ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்

universeஇந்தப் பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும் இறைவன் என்கிற ஒரு பெரிய ஆளுமை- மிக மிகப் பெரிய ஆளுமை- உருவாக்கினான் என்பது உலகத்திலுள்ள மூன்று முக்கிய மதங்களின் நம்பிக்கை. இத்தகைய சிருஷ்டிகர்த்தரின் நிரந்தரக் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோம். அவர் அவ்வப்போது இறைத்தூதர்களை உலகுக்கு அனுப்புவார். அவர்களிடம் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் எப்படி உண்மையான இறைவனான தன்னை- தன்னை மட்டுமே வணங்க வேண்டுமெனச் சொல்லுவார். அப்படி வணங்காதவர்களை மறுமையில் தண்டிப்பார். இதுதான் ஆபிரகாமிய மதங்களின் நிலைப்பாடு.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக ஐரோப்பாவிலும் சற்றேறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக அரேபியாவிலும் இந்தக் கோட்பாடு கோலோச்சி வந்துள்ளது. நவீன காலத்துக்கு முன்னால் மிகச்சிறந்த முறையில் அரசதிகாரத்தைக் கட்டியெழுப்ப இந்த இறைநம்பிக்கை உதவியாக இருந்துள்ளது. எலைன் பேகல்ஸ் என்கிற விவிலிய அறிஞர் இதை, “ஏக ஆண்டவன் நம்பிக்கையின் அரசியல்” என்றே சொல்கிறார். ஆனால் பாரதிய ஆன்மிக மரபுகள் இத்தகைய ஆண்டவன் மீதான நம்பிக்கைக்கு எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன? இதை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த முன்னூறு ஆண்டுகள் நிலவிய காலனிய ஆதிக்கத்தில் இந்த ஆபிரகாமிய இறைநம்பிக்கையே ஆதர்ச நம்பிக்கையாக இந்திய மக்களுக்கு எடுத்து வைக்கப்பட்டுள்ளது. எம்.என்.ராய் போன்ற அறிஞர்களும் ஈவெரா போல போலிப்பகுத்தறிவு பேசிய இனவாதிகளும் கூட ஆபிரகாமிய மத நம்பிக்கையை ஆதர்ச மத நம்பிக்கையாக நம் மக்கள் முன் வைத்தனர். இந்துக்களும் தமது இறைக் கோட்பாடுகளை ஆபிரகாமிய சட்டகத்தில் பிரதி எடுக்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக “நான் முருகனை நம்புகிறேன். நீ ஏசுவை/அல்லாவை நம்புகிறாய்” என மத-ஒப்புமை பேச ஆரம்பித்தனர். ஆனால் உண்மை வேறுவிதமானது; இதனை இந்துக்கள் குறிப்பாகவும் இந்திய மக்கள் பொதுவாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

cover_andavan-maruppum-aanmigameஇதற்கான ஒரு நல்ல அறிமுகமாக சிந்தனையைத் தூண்டும் ஒரு முனைப்பாகவும் ஒரு புத்தகம் உதவும்.

பத்மன் எழுதிய “ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே” என்கிற புத்தகம்தான் அது. விகடன் பிரசுரம். தலைப்பே ஓர் அதிர்ச்சியைத் தர வேண்டும் என்பதாக வைக்கப்பட்டிருக்கிறது. பாரதத்தின் இறை-மறுப்புப் பாரம்பரியத்தை இந்த நூல் எளிய முறையில் தொடக்கநிலை அறிமுகம் அளிக்கிறது. முதலில் ஆன்மிகம் என்றால் என்ன என பத்மன் விளக்குகிறார்.

சில வீச்சுக்கள்:

  • மதங்களில் ஓரளவு ஆன்மிகம் இருக்கிறது. ஆனால் மதங்களுக்குள்ளே சிறைப்படாமல் அவற்றைத் தாண்டி இயங்குகிறது.
  • வாழ்க்கையை தனக்கும் பிற உயிர்களுக்கும் பயனுள்ளதாக அமைத்துக் கொள்வதுதான் ஆன்மிகமே தவிர, ஏதோ சில பிரதிபலன்களுக்காகக் கெஞ்சுவது அல்ல.
  • அறிவியலை மறுப்பதல்ல ஆன்மிகம். அறிவியலின் தீட்சண்யத்தால் தீர்க்கமான உண்மையை தரிசிப்பதே ஆன்மிகம்.
  • ஆன்மிகத்தைப் பொருத்த மட்டில் ஆண்டவனை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் இரண்டாம் பட்சம்தான்.

அடுத்த இரண்டு அத்தியாயங்களில் ஆசிரியர் ஆஸ்திகம் நாஸ்திகம் என்கிற வகைப்பாட்டை விளக்குகிறார். பாரத ஆன்மிக மரபில் இப்பதங்கள் கையாளப்படுவதற்கும் இன்றைய ஆபிரகாமிய சிந்தனைக் கலப்பின் பின் பயன்படுத்தப்படும் விதத்துக்குமான வேறுபாட்டை விளக்குகிறார்: இருப்பின் ஆதாரத் தன்மையை மறுப்பதே நாஸ்திகமன்றி சிருஷ்டிகர்த்தா குறித்து பாரதிய தத்துவ விசாரம் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்கிறார் அவர். (ஆனால் ஒரு தொடக்க அறிதல் முறையாக சிருஷ்டியை ஒரு தேவன் செய்தான் என்கிற கோட்பாட்டை வைத்து விளையாடிவிட்டு அதனை வளரும் குழந்தை பொம்மைகளை உதறுவது போல உதறியிருக்கிறார்கள். இதே ஞானத்தை அனைத்து மக்களும் அறியவேண்டும் என்பதில் இந்து ஞானிகள் கவனமாக இருந்திருக்கிறார்கள். எனவே ஹிந்துத் தொன்மங்களில் தொடர்ந்து படைப்பின் தேவனான பிரம்மன் ஆணவ-பங்கம் செய்யப் படுகிறான். முருகன், கண்ணன், சிவன் ஆகியோரிடம் பிரம்மா ஆணவம் காட்டி பின் வருந்திய கதைகள் பாரதமெங்கும் எளிய மக்களின் பேச்சு வழக்கிலும் உள்ளது.)

பார்க்க: டார்வின் – முருகன் வைத்த குட்டு

richard-dawkinsமுக்கியமான நாஸ்திகத் தத்துவங்களான லோகாயதம், நியதிவாதம், அக்கிரியாவாதம், சசஸ்தவாதம், விச்சேபவாதம் ஆகியவற்றை எளிமையாக விளக்குகிறார் ஆசிரியர். முக்கியமாக நியதிவாதம், அக்கிரியாவாதம், சசஸ்தவாதம் ஆகியவை இணைந்து ஆசீவகம் உருவாகியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். அண்மையில் பிரபல உயிரியலாளர் ரிச்சர்ட் டாவ்கின்ஸ் எழுதிய “இறைவனெனும் மனச்சீர்கேடு” (The God Delusion) எனும் நூல் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளானது. இந்நூலைத் தாக்கியவர்கள் முன்வைத்த ஒரு முக்கிய வாதம், “நம் அறச்சிந்தனைகளுக்குக் கடவுள் நம்பிக்கை ஓர் அடிப்படை” என்பது. டாவ்கின்ஸ் இதை மறுத்து கடவுள் நம்பிக்கை எப்படி மோசமான அறச்சீர்கேடுகளை நியாயப்படுத்தியிருக்கிறது எனத் தனது நூலில் வாதிட்டுள்ளார். ஆனால் இந்த நூலைப் படித்திருந்தால் அவர் ஒருவேளை நேர்மறை ஆதாரமே கூட கொடுத்திருக்க முடியும். பத்மன் முழுமையான நாஸ்திகர்களான ஆசீவகர்கள் உயர்ந்த நற்பண்புகளுடனும் வாழ்வியல் சிந்தனைகளுடனும் அற மாண்புடனும் வாழ்ந்ததாக விளக்குகிறார். (பக். 44)

வேத ஆன்மிகத்திலும் இறை மறுப்பு இருப்பதை பத்மன் கூறுகிறார். நாஸதீய சூக்தத்தை இதற்கான சான்றாக அவர் முன்வைக்கிறார்:

ஆக, ஆண்டவனை நாஸதீய சூக்தம் முற்றிலும் மறுக்காவிட்டாலும் அவரது இருப்பையும் ஆளுமையையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. அதே நேரத்தில் ஒரு வகையில் இயற்கையாகத் தோன்றிய இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி உயிராகவும், இப்பிரபஞ்ச இயக்கத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் சக்தியாகவும் ஆண்டவனை உருவகப்படுத்துகிறது. முரண்களுடனான இந்தச் சமரசம்தான் ஆண்டவன் மறுப்பு ஆன்மிகத்தின் ஆணிவேர்.

சாங்கியம், வைசேக்ஷிகம், மீமாம்சம் ஆகியவற்றை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்குகிறார். இவை அனைத்திலும் ஆண்டவன் ஒரு மையப்புள்ளியாக இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பின்னர் சித்தர் பாடல்களில் இதே தன்மை இருப்பதை விளக்குகிறார். இயல்பாக இதில் முன்னிலை பெறுவது சிவவாக்கியர் பாடல்கள்தாம்.

சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ? பூதமைந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மையென்ன தன்மையோ

பொதுவாக நம்பிக்கையின் அடிப்படையில் சமூக அதிகாரம் மேல்வர்க்கத்தினரிடம் சென்றுவிடும். நம்பிக்கை இந்நிலையில் தனிமனிதச் சார்பு என்பதற்கு அப்பால் சமூகக் கட்டுப்பாட்டுக் கருவியாகிவிடுகிறது. மேற்கில் இது முழுதாக விரிந்து படமெடுத்து ஆடி, பின்னர் அடங்கியது. இங்கு மிகவும் குவிமையமற்ற நிலையில் அப்போக்கு அவ்வப்போது சமூக தேக்கநிலையாக எழுகிறது. அதனைக் கண்டிக்க ஆன்மிகத் தேடலை ஒரு சமரசமற்ற சமூக ஆன்மிகச் சமத்துவமாக சித்தர் பாடல்கள் முன்வைக்கின்றன. இதனை பத்மன் மேற்கோள் காட்டும் சிவவாக்கியர் பாடல்கள் தெளிவாக காட்டுகின்றன. பல வேத செய்யுட்கள் மூலம் எப்படி ஆண்டவனை முன்னிறுத்தாமல் சகல உயிர்களுடனும் ஆன்மநேய ஒருமை பூண்வதே வேதமார்க்கத்தில் ஆன்மிகமாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என ஆசிரியர் விளக்கிக் கூறுகிறார்:

ஆக, உலகின் எஜமானனாக ஆண்டவனை முன்னிறுத்தி, அவரது விருப்பத்தால் அல்லது அவரைத் துதி செய்வதாலேயே மோட்சம் கிட்டும் என்று வலியுறுத்தாமல் உலகின் தோற்றம், ஆன்மவிளக்கம், விடுதலைக்கான வழிமுறைகள் ஆகியவற்றை அறிவியல் மற்றும் உளவியல் ரீதியில் அலசி ஆராய்வதே ஆண்டவன்மறுப்பு ஆன்மிகத்தின் அடிப்படை. இது வைதீக மார்க்கத்திலும் விரவிக் கிடக்கிறது. (பக்.91)

பாரதத்தின் அவைதீக ஆன்மிக மரபுகளை அடுத்த ஐம்பது பக்கங்கள் விளக்குகின்றன. ஆரிய இனவாதத்தின் அறிவியல் அடிப்படையற்ற தன்மையையும் இங்கு ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆரியன் என்பவன் யார்? புத்தரின் வார்த்தைகளில் சொன்னால்:

எந்த விதத்திலேனும் பிற உயிர்களை வதைப்பவன் எவனும் ஆரியனல்லன். உயிர்களுக்கு இம்சை புரியாதவனே ஆரியன் எனப்படுவான்.

நதேன ஆரியோ ஹோதி யேன பாணானி ஹிம்ஸதி
அஹிம்ஸா ஸப்ப பாணானாம் ஆரியோ தி பவுச்சதி
(தம்மபதம், தம்மட்டவக்கோ, 19.15)

அதாவது ஆரியன் என்போன் அறவோன் எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமல் நன்மை செய்பவனே. ஆம், திருவள்ளுவரின் அந்தணனுக்கான வரையறை புத்தரின் எதிரொலியாகவே இருக்கிறது. ஒருவேளை இந்த விதத்தில் வேண்டுமென்றால் பார்ப்பனர்களெல்லாம் ஆரியர்கள் என்று சொல்லலாம். ஆனால் இந்த பார்ப்பனத் தன்மை பிறப்படிப்படையில் எழுவதல்ல; ஆரியர் எனும் பதமும் இன அடிப்படையில் எழுந்ததல்ல.

நூலின் தொடக்கவுரையிலேயே ஆசிரியர் இந்த நூல் காலத்தின் கட்டாயம் எனக் கூறியுள்ளார். உண்மைதான்.

போலியான ஆன்மிகச்சந்தை ஒன்றே உருவாகியுள்ள ஓர் அவலநிலை ஒரு பக்கம்; ஆனால் அதைவிடவும் பன்மடங்கு பெரிய தேசிய அபாயமாகவே அந்நியப் பண உதவியுடன் ஆக்கிரமிப்பாகவே நடத்தப்படும் மனநோய்ப் பரவலாக மதமாற்றம் மறுபக்கம்;  இப்படி நடக்கும் போது, இவையெல்லாம் போதாதென்று போலிப் பகுத்தறிவு வேறு வக்கிரமான காமெடி-வில்லனாக தமிழ்நாட்டில் நிலவி மக்களைக் குழப்பி வருகிறது.

இந்தச் சூழலில் நம் உண்மையான ஆன்மிகப் பாரம்பரியத்தைத் தெளிவாகவும் துணிவாகவும் பேசியுள்ளார் ஆசிரியர்.

ஒவ்வொரு தமிழ் ஹிந்துவும் படிக்க வேண்டிய நூல் – ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே!

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே
ஆசிரியர்: பத்மன்

விகடன் பிரசுரம்
பக்கங்கள்:144
விலை ரூ. 55

12 Replies to “ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்”

  1. அருமை! காலத்திற்கு ஏற்ற புத்தகம்.

    ரிச்சர்ட் டாவ்கின்ஸின் புத்தகத்தைத் தமிழில் எடுத்துச் சொல்லி உண்மையான நாத்திகம் என்றால் என்ன என்று தமிழ்ச் சூழலில் யாராவது விளக்கமாட்டார்களா என்று எண்ணிக் கொண்டிருந்தேன்..

    பாரத ஞான, தத்துவ மரபில் வேர்கொண்டு அதை அழகாக ஒருவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்று கேட்க கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.

    ஆசிரியர் பத்மன் அவர்களுக்கு மிக்க நன்றி. விகடன் பிரசுரத்திற்குப் பாராட்டுகள்!

  2. Pingback: Indli.com
  3. அரவிந்தன் அவர்களே

    நல்ல கட்டுரை – ஒரு சிறு விளக்கம் – வைசேசிகம் ஆண்டவனை மறுக்கிறது என்பது புதிதாக இருக்கிறது – சான்க்யகாரர்கள் ஆண்டவன் வேண்டாம் என்கிறார்கள். மீமாம்சகாரர்கள் கர்மாவை செய்தால் பலன் உண்டு அதற்கு ஆண்டவன் ஏன் இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்

    இந்த மற்றும் புத்த சூன்யவாத கொள்கையை மறுப்பதே நியாய மதத்தின் மிக முக்கிய குறிக்கோளாக இருந்திறிக்கிறது – பார்க்க நியாய குஷுமாஞ்சலி (இதில் கௌதமர் (புத்தர் அல்ல) பத்து அனுமானத்தை கொண்டு ஏன் இஷ்வரன் என்று ஒருவர் இருந்தே தீர வேண்டும் என நிரூபணம் செய்கிறார் (இல்லை என்றால் பல இடங்களில் லாஜிக் இடிக்கும் அவ்வளவே அவர் வாதம்) – சங்கரரும் இதில் தொடங்கி இச்சுவர வாதத்தை பெருமளவில் முன்னேற்றி செல்கிறார். இவர்களின் வாதம் வெறும் வறட்டு வாதமாக இல்லாமல் (அதாவது அறவாழ்விற்கு கடவுள் கட்டாயம் தேவை, வேதத்தில் சொல்லி இருக்கிறது, நான் கடவுளை உணர்ந்து இருக்கிறேன் என்பதுபோல் அல்லாமல்) நமது சிந்தனையை தூண்டும் ஒன்றாக இருக்கிறது

    கௌதமரின் நியாய மற்றும் கனாதரின் வைசேசிக மதத்தவர் இருவருமே ஈஸ்வரனை முக்கிய காரணமாக (efficient cause) ஒத்துக் கொண்டுள்ளனர் – ஒரு வேலை பத்மன் அவர்கள் யோக மதத்தை பற்றி சொல்கிறாரா என்று தெரியவில்லை – யோக மதத்தில் ஈஸ்வரனை ஒத்துக் கொண்டாலும் முக்கிய காரணமாக எங்கும் கொள்வதில்லை

    மீமாம்ச மதத்தவர் கடவுளை மறுப்பதில்லை மாறாக கடவுளை பற்றி பேசுவதில்லை – இதற்க்கு காலச்சூழல் (புத்தத்தின் தாக்குதலுக்கு பின் தோன்றியது) தான் காரணமே அன்றி கடவுள் மறுப்பு கொள்கை அல்ல

    கடவுளை முக்கியாமாக கொள்ளாத இவர்களும் ஏனோ வேதத்தை பிரமாணமாக கொள்கின்றனர் ?

    புராண கதைகளை கொண்டு (பிரமன் தாழ்த்தப்படும்) கடவுள் நிராகரிப்பை நிர்ணயம் செய்ய முடியாது என்பது என் கருத்து (அவைகள் உண்டான காரணங்கள் வேறு) மற்றபடி ஆன்மீக வாதியாக இருக்க கடவுளை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும் என்பதில்லை தான்.

    உங்களின் கட்டுரை பலருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உண்மையை அறிய உதவும் என்று நம்புகிறேன்

  4. //இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும் இறைவன் என்கிற ஒரு பெரிய ஆளுமை- மிக மிகப் பெரிய ஆளுமை- உருவாக்கினான் என்பது உலகத்திலுள்ள மூன்று முக்கிய மதங்களின் நம்பிக்கை.//

    இதை சொல்லும் போது , நாம் சிறிது கவனமாக இருக்க வேண்டும். முதல் மூன்று முக்கிய மதங்களில் இந்து மதமும் ஒன்று.

    உலகின் மூன்று முக்கிய மாதங்களாக இருப்பவை கிறிஸ்தவ, இசுலாமிய , இந்து மதங்களே, நான்காவது முக்கிய மதமாக புத்த மதமே உள்ளது. இதை எழுதுவதால் எந்த ஒரு மதத்தையும் நாம் குறைத்து மதிப்பிடவில்லை, சமண, சீக்கிய, ஜோராச்த்ரிய, கண்போசியஸ், டாவோயிச, யூத மதங்களும், இன்னும் நாம் அறிந்த அறியாத எல்லா மதங்களும் முக்கிய மதங்களே.

    இந்து மத்தைப் பொறுத்த வரையில் படைப்பு என்பதே ஒரு தோற்றம் என்பதாக- சிருஷ்டி என்பதே ஒரு திருஷ்டி – என்று சொல்லப் படுவது ஒரு முக்கியக் கோட்பாடாக உள்ளது.

    நாமே இப்போது குழந்தைகளோடு விளையாடுகிறோம். அவர்கள குழந்தையாக இருக்கும் போது நமக்கு மிக மகிழ்வு அளிக்கும் வகையில் உள்ளனர். அவர்கள் வயதான பிறகு நம்மோடு இருப்பார்களா என்பது தெரியாது. அப்படியானால் நம்மோடு மகிழ்ச்சியுடன் விளையாடிய சிறுமி எங்கே? என்ன ஆனாள்? நாமே பிள்ளைப் பருவத்திலே சிறந்த பாராட்டுப் பெற்ற மாணவனாக இருந்திருக்கக் கூடும். இப்போது அந்த சிறுவன் எங்கே, அவன் துடி துடி துடிப்பு எங்கே?

    எனவே இந்த உலகம் என்பதே மாயை என்பது ஆதி சங்கரரின் மிக முக்கியக் கோட்பாடு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மாயையே அறிவை மறைத்து நம் உண்மை நிலையை அறியாமல் தடுக்கிறது என்பதையும் ஆதி சங்கரர் மட்டும் அல்ல, கிரிஷ்ணரும் சொல்லி இருக்கிறார்.

    எனவே இறைவன் உலகைப் படைத்ததாக இந்து மதமும் சொல்லுகிறது என சொல்லும் முன் கொஞ்சம் யோசித்தே சொல்ல வேண்டும். இது எல்லாமே மாயத் தோற்றம் என்றால், உயிர்கள் படும் அத்தனை கஷ்டங்களுக்கும் கடவுள் பொறுப்பல்ல என்பதாகவும் ஆகிறது. இல்லை என்றால் இவ்வளவு கஷ்டத்துக்கும் காரணம் கடவுள் என்று ஆகிறது.

    இதை எல்லாம் நான் எழுதுவதால் ஆதி சங்கரின் அத்வைத மற்றும் மாயமயமியம் அகிலம் கோட்ப்பாட்டுக்கும் நான் சாட்சி கொடுப்பதாக கருத வேண்டாம். அத்வைதமோ, துவதைமோ, விஷிஷ்டாத்வைதாமோ எதுவாக இருந்தாலும் நாம் மன நிலையை உணர்த்தி, அனுபவத்தின் மூலம் உண்மையை அறிந்து அப்போது எந்த வித ஐயமும் இன்றி சொல்ல முடியும்.

    இப்போதைக்கு நாம் சொலவது என்னவென்றால், இந்து மதத்தின் மிக முக்கிய காரணிகளில் ஒருவரான ஆதி சங்கரரின் அடிப்படைக் கருத்தான மாயா வாதத்தை நாம் ஒதுக்கி விட முடியாது என்பதயும், சுவாமி விவேகானந்தரும் தன்னை அத்வைதி என சொல்லி உள்ளதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

    அனேகமாக ஆசிரியர் குறிப்பிட்ட மூன்று முக்கிய மதங்கள் கிறிஸ்தவ, இசுலாமிய , யூத மதமாக இருக்கக் கூடும். ஆனால் யாருக்கும் ஐயம் வரக் கூடாதே என்ற வகையில் தான் இதை குறிப்பிட்டு எழுதுகிறோம்.

    மேலை நாட்டுக் காரர்களுக்கு உலகின் முக்கிய மூன்று மதங்களாக- கிறிஸ்தவ, இசுலாமிய , யூத- இவை மட்டுமே இருக்கக் கூடும். அதாவது மதக் காரணக்களுக்காக பெரும் போர்களை செய்து இரத்த ஆறு ஓட விடாத மதங்களை அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணாமல் இருக்க கூடும்.

    ஆனால் நாம் எழுதும்போது கவனமாக இருக்க வேண்டும், உண்மை என்ன என்று பார்க்க வேண்டும். புள்ளி விவரங்களைப் பார்க்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் இந்து என்பவன் வெறுமனே அடையாளத்துக்காக ஒரு மதத்தை சர்டிபிக்கட்டில் வைத்துக் கொள்ளாமல் உண்மையிலே வழிபாட்டில், ஆன்மீக செயலில் ஈடுபடுபவன்.

  5. //வைசேசிகம் ஆண்டவனை மறுக்கிறது என்பது புதிதாக இருக்கிறது//
    //கௌதமரின் நியாய மற்றும் கனாதரின் வைசேசிக மதத்தவர் இருவருமே ஈஸ்வரனை முக்கிய காரணமாக (efficient cause) ஒத்துக் கொண்டுள்ளனர்//

    பொதுவாக அறிஞர்கள் நியாய-வைசேஷிகம் முதலில் இறை-இன்மை தத்துவங்களாகவே விளங்கின என்கிறார்கள். வைசேஷிகர்கள் இறை என்பது ஆதி அணுக்களுடன் இணை-தோற்றம் கொண்டதாகவே கருதுகிறார்கள். அணுக்களை படைத்தது இறை என்பதை ஏற்கவில்லை. கணாதரின் வைசேஷிக சூத்திரங்கள் (கிமு இரண்டாம் நூற்றாண்டில்) இந்த தரிசனத்தில் இறை தேவைப்படவில்லை. கிபி ஐந்தாம் நூற்றாண்டில் பிரகஸ்தபாதரே வைசேஷிகத்துக்குள் இறையைக் கொண்டு வருகிறார். மேலும் முக்கியமானது வைசேஷிக இறை என்பது உலகைப் படைத்ததல்ல ஏற்கனவே இருக்கும் அணுக்களின் செயலியக்கத்தை உருவாக்கும் efficient cause ஆகவே அமைகிறது – first cause of creation ஆக அல்ல. விசிஷ்டாத்வைதத்திலும் கடவுள் முதல் காரணி என கருத முடியாது. அவன் இயக்கமாகவும் உருவங்களாகவும் உள்ளான். ஆனால் இறைவன் படைத்தான் என்பது ஆபிரகாமிய மதங்களில் பெரிது படுத்தப்படுகின்றது. அதுவே அவனது ஆக முக்கியமான செயல். அவன் ஒரு பன்மடங்கு பூதாகாரமாக்கப்பட்ட ஆணவ ஆளுமை. இந்த ஆணுவ ஆளுமையை நம்பாதவன் இறை மறுப்பாளன். கடந்த இருநூறு ஆண்டுகளில் ஹிந்துக்களும் இந்த அருவெறுப்பான ஆண்டவன் கோட்பாட்டிலிருந்து அடிப்படையிலேயே மாறுபடும் இறைத் தத்துவங்களே தம்முடையவை என்பதை மறந்துவிட்டார்கள். எனவே ஆபிரகாமிய பார்வையில் ஒரு விதத்தில் இந்திய ஆன்மிகமே இறை மறுப்பு ஆன்மிகம்தான்.

  6. //உலகத்திலுள்ள மூன்று முக்கிய மதங்களின் // என்றுதானே சொல்லியிருக்கிறேன். உலகத்தின் முதல் மூன்று முக்கியமதங்கள் என்று சொல்லவில்லையே. யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம் இவை மூன்றுமே உலக மதங்கள்தாம். முக்கிய மதங்கள்தாம். இதற்கு பொருள் உலகின் முதல் மூன்று முக்கிய மதங்கள் என்பதல்ல. இவற்றின் மதவரையறை நம்பிக்கை சார்ந்தது. புத்தகம் சார்ந்தது. ஆனால் பாரத ஆன்மிக மரபுகளான ஹிந்து தர்மமோ சத்தியத் தேடலையும் அனுபவத்தையும் சார்ந்தது. இவ்விதத்தில் இவை இரண்டுமே இரு வேறு சாத்தியங்களை மானுட ஆன்மிகத்தேவைக்கு முன்வைக்கின்றன. ஆபிரகாமிய மதங்கள் முன்வைக்கும் சாத்தியம் மோதலையும் அழிவையும் ஏற்படுத்துவது. பாரத ஞான மரபான ஹிந்து தர்மம் முன்வைக்கும் சாத்தியம் அனைவரும் சேர்ந்து வாழும் சாத்தியத்தையும் ஆன்மிகத்தேடலை சமூகத்தின் மீது நம்பிக்கைச் சுமையாக சுமத்தாத பண்பாட்டை முன்வைப்பது.

  7. திரு. நீலகண்டன் அவர்களே,

    தவறு என்பதாக சொல்லி நான் சுட்டிக் காட்டவில்லை. படிப்பவர் தவறாக எண்ணி விடக் கூடாதே என்பதற்காகவே இதை எழுதினேன். நானே முதலில் படிக்கும் போது, “உலகில்” மூன்று முக்கிய மதம் என்றால் அதில் இந்து மதமும் தானே என்றே எண்ணினேன்.

    “உலகில்” உள்ள மூன்று முக்கிய மதங்கள் என்று குறிப்பிட்டால் அதில் நிச்சயமாக இந்து மதத்தையும் சேர்த்து குறிப்பிடுவதாகவே அமையும். “மத்திய தரைக் கடல் பகுதில் உள்ள முக்கிய மதங்கள்” என்று குறிபிட்டால் வேண்டுமானால் அதில் யூத மதத்தை சேர்க்கலாம்.

    யூத மதத்தை முக்கிய மதமாக கிறிஸ்தவர்கள் கருதுகிறார்கள என்றால், இயேசுவை தாவீதின் வம்சத்தவராக காட்ட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. அப்போதுதான் இயேசுவை இயேசுவை கடவுளின் மகனாக அவர்களால உறுதி செய்ய முடியும். மற்றபடி கொள்கை அடிப்படையில் கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்கள் இரண்டுமே யூத மதத்தின் அடிப்படையிலே அமைக்கப் பட்டு உள்ளன.

    இஸ்லாமியர்கள் யூத மதத்தை, யூதர்களை முக்கியமாக கருதினார்கள் என்றால் அந்தக் காலத்தில் இஸ்லாமியர் அரேபியப் பகுதியின் முக்கிய இனங்களுள் ஒன்றால் இஸ்ரவேல் இனத்தவரையும் அப்படியே ” இஸ்லாமியராக” ஆக்குவது அவர்களுக்கு பெரிய சமுதாயத்தை அமைக்க உதவும் என்பதாலே. “பாரு நானும் ஆதம் ஏவாள் கதையை சொல்கிறோம், நாங்களும் ஆபிரகாமை ஒத்துக்கிறோம், ஒன்னுக்குள்ள ஒன்னு” என்று சொல்லிப் பார்த்தார் முகமது, ஆனால் அவர்கள ஒப்பவில்லை என்றதும், வாளை உருவி விட்டார்கள்- அவ்வளவுதான் மதிப்பு!

    மற்றபடி மோசசின் இனவாத, மதவாத கடுமை கோட்பாடுகள், யூதர்களை இணைத்து இராணுவ வெற்றிகளை பெற அவருக்கு உதவியதால் , அதே பார்முலாவை முகமதுவும் கையிலே எடுத்தார். ஆனால் முகமது இனவெறியை விட்டு விட்டார்.

    புள்ளி விவர அடிப்படையில் நோக்கினால் சீக்கிய மதம் கூட யூத மதத்தை விட அதிக அளவில் பின்பற்றப் படுகிறது.

    அதே நேரம் உலகில் பலருக்கு யூத மதம் என்று ஒன்று இருப்பது கூடத் தெரியாது. நாம் சீனாவுக்கோ, ஜப்பானுக்கோ சென்று யூத மத்தைப் பற்றி கேட்டுப் பார்த்தால் புரியும்.

    சமீபத்தில் சீன நாட்டில் ஷங்காய் நகரில் வசிக்கும் ஒரு சீன இளைங்கர் பணி நிமித்தமாக எங்கள் வூருக்கு வந்தார். ஒரு வாரம் தங்கி இருந்தார். எங்கள அலுவலகத்திற்கு அருகில் ஒரு பெரிய மசூதி இருக்கிறது. அங்கே 5 வேளையும் லவுட் ஸ்பீக்கரில் தொழுகை அழைப்பு விடுக்கப் படும்.மூன்று நாட்கள் கழித்து மாலையில் உணவு அறிந்து விட்டு, சீன நண்பரை அவருடைய ஹோட்டலில் கொண்டு விட சென்று கொண்டு இருந்தேன். அப்போது மசூதியில் இருந்து தொழுகை அழைப்பு சத்தமாக வந்தது. சீன நண்பர் ஆவலுடன் என்னிடம் கேட்டார், ” Why is he shouting ?” .

    அந்த அளவுக்கு தான் இருக்கிறது “முக்கிய மதங்களின்” செல்வாக்கு. யூத மதம் உட்பட எந்த மதத்தையும், நான் குறைத்து மதிப்பிடவோ, வெறுக்கவோ இல்லை. எல்லா மதங்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களை ஆக்க பூர்வமாக அணுகுவதே நமது முறை.

    ஆனால் பத்து மில்லயன் மக்களால மட்டுமே பின்பற்றப் படும் ஒரு மதத்தை, ஒரு இனத்துக்கு மட்டுமே வாழ வைக்க உருவாக்கப் பட்ட மதமாக அவர்களே சொல்லும் ஒரு மதத்தை, ஒரு இனத்தவரால் மட்டுமே பின்பற்றப் படும் ஒரு மதத்தை உலகின் முக்கிய மதமாக கருத வேண்டியது எப்படி?

    உலகில் பொருளாதார, அறிவியல் மற்றும் இராணுவ சக்தி வூசல் மீண்டும் கிழக்கை நோக்கி திரும்புகிறது. இந்து மதம் பாலி, தாய்லாந்து , மலேசிய, பர்மா உள்ளிட்ட பல நாடுகளில் பல இனத்தவராலும் பின்பற்றப் படும் அமைதி மார்க்கமாக இருப்பது நீங்கள் அறிந்ததே.

    தமிழ் நாட்டின் இரண்டு முக்கிய அரசியல் வாதிகள் என்றால் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை தான் எழுதலாமே தவிர, அன்பழகன் , தங்கபாலு, ஆகியோரை குறிப்பிட முடியுமா?

  8. விகடன், கிழக்கு, காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் தமிழக அந்தணர்களால் நடத்தப்பட்டாலும், இந்து மதத்தின் அறிவுப் பாரம்பரியத்துக்கு மாறான – மிகவும் மேலோட்டமான, உள்ளீடற்ற நூல்களையே வெளியிட்டுத் தமிழ் இந்துக்களை மேலும் மேலும் முட்டாள்களாகவும், மௌடீகர்களாகவும் ஆக்கிக்கொண்டிருக்கின்றன.

    ஆனாலும், அத்திப் பூத்தாற்போல எப்போதாவது இதுபோன்ற ஒரு சில நூல்களை இப்பதிப்பகங்கள் வெளியிடும்போது, அவை கவனிக்கப்படாமல் போய்விடுவது இயல்பாக நடக்கக்கூடியதே. அத்தகைய ஒரு நல்ல நூலை நம் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது இவ்விமர்சனம்.

    – பா. ரெங்கதுரை

  9. அரவிந்தன் அவர்களே,

    ஒரு சிறு விளக்கம் – நியாய, வைசேசிக, சாங்க்ய, மிமாம்ச இதில் எந்த மதத்திற்குமே கடவுள் பெரிதாக தேவை படவில்லை – லாஜிக்/கர்மா இந்த இரண்டை வைத்துக் கொண்டு தான் அவர்களது தத்துவங்களை முன்னேற்றி செல்கிறார்கள் – அனால் இவர்கள் அனைவரும் வேதத்தை பிரமாணமாக ஏற்கிறார்கள்

    வேதம் அபௌரிஷமா பௌரிஷமா என்ற கேள்வி வருகையில் – நையாகரர்கள் அது பௌரிஷம் பரமாத்வால் சொல்லப்பட்டது என்கிறார்கள் – இதை மறுக்கும் வைசேசியர்கள் – வேதம் அபௌரிஷம் என்றும் சொல்கிறார்கள், கடவுலயம் ஒத்துக் கொள்கிறார்கள் – எங்கெல்லாம் அவர்களால் லாஜிக் மூலம் சமாதானாம் சொல்ல இயலவில்லையோ அங்கெல்லாம் கடவுள் வருகிறார் – இந்த வாரம் தான் இதன் மூல பாஷ்யம் படித்தேன்.

    கடவுளை பற்றி சொல்லாமல் இவர்களால் முழு சூத்ரங்களையும் எழுதி இருக்க முடியும் என்பதும் உண்மை தான்

    இவர்களுக்கு (இறை இன்மை) கடவுள் தேவை பட வில்லை என்பதை விட – கடவுள் பெயரை எடுத்தால் அப்பொழுது இருந்த சூழ்நிலையில் அவர்களின் கருத்தும் / நோக்கமும் பலவீனப் படும் என்பதாலேயே கடவுளை அவர்கள் முன் நிறுத்தவில்லை ஆனால் அவர்கள் கடவுளை மறுக்கவும் இல்லை

    சான்க்யத்திலும்(கபிலர் சொல்லவில்லை, பின் வருபவர் (-பெயர் நினைவில் இல்லை) ஏற்கிறார்), மிமாம்சத்திலும் (ஜைமினி சொல்லவில்லை, குமரில பட்டர் சொல்கிறார் ) முதலில் கடவுள் பற்றி எதுவுமே கூறாமல் பிறகு வரும் பாஷ்யகாரகள் கடவுளை ஏற்கிறார்கள்

    இந்திய தர்சனம் ஒன்றிலும் கடவுள் உருவாக்கினார் என்பதே கிடையாது – உருவாக்கினால் தான் காரணன் என்றில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் – ஒன்றாய் இருந்தாது பலவாகி பிறகு ஒன்றாகிறது
    எதுவும் உருவானதல்ல என்பதுவே இந்திய தர்சனங்களின் முடிவு – பிறப்பிக்கப் படுகிறது – மண்ணிலிருந்து குடம் போல – இதை eventual evolution என்று எடுத்துக்கொண்டாலும் சரியே

  10. திரு. அரவிந்த நீலகண்டன் அவர்களுக்கும், அவர் எழுதிய விமர்சனத்தைப் படித்து கருத்துகளை வழங்கி வரும் சிந்தனையாளர்களுக்கும் நூலாசிரியன் என்ற முறையில் எனது நன்றி. இப்படி ஒரு விமர்சனம் வந்திருக்கிறது என்பதை தெரியப்படுத்திய நண்பர் சரவணனுக்கும் நன்றி. வைசேசிகம் குறித்து சாரங் எழுப்பிய ஐயத்துக்கு நீலகண்டன் சரியான முறையில் பதில் தந்திருக்கிறார். கூடுதல் பதில்: கணாதர் மொழிந்த வைசேஷிகத்தில் உலகின் தோற்றத்துக்கு அணுக்கள்தான் பிரதானம் என்று கூறப்படுகிறது. நமது வினைகளால் தோன்றும் அபூர்வம், உலகின் மற்றும் உயிர்களின் தோற்றத்திற்கு காரணமாக விளக்கப்படுகிறது. ஆரோக்யமான விவாதங்கள்தான் நமது பாரம்பரியத்தின் பலம், வளம். அதைத் தொடர்வோம். அவகாசம் கிடைக்கும்போது நீண்ட விவாதத்தில் பங்கேற்கிறேன். தமிழ் ஹிந்துக்களுக்கு வேர்களின் வாசத்தை சுவாசமாக ஊட்டிவரும் தமிழ் ஹிந்து டாட் காம் இணைய தளத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புடன் பத்மன்

  11. நன்றி திரு பத்மன்

    இவர்கள் ஒரு கட்டத்தில் கடவுளை ஒத்துக் கொள்ள ஆரம்பித்தது வியப்பாக இருக்கிறது – மிமாம்சகர்கள் ஒத்துக் கொண்டதில் பெரிய விசேஷம் இல்லை – சான்க்யர்களும், வைசெசிகர்களும் கடவுளை முடஹ்ளில் முன் வைக்காமல் பிறகு முன் வைத்தது கொண்டது ஒரு வித வியப்பை தருகிறது.

    எதை ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இவர்கள் அனைவரும் ஏன் வினை, கர்ம, மோக்ஷம் இதெல்லாம் ஒத்துக் கொள்கிறார்கள் என்பதும் புரியவில்லை

    – சுத்தமான லாஜிக் என்பதிலிருந்து இதனால் ஒரு படி கீழே இறங்கி விடுகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்

    – வேதாந்திகளும் பிற மதத்தவரும் சண்டை போட்டுக் கொண்டது போல வைசேசிக, நியாய, மிமாம்சகர்கள் சான்க்யர்களுடன் சண்டை போட்டுக் கொண்டதாக தெரிய வில்லை

    – சான்க்யர்களின் கொள்கையான சத்கார்ய வாதத்தை தான் விசிஷ்டாத்வைதம் ஒத்துக் கொள்கிறது

    இவைகளை பற்றிய உங்களது கருத்தை நேரம் கிடைக்கும் பொது எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *