அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1

(தொடர்ச்சி…)

அயோத்தி வழக்கில் வந்துள்ள இத்தீர்ப்பு நிச்சயமாக ஹிந்துக்களுக்கு நூறு சதவீத நியாயத்தை வழங்கிவிடவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில், இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டடத்தின் கீழ் பிரமாண்டமான கோயில் கட்டுமானம் இருந்தது தெளிவாகியுள்ளது. அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஹிந்துக்கள்வசமே ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாட்டின் சூழல் அத்தகைய தீர்ப்பு வழங்கத் தடையாக இருப்பதை ஏற்றே சமரசமான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி இருக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் ‘கட்டப் பஞ்சாயத்து’ தீர்ப்பு என்று சில முன்னணி நாளிதழ்கள் வர்ணித்துள்ளன. ‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்’ என்ற பாரதியின் முழக்கத்தை முத்திரை வாக்கியமாகக் கொண்டுள்ள ‘தினமணி’யும் இதே தடம் புரண்ட பாதையில் தலையங்கம் தீட்டி இருக்கிறது.

தினமணி நாளிதழுக்கு என்று பிரத்யேக வரலாறு உண்டு. தினமணி என்றுமே மத்திய, மாநில அரசுகளின் ஊழல்களை அம்பலப்படுத்தி வந்துள்ளது. அரசியல் ஆளுமைகளுக்கு அடிபணியாத ராம்நாத் கோயங்கா நடத்திய பத்திரிகை அது. அதன் தற்போதைய ஆசிரியர் கே.வைத்தியநாதன் தினமணியின் பாரம்பரியத்தைக் காத்து வந்திருக்கிறார். அவரது தலையங்கங்கள் நேர்மையின் குரலாக ஒலித்துள்ளன. இலங்கை விவகாரத்தில் தமிழகத்தின் எந்த நாளிதழும் செய்யாத அரும்பணியை தினமணி செய்தது. ராமர் கோயில் இயக்கத்தின்போதும் (1984-92) தினமணி ஆற்றிய பணியை யாரும் மறந்துவிட முடியாது.

அப்படிப்பட்ட தினமணியின் அக்டோபர்-1 தேதியிட்ட ‘அரசியல்தனமான தீர்ப்பு’ தலையங்கம் கண்டிப்பாக அபத்தமானது என்றே சொல்ல வேண்டும். அயோத்தித் தீர்ப்பை ‘கட்டப் பஞ்சாயத்து’ என்று விமர்சித்திருக்கிறது தினமணி தலையங்கம். இணையத்தளத்தில் இத்தலையங்கம் பெற்றுள்ள பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் எவரும், தலையங்கத்தின் நோக்கம் திசைதிரும்பி விட்டதை உணர முடியும்.

அயோத்தித் தீர்ப்பு அனைவரையும் ஏற்கச் செய்வதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே, நீதிபதிகள் சமரசமயமான தீர்ப்பை வழங்கி உள்ளார்கள். அதனால்தான், நாடு முழுவதும் பீதி மாறி அமைதி ஏற்பட்டது. தீர்ப்பின் உடனடி விளைவுகள் இவை. அதைப் புரிந்து கொள்ளாமல், எட்டாயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட தீர்ப்பின் முழு விபரத்தைப் படிக்கும் அவகாசம் இல்லாத நிலையில் எழுதப்பட்ட ‘அவசரக் குடுக்கை’த் தலையங்கம், அதற்கான பலனைப் பெற்றுவிட்டது. ஹிந்துக்களை வக்கிரமாக வசைபாடும் கும்பல் பின்னூட்டங்களில் புகுந்துகொண்டு தினமணியின் தரத்தை நாற அடித்தது.

தொலைநோக்குப் பார்வையும், பின்விளைவுகளை உத்தேசிக்கும் தீர்க்கதரிசனமும் இல்லாத தலையங்கம், ‘மவுண்ட்ரோடு மாவோ’ பத்திரிகையில் வெளிவந்த கருத்துத் திணிப்பு செய்திகளை விட பல மடங்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மாவோ பத்திரிகை இப்படித்தான் எழுதும் என்ற தெளிவுடன்தான் அதனை யாரும் படிக்கிறார்கள்; தினமணி அப்படியல்ல. அந்த நாளிதழில் வந்தால் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் இருக்கிறது. திருவாளர்கள் சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன் போன்றோர் வழிநடத்திய நாளிதழ் தினமணி. அந்த நம்பிக்கையை இத்தலையங்கம் போக்கிவிட்டது.

இந்த இடத்தில் சில கேள்விகள் எழுகின்றன. கட்டப் பஞ்சாயத்து என்பது என்ன? பஞ்சாயத்திற்கும் இதற்கும் என்ன வித்யாசம்? நமது பாரம்பரிய நீதிமுறையில் பஞ்சாயத்து முறை இருந்ததே தவறா? சமீபகாலமாக சமரசத் தீர்ப்பாயங்களை நீதிமன்றங்களே நடத்துகின்றனவே, அவையும் தவறா? பஞ்சாயத்து என்ற வார்த்தை கீழ்த்தரமானதா?

இதற்கு பதில் வேண்டுமானால் நாம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் அமர்ந்த ஆட்டிடையனும் கூட நடுநிலையான தீர்ப்பு சொன்னதை நாம் கதைகளில் கேட்டிருக்கிறோம். தற்போதைய இ.பி.கோ சட்டங்கள் வருவதற்கு முன்னரும் இந்நாட்டில் பன்னெடுங்காலம் நீதி காப்பாற்றப்பட்டுள்ளது.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி

-என்பது நடுநிலை நாயகர்கள் குறித்த திருக்குறளின் விளக்கம் (12-8).

அத்தகைய சான்றோர் ஐவர் சேர்ந்த அவையே ‘பஞ்சாயத்து’. அவர்கள் முன்பு வரும் எந்தப் பிணக்கும் நிவர்த்தியாகும்; வழக்குகள் உடனே பைசலாகும். அங்கு எந்த வழக்கும் 60 ஆண்டுகள இழுத்துக் கொண்டிருக்காது.

ஆங்கிலேயரும் முகலாயரும் வருவதற்கு முன்னர் நமது நாட்டில் இயல்பான சட்டம்- நீதி வழங்கு நெறிமுறைகள் இருந்தன. தமிழின் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பல, சமுதாய நீதி கூறும் நூல்கள் என்பதிலிருந்தே, நமது முன்னோர் நீதிக்கு அளித்த முக்கியத்துவத்தை உணரலாம். அத்தகைய நாட்டில்தான், தற்போது கோடிக் கணக்கான வழக்குகள் குவிந்து, விசாரிக்க முடியாமல் மலையெனக் கிடக்கின்றன. சட்டமே பிரதானம் என்று சொல்லிக் கொண்டே, அதைத் திருத்தும் மசோதாக்களை சுயவிருப்பப்படி நிறைவேற்றிக் கொண்டே, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றங்கள் புரிந்துகொண்டே வாழப் பழகிவிட்ட சமுதாயமாக நாம் மாறிவிட்டோம். அதனால்தான், பெருந்தன்மையுடனும், முன்னெச்சரிக்கையுடனும் அயோத்தி வழக்கில் மூன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் குற்றம் கண்டு தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

panchayat1

பஞ்சாயத்துத் தீர்ப்பு என்பது- அக்குழுவில் உள்ள ஐந்து சான்றோர் பெருமக்களும் இயைந்து வழங்குவது; நடுநிலைமை, தெய்வ நம்பிக்கை, மனிதாபிமானம் ஆகியவற்றின் சேர்க்கை அது; வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரின் வலிமை, பாதிப்பு, தாங்கும் திறன் ஆகியவற்றை உத்தேசித்து அதிகாரமும் கருணையும் கலந்து வழங்குவது; குடும்ப நலம், கிராம நலம், நாட்டு நலம் அனைத்தையும் கருத்தில் கொண்டு தர்மத்தின் அடிப்படையில் வாய்மொழியாக வழங்கப்பட்டது; பாரம்பரிய நீதிநூல்களும், இதிகாசக் கதைகளும் மிகச் சாதாரணமான பழமொழிகளும் கொண்டு எளிதாக பிரச்சினைகளைத் தீர்த்தது.

பஞ்சாயத்திற்கும் கட்டப் பஞ்சாயத்திற்கும் என்ன வித்யாசம்? தர்மவான்களான சான்றோர் கூடி வழங்கியது பஞ்சாயத்துத் தீர்ப்பு. அந்த இடத்தை அதிகாரம் மட்டுமே படைத்த நிலச்சுவான்தாரர்கள் பிடித்துக்கொண்டபோது கட்டப் பஞ்சாயத்து ஆனது. ஒரே வரியில் சொல்வதானால், அண்ணா ஹசாரே செய்வது பஞ்சாயத்து; அழகிரி செய்வது கட்டப் பஞ்சாயத்து. தற்போதைய அயோத்தித் தீர்ப்பை எவ்வாறு கட்டப் பஞ்சாயத்து என்று விமர்சிப்பது?

நாட்டில் வழக்குகளைக் குறைக்க சமரசத் தீர்வே சரியான முறை என்று புரிந்துகொண்டு உச்சநீதிமன்றம் முதல் கீழ்நிலை நீதிமன்றம் வரை முயற்சி மேற்கொண்டிருப்பது, பல இடங்களில் நல்ல பலனைத் தருவதைக் காண்கிறோம். சமரசம் என்பதே விட்டுக்கொடுப்பதும், பெற்றுக்கொள்வதும்தான். ஏதோ ஒரு வகையில் வழக்கு தீர்ந்து இரு தரப்பினருக்கும் அமைதி கிட்டினாலே கோடி புண்ணியம்.

கிராமத்தில் ஒரு கதை உண்டு. சகோதரர்கள் இருவர் தங்கள் நிலத்தை பாகப்பிரிவினை செய்ய நீதிமன்றத்தை நாடினராம். அதற்காக தங்கள் வீடு, நகைகளை விற்று வழக்கு நடத்தினராம். இறுதியில், சொத்தும் இழந்து நிலமும் இழந்து, வழக்கை நடத்திய வழக்கறிஞர்களுக்கே அடிமாட்டுவிலைக்கு விற்றுவிட்டு அதே நிலத்தில் கூலிவேலை செய்தார்களாம். இதுபோன்ற எத்தனை குடும்பங்களின் அழிவை நீதிமன்ற வராந்தாக்களில் நாம் கண்டிருக்கிறோம்! நமது உரிமையியல் நீதிமன்ற வழக்குகள் விசாரணைக்கு வரவே எத்தனை காலம் ஆகிறது? சாட்சிகள் மறைந்து, வம்சமே பூண்டற்றுப் போனபின்னும் வாய்தா வாங்கும் வழக்குகள் நடவாமலா உள்ளன? பல தலைமுறைகள் வன்மத்துடன் காத்திருந்து இறுதியில் பெறும் தீர்ப்பால் வம்சாவளிக்கு என்ன பலன் கிடைக்க முடியும்?

இத்தகைய நிலையில், நாட்டு நலனை உத்தேசித்து சமரச முயற்சியாகவே இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர் மூன்று நீதிபதிகளும். ஹிந்துக்கள் தரப்பில் முழு நியாயம் இருந்தும் கூட, அனுபவ பாத்தியதையின் அடிப்படையில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை ஷன்னி வக்பு வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது அதனால்தான். தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமல்லாது, நாட்டின் தற்போதைய சூழலையும் அரசியல் நிலவரத்தையும் உலகின் போக்கையும் பரிசீலித்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் ”யாருக்கும் வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை’‘ என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார். முஸ்லிம் தலைவர்களும் கூட, தீர்ப்பு ஏமாற்றம் அளித்தாலும் அமைதியுடன் அதனை ஏற்கக் காரணம் இதுவே. மத்திய அரசும், உ.பி. மாநில அரசும் நிம்மதிப் பெருமூச்சு விட வாய்ப்பளித்துள்ளது இத்தீர்ப்பு.

தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் பிரதானத் தீர்ப்பை அளித்திருந்தால், இத்தகைய அமைதி கிட்டாமல் போயிருக்கலாம். அதற்கு சில சம்பவங்களை இங்கு நினைவுகூரலாம்:

கடந்த செப். 6-ம் தேதி, அமெரிக்காவின் ஏதோ ஒரு மூலையில் உள்ள கிறிஸ்தவ மத போதகர் டெரி ஜோன்ஸ் என்பவர் ‘செப். 11-ம் தேதியன்று திருக்குரானை எரிக்கப்போவதாக’ அறிவித்தார். அதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியதால் அவர் தனது மிரட்டலை வாபஸ் பெற்றார். ஆயினும் உலகில் வேறு எங்கும் நிகழாத வன்முறை ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டது. அந்த வன்முறையில் காஷ்மீர் மக்கள் 18 பேர் பலியாகினர். இஸ்லாமிய நாடுகளில் கூட நிகழாத அந்த எதிர்ப்பும் வன்முறையும் இந்தியாவில் ஏன் ஏற்பட்டது? நமது அண்டைநாடான பாகிஸ்தான் தொடர்ந்து நடத்திவரும் விபரீத விளையாட்டின் விளைவு அது. அத்தகைய எதிரிக்கு வாய்ப்புக் கொடுக்கும் விதமாக தீர்ப்பு அமைய வேண்டாம் என்று நீதிபதிகள் சிந்தித்திருக்கலாம்.
 
நமது ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பரப்பிவரும் மதச்சார்பின்மைக்கு மாசு நேர்ந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலும் நீதிபதிகள் யோசித்திருக்கலாம். நாட்டின் அமைதியைக் கருதி அரசும் நிர்பந்தம் செய்திருக்கலாம். நியாயத்தை சொல்லப்போய் ஒட்டுமொத்த தீர்ப்பும் நிராகரிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற முன்யோசனை இருந்திருக்கலாம். எதுவாயினும் நாட்டுநலன் அடிப்படையில், யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற சிந்தனை நல்லதுதானே? இத்தகைய தருணத்தில் யாவரையும் சமாதானப் படுத்தும் வகையில் உண்மையை சிறிதளவேனும் சொல்ல வேறு வாய்ப்பு இருக்கிறதா என்ன?

இதனைப் புரிந்துகொள்ளாமல், தினமணி தீட்டிய தலையங்கம் ஹிந்து எதிரிகளின் பிரசார சாதனமாகி இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ, தினமணி தனது பாரம்பரியப் பெருமையைக் குலைக்கும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் இத்தலையங்கத்தை எழுதிவிட்டது. அதன் முக்கிய பகுதி இதோ…

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லாப் பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்சினையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது….

அயோத்திப் பிரச்சினையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, ‘ராமஜென்மபூமி’ என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது….

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது….

அதன் அடிப்படையிலும், ‘நம்பிக்கை’யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, ‘இது ராமர் ஜென்மபூமிதானா?’ என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது…

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானே தவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல….

இந்த ‘நம்பிக்கையின் அடிப்படையில்’ என்ற நீதிபதியின் வார்த்தைகள் தான் மாபெரும் குற்றமாக முன்வைக்கப்படுகிறது. ஏனெனில், ”ஸ்ரீராமனின் பிறப்பை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது; அது நம்பிக்கையின் பாற்பட்டது” என்று ஹிந்து இயக்கங்கள் பல ஆண்டுகாலமாக சொல்லி வந்துள்ளன. அதையே அலஹாபாத் உயர்நீதிமன்றம் கூறியதை ஊடகங்களால் ஏற்க முடியவில்லை. அவர்களுக்கு மூன்று நிகழ்வுகளை நினைவூட்டி கேள்வி கேட்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

1. காஷ்மீரின் ஹஸ்ரத்பால் மசூதியில் ஒரு பேழையில் வைக்கப்பட்டிருந்த இறைதூதர் முகமது நபி அவர்களின் புனித முடி ஒன்று காணாமல் போய்விட்டதால் 1991-ல் நிகழ்ந்த வகுப்புக் கலவரத்தை நாடு மறந்திருக்காது. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, காணாமல் போன அந்த முடி அவசர அவசரமாகக் கண்டுபிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தில் கொல்கத்தா கடுமையாக பாதிக்கப்பட்டது. காணாமல் போன முடியைக் கண்டறிய இந்திய அரசு ஏன் அப்போது கடும் முயற்சிகளை மேற்கொண்டது? இஸ்லாமியர்களின் நம்பிக்கை அரசை ஆட்டுவித்தது. ஆக வன்முறையைக் கைக்கொள்ளும் சமூகம் தனது நோக்கத்தை உடனே நிறைவேற்றிக் கொள்கிறது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட பொதுநல வழக்குகள் நிராகரிக்கப்பட்டன. ஏன் நம்பிக்கைக்கு ஊறு நேரும் என்பதாலா?

2 . கணவனால் விவாகரத்து செய்யப்பட 60 வயது முஸ்லிம் பெண்மணியான ஷா-பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டவுடன், இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி, 1986-ல் ‘முஸ்லிம் பெண்கள் விவாகரத்து உரிமைப் பாதுகாப்புச் சட்டம்’ என்ற புதிய சட்டத்தையே கொண்டு வந்ததே ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு! இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தில் தலையிடக் கூடாது என்ற எண்ணம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது? அது இஸ்லாமியர்களின் நம்பிக்கை சார்ந்தது; சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று எப்படி அரசு தீர்மானித்தது? மத நம்பிக்கைக்காக ஒருவரது வாழ்வையே குழிதோண்டிப் புதைத்த அரசும், அதைக் கண்டிக்காத உச்சநீதிமன்றமும் குறித்து இந்த ஊடகங்கள் என்ன எழுதிக் கிழித்தன? பாதிக்கப்பட்ட ஷா-பானுவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிவர்த்தி ஏன் கிடைக்கவில்லை?

3. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாட்டில் நடக்கும் அனைத்துத் திருமணங்களையும் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக 2010-ல் தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது. அதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லிம் தனிநபர் சட்டங்களில் தலையிடுவதாக அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் விளைவாக திருமணப் பதிவு சட்டத்தில் முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று அரசு அறிவித்தது. இது எந்த வகையில் சட்டத்தின் பாற்பட்டது? நாட்டு மக்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டத்தை ஓராண்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 1995-ல் உத்தரவிட்டது, இதுவரை கண்டுகொள்ளப்படாதது ஏன்? சட்டத்தை விட, நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பைவிட, இஸ்லாமியர்களின் நம்பிக்கை முக்கியம் என்பதால்தானே? அதே நம்பிக்கை அடிப்படையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்தால் மட்டும் மதச்சார்பற்றவர்களுக்கு எங்கிருந்து நியாய ஆவேசம் வருகிறது?

ஆக மத நம்பிக்கையைப் பொருத்த மட்டிலும் ஹிந்துக்களின் நம்பிக்கை கீழானது; இஸ்லாமியர்களின் நம்பிக்கை மேலானது என்று ஊடகங்கள் கருதுகின்றனவா? இதற்குக் காரணம் தங்கள் மத நம்பிக்கைக்கு ஊறு நேர்ந்தால் முஸ்லிம்கள் வன்முறையில் இறங்குவார்கள் என்ற அச்சம்தானே காரணம்? ஹிந்துக்கள் என்ன செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்; ‘இடிச்சபுளிகள்’ என்பதுதான் ஹிந்துக்களின் நம்பிக்கைகள் கேவலப்படுத்தப்படுவதன் காரணமா?

1992-க்கு முன் ஹிந்துக்களின் நிலைமை உண்மையில் ‘இடிச்சபுளி’தான். அயோத்தி அதை மாற்றிவிட்டது. அதனால்தான் ஹிந்துக்களின் மத நம்பிக்கைகள் தீர்ப்பில் இடம் பெற்றிருக்கின்றன. முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளுக்காக அநியாயங்களை சகித்துக்கொண்டவர்கள், நாட்டு நலனுக்காக ஏன் இந்த ‘நம்பிக்கை அடிப்படையிலான’ தீர்ப்பை ஏற்கக் கூடாது? ஒரு வாதத்திற்காக எழுப்பப்படும் கேள்விகள் இவை.

ram_mandir

உண்மையில், ஸ்ரீராமனின் பிறப்பை நிர்ணயிக்கும் தகுதியும் ஞானமும் எவருக்கும் கிடையாது. அயோத்தியில் தற்போதுள்ள ராம்லாலாவை இடம் மாற்றும் துணிவும் யாருக்கும் கிடையாது. அயோத்தியில் தரைமட்டமாக்கப்பட்ட கும்மட்டம் இருந்த இடத்தில் மசூதி எழுப்பும் வாய்ப்பும் இனி கிடையாது. இவை நிதர்சனங்கள்; சவால்களல்ல. இதை உணர்ந்ததால்தான் நியாயமான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

இங்கு சட்டம் பேசவில்லை; தர்மம் பேசியுள்ளது. சட்டப்படி என்றால் அனைத்து நிலமும் ஹிந்துக்களுக்கே கிடைத்திருக்கும். அகழாய்வு சாட்சியங்கள் ஹிந்துக்களுக்கே சாதகமாக உள்ளன. ஆயினும் நாட்டு நலனை உத்தேசித்து, எவரையும் தோற்கடிக்காமல், மிகவும் நாசூக்கான முறையில், நியாயத்தையும் சொல்லி, நீதியை நிலைநாட்டியுள்ளனர் நீதியரசர்கள்.

அறிவை விட அன்பு மேலானது; சட்டத்தை விட தர்மம் மேலானது. அந்த அடிப்படையில்தான் அயோத்தித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ‘கட்டப் பஞ்சாயத்து’ என்று பகடி செய்யாமல், முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதுதான் ஊடகங்கள் முன்னுள்ள தற்போதைய கடமை.

நில உரிமை தொடர்பான பல நூற்றாண்டுகள் கடந்த வழக்கில் அதிகபட்ச சாத்தியக்கூறுகளுடன் கூடிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே இறுதியல்ல; உச்சநீதிமன்றம் செல்வதல்ல இதன் அடுத்த படிநிலை. ஹிந்து-முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் ஒருங்கே அமர்ந்து சுமுகமான முறையில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல்படியாகவே அயோத்தித் தீர்ப்பு உள்ளது. இதை உரக்கச் சொல்லும் துணிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ‘பஞ்சாயத்து’ என்று தீர்ப்பை விமர்சித்து ஊடகங்கள் தங்கள் தரத்தைத் தாழ்த்திக் கொள்ளவேண்டாம். நான் மிகவும் நேசிக்கும் தினமணி நாளிதழுக்கும் இதுவே எனது வேண்டுகோள்.

(தொடரும்…)

31 Replies to “அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2”

  1. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள், சேக்கிழான்.

    செப்டம்பர்-30 மாலை 4 மணிவரை நீதிமன்றத் தீர்ப்பு *எதுவானாலும்* எல்லாரும் அதை ஏற்கவேண்டும் என்று நீதிபோதனை செய்து வந்த செக்யுலர் புறாக்கள் 6 மணிக்கு மேல் ஓநாய்களாக மாறி தீர்ப்பைக் குற்றம் சொல்லி ஊளையிட ஆரம்பித்து விட்டனர்.. தீர்ப்பின் விவரங்களைக் கூட முழுதாகப் படிக்காமல் அதன்மீது சேற்றை வாரி இறைத்து வருகின்றனர். அதைத் தோலுரித்து வருகிறீர்கள். அருமை.

  2. ஹிந்துக்கள் மட்டுமே எப்பொழுதும் மற்றவர்களைத் திருப்திப் படுத்திக் கொண்டே , தாஜா செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தலை விதி.
    தங்கள் சமுதாயத்தை கொடுமைப் படுத்துபவர்களிடமும் புன்னகை காட்ட வேண்டும் என்று மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளனர்.
    இதைச் செய்பவர்கள் எல்லாம் ஹிந்துக்களே
    ‘என் வீட்டில் தீப் பிடிக்காத வரை பரவாயில்லை.அடுத்த வீடு எரிந்து கொண்டிருந்தால் கூட வெளியில் வர மாட்டேன்’. இதுதான் இன்று ஹிந்துவின் நிலை.
    மற்றவன் மனைவி குண்டு வெடிப்பில் இறந்தால் ‘நமக்கு சகிப்புத் தன்மை வேண்டும்’. நம் வீட்டில் நடந்தால் ‘குய்யோ முறையோ’
    நம் வயலில் அடுத்தவன் வரப்பு அரை அடி வந்து விட்டால் வெட்டு குத்து. தாய் நாட்டின் பல ஆயிரக் கணக்கான் சதுர கிலோமீட்டர்கள் எதிரிக்குப் போனால் ‘எதற்கு அதைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்?’ ‘பேசாமல் காஷ்மீரைக் கொடுத்து விடுவது தானே’
    நமக்கு யாராவது கெடுதல் செய்து விட்டால் ‘இவனை எல்லாம் சுட்டு தள்ளனும் சார்’. ஆனால் ஒரு தீவிரவாதியை ராணுவமோ, காவல் துறையோ கொன்றால் ‘போச்சு போச்சு மனித உரிமை போச்சு’

  3. சேக்கிழான் ,

    தலைப்பில் ‘அபத்த’ என்பதற்கு பதில் , ‘அல்ப’ என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  4. Fantastic Article.
    Eventhough our Pseudo-Secular media may not change, atleast some people will slowly change. Tamil Hindu is doing a wonderful job in telling the truth and takingpart in this change.

  5. Many of the medias are unfairly criticizing the court verdict.

    They really do not understand, dont bother to understand how judiciously the evidences were taken into account.

    They just take some stand and write to suit to that.

    Many of the media criticism, in my opinion, can even be considered as contempt of court.

  6. தினமணியின் தலையங்கம் மேம்போக்காய்ப் பார்த்தல் சரியானது போல்தான் தோன்றியது . கொஞ்சம் யோசித்து பார்த்தபோது, தினமணியின் சறுக்கல் தெளிவாகியது. பொது சிவில் சட்டம், காஷ்மீர் தனி அந்தஸ்து போன்ற விஷயங்களை ஊடகங்கள் கண்டுகொள்வதேயில்லை. இன்றைய காஷ்மீரின் கலவரங்களுக்கு காரணம் என்ன (உண்மையான) என்று எந்தவொரு ஊடகமும் விவாதித்ததில்லை. அரசியல் கட்சிகள் வோட்டு பொறுக்கிகள் என்றால் ஊடகங்கள் வியாபார நோக்கத்தை கைகொண்டு அடிப்படை ஒழுக்கத்தை இழந்து தேச நலனுக்கு விரோதியாய் மதசார்பற்ற முகமூடியுடன் விபசாரம் செய்கின்றன.நடுநிலை ஊடகம் என்று பெயர் இருந்தாலே நிச்சயமாக சொல்லலாம் அது இந்து விரோத/தேச விரோத ஊடகம் என்று.

  7. 1947 –

    பாரதம் மூறு துண்டுகளாக்கப்பட்டு, கிழக்கு பாகிஸ்தான்(தற்போது வங்காளதேசம்) , மேற்குப் பாகிஸ்தான், பாரதம் என்று மூன்று நாடுகள் உருவாகின. ஒரு துண்டு நமக்கு, இரண்டு துண்டு முஸ்லிம்களுக்கு.

    2010௦ –

    அயோத்தி ராம ஜன்மபூமி மூன்று துண்டுகளாக்கப்பட்டு ஒரு துண்டு முஸ்லிம்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

  8. It is worth while to examine calling the judgement a kattaipanchayath is fair criticism or contempt of court.Christians and muslims fought crusades for the possession of the allegted birth place of Jesus and after shedding the blood of many men and valuable resources cameto a decision similar to the one now given by the highcourt.Can any one give the samename to that decision be dericive. Even now the dispute betweeen the hamas and israel is being sorted on similarlines only.commenting on the iran-iraq war it was said national loyalties and the ethnic bond survived better than thereligious one.Perhaps for the first time the ethnic indian did not fall al prey to the divisive politics playrd by the colonial power and the pink intellectuals who act as its quislings.

  9. இந்தி பட உலகம் இதற்கு கருத்து தெரிவித்ததையும் அதையும் ஊடகங்கள் வெளியிட்டன. இதில் சிறப்பாக ஏதுமில்லை. ஆனால் எப்போதும் பொங்கும் தமிழ்த் திரை உலகம் குறிப்பாக ரஜினி வாளாவிருந்தது இவர்களின் அரிதாரம் கலையச்செய்கிறது.

  10. சேக்கிழான் அவர்களுடைய கட்டுரை உண்மையான பாரத வாசியின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. தீர்ப்பு வந்தவுடன் பெரிய மகானைப் போலவும், புத்தரைப் போலவும் உலக அமைதி சமாதானம் இவற்றின் ஏகபோக பிரதிநிதிகள் போலவும் கருத்துத் தெரிவித்த சில செக்கூலர் வாதிகளின் சாயம் ஓரிரு நாட்களிலேயே வெளுத்து அவர்களின் சுய ரூபத்தை வெளிக்காட்டிவிட்டார்கள். லெமூரிய கண்டம் எனும் பகுதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் மூழ்கிவிட்டதாக ஆய்வாளர்கள் சொல்வதை நம்பத் தயாரானவர்கள், ராம ஜன்மபூமியை நம்ப முடியவில்லையாம். ராஜராஜ சோழனின் சமாதி அவன் வாழ்ந்த பழையாறை எனும் தலைநகருக்கு அருகிலுள்ள உடையாளூர் எனும் கிராமத்தில் இருப்பதை ஆய்வாளர்கள் சொன்னார்களே, அதை உடனடியாக நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொண்டு வருவதை யார் தடுத்தார்கள்? போலி மதச் சார்பின்மையும், அரசியல் ஆதாயமும் எதை வேண்டுமானாலும் பேசச் சொல்லும். வாழ்க மதச்சார்பின்மை. வாழ்க நமது உண்மையின் தேட்டம். i

  11. நேத்திக்கு நம்ம முதல்வர் சொன்னத கவனிச்சிங்கள்ள? 17 லக்ஷம் வருஷங்க முன்னால பொறந்த ராமர் இடத்தை கண்டு பிடுசிட்டாங்க ஆனா 1000 வருஷம் முன்னால பொறந்த ராஜ ராஜனை பத்தி எவ்வாறு இறந்தார் என்றோ அல்லது எங்கே அடக்கம் செய்யப்பட்டார் என்றோ அல்லது எங்கே நினைவு சின்னம் எழுப்பப்பட்டது என்றோ இதுவரை கண்டு பிடிக்கவில்லை என்று நொந்து கொண்டாராம். இந்த அயோத்தி தீர்ப்பு ராமர் பற்றிய ஆரிய மூட நம்பிக்கையை மேலும் வளர்த்துவிட்டதாம்.

    தன்னை சிவபாதசேகரன் என்று அறிவித்துக்கொண்ட ராஜ ராஜன் என்ன ஆரியனை எதிர்த்த மாவீரனா? தேவாரம் கண்ட சோழன் என்று பெயர் கொண்டவன் என்ன பெரியாரின் குருவா?

    தாம் என்ன சொன்னாலும் தமிழன் தன்னை மன்னித்து விடுவான் என்ற தைர்யமா? என்ன செய்வது! இந்த கழகங்கள்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டுமென்பது நம் தலை விதி போலும்!

  12. Pingback: Indli.com
  13. நீங்க இணைய உலகை பார்க்கலிய? எங்கப் பார்த்தாலும் முச்ளிம்கு அநீதின்னு பதிவுகள்

  14. அபத்த ஊடகங்களுக்கு பேர் போன மூன்று நபர்கள் 1. ராஜ்தீப் -சின்னன்
    2.பர்கா -ஏன்டிடிவி 3.அர்னாப் -டைம்ஸ் உச்சகட்ட அற்பத்தனம் அர்னாப் ..இந்தியா முதல் என்று இந்த அதிமேதாவி சொன்னால் தான் ஏலார்க்கும் புரியுமா ..அமைதி அமைதி என்று சொல்லிவிட்டு எல்லா தரப்பினரையும் பெட்டிக்கு குப்பிட்டு சண்டையை மூட்டி கொண்டு இருந்தான் அந்த போலி மதசார்பாளன் ..நல்ல வாங்கிகட்டி கொண்டான் திரு. ரவிசங்கர் பிரசாத்திடம் ..நான் சொல்ல நினைத்ததை அவர் சொன்னார் ..நீ யார் எல்லா விதமான வாய்புககளையும் ,முடிவுகளையும் தீர்மானிக்க ஒரு ந்யூஸ் ரூமில் உட்கர்ந்து கொண்டு என்று ..எல்லா நேர்மையான ஹிந்துக்களின் உணர்வை வெளிப்படுத்தினார் ..நல்ல வெள்ளை அவரையாவது தங்கள் முட்டாள் பேத்தல்களுக்கு ஹிந்துக்களின் சார்பாக கூபிட்டானே ..இல்லையென்றால் இவர்களே எழுதிவைத்து விடுவார்கள் வெளிநாட்டிற்கு இந்தியாவை ..சட்டம் ,சமஉரிமை ,விலங்குகள் போல ஒழுக்ககேடாக வாழ ஏன் உரிமை சுதந்திரம் என்று….ஜெய் ஸ்ரீராம் ..
    please edit this below one…
    (இந்த மறுமொழியின் எதிர்வினைகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.
    இதற்கு வரும் மறுமொழிகளை எனக்குத் தெரியப்படுத்தவும்.–

    இந்த வசதியை முன்னர் தமிழ்ஹிண்டு தருமாறு விடுத்த வேண்டுகோளை தந்தற்கு நன்றி …)ரொம்ப நாள் கழித்து வந்தேன் தளத்திருக்கு ..வாழ்க உங்கள் பனி ..உங்களோடு என்று தோளோடு தோளாக …குமார்

  15. தினமணியின் தலையங்கம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. அந்தத் தலையங்கத்திற்குத் தக்க மறுமொழியை சேக்கிழார் இங்குத் தந்துள்ளார். இந்துக்களின் நம்பிக்கை அலட்சியப்படுத்தப்படத் தக்க மூடநம்பிக்கை, இசுலாமியரின் நம்பிக்கை சட்டப்படி அரசு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய மரியாதைக்குரிய விதிகள் என்றுகருதும் போலி செக்குலர்களின் கீழ்மையைச் சேக்கிழார் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். இந்தக் கருத்துக்கள் நம் இந்துக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும். சேக்கிழார், அரவிந்தன், மலர்மன்னன், ஜடாயூ, தமிழ்ச்செல்வன், பி.ஆர்.ஹரன் முதலியோர் அறிவியல் பூர்வமாக இந்து சமுதாயத்திற்குத் ‘தமிழ்ஹிந்து’வின் மூலம் அளிக்கும் அரிய தகவல்கள் ரொமிளா தாப்பர் போன்ற மார்க்சியச் சார்புடைய வரலாற்று ஆசிரியர்களின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்களுக்கு விழிப்பூட்டும் என்பது உறுதி. வாழ்க தமிழ்ஹிந்து! வளர்க தமிழ்ஹிந்துவின் பணி!!

  16. இந்த கதைய கொஞ்சம் கேளுங்க. நம் நாட்டில் எவ்வளவு பிணம் தின்னி கழுகுகள் இருக்கின்றன பாருங்கள்!

    Source: cmpaul.wordpress.com (taken from rajeev blog spot)
    “As the nation awaits a court verdict on the ownership of the disputed site in Ayodhya, a Kolkata priest says Mother Teresa had plans for the land.

    As the controversy continues, Journalist-priest C.M. Paul says he is “reminded of what Mother Teresa of Calcutta wanted to make a suggestion when there was the post-demolition national consultation on what to do with that land.

    She approached the then archbishop of Calcutta Dr Henry D’Souza to accompany her to New Delhi and make her proposal to then Prime Minister P.V. Narasimha Rao to lease the disputed property to the Missionaries of Charity so that she could serve the poorest of the poor of all communities from there.

    Writing in his blog, the priest said she wanted “to spread love and compassion where once blood and tears soaked the earth in which seeds of hatred were planted.”

    But the wise archbishop killed Mother’s enthusiasm considering it a folly stating it “as inopportune proposal” and refused to accompany Mother Teresa, the priest said.

    However in 2008 in a conversation with him the archbishop, now living a retired life, regretted his decision. “How I could have changed the course of India’s history, if I had then heeded to Mother Teresa,”
 the archbishop reportedly told the priest.

    “All is not lost… if men and women of good will from both warring factions agree to spread love and compassion from a newly constructed facility on that disputed spot, call it what you may,” the priest said.

    The dispute is over the land in Ayodhya where a 16th-century mosque stood until December 1992, until Hindu zealots demolished it. They say Muslim ruler Babur had demolished a Hindu temple there in order to build the mosque

    The demolition sparked off nation-wide Hindu-Muslim riots. Protracted legal battles continued over the ownership of the land.

    Allahabad High Court was to pronounce its verdict on Sept. 24. But Supreme Court last deferred the judgment by one week. Media reports say a court verdict favoring one group can enrage the other.”

  17. எவ்வளவு அலட்சியமாக’ அது ஒரு நிலத் தகராறு’ என்று கூறுகின்றனர்.
    நாம் என்னடாவென்றால் அவர்களைத் தூக்கி தலையில் வைத்துக் கொள்கிறோம்
    எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்ற ரீதியில் தான் சர்ச் செயல் படும்
    சொல்லப் போனால் ‘வீட்டை எரிக்க’ எல்லா ஏற்பாடுகளும் செய்வார்கள்
    கிறிஸ்தவம் அல்லாத நாடுகளில் இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்துவதே அவர்களின் வேலைக்கு அடித்தளம்.

  18. செம்மொழி மாநாடு நடத்தி சில நூறு கோடிகளை வேட்டு விட்ட கருணாநிதி அந்தப் பணத்தில் கொஞ்சம் செலவு செய்து இராசராசன் எவ்வாறு இறந்தார் என்றோ அல்லது எங்கே அடக்கம் செய்யப்பட்டார் என்றோ அல்லது எங்கே நினைவு சின்னம் எழுப்பப்பட்டது என்றோ கண்டுபிடித்திருக்கலாமே? அங்கே ஒரு மணடபமாவது கட்டியிருக்கலாமே? அது போகட்டும், கம்பன் பிறந்த இடம் கேட்பாரில்லாது குப்பை மேடாக இருப்பதாக ஒரு தகவல் தமிழ் இந்துவில் தான் படித்தேன். அந்த இடத்தை மேம்படுத்தி கவிச்சக்கரவர்த்திக்கு ஒரு மணிமண்டபம் கட்டி இருக்கலாமே? கண்டுபிடித்துச் சொன்ன கம்பன் பிறந்த இடத்தையே இவரால் கட்டிக்காக்க முடியவில்லை. இவரெல்லாம் இராசராசன் பிறந்த/இறந்த இடத்தைக் கண்டுபிடித்து, நினைவகம் எழுப்பி பாதுகாத்து…. ஹே! ஹேஹே!! ஹேஹேஹே!!!

  19. shri muthukumarasamy, I agree that the contributions of stalwarts like you, jatayu and others would enlighten hindu youth. But, alas! whats the reach. Does the Hindu diaspora short of funds that they could not establish print and visual media which predominantly cater to their requirements. You read any popular newspaper and view any popular tv channel. what you would find is sermons on gross Hindu hatredness. Before the truth of these stalwarts reach a few hundreds the utter and motivated lies of virtueless white church paid anti national secular media reaches millions of people. Earlier the better the Hindu diaspora establishes its own media.

  20. ராமன் வழியிலும் வாழவில்லை,ராஜராஜன் வழியிலும் வாழவில்லை
    அவர்கள் எங்கு பிறந்தால் இவருக்கென்ன?

  21. கம்பனுக்கு மணி மண்டபமா?
    என்ன ஜோக் அடிக்கிறீர்களா ?
    ராமாயணம் என்ற நூலை எழுதியது எவ்வளவு பெரிய குற்றம்?
    அவர் money மண்டபம் கட்டிக் கொண்டிருக்கிறார்!

  22. why not we all come together and start a co-operative venture for a newspaper devoted to Hindhu Dharma and Nationalism?

  23. சேக்கிழான் அவர்களே

    தினமணிக்கு தக்க சட்டையடி. தினமணியின் தலையங்கம் அயோக்யத்தனமானது. தினமணியும் விலை போய் விட்டது போலிருக்கிறது. கரண் தப்பாரை விட்டு விட்டீர்களே. அதெப்படி அயோத்தியில் க்ராண்ட் ராம் டெம்ப்பிள் கட்டுவோம் என்று அத்வானி சொல்லப் போயிற்று என்று ஜெய்ட்லியிடம் சண்டை. பர்காதத் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு ப்ரோக்கர், ராஜ்தீப் சர்தேசாய் வோர்ல்டு விஷன் எனப்படும் மதமாற்ற ஏஜென்சியின் ஏஜெண்ட், இந்து ராம் ஒரு மாவோயிஸ்டு… இவர்கள்தான் நம் தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்கள். இந்துக்களுக்கு என்று ஒரு தேசீய செய்தித்தாளும், டி வி யும் இல்லாதது மகா கேவலம். காங்கிரசுக்கும் கம்னியுஸ்டுக்களுக்கும் தான் இன்று அனைத்து மீடீயாக்களும் ஊழியம் செய்கின்றன. நம்மிடம் குறையுள்ளது. தமிழ் இணையத்தில் கூட ஆரம்பத்தில் தி க , தனித் தமிழ் ரவுடிகளுமே நாற அடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தத் தளம் உருவானது போல இந்துக்களுக்காக நடுநிலையான மீடியாக்கள் நிறைய உருவாக வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் மூளைச் சலவை செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

    அன்புடன்
    ச.திருமலை

  24. நான் சற்றும் சலிக்காமல் திரும்ப திரும்ப தமிழ் ஹிந்துவிலும் விஜயவாணியிலும் இந்த விஷயத்தை பற்றி எழுதி வருகிறேன். பணம் மட்டுமே குறியாகவும் வழக்கை நெறிகள் கிள்ளுகிரையாகவும் ஹிந்து விரோதம் மற்றும் தேச விரோதம் வெள்ளை சார்சிடம் பெற்ற பணத்தின் நன்றி கடனாகவும் தம் வாழ்கையை நடத்தும் அயோகிய சிகாமணிகளிடம் பத்திரிகை மற்றும் டிவி சிக்கி சீரழிகிறது. ஸ்ரீ ஸ்ரீதரன் சொல்வது போல் சிறிய அளவில் இதை எதிர் கொள்ள முடியாது. மிக பெரிய அளவில் தேச பக்தி சக்திகள் ஒன்றிணைந்தால் தான் நெறி கேட்ட செகுலர் மீடியாவை எதிர் கொள்ள முடியும். கோடி கணக்கில் மக்கள் படிக்க மற்றும் பார்க்க முடிந்த தேச பக்தர்களின் மீடியா இன்று மிகபெரிய அத்யாவசிய தேவை. இதை கோடி முறை சொல்லவும் தயங்க மாட்டேன்.

  25. //தமிழ் இணையத்தில் கூட ஆரம்பத்தில் தி க , தனித் தமிழ் ரவுடிகளுமே நாற அடித்துக் கொண்டிருந்தார்கள்//
    இப்பவும் நிலைமை மாறவில்லை. தீர்ப்பை ஆதரிப்பவர்கள் மதத் தீவிரவாதிகள் என பட்டப் பெயர் சூட்டப் படுகிறார்கள். தீர்ப்பை எதிர்த்து பல முஸ்லீம்கள் எழுதிய நிலையில் தீர்ப்பை ஆதரித்து ஒரு சிலர் மட்டுமே எழுதினர்.

  26. Nammai vazhi padatha sariyana thalamai illai… irukiravarkal kalla kattuvathil kuriyaka irukinrarkal.. we need a person like real vivekanandar

  27. கோடானு கோடி முஸ்லீம்களில் ஒருவராவது-அட இருவர் கூட வேண்டாம், ஹிந்துக்கள் ராமனை தெய்வமாகப் போற்றுகின்றனர்..அயோத்தி என்றாலே ராமர்தான் நினைவுக்கு வரும்.படை எடுத்து வந்த ஒருவன் கோயிலை இடித்தான்.அவனுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே நாம் அதை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொன்னாரா?
    திருச்சிக் காரர் சொல்லி தான் அவர்களுக்கு இதெல்லாம் தெரியுமா?

  28. அப்போதே தினமணி ஆசிரியருக்கு தலையங்கம் குறித்த எனது கண்டனத்தை எழுதியிருந்தேன். இதோ அது:

    அன்புள்ள தினமணி ஆசிரியருக்கு,

    அயோத்தி தீர்ப்பு குறித்த தலையங்கம் படித்தேன்…

    ஒருமுறையல்ல,பல முறைகளுக்கும் மேலாக…..என்ன சொல்ல வருகிறீர்கள்? என்பதை ஓரளவு புரிந்துகொண்டாலும் தினமணியிலா இப்படி ஒரு தலையங்கம்,.. ஐம்பத்தைந்தாண்டு காலமாக தினமணியில் நாம் இப்படியொரு தலையங்கம் படித்ததில்லையே…என ஒரு ஆதங்கம் ஏற்பட்டது.

    ராமஜன்மபூமி என்கிற இடத்தில் இராமர் கோயில் இருந்ததா? என்பதற்க்கு நீதிபதிகள் தொல்லியல் ஆய்வுத்துறையின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் இராமர் சிலை இருக்கும் இடம் இராமர் வழிபாட்டுத்தலமாக தொடரவேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்கள் என்றும் இப்படிப்பட்ட தீர்ப்பு அரசியல் தனமான தீர்ப்பு என்று கூறியுள்ளீர்கள். எனக்குப்புரியவில்லை…இது என்ன அரசியல் தனமான தீர்ப்பு என்று!

    பிரதானக் கேள்வி இந்துக்கள் உரிமைகொண்டாடும் இடத்தில் இந்துக்கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதா? அதற்கான விடை இந்துக்கள் உரிமை கொண்டாடும் இடத்தில் பிரம்மாண்டமான கோயில் இருந்தது என்பது தொல்லியல் ஆய்வில் நிரூபனமான ஒன்று
    பாழடைந்த கோயில் மீது கூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று ஒரு நீதிபதி கூறியுள்ளார். இஸ்லாமிய படையெடுப்பின்போது பாபரால் அக்கோயில் இடிக்கப்பட்டிருக்கலாம் சில ஆண்டுகள் கழித்து பாபரின் உத்தரவின் பேரில் அவரது தளபதியால் அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? அங்கு ஒரு கோயில் இருந்தது. அது இடிக்கப்பட்டு பிறகு மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதும் உறுதியாகிறது. இதை நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் உறுதிபடுத்தியுள்ளார்கள். இந்திய வரலாற்றில் இஸ்லாமிய மன்னர்கள் படையெடுப்பின்போது இந்துகோயில்கள் இடிக்கப்பட்டு சிலைகள் சிதைக்கப்பட்டு இருப்பதை பல வரலாற்று ஆய்வாளர்கள் அப்போதே பதிவு செய்து வைத்துள்ளார்கள். அதற்கான சான்றுகள் இன்றும் நம் கண் முன்னே உள்ளன. ஹம்பிக்கு செல்லுங்கள்,சோம்நாத்பூருக்கு செல்லுங்கள்,நேரிடையாக காணலாம். தொல்லியல் ஆய்வுத்துறையின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் தற்போது சிலை இருக்கும் இடம் இராமர் வழிபாட்டுத்தலமாக தொடரவேண்டும் என்று கூறப்பட்டதில் என்ன தவறு கண்டுபிடித்து விட்டீர்கள் என்பது புரியவில்லை?

    நம்பிக்கை என்பது என்ன என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.நூறு ஆண்டுகள் முன்னோக்கி செல்லுங்கள்.மகாத்மா காந்தி என்றொரு மாமனிதர் இருந்தார். அவர் அகிம்சாவாதி, அகிம்சா வழியிலேயே போராடினார். அவர் போர்பந்தரில் அக் 2ஆம் தேதி பிறந்தார் இப்படி அவர் பற்றிய செய்திகளை நம்பிக்கையின் அடிப்படையில் அன்றைய தலைமுறையினர் கூறி ஆச்சரியப்பட்டு போவார்கள். காந்திஜி பிறந்த நாள் பற்றிய ஒரு வழக்கு, அவர் இந்த நாளில் பிறக்கவில்லை என்று வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீண்ட விவாதங்களுக்குப்பிறகு நீதிமன்றம் அன்று என்ன சொல்லும்? காந்தி பிறந்ததற்க்கான பிறப்பு சான்றிதழ் இல்லாத காரணத்தால் காந்தி பிறந்த நாள் உறுதி செய்ய இயலவில்லை இருப்பினும் ஆண்டாண்டு காலமாக மக்கள் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் அக் 2 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடி வருவதை நீதிமன்றம் உறுதி செய்கிறது என்று தானே கூறும், கூறமுடியும் இல்லை காந்திக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால் காந்தியே ஒருவர் பிறக்கவில்லை என்று கூற முடியுமா? நீங்கள் சொல்லலாம் காந்தி பற்றிய ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவே என்று. அதே போன்று அன்றைய காலகட்டங்களிலும் பல ஆதாரங்கள் இராமர் பிறந்தது, அங்கு பிரம்மாண்டமான கோயில் இருந்தது, வழிபாடு நடந்தது,பாபர் படையெடுத்தது,கோயிலை இடித்து மசூதி கட்டியது,அதை மீட்க போராட்டங்கள் செய்தது, அதற்கான கல்வெட்டு ,பல ஆண்டுகளாக போராடியது, தொல்துறை ஆய்வில் கிடைத்தது போன்றவைகள் அந்த நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்கிறது. அதன் அடிப்படையிலேயே நம்பிக்கை என்ற வார்த்தை நீதிபதிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர ஆதாரம் இல்லாத நம்பிக்கையல்ல என்பதை கூற விரும்புகிறேன். அதேபோன்று நீதிபதிகள் சர்ச்சைக்குள்ள பகுதியை மூன்றாக பிரித்து தரவேண்டும் என்பதை குறை கூறியுள்ளீர்கள். நீதிபதிகள் அதற்க்கான தெளிவான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்கள். அதாவது ஒரு கால கட்டத்தில் நீண்ட காலம் அந்த பகுதியை இருவரும் பயன்படுத்தி வந்திருக்கிறார்களென்று. அப்போது அதன் பாத்தியதை அனைவருக்கும் வரும் என்பதும் இன்றைய நடைமுறைதானே. இதில் என்ன குற்றம் காண முடியும்?
    மேலும் இன்றைய ஊடகங்கள் பொதுவாக இந்துக்களை இழிவுபடுத்தினால் மட்டுமே அவர் மதசார்பற்றவர் என்ற ஒரு இலக்கணத்தை வைத்திருக்கின்றனர்.அந்த இலக்கணத்தை தாங்களும் கடைபிடித்து தானும் ஒரு மதச்சார்பற்றவர் என்பதை நிறைவேற்ற இந்த தலையங்கத்தை எழுதியிருப்பீர்கள் போல தெரிகிறது.

    ஆறுமுகம் தர்மபூபதி

  29. முன்பே தினமணிக்கு விமரிசனம் எழுதினோம். என்ன காரணத்தாலோ அது வெளியாகவில்லை. “கட்டப் பஞ்சாயத்து ” என்று விமரிசிக்கப் பட வாய்ப்புள்ள வகையில் தீர்ப்பை நீதிபதிகள் அளிக்கக் காரணம் என்ன? இந்த நாட்டின் போலி மதச் சார்பின்மைவாதிகளும் அவர்களுக்குப் பல்லக்குத் தூக்கிக் கொண்டிருக்கும்பெரும்பான்மை ஊடகங்களும் வாதிகளும் எல்லா விதமான சட்ட திட்டங்களிளிருந்தும் சகோதர இஸ்லாமியர்களுக்கு விலக்களித்து அவர்களை ஓட்டுக்காக பெரும்பான்மை இந்தியர்களிடமிருந்து பிரித்தே வைத்துச் செய்யப்படும் நெடுங்கால அவல அரசியல் நிலைதானே? கட்டுரையாளர் சுட்டிக்காட்டியிருப்பது போல் “முழுக்க முழுக்க அது ஸ்ரீ ராம ஜென்ம பூமிக்குத் தான் சொந்தம்” என்று தீர்ப்புக் கொடுத்திருந்தால், ‘போலி மதச் சார்பின்மை வாதிகளும் அக்கிரம ஊடகங்களும் உணர்வுப் போராட்டங்களைக் கிளறிவிட்டு நாட்டை ரண களம் ஆக்கிவிடும்’ என நீதிபதிகள் கருதியிருக்க வாய்ப்புண்டு என்பது தீர்ப்புக்குப் பின் வந்த பல ஞாயமும் கௌரவமும்ற விமரிசனங்களிலிருந்தே தெரிகிறதே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *