ஒரு நதியின் நசிவு

கோள் நிலைதிரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை

4000-year-old-iron-age-settlement-unearthed-at-adichanallurஎன்கிறார் இளங்கோ அடிகள் காவேரியைக் குறித்து. காவேரியைப் போன்ற விஸ்தீரணமும் நீளமும் அகலமும் கிளையாறுகளும் இல்லாமல் போனாலும்கூட தென் தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியாக இருந்து வரும் நதி தாமிரவருணி. இந்த நதியின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. இதன் கரையில் கற்கால நாகரிகம் செழித்து வளர்ந்ததை ஆதிச்ச நல்லூர் என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். பொருநை ஆறு அல்லது தாமிரவருணி நதி, திருநெல்வேலியின் மேற்கே பாபநாசத்திற்கு மேலே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள பொதிகை மலையில் உற்பத்தியாகி, பல சிற்றாறுகளுடன் சேர்ந்து, தாமிரம் வரும் நீராக திருநெல்வேலி நகரை அடைந்து, அதன் பின்னே கிழக்கே ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல் போன்ற ஊர்களின் வழியாக, கிட்டத்தட்ட 125 கிலோமீட்டர்கள் ஓடி, திருச்செந்தூருக்கு அருகே உள்ள புன்னைக் காயல் என்ற இடம் அருகே கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று அல்லது ஒன்றே ஒன்று. இரண்டு பருவ மழைகளினாலும் நீரைப் பெறுவதால் இது வற்றாத நதியாக உள்ளது. தமிழ், சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு நதி. வேறு உருப்படியான தொழில்கள் இல்லாத திருநெல்வேலி மாவட்டத்தை நெற்களஞ்சியமாக ஆக்கும் நதி. பாலாறு, மணிமுத்தாறு, காரையாறு, சேர்வலாறு, வராக நதி, சித்தாறு, போன்ற பல கிளை நதிகள் இதில் கலக்கின்றன. ஓரளவுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்து மக்களின் தாகம் தீர்க்கும் நதி. இரண்டு மாவட்டங்களின் உயிரோட்டம். பல ஊர்களுக்கு ஒரே பிடிமானம், ஆத்மா, வாழ்க்கையின் ஒரு பகுதி, ஜீவநாடி. ஒரு காலத்தில் மாசு படாமலும், அழகாகவும் இருந்து கரைபுரண்டோடிய நதி. பத்தினிப் பெண்டிருக்காக ஒரு முறையும், அறநெறி தவறா அந்தணர்க்கு ஒரு முறையும், நீதி வழுவா மன்னருக்கு ஒரு முறையுமாக மாதம் மும்மாரிப் பொழிந்ததாகக் கூறப்படும் மழையினால் வற்றாமல் ஓடிய ஜீவநதி.

தாமிரவருணியின் தோற்றம் முதல் அது வங்காள விரிகுடாவில் கலக்கும் சங்கமம் வரை ஆழ்வார்களால் பாடப் பட்ட வைணவக் கோயில்களும், பல்வேறு சைவக் கோயில்களும் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு அமைந்திருக்கின்றன. தமிழையும் சமயத்தையும் வளர்த்த நதி. பசுமையும் குளிர்ச்சியும் நிறைந்த கழனிகளின் நடுவே இன்றும் நிமிர்ந்து நிற்கும் அக்கோயில்கள் ஆற்றின் கரையைத் தழுவிக் கொண்டு அமைந்திருக்கின்றன.

thamirabarani1எந்தவொரு நதியுமே வெறும் உயிரற்ற நீர் ஓடும் பாதை மட்டும் அல்ல. நதிகள் அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின், நாகரிகத்தின், பண்பாட்டின், கலைகளின் மூலாதாரமும் கூட. ஒரு நதியின் வரலாறு என்பது அந்தப் பிராந்தியத்தின் வரலாறு. ஆறுகள் தந்த செழுமையினாலும் வளத்தினாலும் அந்த வளம் தந்த சூழலினாலுமே கலைகளும் நாகரிகமும் செழித்து வளர்ந்தன. நதிக்கரைகளிலேயே உலகின் மாபெரும் மனித நாகரிகங்கள் உருவாயின. நாகரிகம் வளர, கலைகள் வளர்ந்தன; கலைகள் வளர ஆற்றின் கரைகளில் அந்த நதிகளை அளித்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கோயில்கள் வளர்ந்தன. இவ்வாறாக நதியின் வளத்தால் சமயங்களும் பக்தியும் கலைகளும் பண்பாடும் அவை உருவாக்கிய வரலாறும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க இயலா வண்ணம் இணைந்தே வளர்ந்தன. நதிகள், வனங்கள், மலைகள், நில வளங்கள், சமுத்திரங்கள் இல்லாவிட்டால் இந்த உலகம் இல்லை; உலகத்தின் மக்களும் இல்லை. இயற்கையே நம் வாழ்க்கையின் ஆதாரம். அப்படிப்பட்ட முக்கியமான இயற்கை வளமான நதி வளத்தை, நம் பாண்பாட்டின், கலைகளின் ஆதாரத்தை நாம் போற்றிப் பாதுகாக்கத் தவறி வருகிறோம். நதிகள் மட்டும் அல்ல, அவை வளர்த்த கலைகளையும், பண்பாட்டுச் சின்னங்களையும் நாம் எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதற்கு ஒரு சிறு உதாரணமே தாமிரவருணி நதியின் இன்றைய நிலை. இன்று தமிழ்நாட்டின் எந்தவொரு நதியை எடுத்துக் கொண்டாலும் எந்தவொரு நீர் ஆதாரத்தை, வன வளங்களை எடுத்துக் கொண்டாலும் இந்த அவல நிலைதான் நீள்கிறது.

முக்கியமாக தாமிரபரணி ஆற்று நீர் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பாசனத்திற்குப் பயன்பட்டு வந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள சுமார் நானூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டியது. ஆனால் அப்படி எல்லாம் தண்ணீர் ஓடிய ஆறு இப்போது பல மாதங்களில் மணல் மட்டுமே காட்சி தருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் ஆற்று மணலில் தோரியம் என்ற அரிய தனிமம் உள்ளது. மணல் எடுப்பதால் தோரியம் தாதுவும் அழிந்து வருகிறது.

sand-theft2ஓர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தாமிரவருணி நதிக்கரையோரமாகச் சென்றிருந்த பொழுது அந்த நதியின் படுகை முழுவதுமே கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. அதன் முழு நீளத்திலும் பல்வேறு இடங்களில் போர்க்கால அவசரத்துடன் மணலைத் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தாமிரவருணி ஓடும் பல இடங்களில் ஆற்று மணலை அரசாங்கமே தோண்டி விற்றுக் கொண்டிருந்தார்கள். பேர்தான் அரசாங்கம் தோண்டுகிறது என்றாலும் தோண்டும் பணியைச் செய்பவர்கள் தனியார்களே. ஒரு நாளைக்கு ஒரு தோண்டும் இடத்திலிருந்து மட்டும் 5000 லாரிகள் மணலை அள்ளிக் கொண்டு சென்றன. அவ்வளவு மணல் தேவைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் என்று இல்லை, தமிழ்நாட்டில்கூட கட்டிடப் பணிகள் எதுவும் நடப்பதில்லை. எல்லா மணல் லாரிகளும் கேரளாவுக்கு மணலைக் கொண்டு சென்றன. அங்கு அதை என்ன செய்கிறார்கள், யார் வாங்குகிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. கேரளா ஒன்றும் நீர்வளம், மணல்வளம் இல்லாத ஊர் இல்லை. ஆனால் அங்கே மணல் எடுப்பதைத் தடுக்க கடுமையான சட்டங்களும் அதைச் சரிவரப் பாதுகாக்கும் கெடுபிடிகளும் இருப்பதால், ஏமாளிகள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து அங்கே எடுத்துப்போய் ஏராளமான விலைக்கு விற்கப்படுகிறது.

sand-theft1தாமிரவருணி என்றாலே தாமிரம் வரும் நீர் என்று அர்த்தம். கனிம வளம் நிறைந்த மணல் அது. ஒரு லாரி லோடில் கிட்டத்தட்ட 5000 ரூபாய் எல்லா லஞ்சச் செலவுகளும் போக லாபம் மட்டும் கிட்டுகிறது என்றார்கள். நமக்கு வீட்டுத் தேவைக்கு வரும் லாரி லோடையும் இந்த லாரிகளையும் ஒப்பிடாதீர்கள். நம் வீட்டுக்கு வரும் லாரியைப் போன்று மூன்று மடங்கு மணல் கொள்ளக் கூடிய பத்து டயர்கள் கொண்ட டிப்பர் லாரிகள். ஆனால் அரசாங்கத்திற்குக் கணக்குக் காண்பிப்பதோ ஒரு சாதாரண லாரி லோடு மட்டுமே. குறிப்பிட்ட அளைவை விட பல மடங்கு அதிகமாக அள்ளுவதாகப் பலரும் குற்றம் சாட்டினார்கள். அள்ளிய மணல் அருகில் உள்ள பல காலியிடங்களில் குவித்து வைக்கப்பட்டு தேவைக்கேற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. மலைமலையாய் ஆற்று மணல் குவித்து வைக்கப் பட்டிருந்தன. 24 மணி நேரமும் மணல் அள்ளப்பட்டு ஆற்றுப் படுகை வெடிகுண்டுகளால் பறிக்கப்பட்ட ஈராக் போல குண்டும்குழியுமாக, கண்றாவியாகக் காட்சியளித்தன. பெரும் தோண்டும் இயந்திரங்கள் வைத்து ஆற்று மணல் அள்ளப் படுவதை சர்வ சாதாரணமாகக் காண முடிந்தது. இத்தனையாயிரம் லாரிகள் கிராமங்களுக்குள் ராட்சத்தனமாகச் சென்று கிராமத்தின் அமைதியை இரவு பகல் பாராமல் குலைத்தன. வீடுகளுக்குள் மண்வாரித் தூற்றின. சாலைகள் அனைத்தும் இதன் கனமும் போக்குவரத்தும் தாங்காமல் குண்டும் குழியுமாக மாறின. எங்கும் மணல் புழுதிப் புயலாக வீசியது. ஆற்று நீரும் மணலும் வற்றியதால் சுற்றியிருந்த பகுதிகளின் கிணறுகளும் வற்றத் தொடங்கின. இயற்கை தந்த செல்வத்தை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியினரும் அந்த ஊர்களின் செல்வாக்குள்ளவர்களும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்தனர். இதன் பாதிப்புகளைப் பற்றி மக்களும் கவலைப்படுவாதாயில்லை. எதிர்ததுக் கேள்வி எழுப்பிய ஒரு சிலரும் மர்மமான முறையில் இறந்து விட்டனர். இருபத்தினாலு மணி நேரமும் தொடர்ந்து அரசாங்க அனுமதியுடன், அரசியல் துணையுடன் தாமிரவருணி ஆற்றின் இயற்கை வளம், அதன் அழகு, எல்லாம் கற்பழிக்கப்பட்டதன் விளைவை இந்த முறை ஐந்து வருடங்கள் கழித்துச் சென்றபொழுது பூரணமாக உணர முடிந்தது. சேது சமுத்திரத் திட்டம் போட்டு கடல் மணலையே அள்ளியவர்கள் ஆற்று மணலையா சும்மா விடுவார்கள்? சுத்தமாகத் துடைத்து இனி எடுப்பதற்கு ஏதுமே இல்லையென்ற நிலையில் கொண்டு நிறுத்தி விட்டார்கள். இப்பொழுது ஒட்டுமொத்த நதி ஓடும் பாதையிலும் ஆற்று மணல் என்பதே இல்லாமல் போய் விட்டது.. இனி இந்த அளவு ஆற்று மணல் சேர பல நூறாண்டுகள் ஆகலாம். பல நூற்றாண்டுகளாக ஆறுகள் மலைகளை அரித்து அரித்து இயற்கையாகச் சேகரிக்கப்பட்ட ஆற்று மணல் அனைத்தும் ஒட்டு மொத்தமாகக் கொள்ளை போய் இன்று சகதிகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நதிகளின் நிலையும் இப்படித்தான் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

riverbathஇயந்திரம் எதையும் பயன்படுத்தாமல் மணலை வாரித்தான் எடுக்க வேண்டும். தரைமட்டத்திலிருந்து அரை மீட்டர் ஆழத்திற்குள் மட்டும்தான் மணல் எடுக்க வேண்டும். நீர் மட்ட அளவுக்குக் கீழ் மணல் எடுக்கக் கூடாது. குடிநீர்க் கிணறுகள் மற்றும் பம்புகளிலிருந்து 500 மீட்டருக்குத் தொலைவில்தான் மணல் எடுக்க வேண்டும்… என்று எக்கச்சக்கமான சட்டதிட்டங்கள் இருந்தாலும் அரசியல்வாதிகளின் பேராசையினால் தமிழ்நாட்டின் மிக அரிய ஓர் இயற்கை வளம் சில பத்தாண்டுகளுக்குள் மொத்தமாகக் கொள்ளை போயிருக்கிறது. முன்பு என் சிறு வயதில் தினமும் ஆற்றில் குளிக்கச் செல்தல் எங்களுக்குப் பேரானந்தம் தரும் ஒரு விளையாட்டாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு மைல் ஒன்றரை மைல் அகலத்திற்கு பரந்த வெண் மணற்பரப்பு இரண்டு புறமும் விரிந்து கிடக்க, கோடைக்காலங்களில் நடுவேயும், மழைக்காலங்களில் பொங்கிக் கரை கொள்ளாமலும் கடலை நோக்கி ஓடும் அந்த நதியைப் பரவசத்துடன் பல முறை கண்டு, குளித்து, அனுபவித்திருக்கிறேன். பெரிய கழிவுகள் எதுவும் ஆற்றில் கொட்டப்படாத பொற்காலம் அது. பௌளர்ணமி நிலவு நாள்களில் சித்திரான்னங்களுடன் ஆற்றில் குளித்து விளையாடி உணவருந்திச் சென்றிருந்த கனவுக் காலம் அது. நிலவு போன்ற வெண்ணிற மணற் பரப்புகளில் அலுப்பே தெரியாமல் காலையும் மாலையும் விளையாடிய விளையாட்டுக் காலம் அது. நீரில் இறங்கி விட்டால் நேரம் போவது தெரியாமல் பல மணி நேரங்கள் அலுப்பின்றி நீந்திக் களித்துக் கண்கள் சிவக்க வெளிவந்த கவலையற்ற பருவம் அது. வற்றாத ஜீவநதி அது. இந்த ஆறு அப்படி இருந்தது என்று இன்று யாராவது சொன்னால் பொய் சொல்கிறான், கனவுலகில் இருக்கிறான் என்று நினைத்து நம்ப மாட்டார்கள். ஆம் பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட அது ஒரு வாழும் நதியாகத்தான் இருந்தது. உண்மை; வெறும் கற்பனையில்லை.

கருவேலமரக் காடும் மணற்கொள்ளையும் பின்னே கழிவும்

sand-theft4மூன்று பெரும் அழிவுகள் இந்த ஆற்றின் வனப்பை, ஜீவனை இன்று அழித்து வருகின்றன. அவை அரசியல்வாதிகளின் பேராசையினால் விளைந்த மணல் கொள்ளையும் அரசாங்கத்தினரின் அலட்சியத்தினால் உருவான சீமக் கருவேல மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்பாடில்லாமல் ஆற்றினுள் விடப்படும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவு மற்றும் ப்ளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளும் ஆகும். இன்று மணல் களவு போய் வெறும் சேறும் சகதியுமாக பாழ்பட்டுக் குற்றுயிரும் குலையுருமாக, நானும் இருக்கிறேன் என்று களையிழந்து ஜீவனின்றிக் கிடக்கின்றது. ஆற்று மணல் கொள்ளை ஒருபுறம் என்றால் கட்டற்று ராட்சசன் போல வளர்ந்து நிற்கும் சீமைக் கருவேல மரங்கள் அந்த நதிக்கு மற்றொரு யமனாக வாய்த்திருக்கிறது. இந்த இரு பெரு நாசங்களையும் தவிர வழியில் உள்ள நகரங்கள் முழுவதிலும் பெருத்த மக்கள்தொகையின் அத்தனைக் கழிவுகளும் நதியில் கொட்டப்படுவது மற்றுமொரு சீர்கேடு. பல்லாயிரம் ஆண்டுகளாக செழிக்கச் செழிக்க உணவு உற்பத்தியின் ஆதாரமாக இருந்த நதி இன்று மற்றொரு கூவமாக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நதியின் பாதையில் பெரும்பான்மையான இடங்களில் ஆற்றின் அருகே சென்று பார்க்கவே முடியாத வண்ணம் சீமைக் கருவேல மரங்கள் அடர்த்தியாக ஆற்றங்கரைகளிலும் ஆற்றின் உள்ளேயும் வளர்ந்துள்ளன. முன்பெல்லாம் நெடுஞ்சாலையில் காரில் செல்லும் பொழுதே நதியின் ஓட்டத்தைப் பார்க்கலாம். இப்பொழுது சுத்தமாக அடர்ந்து வளர்ந்த சீமக் கருவேல முள்மரங்களும் பார்த்தீனியச் செடிகளும் பெரு வனமாக வளர்ந்து நதியை மறைத்து விடுகின்றன. அருகில் சென்றால் கூட ஆற்று நீரின் ஓட்டத்தைக் காண முடிவதில்லை. தண்ணீர் பெருக்கெடுத்துப் போகும்பொழுது அந்த மரங்கள் தண்ணீருக்கு அடியிலும் வளர்ந்து இருப்பதினால் யாரும் துணிந்து உள்ளே நீந்திக் கூட சென்று விட முடியாது. உடலைக் கீறிக் கிழித்து விடும்.

papanasam-agasthiyar-fallsதொடர்ந்து நடத்தப்பட்ட மணற் கொள்ளைகள் காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் பரந்து விரிந்த பெரும் மணற் பரப்பு இன்று காணக் கிடைப்பதில்லை. மணற் பரப்பு இல்லாத படியால் சகதியில் இறங்கி ஆற்றை நெருங்க வேண்டியுள்ளது. இப்படி சீமைக் கருவேல மரங்களும் சகதிகளும் கலக்கும் சாக்கடைகளும் சேர்ந்து இந்த நதியை பயன்படுத்த முடியாத ஒரு கூவம் போல மாற்றியுள்ளன. இந்த நதி மக்களின் வாழ்க்கையுடன் இயைந்த- அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வந்து அவர்களின் அன்றாடப் பயன்பாடுகளான குளிப்பதற்கும் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஆரோக்யமான பொழுதுபோக்குகளுக்கும் ஆதாரமாக இருந்த ஒரு நதி. நூறு கிலோமீட்டர்களுக்கும் அதிகமான நீளமுள்ள ஆற்றில் இன்று பல மைல் தூரம் சென்றாலே குளிப்பதற்கும் ஆற்றின் அருகே செல்வதற்கும் ஏற்ற ஒரு சில படித்துறைகளும் மணற்பாங்கான கரைகளும் காணக் கிட்டுகின்றன. நதியின் ஒட்டு மொத்த 150 கிமீ தூரத்திலும் ஒரு சில இடங்களில் மட்டுமே ஆற்றை அணுக முடிகிறது, மணற் கரைகள் காணக் கிட்டுகின்றன. அற்புதமான மேற்குத் தொடர்ச்சி பாபநாசம் மலைத் தொடரில் நதி தூய்மையாகவும் தன் இயற்கையான வனப்புடனும் தன் பயணத்தைத் துவக்கும் நதி கீழிறங்கி சமதளத்தில் ஊர்களின் நடுவே ஓடத் துவங்கும் பொழுதே அதனை மாசு படுத்தலும் அசிங்கப் படுத்தலும் துவங்கி விடுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் ஓடிக் கொண்டிருந்த இந்த ஒரே நதியும் இப்பொழுது மதுரையில் ஓடும் வைகை என்னும் சாக்கடை போல, சிங்காரச் சென்னையில் ஓடும் கூவம் என்னும் சாக்கடை போலச் சீரழிந்து போய் விடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.

தாமிரவருணிக் கரையில் இருந்த என் கிராமத்திற்குச் சென்றிருந்த பொழுது தினமும் ஆற்றிற்குப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். “இந்த ஊரில் அந்த ஆற்றின் பக்கமே இப்பொழுது யாரும் போவதில்லை. சகதியும், கருவேல முள் மரமும் நிறைந்திருக்கிறது. நீ வெகு தூரத்தில் இருந்து வந்திருக்கிறாய் ஒழுங்காய் ஊர் போய்ச் சேரும் வழியைப் பாரு,” என்று சொல்லி வைத்த மாதிரி பலரும் எச்சரித்தார்கள். வெள்ளம் வரும் காலத்தில் கூட கவலையின்றி குளிக்கச் சென்ற மக்கள் கூட இப்பொழுது இந்த ஆற்றின் அருகில் போவதில்லை. பேயைக் கண்டது போல பயந்து ஒதுங்குகிறார்கள்.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட, வீட்டில் குளிக்கும் ஆள்களை அரிதாகவே பார்க்க முடியும். ஆற்றிற்கோ ஆற்றில் இருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஒன்றிலோதான் அந்த ஊர் மக்கள் அனைவருமே குளிக்கச் செல்வார்கள். குளித்து விட்டு இடுப்பிலோ தோளிலோ ஒரு குட ஊற்று நீருடனும் ஈரம் சொட்டும் உடைகளுடனும் சாரிசாரியாக காலையும் மாலையும் மக்கள் வருவது சாதாரண நிகழ்வாக இருந்துகொண்டுதான் இருந்தது. இன்று ஆற்றிற்குக் குளிக்கவோ ஏன் பார்க்கக் கூடச் செல்ல முடியாத நிலை. முன்பெல்லாம் குடிநீருக்கும் கோயில் விக்ரகங்கள் திருமஞ்சனத்திற்கும் ஆற்றில் இருந்துதான் நீர் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆற்றில் துணிகளுடன் சென்றால் துணிகளை ஒருபுறம் துவைத்து வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மணலில் தோன்றி வைத்த இடங்களில் ஊற்று ஊறியிருக்க, குடத்துடன் கொண்டுசெல்லும் தாமிரப் பாத்திரத்தை வைத்து நீரை மொண்டு குடத்தை நிரப்பி விடுவார்கள். இப்பொழுது ஆற்றின் கரையில் மணலும் இல்லை; மணலில் யாரும் ஊற்று நீர் தோண்டுவாரும் இல்லை. எல்லாமே பழங்கனவாய் போனது. இப்பொழுதெல்லாம் வீட்டிற்கு முன்பாக பஞ்சாயத்துக் குழாய்களில் உப்பு நீரே ஊற்று நீர், குடிநீர் எல்லாமே. குழாயில் நீர் வராவிட்டாலும் யாரும் ஆற்றுக்கருகே ஒதுங்குவது கூடக் கிடையாது.

so-called-riverஎச்சரிக்கையையும் மீறி ஒரு நாள் வீட்டுக்கருகே ஓடும் வாய்க்காலிலும் மறுநாள் துணிந்து வீட்டில் இருந்து ஓர் அரைக் கிலோமீட்டர் தூரத்தில் ஓடும் ஆற்றுக்கும் சென்றிருந்தேன். கால்வாயில் பாசியும், பச்சையும் படர்ந்து பழுப்பும் பாசி நீலமும் கலந்த நீரில் எங்கு முள்செடிகள் இருக்கும் என்பதைக் கண்டு, விலக்கி, ஜாக்கிரதையாகக் குளிக்கிறார்கள். ஆற்றிற்கு போகும் வழி முழுக்க மலக் காடுகள்; எங்கும் கழிக்கப்பட்ட மனிதக் கழிவுகள், குப்பைகள் நிறைந்திருந்தன. மிகவும் ஜாக்கிரதையாகக் கால்பதித்து நடக்க வேண்டியிருந்தது. முள்ளு மரங்களின் ஊடாக முழங்கால் வரையிலான சகதிகலந்த நீரில் சற்று தூரம் நடந்த பின்னால் குளிப்பதற்கென்று கஷ்டப்பட்டு அடையாளம் கண்டுவைக்கப்பட்டிருந்த ஓர் இடத்தை அடைய முடிந்தது. அதுவரை வழுக்கி விழாமல் செல்வதே கடினமாக இருந்தது. நல்ல மழை தொடர்ந்து பெய்திருந்தமையினால் ஆறு முழுக்க கருநீலமான நீர் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான கிராமங்களின் கழிவுநீர்களையும், குப்பை, அசுத்தங்களையும், திருநெல்வேலி நகரத்தின் ஒட்டு மொத்த வீட்டு, வணிகக் கழிவுகளையும் தனக்குள் அடக்கி, ஒளித்து வைத்துக்கொண்டு மேலோட்டமாக கரும்பச்சையில் கள்ளத்தனமாக, ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’ என்பது போல போல நதி ஓடிக் கொண்டிருந்தது, தான் நடந்துவந்த பாதை முழுவதும் ஓர் அடி விடாமல் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு பாழ்பட்டு ஓடிய அந்த நதி. “ரோலிங் வாட்டர்(?!) கேதர் நோ மாஸ்” என்று சின்ன வயசில் படித்ததை நம்பித் துணிந்து கடவுள் மீது பாரத்தைப் போட்டு ஆற்றில் இறங்கி விட்டேன்.

காலுக்குக் கீழே வழவழப்பான்ன சகதியில் சிறிது தூரம் உள்ளே சென்ற பின், நறுநறுவென புது வெள்ளம் கொண்டு போட்டிருந்த- இன்னமும் களவு போகாமல் இருந்த- மேற்குத் தொடர்ச்சி மலைப்பாறைகளின் மணற் துகள்கள் கால்களில் பதிவது பேரானந்தமாக இருந்தது. ஒரு நிமிடம் அந்த ஆற்றில் கலந்திருக்கும் கோடிக்கனக்கான டன் கழிவுகளையும் சீரழிவுகளையும் மறந்து உள்ளே மூழ்கி அடி மணற் கண்டு அங்கேயே மூச்சடைத்து நின்றேன். அந்த இடத்தில் மட்டும் முள்ளு மரங்கள் இருக்காது என்றும் மணல் அள்ளும் பாதையாக இருந்தபடியால் முள் பயம் இல்லாமல் நீந்திக் குளிக்கலாம் என்றும் அடையாளம் காட்டியிருந்தார்கள். அந்த அளவுக்கு, அந்த நதியைத் தன் வாழ்க்கையின் ஓர் அங்கமாக நினைத்த உள்ளூர் மக்களே, அஞ்சி அருகே செல்லாத ஓர் ஆபத்தான இடமாக மாறிவிட்டிருந்தது அந்த நதி. பால் கொடுத்து வளர்த்த தாமிரவருணித் தாயை இன்று விஷம் கொடுக்க வைத்து விட்டிருக்கிறார்கள். ஆற்றில் இருந்து வெளியேறிய பின்னர் நண்பரிடம், “இப்பொழுதுதான் தாமிரவருணியில் குளித்து வெளியே வந்திருக்கிறேன்,” என்றேன். “அடடே, நான் தான் சொன்னேனே அதற்குள் இறங்க வேண்டாம் என்று. எதுக்கு ரிஸ்க் எடுத்தீர்கள்? பார்த்து, படை, சொறி, அரிப்பு, தோல்நோய் என்று எதுவும் வந்து விடப் போகிறது,” என்று பயங்காட்டினார். “இல்லை, எனக்கு எதுவும் தெரியவில்லை. பழைய நினைப்பில் ஆண்டவன்மேல் பாரத்தைப் போட்டு இறங்கி மூழ்கி விட்டேன்,” என்றேன். “சரி சரி வாழ்க்கையை வெறுத்து துணிந்திருக்கிறீர்கள். நான் என்ன சொல்வது? உங்கள் பாடு!” என்று விட்டுவிட்டார் அவர். அவர் சொன்னதையே நான் ஆற்றில் குளிக்கப் போனதைக் கேள்விப்பட்ட பல உறவினர்களும் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். ஒரு காலத்தில் அந்த ஆற்றில் குளிக்காத மக்கள் அந்த ஊரில் கிடையாது. இன்று அதே நதியைப் பயன்படுத்துவோர் அருகி வருகிறார்கள். அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்த ஒரு நதி ஆள்வோரின் சீரழிப்பால் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆற்றில் மனிதர்கள் இறங்காவிட்டாலும் கூட நிறைய பறவைகள் வந்திறங்கியிருந்தன. மணல் தோண்டி ஆங்காங்கே மேடுபள்ளங்களும் ஆற்றின் நடுவே பல திட்டுக்களும் அந்தத் திட்டுக்களில் முள் காடுகளும் அடர்ந்திருக்கின்றன. அந்தத் திட்டுக்களும் கழிவுகள் கொண்டு வரும் நதியும் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாறியுள்ளன. இவ்வளவு பறவைகளை அந்த ஆற்றில் நான் கண்டதேயில்லை. ஆற்றின் மறுகரையில் தூரத்தே திவ்ய தேசத் திருத்தலங்களும், ஸ்ரீவைகுண்டத்தின் ஓங்கி வளர்ந்து ஏஷியன் பெயிண்ட்டில் வண்ணமயமகாக கம்பீரமாக நின்ற போபுரமும் கோயிலின் நீண்ட காவி அடிக்கப் பட்டப் பிரகாரச் சுவர்களும் தூரத்துப் பசுமையின் நடுவே காட்சியளித்து, இந்த ஆற்றின் மாசும் ஒரு நாள் மாறும், இந்த நதியும் ஒரு நாள் புனிதமடையும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நதியால் தழுவப்பட்டு வரும் கோயில்கள் அமைதிச் சாட்சியாக நம்பிக்கையளித்தன.

இன்று நமக்கு வீட்டிற்குள் கார்ப்பொரேஷன் குழாய் வழியாக நதி நம்மைத் தேடி வந்து விடலாம். நாம் போய்த் தேடிச்சென்று நீந்திக் குளிப்பதற்கும் குடிநீர் கொள்வதற்கும் நமக்கு நதி தேவையில்லாமல் இருக்கலாம். ஆனாலும் நதி வளமாகவும் தூய்மையாகவும் இருந்தால்தான் அதன் கரைகளில் வாழும் மனிதனும் ஆரோக்யமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியும். நதி நசிந்தால் நாகரிகம் நசிக்கும்; கலை நசிக்கும்; மனிதம் நசிக்கும். மேற்கத்திய நாடுகளில் உள்ள நதிகள் அன்றாட மனிதப் பயன்பாட்டுக்கு உரியவை அல்ல. இருந்தாலும் அவைப் போற்றிப் பாதுகாக்கப் படுகின்றன. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் ஆறுகளை நாம் குளித்து அனுபவிக்க முடியாது. அதன் பாதையில் உருவாகும் அருவிகளும் ஓடைகளும் கண்களுக்கு ரம்யமான காட்சிகளுக்காக உள்ளவை மட்டுமே. ஆனால் நமது நதிகள் நம் பண்பாட்டின் ஒரு பகுதி. நம் ஊனிலும் உணர்விலும் கலந்து ஓடும் ஓர் அங்கம். நம் நதிகள் நமக்குத் தெய்வங்கள். இயற்கையைத் தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் பண்பாட்டுச் சின்னங்கள். நதிக்கரைகளையும் கடவுள்களையும் நம்மால் பிரிக்க முடியாது. வடக்கே இமய மலையின் கங்கை முதல் தெற்கே குமரி முனையின் நதிகள் வரை நம் கலாசாரத்தில், நம் பாரதப் பண்பாட்டில், நதிகள் என்றால் புனிதமானவை; வணக்கத்துக்குரியவை. நதி நம் தாய்; நம் கடவுள். நதி நம் வாழ்க்கையின் ஆதாரம். பாரதம் முழுவதையும் இணைக்கும் இந்துப் பண்பாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று நதி வழிபாடு. ஆறுகளை நாம் தாயாக, தேவியின் வடிவாக நினைத்து அல்லவா வணங்கி வருகிறோம். இயற்கையின் ஒப்பற்ற வரங்களில் ஒன்றை, பல்லாயிரக்கணக்கான நம் இந்துப் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றை நாம் என்றிலிருந்து அசிங்கப்படுத்த ஆரம்பித்தோம்? தாயாக வணங்கிய நதியை நாம் நச்சு நீராக மாற்றிய அலட்சியம் எங்கு எப்போது துவங்கியது? எப்படி நாம் நம் வணங்கிய கடவுளை அழிக்கத் துணிந்தோம்?

waterpollutionஇயற்கையைக் கடவுளாக வழிபடுவது நம் பாரதப் பண்பாட்டின் அடிப்படைக் கூறு. கடவுள் பக்தி இருந்தவரை, நம்பிக்கை இருந்தவரை நாம் இயற்கையைப் போற்றி வணங்கிப் பாதுக்காக்கத் தவறவில்லை. என்று நம் நம்பிக்கையின் வேர்கள் அசைக்கப் பட்டனவோ, என்று திராவிட இயக்க, கிறிஸ்தவ மதமாற்ற விஷக் கிருமிகள் நம்மிடையே பரவத் தொடங்கியதோ அன்றிலிருந்து இயற்கையை இறைவனாக மதித்து வணங்கும் நம் வழக்கம் தளர ஆரம்பித்தது. நம் வீழ்ச்சியின் துவக்கம் அன்றிலிருந்து துவங்கியது. கடவுள் இல்லை, இயற்கையைக் கடவுளாக வழிபடுவது காட்டுமிராண்டித்தனம் என்று நமக்குக் கற்பிக்கப்பட்ட பொழுது, இயற்கையைக் கடவுளாக வழிபடும் நம் தொன்மையான வழக்கத்தில் இருந்து விலகி மெல்ல மெல்ல இயற்கையை ஒரு போகப் பொருளாக அனுபவிக்கத் துவங்கினோம். வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப் பட்டதோ, அன்றிலிருந்து இயற்கை வளங்களை பக்தியுடன் நாம் வணங்கிய, பாதுகாத்த உணர்வு மங்கி, அதை நம் சுயநலத்திற்காக அழிக்கத் தலைப்பட்டோம் அதன் விளைவே அழிந்து வரும் நதி வளங்கள். நாம் அழிப்பது நதிகளை அல்ல; நம்மையும் நம் சந்ததியினரின் எதிர்காலத்தையும் என்ற உணர்வை சினிமா மாயையில் மயங்கிக் கிடக்கும் நம் மக்கள் உணர வேண்டும். இயற்கையை வணங்கும் நம் முன்னோர்களின் தொல் நம்பிக்கை நம் மக்களிடம் மீட்டு எடுக்கப்பட வேண்டும். நம் தொன்மையான நம்பிக்கைகளையும் கலாசாரத்தையும் கேள்விக்குள்ளாக்கி மாற்றுவதன் மூலம் நமது இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது நம்மை ஆக்கிரமித்த பிரிட்டிஷாருக்கும் போர்ச்சூக்கீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் எளிதாக இருந்தது. அன்று வெள்ளைக்காரர்கள் பின்பற்றிய அதே உத்தியை கடந்த 45 ஆண்டுகளாக நம்மை ஆளும் திராவிடக் கட்சிகளும் பின்பற்றி, நம் நம்பிக்கைகளை நம் வழிபாட்டு முறைகளை நம் கலாசாரக் கூறுகளை கேலிக்குள்ளாக்கி, அதன்வழியே அவற்றை அழித்து அதன் விளைவாக நம் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்று நம் கலாசாரம் அழிக்கப் பட்டதோ அன்றே நம் வாழ்வாதாரங்களும் அழிக்கப்படும் என்பதை நம் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவதார் போன்ற திரைப்படங்கள் உணர்த்துவது இந்த எளிய உண்மையைத்தான். நம் நம்பிக்கைகள் அழிக்கப் பட்டதால் நம் நதிகள் அழிக்கப் பட்டன. நம் பண்பாடு அழிக்கப்பட்டால் நம் இயற்கை வளங்களும் சேர்ந்தே அழிக்கப் படும்; அதன் பிறகு நாம் இன்னும் ஆப்பிரிக்க மக்கள் அனுபவிக்க நேரும் கொடும் வறுமையையும் வறட்சியையுமே சந்திக்க நேரும். நம் கலாசாரத்தை, நம் பண்பாட்டை நம் இந்து தர்மம் கற்றுக் கொடுத்த அடிப்படைகளை நாம் மறந்தால் நாம் எல்லாவற்றையுமே அதனுடன் சேர்ந்து இழந்தவர்களாகிறோம், அதுவே நசித்து வரும் நம் காவேரியும், தாமிரவருணியும் இன்று நமக்கு உணர்த்தும் பாடங்கள். இனிமேலாவது, காலம் கடப்பதற்கு முன்னால் நம் மக்கள் இந்த விஷ சுழலில் இருந்து வெளியேற முயல வேண்டும்.

waterஇன்னும் நதி வற்றி விடவில்லைதான். இன்னும் நம்பிக்கையிருக்கிறது. என்றாவது நம் தேசத்தின் இயற்கை வளங்கள் மீதும் பாரம்பரியச் சின்னங்கள் மீதும் நம் மண்ணின் மீதும் அக்கறையுள்ள, தேசத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கம் இல்லாத ஓர் அரசாங்கம் அமையுமானால் நிச்சயமாக இந்த நதியை மீட்டெடுத்து விடலாம். அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் இந்த நதி முற்றிலுமாக மற்றொரு கூவமாக மாறி விடும் முன்னால் மீட்டெடுக்க வேண்டியது மிக மிக அவசரம். நதி உற்பத்தியாகும் இடத்தில் தொடங்கி கடலில் சேரும் சங்கமம் வரை ஆற்றின் கரைகளிலும் உள்ளேயும் உள்ள ஆக்கிரமிப்புகள், முள் செடிகள் அகற்றப் பட வேண்டும். மணற் கொள்ளை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். நதியில் சாக்கடைகளையும் கழிவுகளையும் கொண்டுசேர்ப்பது நிறுத்தப்பட வேண்டும். காட்டுச் செடிகளும், விஷக் கொடிகளும் நீக்கப்பட வேண்டும். நதி என்பது தோற்றத்தில் இருந்து, கடலில் கலக்கும் இடம் வரை, தூய்மையான நீராக, மக்கள் எந்தவித தயக்கமும் இன்றி பயன்படுத்தக் கூடிய ஓர் அளப்பரிய வளமாக, மீண்டும் ஒரு வாழும் நதியாக மாற்றப்பட வேண்டும். இந்தக் காரியங்களை ஓர் அரசாங்கத்தினால் மட்டுமே செய்ய முடியும். அதற்கான நிதி ஆதாரமும், அதிகாரமும் அரசிடம் மட்டுமே உண்டு. கலர் டி.வி-க்கு ஒதுக்கிய நிதியில் நூற்றில் ஒரு பங்கை, செம்மொழி மாநாடு என்ற பெயரில் தன்புகழ் பாடும் கவியரங்கங்கள் நடத்திக் கொண்ட கூத்திற்குச் செலவுசெய்த பணத்தில் ஒரு சிறிய பங்கை அரசாங்கம் ஒதுக்கினால் கூட அழிந்து வரும் நதிகளுக்கு உயிர்ப் பிச்சை வழங்க முடியும். இன்னமும் நேரம் இருக்கிறது. மனமும் பணமும் மட்டுமே வேண்டும். யார் செய்யப் போகிறார்கள்? எப்பொழுது செய்யப் போகிறார்கள்? இனி வரும் தமிழ்நாட்டு அரசியலில் இந்தக் கனவு நனவாகும் ஒரு காலம் இனி எப்பொழுதாவது நம் வாழ்நாளில் வருமா?

நம் சந்ததியினருக்கு நாம் விட்டுவிட்டுப் போகப்போவது என்ன?

43 Replies to “ஒரு நதியின் நசிவு”

  1. திருமலை, மிக நல்ல கட்டுரை எழுதி இருக்கிறீர்கள். இந்த நிலையில் நாம் செய்யக் கூடியது என்ன?

  2. கண்களில் நீர் வரவழைக்கும் கட்டுரை. இயற்கையை போகப் பொருளாக அனுபவிப்பதற்கும் கூட ஒரு வரையறை இல்லையா? மேலை நாட்டவர் நமது இயற்கை வளங்களை சூறையாடிவிட்டு பின் environmental degradation என்று நமக்கும் உலகத்துக்கும் பாடம் சொல்லி அதில் ஏதாவது “தொழில் நுட்பத்தை” நமக்கே விற்க வழியைப் பார்ப்பார்கள்.மக்களே விழித்துக் கொண்டால் மட்டுமே நிலைமை மாறும்.

  3. ”பாரில் இயற்கை படைத்ததையெல்லாம் பாவி மணிதன் பிரித்துவைத்தானே” இந்த கண்ணதாசன் பாடல்வரிகளை நினைக்காத நாளே இல்லை. நகரம் என்ற நரகத்தில் வாழ்வதை நாகரீகம் என்று மயங்கி நாசமாகபோகும் நாள்தான் மாறாதோ !!
    ச.திருமலை அவர்களே அருமையான கட்டுரை வழங்கியுள்ளீர்கள். நாம் நம்பிக்கையுடன் கடவுளை துதிப்பதை தவிற வேறுவழி இல்லை அதற்க்கு இயற்கை அன்னை நிச்சயம் அருள்புரிவாள்.
    “கலர் டி.வி-க்கு ஒதுக்கிய நிதியில் நூற்றில் ஒரு பங்கை, செம்மொழி மாநாடு என்ற பெயரில் தன்புகழ் பாடும் கவியரங்கங்கள் நடத்திக் கொண்ட கூத்திற்குச் செலவுசெய்த பணத்தில் ஒரு சிறிய பங்கை அரசாங்கம் ஒதுக்கினால் கூட அழிந்து வரும் நதிகளுக்கு உயிர்ப் பிச்சை வழங்க முடியும். இன்னமும் நேரம் இருக்கிறது. மனமும் பணமும் மட்டுமே வேண்டும். யார் செய்யப் போகிறார்கள்.”
    காண்டாமிருக தோல் உடுத்த நமது அரசியல் தலைவர்களுக்கு இது உரைக்குமா? எனவே முதலில் அரசியல் தலைவர்களின் தோலை உரிக்கவேண்டும் பின் மாற்றங்கள் தானாகஏற்ப்படும்

  4. Pingback: Indli.com
  5. //
    திருமலை, மிக நல்ல கட்டுரை எழுதி இருக்கிறீர்கள். இந்த நிலையில் நாம் செய்யக் கூடியது என்ன?

    செய்ய ஆரம்பித்தாகிவிட்டது – கடல் நீரை குடி நீர் ஆக்குகிரேன் என்று சொல்லி அதிலும் காசு பார்பது

  6. நான் இதை இங்க எழுதனும்னு அப்டின்னு ஒரு செய்தியா எழுதல. but… சத்யம் சத்யம் புனஸ் சத்யம்… வைகாசி மாதம் ஆழ்வார் திருநகிரியில் நடக்கும் நம்மாழ்வார் திருவிழாவிற்கு சென்ற போது தாமிரவருணி(பொருநல் சங்கணி துறை) , நதி நீர் செல்லும் வழி முழுக்க ஆகாய தாமரை. வெறும் ஒரு சிற்றோடை போல ஆற்று நீர். நதிக்கு செல்லும் பாதை முழுக்க பொட்டலம்,பாட்டில்,குப்பை,கழிவுகள். நடந்து போகும் போது மிக கவனமாக செல்ல வேண்டும். மழை நீர் உயிர் நீர் என்ற சென்றிய ஆட்சி கொள்கையை இந்த ஆட்சி தூக்கி எரிந்ததை என் கண் முன்னே குடும்பமாக பார்த்தோம். 3000 ரூபாய் குடுத்து அழகாகவும், பாங்காகவும் வீடு முன் கட்டிய மழைநீர் தொட்டி, மாநகராட்சியால் road extension செய்ய அடித்து நொறுக்கி தொட்டியின் மூடி புல்டோசரின் உபயத்தால் எங்கள் கண் முன்னே உடைத்து தூக்கி எறியப்பட்டது. அருகாமையில் இருந்த மரங்கள் வெட்ட படும்போது contractor,மேஸ்தரி, புல்டோசர் டிரைவர் ஆகியோரிடம் கெஞ்சியும்,போராடியும் ஒரு சில மரங்களை காப்பாற்ற முடிந்தன. ஒரு ஆட்சியில் செய்யல்படுதபட்ட ஒருசில நல்ல விஷயங்களை அடுத்த கட்சி வரும்பொழுது கொஞ்சமேனும் விட்டுவைக்கலாம்… இங்கே குறிப்பிடும் அபாய மணி அரசியல்வாதியின் சந்ததியர் காதிலாவது செவிப்பறை கிழிய கேட்க வேண்டும். நம் மக்களும் இதற்கு கொஞ்சம் அக்கறை எடுக்க முயற்சிக்கலாம்.
    நாங்கள் ஒரு முறை கங்கை யாத்திரை சென்ற பொழுது, சில இடங்களில் இங்கே இருப்பது போல், குளிக்க,துவைக்க சோப்பு எடுத்து கொண்டு கங்கை கட்டங்களை அணுக முடியாது. ஐம்பது ரூபாய் அபராதம், சோப்பு போட்டியும் போயி போச்!!!. லாரி,சைக்கிள்,கார் கழுவுதல், நதி நீர் அசிங்கம் செய்தல் ஆகியவற்றை கடுமையாக தவிர்க்கவும்,கண்டிக்கவும் செய்கின்றனர். நம் மக்கள் உணர வேண்டும். அப்பொழுது தான் ஒரு நல்ல காலம் சிறிதேனும் தொடரும்

  7. “கண்களில் நீர் வரவழைக்கும் கட்டுரை”

  8. //கடவுள் இல்லை, இயற்கையைக் கடவுளாக வழிபடுவது காட்டுமிராண்டித்தனம் என்று நமக்குக் கற்பிக்கப்பட்ட பொழுது, இயற்கையைக் கடவுளாக வழிபடும் நம் தொன்மையான வழக்கத்தில் இருந்து விலகி மெல்ல மெல்ல இயற்கையை ஒரு போகப் பொருளாக அனுபவிக்கத் துவங்கினோம். வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப் பட்டதோ, அன்றிலிருந்து இயற்கை வளங்களை பக்தியுடன் நாம் வணங்கிய, பாதுகாத்த உணர்வு மங்கி, அதை நம் சுயநலத்திற்காக அழிக்கத் தலைப்பட்டோம் அதன் விளைவே அழிந்து வரும் நதி வளங்கள். நாம் அழிப்பது நதிகளை அல்ல; நம்மையும் நம் சந்ததியினரின் எதிர்காலத்தையும் என்ற உணர்வை சினிமா மாயையில் மயங்கிக் கிடக்கும் நம் மக்கள் உணர வேண்டும். இயற்கையை வணங்கும் நம் முன்னோர்களின் தொல் நம்பிக்கை நம் மக்களிடம் மீட்டு எடுக்கப்பட வேண்டும்.//

    சில தனார்வ அமைப்புகள் அவர்களால் இயன்ற வரை நற்பணிகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் .உதாரணத்திற்கு கோவையில் உள்ள “சிறுதுளி” அமைப்பு எங்கள் ஊரில் நிலத்தடி நீர் உயர்வதற்கும் , பல குளங்கள் நிரம்புவதர்க்கும்,நொய்யல் நதியை சீரமைக்கவும் மிக சிறப்பானதொரு புனிதபணியை மேற்கொண்டுள்ளனர் . இத்தருணத்தில் சிறுதுளியின் நிறுவனர் .ஸ்ரீ வனிதா மோகன் அவர்களையும் ,அவரோடு கை கோர்த்து இப்பணியினை செயும் அத்துணை பேரையும் நன்றியுடன் வணக்கங்களையும் தெரியபடுத்துகிறேன் .
    for more information about siruthuli you can vist them on siruthuli.com
    these peoples activities are limited to an extend
    உலகத்தில் எங்கெல்லாமோ என்னன்னமோ Revolutions அது எல்லாமே மனிதனை , மனிததுவதில் இருந்து பிரித்தது , இயற்கையில் இருந்து பிரித்தது
    செயற்கைத்தனம் ,போலித்தனம் ,ஆணவம் ,பேராசை கொண்டவனாக மாற்றியது .
    The need of the hour is an another revolution , that is an OUR CULTURAL REVOLUTION . அப்பொழுது தான் இந்த இயற்கையையும், நம் பூமி தாயையும் காப்பாற்ற முடியும்

    //கலர் டி.வி-க்கு ஒதுக்கிய நிதியில் நூற்றில் ஒரு பங்கை, செம்மொழி மாநாடு என்ற பெயரில் தன்புகழ் பாடும் கவியரங்கங்கள் நடத்திக் கொண்ட கூத்திற்குச் செலவுசெய்த பணத்தில் ஒரு சிறிய பங்கை அரசாங்கம் ஒதுக்கினால் கூட அழிந்து வரும் நதிகளுக்கு உயிர்ப் பிச்சை வழங்க முடியும். இன்னமும் நேரம் இருக்கிறது. மனமும் பணமும் மட்டுமே வேண்டும். யார் செய்யப் போகிறார்கள்? எப்பொழுது செய்யப் போகிறார்கள்?//
    அணைகின்ற விளக்கு பிரகசமாதான் எரியும்
    தமிழகத்தின் முதல் கூத்தாடி அவர் காலத்திலயே அவரின்சாம்ராஜிய வீழ்ச்சியையும் காண்பார் ,அது நிச்சியம் .

    இக்கட்டுரை வழங்கிய திருமலை அவர்களுக்கும் ,தமிழ் ஹிந்துவிற்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன்
    மிக சிறப்பான கட்டுரை ,தமிழகத்தோடு நில்லாமல் இந்தியர்கள் அனைவருக்கும் இது போய் சேரவேண்டும் .
    நல்லதே நடக்கும்
    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  9. Thanks Mr. Thirumalai, great article.

    Recently i had a discussion with a official who is responsible for maintaining rivers, our discussion was about river and the waste water mixing in river, by that time the official told that directing waste water to river will help to keep the river wet and it will be useful on raining season for easy flow without earth take considerable water, on listening this i don’t know should i cry or laugh? this is the situation of most of us.

    Mr. Thirumalai, we need action plan for every action including river. let us work on it and implement it, there is no point to wait for government.

    Thanks

    Murugan
    Madurai

  10. ஆசிரியருக்கு வணக்கம்
    தாமிரபரணி கரையில் பிறந்து வளர்ந்த ஒரு ஹிந்துவின் ஆதங்கம் . என் தாய் மடி போல் வளர்ந்து வந்த என் நதியின் கதை இன்று அய்யகோ . குறுமுனி அகத்திய முனிவரால் பாடல் பெற்ற ஸ்தலம் . இன்று காணும் பொது என் கண்ணில் ரத்தம் வருகிறது . தாங்கள் கட்டுரையில் சொல்லாத பல்வேறு கொடுமைகள் நடக்கிறது , ஆறும் ஆற்றின் கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு துயரத்தில் ஆழ்த்துகின்றன . மண் தோண்டுவது மட்டும் அல்ல , நேரடியாக மின் மோட்டார் மூலம் தண்ணீர் உரிஞ்சபடுகின்றன . பல்வேறு குளங்களுக்கு செல்லும் பாதைகளும் அடைபட்டு விட்டன , இதன் மூலம் பல்வேறு குளங்கள் வற்றி விவசாயத்திற்கு உபயோகமில்லாமல் புன்செயகளாக போய் விட்டன . மணல் கொள்ளையால் நதியின் இடையில் இருந்த பல்வேறு மரங்கள் காணாமல் போய் விட்டன . பொதிகை மலையும் தன் மூலிகைகளை அடியோடு இழந்து வருகிறது . அரசியல்வாதிகளின் ஆதரவோடு நடந்துவரும் இந்த மோசடியை கண்டு மனம் நொந்து விட்டோம் . தங்கள் கட்டுரையின் மூலம் சிறிது மன சாந்தி கிட்டுகிறது . தொடரட்டும் உங்கள் நற்பணி
    பணிவுடன் சிவா
    பொதிகையடி
    நெல்லை மாவட்டம்

  11. அருமையான கட்டுரை. முகத்திலறையும் விதத்தில் எழுதப்பட்ட விதம் கண்ணெதிரே அநியாயம் நடக்கிறதே என்கிற பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. ஆற்றொழுக்கான நடை கவனத்தைக் கட்டிப்போட்டு முழுக்கட்டுரையையும் ஒரே மூச்சில் படிக்க வைக்கிறது. இப்போதும்கூட இதை மீட்டு விடலாம் என்று படிக்கையில் துளிர்க்கும் நம்பிக்கை, காசுக்கு ஓட்டு என்று தம்மை விற்கத் தயாராகிவிட்ட தமிழகத்தை நினைக்கையில், துளிரிலிலேயே பட்டுப்போய் விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.

  12. அன்புள்ள திருமலை,

    பத்துவயது வரை தாமிரபரணிக் கரையில் வளர்ந்தவன் நான்.. அதன்பிறகு சில வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பொருநையை தரிசிக்கும் பாக்கியம் கிட்டி வந்தது. ஏதோ ஒரு இனிய தூரத்துக் கனவாக என் மனதில் இந்த நதி இருந்து வருகிறது. இந்த செய்திகள் எல்லாம் கேள்விப் பட்டு வருபவை தான் – ஒரு கட்டத்தில் இந்த சீரழிவு வெறும் செய்தியாக மாறி உணர்வுகள் மரத்துப் போகும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டோம்..

    உங்கள் கட்டுரை அந்த மரத்துப் போன உணர்வுகளைத் தட்டியெழுப்பி உலுக்குகிறது.. தண்ணீர் தந்து வளர்த்த தாயான நதிக்காகக் கண்ணீர்விட வைக்கிறது. நெஞ்சில் அறைகிறது. வேறு என்ன சொல்வது எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.. பாபநாசத்து மீன்கள் வந்து காலைக் கடிப்பது போல, நெஞ்சைக் கிள்ளிப் பிசையும் தமிழ்நடை !

    சில வருடங்கள் முன் பாபநாசத்திலிருந்து மேலேறிச் சென்று காரையார் போகும் வழியில் சொரிமுத்தையனார் கோயிலுக்குச் சென்றேன் (முண்டந்துறை காட்டுக்குள் உள்ள பழமைவாய்ந்த தர்மசாஸ்தா கோயில் இது). பக்கத்தில் தாமிரபரணியில் மாசற்ற நீர் அந்த வனப்பிராந்தியத்திற்கே உரிய வனப்புடன் ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டேன். காட்டாற்று ஓரத்தில் நின்று கவனமாக நீராடினோம்.. அந்த நினைவு இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது.

    இவையெல்லாம் வெறூம் நினைவுகளாகவே நின்றுவிடுமோ என்று எண்ணுகையில் பெரும் விரக்தியும் சலிப்பும் தோன்றுகிறது.

    இப்பேர்ப்பட்ட பேரழிவைப் பற்றி தமிழகத்தின் செய்தித் தாள்களும், ஊடகங்களும், டிவி சேனல்களும் ஒன்றுமே பேசுவதில்லை. குத்தாட்டக் கிளுகிளுப்பிலும், வெற்று அரசியல் கோஷங்களிலும், குமட்டல் எடுக்க வைக்கும் முகஸ்துதிகளிலுமே தங்கள் ஜன்ம சாபல்யத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன.. இவ்வளவு வெட்கம்,மானம்,சொரணை கெட்ட இன்னொரு சமூகம் இருக்குமா?

  13. இன்னொரு விஷயம்.

    இந்தியாவின் பல பகுதிகளீலும் நதிநீர் வளங்கள் மெதுவாக அழிந்து வருகின்றன என்றாலும் தமிழகத்தில் இந்த அழிவு மிக துரிதமாக நடந்து வருகிறது என்று தோன்றுகிறது. மற்ற மாநிலங்களில் இது பற்றீய பிரக்ஞையாவது உள்ளது. தமிழகத்தில் அதுவும் அரிதாகி வருகிறது. அது தான் இன்னும் பெரிய சோகம்.

    தி;ஜா ஒரு 30-40 வருடம் முன்பு எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’யைப் படித்து விட்டு இன்று காவேரியைத் தேடி மாயவரம்,தஞ்சாவூர், கும்பகோணம் பக்கம் செல்பவர்கள் ஏமாற்றம் முகத்தில் அறைவதைக் காணலாம். சில மாதங்கள் முன்பு அந்தப் புத்தகத்தில் பிரசித்தமாகக் குறிப்பிடப் படும் மாயவரம் காவேரி வாய்க்காலுக்குப் போனபோது அது முற்றிலும் சாக்கடையாகிக் கிடப்பதைப் பார்த்து மனம் நொந்தேன்.. கொள்ளிடம் பாழிடம் போன்று காட்சியளித்தது.

    இந்த அவலத்திலும் ஒரு ஆறுதல் என்னவென்றால், கர்நாடகத்துக் காவிரி இன்னும் பசுமையாக, இளமையாகவே இருக்கிறாள். இந்த மாநிலம் செய்த பாக்கியமா, அல்லது மக்களீடம் இன்னும் ஓரளவு நதிகள் மீதுள்ள பற்றா, அல்லது தமிழ்நாடு போன்று கர்நாடகம் “வளர்ச்சிப் பாதையில்” செல்ல முயலாததா என்ன காரணம் என்று தெரியவில்லை. தலைக்காவேரி, பாகமண்டலா, கூர்க் பிராந்தியத்தின் பல பகுதிகள், பீமேஸ்வரி, கபினி, ஸ்ரீரங்கப் பட்டினம், சிவசமுத்திரம் என்று பல இடங்களில் சென்று பார்த்திருக்கிறேன்..காவேரி இங்கு இன்னும் அழகாகத் தான் இருக்கிறாள்.. எல்லா இடங்களிலும் மக்கள் நீராடுகிறார்கள். தண்ணீர் தூய்மையாகவே உள்ளது.

    கூர்க் முழுதாக கமர்ஷியல் ஆக்கப் பட்டு வரும்போதே மக்கள் விழித்துக் கொண்டு அங்கு பிளாஸ்டிக்கைத் தடை செய்தல், குப்பைகளை அகற்றுதல் என்று பணிகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.. அதனால் அதன் இயற்கை எழில் ஓரளவு தப்பித்தது.. கமர்ஷியல் ஆவதற்கு முன்பு இன்னுமே மிக மிக அழகாக இருக்கும் என்று பழைய ஆட்கள் கூறுகிறார்கள்..

  14. தமிழ் ஹித்து படிப்பவர்களுக்கும், வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நான் நினைத்துக் கொண்டிருக்கிற எண்ணங்களை அப்படியே பதிவாக்கியுள்ளார். நாம் அனைவரும் ஒரு முடிவெடுப்போம். இனி போகும் இடங்களில் கேரி பேக் என்ற பையினை பயன்படுத்துவதில்லை. டிஸ்போசிபில் கப்ஸ் பயன்படுத்துவதில்லை. தண்ணீரை வீணாக்குவதில்லை என்பது போன்ற கொள்கைகளை நாம் மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு சொல்லி அதன் மூலம் நம் தேசம், தேசிய வளங்களை காப்போம்.

  15. இயற்கையிலிருந்து விலகினோம். இறைவனை விமரிசித்தோம். நமக்கேன் வம்பு என்று இருந்தோம். தாமிரபரணி ஆறு எப்படி சீர் கேட்டு கிடக்கிறது என்பதை மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் திருமலை அய்யா. தமிழகத்து மக்களின் உள்ளக் குமுறலை உங்கள் கட்டுரை பிரதிபலிக்கிறது. வெளிநாடுகளில் குளிக்க முடியாத ஆறுகள், அருவிகள் தான் உள்ளன. அவற்றையே அவர்கள் போற்றுகிறார்கள். ஆனால் நாம் புனிதமாக முன்னோர்கள் போற்றிய – முன்னோர் கடன் செய்ய நாம் பயன் படுத்திய ஆறுகளை – நம் நதிகளைப் போற்றத் தவறினோம். அண்டை மாநில மக்கள் நலனுக்காக அரசாங்கத்துடன் சேர்ந்து மணல் கொள்ளை நடத்தினோம். பழ.நெடுமாறன் போன்ற அரசியல் கடந்து சிந்தனை செய்பவர்கள் எல்லாம் மணல் கொள்ளை பற்றி அறிக்கை கொடுத்து போராடியும் பலன் இல்லை. அலட்சியப் படுத்தியதன் பலனை அனுபவிக்கிறோம். எதிர்காலத்தில் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் அருமையான கட்டுரை அரசாங்கத்தின் கண்ணைத் திறக்கவேண்டும்.. இக்கட்டுரை எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். விழிப்ப்புணர்வு ஏற்பட வேண்டும். இறைவனை வேண்டுகிறேன்.

  16. ஜடாயு அய்யா 10 வருடம் தாமிரபரணி கரையில் வாழ்ந்த உங்களுக்கு இத்தனை துயரம் என்றால் ஏறத்தாழ ஒரு நூறாண்டுகளாய் குடும்பத்தோடு வாழ்த்ந்து வரும் எங்கள் துயரம் சொல்லி மாளாது . பாபநாசம் என் ஊர் அதை கடந்து செல்லும்போது நதியில் நகர கழிவுகளும் ஆளை கழிவுகளும் கலந்து விடுகின்றன . முன்பெல்லாம் சிறு பிராயத்தில் தாமிரபரணியில் குளித்து பாபநாச சுவாமியையும் உலகம்மனையும் தரிசிக்கும் போது சொல்லவொணா ஆனந்தம் பெருகும் . ஆனால் இப்போது
    மனது வலிக்கிறது இந்த சீர்கேட்டில் நமக்கும் பங்கு உண்டு என்பதையறிந்து மனம் பதைக்கிறது. எவ்வளவோ முயற்சிகள் கொண்டும் தனியோருவனால் முடியவில்லை . நினைக்க நினைக்க நெஞ்சம் கணக்கிறது.
    கோவிலுக்கு பாவம் தொலைக்க வரும் பக்தர்கள் தங்களுடைய வேண்டாத துணிகள் உட்பட்ட பொருட்கள் நதியில் விடுவதால் தூர் அடைவது மட்டுமில்லாமல் மீன் போன்ற உயிரினங்கள் வாழ முடியாமல் நதியே சீர்கேடாகிவிட்டது . கோவில் நிர்வாகமும் மற்ற பஞ்சாயத்து நிர்வாகமும் கண்டு கொள்ளாததால் மேலும் மேலும் அசுத்தமாகி கொண்டே போகிறது . இனியாவது இதை வாசிக்கும் பக்தர்கள் ஆறு குளங்கள் கோவில்களை அசுத்தபடுத்தாமல் நலம் தேடுவார்களா ? சிவன் சொத்து குல நாசம் என்னை பொறுத்த வரையில் தாயக மதிக்கப்படும் நதியை மாசுபடுத்துபவர்களும் இறையின் சினத்திற்கு ஆளாக நேரிடும் . பிழை இருந்தால் மன்னிக்கவும் . பணிவுடன்
    சிவா
    பொதிகையடி

  17. நம்முடைய பண்டிகைகளை நாமே மறந்ததின் ஒரு விளைவாக கூட இதை எடுத்துக்கொள்ள வேண்டும் ,

    ஆடிப்பெருக்கு சமயத்தில் இந்த விழிப்புணர்வு ஒரு வாய்ப்பாக அமையட்டுமே

    அவரவர் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு குடும்பத்துடன் சிறு வழிபடுதல் நடத்தினால் தாமாகவே அந்த இடங்கள் சீர் பெற வாய்ப்புள்ளது

    நாம் வழிபட வாய்புள்ள பண்டிகைகள் ஆடி ஆவணி மாதத்தில் நெறைய உள்ளது
    தேவை சிறு மனம் மட்டுமே!

    சஹ்ரிதயன்

  18. அருமையான கட்டுரை திருமலை அவர்களே.படிக்கப்படிக்க கண்ணில் நீர் வருகிறது. ஏதும் செய்ய முடியா ஆற்றாமையும் கூட.
    நீர் என்பது ஏதோ பாட்டில்களில் அடைக்கப்பட்டு, கடைகளில் கிடைப்பது என்று ஒரு தலைமுறை யையே நினைக்க வைக்கும் டிவி பித்து தலைக்கேறிய காலம் இது.
    இந்நேரத்தில் இப்படி ஒரு கட்டுரை மிக மிக தேவை.
    நவீனம் என்ற பெயரில் தன கண்ணை தானே குத்திக்கொள்ளும் கூட்டமாகி விட்டோம்.
    இயற்கை நாம் அளவின்றி அனுபவிக்கவே ஏற்பட்டது என்ற அழிவுக்கொள்கை வாதிகள் அக்கொள்கையை நம் தலையில் ஏற்ற , நாமும் நம் முன்னோர் வழியை மறந்து நம் அழிவை நாமே தேடிக்கொள்கிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் ,மேற்கில் இன்று பலர் மதர் எர்த் போன்ற வார்த்தைகளை உபயோகிப்பது தான். அவர்கள் விழித்த பின்னும் நாம் அவர்கள் தவறையே மீண்டும் மீண்டும் செய்கிறோம்.டிவி பித்து பிடித்து ஒரு குறிப்பிட்ட சேனல் சொல்வதே வேதம் , சீர் கேட்ட சீரியல்கள், குத்தாட்டங்கள் என்று கொள்ளை போய்க்கொண்டிருக்கிறோம்.
    தாமிரபரணி தாயானதால் , என்றைக்கு நாம் விழித்துக்கொன்டாலும் நம்மை மன்னிக்க தயாராக இருக்கலாம் . ஆனால் காலம் கடப்பதற்குள் நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டுமே?
    அன்புடன்
    சரவணன்

  19. யாரைக் குற்றம் சொல்வது? தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று நம் கலாச்சரம் கூறுவதையும் மீறி ஏரியில் பிளாட் வாங்கும் நமக்கு இதில் பங்கு இல்லையா?

    போர் போட்டு தண்ணீரை வீணாக்கும் நாம் குற்றவாளி இல்லையா? ஒரு பக்கெட் தண்ணீரில் குளிக்காமல் ஷோவேர் போட்டு 10 பக்கெட் தண்ணீரில் குளித்து கழிவு நீர் நதி உண்டாக்கும் நாம் குற்றவாளி இல்லையா? ஒரு mug தண்ணீரில் வாய் கொப்பள்ளிக்காது பைப்பில் இருந்து நேராக வாய் கொப்பள்ளிப்பது, ஹோட்டலில் ஒரு டம்ளர் தண்ணீரில் கை கழுவாமல் பைப்பை திருகி ஒரு பக்கெட் தண்ணீரில் கை கழுவும் நாம் குற்றவாளி இல்லையா?

    ஆற்றில் இருந்து மண் வந்தால்தானே வீடு கட்ட முடியும்? அப்பா வீடு கட்ட மாற்று முறை காண வேண்டாமா?

  20. இந்தக்காலக் குழந்தைகளிடம் கேளுங்கள்:பால் எங்கிருந்து வருகிறது அல்லது தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று. பாக்கெட் அல்லது மெஷின் என்றோ குழாய் அல்லது பாட்டில் என்றோ தான் பதில் வரும். அந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி வளர்க்கப் படுகிறார்கள்! இன்று நகரங்களில் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் ஓடும் நதியில் குளித்திருப்பார்கள்? இக்குழந்தைகளின் மத்தியில் சுற்றுச் சூழல் பற்றிய அறிவை மிகவும் பலமாகப் பிரச்சாரம் செய்வதே அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு பயன் படும்.

  21. A thought provoking article.
    I fondly remebers that days we were enjoying
    taking bath in this river as I am native of Thenthiruperai
    which indeed is in the banks of this great river.
    Now I am residing in Mumbai and when ever I visit my above native place
    I am taking bath only in my house instead of going to
    the river to avoid the pain that i am experiencing by seeing the awful sight.
    படிக்கப்படிக்க கண்ணில் நீர் வருகிறது. ஏதும் செய்ய முடியா ஆற்றாமையும் கூட.

  22. அரசாங்கமே மணல் விற்று வருமானம் தேட நினைக்கும் போது இதற்கு சரியான ஒரு தடுப்பு வழி கண்டுபிக்க வேண்டும்.இயற்க்கை வழிபாட்டை மீண்டும் தீவிரமாக்கவேண்டும்.
    இந்த கட்டுரை சரியாக எல்லோருக்கும் பொய் சேர முயற்சி செய்வோம்.
    ஆசிரியருக்கு மிக்க நன்றி.

  23. இந்து மத கலாச்சாரம் கொந்தளிக்கும் வட இந்தியாவில் ஓடும் கங்கை, யமுனை ஆகிய ஆறுகள் எல்லாம் மிகவும் தூயமையாகவா ஓடுகின்றன. ? அவை இதைவிடவும் கெட்டு கழிசடையாகத்தான் உள்ளன. காசி நகரத்தை போய் பாருங்கள். உலகிலேயே மிகவும் அழுக்கான நரகம். மத மாற்றத்துக்கும் கலாச்சாரத்துக்கும் இதற்கும் சம்பந்தம் என்ன?

  24. பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் நீர் ஆதாரங்கள் அழிந்து தான் வருகின்றன. எந்த ஒரு நாகரிகமும் காலத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ள வேண்டும். இந்த தளத்தில் கிருத்தவர்களையும் இஸ்லாமியர்களையும் தாக்குவதே பிழைப்பு. கங்கை, யமுனை போன்ற ஆறுகள் மிகவும் தூய்மையாக ஓடுகின்றன என்பது உலகறிந்தது.

  25. டியர் ராஜன்,

    சிந்தனையை தூண்டி விடும் உணர்சிகரமான கட்டுரை. இந்த விழிப்புணர்ச்சி
    எல்லாருக்கும் வர வேண்டும், அந்த விதத்தில் இதை அடுத்த கட்டத்திற்கு
    கொண்டு செல்ல வேண்டும். தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்ரிகைகள்
    /நாள் இதழ்கள் இப் பிரச்னையை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

    நம் ஸ்ரிபேரை க்ரூபில் டிச்கிச்ஸ் செய்த மாதிரி நமது ஆற்றங்கரையில் ஒரு செக் dam அமைத்தால் இப் பிரச்சன்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஊரே ஒருமித்து செயல் பட்டால், நமது கனவு நிஜமாக் வாய்ப்பு உண்டு.

    தங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்தும் ஆதரவும் என்றென்றும் உண்டு.

    Raghu குமார், Chennai

  26. திருமலை அவர்களே!

    அருமையான கட்டுரை,அனைத்து நதிகளுக்கும் பொருந்தும் செவ்வுரை! மனம் கனத்தது.

  27. ஆமாம் மற்ற நாடுகளின் நீர் ஆதாரம் அழிந்து வருவதால் நாம் காலத்திற்கு ஏற்றாற்போல் நாமும் மாறிகொள்வோம்.
    நலிவடையும் ஆறுகளை அப்படிஏய் நாசமாக விட்டுவிட்டு,அதை பற்றி கவலை படாமல் நாம் மாறுதல் என்ற பெயரில் கடையில் காசு கொடுத்து தண்ணி வாங்க பழகிக்கொள்வோம்.
    அடுத்த மாநிலங்களில் விலைவாசி உயர்வு அதிகம் நம் மாநிலத்தில் குறைவு ,இதை ஏற்றுகொள்வோம் என்ற பாணியில் கலைஞர் விளக்கமளிக்கிறார்.அதை போல் சில நண்பர்கள் எல்லா நாடுகளும் நீர் ஆதாரத்தை இழந்து கொண்டிருக்கிறது நாமும் அதனால் பேசாமல் நதிகள் அழிவதை பார்த்துகொண்டு அதை தடுக்காமல் விட்டு விடுவோம்,ஏன் அதைப்பற்றி கட்டுரை எழுதவும்,பேசவும் கூட வேண்டாம்.நாகரிக காலத்துக்கு ஏற்றவாறு கடையில் தண்ணி வாங்க பழகிக்கொள்வோம்.
    கரை ஓரங்களில் மரங்களை அதிகம் வளர்க்கவும் நதியின் வளத்தை பாதுகாக்கவும் வேண்டாம். கங்கையும் யமுனையும் அழிவதால் அதையும் ஒரு காரணமாக காட்டி இந்த நதிகளை அழித்து விடுவோம்.
    மணலை அல்லாமல் இருக்க வேறு மாற்று வழி என்ன என்று கூட யோசிக்க வேண்டாம்,நாம் காலத்திற்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்வோம்.
    பண்டிகை, நதி நீராடல் என்று போய் வந்தால் அதனை ஓரளவாவது பராமரித்து காப்பற்றிவிடுவோம்.ஆடிபெருக்குகும் கன்னி பொங்கலுக்கும் ஆற்றிலே ஒன்று சேர்ந்து விழா கொண்டாடுவது ஆற்றின்பால் ஈடுபாடும் அதை காப்பாற்ற வேண்டிய அவசியத்தையும் மக்களுக்கு ஏற்படுத்தும். (இதற்கும் இந்து கலாசாரத்திற்கும் சம்பந்தமே இல்லை).

    கங்கையும்,யமுனையும் சீர்கேடடைய காரணம் அரசாங்கம் அதற்குரிய செலவு செய்து அந்த நதிகளை பராமரிக்கததே.ஆனால் அங்கு வரும் மக்கள் கூட்டத்தினால் (கோவிலில் ) கிடைக்கும் வருமானம் மட்டும் அரசாங்கத்துக்கு வேணும்.
    தமிழ் இந்து தளம் நாங்கள் செய்யும் அக்கிரமங்களை சுட்டி காட்டுவது எவ்வளவு எரிச்சலாக உள்ளது.
    (நேரடியாக ெளிகட்டமுடியலை)
    யாரையும் தாக்கும் விதத்தில் இந்த தளம் செயல்படவில்லை.அநியாயங்களை சுட்டிக்காட்டவும்,அதற்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,ஒவ்வொரு இந்துவின் கடமையையும் வுரிமையையும் விளக்குவதையே இந்த தளம் செய்கிறது. (அதை எப்படி நாங்கள் பொறுத்துக்கொள்வோம்,எங்கள் கொள்கையே இந்து மதமும் இந்து கலாச்சாரமும் முற்றிலுமாக அழிந்து ஒழிய வேண்டும் )

  28. காலத்துக்கேற்ற வகையில் கலாச்சாரம் தான் மாற வேண்டும் என்று நான் சொன்னேன். ஆறு சாக்கடையாக மாற வேண்டும் என்று சொல்ல வில்லை. ஆறு என்பது இயற்கையின் ஒரு பகுதி. அதை அப்படியே பார்க்க வேண்டும். அதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் உணரவேண்டும். அப்படி இயற்கையை தூய்மையாக வைத்திருந்தால் அது தங்கள் வாழ்க்கைக்கும் தங்கள் வழி வரும் எதிர்கால சந்ததியினற்கும் பலனளிக்கும் என்று நினைப்பது பகுத்தறிவு. ஐரோப்பியரும் அமெரிக்கரும் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் ஆற்றை ‘மாதா’ என்று கப்சா விட்டு அதன் ஓரத்தில் கோயில் என்ற பெயரில் ஒன்றைக்கட்டி காசு பார்ப்பது இங்கே இருக்கும் ஒரு சாராரின் குணம். இதற்கு கலாச்சாரம் என்று சொல்லுகிறார்கள். இப்போது இந்த வியாபாரத்துக்கு ஆபத்து வந்து விட்டதால் குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். மற்றபடி இயற்கையின் மீது வந்த காதல் அல்ல. இந்த நாட்டில் கலாச்சாரம், கிலாச்சாரம், மதம், கிதம், ஜோசியம், கீசியம், மந்திரம், கிந்திரம் என்று பெரும்பாலான மக்கள் மூடத்தனத்தோடு இருப்பதால் அவர்கள் வாழ்வும் சீரழிகிறது. இயற்கையும் சீரழிகிறது. மக்களும் இயற்கையின் ஒரு பகுதி. ஆனால் மக்களின் ஒரு சாரார் தங்களை மட்டும் வேறு படுத்தி கொண்டு அறிவாளிகளாகவும் காண்பித்துக்கொண்டு பெரும்பான்மையான மக்களை முட்டாள்களாக வைத்திருக்கிறார்கள். அந்த பெரும்பாலான மக்களின் அறியாமையினால் ஆறுகள் இமயம் முதல் குமரி வரை சீரழிந்துள்ளன. இப்போது இதற்கெல்லாம் காரணம் இவர்கள் தான் என்று கிருத்தவர்களின் மீதும் பாகிஸ்தான் மீதும் பழி போட ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. அந்த கூட்டத்தின் செயல் தான் இந்த கட்டுரை. நல்ல வேளை மேல் நாடுகளில் இந்து மதம் இல்லை. மேலும் கிருத்தவ மதம் கிழித்த கோட்டை தாண்ட அவர்கள் எப்போதும் தயங்கியதில்லை. அதனால் தான் அவர்கள் இத்தனை அறிவியல் வளர்ச்சியை எட்டியுள்ளார்கள். ஆனால் இங்கே. எல்லாம் எங்க வேதத்துல இருக்கு என்று வெறும் பெருமை பேசிக்கொண்டு இந்தக்கூட்டம் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் படித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. அது தான் காரணம்.

  29. தூங்குபவரை எழுப்பலாம்,நடிப்பவரை எழுப்ப முடியாது.வாதத்திற்கு மருந்து உண்டு,பிடிவாதத்திற்கு மருந்து இல்லை.
    பல பகுத்தறிவாளர்களின் கேள்விகளுக்கு எம் முன்னோர்கள் பல காலமாக குறைந்தது 10 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 13 முறையாவது விடை அளித்து விட்டார்கள்.
    நீங்கள் யார் உங்கள் எண்ணம் என்ன என்று எல்லோருக்கும் நன்கு தெரியும்.உங்கள் எழுத்து நடை மேலும் வெளிச்சமாகவே காட்டுகிறது.இனியும் எமக்கு விழலுக்கு நீர் இறைக்க அவசியம் இல்லை.எங்களுக்கு ஆற்ற வேண்டிய பணி நிறைய இருப்பதால் நங்கள் எங்கள் நேரத்தை நடிகர்களிடம் விளக்கம் தர வீணாக்காமல் பயனுள்ள செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன் படுத்துவோம்.
    இத தளத்திலேயே பொறுமைக்கு விளிம்பே இல்லையோ எனும் அளவுக்கு விளக்கம் தந்தாகிவிட்டது.

  30. Hello

    periyasamy
    5 August 2010 at 6:50 pm

    “ஆனால் ஆற்றை ‘மாதா’ என்று கப்சா விட்டு அதன் ஓரத்தில் கோயில் என்ற பெயரில் ஒன்றைக்கட்டி காசு பார்ப்பது இங்கே இருக்கும் ஒரு சாராரின் குணம்.”

    but answer given before by babu in 4 August 2010 at 3:34 pm

    “கங்கையும்,யமுனையும் சீர்கேடடைய காரணம் அரசாங்கம் அதற்குரிய செலவு செய்து அந்த நதிகளை பராமரிக்கததே.ஆனால் அங்கு வரும் மக்கள் கூட்டத்தினால் (கோவிலில் ) கிடைக்கும் வருமானம் மட்டும் அரசாங்கத்துக்கு வேணும்.
    தமிழ் இந்து தளம் நாங்கள் செய்யும் அக்கிரமங்களை சுட்டி காட்டுவது எவ்வளவு எரிச்சலாக உள்ளது”

  31. கிறிஸ்தவ மதத்தில் என்ன இருக்கிறது பெரிதாகச் சொல்லிக் கொள்ள?
    எதோ கிறிஸ்தவர்கள் தான் இங்குள்ள ஆறுகளையும்,ஏரிகளையும் இத்தனை நாள் பராமரித்தது போல் பேசுகின்றனர்.
    தொண்டை நாட்டில் மழை குறைவு என்பதால் ஆயிரக் கணக்கான ஏரிகளையும் ,குளங்களையும் இங்குள்ள ஹிந்து மன்னர்களும்,எமது முன்னோர்களும் அமைத்தனர்.

    எனக்குத் தெரிந்து ஒரு இருபது வருடங்கள் முன்பு வரை கூட ஓவ்வொரு கிராமத்திலும் குடி நீர் எடுக்க குளமும்,மற்ற விஷயங்களுக்கு குட்டையும் இருக்கும்.
    கடுமையான ஊர்க் கட்டுப்பாடு மூலம் குளத்தை அசுத்தப் படுத்துவது தடுக்கப்பட்டது
    ஆனால் சுயநல,ஊழல்,ஹிந்து விரோத அரசியல் கட்சிகள் தலை எடுத்த பின் ஏரிகளும் ,குளங்களும் கவனிப்பார் அற்று நாசமாயின. திருட்டுத் தனமாக ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக்கப் பட்டன..

    எதோ வெள்ளைகாரர்கள் தான் பரம அறிவாளிகள் என்றும் அவர்களுக்கு மூட நம்பிக்கைகள் இல்லை என்றும் கூறும் அவர்களின் இந்திய அடிவருடிகள் விஷயம் தெரியாமல் புலம்புகிறார்கள்
    halloweensday என்ற ஒரு நாளை ஒவ்வொரு வருடமும் அமேரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடுகிறார்கள்
    அப்போது பூதங்களை விரட்டி அடிப்பதற்காக சாலை சதுக்கங்களில் பூசநிக்காய்களை வைப்பதை நானே பார்த்தேன்
    மேலும் பல கிறிஸ்தவ நாடுகளில் ஆயிரக்கணக்கான கிலோ தக்காளியை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சாலைகளில் கொட்டிக்கொண்டு அதை மிதித்தும் ,நடனம் ஆடியும் மக்கள் செல்வது என்ன பெரிய பகுத்தறிவா?
    மேலும் வளி மண்டல மாசுக்கு பெரும் காரணம் உங்கள் கிறிஸ்தவ நாடுகளே.

    இப்போது இன்னும் மெக்சிகோ வளைகுடாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனியின் எண்ணைக் கசிவும் அதன் காரணமாக அழிக்கப்படும் கடல் வளமும்,ஆயிரக் கணக்கில் இறந்து கொண்டிருக்கும் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் இதெல்லாம் கிறிஸ்தவ நாடுகளின் பேராசையால் வந்த வினை.

    ஆகவே ஹிந்துக்களை மட்டம் தட்டும் வேலை எல்லாம் இனி எடுபடாது

  32. நாம் இன்றும் அடிமை பட்டு தான் இருக்கிறோம் இனிஒரு சுதந்திரபோராட்டம் தேவை. அனால் நிச்சயம் அது மகான் காந்தியின் அகிம்சா வழியில் வேண்டாம். வீரன் சுபாஷ் சந்திர போஸ் வழியில் வேண்டும்.பெற்ற சுதந்திரம் இன்னும் நம்மை அடிமையாகவே வைத்துள்ளது.எதிரிகளை ஒழித்து (ஒழித்தல் என்பது கொல்வது மட்டும் அல்ல,அவர்களை திருத்துவதும் கூடத்தான் அது போரிலோ,வாதத்திலோ,அல்லது நம் ஒற்றுமையிலோ . முடியாத பட்சத்தில் அவர்களை இந்த நாட்டை விட்டு முழுவதுமாக விரட்டி அடித்து நாட்டை சுத்தமாக்குவது ) பெறும் சுதந்திரமே நமக்கு நிரந்தரமான விடுதலை அளிக்கும்.
    அன்று ஒரேஒரு நாட்டை சேர்ந்த வெள்ளைக்காரன் மட்டுமே நமக்கு எதிரில் நின்ற எதிரி .இன்றோ அவர்களின் தீவிர அடிவருடிகள் பலர்,வெள்ளைக்காரன் வந்ததால் தான் நாம் முன்னேறினோம் என்று கூறும் சுயம் இழந்தவர்கள்.அதற்க்கும் முன் வந்த கொடூரர்களின் அடிவருடிகள் பலர்,இவர்களுக்கு விலைபோன தங்களை தாங்களே அரக்கர்கள் என்று புகழ்ந்து கொள்ளும் தன்மான பகுத்தறிவு சிங்கங்கள் பலர் .

    குருசேத்திரத்தில் நிற்கும் நாம் துரியோதனாதிகளைப் பார்த்து,இவர்கள் நம் ரத்தங்கலாயிற்றே இவர்களுடன் எவ்வாறு போரிடுவது என்று,அன்று அர்ஜுனன் நின்ற மன நிலையிலே மலைத்து நிற்கிறோம். அனால் அவர்களோ இந்த மலைப்பை நாம் பயந்து விட்டதாக,அடங்கி விட்டதாக எண்ணி கொக்கரிக்கின்றனர்.
    தர்மயுத்தத்தில் வெல்லப் போவது தர்மவாதிகளான (சனாதான) நாமே.
    கிருஷ்ணன் (சத்யம்) நம்மிடம் இருக்கிறான்.
    நம்மிடம் இருந்து செல்லும் சில எட்டப்பர்கள் (தங்களை செகுலர் வியாதிகள் என்று கூறிக்கொண்டு இயற்க்கை தர்மத்தை அழித்து தம் சுயநலத்திற்காக வரட்டு தர்மத்தை வளர்க்க போராடும் அரசியல் வியாதிகள்) நம்மை வீழ்த்த நம்மிடமுள்ள சில ஆயுதங்களை (நம் உழைப்பால் வரி மூலம் பெற்ற நிதி,கோவில் மூலம் கிடைக்கும் நிதி,மற்றும் கோவில் சொத்துக்களை எடுத்து அவர்களுக்கு கொடுத்தல் ) எடுத்து அவர்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் காணிக்கையாக்கி அவர்களிடம் ஒட்டு பிட்ச்சைக்காக ஏங்கி நிற்கின்றனர்.
    நியாயம் இருக்கும் வரை இப்போரில் வெல்லப்போவது நாமே.

    முதலில் சத்யம்,வேதம் ,ஆகமம்,புனித,திரு,கிருபை ……போன்ற வார்த்தைகளுக்கு நாம் pattern வாங்க வேண்டும்.

  33. Very nice article which talks about the real and critical importance of the rivers. I accept all the points and even we both are sharing same views. But I can’t sync with you on the blame, which you are given to the Dravidian Movement and Christian missionaries. I accept that its because of the stupid politicians. Where the Dravidian movement and Christian leader comes in to the picture here.
    How many periyars and how many Christian missionaries do we have along the banks of Ganga, yamuna and Bramphutra.. Those rivers also become “Kuvam”. We have our Hindu brothers are there in huge numbers. Our RSS and VHP are very active over there..
    I do accept we have deviated from our original path of Worship the Nature.. Understandable..But we can’t blame Dravidian movements and Christian missionaries for each and everything. That’s shows that our attitude is changing and to their pullings. We should we loose our great attitude and greatness just because these pulling. We are loosing our values.Not just because of this people. Its because of our these sick attitude..
    Again, we have our rich culture values. Our Way of Hinduism is different from what the people are North India is following. Pls don mix this both and confuse and Degrade the Tamil Hindu’s cultural richness..

  34. ஹ்ம்ம் மனசு கனக்கிறது; கையாலாகாத நிலை நம்ம மீதே கோபம் கொள்ள வைக்கிறது; எங்கிருந்து ஆரம்பிக்கபோகிறோம் எப்படி ஆரம்பிக்கப்போகிறோம் என்பது மலைப்பாக இருக்கிறது.கட்டுரயாளரை பாராட்டுவது சுலபமான் செயல்.அதையாவது தவறாது செய்கிறேன்!

  35. While we accept that we are responsible for defiling our waterways , we cannot allow that to be used as a pretext by christian apologists of the west to denigrate the Hindus.

    The ‘rationalist DMK’ announced in a grandiose manner that they will clean the Cooum river and ply boats in it more than 40 years back.

    what the hell did they do?
    During the last forty years during whcih they ruled along with the other ‘mattai in the kuttai’ AIADMK , the cooum and Buckingham canal became a stinking gutters.

    what pagutharivu is this?
    They spend 500 crores for Chemmozhi maanaadu.
    But they could have spent a few crores in the 1970s and finished the job.
    But they just abandoned it after spending some money on it.

    So these christians who support the anti-Hindu DMK have no business to eulogise the whites and denigrate the Hindus.

    Yes we do accept that the people are responsible for the sorry mess
    But had the government been strict no one would have dared to defile the water bodies whether it is mother Ganga or Cooum.

  36. பல மேலை நாடுகளில் இன்று வேலை இல்லாதவர்கள் சோத்துக்குத் தாளம் போடுவதைப் பார்க்கிறோம்.
    அங்கு குடும்ப அமைப்பு சரி இல்லாததால் குடும்பத்தில் ஒருவருக்கு துன்பம் என்றால் மற்றவர்கள் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்
    ஆனால் ‘ராமாயணம் படிக்கும் ‘ ஹிந்துக் குடும்பத்தில் ஒருவர் இல்லாவிட்டாலும் மற்றொருவர் தாங்குவார்.

    இதை அழிக்க வேண்டும் என்றுதான் கிறிஸ்தவ ஊடகங்கள் தந்திரமாக பிரச்சாரம் செய்கின்றன
    தாய் தந்தையரை மதிக்காதே உன் கணவன் அல்லது மனைவியை நீயே தேர்ந்தெடு, எல்லோரும் காதல் செய்து வேலன்ட்டின் டே கொண்டாடுங்கள் – அதிக அளவில் வாழ்த்து அட்டைகளை அனுப்புங்கள் ,எஸ் எம் எஸ் அனுப்புங்கள், அதனால் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு லாபம் வரும் (ஒரு பகுதி இவர்களுக்கும் போகும்) என்றெல்லாம் .
    சமீபத்தில் வந்த செய்தி – லண்டனில் பிச்சைகாரர்கள் மிகவும் பெருகி விட்டார்கள் என்பது
    ஆகவே ‘ராமாயணம் படிக்கும் ‘ஹிந்துக்களைப் பிடிக்காதவர்கள் தாராளமாக பைபிள் படிப்பவர்கள் இருக்கும் நாடுகளுக்குச் செல்லலாம்
    ஆனால் அங்கெல்லாம் இப்போது யாரும் பைபிளை சட்டை செய்வதில்லை .
    சமீபத்திய ஒரு செய்தி’ முப்பது சத விகிதம் அமெரிக்கர்கள் ஹிந்துக் கோட்பாடுளை நம்புகின்றனர் என்பது.
    அங்கு பைத்தியம் பிடித்து பாயைச் பிராண்டியவர்கள் இங்கு ‘ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்,சத்ய சாய் பாபா ,மாதா அம்ருதானந்தமயி இவர்களிடம் அமைதி காண வருகின்றனர்.

  37. பாராட்டிய ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

    பெரியசாமி என்ற பெயரில் எழுதியவருக்கும் பாலாஜி ராஜசேகர் என்பவருக்கும் எனது பதில்கள். முதலில் பெரியசாமி என்ற பெயரில் எழுதியவருக்கு:

    நான் இங்கு எழுதியிருப்பது திருநெல்வேலி மாவட்டத்து நதியைப் பற்றி. தமிழ் நாட்டில் மிக அதிகமாகவும் வேகமாகவும் மதமாற்றம் நடந்து இந்த நதிக் கரையில் வாழ்ந்த இந்துக்களே மிக அதிக அளவில் வெள்ளைக்காரப் பாதிரிகளால் மதமாற்றம் செய்யப் பட்டார்கள். அவர்களது புது மத வழக்கப் படி நதியை வணங்குவதும், போற்றுவதும் மதிப்பதும் காட்டுமிராண்டித்தனமான சாத்தானை வணங்கும் வழக்கங்களே. ஆகவே நான் சுட்டிக்காட்டியதில் எவ்விதத் தவறும் இல்லை.

    நதி வழிபாடு, மலை வழிபாடு, இயற்கை வழிபாடு எல்லாம் ஏதோ ஆரியர்கள் மட்டுமே கண்டு பிடித்த சூழ்ச்சிக்கள் இல்லை. பொது அறிவும், வரலாற்று அறிவும், பூகோள அறிவும், தொன்மை குறித்த அறிவும் இல்லாமல் காசு வாங்கிக் கொண்டு மதம் மாறும் துரோகிகளுக்கு இதுவெல்லாம் தெரியாது சொன்னாலும் புரியாது. உலகம் எங்கிலும் வாழும் பழங்குடிகள் இன்றும் நதிகளைப் பூஜித்தே வருகிறார்கள். அமெரிக்க செவ்விந்தியர்கள், தென்னமெரிக்கப் பழங்குடியினர்கள், பப்புவா, தாய்லாந்து, ஜாவா, சுமத்திரா காடுகளில் வாழும் பழங்குடியினர், இந்தோனோஷியப் பழங்குடியினர், ஆப்பிரிக்கப் பழங்குடியினர் என்று உலகம் முழுவதும் தொன்று தொட்டு நதியைத் தெய்வமாக வழங்கும் நதிக்கரைகளில் கோவில் கட்டி வணங்கும் வழக்கம் இருந்தே வருகிறது. இது போன்ற பொது இடங்களில் வந்து உளறும் முன்னால் கொஞ்சமாவது பொது அறிவையும் உலக வரலாற்றையும் படித்து விட்டு வரவும்.

    அடுத்ததாக கங்கை யமுனை அசுத்தமாக உள்ளதே அங்கு இந்துக்கள்தானே வாழ்கிறார்கள் என்ற ஒரு அபத்தமான விவாதம். வட மாநிலங்களில் இந்துக்கள் மட்டுமே வாழவில்லை. இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இன்றும் கங்கையை கங்கை மாதா என்று அழைத்து பூஜிக்கவே செய்கிறார்கள் அந்த நதியை அந்த மக்கள் அசுத்தப் படுத்துவதில்லை. அசுத்தம் செய்வது முக்கியமாக அரசாங்கங்களே. அந்த மாநிலங்களில் இத்தாலிய தேசீய காங்கிரசே பெரும்பாலும் ஆண்டு வந்தது. இது பற்றி மிக விரிவாக ஜெயமோகன் தனது பல்வேறு பயணப் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார். பெரும்பாலான முஸ்லீம்கள் நடத்தி வரும் தோல் தொழில்கள் மூலமாகவும், பேராசை பிடித்த தொழிற்சாலைகள் கொட்டும் கழிவுகளினாலேயே கங்கையும் யமுனையும் ஒரு கட்டத்திற்குப் பிறகு பாழ்பட்டுப் போயிருக்கிறது. அதை அசுத்தப் படுத்துபவர்கள் கங்கையை வணங்கும் இந்துக்கள் அல்லர். கங்கை மாசு பட்டதற்கு காங்கிரஸ் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கே பெரும் காரணமே அன்றி எளிய பக்தியுள்ள இந்துக்கள் அல்ல.

    பாலாஜி ராஜசேகர்

    சுற்றுச் சூழல் சீர்கேடு குறித்த ஒரு விஷயத்தைப் பற்றி விரிவான ஒரு கட்டுரை எழுதும் பொழுது அந்தச் சீர்கேட்டுக்குக் காரணமானவர்களைப் பற்றியும் குறிப்பிட்டே ஆக வேண்டும். உண்மைகளை உரக்கச் சொல்லியே ஆக வேண்டும். ஆகவே தமிழ் இந்து இந்த நிலைக்குக் காரணமான அரசாங்கத்தையும் நதியை வணங்கிய அதே மக்கள் இன்று அசுத்தப் படுத்துவதற்கான மத ரீதியான காரணத்தையும் சொல்லாமல் இது போன்ற கட்டுரைகள் முழுமையடைவதில்லை. நான் இங்கு எழுத வந்தது உல்லாசப் பயணக் கட்டுரை அல்ல மூடி மறைத்து எழுதுவதற்கு. உள்ள்ளத்தில் உள்ள சத்தியம் வார்த்தைகளில் வருகிறது. இதைச் சொல்வதற்கு நாம் பயப்படவோ வெட்க்கப் படவோ வேண்டியதில்லை. இப்படி நாகரீகம் என்ற பெயரில் நாம் உண்மைகளை வெளிப்படையாகப் பேசத் தயங்கி தயங்கியே இன்று சீரழிந்த நிலையில் நிற்கிறோம். ஆகவே தமிழ் இந்து தளத்தில் ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டால் அதன் ஆணி வேர் வரை அலசத்தான் செய்ய வேண்டும். மேம்போக்காக யாருக்கும் வருத்தம் வராமல் எழுதுவதற்கு இது குமுத விகட நக்கீரன்கள் இல்லை. தமிழ் நாட்டின் நதி வளங்கள் அனைத்தும் அழிந்து போனதற்கு முழு முக்கிய காரணமே இந்த திராவிடக் கட்சிகளே அவர்களைச் சொல்லாமல் நான் அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சியையா குறை சொல்ல முடியும்? நம் மக்களின் நல்ல பழக்க வழக்கங்கள் நம் பண்பாடுகள் மாறிப் போனதற்கும் அதன் காரணமான இயற்கை அழிவுகளுக்கும் கிறிஸ்துவப் பாதிரிகளின் மதமாற்ற பேராசையே முக்கியக் காரணம் அதைச் சுட்டிக்காட்டாமல் நான் யூதர்களையா பொறுப்பாக்க முடியும். உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்குத்தான் தமிழ் இந்து துவங்கப் பட்டிருக்கிறது. மறைப்பதற்கோ பூசி மொழுகி எதையும் எழுதுவதற்கான இடம் தமிழ் இந்து தளம் அல்ல. ஆகவே காரணம் இல்லாமல் நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. கவலை வேண்டாம். அப்படியே நான் குற்றம் சாட்டியிருந்தாலும் ஆசிரியர் குழு அனுமதித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நியாயமாகப் பட்டதன் பேரிலேயே இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள். அபாண்டமாக யாரையும் குற்றம் சொல்ல எனக்கு எவர் மேலும் வெறுப்போ காழ்ப்போ கிடையாது. அருகில் உள்ள கேரள, கர்நாடக, ஆந்திர, மஹராஷ்டிர மாநிலங்களில் உள்ள நீர்நிலைகள் தமிழ் நாட்டின் நீர்நிலைகளை விட பல மடங்கு நன்றாகவே பராமரிக்கப் படுகின்றன. அதை நீங்களே அனைத்து மாநிலங்களுக்கும் சென்று உணரலாம். தமிழ் நாட்டு நதிகளின் அழிவுகளுக்கு முழுக்காரணம் நாசகார திராவிட அரசுகளே. இதைச் சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் கிடையாது இதுதான் உண்மை.

    ச.திருமலை

  38. ஆம்பூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து பாலாற்றில் பல காலமாக கழிவுகள் விடப்பட்டு குடி நீர் ஆதாரமும்கெட்டு ,பயிர்கள் அழிந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் வீணாகப் போனது அனைவரும் அறிந்ததே
    அந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் முஸ்லிம்கள்.
    இதை இவர்களால் சொல்ல முடியுமா?
    இளிச்ச வாயர்கள் ஹிந்துக்கள் தானே ?

  39. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ஒரு படி மேலே போய் மிகவும் ஆபத்தான, பல ஆயிரம் ஆண்டுகள் வெளிப்படுத்தக் கூடிய ,அணு உலைகளின் கழிவுகளை கடலுக்கு அடியில் புதைத்துள்ளன.
    இதை விட ஒரு அயோக்யத்தனம் உள்ளதா?
    இது மனித குலத்துக்கே எதிரான செயல்
    இந்தக் கிரிமினல் வேலையுடன் ஒப்பிடும் போது நதியை மாதா என்று ‘கப்சா’ விடும் ஹிந்து அதில் சும்மா துணி தோய்ப்பதும், குளிப்பதும் எவ்வளவோ மேல்.

    (edited and published)

  40. நல்ல கட்டுரை; நண்பர் திருமலைக்கு நன்றி.
    ——————————————————————-
    இதுவும் கடந்து போகும்…

    —————————————
    வீட்டைப் பெருக்கி
    வீதியில் தள்ளியாயிற்று.
    வீடு சுத்தமாயிற்று.
    வீதி குப்பையாயிற்று.
    தெருமுனைக் குப்பையை
    வாகனத்தில் கடக்கலாம்;
    நதியின் வீச்சம் தான்
    குமட்டுகிறது.

    வீட்டுக் கழிவுநீரே
    சாக்கடை வாயிலாய்
    நதியென நடமாடுவதால்
    மூக்கைப் பொத்தியபடி
    கடந்து விடலாம்.
    ஆனாலும்,
    நதிப்படுகையில்
    ஆழ்குழாய்க் கிணறு
    அமைத்த உள்ளாட்சிக்கு
    சுயபுத்தியும் இல்லை.
    சொந்த புத்தியும் இல்லை.
    —————————————-
    காண்க: https://kuzhalumyazhum.blogspot.com/2010/03/blog-post_12.html
    +
    உபதேசம்— https://kuzhalumyazhum.blogspot.com/2010/02/72.html
    நுரை — https://kuzhalumyazhum.blogspot.com/2009/12/34.html

  41. நமது தேசமே வாழ்ந்தது இயற்கையின் மடியில்தான் . என்றைக்கு பணமே பிரதானம்,மேற்க்கத்தவர்களின் கலாசாரம் சிறந்தது என்ற எண்ணம் நமது படித்த
    மக்களிடம் உண்டானதோ அப்போழ்திலிருந்து ஆரம்பித்து விட்டது நமது தேசத்தின் இயற்கையின் பேரழிவு.வேப்பமரம் என்றால் மாரியம்மன்,அரச மரம் ஆலமரம் என்றால் பிள்ளையார்,மரத்துக்கோர் மகேசனை கும்பிட்டு மரங்களையும் ஆற்றங்கரையிலிருக்கும் ஆண்டவனையும் அவன் முன் பயணிக்கும் நதிகளை நமது தாயாகவும் வணங்கி போற்றிவந்த நமது முன்னோர்கள் ஏன் நாமும் கூடத்தான் இன்று வெறும் மாயைக்கு மயங்கி அழிந்து கொண்டு வருகிறோம் இந்த நிலை மாறுமா?கண்கெட்ட பின்தான் சூரிய நமஸ்காரமா?
    ஈஸ்வரன்,பழனி.

  42. மிகவும் அருமை திருமலை! மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் வாழும் விதி நமக்கு அமைந்து விட்டது. நமது ஹிந்து சம்ப்ரதாயம் மட்டுமே அனைத்தையும் இறைவனாகப் பார்க்க பழக்கி உள்ளது. படைத்தவனும் படைப்பும் ஆண்டவனே. நீரின் அவசியம் குறித்து ஒரு மேடையில் கேட்டது நினைவுக்கு வருகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாள் தேவை சுமார் 10000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. நாம் குடிக்க, சமைக்க, குளிக்க, துணி துவைக்க மட்டுமே நினைக்கிறோம். ஆனால் ஒரு நாள் நாம் உண்ணும் உணவைத் தயாரிக்கத் தேவையான தண்ணீரின் அளவை கணக்கிடுவதே இல்லை. உதாரணமாக ஒரு கிலோ அரிசி விளைய வேண்டுமானால் எவ்வளவு தண்ணீர் தேவைப் படுகிறது? நமது வம்சத்திற்கு நீரின் அவசியமும் அதை வணங்க வேண்டிய அவசியத்தையும் சொல்லிக் கொடுத்தே தீர வேண்டும். நன்றி திருமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *