ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு

shasta_pura_pushkala_on_elephantகாருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்

என்பது கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்தபுராணத்திலுள்ள ஐயனார் தோற்றம் பற்றிய வரலாறு பேசும் பகுதியில் ஐயனாரின் திருவுருவ வர்ணனையுடன் கூடிய பாடல். இப்பாடலில் பூரணை புஷ்கலா தேவியருடன் ஹரிஹரபுத்திரராக ஐயப்பன் மதக்களிற்றில் எழுந்தருளி வருவதாகச் சொல்லப்படுகின்றது. இதே போலவே,

’மத்தமாதங்க கமநம் காருண்யாம்ருத பூஜிதம்
ஸர்வ விக்னஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்’

”மதம் பொருந்திய யானையை ஊர்தியாகக் கொண்டவரும், கருணை பொழியும் திருமுகத்தினரும், வணங்கத்தக்கவரும, எல்லா துன்பங்களையும் நீக்குபவரும் ஆகிய சாஸ்தாவை வணங்குகிறேன்” என்று தர்மசாஸ்திரா ஸ்தோத்திரம் சொல்கிறது.

ஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா?

ஐயனார் வழிபாடு என்பது மிகப்பழைய காலம் தொடக்கம் தமிழகத்திலும் இலங்கையிலும் விரவிக் காணப்படுகின்றது. ஊர்கள் தோறும் வயல் நிலங்களிலும் கடலோரத்திலும் மலை உச்சிகளிலும் ஐயனாருக்கு கோயில் எழுப்பி தமிழர்கள் பாரம்பரியமாக கிராம உணர்வுடன் இயற்கை வழிபாடாற்றியும் சிவாகம பூர்வமாக திருக்கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்து வேதாகம நெறி சார்ந்தும் வழிபாடாற்றி வந்திருக்கிறார்கள்.

shasta_sorimuthu_ayyanarசாத்தா (சாஸ்தா) என்றும் அழைக்கப்பெறும் ஐயனார் கிராமத்தேவதையாகவும் வழிபடப்பட்டு வந்துள்ளார். தமிழகத்தின் கிராமங்களில் ஊர் நடுவே சிவபெருமானுக்கோ, மஹாவிஷ்ணுவுக்கோ திருக்கோயில் பெரிதாக எழுப்பி வழிபாடாற்றும் போது ஊரின் நாற்புறத்தும் கிராமத்தேவதைகளாக மாரி, பிடாரி, ஐயப்பன் முதலிய தெய்வங்களை கோயில் அமைத்து வழிபாடாற்றியிருக்கிறார்கள். இது இப்படியே இன்னும் விரிவடைந்து சில ஊர்களில் ஐயனாருக்கு பெரிய கோயில்கள் அமைத்து மஹோத்ஸவாதிகள் செய்து வழிபாடாற்றியும் வந்திருக்கிறார்கள்.

இவ்வகையில் பெரிய சிற்ப சித்திர தேரில் ஐயனாருக்கு உலாவும் நடைபெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிட வேண்டியது. இது இவ்வாறிருக்க, மேற்படி ஐயனாரின் அவதாரமாகக் கொள்ளப்பெறும் ஐயப்பன் வழிபாடு கேரளதேசத்திலிருந்து அண்மைக்காலத்தில் மிகப்பிரபலம் பெற்றிருக்கிறது. இன்றைக்கு கேரளாவிலுள்ள சபரிமலைக்கு உலகெங்கிலுமிருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான அடியவர்கள் மிகப்பக்தி சிரத்தையுடன் சரண கோஷம் முழங்க செல்வதையும் காண்கிறோம்.

ஆக, நம் தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வரும் ஐயனார் வழிபாடும் தற்போது பிரபலம் பெற்றுள்ள ஐயப்பன் வழிபாடும் நெருக்கமானதாகக் கருத முடிகிறது. ஐயனாரின் அவதாரமான ஐயப்பனை இணைத்து சிந்திக்க முடிகின்றது. எனினும் இரு வேறு வடிவங்களில் வழிபாடாற்றும் போது இடையில் சில ஸம்ப்ரதாய பேதங்களையும் அவற்றின் வழியான வழிபாட்டு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அவதானிக்கலாம்.

ஐயனாரின் அவதாரமும் அருளாட்சியும்

கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதியதும் சிறப்புப் பொருந்தியதுமான கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள் ஊறித் திளைத்திருப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

சாவா மூவா மருந்தாகிய அமிர்தத்தைப் பெற திருப்பாற்கடலை தேவரும் அசுரரும் கடைந்து அமிர்தத்தைப் பெற்ற போது, தேவர்களுக்கே அமிர்தத்தை வழங்க திருமாலோன் மோஹினி வடிவம் என்ற அழகிய பெண் வடிவு கொண்டு, அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளித்தார். இது நிற்க, சைவசித்தாந்த மரபானது

சாந்தமயமாக இறைவன் எழுந்தருள்கையில் உமா,
கோபங்கொள்கையில் காளீ,
போரிடுகையில் துர்க்கா,
புருஷத்துவத்துடன் எழுந்தருள்கையில் விஷ்ணு

என்று சிவபெருமானின் சக்திகளை நான்காகக் கூறும்.

இந்த வகையில் சிவபெருமானின் சக்தியாகவும் விஷ்ணு விளங்குகிறார். ‘அரியல்லால் தேவியில்லை’ என்ற அப்பர் பெருமானின் தேவார அடியும் ஈண்டு சிந்திக்கத்தக்கது. இதில் விஷ்ணுவை சக்தி என்கிற வகையில் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று கொள்வதிலும் பார்க்க விஷ்ணு உயிர் என்றால், சிவன் உடல் அல்லது சிவன் உடல் என்றால் விஷ்ணு உயிர் என்று கொண்டார்கள் என்று கருதுவதே சிறப்பு. சிவபெருமானின் ஹிருதயத்தில் விஷ்ணுவும், விஷ்ணுவின் ஹிருதயத்தில் சிவனாரும் வாஸம் செய்வதாக ஒரு பிரபல சம்ஸ்கிருத வாக்கியமும் இருக்கிறது.

shasta_ayyappan_birthஆக, சிவசக்தி ரூபமாக, சங்கர நாராயணனாக இணைந்து காட்சி தரவும் ‘அரியும் அரனும் ஒண்ணு அறியாதார் வாயில் மண்ணு’ என்ற கிராமத்துக் குழந்தைகள் சொல்லும் உண்மையை எடுத்துக் காட்டவும் இச்சந்தர்ப்பத்தில் மோஹினி அவதாரம் செய்து பெண்ணுருக் கொண்டிருந்த மஹாவிஷ்ணுவுடன் ஆணுருக் கொண்டு காட்சி தந்த பரமேஸ்வரன் இணைய இந்த திருவிளையாடலில் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் சிலர் கூறுவது போல ஒரு பாற்புணர்ச்சி என்று இதனைக் கருதக்கூடாது. அப்படிக் கருதுவது இங்கு பொருத்தமானதுமல்ல. இங்கே இருவரும் ஒருவர். அவ்விருவரில் தோன்றிய மூன்றாமவரும் ஒருவரே.

நாவலந்தீவில் தேக்க மர நீழலில் நடந்த கூடலில் அரிகரபுத்திரர் அவதரித்தார். லோகரட்சகராக இறைவனால் உடனேயே பணி நியமனமும் மேற்படி ஐயப்ப தேவருக்கு வழங்கப்பெற்றதாகவும் கந்தபுராணத்தின் ‘மகா சாத்தாப்படலம்’ சொல்லும். கந்தபுராணம் இப்பெருமானின் தோற்றப்பொலிவைக் காட்டும் போது,

மைக்கருங்கடல் மேனியும் வானுலாம்
செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர் மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீக்கினான்

என்று கூறும்.

மேலும் கந்தபுராணம் சிவகுமாரர்களான விநாயகர், முருகப்பெருமான், போன்றோருக்கு இளவலாக தம்பியாக இக்கடவுள் கொள்ளப்படுவார் என்கிறது. தேவர்களையும் யாவரையும் காக்கும் பொறுப்பில் ஐயனார் என்ற இக்கடவுள் என்றும் ஈடுபட்டிருப்பதாகக் காட்டுகிறது.

ஸ்காந்தத்தின் அடிப்படையில் கந்தபுராணம் இவ்வாறு ஐயப்பனின் அவதாரத்தைக் காட்ட பத்மபுராணம் பஸ்மாசுரனை அழிக்க சிவபெருமான் எழுந்தருளிய போது பஸ்மாசுரனை மயக்கி அழிக்க திருமால் மோஹினி வடிவம் கொள்ள, அப்பொழுது பிறந்தவரே ஐயனார் என்று காட்டுகிறது. இதே போலவே தாருகா வனத்து முனிவர்களின் கடவுள் நிந்தனையையும் செருக்கையும் அழிக்க பிட்சாடனராக சிவபெருமான் வந்த போது மோஹினி வடிவம் கொண்ட திருமாலும் இணைந்து பிறந்தவரே ஐயனார் என்பதும் வரலாறு.

‘ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் சோதி’ ஆகிய இறைவன் அடியவர்களின் நலன் கருதி திருவிளையாடல்கள் புரிகிறான். ஆதில் சில உண்மைகளை நிலை நிறுத்திக் காட்ட புராணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் இறைவனையே அளக்கவோ, அவனின் பிறப்பை அறியவோ முற்படுவது விநோதமானது , உண்மையில் அது எவராலும் இயலாதது என்பதையே இக்கதைகள் புலப்படுத்தி நிற்கின்றன எனலாம்.

தமிழ் இலக்கியங்களினூடு நயந்து பேசப்படும் ஐயனார்

சூரபத்மனால் வருந்திய இந்திரன் சீர்காழியில் இந்திராணியுடன் மறைந்து வாழலானான். அப்பொழுது தேவர்களுக்காக இறைவனை வேண்ட திருக்கைலைக்கு அவன் செல்ல நேரிட்டது. அப்போது தனித்தவளாயிருந்த இந்திராணிக்கு அசுரர்களால் தீங்கு நேரிடுமோ என்று அஞ்சிய அவன் ஐயனாரைத் துதித்து அவரைக் காவலாக எழுந்தருளியிருக்க வேண்டினான்.; ஐயனார் தனது சேனாபதிகளில் ஒருவரான மஹாகாளர் என்பரை இந்திராணிக்கு காவலாக நியமித்தார்.

இந்திரன் எதிர்பார்த்தது போலவே சூரனின் தங்கை அசமுகி இந்திராணியைக் கண்டு அவளின் அழகைப் பார்த்து ‘இவளை நாம் கொண்டு போய் நம் அண்ணனிடம் கொடுப்போம்’ என்று துணிந்து அவள் சிவபூஜை செய்து கொண்டிருந்த சோலையை அடைந்து, இந்திராணியின் கையைப் பிடித்து இழுத்தாள். இவ்வமயம் அஞ்சிய இந்திராணி தன் காவல் நாயகராகிய ஐயனாரை நோக்கி தன் அபயக்குரலை வெளிப்படுத்தி அழுதாள்.

பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம், விண்ணோர் ஆதியே ஓலம், செண்டார்
கையனே ஓலம், எங்கள் கடவுளே ஓலம், மெய்யர்
மெய்யனே ஓலம், தொல்சீர் வீரனே ஓலம், ஓலம்!

shasta_ayyanar_chennai_museumஇந்த அழுகுரலைக் கேட்டு ஓடி வந்த ஐயனாரின் சேனாபதியாகிய வீரமஹாகாளர் அசமுகியின் இழுத்த கையை அறுத்தெறிந்தார். இவ்விடம் இன்றும் சீர்காழியில் ‘கைவிடான் சேரி’ என்று வழங்கப்பெறுவதுடன் அங்கு ஐயனாருக்கு திருக்கோயிலும் அமைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஆக, இந்திராணியின் திருமாங்கல்யத்தைக் காப்பாற்றிய முருகக் கடவுளுக்கு இளையவரான ஐயனாரின் பெருமையும் முருகனின் புகழ் சொல்ல வந்த கந்தபுராண காவியம் தெளிவுறக் காட்டுகிறது எனலாம்.

பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தம் வாழ்வின் நிறைவில் திருக்கைலாசத்திற்குச் சென்ற போது அவருடன் கைலாசத்திற்கு எழுந்தருளிய சேரமான் பெருமாள் நாயனார் ‘திருக்கைலாச ஞான உலா’ என்ற பிரபந்தத்தை பாடினார். அதனை கைலாசத்திலிருந்து கேட்டு தமிழகத்தின் திருப்பிடவூருக்குக் கொண்டு வந்து வெளிப்படுத்தி தமிழ்த் தொண்டாற்றியவராகவும் ஐயனார் பெருமானைக் காட்டுவர். பேரம்பலூருக்கு அருகிலுள்ள திருப்பிடவூர் என்ற இவ்வூரிலுள்ள ஐயனார் இன்றும் கையில் புத்தகத்துடன் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள். இவரை ஊர் மக்கள் ‘அரங்கேற்றிய சாமி’ என்று அழைக்கிறார்களாம்.

ஈழத்துச் சிதம்பர தலபுராணத்தில் இக்கதையை,

சேரமான் அருளிச்செய்த திருவுலாத் தெய்வ வெற்பில்
நேருறக் கேட்டு முந்நீர் நெடும்புவி உய்யுமாறு
சீருறு சோலை சூழ்ந்த திருப்பிடவூரை நண்ணி
ஆரவே சொல்லி வைத்த ஐயனே போற்றி போற்றி

என்று கூறுவதைக் காணலாம்.

மூக்கில் விரலை வைத்து முகுந்தன் மகன் சிந்திப்பதென்ன?

பொ.பி* 16ம் நூற்றாண்டளவில் வாழ்ந்த மகானாகிய ஸ்ரீமத் அப்பையதீட்சிதர் ஒரு சமயம் அக்கால அரசனாகிய நரசிம்ஹபூபாலன் மற்றும் அவனது அரசவைப்புலவருடன் ஒரு ஐயனார் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஐயனார் மூக்கில் ஒரு விரலை வைத்து ஆழ்ந்த சிந்தனையில் காட்சி தருவதைக் கண்டார். (* பொ.பி – பொதுயுகத்திற்குப் பின், CE – Common Era).

அவ்வூர் மக்களிடம் இது பற்றி வினவிய போது ‘ஒரு ஞானி வருவார். அவர் ஐயப்பதேவனின் சிந்தனையைச் சொன்னவுடன் மூக்கிலிருந்து கையை எடுத்து விடுவார் எங்கள் ஐயப்பன்’ என்று தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டனர். உடனே அரசன் அவைக்களப்புலவரைப் பார்க்க, அவர் பாட, மூக்கிலிருந்து கை எடுக்கவில்லையாம் சாஸ்தா. அப்பையதீட்சிதரை அரசன் நோக்க, அவர்,

அன்னையாம் அரவணையான், அபிராமவல்லி, இருவரையுமே யான்
இன்சொல் பேசி அம்மே என்றுமே இன்புற்று, கைலாச நாதனாய
பொன்னார் மேனிப்பெருமானை தந்தையெனவும் விளித்ததனால், வைகுண்ட
மின்னிடு பதியுற்றால் மிளிருமெழில் ஸ்ரீதேவியை எப்படி அழைப்பேனோ?

என்று பாட சாஸ்தாவின் மூக்கிலிருந்து கை எடுக்கப்பெற்று விட்டதாம்! ஐயப்பனுக்கு திருமால் அன்னை என்றால் திருமகள்? இந்த வினாவின் விடையைச் சொல்ல வல்லவர் யார்?

இந்த வினாவினூடே நாம் அபரிமிதமான இறையருளின் திருவிளையாடல்களை இனங்கண்டு கொள்ளலாம். இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும் அம்மூர்த்திகளிடையே பேதங்கள் பார்த்து ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும் நம் சந்தோஷத்திற்காகவும் நாம் அறிவு பூர்வமான நீதிகளைப் பெறவுமே அன்றி அம்மூர்த்திகளுள் பேதமில்லை என்ற உண்மையைக் காட்டவேயாம் என்ற உண்மை இக்கதை ஊடாகவும் வெளிப்படுகின்றது. எல்லோரும் அப்பைய தீட்சிதரின் திறனையும் அறிவையும் பாராட்டினார்களாம் என்று ‘தீட்சிதேந்திரம்’ என்ற நூல் சொல்கிறது. இந்தக் கதை நம்மூர்களில் மிகப்பிரபலமாக உள்ளது. இது போல ஐயனார் பற்றிய பல கதைகளும் இருக்கலாம். சாஸ்தா என்பதற்கு மக்களின் மனங்களில் ஊடுருவியவர் என்றும் பொருள் சொல்வதுண்டல்லவா?

ஆகம நெறியில் ஐயப்பன் வணக்கம்

சிவாகமங்கள் ஆகிய பூர்வகாரணாகமம், சுப்பிரபேதம், அம்சுமானம் ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன் பற்றிய குறிப்புகள் உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள் என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள் பற்றிப் பேசுகின்றது. மதகஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா, மதன சாஸ்தா, சௌந்தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள் பதினாறாக அது கூறுகின்றது.

shasta_ayyanar_parivarangalஇந்த ஆகமங்கள் மற்றும் பத்ததிகளின் படி சில மாறுபாடான கருத்துகளும் உள்ளன. சாஸ்தாவின் பரிவாரங்களாக மஹாகாளன், கோப்தா, பிங்களாட்சன், வீரசேனன், சாம்பவன், த்ரிநேத்ரன், சூலி, தட்சன், பீமரூபன் ஆகியோரையும் கொடியாக யானை மற்றும் கோழியையும் த்யானரத்னாவளி காட்டுகிறது. அது சௌந்திகராஜன் புதல்வியான பூர்ணா மற்றும் அம்பரராஜன் புதல்வியான புஷ்கலா ஆகியோர் ஐயப்பனின் இரு மனைவியர் என்றும் சொல்கிறது.

இது இவ்வாறாக சில்பரத்னம் இப்பெருமான் மேகவர்ணர் என்றும் அவருக்கு பிரமை என்ற மனைவியும் சத்யகன் என்ற புதல்வனும் உண்டு என்றும் கூறுகிறது. பூர்வகாரணாகமம் ஐயப்பனின் நிறம் கறுப்பு என்கிறது. சுப்ரபேதம் என்ற சைவாகமம் ஐயப்பனை பெருவயிறர் என்றும் மதனா, வர்ணினி என்ற மனைவியரை உடையவர் என்றும் கரியமேனியர் என்றும் கூறுகிறது. இதே வேளை, அம்சுமான ஆகமம் ஹரிஹர சாஸ்தா என்ற ஐயன் முக்கண்ணும் சாந்தரூபமும் கொண்டவர். வெண்பட்டாடை சாற்றிய திருமேனியர். தாமரை மலரில் எழுந்தருளியிருப்பவர் என்று கூறுகிறது. எனினும் பொதுவாக ஐயனாரையும் ஐயப்பனையும் பொன்மேனியராகவே காட்டும் வழக்கமே இருக்கிறது.

இவ்வாறாக, ஐயனார் -ஐயப்பன் வணக்கம் பல்வகைப் பட்டு பலவாறாக பலராலும் பல்வேறு நிலைகளில் செய்யப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். அவரை கிராமதேவதையாகவும் காவல் தெய்வமாகவும் கண்டிருக்கிறார்கள். அவரே முழுமுதற்பொருள் என்று பூஜை செய்தும் வாழ்ந்திருக்கிறார்கள். ஆக, ஐயன் அவரவர் தத்தம் அறிவின் வண்ணம் எப்படி எப்படி வணங்குகிறார்களோ அப்படி அப்படிக் காட்சி தந்து அவரவர் நிலைக்கேற்ப அருளி வந்திருக்கிறார் என்றே கருத முடிகின்றது.

பொதுவான வழக்கில் உள்ள கதையின் படி ‘நேபாளதேசத்து அரசனான பலஞனின் மகளான புஷ்கலையை அவனின் வேண்டுகோளின் படி ஐயன் மணந்தார் என்றும், வஞ்சி மாநகராண்ட பிஞ்ஞகன் என்ற அரசனின் வேண்டுகோளை ஏற்று அவனின் மகள் புஷ்கலையை ஐயன் ஏற்றார் என்றும்’ சொல்லப்படுகிறது. இவர்கள் ஸத்தியபூரணர் என்ற முனிகுமாரத்திகள் என்றும் சில நூல்கள் சொல்வதாக அறியக்கிடக்கிறது.

shasta_with_purna_pushkala

எது எப்படியோ இருமையின்பத்தையும் அருளவல்ல பெருமான் இருதேவியருடன் காட்சி தருவது ஏற்கத்தக்க விடயமாக தெரிகிறது. இதனை தத்துவார்த்த நோக்கில் அவதானித்து ஸத்தியத்தை அறிய வேண்டும்.

ஆகம வழிப்பட்ட வழிபாடுகளைப் பெறும் ஐயனாரைப் பற்றி நோக்கும் போது நம் ஊர்களின் ஆகம நெறிப்பட்ட வகையில் ஐயனாருக்கு பேராலயங்கள் சமைத்துக் குடமுழுக்காட்டி வழிபாடாற்றியும் வந்திருப்பதைக் காண்கிறோம். வடஇலங்கையில் அனலைதீவு என்ற தீவிலும் ஊர்காவற்துறையிலுள்ள சுருவில் கிராமத்திலும் மேற்சுன்னாகம் பகுதியிலும் காரைநகரின் வியாவிலிலும் அளவெட்டியிலும் ஐயனாருக்கு பலநூறாண்டுகள் பழைமையான சிவாகம வழியில் அமைந்த சிவாகம வழியில் பூஜிக்கப்படும் ஆலயங்கள் உள்ளன.

வியாவில் ஐயனார் கோயில் பற்றி ‘ஆறுமுகநாவலர் / ஈழத்துச் சிதம்பர தலபுராணம்’ என்ற இத்தளத்தில் வெளியான முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்களின் கட்டுரையிலும் பல செய்திகளைக் காணலாம். அனலை தீவில் இன்றும் தான்தோன்றியான ஒரே கல்லில் அமைந்ததும் கடலில் மிதந்து வந்ததுமான பூரணை புஷ்கலை உடனாய ஐயப்பன் திருவுருவம் உள்ளது. பாரம்பரியமாக இக்கோயிலில் கொடியேறி சிவாகமப்படி மஹோத்ஸவம் வருடாந்தம் நடைபெற்று வருகிறது. சுருவில் என்பது ஐயனாரின் கரவில் அல்லது கருவில் ஊன்றிய இடம் என்று சொல்கிறார்கள். .இக்கோயிலில் உள்ள ஊஞ்சல் பாவில் ஒரு பாடல்

நந்தவன வாவிமலி நாடுங் காடும் நல்லவனாய் பூவுலகைக் காக்க வேணிச்
சங்கரனார் மோகினியாம் அரியோடாட சாந்திமிக அவதரித்த காந்தமூர்த்தி..

என்று ஐயனின் அவதாரத்தைப் பேசுவதைக் காண முடிகின்றது.

சபரி மலைக்கு வந்த சாஸ்தா யார்?

பசுமை கொஞ்சும் கேரளதேசத்தில் பம்பை நதிக் கரையோரம் கோயில் கொண்ட சபரிகிரீஸனான ஐயப்பன் கலியுகத்தில் மிகப்பிரபலம் பெற்று விளங்குகிறார். இப்போதெல்லாம் கார்த்திகை பிறந்தால் உலகெங்கும் ‘ஐயப்பா சரணம்’ என்ற சரணகோஷம் தொடங்கி விடும். மஹிஷி என்ற அரக்கியை அழிக்க வந்த அவதாரம் ஐயப்ப அவதாரம். இவரை நாம் முன்னரே கண்ட ஐயனாரின் பிறப்பாக காட்டுவர். ஐயனாரின் அவதாரமாக பம்பையாற்றங்கரையில் தானே குழந்தையாகி கழுத்தில் மணியுடன் கிடந்தார் சுவாமி. அப்போது அங்கே வந்த பந்தளம் என்ற அப்பகுதியை ஆண்ட ராஜசேகர மன்னன் குழந்தையைக் கண்டு எடுத்துக் கொண்டு போய் தன் பிள்ளையில்லாக் குறை போக்க வந்த பிள்ளை என்று மகிழ்ந்து ‘மணிகண்டன்’ என்று நாமகரணம் செய்து ஆசையாய் வளர்த்தான்.

shasta_ayyappan_on_tigerதனது பன்னிரண்டாவது வயதில் தாயின் தலைவலி நீக்க மருந்தாக புலிப்பால் பெற.. அதன்பேரில் தன் அவதார ரஹஸ்யத்தை செயற்படுத்த காட்டிற்குச் சென்றார் ஐயப்பன். மஹிஷியை ஐயப்பன் காலால் உதைந்த போது அவள் அவரின் திருவடிகள் பட்டு புனிதையானாள். அழகிய பெண் வடிவம் எய்தினாள். தன்னை மன்னிக்குமாறு மன்றாடினாள். சாப விமோசனம் பெற்று மனைவியாக தன்னை ஏற்க வேண்டி நின்ற மஹிஷியை நோக்கி ‘இப்பிறவியில் எப்பெண்ணையும் சிந்தையாலும் தொடாத’ பிரம்மச்சர்ய விரதம் அனுசரிப்பதே தன் நோக்கு என்று குறிப்பிட்ட ஐயன் அவளுக்கும் பிரம்மச்சர்ய சக்தி பற்றிக் கூறினார். பின் அவளைத் தன் சகோதரியாக ஏற்று தான் இருப்பிடமாக கொள்ளவுள்ள சபரிமலையின் வலது பாரிசத்தில் ‘மஞ்சுமாதா’ என்ற பெயருடன் விளங்க அருளினார்.

பின் தன் காரியத்தை முடித்துக் கொண்டு தேவர்கள் பூஜிக்க புலிப்பால் பெற வந்த பெருமான் புலிவாஹனராக பந்தள ராஜசபைக்கு எழுந்தருளினார். சூழ்ச்சி செய்து ஐயனைக் காட்டுக்கு அனுப்பிய சிறியதாய் பதறிப்போய் தன் பையனான ஐயன் கால்களில் விழுந்து தன் பாவத்தை மன்னிக்க வேண்டினாள்.  அவளை மன்னித்த பெருமான் அனைவருக்கும் அருளாட்சி செய்து தன் அவதாரத்தை வெளிப்படுத்திய பின் வில்லில் ஒரு அம்பைப் பூட்டி ‘இது விழும் இடத்தில் எனக்கு கோயில் அமைக்குதி’ என்று தன் வளர்ப்புத் தந்தையான ராஜசேகரனுக்கு ஆணையிட்டு பரமனாக பரமபதமேகினான் ஐயன் ஐயப்பன்.

ஐயப்பன் காடு செல்லுகையில் ராஜசேகரன் தந்து கொண்டு போனது இருமுடி என்று அவன் அடியார்களும் இன்றும் சபரிமலைக்கு கொண்டு செல்கிறார்கள். ஒரு முடியில் உணவுப்பொருட்களும் மறுமுடியில் பூஜைப்பொருட்களும் என்று அந்த இருமுடி அமைகிறது. மஹிஷி உடல் வளராமல் சுவாமி கல்லிட்ட கல்லிடுங்குன்றில் அடியார்களும் கல்லிடுகிறார்கள். ஐயப்பனின் அம்பு(சரம்) விழுந்த சரங்குத்தி ஆலில் அடியார்கள் சரங்குத்துகிறார்கள். அப்புறமாகத் தான் புலன் ஐந்து, பொறி ஐந்து பிராணன் ஐந்து, மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று ஆக பதினெட்டையும் கடந்து பதினெட்டுப்படி ஏறி சுவாமி ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் சுவாமி ஐயப்பனைக் காண்கிறார்கள்.

shasta_kirata_murtiசபரி மலையிலே ஐயப்பனைக் காண வாருங்கள்… அவன் நாமத்தை எப்போதும் பாடுங்கள்… ஐயப்பனைக் காண வாருங்கள்.. என்று பாடி.. அவன் திருவடித்தாமரைகளில் வாழ்வின் ஆனந்தத்தைப் பெறலாம். ஐயனானவர் கேரளதேசத்தில் தான் வாழ்ந்த பதியில், குளத்துப்புழாவில் பாலயோகிநாதனாயும், ஆரியங்காவில் இல்லறக்கோலத்துடன் பூரணை புஷ்கலை துணைவனாயும், அச்சங்கோவிலில் வனப்பிரஸ்தரூபராயும், எருமேலியில் கிராதவடிவுடன் வேடனாயும், சபரிமலையில் சாஸ்தாவாகவும் காந்தமலையில் மோட்சப்பிரதாயகராயும் காட்சி தருவதாக அடியார்கள் போற்றி வணங்குவர்.

இன்றைக்கு சில தசாப்தங்களாக இவ்வழிபாடு மிகப்பிரபலம் பெற்று வருவதையும் கேரள முறைப்படி சபரிமலையில் தாந்திரீகர்கள் செய்வது போல திருக்கோயில்களை அமைத்து திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பல்வேறு ஊர்களிலும் பல்வேறு கோயில்கள் செய்து கோவிந்தன் மகனான ஐயப்பனை வழிபாடாற்றி வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.

ஐயப்ப வழிபாட்டில் உள்ள ஸம்ப்ரதாயங்களும் சில வினாக்களும்..

ஏழைபங்காளன், ஆபத்பாந்தகனான ஐயப்பனின் வழிபாட்டில் ஜாதியில்லை, சமயமில்லை, ஐயப்பனே வாவர் என்ற முஸ்லீம் நண்பரை உடையவர் என்று சொல்லுவார்கள். இதனால் சபரிமலைக்குச் செல்லும் அன்பர்கள் ஒவ்வொருவரும் வாவர் சுவாமி கோயில் என்று வாவர் மசூதிக்கும் சென்று பின்னரே ஐயப்பனைக் காணச் செல்கிறார்கள். பணக்காரன், ஏழை பேதமில்லை.. மாலை அணிந்து ஐயப்பனைக் காணச் செல்ல வேண்டும் என்றால் எல்லோரும் சுவாமிகள்… எல்லோரும் மஞ்சமாதாக்கள்… சிறுவர்கள் யாவரும் மணிகண்டன்கள்.. எங்கும் சமத்துவம் இது தான் ஐயப்ப வழிபாட்டின் விசித்திரம்.

அருள் உண்டு.. அச்சமில்லை.. எங்கு நோக்கினும் பஜனை..’ சாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷம். எல்லாமே சிறப்புத் தான்.. எனினும் சில விடயங்கள் தெளிவாக்கிக் கொள்வதும் அவசியம். ஐயப்ப வணக்க முறைகள் சில தசாப்த காலங்களுள்ளேயே ஒழுங்கமைக்கப்பெற்றிருப்பதாகவே கருதமுடிகின்றது. ஆகவே, சில விடயங்களில் சிற்சில மாற்றங்களும் தேவை என்று சிறியேன் கருதுகிறேன். என்னைப் பொறுத்த வரையில் நல்ல விஷயங்கள் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியனவே. ஆயினும் சில விடயங்கள் பற்றி சிறியேனுக்குச் சில சந்தேகங்கள் உண்டு.

(அ) கன்னிச்சாமிமார்கள் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் சிலர் கறுப்பு நிறத்தில் ஆடையணிகிறார்கள் .ஆனால் இஸ்லாமிய, கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலரைத் தவிர நமது இந்துதர்மத்தில் கறுப்புடை சாற்றி வழிபாடுகளில் ஈடுபடும் வழக்கம் இல்லை என்றே அறிகிறேன். திருமால் கார்மேக வண்ணனாய் இருந்தாலும் வைஷ்ணவர்கள் கறுப்பாடை சாற்றிக் கொள்வதில்லை. ஏன் ஐயப்பனடியார்கள் கறுப்பாடை அணிகிறார்கள்?. செம்பொருளான இறைவனைக் காட்ட செவ்வாடை சாற்றுவதோ.. மங்கலமான மஞ்சளாடை, காவியாடை சாற்றுவதோ வெள்ளாடை அணிவதோ ஏற்கத்தக்கது. இது விடயத்தில் மீள்பரிசீலனை செய்தால் என்ன என்பது எனது வேண்டுகோள்.

shasta_ayyappan_sabariஅதிலும் கேரள தேசத்தில் வெண்மையான ஆடைகளுக்கு மரியாதை அதிகம். அவர்கள் அதனையே விரும்பி அணிகிறார்கள் .பார்க்கவும் தூய்மையும் அழகும் பொலிகிறது. எனவே ஐயப்ப பக்தர்களும் அதனையே பின்பற்றலாமே? சுவாமி சந்நதியில் பூஜை பண்ணும் மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும் என்பது என் வினா.. சில அடியவர்கள் மோட்டார் வாகனப் பாவனைக்கு கறுப்பு நிற ஹெல்மெட் (தலைக்கவசம்) தான் இக்காலத்தில் அணிகிறார்கள். இப்படி எல்லாம் கறுப்பு மயமாக்கிக் கொள்வது விரதகாலத்திற்குப் பொருத்தமானதா? என்று தெரியவில்லை. சில அடியவர்கள் நீல வர்ண ஆடை அணிகிறார்கள் இதனை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடிகின்றதல்லவா?

(ஆ) இது போல, இஸ்லாமியப் பள்ளி வாசல்களுக்கு தொழுகைக்குப் பெண்கள் செல்ல இயலாது என்பது போல அமைந்திருக்கிற, பெண்ணடியார்களுக்கு ஐயப்பவழிபாட்டிலுள்ள சில தடைகளும் நீக்கப்பெறலாம் என்பதும் தாழ்மையான எனது கருத்து. இருந்தாலும் இது விடயத்தில் பெண்களே சிந்திக்க வேண்டும். ஒரு ஆடவனான சிறியேன் அறிவுக்குறைவுடன் இது பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறேன்.

(இ) ஐயப்பனடியார்களில் சிலர் கார்த்திகை, மார்கழி என்ற இருமாதங்களிலும் விரதம் அனுசரிக்கிறார்கள். இந்த மண்டலபூஜை என்ற விஷயம் பரம்பரையாக ஐயனார் பக்தர்களாக ஐயனாருக்கு ஆட்பட்டிருக்கிற அடியவர்கள் அறிந்திருக்கிறார்களில்லை. ஆக, ஐயனின் புதிய அவதாரத்தினை முதன்மைப்படுத்தியே இது பேணப்படுகிறதா? இது பற்றியும் தெளிவான செய்திகள் பேணப்படுவது சிறப்பல்லவா? மாலை அணிபவர்களுக்கு ஒவ்வொரு குருசாமியும் ஒவ்வொரு விதமாக கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஒரு ஒழுங்கமைப்பில்லாத நிலையையே ஏற்படுத்தும். எனவே இவற்றில் ஓர் சீரிய ஒழுங்கமைப்பை ஏற்படுத்திக் கொள்வது வழிபாட்டைச் செம்மைப்படுத்தும்.

(ஈ) இப்போதெல்லாம் புதிது புதிதாக சாஸ்தா ஆலயங்கள் உருவாகின்றன. அங்கே பூஜைகளில் சபரிமலை நடைமுறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். சபரிமலைக் கோயிலில் பின்பற்றப்பெறும் நடைமுறைகள் எவ்வாறானவை..? அவ்வழியில் பிரதிஷ்டை செய்யப்பெறும் ஆலயங்களுக்கு உள்ள கிரியாபத்ததிகள் வைதீக மரபிலா? ஆகம மரபிலா? அமையும் என்பதெல்லாம் சிந்திக்க வேண்டியனவே.. நம் தர்மம் நிலைபேறாகவும் சுதந்திரமாகவும் இருக்கிற நிலையில் இவற்றைத் தெளிவாக வெளிப்படுத்துவது எவ்வித சிக்கல்களையும் தராது என்பதும் இவற்றின் வழியே அடியவர்கள் தங்களைத் தயார் செய்து வழிபாட்டில் ஈடுபட வழிசெய்யும் என்பதும் எனது கருத்தாக உள்ளது.

(உ) இதே போலவே ஏகாதசி, ஸ்கந்தஷஷ்டி போன்ற விரதங்களையெல்லாம் அனுசரிக்கக் கூடிய அடியவர்களை இனங்காண்பது கடினம். ஐயப்ப விரத பக்தர்கள் கழுத்தில் ஏராளமான மாலைகளை அணிந்திருப்பதை கொண்டே அவர்களை சுலபமாக இனங்காண முடிகின்றது. சிற்சில இடங்களில் இவ்வாறு தங்களை மாவிரதாதிகளாகக் காட்டிக்கொள்ளும் பாங்கும் நகைப்பிற்குரியதாகி விடுவதைக் காண்கிற போது மனம் வேதனைப்படுகின்றது. பிறர் அறியாமல் விரதம் மேற்கொள்ளும் வகையில் இவ்விரதத்தை அனுசரிக்கிறவர்களையும் ஆற்றுப்படுத்தின் சிறப்பல்லவா? இன்றைய உலகம் செல்லும் போக்கு அப்படியிருக்கிறது என் செய்வது?

எனினும் உளவியல் ரீதியாக விரதாதிகள் தங்களை தனித்துவமாக தயார்ப்படுத்திக் கொள்வது கட்டாயம் அவசியமானது. அப்படிச் செய்கிற போது மனதில் புத்துணர்வும் விரதசங்கல்பமும் ஏற்படும் என்பது மறுக்க இயலாத உண்மை.

shasta_ayyanar(ஊ) இதே போலவே ஐயனார்- ஐயப்பன் என்னும் மூர்த்திகளிடையான உறவும் விளக்கப்பெற வேண்டும். இது தொடர்பாக அடியவர்கள் பலருக்கு அநேக சந்தேகங்கள் இருப்பதையும் காண்கிறோம். சாதாரணமாக அவதாரம் என்றால் அதாவது கிருஷ்ணாவதாரம், ஸ்ரீ ராமாவதாரம், போல பந்தள தேசத்தில் ராஜசேகரன் மகனாக எழுந்தருளியிருந்த ஐயப்பன் என்பதும் ஒரு அவதாரமாகவே கொள்ளலாமா? என்பதும் சிந்தனைக்குரியது. இவ்வாறு பந்தளத்தில் பகவான் பிறந்தது வரலாற்றுக் காலத்திற்கு உட்பட்டது என்றால் ஆண்டையும் ஆய்வு செய்து கணிப்பதும் வரலாற்றை உணர்வு பூர்வமாக மட்டுமன்றி ஆதாரபூர்வமாகவும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும்.

இப்படியெல்லாம் ஒரு இந்து இளைஞனாக சிறியேன் கேட்கிற, ஆராய்கிற விடயங்களை பெரியவர்கள் -ஐயப்ப அடியார்கள் தவறாகக் கருதிவிடக்கூடாது. எவரையும் எவ்வகையிலும் புண்படுத்தும் நோக்கு சிறிதும் இதில் இல்லை. ஐயப்பபக்தியின் பேரில் மிகவும் நம்பிக்கையுடனும் சீர் செய்யப்பெற்ற வணக்க முறைமையாக இது விளங்க வேண்டும் என்ற அக்கறையுடனுமே இவற்றை வினவினேன். குற்றமுண்டாகில் பொறுத்தருள்க.

எனினும் சபரிமலையிலுள்ள மகத்துவம் வாய்ந்த புனிதத்தன்மையையும் அங்கே திருவாபரணப்பெட்டி எடுத்து வரப்பெறும் போதும் மகரஜோதி ஏற்றும்போதும் உண்டாகிற அதியுச்ச பக்தி நிலையையும் ஏற்கத்தான் வேண்டும். ‘சுவாமி திந்தக்கத்தோம்….ஐயப்ப திந்தக்கத்தோம்…’என்று பாடி ஆடும் போதும் ஏற்படும் ஆனந்தம் உயர்வானதே.. அங்கே திருவாபரணப்பெட்டிகள் எடுத்து வரப்படும் போது கருடப்பட்சிகள் இரண்டு வட்டமிட்டு இறைசாந்நித்யத்தை வெளிப்படுத்துவதையும் மகரஜோதியின் எழில் மகத்துவமும் பேரின்பப் பெருநிலையான இறைவனின் பேராளுகை சபரிச்சந்நதியில் இருப்பதை எடுத்துக் காட்டும்.

எது எப்படியிருப்பினும் உண்மை அன்போடு உள்ளம் உருகி ஐயப்பப் பெருமான் திருவடிகளைப் போற்றுகிற அடியவர்கள் எல்லாப் பேற்றையும் பெறுவது உண்மை. ஆக, ஹரிஹசுதனாக எழுந்தருளி சைவவைஷ்ணவ சமரச மூர்த்தியாகக் காட்சி தரும் பெருமான் முன்றலில் நம்மிடையே பேதங்கள் இல்லை.. ஜாதிகள் இல்லை.. சமயபேதங்கள் இல்லை.. அளவற்ற கிரியைகள் இல்லை.. பக்தி என்பதில் சங்கமித்து சரணகோஷம் சொல்லுகிற போது நாம்…இன்பப் பெருவெளியில் சஞ்சரிப்பதை உணரலாம் என்பதில் மாற்றுக்கருத்துமில்லை….

தண்டாமரை முகமும் மலர்க்கண்களும் தன் கரத்தே
செண்டாயுதமும் தரித்து எமையாளும் சிவக்கொழுந்தைக்
கண்டேன் இரண்டு கரங்கூப்பினேன் வினைக் கட்டறுத்துக்
கொண்டேன் அழியாப் பெருவாழ்வு தான்வந்து கூடியதே

நாமும் சொல்லுவோம் –

ஸ்வாமியே…. சரணம் ஐயப்பா!

34 Replies to “ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு”

  1. ஐயனார் மற்றும் ஐயப்பன் பற்றிய பலவிதமான செய்திகளையும் ஒருங்கே கட்டுரையாக்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இங்கே கொடுக்கப்பெற்றிருக்கிற வினாக்கள் பற்றி இன்னும் இன்னும் நிறையவே சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

  2. எங்கள் ஊர் இராஜபளையத்தில் ஊரைவிட்டு 8 மைல்கள் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நீர் காத்த ஐயனார் கோவில் உள்ளது. மலையிலிருந்து வரும் காடாறுகளைக் கட்டுப்படுத்தி ஊரின் நீராதாரத்தைக் காப்பதால் அவர் நீர் காத்த ஐயன். பூர்ணா புஷ்கலா சமேத தர்மஸாஸ்தா ஸ்வரூபம். 17ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செய்வித்த போது கொடிமரத்துக்கு மரம் தேடி அவனது படைத் தளபதிகள் இருவர் இந்த வனத்துக்கு வந்து தக்க மரம் கண்டு வெட்டினர். சம்பந்தப்பட்ட குறுநில மன்னன் ஏதும் சொல்லவில்லை. ஆனால் வெட்டிய பின் அவர்களால் வனத்தினின்றும் வெளியேற முடியவில்லை.

    “என் அனுமதியின்றி என் வனத்திலிருந்து எப்படி மரம் வெட்டுவீர்கள்” என்று நீர் காத்த ஐயன் கேட்டுப் பரிகாரமாக அவர்கள் இருவரும் தனக்கு காவல்காரர்களாக இருக்கப் பணித்தார். மதுரைக்குச் சென்று மரத்தைச் சேர்ப்பித்துவிட்டு இருவரும் வனம் திரும்பினர். அவர்களும் இன்று சின்ன ஓட்டக்கார சுவாமி, பெரிய ஓட்டக்கார சுவாமி என்று கொண்டாடப் படுகின்றனர். ஆதிமுதல் வனத்தில் நீர் காத்த ஐயனுக்கு காவல் தெய்வமாயிருந்த வனலிங்கம், சப்த கன்னியர், எம தர்ம ராஜன், மேலும் பல வட்டார தேவதைகளுடன் நீர் காத்த ஐயன் அருள் பாலிக்கிறார்.

  3. திரு மயூரகிரி சர்மா அவர்களே
    பல விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரைக்கு மிக மிக நன்றி.
    அழகான நடை .
    கருப்பு உடை விஷயம் சற்றே வித்தியாசமாகத்தான் உள்ளது. நம் வழக்கத்தில் இல்லாதது. நீலம் சற்று ஏற்றுக்கொள்ள முடிகிறது .
    ஸ்கந்த புராணத்திலேயே அய்யனார் பற்றி குறிப்பு வருவது இது வரை தெரிந்திராத ஒன்று.

    வடக்கில் அய்யனார் வழிபாடு உள்ளதா?

    குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் சபரிமலை செல்ல முடியாததற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். 18 படிகளும் பிராணன சக்தி நிரம்பியவை என்றும் படித்தேன். விவரம் முழுக்க தெரியவில்லை. கேரளத்தில் ஆண்கள் செல்ல முடியாத கோவில்களும் உள்ளது.
    சென்னையில் சபரிமலை போலவே சிறு கோயில் ஒன்றில் கேரள வழிபாடு காண நேர்ந்தது .மிக வித்யாசமாக இருந்தது.தந்தரி தனக்குள் மூழ்கியவராய் தோன்றினார். நாங்கள் நிற்பதை கவனிக்கக்கூட இல்லை. மிக புதுமையான, விளக்க முடியாத சிலிர்ப்பை உண்டாக்கிய அனுபவம். தந்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் ஏதேனும் காரணங்கள் இருக்கலாம்.
    தெரியாத , புரியாத விஷயங்களில் புகுந்து குழப்ப கேரள நாத்திக அரசும் முனைந்து வருகிறது.
    எது, எப்படியோ, அவன் பெயர் பல்லாயிரக்கணக்கானவர்களை காந்தம் போல் இழுத்து இருக்கிறது.
    தொலைக்காட்சியில் பார்க்கும் போதே மகர ஜோதி நிகழ்ச்சி சிலிர்க்க வைக்கிறது.
    திரு அருண் பிரபு அவர்களே
    தகவலுக்கு மிக நன்றி. இப்படி ஊருக்கு ஊர் அவரே தலையிட்டால் தான் மரம் வெட்டும் , மண் வளம் அழிக்கும் கும்பல் திருந்தும் போலும்.
    நம் தெய்வங்கள் மற்றும் நம் வழிபாடு மண்ணோடு பின்னிப்பிணைந்தவை . நாம் அதை மறந்ததால் தான் நமக்கு இத்தனை சிரமங்கள்.
    சரவணன்

  4. பிரம்மஸ்ரீ சர்மா அவர்களுக்கு,சாத்தன்/ஐயன்/ஐயப்பன் குறித்த செய்திகள் அனைத்தும் திரட்டிக் கட்டுரையாகத் தந்துள்ளீர்கள். மிகச் சிறப்பான பல செய்திகள் கட்டுரையில் அறியக் கிடைக்கின்றன. .மாசாத்தனைக் காவல்தெய்வமென்றுதான் இதுவரை நினைத்து வந்தேன். வேதாகமங்களில் சாத்தன் பற்றிய செய்தி அவர் வைதிகக் கடவுள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது
    சங்க காலத்திலேயே சாத்தன் வழிபாடு இருந்துளது. சாத்தன் எனும் பெயருடைய புலவர்கள் பலரிருந்துள்ளனர். சிலப்பதிகாரம் மாசாத்தன் கோயிலைப் புறம்பணையான் கோட்டம் என்கின்றது.சிலப்பதிகாரம் கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் எனும் ஒரு சாத்தன் பேசப்படுகின்றார். பாசண்டம் என்பது தொண்ணூற்றறுவகை சமய சாத்திரக் கோவை என்றும் இவற்றில் வல்லவன் இச்சாத்தன் என்றும் அதனால் மகாசாத்தன் எனப்படுவான் என்றும் கூறப்படுகின்றது. மாலதி என்னும் பெண்ணின் துயர் துடைக்க மாசாத்தன் குழவியாக அவதரித்து, அந்தணச் சிறுவனாக வளர்ந்து உலகியல் மரபுப்படி தேவந்தி என்னும் பெண்ணை மணந்து அவளுக்கு மட்டும் தன் ‘மூவா இளநலம் காட்டி’ என் கோவிலுக்கு நாள்தோறும் வா என்றுகூறித் தீர்த்த யாத்திரை செல்வது போல நீங்கியது முதலிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றன. இச்செய்தி ஐயப்பன் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒட்டி உறவாடுதலைக் காட்டுகின்றது.. திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில் வேளாளர்களுக்கும் பிராமணர்களுக்கும் பல்வேறு பெயர்களுடைய சாத்தா குலதெய்வமாக அருள்பாலிக்க்கின்றார்.

    சபரிமலை வனாந்தரம். ஒருகாலத்தில்யானைகளின் நடமாட்டம் அங்கிருந்திருக்கும். யானைகளுக்கு வெள்ளை நிறம் சினமூட்டும். அதனால் சபரிமலைக்குச் செல்வோர் கறுப்பு அல்லது நீல் ஆடை உடுத்தினர் போலும்.

  5. இங்கு தங்கள் பின்னூட்டங்களை வழங்கியிருக்கிற அனைவருக்கும் நன்றிகள்..

    தங்களின் மறுமொiழிகள் ஐயப்ப வழிபாடு அல்லது சாஸ்தா வழிபாடு எவ்வளவு தூரம் தமிழ்மக்களோடு பின்னிப் பிணைந்து.. இறுக்கமான உறவுடையதாக இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது.

    முனைவர் அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்… தங்களின் கருத்தின் ஊடாக சங்ககாலம் தொட்டு தமிழகத்தில் நிலவி வருகிற சாத்தா வணக்கம் பற்றிய எண்ணக்கருவைப் பெறக் கூடியதாக உள்ளது. அது, போலவே சபரிமலை வனாந்தரம் ஆதலில் பாதுகாப்பின் பொருட்டு கறுப்பாடை அணிந்தார்கள் போலும் என்று தாங்கள் கூறுவதும் புதியகருத்து.

    தங்கள் தங்கள் நோக்கில் சிறப்பான கருத்துக்களை வழங்கி இக்கட்டுரைக்கு மேன்மேலும் விரிவைத் தந்திருக்கிற செந்தூர், அருண்பிரபு,சரவணன், முனைவர் யாவருக்கும் மீண்டும் நன்றிகள்….

  6. சு பாலச்சந்திரன்

    கந்தபுராணத்தில் ஐயனார் பற்றிய விவரங்கள் இருப்பது ஒன்றும் நமக்கு ஆச்சரியத்தை தரவில்லை. நமக்கு தெரியாத இது போன்ற தகவல்களை திரட்டிதருவதற்கு , இறை அருளால் , திரு மயூரகிரி ஷர்மா போன்ற அன்பர்கள் தொண்டு நமக்கு கிடைப்பதே பெரிய பாக்கியமாகும். நமக்கு இறை அருள் மேலும் மேலும் தொடரட்டும்.

  7. நல்ல கட்டுரை ஐயா. வாபர் என்னும் முஸ்லீம் ஐயப்பனின் நண்பராக மாறியதாகச் சொல்லி வாபர் வழிபாடு எரிமேலியில் நடந்து வருகிறது. இஸ்லாம் என்ற மதம் உருவாகி கேரளத்துக்குள் அனேகமாக கடந்த 1000 ஆண்டுகளுக்குள்ளேதான் வந்திருக்க முடியும் அப்படியானால் ஐயப்பன் வரலாறு சமீப காலத்தில் வாழ்ந்து அவதாரப் புருஷராக உணரப் பட்ட ஒரு இளவரசரின் வரலாறாகவும் இருக்க முடியுமா அல்லது இந்த வாபர் கதை மத ஒற்றுமையை வளர்ப்பதற்காக பிற்காலத்தில் எவராலாவது சேர்க்கப் பட்டிருக்கக் கூடுமா? கடவுள் சம்பந்தப் பட்ட தலப் புராணங்களில் நாம் கல்வெட்டு போன்ற ஆதாரங்களை எதிர்பார்க்கக் கூடாதுதான் இருந்தாலும் வாபர் போன்ற வழிபாடுகளை நாம் எப்படி எடுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை

    அன்புடன்
    ச.திருமலை

  8. ஸ்ரீ சர்மாஜி,
    விரதம் அனுசரித்து வருகிறோம் என்பதைத் தெரிவிப்பதன் மூலம் பிறரால் தவறுதலாக ஊறு ஏதும் நேர்வதைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கையாகவும், தன்க்கே கூடத் தடுமாற்றம் ஏதும் நேரிடுவதைத் தவிர்க்கும் நினைவூட்ட லாகவும் வழக்கமான வெண்ணிற ஆடை தவிர்க்கப்படுகிறது. மேலும், மற்றவர்களிடமிருந்து தம்மை வித்தியாசப்படுத்திக் காட்ட கறுப்பு மட்டுமின்றி, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களிலும் ஆடை அணிகின்றனர்.
    முகமதியரின் ஆகிரமிப்பு, அழிவுகளிலிருந்து காக்க, இங்கிருப்பதும் உங்களுக்கு ஏற்புடையதுதான் என்று காட்டும் வழக்கம் கடந்த காலத்தில் பல பவித்ரமான இடங்களில் நடந்துள்ளது. இந்த வாவர் விஷயமும் அப்படி இடைக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாக இருக்கலாம். அங்குள்ள வாவர் தர்கா நிர்வாகிகள் சபரி மலையை ஆகிரமிப்புச் செய்யும் உத்தேசம் கொண்டிருந்ததால் அதனைத் தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட சமர முயற்சி எனக் கொள்ளலாம். எனவே இனி ஐயப்பமார் அனாவசியமான வாவர் தர்கா வழிபாட்டைத் தவிர்த்து விடலாம்.
    திருவேற்காடு ஐயப்பசாமி என்ற சித்தர் என் மீது வாஞ்சை மிக்கவர். என்னைத் தம்முடன் அழைத்துச் செல்வதில் விருப்பமுள்ளவர். நிறைய கும்பாபிஷேகங்கள் செய்துவைத்தவர். ஆண்டு தோறும் பல சந்தர்ப்பங்களில் சபரி மலை செல்பவர், தம்முடன் பலரையும் அழைத்துக்கொண்டு.
    ஒருமுறை நான் அவரிடம் என்னையும் சபரி மலைக்கு அழைத்துச் செல்கிறீர்களா என்று கேட்டபோது, உனக்கு அது தேவையில்லை, உனக்கு எதற்கு அதெல்லாம் என்று கூறிவிட்டார்! ஏன் அப்படிச் சொன்னார் என்று இன்றளவும் அறியேன். அவரிடம் காரணம் கேட்பது முறையல்ல என்பதால் அப்போது நானும் வாளாவிருந்துவிட்டேன். ஒருவேளை ஐயப்பமார் வாவர் தர்காவுக்குச் செல்வதை நான் பெரிய பிரச்சினையாக்கிவிடுவேன் என்பதால்தானோ என்னவோ, எனக்கு சபரிமலை யாத்திரை தேவையில்லை என்றுவிட்டார், போலும்!
    -மலர்மன்னன்

  9. அப்பர் தேவாரத்தில் சிவனை ” சாத்தனை மகனாய் வைத்தார் என்று பாடியுள்ளார்.

    1 விழுப்புரம் அருகே அகரம் என்ற ஊரில் உள்ள அபிராமேச்வரத்தில் 11 கல்வெட்டுகள் ராஜராஜ சோழன காலத்தது – சாஸ்தா பரமசுவாமி என்று அந்த ஊர் சாஸ்தாவைக் குறிப்பிடுகின்றன

    2 திருப்பட்டுர் சாஸ்தா ராஜேந்திரன் காலத்தவர்
    3 . அழகர் கோவில் அருகில் உள்ள ஒரு கிராமத்துப் பாண்டியர் கல்வெட்டு சாஸ்தாவை புலிவாகன தேவர் என்று குறிக்கிறது
    4 கன்னியாகுமரி கல்வெட்டு வேதிய சாத்தான் என்று குறிப்பிடுகிறது.

  10. இங்கே மறுமொழியிட்டிருக்கிற அன்புள்ளங்களுக்கு நன்றிகள்…

    பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பெறாமைக்கு அப்பிரதேசம் பெருங்காடாக இருந்தமையும் நாடு அந்நியமதத்தவர்களின் கட்டுப்பாட்டில் (பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையில்) இருந்ததும் கூட காரணமாகச் சொல்லப்பெறுகிறது.

    இன்னொன்றும் இங்கே சொல்ல விரும்புகிறேன். சில ஐயப்ப பக்தர்கள் இந்த விரதகாலத்தில் பிதிர் காரியம் செய்யக்கூடாது என்று சொல்லி தாங்கள் வழக்கமாகச் செய்கிற பிதிர்தர்ப்பணம், சிரார்த்தம் (திவசம்) ஆகியவற்றையும் விட்டுவிடுகிறார்கள். இது சாஸ்திர விரோதமில்லையா? பிதிர்கடனை செய்யாமல் விடுவதுச சரியாகுமா? இதும் எனது பல்வேறு சந்தேகங்களுள் ஒன்று. அன்பர்கள் எவருக்கேனும் இதற்கு சமாதானம் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

    ஐயப்பனே தன் சிற்றன்னை பணிக்காய் புலிப்பால் தேடிக் காட்டிற்குப் போன உத்தமனாச்சே. அப்படியான பகவானின் விரதத்தை சொல்லி தத்தம் தாய், தந்தையர் கடனை விட்டு விடுவது சரியல்லவே..?

  11. ஐயனார் உலகில் பல்வேறு அவதாரங்களை எடுத்தார் என்று கூறுகின்றனர். அவற்றில் எட்டு முக்கியமானவை. அவற்றில் முதன்மையானதும் தற்போது சபரிமலைச் சாஸ்தாவாக வழிபடப்பெறுபவரும் தர்மசாஸ்தா ஆவார். இது சரித்திரபூர்வமானது என்பர்.

    பாண்டிய அரசு சிதைந்த பின்னர் பொ.பி 1081ல் மதுரையை விட்டு விட்டு சில காலம் வள்ளியூரிலும் தென்காசியிலும் ஆட்சி செய்தனர். அந்த தென்காசி பாண்டியர் வம்சத்தில் வந்த மன்னர்கள் பிற்காலத்தில் கேரளத்துப் பந்தளத்தில் ஆட்சியை நிறுவினர். அங்கே தான் ஐயப்பன் தர்மசாஸ்தாவாக அவதரிழத்திருக்கிறான். ஆக, ஐயப்பனின் காலம் ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் ஆதிசங்கரார், இராமானுஜர் ஆதிய ஆச்சார்யார்கள் காலத்திற்கும் பிற்பட்டது என கருதக் கூடியதாக உள்ளது.

    ஆனால் இந்த வழிபாட்டிற்கு முன்னோடியாக இன்றைய சபரிமலையில் முன்னரே ஐயனாருக்குக் கோயில் இருந்தது. என்று சொல்கிறார்கள். முக்கியமாக இன்றும் கோயிலில் மிகச் சிறப்பாகப் பூஜிக்கப்பெறும் பதினெட்டுப்படிகள் பரசுராமரால் ஸ்தாபிக்கப்பெற்றவையே என்கிறார்கள்.

    மணிகண்டனின் வரலாற்றில் இராமாயணத்தின் சாயலையும் காண்கிறோம். இது இவ்வாறாகிலும் சபரிமலை வழிபாட்டில் இஸ்லாமிய சமயத்தின் தாக்கங்கள் சில உள்ளனவா? என்றும் சில சமயங்களில் சிந்தித்துண்டு. இவை பற்றி மேன்மேலும் சிந்திக்க வேண்டும்.

    எனினும் நானும் ஐயப்ப பஜனைகள் பலவற்றில் இந்த சிக்கல்களை எல்லாம் சிந்திக்காமல், பேசாமல் இன்று வரை பங்கேற்று வருகிறேன். பக்திபூர்வமாக மிக சிறப்பாக உள்ளது. உண்மையில் ஐயப்பனை உருகி வழிபடுபவர்கள் எல்லா வளங்களும் பெறுகிறார்கள். எல்லா நலங்களும் பெறுகிறார்கள்.

    திரு. மணிமன்னன் அவர்களுக்கு,

    தாங்கள் குறிப்பிடுவது போல பாவர் சமரசத்தைக் காட்ட இணைக்கப்பெற்றிருக்கலாம் என்ற கருத்தை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஏனெனில் ஐயப்பனைப் போலவே பாவரும் சரித்திரபூர்வமானவராக இருக்க மாட்டாரா? அது தவிர பிற மதங்களிலும் மதங்களைக் கடந்த சமரசஉள்ளமும், பரந்த எண்ணமும், உண்மையான இறை அபிமானமும், ஆன்மீகத்தேடலும் உள்ளவர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்பது உண்மையே. அவ்வகை ஒருவராக பாவரையும் கருதலாமே?

    இற்றைக்கு சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையாகப் பேசப்பெறும் ஐயப்ப வரலாற்றில் உண்மைகள் நிறையவே இருக்கலாம் என்று நம்புகிறேன். ஐயப்பப் பெருமான் அவ்வுண்மைகள் வெளிவர அருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.

  12. நல்ல கட்டுரை… செம்மையான மறுமொழிகள்… சிறப்பாகப் பகுத்தறிவுபூர்வமான நடை… கட்டுரையாசிரியரின் தெளிவு மிக்க தமிழ் நடையழகுக்கு நன்றிகள்..

    ஆனால் தற்போதெல்லாம் நம்ம நாட்டில் ஐயப்ப வணக்கத்தில் மாற்றங்களும் புரட்சிகளும் செய்ய வேண்டும் என்று யார் சொல்கிறார்கள்? என்று பாருங்களேன்..

    ஜோதிஷர் ஒருத்தர் கேரளாவில் ஏதோ அறிக்கை விட்டார். பிறகு அங்க ஒரு நடிகை ஏதோ ஒரு செய்தி வெளியிட்டார். பிறகு, தற்போது பார்த்தீங்கண்ணா…

    எங்கட கனவுக்கன்னி கவாச்சி காட்டி கதிகலங்கச் செய்யிறவங்களும் தானும் சபரி மலை போப்போறாங்களாம்.. தப்பில்லை. யார் சொன்னாலும் அதைப் பகுத்தறிவு பூர்வமாயச் சொன்னா ஏற்க வேண்டியது தான்.. ஆனா.. இவங்கள எல்லாம் சபரிமலைக்கு விட்டா.. என்ன ஆகும? ஆடைக்குறைப்புச் செய்து ஆட்டம் எல்லோ போடுவாங்க?

  13. ஐயன்- ஐயனார்- ஐயப்பன்- சாஸ்தா/சாஸ்தா என்று தலைப்பிட்டிருக்கலாம்… இங்கே சாத்தா பற்றியும் அதிகம் பேசப்படுகிறதே..?

  14. //ஐயப்பனைப் போலவே பாவரும் சரித்திரபூர்வமானவராக இருக்க மாட்டாரா?- ஸ்ரீ மயூரகிரி சர்மா//
    வாவரும் ஐயப்பனைப் போலவே சரித்திரப்பூர்வமானவாராக இருந்தாலும் அவர் எந்த அளவுக்கு தெய்வத்துள் வைக்கப்படும் ஐயப்பனுக்கு இணை யானவராக இருந்தார் என்று தெரிய வேண்டும். ஏனெனில் வாவரையும் வழிபடுகிற சம்பிரதாயம் ஐயப்பமாரால் அனுசரிக்கப்ப்டுவதற்கு ஒரு நியாயம் வேண்டும் அல்லவா? மத நல்லிணக்கம், சரவ சமய சமபாவம் என்றெல்லாம் ஒருதலைப்பட்சமாக ஹிந்துக்கள் மட்டுமே அனுசரித்து, இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தங்கள் உரிமைகளையும், உடைமைகளையும் தமது சொந்த பூமியிலேயே விட்டுகொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
    வடக்கேயும் புரியிலும் சில ஹிந்து ஆலயங்களில் காவி நிறக் கொடியில் பிறையும் காணப்படுகிறது. இதற்கு என்ன அவசியம்?
    காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் அத்தி மரத்தாலான பெருமாள் பிரதிமை வழிபாட்டில் இருந்தது. முகமதியர் ஆக்கிரமிப்பின்போது அதன் புனிதத்தைக் காப்பதற்காகக் கிணற்றில் இட்டுவிட்டனர். இன்று நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை கிணற்றிலிருந்து பிரதிமையை வெளியே எடுத்து, அத்தி வரதா என்று கன்னத்தில்போட்டுக்கொண்டுவிட்டு மறுபடியும் கிணற்றுக்ககுள் போட்டுவிடும் சம்பிரதாயம் ஒரு திருவிழாவாகவே அனுசரிக்கப்படுகிறது. இந்த ஹிந்து மனப்போக்கின் பிரகாரம் வாவர் சமாசாரமும் இப்படியொரு நிர்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட வழக்கமா என்று யோசிக்க வேண்டும். இதை நான் ஒருமுறை திருவேற்காடு ஐயப்பசாமியிடம் சொன்னபோது அவர் அட்டகாசமாகச் சிரித்து, இருக்கும் இருக்கும் எனத் தலையாட்டி, ஆனால் எப்படி இட்டலி சுட வேண்டும் என்று பேசச் சொன்னால் அதில் கூட உன்னுடைய கொள்கையை நுழைத்து விடுகிறவனாயிற்றே நீ என்று .சொல்லிக் கூடியிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தார்!
    -மலர்மன்னன்

  15. //ஆனால் எப்படி இட்டலி சுட வேண்டும் என்று பேசச் சொன்னால் அதில் கூட உன்னுடைய கொள்கையை நுழைத்து விடுகிறவனாயிற்றே நீ என்று .சொல்லிக் கூடியிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தார்!- மலர்மன்னன்//

    அதன்பின் நான் நிஜமாகவே இட்டலி சுடுவது எப்படி என்று அவர்முன் பேசி பரிசுத்த ஆவியில் அது வேகாது என்றும், நமக்கு சம்பந்தமில்லாத கலாசாரம், சம்பிரதாயம், பெயர்கள் ஆகியவற்றை நாம் ஏன் கட்டிக்கொண்டு அழவேண்டும், நமது சுயமான ஆரோக்கியப் பலகாரமான இட்டலியை நமது இட்டலிப்பானையிலிருந்து கிளம்பும் இயற்கையான ஆவியில் அழகாக வேகவைத்து உண்போம் என்றெல்லாம் பேசி ஐயப்பசாமியையும் கூடியிருந்தவர்களையும் சிரிக்க வைத்தேன். ஐயப்பசாமியின் சிரிப்பு மிகவும் பிரசித்தமானது. வானமே இடிந்து விழுவதுபோல் இடிஇடியென்று சிரிப்பார். அன்று என் பேச்சைக்கேட்டு அவர் சிரித்த சிரிப்பு இப்போதும் என் செவிகளில் மோதுகிறது!
    -மலர்மன்னன்

  16. மலர்மன்னன் அவர்களே,

    இவ்விடத்தில் உங்களின் பதிவுக்கு மிக்க நன்றியறிதலைத் தெரிவிக்கிறேன். அது என்ன தங்களுக்கு நன்றாகச் சமையல் கலை தெரிந்திருக்கிறதே? அதிலும் இட்டலி சுட்டுத் தந்ததை நினைக்கிற போதே அடக்க இயலாமல் சிரிப்பு வருகிறது. பலருக்கும் உங்கள் மறுமொழியைக் காட்டிக் காட்டிச் சிரிக்கிறேன். தங்கள் சிந்தனையும் சிந்திக்க வெண்டியது தான்.

  17. சர்மாஜி,
    உண்மையிலேயே நான் மிகவும் நன்றாகச் சமைப்பேன். தென்னாட்டு, வடநாட்டு சமையல் வகைகள் இரண்டுமே சமைத்துப் போட்டு மற்றவர்கள் உண்டு ரசிப்பதைக் கண்டு மகிழ்வேன். ஸந்நியாச ஆசிரமத்தை மேற்கொண்டுவிட்டேன் என்றாலும் என் மகள் வீட்டுக்கு எப்போதேனும் செல்லும்போதெல்லாம் இரவு உணவுக்கு வட நாட்டு முறையில் கூட்டு வகைகளும் ஸலாட் வகைகளும் செய்து வைப்பேன். என் மாப்பிள்ளை அப்பா எப்படிச் செய்தார் என்று கேட்டுத் தெரிந்துகொள் என்று என் மகளிடம் சொல்வது வழக்கம். சில தொலைக் காட்சி அலைவரிசைகள் சமையல் கலை போட்டி நடத்துகின்றனவாம். அதில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் என் மாப்பிள்ளை வற்புறுத்துவார்!
    இந்த இட்டலி சுடும் சமாசாரத்தில் இன்னும் சிரிக்க இடமுள்ளது. அரிசியை பரமாத்மாவுக்கும் உளுந்தை ஜீவாத்மாவுக்கும், ஏதேனும் கல் கடித்தால் அதை மாற்றுச் சமயத்தினரின் மத மாற்ற முயற்சிகளுக்கும் நான் ஒப்பிட்டுப் பேசியபோது உட்காந்திருந்தவர்கள் அனைவரும் தரையில் உருண்டு சிரித்தார்கள்!
    அன்புடன்,
    மலர்மன்னன்

  18. //பாண்டிய அரசு சிதைந்த பின்னர் பொ.பி 1081ல் மதுரையை விட்டு விட்டு சில காலம் வள்ளியூரிலும் தென்காசியிலும் ஆட்சி செய்தனர். அந்த தென்காசி பாண்டியர் வம்சத்தில் வந்த மன்னர்கள் பிற்காலத்தில் கேரளத்துப் பந்தளத்தில் ஆட்சியை நிறுவினர். அங்கே தான் ஐயப்பன் தர்மசாஸ்தாவாக அவதரிழத்திருக்கிறான். ஆக, ஐயப்பனின் காலம் ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் ஆதிசங்கரர், இராமானுஜர் ஆதிய ஆச்சார்யார்கள் காலத்திற்கும் பிற்பட்டது என கருதக் கூடியதாக உள்ளது//
    …. Good research… Please con…

  19. கட்டுரை ஆசிரியர் திரு.ஷர்மா அவர்களுக்கு,
    இத்தனை ஆகம நூல்கள் உண்டு என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனால், வெறும் இரண்டு முறை சபரிமலைக்கு சென்று வழிபட்டு அந்த பிரபுவால் வாழ்வில் முன்னேறிய ஒரு எளிய பக்தன் என்ற உரிமையில் எனக்குத் தெரிந்த சிலவற்றைக் பகிர்ந்துகொள்கிறேன்:-

    1. கருப்பு நிறம் அமங்கலமானது என்று கூறமுடியாது. மகாவிஷ்ணுவும் அவரது பிரபலமான அவதாரங்களான இராமன், கண்ணன், வேதவியாசர் அனைவரும் கருமையான மேனியை உடையவர்கள். மேலும், மகாபாரதத்தில் புகழ்மிக்க கதாபாத்திரங்களான அர்ஜுனன் மற்றும் திரௌபதி கருநிறத்தவர்கள். அய்யப்ப பக்தர்கள் கருநிற ஆடைகள் அணிவதன் காரணம் கருப்பு ஆடை சனீஸ்வரருக்கு உகந்தது. அய்யப்ப பக்தனுக்கு சனீஸ்வரரின் தாக்கம் குறைவாக இருக்கவேண்டும் என்பதற்காக.

    2. சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுள்ள பெண்களை அனுமதிக்காததின் காரணம் அவர்களால் 41 நாட்கள் விரதத்தை அனுசரிக்க முடியாது என்பதற்காக. எனினும், மாலை அணிந்து, விரதம் அனுசரிக்காமல் இருமுடி கட்டாமல் இருப்பவர்களைக் கூட பின்வழியாக, அதாவது பதினெட்டுப் படிகள் ஏறாமல் சென்று தரிசிக்க அனுமதி உண்டு. இதுபோல அவர்களுக்கும் அனுமதி உண்டு. சிறுமிகளையும் மூதாட்டிகளையும் எவரும் தடுப்பதில்லை.

    3. ஐயப்பசுவாமியின் வாழ்கை நிகழ்சிகள் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் நடந்ததாக எங்கோ படித்த நினைவு உண்டு. ஏனெனில், அவரை வளர்த்த இராஜா இராஜசேகர பாண்டியன் அந்த காலகட்டத்தில் வாழ்ததர்க்கு ஆதாரங்கள் பந்தளம் நூலகத்தில் உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன்.

    தொடரட்டும் உங்கள் பனி.. வாழ்த்துக்கள், வணக்கங்கள்!

    நன்றி,
    பாலாஜி.

  20. தற்செயலாக இன்று இட்லி சாப்பிட்டபின் பின்னூட்டங்களை ப்படித்தேன் .ரசித்து சிரித்தேன். இனி எப்போது இட்லியைப்பார்தாலும் இதன் ஞாபகம் வரும்! .
    மலைக்கு பெண்கள் செல்வது பற்றி-முதிய வயதில் என் குடும்பத்து பெண்மணிகள் இருவர் அங்கு விரதம் இருந்து சென்றார்கள்.
    அவர்களை வாட்டி வந்த சிறு உடல் உபாதைகள் தாமாகவே தீர்ந்தது என்றார்கள்-அவர்கள் திட பக்தியின் பரிசு இது என்று தோன்றியது-அங்கிருப்பவன் ஒரு பெரும் காந்தக்கல் -தானாகவே வலிய சிலரை ஆட்கொள்கிறான் .
    ஆனால் சபரிமலையை நாத்திகர்கள் விடுவதாக இல்லை-அங்கே அமர்ந்திருப்பவனோ லேசுப்பட்டவன் அல்ல. அவர்களுக்கு நிச்சயம் புரிய வைப்பான். இதில் கொடுத்து வைத்த நாத்திகர்கள் பக்தர்களாகவும் மாறலாம் .
    யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்-1950 யில் மூலவர் நம் வழக்கப்படி கருங்கல்லால் ஆனவராய் இருந்தாராம். பின் பஞ்சலோகத்தில் இப்போதுள்ள மூர்த்தி ஸ்தாபிக்கப்பட்டது என்றும் எங்கோ படித்தேன். மூலவர் ஏன் கல்லில் அமையவில்லை என்று யோசித்தது உண்டு. இவ்விவரம் உண்மையா?
    அன்புடன்
    சரவணன்

  21. அய்யா சர்மா அவர்களே
    எனக்கு பல சந்தேகங்கள்.
    1 ) அயப்பனுக்கு கலியுகவரதன் என்ற பெயர் உண்டு. மகிசியை (மகிசாசுரனின் தங்கை)கொல்ல அவதாரம் எடுக்கப்பட்டதே மணிகண்ட அவதாரம். (மகிசாசுரனை கொன்ற ஆதிபராசக்தியின் காலம் என்ன) அப்படியெனில் ஐயப்பன் கலியுக தொடக்கத்தில் பிறந்திருக்க வேண்டும். ஏனெனில் இப்போது கலியுகம் 5112 ஆம் வருடம் நடந்துகொண்டு இருக்கிறது.

    2 ) தாங்கள் ஐயப்பன் வாபர் என்ற இஸ்லாமியனின் நண்பன் என்று மக்கள் நம்பிக்கொண்டிருப்பதாக சொல்கிறீர்கள்.(முஸ்லிம்கள் காலத்தில் கப்பலே கிடையாது. ஆனால் வாபர் கப்பல் வழியாக வந்ததாக அல்லவா இன்னும் தமிழ் திரை உலகமும் மக்களை ஏமாற்றுபவர்களும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.) இஸ்லாம் இந்தியாவில் வடக்கிலிருந்து கைபர் போலன் கனவை வழியாக கொள்ளையடிக்க தொடங்கி 800 ஆண்டுகள் ஆகிறது. அதுவும் தென் பகுதிகளில் ஊடுருவி 400 ஆண்டுகள்தான் ஆகியிருக்கலாம். ஏனெனில் அவுரங்கசீப்பின் காலத்தில் முஸ்லிம்களின் பேரரசை சிவாஜி முறியடித்து விட்டார்.இது நடந்தது வடக்கில். அதன் பிறகு திப்பு சுல்தான் போன்றோர் தென் பகுதிகளில் குடியேறி ஹிந்து கலாசாரத்தை அழித்தார்கள். அதன்பிறகே வெள்ளைக்காரன் நம்முடைய கலாசாரத்தை கெடுத்தான். இவை எல்லாம் பார்க்கும்போது இஸ்லாமிய பாபர் என்பது பொய். அப்படியானால் அந்த வாபரோ பாபரோ அவன் குறிப்பில் எழுதியிருக்க வேண்டுமல்லவா. எல்லோரும் ஐயப்பனை வழிபட்டிருக்க வேண்டுமல்லவா. இவர்கள் மக்களை திசைதிருப்ப ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த இஸ்லாமிய வாபர். உண்மை வாவர் சாமியை பற்றி இப்போது காண்போம்.

    வாபர் சுவாமி: இவர் ஐயப்பனின் தோழர். மகிசியை அழிக்க ஐயப்பன் புறப்படும்போது அவருக்கு துணையாக இருக்கும் பொருட்டு சிவனால் துனையனுப்பபட்ட சிவனின் பூதகணங்களில் ஒருவர்.(எவ்வாறு முருகன் சூரனை அழிக்க வீரபகுவை துணைக்கு சிவன் அனுப்பினாரோ அதுபோல). மகிசியின் உருவம் எருமையைபோல் இருக்கும். அவளை கொன்ற இடம் தான் எருமைகொல்லி (எருமேலி என மருவியுள்ளது-அழுதா நதியின் அருகில்)
    மகிசியை வதைத்த சந்தோசத்தை கொண்டாடுவதே பேட்டை துள்ளல். (மகிசியை வதைக்க வாபரன் மற்றும் அவர் சகாக்கள் அப்போது பூண்டுருந்த கோலம்) இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது. அய்யப்பனுக்கு பந்தள மகாராஜா கோவில் கட்டுமுன்பு ஐயப்பனின் வேண்டுகோளுக்கு இணங்க “தன்னுடைய நண்பன் வாபரனுக்கு எருமேலியில் ஒரு கோவில் அமையுங்கள்” “என்னை நாடி வரும் பக்தர்கள் முதலில் வபரனை வழிபட்டு கொண்டு என்னை பார்க்க வருவார்கள். avarkalukku வாபர்(வாபரன்) valithunaiyaaka iruppan” என்று ஐயப்பன் sonnathin peril anku vaparukku koil kaddappaddathu. ikkoil masoothikku ethiril இருக்கும் பேட்டை sastha koilin vasalukku idappuram amainthullathu. valappuram kaduttha sami koil ullathu.(இப்போது வாபர் saami silaiyai kerala arasu thirudi viddathu). irandu varudankalaaka இன்னும் amaikkappadavillai.

    aakave yaarum masoothikku sellavendaam. வாபர் saami koilukku(vasalin idappakkam)sentru வாபர் arulvendi ஐயப்பனை tharisikka selvom.

    saamiye saranam ayappaa.

  22. வணக்கம்,
    கட்டுரை ஆசிரியர் கீழ் கானும் கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என ஒரே வார்த்தையில் பதில் தரவும்.
    ஐயனாரும், ஐயப்பனும் ஒரே தெய்வமா?

  23. // வெங்கடேச சிவம்
    20 February 2011 at 11:44 pm
    வணக்கம்,
    கட்டுரை ஆசிரியர் கீழ் கானும் கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என ஒரே வார்த்தையில் பதில் தரவும்.
    ஐயனாரும், ஐயப்பனும் ஒரே தெய்வமா? //

    ஆம்.

    தத்துவார்த்த ரீதியாக, சிவனும் விஷ்ணுவும் ஒரே தெய்வமா என்று கேட்டால் கூட, இந்த பதில் தான் வந்திருக்கும்.

    சமய, வரலாற்று, பண்பாட்டு, கலாசார ரீதியாகவும் – ஆம். சாஸ்தா/ஐயனார் வழிபாடு பல பரிமாணங்கள் கொண்டது. அதில் ஒன்று தான் ஐயப்பன். சாஸ்தாவின் பல ரூபங்களைப் பற்றி இந்தக் கட்டுரையாசிரியரே விளக்கியிருக்கிறாரே..

    எட்டவதாரங்கள் உண்டு எட்டு ஸ்வரூபங்கள் உண்டு
    அஷ்ட பூதலத்தில் இவர் அறியாததொன்றுமில்லை..

    சாஸ்தா வரவைக் கேளாய் – சபரிகிரி
    சாஸ்தா வரவைக் கேளாய் !

    என்று பாரம்பரிய சாஸ்தா வரவுப் பாடலே கூறுகிறது.

    ஐயனாரும், ஐயப்பனும் வேறு வேறு என்றால் சிவனும், ருத்திரனும், தட்சிணாமூர்த்தியும், நடராஜரும் எல்லாம் வேறு வேறு தெய்வங்கள் என்று சொல்வது போலாகும்.

  24. R.Kumari Kuselan அவர்கள் கூறியது உண்மை. மகிஷி வதத்திற்க்கு ஐய்யப்பனுடன் சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பூதகணத்தை சேர்ந்தவரே வாபூரன். வாபர் அல்ல.

  25. பக்தியால் ஞானத்தை காட்டுவதில் முன்னிற்பது இன்று சபரிமலையிலே கோயில் கொண்டுள்ள
    ஜோதிஸ்வருபன் தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமியே

    தூய பழக்கம், எல்லோரயும் ஐயப்ப சாமியாக பார்ப்பது, எல்லோரும் ஒரே
    மாதிரி உடை, மலை அணிவது எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.
    18 படி ஏறி அய்யப்பன் என்ற ஒரே நினைவோடு வரவேண்டும். அப்போதுதான் காணமுடியும்.

    அங்கே காண்பது மகர ஜோதியை. எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண
    நம்மை நாம் தயார் படுத்திகொள்வதே சபரிமலை யாத்திரை.

    குருவை பணித்து அவர் வழி காட்டுதலில் இறைவனை காண பயண படவேண்டும்.
    இதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.

    குரு சாமியை சந்தித்து மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும். குரு வழி காட்ட
    மலை ஏறி ஜோதி ஸ்வ்ருபனை காணலாம்

    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
    இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

    https://sagakalvi.blogspot.com/

    Please follow

    (First 2 mins audio may not be clear… sorry for that)
    https://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
    https://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
    https://www.youtube.com/watch?v=FOF51gv5uCo

    Online Books
    https://www.vallalyaar.com/?p=409

    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

  26. திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
    மேலும் அறிந்துகொள்ள https://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
    ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று

  27. ஐயனார் ஐயப்பன் வழிபாட்டைப் பற்றி பிரம்மஸ்ரீ சர்மா அவர்கள் மிகச்சிறப்பாக எழுதியுள்ளார். அதை படிக்கும் நல்வாய்ப்பு அடியேனுக்கு இன்றுதான் கிடைத்தது. தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதத்தில் உள்ள புராண ஆகம செய்திகளை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார் ஸ்ரீ மயூரகிரியார். இது ஆன்மீக ஆர்வர்வலர்களுக்கு அரிய விருந்து இக்கட்டுரை.
    இன்றைக்கு ஸ்ரீ ஐயப்ப வழிபாடு தென்னகமுழுதும் பரவி ஒரு சமய ஆன்மீக இயக்கமாக விளங்குகிறது. அது ஒரு சமயப்பிரிவாகவில்லை மாறாக ஹிந்து சமயத்தின் பல தரப்பினரும் மொழி, சாதி கடந்து இணையும் சங்கமமாக இலங்குகிறது. ஆரம்பகாலத்தில் மலையாளிகள் மட்டும் செய்த மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை செல்லும் வழிபாட்டுமுறை ஆந்திரம் கடந்து மராட்டியத்திலும் ஹிந்துக்களால் கைக்கொள்ளப்படுகிறது.கடல் கடந்து அந்தமான் மற்றும் இலங்கையிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து வருகிறார்கள். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிஜோரமின் தலைநகரான ஐஜலில் கூட ஐயப்பவழிபாடு நடைபெறுகிறது. மலையாளிகளும் தமிழர்களும் இணைந்து வழிபாடு நடத்துகின்றனர் ஆண்டுதோரும். வடமாநிலத்தவரும் அதில் பங்குகொள்கின்றனர். ஸ்ரீ ஐயப்ப பக்தி இயக்கம் ஹிந்து சமூகத்தில் காணப்படும் சாதீய ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதில் அமைதியாக செயல்பட்டுவருகிறது.
    ஸ்ரீ சர்மாஜி அவர்கள் நமது சிந்தனைகு ஒரு சில கேள்விகளை தமது கட்டுரையின் நிறைவுப்பகுதியில் எழுப்பியுள்ளார்.
    முதல் கேள்வி கறுப்பாடை தொடர்பானது. கறுப்பாடை வனச்சூழலுக்கும் பொருத்தமானது என்பது நல்ல பதில். தாந்த்ரீகர் இன்னும் கறுப்பு ஆடை அணிந்து வழிபாடு செய்வது இங்கே சிந்திக்கத்தக்கது.
    இரண்டாம் கேள்வி பெண்களுக்கு ஸ்ரீ ஐயப்ப வழிபாட்டில் சபரி யாத்திரை அனுமதி தொடர்பானது. இது தொடர்பாக தீவிர மறுபரிசீலனை அவசியம். பெண்களின் இயற்கை உபாதையான மூன்று நாள் தீட்டு இங்கே குறுக்கே நிற்கிறது என்று இப்போதுள்ள நடைமுறையை சிலர் நியாயப்படுத்துகிறார்கள். இது சரியல்ல. இந்த உபாதை சமைத்த உணவுகளை உண்ணத்தொடங்கிய காலத்தே பெண்களுக்கு உண்டானது என்பதை சிவசைலம் இயற்கை நல்வாழ்வு நிலையத்தார் நிறுவியுள்ளனர். எனவே பெண்களுக்கும் வழிபாட்டில் பங்கேற்பதில் ஆண்களுக்குள்ள உரிமைகள் வீரசைவர்கள் வழங்குவது போல் வழங்கவேண்டும்.
    மூன்றாவது வினா ஸ்ரீ ஐயப்ப குருசுவாமிகளின் செயல்பாட்டில் ஒழுங்கு தொடர்பானது. பல ஆண்டுகள் சபரிமலைக்கு சென்று வந்த அனுபவஸ்தர்களே குருசுவாமிகளாக விளங்குவதைக் காணமுடிகிறது. இதில் ஒருமித்த தன்மை ஆச்சார ஒர்மை ஒழுங்கு நிலவுவதாகவே தெரிகிறது. குருசுவாமிகள் நியமிக்கப் படுவதாகவோ அல்லது அவர்களுக்கு தீக்கை செய்விக்கப்படுவதாகத்தெரியவில்லை. ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கங்கள் பல நாடுமுழுதும் செயல்பட்டு வந்தாலும் அவை இதுவிசயத்தில் ஒருங்கிணைந்து செயல் படவும் வழிகாட்டும் முறைகளையும் உருவாக்க முயன்றிடலாம்.
    வினா நான்கு ஐயப்ப வழிபாடு வைதீகமா அல்லது தாந்த்ரீகமா என்பது. வேதத்தில் ஆலய வழிபாட்டுமுறைகள் இல்லை அதனை வழிப்படுத்துவன சைவ சாக்த வைணவ ஆகமங்கள். ஆனால் வேத மந்திரங்கள் அத்தகு வழிபாட்டில் செய்யப்படும் கிரியைகளில் வெகுவாக பயன்படுத்தபடுகின்றன. ஆகவே அவை வேதசம்மதமானவை. ஸ்ரீ சபரிமலை ஆலய அர்ச்சகர்கள் தந்திரிகளாக அழைக்கப்படுவதால் அது தாந்த்ரீகம் என்றே கருதலாம்.
    புதிய சாஸ்தா ஆலயங்கள் அல்ல ஸ்ரீ ஐயப்ப ஆலயங்களே கேரள முறைப்படி ஏற்படுத்திப்பட்டு வழிபாடுகள் நிகழ்கின்றன. காலந்தோரும் குலதெய்வமாக பல்வேறு குடிகளால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வழிபடப்பட்டுவரும் ஸ்ரீ தர்மசாஸ்தா அதே முறைப்படி வழிபடப்படுகிறார்.
    ஐந்தாம் வினா மாலை அணிவது தொடர்பானது. அது ஸ்ரீ ஐயப்ப பக்தர்களின் தனித்தன்மையை, தூய்மையை பாதுகாப்பதாக அமைகிறது. எனவே அம்முறை தமிழகத்தில் ஆறுபடைவீடு முருகபக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்களாலும் தத்தம் வழிபாட்டில் பின்பற்றப்படுகிறது.
    ஆறாம் வினா ஐயப்பனும் ஐயனாறும் ஒன்றா வேறா என்பது. அதற்கு ஸ்ரீ ஜடாயு அளித்த வினா பொருத்தமானது. ஸ்ரீ விஷ்ணுவும் ஸ்ரீ ராமரும், ஸ்ரீ க்ருஷ்ணரும் வேறு என எந்த வைணவரும் கனவிலும் நினைப்பது உண்டா.
    சிவஸ்ரீ. விபூதிபூஷண்

  28. நானும் இந்தக் கட்டுரைக்குப் பின் வந்த மறுமொழிகளைப் படித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. இன்றைக்கு மதிப்பிற்குரிய வீபூதிபூஷண் அவர்களின் மறுமொழி கண்டு இங்கு வந்தேன்.. இங்கே பலராலும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை கண்டு மகிழ்கிறேன்.

    ஐயப்ப வழிபாடு தொடர்பில் கேட்கப்பட்ட முக்கிய வினாவாகிய ஐயனார்- ஐயப்பன் ஒன்றா? என்கிற வினாவிற்கு ஜடாயு அவர்கள் வழங்கியிருக்கிற பதிலை நானும் ஆதரிக்கிறேன்.

    குமார் குசேலன் அவர்கள் ஐயப்பன் அவதாரம் நடந்தது வரலாற்றுக்கு முன்னைய காலம் என்று சில புராணக்கதைகளையே ஆதாரமாக வைத்து இங்கே பதிவிட்டிருக்கிறார்கள். புராணக்கதைகளை வரலாற்றை ஆராய்கிற போது எடுத்துக் கொள்வது இங்கே பொருத்தமாக இல்லை.

    ஆதிபராசக்தி- மஹிஷாசூரன்- மஹிஷி- ஐயப்பன் என்றெல்லாம் சங்கிலிப்பிணைப்புச் செய்து புராணக்கண்ணோட்டத்தில் பார்த்தால் வீண் குழப்பமே மிஞ்சும்.. இங்கே மஹிஷி பற்றிச் சொல்லப்படும் புராணச்செய்தியை அப்படியே நம்ப வேண்டியதில்லையே?

    ஆக, ஐயப்பனின் அவதார வைபவம் நடந்தது ஆதிசங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர் போன்ற ஆச்சார்யர்களுக்குப் பிந்தைய காலம் அதாவது 13,14ம் நூற்றாண்டு என்றே நம்புகிறேன். இது பற்றி இன்னும் ஆராயவும் சித்தமாக இருக்கிறேன்..

    மூலவர் விக்கிரஹம் எப்படியிருந்தது? என்பது குறித்து அறிய யானும் ஆவலாயுள்ளேன். இது நிற்க, வாபர் என்பது சிவகணமாக இருக்கலாம் என்கிற கருத்தில் உண்மையிருக்கலாம் என்று நம்புகிறேன்.

    நிறைவாக, வீபூதிபூஷண் அவர்கள் குறிப்பிடுவது போல, பெண்கள் சபரிமலை செல்வது மீண்டும் விவாதிக்கப்பட வேண்டியது என்றே கருதுகிறேன்.
    ஐயப்ப பக்தர்களிடையே ஒருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்கிற கருத்து முக்கியமானது. இப்படி ஒரு ஒருமைப்பாடு நிலவினால்.. இன்றைக்கு சபரிமலை செல்கிற யாத்திரீகர்களுக்கு மிகவும் வசதியாக அமையும்.

    இவற்றை இங்கு பதிவிடுகிற போது எனது மார்கழிச் சொற்பொழிவு “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” இணையம் ஒன்றில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. எனது முதலாவது வைணவச் சார்பான சொற்பொழிவாக இருக்கிற இதனை அன்பிற்குரியவர்கள் பார்வைக்குச் சமர்ப்பிப்பதிலும் மகிழ்கிறேன்.

    https://www.yarlminnal.com/?p=2332

    இங்கே பதிவிட்ட அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்…

  29. திரு சர்மா அவர்களுக்கு… தங்கள் கட்டுரை மிக அருமை..

    ஐயனார் – ஐயப்பனுக்கு உள்ள ஒற்றுமைகளையும், ஆகம, புராண குறிப்புகளையும் நன்றாக தொகுத்துள்ளீர்கள்

    இந்த கட்டுரையில் தாங்கள் கேட்டுள்ள பல கேள்விகளுக்கான பதில்களை கிட்டத்தட்ட 14 ஆண்டுகாலம் ஆராய்ச்சி செய்து ஒரு பெரும் நூலாக இயற்றி உள்ளேன்

    இதுவே அந்த நூல் குறித்த பதிவு :
    https://aravindsastha.blogspot.in/2009/02/shri-maha-sastha-vijayam.html

    இரண்டாம் பதிப்பு :
    https://shanmatha.blogspot.in/2011/04/shri-maha-sastha-vijayam.html

    THE HINDUவில் வெளிவந்த எனது பேட்டி
    https://www.hindu.com/2009/01/25/stories/2009012558470200.htm

    மற்றொரு சுவாரஸ்யமான தகவல் – தாங்கள் வெளியிட்டுள்ள https://tamilhindu.com/wp-content/uploads/shasta_kirata_murti.jpg புகைப்படம் எனது பர்சனல் பூஜைக்காக கொண்டுவந்த ஓவியப்படம் …..

    சுவாமி சரணம்
    அரவிந்த் சுப்ரமண்யம்
    9994641801

  30. பேரன்புடையீர்,

    தங்களின் மேலான ஆய்வுகளைப் பற்றி அறிந்தேன்.. மிக்க மகிழ்ச்சி… எல்லாம் வல்ல இறைவன் பேரருளால் ஐயப்பன் குறித்த தங்களின் ஆய்வுகள் பரவ பிரார்த்திக்கிறோம்..

    தங்களின் நூலில் உள்ள முக்கிய விஷயங்களை இப்படியான இணையங்களில் எழுதலாமே.. கடல் கடந்த நாடுகளில் இருக்கும் என்னைப் போன்ற நூலைப் பெற்றுக் கொள்ள இயலாத ஏராளமான அன்பர்களுக்கு அவை ஐயப்ப வழிபாட்டின் ஐயமகற்றும் ஒளி விளக்காக திகழலாம்..

    தங்களின் ஆத்மார்த்த பூஜா படம் இக்கட்டுரையுள் எப்படி வந்தது என்று யானும் அறியேன்.. அது இணையத்தளத்தில் எங்கோ இருந்து இணைய ஆசிரியர்குழுவால் எடுத்து இங்கு பதிவிடப்பெற்றுள்ளது என்று நான் நினைக்கிறேன்.

    மிக்க நன்றிகள்..

    தி.மயூரகிரி சர்மா
    யாழ்ப்பாணம்.

  31. all the above historical details of lord ayyappa, ayyanar, sastha was given in detail by our beloved guruji late Sri Viswanatha Sharmaji very earlier itself. thanks for your detailed work in this field like our guruj.

    pranams

    Subramanian
    9444137586
    chennai – villivakkam

  32. Moolavar Vighraham of Shree Dharma Sastha in Sabarimalai before the current one can be found in Perambur Ayappan Temple. It is called Mohini Sastha and the form is said to be exact replica of the one which was in worship before the fire accident.

  33. I AM SO HAPPY. BECAUSE MY APPA SRI SORIMUTHU IYANAR NAN INUM NALLA THERECHUKETA ITHA KATDURY USESA IRUTHU. THANKS TO IYANAR APPA

  34. சுவாமி அய்யனார் இன் வேறு பெயர்கள் என்ன என்று எனக்கு தெரியவில்லை நீங்கள் எனக்கு. கூறுங்கள்
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *