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி என்பதை தினமும் ஷாந்தி மந்திரத்தில் சொல்லிக்கொண்டுதான் இருந்தேன் – நீங்கள் சொன்னபின் தான் சரியாக connect செய்ய முடிந்தது

    நான் சொல்லவந்த நம்பிக்கை – நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர் என்பதில் இந்த நம் என்று முழுமையான எண்ணம், அதன் ஆழமான புரிதல், அல்லது இது ஒழிக்க ஒழியாத உறவு என்று எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் எண்ணம்
    இந்த distance தான் கடினமாக இருக்கிறது – அப்பா என்பவர் ஒரு மகனுக்கு ஒழிக்க ஒழியாத உறவு என்ற எண்ணம் ஏற்பட்ட பின் தான் அப்பா நாம் கேட்பதேல்லாம் தருவார் என்ற எண்ணமே ஏற்படும் – அதற்க்கு அப்புறம் தான் ஜின்ஞாசு நிலை, ஞானி நிலை

    இதை தான் நான் சொல்ல வந்தேன்

    நீங்கள் நம்பிக்கை, பற்றுதல் பற்றி கூறிய கருத்து அழகாக உள்ளது – எனது ப்ரச்சனேயே இந்த பற்றுதல் எந்நேரமும் இருக்கிறதா இல்லையா , அதை எப்படி தெரிந்து கொள்வது என்பதுதான் – திருக்கண்ணமங்கை நம்பி போல வாழ வேண்டாம் – எண்ணம் மட்டுவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்ற வேதனை தான்

    இதற்க்கு மருந்தாக தான் உங்களின் கட்டுரைகள் உள்ளன – எளிதில் relate செய்துகொள்ள முடிகிறது – ஒழிக்க ஒழியாத உறவு எப்படி ஏற்படுகிறது என்று காண முடிகிறது (உண்மையிலேயே காண முடிகிறது)

  32. திரு பாலாஜி அவர்களே

    //
    கொஞ்சம் திவ்யபிரபந்த தத்துவத்தில் வருவது போல் உள்ளது. பக்தன்
    செய்வதற்கு ஒன்றுமில்லை. பகவானை பற்றிவிட்டால் போதும் என்று
    வரும் தத்துவம் போல உள்ளது.
    //

    //
    கொஞ்சம் திவ்யபிரபந்த தத்துவத்தில் வருவது போல் உள்ளது. பக்தன்
    செய்வதற்கு ஒன்றுமில்லை. பகவானை பற்றிவிட்டால் போதும் என்று
    வரும் தத்துவம் போல உள்ளது.
    //

    அரங்கத்தம்மான் திருக்கமல பாதம் வந்து என் கண்ணில் …..

    இங்கு வந்து என்பதை கவனியுங்கள் – ஆழ்வார் முயற்சி கூட செய்ய வில்லை தானாக பகவானின் பாதம் வந்து ஆட்கொண்டது என்று தான் சொல்கிறார்

    வைஷ்ணவ சம்ப்ரதாயம் – பகவானே நம்மை பற்றிக்கொள்வான் என்றுதான் கூறுகிறது அதனால் நாம் அவன் மீது பற்று வைப்பது என்பது exlusive வைணவ சம்பிரதாய விஷயம் ஆகாது – இதில் போய் சமயம் கொண்டுவர வேண்டாம்

    – நாம் அவனை பற்றுவது என்று சொல்வதாவது ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வைக்கும் அன்பு அல்லது நம்பிக்கை அல்லது சரணாகதி அல்லது ஞானம்

    ச்ரத்தை என்பதற்கு deep sincereity என்று தான் எனக்கு தெரிந்த அர்த்தம் – நான் unflinching நம்பிக்கை என்று சொன்னது ஒழிக்க ஒழியாத உறவு என்ற எண்ணம் ஏற்படும் நிலையை பற்றி தான்

  33. திரு பாலாஜி அவர்களே,

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
    சில விளக்கங்கள்…

    # சாதன சதுஷ்டயம் சொல்லும் சிரத்தை :-
    அறிவுக் களஞ்சியங்களான சித்தாந்தங்களுக்குள் நுழைய எனக்குத் தகுதியில்லை. Only fools tread where even angels fear to tread என்பது காரணம். என் சிற்றறிவுக்குத் தெரிவது என்ன என்றால், விவேகம், வைராக்கியம் என்பவற்றைத் தாண்டி, ஷட் சம்பத்தில் நான்கு படிகளைத் தாண்டி, மன சஞ்சலமல்லாத நிலை வரும்போதுதான் சிரத்தை ஆகிறது. அந்த இடத்தில் அது அசையாத பற்றுதல் என்னும் நிலையைக் காட்டுகிறது என்பதைக் கவனிக்கவும்.

    அசையாத நம்பிக்கை வந்து விட்டால் ஒரு பிரச்சினையும் இல்லையே. பற்றுதல் என்பது ‘அசையாத நம்பிக்கை’ எனலாம். நம்பிக்கை அதைவிட ஒருபடி குறைவு.
    நம்பிக்கை ஆட்டம் காணலாம்.
    அப்பொழுதெல்லாம், ‘கவலைபடாதீர்கள், நம்பினார் கெடுவதில்லை’ என்று ‘நம்பிக்கை’ கொடுக்கக் கூடிய நிலையில் இருப்பவர்கள் இறைவனைப் பற்றினவர்களாகத் தான் இருப்பார்கள்.

    சதுஷ்டயத்தில் முதல் படியிலேயே ‘விவேகம்’ என்று பகுத்து அறிந்தாகிவிடுகிறது. அதற்குப் பிறகுதான் சிரத்தை வருகிறது. ஆனால் இன்று நாம் சொல்லும் நம்பிக்கை என்பது அது வந்த பிறகுதான், அதற்கு சோதனையே வருகிறது. ஏனென்றால் இது இப்படித்தான் என்று முதலிலேயே ஆராய்ந்து அவனை அறிவதில்லை. வேண்டியது நடக்கிறது, அல்லது நடக்கவில்லை – நம் சிற்றறிவுக்குப் புரிகிறது அல்லது புலப்படவில்லை – என்பதன் அடிப்படையில் நம்பிக்கை இருப்பதும், ஆட்டம் காணுவதும் இன்று நடக்கிறது.

    # பற்றுதல் பற்றி:-
    பற்றுதல் என்பது வைஷ்ணவ சம்ப்ரதாயம் என்றால், பற்றுக பற்றற்றான் பற்றினை என்று வள்ளுவர் சொன்னது வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பற்றியதா? பிறவிப் பெரும் கடல் கடக்க இறைவன் அடி சேர வேண்டும் என்று அவர் சொன்னது சம்பிரதாயக் கருத்து என்று சுருக்கி விடலாமா?

    அங்கு என்ன விஷயம் என்று பார்க்கும் போது அவனைப் பற்றினால்தான் முன் சொன்ன நான்கு நிலைகளையும் (4 stages) கடந்து ஞானியாகி அவன் நிலை அடைய முடியும். நம்பிக்கை ஆரம்ப நிலை எனலாம். ஆனால் அதற்கும் முந்தின ஆரம்ப நிலையில், தாய்- குழந்தை உறவைப் பாருங்கள். சிறு குழந்தைக்கு நம்பிக்கை என்றெல்லாம் தெரியாது. எதுவென்றாலும் அம்மாவிடம் ஒட்டிக் கொள்ளும். முதலில் பற்றுதான் ஆரம்பிக்கிறது.

    நான் கொடுத்த மேற்கோள் பாடலைப் பாருங்கள். (எனக்குத் தெரிந்த பாடல்கள் ஆழ்வார் பாடல்களாக இருக்கவே, அவற்றை மேற்கோள் காட்டுகிறேன், ஆனால் அவற்றின் கருத்து Universal ஆனவை.
    நிச்சயம் நாயன்மார்கள் பாடல்களிலும் அப்படிப்பட்ட கருத்துக்கள் இருக்கும். தெய்வத்தை அடையும் நிலையைப் பற்றிப் பேசும் யாருமே அந்த Universal Thought அளவில் இருப்பார்கள். இங்கே பயன் படுத்தும் உதாரணமும் universal விஷயமாகத்தான் இருக்கிறது.)

    தாய் தன் குழந்தையின் மீது ஏதோ கோபத்தில் திட்டி, என் கிட்டே வராதே போ என்கிறாள். அந்தக் குழந்தை எங்கு போகும்? அவள் திட்டினாலும், அழுது கொண்டே அவளிடமே வந்து அவள் புடவைப் பிடித்துக் கொண்டு அழும். அவளை விட்டுப் போகாது.

    இங்கே அந்தக் குழந்தை கொண்டிருப்பது நம்பிக்கை அல்ல.
    அது கொண்டிருப்பது பற்றுதல், உன்னை விட்டால் எனக்கு வேறு கதியில்லை என்ற பாவம். இந்தக் குழந்தையின் மனோபாவம் தான் நமக்கும் வேண்டும் என்கிறேன்.

    அது நம்பிக்கை என்று சொன்னால், அந்தக் குழந்தை கிட்டே வராது. Value judgement பண்ணும். இந்த அம்மா என்ன இப்படி செய்கிறாள் என்று பதிலுக்குத் திட்டும். அமெரிக்கா போன்ற ஊர் குழந்தையாக இருந்தால் போல்லீசுக்குக் கம்ப்ளைண்டும் கொடுக்கலாம். அந்த உறவா நமக்கும், இறைவனுக்கும் இடையே வேண்டும்?

    பற்றுதல் அலல்து பாசம் என்று இருந்தால், ஏதோ அம்மாவுக்குப் பிடிக்காததை நாம் செய்து விட்டோம், அவள் திட்டுகிறாள் என்று கொஞ்சம் அழும்,. பிறகு மறந்தும் விடும்.

    அந்த அம்மாவை ஆய்வுக் கண்ணுடன் பார்க்கும்போது judgmental ஆகி விடுகிறது. நாம் அவளுக்கு ஏற்றால் போல் நடந்து கொண்டால் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்ற நோக்கு வந்து விடுகிறது. அவளால் நமக்கு ஏற்றாற்போல் செய்ய முடியவில்லை என்றால், அவளை நம்பி பிரயோஜனம் இல்லை என்று நம் கவனம் திசை திரும்பி விடுகிறது.

    நம்பிக்கை என்னும்போது, நான் நம்பினேன் நடக்கவில்லை என்ற crisis வந்து விடும். பற்றுதலில், உன்னை நம்பினேன், நடக்கவில்லை, ஆனாலும் நீயே கதி என்று உன்னையே பிடித்துக் கொண்டிருக்கிறேன். என்னைக் கை விடாதே என்ற பாவம் இருக்கும். நம் முன்னோர்களும், ஆசாரியர்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் கொண்டிருந்தது பற்று என்பது என் எண்ணம்.

    நம் போன்ற சாதாரண மக்களுக்கு நம்பிக்கை பிரதானமாகி, பிறகு அப்படி இப்படி என்று புரட்டிப் போட்டு, மூன்றாம், நான்காம் படிகளான ஜின்ஞாசு, ஞானி என்று போகிறது. மூன்று, நான்காம் படிகளில் நம்பிக்கை என்ற எண்ணமே கிடையாது. அங்கே பற்றுதல்தான்.
    யாராவது என்னை, கடவுளை ஏன் நம்புகிறீர்கள், ஏன் நம்ப வேண்டும் என்று கேட்டால், ‘என்ன கேள்வி இது ‘ என்று தோன்றும்.

    டென்சிங் அவர்கள் எவரெஸ்ட் சிகரத்தை எட்டி வந்தவுடன், பத்திரிக்கையாளர் ஒருவர் அவரைக் கேட்டார் –
    ‘இந்த மலை மீது ஏற வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?’

    டென்சிங் சொன்னார் -“Because the mountain is there.”

    அதுபோலத் தான் நம் பதிலும் இருக்க வேண்டும்.
    இறைவன் இருக்கிறான். அதற்கு மேலும் இல்லை, அதைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை. இதில் நம்பிக்கை எங்கே வருகிறது?

  34. ஜயஸ்ரீ அவர்களே

    வாயுவை போல காந்த சக்தியும் பரவி உள்ளது, அண்டத்தை தாங்குகிறது – இவைகளில் உள்ள தொடர்புகள் அல்லது வித்யாசங்கள் என்ன என்று கூறுங்களேன் – நீளா தேவிக்கும், ப்ரத்யக்ஷ பிரம்மத்திற்கும் உள்ள உறவை இதன் மூலம் விளக்க இயலுமா? இல்லை இதை வேறுவிதாமாக தான் அரந்து கொள்ள வேண்டுமா இதை நீங்கள் பின்னால் வரும் கட்டுரைகளில் கையாள போகிறீர்கள் என்றால் அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்

  35. திரு சாரங் அவர்களே.

    வாயுவையும், காந்த சக்தியையும் ஒரே தட்டில் வைக்க முடியாது.
    வாயு is life- giver. பிரபஞ்சத்தை இழுத்துச் செல்லும் சக்தி (பராவஹன்) என்பது வேதமதக் கருத்து.

    காந்த சக்தி என்பது பரிவஹனாக இருக்கலாம். எந்த சக்தி அண்டங்களுக்கு ஆதாரமோ அது பரிவஹன். புவி ஈர்ப்பு சக்தி எல்லாப் பொருளிலுமே – ஏன் நமக்கும் கூட இருக்கிறது. அண்டங்கள் ஒன்றுக்கொன்று ஒரு சமன்பாட்டில் இயங்க உதவுவது இந்த ஈர்ப்பு சக்தி. அது பரிவஹன் என்று சொல்லப்பட்டு இருக்கலாம்.

    வாயு= பராவஹன்
    காந்த சக்தி = பரிவஹன்
    என்றால் இவை ஒன்றே அல்ல.

    இங்கே நாம் சமன்பாடு என்பது தைத்த்ரீய ஸ்லோகத்தில் வரும் ‘ருதம்’
    ருதம் வதிஷ்யாமி என்று போற்றப்படுவது இயற்கையின் சமன்பாடு அல்லது equilibrium. சமன்பாட்டை வைத்துத்தான் பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த விதத்தை அடுத்த கட்டுரையில் விளக்கி உள்ளேன்.

    ********************
    ஷம்னோ மித்ர- ஸ்லோக்த்தையே அருமையாக graphic illustration செய்ய முடியும். அந்த நாளில் விளையாடுவார்களே தாயக் கட்டை கட்டம் அது போல வருகிறது. அதைப் பற்றி இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தெளிவு வந்தால் எழுதுவேன்.

    ***************
    ப்ரத்யக்ஷ பிரம்மம் என்று வாயுவைத்தான் சொல்லியுள்ளார்கள்.
    ஆகாசமும் பிரம்மம் என்று சொல்லபப்டுகிறது.
    எவை எல்லாம் ஒத்த உருவு, செயல்பாடு கொண்டனவோ, அவை எல்லாம் ஒத்த பெயரில் வழங்கப்படும். (சந்தோக்ய உபநிஷத் 8-14-1) இதை பிரம்ம சூதிரத்திலும் விளக்கியுள்ளனர்.

    இதன் விளக்கம் வேறொரு கட்டுரையில் எழுதி உள்ளேன். அதிலிருந்து:-

    “Any thing in creation starting from Brahman can be understood by some characteristic which is specific to it.
    The name by which it is understood is connected with its form and the works it does or it is associated with.

    For instance scriptures say that Akasha (sky) is Brahman.
    Brahman is Akasha and Akasha is Brahman.
    How?
    Akasha is vast and limitless like Brahman.
    It is without imperfections
    Nothing can stain it.
    It is seen to be within reach but it can not be reached.
    It always exists and a witness to all happenings in our life.
    It is within a pot (finite) (ghatakaasha)
    and also exists as infinite (mahaakaasha),
    like how Brahman exists within every being
    and also exists infinitely everywhere.

    It is because of all these –
    by name, by form and by the characteristic and works –
    Scriptures say that Akasha is Brahman.
    If we look at Akasha, we must think of Brahman.
    because Akasha is Brahman.
    That is the import of this.

    Chandogya says,
    “Verily, what is called ‘akasha’ is revealer of name and form.
    That within which they are is Brahman”

    *************
    நீளா தேவி விஷயம் வேறு.
    அவள் இருப்பது இரண்டு இடங்களில்தான். ஒன்று இந்த பூமியில், பூமிக்குத் தங்கையாக (நீளா தேவி கட்டுரையைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்)
    மற்றொன்று பரம பதத்தில் – தன பரிவாரங்களுடன் பகவான் சேவை சாதிக்கும்போது.
    எந்த கோவில்களிலெல்லாம் நீளா தேவியுடன் பெருமாள் கட்சி தருகிறாரோ, அது பரம பத திவ்ய சேவையாக வருகிறதைக் காணலாம்.

    நம்முடைய சூழலில் புரிந்து கொள்ள வேண்டுமானால், விஷ்ணு காயத்த்ரியைக் கொண்டு விளக்க முடியும்.
    எல்லா தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் உண்டு.
    அவை மூன்று வரிகளில் வரும்.
    முதல் வரியில், அந்த தெய்வத்தின் மேலான, முடிவான சொரூபமும், இரண்டாவது வரியில், அந்த தெய்வத்தின் further simplified manifestation உம, (அதை அறிந்தால்தான், முழு முதல் சொரூபத்தை அறிய, அடைய முடியும்)
    மூன்றாவது வரியில், நம் சூழலில் அந்த தெய்வம் இருக்கும் விதமும் சொல்லப்படுகிறது.

    உதாரணமாக விஷ்ணு காயத்ரி :-
    ஓம் நாராயணாய வித்மஹே
    வாசுதேவாய தீமஹீ
    தன்னோ விஷ்ணு ப்ரசோதயாது.

    முதல் வரி = நாராயணன் = The deity to be attained finally = அவன் ஏகம் = ஒருவன்

    இரண்டாம் வரி = வாசுதேவன் = intermediary = நாராயணனே இவனாக இருப்பவன் என்று அறிய வேண்டும் = இவன் இரண்டானவன் (ப்ருஹத் உபநிஷத்தில் பார்க்கலாம்) = பிரகிருதியில் புருஷனாக உறைபவன்

    மூன்றாம் வரி = விஷ்ணு = நமால் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியவன் நம்மைச் சுற்றி எங்கும் பரந்திருப்பவன் = மூன்றானவன் = பூ தேவி, ஸ்ரீ தேவி, நீளா தேவி

    இங்குதான் நீளா தேவி வருகிறாள்.
    அதாவது there is continuous simplification of Supreme Consciousness for the sake of our reaching out to Him.
    மூன்று தேவியர் சமேதரான விஷ்ணு யார் என்று தெரிந்து கொண்டால், அவனே வாசுதேவன் என்பது புரியும். வாசுதேவனைத் தெரிந்து கொண்டால், அவனே நாராயணன் என்று அறிவோம். அறிதல் என்பது அடைதல். Attaining Him.
    இதுதான் கான்செப்ட்.

    இதிலிருந்து நீளா தேவிக்கும் பிரம்மத்திற்கும் உள்ள உறவைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    மற்ற தெய்வங்களின் காயத்ரி மந்திரத்திலும் இந்த கான்செப்டை வைத்து – நாம் அடைய வேண்டிய தெய்வம் எது, அதை அடைய அந்த தெய்வத்தின் எந்த அடி மூலத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். மூன்று அடிகளில் வரும் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு தாத்பர்யம் உண்டு. அந்த தாத்பர்யமாக அனுபவ பூர்வமாக உணர வேண்டும் – அந்த ஏணியில் ஏற வேண்டும் என்றால்.

    சட்டென்று நினைவுக்கு வரும் காயத்த்ரிகள்,

    லக்ஷ்மி காயத்ரி :-
    ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே,
    விஷ்ணு பத்நீ சதீமஹீ
    தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாது

    ஸ்கந்த காயத்ரி :-
    ஓம் குமாராய வித்மஹே
    கார்த்திகேயாய தீமஹீ
    தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாது

    சுதர்ஷன காயத்ரி :-
    ஓம் சுதர்ஷனாய வித்மஹே
    மகா ஜ்வாலாய தீமஹீ
    தன்னோ சக்ரப் ப்ரசோதயாது

  36. ஜெயஸ்ரீ அவர்களே

    உங்களின் விரிவான விளக்கத்திற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    ஆகாசத்தை பற்றி பேசும் பொழுது யாஞவள்கர் பிரம்மம் என்பது enevolved ஆகாசம் என்று சொல்கிறார் – verlily bramman என்பது இங்கு ஒப்பிடாமல் அதே பிரம்மம் என்றுரைக்க்றார்
    ஆகாசம் as in sky என்பது பிரம்மத்துடன் ஒப்பிடப்படுவது – அதாவது அதன் விபுத்வத்தினால் – இது நியாய சாஸ்திரத்திலும் வருவது
    இப்படி தான் நான் புரிந்து வைத்திருந்தேன் – sky என்பதும் பிரம்மம் தான் என்று உள்ளதா.

    காயத்ரியை கொண்டு நீளா தேவியை விளக்கியது அழகாக இருந்தது

  37. திரு சாரங் அவர்களே,
    >>>sky என்பதும் பிரம்மம் தான் என்று உள்ளதா.<<

    இது பிரம்மம் என்று எதுவுமே கிடையாது . இருந்தால் அது பிரம்மம் ஆகாது. (neti slokas). நமக்குள்ள அறிவுக்கு, நம் எல்லைக்குட்பட்ட விஷயங்களில், நமக்குப் புரிய வேண்டி ஒப்புமை சொல்கிறேன். sky பிரம்மம் போன்றது என்பதும் இப்படியே.

  38. Shri Jayasri … i have a doubt , how the Hindu puranas supported that Earth is round and not a flat, even before science revealed that.
    in other words , tell me the evidences for round earth from puranaas.

    thanks in advance

    krishna

  39. >>>how the Hindu puranas supported that Earth is round and not a flat, even before science revealed that.
    in other words , tell me the evidences for round earth from puranaas.<<<<<

    They did not do any research and deduced from evidences. Most of what has been said is by intuition or through upadesa from their gurus. One rationale is that anyone in deep meditation of the Supreme Being will have a grasp of that Being whose body encompasses all the worlds and universes. In my reply to one of the articles, I have said how by knowing the nature of sand everything made from that can be understood, so also by knowing the nature of Brahman everything that sprang from it can be known.

  40. dear krishna,

    Why just about earth being round in shape –
    Vedas even reveal the fact that earth goes around the Sun and talks about equinoxes – however none of these will bear a direct mention – no mantra will say “Earth goes around the Sun and not the otherwise” – they will talk about Shri or the brauty of the day and Lakshmi or beauty of the starry space with moon-lit nights are your two spouses, O Purusha”

    “Gods as also the planets move ever shining gloriously in the starry sky ”

    Veda talks about sapta paridayah (seven concentric circles – seven orbits of planets around the SUN)

    now, the seers of the yore had no intention to reveal that earth goes around the Sun or the otherwise – it mattered little to them – they were focussed on Bramman and whatever is relevant from that perspective is what you will find in Vedas and Puranas.

    Atharva Veda says water has two constituents Prana vayu (oxygen) and other Vayu (hydrogen) – they did not bother to even name the other Vayu as it is immaterial to them

    the cosmos (andam) itself is perceived as an egg by the seers – you know egg isn’t flat

    What Shrimathi Jayashree is alluding to is – they were thinking about Bramman and in the process everything became known – the purpose was never to establish a useless fact – How does it really matter if one is round or square shaped – avaricious men who wanted to loot the world would have invented a ship that would travel over a sqaure

  41. Thank you very much Sri Jayasree and Sarang …
    why did i ask that Question is , i had a conversation with a non-hindu friend, their religion told world is flat , then that fact was broken by scientist , he argued with me like ” you said Hinduism is the oldest one and talks about everything , then tell me the evidence of this in Hinduism”.
    i told that even before Galileo invented the telescope and sceintists discovered the planets , hindu seers place those grahams in horoscope and able to predict the future even before 5000 years (actually before so many years).

    so many scientific inventions are based on hindu facts only.

  42. உலகில் ஒன்றைக் காட்டிலும் பிற உள்ளனவென்றால் அத்தகைய பிற எவற்றால் ஆயின என்னும் வினா எழும். ஒன்றுதான் உள்ளது எனில் காணப்படும் அனைத்தும் யாவன என்னும் வினவல் எழும். இவ்வினவல்கல்தாம் இன்னமும் விடைகாணப்படா வினாக்களாகும்.

    இதைவிளக்கத்தான் ஆதிசங்கரர் மிகத் துணிச்சலுடன் தமது வாதத்தை எடுத்துரைத்தார். அவ்வாதம், “ஒன்றுமட்டுமே உண்மையில் உள்ளது. எல்லையற்ற அவ்வாற்றலை சிறிய வல்லமை மட்டுமே உடைய, எல்லைக்குட்பட்ட, புலன்கள் பிடிக்க இயலாதன. எனவே புலன்களில் அகப்படுவன அந்த எல்லையற்றதின் மிகமிகச்சிறு பகுதியே என்பதால் பல இருப்பதாகத்தோற்றும் தோற்றமயக்கங்களே.

    மேலும், உலகில் காணும் அனைத்துமே இறைதத்வத்தின் பகுதிகளே ஆதலால் நான், நீவிர், பிற அனைத்துமே ப்ரஹ்மம் என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார்.

    இது ஒரு மிக வலிமை வாய்ந்த தியரி ஆகும். இது இன்னமும் இறுதிப் படுத்தப்படாத (not conclsively proved ) தியரியாக அனைத்துத் தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கக் காரணம் இதனைக் கணித,விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க இயலாமல் இருப்பதுதான். ஆயினும் இந்த தியரி வலியதாக இருக்கக் காரணம், இதற்கு மாற்றான வலிய தியரி இன்னமும் இறுதியாக்கப்படாததுதான்.

    பிறகு தோன்றிய இராமானுஜர் ஒரு தியரியை எடுத்துரைத்தார். அது, நாம் காணும் அசையும் அசையாப் பொருட்கள் எல்லாம் பொய்த் தோற்றங்களல்ல, அவை ஒரே இறைவனின் உடல்களே என்று. அதாவது, அனைத்தும் ஒரே இறைவனின் உடலே என்பதால், தம் உள்ளுறையும் இறைவனால் அனைத்தும் சமன்வயமாயின என்று.

    இந்த இரண்டு தியரிகளுக்கும் இடையே அடியேனால் மிகுந்த வேறுபாடு காணமுடியவில்லை. இரண்டுமே இறை தத்வத்தையும் உலகையும் மிக அழகாக விளக்கும் தத்வங்கள் என்பதில் ஐயமேயில்லை. இரண்டுமே இறைவன் ஒருவனே என்பதை ஐயம் அறவே கூறுகின்றன.

    இங்கு நான் முன்வைக்க விழைந்த கருத்துக்கள் என்னவெனில் எல்லாம் இறை தத்வமேயானால், இறைத்த்வங்களேயான இவை இறைவனுக்கே ஆற்றவேண்டிய கடமை என்னவாக இருக்க இயலும்? இறை தத்வங்களேயான இவை, தம்மைத்தாமே அறிய முயலவேண்டும் எனக்கூறுவது பகுத்தறிவிற்கு இசைந்ததுதானா? இவை அத்துணை எளிதில் விளக்கப்பட்டுவிடக்கூடிய ஒன்று அல்ல என்பது தெரிந்ததே. ஆயினும் அடியேன் இதை எழுப்பக்காரணம், இவ்வினாக்களுக்கு விடை காண முற்படுவதை விட்டுவிட்டு, ஏதோ, பிரபஞ்சம், தேவ கார்யம் பித்ருகார்யம், அவற்றிற்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கம் என என்று ஆராய்ந்துகொண்டு உள்ளோமா என்னும் ‘anxiety ‘ தான்!!

  43. முன்னோர் கடன் என்றால் என்ன? தென்புலத்தார் என்றால் யார் என்றெல்லாம் நான் பல பேரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் உங்கள் கட்டுரை – அதைத் தொடர்ந்து வந்த கேள்விகள், விளக்கங்கள், இது தொடர்பான பிற வலைப்பூக்கள் தகவல்களில் திரிந்த போது தான் என் கடன் என்ன என்பது விளங்கியது. தங்களுக்கும் கருத்துகள் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

  44. வணக்கம்
    எனது நீண்ட நாளைய சந்தேகத்தை முன் வைக்கிறேன்,
    ஜடாயுவுக்குத் தன் தந்தைக்குச் செய்வதைப் போன்று அந்திமக் காரியத்தைச் செய்கிறான் சக்கரவர்த்தித் திருமமன் (பித்ரு மேத விதினா)
    வாலி மறைந்தவுடன் அங்கதனை விட்டுச் செய்யச் சொல்கிறான்,
    இராவணனுக்கும் வீடணனை விட்டுச் செய்யச் சொல்கிறான். அவன்மறுக்கவே தானே செய்வேன் என்றும் கூறுகிறான், ஆனால் நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்ய கசிபுவைக் கொன்றவுடன் பிரகலாதனை விட்டு அந்த்யேஷ்டி செய்யச் சொன்னதாக எங்கும் நான் படிக்கவில்லை? ஏதாவது குறிப்பு அது பற்றி உள்ளதா? காரணம் அறிய விரும்புகிறேன்
    அன்புடன்
    நந்திதா

  45. நந்திதா அவர்களின் கேள்வியை பார்த்த பிறகு எனக்கு இன்னொரு கேள்வி எழும்புகிறது. எதிரியாக (இராவணன் மற்றும் வாலி)இருப்பினும் அவன் மாண்டபின் விஷ்ணுவின் அவதாரமான இராமன் மதிக்கிறான். அதே விஷ்ணுவின் அவதாரமான நரஸிம்மன் மாண்டவனின் குடலை எடுத்து மாலையிட்டு கொள்வது எவ்வாறு ந்யாயமாகும்?

    செந்தில்

  46. நமஸ்காரம்,
    பல உண்மைகளை இங்கே புரிந்துகொன்டேன்.தங்கள் ப்ளாக் ஏன் ஆங்கிலத்திலேயே உள்ளது.அதில் உள்ள விஷயங்கள் அனைத்தும் எனக்கு தமிழில் வேண்டுமே.தமிழிலும் அதை எழுதுங்கள்.சரி எனக்கு ஒரு கேள்வி

    1.ஜாதகத்தில் பித்ரு தோஷம்,நாக தோஷம்,புத்ர தோஷம்,பூர்வ ஜென்ம சாபம் இந்த 4ம் ஒன்றா? வெவ்வேறா? இது எதனால் ஏற்படுகிறது?இதை பற்றி விளக்கமுடியுமா?

  47. மிகவும் அவசியமான கருத்தினை தெரிவிதுள்ளுர்கள் அது ஒவவொரு தித்திக்கும் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்க பணிவுடன் வேண்டுகிறேன் மிகுந்த பணிவுடன்

  48. மதிப்பிற்குரிய ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களுக்கு,
    வணக்கம்.
    தங்கள் ’சித்திரையில் தொடங்கும் புது வருடம்’ தொடரை எனது முகநூல் முற்றம் குழுமத்தில் நண்பர் திரு அத்திப்பட்டு முரளிதரன் மறு பதிப்பாகச் செய்தபோதுதான் அதன் நுண்மையையும் உங்கள் ஆய்வின் உண்மைகளையும் அறிய முடிந்தேன்.
    மகிழ்ச்சி.
    உங்கள் கட்டுரைகளை எனது ‘இலக்கியப் பேழை’எனும் வலைப் பதிவிலும் எடுத்துப் பதிய விரும்புகிறேன்.அதற்கு அனுமதியும் உங்களைப் பற்றிய விவரங்களும் புகைப் படத்துடன் அனுப்பித்தந்தால் மகிழ்வேன்.

    எனது ’உலகத் தமிழர் மையம்’ வலைப்பதிவும் கிருஷ்ணன்பாலா கவிதைத் தளமும் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக் கணக்கான தமிழர்களால் விரும்பிப் படிக்கப் பட்டு வருகின்றன.

    தாங்களும் அங்கே வருகை தர அழைக்கின்றேன்.
    அவை: 1. https://krishnanbalaa.blogspot.com
    2. https;//ulagathamizharmaiyam.blogspot.com
    3. https://ilakkiyappezhai.blogspot.com

    உங்கள் எழுத்துப் பணி அற்புதமானது; தமிழருக்கு அவை பொக்கிஷங்கள்தாம். தகுதி வாய்ந்தோர் தேடி வருவார்கள்.

    அன்புடன்,
    கிருஷ்ணன்பாலா
    16.4.2012

  49. பித்ரு காரியம் செய்வது ஒரு நம்பிக்கை மட்டுமே. முன்னோருக்கு பிண்டம் வைப்பதால் அவர்களது கர்ம பலன் தீர்ந்துவிடும் என்பது இந்து சமய நம்பிக்கை. சமய சடங்குகள் எல்லாமே ஆன்மீக வளர்ச்சி அடையாத மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. எந்த மத சடங்கும் தேவை இல்லை என்பதுதான் உண்மையான ஆன்மிகம். மத சடங்குகளை பிடித்து கொண்டிருப்பது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவாது. உண்மையான ஆன்மீகவாதி மதவாதியாக இருக்க மாட்டார்.

  50. //ஜாதகத்தில் பித்ரு தோஷம்,நாக தோஷம்,புத்ர தோஷம்,பூர்வ ஜென்ம சாபம் இந்த 4ம் ஒன்றா? வெவ்வேறா? இது எதனால் ஏற்படுகிறது?இதை பற்றி விளக்கமுடியுமா?//

    தோஷம்,சாபம் என்பதெல்லாம் உண்மையில் கிடையாது. ஆனால் அது இருக்கிறது என்று நீங்கள் நம்பினால் அது “உங்களுக்கு” இருக்கும்.

  51. தமிழ் இந்து தளத்தில் வெளிவரும் பல அற்புதமான தொடர்களில் இந்த தொடரும் மிக முக்கிய இடம் பெறும்.

    திரு ஆர் பாலாஜி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு அமாவாசை தர்ப்பண மந்திரத்திலேயே பதில் உள்ளது.

    ” ஏஷாம் ந மாதா ந பிதா ந பந்து ந அன்ய கோத்ரினஹ –

    தே சர்வே திருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை குஷோதகைஹி-”

    இந்த மந்திரத்தின் பொருள் :

    யார் யாருக்கு – தாய் தந்தையர்- உற்றார் உறவினர்- தாயாதிகள் இல்லையோ – அந்த ஜீவன்கள் எல்லாம் நான் இந்த தரப்பை நுனி வழியாக விடும் எள்ளையும், தண்ணீரையும் ஏற்றுக்கொண்டு திருப்தி அடையட்டும் –

    வாரிசுகள் இல்லாதவர்களுக்கு எல்லோரும் தர்ப்பணம் செய்து அந்த ஆன்மாக்கள் திருப்தி செய்யப்படவேண்டும் என்ற அடிப்படை தத்துவத்திலேயே இந்த மந்திரத்தில் இந்த விஷயம் சேர்க்கப்பட்டுள்ளது. நமது இந்து மதம் என்பது ஆல் இன்க்லூசிவ் ஆகும். தர்ப்பணம் என்பது நமது மூதாதையர்களுக்கு மட்டும் அல்ல. நம் கோத்திரத்தை சேராத மற்ற கோத்திரங்களை சேர்ந்தவர்களுக்கும், நம் மதத்தை சேராத, பிற மதங்களை சேர்ந்த , அதாவது மனித இனத்தை சேர்ந்த அனைத்து ஜீவன்களையும் திருப்திப்படுத்தும் பொது மந்திரம் ஆகும்.

    அடுத்த கேள்வி :-

    ஆண் வாரிசு இல்லாமல் பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றவர்களுக்கு யார் தர்ப்பணம் செய்வார்கள் என்பது ?

    பெண் வயிற்றில் பிறந்த பேரன் தன்னுடைய தாய் தந்தையர் ஆகியோருக்கு தர்ப்பணம் செய்து வரும்போது அப்பா வழியில் அப்பா , தாத்தா ,. கொள்ளுத்தாத்தா ஆகிய மூன்று மூதாதையரையும் , அவர்கள் மூவரின் மனைவியர் பெயரையும் சொல்லி தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    அதே போலவே , பேரன் தன்னுடைய தாய் வழியில் , அம்மாவின் அப்பா ( maternal grandfather ) அம்மாவின் தந்தை வழி தாத்தா, அம்மாவின் தந்தை வழி கொள்ளுத்தாத்தா ஆகிய மூன்று மூதாதையரையும் , அவர்கள் மூவரின் மனைவியர் பெயரையும் சொல்லி தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    எனவே ஆண் குழந்தை இல்லாத பெற்றோருக்கு அவர்களின் மகள் வழி ஆண்வாரிசுகள் தர்ப்பணம் செய்துவிடுகிறார்கள்.

  52. Not exactly.

    For all people, it is not necessary to ascend the acme in anmeekam. Their lives won’t afford to devote fully to such pursuit of excellence in aanmeekam. Religion comes to their rescue and spoon-feed them in spiritual matters. In other words, they need not go deep into every aspect but just carry on what have been passed on to them as rituals and ceremonies that came out of the wisdom of the ancient men they believe in. In non-religious life, we do routine matters, like dress, eating, etc., without knowing who and why they all came to us. We trust what is passed and do them trusting in them and hoping them as best things in our interests. If you look closely, you will know the Hindu religion does not believer in //same size fits all//. It has segregated things: and everyone of us can take the ones we find comfortable with and pursue to our spiritual happiness. All can be happy in the religion. A poor illiterate man as well as a learned pundit – can both be at home in the religion – in their own unique way. It is well appreciated that this elastic nature of the Hindu religion is its most attractive feature

    If you consider the above reasoning, rather realities, the essay, its detailed explanations, and the readers queries, clarifications to the queries – are all in order.

  53. I am reminded why air was told next to akash in Taitreya Upanishad:

    ‘Akashath vayu: vayo agni:’

  54. ஐயா,
    மனிதன் 120 ஆண்டுகள் வாழ ( கலியுக ஆயுள்) கோள்கள் உதவுவதாக சோதிடத்தில் இருக்கிறது, ஆயினும் இக்கட்டுரையில் 100 ஆண்டுகள் என்று அறிய வருகிறது , இக்கட்டுரையிலும் கலியுக ஆயுளை ஒப்பிட்டு வெளிவந்திருக்கும் பட்சத்தில் கூடுதல் சிறப்பு பெற்றுயிருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து,
    மிக்க நன்றி,
    (கணேசன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *