சில ஆழ்வார் பாடல்கள் – 1

ஊட்டி இலக்கிய சந்திப்பில், 28-8-2010 அன்று  ஆழ்வார் பாசுரங்களின் கவிதானுபவம் பற்றி ஆற்றிய உரை.

திருவாய்மொழி உட்பட, திவ்யப் பிரபந்த தொகுப்பில் உள்ள எல்லாப் பாசுரங்களும் ”பத்து”என்று சொல்லப் படும் பதிகங்களாக வகைப் படுத்தப் பட்டுள்ளன. எல்லாப் பாசுரங்களும் விஷ்ணு பக்தியின் பல பரிமாணங்களைத் தான் பேசுகின்றன என்றாலும், ஒவ்வொரு “பத்து”க்கும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் (theme) உள்ளது. பத்தில் உள்ள அனைத்துப் பாடல்களும் அந்தக் குறிப்பிட்ட கருப்பொருளைச் சுற்றியே இருக்கும். முழுமையாக அந்தக் கருப்பொருள் தரும் அனுபவத்தில் திளைக்க இது வகை செய்கிறது.

முதலில் நம்மாழ்வார் திருவாய்மொழியில் இருந்து சில பாடல்களைப் பார்க்கலாம்.

மாலையும் வந்தது மாயன் வாரான்
மாமணி புலம்ப, வல் ஏறு அணைந்த
கோலநல் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர்முல்லை கருமுகைகள்
மல்லிகை அலம்பி வண்டு ஆலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என்சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே.

(வல் ஏறு – வலிமையான காளை; கோல நல் நாகுகள் – அழகிய நல்ல பசுக்கள்; உகளும் – ஊடாக நுழைந்து செல்லும்; வாலொளி – தூய ஒளி; ஆலும் – ரீங்காரம் செய்யும்; வேலை – கடல்; விசும்பில் – வானவெளியில்; உய்வன் – போவேன்; உகளுமாலோ, குழறுமாலோ ஆகிய பதங்களில் “ஆலோ” என்பது அசைச் சொல்)

evening-cows-and-bullsமாலை நேரம் வந்தும் நாயகன் வரவில்லையே என்று நாயகி புலம்பும் பாடல் இது.

மாடுகள் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன. அவைகளில் கழுத்தில் கட்டிய மணிகள் கிணிகிணி என்று சத்தமிடுவது புலம்பல் போன்று இருக்கிறது அவளுக்கு.”ஊதும் அத்தீங்குழற்கே உயிரழிந்தேன்” என்று அவள் மனம் பறிகொடுத்த அந்த இனிய குழலோசையும் கொடுமையாகக் குழறுவது போல் இருக்கிறது.

மாலையின் இயற்கை நிகழ்வுகள் எல்லாம் கூடலாகவும், அதற்கான தவிப்பாகவுமே அவளுக்குத் தோன்றுகின்றன.

காளையை அணைந்து கூட்டமாக வளைந்து வளைந்து நடந்து வருகின்றன பசுக்கள் (கூடலுக்குப் பின் மாடுகள் திரும்பி வருவதைக் குறிக்க “மாடு அணஞ்சு வருது” என்று  இன்றும் கிராமப் புறங்களில் கூறுவார்கள்). சங்குகளும், மணிகளுமாக அழகுக் கோலம் செய்து கொண்டிருக்கின்றன பசுக்கள், நாயகன் வரவை எதிர்பார்த்து தனக்குத் தானே மீண்டும் மீண்டும் அலங்காரம் செய்து கொண்டு நிற்கும் நாயகி போல. (”தன் செய் கோலத்து” என்று இன்னொரு நம்மாழ்வார் பாடலில் வரும்). காதலுக்காக ஏங்கும் *நல்* நாகுகள் அவை. மாலை வந்தும் தான் வராமல் முரண்டு பிடிக்கும் காளைகள் *வல்* ஏறுகள்!

மல்லிகை, முல்லைப் பூக்களுடன் கூடித் தேன் உண்டு, அந்த மகிழ்ச்சியில் ரீங்காரம் இடுகிறது வண்டு. அது கூடலின் இன்னொரு சங்கேதம்.

பொங்கியெழுந்து வானவெளியில் அலறுகிறது கடல், அவள் மனம் பொங்குவது போல. கடலும் வானுடன் கூடுவதற்காக இப்படி அலைபாய்கிறதோ?

அவனை விட்டு எங்கு போவாள் அவள்?

தமிழ் அகத்துறைப் பாடல்களில் மாலை நேரத்தின் காதல் தவிப்பைப் பாடுவது என்பது ஒரு மரபாக இருந்திருக்கிறது. “பொழுது கண்டிரங்கல்” என்று திருக்குறளில் காமத்துப் பாலில் ஒரு அதிகாரமே உள்ளது.

”புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை”

என்பது குறள்.

இயற்கையே மருளும் நேரம் மாலை என்பதால் ”மருள்மாலை” என்கிறார். பகலும் இரவும் சந்தித்து மயங்கும் நேரம் அது.மால் என்றாலே மயக்கம். மால் மீது மால் கொண்ட நாயகிக்கு மாலைப் பொழுது இன்னும் அதிகமாக மயக்கத்தைத் தருவதில் ஆச்சரியமில்லையே! இயல்பாகவே இரவுக் காலத்தில் மனம் ஒடுங்கிறது. ஆனால் மாலை நேரத்தில் மனம் அலைபாய்கிறது, பூசலிடுகிறது. “அணியிழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்” என்றே நம்மாழ்வார் குறிப்பிடுவார்.

”உகளுதல்” என்பது பொதுவாக மீன்களின் ஓட்டத்தைக் குறிக்க வருவது (ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல் உகள – திருப்பாவை). ஆனால் இங்கு மாடுகளின் நடையைக் குறித்தது. அதே போல, “ஆலுதல்” என்பது மயிலின் ஒலி (”வண்டு பாட, மயில் ஆல, மான்கன்று துள்ள, வரிக் கெண்டை பாய – சம்பந்தர் தேவாரம்).ஆனால் இங்கு வண்டுகளின் ஓசையைக் குறித்தது. இந்தப் பாடலின் சொற்களே கூட அந்த மருள்மாலையில் மயங்கி விட்டன போலும்!

*********

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதனால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆரெல்லே? வல்வினையேன் ஆவி காப்பார் இனியே.

(துஞ்சி – உறங்கி; நீரெல்லாம் தேறி – வேறுபாடு காணமுடியாதபடி எங்கும் நீரால் நிரம்பி; வாரானால் – வாரான் + ஆல்; ஆல் என்பது அசைச்சொல். ஆரெல்லே – ஆர்+எல்லே; எல்லே என்பது அழைப்புக்குரிய விளிச் சொல், ஆச்சரியக் குறிப்பாகவும் கொள்ளலாம்).

இது இரவுத் தவிப்பைக் கூறும் பாடல். மேலே உள்ள மாலைப் பாடலுடன் ஒப்பிட்டால் இதன் தொனியும், ஓசையுமே வேறு மாதிரி இருப்பது புலப்படும்.

ஊர் அடங்கி விட்டது. இவள் காதலைப் பற்றி வம்பு பேசிப்பேசியே களைத்துப் போன ஊர்! அந்த வம்புப் பேச்சுக்கள் தான் இவளது காதலுக்கு உரமாக இருந்ததாம்.”ஊரவர் கவ்வை” என்று தமிழ் இலக்கியத்தில் அதற்கு ஒரு பெயரே உண்டு. அதோடு, வீட்டில் அம்மா சொல்லும் கண்டிப்புச் சொற்கள் காதலை நீரூற்றி வளர்த்தன. அவளது ஈரநெஞ்சமாகிய வயலில் அப்படித் தான் காதல் பயிர் செழித்து வளர்ந்ததாம்!

ஊரவர் கவ்வை எருவிட்டு, அன்னைசொல் நீர் மடுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள்
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
கார் அமர் மேனி நம் கண்ணன்…

என்று நம்மாழ்வார் பாடுவார்!

அப்படி வம்பு பேசிய ஊர் அடங்கி விட்டது. அம்மா, தோழி எல்லாரும் உறங்கிவிட்டார்கள். யாரிடமும் பேசிப் பொழுது போக்க முடியாது. சரி, எதையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றால், உலகம் முழுவதுமே நள்ளிருளாகி விட்டது. ”நள்” என்ற சொல்லே இருளின் அடையாளம், பேச்சற்ற இரவின் மௌன ஒலியைக் குறிக்கும் சொல் அது. இந்த இருண்ட உலகத்தில் இவள் மட்டும் தனியே விழித்துக் கொண்டிருக்கிறாள்.

நள்ளென்றன்றே யாமம்; சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள்; முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே.

என்று குறுந்தொகையில் இதே போன்று ஒரு அழகான பாடல் உண்டு. இரவின், தனிமையின், ஏக்கத்தின் தவிப்பைச் சொல்லுகிற பாடல்.

இந்த இரவு முடிவதாகத் தெரிவதில்லை. நீண்டு கொண்டே போகிறது. “நீரெல்லாம் தேறி” என்பதற்கு கவித்துவமாக ஒரு பொருள் கொள்ளலாம் – அந்தக் கரிய இரவே ஒரு நீர்ப்பெருக்காக, வெள்ளமாகப் பெருகி வந்தது என்று. அகத்துறைப் பாடல்களில் ஏற்கனவே வழங்கிய படிமம் அது (”கங்குல் வெள்ளம் கரைகாண்பரிதே”).

பிரளய காலத்தில் உலகம் எங்கும் உயிர்கள் எல்லாம் ஒடுங்கி,எங்கும் ஜலப்ரவாகமாகி,முடிவற்ற நீர்ப் பெருக்காகி விட்டது போல – என்று பொருள் கொள்வது பொருத்தமானது.

இந்த பிரளய ராத்திரியில், உலகங்களையெல்லாம் உண்டு தன் வயிற்றில் அடக்கிக் கொண்ட பாம்பணையானை விட்டால் யார் வந்து என்னைக் காப்பாற்றப் போகிறார்கள்? ஆரெல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே? அப்படியும், அவன் வரவில்லையே (வாரானால்), நான் செய்த வல்வினை தான் என்னே என்று புலம்புகிறாள்.

இந்தப் பாடலில், இரவுக்கான குறியீடுகள் படிப்படியாக வளர்கின்றன. ஊர் அடங்கியது என்பதில் தொடங்கி பிரளய வர்ணனையில் முடிகின்றன. இந்தப் பத்தில் வரும் அடுத்தடுத்த பாடல்களில் பிரளயவர்ணனைகள் அற்புதமாக வளர்ந்து கொண்டே போகின்றன.

ஆவிகாப்பார் இனி யார்? ஆழ்கடல் மண் விண்மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்..

காப்பார் யார் இவ்விடத்து? கங்கிருளின் நுண்துளியாய்ச்
சேட்பாலது ஊழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்…

இந்து மரபில் சிருஷ்டி-பிரளயம் என்ற பிரபஞ்ச சுழற்சி பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் பேசப் படும் ஒரு விஷயம். சிருஷ்டியின் தொடக்கத்தில் பிரம்மம் (பிரபஞ்ச மையம்) என்ற ஒரே வஸ்து (singularity) அளவற்ற பெரும் சக்தியுடன் (maxium usable energy & minimum entropy) இருக்கிறது. அந்த சக்தி பலவிதமாக விரிந்து பரந்து பிரபஞ்சமாகப் பரிணமிக்கிறது. இப்படி விரிந்து பரந்து பரிணமித்த பிரபஞ்சம் என்றோ ஒரு நாள் சக்திகள் எல்லாம் ஒடுங்கி (maximum entropy) மீண்டும் பழைய ஒருமை (singularity) நிலைக்கு வரும். அதற்குப் பெயர் பிரளயம். லயம் என்றால் ஒடுக்கம்; பிரலயம் என்றால் முழுமையான ஒடுக்கம். நாம் காணும் இந்த ஒளிதரும் சூரியன் என்றும் இப்படியே இருக்கப் போவதில்லை, பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, இதில் உள்ள ஹைட்ரஜன் எரிபொருள் முற்றும் செலவழிந்து விட்டால், இது ஒரு இறந்த நட்சத்திரமாக (dead star) ஆகும். பிறகு பிரபஞ்ச சுழற்சியில் நமக்கு இன்னொரு சூரியன் கிடைப்பான்! இத்திறக்கில் இந்து மரபும், நவீன அறியலும் ஒரே பார்வையைக் கொண்டிருக்கின்றன.

nammalwarமேலே சொல்லப் பட்ட பிரளயம் பௌதீக ரீதியானது; புற உலகு சார்ந்தது. இது பௌராணிகர்கள் கூறும் பிரளயம், வேதாந்த ஞானியின் பிரளயம் அல்ல என்று சங்கரர் தனது பாஷ்யங்களில் கூறுகிறார். சங்கரரின் தத்துவ தளத்தில், பிரளயம் என்ற விஷயம் இன்னும் ஆழமான பொருள் தருகிறது. வேதாந்த தத்துவத்தின் படி பிரம்மம் தன்னை மாயையால் விரித்து வேறுவேறு பெயர்களும், வடிவங்களும் (நாம-ரூபங்கள்) நிரம்பிய பிரபஞ்சமாக தோற்றம் தருகிறது. ”அவித்யை” என்ற ஆன்மிக அறியாமையின் காரணமாகவே, உயிர் இந்தத் தோற்றத்தை உண்மை என எண்ணி மயங்குகிறது. அவித்யை அகலும்போது இந்த நாம-ரூபங்கள் அனைத்தும் பிரம்மத்தில் ஒடுங்குகின்றன (பொன்னால் செய்யப் பட்ட வளையல், தோடு, மாலை என்று நாமரூபங்கள் கொண்ட ஆபரணங்களை உருக்கும்போது அவை எல்லாம் ஒரே பொன்னாக ஆகிவிடுவது போல). இந்த ஒடுக்கத்தை வேதாந்த ஞானி அகத்தில் உணரும்போது அதுவே பிரளயமாகிறது – ஆன்மீக ரீதியான பிரளயம் (spiritual dissolution).

தத்துவத்தைப் போலவே கவிதையும் ஒரு அகவயப்பட்ட அனுபவம் என்பதால், இங்கு நம்மாழ்வார் சுட்டும் பிரளயமும் இந்த அகப் பிரளயமே என்று கொள்ள இடமிருக்கிறது. தூய வேதாந்தத்தில் அனைத்தும் ஒடுங்கி பிரம்மம் மட்டுமே எஞ்சுகிறது. வைஷ்ணவ சித்தாந்தத்தில் திருமால் அனைத்து உலகங்களையும் உண்டு தான் மட்டும் எஞ்சியிருப்பதாக வர்ணிக்கப் படுகிறது. உயிர்கள் திருமாலினின்றும் வேறுபட்டவையாக அல்லாமல், அவனது உறுப்பாக, அங்கமாக இருக்கின்றன.

நம்மாழ்வார் ஒரு மகாகவி மட்டுமல்ல; மாபெரும் தத்துவ ஞானியும் ஆவார். நம்மாழ்வாரது பாடல்களின் வாயிலாகவே பின்னாளில் ஸ்ரீராமானுஜர் தமது விசிஷ்டாத்வைத தத்துவத்தை வளர்த்தெடுத்தார். ஆனால் நம்மாழ்வார் பாடல்களில் சொல்லப் படும் தத்துவம், கோட்பாடாக, கருதுகோளாக நேரடியாக இல்லாமல் கவிதையாகவே இருக்கிறது. திருவாய்மொழியின் வசீகரத்திற்கு இதுவே காரணம்.

*********

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ
கடல்ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
கடல்ஞாலத்து என் மகள் கற்கின்றவே.

(கடல்ஞாலம் – கடல் சூழ்ந்த உலகம்; யானே என்னும் – நானே என்று சொல்கிறாள்; கீண்டேனும் – அகழ்ந்து எடுத்தவனும்; ஏறக் கொலோ – ஏறி விட்டானோ)

கடல்சூழ்ந்த இவ்வுலகைச் செய்தவனும் நானே என்று சொல்கிறாள். இவ்வுலகமும் தானே என்கிறாள். இவ்வுலகத்தைத் தாவி அளந்து கொண்டவனும் (வாமன அவதாரம்), அகழ்ந்து எடுத்தவனும் (வராக அவதாரம்), உண்டவனும் தானே என்கிறாள். கடல்சூழ்ந்த உலகத்தின் ஈசன் இவள்மேல் வந்து ஏறி விட்டானோ? உலகத்தார்களே, கடல்சூழ்ந்த உலகத்தில் இருந்து கொண்டு என் மகள் சொல்லும் இந்த வார்த்தைகளைப் பற்றி நான் என்ன சொல்வேன்?

தலைவனின் இயல்புகளைத் தனதாகவே கொண்டு தலைவி பித்து நிலையில் அரற்ற, அவளது நிலைகண்டு தாய் கூறும் பாடலாக இது அமைந்துள்ளது.இதே போன்று வரும் வேறு அகத்துறைப் பாடல்கள் சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட நூல்களில் உள்ளன.

ஆனால் இன்னொரு தளத்தில் பார்த்தால், கவிஞனின் தனி மனம் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடும் தருணத்தில் உதிக்கும் கவிதை இது என்று புலப்படும். “கடல்ஞாலம்” என்றும் “யானே” என்றும் மீண்டும் மீண்டும் வரும் சொற்கள் ஒரு தியான மந்திரம் போலவே இக்கவிதையில் உள்ளன.

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்

என்ற பாரதியின் பாடலும் இதே போன்றதொரு தருணத்தில் பாடப்பட்டது தான்.

”கடல்ஞாலம் செய்தேனும் யானே – கடல்ஞாலம் ஆவேனும் யானே” என்ற வரிகளில் முரண் இருக்கிறது. அதெப்படி செய்பவனும் செய்யப் படு பொருளும் ஒன்றாக இருக்க முடியும்?

cosmic-vishnuபடைப்பவனும், படைப்பும் வேறுவேறு அல்ல; ஒன்றே என்று இந்து ஞானமரபு கூறுவதைத் தான் இந்தக் கவிதை வரிகளும் சொல்கின்றன. பரிணாம அறிவியல் பிரசாரகரான நண்பர் அரவிந்தன் நீலகண்டன் ஒரு மேற்கோள் சொல்வார் – No Creator and creation, only dancer and his dance (படைப்பவனும், படைப்பும் அல்ல; நடனமாடுபவனும் நடனமுமே உள்ளது). நடனம் அதை ஆடுபவனின் வெளிப்பாடாக உள்ளதே அன்றி,அவனிலிருந்து வேறான ஒரு பொருளாக இல்லை என்பதே இதன் சாரம். இந்த மேற்கோள் படைப்பு கோட்பாடுகளுக்கு (creation theories) எதிரானதாகவும், பரிணாம அறிவியலைக் கவித்துவமாக சொல்வதாகவும் அரவிந்தன் கருதுகிறார்.

நாயகனாகிய, ஈசனாகிய நாராயணன் பிரபஞ்சத்தினின்றும் வேறான ஒரு கடவுளாக (extra-cosmic God) அல்ல, பிரபஞ்சமாகவே நிற்கும் கடவுளாக (cosmic God) முன்வைக்கும் சமய தத்துவத்தை நிறுவுகிறது இந்த ஆழ்வார் பாசுரம் என்று சொல்லலாம். இந்தப் பிரபஞ்சத்தின் ஊடே அவன் ஆடும் விளையாட்டுக்கள் எல்லாம் அவனது லீலா விபூதிகளாகின்றன.

(மறுநாள் குருகுலத்தின் மாலை பிரார்த்தனையின் போது சுவாமி தன்மயா தனது மென்குரலில் ஸ்ரீநாராயண குரு அருளிய “தெய்வமே காத்துக்கொள்க..” பாடலைப் பாடினார். அதில் ஓரிடத்தில் “நீயல்லோ சிருஷ்டியும்…சிருஷ்டிக்கும் நாதனும்.. நீயல்லோ தெய்வமே சிருஷ்டியுடே சாமக்ரியைகளும்…” என்னும் வரி வந்தது. இங்கு நம்மாழ்வார் பேசும் தத்துவ இழையின் அறுபடாத சரடாகவே அந்த மந்திரச் சொற்களை நான் அந்தக் கணத்தில் உணர்ந்தேன்).

*********

’எனக்கே ஆட்செய் எக்காலத்தும்’ என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னித்
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே.

(மனக்கே – மனத்தே என்பதன் விகாரம்; இடைவீடின்றி – இடைவெளியின்றி; மன்னி – நிலைபெற்று நின்று; ஈதே – இதுவே).

’என்று, வந்து, மன்னி, கொள்ளும் ஈதே சிறப்பு’ என்று முடிக்க வேண்டும்.

பொருள் – ’எல்லாக் காலத்திலும் எனக்கே ஆட்செய்வாய்’ என்று என் மனத்தின்கண் வந்து, பிரிதலின்றி நிலைபெற்று நின்று, தனக்கே உரியவனாகும்படி என்னை ஏற்றுக் கொள்கிறான் கண்ணன். இதுவே, எனக்கே உரியவனாகும்படி நான் அவனைக் கொள்கின்ற சிறப்பாகும்.

மூன்று சொற்களைக் கவனிக்க வேண்டும் – ஆட்கொள்ளுதல், ஆட்செய்தல், ஆட்படுதல். ஒரு விஷயம் (கவிதையோ, இலக்கியமோ, கண்ணனோ எதுவானாலும்) நம்மை முழுமையாக ஆட்கொள்வது எப்போது? நாம் முழுமையாக அதற்கு ஆட்செய்யும் போது! அது நிகழ்வதற்கு முன் நாம் தற்செயலாகவோ, அல்லது தன்முனைப்புடனோ அதற்கு ஆட்பட்டிருக்க வேண்டும்.

”இடைவீடின்றி மன்னுதல்” என்ற பிரிதலற்ற உறவும், பரிபூரண சரணாகதி என்ற பிரபத்தி நெறியும்  இந்தப் பாடலில் பேசப் படுகின்றன.   இந்த எளிய பாடலுக்குக் கூட திருவாய்மொழி ஈடு வியாக்கியானத்தில் மிக விரிவாக உரை எழுதப் பட்டிருக்கிறது.

இங்கு திவ்யப் பிரபந்த உரைகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவேண்டும். தமிழ் உரைநடை வரலாற்றில் நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்களைப் பற்றிக் குறிப்பிடப் படுகிறது, ஆனால் வைஷ்ணவ உரையாசிரியர்கள் பற்றி பெரிதாகப் பேசப் படுவதில்லை. இந்த உரைகளை எழுதியவர்களான பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, நஞ்சீயர் போன்றவர்கள் சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் பெரும் பண்டிதர்களாக இருந்தவர்கள். அதனால் இருமொழிகளும் கலந்த “மணிப்ரவாள நடை” என்ற மொழிநடையில் தங்கள் வியாக்கியானங்களை எழுதினார்கள். மேலும் இந்த உரையாசிரியர்கள் அவர்கள் காலத்தில் வழங்கிய நூல்கள் அத்தனையும் கற்றுத் துறைபோகிய அறிஞர்கள். அதோடு பரம ரசிகர்களும் கூட. தமிழ் இலக்கியத்தில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஒரு சிகரம் என்றால், இந்த உரைகள் அதன் மேலிட்ட சிகர தீபம் என்று கூறுவது மிகையாகாது.

இன்னொரு வகையில் பார்த்தால், இந்த உரைகள் மிதமிஞ்சிய அளவில் பாசுரங்களின் ஒவ்வொரு சொல்லையும் எடுத்துக் கொண்டு, அதன் கவிநயத்தையும், தத்துவார்த்தங்களையும் விளக்குவதாக இருக்கின்றன. இந்த அழகிய, எளிய கவிதைகளைப் படிப்பவர்களுக்கு எந்த ஒரு “திறப்பும்” இல்லாதபடி திணறடித்து  உரைக்குள் அடைத்து விடுகின்றன. (”பெரியவாச்சான் பிள்ளை, அவரே இலைபோட்டு அவரே சாப்பிட்டும் விடுவார்; நாம் பார்த்துக் கொண்டு நிற்கவேண்டும்” – ஜெயமோகன்). எனவே உரைகளின் சாதக, பாதகங்களை மனதில் கொண்டு அவற்றை அணுக வேண்டும். எச்சரிக்கை: பாடல்களை விடவும் இந்த வியாக்யானங்கள் படு கடினமாக இருக்கும்.

பாரதியார் கலைமகளைப் பாடும்போது “வேதத் திருவிழியாள்; அதில் மிக்க பல் உரையென்னும் கருமையிட்டாள்” என்பார். கண்மை அளவோடு இருந்தால் அழகு; அதுவே அதிமாகி விட்டால் விகாரமாகத் தோன்றும் அல்லவா? உரைகள் விஷயத்திலும் அதுவே பொருந்தும் என்று இந்த உவமை அழகாக விளக்குகிறது.

ஒரு உதாரணத்திற்காக, இந்தப் பாடலின் கடைசி இரண்டு வரிகளுக்கான ஈடு வியாக்யானம்:

[தனக்கேயாக வெனைக் கொள்ளுமீதே] — ஸ்ரக்சந்தனாதிகளோபாதியாகக் கொள்ள வேணும். அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கு முறுப்பாய் மிகுதி கழித்துப்போகடு மித்தனை யிறே. ஒரு மிதுநமாய்ப் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்திருக்குமிறே, அங்ஙன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அந்வயித்தவனாக வொண்ணாது, “நின்” என்றும், “அம்மா” என்றும் — முன்னிலையாக ஸம்போதித்துக் கொண்டு போரா நிற்கச் செய்தே, இங்குப் படர்க்கையாகச் சொல்லுவானேன்? என்னில்; “ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற ஸமயத்திலே, திருமுகத்தைப் பார்க்கில் வ்யவஸாயங்குலையும்” என்று , கவிழ்ந்திருந்து கையோலை செய்து கொடுக்கிறார்.

[எனக்கே கண்ணனை] — “தனக்கேயாக” என்ற பின்புத்தை, எனக்கேயிறே. புருஷார்த்தமாகைக்காகச் சொல்லுகிறார். ஒரு சேதனனிறே அபேக்ஷிப்பான். நீர் அபேக்ஷிக்கிற இது செய்வோமாகப் பார்த்தால் எல்லார்க்கும் செய்யவேணுங்காணுமென்ன, [யான்கொள்] –ஸ்வரூப ஜ்ஞாநத்தை நீ பிறப்பிக்க, அத்தாலே ஸ்வரூபஜ்ஞாநமுடைய நான் ஒருவனும் பெறும்படி பண்ணவேணும். உமக்கும் எப்போதும் நம்மாற் செய்யப்போகாதென்ன, [சிறப்பே]– பலகால் வேண்டா, ஒருகால் அமையும்; அதுதன்னிலும், திருவாசலைத் திருக்காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாகச் செய்யவும் அமையும். சிறப்பாகிறது — ஏற்றம். அதாவது புருஷார்த்தம். ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருளவேணுமென்ற படி. சிறப்பாவது — முக்தியும் ஸம்பத்தும், நன்றியும். இவற்றில், நான் உன்பக்கல் கொள்ளும் மோக்ஷம் உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே. உன்பக்கல் நான் கொள்ளும் ஸம்பத்தென்னவுமாம். நன்றியென்னவுமாம். என்பன இவண் அநுஸந்தேயம்.

அடுத்து, ஆண்டாள், பெரியாழ்வார் பாடல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

(தொடரும்)

35 Replies to “சில ஆழ்வார் பாடல்கள் – 1”

  1. திவ்ய பிரபந்தங்களுக்கான உரையை விட பாடல்கள் எவளவோ எளிமை ஒரு சில வார்த்தைகளைத் தவிர எளிதில் புரிந்து கொள்ளும்படியாகவே இருக்கின்றன. இதனால்தானோ என்னவோ மற்ற உரையாசிரியர்கள் போல இவர்களை பற்றி அதிகம் பேசப்படவில்லையோ

  2. ”நம்மாழ்வார் ஒரு மகாகவி மட்டுமல்ல; மாபெரும் தத்துவ ஞானியும் ஆவார்” இதுவே உங்கள் சொற்றொடர்.

    ஆழ்வார்கள் தங்கள் கவிப்புலமையைக் காட்ட எழுத்வில்லை. அவர்க்ள் மானிடம் பாட மறுத்தனர். எனவே, ‘ஆழ்வார்களும் தமிழும்’, ‘ஆழ்வார்களின் எளிய கவிதைகள்’ என்றெல்லாம் சொல்வது, ‘ஆன்மிகக்கட்டுரைகள்’ என்றாகா. இப்படியாக நான் டோண்டு இராகவன் வேளுக்குடி பேச்சுபற்றிய கட்டுரையில் எழுதியுள்ளேன்.

    உங்கள் ஊட்டிப்பேச்சும் அவ்வாறே. ‘ஆன்மிகப்பேச்சல்ல்’ ஒரு செகுலர் பேச்சது.

    எனினும், தமிழ் நும் தாய்மொழியாக இருப்பத்னால், அம்மொழியில் எவரராயினும் சிறக்க எழுதி நுமக்கு இன்பம்தரின் அதைப் போற்றலுக்கு தடையில்லை.

    ஆக, நுமக்குத் தமிழ். அவர்களுக்கு தத்துவமும் பக்தியும் (அவர்கள் என்பது இராமானுஜரின் தொண்டர்களக் குறிக்கும்)

    உங்கள் சொற்றொடர் அவர்கள் பார்வையில் இப்படி எழுதப்படும்:

    ”நம்மாழ்வார் ஒரு மாபெரும் தத்துவ ஞானி மட்டுமல்ல; ம்காகவியும் ஆவார்”

    தமிழிந்து.காம் இந்து மத வளர்ச்சியிலும் வாழ்த்திலும் ஈடுபடுகிறதென்றுதான் இவ்வளுவு நாளும் நினைத்திருந்தேன். தமிழ் மொழி வளர்ச்சியிலும் ஈடுபடுகிறதே! நன்மாறன் போன்ற ஆழ்வார்த்திருநகரி தமிழறிஞர்களையெல்லாம் அறிமுகப்படுத்துகிறதே! பலே..பலே.

    (nanmaaran is an alias of Nammaazvaar. Satire should not be lost upon you, shouldnt ?)

  3. Pingback: Indli.com
  4. ம்ம்…அடுத்தவாரம்….

    சிரிவில்லிபுத்தூர் தமிழறிஞர்களான விட்டுச்சித்தர், அன்னாரின் புதல்விகளை அறிமுகப்படுத்தப்போகிறாரா ஜடாயு?

    பலே…பலே.

    படிக்கக்காத்திருக்கிறேன். ஏன்னா. நமக்கு தமிழ் கொஞ்சம் வீக்கு. தமிழிந்து.காமை அதுக்குத்தான் படிக்கிறேன்.

  5. அடுத்து வைணவ உரைகாரர்களைப்பற்றியது.

    இங்கே பார்வை செகுலர்தான். ஆன்மிகமல்ல.

    வைணவ உரைகாரர்கள் ‘மணிப்பிரவாளத்தை’ப் பயன்படுத்தியதன் நோக்கம் அன்னானில் ச்மணர்கள் தங்கள் நூல்களை இவ்வாறு எழுதி பிரபலப்படுத்திவந்தனர். தேவ ரகசியங்களை இவ்வாறு எழுதினாலே சிறக்கும் என்ற கருத்தும் நிலவியது. மேலும், சில் கருத்துகளுக்கு அவர்கள் வடமொழியில் சொல்லலே நலம் என நினைத்தார்கள்.

    இன்னும் சொல்லப்போனால், இவ்வியாக்கியானங்கள் பொதுமக்களுக்காக எழுதப்படவில்லை. ஆழ்வார்கள பாடல்களின் வைணவத்தத்துவம் மண்டிக்கிடக்கிறது; அவற்றை நாம் தேடிக்கொடுத்து தெரிவிக்கவேண்டும் வடமொழியும் தமிழும் தெரிந்தோருக்கு. பின்னர் அவர்கள் அதை தங்கள் காலச்சேபங்களின் எடுத்தியம்பி பொதுமக்களுக்கு கொண்டு செல்வர் என்ற நோக்கத்தில்தான் எழதப்பட்டன.

    நும் கட்டுரை எள்ளல் தொனியில் எழுத்ப்பட்டிருக்கிறது. வைணவ உரைகாரர்களை வெறும் உரைகாரர்களாக ‘அவர்கள்’ பார்ப்பதில்லை. அவர்களும் ஆச்சாரியர்களே. வைணவ உலகத்தில், ஜீயர் என்றால், நஞ்ஞ்சீயரை மட்டுமே குறிக்கும்.

    என்ன தொனியில் எழுதியிருக்கிறீர்கள்? ஆழ்வார்கள் பாடல்கள் எளிய கவிதைகளாம்..அவைகளை உரைகாரர்கள் கடினமான் மொழியில் க்டினமான வியாக்கியானங்களக்கொடுத்து விட்டார்கள். எனவே அவை படிக்கப்படுவதில்லையாம்”

    ஆழ்வார்கள் பாசுரம் எளிய தமிழில்தான் எழுதப்பட்டன. ஆரில்லையென்றது? அவ்வெளிய பாசுரங்களுக்கு எளிய பொருட்களா ஜடாயு?

    ஆர் அப்பொருட்களை வெள்க்கொணர்வ்து எமக்குச் சொவது? அத்தொண்டைப்புரிந்த்வர்கள் வைணவ உரைகாரர்களே.

    இராமானுஜரே மறுத்துவிட்டார் உரையெழுத தெரியுமோ?

    ஆனால் அவர் சொல்லித்தான் எழுதப்பட்டது. அவ்வுரைகளுக்கு அவரின் ஆசி உண்டு.

    உரைகாரகளின் விளக்கங்கள் எளிய தமிழிலும் பல்விடங்களில் எழுதப்பட்டுள்ளன. அவர்கள் சொல்லாட்சி மலைக்கவைக்கும்.

    எனினும், அவ்வுரைகளுக்கும் இன்றைய தமிழில் உரைகள் எழுதியிருக்கிறார்கள்.

    திருக்குறளுக்கு கண்டவென்ல்லாம் உரையெழுதி போடுவதுபோல, நாலாயிரத்துக்கு எழுதுவது இல்லை. இன்றைய உரை ஏதாவது ஒரு ‘படியை’ அடித்தளமாக வைத்துத்தான் எழுதப்படும். அவர்களிலும், பெரியவாச்சான் பிள்ளையே பாப்புலர். அவர்தானே ‘வியாக்யானச்சக்கர்வர்த்தி’?

    திருவாய்மொழியின் முதற்பாடல்:

    உயர் அற் உயர் நலம் உடைய்வன் எவன்? அவன்
    மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்,
    அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
    துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே!”

    ஜடாயுயின் கருத்தின் படி,

    ”வாசக்ர்களே. இது ஒரு எளிய பாடல். நம்மாழ்வார் சூப்பரா சொல்லிட்டார் போங்கோ. இது கடவுள் வாழ்த்தா தொட்ன்குறார் படிங்கோ”

    நம்பிடாலாமா?

    ஏன், இப்பாசுரத்தை கேட்ட மாத்திரத்திலேயே ‘ஆழ்வான்’ (கூரேசாழ்வார்) மூர்ச்சையாகி கீழே விழுந்துவிட்டார்?

    பதிலறிய நமக்குத் துணை நிற்பவர்களே வைணவ உரைகாரர்கள்.

    ஏன் திருவாய்மொழி, ‘திராவிட வேதம்’ எனவழைக்க்ப்பட்டு வைணவர்களால், வணங்கப்படுகிறது அல்லது பூஜையில் பாராயணம் பண்ணப்படுகிறது என்பதை அறிய

    இன்றே நாடுவீர் வைணவ உரைகாரர்களை.

    I quite often come across essays on Srivaishnavaism ie. on azvaars etc. written by laymen. I suggest this .com request an erudite Srivaishnavite scholars to write on such subjects. There are so many. Or, write but get it edited or elucidated by such schlars.

  6. மேலும் சில சொற்கள்;

    வைணவ உரைகாரகள் பாமரர்கள் அல்ல. அவர்கள் ஆச்சாரியர்களிடம் சீடர்களாக இருந்துதான் அவ்வாச்சாரியர்களின் ஆக்ஞ்யை ஏற்று ‘படிகள்’ எழுதினார்கள்.

    இராமானுஜர் ‘படியெழுத மறுத்த காரணம் இப்போது இங்கு நான் சொல்ல்வில்லை.

    வைணவ உரைகாரர்கள் அவர்கள் ஆச்சாரியர்களின் அருகிலேயே இருந்து கேட்டனர். இதன் பெயர் ஓரான் கேட்டல்.

    இந்த் ஓரான் கேட்டல் பொது மக்களுக்கு அல்ல. ஒரு ஆசிர்யர் அவர் மாணாக்கருக்கு மட்டும் சொல்வது.

    அச்சொற்களை அல்லது அவ்விளக்கங்களை அடியாக வைத்து எழுதப்படுவ்துதான் ‘ப்டி’ படி நம்மெல்லாருக்கும்.

    நம்பிள்ளை வைணவ உரைகாரகளில் ஒரு mega star. இவர் நஞ்ஞ்சீயரின் சீடர். நஞ்ஞீசீயரே ‘படி’ எழுதிகொண்டிருந்தார். அவரின் அமேனுயன்சிஸ் இவர்.

    (Amaneunsis means a person who is engage to copy a manuscript.)

    நஞ்ஞீயர் சொன்னவற்றயெல்லாம் ஓலையில் எழுதி பாதுகாக்கும்பணி எறும்பியூர் வரதராஜனுக்கு (Original name of Nambillai. He was from a small village called Erumbiyur on the banks of River Cauvery)

    இன்று உன் வீட்டுக்குச்சென்று எழுதிக்கொண்டுவா என பணிக்கப்பட அவர் ஆற்றில் நீந்தி சென்று தம்மூரை அடையுங்கால், ஆற்றில் வெள்ள்ம். தலையில் கட்டிய ஓலைகள் அனைத்தும் ஆற்றில் போய் அடித்துச்செல்லப்பட, இரவு முழுவதும் தன் ‘படியையே; எழுதினார். மறுநான், நஞ்ஞீயர், ‘நான் சொல்லாதவை இருக்கின்றன்வே. அவை என்னினும் சிறப்பாக உள்தே? என வினாவ், நம்பிள்ளை நடந்தவை சொல்லி அடிபணிந்து மன்னிப்பு கேட்டார்.

    ஆரத்தழுவி, ‘வரதராஜா. நீதான் நம்ப்பிள்ளை! உன் வியாக்கியான்மே ஒரு ‘படி’யாகத் திகழ்ட்டும் எனச்சொன்ன, இன்று நம்ப்பிள்ளையின் ‘படி’ நம்க்குகிடைக்கிறது. அன்று முதலாக வரதராஜரின் பெயர் நம்பிள்ளை.

    இக்கதையை நான் சொல்லக்காரண்ம்,

    ஒவ்வொரு படியும் ஒரு வேள்வியாக மாந்தரில் சிறந்த ஆச்சாரியர்களால் எழுதப்பட்டவை. அவற்றைப்பற்றி நாம் கதைக்கும் போது, மிகப்பணிவுடந்தான் செய்ய்வேண்டும். நினைவில் கொள்க.

  7. அன்புள்ள Jo Amalan Rayen Fernando அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி.

    // நும் கட்டுரை எள்ளல் தொனியில் எழுத்ப்பட்டிருக்கிறது. வைணவ உரைகாரர்களை வெறும் உரைகாரர்களாக ‘அவர்கள்’ பார்ப்பதில்லை. //

    இல்லை என்று தெளிவு படுத்த விரும்புகிறேன்.

    ”தமிழ் இலக்கியத்தில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஒரு சிகரம் என்றால், இந்த உரைகள் அதன் மேலிட்ட சிகர தீபம் என்று கூறுவது மிகையாகாது”

    என்று நான் எழுதியிருப்பதில் எள்ளல் தொனியா தென்படுகிறது நண்பரே?

    தமிழ் இலக்கிய உரை வரலாற்றில் வைஷ்ணவ பேரறிஞர்களான, மகாஞானிகளான உரைகாரர்கள் பெரிதும் பேசப் படுவதில்லை, அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பதனை ஒரு குறையாக, புகாராகத் தான் சொல்ல வருகிறேன். அது சரி என்று நான் எங்கே சொன்னேன்?

    உரைகள் ஆழ்வார்களின் பாசுரத்திலிருந்து தத்துவத்தைச் சாறு பிழிந்து எடுத்துத் தருகின்றன, மறுப்பதற்கில்லை. ஆனால், இலக்கிய வாசிப்பு என்ற அளவில் ”கவிதை திறப்பு” என்ற அம்சத்திற்குத் தடையாக உள்ளன என்ற கருத்தும் இலக்கியவாதிகளிடையே நிலவுகிறது. “இன்னொரு வகையில் பார்த்தால்” என்று தொடங்கும் பாராவில் அந்தக் கருத்தையும் பதிவு செய்ய விரும்பினேன், அவ்வளவே.

    வைஷ்ணவ உரைகளைப் படிக்க வேண்டாம் என்றும் நான் கருத்து தெரிவிக்கவில்லை.. ஓரளவு சம்ஸ்கிருத மொழி அறிவு கொண்டிருப்பதால் அடியேன் சில பாடல்களுக்கான வியாக்யானங்களையும் படித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறேன். உரைகளில் பல அற்புதமான, கவித்துவமான பகுதிகள் உள்ளன என்பதை என் அனுபவத்தில் இருந்தே சொல்வேன்.

    // I quite often come across essays on Srivaishnavaism ie. on azvaars etc. written by laymen. I suggest this .com request an erudite Srivaishnavite scholars to write on such subjects. //

    அய்யா, இக்கட்டுரை ஸ்ரீவைஷ்ணவப் பார்வையில் எழுதப் பட்டது அல்ல. நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது? இது கவிதானுபவம் பற்றிய கட்டுரை என்பதையும் முதலிலேயே சொல்லியாயிற்று. நீங்கள் சொல்வது போன்ற ஆட்கள் மட்டும் தான் ஆழ்வார்களைப் பற்றீப் பேச வேண்டும் என்று சொல்வது அராஜகம் அன்றி வேறில்லை.

    ராமாவதாரம் எழுதப் புகுந்த கம்பனே தன்னை பாற்கடலைச் சுவைக்கப் போன பூனை போல என்று சொல்லிக் கொள்கிறான்.. அதை விட பலமடங்கு சிறிய பூனைக்குட்டியாக நான் இது பற்றிப் பேச விழைகிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

  8. திரு ஜடாயு அவர்களே,

    உரையாசிரியர்களை முதலில் புகழ்ந்துவிட்டு, இப்படி எழுதுகிறீர்களே…

    // இந்த அழகிய, எளிய கவிதைகளைப் படிப்பவர்களுக்கு எந்த ஒரு “திறப்பும்” இல்லாதபடி திணறடித்து உரைக்குள் அடைத்து விடுகின்றன.//

    // கண்மை அளவோடு இருந்தால் அழகு; அதுவே அதிமாகி விட்டால் விகாரமாகத் தோன்றும் அல்லவா? உரைகள் விஷயத்திலும் அதுவே பொருந்தும் என்று இந்த உவமை அழகாக விளக்குகிறது. //

    உரையாசிரியர்களைக் குறை கூறுவது போல உள்ளது. உரைநூல்களின் audience யார் என்று புரியாததால் நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. ஈட்டின் விளக்கங்களை ‘காலக்ஷேப’ முறையில் கற்றவர்கள் இப்படிக் கூறுவதில்லை, ஈட்டின் ஒவ்வொரு விளக்கமும் ஸ்ரீவைஷ்ணவ மார்க்கத்திற்கு வலுவூட்டி போஷிப்பவை. அவற்றில் தேவையில்லாத redundancy கிடையாது. நமக்கு மேலோட்டமாகப் படித்தால் சில அர்த்தங்கள் (அதாவது, ஆங்கிலத்தில் parallel interpretations) தெரியாமல் போயிருக்கும். இவற்றை உரைநூல்களை வைத்துக் கொண்டே அறிகிறோம். சில பாசுரங்களுக்குக் context-ஐப் புரிந்துக் கொண்டு விளக்காமல், word-for-word விளக்கம் மட்டும் படித்தால் அர்த்தம் புரியாது, ஒன்றுக்கொன்று முரண்பட்டது போலத் தோன்றும்.

    // எனவே உரைகளின் சாதக, பாதகங்களை மனதில் கொண்டு அவற்றை அணுக வேண்டும்//

    உரை நூல்களில் என்ன பாதகம் கண்டீர் என்று புரியவில்லை.

    PS: “Context” என்பதற்குத் தமிழ் வார்த்தை உண்டா?

  9. // ஆனால், இலக்கிய வாசிப்பு என்ற அளவில் ”கவிதை திறப்பு” என்ற அம்சத்திற்குத் தடையாக உள்ளன என்ற கருத்தும் இலக்கியவாதிகளிடையே நிலவுகிறது. //

    உரை நூல் “தடையாக உள்ளது” எப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. ஒருவர் ஒரு நூலை எழுதினால் இன்னொருவருக்குத் தடை ஆகி விடுமா? சரி, ஆழ்வார் பாசுரங்களுக்கு பல இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் விளக்கங்கள் கூறியுள்ளனர், சில இடங்களில் உரை நூலில் இல்லாததையும் உரைக்கு முரண்பட்டதையும் கூறியுள்ளனர் — இதற்கெல்லாம் யாராவது கோர்ட்டில் கேஸ் போட்டு “ஆச்சாரியார்கள் உரை படி தான் எழுத வேண்டும்” என்று கூறினார்களா? இல்லையே.

  10. ஜடாயு அவர்களே,

    If I may, எனக்குத் தெரிந்த இன்னொன்று…

    // படைப்பவனும், படைப்பும் வேறுவேறு அல்ல; ஒன்றே என்று இந்து ஞானமரபு கூறுவதைத் தான் இந்தக் கவிதை வரிகளும் சொல்கின்றன. //

    படைப்பிற்கும் படைத்தவனுக்கும் ஸ்வரூப ஐக்கியம் சொல்வது வேதத்திற்கோ, அத்வைதத்திற்கோ (வியாவகாரிக நிலையை எடுத்துக் கொள்வோம். பரமார்த்த நிலையில் நிர்குண பிரம்மம் ஒன்றே சத்தியம், ஆகையால் படைப்பைப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் வியாவகாரிக நிலையைச் சேர்ந்தவை), விசிஷ்டாத்வைதத்திற்கு, த்வைதத்திற்கோ ஏற்புடையதல்ல. படைப்புகள் அங்கங்கள், படைப்பவன் அங்கி (அங்கத்தை உடையவன்). இதை சரீர-சரீரி பாவம் என்று சொல்வர். ஸ்வரூப ஐக்கியம் கூறிவிட்டால், “பிரம்மம் விகாரமற்றது” முதலான வேத வாக்கியங்களைத் தள்ள வேண்டி வரும். எனக்குத் தெரிந்த ஒரு எடுத்துக்காட்டு… மயில் தொகை விரித்து ஆடுகிறது, ஆடிய பின்பு தொகையை மடக்கி உள்வாங்கிக் கொள்கிறது. அது போல தான் பிரபஞ்சமும். தோகையே மயில் ஆகி விடாது, அதே போல பிரபஞ்சமே இறைவன் ஆகி விடாது. உதாரணமாக, முண்டகோபனிஷத் 2-1-4 க்கு சங்கரர் பிரம்ம சூத்ரத்தில் (1-2-23) விளக்கம் கூறுகிறார் “இந்த வாக்கியத்திற்கு அர்த்தம் என்னவென்றால், இறைவன் பிரபஞ்சத்திற்கு அந்தராத்மாவாக இருக்கிறான் என்பதே.”. (இதைப் பற்றி எல்லாம் ஒரு கட்டுரை எழுதுவதாக முன்பே யோசித்து வைத்திருந்தேன்.)

    மேலும், இறைவனுக்கும் பிரபஞ்சத்துக்கும் ஸ்வரூப ஐக்கியம் உண்டு என்றால் “வாயு அவனுக்குப் பயந்து வீசுகிறான், சூரியன் அவனுக்குப் பயப்படுகிறான், அக்னியும் இந்திரனும் யமனும் ஆகிய ஐவரும் அப்படியே பயப்படுகிறார்கள்” என்று கூறும் தைத்திரீய உபநிஷத் (2.8.1) வாக்கியத்தையும், “எவனுக்குப் பூமி சரீரமாக உள்ளதோ, எவனை பூமி அறியாதோ, அவனே உனக்கும் எனக்கும் அந்தர்யாமி” என்று கூறும் பிருகுதாரன்யாக உபநிஷத் (3.7.3) வாக்கியத்தையும் தள்ள வேண்டி வரும்.

    மேலும், இறைவன் படைப்பைவிட வேருபட்டவனாகவும் இருக்கிறான் என்று வேதங்கள் கூறுகின்றன. “தமசச்து பரே” என்று புருஷ சூக்தம் முதலியவற்றில் வரும் வாக்கியங்களின் படியும், “அவ்யக்தமாகிய மூலப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவனாக நாராயணன் இருக்கின்றான்” என்று சங்கரர் கீத பாஷ்யத்தில் அவதாரிகையில் கூறுவது படியும், இறைவன் ஒரு double action செய்கிறார் என்று தெரிகிறது. அதாவது, பிரபஞ்சமாகிற லீலா விபூதியும் அவனுக்கு உண்டு, நித்ய விபூதியும் அவனுக்கு உண்டு. சாந்தோக்ய உபநிஷத் 3.12.6-இலும் இது வருகிறது — “இறைவன் எப்பேர்ப்பட்ட பராக்ரமசாலி என்றால், அவனுடைய ஒரு கால் பகுதி இந்த பூமியாக இருக்கிறது. மீதமுள்ள முக்கால் பகுதி சுவர்க்கத்தில் அழிவற்றதாக (நித்ய விபூதியாக) உள்ளது”.

    மற்றபடி ஒரு இனம் இன்னொரு இனமாகப் பரிணமிக்கறது என்று கூறும் பரிணாமக் கோட்பாட்டுக்கும் “life originates from matter” என்ற கோட்பாட்டுக்கும் வலுவூட்டும் உபநிஷத்/வேத/இதிகாச/புராண வாக்கியம் எனக்குத் தெரிந்து எங்கும் இல்லை.

  11. ஜடாயு சொல்வது சரிதான். கந்தர்வன் சொல்வதும் சரிதான். உரையாசிரியர்களின் நோக்கு ஆன்மிக சம்பிரதாய சாதனையை ஏற்பவர்களுக்கு. ஜடாயு சொல்வது கவி அனுபவம் தேடும் இலக்கிய வாசகனுக்கு. இவன் அவன் ஆகும் போது அது தேவைப்படும். அவன் இவன் ஆகும் போது இந்த பார்வை பிரயோசனப்படும்.

  12. திரு கந்தர்வன் அவர்களே

    தங்கள் பின்வரும் கூற்று அத்வைதத்துக்கு ஏற்புடையதல்ல.

    ///படைப்பிற்கும் படைத்தவனுக்கும் ஸ்வரூப ஐக்கியம் சொல்வது வேதத்திற்கோ, அத்வைதத்திற்கோ (வியாவகாரிக நிலையை எடுத்துக் கொள்வோம். பரமார்த்த நிலையில் நிர்குண பிரம்மம் ஒன்றே சத்தியம், ஆகையால் படைப்பைப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் வியாவகாரிக நிலையைச் சேர்ந்தவை), விசிஷ்டாத்வைதத்திற்கு, த்வைதத்திற்கோ ஏற்புடையதல்ல. படைப்புகள் அங்கங்கள், படைப்பவன் அங்கி (அங்கத்தை உடையவன்). ///

    1 அத்வைதம் என்றால் என்ன? ‘நான்’ ( ஒரே பொருள் )அத்வைதம்; “நீ” என்பது இரண்டாவது பொருள் என்பது ஏற்பட்டால் அது த்வைதம், அவ்வளவுதான்.

    2 “ஏகைவாஹம் ஜகத்யத்ர த்விதீயா கா மமாபரா”
    – ——துர்கா சப்தசதீ, (10 .5 ) தேவி மகாத்மியம்.
    பொருள்: “நான் மட்டும்தான் இந்த உலகத்தில் உள்ளேன், என்னைத்தவிர இரண்டாவதாக இருப்பவர் யார்?” என்கிறார் அம்பிகை.

    3 “த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு:
    வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு:
    ஸ்ர்வஸ்மின்னபி பஸ்யாத்மானம்
    ஸ்ர்வத்ரோத்ஸ்ருஜா பேதக்ஞானம்” ——–ஆதி சங்கரர் – பஜகோவிந்தம் 24

    “உன்னிடத்திலும் என்னிடத்திலும் மற்ற இடத்திலும் விஷ்ணு ஒருவரே அப்படியிருக்க பொறுமையற்றவனாய் என்னிடத்தில் வீணாக கோபம் கொள்கிறாயே, எல்லாப் பொருள்களிலும் உன் ச்வரூபத்தையே பார், எவ்விடத்திலும் பேதம் தோற்றுவிக்கிற அஞ்ஞானத்தை விட்டுவிடு” என்று ஆதிசங்கரர் சொல்கிறார்.

    4 “ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:” என்கிறது பிரம்ம ஞானாவலீ மாலா.
    அதாவது “ஜீவன் பரம்பொருள்தான், வேறொன்றுமில்லை” என்று பொருள்.

    5 “ததாத்மானம் ஸ்வயமகுருத” என்கிறது தைத்ரீய உபநிஷத். ஆனந்த வல்லி. “அந்தப் ப்ரம்மமானது தன்னையே உலகமாக ஆக்கிக் கொண்டது” என்று பொருள்.

    6 “தமாத்மஸ்த்தம்யேsனு பச்யந்தி தீரா: தேஷாம் சாந்தி: சாச்வதீ நேதரேஷாம்” என்கிறது கடோபநிஷத். (2 -2 -13)
    “சாஸ்திரம் குருவின் உபதேசம் இவற்றுக்கிணங்க தனது உள்ளத்தில் சைதன்யமாக விளங்கும் பரம்பொருளை யார் அறிகிறார்களோ, அந்த அறிவாளிக்குத்தான் சாந்தி நிலைத்திருக்கும். மற்றவர்களுக்கு இல்லை.” என்று பொருள்.

    7 இங்கே நமது உள்ளத்தில் எந்த சுத்த நிர்குணப் பிரம்மம் உள்ளதோ அதை அறிந்துகொண்டு விட்டோமென்றால் நிலையான அமைதி கிடைக்கும். மன அமைதியின்மைக்குக் காரணம் நாம் பந்தத்தில் சிக்கிக் கொண்டதுதான். இந்த பந்தம் ஏன் வந்தது?

    “ந தம் விதாத்த யா: இதம் ஜஜான அன்யத் யுஷ்மாகம் அந்தரம் பவாதி” தைத்திரீய ஸம்ஹிதை 4-6-2
    மன அமைதியின்மை, உள்ளத்தில் உள்ள பிரம்மத்தை உணராததால்தான்.
    பிரம்மத்தை உணராவிட்டால் மனம் அமைதியடையாது. அவ்வாறுள்ளவன் அறிந்து கொண்டதற்கும் அந்த உண்மைப் பொருளுக்கும் வேறுபாடு உண்டு. தவறான அறிவே மன அமைதியை அடையவிடாது செய்கிறது.

    8 தவறான அறிவு எத்தகையது என்றால் என்ன என்பதை ஆதிசங்கரரின் ப்ரஹ்ம்ம சூத்திர பாஷ்யத்தில் உள்ள அத்யாஸ பாஷ்யம் பின்வருமாறு கூறுகிறது.

    “அன்யோஸ்ன்யஸ்மின்னன்யோஸ்ன்யாத் மகதமன்யோஸ்ன்ய தர்மாம்ச்ச அத்யஸ்ய”

    அதாவது ஒன்றை மற்றொன்றிலும், ஒன்றை மற்றொன்றாகவும், ஒன்றின் தர்மத்தை மற்றொன்றின் தர்மமாகவும் தவறுதலாகப் புரிந்துகொள்ளுதல் தவறான அறிவாகும்.
    ஆதிசங்கரரின் தீர்க்கதரிசனம் என்னே! மனிதர்கள் என்னென்ன விதமாகத் தனது உழைப்பைப் பயன்படுத்துவார்கள் என்பதை அன்றே அறிந்திருக்கிறார்.

    8 ” யத்ர த்வஸ்ய ஸர்வ மாத்மைவாபூத் தத்கேன கம் பச்யேத்” —- ப்ருஹதாரண்ய உபநிஷத். இதைத்தான் ஆதிசங்கரர், “எந்த நிலையில் எல்லாமே ஆத்ம ஸ்வரூபமாக ஆகி விட்டதோ அப்போது யார் எதன் மூலம் யாரைப் பார்ப்பது? எல்லாம் ஸத் ஸ்வரூபம் என்று ஒருவன் ஆத்மானந்தத்தில் திளைத்தால் உலகப் பூர்வமான சுக துக்கங்கள் தோன்றாது. அப்படிப்பட்ட ஆத்ம சுகானுபவத்தைப் பெற்றுக் கொண்டு முக்தி எய்துவான்” என்றார்.

    9 முத்தாய்ப்பாக ஆதி சங்கரர் “பரமாத்மா விஷயத்தில் அவரவர் தகுதிக்கேற்ப தத்தம் அனுபவமும் பிரமாணமாகும்” என்றார். ப்ரஸ்தானத்ரயம் எனப்படும் சூத்திரபாஷ்யத்தின் ஆரம்பத்தில் பகவத் பாதர் கூறியது கீழ்வருமாறு:

    “யதா ஸம்பவமிஹ அனுபவவேத்யம் ச ப்ரமாணம்.”

    ஆதிசங்கரர் போதித்த அத்வைதத்தில் இரண்டு என்பது இல்லை.

  13. அன்புள்ள திருஜடாயு,//தலைவனின் இயல்புகளைத் தனதாகவே கொண்டு தலைவி பித்து நிலையில் அரற்ற, அவளது நிலைகண்டு தாய் கூறும் பாடலாக இது அமைந்துள்ளது.இதே போன்று வரும் வேறு அகத்துறைப் பாடல்கள் சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட நூல்களில் உள்ளன.

    ஆனால் இன்னொரு தளத்தில் பார்த்தால், கவிஞனின் தனி மனம் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடும் தருணத்தில் உதிக்கும் கவிதை இது என்று புலப்படும். “கடல்ஞாலம்” என்றும் “யானே” என்றும் மீண்டும் மீண்டும் வரும் சொற்கள் ஒரு தியான மந்திரம் போலவே இக்கவிதையில் உள்ளன//.

    சைவர்கள் நம்மாழ்வரின் பாசுரங்களை விரும்பிப்படிப்பர். அவர் கூறும் இறையனுபவங்கள் சிவானுபவத்திற்கும் ஒத்தவை. ஏனெனில் இவை தாங்கள் எடுத்துக் காட்டியவாறு தமிழ் அகப்பொருள் சிந்தனையை ஒட்டி வளர்ந்த வளர்ச்சி; பரிணாமம். பிசிராந்தையார் கோபெருஞ்சோழனைக் “கேட்டன் மாத்திரை யல்ல தியாவதும் காண்டலில்லா” தவர். இருந்தாலும் நீண்ட காலம் பழகியவர்களுக்கிடையேயும் காணமுடியாத “கிழமை” அவர்களிடையே இருந்தது. பிசிராந்தையார், “தன்பெயர் கிளக்க்ங் காலை யென்பெயர், பேதைச் சோழன் என்னும் சிறந்த, காத்ற் கிழமை யுடையன்” என்று புறத்துறைப் பாடலாகிய புறநானூறு பேசுகின்ற தென்றால், ‘தன்னை” இழக்கச் செய்யும் அகப்பொருள்துறையில் ‘காதற்கிழமை’ எவ்வளவு வலிமையுடையதாக இருக்கும்? இறைவனிடத்தில் ‘தன்னை இழக்கும்’ காதற்கிழமை என்பது இயல்பான அன்பின் பரிணாமம். காதல் , அல்லது பத்தி என்பது அன்பின் முதிர்ச்சி. சங்க இலக்கியங்களின் தொடர்ச்சி பக்தி எனத் தமிழிலக்கிய வரலாற்றில் இயைபை இவ்வழிக் காணலாம். திருமாலினிடத்துத் தன்னை இழந்து, ‘தன்னை மறந்து, தன் நாமங் கெட்டு தலைவன் தாளைத் தலைப்பட்டு விட்ட ‘உணர்ச்சியால் ‘தானே அவ்னே’ ஆகிவிட்ட தலைவியின் நிலையைத் தாய் கூறுவதாக அமைந்துள்ள (கடல்ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ) அழகிய திருப்பாசுரத்தைத் தாங்கள் விளக்கியுள்ளீர்கள். சித்தாந்தசைவம் கூறும் சீவன்முத்திநிலையும் இத்தகையதே. ஆழ்வாரின் திருப்பாசுரத்தில் கூறப்பட்ட தலைவியின் மனநிலையை, “தானெனவொன் றின்றியே தானதுவாய் – நானெனவொன் றில்லென்று தானே யெனுமவரைத் தன்னடிவைத்து” இறை ஆளும் எனச் சிவஞானபோதம் பேசும். ஆழ்வார் பேசும் இத்தலைவியின்மனநிலையுடன், ” செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான், நிச்சமென நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே” எனும் மணிவாசகது ‘உயிருண்ணிப்பத்து’ திருவாக்குகளுடன் ஒப்பிட்டுக் காண இன்ப்மாக இருக்கும்.தமிழ்ப்பாசுரங்களை இக்காலத்துக்கு ஏற்ர நிலையில் மிகச்சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி

  14. அருமையான கட்டுரை. இலக்கியப் பார்வையில் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை அணுகுவது நல்ல முயற்சி. வேதங்களையே கவிதைகளாக பார்த்து அணுகிய புத்தகங்கள் உண்டு. எழுத்தாளர் சுஜாதா இலக்கியப் பார்வையில் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்களை அணுகி அதை விவரித்திருக்கிறார்.

    இது போன்ற முயற்சிகள் வரவில்லை என்றால் நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் – அதனுடைய உரைகளும் பூசை பண்ணத்தான் லாயக்கு – படிக்க லாயக்கில்லை என்று ஆகிவிடும்.

    நம்மாழ்வாரை ஒரு கவியாக அணுகியது சிலருக்கு உறுத்துகிறது. இதே கட்டுரையை ஆசிரியர் ஆங்கிலத்திலோ, மணி ப்ரவாள நடையிலோ எழுதி இருந்தால் இவ்வளவு உறுத்தியிருக்காது என்று தோன்றுகிறது 🙂

  15. திரு உமாசங்கர்,

    முதலில், நான் சங்கரர் பாஷ்யத்தில் கூறியுள்ள அத்வைதத்தைப் பற்றித் தான் பேசுகிறேன். ஆகையால், இந்த விசாரத்தில் சங்கரபாஷ்யத்தில் கூறும் வாக்கியங்களையே எடுப்போம்.

    இரண்டாவதாக, பிரபஞ்சத்துக்கும் பிரம்மத்துக்கும் உள்ள சரீராத்ம பாவம் (bhaavam) வேறு, ஸ்வரூப ஐக்கியம் வேறு. எளிதான உதாரணம் தருகிறேன் — “நான் குட்டையாக உள்ளேன்”, “நான் பருமனாக இருக்கிறேன்”, “கறுப்பாக இருக்கிறேன்” என்று கூறுவது வழக்கு. இதற்கு அர்த்தம் “என்னுடைய உடல் குட்டையாக உள்ளது”, “என்னுடைய உடல் பருமனாக இருக்கிறது”, “என்னுடைய உடல் கறுப்பாக இருக்கிறது” என்பதே என்று இங்குள்ளவர்கள் (அதாவது “நான்” என்பது உடலைக் குறிக்காது, ஆன்மாவைக் குறிக்கும் என்று உடன்படுபவர்கள்) அறிவார்கள். இதை வைத்து “உடல் தான் ஆத்மா” என்று கூறிவிட முடியாது. இதைத் தான் நான் “ஸ்வரூப ஐக்கியம்” என்கிறேன். அதைப் போலத் தான் “பிரம்மம் விரிந்து பிரபஞ்சமானது” போன்ற வேத வாக்கியங்களும். சங்கரரே முண்டகோபனிஷத் 2-1-4 இல் கூறுகிறார்– “அக்னியை முகமாகவும், சூரியனையும் சந்திரனையும் கண்களாகவும், பாதத்தை பூமியாகவும் உள்ள பரமாத்மாவாகிய தேவன் ‘விஷ்ணு’ என்றும் ‘அனந்தன்’ என்றும் கூறப்படுகிறான். இவனே அனைத்து உலகங்களையும் சரீரமாகக் கொண்டவன்,

    பிரபஞ்சத்துக்கும் பிரம்மத்துக்கும் ஸ்வரூப ஐக்கியம் சொன்னால், “பிரபஞ்சம் பிரளயத்தில் அழிந்துவிடுகிறது” என்றால் “பிரம்மம் பிரளயத்தில் அழிந்துவிடுகிறது” எனக் கொள்ளவேண்டிவரும்.

    பாரமார்த்த நிலையில் கூட பிரபஞ்சத்துக்கும் பிரம்மத்துக்கும் ஐக்கியம் கூறிவிட முடியாது. ஏனெனில், பாரமார்த்திக நிலையில் பிரபஞ்சம் பொய்யானது, பிரம்மம் மெய்யானது.

    // அத்வைதம் என்றால் என்ன? ‘நான்’ ( ஒரே பொருள் )அத்வைதம்; “நீ” என்பது இரண்டாவது பொருள் என்பது ஏற்பட்டால் அது த்வைதம், அவ்வளவுதான். //

    நான் பாரமார்த்திக நிலையைப் பற்றிப் பேசவில்லை. வியாவஹாரிக நிலையைப் பற்றிப் பேசுகிறேன். பிரபஞ்சத்தைப் பற்றிய விசாரத்தில் பாரமார்த்திக நிலையைப் பற்றிப் பேச இயலாது, ஏனெனில் பாரமார்த்த நிலையில் பிரபஞ்சம் பொய்யானது. அத்வைதத்தில் வியாவஹாரிகத்தில் பேதங்கள் உண்டு. இதை முனைவர் அவர்களும் கடைசியாக எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் —

    // பிரம்ம சத் ஒன்றே உள்ளது, காட்சிப்படுவன எல்லாம் பொய்த்தோற்றம் எனக் கொள்ளும் மதம்கூட வியவகார நிலையில் உயிர்கள் பல; அவற்றின் அனுபவமும் பக்குவமும் வேறுபட்டிருக்கும் என உடன்படுகின்றது. //

    “த்வயி மயி ச அந்யத்ர ஏகோ விஷ்ணுஹு” இதற்கு அர்த்தம் “நானும் நீயும் எல்லாரும் விஷ்ணுவே” என்பதல்ல; “உன்னிடத்திலும் என்னிடத்திலும் மற்ற அனைவரிடத்திலும் விஷ்ணுவே உள்ளார்”. இதற்கும் அத்வைத-விசிஷ்டாத்வைத-த்வைத வேறுபாட்டிற்கும் சம்பந்தமில்லை. அனைத்தின் உட்பொருளாகவும் அந்தர்யாமியாகவும் பரமாத்மா விஷ்ணு இருக்கிறார் என்பது மூன்று வகை வேதாந்திகளும் ஏற்கும் ஒன்றே.

  16. ஸ்ரீகாந்த்,

    // இது போன்ற முயற்சிகள் வரவில்லை என்றால் நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் – அதனுடைய உரைகளும் பூசை பண்ணத்தான் லாயக்கு – படிக்க லாயக்கில்லை என்று ஆகிவிடும். //

    “இம்மாதிரி கட்டுரைகள் வராவிட்டால் படிக்க லாயக்கில்லை” என்று கூறுவது தவறு. சம்பிரதாய ஸ்ரீவைஷ்ணவர்களைக் கேட்டுப், பேசிப், பழகிப் பார்த்து, அவர்கள் நடத்தும் உபஞாசன்களைக் கேளுங்கள். அவர்கள் ஆழ்வார் பாசுரத்தையும் ஈட்டையும் எப்படி ஆழமாக ஆராய்ந்துக் கற்கின்றனர் என்று தெரிய வரும். ஏழு ஆண்டுகள் காலக்ஷேபம் செய்து தான் நாலாயிரத்தையும் ஈட்டுரைகளுடன் ஆசார்யனிடம் கற்கின்றனர். நீங்கள் சொல்வது போல, ஸ்ரீவைஷ்ணவர் அனைவரும் வெறும் “பூசை” மட்டும் பண்ணுவதில்லை. பலர் பண்ணலாம், ஆனால் இதற்கு சம்பிரதாயம் காரணம் இல்லை. மாறாக, சம்பிரதாயத்தைச் சரியாகப் பின்பற்றாததனால் விளையும் நிலை அது.

    // நம்மாழ்வாரை ஒரு கவியாக அணுகியது சிலருக்கு உறுத்துகிறது. இதே கட்டுரையை ஆசிரியர் ஆங்கிலத்திலோ, மணி ப்ரவாள நடையிலோ எழுதி இருந்தால் இவ்வளவு உறுத்தியிருக்காது என்று தோன்றுகிறது //

    நான் அப்படிச் சொல்லவில்லை. நீங்களே பாருங்கள் உரைநூல்களைப் பற்றி “இன்னொரு வகையில் பார்த்தால்” என்று தொடங்கும் பாராவில் என்ன எழுதியிருக்கிறார் என்று. அதில் உள்ள கருத்துக்களைத் தான் ஆட்சேபித்தேன். இங்கு யாரும் நீங்கள் கூறியபடி மொழி தொடர்பான பூசலில் இறங்கவில்லை.

  17. நண்பர் ஜடாயு ,

    பொதுவாக பக்தி இலக்கியங்களின் இலக்கிய நயம் உரையாசிரியர்களின் பார்வையில் வெளிப்படுவதில்லை , அது அவர்களின் நோக்கமும் அன்று ,

    கம்பராமாயணம் மட்டுமே இல்லகிய நோக்குடனும் அணுகப்படும் படைப்பு , ஆண்டாள் மட்டுமல்லாது நம்மாழ்வாரையும் ரசிக்க உங்கள் உரை துவக்கமாக இருந்தது , தொடந்து மற்ற பக்தி இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தினால் மேலும் உள்ளே புக உதவியாக இருக்கும் ,

  18. திரு கந்தர்வன் அவர்களே

    நீங்கள் இப்படியெல்லாம் சொல்வீர்கள் என்று தெரிந்துதான் ஆதிசங்கரர் சொன்ன பின்வரும் பகுதியை எழுதினேன். மீண்டும் ஒருமுறை:

    தவறான அறிவு எத்தகையது என்றால் என்ன என்பதை ஆதிசங்கரரின் ப்ரஹ்ம்ம சூத்திர பாஷ்யத்தில் உள்ள அத்யாஸ பாஷ்யம் பின்வருமாறு கூறுகிறது.

    “அன்யோஸ்ன்யஸ்மின்னன்யோஸ்ன்யாத் மகதமன்யோஸ்ன்ய தர்மாம்ச்ச அத்யஸ்ய”
    அதாவது ஒன்றை மற்றொன்றிலும், ஒன்றை மற்றொன்றாகவும், ஒன்றின் தர்மத்தை மற்றொன்றின் தர்மமாகவும் தவறுதலாகப் புரிந்துகொள்ளுதல் தவறான அறிவாகும்.
    ஆதிசங்கரரின் தீர்க்கதரிசனம் என்னே! மனிதர்கள் என்னென்ன விதமாகத் தனது உழைப்பைப் பயன்படுத்துவார்கள் என்பதை அன்றே அறிந்திருக்கிறார்.

    ஆதிசங்கரரின் உழைப்பை அவர் சொன்ன வேதாந்தத்துக்கும், அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறையைப் பறைசாற்றுவதற்கும் மட்டுமே பயன்படுத்துதலே நேர்மை என்பதை முன்னரே கூறியிருக்கிறேன். நீங்கள் அதை கவனத்தில் கொள்வது முக்கியம்.

  19. / படைப்பவனும், படைப்பும் வேறுவேறு அல்ல; ஒன்றே என்று இந்து ஞானமரபு கூறுவதைத் தான் இந்தக் கவிதை வரிகளும் சொல்கின்றன. //

    இக்கருத்துக் குறித்துத் திரு கந்தருவன் கூறிய கருத்துகளோடு ஓரளவு எனக்கும் உடன்பாடு உண்டு. திருமுறைகளிலும் படைப்பவனுக்கும் படைப்புக்கும் வேற்றுமையில்லாதது போன்ற பாடல்கள் உண்டு .”ஊனாயுயி ரானாயுட லானயுல கானாய் – வானாய்நில னானாய்கட லானாய் மலையானாய்” சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம். ” வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி -யூனாகியுயிராகி” திருவாசகம் இவைபோன்ற திருமுறைப்பாடல்களில் படைப்போனுக்கும் படைப்புக்கும் வேற்றுமை இல்லாதவாறு கூறப்பட்டிருந்தாலும் இவற்றிற்குக் கொள்ளப்படும்பொருள் அவ்வாறு அன்று. சைவசித்தாந்தம் உலகு உள்பொருளே என்றும் காணப்டும் பல்திறப்பட்ட உலகு செயப்படுபொருளே என்னும் கருத்தை உடையது. அப்படியென்றால் இத்திருமுறை வரிகளுக்குப் பொருள் என்ன”? “பிரமப்பொருளான அகண்ட வியாபக சித்து, கண்டப் பொருளாம் எவற்றினும் அவ்வப் ப் பொருள் அளவாகவும் கூடிஆதார அந்தர வத்துவாகவும் நிற்கிறது” என்பதாம். அதனாலேயே, விஸ்வன், விஸ்வாந்த்ர்யாமி, விஸ்வாதீதன் எனும் பெயர்களும் பரம்பொருளுக்கு உண்டாயின. பிரமசத்தின் ஆதாரத்தில் அவை நிலைபெற்றுள்ளன. பிரம்சத்து அந்தர்யாமியாக உள்ளதால் அவை இயங்குகின்றன. பிரபஞ்சத்தின் இருப்புக்கும் இயக்கத்திற்கும் பிரமசத்து இன்றியமையாதது என்பதே படைப்புக்கும் படைப்போனுக்கும் வேற்றுமைஇல்லாதது போலக் கூறப்பட்டதன் கருத்தாகும்.அலங்கார நூலில் பொருளவநுதி அணி எனஒன்று உள்ளது. பொருளுண்மை மறுத்துப் பிறிதுரைப்பது பொருளவ நுதியாகும் என்பது விதி. அதன் படி ‘, வானாகி மண்ணாகி’ என ஆனாய், ஆனாய் எனக் கூறுவதினாலேயே இவ்வாறு ஆயது செயற்கை என்றும் பிரமத்தின் இயல்பு இதனின் வேறு என்பதும் பெறப்படும். ஓரளவுதத்துவசிந்தனைக்கு இந்தக் கட்டுரைமுன்னோடியாக உள்ளது. நன்றி .

  20. அன்புள்ள ஜடாயு,
    நல்ல கட்டுரைதான். இருந்தாலும் முறையாக சில விஷயங்களைக் கேட்டு அறிந்தபின் எழுதியிருந்தால் சில ஆட்சேபணைகளுக்கு இடம் இருந்திருக்காது. திவ்யப்ரபந்தத்தை மட்டும் கற்று அனுபவிப்பவர் சிலர். உரையாசிரியர்களின் உரையோடு கேட்டு அனுபவித்தல் ஒரு வகை(இதனை தகுந்த ஆசார்யர் மூலம் கேட்பது “காலக்ஷேபம்” எனப்படும்). தமிழ் அறியாதாரும் ஆழ்வார்களின் அந்தமில் பேரின்பக் கவிதைகளின் பொருளை அறியவேண்டும் என்பதற்காகவே செந்தமிழும் வடமொழியும் பிணைந்த மணிப்ரவாள நடையை உரையாசிரியர் கைக்கொண்டனர். சில பொருள்களை சரியாக உணரவைக்க சமஸ்க்ருத சொற்கள் தேவைபட்டுள்ளன. திருவாய்மொழியின் சுவையை வைணவ ஆசார்யரான ஸ்வாமி வேதாந்த தேசிகன் “த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி” என்றும் த்ரமிடோபநிஷத் ஸாரம்” என்றும் ஸ்லோகங்களாக அருளிச் செய்துள்ளார். இதன் மூலம் தமிழறியாதாரும் ஆழ்வார்களின் திருவுள்ளத்தை உணரலாம் என்பதாகும். திருவாய்மொழி ஒரு கற்பக வ்ருக்ஷம். கவிதைச் சுவை வேண்டுவோர் அதனை உணரலாம், தத்துவம் வேண்டுவோர் பெறலாம். பூசித்தும், வாசித்தும் பாராயணம் செய்வோர் வேண்டும் பலன்களைப் பெறலாம். இன்றய தினம் அகம்,புறம், பத்துபாட்டு, எட்டுத்தொகை எனத் தமிழின் பெயரால் சிலர் வயிறு வளர்க்க நம்மாழ்வாரின் திருவருளே காரணம். தமிழ்த் தாத்தா திரு உ.வே. சா அவர்கள் ஏடு தேடிய காலத்தில் ஒரு நாள் ஆழ்வார் அவதரித்த ஆழ்வார்திருநகரிக்குச் சென்றார். பத்துபாட்டில் சில பாடல்கள் கிடைத்தால் முழுமையாக பதிப்பித்து விடமுடியும் என்ற நிலை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உ.வே.சா அவர்களின் நண்பர் ஆழ்வார் திருநகரியில் ஒரு புலவர் வீட்டில் சில சுவடிகள் இருப்பதாகத் தகவல் தந்தார். உ.வே.சாவும் ஆழ்வார் திருநகரி சென்றார். அன்றைய தினம் ஆழ்வாரின் அவதார தினமான வைகாசி விசாகம். இரவில் ஆழ்வார் திருவீதிப் புறப்பாடு ஆயிற்று. அச்சமயம் உ..வே.சா தங்கியிருந்த வீதி வழியே ஆழ்வார் எழுந்தருள உ.வே.சா ஒரு ப்ரார்த்தனை செய்தார். “வேதம் தமிழ் செய்த மாறானான ஆழ்வாரே அடியேன் தேடிவந்த பாடல்கள் கிடைக்க இன்னருள் புரியவேண்டும்” என்பதே அது. அவரின் வேண்டுதல் பலித்தது.
    மறுநாள் காலை அவர் தேடிய பாடல்கள் உள்ள சுவடியை நண்பர் கொண்டுவந்து தந்தார். பத்துபாட்டு முழுமையாகக் கிடைத்துவிட்டது. உடன் திருக்கோவிலுக்குச் சென்று ஆழ்வார் சன்னிதியில் அர்ச்சனை செய்வித்தார். இந்நிகழ்ச்சியை தமிழ்த்தாத்தா அவர்களின் அனுபவங்களின் தொகுப்பான “நிலவில் மலர்ந்த முல்லை” என்ற நூலில் காணலாம்.

  21. உமாசங்கர் அவர்களே,

    //
    ஆதிசங்கரரின் உழைப்பை அவர் சொன்ன வேதாந்தத்துக்கும், அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறையைப் பறைசாற்றுவதற்கும் மட்டுமே பயன்படுத்துதலே நேர்மை என்பதை முன்னரே கூறியிருக்கிறேன். நீங்கள் அதை கவனத்தில் கொள்வது முக்கியம்.
    //

    ஆதி சங்கரர் கூறியுள்ளதற்கு நேர்மையாகத் தான் எழுதி வருகிறேன், என்னுடைய கட்டுரைகளிலும் மறுமொழிகளிலும் அவர் கூறியதை அப்படியே தமிழ்ப்படுத்தியுள்ளேன். Book reference, online reference எல்லாம் தந்துள்ளேன். அவர் பாஷ்யங்களில் கூறாததை அவர் தலை மேல் நான் சுமத்துவதில்லை. நீங்கள் இவ்விஷயத்தில் நேர்மையாக உள்ளீர்களா என்பதை நீங்களே ஆராய்ந்துப் பார்க்கவேண்டும்.

    மேலும், விவாதத்தில் இறங்கிவிட்டு, விவாதத்திற்குச் சம்பந்தமில்லாததை எல்லாம் கூறுகிறீர்கள். இப்படி நீங்கள் குதர்க்கம் பண்ணினால் எனக்குக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

  22. //இன்னொரு வகையில் பார்த்தால், இந்த உரைகள் மிதமிஞ்சிய அளவில் பாசுரங்களின் ஒவ்வொரு சொல்லையும் எடுத்துக் கொண்டு, அதன் கவிநயத்தையும், தத்துவார்த்தங்களையும் விளக்குவதாக இருக்கின்றன. இந்த அழகிய, எளிய கவிதைகளைப் படிப்பவர்களுக்கு எந்த ஒரு “திறப்பும்” இல்லாதபடி திணறடித்து உரைக்குள் அடைத்து விடுகின்றன. //i இந்த வரிகள் ஈட்டுரைக்ளுக்குப் புகழ்மொழிகளாகவே எனக்குப்படுகின்றன. இதற்குமேல் உரை அனுபவமே வேண்டுமே அன்றி மேலும் இதக்காட்டிலும் சிறப்பாக உரைப்பதற்க்கு ஒன்றுமில்லை என்ற பாராட்டே இவ்வரிகளில் தொனிப்பதாக எனக்க்ப்படுகிறது. தமிழ் உரையாசிரியர்களில் , நச்சினார்க்கினியர் பரந்த படிப்பு உள்ளவர். அவர் காலத்தில் வழங்கிய தமிழ்நூல்கள் அனைத்திலும் பயிற்சிஉடையவர். ஆதலால் அவருடைய உரை புலவர்களால் கொண்டாடப்படுகின்றது.”வேதபோத, நச்சினார்க் கினியனெச்சில் நறுந்தமிழ் நுகர்வர் நல்லோர்” நச்சினார்க்கினையன் சுவைத்து அனுபவித்த எச்சிலைத்தான் அவரது உரை, அதனை அனுபவித்து நற்புலவர் மகிழ்கின்றனர்’ என்பது இத்தொடரின் பொருளாகும். ஆழ்வார்களது அமுதமொழியின் ஒவ்வொரு சொல்லையும் ஈட்டுரைகாரர் சுவைத்து நமக்கும் ஊட்டுகின்றனர். அவர்கள் அனுபவித்துச் சுவைத்த எச்சிலே உரையமிழ்தம். திருமுறைகளை அனுபவித்தற்கும் அவை உதவுகின்றன. நம்பியாரூரர் அவிநாசியில் அருளிய திருப்பதிகத்தின் முதற்பாடல், ” எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே,” என்று தொடங்குகின்றது. இத்தொடருக்கு, உன்னையே பற்ரறுக்கோடாகக் கொண்டு வாழ்வேன்; எக்காரணத்தால் மறப்பேன்!” என்று தான் பொருள் சொல்லமுடியும். ஆனால் திருவாய்மொழியில் அமைந்த இதுபோன்ற தொடருக்கு ( 1-10-9) ” அபூர்ணன் என்றா, நிஹிதன் என்றா, வடிவழகில்லை என்றா, மேன்மை யில்லை என்றா, எனக்கு உபகாரி அல்லன் என்றா,எத்தைச் சொல்லிமறப்பேன்” என்று .மறப்பதற்கு உரிய ஏதுக்களை விரித்து அவை ஒன்றும் பெருமானிடம் இல்லை, அதனால் அவனை மற்ந்து நான் நினைப்பது எதுவுமில்லை என்று உரை வழங்கப்படுகின்றது.. இந்த உரை அனுபவத்தோடு அவிநாசிப் பதிகத்தை ஓதும்போது பெறத்தக்க மகிழ்ச்சியும் பயனும் பெரிது. இலக்கியச்சுவை வழியாகப் பக்தி அனுபவத்திற்கு ஈட்டுரைகள் பெரிதும் வழிகாட்டுவன..

  23. நல்ல கட்டுரை. நல்ல விவாதங்கள். தொடரட்டும் இந்த சிறந்த பணி.

    நல்ல சேவை!
    நன்றி

  24. திரு கந்தர்வன் அவர்களே
    விவாதத்துக்குச் சம்பந்தமானதைத்தான் கூறினேன். பொருள் கூறுவது மட்டுமல்ல, எந்த நோக்கத்தில் அவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது என்பதும் முக்கியம். இடம் பொருள் ஏவல் பற்றி நான் பலமுறை சொல்லியாகிவிட்டது. ஒரு இடத்தில் ஒரு பொருளில் ஒரு சூழலில் கூறியதை வேறோர் இடத்தில் பொருத்தும்போது மாறுபட்ட கருத்து வரத்தான் வரும். அதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். நோக்கம்தான் எனது கவலையே தவிர வேறொன்றுமில்லை. இது உங்களுக்கும் புரியும், இதில் எந்த குதர்க்கமும் இல்லை.

  25. ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும் தாழ்வாக நினைப்பவர்கள் தாம்
    நரகில் வீழ்வார்கள் என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ அவர்பால் அவர்பால் சென்றணுகக் கூசித்திரு. ——-மணவாள மாமுனிகள் -உபதேச இரத்தின மாலையில்.
    நாலாயிர திவ்யப் பிரபந்தம் கவிதைத் தொகுப்பு அல்ல.
    இக் கட்டுரை தமிழுக்கும் அல்ல, ஹிந்துவுக்கும் அல்ல.

  26. திரு உமாசங்கர் அவர்களே,

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஆதி சங்கரர் ஒரு கேள்விக்கு ஒரு இடத்தில் ஒரு audience-க்கு ஏற்ப ஒன்றைச் சொல்லுவார், இன்னொரு இடத்தில் அதே கேள்விக்கு வேறு audience-க்கு வேறு மாதிரி சொல்லுவார் என்பதா?

    இப்படி அவர் செய்திருக்க முடியாது. ஏனெனில், இடம், audience-க்கு ஏற்ப மாற்றிக் கூறுவது அரசியல்வாதிகளால் தான் முடியும். ஆதி சங்கரர் போன்ற சிறந்த ஞானியும் துறவியும் அப்படிச் செய்திருக்க இயலாது.

  27. II recently saw this web page

    https://nfs.sparknotes.com/

    where Shakespeare’s plays are printed in his language on the left and modern English POETIC version on the right. This is very useful to appreciate Shakespeare’s style and language. You are a poet and expert in Vaishnava literature. You can attempt on similar lines. Imagine Nammazhvar’s pasurams on the left and the modern Tamil poetic version on the right. how a wonderful contribution it will be to appreciate the pasurams.

  28. திரு கந்தர்வன் அவர்களே
    உங்களுக்கு வந்திருக்கும் இப்பழக்கம் போகாது என்றே தோன்றுகிறது. நான் சொன்னது உங்களுக்கு புரிந்தாலும் வேறு விதமாக எழுதுகிறீர்கள்.
    ஆதி சங்கரர் தத்துவார்த்தமாகச் சொன்னதை நீங்கள் பிரம்ம வாதத்துக்குப் பயன்படுத்துகிறீர்கள். ஆதிசங்கரர் சொன்ன அத்வைதத்தை வேறு விதமாகப் பொருள் கூறுகிறீர்கள். இதைத்தான் நான் சொன்னேன். இப்படியெல்லாம் உங்களைப் போன்றவர்கள் செய்யக்கூடும் என்பதை அறிந்துதானோ என்னவோ ஆதிசங்கரரே நான் மேலே சுட்டிக்காட்டிய பகுதியைச் சொல்லியிருக்கிறார்.

  29. அன்புள்ள g ranganaathan அவர்களுக்கு,

    உங்கள் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி.

    என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
    அன்றைக்கு, அன்று என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை
    இன் தமிழ் பாடிய ஈசனை..

    என்றல்லவோ நம்மாழ்வார் இறைவனைப் பாடினார்! நீங்கள் தந்திருக்கும் உ.வே.சா வாழ்க்கை சம்பவம் நெகிழ்ச்சியூட்டுகிறது. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

  30. திரு உமாசங்கர் அவர்களே,

    // ஆதி சங்கரர் தத்துவார்த்தமாகச் சொன்னதை நீங்கள் பிரம்ம வாதத்துக்குப் பயன்படுத்துகிறீர்கள். //

    நீங்கள் ஆதி சங்கரரைப் பற்றிப் புரிந்துக்கொண்ட விதம் இது. இதற்கு நான் பொறுப்பு இல்லை. தத்துவார்த்தத்திற்குச் சிலதையும், பிரம்மா வாதத்துக்குச் வேறொன்றையும் சொன்னவர் ஆதி சங்கரர் அல்லர். அவருடைய பாஷ்யங்களை முழுவதும் படித்திருந்தால் இப்படி எழுத மாட்டீர்.

    // ஆதிசங்கரர் சொன்ன அத்வைதத்தை வேறு விதமாகப் பொருள் கூறுகிறீர்கள். //

    நீங்கள் புரிந்துக் கொண்டுள்ள ‘அத்வைதம்’ வேறு. அதை ஆதி சங்கரர் கூறியதாக நீங்கள் நினைப்பதற்கு நான் பொறுப்பல்ல.

    ஆதி சங்கரரைப் பற்றி உங்களிடம் அத்தாட்சி வாங்க வேண்டும் என்று எனக்கு ஏவல் விடுக்கிறீர்கள். மேற்கொண்டு இந்த விவாதத்தை இவ்விடத்தில் தொடர எனக்கு இஷ்டம் இல்லை. இந்த விவாதத்தை ஆரம்பித்ததும் நீங்களே. ஆக்கபூர்வமான முயற்சியில் நான் இறங்குவதற்கு நீங்கள் செய்துக்கொண்டிருக்கும் அபவாதம் எனக்கு விக்னமாக உள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதிரியான வாதத்தில் நீங்கள் என்னுடன் இனி இறங்கினால் அதற்குப் பதில் கூறப்போவதில்லை. புரிதலுக்கு நன்றி.

  31. அருமை.. மிக அருமை
    தெளிவான உங்கள் புரிதலைக் கண்டு அகமகிழ்ந்தேன்
    வாழ்க உங்கள் நற்பணி!

    திவாகர்

  32. மேலே ஒரு நண்பர் எழுதிய கடிதத்தில் , அகம், புறம் என்று சில புலவர்கள் பிழைப்பு நடத்துவதை பற்றி சொல்கிறார். அகம் புறம் இரண்டுமே காலத்தால் , 3892 பாடல்கள் உள்ள நாலாயிரத்துக்கும், 18281 பாடல்கள் உள்ள பன்னிரு திருமுறைகளுக்கும் முற்பட்டவை.எனவே, அகமும், புறமும் எந்தவிதத்திலும் இவர் சொல்லும் 3892 பாடல்களால் பயன் பெறவில்லை. வேண்டுமானால் அகம், புறத்தினால் இவர் சொல்லும் 3892 பாடல்கள் ஏதேனும் பயன் அடைந்திருக்கலாம்.

    தேவை இல்லாமல் , அகம் புறத்தை வம்புக்கு இழுக்க வேண்டாம். உங்கள் 3892 பாடல்களை விட , அகமும் புறமும் மிக மிக உயர்ந்தவையே ஆகும். அகமும் புறமும் உண்மை தமிழனால் எழுதப்பட்டவை ஆகும். திராவிட இயக்கங்களை போல கேடு கெட்டவர்களால் எழுதப்பட்டது அல்ல.

  33. வட இந்தியாவில் சைவ சமயம் வளர்ச்சியடைந்தவற்றை தெளிவு படுத்துவீர்களா?
    நன்றி

  34. உடன்பிறப்பே,

    /***
    இந்த அழகிய, எளிய கவிதைகளைப் படிப்பவர்களுக்கு எந்த ஒரு “திறப்பும்” இல்லாதபடி திணறடித்து உரைக்குள் அடைத்து விடுகின்றன. (”பெரியவாச்சான் பிள்ளை, அவரே இலைபோட்டு அவரே சாப்பிட்டும் விடுவார்; நாம் பார்த்துக் கொண்டு நிற்கவேண்டும்” – ஜெயமோகன்).
    பாரதியார் கலைமகளைப் பாடும்போது “வேதத் திருவிழியாள்; அதில் மிக்க பல் உரையென்னும் கருமையிட்டாள்” என்பார். கண்மை அளவோடு இருந்தால் அழகு; அதுவே அதிமாகி விட்டால் விகாரமாகத் தோன்றும் அல்லவா? உரைகள் விஷயத்திலும் அதுவே பொருந்தும் என்று இந்த உவமை அழகாக விளக்குகிறது.
    ***/

    மது ,மாது ,சூது என்னும் சினிமா கலை கற்றவர்களுக்கு பெரியவாச்சான் பிள்ளை அரியவர்தாம் .
    அடியேன் போன்ற -“அடியேன் சிறிய ஞானத்தன் ,நீசனேன் நிறையொன்றுமிலேன் ” என்றிவ்வாறு அவரது விக்கிரக வழிபாடு செய்வோருக்கும் அவரது தனியனை சேவிப்போருக்கும் அவர் எளியவர்தாம் .

    “பத்துடை அடியவர்க்கு எளியவன் ,பிறர்களுக்கு அறிய வித்தகன் ”

    காம ,க்ரோத, மோஹ ,மத ,மாற்சர்யத்திற்கு ஆளானோர் கேட்பது -” எங்கேடா ஹரி ?”

    அடியோங்கள் திருப்பிக் கேட்பது – “எங்கே இல்லை ஹரி !”

    பெரியவாச்சான் பிள்ளை நான்கு வேதங்களுக்கு பாஷ்யம் செய்துள்ளார் . (ஸாயனர் ,வித்யாரண்யர் பாஷ்யம் போல இதில் குறைகளே காண முடியாது .]

    அழகிய மணவாளச் சீயர் என்றொரு வைணவர் இருந்தார் .அவர் பெரியவாச்சான் பிள்ளை என்னும் மஹாசார்யருக்கு தொண்டு புரிந்து வந்தார்.
    அவர் தமது பூர்வ ஆஸ்ரமத்த்தில் 32 வயது வரை எழுதவும் படிக்கவும் அறியாதவராயிருந்தார் .
    ஒருமுறை அகத்திலே பிள்ளையவர்களின் சீடர்கள் ஏதோவொரு ஏட்டினை வாசித்துக் கொண்டிருந்தனர் .
    அப்பொழுது அவ்வழியே சென்ற சீயர் ,”என்ன வாசிக்கின்றீர்கள்? ” என்றார் .
    அதற்கு சீடர்கள் ,- “ம்ம்ம்!!…. முசலகிஸலயம் வாசிக்கின்றோம்” என்றனர் .
    வடமொழியில் முசலம் என்றால் உலக்கை .கிசலயம் என்றால் கொழுந்து .
    ” ஒருவேளை உலக்கை கூட தளிர்விடலாம் . ஆனால் உன்னால் கல்வி கற்பது என்பது அரிது ” – என்னும் பொருளை பிள்ளை சொல்ல வெட்கினார் . பின்னர் முறையே பிள்ளையிடம் பாடம் பயின்று, வடமொழி,தென்மொழி கலைகள் முழுதும் வாசித்து முடித்த பின்னர் சந்நியாச ஆஸ்ரமம் பெற்று “திருவாய்மொழிக்கு -பன்னீராயிரப்படி” என்னும் மணிப்பிரவாள உரை நூலினை அருளிச் செய்தார் .

    படி என்பது 16 தென்மொழி/வடமொழி வார்த்தைகள் கொண்ட அனுஷ்டுப் சந்தம் என்னும் தளையில் அமையும் நூலாம் . தர்க்கம் ,மீமாம்சை ,ஸ்ம்ருதி ,புராண உபாங்கங்களுடன் -வேதம் ,மற்றும் அதன் அங்கங்களுடன் கூடிய கலைகளில் பயிற்சியின்றி இவற்றை பயிலவும் அரிது . 12000 கிரந்த அளவுள்ள சுக மகரிஷி அருளிய ஸ்ரீமத் பாகவத புராணத்திற்கு ஈடாக பன்னீராயிரப்படி என்னும் உரை அவரால் செய்யப்பட்டது ,தன் ஆச்சார்யர்
    பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் அருளால் அன்றோ !!

    அன்போடு அழகிய மணவாளச் சீயர்
    பின்போரும் கற்றறிந்து பேசுகைக்கா -தன்பெரிய
    போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
    ஏதமில் பன்னீராயிரம் . உபதேச ரத்தினமாலை -45

    வ்யாக்யான சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை என்னும் மஹாசார்யர் அவதரித்தது திருக்குடந்தை அணைக்கரைக்கு அருகில் உள்ள சேங்கானூர் என்னும் திருப்பதி. அவர் ஆவணித் திங்கள் ரோஹிணீ திருநக்ஷத்திரத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அம்சமாக அவதரித்தார் . நாலாயிர திவ்ய பிரபந்தங்க ளுக்கு முழுமையான வ்யாக்யானம் அருளியதும் இவரே . இவரது ஆச்சார்யர் தாம் நம்பிள்ளை ஆவார் .

    இவர் நாலாயிரத்திலுள்ள சொற்களையே மட்டும் வைத்து ராமாயண பாராயண நூலொன்று செய்தார். அதுவே பாசுரப்படி ராமாயணம் என்னும் நித்ய பாராயண நூலாகும் .[நாலாயிரமும் + ராமாயணமும் பாராயணம் செய்த பலன் கிட்டும் ]

    வால்மீகி ராமாயணம் தனிப்பாடல் திரட்டு என்னும் தத்துவ நூலும் ,வ்யாஸ பாரத தனிப்பாடல் திரட்டு என்னும் தத்துவ நூலும் இவரால் அருளப்பட்டவை .
    அபயப்பிரதான சாரம் மற்றும் பல வைணவ நூல்களும் அருளியவர் .வேதாந்த தேசிகருக்கு இவரே ரோல் மாடலுமாவார்.

    24000 க்ரந்த அளவுள்ள வால்மீகி ரிஷி அருளிய ராமாயணத்திற்கு ஈடாக “திருவாய்மொழி இருபத்துநாலாயிரப்படி” உரைநூல் மிகவும் ப்ரசித்தி பெற்றது

    நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட
    பின் பெரிய வாச்சான் பிள்ளை அதனால் -இன்பா
    வருபத்தி மாறன் மறைப்பு பொருளைச் சொன்னது
    இருபத்து நாலாயிரம். உபதேச ரத்தினமாலை -43

    வேதம் பற்றி மாக்ஸ் முல்லர்,மோனியர் வில்லியம்ஸ் சொன்னதே சரி என்னும் கழுதைகளுக்கு கற்பூரவாசனை பற்றித் தெரியாதுதான் .
    ஆசார்யன் ,அடியார் பற்றி அவர் அறியார் !. 90 கட்டிங் , பாட்டல்,பீடா ,நடிகையர்,கஞ்சா பற்றியே அவர் அறிவார் !

    அன்புடன் ,
    கணேசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *