யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…

நாட்டு நடப்பில் சிரத்தையின்றி, அதன் போக்கு தனிநபர் வாழ்க்கையையும் பாதிக்கும் என்கிற பிரக்ஞையுமின்றி, தங்கள் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளிலேயே உழன்று கொண்டிருக்கும் சராசரி ஹிந்துக்களுக்கு ஓரளவேனும் விழிப்பூட்ட நம்மில் பலரும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வேளையில், அவர்களுக்கு மீண்டும் தாலாட்டுப் பாடுவதில் சிலர் உற்சாகம் காட்டி வருவதைப் பார்க்கிறோம்.

தமிழ் ஹிந்து தளத்தில் ஹிந்துக்கள் நலன் தொடர்பான விவகாரம் எதைப்பற்றியாவது எவர் எழுதினாலும் உடனே ‘அத்வேஷ்டா’ என்று சிலர் விஸ்தாரமாக மறுமொழி அளிக்க ஆரம்பித்துவிடுவது வழக்கமாகிப் போனதால் எரிச்சல் தாங்க முடியாத சில நண்பர்கள் இந்த ‘அத்வேஷ்டா சமாசாரத்தை நீங்களாவது கொஞ்சம் கவனிக்கக் கூடாதா’ என்று என்னிடம் கேட்கலாயினர்.

ஆகையால் மிகுந்த யோசனைக்குப் பிறகு எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்தேன்.

முதலில் இரட்டை வரிகளாக உள்ள இந்த நான்கு வரி ஸ்லோகத்தைப் படிப்போம்:

krishna_arjunaஅத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸம துக்க-ஸுக க்ஷமீ.

ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஸ்சய:
மய்யர்பிதமனோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய.

இந்த வரிகள் ஸ்ரீமத் பகவத் கீதையின் பனிரண்டாவது அத்தியாயத்தில் பதிமூன்று, பதினான்காவது ஸ்லோகங்களாக இடம் பெறுகின்றன.

கீதையின் பனிரண்டாவது அத்தியாயம் பக்தி யோகம் குறித்து பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனுக்கு விளக்கிக் கூறும் பகுதியாக அமைந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.

அத்வேஷ்டா என்ற சொல்லுடன் ஸ்லோகம் தொடங்குவதால் அதன் பொருளை ஆராய்வோம். இச்சொல்லுக்கு, ‘பொறாமை யின்றி’ என்றும் பொருள் கொள்ளலாம். மேலும், ‘பொறாமைக் குணம் இல்லாதவர்’ என்று ஒரு நபரைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அதையே, பிறர் தன்மீது பொறாமைகொள்ளும் படியாக நடந்துகொள்ளாதவர் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

அத்துடன் அத்வேஷ்டாவுக்கு மானசீகமாக ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, ‘ஸர்வபூதானாம் மைத்ர’ என்பதை ஒரு தொடராக வைத்துக்கொண்டால், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவர் என்றாகிறது.

‘கருண ஏவ ச’ என்ற அடுத்த தொடர் அவ்வாறே அனைவரிடத்தும் இரக்கம் காட்டுபவர் எனப் பொருள்படுகிறது. ‘நிர்மமோ நிரஹங்கார’ என்பவற்றை, தான் என்கிற மமதை, அஹங்காரம் ஆகியன இல்லாதவர் எனலாம்.

‘ஸம துக்க ஸுக’ என்பது துக்கத்தையும் சுகத்தையும் சமமாக பாவிப்பவர் என்ற பொருளைத் தரும். ‘க்ஷமீ’ என்பது மன்னிக்கும் பண்புள்ளவர் என்பதைக் குறிக்கும்.

மேற்குறிப்பிட்ட இரு வரிகள் பதிமூன்றாவது ஸ்லோகமாக ஒரு தொகுதியாக அமைகிறது. அடுத்த தொடர் பதினான்காவது ஸ்லோகமாக, ‘ஸ்ந்துஷ்ட’ என்று தொடங்குகிறது. அதையடுத்து, ‘ஸததம் யோகீ’ என்ற இரு பதங்கள் வருகின்றன. இம்மூன்று பதங்களையும் எப்போதும் எல்லாவற்றிலும் மன நிறைவுள்ள யோகி என்று வருமாறு மாற்றிப் போட்டு ஒரு தொடராகக் கொள்ள வேண்டும்.

அடுத்து வருவன ‘யதாத்மா த்ருடநிஸ்சய’ எனும் இரு சொற்கள். உள்ளத்தையும் புலன்களையும் அடக்கியாள்பவன், இவ்வாறு தனது உள்ளமும் புலன்களும் தன் கட்டுப்பாட்டில் உள்ளவை என்பதில் திட நம்பிக்கையுள்ளவன், என்று இவற்றுக்குப் பொருள் கொள்ளலாம்.

’மய்யர்பிதமனோபுத்திர்யோ’ என்ற நெடுந்தொடர் என்னிடத்தில் தனது மனதையும் அறிவையும் அர்ப்பணித்தவர் என்ற பொருளைத் தரும். மயி என்ற சொல் என்னிடம் என்ற பொருளைத் தருவது. அது அர்ப்பணித்தல் என்ற வினைச் சொல்லுடன் இணையும்போது மய்யர்பித என்றாகிறது.

அடுத்து ’மத்பக்த ஸ’ என்பதைத் திருப்பிப் போட்டால்தான் அத்தகையவ னான என் பக்தன் என்ற பொருள் வரும். ’மே ப்ரிய’ என்று ஸ்லோகம் முடிவடைகிறது. எனக்குப் பிரியமானவன் என்பது இதன் பொருள்.

karmayogi-dvd-coverஆக இப்ப்போது இந்த நான்கு வரிகளையும் சேர்த்துப் பொருள் சொல்லிப் பார்ப்போம்:

‘எவர் ஒருவர் பொறாமைப்படாதவராகவும் அதேபோல் தன்மீது பிறர் பொறாமை கொள்ளும்படியாக நடந்துகொள்ளாதவராகவும், எல்லா உயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் உள்ளவராயும் மமதையோ அகங்காரமோ இல்லாதவராகவும் சுக துக்கங்களை சரி சமமாக பாவிப்பவராகவும், மன்னிக்கும் பண்புள்ளவராகவும் இருக்கிறாரோ அவர், (13)

எப்போதும் எல்லாவற்றிலும் மனநிறைவுள்ள யோகியாவார். மேலும், தனது உள்ளத்தையும் புலன்களையும் அடக்கியாள்பவராக அவர் இருப்பதோடு, அவ்வாறு தனது உள்ளமும் புலன்களும் தனக்குக் கட்டுப்பட்டவை என்பதில் திடமான நம்பிக்கையுள்ள வருமாவார். இவ்வாறு இருந்து, தனது உள்ளம், அறிவு ஆகிய வற்றை எனக்கு அர்ப்பணம் செய்பவர் யாரோ அவர் எனது பிரியத்திற்குரிய பக்தனாவார்.’

‘அத்வேஷ்டா’ என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத் தொகுதிக்கு இதுதான் பொருள்.

இறையுணர்வில் ஒன்றிப்போவதற்கு உள்ள மூன்று மார்க்கங்களாக ஞான யோகம், கர்ம யோகம் பக்தி யோகம் ஆகியவற்றை அர்ஜுனனுக்கு எடுத்துக் கூறுகையில், பக்தி யோகம் பற்றி விளக்குமுகமாக இந்த நான்கு வரிகளை கீதாசாரியன் குறிப்பிடுகிறான், அவ்வளவே.

நீ இப்படி இருக்க வேண்டும் என்று அர்ஜுனனுக்குக் கண்ணன் அறிவுறுத்தவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் கீதை என்கிற அற்புதம் யுத்த பூமியில் நிகழ்கிறது. அதிலும், நான் எதற்காகப் போர்த் தொழில் செய்ய வேண்டும், அதனால் விளையப் போவது என்ன என்று சோர்வுற்று மனம் குழம்பிய நிலையில் உள்ள அர்ஜுனனிடம் கண்ணன் இந்த வாசகங்களைக் கூறுகிறான்.

பக்தி மார்க்கத்தில் உள்ளவன், அதாவது பக்தியை ஒரு யோகமாக, தவமாகக் கடைப்பிடிப்பவன் எவ்வாறு இருக்க வேண்டும், எப்படியிருந்தால் எனக்குப் பிரியமானவனாக இருப்பான் என்பதைத் தெரிவிக்கிறானே யல்லாது, நீ அவ்வாறு பக்திமானாக இரு என்று சொல்லவில்லை.

மாறாக, கர்ம யோகத்தைப் பயிலுமாறுதான் அர்ஜுனனுக்கு எடுத்துக் கூறி, உற்றார், உறவினர், நண்பர் என்றெல்லாம் இனங் கண்டு மயங்காமல் அவர்களுடன் போரிட்டு வெற்றிகொள்ளுமாறு உபதேசம் செய்கிறான். போர்க் களத்தில் சூழ்ச்சியும் சதியும் முறைகேடுகளும் செய்யத் தயங்காத எதிரியை, அவன் உறவினனாகவோ நண்பனாகவோ இருந்தாலும் அது பற்றி யோசிக்காமல் யுக தர்மப்படி அதே வழியில் மன்னிப்போ இரக்கமோ காட்டாமல் கொன்றொழிக்குமாறு அர்ஜுனனுக்குக் கண்ணன் அறிவுறுத்துகிறான். இவ்வாறு கர்ம யோகத்தைச் சரிவர மேற்கொள்பவன் தனக்குப் பிரியமானவன் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே அர்ஜுனன் போர்க்களத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனக் கற்றுக் கொடுக்கிறான்.

இன்றைய கால கட்டத்தில் ஹிந்துக்கள் யாவரும் கர்ம யோகத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

எதிரி நண்பனாகவோ உறவினனாகவோ மரியாதைக்குரியவனாகவோ, குருவாகவேகூட இருந்தாலும் போர் என்று வந்துவிட்டால் அவனை எதிர்த்துப் போரிட்டு இரக்கமோ மன்னிப்போ காட்டாமல் வென்று வீழ்த்து என்று அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் கூறிய உபதேசம் இன்று நமக்கும் பொருந்தும்.

பக்தி மார்க்கத்திற்குப் பொருந்தி வருபவை, போர் நெருக்கடியோ ஆபத்தான சூழ்நிலையோ இல்லாத இயல்பு நிலையில் கடைப்பிடிக்க வேண்டியவை ஆகியவற்றை கர்ம மார்க்கத்தைக் கடைப் பிடிக்க வேண்டிய தருணத்தில் எண்ணிப் பார்த்துக் குழம்பக் கூடாது!

எந்தவொரு கருத்தானாலும் சந்தர்ப்பச் சூழ்நிலையை நன்கு எண்ணிப் பார்த்து, எப்போது எதை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து செயல்பட்டாலன்றி காரிய சித்தி சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொண்டால் பிரச்சினை இல்லை!

கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் 11-லிருந்து 30 ஆவது ஸ்லோகம் வரை ஞான மார்க்கத்தை நம் ஞானாசிரியன் விளக்குகிறான். பிறகு 39 ஆவது ஸ்லோகம் தொடங்கி, மூன்றாவது அத்தியாயம் முடியும்வரை என்று கூறத்தக்க அளவு கர்ம யோகம் பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறுகிறான்.

நான்காவது, ஐந்தாவது அத்தியாயங்களை ஞாம்னம், கர்மம் ஆகிய இரண்டின் கலவை எனக் கொள்ளலாம். ஆறாவது அத்தியாயத்திலும் கர்ம யோகம் விளக்கப்படுகிறது. ஆக முதல் ஆறு அத்தியாயங்களின் தொகுப்பில் கர்ம யோகமே மிகுதியாக வலியுறுத்தப்படுகிறது. ஏழு முதல் பனிரண்டாவது வரையிலான பகுதியை இரண்டவது தொகுப்பாகக் கொள்ள வேண்டும். இதில் பக்தி யோகம் சிறப்பாகப் பேசப்படுகிறது.

பொதுவாக எல்லாத் தொகுதிகளிலுமே இம்மூன்று அம்சங்களை அடையாளங் காணலாம் என்றாலும் எந்தப் பகுதியில் எது முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது என்பதை எளிதாகவே கண்டுகொள்ள முடியும்.

karma-yoga-this-way-to-karma-small-89504மூன்றாவதான இறுதி ஆறு அத்தியாயங்களின் தொகுப்பில ஞானம், பக்தி, கர்மம் ஆகியவற்றை மீண்டும் விவரித்து, இறுதியாகச் சரணாகதித் தத்துவத்தை நம் ஞானாசிரியன் விளக்குகிறான். இந்தச் சரணாகதியானது பக்தியின் மூலமாகவே சாத்தியப்படும் என்பதும் அதுவே சிலாக்கியமானது என்பதும் முற்றிலும் உண்மையே.

ஆனால், முடிவுரையாக அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் சொல்வது, ‘நான் சொல்ல வேண்டியன அனைத்தையும் சொல்லிவிட்டேன், இனி நீ உன்னுடைய சுய அறிவைப் பயன்படுத்தி உனக்கு எது உசிதம் என்று படுகிறதோ அதை மேற்கொள்வாயாக’ என்று முடிவெடுக்கும் உரிமையை அர்ஜுனனுக்கே அளித்துவிடுகிறான்!

அர்ஜுனனும் அதற்கு இணங்க அப்போதைய சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்பக் கர்ம யோகத்தை மேற்கொள்கிறான். இதன் உட்பொருளை நன்கு கிரகித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கிரகித்துக் கொண்டமைக்கு அடையாளமாக, கண்ணன் காட்டிய வழியில் நமது சுயஅறிவைப் பயன்படுத்தி, தற்போதைய சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்பக் கர்ம யோகம் பயின்று இறை யுணர்வில் ஒன்றிவிட, மிகுந்த சிரத்தையுடன் முனைவோமாக.

21 Replies to “யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…”

  1. Pingback: Indli.com
  2. Thank you.
    Oh, What a clarity. !
    The extent to which this applies for a CORRECT and PROPER mindset, in today’s circumstances, is EXTRAORDINARY.
    Thank you Sir,
    Thank you.
    God Bless.
    Kind Regards,
    Anbudan,
    Srinivasan. V.

  3. மலர்மன்னன்

    இது பக்தனின் இலக்கணமாகவே கிருஷ்ணன் கூறுகின்றான். குதர்க்க வாதிகள் எந்த இடத்திலும் ஓட்டையைக் கண்டு பிடித்து விடுவர். மேலும், இந்த ஸ்லோக வரிகள் தனித்து வருபவை அல்ல. அத்வேஷ்டா வில் ஆரம்பித்து அத்தியாயம் முடியும் வரை ஒன்பது ஸ்லோகங்கள் பக்தனின் இலக்கணம் குறித்து விரிக்கிறார்.

    இதே ஆத்தியாயம் பதினெட்டாவது ஸ்லோகத்தில் ‘சம ஸத்ரௌ ச மித்ரே ச ..’ (நண்பனையும் பகைவனையும் சமமாகப் பாவிப்பவன் ) என்று போகிறதே அது என்ன என்று குதர்க்க வாதிகளைத் திருப்பிக் கேட்கலாம். அவர்களுக்குத் தான் நண்பர்கள் முக்கியம் ஆயிற்றே.

    பக்தன் கோழை அல்ல. அவன் அனைத்தையும் தாண்டியவன். வெறும் கோவிலுக்குப் போய்விட்டு வந்து தான் பக்தன் என்பது தோட்டக்காரன் மண்வெட்டியை வைத்துக் கொண்டு நிலக்கரி எடுப்பதாகச் சொல்வது போல.

    யோகி என்பவன் ‘விகதபீ’ (பயமற்றவன்) (6/14) ஆகவே தாங்கள் கூறிய விளக்கம் மிகச் சரி. வீடுமர் அம்புப் படுக்கையில் இருந்து தன பேரனுக்கு தர்மத்தை உபதேசிக்கையில் ‘ அதர்மத்தை அதர்மத்தாலும் வெல்லல் தர்மமே ‘ என்று தான் உபதேசிக்கிறார். சாய்வு நாற்காலிக்கார சோப்பளாங்கிகளுக்கு இந்த உபதேசம் கிடையாது. அவர்களை மேல் விஷாரத்திற்கு அனுப்பலாம். வீரம் சற்றேனும் வருமா எனப் பார்க்கலாம்.

  4. இந்துக்களுக்கு உணர்வூட்ட முயல்வது சிறப்பான செயல் என்பதில் ஐயமில்லை. ஆனால், இணையத்திலே சுழன்று கொண்டிருப்பதோடு நில்லாது, இக்கருத்துக்களை பாமரர்க்கும் சேர்ப்பிப்பது நமது கடமை. அதற்கென்ன செய்யப்போகிறோம் என்று யோசிப்பது நன்று.

    சில யோசனைகள்:இத்தகைய தர்ம விளக்கக் கருத்துக்களை நோட்டீஸ் போல அச்சடித்து வாரம் ஒரு நாள் கோவிலில் வந்து போகும் பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். ஆங்காங்கே அருகிலுள்ள புத்தகக் கடை, பூக்கடைகளில் கோவிலுக்கு வருவோரிடம் விநியோகிக்கச் சொல்லலாம். வாரத்தில் ஒரு நாள் ஏதாவதொரு கோவிலில் கூடி ஒத்த எண்ணமுடையோர் சத்சங்கம் போல நடத்தலாம். செய்தித்டாள் ஏஜண்டுகளைப் பிடித்து அவர்கள் மூலம் இத்தகைய நோட்டீஸ் பேப்பர் வாங்குவோர்க்கு சேரச் செய்யலாம்.

    பிற மதத்தினர் target செய்யும் சேரிகளுக்கும் அவை சார்ந்த இடங்களுக்கும் சென்று இலவசமாகப் பாடம் சொல்லித் தரலாம், அதை அங்கே உள்ள நடத்தலாம்.

  5. தயானந்த சரஸ்வதி சுவாமிஜியின் வழிகாட்டுதலில் நடக்கும் ‘தர்ம ரக்ஷண சமிதி ‘ மற்றும் ‘youth for Dharma’
    இவைகள் இந்த மாதிரிப் பணி செய்து கொண்டிருக்கின்றன. அவைகளில் சேர்ந்து சேவை செய்யலாம்.
    மற்றும் வீ எச் பீ பல பணிளைச் செய்து கொண்டிருக்கிறது.மேலும் சத்ய சாய் சேவை தளம், ராமகிருஷ்ண மிஷன், இவைகளும் செய்து கொண்டிருக்கின்றன. ‘சனாதன் சன்ஸ்தா’ கர்நாடகா,மகாராஷ்டிரா,கோவா இங்கெல்லாம் மிகச் சிறப்பாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.தற்போது தமிழ் நாட்டிலும் செய்ய ஆரம்பித்திருக்கிறது. மற்றும் சில சிறு சிறு அமைப்புகளும் உழவாரப் பணி, ஆன்மீக விழிப்புணர்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
    புதிது புதிதாக இயக்கங்களை ஆரம்பிப்பதை விட இருக்கும் நல்ல இயக்கங்களில் சேர்ந்து சேவை செய்யலாம்.

  6. சத்ய சாய் பாபா எல்லோரும் எல்லாக் மதக் கடவுள்களையும் கும்பிடச் சொல்கிறார். மிக நல்ல கொள்கையாகத் தெரிகிறது. அவர்கள் நடத்தும் சாய் பஜன் நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறேன் அந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவர் இசுலாமியர் எவரும் இருப்பதில்லை. இந்துக்கள் மட்டும் கூடியமர்ந்து ராம் ரஹீம் ஏக் ஹை. அல்லா ஈஸ்வர தேரா நாம், அல்லா நாம பஜோ என்றெல்லாம் பாடுகிறார்கள். மற்ற மதத்தினர் அங்கு வராதது ஏனென்று கேட்டதற்கு, “புட்டபர்த்தி சென்று பாருங்கள் எத்தனை வெளிநாட்டினர் (கிறிஸ்தவர்கள்) வருகிறார்கள் தெரியுமா” என்றனர். உள்நாட்டில் நடக்கும் உள்குத்து பற்றிப் பேசப் போக “நாம் நல்லது செய்வோம், மற்றவர்கள் தவறு செய்வது பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்” என்று சொன்னார் நிறுவனத்தின் முக்கியஸ்தர் ஒருவர். இந்தக் கொள்கை மட்டும் சற்றே உதைக்கிறது. மற்றபடி தொண்டுகள் எல்லாம் நல்லதாகச் செய்கிறார்கள்.

  7. //“நாம் நல்லது செய்வோம், மற்றவர்கள் தவறு செய்வது பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்” என்று சொன்னார் நிறுவனத்தின் முக்கியஸ்தர் ஒருவர்- ஸ்ரீ அருண் ப்ரபு//

    தொடக்கத்திலிருந்தே இப்படிப் பாத்திரமறிந்து பிச்சையிடாமல் போனதால்தான் மாற்றுச் சமயங்கள் அத்துமீறி உள்ளே புகுந்து எல்லாவிதமான முறைகேடுகளையும் கடைப்பிடித்து மத மாற்ற வேலைகளில் ஈடுபடுவது சாத்தியமாயிற்று. மதம்மாறிகளின் எண்ணிக்கை பெருகவும் தொடங்கியது. தொடர்ந்து பெருகிக்கொண்டும் உள்ளது. இப்படி மாற்றுச் சமயங்களுக்கு மாறியவர்களின்/ மாறுபவர்களின் எண்ணிக்கை பெருகுவதன் விளைவு என்னவாகும் என்று கண்கூடாகத் தெரிந்திருந்தும் நமக்கு புத்தி வந்ததாகத் தெரியவில்லை.

    ராம் ரஹீம் ஏக் ஹை தானே அப்புறம் ஏன் அயோத்திக்காக அலட்டிக் கொள்கிறாய் என்று கேட்க ஆரம்பித்து, அல்லா நாம் பஜோ என்று தான் பாடுகிறாயே அப்புறம் உனக்கு எதற்குத் தனியாக ஈஸ்வர் என்றும் கேட்பார்கள், சும்மா பாடினால் போதுமா, வா மசூதிக்கு, அல்லாவுக்குத் தொழுகை பண்ணலாம் என்று நெட்டித் தள்ளிக் கொண்டும் போவார்கள் என்று அந்த முக்கியஸ்தரிடம் நீங்கள் கூறியிருக்க வேண்டும். கண்ணன் காட்டிய வழியைச் சரிவர அறியாத இவர்களால் ஏற்கனவே ஆயிரமாண்டு ஒடுக்குதலின் விளைவாக சுபாவமாகவே விட்டுக் கொடுத்து ஒதுங்கிப் போகும் ஹிந்துக்கள் மேலும் பணிந்து போகும் நிலைமைதான் நீடிக்கிறது.

    நம் ஞானாசிரியன் யுத்த பூமியில் ஞான, கர்ம, பக்தி மார்க்கங்கள் அனைத்தையும் எதற்காக விளக்கிக் கூறுகிறான், அப்போதைய சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கர்ம யோகத்தைப் பற்றி மட்டும் எடுத்துக் கூறிக் கடமையைச் செய்யுமாறு வலியுறுத்தியிருக்கலாமே என்று யோசிக்க வேண்டும்.
    அனைவருக்கும் ஒரே மாதிரியான ஈடுபாடு இருப்பதில்லை. பகவான் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் நேரடி சீடர்கள் விஷயத்திலிருந்தே இதைக் கண்டுகொள்ளலாம். சிலருக்கு ஞான மார்க்கமும் மற்றும் சிலருக்கு கர்ம மார்க்கமும் வேறு சிலருக்கு பக்தி மார்க்கமும் இயல்பாகவே இணக்கமாக இருந்தன. சுவாமி விவேகானந்தருக்கு இயற்கையாகவே ஞான மார்க்கத்திலே ஈடுபாடு இருந்த போதிலும் சமய சந்தர்பபத் தேவைகளுக்கு ஏற்ப அனைவரையும் கர்ம மார்ககத்தில் ஈடுபடுத்தித் தம்மையும் கர்மயோகியாக மாற்றிக்கொண்டார்.

    இபோதைக்கு நீ கடைப்பிடிக்க வேண்டியது கர்ம மார்ககம், அதை நிறைவு செய்தபின் உனது ஈடுபாடு எதில் உள்ளதோ அந்த மார்க்கத்தைத் தேர்ந்து கொள்வாயாக என்று உணர்த்துவதற்காகத்தான் அர்ஜுனனுக்கு பிற இரு மார்ககங்களையும் நம் ஞானாசிரியன் விளக்குகிறான். இந்த விளக்கம் நமக்கும் சொல்லப்பட்டது எனப் புரிந்துகொண்டு நம்மில ஒவ்வொருவரும் அர்ஜுனனாய் உணர்வோமாக. அப்போது ஸ்ரீ க்ருஷ்ணன் நமக்கெல்லாம் உற்ற தோழனாக உடனிருந்து வழிகாட்டிச் செல்வான் என்பதை மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
    -மலர்மன்னன்

  8. ‘சூயா’ என்னும் சம்ஸ்கிருதச் சொல் பொறாமை எனப் பொருள்படும். ‘அனசூயா’ என்னும் சொல் பொறாமையற்ற எனப் பொருள் தரும். ‘அத்வேஷ்டா’ என்னும் சம்ஸ்கிருதச் சொல் வெறுப்பின்மை, பகையின்மை என்னும் பொருட்கள் உடையது. அனைத்து உயிர்களிடத்தும் வெறுப்பின்மை/ பகையின்மை மட்டும் போதாது, நட்புணர்வும் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே ‘மைத்ரஹ’ என்னும் சொல். நட்புணர்வு மட்டும் போதாது, கருணையும் இருந்தாகவேண்டும் என்பதை வலியுறுத்தவே ‘கருண ஏவ ச’ என்னும் சொற்றொடர்கள்.

    மறுமொழிகள் வருவது எழுத்தாளருக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் இதை எழுதுவதால் மன்னிக்கவும். பெரும்பாலான மறுமொழிகள் த்வேஷமுடையவை அன்று எனப் பெரும்பாலோருக்கும் நிச்சயம் தெரியும். அர்த்தமற்ற மறுமொழிகளில் பெரும்பாலோருக்கு நம்பிக்கையும் கிடையாது என்பதில் ஐயமில்லை. ஆயினும், அர்த்தமுள்ள மறுமொழி இல்லாக் கட்டுரை, சுவையில்லாப் பண்டமே என்பதிலும் ஐயமில்லை.

    எனது மறுமொழியும் அந்த ரகமே என உறுதி அளிக்கிறேன்.

    வணக்கம்.

  9. //பொறாமையற்ற எனப் பொருள் தரும். ‘அத்வேஷ்டா’ என்னும் சம்ஸ்கிருதச் சொல் வெறுப்பின்மை, பகையின்மை என்னும் பொருட்கள் உடையது. அனைத்து உயிர்களிடத்தும் வெறுப்பின்மை/ பகையின்மை மட்டும் போதாது, நட்புணர்வும் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே ‘மைத்ரஹ’ என்னும் சொல். நட்புணர்வு மட்டும் போதாது, கருணையும் இருந்தாகவேண்டும் என்பதை வலியுறுத்தவே ‘கருண ஏவ ச’ என்னும் சொற்றொடர்கள். -ஸ்ரீ ஸ்ரீநிவாசராகவன்//

    மிகவும் அருமையான விளக்கம். எனினும், எங்கே வெறுப்பும் பகையும் தோன்றுகின்றனவோ அங்கு அவற்றுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது பொறாமையேயாதலால் பொறாமை என்று பொருள் கொள்வது எனக்குப் பொருத்தமாகப்படுகிறது. பொதுவாக அத்வேஷ்டாவுக்கு நீங்கள் கூறுவது போலப் பொருள் சொல்வதே வழக்கத்தில் உள்ளது. ஆனால் என்னைப்போல் பொருள் சொல்வோரும் உள்ளனர். உதாரணமாக ஹரே க்ருஷ்ண இயக்கத்தைத் தொடங்கி அமெரிக்காவில் பெரும் ஆன்மிகப் புரட்சியைத் தோற்றுவித்த ஸ்ரீ ப்ரபுபாதர் அத்வேஷ்டாவுக்குப் பொறாமை என்றே பொருள்கொள்கிறார்.
    //மறுமொழிகள் வருவது எழுத்தாளருக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் இதை எழுதுவதால் மன்னிக்கவும்.-ஸ்ரீ ஸ்ரீநிவாச ராகவன்//

    இல்லவே இல்லை. எனக்கு இது மிகவும் பிடிக்கிற விஷயம். அதிலும் உங்களைப் போன்ற விவரம் அறிந்தவர்கள் அளிக்கும் மறுமொழிகள் கட்டுரைக்கு மெருகேற்றும், வலுவேற்றும். எல்லாம் தெரியும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. எனது அறிவின் எல்லையை மிகத் துல்லியமாக அறிந்தே வைத்துள்ளேன். அனைவரிடமிருந்தும் மேலும் மேலும் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன்.
    -மலர்மன்னன்

  10. பொறாமை என்று மொட்டையாகக் குறிப்பிட்டுவிட்டமைக்கு மன்னிக்கவும்- பொறாமையின்றி, பொறாமையற்ற என்று கொள்ள வேண்டும்.
    -மலர்மன்னன்

  11. ஸ்ரீனிவாச ராகவன்

    என்ன சொல்ல வருகிறீர்கள் ? கட்டுரையை நன்றாகப் படித்தீர்களா ?

    கிருஷ்ணன் முற்றிய பக்தனுக்கு மட்டுமே அந்த இலக்கணம் கூறுகிறான். பாவாடையாலும் , தொப்பியாலும் நெட்டித் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கும் சாமானியனுக்கு அல்ல. சாம பேத தான தண்டம் அனைத்திற்கும் நாம் தயாராக வேண்டும்.

    தயானந்தர், ராம் சுக தாஸ் போன்ற மகான்கள் வெறுமனே ஜப மாலை உருட்டவில்லை. பசு வதை, மத மாற்றம் போன்றவை பற்றி பலமான எதிர்ப்புக் குரல் எழுப்பினர். விவேகானந்தர் கப்பலில் ஹிந்து மதத்தை விமரிசித்த பாதிரியார்களிடம் வெற்றுப் பேச்சு பேசவில்லை. காலரைப் பிடித்து தூக்கி நிறுத்தினார். ஏதோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இங்கே கொண்டு வராதீர்கள்.

  12. சவுதி அரேபியாவின் பண பலத்துடன், பாகிஸ்தானின் தூண்டுதலுடன், இஸ்லாமிய மத வெறியூட்டப்படு , இன்று காஷ்மீரில் இளைஞர்கள் ஒரு கல்லுக்கு இவ்வளவு ரூபாய் என்று விலை பேசப்பட்டு நமது தேசத்தின் இறையாண்மையை காலில் மிதித்து நாட்டுக்காக தம் உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நமது வீரர்களை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
    இவர்களிடம் என்ன அத்வேஷ்டா வேண்டிக் கிடக்கிறது?
    அத்வேஷ்டா என்பது தனி மனிதர்களுக்கு இடையே தான்.
    சமுதாயங்களுக்கிடையே அல்ல
    ஒரு சமுதாயம் மற்றொரு சமுதாயத்தை அழிக்க நினைத்தால் அப்போது’ ரௌத்ரம் பழகு’ என்ற பாரதியின் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
    அட்வேஷ்டாவை கடைப்பிடித்த நாலு லட்சம் காச்மீர ஹிந்துக்கள் அங்கிருந்து துரத்தப் பட்டனர். அவர்களுக்கு நாமா சோறு போடுகிறோம்?

  13. //ஏதோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இங்கே கொண்டு வராதீர்கள்.- ஸ்ரீ நெடியோன் குமரன்//
    எவ்வளவு வசீகரமாயிருக்கிறது உங்களுடைய பெயர்! உச்சரிக்கும்போதே எனக்கு இறையுணர்வின் தாக்கம் தாங்கிக் கொள்ள இயலாததாக உள்ளதே! ஆனால் நீங்கள் எழுதியிருப்பதுபோல் தனிப்பட்ட விருப்பு-வெறுப்பெல்லாம் ஸ்ரீ ஸ்ரீநிவாச ராகவனுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. பொதுவான் முறையில் அவர் கருத்துத் தெரிவித்திருப்பதாகவே எண்ணுகிறேன். நான்தான் இன்னும் விளக்கமாக எழுதியிருக்க வேண்டும் போலிருக்கிறது.
    தீயவரை இறைவன் சம்ஹரிப்பதும் மிகுந்த கருணையுடன் வெறுப்போ, துவேஷமோ இன்றி நட்புறவுடன் அளிக்கும் அருளேயல்லவா (நரசிம்மாவதாரம் இதற்கு விதி விலக்கு, அதுவும் காரணமாகத்தான்)? பகைவனுக்கருள்வாய் என்பதன் பொருள் எதிரியை எதிர்கொள்ள வேண்டியது ஒரு கடமையாகத்தானேயன்றி வெறுப்பு, துவேஷம் போன்ற வெறித்தனமான தூண்டுதலால் அல்ல என்பதுதானே? களத்தில் எதிரியை வீழ்த்தியபின் அவனுக்கு உரிய மரியாதை செய்வது நமது சம்பிரதாயம். எதிரி இறந்த பின்னும் உடலைப் பலவாறு அவமதிப்பது மாற்றார் வழக்கம். பாரதப் போரின் போது வீமன் வீழ்ந்த எதிரிகள் சிலர் விஷயத்தில் அவமரியாதையாக நடந்துகொண்டதை அனைவரும் கடுமையாகக் கண்டித்தனர் அல்லவா? நம் ஞானாசிரியன் சம்ஹாரம் செய்கையில் அதுவே ஒரு காருண்யச் செயலாக அமைவதுதான் அல்லவா? பீஷ்ம பிதாமஹர் அதனை எவ்வளவு ஆவலோடு யாசித்தார்? உன் கையால் இறக்கக் கொடுத்து வைக்கவேண்டும் என மெய்சிலிர்க்கவில்லையா? ஆயின் அவருக்கு அந்த பாக்கியம் கிட்டாமலே போயிற்று, பாவம்!
    -மலர்மன்னன்

  14. மலர் மன்னன் ஐயா!
    சத்ய சாய் சமிதி முக்கியஸ்தரிடம் (மாநில அளவிலான பொறுப்பாளர்) மதமாற்றம் பற்றிப் பேசத் துவங்கியதுமே சொன்னார், “ஸ்வாமி(சாய் பாபா) என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா! தீயதை நினைக்காதே! பேசாதே! அது தீமை அது பற்றி ஏன் நினைத்துக் கவலைப்படுகிறாய்?” பதிலுக்கு நான் சாய் பாபா அவர்கள் “ஸ்வதர்மத்தை பின்பற்றுங்கள், பரதர்மத்தை பின்பற்றாதீர்கள்” என்று சொல்லியிருக்கிறாரே, பிறகு ஏன் பிற தர்ம வழிகளை ஆராதிக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

    அதற்கு விளக்கம் கேட்டு வெறுத்து விட்டது. ஸ்வதர்மம் என்பது ஆத்மதர்மம். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் எல்லாமே உலகம் உடல் சம்பந்தப் பட்டுப் பேசுகிற விஷயங்கள் அதனால் இவை எல்லாம் அனாத்ம தர்மங்கள். இவை எதுவுமே சரியில்லை என்று சாய் பாபா அவர்கள் சொன்னதாகச் சொன்னார். Misinterpretation to the core என்றால் கிடையாது உலக வாழ்க்கை சம்பந்தப்பட்டு பேசப்படும் மதங்கள் எதுவும் doesn’t have any true value என்றார்.

    உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானமவசாதயேத் ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன:
    என்பது சநாதனம் சொன்னது தானே. அது எப்படி அனாத்ம தர்மமாகும் என்றேன். “கீதை எல்லாம் தெரிகிறது, ஏன் இப்படி பிறருடன் சண்டைக்கு அலைகிறாய். தியானம் பழகி ஆத்மாவை உயர்த்தப் பார்” என்றார்.

    எங்கள் மதத்துக்கு வாருங்கள் அப்போது மட்டுமே ஆத்மா ஒளிரும் என்று விளம்பரம் செய்கிறார்களே அது எப்படி என்றால், அவர்கள் கருத்து அவர்கள் சொல்கிறார்கள்! நீ ரஜோ குணத்தோடு எதையும் அணுகுகிறாய், அதனால் எல்லாம் தவறாகவே தெரிகிறது, சத்வ குணம் கொண்டு பார் உலகமே நல்லது என்று புரியும் என்று சொல்லி, யுதிஷ்டிரன், துரியோதனன் உலகம் சுற்றி நல்லவர்கள் கெட்டவர்களைத் தேடிய கதையை எடுத்துக் காட்டினார்.

    தண்ணீரை நீர், பானி, வெள்ளம், நீலு, வாட்டர் என்று பல பெயர்களில் அழைத்தாலும் தண்ணீர் தண்ணீர்தான். அது போல எந்த மதம் எந்தப் பெயரில் அழைத்தாலும் கடவுள் ஒன்று தான் என்றார். அவர்கள் வன்முறை செய்தாலும் நாம் அன்பு காட்டுவோம் என்றார். காந்தியத்தின் மறுபதிப்பு போலத் தோன்றியது. எதிர்வாதம் செய்தால் நான் வாதிக்கத் தயாரில்லை, அற்ப விஷயங்கள் பற்றி வாதங்கள் நேரவிரயம். “நீ திருந்து, சத்வ குணம் வளர்த்துக் கொள்” என்று சொல்லிக் கும்பிட்டுவிட்டுப் போய்விட்டார்.

    உண்மையிலேயே இப்படித் தான் சத்ய சாய் பாபாஅவர்கள் சொன்னாரா அல்லது காந்தியார் தன்னை இந்துவாகக் காட்டிக் கொண்டதில்லை, எல்லாமாகக் காட்டிக்கொண்டார் என்று பின்னால் வந்த இன்னபிறர் இட்டுக்கட்டிவிட்டது போல் இவர்கள் திரிக்கிறார்களா தெரியவில்லை. அந்த நிறுவனம் செய்யும் தொண்டு நல்லதாக நன்றாகத் தெரிகிறது. அவ்வளவே. அவர்கள் சொல்லும் கொள்கை என் (probably ரஜோ குண) மனதுக்கொப்பவில்லை.

  15. சத்ய சாய் பாபா அவர்கள் பலமுறை ‘எனது அவதார நோக்கமே வேத ரக்ஷணம் தான் ‘ என்று கூறியிருக்கிறார்.
    அவரும் நம் பாரத நாட்டின் பெருமைகளை ,பாரம்பரியத்தை,நமது தர்மத்தின் மேன்மையை பற்றி நாளும் பேசி வருகிறார்
    ஆனால் அவரது கொள்கைகள் சத்யம்,தர்மம்,பிரேமை,சாந்தி என்ற நான்கு சொற்களுக்குள் அடங்கும்.
    எல்லாவற்றுக்கும் பிரதானமாக சேவையே மிக முக்கியமானது என்று வலியுறுத்துகிறார்.’மானவ சேவை மாதவ சேவை’ என்று கூறுவார்.
    முஸ்லீம்கள் தவிர ( ஒன்றிரண்டு வீ ஐ பிக்கள் வரலாம்) மற்ற மதத்தினர் அவரது ஆசிரமத்துக்கு வருகின்றனர்.
    கடைசியாக அவர்கள் வருவார்கள் என்பது அவர் சொன்னதாக சொல்லப் படுகிறது.

  16. சு பாலச்சந்திரன்

    நம்மில் பலருக்கும் தவறுகள் மற்றும் கொடுமைகள் இழைக்கப்படுவதை பார்க்கும் நேரங்களில் நாமே நியாயம் வழங்க நினைக்கிறோம். சட்டம் தன்னுடைய கடமையை செய்யும்போது போதிய நியாயம் விரைவாக கிடைக்கவில்லை என்று எண்ணுபவர்கள் மற்றும் நீதிமன்றங்களின் மூலம் வெகு தாமதம் ஆகிறது என்ற எண்ணம் பரவி வருகிறது.இதற்கும் என்ன காரணம் என்று கேட்டால் பதவியில் உள்ள அரசியல் வாதிகள் , நீதித்துறையில் ஒரு நீதிபதி ஒய்வு பெரும் நாளன்றே அடுத்த புதிய நீதிபதியை அந்த இடத்தில் நியமிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும்.அது பலகாலமாக நம் நாட்டில் செய்யப்படவில்லை.

    பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் போதிய எண்ணிக்கையில் இல்லாமல் நீதி தாமதம் ஆகிறது என்று சொல்லி பயனில்லை. சட்டம் ஒழுங்கு விரைவில் நாடு முழுவதும் கெடுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. நம் நாட்டின் நிலப்பகுதியை அந்த நிலம் நமக்கு சொந்தம் இல்லை என்று சொல்லும் இனத்துரோகிகளை நாம் புறக்கணித்தால் எதிர்காலத்திலாவது தவறாக பேசாமல் இருப்பார்கள்.

    சாய் பாபாவின் வழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு வெளிநாடுகளை சேர்ந்த கிறித்துவர்கள் வருகின்றனர்.ஆனால் உள்நாட்டு கிரித்துவர்களோ, உள்நாட்டு முஸ்லிம்களோ வருவதில்லை. இந்துக்கள் எல்லா வழிபாட்டு தளங்களுக்கும் நாகூர் தர்கா ,வேளாங்கண்ணி,ஆஜ்மீர் தர்கா மற்றும் எல்லா இஸ்லாமிய மார்க்க புனிதர்களின் உடல் அடக்கச்தலங்களிலும் சென்று பிரார்த்தனை செய்வார்கள். ஏனெனில் நமது முறைகளில் முத்தனாதனும் சிவனடியாரே. நமக்கு இஸ்லாமிய கிறித்துவ, புத்த, ஜைன என்று அனைத்து வழிபாட்டு முறைகளும் நமக்குள் அடக்கம். இதை அவர்கள் ஒத்துக்கொள்ளவிட்டாலும் இதுவே உண்மை. நமக்கு எல்லைகள் இல்லை. அவர்களோ மிக மிக குறுகிய எல்லைகளுக்குள் மாட்டிக்கொண்டு அதைவிட்டு வெளிவரமுடியாமல் சிறைக்கைதிகளாக உள்ளனர். நாம் எதிர்த்து வருவதும் தொடர்ந்து எதிர்த்துவரவேண்டியதும் என்னவெனில் பயமுறுத்தல் மற்றும் பணபலம் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை மூலம் மதம்மாற்றிகளுக்கு துணை போகிற தீய சக்திகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு நல்ல பாடம் புகட்ட வழிமுறைகளை ஆராயவேண்டும். நமது மதம் என்றும் அழியாது.ஏனெனில் இது இறைவனை தலைவனாக கொண்டது.

  17. //அதற்கு விளக்கம் கேட்டு வெறுத்து விட்டது. ஸ்வதர்மம் என்பது ஆத்மதர்மம். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் எல்லாமே உலகம் உடல் சம்பந்தப் பட்டுப் பேசுகிற விஷயங்கள் அதனால் இவை எல்லாம் அனாத்ம தர்மங்கள்.//

    ஆத்மா தர்மத்தைப்பற்றி பேசும் மதம் எதுவாம்? இவரின் மதம் எதுவாம்?

    //தண்ணீரை நீர், பானி, வெள்ளம், நீலு, வாட்டர் என்று பல பெயர்களில் அழைத்தாலும் தண்ணீர் தண்ணீர்தான். அது போல எந்த மதம் எந்தப் பெயரில் அழைத்தாலும் கடவுள் ஒன்று தான் என்றார்//

    அல்லா ஏசு இவர்களை கடவுள் என்பவர்கள், “மற்ற எந்த கடவுளுடனும் கூட்டணி வைப்பது எனக்கு பிடிக்காத செயல்” என்று அவர்கள் கூறுவதை மட்டும் ஏன் மதிப்பதில்லை?

  18. இன்று இருக்கும் பெரும்பாலான ஹிந்து சமயத் துறவிகள் ,மடங்கள்,ஆஷ்ரமங்கள் ஆகியவை ஒரு நன்மையைச் செய்கின்றன.சமயம் சார்ந்த பூஜை, பஜனை,விழாக்கள் ,சொற்பொழிவுகள் இவைகளின் மூலம் நமது தர்மத்தில் மக்களை நிலை நிறுத்துகிறார்கள்.ஓரளவு மத மாற்றத்தை தடுக்கிறார்கள். இவர்களுக்கு வெளிநாடுகளிலும் கிளைகள், பக்தர்கள் இருப்பதால் ஹிந்து சமயம் என்று வெளிப்படையாகச் சொல்லாமல்,பொத்தாம் பொதுவாகச் சொல்கின்றனர்.
    எனவே இவர்கள் வெளிப்படையாக மத மாற்றம்,பயங்கர வாதம் ,அரசியல் வாதிகளின் ஹிந்து விரோதப் போக்கு இவை பற்றிப் பேசுவதில்லை.
    ஆகவே ஹிந்து சமயத்தை அழிக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராட பெஜாவர் சுவாமி, சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் பெரும் எண்ணிக்கையில் வர வேண்டும்.
    ஆனால் எது எப்படியானாலும் ஹிந்து இயக்கங்கள்தான் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.

  19. ஸத்வ குணமும் தமோ குணமும் வெளித் தோற்றத்திற்கு ஒன்றுபோலவே இருக்கும். இதைப் பயன்படுத்தித் தமோ குணத்தவர் தம்மை ஸத்வ குணத்தவர்போல் காட்டிக்கொளவதுண்டு. ஹிந்து தர்மத்தைப் பிற மதங்களுடன் இணைவைப்பது ஹிந்து தர்மம்பற்றிய அறியாமையைப் புலப்படுத்துவதாகவே கருதப்படும்.

    அவசியமான தருணங்களில் ரஜோ குணத்தவராக இருப்பது இன்றியமையாததாகும்.

    இது சம்பந்தமாக இன்னும் பேசமுடியும். எல்லோரும் முழுக்க முழுக்க ஸத்வ, ரஜோ, தமோ குணத்தவராக எப்போதும் இருப்பதில்லை. ஸத்வ-ஸத்வ, ஸத்வ-ரஜோ, ஸத்வ-தமோ, ரஜோ-ஸத்வ, ரஜோ-ரஜோ, ரஜோ-தமோ, தமோ-ஸத்வ, தமோ-ரஜோ, தமோ-தமோ என குண விசேஷங்கள் உண்டு.
    -மலர்மன்னன்

  20. இன்னுமொரு முக்கிய விஷயம், ஸத்வ-ஸத்வ குணத்தவர், அதாவது முற்றிலும் ஸத்வ குணத்தவராய் இருப்பவர்கள் தம்மை விமரிசையாக வெளிப்படுத்திக்கொள்லாமல் இருக்கிற இடம் தெரியாமலே அடக்கமாக இருந்துவிடுவர்.

    -மலர்மன்னன்

  21. It is always learning hitherto not known to us whenever we read the articles as well as postings of our most respected Sri Malarmannan Sir. We can takeout the print of his articles that we are already doing but in case of his postings in others’ articles, we find it very difficult to keep track of all his postings and preserve them. And each of his posting is essential to preserve in our records to read again and again. For instance, in this article itself Sri Malarmannan Sir has given lot of food for thought and follow in his postings as reply to readers’ queries
    I therefore request to find a wayout so that we can preserve his postings in others articles. We are a study group with 20 members and I am making this request on behalfof my group.

    I also request the learned Sri Malarmannanji to write more on Gita and Sri Krishna’s advice to us. We have already read Gita in English and Tamil but Sri Malarmannan Sir’s interpretation seems to be more interesting and apt to us.
    Senthilkumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *