ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை

முன்னுரை

ஞாலம் வாழ் உயிர்களுக்கெல்லாம் தாய் போன்ற, கால வரையறையற்ற ஹிந்து சனாதன தருமத்தை உலகிற்குத் தந்த பெருமை நம் பாரதப் புண்ணிய பூமியையே சேரும். கருணையே வடிவான ரிஷிகள் வகுத்துத் தந்த இம்மார்க்கத்தை, காலம் செல்லச் செல்ல, நம்மவர்கள் அறியாமையாலும், கவனமின்மையாலும், அற்ப ஆசைகளின் காரணமாகவும் கைவிட்டு, மனம் போன படி போக பலன்களை அனுபவிப்பதிலேயே மனம் செலுத்தி வந்தனர். பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் விளைந்த இந்த அவல நிலையை எதிர்த்து வந்த பௌத்த சமண மதங்களானவை நடைமுறைக்கு ஒவ்வாத தீவிர அகிம்சா மார்க்கத்தைப் பறைசாற்றி வந்தமை அனைவரும் அறிந்த வரலாறு.

இத்தகைய ஒருதலையான, ஆபத்தான கொள்கை நாடெங்கும் தடையின்றிப் பரவியிருந்தால் அன்னியப் படையெடுப்புகள் நம் கலாச்சாரத்தை வெகு சுலபமாகச் சீரழித்து, கொலைவெறி கொண்ட ஆக்கிரமிப்பு மதங்களையும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான அபத்தக் கொள்கைகளையும் கண் இமைக்கும் நேரத்தில் பாரதமெங்கும் நட்டு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்துடன், முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளை நிலைநிறுத்திக் குழப்பத்தை உண்டுபடுத்தும் வேறு சில மதங்களும் ஓங்கி இருந்தன. இத்தகைய விபரீதமான நிலையிலிருந்து வேதம், உபநிடதங்கள், பகவத் கீதை, ரிஷிகள் வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் வேதத்தை எதிர்த்து வந்த மதங்களைத் தர்க்க ரீதியில் தகர்த்தெரிந்து, அத்துடன் கர்ம-ஞான-பக்தி யோகங்கள் அடங்கிய முழுமையான வேதாந்த மார்க்கத்தை நிலைநிறுத்தி நம் சனாதன தருமத்தை மீட்டுத் தந்த சமயப் பெரியோர்கள் பலராவர்.

வேதாந்த மார்க்கத்துக்குப் பெரும் வித்திட்ட அப்பெரியோர்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தை வகிப்பவர் அத்வைத சம்பிரதாயத்தின் ஸ்ரீமத் ஆச்சாரியராகிய ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஆவார். பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், ஆகியவற்றிற்கு ஒப்பற்ற பாஷ்யங்கள் (விளக்கவுரைகள்) எழுதி நம் மார்க்கத்துக்குத் தொண்டு புரிந்த அவரே, பின்னாளில் ஓங்கி வளர்ந்து பாரதமெங்கும் பரவிய உயர்வு தாழ்வு பாரா எளிய பக்தி மார்க்கத்துக்கும் வித்திட்டார் என்பதில் ஐயமில்லை. பெரும் மரியாதைக்குரிய இவ்வாச்சாரியார் வாழ்ந்த கால வரையறைகள் முதலிய வரலாற்றுத் தகவல்களை நடுநிலைநின்று அரும்பாடுபட்டு அறிவியல்பூர்வமான ரீதியில் ஆராய்ந்து நிரூபித்து ஆவணப்படுத்துதல் இந்துக்களாகிய நாம் அவருக்கும் இந்து தருமத்துக்கும் புரியும் தலையாய தொண்டாகும். இதெல்லாம் தவிர, மதச்சார்பற்ற ரீதியில் பார்த்தாலும் இத்தகைய ஆராய்ச்சியில் கற்றுக்கொள்ளவேண்டிய பல ஆர்வமூட்டும் வரலாற்று உண்மைகள் வெளிப்படும்.

நிற்க. இப்பொழுது பல மேலை நாட்டவரும் ஜப்பானியர்கள் முதலானவரும் நம் நாட்டின் வரலாற்றாராய்ச்சியைச் செய்து வருகின்றனர். இவர்களில் உள்நோக்கம் ஏதும் இல்லாதவர்கள் கூட அவ்வப்போது நம் கலாச்சாரத்தின் அடிப்படை உண்மைகளைப் பற்றிப் பரிச்சயம் இல்லாததால் சில தவறான புரிதல்களையும் பிழைகளையும் செய்து வருகின்றனர். நம் கலாச்சாரத்திலும் சம்பிரதாயத்திலும் பரிச்சயமுள்ளவர்கள் வரலாற்று ஆராய்ச்சியில் வெளிவருவனவற்றை நடுநிலை நின்று அலசிப்பார்த்து, அவை நியாயமானதாக இருந்தால் பாராட்ட வேண்டும். இல்லையென்றால் அறிவு நேர்மையுடன் (academic honesty) அது பற்றித் தர்க்க ரீதியில் விவாதித்து, ஒவ்வாத கருத்துக்களைத் தக்க ஆதாரம் கொண்டு சுட்டிக் காட்ட வேண்டும். “வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்களோ சொல்லட்டும். நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” போன்ற வாதங்கள் நம் சனாதன தருமத்துக்கு நன்மை செய்யாது; மாறாக, இத்தகைய போக்கு இன்றைய இளைஞர்களிடம் நம் மதம் மீதான நம்பிக்கையின்மையையும் பற்றின்மையையுமே உண்டுபடுத்தும்.

மேற்கூறியவற்றை மனதில் கொண்டு சங்கரர் காலத்தை நிர்ணயிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் சுருக்கமே இக்கட்டுரை. இதில் வைக்கப்படும் ஆவணக் குறிப்புகள், கருத்துக்கள், ஆராய்ச்சி யுக்திகள் குறித்து மாற்றுக்கருத்து உள்ள நண்பர்கள் விரும்பினால் மறுமொழியிட்டு நட்பு முறையில் விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.
 
சங்கரர் கால ஆராய்ச்சியில் பின்பற்றப்பட்ட யுக்தி

வரலாற்றில் ஒரு நபரின் காலத்தைக் கணிப்பதற்கு முன் “அவர் யார்” என்பதற்குத் தக்கதொரு இலக்கணம் கூற வேண்டும். அப்படிப் பார்த்தால், “பிரம்ம சூத்திரத்திற்கு ’யுஷ்மதஸ்மத் ப்ரத்யய கோசரயோ:’ என்று தொடங்கி, ’அனாவ்ருத்தி: சப்தாத் இதி ஸூத்ராப்யாஸ: சாஸ்த்ரபரிஸமாப்திம் த்யோதயதி’ என்று முடியும் பிரபல பாஷ்ய உரை நூலை எழுதியவர்” என்று சொல்ல வேண்டும். இப்படிக் கொள்ளுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. இந்த பாஷ்யம் அவர் எழுதியது தான் என்பதில் எந்த ஒரு விவாதமும் இல்லை. தொன்றுதொட்டு பலர் சங்கரருடைய இந்த ஆக்கத்திற்கு அநு பாஷ்யங்களையும் டீகைகளையும் (sub-commentaries and glosses) எழுதி வந்துள்ளனர். உதாரணமாக-

 

adisankara_padmapada(1) சாக்ஷாத் அவருடைய சீடர் பத்மபாதர் “பஞ்சபாதிகா” என்ற நூலில் சங்கர பாஷ்யத்தின் முதல் நான்கு சூத்திர பாஷ்யங்களை விரிவாக விளக்கியுள்ளார். இதை மேலும் விவரிக்க, ராமானுஜர் காலத்திற்கு முன்பே பிரகாசாத்ம யதிகள் “பஞ்சபாதிகா விவரணம்” என்ற அநு பாஷ்யம் செய்துள்ளார். “விவரண பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை ஏற்படுத்தியவர் இவர். இவ்விவரண  நூலை மேலும் விளக்க, “ருஜு விவரணம்”, “தத்வ தீபனம்” முதலிய பாஷ்ய நூல்கள் 13,14,15-ஆம் நூற்றாண்டுகளில் வெளிவந்தமை பண்டிதர்கள் அனைவரும் அறிவர்.

(2) ஆனந்தகிரி அல்லது ஆனந்தஞானர் எனப்படும் அத்வைத ஆச்சாரியார் சங்கரருடைய பிரம்ம சூத்திர பாஷ்யம், பத்து உபநிடத பாஷ்யங்கள், கீதா பாஷ்யம், உபதேச  சாஹச்ரி கிரந்தம்  ஆகியவற்றுக்கும், சங்கரருடைய பிரதான சீடராகிய சுரேஷ்வரருடைய பிருகதாரண்யக தைத்திரீய பாஷ்ய வார்த்திகங்களுக்கும், டீகைகளை இட்டுள்ளார்.

(3) மேலும், ஒன்பதாவது/பத்தாவது நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் வாசஸ்பதி மிச்ரா என்பவர் சங்கர பாஷ்யத்தை விவரிக்கும் “பாமாதி” என்னும் நூலை எழுதியுள்ளார். இவர் “பாமாதி பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை உண்டாக்கியவர். அதையும் மேலும் விவரித்து அமலானந்தர் என்னும் 13-ஆம் நூற்றாண்டு அத்வைதியர் “வேதாந்த கல்பதரு” என்ற ஒரு உரையையும் எழுதியுள்ளார்.

(4) இன்று சங்கர பிரம்ம சூத்திர பாஷ்யத்தை விளக்கும்  “பிரகடார்த்த விவரணம்” என்ற நூல் பதிப்பில் உள்ளது. இதில் பேதாபேத மதமாகிய பாஸ்கரமதம் கண்டிக்கப்படுகிறது. ஆனால் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தில் இருந்து ஒரு குறிப்பும் இல்லை. ஆகையால் இது இராமானுஜர் காலத்திற்கு முந்தையது என்று கொள்ள இடமிருக்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் ஸ்ரீ ஆனந்தகிரியும் தம் சூத்திர பாஷ்யத்தில் “பிரகடார்த்த காரர்” என்று இவ்வாசிரியரைக் குறிப்பிட்டு, இந்நூலிலிருந்து மேற்கோளும் எடுத்துள்ளார்.

இந் நூலாசிரியர்கள் அனைவரும் அத்வைத சூத்திர பாஷ்யகாரரை “பகவத்பாதர்”,”பகவத்”, “பகவான் பாஷ்யகாரர்”, “சங்கரர்” அடையாளம் கண்டுள்ளனர். அது தவிர விசிஷ்டாத்வைத-துவைத்த ஆசிரியர்கள் பலர் சங்கரருடைய பெயரைக் குறிப்பிடாமல் அவருடைய பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் உள்ள கொள்கைகளை விமர்சித்துள்ளனர் என்பது நிர்விவாதம்.

அத்வைத பிரம்ம சூத்திர பாஷ்யகாரராகிய சங்கரர் எழுதிய வேறு நூல்கள் எவை எவை என்று பார்த்தால், சர்ச்சைக்கு இடமில்லாதபடி அவருடைய (1) கீதா பாஷ்யம், (2) ஈசாவாஸ்ய-கேன (பத/வாக்ய பாஷ்யங்கள் இரண்டு)-கட-பிரஷ்ன-முண்டக-மாண்டூக்ய-ஐதரேய-தைத்திரீய-பிருகதாரண்யக-சாந்தோக்ய ஆகிய பத்து உபநிடதங்களுக்கு அவரிட்ட பாஷ்யங்கள், (3) ‘உபதேச சாஹச்ரி’ என்ற கிரந்தம் ஆகியவற்றை சம்பிரதாயமும் வரலாற்று ஆராய்ச்சியும் ஒப்புக் கொள்கிறது. இது தவிர விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் முதலிய நூல்கள் அவருடையதா என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சை இருப்பதால் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தவில்லை. எப்படி இருப்பினும், நாம் இப்பொழுது பட்டியலிட்டுள்ள நூல்களில் போதுமான அளவிற்குத் தகவல்கள் உள்ளன. மேலும், மேற்கூறப்பட்ட நூல்கள் யாவும் சமஸ்கிருத மூலத்தில் இந்தியாவின் பல பதிப்பகங்களால் எந்த ஒரு பெரிய அளவிலான பாட பேதமின்றி வெளியிடப்பட்டுள்ளன; இந்திய அரசால் நடத்தப்படும் “டிஜிட்டல் லைப்ரரி ஆப் இந்தியா” (Digital Library of India, URL https://www.dli.ernet.in) என்ற வலைத்தளத்தில் இந்தியாவின் பல பொது நூலகங்களில் உள்ள காப்புரிமை காலாவதியான புத்தகங்கள் (works with expired copyright) மின்மயப்படுத்தி அத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்களை அங்கு இலவசமாகத் தேடிப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம். ஆகையால், அவற்றில் இடைச்செருகல் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்று கொள்வதே நியாயமாகும்.

இந்நூல்களைக் கொண்டு என்ன நிரூபிக்கப்போகிறோம் என்று கேட்டால், அதற்கான பதில் இங்கே: வரலாற்று ஆராய்ச்சியில் “கால முன் வரையறை” (terminus post quem), “கால பின் வரையறை” (terminus ante quem) என்ற இரண்டு வரையறைகளை நிர்ணயித்தல் அடிப்படையான ஒரு அங்கமாகும். இனி, பின்வரும் உதாரணத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்: 

(1) வரலாற்றில் “நபர்-X” என்றொருவர் இருக்கிறார் என்றும் அவர் காலத்தை நிர்ணயிக்க முனைந்துள்ளோம் என்றும் வைத்துக் கொள்வோம்.

(2) “நபர்-A”, “நபர்-B” என்று இருவர் தம் தம் ஆக்கங்களில் தம் காலங்களை முறையே “வருடம் P”, “வருடம்-Q”  என்று குறிப்பிட்டுள்ளார்.

(3) “நபர்-X” தம் ஆக்கங்களில் ஒன்றில் “நபர்-A” என்பவருடைய பெயரையும் அவர் எழுதியுள்ள வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

(4) “நபர்-B” தம் ஆக்கங்களில் ஒன்றில் “நபர்-X” என்பவரின் பெயரையும் அவர் வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட உதாரணத்தில், “நபர்-X” என்பவரின் காலத்தின் முன் வரையறை “வருடம்-P” என்றும், பின் வரையறை “வருடம்-Q” என்றும் தெள்ளத் தெளிவாகக் கேள்விக்கிடமின்றி நிர்ணயிக்கப்படுகிறது. இப்படித் தான் வரலார்ராராய்ச்சியில் terminus post quem மற்றும் terminus ante quem என்ற வரையறைகள் நிர்ணயிக்கப்படும்.மேற்கூறிய வழியில் சங்கரர் காலத்தை நிர்ணயிக்க இடமிருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இனி அது குறித்த தகவல்களைக் காண்போம்.

ஆதி சங்கரர் கால பின் வரையறை

ஆதி சங்கரர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதில் பெரிய அளவிலான அபிப்பிராய பேதம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகையால் அதை முதலில் எடுத்துக் கொள்வோம். ஸ்ரீ ராமானுஜர் காலம் கி.பி. 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டு என்பதும், அவர் ஆதி சங்கரர் கொள்கைகளைத் தம் ஸ்ரீபாஷ்யத்திலும் கீதா பாஷ்யத்திலும் விமர்சித்துள்ளமையால் அவர் சங்கரர் காலத்திற்கு பின்பு வாழ்ந்தவர் என்பதும் திண்ணம். அத்துடன், ஸ்ரீ ராமானுஜரின் இளைய பருவத்தில் வயதில் முதிர்ந்தவராக இருந்த யாமுனாச்சாரியார் அல்லது ஆளவந்தார், தம் நூல்களான “சித்தி திரயம்” மற்றும் “ஆகம பிராமாண்யம்” எனும் நூல்களில் சங்கரரின் சில கொள்கைகளைச் சுட்டிக் காட்டி அவைகளிலிருந்து மாறுபடுகிறார்.

adishankara-and-four-disciples

இதற்கும் மேலாக, சங்கர பாஷ்யத்தை விளக்க எழுந்த பாமாதி என்ற நூலின் ஆசிரியராகிய வாசஸ்பதி மிச்ரர் தம் “நியாய சூசி நிபந்தனம்” என்னும் நூலில் “வருடம் 898-இல் முடிக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார். இந்திய வருடக்கணக்கில் சாக வருடம் விக்கிரம வருடம் என்று இரண்டு கணக்குகள் உண்டு. சாக வருடம் என்று எடுத்துக் கொண்டால் வாசஸ்பதி மிச்ரர் கூறும் தேதி கி.பி. 976 என்று கொள்ள வேண்டி வரும். விக்கிரம வருடம் என்று எடுத்துக் கொண்டால் கி.பி. 841 என்று கொள்ள வேண்டி வரும். இவ்விரண்டில் “விக்கிரம வருடம் 898”, அதாவது ஆங்கில வருடம் கி.பி. 841 என்று கொள்வது தான் சரி என்று வரலாற்று ஆராய்ச்சியாளர் Hajime Nakamura தமது “A History of Vedanta Philosophy, Vol. 1” என்ற நூலில் விளக்கியுள்ளார்.

இனி, வாசஸ்பதி மிஸ்ரர் தம்முடைய பாமாதி நூலின் இறுதி சுலோகங்களில் தாம் படைத்த நூல்களைக் கால வரிசையில் பெயரிட்டுக் காட்டியுள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும். இதில் மீமாம்சம், யோகம், நியாயம், சாங்கியம், முதலிய தர்சனங்களைப் பற்றி எழுதி விட்டுத் தாம் சங்கரபாஷ்ய விளக்கமாகிய பாமாதியை எழுதியதாகக் குறிப்பிடுகிறார். இதை வைத்து Hajime Nakamura காலத்தைக் கணிக்க முயல்வது அவ்வளவு சரியன்று என்றே நினைக்கிறேன். “நியாய சூசி நிபந்தம்” (கி.பி. 841) எழுதி எத்தனை வருடம் கழித்து அவர் பாமாதியை எழுதினர் என்று அவரோ, பாமாதிக்கு உரை எழுதிய அமலானந்த சரஸ்வதியோ குறிப்பிடவில்லை. எந்த காரணமும் கொடுக்காமல் கி.பி. 850 என்ற வருடத்தை Hajime Nakamura பாமாதிக்குத் தருகிறார். மேலும், பாமாதியில் சங்கரர் சீடரான பத்மபாதருடைய பஞ்சபாதிகையில் உள்ள விளக்கங்களிலிருந்து வாசஸ்பதி மாறுபடுகிறார் என்பது தெளிவு (பார்க்க: படிமம் 1). அத்துடன் வாசஸ்பதி பாஸ்கரரின் பேதாபேத மதத்தையும் கண்டித்துள்ளார் (பார்க்க: படிமம் 2).  மேலும், பத்மபாதரின் பஞ்சபாதிகத்தை பாஸ்கரர் கண்ணுற்றிருந்தார்  என்று அவர் நூலை ஆய்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சங்கரர் கொள்கைகளைக் கண்டித்த பாஸ்கரர் சங்கரர் காலத்திற்குப் பிந்தியவர் என்பதில் ஐயமில்லை. பஞ்சபாதிகா எழுதிய பத்மபாதர் தம்மைச் சங்கரர் சீடராகக் காட்டிக் கொள்கிறார். இதிலும் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இருக்க வாய்ப்பில்லை. இதை வைத்து திரு Nakamura “ஆகையால், பத்மபாதர் காலம் சங்கரர் காலத்திற்கு 20 ஆண்டுகள் பிந்தியது என்றும், பாஸ்கரர் காலம் பத்மபாதர் காலத்துக்கும் ஒரு 30 ஆண்டுகள் பிந்தியது என்றும், வாசஸ்பதி காலம் பாஸ்கரர் காலத்துக்கும் ஒரு 20 ஆண்டுகளாவது பிந்தியது என்றும் கொள்ளவேண்டும்”  என்று கூறியிருந்தால் அதில் எனக்கு உடன்பாடு இருந்திருக்காது. “ஒருவர் இன்னொருவருடைய நூலைப் பற்றி எழுதினால் அவர் அவ்வின்னோருவருடைய காலத்திற்கு 20 ஆண்டுகளாவது தள்ளி இருக்க வேண்டும்” என்பது ஞானிகளாகிய அவர்களின் ஆற்றலையும் உழைப்பையும் குறைத்துக் கூறுவது போல உள்ளது.

ஆனால் Hajime Nakamura ஒரு முக்கியமான வேறொரு சான்றைக் காண்பிக்கிறார். ஸ்ரீ ராமானுஜர் காலத்துக்கு முன் வாழ்ந்த ஆளவந்தார் என்னும் யாமுனாச்சாரியார் தம் சித்தித்ரயத்தில் “ஸ்ரீவத்சாங்கர் என்னும் வேதாந்தி சங்கரர் காலத்துக்கும் பாஸ்கரர் காலத்துக்கும் இடையே வாழ்ந்தார்” என்று குறிப்பிடுகிறார். இது சித்தி த்ரயம் ஐந்தாம் பாகம், முதல் அத்தியாயத்தில் உள்ளதென்றும் குறிப்பிடுகிறார். இதையும், வாசஸ்பதி மிச்ரர் கி.பி. 841-இல் நூற்கள் எழுதியிருப்பதையும் சேர்த்துப் பார்த்தால், சங்கரர் கால வரையறையைக் கண்டிப்பாகக் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கு முன் வைக்க வேண்டும். இதிலிருந்து சிருங்கேரி மடம் கூறும் “கி.பி. 788-820” என்ற கணக்கு சற்று அடிபடுகிறது. ஓர் ஐம்பதாண்டுகளாவது தாமதமாக இருக்க வேண்டும்.

இதை மேலும் வலுப்படுத்தும் வண்ணம், இதுவரை கூறிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொள்ளாத வேறொரு சான்றும் உள்ளது. சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்த வித்யானந்தர் தம் “அஷ்டசஹச்ரி” என்ற நூலில் சுரேஸ்வரருடைய பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகத்திளிருந்து ஒரு மேற்கோளை எடுத்து “இது பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகத்தில் சொல்லப்பட்டது” என்று சுட்டி, தம் சமண மதத்திற்கு விரோதமான வேதாந்த மதமாகிய அதில் உள்ள கருத்தை விமர்சிக்கிறார் (பார்க்க: வித்யானந்தரின் அஷ்டசஹச்ரி, பக்கம் 161, பக்கத்தின் பதினான்காம் வரி: இப்படிமத்தில்;  மேலும்: படிமம் 3 இல் உள்ள 4-ஆம் அடிக்குறிப்பு, படிமம் 4-இலுள்ள அடிக்குறிப்பு, படிமம் 5). இவ்வாக்கியங்கள் சங்கரரின் முதற் சீடராகிய சுரேஸ்வரரின் பிருகதாரண்யக வார்த்திகத்தின் முதல் பாகமான “சம்பந்த வார்த்திகத்தில்” காணப்படுபவை. இதை முன்வைத்து திரு Nakamura வித்யானந்தரின் காலத்தை மேலும் ஆய்கிறார். ஜினசேனர் என்ற சமண பண்டிதர் “ஹரிவம்ச புராணம்”, “ஆதி புராணம்” என்று இரண்டு நூற்களையும், அந்நூற்களில் அவரே அவ்விரண்டும் முறையே சாக வருடக் கணக்கின்படி கி.பி. 783-இலும் கி.பி. 838-இலும் எழுதப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஆதி புராணத்தில்” வித்யானந்தரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இத்தகவல்களை எல்லாம் Hajime Nakamura வின் நூலில் காணலாம். ஆகையால், வித்யானந்தர் ஜினசேனர் காலத்திற்கு முந்தையவராகவோ சமகாலத்தவராகவோ கொள்வதே சரியாகும். அவருக்கும் முன், அதாவது கி.பி. 838-க்கும் முன் சுரேஸ்வரர் தம் பிருகதாரண்யக வார்த்திக நூலைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இதுவும், “சங்கரர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தையது” என்னும் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

ஆதி சங்கரர் கால முன் வரையறை

பௌத்த நியாய சாத்திரத்தின் (Buddhist logic) முன்னேற்றத்துக்குப் பெரும் வித்திட்ட “தர்மகீர்த்தி” என்னும் பௌத்த ஆசிரியர் ஏழு பிரசித்தமான நூற்களை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று “பிரமாண வார்த்திக காரிகை” என்னும் நூல். தர்மகீர்த்தியின் பெயரையும் இட்டு இதில் உள்ள ஒரு வாக்கியத்தைச் சங்கரர் தொடக்கமாக அத்வைத ஆச்சாரியார்கள் மேற்கோள் எடுத்துள்ளனர் என்பதைக் காட்டுவோம் இனி. இதனால், ஆதி சங்கரர் தர்மகீர்த்தியின் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பது தெளிவாகும்.

shankara-dig-vijayam1சான்று 1:

தற்போது பதிப்பில் உள்ள “உபதேச சாஹச்ரி” (Upadesa Sahasri) என்ற கிரந்தத்தை ஸ்ரீ சங்கர பகவத்பாதர் எழுதினர் என்பதற்குப் பல சான்றுகள் கொடுக்கப்படுகின்றன. அவர் சீடராகிய சுரேஷ்வரர் “நைஷ்கர்ம்ய சித்தி” என்ற தம் கிரந்தத்தில் உபதேச நூலிலிருந்து பல மேற்கோள்களை எடுத்துள்ளார். நைஷ்கர்ம்யசித்தி என்ற நூல் சுரேஸ்வரருடையதே என்பதில்  ஐயத்திற்கு இடமில்லாதபடி ஸ்ரீ சர்வஞாத்ம முனிகள் தம் நூலில் மேற்கோள்களை எடுத்துள்ளார். அத்துடன், ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி தம் நூலில் நைஷ்கர்ம்யசித்தி நூற் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். நைஷ்கர்ம்யசித்திக்கு ஞாநோத்தமர் என்னும் பிராசீனரும், உபதேச கிரந்தத்திற்கு ஆனந்தகிரி, ராமதீர்த்தர் முதலிய பிராசீனர்களும் விளக்கவுரைகளை இட்டுள்ளனர். அதுதவிர, பேதாபேத வேதாந்த மதத்தைச் சார்ந்த பாஸ்கராச்சாரியார் தம் பகவத் கீதை உரையில் சங்கரரின் உபதேச கிரந்தத்தில் உள்ள கருத்து ஒன்றை “உபதேச கிரந்தத்தில் இவ்வாறு கூறப்படுகிறது” என்று நூற்பெயரைக் குறிப்பிட்டு அதிலிருந்து ஒரு மேற்கோளையும் காட்டி விமர்சித்துள்ளார். இந்தத் தகவல்களை, “Sengaku Mayeda” என்னும் ஜப்பானிய வரலாற்று அறிஞர் தமது “The authenticity of the Upadesa Sahasri” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அங்கே கண்டுக்கொள்க. அத்தகவல்களை நான் நேராக மூல நூற்களை வைத்துச் சரிபார்த்துவிட்டேன்.

இந்த உபதேச சாஹச்ரி நூலில் பதினெட்டாம் அத்தியாயத்தில் பௌத்த மதக் கொள்கைகளை விமர்சிக்கிறார் சங்கரர். இதில் எதிர் தரப்பின் வாதத்திக் காட்டும் ஒரு சுலோகம் உள்ளது:

“அபின்னோ அபி புத்த்யாத்ம விபர்யாசித தர்சனை:
க்ராஹ்ய க்ராஹக சம்வ்ருத்தி பேதவான் இவ லக்ஷ்யதே”

[ உபதேச ஸஹஸ்ரி, 18.142]

இப்பகுதி ஒரு சிறு மாற்றத்துடன் அப்படியே தர்மகீர்த்தியின் பிரமாண வார்த்திக காரிகை நூலில் உள்ளது. தர்மகீர்த்தியின் நூலில் “அவிபாக” என்ற சொல்லுக்குப் பதிலாக “அபின்ன” என்ற சொல்லைச் சங்கரர் பயன்படுத்தியுள்ளார். இரண்டு சொற்களுக்குள் பொருள் வேறுபாடு சற்றும் கிடையாது:

“அவிபாகோ அபி புத்த்யாத்ம விபர்யாசித தர்சனை:
க்ராஹ்ய க்ராஹக சம்வ்ருத்தி பேதவான் இவ லக்ஷ்யதே”

[ பிரமாண வார்த்திக காரிகை, 3.354]

இனி, “இவ்வாக்கியத்தை தர்மகீர்த்தி பழைய பௌத்த நூலிலிருந்து தம் நூலில் கூறியிருக்கிறார்”, “உபதேச கிரந்தத்தையும் நைஷ்கர்ம்யசித்தி கிரந்தத்தையும் நாங்கள் ஆச்சாரியார்களுடைய உண்மையான படைப்புகளாக ஏற்கவில்லை. ஆதலால் இச்சான்று செல்லாது” என்றெல்லாம் கூறுவதற்கு இடமில்லாத வண்ணம் இன்னும் சில சான்றுகளைப் பார்ப்போம்.

சான்று 2:

மேலேடுக்கப்பட்ட வாக்கியம் தர்மகீர்த்தியின் வாக்கியமே என்று வேறு பல பிராசீன தத்துவ மேதைகளும் தம் ஆக்கங்களில் இயற்றியுள்ளனர். இதை Nakamura அவர்கள் தம் நூலில் விளக்கியுள்ளார். அங்கே கண்டுகொள்க.

சான்று 3, சான்று 4:
 
சங்கரருடைய சீடரான “வார்த்திககாரர்” என்று அழைக்கப்படும் சுரேஷ்வரர் “பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகம்”, “தைத்திரீய பாஷ்ய வார்த்திகம்” என்ற நூற்களை இயற்றினார் என்பதிலும் இந்நூற்கள் இரண்டும் இன்று பதிப்பகங்களிலும் நூலகங்களிலும் கிடைக்கின்றன என்பதிலும் விவாதம் இல்லை. இவர் மேலேடுக்கப்பட்ட தர்மகீர்த்தியின் “அபின்னோ அபி” அல்லது “அவிபாகோ அபி” என்று தொடங்கும் வாக்கியத்தை பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகத்தில்4.3.476 (இது பிருகதாரண்யக உபநிஷத்தின் “ஜ்யோதிஷ் பிராம்மணம்” என்ற பகுதிக்கான விளக்கமாகும்) என்ற இடத்தில் எடுத்துள்ளார். இவ்விடத்திற்குட் டீகையிட்ட ஆனந்தகிரி, “(பௌத்த மதப் பிரிவான, யோகாசாரம் என்னும்) விஞான வாதிகளின் கருத்தைக் கீர்த்தியின் வாக்கியம் வழியாக உதாஹரிக்கிறார்” என்று தெளிவாக தர்மகீர்த்தியையே “கீர்த்தி” என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார். இதற்கும் மேலாக, சுரேஸ்வரரே இவ் வார்த்திகத்தின் அப்பகுதியிலேயே வேறொரு இடத்தில் “தர்மகீர்த்தி கூறுவது” என்று பெயரிட்டுக் கூறியுள்ளார்:

“த்ரிஷு ஏவ து அவினாபாவாத் இதி யத் தர்மகீர்த்தினா
ப்ரத்யஜ்ஞாயி ப்ரதிஜ்ஞேயம்  ஹீயெதாஸௌ ந சம்ஷய:”
[பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகம், 4.3.753]

சான்று 5: 

இனி தர்மகீர்த்தியின் காலம் எது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு நேரிடையான, சுலபமான சான்று உள்ளது. யீ ஜிங் (I Tsing, I Ching or Yijing) என்ற சீன தேசத்து யாத்திரி தமது யாத்திரை ஆவணத்தில் “அண்மையில் வாழ்ந்த தர்மகீர்த்தி பௌத்த நியாய சாத்திரத்திற்குப் பல முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார்” என்று தெளிவாகக் கூறுகிறார் (பார்க்க: படிமம் 1, படிமம் 2). யீ ஜிங்குடைய யாத்திரை ஆவணத்தை ஆங்கிலத்தில் “A Record of the Buddhist Religion As Practised in India and the Malay Archipelago” என்று மொழிபெயர்த்து எழுதிய நூலாசிரியர் பல பழைய சீன-ஜப்பானிய சுவடிகளின் துணை கொண்டு இந்நூலைத் தொகுத்துள்ளதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளமையால், இதிலும் இடைச்செருகலோ பிழையோ இருப்பது சாத்தியமில்லை என்றே கொள்ள வேண்டும். இப்பகுதியில் வரும் படிமச் சுட்டிக்கள் இப்புத்தகத்தின் பக்கங்களே. இந்த யீ ஜிங் தாம் கி. பி. 671-ஆம் ஆண்டு இந்தியப் பயணத்தைத் துவக்கியதாகத் தம் யாத்திரை ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது. ஆம், “ஆங்கில வருடம் போ.பே. 671” என்று குறிப்பிடவில்லை தான். ஆனால், “ஜியான் ஹெங் (‘Hsian Heng’ or ‘Xianheng’) யுகத்தின் இரண்டாம் வருடம்” என்று கி.பி. 670-674 வரையறையைக் கொண்ட சீன யுகப்பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் (பார்க்க: படிமம் 3, படிமம் 4). சீன தேசத்துப் பல்வேறு சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்திகள் தெளிவாக யுகப்பெயர்களையும் வருடங்களையும் உபயோகித்தமை வரலாற்று ஆராய்ச்சியில் பிரசித்தம் என்று அறியப்படுகிறது (பார்க்க: விக்கிபீடியா சுட்டி 1, விக்கிபீடியா சுட்டி 2). அதுவும் தவிர, யீ ஜிங் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் மற்றொரு புத்தகமும் தெளிவாக, “அவர் தம் இந்திய யாத்திரையை செங்க்செங் (Zhengsheng) யுகம் முதல் ஆண்டில் முடித்துக் கொண்டார்” என்று கி.பி. 695-ஆம் ஆண்டைக் குறிப்பிட்டுள்ளமை தெரிகிறது (பார்க்க: படிமம் 5).

adisankara_mandana_debate“ஆதி சங்கரர் கி.மு.500-இல் வாழ்ந்தார்” என்று கூறினால், “தர்மகீர்த்தி கி.மு. 500-க்கும் முன்பு வாழ்ந்தார்” என்று கூற நேரிடும். அப்படியானால், தம் காலத்திற்கு 1200 வருடங்கள் முன் இருந்த ஒருவரை “அண்மையில் வாழ்ந்தார்” என்று யீ ஜிங் குறிப்பிடுவது அபத்தமாகிவிடும். ஒரு வேளை யீ ஜிங் தவறான தகவலைக் குறிப்பிட்டுள்ளாரோ என்றால், அதற்கும் இடமில்லாதபடி ஒரு சான்று உள்ளது. யீ ஜிங் தம்முடைய யாத்திரைக்கு முன்னோடியாக பா ஹியன் (Fa Hien), யுவாங் சுவாங் (Hsuan Tsang) ஆகியோர் இருந்ததாகக் குறிப்பிடுகிறார் (பார்க்க: படிமம் 6, படிமம் 7, படிமம் 8). பா ஹியனும் யுவாங் சுவாங்கும் முறையே கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (யீ ஜிங்குக்கு முப்பது நாற்பது ஆண்டுகள் முன்பு) இந்தியப் பயணம் மேற்கொண்டதாக அறிகிறோம். பல பௌத்த நியாய சாத்திர நூற்களை சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்த யுவாங் சுவாங் தர்மகீர்த்தியின் பெயரையோ அவரது ஏழு முக்கிய ஆக்கங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை என்பதும், பா ஹியன் தர்மகீர்த்தியையோ அவர் சமகாலத்தில் இருந்த மற்ற பௌத்த ஆசிரியர்களையோ குறிப்பிடவில்லை என்பதும், “தர்மகீர்த்தியின் காலம் சுமார் கி.பி. 640-க்குப் பிறகு தான்” என்னும் தரப்புக்கு வலு சேர்க்கிறது.

இதையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கையில், ஆதி சங்கரர் காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறது. குறிப்பாக, தர்மகீர்த்தியின் காலமாகிய கி.பி. 640 க்குப் பிறகு என்று பார்த்தால், ஆதி சங்கரர் அதிகபட்சம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் வாழ்ந்திருக்க முடியும் என்று விளங்குகிறது.

ஒரு ஆட்சேபமும் அதற்குச் சமாதானமும் 

நிற்க. திரு சுப்ரமணியன் சுவாமி இந்திய வரலாற்று ஆராய்ச்சி பற்றிய ஒரு கருத்தை முன்வைக்கிறார். அவருடைய பேச்சிலிருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை இங்கே. கிரேக்க  மொழியில் அமைந்துள்ள மெகஸ்தனீசு எழுதிய “இண்டிகா” என்ற இந்திய யாத்திரை ஆவணத்தில் உள்ள “ஸாண்ட்ரகூட்டஸ் (Sandracottus)” என்னும் பெயரை மௌர்ய சாம்ராஜ்யத்தின் சந்த்ரகுப்த மௌர்யருடன் இணைத்து, அவர் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுகிறதாம். அதை வைத்துத் தான் புத்தர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுகிறதாம். ஆனால், “இந்த ஸாண்ட்ரகூட்டஸ் சந்த்ரகுப்த மௌர்யர் அல்ல, குப்தர் காலத்துச் சந்த்ரகுப்தரே” என்பதற்குச் சில வாதங்களை சுப்பிரமணியம் சுவாமி முன்வைத்துள்ளார். “சந்த்ரகுப்த மௌர்யரை ஸாண்ட்ரகூட்டஸ்ஸுடன் தவறாக முடிச்சுப் போடுவதால் தவறான காலக்கணிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆகையால், புத்தர் காலம் கி.மு. 15-ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையது” என்றும் கூறியுள்ளார். சுப்ரமணியம் சுவாமி கூறுவது உண்மையாகவே இருக்கட்டும். இது எந்த விதத்திலும் “சங்கரர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு” என்ற கருத்துக்கு ஆதாரமாகாது. ஏனெனில், நாம் இக்கட்டுரையில் இதுவரையில் காட்டியுள்ள சான்றுகள் புத்தர் காலக் கணக்கையோ அல்லது எந்த ஒரு இந்திய சக்கரவர்த்தியின் காலக் கணக்கையோ வைத்து நிர்மாணிக்கப்படவில்லை என்பது தெளிவு. மேலும், சுப்பிரமணிய சுவாமியே அதே கட்டுரையில் பா ஹியனின் காலத்தைக் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்றே கூறியுள்ளார். அவருக்கும் பிற்பட்டவராகிய தர்மகீர்த்தி கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலோ அதற்கு முன்பாகவோ வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பது மேலும் உறுதியாகிறது.
 
சான்று 6:

இது சற்று சிக்கலான சான்றாக இருப்பதால் “சங்கரர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்” என்ற தரப்பிற்கு இதை முக்கிய ஊன்றுகோலாக நாம் கொள்ளவில்லை. செய்தியை மாத்திரம் கூறி விடுகிறேன்; அதற்கு மேல் நடுநிலையாளர்கள் நிர்ணயிக்கட்டும்.

குமரீல பட்டர் (Kumarila Bhatta) என்னும் மீமாம்ச்சகர் சுலோக வார்த்திகம், தந்திர வார்த்திகம் என்று இரண்டு நூற்களை இயற்றியுள்ளார். இவர் காளிதாசனுடைய ஒரு வாக்கியத்தைத் தம் தந்திர வார்த்திக நூலில் எடுத்துள்ளார். அந்த வாக்கியமானது,

அஸம்சயம் க்ஷத்ர-பரிக்ரஹ-க்ஷமா யத் ஆர்யம் அஸ்யாம் அபிலாஷி மே மன:
ஸதாம் ஹி ஸந்தேஹ-பதேஷு  வஸ்துஷு ப்ரமாணம் அந்த:காரண ப்ரவருத்தய:

[அபிஞான சகுந்தலம், 1.21, பார்க்க: படிமம் 2]

என்னும் காளிதாசனின் அபிஞான சாகுந்தலத்தில் காணப்படுகிறது. குமரீலரோ தந்திர வார்த்திகத்தில், மீமாம்ச சாத்திரம் பற்றிய ஒரு கருத்தைப் பற்றி விசாரிக்கும்போது “வித்வான்களால் கூறப்படுவதிலிருந்து அறியப்படும் இத் தகவல்,  பிரசித்தமாகக் கவிகளால் (கவிகளின் வாக்கியத்தால்) நிரூபிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டு, மேற்கண்ட அபிஞான சகுந்தல சுலோகத்தின் இரண்டாம் பகுதியை ஆதாரமாகக் காட்டுகிறார் (பார்க்க: படிமம் 1, பக்கத்தின் முதல் இரண்டு வரிகள்).

சங்கர விஜய நூற்களில் சங்கரர் குமரீல பட்டரைச் சந்தித்ததாக வருகிறது. அவர் சீடராகிய மண்டனரை விவாதத்தில் வென்று, அவரைத் தம் சீடராக்கிக் கொண்டார் என்றும் வருகிறது. ஆனால், இதை ஆதாரமாகக் கொண்டு  நாம் “சங்கரர் காலத்துக்குக் குமரீல பட்டர் முந்தியவர்” என்று நிரூபிக்கத் தேவையில்லை. கேள்விக்கு இடமில்லாதபடி வேறு விதமான ஆதாரமும் இருக்கிறது: மண்டன மிச்ரர் என்பவர் எழுதிய “பிரம்மசித்தி” (Brahmasiddhi) என்ற நூலில், தந்திர வார்த்திகத்தையும் சுலோக வார்த்திகத்தையும் மேற்கோள் காட்டியிருப்பதை அந்நூலைப் பதிப்பித்த தொகுப்பாளர் குப்புசாமி சாஸ்திரி அவர்கள் தெளிவாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். பார்க்க: படிமம் 3, படிமம் 4. இந்த மண்டன மிச்ரர் சங்கரர் காலத்தவர் என்று மிகத் தெளிவாகக் கூற முடியும். ஏனெனின், பிரம்மசித்திக்கு உரை எழுதிய சங்கபாணி என்ற பிராசீனர் அந்நூலில் ஓரிடத்தில் சங்கரர் கொள்கை கண்டிக்கப்பட்டுள்ளதைக் காட்டியுள்ளார். (பார்க்க: படிமம் 5, பக்கத்தின் 13-வது வரி. இதில் சங்கரருடைய கொள்கையை “பகவத்பாதீய மதம்” என்று சங்கபாணி குறித்துள்ளார்). இங்கு மண்டனர் எதிர்க்கும் கொள்கையும் சங்கரருடைய சூத்ரபாஷ்யம் 3.3.32-இல் தெளிவாக உள்ளது.இனி, “இந்த மண்டன மிச்ரர் சங்கரர் காலத்துக்கு வெகு காலம் கழித்து இதை எழுதியிருக்கலாமே” என்று கூற இடமில்லாதபடி, சங்கரரின் முதல் சீடராகிய சுரேஸ்வரர் மண்டனருடைய சித்தாந்தத்தை பிருகதாரண்யக வார்த்திகத்தில் ஒரு இடத்தில் கண்டித்துள்ளார். இதை டீகை எழுதிய ஆனந்தஞானர் சுட்டியும் காட்டுகிறார். (பார்க்க: படிமம் 6 -பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகம் 4.4.796 மற்றும் ஆனந்தஞானர் டீகை; ஆனந்தஞானரும் விவரம் தெரியாதவர் அல்லர். அவர் மெத்தப் படித்த பண்டிதர் என்பது அவர் பல்வேறு தத்துவ மேதைகளின் நூற்களிலிருந்து மேற்கோள் எடுப்பதை வைத்துக் கூற முடியும்.) அது தவிர, சுரேஸ்வரரின் நைஷ்கர்ம்யசித்தியிலும் மண்டனருடைய பிரம்மசித்தி விமர்சிக்கப்பட்டுள்ளது என்று குப்புசாமி சாஸ்திரி குறிப்பிடுகிறார். ஆகையால், மண்டனரையும் சங்கரரையும் சம காலத்தவராகத்தான் ஏற்க வேண்டும். ஆகையால் சங்கரர் காலத்திற்குச் சமகாலத்தவர் மண்டனர், மண்டனர் காலத்திற்கு முந்தியவர் குமரீலர், குமரீலர் காலத்திற்கு முந்தியவர் காளிதாசர் என்று தெரிய வருகிறது.

இனி, காளிதாசன் காலத்தை நிர்ணயிக்கும் பெரும் சிக்கலுக்கு வருகிறோம். இதில் பலருக்குப் பல அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன. வரலாற்று அறிஞர்கள் சிலர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகின்றனர். இது நிரூபிக்கப்படுமானால், சங்கரர் காலத்தை 8-ஆம் நூற்றாண்டாக ஏற்க மேலும் ஒரு சான்று கிடைத்துவிட்டதாகிறது. எப்படி இருப்பினும், இது வரை எவரும் “கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முன் காளிதாசர் வாழ்ந்திருக்கிறார்” என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. அத்துடன் இந்தியாவிலும் பல காலமாக, விக்ரமாதித்யரின் அரசவையில் “நவரத்தினங்களுள்” ஒருவராகக் காளிதாசன் கருதப்படுகிறார். சுப்பிரமணிய சுவாமி கூறும் “சந்திரகுப்தர் சர்ச்சை” முடியும் வரை காளிதாசன் காலத்தை நடுநிலை நின்று நிர்ணயிப்பது கடினமாகவே இருக்கும் என்பது என் கருத்து. எனினும், மேற்கண்ட சுப்பிரமணிய சுவாமியின் வாதத்தோடு உடன்பட்டால் கூட விக்கிரமாதித்தர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று கருதுவதற்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை. ஆகையால், காளிதாசர்-குமரீலர்-மண்டனர்-சுரேஸ்வரர் சான்று சங்கரர் காலத்தைத் துல்லியமாக நிரூபிக்கப் பயன்படாவிடினும், இச்சான்ரும் “சங்கரர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு” என்ற தரப்புக்குப் பெரும் பலவீனம் அளிக்கிறது என்றே கொள்ள வேண்டும்.

முடிவுரை: ஆய்வுக்கு எடுக்கப்பட்ட நூற்கள், சில கேள்விகள், எண்ணங்கள்

adi_shankara_statue

இந்த ஆய்வில்காட்டப்பட்ட சான்றுகள் முக்கியமாக Hajime Nakamura-வின் “A History of Vedanta Philosophy, Vol. 1 (1999)”-இலிருந்து எடுக்கப்பட்டவை. அது தவிர, “Journal of Oriental Research, Madras (1929)”-இதழில் திரு தி.ஆர். சிந்தாமணி அவர்கள் சங்கரர் காலம் பற்றியதொரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதிலிருந்தும், குறிப்பாக வாசஸ்பதிமிச்ரர்-பாஸ்கரர்-பத்மபாதர் குறித்த சான்றுகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரம்மசித்தி பற்றிய ஆராய்ச்சி Allen Wright Thrasher என்பவர் எழுதிய “The Advaita Vedanta of Brahma-siddhi (1993)” என்ற நூலில் காணப்படுபவை. இந்நூற்கள் பயன்படுத்தப்பட்ட முறை குறித்து ஒரு முக்கியமான தகவல்:

நான் இந்நூல்களைத் துணையாகக் கொண்டு தான் சொந்த ஆராய்ச்சி செய்தேன். அவர்கள் கூறுவதை மூல நூலைப் பார்க்காமல் கிளிப்பிள்ளையைப் போல, “இவர் சொன்னார், அவர் சொன்னார்” என்று இங்கு திரும்பச் சொல்லவில்லை. முடிந்த அளவு அவர்கள் கூறும் சான்றுகள் சரியாக உள்ளனவா என்று மூல நூற்களின் துணைகொண்டு பார்த்துவிட்டு, சரியாக இருந்தால் பக்கங்களைப் படிம வடிவிலும் கட்டுரையிலேயே சுட்டியுள்ளேன். மூல நூல்களைப் பற்றிய மேற்கொண்ட தகவல்களை அச்சுட்டிகளின் துணைகொண்டு கண்டுகொள்க.

இது வரை நாம் பார்த்த சான்றுகளின்படி, ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதி காலத்திற்கும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திற்கும் இடைப்பட்டது என்று நம்ப வலுவான சான்றுகள் உள்ளன. சிலர் சங்கரர் காலத்தைக் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்று கொள்கின்றனர். சிலர், கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இருந்த ஒரு ‘அபிநவ சந்கரருடன்’ நாம் குழப்புவதாகக் கூறுகிறார். அப்படியானால், பத்மபாதரும் சுரேஸ்வரரும் ஆனந்தஞானரும் குழம்பியதாகக் கொள்ள வேண்டும். அல்லது, ‘அபிநவ சங்கரர்’ போல ஒரு ‘அபிநவ பத்மபாதர்’ இருந்ததாகவும், ‘அபிநவ சுரேஸ்வரர்’ இருந்ததாகவும், ‘அபிநவ ஆனந்தஞானர்’ இருந்ததாகவும் புதிதாகக் கற்பிக்கவேண்டும். கி.மு. 5-ஆம் நூற்றாண்டு தரப்பில் உள்ளவர்களிடம் முறையான விவாதம் நடக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு இரண்டு கடமைகள் உண்டு:

(1) சங்கரர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்று நம்புவதற்கு கல்வெட்டின் உருவத்திலோ அல்லது ‘இடைச்செருகல்’ என்று தள்ளுவதற்கு இடமில்லாத ஆவணத்தின் உருவத்திலோ வரலாற்றுச் சான்று ஏதேனும் உள்ளதா என்று ஆதாரத்துடன் பொறுமையாக நாம் கட்டியது போல வரிசைப்படுத்திக் காட்ட வேண்டும்.

(2) அது மாத்திரம் போதாது. பின்வரும் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும்:

  • காளிதாசர் காலம் கி.மு 5-ஆம் நூற்றாண்டுக்கும் முன்னது என்று நம்புவதற்குச் சான்று உண்டா?
  • தர்மகீர்த்தியின் காலம் எது? யீ ஜிங் ஏன் தர்மகீர்த்தியைத் தம் காலத்திற்கு அருகாமையில் வாழ்ந்தவராகக் குறிப்பிடுகிறார்?
  • பா ஹியன், யுவாங் சுவாங், யீ ஜிங் ஆகியவர்களுடைய காலம் சீன தேசத்து சக்கரவர்த்திகள் காலத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. மூவரின் காலம் முறையே கி.பி. 5-ஆம், கி.பி. 7-ஆம், கி.பி. 7-ஆம் நூற்றாண்டுகள் என்று அறியப்படுகிறது. தர்மகீர்த்தி கி.மு. 6-ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தார் என்றால் ஏன் பா ஹியனும் யுவாங் சுவாங்கும் தர்மகீர்த்தியைக் குறிப்பிடவே இல்லை? அத்துடன், பா ஹியன் தர்மகீர்த்திக்கு அண்மையிலும் சற்று முன்னும் வாழ்ந்த பல பௌத்த பண்டிதர்களைப் பற்றி ஒரு பேச்சு கூட எடுக்கவில்லையே?

இது வரை கி.மு. 5-ஆம் நூற்றாண்டு தரப்பிலிருந்து வரும் வாதங்கள், மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலின் உருவத்தில் வந்ததில்லை. மாறாக, அபத்தமாகச் சிலர் (குறிப்பாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் Theosophical society-ஐச் சேர்ந்திருந்த Subba Row என்பவர்) “சங்கரரின் காலம் புத்தர் நிர்வாணம் அடைந்து 52 ஆண்டுகளுக்குள்” என்றும், “சங்கரர் பரமகுருவாகிய கௌடபாதர் புத்தருக்கும் முன்பு வாழ்ந்தவர்” என்றும் கூறுகின்றனர். இப்படி இருக்கச் சற்றும் வாய்ப்பே இல்லை. யீ ஜிங் “ஆதி காலத்தில் நாகார்ச்சுனர் முதலானோரும், மத்திய காலத்தில் வசுபந்து முதலானோரும், அண்மைக் காலத்தில் தர்மகீர்த்தி முதலானோரும் பௌத்த மதம் செழிக்கப் பல தொண்டுகளைப் புரிந்துள்ளனர்” என்று குறிப்பிடுகிறார். ஒரு 50 ஆண்டு காலத்தை “ஆதி காலம், மத்திய காலம், அண்மைக் காலம்” என்று மனநோயாளி கூட பிரிக்க மாட்டான். இத்தகைய நகைக்கத்தக்க விதண்டாவாதங்களை மாற்றுத்தரப்பில் உள்ளவர்கள் இனி தவிர்க்க வேண்டும்.

இன்னொரு ஆட்சேபத்தை ஒரு நண்பர் எழுப்பினார். அதாவது “ஆதி சங்கரர் காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பின் என்று கூறிவிட்டால் இந்து மதம் கிறித்தவ இசுலாமிய மதங்களுக்குப் பிறகே தோன்றின” என்று புனித தோமையாரைப் பின்பற்றும் சிலர் கூற இடமிருக்குமாம். சங்கரர் தம் பாஷ்ய நூல்களில் ஏகப்பட்ட சுருதி, ஸ்மிருதி, இதிகாச, புராண, பகவத் கீதா மேற்கோள்களையும், பல ரிஷி வாக்கியங்களையும், த்ரமிடர், டங்கர், பர்த்துரு பிரபஞ்சர், கௌடபாதர் முதலான ஆச்சாரியார்களையும் மேற்கோள் எடுத்துள்ளார்.  மேலும், கீதா பாஷ்ய முன்னுரையில் சங்கரர் கீதைக்கு தம் காலத்திற்கு முன் பல பேர் பாஷ்யம் செய்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து, வேதம், கீதை, உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்ட வேதாந்த மதம் என்பது வியாசர் காலம் தொடங்கி ஒரு பெரும் தொடர்ச்சியான ஆறாக ஓடிக்கொண்டிருப்பது சிறுவர்களுக்கும் விளங்கும். அது ஆபிரகாமிய மத வெறியர்களுக்குப் புரியவில்லை என்றால் அவர்களைப் பார்த்து உலகம் சிரிக்கும் என்பதில் ஐயமில்லை.

175 Replies to “ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை”

  1. நன்றி திரு கந்தர்வன்

    இது ஒரு மிக நல்ல முயற்சி – பல விஷயங்களை அலசி உள்ளீர்கள் பகவத்பாதரை கீமுவுக்கு தள்ளி நாம் எதை சாதிக்க போகிறோம் – மாறாக அது அவர் இந்திய ஞான மார்கத்திற்கு ஆற்றிய பங்கை தகர்க்கும் ஒரு விஷயமாகவே ஆகிவிடும் – இது விஷமிகளுக்கு பெரும் துணை போகும்

    நீங்கள் கொடுத்துள்ள சான்றுக்கு உப சான்றுகள் இதோ – அதற்க்கு முன் – உங்களது கட்டுரையில் ஆதி சங்கரரை பற்றி உள்ள ஒரு கல்வெட்டை பற்றி நீங்கள் பேசவே இல்லை – இதை பற்றி விஷயம் தெரிந்த ஒரு நண்பரிடம் கேட்டேன். அவர் பெரிதாக சிரித்துவிட்டு – இதய ஒரு சான்றாக எடுக்கிறார்கள் என்று வியந்தார். அதில் உள்ள சிக்கல்களை புட்டு புட்டு வைத்தார் – அவர் சொன்னவுடன் எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது – இந்த தளத்தில் பொத்தம் பொதுவில் இதை மேலும் விவரித்தால் அது தீய சக்திகளுக்கு விருந்தாகிவிடும் என்பதால் மௌனம் சாதிக்கிறேன்

    நாம் சான்றுகளை இருவாரக பிரிக்கலாம்

    அனுமானம் சார்ந்து எழும் கேள்விகள்
    சங்கரரின் வ்யாக்யானங்களில் வரும் மேற்கோள்கள்

    முதலில் அனுமானம்

    நிறைய அனுமானம் சம்பந்தப்பட்ட கேள்விகள் இருந்தாலும் சிலவற்றை பொத்தம்போதுவில் கேட்க முடியாத காரணத்தால் சிலவற்றையே முன் வைக்கிறேன்

    – சங்கரர் கீமுவில் தோன்றினார் என்றால், அவர் ஏற்படுத்திய தாக்கத்தை தாண்டியும் புத்தமும் ஜைனமும் இந்தியால் எப்படி பரவி இருந்திருக்க முடியும் – கீ பீ ஆறாம் நூற்றாண்டு வரை இந்தியாவில் புத்தம் பெரும் வலுவுடன் இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே – ஹுவான் சுவாங் இங்கு ஆறாம் நூறாண்டில் வந்து யோகசார (விஞானவாத) புத்தத்தை பயின்று சென்றார். இதனால் சங்கரர் முன் வைத்த வாதங்களும் அவரது அரும் பணியும் எடுபடவில்லை என்ற தவறான நிலை வந்துவிடும் அல்லவா?

    – அத்வைதத்தை எட்டாம் நூறாண்டிற்கு முன் வந்த ஆழ்வார்களோ நாயன்மார்களோ குறிப்பிடவே இல்லை – அவர்கள் சாங்யத்தையும், புத்தத்தையும், ஜெய்னத்தையும் குறிப்பிட்டு உள்ளனர். பின் வந்த நாயன்மார்களும் ஆழ்வார்களும் மட்டுமே அத்வைதத்தை குறிப்பிட்டு பாடி உள்ளனர்

    – சங்கரர் புத்தத்தை பெரிதாக எதிர்க்கவில்லை – ஒரு சில இடங்களில் மட்டும் clean bowled செய்கிறார், கிட்ட தட்ட நீ ஒரு காமெடி பீசு என்கிறார். அவர் குறி வைப்பது சான்க்யத்தை தான். புத்தம் வலுவாக இருந்திருக்குமாயின் அவர் அதை நிச்சயம் வெகுவாக எதிர்த்திருப்பார். அவர் செய்யாததற்கு காரணம் அந்த பணியை நியாய-வைசேசிகர்கள் மற்றும் பூர்வ மிமாம்சகர்கள் செய்து முடித்ததால் தான் (இதை சங்கர மடங்களே ஒப்பு கொள்கின்றன) . சங்கரர் கீமுவில் பிறந்திருந்தால் அவர் நிச்சயம் புத்தத்தை எதிர்ப்பதில் கவனம் செய்திருப்பார் – புத்தம் இந்தியாவில் 6-8 நூறாண்டு வாக்கில் கிட்ட தட்ட அழிந்துவிட்ட நிலையை அடைந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அப்போ சான்க்கியம் பரவி இருந்ததா என்றால் – ஆமாம் என்று தான் சொல்ல வேண்டும். நியாய-வைசேசிக, புத்த, ஜைன மதங்கள் யாவும் சான்க்யத்தின் பல பரிமாணங்களாக உத்தர காண்டத்தை எதிர்த்து நின்றன.

    நூல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள்

    இதற்குள் புகுமுன் புத்த மத வளர்ச்சியை பற்றி சில குறிப்புகள்

    புத்த மதம் மகாயான மற்றும் ஹினாயான (தேரவாத) என்ற இரு முக்கிய பிரிவுகளை கொண்டது. மகாயான வலுவடைந்து ஹினாயான மார்க்கம் விரைவிலேயே ஷீனித்தது (அசோகர் மகாயான மார்கத்தை தழுவி அதை பரப்பினார்)

    மகாயான பிரிவு சற்று நலிவடைந்த போது தான் மாத்யாமிக மார்க்கம் தோன்றி புகழை அடைந்தது (ஜென் மார்க்கமும் திபெத்திய மார்க்கமும், சீனாவில் இருக்கும் புத்தமும் இதை தழுவியதே) – இதற்க்கு பிறகு யோகாசாரம் என்ற மார்க்கம் தோன்றி பிரபலமடைந்தது (இது சீனாவில் பிரபலமாக உள்ளது)

    – சங்கரர் தனது பாஷ்யத்தில் வைசேசிக மத்ததை கண்டிக்கிறார் – கணாதர் கீமுவில் பிறந்தார் என்று வைத்துக் கொண்டாலும், சங்கரர் எதிர்ப்பது ஒரு வளர்ந்துவிட்ட சாங்க்ய கொள்கையை தான். Max Muller இந்த சாங்க்ய நூல் கீ மூ முதலாம் நூறாண்டிற்கு முன் இருக்க வாய்ப்பில்லை என்று நிறுவுகிறார் (குறிப்பு இது ஒரு வலுவான ஆதாரம் இல்லை)

    – சங்கரர் ப்ரஹதாரண்யா உபநிஷத்தில் ஸ்வயம் ஜ்யோதிர் பிராமணத்தில் புத்த மத கருத்துக்களை கண்டனம் செய்கிறார் – அவர் கண்டனம் செய்வது மாத்யாமிக மற்றும் யோகசார(விஞானவாத) புத்த மத கருத்துக்களை (புத்தத்தில் மொத்தம் நான்கு பிரிவுகள் உள்ளன) – மாத்யாமிக மதத்தை ஸ்தாபித்தவர் நாகார்ஜுனர் என்பவர் – இவர் தென்னாட்டை சேர்ந்தவர். இவரது காலம் கீபி 1-2 ஆம் நூற்றாண்டு தான் என்று புத்த மதத்தவர்களே (மாத்யாமிகர்களே – சூன்ய-வாதர்கள் ) ஒப்புக் கொள்கிறார்கள் – இவர்தம் கொள்கையை சங்கரர் கண்டித்துள்ளமையால் சங்கரர் கீமுவில் அவதரித்தாக சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது – இதை கீமுவாதிகள் எப்படி சரி கட்டுவார்கள் – ரொம்ப சுலபம் நாகர்ஜுனரும் கீமுவில் தான் பிறந்தார் என்று சொன்னால் போதுமே. ஆனால் இதையும் செய்ய முடியாத வகையில் சில ஆதாரங்கள் உள்ளன – அலெக்சாண்டரும், குப்தரும், அசோகரும் நமக்கு உதவுவார்கள்

    (சங்கரர் எதை எதித்தார் எப்படி எதித்தார் என்ற தகவல்கள் வேண்டுமானால் தருகிறேன்)

    – யாவரும் மறுக்க முடியாத (அல்லது இது வரை மறுக்காத) ஒன்று மா(மா) மன்னன் அலெக்சாண்டர் இந்தியா மீது படை எடுத்த சுமார் காலம் 326 BCE என்பது.
    அவர் திரும்பும் போது அவருடன் (அவரது படையில் சிலரும்) புத்த மதத்தையும் எடுத்து சென்றார். இதன் காரணமாகவே கிரேக்கத்தில் கிரகோ புத்திசம் என்று புத்தத்தின் ஒரு பிரிவு பரவியது. கிரகோ புத்திசம் என்பது மகாயான புத்திசத்தை முழுதும் தழுவியது. புத்தத்தை சிரிது ஆராய்ச்சி செய்தவர்கள் அனைவரும் அறிந்தது என்னவென்றால் – மகாயான புத்திசம் ஒரு காலகட்டத்தில் அறவே அழிந்து மாத்யாமிக புத்திசம் (நாகார்ஜுனர் ஸ்தாபித்த) வளர்ந்தது – மாத்யாமிக மார்க்கம் மிக பிரபலாமாக இருந்திருந்தால் கிரகோ மார்க்கமும் மாத்யாமிகத்தை ஒட்டியே இருந்திருக்கும் ஆனால் அது மாத்யாமிகத்தின் தாய் மார்கமான சுத்த மகாயான வடிவிலேயே (வளர்ச்சி பெராத) இருக்கிறது.(இன்று இருக்கும் ஜென் மார்க்கம், ஜப்பானில், கொரியாவில் இருக்கும் புத்தம் சுத்த வடிவில் அல்லாமல் மாத்யாமிகம் அல்லது யோகசாரத்தை பின்பற்றியே உள்ளன)

    அடுத்து சந்திர குப்தா மௌரியரை பற்றியது – இவர் தான் அலேக்சாண்டர் கைபற்றிய பகுதிகளை மீட்டெடுத்தார் – இவர் தான் இந்தியாவுக்கு நிறைய பாரசீகர்களை இறக்குமதி செய்தார்

    இவரது பேரன் தான் அசோகர் நாம் எல்லோரும் அறிந்தது அசோகர் மகாயான மார்கத்தை தழுவினார் என்பதே – நாகர்ஜுனர் கிமுவில் பிறந்திருந்தால் இவர் மாத்யாமிக மார்க்கத்தையே தழுவி இருப்பார்

    அசோகர் இங்கிருந்து நிறைய புத்த மதத்தவரை ஐரோபியவிர்க்கு ஏற்றுமதியும் செய்தார் – அதை பற்றிய ஒரு கல்வெட்டு (கிரேக்க மொழியில்) ஆப்கானிஸ்தானில் உள்ளது – அதாவது அசோகர் நிறைய புத்த பிக்ஷுக்களை இரண்டாம் அலெக்சாண்டர் ஆண்ட நாட்டிற்கு அனுப்பினார் என்று. இரண்டாம் அலெக்சாண்டர் மாமன்னன் அலேசாண்டருக்கு முன்னவராக இருந்திருக்க முடியாதல்லவா?

    அடுத்து சங்கரர் யோகசார தத்துவங்களை (விஞானவாதம் – அதாவது புத்தியே எல்லாவற்றுக்கும் காரண வஸ்து,அதுவே பார்க்கிறது, சாப்பிடுகிறது உயிர் என்று ஒன்றில்லை என்பது ) டார் டாராக கிழிக்கிறார் அதே ஸ்வயம் ஜ்யோதி ப்ராம்மனத்தில்

    யோகாசாரத்தை ஸ்தாபித்தவர் அசங்கர் – இவர் கீபி நான்காம் நூற்றாண்டை சேர்ந்தவர் – கீமுவில் பிறந்த சங்கரர் கீபியில் தோன்றிய கருத்தை கண்டித்தார் என்றால் அது நம்பும்படியாக இல்லை

    இந்த யோகசார மார்கத்தை கற்கவே ஹுவான் சுவாங் ஆறாம் நூற்றாண்டில் இந்தியா வந்தார் –

    சங்கரர் கீமுவில் பிறந்து யோகசாரமும் கீமுவில் ஏற்பட்டு இருந்தால் ஹுவான் சுவாங் உண்மையில் இந்திய வந்து அத்வைதம் தானே கற்றிருப்பார்.

    ஆதலால் சங்கரர் கீமுவில் பிறந்தார் ஆனால் அவர் செய்த பெரும் முயற்சிகளை தாண்டியும் புத்தம் கீபி ஆறாம் நூற்றாண்டு வரை சும்மா ஜம்முன்னு கோடி katti பறந்தது என்று சொல்வது சங்கரருக்கு இழுக்கையே சேர்க்கும்

    நமாமி பகவத்பாதம்

  2. திரு.சு.சுவாமி சொல்வது அவருடைய சொந்தக் கருத்தல்ல. மஹா பெரியவர் அவர்கள் கூறியதாக தெய்வத்தின் குரல் என்னும் புத்தகத்தில் உள்ளது.

  3. திரு கிரி,

    அப்படியானால் அசோகா சக்கரவர்த்தி அலெக்சாந்தரின் வழி வந்தவர்களைப் பற்றி உள்ளதே. அசோகர் கி.மு.500-க்கும் முந்தையவரானால் அதை எப்படி விளக்க முடியும்? அலெக்சாந்தரின் காலம் கி.மு.4௦௦-க்கும் பிந்தியது என்றல்லவா நிர்விவாதமாக அறியப்படுகிறது?

  4. திரு.Sarang,
    ஆதி சங்கரர் கி.முவில் பிறந்தவரா அல்லது கி.பியில் பிறந்தவரா என்ற
    சர்ச்சையில் செல்லும் அளவு எனக்கு வரலாற்றில் பரிச்சயம் இல்லை.

    ஆதி சங்கரர் கி.மு வில் தோன்றியிருந்தால் புத்த மதம் எப்படி கி.பியில்
    பிரசித்தமாக இருந்திருக்கும்? இது சங்கரருக்கு இழுக்கு என்று கூறியுள்ளீர்கள்.

    ஆதி சங்கரர் கத்தியையும் அளவற்ற, அறிவற்ற அடிமைகளையும் கொண்டு ஆப்பிரகாமிய மதங்களைப் போன்று வேதாந்த மதத்தை ஸ்தாபிக்க வில்லை.

    “பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்” என்ற வரையறைக்கு உட்பட்டுதான்
    வாதிட்டு வந்தார். இன்றும் கூட “Extreme ideology” கொண்டுள்ளவர்களை நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே!

    எதார்த்தத்திற்கு ஒத்து வராத, தீவிர அஹிம்ஸா முறைகளை போதித்த
    புத்த மதம் பொது மக்களுக்கு ஒரு கிக்காகவே இருந்திருக்கலாம்.

    ஆதி சங்கரருக்கு இதிலெல்லாம் இழுக்கே வர முடியாது. அவரிடம் வாதம்
    புரிந்திருந்தால் வேதாந்தத்தின் மேன்மையை விளங்க வைத்திருப்பார்.
    தகவல் பரிமாற்றம் என்பதே இல்லாத அக்காலத்தில், இந்தியா போன்ற
    மிகப்பெரிய தேசத்தில் அவர் செல்லாத, செல்ல முடியாத பிரதேசங்களில்
    புத்த மதம் அவருக்கு பிறகும் பல காலம் இருந்திருக்க முடியும்.

    இஸ்லாம் மிகப்பெரிய அளவில் எகிப்தில் ஆக்கிரமிப்பு செய்தாலும்
    இன்று வரை Coptic Christians இருக்கத்தானே செய்கிறார்கள்.

    காஷ்மீரில் 1000 ஆண்டு அராஜகத்திற்கு பிறகும் 4 இலட்சம் பண்டிட்டுகள்
    1989 வரை வாழத்தானே செய்தார்கள்?

    ஈரானில் பார்ஸிகள் மிகப்பெரும் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும்
    இன்று வரை சில ஆயிரம் பேர் வாழத்தானே செய்கிறார்கள்.

    ஆதி சங்கரர் கி.பி 700களில் தோன்றியிருந்தாலும் அதற்கு பிறகும் பலர்
    புத்த மதத்தில் இருந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். ஆதி சங்கரருக்கு
    இதில் எப்படி இழுக்கு வர முடியும்?

  5. // அசோகா சக்கரவர்த்தி அலெக்சாந்தரின் வழி வந்தவர்களைப் பற்றி உள்ளதே //

    “அசோக சக்கரவர்த்தி பற்றிய கல்வெட்டு ஒன்றில் இரண்டாம் அலெக்சாந்தர் ஆட்சிக் காலத்தில் அவர் புத்த பிக்ஷுக்களை கிரேக்க நாட்டிற்கு அனுப்பியதாக உள்ளதே” என்று திருத்திக் கொள்ளவும்.

  6. கட்டுரை சம்பந்தமாக ஒரு முக்கியமான சிறு அறிக்கை

    கால ஆராய்ச்சி செய்பவர்களுள் தர்மகீர்த்தி காலம் குறித்த சிறு கருத்து வேறுபாடு உள்ளதென்று தெரிகிறது. வேறுபாடும் தரப்புப் படி படி பார்த்தால், தர்மகீர்த்தி காலத்தை கி.பி.6-ஆம் நூற்றாண்டின் மத்திக்கு, அதாவது ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் தள்ள வேண்டும் என்று தெரிகிறது.

    கட்டுரையில் குறிப்பிடப்பட்ட தர்மகீர்த்தி ஏழாம் நூற்றாண்டில் தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற வாதம் argumentum ex nihilo வாதம் என்று தெரிகிறது. ஆனால், யுவாங் சுவாங் குறிப்புப்படி பார்த்தால் தர்மபாலர் காலம் கி.பி.550-க்கு அருகாமையில் தான் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஏனென்றால் தர்மபாலருடைய சீடரான சீலபத்ரர் என்பவரை யுவாங் சுவாங் நாளந்த பல்கலைக் கழகத்தில் சந்தித்ததாகக் கூறுகிறார்.

    தர்மபாலரோ தர்மகீர்த்தி பற்றித் தம் ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்ற செய்தியும், தர்மகீர்த்தி அதே தர்மபாலர் உட்பட ‘ஈச்வர சேனர்’ என்பவரிடமும் ஆக இரண்டு ஆசான்களிடம் பயின்றார் என்ற செய்தியையும் சிலர் ஆதாரமாகக் கொள்ளுவதாகத் தெரிகிறது. இச் சான்றுகளை மூல நூல்களில் தேட முற்பட்டேன், ஆனால் சான்றுகள் கிடைக்கவில்லை.

    எப்படி இருப்பினும், ‘திக் நாகர்’ (Dignaga or Dinnaga) என்பவருடைய ‘பிரமாண வார்த்திகம்’ என்ற நூற்கு தர்மகீர்த்தி காரிகைகளை இயற்றியுள்ளதாக நிர்விவாதமாக அறியப்படுகிறது. யீ ஜிங் ‘அண்மையில் வாழ்ந்தவர்கள்’ என்ற பட்டியலில் தர்மகீர்த்தியோடு சேர்த்து திக் நாகரையும் தர்மபாலரையும் பட்டியல் இட்டுள்ளார். ஆகையால், தர்மகீர்த்தி காலத்தை யீ ஜிங் காலத்திற்கு மிகவும் முந்தியதாகக் கொள்ள இடமில்லை என்றே தெரிகிறது.

    எனினும், தர்மகீர்த்தி காலம் பற்றி சிறிது விவாதம் இருப்பினும், அவர் கால வரையறைகள் கி.பி. ஆறாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. ஏழாம் நூற்றாண்டு இறுதிக்குள் அமையவேண்டும் என்பதில் விவாதமில்லை.

    ஆகையால் சங்கரர் கால வரையறை கூறும் இடைவெளியைச் சற்று நீட்டிப்பது நியாயமாகும். அதாவது, “சங்கரர் கி.பி.550 தொடங்கி கி.பி. 838 என்ற கேள்விக்கிடமில்லாத வரையறைகளுக்குள் எழுந்தருளினார்” என்பது தவிர, இன்னும் துல்லியமாகக் கணக்கிடுவது மேற்கொண்டு ஆராய்ச்சி செய்தாலொழிய அரிது என்றே தெரிகிறது.

  7. திரு பாலாஜி அவர்களே

    நான் அவ்வாறு குறிப்பிட்டது சங்கரர் தோற்றதே இல்லை தோற்கவே போகக் கூடாது என்றும், அவர் கீமுவில் பிறந்திருந்தால் மட்டுமே அவருக்கு பெருமை என்றும் என்னும் சிலருக்காக தான்.

    சங்கரரே இதை குறிபிடுகிறார் – இன்று நான் உங்களை யுக்தியால் வெல்ல முடிந்தது அதார்கான த்ரிஷ்டாந்தகள் இப்போது உள்ளதால் தான் – நாளை நிலைமை மாறலாம் உங்களுக்கு பல திருஷ்டாந்தங்கள் கிடைக்கலாம் – இதில் வெற்றி தோல்வி எல்லாம் இல்லை.

    மேலும் இந்த விஷயத்தோடு நின்றுவிடாமல் பல ஆதரங்களையும் சேர்தே தான் தந்துள்ளேன்

    ராமானுஜர் மாத்வருக்கு பிறகு பதினெட்டாம் நூற்றாண்டு வரை அத்வைததிற்கு பெரும் சரிவே நேர்ந்தது – அதன் பின் அத்வைதம் மீண்டும் பிரபலம் அடைந்தது.

    சங்கரருக்கு பின்னும் புத்தம் இருந்திருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.இதற்கு முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் – அன்றைக்கு மதங்கள் பெருமளவில் தத்துவத்தையே முன்வைத்தன – போட்டி தத்துவ ரீதியாகவே இருந்தது – யாரும் உங்கள் மதத்தில் கிருஷ்ணருக்கு ஏன் இவ்வளவு பொண்டாட்டி, ஏன் விலங்குகளை கும்பிடுகிறீர்கள் என்றெல்லாம் ஏளனம் செய்யவில்லை – தத்துவத்தில் தோற்றால் தோற்றது தான்(அன்றய இந்தியாவை பொறுத்த மட்டில்) – அதன் பிறகு அந்த மதம் தலை எடுக்காது – ஏன் எனில் தத்துவத்தை முன் எடுத்து செல்ல சிஷ்யர்களும், தொண்டகளும் இல்லாமல் போய் விடுவர். இன்று ந்யாய வைசேசிக மதத்தவரை எங்கேனும் பார்க்க முடியுமா – வாய்ப்பே இல்லை, அவர்கள் தத்துவத்தில் தொற்றவர்க்ள். இன்று யோகம் மலிந்துவிட்டாலும் அதை வேதாந்ததுடன் இனைக்காமல் யாரும் முன் வைப்பதில்லை

    – தகவல் பரிமாற்றம் இல்லாத காலத்தில் தான் அத்வைதத்தை இந்தியா முழுதும் பரப்பினார் சங்கரர் – அதற்க்கு தான் திக் விஜயம் செல்வார்கள். அந்த காலத்தில் நேர்மையானவர்கள் வாழ்ந்தார்கள் – ஆதத்தில் தோற்றாலே போதும் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு மதம் மாறிவிடுவார்கள் – இப்படி சங்கரரும் ராமானுஜரும் வாதில் வென்று மதம் மாற்றியவர்கள் எண்ணிலடங்கா.
    நாகர்ஜுனர் என்பவர் வேதம் கற்ற பிராமணர் – அவர் யுக்தியின் மூலமாகவே புத்தத்தில் ஈர்க்கப்பட்டு அதற்கும் பெரும் தொண்டாற்றினார்
    – இதில் தான் இன்றயவருக்கும் அன்றயவருக்கும் உள்ள வித்யாசம் – காஷ்மீரிலும் (இந்தியாவிலேயே) ஹிந்துக்கள் வாழ்வதற்கு காரணம் அவர்கள் ஞானத்தில் தோற்கவில்லை அட்டுழியத்தால் ஒடுக்கப்பட்டதால் தான் – இதே ஹிந்து மார்கத்தை விட மேன்மையான ஒன்றை வெளிநாட்டினர் கொண்டு வந்திருந்தால் நிச்சயம் இன்று ஹிந்துத்வம் பெரும் ஆட்டம் கண்டிருக்கும். இன்று ஒரு ஹிந்து ஒரு நேர்மையான காரணத்திற்கு புத்ததயோ ஜைன மார்கத்தையோ தழுவது என்பது நடக்கப் போவதில்லை

  8. தமிழில் சங்கரர் காலம் குறித்து எழுதப் பட்டிருக்கும் அரியதொரு வரலாற்றுக் கட்டுரை இது. வாழ்த்துக்கள் கந்தர்வன்!

    சங்கரரது காலம் நீங்கள் குறிப்பிடும் கால வரையறைக்கு உள்ளே தான் உள்ளது என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அந்த வரையறைக்குள்ளும் துல்லியமாக பொ.பி 780 – 820 என்பதற்கு ஒரு உறுதியான அகச்சான்று உள்ளது. மாதவ வித்யாரண்யரின் சங்கர திக்விஜயத்தில் “விக்ரமாதித்யன் முடி சூட்டிக் கொண்ட ஆண்டு”க் கணக்கில் கூறப்படும் வருடங்களை வைத்து இதைக் கணித்துள்ளார்கள். இந்த விக்ரமாதித்யன் பிரபலமான குப்த மன்னன் அல்ல. வித்யாரண்யர் வாழ்ந்த கர்நாடகப் பிரதேசத்தில் ஆண்ட ஒரு சாளுக்கிய மன்னன் என்று ஆய்வாளர் கருதுகிறார்கள். இந்திய அரசும் இந்த வருங்களையே அதிகார பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே 1980ல் சங்கரரின் 1200வது பிறந்த நாள் கொண்டாடப் பட்டது.

  9. அன்புள்ள ஜடாயு,

    தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

    // ந்த வரையறைக்குள்ளும் துல்லியமாக பொ.பி 780 – 820 என்பதற்கு ஒரு உறுதியான அகச்சான்று உள்ளது. மாதவ வித்யாரண்யரின் சங்கர திக்விஜயத்தில் //

    மாதவீய/வித்யாரண்யா சங்கரவிஜய நூலை வரலாற்றுச் சான்றாக ஏற்பதில் சில சிக்கல்கள் உண்டு. உதாரணமாக, அந்நூலில் சங்கரர் காலத்திற்கு மிகவும் பிந்தையவராகிய பட்ட பாச்கரருடனும், உதாயனருடனும், ஸ்ரீஹர்ஷருடனும், அபிநவகுப்தருடனும் ஸ்ரீ சங்கரர் நேருக்கு நேர் அமர்ந்து விவாதித்திருப்பதாக வருகிறது.

    மேலும், மண்டன மிச்ரரையும் சங்கரர் சீடர் சுறேஸ்வரரையும் அந்நூல் முடிச்சு போட்டு இருவரும் ஒருவரே என்று முடிவு கட்டுகிறது. இதற்கும் எதிராகப் பல பிராசீன நூல்களிலிருந்து, குறிப்பாக ஆனந்தஞானர் டீகை, சர்வக்ய முனிகளின் சாரீரக கிரந்தம் முதலியவற்றிலிருந்து சான்றுகள் உண்டு. இதைப் பற்றி மகா மகோபாத்யாயர் குப்புசாமி சாஸ்திரி “பிரம்மசித்தி” நூலின் முன்னுரையில் தெளிவாக ஆய்ந்துள்ளார்.

    வெவ்வேறு சங்கரவிஜய நூல்கள் சங்கரருக்கு காலத்தால் பெரிதும் தள்ளித் தள்ளி உள்ள வெவ்வேறு வருடங்களைக் குறிப்பிட்டுள்ளமையையும் கண்டுகொள்ள வேண்டும்.

    மேலும், சங்கரர் காலம் 788-820 என்று வைத்துக் கொண்டால் சில நெருக்கடிகள் வரும். வாசஸ்பதி மிஸ்ரர் காலம் கி.பி.841 என்று பார்த்தால், பத்மபாதர், சுரேஸ்வரர், பாஸ்கரர் ஆகியோரை இருபது ஆண்டுகளுக்குள் திணிக்க வேண்டி வரும். இது சாத்தியமில்லை; ஏனென்றால் பாச்கரருக்கும் சங்கரருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீவத்சாங்கர் என்ற வேதாந்தி இருந்ததாக யாமுனாச்சாரியார் சித்தி திரயத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அப்படிப் பார்த்தால் வாசஸ்பதி மிஸ்ரர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள வேண்டி வரும். அத்துடன் சமணர்கள் சுரேஸ்வரரை விமர்சித்துள்ளமையையும் கண்டுகொள்க. இது பற்றி கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளேன். ஆகையால், கி.பி.700-750 என்று கொள்வதே சரி என்று நினைக்கிறேன்.

  10. திரு.கந்தர்வன் அவர்களே! நான் தெய்வத்தின் குரல் பற்றிக் குறிப்பிட்டது திரு.சுவாமி அவர்களின் கருத்து ஆராய்ச்சியின் விளைவாக இல்லாமல் வேறு இடத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது என்று கூறவே. மஹா பெரியவர் சொன்னார் என்பதற்காக அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. சங்கரருடைய காலம் பற்றி அந்தப் புத்தகத்தில் ஒரு பெரிய அத்தியாயமே இருக்கிறது.

  11. ஆதிசங்கரர், விகிரமதியன் முடிசூடிக்கொண்ட ஆண்டிலிருந்து, இத்தனை வருடங்கள் கழித்து பிறந்தார் என்று கூறியிருப்பது, வித்யாறன்யரின் ஷங்கரதிக்விஜயத்தில் அல்ல (திரு ஜடாயு குரிப்பிட்டிருப்பதுபோல்).

    sringeri மட ஆவணகளில் தான் அவ்வாறு குறிப்பிட பட்டிருந்தது. அவர்கள் அதை குப்தா மன்னர் விக்ரமாதித்யன் என்று எடுத்துக்கொண்டு, ஆதிஷங்கரரின் காலத்தை கிமு முதலாம் நூற்றாண்டு என்று நிர்ணயித்தார்கள். பின்னர் வரலாற்று அறிஞர்கள், அவர் சளுக்க்ய விக்ரமதித்யர் ஆக தான் இருக்க வேண்டும் ஏனெனில், கர்நாடகா சளுக்க்ய பிரதேசத்திற்கு உட்பட்டிருந்தது என்றும் சுட்டி காட்டினார்கள். அதன்படி சங்கரர் கிபி 788 இல் பிறந்தார் என்று sringeri மட அறிஞர்கள் கணக்கிட்டார்கள். இது மேலை நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் முடிவுடன் ஒத்து போனது.

    ஆதிரவி

  12. Dear Gandharvan,
    Thanks for the article.But I have my own doubts about the A.D date of Sri Sankara.
    Kindly go thro deivathin kural ( 5 th volume page 778) in which historical facts given by periyavaa supporting the 477- 509B.C as age of sankara.
    Late Dr.B.V Raman ,a distinguished astrologer from Bangalore ,in his book “notable horoscopes”has given horoscope of Sri Sankara.
    He took the birth date date as 44 B.C.In the foot note ,he says the brth data was taken from the Sringeri mutt records (guru parampara patti)by his illustrious grand father Suryanarain rao and hence no tampering of recirds could have taken place.
    Excepting Sringeri mutt all the other four mutts inclusive of kanchi ,have records to show that the age of sankara was in B.C.
    My simple calculation is: There are 70acharyas till now in kanchi mutt.Considering age or each Sankaracharya as 35 years,it goes beyond 2400 years.
    In Sringeri the no of acharayas is less because there seems to be a breakage in the chain acharyas.
    If Gandharvan, answers to all the points (favouring B.C date)raised in Deivathin Kural,it will be quite interesting.

  13. My response is delayed as I had to wade through ocean of documents to get the relevant one.

    It happens only in India where its tradition is treated with utter disregard by its own people. Rather we trust the views expressed by white skinned people even on the matters like Vedas more than
    our own Sastrajnas. So it is no great surprise that the same is done on Sankara’s date too inspite of the records meticulously maintained by his own established mathas.

    It is very natural that whoever reads the books written by these above people get confused and creates doubt in our mind about the validity of mathas’ claims. I’d continue to believe in our
    traditional accounts until someone conclusively proves it the other way.

    The Kanchi, Dwaraka, Puri and Jyotir mathas all agree on the date of 509BC. Kanchi has 70, Dwaraka has 77+ (not sure of current count), Puri has 144+ (not sure of current count) seers who have adorned their respective peethams. The list of Jyotir matha of Badrikasrama is not available as it ceased to exist between 1776-1941CE. The unbroken records from these mathas have no meaning for these historians.

    Before I start discussing the points raised by Sriman Gandarvan, we need to keep in mind that the identification of Sandrocottus (325 B.C.) of the Greeks with Chandragupta Maurya by Sir Jones was considered to be the “sheet anchor” and based on this assumption, a chronology of Indian history was constructed. We know that Chanakya/kautilya was responsible for installing the Maurya on throne.

    But strangely Megasthanese or none of the greeks mention Bindusara or Asoka.

    The Greek records mention Xandramas and Sandrocyptus as the kings immediately before and after Sandrocottus. These names in any way are not phonetically similar to Mahapadma Nanda and Bindusar, who were the predecessor and successor of Chandragupta Maurya, respectively. However, if Sandrocottus refers to Chandragupta “Gupta”, the Xandramas reckons to be his predecessor Chandrashree alias Chandramas and Sandrocyptus to be Samudragupta. The phonetic similarity becomes quite apparent and also, with the assistance of other evidence, confirms the identity of Sandrocottus to Chandragupta Gupta.

    This puts Buddha in 1887 BCE, Chandragupta Maurya 1534 BCE and Chandragupta Gupta 327 BC. (https://gaurang.org/indian_phil/prasad_gokhale_indian_history.html#Aadi%20Shankara )

    Coming to Sriman Gandarvan’s insistence on Archaeological evidence and Chinese/Buddhist scholars:

    In Chronology of Nepal History, Kota Venkatachalam says that Adi Sankara
    visited Nepal during the reign of Vrishadeva Varma, 18th king of Fifth
    Surya Vamsha Dynasty of Nepal. Adi Sankara reportedly argued effectively
    with the Budhist Priests through philosophical discourses and reduced the
    influence of Buddhism. This is recorded in the Indian Antiquary of December
    1884 pp. 411-428, edited by Buhler. In the Surya Vamsha Dynasty, Vrishadeva
    Varma ruled for 61 years upto 487 BCE (i.e. Kali 2615). According to
    Nepal Rajavamshavali, Bhumi Varman, first of Surya Vamsha Dynasty was
    crowned in Kali 1389. Reckoning from this date, upto the 18th king,
    Vrishadeva Varma’s period would end in 487 BCE. His son was named after
    Sankaracharya as Sankaradeva.

    (To be continued…)

  14. (Continued…)

    Archaeological Evidence (https://www.indiadivine.org/audarya/hinduism-forum/187608-dating-adi-shankara.html ):

    In Short History of Kashmir, P. Gwashalal writes, that Gopaditya, King of Kashmir, built the temple of Sankaracharya on Takhti Sulaiman (hill) in Kashmir in 367-366 B.C. General Cunningham report on archaeological survey observes that King Jaluka, son of Ashoka, circa 220 B.C., built the temple of Sankaracharya on Sankaracharya hill in Kashmir. Later this temple was said to have been repaired by Muslim rulers. Modern historians do not accept the date of 320 B.C.on the gound that the architectural style of the temple points to a later date of the common era. In Shri Adi Sankarachaya’s Date of Birth, A. Kuppuswamy opines that veteran archaeologists hold the
    view that the style of a temple has nothing to do with the age of a temple. He quotes from a number of various sources to support this point of view.

    An inscription belonging to King Buta (500 – 515 AD) has been discovered at Village Sanjeli, Gujarat. The copper plate records the grant of two villages to a temple described as Bhagavadpadalayam under the category of Parivrajakabhojya. This means that it was a gift to a Brahmin monk. In this copper plate inscription, “Bhagavatpadalayam” may be interpreted to refer to a temple of Adi Sankara. Dr. A. V. Narasimha Murthy who reports this based on research work of Prof. S. Sankaranarayanan and published in Studies in Indian epigraphy vol xxvi, 2001, p 9 – 24, argues that Bhagavatpada refers only to Adi Sankara; this is corroborated by an inscription of Chola king Virajendra (1063-69 A.D.) Thus, this copper plate inscription provides evidence that a temple of Adi Sankara existed in Gujarat well before 500 A.D.

    Adi Sankara is referred in the tradition of Bharat as the founder of Shanmatas (Six deities or paths). Caves sculptures have been found in Tiruchi, depicting all the six deities within one structure. These sculptures have been dated to 6th century A.D (reign of Mahendra Varma).

    There are several ancient sculptures of Adi Sankara in and around 50 kms radius of Kanchipuram. They perhaps relate to early Pallava period.

    Dwaraka tradition is based on Tamra Sasana issued by Sudhanva Maharajah. The copper-plate epigraph recounts a brief history of Sankara and was issued in 478-477 B.C. This Sasanam is said to be in Government’s custody on behalf of Dwaraka Matha. This was first published in the book “Vimarsa” written by former Acharya of Dwaraka in 1872. Based on the Matha’s tradition, this Acharya fixed the date of Adi Sankara as 509 B.C and narrated important events of Sankara’s life. Jagadguru parampara from the day of the Matha’s foundation i.e 491 B.C. is preserved.

    Sri T.S. Narayana Sastry endorses the importance of this Tamra Sasana and adds that Gururatnamalika (Kanchi), Sushma (Kanchi), and Vimarsa are of invaluable interest to historians in determing the date of Adi Sankara.

    (To be continued…)

  15. (Continued…)
    Dating AdiSankara – Refuting Dharmakirti’s timeline – by Kalavai Venkat
    (https://www.india-forum.com/forums/index.php?/topic/973-sanatana-dharma-aka-hinduism-1st-bin/page__st__100 ):

    Adi Sankara is dated to the 8th century AD on the assumption that Dharmakirti lived in the 7th century AD, and that Sankara cites Dharmakirti. Is the date of Dharmakirti known with certainty? The evidences of Fa-hien, Hieun Tsang, I-Tsing and Taranatha are relevant here. The first 3 are Chinese while the last is Tibetan. Do these sources help date Dharmakirti with certainty or do they contradict each other?

    1. Hieun Tsang visited India between 629 AD and 645 AD. He mentions Dharmapala, Chandrapala, Gunamati, Stiramati, Prabhamitra, Jnanachandra and Silabhadra as the great scholars of Nalanda. Interestingly, Hieun Tsang fails to mention Dharmakirti as a
    contemporary. Some of these names also occur in I-Tsing’s list of scholars “of later period”, in which we also find the names of Dharmakirti, Simhachandra, Prajnagupta, Gunaprabha and Jinaprabha.[Surendranath Sen, “India Through Chinese Eyes”, p. 117]

    2. I-Tsing visited India between 671 AD and 695 AD. He has left some detailed accounts. While he was in India, he met a Chinese scholar, Wu-Hing, who per I-Tsing had studied the logic of Jina and Dharmakirti under a teacher that lived in Tiladha [Takakusu, “I-Tsing”, p. xlvi]. One may wonder why Wu-Hing didn’t study under Dharmakirti himself if they were contemporaries. Also, Jina was an ancient logician, and interestingly Dharmakirti is grouped with him. Historians have identified Fa-chan of I-Tsing [ibid, p. lix] with Dharmakirti. One is very curious why Dharmakirti should be transcribed in Chinese as Fa-chan, esp. when all the scholars listed above were well versed in Sanskrit. Dharmakirti’s teacher, Dharmapala is not transcribed thus.

    I-Tsing tells us that Bhartrihari died around 651 AD, nearly 20 years before I-Tsing landed in India [ibid, p. xiv]. He also says that Vritti sutra was composed by Jayaditya, a contemporary of I-Tsing.
    Then he says that Patanjali wrote his churni [Bhartrihari calls Patanjali churnikara] as a commentary on vritti sutra [ibid, p. 178]. This is a glaring contradiction because Patanjali lived atleast 8 or 9 centuries before the time of Jayaditya. I-Tsing was a keen observer, but he had certain limitations. He stayed with each teacher for just about 3 or 4 weeks to learn about a text. It seems that he had comprehended Patanjali incorrectly, and hence his incorrect observation.

    3. Taranatha’s account is very interesting. He makes only one reference to a certain king named Bharthari, which modern historians believe is a corruption of Bhartrihari [Trans. by Lama Chimpa, “Taranatha”, p. 249]. One wonders why something should be prima facie treated as corruption.

    Taranatha makes several references to Dharmakirti — rather someone historians have equated to Dharmakirti. He mentions 2 great scholars of Nalanda, Chandragomi and Chandrakirti [ibid, p. 211]. The latter, historians argue, is a misprint for Dharmakirti. One wonders, again, why a recording should be assumed to be a misprint. Taranatha himself makes certain assumptions about Dharmakirti. He states that all earlier records mention Chudamani in South India as the place of birth of Dharmakirti [ibid, p. 228], but adds, “all insiders [KV: insider means the Bauddha bhikshus of the monastry] know the birth place of Dharmakirti as Trimalaya. Therefore, this place must have been known as the kingdom of Chudamani in the older days.” One wonders, why at all such an assumption is to be made. Is it not more straight forward to infer that we are talking of 2 Dharmakirtis?

    Taranatha makes a reference to a South Indian brahmin scholar Kumaralila, and repeatedly argues that alone is the correct form [ibid, p. 226]. Yet, this has not stopped the translators from
    equating this Kumaralila with Kumarila. Taranatha says that Dharmakirti learnt various systems from this Kumaralila. Per Taranatha, finally, the 2 came to debate each other, and Kumaralila
    was defeated. He became a Bauddha [ibid, p. 232]. Any one that is familiar with Kumarila Bhatta’s work will know that he never ended up as a Bauddha. So, is the equation justified? Are we not talking of 2 individuals?

    Taranatha provides an interesting account of Sankaracharya [ibid, p.232 – 233]. Per this account, the Sankaracharya came to Nalanda and challenged the Bauddhas for a debate. A debate between Dharmakirti and the Sankaracharya ensued. The Sankaracharya was completely defeated, and despite persuasions to the contrary, he jumped into the Ganga and committed suicide. Before dying, he told his disciple Bhatta acharya that he would be born as Bhatta’s son. He was thus born. And Bhatta continued his debate with Dharmakirti, while Dharmakirti converted many of Sankaracharya’s original disciples to Buddhism. Bhatta continued his debate with Dharmakirti. He too was defeated by Dharmakirti, and committed suicide. The reborn
    Sankaracharya fled to the forest in the far east.

    Anyone can easily tell that this is not an account of Adi Sankara at all. Apart from the Tibetan source, other Buddhist schools don’t mention any debate with Sankaracharya. Per advaita traditions, Sankara neither debated with Dharmakirti, nor committed suicide. There is no account by Adi Sankara of ordaining any disciple, all of such accounts originate with Sankara Dig Vijayas. So, the only logical conclusion to make is that the Dharmakirti of Taranatha didn’t debate Adi Sankara, but another Sankaracharya (probably) in the advaita tradition. If that were so, Adi Sankara must have lived further anterior to the time of this Dharmakirti (or Fu-Chan).

    4. Fa-Hien visited India between 401 AD and 410 AD. He mentions, in his Chinese translation of Vajrasuchi upanishad that the Sanskrit original was composed by Dharmakirti (Fa-Chan in Chinese) [J K Nariman, “Literary History of Sanskrit Buddhism”, p. 185]. One wonders if one should trust Fa-Hien and assign Dharmakirti to 400 AD or earlier, or trust I-Tsing and assign Dharmakirti to around 650 AD. Would it not be better to re-examine the entire equation, and
    start asking why Fa-Chan must be equated to Dharmakirti in the first place? And ask, if there has been more than one Dharmakirti, as evident from the accounts cited above?

    So, it appears, what is cited as an irrefutable syllogism for dating Adi Sankara to the 8th century AD is no more than a very weak argument, nay, a bundle of untenable speculations.

    (Concluded)

  16. முத்துக்குமார் அவர்களே

    ஒரு உங்களது கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாலே போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்

    ஸ்ருங்கேரி பீடத்தின் முதல் ஜகத் குரு சுரேச்வராசாரியர் – இவர் சங்கரரின் அத்யந்த சிஷ்யர் என்பது அனைவரும் அறிந்ததே

    இன்றைய ஜகத் குரு பாரதி தீர்த்தார் என நம்புகிறேன் இவர் முப்பத்தி ஆறாம் பட்டம்

    மேலும் உங்களது கணக்கில் கூட ஒரு தப்பு இருக்கிறது, அதாவது முப்பத்தி ஐந்தை அப்படியே எழுபதால் பெருக்க கூடாது – வைணவ அஹோபில மதம் ஸ்தாபனமாகி ஒரு அறநூறு ஆண்டுகள் தான் ஆகிறது – இன்றைய ஜீயர் நாற்பத்தி மூன்றாவது பட்டம். வானமாமலை மதம் பதினாறாம் நூற்றாண்டில் தான் தொடங்கப்பட்டது அவர்களே முப்பது பட்டம் வந்து விட்டனர்

  17. காஞ்சி பெரியவர் பல argumentsai முன் வைக்கிறார். அதில் டிங் நாகர் என்று காளிதாசன் குறிப்பிடுவது உட்பட பல விஷயங்களை முன் வைக்கிறார். எனக்கு இந்த சுப்ஜெச்டில் அதிக அறிவு இல்லை. இருப்பினும் நீங்கள் ஒருமுறை அவரின் அர்குமேன்ட்சை படித்து விடுங்கள். Dr நாகஸ்வமியும் சில கருத்துக்களை முன் வைக்கிறார்.

    A

  18. அப்புறம் சுரேஸ்வரர் மண்டன் மிஸ்ரரைக் கண்டிப்பதாக எழுதியுள்ளீர்களே. மண்டன் மிஸ்ரர் தானே சங்கரரிடம் தோற்றபின் சுறேச்வரச்சர்யர் ஆனார்?

  19. Dear Muthukumar,

    //
    Kindly go thro deivathin kural ( 5 th volume page 778) in which historical facts given by periyavaa supporting the 477- 509B.C as age of sankara.
    //

    Can you please provide me the exact reference? Which part? Which chapter? What is the title of the chapter?

    For your kind information, please do not rely on that book for historical information. There it is said that Udayanacharya, the author of “Bauddha Dhikkara” lived before Sri Sankarar. This is impossible, as Udayana himself notes his date as 976 CE, and also quotes from Vachaspati Misra the author of Bhamati, who in turn lived after Bhaskaracharya as he quotes the same.

  20. அன்புள்ள கிரி,

    தங்கள் மறுமொழிக்கு நன்றி.

    // சங்கரருடைய காலம் பற்றி அந்தப் புத்தகத்தில் ஒரு பெரிய அத்தியாயமே இருக்கிறது. //

    எந்த பாகம், எந்த அத்தியாயம், அத்தியாயத்தின் தலைப்பு தர முடியுமா?

  21. Dear Muthukumar,

    Kindly ignore my request. I didn’t read your response fully. I will check out the 5th volume and page number specified by you.

  22. Dear Muthukumar,

    I just breezed through the arguments made in the book mentioned by you and Giri. The argument mainly revolves around Chandragupta Maurya’s date and doubting whether Sandracottus mentioned by Megasthenes is Chandragupta Maurya or Chandragupta Gupta.

    Shri Sarang has already given some points showing why Ashoka cannot be earlier than 4th century BCE.

    From my side, I will add that one can arrive at an earlier limit for Sri Sankarar’s time completely independent of the dates of Chandragupta Maurya or Buddha. I have already discussed this in the article. In short:

    Deyvathin Kural itself accepts Hsuan Tsang’s date as 650 CE. Another pilgrim I Tsing who has clearly recorded Hsuan Tsang was his role model, also clearly records his own date as 671 CE. It is independently confirmed by his biographer also. Now, I Tsing mentions Dignaga, Dharmapala, Dharmakirti, Silabhadra as recent Buddhist scholars. I have already shown in the article that both Sankarar and Suresvarar quote Dharmakirti and Anandajnana the Tika-kara confirms that it is indeed Dharmakirti who is being quoted. Also, Suresvarar mentions Dharmakirti by name in the same section.

    The “509 BCE” arguments that I just breezed through seem to completely avoid discussing the above evidence.

    I have read one article by S Sankaranarayanan who notices the above and still wants to put BCE dates for Sankarar. All that he has to say is that the Brihadaranyaka Varttika verse mentioning Dharmakirti by name is an interpolation. This is absurd, as the critical text is published after examining at least 4 different manuscripts, some containing Anandajnana’s full Tika on that verse also (one can read it in the Sanskrit introduction by the editor in the first few pages of the book).

    The other argument put forward by Shri Sankaranarayanan is that there is no evidence to take Suresvarar as the direct disciple of Shri Sankara Bhagavatpada. தமிழில் சொல்ல வேண்டுமென்றால், இது “முழு பூசணிக்காயை மறைக்க” மற்றும் “நுனிக் கிளையில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்ட” முயலும் முயற்சி யாகும். Sureshvarar clearly mentions his guru as Sankara Bhagavatpadacharya, the author of the Brahma Sutra Bhashya in three works that we know are authentically his – Naishkarmyasiddhi, Brihadaranyaka Bhashya Varttika, Taittiriya Bhashya Varttika. This is again confirmed by the Tika-kara.

    About the mutt records, all I have to say is that it is impossible to clearly establish by scientific methods as to when the records were written, plus if they record 500 BCE as Sankarar’s time, it violates the clear I Dharmakirti-Tsing-Sankarar/Suresvarar link. Hence, that would be impossible.

  23. Pingback: Indli.com
  24. Dear kumudan

    //It happens only in India where its tradition is treated with utter disregard by its own people.//

    what disregard do you see by pushing Sankarar’s date to BCE – what is so magical about BCE?

    Will respond to your other points shortly

  25. // மாதவீய/வித்யாரண்யா சங்கரவிஜய நூலை வரலாற்றுச் சான்றாக ஏற்பதில் சில சிக்கல்கள் உண்டு. உதாரணமாக, அந்நூலில் சங்கரர் காலத்திற்கு மிகவும் பிந்தையவராகிய பட்ட பாச்கரருடனும், உதாயனருடனும், ஸ்ரீஹர்ஷருடனும், அபிநவகுப்தருடனும் ஸ்ரீ சங்கரர் நேருக்கு நேர் அமர்ந்து விவாதித்திருப்பதாக வருகிறது. //

    அந்த நூலை வரலாற்றுச் சான்றாக ஏற்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. வரலாற்று நிரூபணங்களுடன் ஒத்துப் போகும் ஒரு கருத்து அதில் உள்ளது என்றே கூறினேன்.

    ஐயா, பாஸ்கரரை விடுங்கள்.. சங்கரர் வியாசருடனும், ஜைமினியுடனுமே உரையாடுவதாக வருகிறது :))

    இது ஒரு புராண கதையாடல் உத்தி அல்லது இயல்பு. ஒரு அறிஞரது ஞானம் அவருக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த அறிஞர்களை எல்லாம் தன் கருத்துக்களால் வாதத்தில் முறியடிக்கும் விதமாக இருக்கீறது என்பதை விளக்குவதற்காக காலக் கணக்கைக் குழப்பும் இந்த உத்தி அறிந்தோ, அறியாமலோ பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.. இன்றைய பின்நவீனத்துவ இலக்கியத்தில் இத்தகைய குழப்பம் ஒரு தேர்ந்த அழகியலாகவே அங்கீகரிக்கப் படுகிறது !! (ராமானுஜர், மத்வர் சரிதங்களிலும் அவர்கள் வியாசரை சந்திப்பதாக வருகீறது என்பதையும் நினைவில் கொள்ளவும்).

    ஒரு “புராணத்திற்கே” உரிய இத்தகைய குழப்பங்களைக் கொண்டிருந்தாலும், சங்கரரது வரலாற்றை அறிந்து கொள்ள நமக்குக் கிடைத்துள்ள மிகச் சிறந்த நூல் மாதவ வித்யாரண்யரின் சங்கர விஜயம் தான் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. இலக்கியத் தரத்திலும் மற்றெல்லா சங்கர விஜயங்களையும் விட சிறந்ததாக இதுவே விளங்குகீறது. ராமகிருஷ்ண மடத் துறவியும் சிறந்த அறிஞருமான Swami Tapasyananda இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முன்னுரையில் இக்கருத்தை விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

  26. // Athiravi
    16 December 2010 at 7:07 pm
    ஆதிசங்கரர், விகிரமதியன் முடிசூடிக்கொண்ட ஆண்டிலிருந்து, இத்தனை வருடங்கள் கழித்து பிறந்தார் என்று கூறியிருப்பது, வித்யாறன்யரின் ஷங்கரதிக்விஜயத்தில் அல்ல (திரு ஜடாயு குரிப்பிட்டிருப்பதுபோல்). sringeri மட ஆவணகளில் தான் அவ்வாறு குறிப்பிட பட்டிருந்தது //

    இருக்கலாம்.. அந்த விவரத்தை நான் எந்தப் புத்தகத்தில் படித்தேன் என்பது இப்போது நினைவுக்கு வரவில்லை. மேலும்,. வித்யாரண்யரே சிருங்கேரி மடாதிபதியாக இருந்தவர் தான். அவர் கர்நாடகத்தில் தான் வாழ்ந்தார். விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கு ஆசியும், ஊக்கமும் வழங்கினார்.

    அந்த ஆவணம் புராதனமானது, ஆதாரபூர்வமானது எனப்தில் ஐயமில்லை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வித்யாரண்யர் காலத்திற்கு முந்தையதாகக் கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது.

  27. Dear Kumudan,

    You have brought some flavor to the discussions … let us discuss this amicably…

    Firstly all proofs you show the difference between what you and Gandarvan bring to the table your’s are entirely based on third degree inference whereas Gandarvan is showing direct proofs from Shankarar’s and other’s writings.

    Your entire premise lies on one possible reasoning – a confusion in understanding who is Sandrocyptus and sandrocrottus

    //This puts Buddha in 1887 BCE, Chandragupta Maurya 1534 BCE and Chandragupta Gupta 327 BC. (https://gaurang.org/indian_phil/prasad_gokhale_indian_history.html#Aadi%20Shankara )
    //

    if you put Buddha in 1887 BCE – you have to Push Shri Krishna’s dates to 5000 BCE – which is absurd and against archeological and astronomical evidences – there are strong proofs to suggest that Mahabharatha war toop place in 3067 BCE.

    It is also highly impossible from another angle because there is a paripadal in praise of perum sorru paandiyan who fed the kaurava and pandava army during the war. There is no possiblity of this pandiyan existing during 5000 BCE

    Also see i have given proofs on Ashoka leaving a stone inscription about he sending buddhists to the place where alexander 2 ruled.

    You have missed out on an important proof in the form of Poet Kalidasa who lived duing the Gupta period. Kalidasa refers to Sunga dynasty in his works. Sungas have fought with Indo Greeks and Greeks never invaded india before Alexander (326 BC).

    it is well known that Sungas suceeded Maurya dynasty and Guptas succeeded Sunga dynasty – this quashes the attempts to put Guptas to 325 BC – Guptas indeed were AD rulers.
    Kalidasa’s katha “Mālavikāgnimitram” clearly describes a war between greeks and vishumitra a Sunga king – this also discredits claims of Guptas’s ruling india in during 327 BCE

    It is also clear that Kalidasa could have never lived in 320 BCE and he being one of the nine gems of the gupta is well known. this also dicredits putting Maurya’s to 1500 BCE.

    to summarize this part of the logic

    *Kalidasa Refers to 3 Sunga kings in his works and refers to a war between Sungas and Greeks

    * Mauryas were succeeded by Sungas
    Guptas Succeeded Sungas

    * Alexander Invaded Indai in 326 BCE

    * Greeks came to India only after Alxander
    (- there is no way they came before as a group – it is known from records that Alexander was upset with Aristotle. Aristotle had taught Alexander that Ganges was a Sea and considered eveything beyond northern part of india to be a sea. This is the reason why Alexander was inadequtely prepared for the invasion of india and returns after his visit the northern india. He had not mentally prepared his troup for a longer sojourn within India This shows Greek’s knowledge of India in general.)

    Hence Guptas could not have ruled during 327 BCE

    these are strong facts and do not involve name gaming

    to be continued ….

  28. அன்புள்ள அரவிந்தன்,

    உங்கள் பாராட்டுக்களை சிரம் தாழ்த்தி ஏற்கிறேன். எனினும், இன்று இத்தகவல்களை இணையம் வழியாக எவரும் கண்டுவிடமுடியும். அதுவும் Digital Library of India போன்ற தளங்களில் பல அறிய பழைய நூல்களைப் படிக்க எளிதில் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த ரீதியில் தான் இதைச் செய்துள்ளேன். எனக்குப் பெரிதாக பாண்டித்தியம் எல்லாம் கிடையாது.

    திரு ஜடாயு,

    உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். மற்றொரு உதாரணம், குமாரிலர்-மண்டனர்-சங்கரர் தொடர்பு பற்றி மாதவீய சந்கரவிஜயத்தில் வருகிறது. மண்டனர் பிரம்மசித்தியில் சங்கரருடைய கொள்கைகளை விமர்சிக்கிறார். மேலும், மண்டனர் குமரீலரை பெரிதாக மேற்கோள் எடுத்துள்ளார். ஆகையால், சங்கரர் மண்டனருடன் நேருக்கு நேர் வாதிட்டார் என்றும் மண்டனர் குமாரிலர் சீடர் என்றும் சங்கரவிஜய நூலில் வருவதை மேற்சொன்ன ஏழாம்-எட்டாம் நூற்றாண்டுப் பிராசீன நூற் சான்றுகளை பின்வந்தவர் ஒரு நாடகமாகக் காட்டியிருப்பதாகக் கொள்ளலாம்.

    திரு ரமேஷ்,

    திரு குப்புசாமி சாஸ்திரி “பிரம்மசித்தி” நூலின் ஆங்கில முன்னுரையில் இச்சான்றுகளை விளக்கியுள்ளார். அங்கு கண்டுகொள்க. அவை சுருக்கமாக பின்வருமாறு —

    (1) மண்டனரை பிராசீன ஆச்சாரியார்கள் அனைவரும் “மண்டனர்” என்றோ “பிரம்மசித்திகாரர்” என்றோ தான் அழைக்கின்றனர். சுரேஸ்வரரை “வார்த்திக காரர்” என்றோ “சுறேஸ்வராச்சாரியார்” என்றோ தான் அழைக்கின்றனர். இவ்விருவரும் ஒருவர் என்றோ, “மண்டனர் சுரேஸ்வரர் ஆனார்” என்றோ பிராசீன அத்வைத வேதாந்த வார்த்திக-டீக-அனுபாஷ்ய காரர்கள் எவரும் எழுதவில்லை.

    (2) மண்டனர் தம்மை குமாரிலருடைய சீடர் என்று தம் ஆக்கங்களில் ஒரு இடத்தில் கூட கூறியதாக இல்லை.

    (3) மேலும், சில அத்வைத ஆச்சாரியார்கள் “இறுதி காலம் வரை கிருஹஸ்தராகவே இருந்த மண்டன மிச்ரர் கூட ஏகதண்ட சந்யாசத்துக்கு ஆதரவாக எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

    (4) “மண்டனர் முதலானோருடைய சித்தாந்தத்தை (வார்த்திக காரராகிய சுரேஸ்வரர்) எடுத்து விமர்சிக்கிறார்” என்று ஆனந்தஞானர் டீகை உள்ளதைக் காணலாம் இப்படிமத்தில்:

    https://www.new.dli.ernet.in/rawdataupload/upload/0095/112/PTIFF/00000725.tif

    மேற்படி உள்ளவை எல்லாம் முடிவான ஆதாரம் என்று நான் சொல்லவில்லை. மண்டனர் தான் சுரேஸ்வரர் ஆனார் என்றால் ஏதாவது ஒரு பிராசீனர் தம் நூலில் அவ்வாறு கூறியிருப்பார். அத்தகைய ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை.

    மகாமகோபாத்யாயர் குப்புசாமி சாஸ்திரி “பிரம்மசித்தி” நூலில் எழுதியுள்ள ஆங்கில முன்னுரை மிகவும் ஆர்வமூட்டும் ஒன்று. சங்கரருடைய வேதாந்தம் காலம் செல்லச்செல்ல எப்படி வளர்ந்து படர்ந்தது என்பது பற்றி ஆழ்ந்த சில வரலாற்று ஆதாரங்களை அங்கு காணலாம். It is a beautiful read and is a must for any one interested in the history of Indian philosophy.

    Manuscriptology is a very important field of historical research, and it complements archaeology. There are several ways in which the internet media can be put to good use for this purpose. We need to have manuscript leaves scanned and digitally watermarked so that they cannot be tampered with. And with it we need to link the text as unicode/ascii. We can then use technology to automatically generate indices and cross-references. This would help a lot and interested parties including traditional institutions and libraries should take part. A thousand-page book on Digital Library can be done in a week by a group of 1000 enthusiasts working simultaneously, if they are willing to put 3 hours a week.

  29. Dear Kumudan,

    // It happens only in India where its tradition is treated with utter disregard by its own people. Rather we trust the views expressed by white skinned people even on the matters like Vedas more than //

    My argument does not have anything to do with the racial background of the people making the argument. In fact, respectable curators of manuscript libraries such as T R Chintamani and Mahamahopadhyay Kuppuswami Sastri of Government Oriental Manuscript Library have concluded 7th century end/ 8th century middle CE as Sankarar’s dates. They are not “white-skinned”.

    There is nothing wrong in subjecting any aspect of Sanatana Dharma to historical scrutiny. In fact, it would be a great service for someone to try and prove the “Sanatana”-ness of the Dharma.

    The “holier than thou” people crying “blasphemy, racism, colonialism” every time a sincere effort is made in terms of historical research, is actually doing a great disservice to our religion, Shri Shankara Bhagavatpada, and the history of our great nation.

    // Before I start discussing the points raised by Sriman Gandarvan, we need to keep in mind that the identification of Sandrocottus (325 B.C.) of the Greeks with Chandragupta Maurya by Sir Jones was considered to be the “sheet anchor” and based on this assumption, a chronology of Indian history was constructed. //

    I am repeating for the 4th time here… the points that I presented in this essay do not have anything to do with Sandracottus, Megasthenes, and their dates. This just deviates from the point of the discussion.

    The Jina mentioned by I Tsing is none other than Dignaga from whom Sankarar quotes in Sutra Bhashya 2.2.28 (Shri Tapasyananda of Ramakrishna mutt also notes this).

    In any case, what you have shown in your response as evidences is just a collection of quotes from several recent pandits. This does not make for any evidence. Please quote the source texts. For example, you say that Fa Hien translated Vajra Suchi Upanishad into Chinese and mentioned Dharmakirti. Where? Fa Hien’s works are available today in English. Do the commentators you quote give exact citations? Otherwise, it will be spurious. I am not expecting links to images though I have meticulously done that.

    Please also understand that the “509 BCE” supporters are not united in any point. Some say that Shankarar never quoted Dharmakirti and was not aware of it, and agree that Dharmakirti was in 500-650 CE (S Sankaranarayanan). The ones you quoted and one Udayavira Shastri try to place Dharmakirti to 7th/6th C BCE. Again some such as Sankaranarayanan try to adjust and make up by putting . Some of the people who support “509 BCE” say that Kalidasa’s date was in 1st Century BCE. Seldom are they aware that Kalidasa was quoted by Kumarila, a predecessor of Shri Bhagavatpadar.

    On the other hand, the side that supports 7th/8th Century CE is much more coherent in their arguments.

    Btw, I am not relying on Taranatha’s accounts by any means. Taranatha’s account is based on a “tradition”, and is written in the 17th/18th Century CE.

  30. தமிழ் ஹிந்து என்று பெயர் வைத்தும் ஆங்கிலத்திலேயே பல நண்பர்கள் எழுதுவது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. கழகங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு தமிழக பிள்ளைகள் கல்விநிலையங்களில் ஆங்கில வழிக்கல்வி கற்பதன் விளைவாக தமிழில் எழுதவும் படிக்கவும் சிரமப்படுகிறார்கள் போலுள்ளது. பாவம் கழகங்களின் ஆங்கிலப்பற்று.

  31. எதற்கு கடவுள் மாதிரி அவரை ஆராதனை செய்கிறார்கள்? அந்த கட்டுரை படம் பாருங்க.

  32. Dear Sarang,
    kanchi acharyas become sankaracharyas at a very tender age of below 15 ie directly from brahmacharya to sanyasa dharma..Hence multiplication by 35 is not totally wrong.
    In vaishnava tradition ( i do not know) they may become acharyas after becoming very old.
    In Puri mutt there are more than 140 shankaracharyas because,grahasthas become sanyasis and then become sankracharya.So their span as shankaracharya is less compared other mutt acharyas.
    You cite vaishnava mutts.In one mutt 600 years;but 43 acharyas;Compare this with Sringeri-1200 years ( assuming eighth date Sri Adi Sankara) 35 acharyas.
    Hence the version that there was breakage in the chain achryas gains support.
    Dear Pratap,
    Writing in tamil takes very long in this site .That is why I am writing in English.

  33. dear Sarang,
    I reply with regard to — disregard to tradition:
    In every country , people are proud of the antiquity of their tradition and religion.
    Though saint Thomas never visited India ,Chriatians claim that he visited India in the first century(even vatican refused to acknowledge this lie).
    I do not say ,we should lie.
    But we should understand the evil designs of Englishmen,who under the garb of writing history , tried to project man kind improved after birth of Jesus.They could not digest the fact that their slaves are far superior in science ,philosophy and every aspect of life even before the birth of Jesus.
    There is ample proof for this in the books written by Sri Dharampal -(for example – science in the Seventeenth century India. He has written many books taking everything from the British archives in London).

    Meantime ,there is ” Gururatna malika” by Sadasiva Brahmendhirar about the kanchi acharya parampara which I have not read.This can also be taken up for research by scholars..

  34. Dear Sir,

    The Kanchi and Sringeri Sankara mutts claim suresvaracharyar as their first acharya and they subscribe to the theory of Mandan Misra is Suresvaracharya and Sarasavani is Devi Sarada.

    But from deivathin kural you have taken only on chinese travelers. Kanchi Mahaswami is not just a madadipathi but also an eminent historian. The link is available in Kanchikamakoti.org, Tamil content.

    Just check all the arguments he presents.

    Regards

    regards

  35. ஒரு கட்டுரைக்காக ஆதிசங்கரர் திரைப்படத்தை (ஜீவி ஐயர் இயக்கியது) தீவிரமாக பார்த்து, அதன் தொடர்பாக பல தகவல்களையும் தேடிப் பார்த்த போது பல கேள்விகள் எழும்பியது. சிலவற்றுக்கு உங்கள் பதிவிலே பதில் இருக்கிறது.

    //சங்கரரின் முதல் சீடராகிய சுரேஸ்வரர் மண்டனருடைய சித்தாந்தத்தை //

    வரலாற்றுப்படி மண்டன மிஸ்ரர்தான் சுரேஷ்வரராக மறுபெயர்ப் பெற்று சங்கரரின் முதல் சீடராக ஆகி சிருங்கேரி மடத்தை நிறுவுகிறார். அப்படியானால் அவரே அவரைக் கண்டித்துக் கொண்டாரா?

    மேலும் மண்டன மிஸ்ரரின் மனைவிதான் சிருங்கேரியில் சாரதாதேவியாக உருவகிக்கப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதைப் பற்றி சிந்தித்தபோது இது சாங்கிய மதத்தின் எச்சமாக சங்கரர் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம் என்றும் தோன்றியது.

    குமரில பட்டரோடு மீமாம்ச தத்துவத்தைப் பற்றி சங்கரர் உரையாடுவதும் படத்தில் வருகிறது. குமரிலர்தான் மண்டன மிஸ்ரரைப் பற்றி சங்கரருக்கு தெரியப்படுத்துகிறார். மீமாம்சம் பற்றி மேலும் ஆராய்ந்து பார்த்தால், மண்டன மிஸ்ரர் தவிர பிரபாகரன், சங்கர பட்டர் போன்ற பலரும் மீமாம்சத்திற்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. நிச்சயம் அந்த சங்கர பட்டர் பூர்வ மீமாம்சத்தின் முன்னோடியான சங்கரராக இருக்க முடியாது. இதைப் பற்றி படிக்கும்போது இந்த பெயர்க் குழப்பம் பற்றி சிறு யோசனை. காலடியில் பிறந்த சங்கரர் முப்பது வயதிற்குள்ளாக இமயமலைவரை இருமுறை பயணம் செய்துவிடுகிறார். நடுவில் பல நூல்களையும், பாஷ்யங்களையும் எழுதிவிடுகிறார்…. இது சாத்தியமா? என்றும் தோன்றியது. வெவ்வேறு சங்கரர்களை ஒரே தொன்ம வரலாறாக இணைத்து விட்டோமோ என்று ஒரு சம்சயம். அப்படி இருக்க வாய்ப்பில்லையா?

  36. Dear Kumudan,

    Before I start this one, let me declare to you that I approach this subject with no vested interests favoring either side. Otherwise, I wouldn’t have bothered to verify the evidences and meticulously collect the DLI links to the source books as I have done in the article.

    Shri Sarang has given some points regarding Kalidasa, Pushyamitra, and Alexander. Let me concentrate on the other key evidence, regarding Dharmakirti, for determining the earlier limit of Sri Shankara Bhagavatpadar’s activity.

    (1) It is well-known that Sri Bhagavatpadar quotes both Dharmakirti and Dignaga.

    (2) It is well-known that Dharmakirti commented upon Dignaga’s work. His “Pramana Varttika Karika”, from which Sri Sankarar quotes, is exactly a commentary on Dignaga’s work.

    Now, let me demolish the argument put forth by Shri Kalavai Venkat about Dharmakirti:

    (1) I Tsing not only mentions Dharmakirti as a recent scholar, but also names Jina a.k.a. Dignaga in the list. You can see it under “சான்று 5” in the essay, by flipping through a couple of pages after that. Sankarar quotes Dignaga in 2.2.28.

    (2) This point is being made by Shriman Venkat:

    //
    Historians have identified Fa-chan of I-Tsing [ibid, p. lix] with Dharmakirti. One is very curious why Dharmakirti should be transcribed in Chinese as Fa-chan, esp. when all the scholars listed above were well versed in Sanskrit. Dharmakirti’s teacher, Dharmapala is not transcribed thus.
    //

    To be frank with you, this “point” falls under the category “bazaar gossip”, a term coined by Shri Tapasyananda refers to in his introduction to Madhaviya Sankara Digvijaya translation, referring to the pointless shallow arguments made by the pro-509BCE camp that is desperate to establish its side at any cost. I will tell you why I am frustrated on this after explaining why the point is not valid.

    It is in the introduction alone, at one place, that Dr. Takakusu identifies “Fa Chan” with Dharmakirti of Tsing. Please note the roman numeral page number. in the citation. On the other hand, in the main body of the book which contains the translation of Tsing’s chronicles, one does not find the name “Fa Chan” anywhere, nor does Dr. Takakusu the author of the translation of Tsing’s chronicles mention anywhere that I Tsing mentions the name “Fa Chan”. On the contrary, there is strong evidence against this. Dr. Takakusu mentions that Tsing transcribed names into Chinese as is from Sanskrit. Please read the footnotes on this page: https://www.new1.dli.ernet.in/data4/upload/0093/071/PTIFF/00000225.tif

    Mr. Venkat or whoever he got this information from, throws this point without going through any manuscript evidence. On the other hand, it is Dr. Takakusu and other orientalists that have done the hard work of doing that. Hence to be frank with you, it seems to me that the pro-509BCE camp is just playing hide-and-seek by its selective use of argumentum ex silentio. It is frustrating that they will throw this sort of speculative nonsense without backing it up by proper research, and our side has to expend all our time and resources in demolishing these, even after establishing the summum bonum of our side beyond doubt, after a lot of hard work. Pray tell me Shriman Kumudan, and I ask this with all due respect to you, is this fair?

    Let’s get back to the points…

    Other evidences (If you want me to substantiate further with links to pages of the source books with exact citations from the Digital Library of India, I can do that.):

    (1) Can you show one Buddhist/Jain scholar before 6th century CE who quotes Sankarar, Kumarilar, or Suresvarar? I can show a couple of them who lived in 8th century on that discussed and criticized the Vedanta of Sankarar and Suresvarar.

    (2) If 509 BCE is supported, we would have a huge gaping hole in the timeline of advaita vedanta where no major works exist after Sankarar’s and Sankarar’s disciples such as Suresvara, Padmapada, etc. Especially during the time when Buddhism was doing very well in South India (Hsuan Tsang notes that Dharmapala was from Kanchipuram).

    (3) The chronology given by the Sankara mutts you mention is not believable. You yourself argued previously that Bhaskaracharya lived only about 1000 or 1200 years ago, and you said that that information is in Deivathin Kural. Also, Anandajnana mentioned by the lineage of Sankara mutt should have been in BCE era. But Anandajnana, the Tikakara quotes Prakatartha-Vivarana sub-commentary of Brahma Sutra Bhashya, which in turn quotes Bhaskaracharya!

    (4) Also, Yamunacharya a.k.a. Alavandar cites a Vedantin by name Srivatsanka and mentions that he lived between the times of Sankarar and Bhaskarar. If Sankarar lived in 6th century BCE and Bhaskarar in 8th century CE, why would Alavandar give such a huge interval, especially while discussing chronology? Isn’t it like saying that Akbar’s rule was between the times of Buddha and Aishwarya Rai?

    (5) If, as per your evidence, it is the Gupta Chandragupta a.k.a. Chandragupta Vikramaditya being mentioned as “Sandracottus” by Megasthenes, it would give us the room to take Kalidasa back to only 325 BCE and no further back, as many later authors of Sanskrit works mention that he was one of the nine gems of Gupta Vikramaditya’s court. Please note that this severely clobbers the “509 BCE” camp

    (6) All, not just one, of the following should be false, if a 509BCE date for Sankarar is to be held true: (a) Chandragupta Maurya’s date, (b) Ashoka’s edicts mentioning Alexander’s successors, (c) Kalidasa’s time, (d) I Tsing’s mention of Dharmakirti, (e) The development of Graeco-Buddhism as mentioned Shri Sarang. Let me repeat — all, not just one, of the above should be false. This would be either a coincidence of unintended errors, or an astronomical full-scale well-orchestrated scheme to deny Indians their historicity. The former is highly unlikely. As for the latter… yes there were miscreants, misrepresentations, colored interpretations, and sheep-like behavior among European orientalists, but no evidence of such a well-orchestrated grand scheme.

    PS: There is a request to conduct the discussion in Tamil. I can do so if you agree, otherwise it makes sense to use the same medium for our discussion.

  37. அடியேன் கீழிடும் இந்தக்கட்டுரை ஆதிசங்கரரின் காலம் குறித்த வாதுநோக்கிலன்றி, பண்டைத் தமிழ்நூல்களில் அத்துவிதம் (வேதாந்தம் என்றே குறிக்கப்பட்டது) குறித்த சான்றுகளைத் திரட்டியிடும் நோக்கிலே என்று கொள்க.

    திருமுருகாற்றுப்படையின் இறுதிப்பாடலில் (1) ‘உலகத்தொரு நீயாகத்
    தோன்ற விழுமிய’ என்ற வரியே அத்வைதத்தைச் சுட்டுவது.

    அதுபோன்றே மதுரைக்காஞ்சியில் ‘ஒருதாம் ஆகி’ என்பதும்.
    ‘சிறந்த வேதம் விளங்கப் பாடி
    விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
    நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி
    உயர்நிலை உலகம் இவண்நின்று எய்தும்
    அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
    பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
    குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் ..'(2)

    மேலும் சைவசித்தாந்த ஞானஊற்றான திருமந்திரத்தில் (அகத்தியர், திருமூலர், காலங்கி, போகர் என்ற பல நூலாதாரங்களுடன் குருபரம்பரை இருப்பதால் திருமூலர் காலம் குறித்து விரிவாய்ப் பின்னர் எழுதுகிறேன்) பல
    பாடல்கள் ஐயந்திரிபற இந்த உண்மையை விளக்குகின்றன.
    குறிப்பாய்ச் சில பாடல்களைப் பார்ப்போம்:

    ‘வேதாந்தம் கண்டோர் பிரமமித்யாதரர்’ (3) என்றே வேதாந்திகளைச்
    சுட்டுகிறார் திருமூலர். மித்யை என்பது ஆதிசங்கரரின் கடவுச்சொல்.

    மேலும், வேதாந்தமும், மாயாவாதமும், வைணவமும் வேறானவை என்பதைச் சுட்ட வரும் பாடல் (4) இது:
    ஆகின்ற தொண்ணூறொடு ஆறும் பொது என்பர்
    ஆகின்ற ஆறறாரும் சைவர் தத்துவம்
    ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
    ஆகின்ற நாலாறை ஐயைந்து மாயாவாதிக்கே.

    இங்கே சைவ, சாக்த / ஸ்ரீவித்யா சம்பிரதாயங்களில் 36 அகத்தத்துவங்கள்
    உண்டு.

    வேதாந்திகளுக்கு 28; நிரீஸ்வரவாதிகளான சாங்கியர்,
    மாயாவாதிகளுக்கு 25; வைணவர்களுக்கு 24 என்று தெளிவாகச் சுட்டப்படுகிறது.

    அத்வைதிகளை மாயாவாதிகள் என்று புறந்தள்ளும் கொடுமை கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது. இங்கே வேதாந்தம் வேறு, மாயாவாதம் வேறு என்றும் இந்தப்பாடலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

    தென்திருமுல்லைவாயில் பதிகத்தில் (5) திருஞானசம்பந்தர் இருபத்தைந்து
    தத்துவங்கள்தான் உள்ளன என்ற கருத்தில் சிக்கியிருப்போர்க்குச் சிவப்பரம்பொருள் அறிதற்கரியது என்கிறார். அப்பரும் ‘அய்யைந்தின் அப்புறத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே’ (6) என்பது காண்க.

    இவர்கள் வேதாந்தத்தை முழுமையாய் ஏற்றுக் கொண்டவர்கள். ‘அருமாமறை விரித்தான்’ (7), ‘வேத வேதாந்தன்’ (8), ‘வேதாந்தம் பன்னு நுண்பொருள் பயந்தவன்’ (9) என்று திருமுறையிலேயே பல பாடல்களைச் சுட்டலாம்.

    முக்கியமாய் மேலும் ஒரு சான்று:
    தேவாரசாரமெனத் தம் தந்தையார் எளிதில் ஓதும் வண்ணம் திருஎழுகூற்றிருக்கை (10) என்ற பாடலைப் பாடுகிறார் சம்பந்தர். அப்பாடலை இப்படி முடிக்கிறார்:
    ‘இருமையின் ஒருமையும்
    ஒருமையின் பெருமையும்
    மறுவிலா மறையோர்
    கழுமல முதுபதிக்
    கவுணியன் கட்டுரை
    கழுமல முதுபதிக்
    கவுணியன் அறியும்
    அனைய தன்மையை
    ஆதலின் நின்னை
    நினைய வல்லவர்
    இல்லை நீள் நிலத்தே!’

    ஆக தேவாரசாரமென்று ஞானசம்பந்தப் பெருமானார் பாடுவது இருமையின்
    ஒருமையையும், ஒருமையின் பெருமையையுமே.

    மேலும் அத்வைதத்தை மாணிக்கவாசகர் கடுமையாகப் பாடி விமர்சித்தார் என்று புரியாதோர் அடிக்கடி சுட்டும், போற்றித் திருஅகவல் பாடலும் (11)
    – ‘மிண்டிய மாயாவாதம் என்னும் சண்டமாருதம் சுழித்தடித்து ஆர்த்து’ –
    வேதாந்தமான அத்வைதத்தைத் தாக்க வந்ததன்று என்றும் இதன் மூலம் தெளியலாம்.

    வேதாந்தம் என்பது
    பற்றற்றானைப் பற்றி அப்பற்றும் இறுதியில் விடச் சொல்லும் நெறியென்றும், பற்றற்றானையே மறுத்து பற்றவே சொல்லாத மாயாவாதமும்,
    பற்றிக் கொண்டே இருக்கச் சொல்லும் வைணவமும்
    இல்லையென்றும் பார்த்தோம்.

    மேலும் வைணவம் என்பது வேதாந்தம் இல்லையென்றும், அது அறுசமயங்களில் ஒன்றே என்றும் வைணவ பக்தி இலக்கியங்களிலிருந்தும் தெளியலாம்.

    இருபத்துநான்கு தத்துவங்களே வைணவம் என்று திருமூலர் மட்டும் பாடவில்லை. திவ்யப்பிரபந்தத்திலும் அப்படியே சொல்லப் பட்டிருக்கிறது. திருக்கச்சிநம்பி அவர்களின் இரண்டு பாடல்களைப் பார்ப்போம்:
    ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுளாயுமாய்
    ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே’ (12)
    ‘எட்டும் எட்டும் எட்டுமாய்.. நின்ற ஆதி தேவனை’ (13)

    ஆக வேதாந்தம் என்பது அத்வைதமே என்பது பண்டுதொட்ட புரிதல் என்பது
    இதன்மூலம் தெளியலாம். மேலும் அத்வைத வேதாந்தமே சைவசித்தாந்தத்தின் வேர் என்று திருமூலர் முதல் குமரகுருபரர் வரை பலரும் பாடியுள்ளனர்.

    ‘மன்னிய சோகமா மாமறை யாளர்தஞ்
    சென்னியதான சிவயோகமாம் ஈதென்ன
    அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
    துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே’ (14)

    இங்கே ஸோஹம் (அதுவே நான்) என்ற மந்திரத்தின் மூலம் மூச்சடக்கி
    சிவயோகம் செய்வோரே வேதாந்தியர் என்றும் அதுவே சித்தாந்தத்தின் அடிப்படையென்றும், ஆகமங்கள் தோன்றியதும் இந்த உண்மையை
    விளக்கவே என்றும் திருமூலர் தெருட்டுகிறார்.

    வேதாந்த மஹாவாக்கியத்தையே நேராய்ச் சுட்டும் பாடலிது:
    நீயதுவானாய் என் நின்ற பேருரை
    ஆயது நானானேன் என்னச் சமைந்தறச்
    சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரருள்
    ஆயது வாயனந் தானந்தி யாகுமே! (15)

    அன்புடன்,
    ஜாவா குமார்

    சான்றுகள் சுட்டப்பட்ட மூலநூல்கள்:
    1. திருமுருகாற்றுப்படை – பழமுதிர்ச்சோலை – 294
    2.மதுரைக்காஞ்சி – 468-474
    3. திருமந்திரம் – தந்திரம் 5-1435
    4. திருமந்திரம் – தந்திரம் 8-2179
    5. திருமுறை – திருஞானசம்பந்தர் தேவாரம் – 2-224-4
    6. திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் – 4-4-10
    7. திருமுறை – திருஞானசம்பந்தர் தேவாரம் – 1-104-1
    8. திருமுறை – திருஞானசம்பந்தர் தேவாரம் – 3-293-4
    9. திருமுறை – திருஞானசம்பந்தர் தேவாரம் – 2-238-1
    10. திருமுறை – திருஞானசம்பந்தர் தேவாரம் –
    11. திருமுறை – மாணிக்கவாசகர் திருவாசகம் – போற்றித் திருவகவல்
    பாடல் 54/55
    12. நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் – பாடல் – 753
    13. நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் – பாடல் – 828
    14. திருமந்திரம் – தந்திரம் 8-2403
    15. திருமந்திரம் – தந்திரம் 8-2577

  38. நண்பர் குமுதன் அவர்களே

    சங்கரர் கீமுவில் இருக்க வாய்ப்பே இல்லை என்பதற்கு இன்னும் ஒரு முக்கிய சான்று

    சங்கரர் ப்ரகுதாரண்ய உபநிஷத் ஸ்வயம் ஜ்யோதிர் பிராமணத்தில் யோகசார புத்தத்தை எதிர்கிறார் (இது இந்த உபநிஷத்தில் ஒரு முக்கியமான கட்டம் – ஏன் என்றால் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் சங்கரர் ஆத்மா உண்டு என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கிறார்)

    யோகாச்சரத்தை ஸ்தாபித்தவர்கள் அசங்கர்-வாச்துபந்து என்ற சகோதர்கள் – இவர்களின் காலம் தெள்ளத் தெளிவாக கீபி ஐந்தாம் நூறாண்டு என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது – இது நிர்விவாத விஷயம் கூட, இவர்களின் காலத்தை பற்றி சம்சயம் கூட எழுந்ததே இல்லை.

    நாகர்ஜுனரின் காலத்தை சிரமப்பட்டு அட்ஜஸ்ட் செய்த சில கீமுவாதிகள் அசங்கரை பற்றி மறந்து விட்டனர் (இதிலும் அவர்கள் மாட்டிக்கொண்டனர் என்பது வேற விஷயம்)

    சங்கரர் கீமுவில் பிறந்து எப்படி கீபி கருத்தை எதிர்த்தார்? இதை மறுக்க வேண்டும் என்றால் யாரோ உபநிஷத் பாஷ்யத்தை அட்ஜஸ்ட் செய்து விட்டார்கள் என்றல்லவா கொள்ள வேண்டும் – இதுவும் முடியாது – இதற்கும் நிறைய ஆதாரங்கள் உள்ளன

  39. திரு குமார்,

    அவசரப் படுகிறீர்கள்
    சங்கரர் தான் அத்வைதத்தை கண்டு பிடித்தார் என்கிறீர்களா – இது முழுதும் தவறான ஒரு முடிவு.

    அத்வைதம் என்ற சொல்லாட்சி உபநிஷத்திலேயே வருகிறது (ப்ரிகுதாரண்யா உபநிஷத், ஸ்வயம் ஜ்யோதிர் ப்ராஹமணம்) அப்போ பிருகு தாரன்ய உபநிஷத்தை எழுதியவர் சங்கரர் – யாஞவல்கர் என்று அல்லவா

    சங்கரருக்கே முன்னதாகவே அத்வைதம் இருந்தது – சங்கரர் பிரம்ம சொத்தற பாஷ்யம் எழுதி அதை முறையாக நிறுவினார்

    ராமானுஜருக்கு முன்னதாகவே விஷிச்டாத்வைதம் இருந்தது – ராமானுஜரும் பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதி அதை நிறுவினார்

  40. குமார்

    //
    திருக்கச்சிநம்பி அவர்களின் இரண்டு பாடல்களைப் பார்ப்போம்:
    ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுளாயுமாய்
    ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே’ (12)
    //

    சுத்தம் – முதலில் – இந்த பாசுரம் திருச்சந்த விருத்தம் என்னும் நூலில் வருகிறது – இதை இயற்றியவர் திருமழிசை ஆழ்வார் – இவர் ராமனுஜரின் மானசிக குருவான திருக்கச்சி நம்பிகளுக்கு பல நூற்றாண்டுகள் முன்னாள் வாழ்ந்தவர்

    இதில் சொன்னதை அப்படியே கூட்டாதீர்கள்

    Firstly vaishnavism is about theism – different vaishnava tradtions follow different philosophies – Gaudiya – Dwaitham
    Nimbakara tradition –
    Chaitanya – bheda-abheda
    Sri Vaishnavam – Visistadvaitham

    there are differences in number of thathvas according to various indian schools – saiva, vaishnava, advaitha, visishtadvaitha etc

    you have confused everything thoroughly

    vedantam is definitely different from Maya vadam – Please get it there are atleast 3 major and 2 minor vedantic forms which base thier theories on Brahmma Sutra.

    Advaitam alone is not vedantam. Advaitam is an interpretation of vedantam

  41. /அவசரப் படுகிறீர்கள்
    சங்கரர் தான் அத்வைதத்தை கண்டு பிடித்தார் என்கிறீர்களா – இது முழுதும் தவறான ஒரு முடிவு./

    அப்படி எங்கே சொன்னேன்?! அத்துவிதம் என்பதே மெய் என்று தாயுமானவர் பாடுகிறார். மெய் என்றுமுளது. அதற்கு நிறுவனரோ நிறுவனமோ தேவையில்லை.

    ஆனாலும், பிற்சேர்க்கைகளைத் தவிர்த்ததென்று திராவிட அறிஞர்பெருமக்களே சலித்துத் தொகுத்திருக்கும் எஞ்சிய திருமந்திரப்பாடல்களில் இருந்து சுட்டப்படும் ‘வேதாந்தம் கண்டோர் பிரமமித்யாதரர்’ என்ற குறிப்பு அதிமுக்கியமானது.

    அம்மட்டே. வாதங்களைத் தொடர்ந்திருங்கள். ’அவ்வளவில் அவர் மகிழ்க!’ என்று நான் நகர்கிறேன்.

  42. டாக்டர் என். மகாலிங்கம் தன “ஹிஸ்டாரிக் டேட்ஸ்’ என்ற புத்தகத்தொகுப்பு, பக்கங்கள் 124 முதல் 127 வரை, “டேட் ஆப் ஆதிசங்கரா’ என்ற தலைப்பில், ஆதி சங்கரரின் காலம் AD 788 என்பவர்களைக் கடுமையாகச் சாடி, ஆதி சங்கரருடைய பிறப்புக்கால கோள்கள் நிலையையும் கொடுத்து, ஆதி சங்கரர் காலம் BC 509 என நிறுவியிருக்கும் நிலையில், விவாதம் முற்றுப்பெற வேண்டியிருக்கின்றது.

  43. குமார் அவர்களே

    நீங்கள் இப்படி சொல்வதற்கும் இந்த கட்டுரைக்கும், இங்கு நடை பெரும் விவாதத்திற்கும் என்ன சம்பந்தம் புரியவில்லை?
    அது இருக்கட்டும் தத்துவத்திற்கும் (எத்தனை தத்துவங்கள் என்பதற்கும்) வேதாந்திர்க்கும் என்ன சம்பந்தம்? வைசேசிகத்தில் எட்டு, நியாயத்தில் பதினாறு தத்துவங்கள் உள்ளன – இவை வேதாந்த மதங்களே அல்ல?

    ஒருவர் சொல்லிவிட்டால் ஒன்று வேதாந்தம் இல்லாமல் போகிவிடுமா என்ன? நீங்கள் சொன்ன பாசுரமே போதுமே அது வேதாந்தில் உள்ள தத்துவ விசாரத்தியா தான் செய்கிறது – திருச்சந்த விருத்தத்தில் தீ நிலையா ஐந்துமாய் என்று தொடங்கி ஒரு எட்டு பாசுரம் வரை அப்படியே ப்ரிஹுடாரண்யா உபநிஷத்தில் வரும் அந்தர்யாமி ப்ராமனத்தை தழுவியது – இதை வைத்துக் கொண்டு என்ன நிறுவ முயல்கிறீர்கள் என்பது சற்றும் புரியவில்லை

    அத்வைத வேதாந்தம் சைவத்தின் வேர் என்றால் பல சைவ தத்துவங்கள் அடிபடும் என்று நினைக்கிறேன். அது போகட்டும் – சைவத்திலும் விஷிச்டாட்வைதம் உண்டு என்று முனைவர் கோ முத்துக்குமாரசுவாமி அவர்கள் நிறுவி உள்ளார் அதை படியுங்கள். சித்தாந்தம் ஆகமத்தை அடித்தளமாக கொண்டு இயங்குவது – ஆகமத்திற்கும் வேதாந்த்திர்க்கும் ஆகவே ஆகாது (இவர்களுள் நடந்த சண்டையை எல்லாம் காட்ட முடியும்) – பின் நாளில் தான் ஆகம வேத சமுச்சயம் நடந்தது.

    வேதாந்தம் எங்கிலும் அத்வைதம் தான் மெய் என்று சொல்வதில் – பிரம்மம் மெய் என்று சொல்கிறது – இந்த அத்வைதம், மற்றும் பல தம்கள் எல்லாம் அவரவர் புரிதல்களே – இது தான் உண்மை சரி என்று கடைசி வரை நிறுவி விடவே முடியாது

    சரி நீங்கள் பரிபாடல் வாசித்ததுண்டோ ?

  44. திரு.சாரங்: திருமழிசை ஆழ்வார் பெயரை மாற்றி எழுதியது தவறு. மன்னிக்க.

    வைணவத்தில் எத்தனை தத்துவங்கள் என்று எழுதுங்கள்.

    அடுத்து வேதாந்தம் என்றால் அத்துவிதம்தான் என்பதில் திருமூலருக்கே ஐயமில்லை. உங்கள் கருத்து வேறாயிருப்பின் நல்லது, மகிழ்க!

    மன்னிய சோகமா மாமறை யாளர்தஞ்
    சென்னியதான சிவயோகமாம் ஈதென்ன
    அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
    துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே’

    Soham of Vedanta is Sivoham of Siddhanta

    The mantra So Ham
    That Vedantins intone
    Is but Siva Yoga
    That is exalted;
    Thus said Siddhantha
    Verily is it apparent
    That Agamas are scriptures
    With Vedic Wisdom filled.
    Thirumanthiram – 2403
    (Dr.Natarajan)

    சரி, இத்திறக்கில் வேறெங்காவது பின்னர் தொடரலாம். கட்டு்ரைக்கு சம்பந்தமாய் பிறர் தொடரட்டும்.

  45. Dear Sridhar Narayanan

    //வரலாற்றுப்படி மண்டன மிஸ்ரர்தான் சுரேஷ்வரராக மறுபெயர்ப் பெற்று சங்கரரின் முதல் சீடராக ஆகி சிருங்கேரி மடத்தை நிறுவுகிறார். அப்படியானால் அவரே அவரைக் கண்டித்துக் கொண்டாரா?
    //

    முதலில் மண்டன மிஸ்ரர் தான் பூர்வ மீம்சத்தில் (வேள்விகள்) ஈடுபாட்டுடன் இருந்தார். இப்படி இருந்தாலும் பிரச்சனையை இல்லை – சுரேஸ்வரர் சுத்த ஞான வடிவமான நைஷ்கர்ம சித்தி என்னும் நூலை இந்த சந்தேகம் வரக் கூடாது என்பதற்காகவே இயற்றினார் – அவரே மீமாம்சத்தை குறை கூறவது எப்படி தவறு ஆகும்.

    யாதவ ப்ராகாசர் என்பவர் அத்வைதியாக ராமனுஜரின் குருவாக இருந்து – பின்பு அவரது சிஷ்யராக மாறி அத்வைதத்தை குறை சொல்கிறார்

    நாகர்ஜுனர் வேதம் படித்த பிராமணர் – பின் அவர் புத்திச்டாக மாறி வேதாந்தத்தை குறை கூறுகிறார்

    // இதைப் பற்றி சிந்தித்தபோது இது சாங்கிய மதத்தின் எச்சமாக சங்கரர் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம் என்றும் தோன்றியது.
    //

    இது புரியவில்லை கொஞ்சம் விளக்கி கூர முடியுமா

    //
    குமரில பட்டரோடு மீமாம்ச தத்துவத்தைப் பற்றி சங்கரர் உரையாடுவதும் படத்தில் வருகிறது. குமரிலர்தான் மண்டன மிஸ்ரரைப் பற்றி சங்கரருக்கு தெரியப்படுத்துகிறார். மீமாம்சம் பற்றி மேலும் ஆராய்ந்து பார்த்தால், மண்டன மிஸ்ரர் தவிர பிரபாகரன், சங்கர பட்டர் போன்ற பலரும் மீமாம்சத்திற்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. நிச்சயம் அந்த சங்கர பட்டர் பூர்வ மீமாம்சத்தின் முன்னோடியான சங்கரராக இருக்க முடியாது. இதைப் பற்றி படிக்கும்போது இந்த பெயர்க் குழப்பம் பற்றி சிறு யோசனை. காலடியில் பிறந்த சங்கரர் முப்பது வயதிற்குள்ளாக இமயமலைவரை இருமுறை பயணம் செய்துவிடுகிறார். நடுவில் பல நூல்களையும், பாஷ்யங்களையும் எழுதிவிடுகிறார்…. இது சாத்தியமா? என்றும் தோன்றியது. வெவ்வேறு சங்கரர்களை ஒரே தொன்ம வரலாறாக இணைத்து விட்டோமோ என்று ஒரு சம்சயம். அப்படி இருக்க வாய்ப்பில்லையா?

    //

    இதில் என்ன ப்ரச்சனை – சங்கரை போல பலர் இது மாதிரி செயர்கரிய செயல்களை சைது உள்ளனர்

  46. சாரங் அவர்களே

    அத்வைத மடங்களில் சிறு வயது பிரம்மச்சாரிகள் துறவறம் ஏற்கிறார்கள். ( சுறேச்வரசாரியார் மட்டுமே இல்லறத்தில் இருந்து துறவறம் ஏற்றவர். ஸ்ரின்கேறி மடத்தில் சுறேச்வரச்சர்யருக்கு 800 ஆண்டு கொடுத்து இருப்பார்கள்.எனவே தான் குறைந்த ஆச்சார்யர்கள். ( அங்கே எதோ ஒரு gap )

    அஹோபில மடத்தில் வயது முதிர்ந்த இல்லறத்தார் பொறுப்பு ஏற்பதால், குறைந்த ஆண்டு ஆட்சி. எனவே அதிக ஆச்சார்யர்கள்.

    நன்றி

  47. iDear Ramesh,

    // Just check all the arguments he presents. //

    I have checked the arguments in Deivathin Kural. The key evidences to fixing Sri Sankarar’s time’s earlier limit are essentially two (as it now stands in the current historical facts available to us). They are (i) Dharmakirti, and (ii) Kalidasa.

    Now, Deivathin Kural does not appear to say anything about the Dharmakirti-I Tsing evidence. (correct me if I am wrong here).

    Regarding Kalidasa, DK says that “there is a view among some historians that there was some Vikramaditya in the sixth century BCE, and he is the Vikramaditya in whose court Kalidasa was one of the nine gems. I will paraphrase it here:

    “கி.மு. 57-இலிருந்த விக்ரமாதித்யனுக்கு வேறாக இன்னொரு விக்ரமாதித்யன் கலியுகத்தின் 2500-வது வருஷத்தை ஒட்டி, அதாவது கி.மு. ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தான் என்றும், இவனைத்தான் ‘ராஜ தரங்கிணியில்’ சொல்லியிருக்கிறது என்றும் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது.

    (Courtesy: https://www.kamakoti.org/tamil/d-san120-10.htm)

    I have no other option other than to treat the above as mere speculation, given that there is no supporting evidence provided by Sri Chandrasekhara Saraswati.

    திரு ஸ்ரீதர் நாராயணன்,

    //வரலாற்றுப்படி…//

    எந்த வரலாற்றுப்படி?

    // அப்படியானால் அவரே அவரைக் கண்டித்துக் கொண்டாரா? //

    இது போன்ற அபத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதற்காகத் தான் மண்டன மிச்ரர் வேறு, சுரேஸ்வரர் வேறு என்று முடிவு செய்துள்ளனர் ஆய்வாளர்கள். ஒரு வேளை சுறேஸ்வரருக்கும் “மண்டன மிச்ரர்” என்ற பூர்வாஸ்ராம நாமம் இருந்திருக்கலாம். “பிரம்மசித்தி” எழுதிய மண்டன மிஷ்ராராக அவர் இருந்திருக்க முடியாது. எப்படி இருப்பினும், சுரேஸ்வரர் பூர்வ ஆஸ்ரமத்தில் என்ன பெயருடன் விளங்கியிருந்தார் என்பதில் எனக்கு ஆர்வமில்லை.

    // வெவ்வேறு சங்கரர்களை ஒரே தொன்ம வரலாறாக இணைத்து விட்டோமோ என்று ஒரு சம்சயம். அப்படி இருக்க வாய்ப்பில்லையா? //

    இவ்விஷயம் குறித்துப் பின்வருவனவற்றை மட்டும் கூற விரும்புகிறேன்: இன்று கிடைக்கும் சங்கரவிஜய நூல்கள் எல்லாம் சங்கரர் காலத்திலிருந்து குறைந்தது 700-800 ஆண்டுகள் கழித்தே எழுதப்பட்டவை என்று அறியப்படுகிறது. ஆகையால், எந்த சங்கரவிஜய நூலில் உள்ள எந்த செய்தியையும் பிரதான சான்றாக (primary evidence) எடுப்பது சரியல்ல என்று கருதுகிறேன். அவற்றில் ஏற்கனவே பழஞ்சுவடியியல் (manuscriptology) முதலிய பிரதான யுக்திகளால் அறியப்படும் உண்மைக்குத் துணைச் சான்று (supporting evidence) இருந்தால் அதை ஏற்கலாம்.

    ==============
    அனைவருக்கும்…
    ==============

    சற்று பொறுமையுடன் பின்வருவனவற்றைப் படியுங்கள்:

    “சங்கரர் கால ஆராய்ச்சியில் காஞ்சி மடம் போன்ற மடங்களின் சான்றுகளை ஏற்காதது அயோக்கியத்தனம்” என்று சிலர் சிறுபிள்ளைத்தனமாகக் கூறுகிறார்கள். மடங்கள் வெளியிடும் ஆச்சார்யா பரம்பரைக் கிராமத்தை வேதவாக்காக ச்வதாஹ் பிரமாணமாக ஏற்றால் என்ன சிக்கல் வரும் என்பதற்குச் சிறு எடுத்துக்காட்டு.

    பிரம்ம சூத்திர சாங்கர பாஷ்யத்தை விளக்கும் “பிரகடார்த்த விவரணம்” என்ற ஒரு பழம்பெரும் அநு பாஷ்யம் உள்ளது. இந்நூலை ‘ஆனந்தஞானர்’ என்னும் டீககாரர் சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார் [1][2]. பிரம்ம சூத்திர, கீதா, தசோபநிடதங்களின் சாங்கர பாஷ்யங்களையும், பிருகதாரண்யக-தைத்திரீய உபநிடதங்களுக்கு சுரேஸ்வரர் எழுதிய வார்த்திகத்தையும் விளக்கி ஆனந்தஞானர் எழுதிய டீகைகளின் சமஸ்கிருத மூலமானது, பூனை ஆனந்தாச்ரமம் முதலிய பதிப்புகளில் சில 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், சில 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்துள்ளன. இவை பல பழஞ்சுவடிகளைத் துணைக்கொண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன என்பதை இந்நூலாசிரியர்கள் முன்னுரைகளில் குறிப்பிட்டுள்ளனர். ஆகையால், பிரகடார்த்த காரருக்குப் பிந்தையவரே ஆனந்தஞானர் என்று தெளிவாகிறது [3]. பிரகடார்த்த காரரோ, பாச்கறரை மேற்கோள் எடுக்கிறார் [4]. அத்துடன், உதாயனர் என்னும் நையாயிகரை மேற்கோள் எடுக்கிறார் [5]. இந்த உதாயனர் என்பவர் தம் நூலில் தம் காலத்தைக் சாக வருடம் 906, அதாவது கி.பி.984 என்று தெளிவாகக் கூறியுள்ளார். அத்துடன் 9-ஆம் நூற்றாண்டு பாமாதி காரராகிய வாசஸ்பதி மிஸ்ரரையும் உதாயனர் மேற்கோள் எடுத்துள்ளார் என்று தெரிகிறது. பிரகடார்த்த காரரே வாசஸ்பதி மிச்ரரை விமர்சித்துள்ளார் [6]. வாசஸ்பதி மிஸ்ரர் பாஸ்கர மதத்தைக் கண்டித்தார் என்பதும், ஆகையால் அவர் பாச்கரருக்கும் பிந்தியவர் என்பதும் நிர்விவாதம்.

    ஆகையால், பிரகடார்த்த காரர் கி.பி.10-ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவராக இருக்க வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. இதை நினைவிற் கொள்க.

    ஆனால், காஞ்சி மடத்தின் குருபரம்பரை வெளியீட்டில் இவ்வாறு உள்ளது:

    “Sri Aanandaghanendra Saraswati : He was known as Chinnayya before Sanyasa. He was the son of Suryanarayana Makhi. He hailed from Chera country. A great votary of Gauri, through divine grace of God, he obtained extraordinary literary powers. He wrote commentaries on the Sankara Bhashyas and Sureswaracharya’s Vartikas. He attained mukti at Srisail on KrishnaNavami in the month of Vaisakha of the cyclic year Krodhana (55 BC).” (note: here the name Anandajnanendra is misspelled as Anandaghanendra. In the image next to this text, the name is given as “Anandajnanendra” only).

    இதில் ‘ஆனந்தஞாநேந்த்ரர்’ என்று குறிப்பிட்டிருப்பது சங்கர பாஷ்யங்களுக்கும் சுரேஸ்வரர் வார்த்திகங்களுக்கும் டீகை இட்ட ஆனந்தஞானர் அல்லது ஆனந்தகிரியே என்பதில் ஐயமில்லை. மேலும், திரு T S Narayana Sastri என்னும் 509BCE-வாதி ஒருவர் காஞ்சி மடத்தில் இதே ஆனந்தகிரி அல்லது ஆனந்தஞானர் தான் 55 BC-இல் எழுந்தருளியதாகக் குறிப்பிட்டுள்ளார்: https://www.new1.dli.ernet.in/data4/upload/0119/591/PTIFF/00000213.tif என்பது அந்நூலில் சம்பந்தப்பட்ட பக்கத்தின் படிமம். அது தவிர: காஞ்சி மேடம் வெளியிட்டுள்ள குருபரம்பரை வரிசையில் ‘சுத்தானந்தர்’ என்ற ஆச்சாரியார் இவருக்கு முன்பு இருந்ததாக உள்ளது. ஆனந்தஞானர் தம் டீகையில் தம் குருவை “சுத்தானந்தர்” என்றே அறிமுகப்படுத்துகிறார். இத்துடன், 55BCE என்ற தேதியையும் மேற்படி உள்ளதில் பார்க்கலாம்.

    கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்கும் பிந்தையவராகிய பிரகடார்த்த காரரைப் பெயரிட்டு மேற்கோள் எடுக்கும் ஆனந்தஞானர் காஞ்சி மடக் காரர்கள் கூறுவது போல கி.மு.-வில் இருந்திருக்க சிறிதும் வாய்ப்பே இல்லை என்பது இப்படி வெள்ளிடை மலையாக, குன்றிலிட்ட விளக்காக விளங்கவில்லையா? இப்படி இருக்க, மடங்கள் கூறும் chronology-ஐ எப்படி சரித்திர ஆராய்ச்சிக்கு எடுக்க முடியும்???

    மேற்கண்ட ஆனந்தஞானர் கால முன்வரையரை ஆராய்ச்சிக்கு மூல நூற் படிமச் சான்றுகள்:

    [1]: https://www.new1.dli.ernet.in/data3/upload/0081/306/PTIFF/00000023.tif – இல் அடிக்குறிப்பு
    [2]: https://www.new.dli.ernet.in/data_copy/upload/0083/069/PTIFF/00000034.tif – இல் 23-ஆம் வரி.
    [3]: https://www.new1.dli.ernet.in/data3/upload/0081/306/PTIFF/00000023.tif – இல் முதல் பாரா
    [4]: https://www.new1.dli.ernet.in/data3/upload/0081/307/PTIFF/00000690.tif – இல் காணப்படும் “மேற்கோள் அகரமுதலிப் பட்டியலில்” (index of quotations) இருபத்தி இரண்டாம் வரி.
    [5]: https://www.new1.dli.ernet.in/data3/upload/0081/306/PTIFF/00000317.tif – இல் பனிரண்டாம் வரி.
    [6]: https://www.new1.dli.ernet.in/data3/upload/0081/307/PTIFF/00000501.tif – இல் இருபதாம் வரி.

  48. reality,

    // டாக்டர் என். மகாலிங்கம் தன “ஹிஸ்டாரிக் டேட்ஸ்’ என்ற புத்தகத்தொகுப்பு, பக்கங்கள் 124 முதல் 127 வரை, “டேட் ஆப் ஆதிசங்கரா’ என்ற தலைப்பில், ஆதி சங்கரரின் காலம் AD 788 என்பவர்களைக் கடுமையாகச் சாடி, ஆதி சங்கரருடைய பிறப்புக்கால கோள்கள் நிலையையும் கொடுத்து, ஆதி சங்கரர் காலம் BC 509 என நிறுவியிருக்கும் நிலையில், விவாதம் முற்றுப்பெற வேண்டியிருக்கின்றது. //

    அதே டாக்டர் மகாலிங்கம் அப்புத்தகத்தின் 76-ஆம் பக்கத்தில் “காளிதாசன் காலம் 33 BCE” என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஆகையால், அவரே “சங்கரர் 509 BCE” என்ற கணக்கிற்குத் தீ கொளுத்தி விட்டார். ஏனெனில், காளிதாச்சனைக் குமாரிளர் மேற்கோள் எடுத்துள்ளார். குமாரிளர் சங்கரர் காலத்திற்கு முந்தியவர் அல்லது சமகாலத்தவர் என்பதில் எந்த அபிப்பிராய பேதமும் இல்லை.

    // ஆதி சங்கரருடைய பிறப்புக்கால கோள்கள் நிலையையும் கொடுத்து //

    எங்கிருந்து கிடைத்தது அவருக்கு ஆதி சங்கரருடைய பிரப்புக்கால கோள்களின் நிலை? அவர் பாஷ்யத்தில் கூறியுள்ளாரா? இல்லை சுரேஸ்வரர் பத்மபாதர் ஆனந்தஞானர் எவராவது குறிப்பிட்டு உள்ளாரா?

  49. ஆனந்தஞானர் காலம் பற்றிய என் நீண்ட மறுமொழியில் சிறு திருத்தம்,

    // மடங்கள் வெளியிடும் ஆச்சார்யா ஆச்சார்ய பரம்பரைக் கிராமத்தை கிரமத்தை வேதவாக்காக ச்வதாஹ் ஸ்வதஹ் பிரமாணமாக ஏற்றால் என்ன சிக்கல் வரும் என்பதற்குச் சிறு எடுத்துக்காட்டு. //

  50. ரமேஷ்,

    Sringeri மடத்தினர். ஆதிசங்கரர், விகிரமாதித்யர் குப்தா பேரரசர் எனக்கொண்டு, முதலாம் நூற்றாண்டில் தோன்றியதாக கணக்கிட்டார்கள். சுறேஸ்வராச்சரியருக்கும், அதற்கு அடுத்து வந்த ஆச்சர்யருக்கும் இடைப்பட்ட காலம் கிட்ட தட்ட 800 ஆண்டுகள். அவர்கள்,சுறேஸ்வராசாரியார் 800 வருடங்கள் இருந்ததாக கணக்கிட்டார்கள். (இடைப்பட்ட காலத்தை கற்பனை ஆச்சர்யர்களால் நிரப்பவில்லை),

    பின்னர் விகிரமதித்ய மன்னர், இரண்டாம் சளுக்யராக தான் இருக்க கூடும் என்று வரலாற்று அறிகர்கள், நிர்ணயித்தவுடன், சுறேஸ்வராச்சரியரின் காலம் கிட்டத்தட்ட 50 அக குறைந்தது. ஆதிசங்கரர் காலம் கிபி எட்டாம் நூற்றாண்டானது.

    ஆதிசங்கரர் சித்தி ஆகி கிட்டத்தட்ட 1200 வருடங்கள் ஆகின்றன (சரித்திர பேராசிரியர்களின் கூற்றுப்படி). ஸ்ரிங்கேரியில் 35 ஆச்சார்யர்கள் இருந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரவருக்கு 35 வருடங்கள் வருகிறது. இது நியமான கணக்கு. ஒரு ஆச்சார்யர் இருக்கும் போது, இன்னொரு ஆச்சர்யளை, நியமனம் செய்தாலும், முதலாம் ஆச்சர்யாள், சித்தியனதற்கு பிறகு தான் மற்ற ஆச்சர்யல் பதவிக்கு வருவார். எனவே சிறு வயதில் ஒருவருக்கு, சன்யாசம் கொடுக்கபட்டாலும், முந்திய ஆச்சர்யல், சித்தி ஆன பின் தான் இரண்டாவது ஆச்சர்யல் பதவிக்கு வர முடியும். எனவே, ஸ்ரின்கேறி மடத்தின் கணக்கு சரியாக இருபதாக தான் படுகிறது.

    ஆதிரவி

  51. /சித்தாந்தம் ஆகமத்தை அடித்தளமாக கொண்டு இயங்குவது – ஆகமத்திற்கும் வேதாந்த்திர்க்கும் ஆகவே ஆகாது /

    தங்கள் புரிதலுக்கு நன்றி. இங்கே எழுதப் புகுந்தது என் பிழை.

    அன்புடன்,
    ஜாவா குமார்

  52. அருமறைச்சிரம் (ஸ்ருதிசிரம் – வேதாந்தம்)

    கற்பனை கடந்த சோதி கருணையே உருவ மாகி
    அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
    சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று
    பொற்புடன் நடம்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி!

  53. குமார் அவர்களே

    //
    அடுத்து வேதாந்தம் என்றால் அத்துவிதம்தான் என்பதில் திருமூலருக்கே ஐயமில்லை. உங்கள் கருத்து வேறாயிருப்பின் நல்லது, மகிழ்க
    //

    திருமூலருக்கே என்றால் என்ன அர்த்தம்

    வைனவத்தில் மொத்தம் இருபத்தி நாலு தத்துவங்கள் இல்லை, அதை விட ஜாஸ்தி –நீங்களே கண்டுபிடித்து கொள்ளுங்கள்

    இதில் இருந்து ஒன்று நன்றாக விளங்க வேண்டும் நீங்கள் காட்டும் ஆதார மூலத்தில் (பாட்டில்) பிழை இருக்கிறது

    அப்புறம் – நீங்களே அந்த பாடல் சொல்வதாக கூறுகிறீர்கள்

    வேதாந்தம் – 27
    மாயாவாதம் -25

    அப்போ மாயாவாதம் என்பது அத்வைதம் இல்லை என்று வேர சொல்கிறீர்களா

    அத்வைதம் சொல்லும் தத்துவங்களை உங்களால் தர முடியுமா
    வேதாந்தம் சொல்லும் தத்துவங்களை உங்களால் தர முடியுமா

    வைனவத்தில் எத்தனை தத்துவம் என்பது இருக்கட்டும் – நீங்கள் காட்டும் பாசுரத்தின் அர்த்தம் என்ன என்று ஒரு தடவயாவது வ்யாக்யானங்களை புரட்டி பார்ததுன்டோ

    சரி வ்யாக்யானம் தான் வேண்டாம் -அந்த பாசுரம் முழுதாக இதோ

    ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்று ளாயுமாய்
    ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்றவாதி தேவனே
    ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி யந்தரத் தணைத்துநின்
    றைந்தும் ஐந்துமாய நின்னை யாவர்காண வல்லரே

    முதல் இருபத்தி நாலுக்கு கணக்கு சொன்ன தாங்கள் அடுத்து வரும் இருபத்தி ஐந்துக்கு கணக்கு சொல்லவில்லயேŸ – அப்பொ வைனவத்தில் நாப்பத்தி ஒம்பொது தத்துவமாŸ

    “ஐந்துமாய நின்னை” என்பதற்கு என்ன அர்த்தம் – இது தத்துவங்களை விளக்கும் பாசுரம் அல்ல –

    முதல் பாசுரத்தில்

    பூ நிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
    தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
    மீ நிலாயதொன்றுமாய் வேறு வேறு தன்மையாய்
    நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே?

    அப்போ இந்த ஐந்து நாலு மூன்று இரண்டு, ஒன்று எல்லாத்தயும் கூட்டி பதினைந்து தத்துவம் என்று சொல்வீர்களா-

    இங்கு ஆழ்வார் கட்டுவது சமாநாதிகரணம் என்னும் ஒரே வேற்றுமையில் படிப்பது – அதாவது நாம் காணும் அனைத்திலும் க்ண்ணன் அந்தர்யாமியாக இருப்பதை

    இரண்டு வரியை உருவி எதை நிறுவப்பார்கிறீர்கள் Ÿ

  54. கந்தர்வன் அவர்களே

    //
    இந்த உதாயனர் என்பவர் தம் நூலில் தம் காலத்தைக் சாக வருடம் 906, அதாவது கி.பி.984 என்று தெளிவாகக் கூறியுள்ளார். அத்துடன் 9-ஆம் நூற்றாண்டு பாமாதி காரராகிய வாசஸ்பதி மிஸ்ரரையும் உதாயனர் மேற்கோள் எடுத்துள்ளார் என்று தெரிகிறது. பிரகடார்த்த காரரே வாசஸ்பதி மிச்ரரை விமர்சித்துள்ளார் [6]. வாசஸ்பதி மிஸ்ரர் பாஸ்கர மதத்தைக் கண்டித்தார் என்பதும், ஆகையால் அவர் பாச்கரருக்கும் பிந்தியவர் என்பதும் நிர்விவாதம்.
    //

    உதாயனரின் magnum opus நியாய குசுமாஞ்சலி என்னும் புத்தகம் என்னிடம் உள்ளது – இதில் இவர் ப்ராபகாரரின் (எட்டாம் நூற்றாண்டு) அன்விதாபிதானவாத கொள்கையையும், குமாரில பட்டரின் “அன்வித-பிதானவாத” கொள்கையையும் சேர்த்து கண்டிக்கிறார்

  55. ரமேஷ்

    ஸ்ருங்கேரி மடத்தில் கேப் இர்ருகிரதாக அவர்கள் சொல்வதில்லையே – இதை யார் வேண்டுமென்றே சொல்கிறார்கள் ?

    நான் சொல்ல வந்தது இப்படி எல்லாம் ஒரு average எடுத்து கணக்கு போட வேண்டாம் என்பதையே – அடுக்கடுக்காக ஆதாரங்கள் வைக்கும் பொது இப்படி கணக்கு பார்ப்பது சரி இல்லை அல்லவா?

  56. திரு.சாரங்,

    /அப்போ மாயாவாதம் என்பது அத்வைதம் இல்லை என்று வேர சொல்கிறீர்களா/

    ஆதிசங்கரரைப் பற்றிய இக்கட்டுரைக்கு நல்ல பின்னூட்டங்கள் ஐயா.

    உங்களைப் போன்ற பக்திமான்களிடம் எதையும் நிறுவுதல் கடினமே. உங்கள் இஷ்டப்படி எதுவோ அதை வைத்துக் கொள்ளுங்கள்.

    சாக்த சைவ வேதாந்த தத்துவங்கள் குறித்தெல்லாம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இணையத்தில் விவரமாக எழுதி வந்திருக்கிறேன். மாதிரிக்கு சில:
    https://www.treasurehouseofagathiyar.net/17600/17626.htm
    மேலும் விவரமாய் இங்கே:
    https://pm.tamil.net/pub/pm0231/mp231.html

    அதுசரி, ’வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம்’ என்று ஒருவர் பாடினால் அவர் மாயாவாதியா? இந்த வரியை இட்டு தேடிப்பாருங்கள்.

  57. அன்புள்ள reality:

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அச்சுட்டியிலிருந்து:

    //on the identity of the Kirthi referred to by Sankara’s disciple Suresvaracharya in his vartika to Sankara’s upadesa sahasri. The article insists that that Kirthi can be none other than Dharma Kirthi who is assumed by the article to be of the 7th century.//

    சுரேஸ்வரர் “தர்மகீர்த்தி” என்று முழுப் பெயரையும் தம் வார்த்திக்கத்தில் இட்டுள்ளார், கட்டுரையிலேயே சான்று கொடுத்துள்ளேன் பாருங்கள்.

    // On the date of Adi Sankara the contention that Sringeri Matha changed the date from 144 BC to 820 AD is because Tippu Sultan could not accept that there could be a Guru older than Mohammed has been largely ignored. //

    உங்கள் நலத்திற்காக சொல்லுகிறேன்: தயவு செய்து இம்மாதிரி வாதங்களைச் செய்பவர்களைத் தவிர்த்து விடுங்கள்.

  58. திரு P N Kumar,

    // மேலும் வைணவம் என்பது வேதாந்தம் இல்லையென்றும், அது அறுசமயங்களில் ஒன்றே என்றும் வைணவ பக்தி இலக்கியங்களிலிருந்தும் தெளியலாம். //

    சைக்கிள் கேப்பில் கட்டுரைக்கு ஒரு விதத்திலும் சம்பந்தமில்லாத, அதுவும் தவறான கருத்துக்களை இட்டுள்ளீர்கள். தயவு செய்து கால ஆராய்ச்சி பற்றி மாத்திரம் இங்கு விவாதிப்போம்.

  59. // மேலும் அத்வைதத்தை மாணிக்கவாசகர் கடுமையாகப் பாடி விமர்சித்தார் என்று புரியாதோர் அடிக்கடி சுட்டும், போற்றித் திருஅகவல் பாடலும் (11) //

    அத்வைதத்தைத் தவிர “மாயா வாதம்” என்று எந்த மதமும் இருந்ததாக சரித்திரச் சான்றே கிடையாது.

    என்ன சாதிக்க முயல்கிறீர்கள்? அத்வைதமும் சைவாகம மதமும் ஒன்றேன்றா? சிவஞான சித்தியர் பரபக்கத்தில் பார்த்துக் கொள்க. சாங்கர பாஷ்யம் பிரம்ம சூத்ரம் 2.2.37-41 இதையும் படியுங்கள். அத்துடன் 2.2.42-வும் படித்து ஆராய்ந்து சிந்தியுங்கள்.

    வைணவம் வேதாந்தம் இல்லை என்கிறீர்கள். ஆனால் அதே சமயம் சாரங் அவர்கள் ஆகம மதத்துக்கும் வேதாந்தத்துக்கும் நெடு வித்தியாசம் உண்டு என்று சொன்னதற்குக் கோபித்து விடை பெறுகிறீர்கள்.

    ஏற்கனவே கூறியிருப்பது போல இது கட்டுரைக்குச் சம்பந்தமில்லாத சர்ச்சை. இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

  60. எனக்கு இத்தனை புத்தகங்களை பற்றியும் மேற்கோள்களை பற்றியும் தெரியாதென்றாலும் ஒன்று மட்டும் தோன்றுகிறது சங்கரர் சிந்து பிரதேசத்தை பற்றி எழுதி இருக்கிறாரா தெரியவில்லை , எனக்கு தெரிந்து அவர் இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள சிந்து பிரதேசத்திற்கும் அதன் மேலே உள்ள மூலஸ்தானம் என்னும் முல்தான் நகரத்திற்கும் சென்றதற்கான செய்திகள் இல்லை. கிபி 686 பிறகு சிந்து பகுதி சிறிது சிறிதாக இஸ்லாமிய படையெடுப்புகளுக்கு ஆட்பட்டுவந்தது. இதனால் அவர் அங்கு செல்வதை பலரும் தடுத்திருக்கலாம்

  61. //பிரதாப் அவர்களே,

    தங்கள் ஆதங்கம் நியாயமானதே. தமிழில் எழுதாது என்னுடைய பலவீனமே அன்றி ஆங்கில புலமையை காட்ட அல்ல. எனக்கு அதில் புலமையும் கிடையாது. தமிழில் எழுதவேண்டுமெனில் பல மணி நேரம் யோசிப்பதிலே சென்று விடுகிறது.
    தயவு செய்து மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  62. Sriman Gandarvan and Sarang,

    I already see few more replies from you which I need to go through yet. Please bear with me if some of these are already answered by you.

    Sriman sarang

    //what is so magical about BCE?
    It is simply because 4 Sankara mathas have unbroken records and many great saints have adorned them. It will be a wild imagination to think that these mathadhipathis sat together and plotted to change the history.

    //Firstly all proofs you show the difference between what you and Gandarvan bring to the table your’s are entirely based on third degree inference whereas Gandarvan is showing direct proofs from Shankarar’s and other’s writings.

    I don’t think there is any direct evidence that Gandarvan is showing. It’s only reference to the certain person’s referred by Sankara in his bhashyas. If Sankara’s work has given any direct
    reference to his date then it would have been a no brainer to get his date.

    His final argument seems to be resting on Dharmakirti and chinese visitors and hence I’ve taken up for my initial consideration.

    I don’t get what you mean by third degree reference.

    //if you put Buddha in 1887 BCE – you have to Push Shri Krishna’s dates to 5000 BCE
    I never said that. This is your assumption. The link that I had referred earlier gives the date of Mahabharata war.

    //Also see i have given proofs on Ashoka leaving a stone inscription about he sending buddhists to the place where alexander 2 ruled.

    The kings mentioned in the rock edict 13 (https://www.katinkahesselink.net/tibet/asoka1.html) are purposely twisted to greek names. There is no mention of Greece or Greek but only Yona. The original king names in the edicts are Amtiyoka, Amtikini, Alikasudara, Tulamaya and Maka. This is reverse conversion done earlier for Chandragupta to Sandrokryptus.
    In the writings of the Greek historians of the 3rd century B.C., there is no mention of Asoka or his humanitarian missions as we should expect if he had really belonged to the 3rd century before
    Christ and his humanitarian activities had extended to such remote lands as modern Greece . None of them mention Asoka by name.(https://trueindianhistory-kvchelam.blogspot.com/2009/09/2-maurya-inscriptions-of-ashoka.html#more).

    //You have missed out on an important proof in the form of Poet Kalidasa
    Which Kalidasa we refer to? One belonging to Vikramaditya’s court? or one belonging to court of Bhoja? If Vikramaditya then is it Vikramaditya of 57 BCE or 6th century BCE? Appa Sastri seems to have determined that Kalidasa is before kumarila bhatta based on Nepali raja vamsavali and Jina Vijaya. I tried to get some info on Appa sastri’s work but no luck.
    Refer to: https://www.kamakoti.org/tamil/d-san120-10.htm

    //Greeks came to India only after Alxander
    I already answered this point. It is only during Gupta Chandragupta (320 BC), he had come here.

    Sriman Gandarvan
    //I am repeating for the 4th time here… the points that I presented in this essay do not have anything to do with Sandracottus, Megasthenes, and their dates. This just deviates from the point of the discussion.

    Forgive me sir. As I mentioned earlier no ancient Indian history could be discussed without this basis. As yourself has referred to Sarang’s comment on Asoka on your below response, how can we ignore this point?

    //There is nothing wrong in subjecting any aspect of Sanatana Dharma to historical scrutiny. In fact, it would be a great service for someone to try and prove the “Sanatana”-ness of the Dharma.

    I fully agree with you. But my concern was that the deliberate twisting of facts to suit their needs to prove their supremacy. It is very clear from the writings of Max Muller and TB Mccaulay. Unfortunately many of our brown sahibs too parroted the same without any second thought. Sandrokryptus and Asokan inscriptions are few examples.

    //In any case, what you have shown in your response as evidences is just a collection of quotes from several recent pandits. This does not make for any evidence. Please quote the source texts.

    The source texts are already there in my reference. Let me know if anything is missed out. About I-tsing, I don’t have much to say as I came to know about him only from your reference. Need to find out more about him. You can ignore my point on vajrasuchi for now.

    //Some say that Shankarar never quoted Dharmakirti and was not aware of it, and agree that Dharmakirti was in 500-650 CE (S Sankaranarayanan).

    You are right and I don’t agree with them on Dharmakirti and Kumarila Bhatta.

    Dharmakirti of 7th century CE was disciple of Dinnaga who lived between 480-540 CE. Even if we assume Dharmakirti was born on 601 CE, how he could have met his guru? Similarly Vasubandhu belongs to 4th century CE and how he could have met his disciple who lived in 5th century CE?

    What is your response on Shankaracharya hill that I had mentioned earlier?

    Some more internal evidences : Any thoughts…?
    1) Acharya mentioned the names of two cities in Sutra Bhashya (4-2-5): Pataliputra and Srughna.
    Patanjali also mentions Srughna as a city. According to archaeological
    findings, Srughna was destroyed during the third century AD and Pataliputra
    was destroyed during the 6th century AD. Since Acharya mentioned them as
    thriving cities, the date of Adi Sankara must be a date earlier to the dates
    of destruction of these cities. Refer: (https://www.kamakoti.org/tamil/d-san120-20.htm, https://www.indiadivine.org/audarya/hinduism-forum/187608-dating-adi-shankara.html)

    2)Explaining Brahman, in Mandukya Upanishad Bhashya, Adi Sankara uses the
    term, Karshapana, which referred to a coin in vogue in his times.
    Karshapanam was used as a unit of monetary exchange all over Bharat between
    6th century BCE. and 2nd Cenrury A.D. Hence, the date of Sankara in all
    probability, should be within this period. (https://www.indiadivine.org/audarya/hinduism-forum/187608-dating-adi-shankara.html)

  63. குமார் அவர்களே

    வேதாந்தம் அப்புறம் எத்தனை தத்துவங்கள் என்பதை பற்றி எல்லாம் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன் – சும்மா கல் எறியும் காரியத்தில் மட்டும் இறங்கி உள்ளீர்கள்

    பாசுரத்தை கண்டபடி அர்த்தம் செய்வது – தவாறாக தத்துவ கணக்கு சொல்வது – இப்படி வரிக்கு வரி தவறு செய்து விட்டு நீங்கள் எழுதுவதை படிக்க வேண்டும் என்று வேறு சொல்கிறீர்கள்? எந்த நம்பிக்கையில் படிப்பது?

    அதென்ன சாக்த சைவ வேதாந்த தத்துவங்கள் – உங்கள் கருத்துப்படி பார்த்தால் சாக்த சைவ, வைணவ சமயங்கள் – சாக்தமும் சைவமும் ஷன் மதத்தில் இல்லையா – நீங்களே முடிவு பண்ணி எடுத்தி விட்டீர்களா? ஏன் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறீர்கள்? நீங்கள் எழுதுவதில் இருந்து பார்த்தால் உங்களுக்கு வேதாந்தத்தில் சற்றும் பரிச்சயம் இல்லை என்பது விளங்குகிறது – வைணவம் பற்றியும் உங்களுக்கு துளையும் புரிதல் இல்லை – இப்படி இருக்க நீங்கள் கமெண்ட் செய்வது சரி இல்லை அல்லவா?

    எல்லாம் சூனியம் என்று சொனால் சூனியவாதி – எல்லாம் மாயம் என்று சொன்னால் மாயாவாதி – எல்லாம் சக்தி என்று சொனால்? எல்லாம் சிவம் என்று சொனால்? எல்லாம் நெடுமால் என்று சொனால்? எல்லாம் பிரம்மம் என்று சொன்னால்?

    நெடுமாளையும், சிவா பெருமானையும் அடியவர்கள் மாயன் மாயன் என்று அன்போடு தான் அழைக்கிறார்கள் – அம்பாளை மாயே என்று தான் அழைக்கிறார்கள்

    மாயாவாதி என்றால் இழுக்கு இல்லை – அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்

  64. Dear Kumudan,

    // If Vikramaditya then is it Vikramaditya of 57 BCE or 6th century BCE? //

    Nobody, other than proponents of the 509 BCE date, is aware of a Vikramaditya who lived in 6th century BCE.

    // As I mentioned earlier no ancient Indian history could be discussed without this basis. //

    How do you think historians decided the dates of Fa-Hien, Hsuan Tsang, and I Tsing? Using Chandragupta Maurya’s dates? I have shown that their dates (or at least I Tsing’s) are determined using Chinese era names coined by emperors of various dynasties in China. Now, do you think that the times of Chinese emperors are also determined using Chandragupta Maurya’s date??

    // As yourself has referred to Sarang’s comment on Asoka on your below response, how can we ignore this point? //

    That was just yet another of several points, on which modern historians have to be false/lying, for the 509 BCE date to be true. It is not just the only one, as you seem to think.

    // His final argument seems to be resting on Dharmakirti and chinese visitors… //

    Indeed. The evidence is extremely strong. How do you explain that I Tsing of 7th century CE mentions Dignaga and Dharmakirti as recent personalities??

    // Unfortunately many of our brown sahibs too parroted the same without any second thought. //

    Please, don’t jump to conclusions without proper research. Curators of manuscript libraries such as T R Chintamani and Kuppuswami Sastri have written a lot. You can see from the tone of their writing and the content how well-researched and deep they are. They start with no assumptions.

    // Dharmakirti of 7th century CE was disciple of Dinnaga who lived between 480-540 CE. Even if we assume Dharmakirti was born on 601 CE, how he could have met his guru? //

    Who said Dharmakirti was Dignaga’s disciple? Dharmakirti wrote a commentary on Dignaga’s work. That’s all. From Tibetan traditions, we hear that Dharmakirti was a disciple of Dharmapala and Isvarasena, a disciple of Dignaga. However, I am not betting on it as the same “tradition”, written after 14th cent CE, says foul things about Bhagavatpadacharya.

    Moreover, that Dharmakirti lived around 7th century CE is a *likely* date, based on argumentum ex silentio as Dharmakirti is not mentioned by Hsuan Tsang. However, the hard evidence is that Dharmakirti must be recent to Tsing, which he himself testifies to. Also, Tsing testifies that Dignaga also lived recently (in 670 CE). Also, Tsang mentions Dharmapala as a recent personality, and so does I Tsing. These evidences put the “Sankara in 8th Century” hypothesis outside the realm of doubt. Pray tell me how you are going to explain these evidences if you are going to support 509 BCE.

    // Similarly Vasubandhu belongs to 4th century CE and how he could have met his disciple who lived in 5th century CE? //

    The date of Vasubandhu is hardly relevant to the discussion here. If I am wrong on this, tell me why.

    // What is your response on Shankaracharya hill that I had mentioned earlier? //

    I have not seen archaeological records myself, so I don’t know much about this. However, R M Umesh in his “Shankara’s date” claims to show that it is nothing but a figment of imagination and makes some arguments there. He argues that it is just a Shiva temple and not a Shankaracharya temple. I could only read bits and pieces of the text in google, and I don’t have access to the whole book. Hence, both of us are just able to show authors who are on each of our side on this issue. If neither of us can give further information, I have to say that this point does not take us anywhere… for or against the “shankaracharya hill” theory. If you have links to archaeological records, or at least the title of the book and the exact citation which contains this data, please provide me the same. On my part, I will sincerely try to spend time by digging into your evidence deeper and presenting here the results.

    // Since Acharya mentioned them as thriving cities //

    The English translation of the sentence is here:

    “Of a man who first travels from–Srughna to Mathurâ and then from Mathurâ to Pâtaliputra, we may say shortly that he travels from–Srughna to Pâtaliputra.”

    Acharya is just explaining an analogy here. Tell me sir, where does the Acharya state or even imply that these were thriving cities in his time?

    // Explaining Brahman, in Mandukya Upanishad Bhashya, Adi Sankara uses the
    term, Karshapana, which referred to a coin in vogue in his times. //

    Acharya sayas this in Karika Bhashya, first prakaraNa, second kArika. The Sanskrit commentary goes as: “vyavasthitaś catuṣpātkārṣāpaṇavan na gaur iveti”, courtesy: https://www.sub.uni-goettingen.de/ebene_1/fiindolo/gretil/1_sanskr/1_veda/4_upa/agsas_1u.htm

    To put this in English, “the four quarters should be understood like the four quarters of a Karsapana coin, and not like the four feet of a cow.” Again, where does the Acharya state or even imply that it was in vogue in his time? Did all of those coins vanish after 2nd Century AD, so that Shankara couldn’t have seen them?

    I don’t know if you have noticed, but I will tell you that it is very apparent to me, that people sticking to the 509 BCE theory are blinded by their attachment to this pet theory of theirs, that they ignore what Sankara Bhagavatpada really stands for – non attachment, dedication to Paramatma, and Sannyasa. Why would Shankara Bhagavatpada, who is described by Padmapada in Panchapadika as “Nirasta Bhuti” (a double-entendre, one of whose meanings is “devoid of wealth”), and who is popularly known to have become a Paramahamsa Sanyasi at the age of eight, even care for contemporary currency? It is more appropriate to think that he is using a Puranic or some other Sanskrit literature’s mention of that coinage, written ages ago.

    Two more half-baked “evidences” that add up to the already-discredited “Dharmakirti – Fa Chan” argument that you referred to earlier. I do not personally mean to offend you at all, but I will tell you this since you are just quoting, and since I am pretty sure that you are a very reasonable person: Don’t you see, Shri Kumudan, that these sort of arguments given by 509 BCE side are poorly researched, and intended at throwing whatever possible to gullible audiences?

    Also, I request you to please provide the exact verse number next time when you present such evidences. I could locate the unicode text version of the Mandukya Bhashya, so I was able to locate this. Unfortunately, the same is not available for all of Shankara’s Bhashyas. They are all mostly in image format.

  65. // But my concern was that the deliberate twisting of facts to suit their needs to prove their supremacy. //

    My concern is that certain present-day Brahmasris, Mahamahopadhyayas, and Sastris are using means similar to the devious ones devised by fundamentalist Christians (esp. in America) in order to deny scientific enquiry. In that process, these Brahmasris, by claiming to bat for Sanatana Dharma, are making us a laughing stock. As a result, neutral outsiders and onlookers will stop taking us seriously.

    The result? We will have a thousand more Wendy Donigers and Michael Witzels making fun of our culture in their “academic” writings.

    This is my concern, and I can’t think of a better way of putting it.

  66. Shri Kumudan,

    The below is important, so I am restating it and requesting you to specifically respond to this point:

    // If 509 BCE is supported, we would have a huge gaping hole in the timeline of advaita vedanta where no major works exist after Sankarar’s and Sankarar’s disciples such as Suresvara, Padmapada, etc. Especially during the time when Buddhism was doing very well in South India (Hsuan Tsang notes that Dharmapala was from Kanchipuram). //

  67. இந்த தொடர் பெருமளவில் ஆர்வமூட்டும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. இதற்குப் பெரும் உதவி புரிந்திருப்பது — என்னோடும் சாரங் அவர்களோடும் அபிப்பிராய பேதம் இருக்கும் போதும் வியக்தி தூஷணத்தில் இறங்காமல், நட்புடன் தம் பக்ஷத்திற்கான பல வாதங்களை நேர்மையுடன் அயராது உழைத்து எடுத்து முன்வைத்துள்ள திரு குமுதன் அவர்களுக்கும், திரு சாரங் அவர்களின் பங்களிப்புக்கும் எனது உள்மனதிலிருந்து பாராட்டுக்களும் நன்றிகளும்.

    தமிழ் ஹிந்து தளத்தில் முன்பு நடந்துள்ள வாதங்கள் சில நாயடி-குழாயடி சண்டை கட்டத்திற்குச் சென்று விட்டதை அனைவரும் அறிவர :-). அபிப்பிராய பேதம் உள்ள நண்பர்கள் வாதம் புரிவதற்கு இத்தொடரில் நடப்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என்பது என் பிரார்த்தனை.

    வாதங்களை இன்னும் தொடர எனக்கு ஆர்வம் இருக்கிறது…

    திரு ஜடாயு மற்றும் திரு அரவிந்தன் அவர்களே,

    ஒரு சிறு உதவி உங்களிடம் கேட்கிறேன்.

    உங்கள் இருவருக்கும் வரலாற்றில் பெரிய அளவிலான ஆர்வம் உண்டு என்று அறிகிறேன். சந்திரகுப்த மௌர்யர் – அசோகர் – புஷ்யமித்ர சுங்கர் காலம் குறித்து திரு குமுதன் அவர்கள் கூறும் “alternative theory” பற்றி உங்கள் கருத்தென்ன? இது குறித்து அனுகூலமாகவோ பிரதிகூலமாகவோ சான்றுகள் உங்களிடம் உண்டா? நேரமிருந்தால் இங்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  68. Respected Shriman Kumudan,

    Now we shift to numismatics 🙂

    Karshapana is mentioned by manu smritis such as Manu and Narada. Manu Smriti in 8.136 refers to it:

    “but know (that) a karsha of copper is a karshapana, or pana.”

    So, it is not necessary that Shri Shankarar has to refer to a contemporary currency only. Moreover, D R Bhandarkar writes:

    “The tradition of Karshapana and its token money prevalent in the early Buddhist period was thus preserved so late as the 6th or 7th century AD” – Lectures on Ancient Indian Numismatics, by D R Bhandarkar, p. 186

    Shows that the junk arguments of the 509 BCE side can be dismissed with very easy research. Such arguments add nothing more than nuisance value in our efforts to learn proper history.

    One minor correction… The mention of Karshapana coin occurs in the Bhashya of the second mantra of the Upanishad, not in the Karika Bhashya. I stand corrected.

  69. It is very difficult to believe that 4 out of 5 mutts give the same date that too in BC. There should be some backing for that.

    There is a mention of a Dwaraka Mutt copper plate. The period though claimed as BC by them it should be clearly certified or discounted before finalising.

    The Jainism flourished even after 8th C. Big new temples like – The Kazhugumalai idols , Sravana Belagola which were built later are examples. We cannot say that there was no jain religion after Sankara ( whatever be his date) Even when in their peak, Bhudhism and Jainism were followed by minorities and majorities were Hindus. ( refer Thevara padigams which mentions velvis in many places) But those religions had Royal patronage & had power/money and followers of sanatana religion were insecure ( something simillar to the current situation)

    Hence arguing that there should’nt have been any Jains or Bhudhists after Sankara is not right.

    Please take up all these points and conclude.

    regards

  70. Talaxa Brdk mans.

    of Tulava there is a very great admixture of words from all the CHAPTER countries containing the five southern nations of India. ,^^s***j

    Originally, the Tulava Brdhmans were followers of Batta Achdrya, £eb- n* who flourished at Ahichaytra, on the banks of the Goddvery. An Acharya. account of his life, which they of course consider as prophetical, is to be found in the Skandha Purdna, one of the eighteen books written by Vydsa. Batta Acharya had great success against 18 of the 21 heretical sects, some of which admitted,.and others denied, the authority of the’FMw.

    Afterwards Sankara Achdrya disputed with the followers of Batta, Sankara and, having convicted them of numerous errors, gained many pro- *Mryaselytes; and many of the Tulava Brdhmans continue to follow his doctrines, and receive the Sringa-giri Swamalu as their Guru, and as the successor of Sankara Acharya. In this Yugam, or age, there have been three appearances of Sankara Acharya. First, he was born at Sivuli, in Tulava, about 1500 years ago, and established the Mat am or college at Sringa-giri. His next appearance was some hundreds of years afterwards; when he was born in Malaydla, and lived at Sri Rangam, near Tritchenopoly. Lastly, he was born about 600 years ago at Paducachaytra, in Tulava. In the Skandha Purdna, composed, as my informants imagine, many myriads of millions of years ago, an account of all his transactions in these three incarnations is to be found, and also an account of the great success which he had against the heretical sects.
    A journey from Madras through the countries of Mysore, Canara, and Malabar … By Francis Hamilton, East India Company
    A journey from Madras through the countries of Mysore, Canara, and … – Page 91
    Francis Hamilton, East India Company – 1807 – Full view
    … the 21 heretical sects, some of which admitted,. and others denied, the authority of the’FMw. Afterwards Sankara Achdrya disputed with the followers of Batta, Sankara and, having convicted them of numerous errors, gained many pro- …

    books.google.co.in – More editions

    https://books.google.co.in/books?pg=PA91&dq=SANKARA&ei=0r8OTfP7H4uPccL1weIK&ct=result&id=JvXmAAAAMAAJ&output=text

  71. Dear reality,

    Please read the following extract from: https://www.advaita-vedanta.org/avhp/dating-Sankara.html

    //
    It must also be remembered that the 5th cent. BCE date does not really come from any ancient tradition, notwithstanding the high-pitched rhetoric of those who claim otherwise. This date has been proposed only in the last two centuries or so, during British times. In the post-Independence period, some people champion the 5th cent. BCE date because it helps bolster a unique kind of national pride: any great Indian should have necessarily lived before Jesus Christ! [12, 13] Part of this is a modern backlash against some of the early Indologists, whose belief in Biblical chronology colored their perception of Indian history. Still, these modern proponents of the 5th century BCE date perhaps forget that the date of Christ has little relevance to events in Indian history, except for fixing dates according to international convention. Surely, Sankara’s greatness is not increased by an early BCE date, nor is it lessened by a date much later than Christ’s.
    //

    Hence, please note that the purported “mutt records” fall under the category of “claims” and not “evidence”. Please do not confuse the two. Claims have to pass the test of available historic evidence. Unfortunately, in our case, the 509 BCE date fails the test miserably. I have already shown that one particular mutt’s record showing Anandajnana in BCE is entirely incorrect, as I have shown in a comment above. If you missed it, here is the summary:

    Anandajnana names the text Prakatartha Vivarana and quotes from the same.

    Prakatartha Vivarana quotes both Vacaspati and Udayana.

    Vacaspati and Udayana have respectively indicated their dates as 841 CE and 984 CE.

    Hence, Anandajnana has to be after 10th century CE. Simple and easy to understand, right??

    Moreover, please read the below comment also from the same link (I am not batting for its veracity, however it is a possibility):

    //
    Of these four maThas, the Joshimath title had long been vacant, till it was revived in 1940 CE. Consequently, it does not have many ancient records. The Dvaraka and Puri maThas have, in the past, claimed a date of 5th century BCE for Sankara. This is partly based upon a dating of a grant by a king named sudhanva who is supposed to have been a contemporary of Sankara. Nothing else is known about this king, and the grant itself has not been dated with any accuracy. In any case, it should be remembered that the records of the Dvaraka and Puri maThas are rather fragmentary, because they have had patchy histories, with periods when there were no presiding SankarAcAryas. This is also accepted by the administrations of these institutions, and they do not hold to the 5th century BCE date with absolute certainty.
    //

    Hence let us leave aside claims of mutts and instead concentrate on the available literary evidences from history. Any discussion of mutt records could spin out of control to petty fights between various sub-sects within the Advaita and Hindu traditions in general.

  72. சாரங் அவர்களே,

    /சும்மா கல் எறியும் காரியத்தில் மட்டும் இறங்கி உள்ளீர்கள் /

    அப்படித் தொனித்தால் மன்னிக்க. நான் இந்தத்தளத்தில் அதிகம் எழுதியதில்லை என்பதால் நீங்கள் என்னைப் பற்றி இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.

    /நீங்கள் எழுதுவதில் இருந்து பார்த்தால் உங்களுக்கு வேதாந்தத்தில் சற்றும் பரிச்சயம் இல்லை என்பது விளங்குகிறது – வைணவம் பற்றியும் உங்களுக்கு துளையும் புரிதல் இல்லை/

    சரி. நன்றி.

    /மாயாவாதி என்றால் இழுக்கு இல்லை – அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்/

    அத்வைதிகள் தங்களை மாயாவாதியர் என்று அழைத்துக்கொள்கிறார்களா என்ன! ஜகத் மித்யாவா, மாயாவா! வேதாந்திகளை திருமூலர் பிரமமித்யாவாதியர் என்று குறிப்பிடுவதையும் சுட்டியிருந்தேன். உங்களுக்கு மாயாவாதியர் என்று அழைப்பது உகப்பென்றால் சரி.

    இத்திரியில் என் மறுமொழிகள் இனி வரா.

  73. Sriman Gandarvan,

    I’ll reply to your other comments sometime later. But before that I couldn’t sleep after seeing your below comment. So I request you to verify multiple times before making an obnoxious comment on Sankara Matham.

    ““சங்கரர் கால ஆராய்ச்சியில் காஞ்சி மடம் போன்ற மடங்களின் சான்றுகளை ஏற்காதது அயோக்கியத்தனம்” என்று சிலர் சிறுபிள்ளைத்தனமாகக் கூறுகிறார்கள். மடங்கள் வெளியிடும் ஆச்சார்யா பரம்பரைக் கிராமத்தை வேதவாக்காக ச்வதாஹ் பிரமாணமாக ஏற்றால் என்ன சிக்கல் வரும் என்பதற்குச் சிறு எடுத்துக்காட்டு.”

    Can you show me where Kamakoti peetham is claiming that Anandagiri belongs to their matha? Since the name Anandagiri is more popular they would have atleast mentioned it in their site reference that you had given. To be more clear see what HH Mahaperiyaval states:

    “ஆனந்தகிரியின் முழு பெயர் அனந்தானந்தகிரி” (https://www.kamakoti.org/tamil/d-san132.htm )

    See what their site says regarding him:
    “From Anantanandagiri (1119 – 1199 A.D.) whose work is the earliest biography of Sankara, down to Mahamahopadhyaya Lakshmana Suri (Author of “Bhagavatpadabhyudayam” – 1917) of the last century, a number of reputed historians, distinguished scholars and researchers have candidly stated, in their works, that the Great Sankara established monastic institutions (mathas) at many an important and sacred places that he visited, during his digvijaya tours.” (
    https://www.kamakoti.org/peeth/aboutpeetham.html )

  74. இக்கட்டுரையையும் இக்கட்டுரைக்கு தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிற மறுமொழிகளையும் எதிர்வினைகளையும் கடந்த ஐந்து நாட்களாக ஆர்வத்துடன் படித்து வருகிறேன். இக்கட்டுரையின் ஆய்வு முறையை நானும் பாராட்டுகிறேன். இருந்த போதிலும்…. சங்கர பக்தர்களின் உணர்வுகளையும் அவர்களின் ஆன்மீக அனுபவங்களுடனாய இது விடயமான அறிவையும் உள்வாங்கிக் கொண்டு தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெற வேண்டும்.

    இந்துக்களின் நீண்ட நம்பிக்கைக;குப் பாத்திரமான சங்கரமடங்களின் ஆவணங்களை முற்றிலும் தவறு என்று புறக்கணபிப்து எந்த வகையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எனினும் எனக்கு இவ்விடயத்தில் அறிவின்மையால் இங்கு மறுமொழியிடாமல் இருந்தேன்.

    எனினும், பேரறிவாளராக விளங்கும் கந்தர்வன் அவர்களின் முயற்சியையும் தேடலையும் ஆய்வியல் ரீதியான எழுத்தையும் வரவேற்கிறேன். அதே வேளை ஜகதாச்சார்யராகிய ஸ்ரீ சங்கர பகவான் பற்றிய ஆய்வு இன்னும் மேம்பட்டு நாட்டாரியல், நம்பிக்கைகள் என்பவற்றையும் கருத்தில் கொண்டு பல்வேறு சங்கர பக்தர்களுடானாய சம்பாஷணைகளுடே வளர்த்தெடுக்கப்பெறும் போதே அவரின் காலம் தெளிவாகும்.

    நன்றிகள்…

  75. மயூரிகி ஷர்ம அவர்களே

    உங்களது கருத்திற்கு நன்றி

    கந்தர்வன் அவர்களுக்கு சங்கரர் மீது உள்ள மதிப்பிற்கு குறைவு இல்லை – இது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். பக்திக்கு புரதானம் தான் ஆதாரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?

    சங்கரரை ஒரு மா பெரும் சிந்தனையாளர் தர்கத்தில் தேர்ந்தவர், வேதாந்தத்தை ஆழ்ந்து கற்றவர் அர்த்தம் புரிந்தவர், ஞானத்தில் வல்லவர், ஜீவன் முக்தர் என்றெல்லாம் சொல்கிறோம்

    சங்கரர் கீமுவில் பிறந்திருந்தால் இது அத்தனய்ம் அடிபடும் – சங்கரர் சான்க்யத்தையும், புத்தத்தையும், நியாய வைசேசிக மதங்களையும், லோகயுக்த, சார்வாக மதங்களையும் தீர்கமாக கண்டிக்கிறார் – இதன் பிறகும் புத்தம் செழித்தது என்றால் சங்கரரின் பாஹ்யத்திர்க்கு அது ஒரு களங்கமாகும் அல்லவா

    ஞானப் புரட்சிக்கு சங்கரர் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது – இதனைத்தும் கிமு வாதத்தால் அடிபட்டு போகும்

    இதையும் சங்கர பக்தர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்

  76. குமார் அவர்களே

    இந்த கட்டுரைக்கு மிகவம் அவசியமான மற்றும் வேதாந்தம், அத்வைதம், வைணவம் பற்றி சரியான கருத்தக்கள் பகிர்ந்து கொண்டமைக்கு அடியேனின் பரஸ்பர நன்றிகளை தெரிவிக்கிறேன்

  77. Dear All

    I am posting here mainly to analyse more and to close all possible arguments. We should consolidate all the facts before freezing the year.as either BC or AD.

    There is an epigraphs on Bhaskara Meemamsa.

    No. 200.— ON THE NORTH WALL OF THE CENTRAL SHRINE IN THE NAGESVARASVAMIN TEMPLE AT KUMBAKONAM

    This record, which belongs to the 3rd year of the reign of king Parakesarivarman who took the head of the Pandya, registers a grant of land by purchase by the chief Siringanudaiyan Koyilmayilai alias Parantaka Muvendavelan for expounding the system of Prabhakara. This teacher was the founder of a new school of Mimamsa philosophy which was greatly popular for some time in the south. The record under review is itself strong evidence of the popularity of the creed. A telugu book called Sakalarthasagara makes Prabhakara, one of the pupils of Kumarila-Bhatta. He was also widely known as Prabhakara-guru and was the teacher of Salikanatha. Consequently Prabhakara’s period must have been about the beginning of the 8th century A.D. See also Madras Epigraphical Report for 1912, page 65.

    (Line 1.) Hail ! Prosperity ! In the 3rd year (of thereign) of king Parakesarivarman who took the head of the Pandya (king), we the great men of the Mulaparadai (assembly) of Tirukkudamukkil, a devadana of Vadagarai Pambur-nadu sold of Sirringanudaiyan Koyilmayilai alias Parantaka-Muvendavelan of Sirringan in Inganadu, two ma out of the twenty-four veli of land which we own as abhishekadakshina from the king, in the village of Merkaviri in Innambarnadu as a bhattavritti, for expounding Prabhakaram.

    (L. 10.) (The following are) the boundaries (of this land). The eastern boundary is to the west of the land sold (by us) as salabhoga. The southern boundary is to the north of the lands of Markaviri. The western boundary is to the east of the lands of us, the vendors. The northern boundary is to the south of the lands of us, the vendors.

    (L. 15.) I, Parantaka Muvendavelan, gave the land thus enclosed by the four big boundaries above specified on the same terms as those that obtained when (I) purchased (it) from the members of the mulaparadai as a bhattavritti so as to endure till the moon and the sun.

    (L. 19.) This is (placed) under the protection of the Almighty god Vishnu.[4] This is the writing of Parantaka.

    Just check and close this also. I will try to get some more and post. My intention is that we should see all the relevant records and finalise.

    regards

  78. Dear Kumudan,

    You probably did not read my comment fully. Also, you are confusing Anandagiri/Anandajnana with Anantanandagiri who is much later.

    //
    “Sri Aanandaghanendra Saraswati : He was known as Chinnayya before Sanyasa. He was the son of Suryanarayana Makhi. He hailed from Chera country. A great votary of Gauri, through divine grace of God, he obtained extraordinary literary powers. He wrote commentaries on the Sankara Bhashyas and Sureswaracharya’s Vartikas. He attained mukti at Srisail on KrishnaNavami in the month of Vaisakha of the cyclic year Krodhana (55 BC).” (note: here the name Anandajnanendra is misspelled as Anandaghanendra. In the image next to this text, the name is given as “Anandajnanendra” only).

    இதில் ‘ஆனந்தஞாநேந்த்ரர்’ என்று குறிப்பிட்டிருப்பது சங்கர பாஷ்யங்களுக்கும் சுரேஸ்வரர் வார்த்திகங்களுக்கும் டீகை இட்ட ஆனந்தஞானர் அல்லது ஆனந்தகிரியே என்பதில் ஐயமில்லை. மேலும், திரு T S Narayana Sastri என்னும் 509BCE-வாதி ஒருவர் காஞ்சி மடத்தில் இதே ஆனந்தகிரி அல்லது ஆனந்தஞானர் தான் 55 BC-இல் எழுந்தருளியதாகக் குறிப்பிட்டுள்ளார்: https://www.new1.dli.ernet.in/data4/upload/0119/591/PTIFF/00000213.tif என்பது அந்நூலில் சம்பந்தப்பட்ட பக்கத்தின் படிமம். அது தவிர: காஞ்சி மேடம் வெளியிட்டுள்ள குருபரம்பரை வரிசையில் ‘சுத்தானந்தர்’ என்ற ஆச்சாரியார் இவருக்கு முன்பு இருந்ததாக உள்ளது. ஆனந்தஞானர் தம் டீகையில் தம் குருவை “சுத்தானந்தர்” என்றே அறிமுகப்படுத்துகிறார். இத்துடன், 55BCE என்ற தேதியையும் மேற்படி உள்ளதில் பார்க்கலாம்.
    //

    The English part of the above quote is from https://www.kamakoti.org/peeth/origin.html?PHPSESSID=afdcf3c47a68770545b41e1a31613b8d

    Please note that T S Narayana Sastri in his book also lists Anandagiri a.k.a. Anandajnana in the guruparampara in the link above. If you can’t read the image, the text version is here:

    “Anandajnana or Anandagiri 185 BC to 116 BC” and before him is listed “Suddhananda 266 BC to 186 BC”.

    Anandajnana is the Tika-kAra of the advaita tradition. That he is also known as Anandagiri or that there might have been multiple Anandagiris is a moot point. What is relevant to us is that the Kanchi mutt history clearly implies the author of the Tikas in its guru parampara.

    // So I request you to verify multiple times before making an obnoxious comment on Sankara Matham. //

    I did verify it multiple times. It was indeed quite startling to me the first time, and I did make sure I am not wrong anywhere. I did several checks on this. I can understand your frustration.

    I did not intend any obnoxious comment on Sankara Matam. I did not make any inference. I merely expressed and justified (I hope in a fair manner) why Mutt histories are not reliable as they are presented today.

    திரு மயூரகிரி சர்மா அவர்களே,

    வரலாற்றுச் சான்றுகளுக்கு வேறு விளக்கம் இருக்கிறதா என்பதே இந்த ஆய்வின் நோக்கம். “நட்பு முறையில் விவாதிப்போம்” என்றும் கூறியிருக்கிறேன்.

    // இந்துக்களின் நீண்ட நம்பிக்கைக;குப் பாத்திரமான சங்கரமடங்களின் ஆவணங்களை முற்றிலும் தவறு என்று புறக்கணபிப்து எந்த வகையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. //

    உங்கள் ஆதங்கம் புரிகிறது. நமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகளைப் பார்க்கும் பொது வேறு வழி எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்த வேறு நண்பர்களுக்கோ ஏதாவது விளக்கம் தெரிந்தால் இங்கே இடுமாறு சிரம் தாழ்த்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    // சங்கர பக்தர்களின் உணர்வுகளையும் அவர்களின் ஆன்மீக அனுபவங்களுடனாய இது விடயமான அறிவையும் உள்வாங்கிக் கொண்டு தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெற வேண்டும். //

    // அதே வேளை ஜகதாச்சார்யராகிய ஸ்ரீ சங்கர பகவான் பற்றிய ஆய்வு இன்னும் மேம்பட்டு நாட்டாரியல், நம்பிக்கைகள் என்பவற்றையும் கருத்தில் கொண்டு பல்வேறு சங்கர பக்தர்களுடானாய சம்பாஷணைகளுடே வளர்த்தெடுக்கப்பெறும் போதே அவரின் காலம் தெளிவாகும். //

    மன்னிக்கவும், அப்படி நடத்தப்படும் ஆய்வு நடுநிலையான வரலாற்று ஆய்வன்று. அது ஒருதலைப்பட்டதாகவே இருக்கும்.

    உணர்வுகளைப் புண்படுத்துவது என் நோக்கமன்று. இருக்கும் சான்றுகளையும் அதிலிருந்து வரும் அனுமானங்களையுமே இங்கு வைக்கிறேன். இதில் factual error இருந்தால் சுட்டிக் காட்டலாம். நமக்குக் கிடைக்கும் சான்றுகளைத் தைரியமாக உள்வாங்கிக் கொண்டு நேர்மையாக அனுமானிப்பதில் எனக்கு எந்த ஒரு தவறும் தெரியவில்லை.

  79. Sri Gandharvan

    You simply ignore the mutt records whose acharyas are guiding lights for this country for many centuries.
    In Deivathin kural slokas are given even from Bhuddhist,Jain and Nepal sources in support of 509BCE.(pages 855,856,857).
    Why do you ignore these sources?

  80. நமது நாட்டில் வெவேறு பிரதேசங்களில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு காலக் குறியீடுகளைப் பயன் படுத்தியுள்ளார்கள். (உ-ம)யுதிஷ்டிர சகா விக்கிரம சகா சாலிவாகன சகா etc. இதில் விக்ரமாதித்யன் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசர்கள்! பல நூல்கள் சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டிருப்பதால் பாமர மக்களுக்கு அவை புரியாது. இப்படிப்பட்ட குழப்பங்களில் திரு. கந்தர்வன் நல்ல ஆராய்ச்சி செய்துள்ளார். நான்’ தெய்வத்தின் குரலில்’ இதைப் பற்றிப் படித்ததைத் தவிர வேறு ஒன்றும் அறியேன்.அதில் மகாப் பெரியவர் செய்துள்ள சில interpretations/ justifications – குறிப்பாக ‘சந்திர குப்தன்’ , ‘திராவிட சிசு’ ‘காளிதாசனின் காலம் ‘ போன்ற விஷயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கென்னவோ ஸ்ரீ.சங்கரரின் காலத்தை கி.மு.வில் குறிப்பிடும் பலர் அந்தக் காலத்தை நிர்ணயித்துக்கொண்டு அத்தகு ஆதாரங்கள் தேடுகிறார்களோ என்று தோன்றுகிறது.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

  81. // Since the name Anandagiri is more popular//

    I do not know how you have concluded that.

    Since you asked, I swear on my family that I rechecked all the colophons in the Tika books. I just finished checking all the ten Upanishad bhaashya Teekas, Teekas to Sureshvara’s Brihadaranyaka and Taittiriya Varttika, Teekas to Shankara Bhashyas for Brahma Sutra and the Gita. They have the following at the end:

    “iti shree paramahamsa parivraajakaachaarya shree shuddhaananda bhagavat poojya paada shiShya bhagavad Anandaj~naana kRtaa… ”

    and variations of the same.

    Please also note that other than the colophons found right at the end of the Tikas, Anandajnana/Anandagiri has composed Mangala verses on his guru and Paramatma at the end of Tikas to Brihadaranyaka Varttika and Brahma Sutra Bhashya. He also praises his own guru by naming him as Shuddhananda at the beginning of the Brihadaranyaka Bhashya Varttika Tika (Sambandha Varttika). In all of them, he refers to his guru as Shuddhananda.

    Anandajnana mentioning Shuddhananda at the end of Brahma Sutra Bhashya Tika: https://www.new1.dli.ernet.in/data3/upload/0066/953/PTIFF/00000933.tif (verse 1 at line 7 from bottom of the page).

    Ditto at the end of Brihadaranyaka Varttika Tika: https://www.new.dli.ernet.in/rawdataupload/upload/0095/112/PTIFF/00000945.tif (verse 5, second line from bottom of page).

    Ditto at the beginning of the Sambandha Bhashya Varttika Tika: https://www.new.dli.ernet.in/rawdataupload/upload/0095/109/PTIFF/00000031.tif (end of verse 9)

    The name Anandajna/Anandagiri and his guru Shuddhananda occur in all the colophons of the Teekas, so we are referring to only the person occurring seventh in the Kanchi mutt lineage. The exception is the Gita Bhashya, which contains Anandagiri in its colophon. However, this colophon still identifies his guru as Shuddhananda only.

  82. Shri Muthukumar,

    Namaskarams.

    Mutt records become reliable sources only if they do not contradict internal evidence within the advaitic literature. I have explained this in detail.

    To give you an analogy, if some document says 2+2 = 5, it does not become truth even if it is issued by an influential mutt and attested by even the greatest of acharyas.

    I have repeated this many times and am now vexed and unable to put it in better terms. If by chance you believe that I am not deliberately giving bogus data, and if you think what I am saying is worth the time, kindly go through the essay and the responses again patiently and tell me where I am wrong in my inference (that Shankara Bhagavatpada’s period of activity is between 550 CE and 838 CE).

    It is frustrating to see that fellow Hindus are ignoring logic in the name of holiness. Such an attitude is antithetical to the great work that Shri Bhagavatpada has done. Along with Sruti, Pratyaksha and Anumana are also pramaNas. Shri Jataayu and others here call Sanatana Dharma as “அறிவு இயக்கம்” exactly because of this, and let us not undo this reputation.

  83. திரு. கந்தர்வன் அவர்களே!

    தமிழ் ஹிந்துவில் வெளிவந்துள்ள அற்புதமான கட்டுரை இது. ஒவ்வொரு
    ஆதாரத்தையும் சேர்த்து, வரிசைப்படுத்தி கட்டுரையாக எழுதுவது என்பது
    சாதாரண காரியம் அல்ல. மேலும் ஒவ்வொரு சான்றிர்க்கும் மூல நூலின்
    இணைப்பையே ஆதாரமாக கொடுத்தது Simply Marvelous.

    மறுமொழிகளை அவதானிக்கும்போது நம்மில் சிலருக்கு புனிதமான
    விஷயங்களை யுக்திக்கு / அறிவியலுக்கு அப்பால் கொண்டு செல்லும் ஆப்பிரகாமிய மதப்போக்கு இருப்பது தெரிகிறது.

    ஆதி சங்கரரின் எழுத்துக்களால் கவரப்பட்டவர்களில் பல விதமானோர்
    உண்டு.

    அவரின் தத்துவத்தை அனுசரிக்க அவரின் பிறப்பை பற்றிய செய்தி
    அவசியம் இல்லை. ஆதி சங்கரர் கி.முவில் பிறந்தாரா? கி.பி 700ல் பிறந்தாரா? ஏன் கி.பி 1500ல் பிறந்தாரா? என்பது ஒரு பொருட்டில்லை. இப்படிப்பட்ட தத்துவவாதிகள் சிலர்தான்.

    கம்யூனிஸ்ட் கொரில்லாக்களுக்கு வேண்டுமானால் வரலாறு அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சங்கரர் எந்த காலத்தில் வாழ்ந்தார்
    என்பது சமூகத்திற்கு ஒரு முக்கியமான தேவையான வரலாறுதான்.

    இன்று நமக்குள்ள ஆதாரத்தின் அடிப்படையில் கி.பி.700தான் என்று
    நிறுவியுள்ளீர்கள். வெள்ளையர்கள் எழுதிய வரலாறு சில நேரங்களில்
    சரியாகவே இருக்கிறது.

    யுக்தி பூர்வமாக இதற்கு எதிரிடையான ஆதாரம் வரும்வரை நீங்கள்
    கூறுவது மட்டுமே சபையேறும்.

    Great Work! Fantastic! All the best!

    பின் குறிப்பு:
    உங்கள் சமீபத்திய மறுமொழியில் இந்து அறிவியக்கம்
    யுக்திபூர்வமானதுதானா என்ற உங்கள் சந்தேகத்தை கண்டேன்.
    ஓட்டே இல்லைனு நினைக்காதீங்க! என் ஒரு ஓட்டை நான் உங்களுக்கு
    / இந்து அறிவியக்கத்துக்கு இந்த மறுமொழியின் மூலம் அளித்து விட்டேன்.

  84. அன்புள்ள கந்தர்வன்,

    // திரு ஜடாயு மற்றும் திரு அரவிந்தன் அவர்களே,

    ஒரு சிறு உதவி உங்களிடம் கேட்கிறேன்.

    உங்கள் இருவருக்கும் வரலாற்றில் பெரிய அளவிலான ஆர்வம் உண்டு என்று அறிகிறேன். சந்திரகுப்த மௌர்யர் – அசோகர் – புஷ்யமித்ர சுங்கர் காலம் குறித்து திரு குமுதன் அவர்கள் கூறும் “alternative theory” பற்றி உங்கள் கருத்தென்ன? இது குறித்து அனுகூலமாகவோ பிரதிகூலமாகவோ சான்றுகள் உங்களிடம் உண்டா? //

    1940களின் சிறந்த வரலாற்றாசிரியர் ராதாகுமுத் முகர்ஜி சந்திரகுப்தர் பற்றீய தனது புகழ்பெற்ற நூலில் (Chandragupta Maurya and His Times) இதனை *பல ஊகங்களில் ஒரு ஊகமாக* வைத்தார். பேனைப் பெருமாளாக்குவது போல, அதைப் பிடித்துக் கொண்ட கிமு-வாதிகள் சலிக்காமல் இன்றுவரை சொல்லிவருகிறார்கள்.வரலாற்று ஆய்வில் அதற்குப் பிறகு ஏராளமான புதிய பார்வைகளும், கருத்துக்களும் வந்து விட்டன. அந்த alternative theory இன்றைக்கு முற்றிலும் காலாவதியான, நிராகரிப்பட்ட ஒன்று.

  85. அன்புள்ள கந்தர்வன்,

    இப்போது தான் பின்னர் வந்துள்ள எல்லா வாதப் பிரதிவாதங்களையும் படித்து முடித்தேன்.

    அபாரம்! கிமு. வாதிகளின் சில “சான்றுகளை” Junk arguments என்று நீங்கள் வெளிப்படையாக நிராகரித்ததைப் பாராட்டுகிறேன். உங்கள் ஆராய்ச்சித் துணிபின் உறுதியை அது காட்டுகிறது. ஐதிக குருபரம்பரைப் பட்டியலில் ad hoc ஆக ஆனந்தகிரி என்ற பெயருடன் குறிப்பிடப் படும் காலம் எப்படி எல்லா வரலாற்று, வேதாந்த-இலக்கிய ஆதாரங்களுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது என்பதையும் ஐயந்திரிபற நிரூபித்து விட்டீர்கள். ஐதிகங்களை ஒரு வரலாற்று ஆய்வாளன் எப்படி உரைகல்லில் உரைத்துப் பார்க்கவேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகவும் இருக்கும்.

    மறுமொழியில் ஒருவர் எழுதியிருக்கும் “50க்கும் மேற்பட்ட” சிற்பங்கள் எல்லாம் மிக சமீப காலத்தியவை. அவை எதுவும் அகழ்வாராய்ச்சி ரீதியாக date செய்யப் படவில்லை.

    // ஸ்ரீ.சங்கரரின் காலத்தை கி.மு.வில் குறிப்பிடும் பலர் அந்தக் காலத்தை நிர்ணயித்துக்கொண்டு அத்தகு ஆதாரங்கள் தேடுகிறார்களோ //

    என்று கிரி சரியாகத் தான் சொல்லியிருக்கிறார். உதாரணமாக, Kamakottam, Nayanmars and Adi Sankara (By V A Devasenapathi) என்ற ஒரு கி.மு-வாத நூல். இந்த நூலின் முதல்பாகத்தில் காமக்கோட்டம் எனறு தமிழிலக்கியங்கள் தேவி கோயிலைக் குறிப்பிடுவது பற்றீய ஆய்வுகள் நன்றாக உள்ளன. இரண்டாம் பாகத்தில் ஆதிசங்கரரை இதனுடன் தொடர்பு படுத்தும் விஷயங்கள் முழுக்க முழுக்க அதி ஊகங்களால் ஆனவை, எந்த ஆதாரமும் இல்லாதவை. அதோடு, கோயில் தூண்களில் தண்டத்தைப் பிடித்துக் கொண்டு நிற்பது போல் உள்ள சில சிற்ப உருவங்களை எல்லாம் சங்கரர் என்பதாக அடையாளம் காட்டுகிறார் இந்த நூலாசிரியர்!

    வரலாற்று ஆராய்ச்சியை கேலிக்கூத்தாகவும், ஓட்டைப் பானை கோட்பாடுகளாகவும் (crack pot theory) ஆக்கும் முயற்சிகள் இவை.

  86. ”தெய்வத்தின் குரல்” என்று அதீத வழிபாட்டுணர்வுடன் பெயரிடப் பட்டிருக்கும் உபன்யாசத் தொகுப்பு நூலை இங்கு மறுமொழிகளில் பலர் சுட்டிக் காட்டுகிறார்கள் (என்னிடம் கேட்டால், “காஞ்சி பரமசாரியார் உபன்யாசங்கள் தொகுப்பு” என்ற பெயரே பொருத்தமானது என்பேன், Complete Works of Swami Vivekananda என்பது போல). இந்தப் பெயரே மிரட்டும் தொனியில் இருக்கிறது!

    வரலாற்று ஆய்வில் அக்கருத்துக்கள் எந்த அளவு ஏற்புடையவை என்பது ஒருபுறம் இருக்க, இவை பூஜ்ய சுவாமிகளே நேரடியாக எழுதியவை அல்ல, ரா.கணபதி என்பவர் கேட்டு, தன் நடையில் தன் மொழியில் எழுதியவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சாஸ்திர விசாரம், தத்துவ விளக்கம், ஆன்மிகம் போன்ற விஷயங்களில் இந்த நூலில் உன்னதமான உபதேசங்கள் இருக்கலாம், ஆனால் அந்த நூலின் எல்லா கருத்துக்களும் (சமூகம், வரலாறு, அறிவியல், பூகோளம், அரசியல் இத்யாதி… தொடர்பானவை) கூட அப்படியே ஏற்றுக் கொள்ளப் படவேண்டும் என்றூ கூறுவது அடிப்படைவாதம் அன்றி வேறில்லை.

    அதே நூலில், கலிஃபோர்னியா என்பது கபிலாரண்யா என்பதன் திரிபு என்றூம் பாதாள லோகம் தான் இன்றைய அமெரிக்கா என்றும் உள்ளது. சகர புத்திரர்கள் அசுவமேதக் குதிரையைத் தேடிப் போய் கபில முனிவரின் சாபத்தால் சாம்பலான புராணக் கதை இதனுடன் தொடர்புறுத்தப் படுகிறது. Ash Island, Horse Island போன்ற இடங்களின் பெயர்கள் இதற்கு ஆதாரமாகக் கூறப் படுகினறன.

    சுவாமிகள் சொன்னதாகப் பதிவுசெய்ய பட்டிருக்கும் இந்தக் கருத்தை சரித்திர, பூகோள ரீதியாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? சங்கரரின் கி.மு. காலம் பற்றிய கருத்துக்கு ஆதாரம் காட்டும் நண்பர்கள் இதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    தீ சுடாது என்று வேதமே நூறுமுறை கூறுமானாலும் அது பிரத்யட்ச அறிவுக்கு விரோதமாக இருப்பதால் நிராகரிக்கத் தக்கது என்று சங்கரர் தனது பாஷ்யம் ஒன்றில் கூறூகிறார். அத்தகைய அறிவுச் சுடரின் தீட்சண்யமே இந்து தர்மத்தை வழிநடத்தும் சக்தி என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

  87. Srimand Gandarvan,

    //To be frank with you, this “point” falls under the category “bazaar gossip”,//

    As there are already few instances of name twisting that I had given earlier, this was bit hard for me to dismiss as a gozzip.

    //one does not find the name “Fa Chan” anywhere, nor does Dr. Takakusu the author of the translation of Tsing’s chronicles mention anywhere//

    Did anyone say that they are changing the names from this to this in translating Indica or so called Asoka inscriptions? In the reference link of yours it’s just given that I-Tsing is very strict in sanskrit words generally. Note the suffix “generally”.
    It is correct or not can be seen only if we get the transliteration of his original work. Anyhow this is a blessing in disguise that I-tsing mention Dharmakirti in his work. See below for the details.

    //1) Can you show one Buddhist/Jain scholar before 6th century CE who quotes Sankarar?//

    This will lead to infinite regression as this would lead to proving that person’s date and need to quote someone else to prove the previous one.

    //If 509 BCE is supported, we would have a huge gaping hole in the timeline of advaita vedanta…?//

    Though I’ve not done much research on that, HH Mahaperiyava has said something about this. Refer: https://www.kamakoti.org/tamil/d-san120-19.htm

    //(4) Also, Yamunacharya a.k.a. Alavandar cites a Vedantin by name Srivatsanka and mentions that he lived between the times of Sankarar and Bhaskarar.//

    Can you give the link which talks about this?

    //(5)…it would give us the room to take Kalidasa back to only 325 BCE and no further back…//

    As I already mentioned to Sarang’s query that some kolhapur Appa Sastri seems to have solved it but I couldn’t get any details on that. Will do more on this and come back.

    //(6) All, not just one, of the following should be false, if a 509BCE date for Sankarar is to be held true: ….//

    I think my previous points have already covered it.

    Sriman Saranag,

    //யோகாச்சரத்தை ஸ்தாபித்தவர்கள் அசங்கர்-வாச்துபந்து என்ற சகோதர்கள் – இவர்களின் காலம் தெள்ளத் தெளிவாக

    கீபி ஐந்தாம் நூறாண்டு என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது – இது நிர்விவாத விஷயம் கூட, இவர்களின் காலத்தை

    பற்றி சம்சயம் கூட எழுந்ததே இல்லை.//

    How can you be so sure that these are confirmed facts? See my below points on Vasubandhu and Dharmakirti

    Sriman Gandarvan,

    //Nobody, other than proponents of the 509 BCE date, is aware of a Vikramaditya who lived in 6th century BCE.//

    Or pretending to be ignorant (here i’m not referring to you)?

    //The date of Vasubandhu is hardly relevant to the discussion here. If I am wrong on this, tell me why.//

    Here are the different info that I got on dharmakirti and vasubandhu:

    1. Dharmapala and Dignaga were students of Vasubandhu and Dharmakirti that of Dharmapala. https://www.kheper.net/topics/Buddhism/Yogacara.html

    2. Dharmakirti was student of Ishvarasena and Ishvarasena was that of Dignanaga.
    Ref: https://books.google.co.in/books?id=qTd_fbuERdEC&pg=PA215&lpg=PA215&dq=ishvarasena&source=bl&ots=olsJu6qoOl&sig=uf3D8H2eYtp62kQwVIGqDB8MRh4&hl=en&ei=43IPTcKlMpGEvAOt2sGRDg&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CCUQ6AEwAg#v=onepage&q=ishvarasena&f=false

    3. Dharmakirti studied both under Ishvarasena and Dharmakirti.

    4. Few people say there was a request from bhiskus of Bengal to send Dharmapala or some one to counter Sankara. Ref: https://www.beezone.com.beezone.com/Nargarjuna4.html

    5. Some others say Dharmakirti debated with Sankara

    Ref1: https://en.wikipedia.org/wiki/List_of_Buddhists

    Ref2: https://books.google.co.in/books?id=iZQy2lu70bwC&pg=PA32&lpg=PA32&dq=dharmakirti+debated+with+shankara&
    source=bl&ots=JEf7raYMqV&sig=hwUqdq0YmiuSS3oNV3FXBOJsnQY&hl=en&ei=OXAQTZ_zFs2o8QPoiZGFBw&sa=X&oi=book_
    result&ct=result&resnum=2&ved=0CB8Q6AEwAQ#v=onepage&q=shankara&f=false

    6. There seems to be 3 Vasubandhus. One of them said to be contemporary of Chandragupta (290-370CE) or Samudragupta and other one of Vikramaditya (455-467 CE).
    Ref: https://www.dharmafellowship.org/library/essays/yogacara-part1.htm

    7. Hiuen-Tsiang (Xuanzang) says that Vasubandhu lived 1000 years after nirvana of buddha whereas his disciples say it is 900 yrs
    Ref: https://www.iep.utm.edu/vasubandhu/

    Conclusion based on the points 1-7:

    a) There is no clarity on the lineage of Dharmakirti and his association with Sankara.

    b) Dharmakirti (7th century CE) seems to be either grand or great grand disciple of Vasubandhu (4th century CE). There is a gap of 3 centuries between these 2, which is very very hard to digest. This is like Unnikrishnan’s great grandson becoming student of Saint Thiagaraja. You want me to take this as basis for calculating others’ dates?

    c) There might be more than 1 vasubandhu

    d) If Vasubandhu belongs to Chandragupta era then he would be in 4th century BCE and Dharmakirti would be around 1st century BCE and Sankara around 33 BCE which is given by some people.

    e) Going by Hiuen-Tsang and his disciples record, Vasubandhu will be around 800 BCE (Buddha 1800 BCE) and Dharmakirti will be around 600 BCE. Hence there is sound basis for dating Sankara on 509 BCE. So both according to d and e, I-Tsing is talking about some other Dharmakirti or his saying is unreliable.

    பின் குறிப்பு: என்னுடைய மறுமொழிக்கு மற்றவர்கள் தமிழில் மறுமொழி கொடுப்பதில் எனக்கு எந்த ஆக்ஷேபனையும் இல்லை.

  88. Sriman Gandarvan,

    //You probably did not read my comment fully. Also, you are confusing Anandagiri/Anandajnana with Anantanandagiri who is much later.//

    I did got your point. You are saying that Anandajnana aka anandagiri is mentioned in the list of guruparampara in their web site. What I’m asking is for a reference either from their site or from TS Narayansastri that it says the vartikakara (Anandagiri) belongs to kanchi matha. If you are saying this on the basis of their (both guru and sishya) name similarity then it is only a speculation.

    I also gave you the links where HH Paramcharya says that Anandagiri is same as Anantanandagiri and his date.

  89. //“காஞ்சி பரமசாரியார் உபன்யாசங்கள் தொகுப்பு” என்ற பெயரே பொருத்தமானது என்பேன், Complete Works of Swami Vivekananda என்பது போல). இந்தப் பெயரே மிரட்டும் தொனியில் இருக்கிறது!//

    தெய்வம் என்றாலே மிரட்டலோ என்னமோ! குருவை தெய்வமாய் கருதுவதில் என்ன தவறு? ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்றால் அமுதம் சாப்பிட்டே ஆகவேன்றுமேன்று கருதுவார்களோ என்னமோ!

  90. ஆதிசங்கரர் எட்டாம் நூற்றாண்டில் தான் பிறந்திருக்க முடியும் என்பதற்கு, தமிழ் நாடு வில் இருந்து சில சான்றுகலை கொடுக்கலாம்.

    நரசிம்ஹபல்லவர், வாதாபியில் போரை முடித்துக்கொண்டு வரும்பொழுது, அங்கு இருந்த விநாயகரை வழிப்பட்டு அதை தமிழகத்திற்கு கொண்டுவந்ததாக சரித்திரம் கூறுகிறது. விநாயகரை அவாறு, கொண்டுவந்தததற்கு காரணம், அது போன்ற வழிபாடு, தமிழகத்தில் இல்லை என்பதால் தான். நரசிம்ஹபள்ளவரின் காலம் கிபி 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டு.

    வினயகரைபற்றிய பாடல்கள், தமிழில் அதிக அளவில் வர ஆரம்பித்ததும் (விநாயகர் அகவல் எழுதிய ஒளவையார் தொடங்கி (2 ஆம் அவ்வ்யர்)) 8 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் தான்.

    ஆதிசங்கரர் ஷன்மதம் ஸ்தாபனம் செய்தவர், தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களுக்கு வந்து பூஜை செய்து இருக்கிறார், அவர் கிமு வில் பிறந்திருந்தால், விநாயக வழிபடு, முழு மூச்சில் தமிழகத்தில் இருந்து இருக்கும். கிபி 6 ஆம் நூற்றாண்டில் நரசிம்ஹபல்லவர் விநாயகரை புதிதாக பார்த்திருக்க மாட்டார். விநாயகரை பற்றிய பாடல்கள் தமிழில் கிபி 8 ஆம் நூற்றாண்டிற்கு முன் நிறய வந்திருக்கும்.

    ஆதிசங்கரர் திராவிட சிசு என்று சௌந்தர்ய லகரி இல் குரிபிடிருப்பது சம்மந்தரை தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சம்மந்தரும் கிபி 7 அல்லது எட்டாம் நூற்றாண்டு தான்.

    இது தவிர கேரளாவிலும் நிறைய சான்றுகள் இருக்கின்றன.

    இதையல்லாம் செய்தவர் அபிநவ சங்கரர் என்று கூறும் சரித்திரம் எனக்கு உடன்பாடு இல்லை.

    ஆதிரவி

  91. //அதே நூலில், கலிஃபோர்னியா என்பது கபிலாரண்யா என்பதன் திரிபு என்றூம் பாதாள லோகம் தான் இன்றைய அமெரிக்கா என்றும் உள்ளது. சகர புத்திரர்கள் அசுவமேதக் குதிரையைத் தேடிப் போய் கபில முனிவரின் சாபத்தால் சாம்பலான புராணக் கதை இதனுடன் தொடர்புறுத்தப் படுகிறது. Ash Island, Horse Island போன்ற இடங்களின் பெயர்கள் இதற்கு ஆதாரமாகக் கூறப் படுகினறன.
    //

    கிருஷ்ணன் சரித்திர நாயகன் என்றால் மகாபாரதத்தில் வரும் அஸ்த்ரங்கள் நம்பமுடிவதாக இல்லையே. அதற்காக மகாபாரதமே பொய் என்று கூறுவது போலத்தான். 1000 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவத்திற்கே இங்கு சாக்ஷிகள் கிடைப்பது கடினாக இருக்கையில் சுமார் பத்துலக்ஷம் வருடங்களுக்கு முன்னே நடந்தவைகளுக்கா சாக்ஷி கிடைக்கபோகிறது. இன்றும் பல தல புராணங்கள் இதிஹாசக நாயகர்கள் இருந்த இடமாக சொல்கின்றன. அதற்கெல்லாம் சாக்ஷிகள் இருந்தால்தான் நம்புவேன் என்றால் கடினம்தான். இதை ஒரு ஞான புருஷர் சொல்வதாக எடுத்துகொள்ளலாம் இல்லை வேறு எவ்வாறு வேணுமாலும் எடுத்துகொள்ளலாம்.

    PN ஓக் என்பவரும் பிரான்கோயிஸ் காதியர் என்பவரும் காபாவை பற்றி இதே போல்தான் கூறினர்.

    இதற்க்கு மேல் இதை பற்றி இங்கே விவாதிக்க விரும்பவில்லை.

  92. Sri.Gandharvan,
    Its only a healthy debate and you need not feel offended.
    You have done a good work.
    However you have not replied about the Bhuddhist,Jain and Nepal sources in support of 509 BCE.(volume 5 -pages 855,856,857).
    Let us move on sharing our thoughts and views which is the unique feature of our religion and tradition.

  93. அன்புள்ள ஜடாயு,

    தங்கள் ஆதரவுக்கும் ஆர்வத்திற்கும் மிகுந்த நன்றி. உங்கள் கருத்துடன் முழு உடன்பாடு எனக்கு.

    // 1940களின் சிறந்த வரலாற்றாசிரியர் ராதாகுமுத் முகர்ஜி சந்திரகுப்தர் பற்றீய தனது புகழ்பெற்ற நூலில் (Chandragupta Maurya and His Times) இதனை *பல ஊகங்களில் ஒரு ஊகமாக* வைத்தார். //

    சந்திரகுப்த மௌர்யர் கி.மு. 1000-க்கும் முந்தையவர் என்றால் நம் வரலாற்றில் ஒன்றும் நடந்திராத ஒரு பெரும் void வந்துவிடும். இதற்குக் கி.மு. வாதிகள் என்ன சொல்வார்களோ?

  94. திரு ஆர். பாலாஜி,

    மிக்க நன்றி.

    இன்று இணைய இணைப்பு உள்ளவர் எவரும் இத்தகைய ஆராய்ச்சி செய்ய முடியும். ஆகையால் இது ஒரு பெரிய சாதனை என்று நான் கருதவில்லை.

    To give due credit, ஆபிரகாமியம் அளவிற்கு (இது வரை) யாரும் செல்லவில்லை என்றே நினைக்கிறேன். சிலர் இங்கு அயராது பிரதிவாதங்களை வைக்கிறார்கள். அது பாராட்டத் தக்கதே. மேலும் மேலும் சில உண்மைகளை அறிவதற்கு நல்ல வாய்ப்பு. திரு குமுதன் அவர்கள் ஆட்சேபிக்கவில்லை என்றால் எனக்கும் இங்கு உள்ள சிலருக்கும் ஆனந்தஞானர்/ஆனந்தகிரி காலம் பற்றிய உண்மை தெரியாமல் போயிருக்கும் :-). அவர் கூறியதால் தான் அந்த ஆராய்ச்சியில் இறங்கினேன். ஆகையால், இம்மாதிரி வாதமும் வரவேற்கத் தக்கதே என்று நினைக்கிறேன்.

    ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை கீழ்த்தனமான வாதங்களும் அடிதடிகளும் இங்கு இதுவரை நடைபெறவில்லை. பூஜை, தர்ப்பணம், சிராத்தம், மடம் என்று மிகவும் orthodox ஆன என் தந்தையாரிடமும் இது பற்றி இன்று விவாதித்தேன். அவர் கூறியது: “சரி நீ மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்தால் போதும்; எனக்கு மகிழ்ச்சி. நீ உன் வழியில் நேர்மையாக ஆராய்ச்சி செய்துக் கொண்டு போ. நேரம் இருந்தால் நானும் நீ என்ன சொல்கிறாய் என்று கற்றுக் கொள்கிறேன். எப்படி இருப்பினும், உனக்கு ஆர்வம் வரும்பொழுது வருவாய்” என்று கூறிவிட்டார்!

    கிறித்தவத்திலோ யூதத்திலோ ஒருவர் இதைச் செய்திருந்தால் அவரைச் சடங்கு செய்து excommunicate செய்திருப்பார் அவர்களுடைய கருணை வெள்ளம் பொழியும் ஆசான்கள் 🙂

    முசல்மான் ஒருவர் இப்படிச் செய்திருந்தால் அவர் தந்தை கையாலேயே அவர் தலை போயிருக்கும் 🙂

    நாம் Digital Library முதலிய கலைக் களஞ்சியங்களை மேன்மேலும் ஆக்கபூர்வமாக உபயோகிக்க வேண்டும். உதாரணமாக நாம் (காப்புரிமை காலாவதியான) அரிய சமயநூல்களையும் உரைநூல்களையும் unicode text-ஆக hyperlink-உடனும் cross reference-உடனும் செய்யலாம். ஆர்வமும், தலைக்கு நாளுக்கு 15 நிமிடம் அவகாசமும் உள்ள கிட்டத் தட்ட 50 நபர்களைக் கொண்ட ஒரு critical mass இருந்தால் இது சாத்தியம் என்றே நினைக்கிறேன். இதற்குத் தமிழ் ஹிந்து தளம் task force ஏதாவது செய்யலாம். விக்கி தளம் ஆரம்பிப்பதில் பரிச்சயம் உள்ளவர்கள் இதற்குப் பெரிதும் உதவலாம் என்று நம்புகிறேன். ஆனால் ரெகுலராகக் கட்டுரை எழுதுபவர்களையும் ஆசியர் குழுவையும் இதில் ஈடுபடுத்தினால் ஒருவேளை கட்டுரைகள் வருவது குறைந்து விடுமோ என்ற சிறு சந்தேகம் இருக்கத் தான் இருக்கிறது.

    இது ஒரு பரிந்துரையே. ஒருவேளை இது ஆகாயக் கோட்டையாகக் கூட இருக்கலாம் :-).

  95. Sriman Gandarvan

    //Karshapana is mentioned by manu smritis such as Manu and Narada. Manu Smriti in 8.136 refers to it:
    “but know (that) a karsha of copper is a karshapana, or pana.”
    So, it is not necessary that Shri Shankarar has to refer to a contemporary currency only//

    It is obvious that people use currencies which are in vogue. I don’t think anyone uses some old dated currencies unless there is a specific purpose to use that word.

    // Again, where does the Acharya state or even imply that it was in vogue in his time? Did all of those coins vanish after 2nd Century AD, so that Shankara couldn’t have seen them?//
    You mean to say when somebody mentions some currency that they need to vouch that it is in vogue. Is it not something commonsense? (No offence meant here)

    //who is popularly known to have become a Paramahamsa Sanyasi at the age of eight, even care for contemporary currency? //

    I don’t know why are you assuming thing here? Does stating that Sankara referred some coinage implies that he is interested in currencies?

    //Acharya is just explaining an analogy here. Tell me sir, where does the Acharya state or even imply that these were thriving cities in his time?//

    Again the same argument as above. Why someone will use some lost city to make a point?

    //Two more half-baked “evidences”…//
    In history you should never discount a data. You never know when that will help. I don’t think these points are totally out of context. No one claimed as a clinching evidence.

    //Shows that the junk arguments of the 509 BCE side can be dismissed with very easy research. Such arguments add nothing more than nuisance value in our efforts to learn proper history.//

    You are talking as if the above evidences are the only one to prove 509 BCE.

    One thing you need to keep in mind when you ridicule people researching on 509 BCE. They have to dig through lots of artefacts to prove their point. In most of the cases the original sources are lost irretrievably due to carelessness of our own people and foreign invasions. And the secondary sources are not completely reliable as they had to get it from the people who could remember something and by hearsay. Today we have internet and search any damn thing and scan 1000s of documents in few minutes. But was this available even 5 years back? To arrive at a point, they had to spend years and sometime their whole lifetimes. It is natural that people do some mistakes. They are just driven by their faith in their acharyas. Even as a proponent of AD theory, your arguments centers only around Dharmakirti. Is it not a clue that arriving at the date of Sankara is not a cakewalk even when most of the supporting artifacts are pointing to AD?

  96. Sriman Gandarvan,

    To continue my above point, please remember that most of the historical persons especially Bharatiyas are compared with each others date and the presumption is the date of Buddha. All the dates only revolve around him. So unless his date is ascertained beyond doubt the discussion will never end and I don’t think that this will ever happen. Yet let this discussion go on as long as it can.

  97. அன்புள்ள குமுதன்

    நீங்கள் அசங்கரை பற்றி கேட்டதற்கு நன்றி

    ஹுவான் சுவாங் இந்திய வந்த காலத்தை பற்றி எந்த குழப்பமும் இல்லாதால் அவரிலிருந்தே நாம் பின்னோக்கி செல்வோம்

    * பல வாஸ்துபந்துக்கள் இருந்தது உண்மை தான் ஆனால் ஒரு வாஸ்துபந்து தான் அசன்கரின் தம்பி

    * நீங்கள் சொல்வது போல தினாகர் வாஸ்து பந்துவின் சிஷ்யர் தான்

    ஹுவான் சுவாங்கின் ஆசிரியர் சிலபத்ரர் – ஹுவான் சுவாங் சொல்கிறார் – அவர் தனது குருவை பார்த்தபோது குருவுக்கு நூற்றி ஏழு வயது ஆகறது என்று – இந்த சந்திப்பு நடந்தது 633 CE

    சிலபத்ரரின் குரு தான் தர்மபாலர்

    தர்மபாலரின் குரு தான் தினாகர்

    டினாகரின் குரு தான் வாஸ்துபந்து

    இவர்கள் அனைவருக்கும் ஒரு 80 வருடம் வித்யாசம் இருந்தால் கூட அசங்கரும் வாஸ்துபந்துவும் குறைந்தது கிபி நாலாம் நூற்றாண்டிற்கு முன்னாள் இருக்க வாய்ப்பே இல்லை

    இது ஒரு ஆணித்தரமான ஆதாரம் – இதை வைத்துக் கொண்டு சந்திரகுப்த குப்தரின் காலம் கிபி 3-4 நூற்றாண்டு என்றும், கிமு 327 வாக்கில் ஆண்டது சந்திரகுப்த மௌரியர் தான் என்பதும் – அசோகரின் காலம் அதற்க்கு அப்புறம் தான் என்பதும் நன்கு நிரூபணம் ஆகும்.

  98. திரு ஜடாயு அவர்களே,

    // ஐதிகங்களை ஒரு வரலாற்று ஆய்வாளன் எப்படி உரைகல்லில் உரைத்துப் பார்க்கவேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகவும் இருக்கும். //

    உண்மையே. அதே போல கி.பி. 700 தரப்பில் உள்ள வாதங்களையும் முடிந்தவரை கல்லில் தேய்த்துப் பார்ப்பதும் கட்டுரை/மறுமொழிகளின் நோக்கம்.

    இது குறித்து நான் ஒன்று கூறுவதை விரும்புகிறேன்: நம் சம்பிரதாயங்களில் “பற்றின்மை” பெரிதும் புகழப்படுகிறது. முன்னோர் கூறிய பற்றின்மை (பெரும்பாலும்) தாழ்ந்த இம்மைப் பலன்களை விஷயமாகக் கொண்டவையே எனினும், இப்பொழுது நாம் கண்டு வருவதில், “வாதத்தில் எந்த ஒரு தரப்புக்கும் ஆதரவாக, ஒருதலைப்பட்டதாக இருப்பதைத் தவிர்ப்பது” என்பதையும் “பற்றின்மைக்கு” விளக்கமாகக் கூறினால் இங்கு பொருந்தும்.

    கம்ப ராமாயணத்திற்கு வியாக்கியானம் எழுதிய சமீப காலப் பெரியவர் ஒருவர் பால காண்டத்துக் கடவுள் வாழ்த்து மூன்றாம் பாடலில் வரும் “பாதம் அல்லது பற்றிலர் பற்றிலார்” என்பதற்கு இப்படியும் விளக்கம் கூறியுள்ளார். அற்புதம் என்று மனதில் கூறிக் கொண்டேன். 🙂

    // அதோடு, கோயில் தூண்களில் தண்டத்தைப் பிடித்துக் கொண்டு நிற்பது போல் உள்ள சில சிற்ப உருவங்களை எல்லாம் சங்கரர் என்பதாக அடையாளம் காட்டுகிறார் இந்த நூலாசிரியர்! //

    தண்டாயுதபாணியாக விளங்கும் பழனி முருகனையாவது விட்டு வைத்தார்களா? :))

  99. //சந்திரகுப்த மௌர்யர் கி.மு. 1000-க்கும் முந்தையவர் என்றால் நம் வரலாற்றில் ஒன்றும் நடந்திராத ஒரு பெரும் void வந்துவிடும். இதற்குக் கி.மு. வாதிகள் என்ன சொல்வார்களோ?//

    கிறித்து பிறப்பதற்கு முன்னால் உலகமே அறியாமையால் மூழ்கியிருந்தது போல் இருந்திருக்குமோ என்னவோ?

  100. Shri Kumudan,

    I appreciate that you are relentless in your arguments, and as a result this response is going to be bringing more historical evidences into light.

    I feel it makes more sense to respond in English only, to keep our dialogue in good flow.

    Now into the arguments… Let me respond in different posts.

    (1) Regarding Anandajnana/Anandagiri:

    // What I’m asking is for a reference either from their site or from TS Narayansastri that it says the vartikakara (Anandagiri) belongs to kanchi matha. //

    I have given the link to T S Narayana Sastri’s book page, and also transcribed it in text. Please refer to it. Btw, Anandagiri is Tikakara, not Varttikakara. The latter is used to refer to only Suresvara.

    // If you are saying this on the basis of their (both guru and sishya) name similarity then it is only a speculation. //

    I am saying this based on the names of not just the Sishya, but also (1) the name of the guru, (2) that he wrote Tikas on the Varttikas and Bhashyas of Sureshvara and Shankara Bhagavatpada.

    Tell me, are you suggesting two people with the same name, both of who had a different guru each with the same name, and both of who wrote commentaries on Shankarar and Suresvarar works? It is not impossible theoretically, but highly improbable. Also, there is no evidence, other than Kanchi mutt releases, to support this.

    Also, this “Abhinava Anandajnana” whose works only are available to us, or someone else, would have referred to the “Original Anandajnana”.

    So we have Shankara Bhagavatpada and Anandajnana both of whose works are available to us, also “Abhinava” Shankara and “prAcheena” Anandajnana neither of whose works are available today, nor any trace of them in other advaitins’ works around or after their times. Do you see where we are getting 🙂 ?

  101. continuation of response to Shri Kumudan

    1) On Kalidasa, in response to my comment “Nobody, other than proponents of the 509 BCE date, is aware of a Vikramaditya who lived in 6th century BCE”:

    // Or pretending to be ignorant (here i’m not referring to you)? //

    Where is the evidence, please??

    (2) On Hsuan Tsang, Dharmakirti etc.:

    // this was bit hard for me to dismiss as a gozzip. //

    It (accusing that Takakusu changed Fa Chan to Dharmakirti) belongs to the category of gossip, as long as no evidence or even a possibility is shown to the contrary based on any published work/available manuscript.

    In the case of Megasthenes mentioning Sandrakottus, it is very clear that he mentioned only Chandragupta. Whether it is Maurya or Gupta is the doubt raised by some.

    However, history knows only one Dharmakirti-the-Buddhist-logician 🙂

    A general comment about your other evidences, please note that I Tsing’s evidence is direct and contemporary. It belongs to the category of a chronicle, not a “tradition” written much later, as in the case of Taranatha’s account. Also, I Tsing mentions, along with Dharmakirti, Dignaga, Dharmapala, and Silabhadra as recent scholars. It is unfair to dismiss this as some sort of error on the part of Tsing, as he visited Nalanda and interacted with many Buddhist teachers.

    Also, Hsuan Tsang in his chronicle mentions that he directly interacted with Silabhadra, a pupil of Dharmapala. Shri Sarang has already said it, so I am just providing the evidence from the book:

    https://www.new1.dli.ernet.in/data3/upload/0066/800/PTIFF/00000234.tif
    https://www.new1.dli.ernet.in/data3/upload/0066/800/PTIFF/00000222.tif

    Now, I beg you to not claim that “Hu Fa” mentioned by Tsang “may not be” Dharmapala. It is well-known that Tsang translated the works, available even today, of Dharmapala into Chinese.

    This also adds credence to I Tsing who mentions, along with Dharmakirti, Silabhadra and Dharmapala as “those who lived in the late years”.

    // e) Going by Hiuen-Tsang and his disciples record, Vasubandhu will be around 800 BCE (Buddha 1800 BCE) and Dharmakirti will be around 600 BCE. Hence there is sound basis for dating Sankara on 509 BCE.//

    Excuse me, sir… You are making that conclusion based on the questionable assumption that Buddha lived in 1800 BCE. This is not fair debate.

    On the other hand, the above observation of Hsuan Tsang, given the strong undeniable evidences to put Sankarar in 8th century CE independent of Tsang’s chronicle, could be used as an evidence to kill the “Chandragupta Maurya before 15th century BCE” theory once and for all !!!

    // Hence there is sound basis for dating Sankara on 509 BCE. //

    Sound basis (??) based on the unsound theory (as shown by Jataayu and others here) that Buddha lived in 1800 BCE ???

    You have raised some points as to why I Tsing could have been dreaming/lying when he wrote his chronicle. Let us get this straight:

    The following is all we can say for sure regarding the “late” (according to I Tsing) Buddhist authors, based on contemporary evidence given by Hsuan Tsang and I Tsing who visited Nalanda:

    (1) Dignaga, Dharmapala, Dharmakirti, Silabhadra are counted in that list.

    (2) Dharmapala and Dharmakirti wrote commentaries to Dignaga’s work.

    (3) Silabhadra was a disciple of Dharmapala and interacted with Hsuan Tsang.

    There are two shaky theories on top of this:

    (1) Based on argumentum ex silentio (Hsuan Tsang didn’t translate even one of many of Dharmakirti’s works at all, and does not even name him), Dharmakirti was in his prime only after Hsuan Tsang’s departure from Nalanda/India.

    (2) There is however, another view, according to which Dharmakirti should have been contemporary to Dharmapala, as Dharmapala mentions quotes Dharmakirti in one of the works of the former translated by Hsuan Tsang – I have not verified this myself using source texts, but if proved to be true, it will essentially kill the shaky argumentum ex silentio inference above.

    (3) According to Taranatha’s Tibetan tradition, written after 14th century CE, there is evidence supporting both theories. Interestingly, Nakamura dismisses one in favor of the other and concludes 7th century CE. But still he has admitted in the notes that this is still shaky and needs further investigation.

    The question only is how recent is “recent” mentioned by Tsing? Certainly not 1200 years!

    Based on the above and the observation below, we have a strong enough evidence for an 8th century CE date for Bhagavatpada.

  102. continuation of response to Shri Kumudan:

    On the issue of coinage and cities…

    I say with a straight face that I do take back my amplified statements connecting Shankarar’s renunciate-hood with his mention of coin currency. That was unnecessary and tangential.

    Now the arguments in favor of 8th century CE:

    First of all, I have already quoted Bhandarkar saying that Kshapana existed till 6th/7th century CE.

    Secondly, please note that kshapaNa is a unit of currency (as mentioned by Manu and Narada Smritis), and not the name of a coin.

    Thirdly, have you not heard of illustrative examples and anecdotes (பழமொழிகள்) which do not refer to units of measurements gone out of vogue in day-to-day official commerce? I can show many examples such as:

    “வரவு எட்டணா செலவு பத்தணா” [1]

    “நாலு அணா காசு சம்பாதிக்காம போனதால அடுப்பு புகைந்து பல நாட்கள் ஆகிறது” [1]

    “ஒரு நயா பைசா சம்பாதிக்க முடியல” [1]

    “ஒரு ஆழக்கு அரிசிக்கு சம்பாதிக்க இத்தனை உழைக்க வேண்டியிருக்கிறது” [1]

    are used even today.

    Would you say that “அணா” and “ஆழக்கு” are currencies still in vogue today?

    Would you say that a firewood stove is still in use in my kitchen? [2]

    And even if my kitchen has only tupperware, stainless steel, and ceramic utensils, I would still say: “ஒரு பானை சோற்றுக்கு ஒரு பிடி சோறு பதமாம்”

    Moreover, we still use (or we used until recently), “4 anas” more commonly than “25 paise”, and “8 anas” more commonly for “50 paise”, even 50 years after they were abolished. Hence, it could mean “coin equivalent to a kshapaNa”.

    Thirdly, something unit of measurement going “officially out of vogue” does not mean that people stopped using it altogether.

    “It is like the four quarters of a Kshapana coin” or “to go from Pataliputra to blah blah and from blah blah to something something” etc. could be popular anecdotes of the time, taken from Puranas, other literature, or cultural usage.

    I agree this is a bit twisted. However, there is no other way of explaining Sankarar’s mention of the units of measurements consistently without dismissing other internal evidences such as Dharmakirti/I Tsing.

    This is because if you put him in BCE in order to give a more direct explanation to the units of measurements found in Acharya’s work by suggesting their contemporaneity to Acharya’s time, you can never explain, either directly or indirectly, the Dharmakirti, Dignaga, Tsing, Tsang evidences properly without unfairly denying them all as spurious/unreliable.

    However, we on the 8th century CE side are able to satisfactorily explain all available historical evidences.

    Footnotes to add some fun into the discussion:

    [1] Sorry for the “poor” examples, couldn’t come up with better ones :-).

    [2] Gas/electric/induction stoves do not produce smoke unless you are doing something very wrong.

  103. // கிறித்து பிறப்பதற்கு முன்னால் உலகமே அறியாமையால் மூழ்கியிருந்தது போல் இருந்திருக்குமோ என்னவோ? //

    இதுபற்றி ஏற்கனவே ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டிவிட்டேன். தமிழில் ஆட்சேபித்தால் தமிழிலேயே பதில்:

    “இங்கு நாம் செய்துகொண்டிருக்கும் வாதத்திற்கும் கிறித்து பிறப்பிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை, சர்வதேச்ச குறியீட்டு முறையில் வருட எண்களை எழுதுவது தவிர.”

  104. Shriman Kumudan,

    At this point, I have to call your attention to the following statements made by you:

    // Unfortunately many of our brown sahibs too parroted the same without any second thought. //

    I sincerely ask you this… Do you see, at least now, that brown-skinned “Sahibs” who make 8th century CE arguments are not just “parroting” what was said by “white-skinned Europeans”??

    // I’d continue to believe in our traditional accounts until someone conclusively proves it the other way. //

    Could you enlighten us what sort of evidence would, according to you, would consist of “conclusively proving” that Shankara Bhagavatpada’s date is 8th century CE?

  105. Dear Muthukumar,

    Sorry for my late response.

    //
    Its only a healthy debate and you need not feel offended.
    You have done a good work.
    However you have not replied about the Bhuddhist,Jain and Nepal sources in support of 509 BCE.(volume 5 -pages 855,856,857).
    Let us move on sharing our thoughts and views which is the unique feature of our religion and tradition.
    //

    Regarding the Nepal evidence, Hajime Nakamura writes the following (Courtesy: https://books.google.co.in/books?id=asNLliQHDNQC&pg=PA54)

    “J F Fleet, who had a detailed knowledge of the history of India, inferred the dates of Sankara from legends of Nepal. The Vamsavali, a history of Nepal, says that at the end of the reign of King Vrsadeva in the Suryavamsi Dynasty, or within several months after his death, Sankara visited Nepal. Now, the King Vrsadeva lived c. 630-655 AD, according to the research by Fleet, Sankara, accordingly, lived during the middle of the seventh century. However, the account in the history Vamsavali, which gives the story, is very difficult to rely on, and it has recorded many events which are not actual historical facts. Since the compilation of this work was completed only in the 19th century, one probably cannot but say that the determination of the dates of Sankara based upon it rests on extremely flimsy grounds. Moreover, no evidence whatsoever exists for concluding that this particular account dealing with Sankara is true; and further there are differing views on the the dates of King Vrsadeva (according to which he lived around 260 AD).”

    As for “Deivathin Kural” claim according to which the book Vamsavali mentions that Vrishadeva lived in kali year 2600, I am unable to verify this and it stands as a “claim” and not “evidence” if no one is able to verify it.

    The rest of the points seem to be just a play of words and numbers, and I have to say so as they are without any proper citations (like publication title, publisher information, chapter, verse, page number etc.)

    Moreover, I am not offended. However, I was saying that it is frustrating because there is no need to dismiss every one of the points shown as evidences by the 509BCE side, after it has been established fairly beyond doubt that the earlier limit for the period of Adi Shankara’s activity has to be much later, wading through the available historical evidences meticulously.

    Scholar T R Chintamani says the following in an article in the Journal of Oriental Society back in 1929, after inferring that Shankarar’s date falls between 650 CE and 850 CE on examining the quotations which I have taken in this article. I will just quote it here:

    “The theory that states that Sri Sankaracarya lived in the 5th century and attained Brahmabhava in 476 B.C. does not deserve to be criticised. Historians, I am sure, will be amused to hear that even now some people are upholding such a view. They probably believe that the greatness of Sri Sankaracarya would be enhanced if he is put back by millenniums. We have only to pity them; they are not aware of the fact that a thing is not great simply because it is old. I would only remind them the oft-quoted verse of Kalidasa “पुराणमित्येव न साधुसर्वम्”. The promulgators and the now-living trustees of this important discovery may well keep it for themselves without trying to delude themselves with the belief that at least some swallow them. They are simpletons and let us have nothing to do with them.” (https://www.new.dli.ernet.in/data_copy/upload/0073/080/PTIFF/00000056.tif)

    I have no evidence from my side that can convince people who faithfully believe a book that says that the name “California” comes from “Kapilaranya”, or that the name “Aztec” is the result of mutilation of the word “Astika”, or that “Incas” and “sun worship” suggests that the name “Inca” came from the sanskrit word “Ina” which means sun…

    … or that the biblical “Adam, Eve, and apple” story is derived from the “two birds and pippala fruit” story in the Sruti because the word “apple” resembles “pippala” (ignoring the fact that the bible was not written originally in English, and that “apple” is not a word in Hebrew/Aramaic), simply because Puranic stories have “similar features”.

    The debate has to come to a close and we need to move on after a reasonable level of strength has been established in favor of any of the sides.

  106. Regarding Anandajnana/Anandagiri:

    So far you were not able to substantiate your claim on Anandajnana instead you just stick your line.

    Here is the proof to counter your baseless allegation:

    1) Anandajnana: Different from the Anandagiri mentioned above. He was a
    native of Kerala and eventually ascended the Kanchi Kamakoti Matha. He wrote
    commentaries on all the Upanishad Bhashyas of Shankaracharya
    https://www.advaita-vedanta.org/archives/advaita-l/2000-July/001312.html

    2)Anandagiri (also known as AnandajnAna), a disciple of SuddhAnanda, is well-known as the author of a number of TIkAs and TippaNas on SankarAcArya’s upanishad bhAshyas. [7] anubhUtisvarUpa, mentioned earlier, was an important figure in the sArasvata grammatical tradition, and was probably another guru
    of Anandagiri’s. He wrote the prakaTArtha-vivaraNa on Sankara’s brahmasUtrabhAshya and a mANDUkya-kArikA-bhAshya. Both SuddhAnanda and Anandagiri are mentioned in the lineage of the Dvaraka maTha. Anandagiri is popularly known as the TIkAkAra.
    https://www.lettere.unito.it/didattica/att/d137.9559.file.pdf

    3)”Nothing is known about his teacher Suddhananda who is different from the Suddhananda, the teacher of svayamprakasa of the 17th century”

    https://books.google.co.in/books?id=iF7FaVeDMRYC&pg=PA78&lpg=PA78&dq=anandajnana&source=bl&ots=otA6NJ0
    cjV&sig=wiXJrvZY-U-r_BFerLhHAu5gSdY&hl=en&ei=C8YRTbnKDY2OjAeR8KH0BQ&sa=X&oi=book_result&ct=result&resn
    um=5&ved=0CDEQ6AEwBA#v=onepage&q=suddhananda&f=false

    It took me more time to see if Anandajnana and suddhananda indeed belong to Dwaraka matha but unfortunately couldn’t locate this acharya in the list. As it is clearly mentioned in the above point 1, acharya does not belong to kanchi matha, it looks like either the guruparampara list given in the site is wrong or acharya belongs to some sankara matha associated with one of the 5 main mathas. Dwaraka math doesn’t seem to have its own website.

    Tell me Gandarvan, who is misleading here?

    //“சங்கரர் கால ஆராய்ச்சியில் காஞ்சி மடம் போன்ற மடங்களின் சான்றுகளை ஏற்காதது அயோக்கியத்தனம்” என்று
    சிலர் சிறுபிள்ளைத்தனமாகக் கூறுகிறார்கள். மடங்கள் வெளியிடும் ஆச்சார்யா பரம்பரைக் கிராமத்தை வேதவாக்காக
    ச்வதாஹ் பிரமாணமாக ஏற்றால் என்ன சிக்கல் வரும் என்பதற்குச் சிறு எடுத்துக்காட்டு.//

    Don’t you think that your above statement creates a sense of distrust on the people about the mathas simply because of your unfounded statements?

  107. It is for those who mock at people believing in 509 BCE. Here is the statement from Swami Dayananda Saraswati of Aryasamaj in his satyartha prakash:

    https://www.aaryasamaj.org/chaptereleven.htm

    “About 2,200 years ago Shankaracharya, a Braahmana of Dravid (Southern India), studied Grammar and all other Shaastras – books on Logic, Philosophy, Metaphysics, Theology, etc. – during student life, and seeing the religious degradation of his country began to soliloquies thus:- “What a pity! The true theistic Vedic religion has disappeared, whilst the atheistic Jain religion has prevailed to the great detriment of the people. This (i.e., the Jain religion) must be put down somehow.” Shankarcharya had not only read the Shaastras but also the Jain scriptures. He was also a powerful debater.

    He began to think as to what was the best method of overthrowing Jainism. At last he came to the conclusion that preaching and holding discussions with the Jainis were the best methods to put down Jainism. With this object in view he went to Ujjain (in Central India). King Sudhanwa then ruled there. He had read the Jain books as well as a little Sanskrit. Shankaracharya began to preach the Vedic religion there. He went to the king and said “You have read the Jain books as well as Sanskrit, and also believe in the Jain Religion. I, therefore ask you to arrange a discussion between the exponents of the Jain ”

    I think he is not the one who sticks to traditionalist views. May be he is also misguided or brainwashed by the vested interests.

  108. Respected Kumudan,

    // So far you were not able to substantiate your claim on Anandajnana instead you just stick your line. //

    If that is what you infer after seeing all the above discussion, good luck with your quest.

    Both the Kanchi mutt lineage given in kamakoti.org as well as T S Narayana Sastri mention “Anandajnana, disciple of Shuddhananda the commentator of upanishad bhashyas and sureshvara varttikas” as the seventh acharya in the kanchi mutt lineage.

    Now, as I understand, whatever is given in that site is the official position of the kanchi mutt. There is also an image next to the text which match the specification given in the text.

    // 1) Anandajnana: Different from the Anandagiri mentioned above. He was a
    native of Kerala and eventually ascended the Kanchi Kamakoti Matha. He wrote
    commentaries on all the Upanishad Bhashyas of Shankaracharya
    https://www.advaita-vedanta.org/archives/advaita-l/2000-July/001312.html //

    This is from an email discussion archive. I found no trace of this other than the link above on googling. The above is found in the email posting of a netizen sampradAya enthusiast named “Vishal Agarwal”. How does this become evidence or “proof” as you call it?

    I repeat…

    Is there any available publication, or even a trace of the Bhashyas of this Anandajnana (different from the author of the Tikas) anywhere in any advaitic literature?

    Are you claiming two people who had the same two alternative names (Anandajnana and Anandagiri) who also had two different gurus with the same name (Shuddhananda) and who did the same thing (write sub-commentaries on Shankara Bhashyas)?

    It sounds very ridiculous to me, sorry.

    // Tell me Gandarvan, who is misleading here? //

    The kamakoti mutt release, according to your own statement below, if you mean “kamakoti.org” by “the site”:

    // it looks like either the guruparampara list given in the site is wrong //

    // Don’t you think that your above statement creates a sense of distrust on the people about the mathas simply because of your unfounded statements? //

    If simply by calling my statements “unfounded” you are going to be happy, you have the freedom to do that. However, there is nothing unusual or wrong for an Astika to face scientific inquiry and see if theories alternate to his beliefs hold.

    You are not able to provide a coherent solution to the following problem:

    “Anandajnana a.k.a. Anandagiri, disciple of Shuddhananda, who wrote commentaries to the Bhashyas of Shankara and Varttikas of Suresvara” mentioned as seventh Acharya, either in the second or first century of the BCE.

    Unfortunately, another person with exactly the same description above, minus the association with the Kanchi mutt and minus the BCE date, exists in the literary history and his work shows that he cannot be placed before tenth century CE.

    Anybody here will say that that there could be two such persons is the wildest of possibilities, especially given that no trace of one of them is found other than in the mutt lineage.

    The discussion here could very well have gone smoothly without getting into mutt histories. When this was raised by you when you said “it happens only in India that tradition is ignored in favor of white peoples’ words etc”, I had to mention that mutts’ claims and traditions cannot be taken as evidence in determining historicity. All that I meant is, even without attributing any mischief on anyone’s part, the Kanchi mutt lineage stands to be verified by means of historical inquiry. It is not a historical document by itself, unlike the Bhashya texts which have been carefully and critically analyzed from palm-leaf manuscripts, and for which numerous sub-commentaries, cross-references, and citations exist from the 10th century.

    Four independent observers here (Shrimans Sarang, R Balaji, Jataayu, and Giri) have concluded that the points and the inferences I have made are quite fair and reasonable. That is not going to change if you are going to call my statements “unfounded”, “misleading”, “blasphemous”, “baseless” etc.

    I would love to still continue the dialogue with you, but unfortunately I need to move on. It was nice to do this with you and I wish you good luck in your quest to understand the history of Vedanta.

  109. I understand what you meant by reading your statement again, so I take this back:

    // Tell me Gandarvan, who is misleading here? //

    The kamakoti mutt release, according to your own statement below, if you mean “kamakoti.org” by “the site”:

    // it looks like either the guruparampara list given in the site is wrong //

    Cheers, Gandharvan

  110. Dear Kumudan,

    //Don’t you think that your above statement creates a sense of distrust on the people about the mathas simply because of your unfounded statements?
    //

    Why should everyone be right everytime – Sankarar has condemned Buddha? Ramanujar Condemns Advaitha? Madhvar condemns advaitha, visistadvaitha – they all say others are wrong – and all 3 mathams are flourishing today What mistrust people have?

    Vaisnavas/mutts hold that Azhvars lived in dwapara Yuga and were krishna’s contemporaries – when asked why they did not meet Krishna we some wierd answers. There is absolutely no proof for this and it goes beyond doubt that azhvars lived in AD.

    There is also a claim that Kulasekar Azhvar wrote Mukunda Mala a sanskrit work – so some vaishnavas are so proud that Azhvar is a U.Ve (Ubhaya Vedhanthi) there were so many kulasekaras in the chera dynasty – if we equate both, it is only a confusion and nothing more

    all there are merely due to our fascinations towards begining stories with “long long ago in a place called ….”

  111. அன்புக்குரிய நண்பர்களே,

    நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரனே

    நஹி நஹி ரக்ஷதி கால நிர்ணய விவாதம்.

    இந்தக் கட்டுரை ஒரு வரலாற்று கால நிர்ணயக் கட்டுரை என்றே எண்ணுகிறேன்.

    இது போன்ற கட்டுரைகள் ஆன்மீகத்துக்கு நேரடி தொடர்பு உள்ளவை அல்ல என்றாலும், அவ்வப் போது சில ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள் இந்த வகையான கால ஆராய்ச்சியும் செய்கின்றனர். இது ஒரு ஆர்வத்தின் பால் பட்டதே.

    நான் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் இது சம்பந்தமாக நடக்கும் தொடர்ச்சியான விவாதங்கள் நாம் முக்கியமான பொருளை ஆன்மீகத்தை விட்டு விலகி செல்கிறோமோ என்று என்ன வைக்கிறது.

    சங்கராச்சாரியார் சொன்ன கருத்தைப் புரிந்து கொண்டு – இந்த உலகத்தில் நிலையாக இல்லாத வாழ்வை நம்பி இலவு காத்த கிளியாக ஏமாறாமல், சொத்து, சுகம், பணம், காசு, இலக்கண வியாக்கியானம், வரலாற்று ஆராய்ச்சி விவாதம் உட்பட எதுவும் நம்மைக் காக்காது என்பதை உணர்ந்து – உண்மையானதை தேடலாம். விடுதலை அடைய பார்க்கலாம். சங்கராச்சாரியார் தூய்மையான அப்பழுக்கற்ற அமைதியான இந்து மதத்தை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டார். அந்த வழியை எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்லலாம்.

    அன்புக்குரிய நண்பர்களே, ஆதி சங்கரர் இந்த நாள் , இந்த தேதி, இந்த வருடத்தில் பிறந்தாரா என்பதை பற்றிய விவாதத்தை விட அவருடைய கருத்து நம்மை நாமே ரக்ஷித்துக் கொள்ள எப்படி உதவும் என்பதை பற்றிய சிந்தனையை முன் வைத்தால் நம்மைக் காத்துக் கொள்ள அது உதவும். சங்கராச்சாரியார் விரும்பியது அதுவே. நம் மீது உள்ள அன்பினாலே சங்கராச்சாரியார் அதை சொன்னார்.

    நாம் இந்த உலகத்திலே சுகமாக வாழப்போகிறோம் என்று கருதுகிற நம்புகிற வரையில் ஆபத்தை நாம் உணரவே மாட்டோம். இக சம்சாரே பஹு துக் தாரே என்பதை நம் மனது உணரும் வரையில் நாம் எதற்கு முக்கியத்துவம் குடுக்க வேண்டும் என்பதை உணர மாட்டோம்.

  112. ”no evidence from my side that can convince people who faithfully believe a book that says that the name “California” comes from “Kapilaranya”’
    Wow! This is really interesting. Where does the name California comes from! The origin is unknown and still being disputed. I just googled for updates on this search but the puzzle is still not resolved.

  113. தமிழ் இந்துவில் இத்தனை ஆங்கில கடிதங்களா ? ஆங்கிலம் அறியாதோருக்கு இக்கடிதங்களின் உள்ளடக்கம் போய்ச்சேர வேண்டாமா ? தமிழில் எழுதினால் மேலும் மிக்க நன்றியுடன் இருப்போம். கால ஆராய்ச்சி தேவை அற்றது.எத்தனையோ சாட்சியங்கள் பராமரிப்பில்லாமலும், காட்டுமிராண்டிகளாலும் அழிந்துபோயின.
    ஒரு உதாரணத்துக்கு சொல்வதென்றால், யாழ் பல்கலை நூலகம் சிங்கள, பவுத்த வெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டபோது, ஏராளமான நூல்களும் காணக்கிடைக்காத ஆவனங்களும் மனித இனத்துக்கே இழப்பாயின. எனவே கால ஆராய்ச்சியை தவிர்த்து, கொள்கை தத்துவ விவாதங்களை மட்டும் மேற்கொள்வோம். அன்னியர் படை எடுப்பின்போது நம் பாரதத்திரு நாட்டிலும் ஏராளமான வழிபாட்டு தளங்களும், வழிபாட்டு தளங்களை ஒட்டி இருந்த நூலகங்களும், கொளுத்தப்பட்டு இடிக்கப்பட்டு சேதமாயின. எனவே கால ஆராய்ச்சியை தவிர்த்து, கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்வோம். காலத்தால் முற்பட்டது எல்லாமே உயர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று எதுவும் நிர்ப்பந்தம் கிடையாது. அதே போல காலத்தால் பிற்பட்டவை எல்லாமே மட்டமானவை என்றும் கொள்ள முடியாது. பழம் பெருமை மட்டும் பேசாமல் , நம் காலத்திலும் பல புதிய சாதனைகளை புரிவோமாக.

  114. Sriman Gandarvan

    //I understand what you meant by reading your statement again, so I take this back://

    Take back which statement? Can you please be bit more clear on this?

    //The kamakoti mutt release, according to your own statement below, if you mean “kamakoti.org” by “the site”:

    it looks like either the guruparampara list given in the site is wrong //

    I should have been bit more clear here. The “site” that was referred here was the one which had given the list of kanchi and dwaraka mathas and NOT KAMAKOTI PEETHAM.

    Hope this is more clear.

  115. Sriman Sarang

    //Why should everyone be right everytime – Sankarar has condemned Buddha? Ramanujar Condemns Advaitha? Madhvar condemns advaitha, visistadvaitha – they all say others are wrong – and all 3 mathams are flourishing today What mistrust people have?//

    Let me explain my stand. I don’t say people should not question. If questioning is disallowed then Sanatana dharma would have been decimated long ago. If gandarvan had put that as a question then I’d have taken that as part of our discussion. Instead he makes a statement merely based on his wild assumption. When Ramanuja or Madhwa or Nimbarka or Vallabhacharya or SriChaitanya objected to Sankara, their statements had basis directly in Vedas. No one refuted Vedas just because it appears as if it is talking in different tones.

  116. Sriman Gandarvan

    //I would love to still continue the dialogue with you, but unfortunately I need to move on. It was nice to do this with you and I wish you good luck in your quest to understand the history of Vedanta.//

    Same from here. One small correction: My endeavor is not only in understanding history of Vedanta alone but Sanatana Dharma as a whole. According to me Vedanta is only a part of it.

  117. அன்பர்களே

    நான் சொல்லவந்தது இதுதான்:

    ஆனந்தஞானர் என்பவர் தர்க்கசந்க்ரகாம் (tarkasangraham) என்னும் நூலை எழுதினர். இவருக்கு மற்றொரு பெயர் ஆனந்தகிரி என்பதாம். இவரின் காலம் பொ.ச 9 ஆம் நூற்றாண்டுக்கு பின் ஆகும் .

    இவரது குருவின் பெயர் சுத்தானந்தராம்.

    காஞ்சி மடத்து வம்சாவளிபடி, ஆனந்தஞானர் என்றும் அவரின் குருவான சுத்தானந்தர் என்றும் இருக்கிறது. இவர்கள் முறையே 7 ஆவது மற்றும் 6 ஆவது ஆச்சார்யர்கள் ஆவர். இவர்களது காலம் பொ.ச.மு வருகிறது. ஆனந்தஞானரின் பெயரில் காஞ்சி மட வளயதலத்தில் ஒரு குழப்பம் இருக்கிறது. ஒரு இடத்தில் அனந்தஞானர் என்றும் இன்னொன்றில் ஆனந்தகநேந்த்ரர் என்றும் இருக்கிறது (https://www.kamakoti.org/peeth/origin.html). மற்றொரு இடத்திலோ ஆனந்தானந்தர் என்று இருக்கிறது (https://www.kamakoti.org/souv/3-11.html ). எந்த பெயர் சரியானது என்று அவரகளைகேட்டுத்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.

    ஆனால் மடத்தின் எந்த ஆவணங்களிலும் ஆனந்தகிரிதான் இந்த ஏழாவது ஆசார்யாள் என்று பறைசாற்றுவதாக தெரியவில்லை.

    ஆனந்தகிரியின் மற்றொரு பெயரான ஆனந்தஞாநேந்த்ரர் என்ற பெயரும் அவரது குருவின் பெயரும் முறையே காஞ்சி மடத்து ஏழாம் மற்றும் ஆறாம் ஆச்சார்யர்களின் பெயர்களுடன் ஒத்துபோவதால் மட்டுமே ஆனந்தகிரிதான் காஞ்சியின் ஆசார்யர் என்று கூறுவதில் என்ன ஞாயம் இருக்கிறது நீங்களே யோசித்து பாருங்கள்.

    இதை பற்றிய விவாதத்தை இத்துடன் நிறுத்திகொள்கிறேன்.

  118. why are you bringing in Pillayar in this? It is absurd to say that Vinayagar was brought after Vatapi war. You must be knowing some basics of history.

    1. Vatapi war was in the period of Narasimha pallava after the death of his father Mahendra pallava.

    2. Mahendra Pallava tortured Appar first and then converted to Hinduism. During the end of Mahendra’s period, Kanchi was attacked by Pulikesi and Pallavas lost. Narasimha took revenge after he became the king.

    3. When Mahendra tortured Appar ( Roughly 30-40 years before vatapi war) Mahendra tried to kill him by throwing into sea,etc etc. He sent an elephant to Kill Appar. That time Appar sang ” Ganapathiyennum kaliru: This shos vinayaga worship existed even before vatapi war

    regards

  119. ஆதிசங்கரர் ஷன்மதம் ஸ்தாபனம் செய்தவர், தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களுக்கு வந்து பூஜை செய்து இருக்கிறார், அவர் கிமு வில் பிறந்திருந்தால், விநாயக வழிபடு, முழு மூச்சில் தமிழகத்தில் இருந்து இருக்கும். கிபி 6 ஆம் நூற்றாண்டில் நரசிம்ஹபல்லவர் விநாயகரை புதிதாக பார்த்திருக்க மாட்டார். விநாயகரை பற்றிய பாடல்கள் தமிழில் கிபி 8 ஆம் நூற்றாண்டிற்கு முன் நிறய வந்திருக்கும்.

    Appar mentions Ganapathi in many songs

    One at the time when an elephant sent on him

    பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
    கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
    வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
    நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்ல

    The shanmada concept is mentioned by Appar who lived in 7th. There are many songs of Appar mentioning Arusamayam. One is given below
    கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார்
    பேரிருள் கழிய மல்கு பிறைபுனற் சடையில் வைத்தார்
    ஆரிரு ளண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
    காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

  120. விநாயகர் வழிப்பாட்டை பற்றி பேசும்பொழுது சங்ககால புலவர்களாகிய நக்கீரரும் அவ்வையாரும் விநாயகர் அகவல் எழுதியுள்ளார்கள் , அவர்கள் நிச்சயம் பல்லவ காலத்திற்கு முந்தையவர்கள்

  121. “சங்கரர் கீமுவில் பிறந்திருந்தால் இது அத்தனய்ம் அடிபடும் – சங்கரர் சான்க்யத்தையும், புத்தத்தையும், நியாய வைசேசிக மதங்களையும், லோகயுக்த, சார்வாக மதங்களையும் தீர்கமாக கண்டிக்கிறார் – இதன் பிறகும் புத்தம் செழித்தது என்றால் சங்கரரின் பாஹ்யத்திர்க்கு அது ஒரு களங்கமாகும் அல்லவா ” _ Please go through the following and post your reply

    This is not a valid argument: There are many proof for the existence of Jain/Bhudhists and Meemamsakas even after the AD date of Sankara

    1. Bhaskara Meemamsa is after the AD date of Sankara according to Kumbakonam inscription

    2. The Kazhugumalai Jain works –

    3. The sharavanabelagola statue – which shows a massive following of Jainsim in karnataka in 11th C

    There are many such examples. Even in thevaram which is supposed to be earlier than Sankara according to you – it is shown clearly that still Hindus were majority. There are many references of Shanmada in Appar thevaram

    Also the details of Acharyas of Kanchi mutt was written by sadhasiva Brahmendra in 17th C which was again based on another earlier work. There was no necessity at that time to give an artificial BC date. That time people wouldnot have known any BC AD etc.

    Secondly – your views on Deivathin Kural – Only people in the field of historical research know about Mahasami’s depth of knowledge.

    The Kanchi Mutt has Copper plates from vijaya Ganda Gopala – who was a telugu chola of 13th C . They didnt have any necessity to create history.

    regards

  122. I am joining this debate late, but with a different argument:

    The advaita guru parampara goes like this:
    “Nārāyanam Padmabhuvam Vasishtam shaktiæ ca tatputraæ Parāsharam ca |
    Vyāsam Shukam Gaudapāda Mahantam Govindam Yogindram athasya shishyam |
    Shri Shankarāchārya mathasya Padmapādam ca hastamalakam ca shishyam |
    Tam trotakam vartika karamanyan asmad guru-nsantat-amanato ’smi || ”

    There is a transition from Puranic characters towards real life characters starting from Sri Gaudapadar and downwards. Vyasar and Sukhar are from Dvapara Yugam. And if Sri Sanakara is to have lived in 8th Century AD, then Sri Gaudapadar and Sri Govinda Bagavathpadar should have lived around 7 th century AD.

    This effectively means that around 5th Century AD (that is after 3500 years into Kali Yuga), advaita guru parampara did not have a guru & a very unlikely time for a Puranic – real life characters to take place.

  123. திரு ரமேஷ்,

    “கணபதி காயத்ரி” தைத்திரீய உபநிஷத்திலேயே உண்டு. கணபதி வழிபாடு பற்றி இல்லாமல் போனாலும், அதே தைத்திரீய உபநிஷத்தை ஒட்டி பரிபாடலில் வருகிறது. ஆகையால் கணபதி வழிபாட்டைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர அவசியமெல்லாம் இல்லை.

    ஷன்மதத்தை வைத்து ஆதி சங்கரர் காலத்தை நிர்ணயிக்க முற்பட்டால் சிக்கலில் தான் கொண்டு போய் முடியும். ஏனென்றால்,

    (1) “ஐந்நூறு வருடங்களுக்கு முன்னதாக எந்த வரலாற்று ஆவணத்திலும் கல்வெட்டிலும் ‘சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம்’ என்று ஷன்மதன்களைப் பட்டியலிட்டுள்ளதாக இல்லை.”

    (2) “மாறாக, சில ஆவணங்களில் (உதாரணமாக ஆழ்வார் பாடல்களில்) ‘பிணக்கற அறு சமயம்’ என்று சாங்கியம், வைசேஷிகம், நையாயிகம், யோகம், சமணம், பௌத்தம் முதலானவையே குறிப்பிடப் பட்டுள்ளன. இன்று சைவம், சாக்தம், வைணவம் முதலானவைகளை ஷன்மதம் என்று குறிப்பிடுவதால் சாங்கியம், வைசேஷிகம், நையாயிகம் முதலானவை ஷட் தர்ஷனங்கள் என்று வழங்கப்படுகின்றன”

    இவை இரண்டும் நான் படித்ததிலிருந்து அறிந்தவை. இதற்கான எதிர்ச்சான்று கிடைக்காதவரை ஆதி சங்கரர் காலத்தை கணபதி வழிபாட்டின் காலத்தை வைத்தோ வேறு எந்த ஷன்மதம் குறித்த புறச் சான்றுகளை வைத்தோ ஆராய்ச்சி செய்வது சாத்தியம் இல்லை என்றே கொள்ள வேண்டும்.

  124. திரு குமுதன் அவர்களே,

    // இதை பற்றிய விவாதத்தை இத்துடன் நிறுத்திகொள்கிறேன். //

    ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஆனந்தகிரி-ஆனந்தஞானர் குறித்த ஒரே ஒரு பாயிண்ட்-ஐ நீங்கள் விட்டு விட்டீர்கள்.

    காமகோடி பீடம் ஏழாவது பீடாதிபதியாகக் கூறும் ஆனந்தஞானருக்கும் தர்க்க சங்க்ரகாம் எழுதிய ஆனந்தஞானருக்கும் பெயரளவில் மாத்திரம் ஒற்றுமையில்லை. இருவரின் குருவுக்கும் ஒரே பெயர், அத்துடன் இருவருமே சங்கர பாஷ்யங்களுக்கும் சுறேஸ்வரருடைய வார்த்திகங்களுக்கும் பாஷ்யமிட்டுள்ளனர் என்று கொள்ள வேண்டிவரும். உங்களுக்கு ஏதேனும் கூற விரும்பினால், i invite you to have the last word in this debate.

    வாய்ப்பளித்ததற்கு நன்றி.

  125. //உங்கள் ஆதங்கம் புரிகிறது. நமக்குக் கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகளைப் பார்க்கும் பொது வேறு வழி எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்த வேறு நண்பர்களுக்கோ ஏதாவது விளக்கம் தெரிந்தால் இங்கே இடுமாறு சிரம் தாழ்த்திக் கேட்டுக் கொள்கிறேன். // -மதிப்பிற்குரிய ஸ்ரீ.கந்தர்வன்

    அன்பின் ஆய்வாளர்களுக்கு,

    தங்களின் கட்டுரையைப் படித்த பின்னர் பலவாறாக சிந்தித்தேன். காஞ்சி காமகோடி பீடம் பொய்மையான வரலாற்றுத் தகவல்களையும் பொய்மையான ஆச்சார்ய பரம்பரையையும் கொண்டிருக்கிறது எனக் கொள்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல…ஆனாலும்,

    தென்னகத்தில் பெரும் பணியாற்றிய ஆதிசங்கரர் பற்றிய செய்திகள் சங்கநூல்களிலோ, திருக்குறள், சிலப்பதிகாரம், போன்றவற்றிலோ இன்மையால் இவற்றின் காலத்திற்குப் பின்னரே சங்கரர் அவதரித்தார்.

    தேவாராசிரியர் காலத்தில் ஆதிசங்கரரும் வாழ்ந்திருக்கலாம். சில வேளைகளில் தேவாராசிரியர் காலத்திற்கு முற்பட்டவராகக் கொள்ளவும் இடமுண்டு. தேவாரங்களில் காமகோட்டம் பற்றியும் வேதாந்தக் கோட்பாடுகள் பற்றியும் ஆங்காங்கே சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது.

    இவ்வகையாக நோக்கும் போது ஆதிசங்கரரின் காலம் கி.பி 5ம்நூற்றாண்டிற்றும் 8ம் நூற்றாண்டுக்கும் இடையிலேயே அமைய வேண்டும்.

    இந்த மூன்று நூற்றாண்டு கால வரலாற்றிலும் சிறப்பாக.. பௌத்த சமண மதங்கள் தென்னகத்தில் கோலோச்சிய 7ம்நூற்றாண்டிலேயே ஆதிசங்கரரின் அவதாரம் அமைந்திருக்கும் என நம்பலாம். (6ம் 7ம் நூற்றாண்டுக்குப் பிறகு சமண பௌத்த மதங்கள் தென்னகத்தில் செல்வாக்கிழந்து போயின என்பது வரலாற்றறிஞரின் பொதுமையான கருத்து)

    அவ்வாறாகில்.. காஞ்சி சங்கரமட ஆவணங்களை வைத்து ஆய்வு செய்பவர்கள் சங்கரரின் காலம் கி.மு 5ம்நூற்றாண்டு என்கிறார்களே..? என்றால் அதற்குச் சில சமாதானங்களைச் சொல்லலாம்.

    புhரதத்தின் நாற்றிசைகளிலும் திருமடங்கள் நிறுவிய ஆதிசங்கரர் காஞ்சீபுரத்தில் சர்வக்ஞபீடம் நிறுவினார். எனவே. பாரதம் முழுமையும் செல்வாக்குப் பெற்றதாயும், பாரிய கட்டமைப்புக் கொண்டதாயும் காஞ்சிமடம் விளங்கியிருக்க வேண்டும்.

    காஞ்சிக்கும் காஷ்மீருக்கும் இடையிலே பயணிப்பதானால் பல வருடங்கள் செல்லக் கூடிய அக்காலத்தில் இம்மடத்து ஆச்சார்யார்கள் காஷ்மீரிலே ராஜமரியாதையுடன் விளங்கியதாக சங்கரமடத்து குரு பரம்பரை ஆவணங்கள் சொல்லுகின்றன.

    எனவே, சர்வக்ஞபீடமாகிய காஞ்சி மடத்திற்கு ஒரே காலத்திலேயே இரண்டு மூன்று ஆச்சார்யார்கள் பீடத்திலிருந்து அருளாட்சி செய்திருக்கலாம். அவர்களில் ஒருவர் வடதேசத்துக் கிளைமடத்தில் விளங்கியிருக்கலாம். ஒருவர் காஞ்சியிலேயே எழுந்தருளியிருந்திருக்கலாம்.

    பகவத்பாதரால் யோகலிங்கம் ஸ்தாபிக்கப்பட்ட காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யார்களுள் பலர் குகைகளிலே யோகத்திலும் தவத்திலுமே தங்கள் வாழ்நாளைக் கழித்ததாக மடத்து ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே, இப்படி ஒரு ஆச்சார்யார் பீடாரோஹணம் செய்த பின் மடத்தில் இன்னொரு ஆச்சார்யரைப் பீடத்திருத்தி விட்டு தவத்திலேயே வாழ்வை கழித்திருக்கலாம்.

    காஞ்சி மடத்தின் முதல்வராகிய ஆதிசங்கரரின் காலத்தவராகவே சுரேஸ்வரர், சர்வஜ்ஞாத்மேந்திரர், சத்யபோதேந்திரர் ஆகிய அடுத்த மூன்று ஆச்சார்யார்களும் இருந்திருக்கலாம். இவர்களின் ஆட்சிக்காலத்தை ஒருவர் பின் ஒருவராக இட்டு வரலாற்றினை வரைகிற போது நீண்ட காலத்தைக் காட்டும். ஆனால், ஒரே காலத்திலேயே இந்த நான்கு ஆச்சார்யர்களும் பீடத்தை அலங்கரித்தனர் என்று கொண்டால் 40-50 ஆண்டுகளுக்குள் இந்நால்வர் காலமும் அடங்கலாம்.

    5வது ஆச்சார்யரான ஞானானந்தேந்திரர் தமது சந்திரிகை என்ற நூலில் தம் குருவாக 3வது ஆச்சார்யரான சர்வக்ஞாத்மேந்திரரையே போற்றுவதும் இங்கு சிந்திக்கத்தக்கது.

    இதே போல மடத்தின் 12வது ஆச்சார்யர் மடத்து நிர்வாத்தை தமது சீடரிடம் கொடுத்து விட்டு “சார்வபௌம” என்ற சிறப்பான யோகத்தை அனுசரித்தாராம். ஆனால், அவரின் சீடரான 13வது ஆச்சார்யரோ தாமும் தமது சீடரின் நிர்வாகத்தைக் கொடுத்து விட்டு காஞ்சி நகர்ப்புறத்திலே யோகநிஷ்டை பூண்டு விட்டாராம். ஆக, 12வது 13வது 14வது ஆச்சார்யார்கள் ஒரே காலத்தில் இருந்திருக்க வேண்டும். இப்படி நிறைய ஆச்சார்யார்கள் தம் சீடரையே பீடத்திலிருத்தி விட்டு யோகத்திலும் தவத்திலும் வாழ்வை கழித்திருக்கிறார்கள்.

    ஆனால், இப்படியான ஆச்சார்யார்களின் காலத்தை ஒன்றாக்கி நோக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக நிரையிட்டு நீண்ட கால வரிசை காட்டி விட்டார்களோ என்று தோன்றுகிறது.

    காஞ்சி மடத்தின் பீடாச்சார்யர்கள் சில காலங்களில் காசியிலும் காஷ்மீரிலும் ஜகந்நாதத்திலும் முகாமிட்டு மடங்களை அமைத்து அருளாட்சி செய்திருக்கிறார்க்ள.

    இப்படி தொலை தூரங்களில் ஒரு பீடாச்சார்யர் நீண்ட காலம் இருந்தால் காஞ்சியில் நிச்சயமாக இன்னொரு ஆச்சார்யர் விளங்கியிருப்பார். ஆகவே, இத்தகு நிலையில் ஒரே காலப்பகுதியில் இரண்டு மூன்று ஆச்சார்யார்கள் பீடாதிபதிகளாக விளங்கியிருக்கலாம். வழக்கமான பீடங்களிலும் மடங்களிலும் இவ்வாறான சம்ப்ரதாயங்கள் இல்லாத போதிலும் சர்வக்ஞபீடம் என்ற வகையில் காஞ்சி மடத்தில் இந்நடைமுறை இருந்திருக்கலாம்.

    கி.பி 11ம் நூற்றாண்டில் இந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்புக்கள் பெரியளவில் நடைபெறும் வரை இவ்வாறு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்வாக்குப் பெற்ற சர்வக்ஞபீடமாக காஞ்சிமடம் ஒரே காலத்திலேயே பல ஆச்சார்யார்களுடையதாயிருந்திருக்கக் கூடும்.

    மடத்து ஆவணங்களின் படி 47வது ஆச்சார்யராக விளங்கியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திரர். (நான்காவது சந்திரசேகரேந்திரர்) இவர் காஷ்மீருக்கு விஜயம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இவரது காலம் கி.பி 1100-1150 வரை என்று நம்பப்படுகிறது.

    இவ் ஆச்சார்யரின் காலக்கணிப்பிற்கு ஆதாரமாக இவர் காலத்தில் எழுந்த 1111 ஜூலை 17ல் தெலுங்குச் சோழ அரசன் எழுதிய செப்புப்பட்டயம் இருக்கிறதாம்.
    எனவே, கி.பி 1200ல் சிதம்பரத்தில் சித்தி பெற்ற 48வது ஆச்சார்யருக்கு முன் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிசங்கர பகவத்பாதர் அவதாரம் செய்திருக்கலாம். எனவே, கிபி 600களில் ஆதிசங்கரர் அவதரித்திருக்கலாம். இவர் தமது சமகாலத்தவரான ஞானசம்பந்தரை சௌந்தர்யலஹரியில் ‘திராவிடசிசு’ என்று போற்றினார் என்று கொள்வதும் ஏற்புடையதே..

    நைஷதம் எழுதிய ஸ்ரீ ஹர்ஷவர்த்தனரையும் அபிநவகுப்தர் என்ற பெரும்புலவரையும் வாதத்தில் வென்ற வல்லவராகத் திகழ்ந்தவர் மடத்தின் 48வது ஆச்சார்யாராகிய அத்வைதானந்த போதர். இவர் கி.பி 1200ல் சிதம்பரத்தில் சித்தி பெற்றார் என்று மடத்து ஆவணங்களே குறிப்பிடுகின்றன.
    இந்த ஆச்சார்யார் காலத்திற்குப் பின்னர் இஸ்லாமியப் படையெடுப்புக்களால் காஞ்சி மடம் தன்னைச் சுருக்கிக் கொண்டது. இதன் பின் வருகிற ஆச்சார்யார்கள் ஒருவர் பின் ஒருவர் பீடமேறியிருக்க வாய்ப்புகள் நிறைவாக உள்ளன. காஞ்சி மடத்து வரலாறுகளும் இதன் பின் வரலாற்றடிப்படையில் சீரான காலக்கணிப்புடன் தெளிவாக அமையும் என நம்பலாம்.
    1200களுக்குப் பின் காஞ்சி சங்கரமடம் சில காலம் காஞ்சியில் விளங்கிப் பின் இன்னும் தென்திசை நோக்கிச் சென்றதாகத் தெரிகிறது. இதற்கு அடிக்கடி நடந்த படையெடுப்புக்களும் கொள்ளைகளுமே காரணமாயின..

    48வது ஆச்சார்யரின் காலத்தின் பின்னர் சங்கரமடம் சர்வக்ஞபீடம் என்ற நிலையிலிருந்து தன்னை ஓரளவுக்கு மட்டுப்படுத்தியிருக்க வேண்டும். நாட்டில் படையெடுப்புக்களும் போர்களும் குழப்பங்களும் இக்காலத்தில் பரவியிருந்தன. இந்த 48வது ஆச்சார்யார் வரையிலான காலத்தில் வாழ்ந்த ஆச்சார்யார்களில் ஏறத்தாழ பதினாறு ஆச்சார்யார்கள் குகைகளிலும் நகர்ப்புறங்களிலும் தவத்திலேயே தமது வாழ்வைக் கழித்ததாக காஞ்சி மடத்து வரலாறுகள் குறிப்பிடுகின்றன. அது போலவே இன்னும் பதினாறு ஆச்சார்யார்கள் காஷ்மீர் முதலிய வடதேசத்திலேயே கிளை மடம் அமைத்துப் பணி செய்திருக்க வேண்டும் என்பதற்கும் மடத்து வரலாறுகளில் இடமிருக்கிறது.

    இவ்வாறாக, ஒரே காலத்தில் இரண்டு தொடக்கம் நான்கு ஆச்சார்யார்கள் வரை இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. சர்வக்ஞபீடத்தின் இந்த மாபெரும் துறவரசு 1200களுக்குப் பின் தளர்வுற்றது.

    அதற்குப் பின் கி.பி 1746ல் மடத்தின் 62வது பீடாதிபதியான சுவாமிகள் மடத்தின் தலைமையகமாக கும்பகோணத்தினை மாற்றியமைத்து அங்கே அருளாட்சி செய்யத் தொடங்கும் வரையில் இடையில் உள்ள 13 ஆச்சார்யார்களும் தம்மை பெரியதொரு ஆச்சார்யார் என்ற நிலையிலிருந்து மறைத்து மக்களோடு மக்களாக ஊர்களில் வாழ்ந்ததாகவும் கொள்ள முடிகிறது. 59வது ஆச்சார்யராகிய பகவந்நாம போதேந்திரர் வரலாறு போன்றன இவ்வாறு ஆச்சார்யார்கள் மறைந்தொழுகும் பாங்கிற்கு ஆதாரமாக உள்ளது.

    இவ்வாறு கும்பகோணத்தில் திருமடம் அமைத்த பின்னரே.. மீண்டும் சர்வக்ஞபீடம் என்கிற உயர்வோடு கூடிய நிலை சங்கரமடத்திற்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் பின்னரே 400 ஆண்டு கால தளர்வின் பின் மீள விஜய யாத்திரகள் ஆரம்பித்தாகவும் தெரிகிறது. ஆக, கி.பி 600லிருந்து 1200 வரையான 600 ஆண்டு காலப்பகுதியில் சங்கரமடம் 48 ஆச்சார்யார்களுடையதாய் பிரம்மாண்டமான பீடமாக விளங்கியிருக்கும்.

    பின்னர் 400 ஆண்டு கால தளர்வின் பின் மீளெழுச்சி பெற்றிருக்கிறது என்றும் கருதலாம். இந்த 400 ஆண்டு கால இடப்பெயர்வும் மறைந்தொழுகும் பாங்கும் வரலாற்றுக் குழப்பத்திற்கு வாய்ப்பளிப்பதாகி விட்டது என்றும் கருதலாம்.
    இன்றைக்குச் சிலர் சர்வக்ஞபீடம் என்று காஞ்சிமடம் இருந்திருந்தால் ஏன் அது பற்றி இராமானுஜர், மத்வர், சைவ சித்தாந்த ஆசிரியர்கள், சைவாதீன கர்த்தர்கள், இராமானுஜர் வழி வந்த மடத்து ஜீயர்களின் வரலாற்றில் குறிப்புகள் இல்லை என்று கேட்கிறார்கள்.

    இதற்குக் காரணமாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்..

    1. இராமானுஜர் காலத்திலிருந்து சங்கர மடம் காஞ்சியில் நிலை பெறாமல் ஒவ்வொரு ஊராக தமது ஆஸ்தானத்தை மாற்றத் தொடங்கி விட்டது.

    2. சில வரலாறுகள் இராமானுஜர் பிரம்மசூத்திரம் தேடி காஷ்மீர் சென்றார் என்பதால் காஷ்மீரில் காஞ்சி சங்கர மடம் அக்காலத்தில் சிறப்புற்று இருந்திருக்கலாம். அதனை நாடி இராமானுஜர் அங்கு சென்றிருக்கலாம்.

    எனவே, இவ்வாறு ஆராய்ந்தால் காஞ்சி சங்கரமடத்தின் வரலாறு 1400 ஆண்டுகளுக்குட்பட்டதாகச் சீர்மை பெறும். அது போலவே, ஆதிசங்கரரின் காலம் கி.பி 7ம் நூற்றாண்டு என்று கொள்வதாகவும் இருக்கும். (சிருங்கேரி மடம் 8ம்-9ம் நூற்றாண்டு என்று கொள்கிறது.) இந்த 1400 ஆண்டுகளில் 70 ஆச்சார்யார்கள் ஸ்ரீ மடத்தில் எழுந்தருளியிருந்தார்கள் என்பது சிறப்பின் மேல் சிறப்பாகும்.

    இவ்வாறு கொள்வதை காஞ்சி மடத்துப் பெரியவர்கள் ஏற்றுக் கொள்வார்களோ அறியேன். ஆயினும் பொய்மையின்றி உண்மையாக.. சிந்தனையில் தோன்றியதை எழுதியிருக்கிறேன்.

    எது எவ்வாறாகிலும் காஞ்சி மடம் மற்றும் ஆதிசங்கரரின் வரலாறும் காலமும் தெளிவு பெற வேண்டும் என்பதே எமது ஆவலாகும். அது இன்றைக்கு மிக அவசியமாகவும் அவசரமாகவும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மூலாம்னாய சர்வக்ஞபீடத்தின் சிறப்பும் பெருமையும் உலகில் பரவ பகவத்பாதாளின் திருவடிகளைப் பிரார்த்திப்போம்.

    தி.மயூரகிரிசர்மா (நீர்வை- யாழ்ப்பாணம்)

  126. அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய மயூரகிரி ஷர்மா அவர்களுக்கு,

    தாங்கள் இவ்வளவு சிரத்தை எடுத்து நீண்ட விளக்கம் அளித்திருப்பதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆதி சங்கரர் சுமார் எத்தனை ஆண்டு காலத்திற்கு முற்பட்டவர் என்று நடக்கும் ஆராய்ச்சி எனக்கு முக்கியமாக படவில்லை. பத்தாயிரத்து ஐந்நூறு வருடத்திற்கு முந்தியது என்ற ஒரு காரணத்திற்காக மாத்திரம் எந்த ஒரு கொள்கையை, அல்லது தத்துவத்தை யாரும் மதிப்பது கிடையாது.

    அத்வைதம் ஒரு மிக உயரிய கொள்கை. அதனை அவர் பெற்றெடுக்கவில்லை. தாமஸ் ஆல்வா எடிசன் என்ற விஞ்ஞானி மின்சாரத்தை கண்டு பிடித்து , மனித இனத்துக்கு அறிவூட்டும் முன்னரே, மின்சாரம் இருந்தது. ஆனால் நமக்கு தெரியவில்லை. அதே போல எந்த ஒரு தத்துவமும் , ஒரு அறிஞரின் எண்ணத்தில் உதித்து வெளியிடப்பட்டு அனைவரும் பலன் பெறுகிறோம்.

    ஆனால் தத்துவம் என்பது எப்போதும் உள்ளது. வெளிப்படும் காலகட்டம் வேறுபடலாம். சைவ சித்தாந்தம் , அத்வைதம் இரண்டும் ஒன்றே என்பதை நான் அனுபவத்தில் கண்டவன். மேலும் இந்த கால ஆராய்ச்சி தேவை அற்றது என்று நான் கருதுகிறேன்.

    ஏனெனில் , சீன யாத்திரீகர்களும், வெளிநாட்டு படைஎடுப்பாளர்களும், சரித்திரம் எழுதும்போது அந்த நாளைய ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு உகந்த வரலாறுகளை மட்டுமே எழுதுவது வழக்கம்.

    நமது காலத்திலேயே , யூகோஸ்லாவியா என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் கல்விநிலையங்களில், கம்யூனிஸ்டுகள் அரசாண்ட போது, வைக்கப்பட்ட வரலாறு பாடப்புத்தகங்கள் தற்போது குப்பைக்கூடையில் தான் உள்ளன. 1989 வரை இருந்த கம்யூனிச ஆட்சி ஒழிந்தவுடன் , சுமார் ஏழு எட்டு நாடுகளாக பிரிந்து, ஒவ்வோர் நாடும் வேறு வேறு சரித்திர பாடப்புத்தகங்களை வைத்து , மாறு பட்ட சரித்திரத்தை மாணவர்களுக்கு போதிக்கின்றன. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டில், அங்கு இஸ்லாமியர்களே ஒரிஜினல் குடிமக்கள் எனவும், இதர மதத்தினர் வந்தேறிகள் எனவும் எழுதி பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில், கிறித்தவர்களே ஒரிஜினல் குடிமக்கள் எனவும், இதர மதத்தினர் வந்தேறிகள் எனவும் எழுதி பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர்.

    மேலே சொன்னவற்றில் எதுவும் உண்மை இல்லை. அவ்வப்போது ஆட்சியில் இருப்பவர்களின் உத்தரவுக்கு ஏற்ப சரித்திரம் என்ற பொய் எழுதப்படுகிறது. அதற்காக சரித்திரம் என்பதில் உண்மையே கிடையாதா என்று கேட்கலாம். சரித்திரத்தில் ஏதாவது உண்மையும் சிறிது கலந்து இருக்கக்கூடும். ஆனால் சரித்திரம் எழுதும்போது, உண்மையை சிறிது கலந்தது எதற்காக வென்றால் , தாங்கள் கலந்த பொய்களை மறைப்பதற்காகவே சிறிது உண்மை கலக்கப்படுகிறது.

    எங்கள் தமிழ் நாட்டில், திமுக என்ற கட்சி ஆளும்போது , கருணாநிதி மற்றும் அவரது வரலாறு பாடத்திட்டத்தில் சேர்த்து, ஒரு பாடம் பள்ளிகளில் சேர்ப்பார்கள். அவரது கட்சி தோற்று , அதிமுக என்ற கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் கருணாவின் குடும்ப வரலாறு குப்பை தொட்டிக்கு போகும். புதிதாக வந்த கட்சி தங்கள் தலைவர்/தலைவி பற்றி பாடம் எழுதி , பாடப்புத்தகத்தில் சேர்ப்பார்கள். இப்படி ஆட்சி மாறும்போது ஒவ்வொருமுறையும் சரித்திரம் மாற்றப்படுகிறது. இந்த கூத்து, சுமார் நாற்பத்து நாலு ஆண்டுகளாக எங்கள் நாட்டில் நடக்கிறது.

    எனவே சரித்திரம் என்பது ஒரு முழு பொய் என்று கொண்டால் கூட தவறில்லை. சிறிதே உண்மை கலக்கப்பட்டுள்ளது.
    கால ஆராய்ச்சிகள் வேண்டாம் என்று மிக பணிவுடன் வேண்டுகிறேன்.
    கருத்து விளக்கங்கள் தொடரட்டும். ஏனெனில் எங்கள் தமிழ் மொழி கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி ஆகும்.

  127. திரு மயூரகிரி ஷர்மா அவர்களே,

    நீங்கள் CE ஏழாவது/எட்டாவது நூற்றாண்டு காலக்கனைக்கை ஏற்றுக்கொள்ளும் வரையில் இந்தக் கட்டுரையில் உள்ள ஆய்வுக் குறிப்புகளுக்கு முழுவதும் உடன்படுகிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் வேறு சிலர் இதற்கெல்லாம் செவிமடுக்காமல் “இதெல்லாம் வெள்ளைக்காரன் ஆராய்ச்சி” என்று புறந்தள்ளுகின்றனர். அவர்களும் கொஞ்சம் நீங்கள் வேறு திரியில் கூறியது போல “அமைதியாக அந்தப் பக்க நியாயத்தையும் கேட்போம்” என்ற நிலைக்கு வரவேண்டும்.

    எனக்குத் தெரிந்து இராமானுஜர் சர்வஞ பீடம் சென்றதாக உள்ள சரிதத்தில் அந்தப் பீடத்தைச் சங்கர மடத்துடன் தொடர்புபடுத்துவதற்கு எந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. இது பற்றி ஸ்ரீவைஷ்ணவத்தில் விஷயம் தெரிந்தவர் பிரபன்னாம்ருதம் முதலான நூல்களிலிருந்து விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    எங்கோ செப்பேடு இருப்பதாகக் கூறுகிறீர்களே, அது பற்றி மாத்திரம் தெரிந்துக் கொள்ள ஆவல். ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள (முனைவர் அவர்கள் வேறு திரியில் அண்மையில் குறிப்பிட்ட “epigraphica indica” முதலான) ஆவணங்களில் அந்தச் செப்பேடு பற்றி இருந்தால் அறிந்து பயன்பெறுவேன்.

    பக்தியில் சிறந்த பெரும் வணக்கத்திற்குரிய சர்வஞாத்ம முனிகள் சுரேஸ்வரர் சீடராகக் கருத வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. அவர் பத்மநாபஸ்வாமி கோயிலைச் சார்ந்து கேரளா தேசத்திலேயே பத்தாம் நூற்றாண்டில் சந்யாசியாக வாழ்ந்திருப்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இந்த சுட்டியைப் பார்க்கவும்: Language and release: Sarvajñātman’s Pañcaprakriyā
    By Ivan Kocmarek, page 7-11, Section title: “The Date of Sarvajnatman”
    . ஆகையால் சுரேஸ்வரர்-சர்வஞாத்ம முனிகள் குரு-சிஷ்ய தொடர்பிலும் வரலாற்று ரீதியில் ஒரு ஓட்டை இருக்கிறது. இவ்விஷயத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்,

    (1) சர்வஞாத்மர் தம்முடைய எல்லாப் படைப்புகளிலும் தம்முடைய ஆச்சாரியாரை “தேவேஸ்வரர்” என்று தான் குறிப்பிடுகிறார். ஓரிடத்திலும் “சுரேஸ்வரர்” என்று குறிப்பிடுவதில்லை.

    (2) சுறேச்வரருடைய வார்த்திகத்தை மேற்கோள் காட்டும் இடத்தில் அவரை “வார்த்திககாரர்” என்றே அழைக்கிறார். ஓரிடத்தில் “சுரேஸ்வரர்” என்றும் அழைக்கிறார்.

    (3) சர்வஞாத்ம முனி ஒரு படைப்பில் தம்முடைய ஆச்சாரியப் பரம்பரையை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஸ்ரேஷ்டானந்தருடைய சீடர் தேவானந்தர், தேவானந்தருடைய சீடர் தேவேஸ்வரர், தேவேச்வரருடைய சீடன் அடியேன்” என்று. சுரேஸ்வரர் தான் தேவேஸ்வரர் என்றால் ஆதி சங்கரரை தேவானந்தர் என்றும், அவர் குருவாகிய கோவிந்த பகவத்பாதரை ஸ்ரேஷ்டானந்தர் என்றும் குறிப்பிடுவதாகக் கொள்ள வேண்டும். இப்படி அவ்விருவரை யாரும் குரிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. அப்படிக் குறிப்பிடக் காரணமும் இல்லை.

    (4) இந்த குழப்பத்திற்குக் காரணம் பெருமதிப்பிற்குரிய ஆச்சாரியர்களாகிய ஸ்ரீமன் மதுசூதன சரச்வதிகளும், அவருக்கு முந்தையவராகிய இராமதீர்த்தர் என்பவரும் வேறெந்த நோக்கமுமின்றி எத்ருச்சையாகச் செய்த ஒரு பிழையால் இருக்கலாம்: இவ்விரு ஆச்சாரியார்களும் சர்வஞாத்ம முனிகளின் “சங்க்ஷேப சாரீரகத்திற்கு” விளக்கமாக நூல்கள் எழுதியுள்ளனர். அதில், இவ்விருவரும், சர்வஞாத்மர் “தேவேஸ்வரர்” என்று தம்முடைய குருவைத் துதிக்கும் இடத்தில், “‘சுரேஸ்வரர்’ என்று பெயரை நேரேடியாகச் சொன்னால் அவமரியாதை என்பதனால் அதே பொருளை உடைய ‘தேவேஸ்வரர்’ என்ற பெயரால் அழைக்கிறார்” என்பது இவ்விருவரின் விளக்கம். ஆனால், (1)-(3)-ஐப் பார்க்கும்பொழுது இது சரியல்ல என்று தோன்றுகிறது. இவ்விரு ஆச்சாரியார்களின் காலம் 16-ஆம் நூற்றாண்டு, அதாவது சர்வஞாத்ம முனிகள் காலத்திற்கு 700 ஆண்டுகள் கழித்து.

    கேரளத்தில் நடுவில் மடம், தெக்கே மடம் என்று இரண்டு அத்வைத மடங்கள் உண்டு. பல பழைய அத்வைத நூல்களின் பழஞ்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டு அச்சிடப்பட்டு வந்துள்ளன. ஆதி சங்கரர் வரலாற்றையும் பணியையும் பற்றி அறிந்துக்கொள்ள இவ்விரு மடங்களின் ஆவணங்கள் மிக முக்கியமென்று கருதுகிறேன்.

    நம்மவர்கள் இந்து மத வரலாற்றைப் பற்றிப் பேசும்பொழுது அபிமானமும் அபிநிவேச்சமும் கொண்டு ஆதாரமில்லாமல் கூறுவதை விடுத்து விட்டு, இவ்வாறு சான்றுகளின் அடிப்படையில் பேசுவது நம் நாட்டிற்கும் வைதீக மதத்திற்கும் பெரும் நன்மையையே தரும் என்று கருதுகிறேன். மற்றபடி இது ஒரு academic discussion என்றே கருதுகிறேன்.

    எந்த ஒரு மடமும் தனது நற்பணிக்கு ஆள் சேர்க்க, நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெருக்க , “இவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் பழையதாக்கும். பழங்காலத்தில் வாழ்ந்த இன்னார் நிறுவியதாக்கும்” என்பவற்றை அஸ்திவாரமாகக் கொள்வது நல்லதல்ல. பிரத்யக்ஷ சான்றுகளுக்கும் எதிராக இத்தகைய ஐதீகங்களில் விடாப்பிடியான அபிநிவேச்சம் கொள்வதும் என்னைப் பொறுத்த வரையில் ஹிந்து மதத்தின் மேன்மையைக் குறைக்கும் கொடும்பாவ காரியங்களாகும்.

    பக்தியிலும் அனுஷ்டானத்திலும் எந்த விதத்திலும் குறைவில்லாத எனக்குத் தெரிந்த பல ஸ்ரீவைஷ்ணவாள் ‘குருபரம்பரை நூல்களை அப்படியே வரலாறாக ஏற்கத்தக்கவை அல்ல. அவற்றுள் சில நிகழ்ச்சிகள் மிகப்படுத்துவதர்காகக் கூறியிருக்கலாம்’ என்று மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறார்கள். பொதுவாக ஸ்ரீவைஷ்ணவர்களில் இந்நிலை எவ்வளவு பரவலாக இருக்கிறதோ இல்லையோ, இத்தகைய நடுநிலையான மனப்பான்மை நம் அத்வைத சமூஹத்தில் பரவ வேண்டும். உலகம் போற்றும் தத்துவ ஆச்சாரியார் ஒருவரின் பெயரில் – இன்றைக்கு, அவர் உயர்த்திப் பிடித்த கொள்கையைப் பின்பற்றுவதாகத் தம்மைப் பறைசாற்றிக் கொள்ளும் சமூகமானது, ஆதாரமில்லாமல் மனம்போனபடி அந்த ஆச்சாரியார் வரலாற்றைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதாவது, நம் நாட்டுப் பாரம்பரியத்தைப் பார்த்து உலக அரங்கு சிரிக்கும்படிப் பண்ணும் துரோக காரியமாகும்.

    மற்றபடி,

    Historical inquiry from a neutral standpoint should be encouraged among Hindus to show to the world the greatness of our heritage and to show that it is owed purely to indigenous rishis and not exported from some foreign land.

    At the same time, a Hindu monastery aimed at spiritual/social service need not necessarily base its legitimacy on historicity – that too an unprovable and weak one opposed to all available evidences.

  128. மதிப்பிற்குரிய ஸ்ரீ கந்தர்வன் அவர்களுக்கு,

    தாங்கள் குறிப்பிடுவது போல பெரு மதிப்பிற்குரியவர்களாக.. தூய வாழ்வு மேற்கொண்ட ஆச்சார்யார்கள் வெறும் கற்பனையாலும் புனைவுகளாலும் மடத்து வரலாற்றை நிரப்பினார்கள் என்று கொள்வதை ஏற்றுக் கொள்ள இயலாது… தவிhக்க இயலாமல் பிற்காலத்தில் ஸ்ரீ மடத்து வரலாற்றை எழுதிய போது கால நிர்ணயத்தில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என்றே நினைக்கிறேன்.

    சுரர் என்றால் தேவர் ஆக, சர்வஞ்ஞாத்மர் தமது குருவான சுரேஸ்வரரை தேவேஸ்வரர் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

    //சர்வஞாத்ம முனி ஒரு படைப்பில் தம்முடைய ஆச்சாரியப் பரம்பரையை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஸ்ரேஷ்டானந்தருடைய சீடர் தேவானந்தர்இ தேவானந்தருடைய சீடர் தேவேஸ்வரர்இ தேவேச்வரருடைய சீடன் அடியேன்” என்று. சுரேஸ்வரர் தான் தேவேஸ்வரர் என்றால் ஆதி சங்கரரை தேவானந்தர் என்றும்இ அவர் குருவாகிய கோவிந்த பகவத்பாதரை ஸ்ரேஷ்டானந்தர் என்றும் குறிப்பிடுவதாகக் கொள்ள வேண்டும். இப்படி அவ்விருவரை யாரும் குரிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. அப்படிக் குறிப்பிடக் காரணமும் இல்லை.//

    இது இப்படி எழுதப்பட்டிருப்பது எந்தப்படைப்பில் என்று கூறவில்லையே..? அப்படியாகிலும் இது ஓரிடத்தில் மட்டும் இருப்பதால் பிற்சேர்க்கை அல்லது இடைச்செருகலாயும் இருக்கலாம் அல்லவா?

    காஞ்சி மடத்து வரலாறு சர்வக்ஞாத்மர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோந்தவர் என்றே கருதுவதாகத் தெரிகிறது.. காஞ்சியில் ஆதிசங்கரரும் சுரேஸ்வரரும் திருமடத்திற்கு அடிகோலினும் பீடத்தை சிறப்பாக அலங்கரித்தவர் இவரே.. இவரிலிருந்தே இந்திர சரஸ்வதி என்ற பட்டமும் ஆரம்பிப்பதும் இங்கு சிந்திக்கத்தக்கது. ஆகவே, சர்வக்ஞாத்மருக்கும் காஞ்சித் திருமடத்திறகும் இடையான உறவு மிக நெருக்கமானது என்றே நம்புகிறேன். தாங்கள் காட்டிய சுட்டி எனக்கும் தெளிவானதாகத் தெரியவில்லை.. அதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

    காஞ்சி மடத்தின் 37வது ஆச்சார்யாருக்கு ஆதிசங்கரர் தரிசனம் கொடுத்ததாயும்.. அப்போது அவருக்குக் கிடைத்த பகவத்பாதாளின் பாதுகைகள் இன்றும் காஞ்சி மடத்தில் இருப்பதாயும் சொல்லப்படுகிறது.

    //எங்கோ செப்பேடு இருப்பதாகக் கூறுகிறீர்களேஇ அது பற்றி மாத்திரம் தெரிந்துக் கொள்ள ஆவல். ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள (முனைவர் அவர்கள் வேறு திரியில் அண்மையில் குறிப்பிட்ட “நிபைசயிhiஉய iனெiஉய” முதலான) ஆவணங்களில் அந்தச் செப்பேடு பற்றி இருந்தால் அறிந்து பயன்பெறுவேன்.//

    இது தெலுங்குச் சோழமன்னனான விஜய கண்ட கோபாலன் என்பவன் எழுதியதாம்.. காஞ்சிமடத்திலோ அல்லது மடம் சார்ந்த இடங்களிலோ இருக்கலாம்..

    இதே போல 1507ல் ஸ்ரீகிருஷ்ண தேவராஜரின் தமையனார் அப்போதைய 54வது பீடாதிபதிக்கு செங்கல்பட்டிலுள்ள 3 கிராமங்களை மானியமாகக் கொடுத்ததாயும் அதற்கான செப்பேடு மடத்தில் இருப்பதாயும் தெரிகிறது.

    1514ல் மடத்திற்கு கிருஷ்ண தேவராஜர் மானியம் வழங்கியதாயும் கீழம்பிக் கல்வெட்டும் ஒரு செப்பேடும் குறிப்பிடுகிறதாம்.

    இப்படி நிறைய விஷயங்கள் ஆர்.பொன்னம்மாள் எழுதி கிரி ரேடேஸ் நிறுவனம் 2010 நவம்பரில் வெளியிட்ட ” ஸ்ரீகாமகோடி பீடம் குரு ரத்தினங்கள் என்ற நூலில் குறிப்பிடப்பெறுகின்றது. இவைகள் உண்மையானவை என்றே நான் நம்புகிறேன்.

    இன்னொரு விஷயம் காஞ்சி மடமும் சிருங்கேரி மடமும் ஒன்றோடொன்று மிக நெருங்கியவையாகவே 17, 18ம் நூற்றாண்டு வரை விளங்கியிருப்பதாகத் தெரிகிறது. இக்காலத்தில் ஒன்றின் ஆச்சார்யரே இன்னொன்றின் ஆச்சார்யராயும் திகழ்ந்நதிருக்கலாம் என்றும் ஊகிக்கிறேன். இது எப்படி என்றால் சிருங்ககிரி ஆச்சார்யரான வித்யாரண்யருக்குக் குருவாக விளங்கியவர் காஞ்சி மடத்தின் 51வது ஆச்சார்யரான ஸ்ரீ வித்யா தீர்த்தேந்திரர் என்று குறிப்பிடப் பெறுகிது.

    இது போலவே 52, 53ம் ஆச்சார்யர்கள் வித்யாரண்யரின் பணிகளுக்கு உறுதுணையாக இஇன்னொரு விஷயம் காஞ்சி மடமும் சிருங்கேரி மடமும் ஒன்றோடொன்று மிக நெருங்கியவையாகவே 17, 18ம் நூற்றாண்டு வரை விளங்கியிருப்பதாகத் தெரிகிறது. இக்காலத்தில் ஒன்றின் ஆச்சார்யரே இன்னொன்றின் ஆச்சார்யராயும் திகழ்ந்நதிருக்கலாம் என்றும் ஊகிக்கிறேன்.

    இது எப்படி என்றால் சிருங்ககிரி ஆச்சார்யரான வித்யாரண்யருக்குக் குருவாக விளங்கியவர் காஞ்சி மடத்தின் 51வது ஆச்சார்யரான ஸ்ரீ வித்யா தீர்த்தேந்திரர் என்று குறிப்பிடப் பெறுகிது.

    இது போலவே 52, 53ம் ஆச்சார்யர்கள் வித்யாரண்யரின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்ததாக காஞ்சி மட வரலாறுகள் சொல்லுகின்றன.

    ஆக, இவ்வாறு ஆய்வு செய்கிற போது பெரியளவு ஒற்றுமையான.. சீரான.. எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க.. ஆய்வு ரீதியான.. உண்மைகள் பேரருளாளரான பகவத்பாதரின் பெருங்கருணையால் கிடைக்கும் என்றால் அதனையே மிகச்சிறியவனான யான் பெரிதும் விரும்புகிறேன்.

    …..

    ஆக, இவ்வாறு ஆய்வு செய்கிற போது பெரியளவு ஒற்றுமையான.. சீரான.. எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க.. ஆய்வு ரீதியான.. உண்மைகள் பேரருளாளரான பகவத்பாதரின் பெருங்கருணையால் கிடைக்கும் என்றால் அதனையே மிகச்சிறியவனான யான் பெரிதும் விரும்புகிறேன்.

  129. மதிப்பிற்குரிய ஸ்ரீ சர்மா அவர்களுக்கு,

    சர்வஞாத்ம முனிகள் குரு விஷயத்தில் என்னால் ஆதாரப்பூர்வமாக, நிச்சயமாகக் கூறுவது இயலாது. ஏனென்றால் எனக்கு அவருடைய படைப்புகளில் என்னிடம் “சங்க்ஷேப சாரீரகம்” மற்றுமே உள்ளது (இராமதீர்த்தர் உரையுடன்). இதே நூலுக்கு மதுசூதன சரஸ்வதிகளும் ஸ்ரீ நருசிம்ஹ ஆஸ்ரமரும் எழுதிய உரைப்பகுதிகள் சில உள்ளன.

    சர்வஞாத்ம முனிகளுடைய மற்றையிரண்டு படைப்புகளாகிய “பிரமாண லக்ஷணம்” மற்றும் “பஞ்ச ப்ரகரியை” என்னும் நூல்களின் மூல வடிவு என்னிடம் இல்லை.

    // சுரர் என்றால் தேவர் ஆக, சர்வஞ்ஞாத்மர் தமது குருவான சுரேஸ்வரரை தேவேஸ்வரர் என்று குறிப்பிட்டிருக்கலாம். //

    இருக்கலாம். ஆனால் பின்வரும் ஆதாரங்களுக்கு என்ன விளக்கம் தருகிறீர்கள்?

    (1) தமது ஆச்சாரியார் என்று குரிப்பிடும்போழுதேல்லாம் “தேவேச்வரர்” என்றும், சுரேஸ்வரருடைய வார்த்திகத்தை மேற்கோள் இடும்போழுதேல்லாம் “வார்த்திககாரர்” என்றும் “சுரேஸ்வரர்” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என்று நான் குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ளது.

    (2) From the same book: “All of the extant colophons give the name Devesvara as Sarvajnatman’s guru and never Suresvara”.

    //

    //சர்வஞாத்ம முனி ஒரு படைப்பில் தம்முடைய ஆச்சாரியப் பரம்பரையை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஸ்ரேஷ்டானந்தருடைய சீடர் தேவானந்தர்இ தேவானந்தருடைய சீடர் தேவேஸ்வரர்இ தேவேச்வரருடைய சீடன் அடியேன்” என்று. சுரேஸ்வரர் தான் தேவேஸ்வரர் என்றால் ஆதி சங்கரரை தேவானந்தர் என்றும்இ அவர் குருவாகிய கோவிந்த பகவத்பாதரை ஸ்ரேஷ்டானந்தர் என்றும் குறிப்பிடுவதாகக் கொள்ள வேண்டும். இப்படி அவ்விருவரை யாரும் குரிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. அப்படிக் குறிப்பிடக் காரணமும் இல்லை.//

    இது இப்படி எழுதப்பட்டிருப்பது எந்தப்படைப்பில் என்று கூறவில்லையே..?

    //

    (3) சர்வஞாத்ம முனி எழுதிய “பிரமாண லக்ஷணம்” என்ற நூலில் ஒரு சுலோகமாகக் காணலாம் என்பது நான் குறிப்பிட்ட ஆங்கில ஆராய்ச்சிப் புத்தகத்தில் உள்ள செய்தி. பல இந்திய ஆய்வாளர்கள் கூட சர்வஞருடைய குரு சுரேஸ்வரர் அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்:

    a. T.R. Chintamani, “Pancaprakariya of Sarvajnatman with the commentaries of Anandajnana and Purnavidyamuni”, Bulletins of the Sanskrit Department, University of Madras, No. 4, (University of Madras, 1946)

    b. T.A. Gopinath Rao, Travancore Archaeological Series, Vol. 2, Part III, pp. 144-145.

    // அப்படியாகிலும் இது ஓரிடத்தில் மட்டும் இருப்பதால் பிற்சேர்க்கை அல்லது இடைச்செருகலாயும் இருக்கலாம் அல்லவா? //

    பொதுவாக, ஒரு படைப்பின் critical edition வெளியீடு பல இடங்களில் தேடிக் கண்டெடுக்கப்பட்ட சுவடிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பது நாம் அன்றாடம் காண்பது. இப்படிக் குறைந்தது ஒரு ஐந்து ஆறு சுவடிகளையாகிலும் உபயோகிப்பதுண்டு. இடைச்செருகல்கள் ஒரு சில சுவடிகளில் இருக்கும்; மற்ற சுவடிகளில் காணப்படா. இப்படி இருந்திருந்தால் அந்த critical வெளியீட்டைத் தொகுத்த தொகுப்பாசிரியர் அதைப் “பிற்சேர்க்கை” என்ற பகுதியில் தள்ளியிருப்பார். “பிரமாண லக்ஷணம்” புத்தகம் என்னிடம் இருந்தால் அதன் அவதாரிகையில் தொகுப்பாளர் அந்த சுவடிகள் எந்த எந்த நூலகங்களிலிருந்து கிடைத்தன என்ற செய்தியும் இருக்கும்.

    // தாங்கள் காட்டிய சுட்டி எனக்கும் தெளிவானதாகத் தெரியவில்லை.. அதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். //

    (4) ஸ்ரீ சர்வஞாத்மர் கேரளத்தைச் சார்ந்திருக்கலாம் என்பதற்கும், அவர் காலம் சங்கரர்/சுரேஸ்வரர் காலத்திற்கு குறைந்த பட்சம் நூறாண்டுகள் கழித்து இருக்க வேண்டும் என்ற கருத்து குறித்தும் பொதுவாக இரண்டு சான்றுகள்:

    a- ஸ்ரீ சர்வஞாத்மர் தம் படைப்பை “பத்மநாபனுக்கு சமர்ப்பிக்கிறேன்” (சங்க்ஷேப சாரீரகம், IV.61) என்று கூறுகிறார். இது ஒரு க்ஷேத்திர விஷயமாக இருக்கலாம் என்பதற்கு ஸ்ரீ ராமதீர்த்தரின் “அன்வயார்த்த பிரகாசிகை” இங்கு வலு சேர்க்கிறது: “padmanAbhasya shrImad anantapurI vaasinaH sheShA~ngke shayaanasya naaraayaNasya” என்று உள்ளது.

    b- ஸ்ரீ சர்வஞாத்மர் தம் வாழ்நாளில் “மனுகுலாதித்யர்” என்ற மன்னர் ஆண்டதைக் குறிப்பிட்டுள்ளார் (சங்க்ஷேப சாரீரகம், IV.62). நான் பார்த்தவரை இந்நூலுக்கு விளக்கம் எழுதிய ராமதீர்த்தர் முதலானோரும் இது ஒரு மன்னரைக் குறிப்பிடுவதாகக் கூறியுள்ளனர். “மனுகுலாதித்யர்” என்ற பட்டத்துடன் பாஸ்கரரவிவர்மன் என்ற திருவிதாங்கோட்டு மன்னர் CE 962-1018 காலத்தில் ஆண்டதாகக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன என்று நான் குறிப்பிட்ட புத்தகத்தில் காணப்படுகிறது:

    “Both points… were first brought to the attention of scholarship by T. A. Gopinath Rao, while he edited the Huzur Office Plates (see Travancore Archaeological Series 2, part III, pp. 131-207 — the relevant pages being pp. 143-46). He was the first to associate Manukuladitya with the reign of Bhaskararavivarman, whose ascension he concluded took place in 978. Since then, the ascension date of Bhaskararavivarman seems to have been fixed more accurately at 962 [see p. 702 of S. Sanku Ayyar’s “King Manukuladitya”, Journal of Indian History 44 (Dec. 1966) part III, pp. 699-705; however, in this paper the author, basing his argument on a kavya score called the Sitaharana, comes to identify Manukuladitya with Kodandaravivarman Kulasekhara who reigned in Kerala between 917 and 949]. More recently, evidence such as the inscription discovered in the Pullur Kotavalam Visnu temple, Hosdurg Talik, Cannanore District, Kerala [see Annual Report of Indian Epigraphy (1963-64) pp. 23-64 No. 125] in which the name Manukuladitya is directly related to Bhaskararavivarman, seems to have made the identification of Manukuladitya with Bhaskararavivarman (ruled: 962-1018) an accepted and settled fact [e.g., see M. G. S. Narayanan, “The Ceraman Perumals of Kerala,” Historical Studies in Kerala (XXXVII Indian History Congress, 1976, Souvenir Volume) edited by M. G. S. Narayanan and K. K. N. Kurup, Department of History, University of Calicut, pp. 28-34, especially p. 30, and K. Veluthat, Brahman Settlements in Kerala (Calicut University: 1978) pp. 40-41 and 69, where the name Manukuladitya seems to be preferred over that of Bhaskararavivarman.]

    நான் இதுவரை குறிப்பிட்டுள்ள (1)-(4) புள்ளிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

  130. மதிப்பிற்குரிய திரு சர்மா அவர்களே,

    இன்னொரு சான்றும் இங்கு நோக்கத்தக்கது. ஸ்ரீ சர்வஞாத்மர் தமது நூல்களில் “இஷ்ட சித்தி” என்ற நூலில் உள்ள வாக்கியத்தை பிரமாணமாக எடுத்துள்ளார். “இஷ்ட சித்தி” என்ற அத்வைத நூல் விமுக்தாத்மருடைய படைப்பு. அத்துடன், இந்த இஷ்ட சித்தி காரராகிய விமுக்தாத்மரைத் தான் சங்க்ஷேப சாரீரகத்தில் IV.14-இல் “முக்திகோவிதர்” என்ற பதத்தால் குறிப்பிடுவதாக ஸ்ரீ நரசிம்ம ஆச்ரமர், ஸ்ரீ ராமதீர்த்தர், ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி ஆகியோர் முறையே “தத்வ போதினி”, “அன்வயார்த்த பிரகாசிகை”, “சார சங்கிரகம்” என்ற நூல்களில் அவ்விடத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

    இஷ்ட சித்தியில் “பேதாபேத” மதத்தைப் பிரச்சாரம் செய்த பாஸ்கராச்சாரியாருடைய கொள்கைகள் கண்டிக்கப்பட்டுள்ளது என்று அந்நூலுக்கு பாஷ்யம் செய்த பிராசீனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    அத்துடன் இக்கட்டுரையில் குறிப்பிட்டது போல ஸ்ரீ யாமுனாச்சாரியார் சித்தி த்ரயத்தில் சங்கரர் காலத்திற்கும் பாஸ்கரர் காலத்திற்கும் இடைப்பட்டவராக ஸ்ரீவத்சாங்கர் என்ற ஆச்சாரியார் ஒருவர் இருந்ததாகக் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

    இது தவிர பாச்கரருடைய பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் சங்கரரின் மற்றொரு சீடராகிய பத்மபாதரின் பஞ்சபாதிகையைக் கண்டிப்பதாக ஒரு ஆய்வும் உள்ளது.

    இப்படி பூர்வர்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும்பொழுது, சர்வஞாத்மர் சங்கரருடைய சம காலத்தவர் என்று கொள்ள வேண்டுமெனின், சங்கரரும் அவர் சீடர் சுரேச்வரரும், சங்கரரைக் கண்டித்த பாஸ்கரரும், சங்கரருக்கும் பாச்கரருக்கும் இடைப்பட்ட ஸ்ரீவத்சாங்கர் என்பவரும், பாச்கரரைக் கண்டித்த விமுக்தாத்மரும், விமுக்தாத்மரைப் பிரமாணமாக எடுத்த சர்வஞாத்ம முனிகளும் எல்லாம் சம காலத்தவர் என்று கொள்ள நேரிடும். இது நம்பத்தக்கதாக இருப்பதாகத் தெரியவில்லையே?

    இத்தகைய சான்றுகளுக்கும் ஒரு சமாதானம் கூற வேண்டும்.

  131. பேரன்பின் ஸ்ரீ கந்தர்வன் அவர்களுக்கு,

    எனது வயது வெறும் 22. நானோ இலங்கையில் இருக்கிறேன். இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன். மிகச்சிறியவன்.. என்னால் இப்படி தங்களுடன் பழைய புராதனமான ..காணக்கிடைக்காத சம்ஸ்கிருத நூலட்களையெல்லாம் ஆதாரம் காட்டித் தொடர்ந்து விவாதிப்பது மிகக் கடினமானது.. ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன்..

    காணக்கிடைக்காத.. எங்கெங்கோ இருக்கிற அந்த புத்தகத்தில் இருக்கிறது… அந்தப் பாஷ்யக் காரர் சொன்னார் இந்தப் பாஷ்யக் காரர் சொன்னார் என்றெல்லாம் சொல்லி அவற்றை எல்லாம் நம்ப வேண்டும் என்றால் .. யாமுனாச்சார்யார் சொன்னதை நம்ப வேண்டும் என்றால்..??? ஏன் சங்கரமடத்து ஆவணங்கள் சொல்வதை நம்பக்கூடாது..?

    பல நூற்றாண்டுகளாகப் பல்லாயிரக் கணக்கானவர்களின் நம்பிக்கைக்கும் வணக்கத்திற்கும் உரியதாக விளங்குகிற காஞ்சி சங்கரமடத்து ஆவணங்களை மட்டும் ஏன் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்?

    ஏதேதோ நூல்களில் பிரபலம் குறைந்த பாஷ்யக் காரர்கள் சிலர் சொன்னதை ஏற்றுக் கொள்ளலாம் என்றால் காஞ்சித் திருமடத்தின் வரலாற்றையும் குரு பரம்பரையையும் ஏன் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்..?

    சிறியேன் இவ்வாறு கேட்பதில் தவறிருந்தால் மன்னிக்க வேண்டும்.. பல்லாயிரக்கணக்கானவர்களின் பல நூற்றாண்டு நம்பிக்கையை ஆய்வு செய்கிற போது அதற்கு ஆதாரங்களைச் சேர்ப்பதே சிறப்பன்றி.. அதற்கு விரோதமானவற்றை எல்லாம் ஒருங்கே காட்டிக் குழப்பி விடுவதல்லவே.. ?

    சிறியேன் கருத்தில் குற்றம் இருப்பினும் குணம் கொண்டு பொறுத்தருளப் பிரார்த்திக்கிறேன்.

    அன்பின்
    தி.மயூரகிரி சர்மா

  132. மதிப்பிற்குரிய அன்பர் திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு,

    நீங்கள் கேட்கும் கேள்வியில் எந்தத் தவறும் இல்லை. புரிந்துக் கொள்வதற்குப் பொறுமையான ஆலோசனை வேண்டும்.

    நான் பெரிய பண்டிதனும் அல்லன். நான் இருப்பது வேறு தேசத்தில் – வேறு கண்டத்தில் பல ஆயிரம் கி.மீ. தொலைவில். பழைய புத்தகங்களின் scanned வடிவங்கள் பல Digital Library of India, https://www.archive.org போன்ற online library-களில் உள்ளன. இவ்விஷயம் குறித்த என்னுடைய அறிவு முழுக்க முழுக்க அப் புத்தகங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதில் விளைந்தது. இதை நீங்களும் செய்யலாம்.

    ஒரு இயக்கம் ஒரு ஆவணத்தை வெளியிட்டு அதில் “இத்தனை ஆண்டு காலம் பழையது” என்று இருந்தால் அது தானாகவே உண்மையாகி விடாது — எவ்வளவு பெரிய செல்வாக்கு வாய்ந்த இயக்கமாக இருந்தாலும் சரி.

    மேற்கண்டபடியான claim of historicity உண்மையாக இருக்கவேண்டுமென்றால் அதற்கு அந்த இயக்கத்திற்கு வெளியில் சான்றுகள் இருக்க வேண்டும்.

    காஞ்சி மடத்தின் பீடாதிபதிகள் பட்டியலில் பிரபல பிராசீன அத்வைத ஆச்சாரியார்கள் பலர் உள்ளனர். ஆனால் பல பதிப்பகங்கள் மூலம் வெளிவந்துள்ள அவர்களுடைய படைப்புகள் எவற்றிலும் அவர்களைக் காஞ்சி மடத்துடன் தொடர்புப்படுத்துவதற்குச் சான்றுகள் எதுவும் இல்லை. அப்படி அவர்களது படைப்புகளில் இருந்தால் சுட்டிக் காட்டவும்.

    சங்கரர் காலம் தொடங்கி பதினைந்து பதினாறாம் நூற்றாண்டு வரை குருபரம்பரைப் பட்டியலில் உள்ள சர்வஞாத்மர், சுரேஸ்வரர் போன்ற பிரபல அத்வைதிகளைக் குறித்து “காஞ்சி மடத்தில் இன்னாராகிய ஆச்சாரியார் இன்ன இன்ன ஆண்டுகளில் பீடாதிபதியாக விளங்கினார்கள்” என்பது போன்ற செய்தியைக் கொண்ட கல்வெட்டுச் சான்றுகள் அல்லது வேறு dated historical material (in the form of manuscripts) இருப்பதாகவும் தகவல் இல்லை.

    சங்கரமடத்து ஆவணங்கள் என்று குறிப்பிடுகிறீர்கள்… அந்த ஆவணங்கள் எக்காலத்தவை? அவை அக்காலத்தவை எனக் கருதுவதற்கு ஏதேனும் வரலாற்றுச் சான்று உள்ளதா அல்லது அது நம்பிக்கை விஷயமா? என்ற கேள்வியையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

    “பிரபலம் குறைந்த பாஷ்ய காரர்கள்” என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்… அவர்கள் இன்று பிரபலம் குறைந்தவர்களாக இருப்பது இன்றைய வெட்கக் கேடு.

    விமுக்தாத்மர் என்பவர் எழுதிய இஷ்டசிட்தியில் உள்ள விளக்கங்களையே வைத்து ஸ்ரீராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தில் அத்வைத மகாபூர்வபக்ஷ பகுதியைச் செய்துள்ளார். இது அவர் காட்டும் மேற்கொளிளிருந்தும், ஸ்ரீ வேதாந்த தேசிகருடைய படைப்புகளிலிருந்தும் தெரிகிறது.

    மதுசூதன சரஸ்வதி மா மா பெரும் பண்டிதர்… பல நூல்களையும் இயற்றியவர். பகவத் கீதைக்கு மாபெரும் வியாக்கியானம் செய்தவர். வியாச தீர்த்தருடன் அவர் நடத்திய விவாதங்கள் அத்வைத-த்வைத விவாதத்தின் மிக முக்கியமான அம்சங்களை எடுக்காட்டுபவை. அவரைப் பற்றியும் இன்றைக்கு எவரும் கண்டுகொள்வதில்லை.

    பிரகாசாத்ம என்பவர் “விவரண பிரஸ்தானம்” என்னும் அத்வைத வேதாந்த சம்பிரதாயத்தை உருவாக்கியவர். இதைப் போல வாசஸ்பதி மிஸ்ரர் என்ற பண்டிதர் “பாமதி பிரஸ்தானம்” என்ற பாணியை உருவாக்கியவர். இவ்விருவருடைய படைப்புகளையும் பிற்கால அத்வைத ஆச்சாரியார்கள் (காஞ்சி மடம் குறிப்பிடும் ஆனந்தஞானர் உட்பட) பெருமதிப்புடன் மேற்கோள் காட்டி வருகின்றனர்… ஆனால் இன்றைக்கோ பிரகாசாத்மரும் வாசஸ்பதி மிச்ரரும் “பிரபலம் குறைந்த பண்டிதர்கள்” என்று நீங்கள் கூறும் பட்டியலில் தான் சேர்க்க வேண்டிவரும்!!

    சங்கரரையே எடுத்துக்கொள்வோம். எத்தனை பேர் அவருடைய பகவத் கீதா பாஷ்யத்திலும் உபநிஷத் பாஷ்யத்திலும் ஆர்வம் காட்டுகின்றனர்?

    // பல்லாயிரக்கணக்கானவர்களின் பல நூற்றாண்டு நம்பிக்கையை ஆய்வு செய்கிற போது அதற்கு ஆதாரங்களைச் சேர்ப்பதே சிறப்பன்றி.. அதற்கு விரோதமானவற்றை எல்லாம் ஒருங்கே காட்டிக் குழப்பி விடுவதல்லவே.. ? //

    “பல நூற்றாண்டு நம்பிக்கை” என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும், மக்களுள் பெரும்பாலானோர் நம்பிக்கையே சரி என்பது அறிவியலுக்கு ஒவ்வாது. அறிவியலுக்கு ஒவ்வாத நம்பிக்கையை வேதம் ஏற்றுக்கொள்வதில்லை.

    “அதற்கு ஆதாரங்களைச் சேர்ப்பது” என்று நீங்கள் குறிப்பிடுவது அந்த அந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் செய்ய வேண்டியது. மாறாக, இன்று வரை மீண்டும் மீண்டும் “2500 ஆண்டுகள் வரலாறு” என்னும் பழைய பிரச்சாரத்தைச் செய்துக்கொண்டிருக்கின்றனர்: https://articles.timesofindia.indiatimes.com/2009-09-05/chennai/28061425_1_kanchi-mutt-coffee-table-book-acharyas

  133. ஆதி சங்கரரை பற்றிய கால ஆராய்ச்சி ஒரு வெட்டி வேலை என்றே நான் கருதுகிறேன். ஆதி சங்கரருக்கு முன்னரே இந்துமதம் இருந்தது. கொள்கைகளை பற்றி விவாதிப்பது நல்லது. அதை விடுத்து கால ஆராய்ச்சி செய்வதால் ஒரு உபயோகமும் இல்லை.

    நம் நாட்டில் சரித்திரம் எழுதுவதற்காக விளம்பரம் தேடும் பழக்கம் அந்த காலத்தில் கிடையாது. தெய்வத்தமிழ் புலவன் திருவள்ளுவன் , உள்ளத்தை உருக்கும் தேன் “திருவாசகம் “, எழுதிய பெரியோர்கள் தங்கள் வாழ்க்கை வரலாறையோ, அல்லது தங்கள் நூல்களில் ஒரு சிறு சுய குறிப்பு கூட எழுதவில்லை.

    எனவே, சரித்திரம் எழுதாத மனிதர்கள் நம் நாட்டில் வாழாதவர்கள் என்று சொல்லி முடிவு கட்டிவிட முடியுமா?

    மீண்டும் சொல்கிறேன், கால ஆராய்ச்சியால் ஒரு பயனும் இல்லை. நான் சொல்வது தவறு என்று கருதினால் மன்னிக்கவும்.

  134. Respected fellow participants, pardon me for writing in English.

    An issue per se, felt as unsettled, never gets buried under the carpet. Discussion on same, may at best, is postponed and not altogether uncared-for. Cause, a researcher here or there is after the issue collecting relavant materials and putting his mind thereupon. Every now and then, when significant materials are gathered and sufficient conclusions there from could be arrived at, it is followed up with a write up.

    Thus said, an issue of this nature is, agreeably volatile, and has the capability of blurring the values of faith of a person.

    I did not attempt to analyse the issue first hand but always followed the deliberations of elite. Though, I do not wish to point out the issues or personalities per se, different respected people have deliberated upon different issues, with varying degree of logical methodologies.
    At one point of time, after having read materials of many stalwarts on this subject, I sort of felt like having hit a point of no return and my faith also was getting blurred. But further cool readings on the topic with out content of bias eased me out. Irrespective of whatever conclusions arrived at from these deliberations, my respect for yatis belonging to various shankara maths is strong and is totally undisturbed by undercurrents of any of the conclusions.

    Only, the attitude shall be totally kept away from faith. Every piece of available evidence need to be subjected to logical scrutiny for arriving out proper conclusions.

    One such external evidence. For BCE date conclusions, a verse from “Jina Ramayana” explaining the date of Shankara is considered. Right now, I do not have it, but one can easily get it over the net. The verse is so beautifully and twistfully written and considering the fact that it is from an “avaidika darshana”, I was awestruck and it was compelling enough to accept the same prima facie.

    Further, readings raised questions:
    1. Why should a “Jina Ramayana” on the first instance attempt to quote the date of shankara and that too why so twistfully?
    2. Whether, a original manuscript of the book could be obtained for scrutiny of researchers?

    To above questions, ofcourse, one may be able to give positive replies to the former, reply to the later is negative.

    Here comes the attitude.

    Since, original manuscript of the book could not be obtained, the verse howsoever important, it may be, could not be taken as conclusive proof, since it is not quoted from undisputable source. HOWEVER, IN FUTURE, IF THE ORIGINAL MANUSCRIPT IS OBTAINED, THE CONCLUSIONS NEED TO BE REDRAWN.

    Further, update from the instance, before analyzing a particular evidence, first of all, question its source and get confirmation as to the reliability of source.

    Thus said, it is almost impossible that in foreseeable future, an undisputable conclusion could be arrived out convincing all concerned. But the researchers would be continuing with their efforts and my humble submission is let faith be as steadfast as research.

    To end with, the adjective “coffee table book” added to the title of the book by times of india, is atrocious. But one can expect only this much of courtesy from the so called secular print media.

  135. Respected Shri Krishnakumar and others,

    // Thus said, an issue of this nature is, agreeably volatile, and has the capability of blurring the values of faith of a person. //

    That is the reason why faith has to be based on Pramanas recognized by all Acharyas (belonging to all traditions) of yore. It is a time-tested fact that such Pramanas lend themselves to any kind of honest unbiased scientific and historical scrutiny. Plus who, other than our enemies, wants us to be the laughing stock of researchers doing valid work?

    For one thing, I have never understood why this or that religious institution insists on history to convince its followers. In light of evidences contrary to such claims, it is a very slippery and dangerous thing to do… like you yourself have pointed out that values of faith can get blurred once scrutiny is applied.

    Having said that, Sanatana Dharma overall has an incontrovertible history… nobody has yet dared to doubt the historicity of the major philosophical works of various Acharyas – from Vyasa, Shankara, Ramanuja, Meykkandar, Madhva, Appayya Dikshita; nobody has yet dared to doubt the modes of temple worship — because there is overwhelming historical evidence in support of those.

    And granted that all these are now available in public domain, it will be impossible to erase these evidences. Why then, if a Hindu needs solace and comfort in historicity, such a Hindu not resort to these hard facts as pillars of his faith rather than anything else?

    // One such external evidence. For BCE date conclusions, a verse from “Jina Ramayana” explaining the date of Shankara is considered. Right now, I do not have it, but one can easily get it over the net. The verse is so beautifully and twistfully written and considering the fact that it is from an “avaidika darshana”, I was awestruck and it was compelling enough to accept the same prima facie. //

    It appears that the reference above is entitled “Jina Vijaya”: https://trueindianhistory-kvchelam.blogspot.com/2009/04/age-of-sri-adi-sankaracharya.html

    The reference says Kumarila Bhatta lived in 6th century BCE. How can this be possible when we have Kumarila citing Kalidasa’s Abhijnana Shakuntala, as recorded in his own work, Tantravarttika?

    // HOWEVER, IN FUTURE, IF THE ORIGINAL MANUSCRIPT IS OBTAINED, THE CONCLUSIONS NEED TO BE REDRAWN. //

    If such a manuscript exists (and that it dates to very early times), then we are left out with contradictory material which is also historical. Then, it becomes a matter of choice and no consensus on the date of Shankara can be established.

    // Only, the attitude shall be totally kept away from faith. Every piece of available evidence need to be subjected to logical scrutiny for arriving out proper conclusions. //

    //Since, original manuscript of the book could not be obtained, the verse howsoever important, it may be, could not be taken as conclusive proof, since it is not quoted from undisputable source.//

    I humbly salute the attitude expressed by the above statements.

  136. … to add one more point:

    // HOWEVER, IN FUTURE, IF THE ORIGINAL MANUSCRIPT IS OBTAINED, THE CONCLUSIONS NEED TO BE REDRAWN. //

    A re-investigation will require more — the establishment of one of the following propositions without resorting to speculative means such as “argumentum ex silentio”:

    (1) The existence of a single manuscript which can be conclusively dated to be before 7th/8th century CE.

    or

    (2) A critical edition drawn from several independent manuscripts (in order to preclude the possibility of textual extrapolation) in addition to some other textual evidences so that the work can be dated to be before 7th/8th century CE.

    Otherwise , the existence of a such a manuscript, by itself, may not give enough grounds for a re-investigation into the 7th/8th century CE date, other than to logically conclude that the author of the work in the manuscript has erred.

  137. Dear Sri Gandharvan,

    My above premise should have been like

    HOWEVER, IN FUTURE, IF THE ORIGINAL MANUSCRIPT IS OBTAINED, RE INVESTIGATION OF THE FACTS NEED TO BE CARRIED OUT WITH AN OPEN MIND.

    Since I am in a hurry and would be out of station, I would be sharing my thoughts after a weak on your last point.

  138. இது ஓர் அருமையான ஆராய்ச்சித் தொகுப்பு.

    ஸ்ரீ கந்தர்வன் அவர்களுக்கு நன்றி.
    சில எழுத்துப்பிழைகளையும் , மண்டந மிச்ரர் / ஸுரேச்வரர்
    பெயர்க்குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்.

    பா⁴மதி – ஒளி பொருந்தியது
    பாமாதி தவறு.
    உதாயனர் , உதயநர் என்றிருக்க வேண்டும்.

    நைஷ்கர்ம்ய ஸித்தி ஸுரேச்வரர் எழுதியதே
    என்பதில் ஐயத்துக்கு இடமில்லை. ஸகாம கர்மங்களே
    முடிவானவை என இருந்தவரை நிஷ்காமத்தால்
    ஸித்தி என்று விதி எழுதவைத்து விட்டது என்று
    வேடிக்கையாகக் கூறுவர்.

    நண்பர் ஸ்ரீ ஸாரங்க் முன்வைத்த ஆதாரம் அபூர்வமானது.
    யோகாசாரப் பிரிவு தோன்றிய காலம் சங்கர கால நிர்ணயச் சிக்கலைத்
    தீர்க்கிறது.

    எத்தனைதான் விவாதித்தாலும் அகச்சான்றுகள் ஸ்ரீ கந்தர்வன் அவர்களின் முடிவுக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளன.

    நண்பர் ஸ்ரீ பாலசந்திரனின் கருத்து ஏற்புடையதன்று;
    ’ ந ஹி ந ஹி ரக்ஷதி காலநிர்ணய விவாத: ‘ என்பதும் தவறு.
    ’ ஸங்கணகோ ந ஹி ரக்ஷதி ‘ என்று இவர் விலகி இருப்பதுதானே ?
    முறையான, நடுநிலை பிறழாத வரலாற்றுத் தொகுப்பு
    ஒவ்வொரு தேசத்துக்கும் கட்டாயம் வேண்டும்

    தேவ்

  139. அன்புள்ள ஸ்ரீ. தேவ்,

    தங்கள் பாராட்டுக்களுக்கும் கருத்திற்கும் நன்றி. ஆம். எழுத்துப்பிழைகள் சிலவற்றைத் தவிர்த்திருக்கலாம். என்ன செய்வது? “பாமாதி”, “குமரீல”, “உதாயன” என்று சொல்லியே பழக்கம் அதனால் கவனமின்றி அப்படி எழுதி விட்டேன். சரியாக proof read பண்ணவுமில்லை.

    // மண்டந மிச்ரர் / ஸுரேச்வரர்
    பெயர்க்குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்.//

    எந்த இடத்தில்? கட்டுரையில் சொல்கிறீர்களா? அல்லது மருமொழிகளிலா?

  140. Adi Sankara is referred in the tradition of Bharat as the founder of Shanmatas (Six deities or paths). Caves sculptures have been found in Tiruchi, depicting all the six deities within one structure. These sculptures have been dated to 6th century A.D (reign of Mahendra Varma).

    >> Can you provide me with details of this?.IMHO.. Adi sankara never did shanmatha sthApanA.The shanmathA concept equating to establishing religions(mathA== religion) of siva vishnu ganapathi subramanya devi and surya is utterly funny.

    My understanding is that Adi shankarA was one of the vedAntha AchArya who used budhist terminology and concepts to explain vedAnthA.

  141. gandharvare, ungaL ArAicci pArvaiyaiyum maRRorgaLukku badil ezhuthuvadil porumaiyaiyum pARaTTukiren!

  142. I am really very sad that inspite of Sri AdiSankara’s teaching on unstable nature of this universe the assumed protagonists do not debate or discuss but engage in proselitisation. The historical perspective is different from adherence to theology. Thwarting whole proselitisation centers around victory over Buddhism the poison injected by British historians and taken to be true by all. It is a complete historical nonsense to say that only because of Kumarila and Sankara that Buddhism vanished. The real history is otherwise. There is complete difference between Tamilnadu and rest of India to behavior approach. As on today even two thousand years ago North India strictly followed Tolkappiar dictum “Ulagam enpathu ooyarnthor matte.” Hence theological discussions were held among intellect only. As long as Grammar works like Katayana and Panini held sway theology flourished. With Gunadya’s Brihatkatha, Hala’s Gata Sattasi and Bhasa’s entry followed by Bharavi etc., the focus shifted to entertainment. Buddhist theology ended by fifth century AD. Hence it is futile to say Advaitam scoured over Buddhism. Another saddest point is complete neglect of Tamil literature. Maravarman Arikulakesari otherwise known as Ninraseer Nedumaran in his inscription says that one Somayaji well versed in VEDANTHA AND SIDDHANTHA was brought from Chola country to establish a Siva temple. In Tamilnadu from Sangam period different kinds of theologies existed. Manimekalai gives a superb details of them. Further Advaita was known as Sharirika Mimamsa Bhagavatpadiyam etc.Siddhanantha Bhattaraka is referred in Vira Rajendrachola’s inscription and during Aditya Chola period there was intense activity with Bhashyam made by Venkatanatha in Rig Veda. Hence Manukula Aditya is Aditya Chola only. Further there is complete misconception about Brahmins of Tamilnadu. Wherever Saivite Brahmins were referred they were referred as Adhi Saivas and Siva Brahmanas. The latter performed vedic sacrifices also. However in the case of Vaishnavaites they were referred as Srivaishnavas only. Hence SivaBrahmanas represented a distinct category i.e., while performing sacrifices they were mimamsakaras and in theology they were Sivatdvaitins. I also bring the famous story of Rights of Tarukavanam associated with Tirnelveli. Another interesting inscription in Kanchipuram Varadarajaswami temple is that of Kulothunga I where the king has created Nivantham for reading BHAGAVATDAVAITAM. FOR FULL details you please go through the article in Tamil Arts academy unknown inscriptions of Kanchipuram Varadarajaswamy temple. Another important point unnoticed was that Cholas had extensive contacts with Gauda kingdom and they patronised only Kalamukha sect of Saivism. The three schools Advaita Vishitadvaita and Dwaita got prominence only during Vijayanagar period. Generally after thirteenth century AD there was complete collapse and hence intellectul war became war of fame and property. Hence with large volume of data on inscriptions and other corroborative evidence there was no specific impact of Sri Sankara and SriRamanuja upto the invasion by Malik Kafur. The reference to Sri Kumarila is irrelevant since he was stated to belong to Godavari region but never refers to Tamil but only Andhra Dravida. Further the entire North Indian literature did not take cognizance of Tamil as a separate language and Adhi Sankara’s hailing from Kerala and belonging to Namboodri is not tenable since there were only Cholia Brahmins but not Namboodris during eighth century AD. AS PER the inscriptions Kerala Brahmins are referred as Brahmins of Malainadu. There is no necessity for going into the historicity of Yuga Purushas and we have to limit ourselves to theology only. Limiting them to AD/BC and quarrelling over it is childish.

  143. श्रुतिस्मृतिपुराणानामालयं करुणालयम् ।
    नमामि भगवत्पादशङ्करं लोकशङ्करं ॥

    மிக விரைவில், ஸ்ரீமத் ஆதிசங்கரபகவத்பாதருடைய ஜெயந்தி உத்ஸவம் நடைபெறவுள்ளது. எனவே, அது பற்றிய சிந்தனை வந்ததால், இன்றைக்கு மீண்டும் ஒரு முறை ஸ்ரீமான். கந்தர்வன் அவர்கள் எழுதிய இக்கட்டுரையையும், தொடர்ந்து வந்த அனேகமான மறுமொழிகள் பலவற்றையும் படித்துப் பார்த்தேன்.

    இரண்டாண்டுகளுக்கு முன், எனக்கு இருந்த கருத்தை பிற்பகுதியில், மிகவும் விரிவாக பதிவு செய்தேன். அதற்கு கூட மரியாதைக்குரிய கந்தர்வன் அவர்கள் சில ஆட்சேபனைகளை முன் வைத்தார்.
    அதில் முக்கியமானது என்ன எனில்,
    //இப்படி பூர்வர்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும்பொழுது, சர்வஞாத்மர் சங்கரருடைய சம காலத்தவர் என்று கொள்ள வேண்டுமெனின், சங்கரரும் அவர் சீடர் சுரேச்வரரும், சங்கரரைக் கண்டித்த பாஸ்கரரும், சங்கரருக்கும் பாச்கரருக்கும் இடைப்பட்ட ஸ்ரீவத்சாங்கர் என்பவரும், பாச்கரரைக் கண்டித்த விமுக்தாத்மரும், விமுக்தாத்மரைப் பிரமாணமாக எடுத்த சர்வஞாத்ம முனிகளும் எல்லாம் சம காலத்தவர் என்று கொள்ள நேரிடும். இது நம்பத்தக்கதாக இருப்பதாகத் தெரியவில்லையே?//

    இந்தக் கருத்துக்கு கூட, ஏன் அப்படி ஏறத்தாழ சமகாலத்தில், தத்துவவிசாரம் மிகவும் முக்கியமாக விளங்கிய காலத்தில் பல்வேறு ஆச்சார்யார்கள் வாழ்ந்திருக்க முடியாது? என எண்ணத் தோன்றுகின்றது.

    தவிரவும், சங்கரபகவத்பாதருடைய சீடரே சுரேஸ்வரர், என்பதும், சுரேஸ்வரருடைய சீடரே சர்வஞாத்மேந்திரசரஸ்வதி என்பதும் ஸ்ரீ மட வரலாறு.

    ஆக, ஒரு நூறாண்டு காலம் இவ்விருவருக்கும் இருந்திருக்கலாம். ஆய்வுப்படி பொ.பி 550களில், ஆச்சார்ய பகவத்பாதர் அவதரித்ததாக கருதினால், சர்வக்ஞாத்மர் பொ.பி 650ல் சித்திபெற்றிருக்கலாம். இந்த நூறாண்டு கால இடைவெளியில், இவ்வளவு பேரும் வாழ்வது சிரமமான ஒன்றல்ல.. இவர்களைப் போல, இன்னும் ஏராளமான தத்துவவிசாரம் செய்பவர்களும் வாழ்ந்திருக்கலாம்.. தவறல்லவே…

    இரண்டாவது இப்படியும் சிந்திக்கலாம்..

    காஞ்சி மடத்துக்குறிப்புகளின் படி, பகவத்பாத சங்கரர் பாரதத்தின் கிழக்கே கோவர்த்தனமடத்தை பூரி ஷேக்த்திரத்தை அடிப்படையாக கொண்டு யஜூர் வேதத்தை காப்பாற்றவும்,

    மேற்கே துவாரகா மடத்தை துவாரகா ஷேக்த்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஸாமவேதத்திற்காகவும்,

    வடக்கே ஜ்யோதிர் மடத்தை அலக்நந்தா ஷேக்த்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அதர்வண வேதத்திற்காகவும் ஸ்தாபித்து

    தெற்கே ஸ்ரீ சாரதாமடம் என்ற காஞ்சி காமகோடி பீடத்தை இராமேஸ்வர மஹாஷேக்த்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ரிக் வேதத்திற்காகவும் ஸ்தாபித்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    ஆக, இதில் சிருங்கேரிமடம் பற்றிய செய்தி ஒன்றும் இல்லை. சிருங்கேரி மடக்குறிப்புகளில், காஞ்சிமடம் பற்றிய செய்திகள் இல்லை. ஆக, இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று ஏதோ ஒரு வகை நெருக்கம் கொண்டன என்பது புலனாகிறது.
    மற்றையது, சிருங்கேரி மடம் யஜூர் வேதத்தை அடிப்படையாக கொண்டது என்றால், ரிக் வேதத்திற்கு எது மடம்..?

    இராமேஸ்வரமே சாரதாபீடத்தின் ஷேக்த்திரமாக சொல்லப்பட்டிருக்கிறதால், இராமேஸ்வரத்திற்கும் மடத்திற்கும் தொடர்பு இருக்க வேண்டும்.
    கும்பகோணத்தில் எக்காலம் தொட்டோ காஞ்சி மடத்துடன் சம்பந்தம் இருக்கிறது..
    ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்கியமான மடங்களைக் காட்டிலும் கேரளாவில், சங்கரர் வழி அத்வைத மடங்கள் உள்ளன.

    //கேரளத்தில் நடுவில் மடம், தெக்கே மடம் என்று இரண்டு அத்வைத மடங்கள் உண்டு. பல பழைய அத்வைத நூல்களின் பழஞ்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டு அச்சிடப்பட்டு வந்துள்ளன. ஆதி சங்கரர் வரலாற்றையும் பணியையும் பற்றி அறிந்துக்கொள்ள இவ்விரு மடங்களின் ஆவணங்கள் மிக முக்கியமென்று கருதுகிறேன்.//
    என்று நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    எனவே, நான் இப்பொழுது கருதுவது என்ன எனில், சங்கரபகவத்பாதர் பொது சகாப்தம் அல்லது கிறிஸ்துவுக்கு பின், 500களின் பிற்பகுதி அல்லது 600களின் முற்பகுதியில், தோன்றியிருக்க வேண்டும்.

    நான்கு ஆம்னாய பீடங்கள் என்ற வகையில், தெற்கே காஞ்சி மடத்தை ரிக்வேதத்திற்காக ஸ்தாபித்திருக்க வேண்டும்.

    ஆனால், தென்னகத்தில் யஜூர்வேதம், சாமவேதம், அதர்வவேதம் என்பனவும் சிறப்பாக காப்பாற்றப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்த (ஏனெனில், வேற்று நாட்டவரின் ஆக்கிரமிப்பிலிருந்து ஓரளவேனும் தப்பிக்க கூடிய பகுதி தென்னகமே என்பதை உணர்ந்து கொண்டு) பகவத்பாதரின் சீடரான சுரேஸ்வரர், அல்லது சர்வக்ஞாத்மேந்திரர் சிருங்கேரியில் யஜூர்வேதத்திற்காகவும், இராமேஸ்வரத்தில் சாமவேதத்திற்காகவும், கேரளாவில் (சேரதேசத்தில்) அதர்வவேதத்திற்காகவும், பின்னர் கும்பகோணத்தில் சிறப்பாக ரிக்வேதத்திற்காகவும் மடங்களை ஸ்தாபித்து, காஞ்சி மடத்தை சர்வக்ஞபீடம் என்ற வகையில், நான்கு மடங்களுக்கும் ஆதாரமாக வைத்திருந்திருக்கலாம்.

    அந்த வகையில், அன்று தொட்டு இந்த ஐந்து மடங்களுக்கும் ஆச்சார்யர்கள் காஞ்சீ காமகோடிபீடத்திலேயே தீட்சை வழங்கப்பட்டவர்களாக “காமகோடி சங்கராச்சார்யர்” என்றே அழைக்கப்பட்டிருக்கலாம்.

    எனினும், அடுத்த நூறு, இருநூறு ஆண்டுகளில் கேரளா, இராமேஸ்வர மடங்கள் சில பல காரணங்களால், தனித்துவமின்றி காஞ்சி மடத்துடன் இணைந்து விட, சிருங்கேரி, கும்பகோணம், காஞ்சி என்ற மூன்று மடங்களுமே தொடர்ந்து செயற்பட்டிருக்கலாம்.

    இந்த நிலையில், தான் பொ.பி 800களில் அபிநவசங்கரர் அவதரித்திருக்கலாம். அது வரை ஆவணப்படுத்தப்படாது, குழும்பியிருந்த காஞ்சி மடத்தை செம்மைப்படுத்தி அவர் பணியாற்றியிருக்கலாம். ஆக, சங்கரருக்கும் அவருக்கும் இடையில் 250 ஆண்டுகள் இருந்தாலும் அக்காலத்தில் 05 மடங்கள் இருந்ததாலும், அவற்றில் சிலவற்றில் இல்லறத்தார் துறவறம் மேற்கொள்ளும் அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருத முடிவதாலும், 37 ஆச்சார்யர்கள் இருந்திருக்ககூடும்.

    இவர்களில் ஒரே நேரத்தில் 05,06க்கு மேற்பட்டவர்கள் இருந்திருக்கலாம்.

    இவர் காலத்தில், அக்கால நிலமையை முன்னிட்டு சிருங்கேரி மடத்தை தனித்துவமாக இயங்க அனுமதி வழங்கியிருக்கக் கூடும். ஆக, அது வரை சிருங்கேரியிலிருந்த ஆச்சார்யர்கள் காஞ்சி மட பட்டியலுக்குள் வந்து விட, அதற்குப் பின்னர், சிருங்கேரியில் எழுந்தருளியிருந்த ஆச்சார்யர்களையே சிருங்கேரி மடம் தம் ஆச்சார்யர்களாக காட்டியிருக்கலாம். இவ்வாறு சிருங்கேரி மடத்திற்கு தனித்துவமளிப்பதற்கு முன்னரே, பகவத்பாதர் சிருங்கேரியில் சாரதையை பிரதிஷ்டை செய்து ப்ருத்வீதரரை அங்கே ஆச்சார்யராக எழுந்தருளும் படி செய்தமை காரணமாயிருக்கலாம்.

    காலப்போக்கில், கும்பகோணமடம் இயல்பாகவே காஞ்சிமடத்துடன் இணைந்திருக்கும். இவ்வாறு முன்னரே கும்பகோணத்தில் இருந்ததாலேயே காஞ்சி புரத்தில் இருப்பது சிக்கலான போது, மடம் இயல்பாக கும்பகோணத்திற்கு நகர்ந்திருக்க வேண்டும்.

    ஆக, அதன் பின்னரான அதாவது, அபிநவசங்கரருக்கு (கி.பி 788- கி.பி 840) பிந்தைய காஞ்சி மட வரலாறு, காலம் யாவும் தெளிவாகவே அமைந்திருக்கக்கூடும்.

    இவ்வாறு அபிநவசங்கரர் செய்த முக்கியமான பணியால் காஞ்சி மட வரலாற்றில் அவர் முதன்மையாகப் போற்றப்பட்டிருக்கக்கூடும்.

    இவ்வாறு பல மடத்து ஆச்சார்யர்களது காலத்தையும் ஒருவர் பின் ஒருவராக வைத்து 1500களில், காஞ்சிமடவரலாறு ‘புண்ணியஸ்லோகமஞ்ஜரீ’ ஆகவும், ‘புண்ணிய ஸ்லோக மஞ்ஜரீ மகரந்தம்’ ஆகவும், ‘புண்ய ஸ்லோக மஞ்ஜரீ பரிசிஷ்டா’ ஆகவும், எழுதியதால், காலம் பற்றிய பிரக்ஞை இல்லாத அக்காலத்தில், சங்கரபகவத்பாதரின் காலம் கி.மு500 என்று நம்பியிருக்க வேண்டும்.

    இதனால், தேவையற்ற விதமாக 1000 ஆண்டுகள் வந்து புகுந்திருக்க வேண்டும். இவ்வாறு நீண்டதை தூய்மையான உள்ளமும், உரையும் படைத்த துறவிகள் செய்திருப்பர் என்று நம்புவதற்கு இல்லை. தற்செயலாகவே இது நடந்திருக்கலாம்.

    ஆக, மொத்தமாக நான் நம்புவது என்ன எனில், காஞ்சி மடத்து ஆவணங்களாகட்டும், சிருங்கேரி மடத்து ஆவணங்களாகட்டும் கடந்த ஆயிரம் ஆண்டு கால ஆவணங்கள் மிகச் சரியென்றே நம்பக்கிடக்கிறது. அதற்கு முன்னர் தான் தற்செயலான தவறுகள் ஏற்பட்டிருக்கிறது. அது உடனே பதிவு செய்யப்படாமையாலும் பொ.பி 1500களில் பதிவு செய்யப்பட்டாலும் ஏற்பட்டதென்றே நம்ப வேண்டியிருக்கிறது.

    இவற்றை காஞ்சி, சிருங்கேரி பெரியவர்கள் இப்போதைக்கு ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை எனினும், உண்மை இப்படியிருக்கலாம் என்று கூட நம்ப வேண்டியிருக்கிறது. இது தவிர, ஆச்சார்யர்கள் வேண்டுமென்றே, காலத்தை கூட்டிக்குறைத்து எழுதியிருப்பர் என்று நம்புவதற்கில்லை.

    ஆக, இப்படிச் சிந்திப்பதாலும், இப்படி ஆய்வு செய்வதாலும் வரலாற்றுணர்வுக்கு ஒன்றும் சிக்கல் வராதல்லவா..? ஏன் நாம் இந்தக் கோணத்தில் சிந்திக்கக்கூடாது..?

    நன்றிகளுடன்…
    தி.மயூரகிரி சர்மா
    நீர்வேலி

  144. மன்னிக்க வேண்டும்… இந்தக்கட்டுரையை இன்னும் சில நண்பர்களோடு சேர்ந்து மீள,மீள வாசித்துப் பார்த்தேன்…

    இந்தக்கட்டுரைக்கே அடிப்படை “உபதேச சாஹச்ரி” (Upadesa Sahasri) என்ற கிரந்தத்தை ஸ்ரீ சங்கர பகவத்பாதர் எழுதினர் என்று ஸ்ரீ. கந்தர்வன் அவர்கள் குறிப்பிடுவதே ஆகும்…

    ஆனால், அதற்கு தெளிவான சான்றுகளை அவர் காட்டியதாக இல்லை…

    மொத்தத்தில், இந்த “உபதேச சாஹச்ரி” (Upadesa Sahasri) என்ற கிரந்தத்தை பகவத்பாதர் எழுதவில்லை என்று மட்டும் நிரூபித்து விட்டால், போதும், இந்த கட்டுரையின் காலவரையறை தகர்ந்து விடும்…

    ஆக, இந்தக்கட்டுரைக்கான தரவுகள் போதுமானதாக இல்லை என்றே இப்பொழுது எனக்குத் தெரிகிறது… தரவுகள் கிடையாது விடில், உபதேசசாஹித்ரி பகவத்பாதரால் எழுதப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லாது போனால், பகவத்பாதரின் காலம் 2500வருடங்களுக்கு முன் என்று நம்புவதற்கு தடை ஒன்றும் இல்லை என்பதே என் தற்போதைய அபிப்ராயம்…

    நிறைய தரவுகளைத் தந்ததால், நான் ஒருவனே வித்தியாசம் வித்தியாசமாகவும், ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாமலும் மறுமொழிகள் இடவேண்டி இருப்பதற்கு மன்னிக்கவும்…

    எழுமைப்பிறவிக்கு உறுதுணையாய்
    இலங்கி உடலோடு உயிர்க்கு வரும்
    இன்னல் கெடுத்துப் பரமானந்த
    ஏற்றமுணர்த்தி ஈடேற்றும்
    வளமார் நின் அருள் வாய்
    வாசகத் தேனருவி தனில் நனைந்து
    மருந்தாய் யுணர்ந்து தெளிந்து
    மாந்தி அதனில் உள்ளுறிக்
    கழிபேரின்பச் சுவை நலமே
    காணும் அன்பர்க்கருள் செயவும்
    கலியொடு மாயை இருளகற்றி
    கடவுட்தன்மை காட்டிடவும்
    தொழுதோம் மலர்த்தாள் பகவத்பாத
    தூயோய் வருக ஆதிசங்கர
    தயாளா எம் தனிமுதலே தமிழ்
    நயந்து வருக வருகவே

    தி. மயூரகிரி சர்மா

  145. கால ஆராய்ச்சி என்பது ஒரு விதத்திலும் உபயோகமற்ற ஒன்று. ஏனெனில் காலத்தால் முற்பட்ட எவ்வளவோ விஷயங்கள் இன்று இல்லை. ” பழையன கழிதலும், புதியன புகுதலும் காலவரையினானே “- என்கிறது மூதாதையர் மொழி. நமக்கு தெரிந்து ரேடியோ ( வானொலி) இருந்தது ? இப்போது அதே வானொலி செல்போன் எனப்படும் கைப்பேசிக்குள் காமிரா உட்பட வந்துவிட்டது. டேப் ரிகார்டர்கள் இருந்த இடம் தெரியவில்லை. கால ஆராய்ச்சி செய்தால் , வெளிநாட்டுக்காரன் அங்கீகாரம் தருவான் என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள். வெளிநாட்டுக்காரன் அங்கீகாரம் என்ன அவ்வளவு முக்கியமா ? இந்திரா காந்தி அரசு முதன் முதலில் அணுசக்தியை பூமிக்கடியில் வெடித்து பரிசோதனை செய்தபோது , உலகநாடுகள் என்ன நம்மை வரவேற்றனவா ? வாஜ்பாயி அரசு அணுஆயுத பரிசோதனை செய்தபோது எவ்வளவு புறக்கணிப்பு அறிவிப்புகள் வந்தன பிற நாடுகளிடம் இருந்து ? அவை எல்லாம் என்ன ஆயின ? வலிமை இல்லாத பழமையை விட , வலிமையான புதுமையே தேவை. பழமை புதுமை எதுவாயினும் இப்போது உபயோகமாக இருக்கிறதா என்றுதான் உலகம் பார்க்கிறது. எனவே காலத்தை பார்க்காமல் நல்லதாய் இருந்தால் , புதியதாக இருந்தாலும் ஏற்போம், வரவேற்போம்- பழையதாக இருந்தாலும் சரி இல்லை என்றால் தள்ளுவோம்.

  146. ஏதோ, இக்கட்டுரையில் குழப்பமாக இருக்கிறது… இக்கட்டுரையை பலரும் வாழ்த்தியிருக்கிறார்கள் என்றாலும், கட்டுரையிலுள்ள குறைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள் போலவே, தெரியறது..

    திரு. மயூரகிரி சர்மா அவர்களது மறுமொழியைப் பார்க்கிற போது, இந்தக் கட்டுரை தரவுகளற்றது என்பதும், காஞ்சி மடத்து கருத்துக்களே சரியாக இருந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. நானும் எல்லாவற்றையும் படித்துப் பார்க்கிறேன்…

    எனக்கு சமஸ்கிருதம் தெரியாததால், கொஞ்சம் அங்கங்கே தடுமாற்றமாக இருக்கிறது… என்றாலும் ஏதொ, குழம்பி, குழப்பியிருப்பதாகப் புரிகிறது..

    ஆய்வாளரான கட்டுரையாசிரியர், கந்தர்வன் அவர்கள் ஆதி சங்கரர் கால பின் வரையறை செய்கிற போது ஆதிசங்கரரின் பிரம்மசூத்திரபாஷ்யம், தசோபநிஷத பாஷ்யங்கள், போன்றவற்றை எடுத்துக்கொள்கிறார்… தன் நம்பிக்கைப்படி விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் ஒரு பீடிகை போடுகிறார்.. லலிதா சஹஸ்ரநாமம், சிவ சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரீ, கனகதாராஸ்தவம் எல்லாவற்றையும் மறுக்கிறார்… சரி, போகட்டும்..

    ஆதி சங்கரர் கால முன் வரையறைக்கு எடுத்துக் கொள்ளும் ஒரே நூல் “உபதேச சாஹச்ரி” என்பது மட்டுமே…

    தற்போது பதிப்பில் உள்ள “உபதேச சாஹச்ரி” என்ற கிரந்தத்தை ஸ்ரீ சங்கர பகவத்பாதர் எழுதினர் என்பதற்குப் பல சான்றுகள் கொடுக்கப்படுகின்றன. என்கிறார்… ஆனால், சான்றுகள் போதுமானதல்ல…

    இந்த உபதேச சாஹச்ரி சங்கரரால் எழுதப்படவில்லை என்று புரூவ் பண்ணினால் இக்கட்டுரை முடிவுகள் தகர்ந்து விடும்.. என்று சர்மா அவர்கள் கூடுவதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்…

  147. திரு சர்மா அவர்களே,

    //இந்தக்கட்டுரைக்கே அடிப்படை “உபதேச சாஹச்ரி” (Upadesa Sahasri) என்ற கிரந்தத்தை ஸ்ரீ சங்கர பகவத்பாதர் எழுதினர் என்று ஸ்ரீ. கந்தர்வன் அவர்கள் குறிப்பிடுவதே ஆகும்…

    ஆனால், அதற்கு தெளிவான சான்றுகளை அவர் காட்டியதாக இல்லை… //

    இத்தகைய அபவாதங்களில் இறங்காதீர். கட்டுரையிலேயே தெளிவாக சான்றுகளைக் கூறியிருக்கிறேன். அதைப் பார்க்க மனமில்லையா? உங்களுக்காக இதோ மீண்டும்:

    தற்போது பதிப்பில் உள்ள “உபதேச சாஹச்ரி” (Upadesa Sahasri) என்ற கிரந்தத்தை ஸ்ரீ சங்கர பகவத்பாதர் எழுதினர் என்பதற்குப் பல சான்றுகள் கொடுக்கப்படுகின்றன. அவர் சீடராகிய சுரேஷ்வரர் “நைஷ்கர்ம்ய சித்தி” என்ற தம் கிரந்தத்தில் உபதேச நூலிலிருந்து பல மேற்கோள்களை எடுத்துள்ளார். நைஷ்கர்ம்யசித்தி என்ற நூல் சுரேஸ்வரருடையதே என்பதில் ஐயத்திற்கு இடமில்லாதபடி ஸ்ரீ சர்வஞாத்ம முனிகள் தம் நூலில் மேற்கோள்களை எடுத்துள்ளார். அத்துடன், ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி தம் நூலில் நைஷ்கர்ம்யசித்தி நூற் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். நைஷ்கர்ம்யசித்திக்கு ஞாநோத்தமர் என்னும் பிராசீனரும், உபதேச கிரந்தத்திற்கு ஆனந்தகிரி, ராமதீர்த்தர் முதலிய பிராசீனர்களும் விளக்கவுரைகளை இட்டுள்ளனர். அதுதவிர, பேதாபேத வேதாந்த மதத்தைச் சார்ந்த பாஸ்கராச்சாரியார் தம் பகவத் கீதை உரையில் சங்கரரின் உபதேச கிரந்தத்தில் உள்ள கருத்து ஒன்றை “உபதேச கிரந்தத்தில் இவ்வாறு கூறப்படுகிறது” என்று நூற்பெயரைக் குறிப்பிட்டு அதிலிருந்து ஒரு மேற்கோளையும் காட்டி விமர்சித்துள்ளார். இந்தத் தகவல்களை, “Sengaku Mayeda” என்னும் ஜப்பானிய வரலாற்று அறிஞர் தமது “The authenticity of the Upadesa Sahasri” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அங்கே கண்டுக்கொள்க. அத்தகவல்களை நான் நேராக மூல நூற்களை வைத்துச் சரிபார்த்துவிட்டேன்.

    நான் என்ன கதை கட்டுகிறேன் என்று கூறுகிறீர்களா? அப்படியே நம்பினால் மூல புத்தகங்களிலிருந்து கூட காட்டத் தயார்.

  148. // மொத்தத்தில், இந்த “உபதேச சாஹச்ரி” (Upadesa Sahasri) என்ற கிரந்தத்தை பகவத்பாதர் எழுதவில்லை என்று மட்டும் நிரூபித்து விட்டால், போதும், இந்த கட்டுரையின் காலவரையறை தகர்ந்து விடும்… //

    இப்படியெல்லாம் நம்பிக் கொண்டு இருக்காதீர்கள்.

    உபதேச சஹஸ்ரியை விட்டால் கூட,

    (1) பிரம்மா சூத்திர பாஷ்யத்திலேயே திங்நாகரை சங்கரர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

    (2) சங்கரரின் நேரடி சீடராகிய சுரேஸ்வரர் கூட பிருகதாரண்யக வார்த்திகத்தில் தர்மகீர்த்தியைக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதைக் கட்டுரையிலேயே காட்டியிருக்கிறேன்:

    “த்ரிஷு ஏவ து அவினாபாவாத் இதி யத் தர்மகீர்த்தினா
    ப்ரத்யஜ்ஞாயி ப்ரதிஜ்ஞேயம் ஹீயெதாஸௌ ந சம்ஷய:”
    [பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகம், 4.3.753]

    திரு சர்மா அவர்களே,

    தயவு செய்து “மடத்தின் குறிப்புகளில் இப்படி உள்ளது” என்று இறங்கி விடாதீர்கள். மடங்கள் வெளியிடும் ஆவணங்களின் உண்மை நிலை ராக-த்வேஷமின்றி கால/வரலாற்று ஆராய்ச்சி எனும் உரைக்கல்லில் தேய்த்துப் பார்த்தால் தான் விளங்கும். எதையுமே பரீட்சைக்கு உட்படுத்தும் மனம் வர வேண்டும்.

  149. மிகவும் மரியாதைக்குரிய கந்தர்வன் அவர்களுக்கு,

    தங்களின் ஆய்வு எண்ணமும் எழுத்தும் மிக நன்று… தாங்கள் தொடர்ந்து பதிலளிப்பதற்கு நன்றிகள்..

    ஆனால்,
    எங்களால் தங்கள் கருத்தை உடனே, என்று ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது.. அதற்கான காரணத்தை தாங்களே மிக நன்றாக அறிவீர்கள்…

    // சங்கரரின் நேரடி சீடராகிய சுரேஸ்வரர் கூட பிருகதாரண்யக வார்த்திகத்தில் தர்மகீர்த்தியைக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதைக் கட்டுரையிலேயே காட்டியிருக்கிறேன்:

    “த்ரிஷு ஏவ து அவினாபாவாத் இதி யத் தர்மகீர்த்தினா
    ப்ரத்யஜ்ஞாயி ப்ரதிஜ்ஞேயம் ஹீயெதாஸௌ ந சம்ஷய:”
    (பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகம், 4.3.753)//

    என்று சொன்னால், அடுத்த கட்டம், இந்த பிருகதாரண்ய வார்த்திகம் சுரேஸ்வரரால் தான் எழுதப்பட்டது என்பதற்கு ஆதாரம் உண்டா..? அப்படி எழுதியிருந்தாலும், அதில் இடைச் செருகல் வந்திருக்கலாம் அல்லவா..?

    என்றும் கேட்கலாம் அல்லவா…?

    ஏனெனில், நாம் மரியாதையுடன் ஏற்றுக் கோள்கிற சிருங்கேரி மடம் தவிர்ந்த, காஞ்சி காமகோடி பீடம்(69 பீடாதிபதிகள்) மட்டுமல்லாது, கோவர்த்தன பீடம் (144 பீடாதிபதிகள்) த்வாரகாபீடம் (77பீடாதிபதிகள்), ஜ்யோதிஷ்மதி பீடம், இவை எல்லாம் ஆதிசங்கரரின் காலம் கி மு. (பொ. மு) என்றல்லவா சொல்கின்றன?

  150. திரு சர்மா அவர்களே,

    // எங்களால் தங்கள் கருத்தை உடனே, என்று ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது.. அதற்கான காரணத்தை தாங்களே மிக நன்றாக அறிவீர்கள்… //

    ஏன்? நான் விஷ்ணு பக்தன், அதனால் நேர்மை இல்லாமல் ஒரு உள் நோக்கத்துடன் எழுதுகிறேன் என்கிறீர்களா?

    // அடுத்த கட்டம், இந்த பிருகதாரண்ய வார்த்திகம் சுரேஸ்வரரால் தான் எழுதப்பட்டது என்பதற்கு ஆதாரம் உண்டா..? அப்படி எழுதியிருந்தாலும், அதில் இடைச் செருகல் வந்திருக்கலாம் அல்லவா..? //

    “சங்கரர் கி.மு.-வில் பிறந்தார்” என்று கூறும் நூல்களைத் தவிர, மற்றது எல்லாம் இடைச்செருகல் தான் போலும்!

    “கி.மு.-வில் பிறந்தார் என்று சொன்னாள் ஜன ரஞ்சகமாக இருக்கும்” என்று சிலர், யாரும் அண்மைய காலம் வரையில் கேள்விப்பட்டிராத குருபரம்பரை நூல்களை எழுதி வெளியிட்டால் அது சரித்திரம் ஆகாது.

    அத்வைத இலக்கிய வரலாற்றில் “வார்த்திககாரர்” என்றாலே பிருகதாரண்யக வார்த்திக காரராகிய (சங்கரரின் சீடர்) சுரேஷ்வரரையே குறிக்கும் என்பதை அறிவீர்கள். சுரேஷ்வரரின் பிருகதாரண்யக வார்த்திகம் பிராசீன காலத்து தொடங்கி பல அத்வைத நூல்கள் சுரேஷ்வரரின் பிருகதாரண்யக வார்த்திகத்தை மேற்கோள்களாகக் காட்டுகின்றன. ஆனந்தகிரி வார்த்திகம் முழுவதுக்கும் டீகை எழுதியிருக்கிறார். இந்த ஓலைச் சுவடிகள் எல்லாம் பல வைதிகர்களிடமிருந்து பெறப்பட்டு அச்சு ரூபத்திலும் வந்திருக்கின்றன.

    ஏன், காஞ்சி மடமே சுரேஸ்வரர் பிருகதாரண்யக வார்த்திக காரர் தான் என்கிறது.

    இதற்கு மேல் எனக்கு நக்கலாகத் தான் பதில் கூற முடியும்…

    ஒன்று செய்யுங்கள். தற்போது சங்கரருடையதாக ஏககண்டமாக அனைவரும் ஏற்கும் பிரம்ம சூத்திர பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், கீதா பாஷ்யம், விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம், உபதேச சாஹஸ்ரி, இதெல்லாம் எழுதியது ஆதி சங்கரர் இல்லை என்று சொல்லி விடுங்கள். பிரச்சனையே முடிந்தது என்று நிம்மதியாக இருக்கலாம்.

    ஸ்ரீவத்சாங்கர் சங்கரருக்கும் பாஸ்கரருக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்ததாக அனைவராலும் மதிக்கத்தக்க ஆளவந்தார் சித்தி த்ரயத்தில் எழுதியிருக்கிறார். “அட, ஆளவந்தார் எப்படி எல்லாம் உளறுகிறார். சங்கரர் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு, பாஸ்கரரோ கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. கி.மு.-500 -இல் பிறந்த ஒருவரையும் கி.பி.800-இல் பிறந்த ஒருவரையும் சொல்லி, இவர்கள் இருவருக்கும் நடுவில் ஒருவர் இருந்தார் என்றா சொல்வார்?” என்று கேள்வி கேட்டு சிரிக்கலாம்.

  151. ஆதி சங்கரர் மண்டன மிஸ்ரருடன் வாதம் செய்தார் என்று பௌராணிகர்களும் மற்றும் எல்லோரும் ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம். அதன் முன் அவர் மண்டரின் குருவான குமரில பட்டரை சந்தித்தார் என்பதும் எல்லோரும் அறிந்ததே.

    குமாரில பாட்டர் நலந்தா பல்கலை கழகத்தில் புத்த மதம் படித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. நலந்தா தோற்றுவிக்கப்பட்டது ஐந்தாம் நூற்றாண்டு. சுமார் சங்கரர் பிறந்து எழுநூறு ஆண்டுகள் கழித்து. சங்கர பகவத்பாதாள் கீமூவில் பிறந்து எழுநூறு ஆண்டுகள் கழித்து எழுப்பப்பட்ட நலந்தாவில் படித்த குமாரில பட்டரின் சிஷ்யரான மண்டன மிஸ்ரருடன் வாதம் செய்தார் என்பது ஆஷ்ச்சர்யா விஷயம்.

    புத்தபளிதர் என்ற ஒரு பவுத்தர் குமரில பட்டரிடம் வாதம் புரிந்து தோற்றார் என்று பவுத்தர்களே ஒத்து கொள்கிறார்கள் (கொஞ்சம் நேர்மையானவர்கள் பாருங்கள்) . இந்த புத்தபளிதர் பிறந்து வாழ்ந்தது ஐந்தாம் நூற்றாண்டில் என்றும் பவுத்தர்களே எழுதி வைத்துள்ளார்கள்.

    சங்கரர் நான்காம் நூற்றாண்டை சேர்ந்த அசந்கர் தோற்றுவித்த பவுத்த மதத்தை தனது ப்ரிஹதாரன்யாக உபநிஷத் பாஷ்யத்தில் கண்டனம் செய்கிறார். இது கூட இடை சொருகல் என்றால் அப்போ எது தான் ஒரிஜினல் .

    அது மட்டுமல்ல, பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் அத்வைதத்தின் ஆணி வேறான அத்யாச பாஷ்யத்திலும் இந்த யோகாசார பவுத்த மத கருத்தை மேற்கோள் காட்டுகிறார். இந்த பிரகரனத்தில் சங்கர சொல்லும் விஷயத்தை பூர்வபக்ஷி ஜ்யோதிரதிகரந்த்தில் மறுபடியும் பூர்வ பக்ஷமாக வைத்து மடக்குகிறான்.

    என்னது சந்கராசார்யால்அத்யாச பாஷ்யம் செய்யலியா, என்னது சங்கராச்சாரியாருக்கும் அத்வைததுக்குமே சம்பந்தம் இல்லியா…….

    நீங்கள் சொன்னால் காழ்புணர்ச்சி இருக்கும் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று இங்கு சொல்லும் சிலர், சங்கரரின் ஒரு பாஷ்யத்தையும் தொட்டுப்பாற்பதில்லை என்பது தெளிவு. அவ்வளவு தான் அவர்கள் சங்கரருக்கு செய்யும் மரியாதை.

  152. ப்ரம்மஸ்ரீ ஷர்மா மஹாசய,

    ஸ்ரீமான் கந்தர்வன் அவர்களின் இந்த வ்யாசம் சரித்ர ஆதாரங்களின் பாற்பட்டு எழுதப்பட்ட வ்யாசம்.

    இந்த வ்யாசத்தில் அலசப்பட்ட விஷயங்கள் பல நூற்களில் பல ஆய்வாளர்களாலும் அலசப்பட்டுள்ளன.

    பல நூற்களிலும் பல விவாதங்களிலும் இந்த விஷயம் அலசப்பட்டுள்ளது என்றாலும் நூற்கள் பலவற்றிலும் விவாதங்கள் பலவற்றிலும் கடுமையான கசப்புணர்வு விஞ்சி நிற்கும்.

    அதற்கு மாறாகக் கசப்புணர்வு விஞ்சாது மிகக் கறாராக சான்றாதாரங்கள் மட்டிலும் சார்ந்து இந்த வ்யாசத்தைத் தொடர்ந்த விவாதம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

    நான் இந்த தளத்தில் கவனித்த விவாதங்களிலேயே மிகச் சிறந்த விவாதமாக இந்த வ்யாசத்தைத் தொடர்ந்த விவாதத்தை கருதுகிறேன். அதுவும் முக்யமாக ஸ்ரீமான் கந்தர்வன் மற்றும் குமுதன் அவர்களிடையே நிகழ்ந்த அலசல்கள்.

    கால நிர்ணயத்தின் முறைமைகளை மிகத்தெளிவாக வ்யாசம் எடுத்துறைக்கிறது.

    \\\\இந்நூல்களைக் கொண்டு என்ன நிரூபிக்கப்போகிறோம் என்று கேட்டால், அதற்கான பதில் இங்கே: வரலாற்று ஆராய்ச்சியில் “கால முன் வரையறை” (terminus post quem), “கால பின் வரையறை” (terminus ante quem) என்ற இரண்டு வரையறைகளை நிர்ணயித்தல் அடிப்படையான ஒரு அங்கமாகும். \\\\

    கால நிர்ணயத்திற்கு மிகவும் வலுவான ஆதாரம் சேர்ப்பது அகச்சான்று என்பதால் மிகப்பெரும்பாலும் அகச்சான்று சார்ந்த விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன இந்த வ்யாசத்தில்.

    சுதன்வாவின் தாம்ர சாஸனம் ஜினராமாயணச் சான்று போன்ற புறச்சான்றுகளும் ஊடே விசாரிக்கப்பட்டு அவற்றில் உள்ள குறைபாடுகள் தெளிவாக கட்டுடைக்கப்பட்டுள்ளன.

    தாங்கள் குறிப்பிட்டுள்ள விஷயம் :-

    \\\\இந்தக்கட்டுரைக்கே அடிப்படை “உபதேச சாஹச்ரி” (Upadesa Sahasri) என்ற கிரந்தத்தை ஸ்ரீ சங்கர பகவத்பாதர் எழுதினர் என்று ஸ்ரீ. கந்தர்வன் அவர்கள் குறிப்பிடுவதே ஆகும்…\\\\

    வ்யாசத்தைத் தொடர்ந்த விவாதத்தில் முதலாவதான ஸ்ரீமான் சாரங்க் அவர்களின் கருத்தைத் தாங்கள் கவனிக்கவில்லை போலும்.

    ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தில் சங்கரர் மாத்யமக மற்றும் யோகாசார (விக்ஞானவாத) பௌத்த வாதங்களை எதிர்ப்பதைப் பற்றி ஸ்ரீமான் சாரங்க் அவர்கள் கூறுவதையும் கவனிக்க வேண்டும். மாத்யமக ப்ரவர்த்தகரான நாகார்ஜுனர் 1-2ம் நூற்றாண்டு மற்றும் யோகாசார ப்ரவர்த்தகரான அசங்கர் 4ம் நூற்றாண்டு. இவர்கள் கருத்துக்களை சங்கரர் எதிர்த்துள்ளார் என்றால் அவர் இவர்களுக்குப் பிந்தையவர். அப்படியானால் சங்கர பாஷ்யம் முழுதும் சங்கரரால் செய்யப்படாதவை என்று சொல்ல இயலுமா? அல்லது செருப்புக்குத் தகுந்த பாதம் என்ற படிக்கு கிமு திகதிக்கு ஒவ்வாத பாஷ்யப்பகுதிகளை இடைச்செருகல் என சொல்லி விடலாமா?

    ஆக அகச்சான்றுகளில் ஒன்று மட்டும் தான் உபதேச சாஹச்ரி. பௌத்த வாதங்களை நிராகரணம் செய்யும் உபநிஷத் பாஷ்யங்களும் அகச்சான்றுகளில் முக்யம். வ்யாசத்தில் இது அலசப்படவில்லையெனினும் உத்தரங்களில் அலசப்பட்டுள்ளது.

    ப்ரஸ்தானத்ரய பாஷ்யமும் உபதேச சாஹச்ரியும் சங்கரரால் செய்யப்பட்டுள்ளன என்பதை ஆய்வாளர்கள் பொதுவிலே ஒப்புக்கொண்டுள்ளனர் என ஸ்ரீ கந்தர்வன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

    உபதேச சாஹச்ரி சங்கரரால் செய்யப்பட்டதன்று என்று நிறுவ தங்களால் செய்யப்படவேண்டியது அடிப்படை ஆராய்ச்சி. ஆய்வாளர்கள் சில basic premises களை முன்வைத்து ப்ரஸ்தானத்ரயம் மற்றும் உபதேச சாஹச்ரி போன்ற இந்நூற்கள் சங்கரரால் செய்யப்பட்டன என்பதை நிறுவியிறுப்பார்கள் அல்லவா? அவற்றைக் கட்டுடைக்க வேண்டும். அது சுலபமான கார்யம் இல்லை.

    “மேதாவி புருஷோ வித்வான் ஊஹாபோஹ விசக்ஷண:” என்ற விவேக சூடாமணி ச்லோகத்தின் வ்யாக்யானத்தில் ஸ்ரீ சந்த்ரசேகர பாரதி ஸ்வாமிகள் சொன்னபடி தங்களுக்குப் பத வாக்ய ப்ரமாணத்தில் பாண்டித்யம் இருந்தாலோ…… அல்லது பாண்டித்யத்தை சம்பாதனம் செய்து க்ரந்தங்களை பரிசீலனை செய்ய முனைந்து…… அதில் ஆய்வாளர்களின் basic premises…களைத் தாங்கள் கட்டுடைத்தாலோ….. அது ஏற்கப்படவேண்டியதே.

    ப்ருஹதாரண்யக வார்த்திகத்தில் இடைச்செருகல் இருக்கலாம் என்று சொல்லியுள்ளீர்கள்.

    இப்படியெல்லாம் தாங்கள் மேற்சொன்னவை ஹேஷ்யமா அல்லது சான்றாதாரம் சார்ந்த தரவா? கட்டுடைக்கத் தேவையானது ஹேஷ்யமன்று. தரவு. ப்ருஹதாரண்யக வார்த்திகத்தில் இடைச்செருகல் இருக்கலாம் என நான் கேள்விப்பட்டது கிடையாது. தங்கள் கூற்றுக்கு வலு சேர்க்கும் தரவு இருந்தால் பகிரப்பட வேண்டியதே; விசாரிக்கப்பட வேண்டியதே.

    மாறாகத் தங்கள் கூற்று ஹேஷ்யம் மட்டிலும் என்றால் புறந்தள்ளப்பட வேண்டியதே.

    இது போன்ற சரித்ர ஆதாரம் சார்ந்த ஒரு விவாதத்தினில் நீங்கள் பார்க்க வேண்டியது முன் வைக்கும் தரவுகள். எந்த மடத்தினர் என்ன சொல்கின்றனர் என்பது முக்யமல்ல. முக்யமானது முன்வைக்கப்படும் தரவின் Quality.

    Simply put…….. if you want to gauge the truth, first get out of the mental fix, if any, of affiliation to any one of the mathas for Truth is assessed on the veracity and analysis of facts and not on the basis of who said what.

    With all due respects to your jignyasa, weigh the basis on which you assess the truth….Before rebutting established facts, doubly check yourself;

    Not that established facts can not be rebutted; But you need strong strong evidence and explanation to do that; In the absesnce of such compelling presentation, rerebutting established facts would, I am sorry to say, be looked at as laughing stock only.

    From time to time, I remember having read related books and papers on the topic in the past 3 decades.

    The continuous research had provided clarity to the issues and evidences.

    Many of the bases (external) on which BCE dates were relied upon have been simply demolished like that of many spurious cooked up Sankara Vijaya texts and out of the blue texts like Jina Ramayana.

    Sure you can revisit the research, but do it with strong base and explanations; Dont try to debate on the basis of wild guesses.

    I know you have the penchant for strong research; If you put up any well researched and strong paper that may give new dimension to the issue, I would be first person to go through that.

    Regards.

    பவ சங்கர தேசிக மே சரணம்.

  153. மிகவும் மரியாதைக்குரிய கந்தர்வன் அவர்களுக்கு,

    //ஏன்? நான் விஷ்ணு பக்தன், அதனால் நேர்மை இல்லாமல் ஒரு உள் நோக்கத்துடன் எழுதுகிறேன் என்கிறீர்களா?//

    தாங்கள் விஷ்ணுபக்தர் என்பதால், கதை கட்டுகிறீர்கள் என்று நான் சொல்லவில்லை.. வாதிப்பது எல்லாம், விஷயத்தை அறிவதற்கே அன்றி, வேறொன்றுக்காகவும் அல்ல… ஏதும், தவறாக கேட்டிருந்தால், மன்னிக்குக…

    நீங்கள் மிகவும் சிறப்பாகவும், ஆய்வு பூர்வமாகவும் உங்கள் முடிவுகளை வெளியிடுகிறீர்கள். என்ன தான், சுற்றி வளைத்து, விதண்டாவாதம் செய்தாலும் சரியான, பதிவுகளை வெளியிடுகின்றீர்கள்.

    ஆக, இனி இப்படி வாதிக்க என்னால் முடியாது… எப்படியோ, கி.மு 06ஆம் நூற்றாண்டு வாதத்தை இவ்வளவுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

    என்றாலும்,

    சங்கரர் காலம் பற்றி நீங்கள் அதிகம் தொட்டுக் கொள்ளாத இன்னொரு கருத்தும் பிரபலமாக, இருக்கிறது.

    அது ஆனந்தகிரி என்ற தாங்கள் காட்டியிருக்கிற அத்வைதமுனிவரின் கருத்தாகும். அதன் படி, கி.மு44- 12 என்பதாகும்.

    அதனைக் குறித்தும் கொஞ்சம் ஆய்வு முடிவுகளைத் தரலாமே..?

    ஏனெனில், கி.பி 7ஆம், 8ஆம் நூற்றாண்டு என்பது தமிழ் மொழியியல் வரலாற்றில் பக்தி இலக்கிய காலம் (தேவாராசிரியர்களும் ஆழ்வார்களும் வாழ்ந்த காலம்).

    ஞானசம்பந்தரும், நாவரசர் பெருமானும், மணிவாசகரும், திருமங்கையாழ்வார் முதலாய ஆழ்வாராதியர்களும் சமண பௌத்தத்தை வென்று வைதீக சமயங்களை ஸ்தாபித்திருந்த, அக்காலத்தில் சங்கரர் வாழ்ந்திருந்தால், அவர் அப்படி ஒன்றும் மிகப்பெரிய செயல்களைச் செய்திருக்க இயலாது என்று நினைக்கிறேன்.

    சங்கரர் பற்றிய பெரியளவு செய்திகள் எல்லாம் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நிரூபித்தால் செத்த பாம்பை அடித்ததாக மாறி விடும். ஆக, அதற்கு வாய்ப்பில்லை என்று நம்புகிறேன்.

    அத்தோடு, சேரதேசத்தவரான அவர் திட்டமிட்டு, தமிழ் வல்ல பக்தி இலக்கியகாரர்கள் குறித்து தமது நூல்களிலோ, பாடல்களிலோ குறிப்பிடாமல் இருட்டடிப்புச் செய்தார் என்று எண்ணவும் தோன்றும்.

    ஆக, மொத்தத்தில் இந்த ஆனந்தகிரி அவர்கள் வரையறுத்த காலமே சரியாக இருக்கலாம் என்று தமிழிலக்கிய வரலாற்றை முன் வைத்து ஆய்வு செய்கிற போது, சிந்திக்கலாம்..

    இதற்கு தங்களின் கருத்தை அறிய ஆவலாயுள்ளேன்.. தொடர்ந்து வாதிப்பதற்கு மன்னிக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு, ஒரு தெளிவான முடிவை அறிவதற்கான ஆவலே தொடர்ச்சியாக நான் வேறு வேறு வகையாக எழுதிக்கொண்டே இருப்பதற்கு காரணமாகும்.

    சீன நாட்டு தர்மகீர்த்தியின் காலத்தை வைத்து சங்கரர் காலத்தை தீர்மானிப்பதை விட, நம் நாயன்மார்கள், ஆழ்வார்களின் காலத்தை வைத்து சங்கரர் காலத்தை தீர்மானிப்பதே உசிதமானதாக தெரிகிறது.

    அவ்வகையில், இத்தகு பக்தி இலக்கியகாரர்களுக்கு முன்னரே, பகவத்பாதசங்கரர் அவதரித்திருக்கலாம் என்று கருத வேண்டியிருக்கிறது. மாறாக, அவர்களுக்குப் பின்னே சங்கரர் வாழ்ந்திருந்தால், அவர்களைப் பற்றி சங்கரர் நிறையவே பேசியிருக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்து, வளம் பெற்றிருந்த சனாதன தர்மத்துக்கு இவர் என்ன பெரிய எழுச்சியினைச் செய்திருக்க முடியும்..?

    ஆக, ஆனந்த கிரியின் வரையறையை முன்வைத்தும் ஏன் பார்க்க முடியாது..?

    தங்களின் பிரமிப்பூட்டும் எழுத்தையும் ஆய்வையும் மதிப்புடன் பாராட்டுகிறேன்..

    தி.மயூரகிரி சர்மா

  154. ஸ்ரீமான் கிருஷ்ணகுமார், சாரங் ஆகியோருக்கு,
    மேலே தாங்கள் தந்திருக்கிற தரவுகளுக்கு நன்றிகள்…

    //ஸ்ரீமான் கந்தர்வன் அவர்களின் இந்த வ்யாசம் சரித்ர ஆதாரங்களின் பாற்பட்டு எழுதப்பட்ட வ்யாசம். இந்த வ்யாசத்தில் அலசப்பட்ட விஷயங்கள் பல நூற்களில் பல ஆய்வாளர்களாலும் அலசப்பட்டுள்ளன.//

    இதனை நான் மிக நன்றாகவே, அறிவேன்… என்றாலும் சங்கரஜெயந்தி வந்த காலத்தில், மீண்டும், மீண்டும் இதனைப் படித்துப் பார்த்தேன்… இன்னும் சில தரவுகள் கிடைக்கப்பெற வேண்டும், அத்துடன் இந்த சமயத்தில், இக்கட்டுரையை நோக்கிய பார்வையை உண்டாக்க வேண்டும் என்றே சில, விபரீதமான வினாக்களை முன் வைத்தேன்..

    ஆனால், அது போக, இப்பொழுது, இனி யாரும் மறந்தும் பகவத்பாதர் கி.மு வில் பிறந்தார் என்று சொல்ல முடியாத நிலை உண்டாகியிருக்கிறது…

    ஆனால், சங்கரர் கி.பியில் பிறந்தார் என்பதற்கு தமிழிலக்கியங்களினூடாகவும் சில ஆதாரங்கள் கிடைத்தால் மகிழ்ச்சியாகவும், இந்த ஆய்வு பூரணத்துவம் பெற்றதாயும் இருக்கும்…

    என்னால் புரிந்து கொள்ள இயலாத ஒன்று இருக்கிறது…

    அது என்ன எனில், ஸ்ரீமத் ராமானுஜர் பேரில் இராமானுஜ நூற்றந்தாதி முதலிய தமிழ் நூல்கள் இருக்கின்றன. அவரைப் போலவே, பணி செய்த பகவத்பாதர் பேரில் சிறப்பாக குறிப்பிடத்தக்க தமிழ் நூல்கள் எவற்றையும் காண முடியவில்லையே..? ஏன் சங்கரபக்தர்களில் ஒருவர் கூட தமிழ் அறிஞராகவோ, தமிழ் வல்லவராகவோ இருக்கவில்லையா..?

  155. அன்புள்ள திரு மயூரகிரி சர்மா,

    வேதங்களிலேயே எத்தனையோ சாகைகள் இருந்ததாகவும், அவற்றில் இப்போது எத்தனை இருக்கின்றன என்று தேடித்தான் கண்டறிய வேண்டும் என்றும் காஞ்சி முனிவரின் தெய்வத்தின் குரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருப்பது கொஞ்சம் தான் இழந்தது அதிகம். மாற்று மதத்தினரின் படை எடுப்பின் போது, நாலந்தா போன்ற பல பல்கலைக்கழகங்களும், அவற்றில் பராமரிக்கப்பட்டு வந்த ஓலை சுவடிகளும் கொளுத்தப்பட்டன.

    நமக்கு அருகில் பாண்டிச்சேரியில் ஒரு சிவன் கோயில், பிரஞ்சு ஆட்சியில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது என்று , புதுச்சேரி பிரபஞ்சன் அவர்களின் எழுத்தில் வெளியாகி உள்ளது.( இது பற்றிய முழு விவரமும் ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு என்ற தொகுப்பில் வரும்) .எனவே, தமிழில் அழியாமல் இருப்பவை எல்லாம் ஆபிரகாமிய மதத்தினரின் கைகளுக்கு தப்பியவை – அவ்வளவு தான். கிடைத்திருந்தால் இப்போது எஞ்சியிருக்கும் சிலவும் போயிருக்கும். எனவே சங்கரரின் சீடர்களில் தமிழ் நூல் எழுதியோர் உண்டு. அந்நூல்கள் இன்று இல்லை. அவ்வளவே. எனவே தான் , நமது தளத்தில் பலரும் கால ஆராய்ச்சி ஒரு வெட்டி வேலை என்பதை குறிப்பிடுகிறார்கள். கனிகளை உண்போம், இலைகளை எண்ணும் வேலையால் ஒரு பயனும் இல்லை.

    மேலும் தமிழர்களாகிய நாம் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே , முன் தோன்றிய மூத்த குடி – என்று சொல்வது போலவே, ஒவ்வொரு மொழிக்காரரும் தங்கள் மொழியிலிருந்தே பிற மொழிகள் உண்டானதாகவும், தங்கள் மொழியே மூத்தது என்றும் நிலை நிறுவி வருகிறார்கள். உதாரணமாக மஞ்சளார் அவர்கள் தமிழ் செம்மொழி என்று சொல்லி, ஒரு மத்திய அரசின் ஆணையை கேட்டு வாங்கியவுடன், இவ்வளவு நாள் தூங்கி கொண்டிருந்த தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிக்காரர்களும் சேர்ந்து , தங்கள் மொழிகளும் செம்மொழிகள் தான் என்று உத்தரவு வாங்கி விட்டனர். இனிமேல் இந்தியாவில் எதிர்காலத்தில் புதியதாக தோன்றும் மொழிகள் தான் செம்மொழி பட்டியலில் இடம் பெறவேண்டியது பாக்கி. நல்ல வேளை, ஆங்கில எஜமானர்களுக்கு செருப்பு துடைத்து வாழ்ந்த , பக்த கோடிகளான திராவிட இயக்கத்தவர் , ஆங்கிலத்துக்கு செம்மொழி அந்தஸ்து கேட்டு போராடவில்லை. இது போலவே, பழமை, புதுமை எல்லாமே நீங்கள் சேர்க்கும் கூட்டத்தை பொருத்தது. அதிக கூட்டம் எந்த பக்கம் சேருகிறதோ, அந்த பக்கத்தவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஒருவன் பஸ் மீது கல்லெறிந்தால், பஸ் கண்டக்டரும், டிரைவரும் இறங்கிவந்து அவனை பிடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்து, ஜெயிலுக்கு உள்ளே தள்ளிவிடுவார்கள். நூறு பேர் ஒன்று கூடி , பஸ்ஸின் மீது கல்லெறிந்தால், பஸ்ஸில் இருக்கும் டிரைவரும், கண்டக்டரும் இறங்கி தலை தப்பினால் போதும் என்று ஓடி விடுவார்கள். வல்லான் வகுத்ததே வாய்க்கால். அரசியல், மொழி, செம்மொழி, கால ஆராய்ச்சி எல்லாமே இதே யோக்கியதை தான். வெட்டி வேலை நமக்கு வேண்டாம்.

    திருக்குறள் காலத்தால் பழையது என்பதால் அறிஞர்கள் அதை மதிக்கவில்லை. திருவள்ளுவரின் கருத்துக்களை , அவை மிக சிறந்ததாக இருப்பதால் தான் மதிக்கிறார்கள். கால முதுமை மட்டுமே ஒரு விஷயத்தின் மதிப்பை கூட்டவோ, குறைக்கவோ செய்ய முடியாது. என்னை கேட்டால் , சரித்திரம் தொண்ணூறு சதவீதம் பொய்களின் தொகுப்பே என்று அடித்து சொல்வேன். கலிங்கபோர் நடந்தது உண்மை. அது கி மு 220 ஆக இருந்தால் என்ன கி மு 240 ஆக இருந்தால் என்ன ? மனித உயிரிழப்பு ஏற்பட்டதை மாற்ற முடியாது

  156. திரு மயூரகிரி சர்மா அவர்களெ,

    ஆனந்தகிரி சங்கரர் காலத்தை 44 BC என்று எந்த இடத்தில் குறிப்பிடுகிறார்? எந்த நூலில் அப்படி உள்ளது? ஆனந்தகிரி இப்படி எழுதியதாக நான் கேள்விப்பட்டதே இல்லை.

    ஏற்கனவே பலகால் சொல்லி ஆகிவிட்டது. சங்கரர் அசங்கர், திங்கநாகர், தர்மகீர்த்தி ஆகியோரின் மதத்தை (யோகாசார பவுத்த மதம்) எதிர்த்ததற்கு பாஷ்யங்களில் சான்று உள்ளது என்று. அவற்றுள் ஒரே ஒரு சான்று இதோ: பிரம்மா சூத்திர ஆஷ்யத்தில் பௌத்தத்தை கண்டிக்கும் அதிகரணத்தில் “யதந்தர்ஜ்ஞேய ரூபம் பஹிர்வத் அவபாஸத” எனத் தொடங்கும் திங்னாகரின் சுலோகத்தைக் காட்டியிருக்கிறார்.

    இந்த யோகாசார பௌத்த மதம், திக்நாகர், தர்மகீர்த்தி எல்லாம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது நிர்விவாதம். ஈ ஜிங் இதற்கு சான்று.

    // சீன நாட்டு தர்மகீர்த்தியின் காலத்தை வைத்து சங்கரர் காலத்தை தீர்மானிப்பதை விட, நம் நாயன்மார்கள், ஆழ்வார்களின் காலத்தை வைத்து சங்கரர் காலத்தை தீர்மானிப்பதே உசிதமானதாக தெரிகிறது. //

    முதலில் தர்மகீர்த்தி சீன நாட்டவர் அல்லர். அவர் இந்தியரே. இருந்தாலும், நீங்கள் மேற்கூறியது உணர்ச்சிபூர்வமான (emotional) வாதம். அறிவுப் பூர்வமானது (intellectual) அல்ல. Appealing to favorable feelings that we have for one language does not help here. எந்த மொழியில் இருந்தாலும் வலுவான சான்று வலுவான சான்று தான். ராக-த்வேஷமின்றி ஆராய வேண்டும்.

    // ஞானசம்பந்தரும், நாவரசர் பெருமானும், மணிவாசகரும், திருமங்கையாழ்வார் முதலாய ஆழ்வாராதியர்களும் சமண பௌத்தத்தை வென்று வைதீக சமயங்களை ஸ்தாபித்திருந்த, அக்காலத்தில் சங்கரர் வாழ்ந்திருந்தால், அவர் அப்படி ஒன்றும் மிகப்பெரிய செயல்களைச் செய்திருக்க இயலாது என்று நினைக்கிறேன். //

    இந்த விஷயத்திற்கு சில மணி நேரம் கழித்து விடை கூறுகிறேன். அவகாசம் இப்பொழுது இல்லை.

  157. திரு மயூரகிரி ஷர்மா அவர்களே,

    மன்னிக்கவும். வெகு நாட்களுக்குப் பிறகு இப்பொழுது தான் இது பற்றி எழுத அவகாசம் வந்தது.

    நீங்கள் கூறியது மீண்டும்:

    //
    ஞானசம்பந்தரும், நாவரசர் பெருமானும், மணிவாசகரும், திருமங்கையாழ்வார் முதலாய ஆழ்வாராதியர்களும் சமண பௌத்தத்தை வென்று வைதீக சமயங்களை ஸ்தாபித்திருந்த, அக்காலத்தில் சங்கரர் வாழ்ந்திருந்தால், அவர் அப்படி ஒன்றும் மிகப்பெரிய செயல்களைச் செய்திருக்க இயலாது என்று நினைக்கிறேன்.

    சங்கரர் பற்றிய பெரியளவு செய்திகள் எல்லாம் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நிரூபித்தால் செத்த பாம்பை அடித்ததாக மாறி விடும். ஆக, அதற்கு வாய்ப்பில்லை என்று நம்புகிறேன்.

    அத்தோடு, சேரதேசத்தவரான அவர் திட்டமிட்டு, தமிழ் வல்ல பக்தி இலக்கியகாரர்கள் குறித்து தமது நூல்களிலோ, பாடல்களிலோ குறிப்பிடாமல் இருட்டடிப்புச் செய்தார் என்று எண்ணவும் தோன்றும்.
    //

    முன் போல இதுவும் ஒரு உணர்ச்சி பூர்வமான வாதமே. அறிவுப் பூர்வமான வாதமல்ல. ஏன் என்று சொல்கிறேன்:

    நீங்கள் கூறுவது போல சங்கரர் அனைத்து ஆழ்வார்கள், நாயன்மார்களின் காலத்திற்கும் முந்தியவராக இருந்தால் இந்த வாதத்தை அப்படியே திருப்பிப் போட்டு விடலாமே, அதற்கும் பதில் கிடைக்காது. இதோ:

    // சங்கரர் சமண பௌத்தத்தை வென்று வைதீக சமயங்களை ஸ்தாபித்திருந்த, அக்காலத்தில் ஞானசம்பந்தரும், நாவரசர் பெருமானும், மணிவாசகரும், திருமங்கையாழ்வார் முதலாய ஆழ்வாராதியர்களும் வாழ்ந்திருந்தால், அவர்கள் அப்படி ஒன்றும் மிகப்பெரிய செயல்களைச் செய்திருக்க இயலாது என்று நினைக்கிறேன்.

    ஆழ்வார்களும் நாயன்மார்களும் சங்கரர் காலத்திற்குப் பிறகு வாழ்ந்ததாக நிரூபித்தால் செத்த பாம்பை அடித்ததாக மாறி விடும்….

    அத்தோடு, தமிழர்களான ஆழ்வார்களும் நாயன்மார்களும் திட்டமிட்டு, மாபெரும் தத்துவ மேதையும் சேரதேசத்தவருமான சங்கரரைக் குறித்துத் தமது தேவார/பிரபந்த பாசுரங்களில் குறிப்பிடாமல் இருட்டடிப்புச் செய்தனர் என்று எண்ணவும் தோன்றும்.
    //

    ஆகையாலே, இது ஒரு சாரமில்லாத வாதம். மேலும்…

    வடமொழி பாஷ்ய நூலில் ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் மேற்கோளாக எடுத்திருந்தால் வட நாட்டவர்கள் தத்துவ விசாரத்தில் ஏற்க மாட்டார்கள். இராமானுஜர் கூட திவ்யப் பிரபந்தத்தில் உள்ள அரிய அர்த்தங்களை மாத்திரம் ஸ்ரீபாஷ்ய-கீதாபாஷ்யாதி கிரந்தங்களில் எடுத்தாண்டிருக்கிறாரே தவிர, ஆழ்வார்களின் பெயரையோ தமிழ்ப் பாசுரங்களையோ அப்படியே மேற்கோளாக எடுக்கவில்லை.

    மேலும், நீங்கள் கூறுவது போல ஆழ்வார்கள் நாயன்மார்கள் மாத்திரம் இருந்திருந்தால் தத்துவத்தை ஸ்தாபிக்கவும் நாஸ்திக மதங்களாகிய ஜைன-பௌத்த மதங்களை வீழ்த்தவும் முடிந்திருக்காது. பௌத்த-ஜைன எதிர்ப்பு பல தலங்களில் நடைபெற்றது. தமிழக சமூகத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தி மார்கத்திற்கு உரமிட்டிருந்தாலும், பலதரப்பட்ட பண்டிதர்கள் சமூகத்தில் தர்க்க ரீதியாகச் செயப்படும் தத்துவ விசாரமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது.

    ஆகையால், ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் பற்றிக் கூறாதிருந்தால் இருட்டடிப்பல்ல.

    சங்கரர் என்ன BBC அல்லது CNN சேனலில் பணி புரிந்த செய்தி வாசிப்பாளரா, இருட்டடிப்பதற்கு? 🙂

    இன்னும் ஒரு சான்று: எட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய எந்த இலக்கியத்திலும் அத்வைதத்தைப் பற்றிய செய்தியே இல்லை. ஆழ்வார்களும் அத்வைத சித்தாந்தத்தைக் கண்டிக்கும் பாசுரங்களைப் பாடியதில்லை. நாயன்மார்களில் இறுதிக் காலத்தில் வாழ்ந்த மாணிக்க வாசகர் ஒருவர் தான்,

    “மிண்டிய மாயாவாதமெனும் சண்டமாருதம்…” என்று அத்வைதத்தை விமர்சித்துள்ளார்.

    இதிலிருந்தே சங்கரர் காலம் என்ன என்று நிர்ணயிக்கலாமே.

    ஆனந்தகிரி சங்கரர் 44 BCE இல் பிறந்ததாகக் கூறியுள்ளார் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். எங்கு கூறியுள்ளார் என்று கேட்டேன், இது வரை நீங்கள் பதில் போடவில்லை. ஆனந்தகிரி எங்கு சொல்லியுள்ளார் என்று காட்டுமாறு மீண்டும் கோருகிறேன்.

  158. அன்புள்ள கந்தர்வன்,

    மாணிக்க வாசகர் நாயன்மார்களில் ஒருவர் அல்ல. அவர் நால்வரில் ஒருவர். மேலும் நாயன்மார்களில் இறுதிக்காலத்தில் வாழ்ந்தவர் அல்ல. நாயன்மார்களுக்கு முந்தியவர். தெளிவான விளக்கங்களுக்கு தருமபுரம் ஆதீனம் வெளியிட்டுள்ள திருவாசக முன்னுரையை காண்க. இங்கு எழுதின் மிக நீளும். முக்கிய கருத்தை மட்டும் சொல்லி விடுகிறேன். மாணிக்க வாசகர் காலத்தில் இறைவன் நிகழ்த்திய பல திருவிளையாடல்கள் தேவாரப்பாடல்களில் சொல்லப்படுகின்றன. எனவே மூவராகிய ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், காலத்தால் மாணிக்க வாசகருக்கு பிற்பட்டவர்களே என்பது அந்த நூலின் தெளிவு.

    மாணிக்க வாசகர் ” ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க “- என்ற கருத்தை அழகாக சொல்லியவர். போற்றித்திருவகவலில் அவர் சொல்லும் மாயாவாதம் என்பது எல்லாம் சூன்யம் – ஒன்றுமே இல்லை என்று சொல்லும் சில புத்தப்பிரிவுகளை ஆகும். மொழி என்பது காலத்துக்கு காலம் மாறுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நாற்றம் என்றால் நல்ல வாசனை ஆகும்.( good smell ) துர்நாற்றம் என்றால் கெட்ட வாசனை. ( bad smell ) . ஆனால் இந்த 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டிலேயோ நாற்றம் என்றால் கெட்ட வாசனையை தான் குறிக்கிறது. எனவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இலக்கியங்களுக்கும், கவிதைகளுக்கும் நாம் இன்றைய காலக்கட்டத்தில் பொருள் கொள்ளும்போது, சரியான பொருள் அறிவது மிக சிரமம். தவறும் வாய்ப்பு அதிகம். கடவுள் தான் எல்லாமாகவும் உள்ளான் என்பது தான் அத்வைதம். ஆனால் மாணிக்கவாசகர் சக்தியை வியந்தும் திருவாசகத்தில் பாடியுள்ளார். எனவே, சில வீர சைவர்கள் மாணிக்கவாசகரை இருட்டடிப்பு செய்து , தேவாரத்தை மட்டுமே பயின்று , திருவாசகத்தை ஒதுக்கினர். ஆனால் திருவாசகமே சைவ சித்தாந்தத்தின் மணிமுடி என்பது அதனை முழுதும் பயின்றோருக்கு மட்டுமே தெரியும். பண்டித தியாக ராச செட்டியார் அவர்கள் போன்றோர் கூட , அதற்கு உரை எழுத தயங்கினார்கள் என்பதே உண்மை. ( பக்கம் XXII – XXIV – திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் – எழுதிய திருவாசக விளக்க வுரை நூலின் முகவுரை நாள் -10-06-1964) நாம் எங்கே. ? எனவே மாணிக்க வாசகர் கல் தோன்றி மண் தோன்றா கால தமிழினத்தின் முன்னோடி. எல்லாம் ஒன்றே , தோற்றம் மட்டுமே வேறு, அந்த தோற்றம் மாறக்கொடியது, மாற்றப்படக்கூடியது என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

    திருவாசகத்தின் தொன்மை கருதி , அதற்கு உரை எழுதினால், மணிவாசக பெருமான் கொண்ட பொருள் சரியாக வருமா என்ற இறை அச்சம் காரணமாகவே, திருவாசகத்திற்கு உரை எழுதுதல் கூடாது என்ற மரபு பன்னெடுங்காலமாக சமயவுலகில் நிலவி வருகிறது. அந்தணர்கள் வேதத்துக்கு பொருள் கூறாமல், அந்த தொனிக்கே ( modulation and vibration) சக்தி உண்டு என்பது போன்றே இதுவும். வேதம் படிக்காத பார்ப்பானும், திருவாசகம் படிக்காத சைவனும் திருக்கோயில்களில் பூசை செய்யும் இழிநிலை ஏற்பட்டதால், நமக்கு இத்தகைய குழப்பங்கள் நேருகின்றன. எனவே, அனைவருக்கும் நான்கு வேதங்களையும், தேவார திருவாசகத்தினையும் , தமிழ் வேதமாம் நாலாயிர திவ்விய பிரபந்தத்தினையும் கற்க வசதிகள் செய்து கொடுத்து இந்த இந்து சமுதாயத்தினை காப்போம்.

  159. ” அந்த தோற்றம் மாறக்கொடியது, “- இது தட்டச்சு பிழை . அந்த தோற்றம் மாறக்கூடியது என்று மாற்றி வாசிக்க வேண்டுகிறேன்.

  160. //அது என்ன எனில், ஸ்ரீமத் ராமானுஜர் பேரில் இராமானுஜ நூற்றந்தாதி முதலிய தமிழ் நூல்கள் இருக்கின்றன. அவரைப் போலவே, பணி செய்த பகவத்பாதர் பேரில் சிறப்பாக குறிப்பிடத்தக்க தமிழ் நூல்கள் எவற்றையும் காண முடியவில்லையே..? ஏன் சங்கரபக்தர்களில் ஒருவர் கூட தமிழ் அறிஞராகவோ, தமிழ் வல்லவராகவோ இருக்கவில்லையா..?//

    மிகவும் சரியான கேள்வி.

  161. தமிழக வரலாற்றில் களப்பிரர்காலம் என்று ஒன்று சொல்வார்கள். இன்று நம்மிடையே இருக்கும் சரக்கு எல்லாமே , அந்த களப்பிரர் காலத்துக்கு பிறகு எஞ்சியவை தான். அந்த களப்பிரர் காலத்தில் காணாமல் போனவை ஏராளம். முக்கியமாக ஆபிரகாமிய மதத்தவரின் வருகைக்குபிறகு புதுச்சேரி சிவன் கோயில் ஒன்று பிரெஞ்ச்காரர்களால் இடிக்கப்பட்டது என்று எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார். அதற்கு சாட்சியாக துபாஷியாக வேலை பார்த்த அனந்த ரங்கம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பு அதாவது டைரி இருக்கிறது. ஏதோ நமது எள்ளுத்தாத்தா காலத்திலிருந்து ரிக்கார்டுகளை பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பது போலவும், அதற்கு முன்னர் இருந்தது எல்லாம் காணாமல் போய்விட்டது போலவும் புலம்புவதில் அர்த்தம் இல்லை. நாம் சுமார் 3 வருடத்துக்கு முன்னால் உள்ள ரிக்கார்டுகளை பராமரிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பது நமக்குத்தான் தெரியும். நிலைமை இப்படி இருக்க, கபாடபுரத்தை கடல் கொண்டதற்கு சாட்சி இருக்கா ? தென்மதுரை எப்போது கடலில் மூழ்கியது என்றெல்லாம் வெத்து அரட்டை அடிப்பதில் ஒரு புண்ணியமும் இல்லை. தமிழின் முதல் இலக்கண நூல் அகத்தியம் தான். அதுவே கடலில் போய்விட்டது. இப்போது இருபதாயிரம் வருடங்களுக்கு பிறகு , வீடியோ இருக்கா / போட்டோ இருக்கா ? வெள்ளை துறை நம்ம கலாச்சாரத்தை பற்றி ஏதாவது சாட்சியை விட்டு வைத்திருக்கிரானான் என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருப்போரை என்ன சொல்ல ? சில சுய விளம்பர ஜால்ரா மனப்பான்மை கொண்டவர்கள் தங்களை பற்றி புலவர்களிடம் காசு கொடுத்து கவிதை, கட்டுரை எழுதி வாங்கி புளகாங்கிதம் அடைவது ஒரு வழக்கம். இன்னமும் நம் தமிழ் நாட்டில் பாராட்டு விழாக்கள் நடத்திக்கொண்டு அதிலேயே மகிழ்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள்.

    சங்கர பகவத் பாதர் பெயரிலும் ஏராளம் அந்தாதிகள் இருந்தன. எல்லாம் கடல் கொண்டது பாதி, ஆபிரகாமியரால் கொளுத்தப்பட்ட பல நூலகங்களிலும் இருந்து எரிந்து போய்விட்டவை மீதி. கால ஆராய்ச்சியால் ஒரு புண்ணியமும் இல்லை. எல்லாம் வெட்டி வேலை தான்.

  162. ஸ்ரீ கதிரவன்
    ஸ்ரீ மாணிக்கவாசகசுவாமிகள் ஸ்ரீ தேவார மூவருக்கு காலத்தே முற்பட்டவர் என்று ஸ்ரீகந்தர்வன் அவர்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார். அது மிகச்சரியானக் கருத்தே.
    ஸ்ரீ கதிரவன் மேலும்
    “கடவுள் தான் எல்லாமாகவும் உள்ளான் என்பது தான் அத்வைதம். ஆனால் மாணிக்கவாசகர் சக்தியை வியந்தும் திருவாசகத்தில் பாடியுள்ளார். எனவே, சில வீர சைவர்கள் மாணிக்கவாசகரை இருட்டடிப்பு செய்து , தேவாரத்தை மட்டுமே பயின்று , திருவாசகத்தை ஒதுக்கினர். ஆனால் திருவாசகமே சைவ சித்தாந்தத்தின் மணிமுடி என்பது அதனை முழுதும் பயின்றோருக்கு மட்டுமே தெரியும்”.
    திருவாசகமே சைவசித்தாந்தத்தின் மணி முடி என்பதில் ஐயமில்லை. ஆனால் வீரசைவர் திருவாசகத்தினை ஒதுக்கினர் என்பது தவறு. ஸ்ரீ மணிவாசகரே வீரசைவர். அவர் குடி ஆமாத்தியர் அதாவது தற்போது ஆந்திரத்தில் வழங்கும் ஆராத்யாயர் குடியாகும். திருவாசகத்தில் வீரசைவ கருத்துக்களான ஸ்தாவரம் ஜங்கமம் வழங்குவதும். உடலிடங்கொண்டாய் யான் இதற்கிலன் கைமாறே போன்றவை ஸ்ரீ அடிகள் வீரசைவர் என்பதைப் பறைசாற்றும். தவிர தமிழ்கத்து வீரசைவர்கள் தமது வழிபாட்டில் தேவாராதி நூல்களைப்பயன் படுத்துவதில்லை. திருவாசகம் ஒன்றையே எல்லா வழிபாட்டுக்கும் பயன்படுத்துகிறார்கள். எனவே திருவாசகத்தினை ஒதுக்கியோர் வீரசைவர் அல்லர் சாமானிய சைவர் என்பதே பொருந்தும். தென்னாடுடைய சிவனே போற்றி!

  163. இத்தொடரில் அன்பர்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் தொடர்பாக என்னுடைய கருத்துக்கள் சிலவற்றை நானும் பதிவு செய்ய விரும்புகின்றேன். சங்கராச்சாரியரின் காலம் பற்றிய ஆராய்ச்சியில் நான் புகவில்லை. திருவாசகம் , மற்றும் மாணிக்கவாசகர் பற்றிய சில செய்திகள் தொடர்பானவற்றைப் பற்ற்றிய கருத்துக்களையே இங்கு குறிப்பிடுகின்றேன்.. சங்கரர் வாழ்ந்த காலம் பற்றி திரு.கந்தர்வன் அவர்களுடைய கருத்தே என்னுடைய கருத்தும். சங்கரர் செள்ந்தரியலகரியில் அம்மையின் திருத்தனத்தின் சிறப்பைப் பாராட்டிய பாட்டில் ‘திராவிடசிசு’ எனக் குறிப்பிடுவது திருஞானசம்பந்தரையே என்பது சித்தாந்த சைவர்கள் கருத்து. வீரைக் கவிராச பண்டிதர் செள்ந்தரியலகரியை சந்தத்தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அப்பாடல், திராவிடசிசு என்றபதம் திருஞானசம்பந்தரைச் சுட்டுவதாக, ‘வருணம் நன்குறு கவுணியன் சிறு மதலை யம்புயல் பருகியே’என மொழி பெயர்த்துப் பாடியுள்ளார். சங்கரர் சிவானந்தலகரியில், கண்ணப்பரைப் பாடியுள்ளார். சங்கரர், ‘திராவிடசிசு’ என்று தம்மையே கூறிக் கொண்டார் என்றும்,இங்குக் குறிப்பிட்டதைப் போன்ற தோத்திரநூல்களை அவர் செய்திலர் என்றும் சிலர் கூறுவர். அவருடைய சிவபக்தி பரமாகிய நூல்களாற் பயனடைந்தவர்கள், ” பொன்னவிருங் காலடியிற் போந்துமுழு துணர்ஞானப்புல வனாகி, மன்னுசிவ னேயிவனென் றுலகமெலா மதித்தேத்த மறையின் அந்தந் , துன்னியசூத் திரமுரைசெய் சங்கரா சாரியன்றாள் தொழுதுய் வோமே'” எனக் கொண்டாடுவர். பவுத்தர்களின் சூனிய வாதத்தி உள் வாங்கி மாயாவாதக் கொள்கையை உருவாக்கிப் பவுத்தத்தின் ஆதிக்கத்தை ஒழித்தார். அதேசமயம் மாயாவதக் கொள்கையினால் மக்கள் நாத்திகர்களாக்ப் போய்விடாமல் பாதுகாக்க அறுவகை வழிபாட்டு நெறியினையும் பஞ்சாயதன பூசையையும் வலியுறுத்தினார். அவர் வ்லியுறுத்திய வழிபாட்டு நெறிகளை அறுவகைச் சமயம் என்றும் அறுவகைச் சமயத்தைச் சங்கரர் நிறுவினார் என்று கூறுவதும் பிழையாகும்.

  164. சங்க காலத்தில் பவுத்தம், சமணம் ஆகிய இருநெறிகளும் தத்தம் எல்லையில் அடங்கியிருந்தன. மக்கள் அவரவர் விரும்பும் நெறியில் நின்று அமைதியாக வாழ்ந்தனர் காலப் போக்கில் பவுத்த சமயம் மீதூர்ந்து பிறநெறிகளை அழிக்கத் தொடங்கியது. சமண சமயத்தார் தொடந்து தம்மளவில் நின்றனர். ஓரளவு வேதநெறியினருடன் நல்லிணக்கம் கொண்டும் வாழ்ந்தனர். காலப்போக்கில் அவர்களும் பவுத்தர்களுடன் சேர்ந்து வைதிகநெறிக்கும் சிவநெறிக்கும் மாறாகக் கிளர்ந்தெழுந்தனர். அக்காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும் அக்காலத்தில்தான் ‘வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்ல’ ஆளுடைய பிள்ளையார் அவதரித்தார்.மாணிக்க வாசகப் பெருமான் காலத்தால் அப்பருக்கும் திருஞானசம்பந்தருக்கும் முற்பட்டவர். திருவாச்கத்தில் பவுத்த சமயத்தை மட்டும் நிராகரித்த பாடல்கள் உள்ளன. அவர் பவுத்த சமயத்தினருடன் மட்டும் வாதம் செய்து வென்றார் என்று அவருடைய வரலாறு கூறப்படுகின்றது. சமணர்களைப் பற்றிய குறிப்புக் கூடத் திருவாசகத்தில் இல்லை. திருவாசகம் கீர்த்தித் திருவகவலில் இறைவன் தென்னாட்டில் நடத்திய திருவிளையாடல் கள் கூறப்படுகின்றன. அவை காலத்தால் மிகப்பழமையானவை யாதலால் அக்கதைகள் பவற்றை முழுமையாக அறிய இயலவில்லை. திரு. காசுப்பிரமணிய பிள்ளையவர்கள் இலங்கையின் வரலாற்றைக் கூறும், ‘மகவம்சம்’ என்னும் நூலில் கி.பி. 302 முதல் 315 வரையுள்ல கால எல்லையில் புத்தமதத்திலிருந்து சிலர் சைவசமயத்துக்குச் சென்றனர் என்றும் அது தில்லையில் அடிகளிடம் வாதத்தில் தோல்வியுற்ற பவுத்தர்கள் சமயம் மாறிய நிகழ்ச்சி என்றும் குறிப்பிடுகின்றார். எனவே மாணிக்க வாசகர்காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டு என்பர். மாயாவாதம், ஏகான்மவாதம் என்பன சங்கரருக்கு முன்பே இருந்து வந்த கொள்கைகள். மாயாவாத நூலைச் செய்தவ்ர் வியாசமுனிவர் என்றும் இதைச் சுக்கிராசாரியர் சூரபன்மனுக்கு உபதேசித்தார் என்றும் கூறுவர். தமக்கு முன்பே நிலவிய மாயாவாத க் கொள்கையை சூன்யவாத பவுத்தத்தை முறியடிக்கச் சங்கரர் புனருத்தாரணம் செய்தார் என்றும் கூறுவர். இக்கொள்கைகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பே

  165. vanakkam
    A few explanations.
    1. Dharmakeerthi in his பிரமாண வார்த்திக காரிகை, 3.354]
    இனி, “இவ்வாக்கியத்தை தர்மகீர்த்தி பழைய பௌத்த நூலிலிருந்து தம் நூலில் கூறியிருக்கிறார்”, Like this why not Adisankara also quoted from the old Buddha texts? Why not Dharmakeerthi quoted Adisankara’s lines?
    2.Dharmapala who was mentioned before Dharmakeerthi by T sing was a contemporary to Barthuhari. (page 178 and 179 of T sing). Barthuhari was the son of Chandrasarma who latter become the Guru of Adisankara and was also the brother of SriHarsa Vikramaditya of Ujjaini who stated his era in 457 B.C.E. i.e. 400 years before King Vikramaditys of Paramara dynasty. (Refer. Alberuni’s India page 5 of second volume.) Hence the argument regarding Dharmakeerthi can not hold good.
    3. Besides Fah-hian quoted that King Ashoka and Sakhya Buddha were contemporary (page 127 of Travels of Fah-hian and Sung-Yun translated by Samuel Beal, Trubner and co. London 1869). How can we accept this?
    4.The year of Buddha nirvana was 1497 years before Fah-hian i.e. 400 to 415 C.E. (page 156 of the same book). Then the year of Bhuddha nirvana will be 1497-405=1092 B.C.E. Then the period of Asoka was about 200 years after this as accepted by scholars. Then the period of Chandragupta Mauriya, the grand father of Asoka will be around 950 B.C.E. Then how can he be a contemporary of Alexander of 325 B.C.E. This shows that the derivation of Mauriya kingdom period itself was wrong.
    5.Hiuen-Tsiang wrote that (page number 101 The Life of Hiuen-Tsiang translated by Samuel Beal, Trubner & co, London 1911) Asoka who lived a hundred years after the Nirvana was the great grandson of Bimbisararaja. But all we know that Asoka was the son of Bindusararaja and lived much apart from the nirvana of Buddha. For the year of Nirvana he gave 1200, 1500, 900 years etc.before his time. Thus, we should not rely entirely on the account of foreigners in writing the history of one Nation.
    6.Fahi-hian not even mentioned Nagarjuna, Deva and Asvaghosa, but we cannot say that they were posterior to Fah-hian. Kalhana’s Rajatarngani mentioned that Nagarjuna was contemporary to Kanishka of Kashmir whose period as per M.A.Stein’s calculation was before 1183 B.C.E. (Kalhana’s Rajatarngani translated by M.A.Stein, A.Constable & co London 1900 & Motilal Banarsidas, 1st Taranga (book) 168 to 173 verses).
    7. Regarding Kalidasa and Kumarilabhatta, Kumarila bhatta mentioned only as poets and not as Kalidasa and there were 2 or 3 persons with the name Kalidasa lived and the famous quotation may be repeated by many of different periods and why not Kalidasa used Kumarilabhatta’s writings?
    I request you to go through these writings and if found correct then accept that the date of Adisankara should be concluded only after a thorough study.
    Dr.M.L.Raja, M.B.,B.S.,D.O.,

  166. Vannakkam,
    I have written a detailed explanation for about Dharmakeerthi and Kalidasa which contradict the date 509 B.C.E. I request you to publish it, and also mail me the views both favouring and against to my mail id mlrsreekrishna@yahoo.com, please.
    Dr.M.L.ராஜா

  167. Vanakkam,
    The point raised in favour of the 788 C.E.date is that Kumarila Bhatta used Kalidasa’s sentence. Actually Kumarila Bhatta wrote Kavibhi: which is plural of Kavi and Kavibhi: means by the Kavis (plural). Besides Kavi: (masculine like Hari: sabdha:) does not mean poet only but it also mean a seer, a sage, person gifted with insight, thinker, prophet, wise, intelligent, enlightened, and also mean Varuna, Indra, Aditya, Angiris rishi, Usanas sage etc. (Refer A Sanskrit English Dictionary by Sir. Monier Monier Williams, Motilal Banarsidass, 2002, page 264). Hence Kumarilabhatta quoted the sentence which was quoted and repeated by many Kavis and scholars (Vidvadvacana) before his time and it did not mean Kalidasa at all. Hence deriving the date of Adisankara based on this point is not all correct.
    Dr.M.L.Raja, mlrsreekrishna@yahoo.com

  168. தேவனாம்பியன், பியதசி போன்ற பெயர்களுடன் அசோகன் என்ற பெயரையும் குறிப்பிடும் கல்வெட்டுகள் போலியாக இருக்கலாம். ஐந்து கிரேக்க அரசர்களை(அலெக்சாந்தரின் வாரிசுகள்)க் குறிப்பிடும் கல்வெட்டும் போலியாக இருக்கலாம். மௌரியர்கள் 316 (அ) 337 ஆண்டுகள் ஆண்டிருக்கலாம். சுங்கர்கள் 300 (அ) 312 ஆண்டுகள் ஆண்டிருக்கலாம். அவற்றைப் புராணங்களில் ஆங்கிலேயர்கள் 137 ஆகவும், 112 ஆகவும் மாற்றியிருக்கலாம் எனவும் ஐயம் கொள்ள இடமுண்டு. History of Classical Sanskrit literature என்ற நூலில் கிருஷ்ணமாச்சாரியாரும், கோட்டா வெங்கடாசலம் பல நூல்களிலும் இத்தகவல்களைக் குறிப்பிட்டுள்ளனர். மச்ச பேராணப் பிரதி ஒன்றிலும், கலியுகராஜ விரேத்தாந்தத்திலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக இவர்கள் குறிப்பிடுகின்றனர். அல்பிருனி Tarikh Al-Hind நூலில் ஹர்ஷ விக்கிரமாதித்தியனையும் ஹர்ஷ வர்தனனையும் குழப்பிக் கொண்டுள்ளார். ஹர்ஷ விக்கிரமாதித்தியன் கி.மு.457 இல் தன் பெயரில் ஓர் ஆண்டுமுறையைத் தோற்றுவித்திருக்கலாம். காளிதாசர் என ஒருவர் இல்லவே இல்லை என கேப்டன் அஜித் என்பவர் இணையத்தில் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். அய்ஹோலே கல்வெட்டு காளிதாசரின் பெயரைக் குறிப்பிடுவதாலும், கலி யுகம் பிறந்த ஆண்டும் மகாபாரதப் போர் நடந்த ஆண்டும் ஒன்று தான் என்று கூறுவதாலும், சக காலமும் சாலிவாஹன காலமும் ஒன்று தான் என்று கூறுவதாலும் போலி கல்வெட்டு தான் என்ற முடிவுக்கு வரலாம். ஆதிசங்கரரின் கால ஆராய்ச்சியில் இவை பெரிய உதவியாக இல்லாவிட்டாலும் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.

  169. sir, Mahan Sri.Sri.Sri. Aadhi Sankara Bagavath Padha was not for fame, money or honour, but his mission was knowledge. He was unparalleled in his knowledge. The references of his birth date back to Gouda saraswat sect, who where living on the banks of the then Holy river Saraswati ,reportly around 700 BC. Reportedly Mahan Sri. Gauda padha acharya belonged to this sect, born in 617 BC and reached heavenly Abodein 496 BC at the ripe age of 121 years. He opened the gateway of Indian Philosophy by preparing Bhasyas on Mandukeya Upanishad in a cave in Omkareswar , near Indore in the Narmada basin. Reportedly his deciple was Mahan Sri. Sri. Sri. Govinda Bagvath padha, whose life and death is unknown except that he breathed his last in 492 BC. Mahan Sri.Sri.Sri. Aadhi Sankara Bagavath Padha met Mahan Sri.Sri. Sri. Govinda bagavat padha reportedly 496 BC and wrote bhasyas and mastered Adhvaidha Philosophy.There is a temple in Pakistan occupied Kashmir reportedly built by Kashmir king between 417-357 BC naming the temple as Sankaracharya temple.All these proves the birth of Mahan Sri.Sri.Sri. Aadhi Sankara Bagavath Padha around 500 BC. Precisely He was born on April 3rd, 509 BC Sunday,(2593 year of Kali). Max mullar and others wrote a lot about this Mahan, but conveniently changed the birth date after the Mahan Jesus Crist to prove their religion first.

  170. ஆதிசங்கரர் அவதாரத்தை குறிக்கும் ஸ்லோகம் அவர் கி.மு.வில் வாழ்ந்தவர் என்பதை குறிக்கிறது மேலும் அவர் நந்தன வருடம் என்பதையும் ஸ்லோகம் தெரிவிக்கிறது மேல் நாட்டினர் குறிப்பிடும் கி.பி.788ஆம் வருடம் நந்தன வருடமில்லை. அஸங்கர், வஸபந்து திங்நாகர். நாகர்ஜுனர் கொள்கைகளை அவர் எதிர்த்தது உண்மை தான் ஆனால் இந்த பெயர்களை அவர் எங்கும் சொல்லவில்லை. இதிலிருந்து இந்த நால்வருடைய கொள்கைகள் இவர்களுக்கு முன்பே இருந்தது. அதனை சங்கரர் கண்டித்தார். பிற்காலத்தில் இந்த நால்வரும் அந்த கொள்கைகளை மீண்டும் ஸ்திரபடுத்தினர். அதனால் அந்த தத்துவங்கள் இவர்கள் பெயரால் அறிய படுகிறது. அத்வைதம் எனும் தத்துவம் ஏற்கனவே இருந்தது. பெளத்த சமண மதங்களின் கொள்கைகளால் அத்வைதம் ப்ரகாசிக்காமல் இருந்தது ஆதிசங்கரர் அத்வைத கருத்துக்களை கூறி அந்த தத்துவத்தை ப்ரகாசபடுத்தினார். இன்று அத்வைதம் என்றதும் நமக்கு ஆதிசங்கரர் நினைவுக்கு வருவது போல் தான் மேல் குறிப்பிட்ட நால்வரின் கொள்கைகளும். உதாரணமாக பஜகோவிந்தம் என்று புகழ் பெற்ற சங்கரரின் நூல் பார்க்கிறோம் ஆனால் சங்கரர் அதற்கு வைத்த பெயர் மோஹமுத்கரம் பஜகோவிந்தம் என்ற வார்த்தை பலமுறை வருவதால் பஜகோவிந்தம் என்பதே பெயராகி விட்டது.
    மேல் நாட்டினர் நமது வரலாற்றை மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா எனும் நூலிலிருந்து கணகிடுகின்றனர். இதிலும் நிறைய பிழைகள் உள்ளன அவர் சந்த்ரகுப்தனை பற்றி குறிப்பிடுகிறார் அது மெளரியர் கால சந்த்ரகுப்தனா அல்லது குப்தர்கள் கால சந்த்ரகுப்தனா என்பதில் குழப்பம் உள்ளது.

  171. sir,
    There are several versions on the birth date of Mahan Sri.Sri.Sri. Aadhi Sankara Bagavath Padha. Every one agrees that he was in Narmadha Basin in Gaudhapada Acharya Mutt and his teacher was Mahan Sri.Sri.Sri.Govindabagavath Padha. Paramaguru Gaudapadha acharya swami was Born In the year BC 618 and lived for 121 years (till BC 497) and wrote Bhashyas on Mandukeya Upanishad in Omkareswar in the mid Land of Narmada river. While It is not clear about the life of Mahan Sri.Sri.Sri.Govindabagavath Padha, reportedly he attained Mukthi in 492 BC. Hence Mahan Sri.Sri.Sri. Aadhi Sankara Bagavath Padha, would have lived in BC 509-477, may be correct.
    A.V.Subramanian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *