தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3

(தொடர்ச்சி…)

unmai - Mar 16-31 - 2010புதுமைப் பித்தன் (1907 – 1948) போன்ற ஒரு பெரிய கலைஞன், தலித் பிரச்னையை  அவர் பார்வைக்கேற்ப வேறு விதமாகத் தான் கையாள்கிறார். அவர் ஏற்கனவே சுப்பிரமணிய பாரதி தன் சந்திரிகையின் கதை என்ற நாவலில் தலித் விடுதலைக்குத் தந்த ஒரு லக்ஷியத் தீர்வைக் {டெபுடி கலெக்டர் கோபாலய்யங்கார் தன் நண்பர் வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் வேலை செய்து வந்த மீனாட்சி மீது காதல் கொண்டு பிரம்ம சமாஜ முறைப்படி கலப்பு மணம் செய்துகொள்கிறார்.) கேலி செய்யும் வகையில் அக்கதையின் பின் நிகழ்வுகள் யதார்த்தத்தில் என்னவாக இருக்கும் என்று சித்தரிக்கிறார். ஊரும் நண்பர்களும் கேலிசெய்கிறர்கள். “போயும் போயும் இவருக்கு ஒரு இடைச்சி தானா கிடைத்தாள்? என்று. படுக்கை அறை மயக்கம் ஏதும் பிரச்சினையைக் கிளப்பாது என்றாலும், அய்யங்காரின் லக்ஷியக் கனவுகளை நிறைவேற்ற இப்படி ஒரு கல்யாணம் செய்து கொண்டால், எழும் பிரச்சினைகள் முதலில் அவர் வீட்டுச் சமையலறையிலிருந்தே தொடங்கும் அதற்கும் முன்னால் தன்னை, மீனாட்சி  “சாமி” என்றழைப்பதை முதலில் கவனிக்க வேண்டும்.. சமயலறையிலிருந்து வரும் கறிக்குழம்பு அடுத்த பிரச்சினை. இதையெல்லாம் அவர் சமாளித்து விடுவதாகவும் கடைசியில் மீனாட்சி, கோபாலய்யங்காரை, “ஏ பாப்பான்” என்றும் அவர் மீனாட்சியை “அடி என் எடச்சிறுக்கி” என்று செல்லமாக ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதாகவும் கதையை முடிப்பதும், பாரதியைக் கேலி செய்ய வந்த இந்தக் கதை அதே ஒரு எதிர்மறை லட்சியமாக முடிவதைத் தவிர்க்க முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஆனால் புதிய நந்தன் என்னும் இன்னொரு கதையில் வித்தியாசமான இன்னொரு பார்வை தெரிகிறது. இது இருபதாம் நூற்றாண்டு ஆதனூரில் நிகழும் கதை. பழைய ஆதனூர் பண்ணையாரின் இந்தத் தலைமுறையின் பிரதிநிதி ராமநாதன் அவன் தன் கலெக்டர் பதவியை உதறிவிட்டு காந்தியின் விடுதலைப் போராட்டத்திலும் ஐக்கியமாகி, ஹரிஜன விடுதலையிலும் நம்பிக்கை கொண்டு போராடி, ஜெயிலுக்குச் சென்று சிறையிலிருந்து வெளிவந்ததும் கிராமத்துக்குத் திரும்புகிறான். அங்கு பண்ணையில் வேலை செய்யும் ஒரு பறை சாதிப் பெண்ணைப் பார்த்ததும் அவளிடம் அவனுக்கு ஆசை .கொப்பளிக்கிறது  சின்ன முதலாளிக்கு தன்னிடம் ஆசை என்பதிலும் அதற்கு இடம் கொடுப்பதிலும் அவளுக்கு சந்தோஷம் தான். என்றாலும், கல்யாணம்  என்ற பேச்சுக்கு இடமில்லை அவளைப் பொருத்த வரை. “அதெப்படி முடியும் சாமி” என்று மறுக்கிறாள். அவள் தந்தை கருப்பனுக்கோ  இது மகா பாதகமான காரியம். ஐயர் எஜமானுக்கு பறச்சாதிப் பொண்ணு எப்படி ஒத்துப் போகும்?

கருப்பனுக்கு ஒரு மகனும் கூட. பாவாடை. அவனுக்கு படிக்க ஆசை. ஜான் ஐயர் என்னும் வேளாள கிருத்துவர் அவனை முதலில் கிருத்துவனாக்கி, ஜான் தானியேல் என்று நாமகரணம் செய்வித்து பத்தாங்கிளாஸ் வரை படிப்பிக்கிறார். அவனுக்கு ஜான் ஐயரின் மகள் மேரி லில்லியிடம் காதல் பிறக்கிறது. இதை அறிந்த ஜான் ஐயருக்கு வந்த கோபத்தில், “பறக் கழுதை, வீட்டை விட்டு கீழே இறங்கு”  என்று அவனை கழுத்தைப் பிடித்து வெளியே துரத்துகிறார். அவர் வேளாளக் கிருத்துவர். அவனோ கிருத்துவனான பறையன். கோபம் கொண்ட ஜான் தேனியேல், ராமசாமிப் பெரியாரின் சுமரியாதை இயக்கத்தில் சேர்ந்து விடுகிறான். தன் தங்கை மேல்  ராமநாதன் என்னும் பாப்பானுக்கு ஆசை என்று தெரிந்ததும் அவனுக்கும் ஜான் ஐயருக்கு வந்த மாதிரியே கோபம் வருகிறது. எல்லா ஜாதிக் கொடுமைகளுக்கும் காரணமே  இந்த பாப்பார சாதி தானே. அதை எப்படி அவனால் தாங்கிக்கொள்ள முடியும்? அந்தப் பாப்பான் தன் தங்கையை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் தான். ஆனாலும்,. இந்தப் பாப்பானுங்கள எப்படி பொறுத்துக்கொள்வது? கடைசியில் புதுமைப் பித்தன் கதை, “இதில் யார் புதிய நந்தன்? என்ற கேள்வியோடு முடிகிறது.

இந்தக் கதைகள் எல்லாம் புதுமைப் பித்தன் எழுதத் தொடங்கிய அவரது இருபதுகளின் பிராயத்தில் எழுதப்பட்டவை. இச்சிறு கதைகள் கலைவடிவில் குறைபட்டனவாகத் தோன்றலாம். ஆனால் அந்த வயதிலேயே, லக்ஷியத்துக்கும் நடைமுறை வாழ்க்கை உண்மைகளுக்கும் இடையேயான பெரிய வெளியையும் முரண்களயும் அவர் அறிந்திருந்தார். அது மட்டுமல்ல, அரசியல் சித்தாந்திகளும் அரசியல் வாதிகளும் சமூகப் பிரசினைகளுக்கு அளிக்கும் வாய்ப்பாட்டுத் தீர்மானங்களின் உணர்ச்சியற்ற வெளிப்பாடுகளையும் அவற்றின் போலித்தனத்தையும், அவை உள்ளீடற்ற பொக்கை என்பதையும் அறியும் பிரக்ஞை அவருக்கு இருந்திருக்கிறது. அப்பிரக்ஞை எழுப்பிய கேள்விகளுக்கு இவ்வளவு ஆண்டுகள் கழிந்த பின்னும் பதில்கள் கிடைத்த பாடில்லை. காலம் மாறியிருக்கிறது தான். மனிதனும் மாறியிருக்கிறான் தான். இருப்பினும்…..யார் புதிய நந்தன்? கட்சிகளும் சித்தாந்திகளும் தரும் வார்ப்புகள் பதில்கள் ஆக மாட்டா..

எண்பதுகளின் பின் பாதியிலிருந்து தான், இன்னும் சரியாகச் சொல்லப் போனால், தொண்ணூறுகளின் முன் பாதி வருடங்களில் தான் தலித் எழுத்துக்கள் என ஒரு திட்டமிட்ட செயல்பாட்டின் குரலாக இலக்கிய வெளிப்பாடு வரத் தொடங்கியது., ரொம்பவும் பழைய சமாசாரம் என்றும் சொல்ல முடியாது. சமீபத்திய நிக்ழ்வு என்றும் சொல்ல முடியாது. இலக்கிய வரலாறு என்று பார்த்தால் சமீபத்திய நிகழ்வும் தான். தலித் இலக்கியத் தோற்றத்திற்கான காரணம்,  தமிழ் நாட்டைப் பொருத்த வரை பல நிகழ்வுகள் ஒரு கட்டத்தில் ஒருங்கே சங்கமித்தது தான். ஒன்று பரணில் தூக்கி எறியப்பட்டிருந்த மண்டல் கமிஷனின் அறிக்கை, சில திடீர் அரசியல் காரணங்களுக்காக வெளிக் கொணரப்பட்டது. அது இந்தியா முழுதும் பெரும் கிளர்ச்சியைத் தூண்டியது. தமிழ் நாட்டை என்னவோ அது பாதிக்கவில்லை. தமிழ் நாட்டில் ஒதுக்கீடு என்பது மிகப் பழைய சமாசாரம். அது இங்கு யாரையும் திடுக்கிட வைக்கவில்லை.  இரண்டாவது தூண்டுதல், அம்பேத்கார் நூற்றாண்டின் சந்தர்ப்பத்தில் அம்பேத்கரின் எழுத்துக்களும் வாழ்க்கையும்  பெரிய அளவில் ஆங்கிலத்திலும், மொழி பெயர்க்கப்பட்டுத் தமிழிலும் அச்சிடப்பட்டு வெளிக் கொணரப்பட்டன

ambedkar2

தாழ்த்தப்பட்ட மனித சமுதாயத்தின் விடுதலைக்கு ஒரு தேவ தூதன் . அம்பேத்கர் வடிவில் தேவைப்படவே, நினைவுகளி லிருந்து மங்கி மறைந்து கொண்டிருந்த அம்பேத்கர் திரும்ப கண்டெடுக்கப்பட்டார். தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து வருவது மட்டுமல்லாமல்,  வன்முறையும் கொந்தளிப்பும் தீவிரமடைந்து வருவதை, சாதிகளை  ஒழிக்கவே தான் பிறந்ததாகவும் அதுவே தம் முழுமூச்சும் போராட்டமும் என்று கோஷமிட்டுக்கொண்டிருந்த திராவிட இயக்கம் இந்தக் கொடுமைகளை,  வன்முறைகளைக் கண்டு கொள்ளாது தம் கோஷங்களையே உரத்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அவரகள் கோஷத்துக்கும் சாதி ஒழிப்புக்கும் சம்பந்தமில்லை என்ற சமாசாரங்கள் வெளிச்சத்துக்கு வந்தது. .

இத்தகைய சூழலில் தான் கோடாங்கி, களம், மனுஷங்கடா, தலித், கிழக்கு, நிறப்பிரிகை போன்ற நிறைய பத்திரிகைகள் தலித் பிரச்சினைகளை முன்வைத்து வெளிவரத் தொடங்கின விளிம்பு, விடியல் போன்று தலித் எழுத்துக்களை பிரசுரிப்பதற்கென்றே புத்தக வெளியீட்டு ஸ்தாபனங்களும் தோன்றின. தலித் [பிரசினைகளை மையமாகக் கொண்டு போராடவும் பல ஸ்தாபனங்கள் தோன்றின. தலித் பிரசினைகளை மாத்திரமெ தம் அக்கறையாகக் கொண்ட நாடகக் குழுக்களும் தோன்றின. நாடகங்கள் எழுதப்பட்டன.

இரட்டைமலை சீனிவாசனார்
இரட்டைமலை சீனிவாசனார்

இவையெல்லாம் எண்பதுகள் தொண்ணூறுகளின் நிகழ்வுகள். ஆனால் ஒரு தூரத்துப் பழமையில் இவர்களுக்கு முன்னோடிகளும் சில இருந்தது  இப்போது தேரியவந்துள்ளது. 1871-ல் பஞ்சமன் என்ற பெயரில் ஒர் தலித் பத்திரிகை வெளி வந்ததாகத் தெரிகிறது. 1897-ல்  பறையன் என்ற பெயரிலும் ஒரு பத்திரிகை வெளிவந்ததாகக் கேள்விப் படுகிறோம். இரட்டை மலை சீனிவாசன் என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். அவர் முதலில் மகாத்மா காந்தியால் உந்தப் பட்டவராக இருந்ததாகவும் பின்னர் நீதிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றியவராகவும் தெரிகிறது. தலித் பிரச்சினைகளை முன் வைத்து இயங்கிய வர்களின் ஆரம்பத்தைக் கண்டறிய  இவ்வளவு தூரம் தான் பின் செல்ல முடிகிறது.

தலித்துகளின் அனுபவங்களையும் அவர்கள் தொடர்ந்து பெற்று வரும் ஏமாற்றங்களையும் பற்றி முதலில் பேச ஆரம்பித்தவர் தமிழவன் என்னும் பேராசிரியர், விமர்சகர். அவர் தலித் கிறுத்துவரா, அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து கிறுத்துவராக மதம் மாறியவரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. சாதியை ஒழிக்க உரத்துக் குரல் எழுப்புவோர் நிறைந்த இன்றைய தமிழ் நாட்டில் அடுத்தவனோடு எத்தகைய உறவை வைத்துக்கொள்வது என்பதற்கான முன் ஏற்பாடாக, முதலில் அவனது ஜாதி என்ன என்பதை  தெரிந்து கொண்டு பின் அதற்கேற்ப தம் உறவுகளைத் தீர்மானித்துக் கொள்ள அல்லது மாற்றிக்கொள்ள  ஆத்திரமும் அவசரமும் காட்டுகிறவர்களையே, அவர்கள் சாதி ஒழிய கோஷம் இடத் தொடங்கிய காலத்திலிருந்து பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறோம். இந்த சாதி உணர்வு கோஷமிடுபவர்களின் ரத்தத்திலேயே  ஊறியது. அவர்களில் உயிர் அணுக்களில் நிறைந்து காணப்படுவது. அது எவ்வளவு தீவிரம் கொண்டதோ அவ்வளவுக்கு அவர்கள் கோஷம் உரத்ததாக இருக்கும். இதெல்லாம் திராவிட இயக்க கட்சிகளின் சாதி ஒழிப்புப் போராட்டத்தின் கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால வாழ்வின் கொடை. தமிழவன் கர்நாடக பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருப்பவர். எனவே அவருக்கு கர்நாடக மாநிலத்தின் தலித் போராட்டங்கள் பற்றியும் தலித் இலக்கியங்கள் பற்றியும் நன்கு தெரியும். அதன் காரணமாகவே இயல்பாக  தமிழ் நாட்டின் தலித் இயக்கங்களின் செயல்பாடு,  தலித்துகள் நிலை, தலித் எழுத்துக்கள்  என்பன பற்றியெல்லாம் யோசிக்கத் தூண்டப் பட்டிருக்கிறார். இவ்விஷயங்கள் பற்றி அவர்  தானும் தன் நண்பர்களும் சேர்ந்து வெளியிடும் படிகள் என்ற இலக்கியச் சிறு பத்திரிகையில் எழுதியிருக்கிறார். அவர்தான் இதுபற்றியெல்லாம் இன்றைய கால கட்டத்தில் முதலில் பேசியவர் என்று நான் நம்புகிறேன். அவர் படிகள் பத்திரிகையில் எழுதியதிலிருந்து ஒரு முக்கிய பகுதியை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

தமிழ் நாட்டில் நடப்பது ஒரு மோசடி வேலை. இந்த மோசடியின் பெருமை திராவிட இயக்கத்தாரையே சாரும். அம்பேத்கர், புலே போன்றாரைப் பற்றி பெரியார் பேசத் தொடங்கியதால், திராவிடர் கழகத்தை தலித்துகள் நம்பினார்கள்.  ஆனால் திராவிட கழகத்தாரின் எண்ணத்தில் திராவிடர் கழகம் என்பது தமிழர்கள் கழகம் என்று தான் பொருள் பட்டது.  (அதாவது உயர் சாதியினரான வெள்ளாளர்கள் மாத்திரமே திராவிட கழகத்தின் சிந்தனையில் தமிழர்கள் ஆவார்கள். அம்பேத்கர் பேரைச் சொல்லிக் கொண்டே அவர்கள் தலித்துகளை ஏமாற்றினர். அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை விளைவிக்கவும் இன்னம் இது போன்ற பிற தேவைகளுக்கும்  தான் தலித்துகள் அவர்களுக்கு வேண்டும்.. திராவிட இயக்கத்தவர் தமிழ் நாட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியதும் உயர் சாதி ஹிந்துக்கள், கீழ வெண்மணியிலும், புளியங்குடியிலும் விழுப்புரத்திலும்  தலித் மக்களைக் கொலை செய்யத் தொடங்கினர், அப்போது தான் தலித்துகள் இந்த மோசடியை உணர்ந்தனர். இப்போது தலித்துகள் ஒன்று பட்டு போராடத் தொடங்கிவிட்டனர். இப் போராட்டங்களை தமிழ் இலக்கியத்தில், தமிழ் வரலாற்றில் பதிவு செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது.”

(ஒரு குறிப்பு. மேலே நான் மேற்கோள் காட்டியிருப்பது, நான் முதலில் இந்தியன் லிட்டரேச்சர் பத்திரிக்கைக்காக தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்ததிலிருந்து திரும்ப என வார்த்தைகளில் தமிழில் தந்துள்ளது. குறிப்பிட்ட படிகள் இதழ் என்னிடம் இல்லை. அதன் வருடம் மாதம் போன்ற விவரங்களும் என்னிடம் இல்லை. தமிழ் வாசகங்கள் என்னதாக இருந்தாலும், தமிழவனின் கருத்துக்கு உண்மையாகத் தான் என் இரண்டாம் மொழிபெயர்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன். இனி வரும் பல மேற்கோள் பகுதிகளும் இப்படித் தான் இருக்கும். )

இதைத் தொடர்ந்து,  தமிழவன் கர்நாடகாவிலும் மகாராஷ்டிரத்திலும் என்ன நடக்கிறது என்பது பற்றி எழுதுகிறார்.

indira_parthasarathyகடந்த அறுபதுகளில், திராவிட கழகம் தமிழ் நாடு அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு வருட காலத்துக்குள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழவெண்மணி, என்ற கிராமத்தில் உயர் சாதி ஹிந்து பண்ணை முதலாளிகள் ஹரிஜனங்கள் வாழ்ந்த குடிசைகளூக்கு தீவைத்தனர். அதில் சிக்கிய குழந்தைகளும், பெண்களும் கொண்ட  குடிசை வாழ் ஹரிஜன மக்கள் அனைவரும் தீயில் கருகி சாம்பலாயினர். இந்த படுகொலை பற்றி ஞானக் கூத்தன் எழுதிய கவிதை ஒன்று பரவலாக அறியப்பட்ட, பேசப்பட்ட ஒன்று. அவர் பிராமணர். இந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்திரா பார்த்த சாரதி எழுதிய குருதிப் புனல் என்ற நாவலும் தில்லி சாஹித்ய அகாடமியின் பரிசு பெற்றது. அந்த நாவல் பின்னர் ஒரு நீண்ட பலத்த சர்ச்சைக்கும் உள்ளாகியது. கீழவெண்மணி படுகொலைக் கான காரணங்கள் பற்றி பலர் பல வேறுபட்ட விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள். ஒரு தரப்பினருக்கு அது சாதிச் சண்டை. உயர்சாதி ஹிந்துக்களுக்கும் தலித்துகளுக்கும் இடையேயான சாதிக் கலவரம்.  இன்னொரு தரப்பினருக்கு.அது வர்க்கப் போர். பண்ணை முதலாளிகளுக்கும், பண்ணைத் தொழிலாளிகளுக்கும் இடையேயான வர்க்க[ப் போராட்டம். மூன்றாவது பார்வை, தமிழ் நாவலாசிரியர், இந்திரா பார்த்த சாரதி தன் நாவலில் முன் வைத்தது, இது  ஆண்மையிழந்த பண்ணை முதலாளி தன் இயலாமையின் ஆத்திரத்தில் தலித் பன்ணை வேலையாட்களைத் தீக்கிரையாக்கிப் பழி தீர்த்துக்கொண்டார் என்பது. அவரவர்க்கு அவரவர் பார்வை உண்டு தானே.

poomani_tamil_writerஇதெல்லாம் போக, தலித்துகளால் தலித்துகளின் வாழ்க்கை பற்றிய முதல் இலக்கியப் பதிவு, பூமணி எழுதிய பிறகு என்ற நாவல் தான். அது தமிழ் இலக்கியத்தில், தலித் இலக்கியத்தைத் தொடங்கி வைத்த ஒரு மைல்கல். ஆனால் பூமணி தன்னை தலித்தாகப் பிரகடனம் செய்து கொள்வதில்லை. தன் எழுத்துக்கள் தலித் இலக்கிம் எனப் பெயர் சூட்டப்படுவதையும் அவர் விரும்புவதில்லை. இந்நாள் வரை இல்லை. தமிழ் இலக்கியம் என்ற பேராற்றுப் பிரவாஹத்தில் தன்னையும் ஒருவனாக, தன் எழுத்தும் அப்பிரவாஹத்தில் சேரும் ஒன்றாக, தலித் என்ற அடைமொழி அடையாளங்களின் துணை இன்றி அறியப்படுவதையே அவர் விரும்புகிறார்.

(தொடரும்…)

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

4 Replies to “தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4”

  1. Pingback: Indli.com
  2. “அவர் ஏற்கனவே சுப்பிரமணிய பாரதி தன் சந்திரிகையின் கதை என்ற நாவலில் தலித் விடுதலைக்குத் தந்த ஒரு லக்ஷியத் தீர்வைக் {டெபுடி கலெக்டர் கோபாலய்யங்கார் தன் நண்பர் வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் வேலை செய்து வந்த மீனாட்சி மீது காதல் கொண்டு பிரம்ம சமாஜ முறைப்படி கலப்பு மணம் செய்துகொள்கிறார்.) கேலி செய்யும் வகையில் அக்கதையின் பின் நிகழ்வுகள் யதார்த்தத்தில் என்னவாக இருக்கும் என்று சித்தரிக்கிறா.”…..

    “சாதியை ஒழிக்க உரத்துக் குரல் எழுப்புவோர் நிறைந்த இன்றைய தமிழ் நாட்டில் அடுத்தவனோடு எத்தகைய உறவை வைத்துக்கொள்வது என்பதற்கான முன் ஏற்பாடாக, முதலில் அவனது ஜாதி என்ன என்பதை தெரிந்து கொண்டு பின் அதற்கேற்ப தம் உறவுகளைத் தீர்மானித்துக் கொள்ள அல்லது மாற்றிக்கொள்ள ஆத்திரமும் அவசரமும் காட்டுகிறவர்களையே, அவர்கள் சாதி ஒழிய கோஷம் இடத் தொடங்கிய காலத்திலிருந்து பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறோம்…”——–

    மதிப்பிற்குரிய வெங்கட் சாமிநாதன் அய்யா அவர்களுக்கு,
    ஒரு சாமானியன் என்ற முறையில் உங்களை ஒன்று கேட்க நினைக்கிறேன்; என்னுடைய அறியாமையை அவமரியாதையாய் எடுதுக்கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்.

    எழுதும் விஷயம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் மேலே குறிப்பிட்டுள்ள மாதிரி சங்கிலி தொடர்களாக வாக்கியங்கள் அமைக்கப்படும்போது சொல்ல வந்த செய்தி புரியாமல் போவதுடன் படிப்பதற்கே சோர்வு வந்துவிடுகிறது. ‘ஒரு சில அறிவு ஜீவிகளுக்காக மட்டும்’ என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டால்’ , என் போன்ற சாமானியர்கள் ‘இது நமக்கானது இல்லை’ என்று சிரமம் இல்லாது விலகிக்கொள்ள எளிதாய் இருக்கும்.

  3. அன்புள்ள பால ஸ்ரீனிவாசன்,

    நான் எழுதுவது ஏதும் புத்திஜீவிகளுக்கு என்று பிர்த்யேகமான பாஷையைக் கையாள்வதாகத் தோன்றினால் அது என் துரதிர்ஷ்டம். ஏனெனில் எனக்கு தெரிந்த ஒரே மொழியில் தான் எழுதுகிறேன். சாதாரண பொதுப்புத்திக்குப் புலப்படுகின்ற அபத்தமான ஆனால் புத்திஜீவிகள் ஒப்புக்கொள்ள, மறுக்கிற, அல்லது சொல்ல பயப்படுகிற கருத்துக்கள் காட்சிகளைத் தான் எழுதுகிறேன். திராவிட இயக்கங்களுக்கு பாப்பானைத் திட்டுவதைத் தவிர வேறு கருத்துக்கள் ஜாதிபற்றி தெரியாது என்கிற விஷயம் வெட்ட வெளிச்சம். இதைச் சொல்ல ஏதும் ஹார்வர்ட் யுனிவர்சிடி பட்டம் தேவையில்லை. போர்டு பவுண்டேஷன் பண உதவியோடு கள ஆராய்ச்சி தேவை
    இல்லை. இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம் பற்றியெல்லாம் நான் என்ன அப்படி புத்தி ஜீவிகளுக்கே மாத்திரம் புரியும் விஷயமோ, அகராதியைக் கையில் வைத்துக்கொண்டால் தான் புரியும் என்கிற
    பாஷையிலோ எழுதிவிட்டேன்?. இதை ஒப்புக்கொள்ள மறுக்கும் பாமரனுக்கும் புத்தி ஜிவிக்கும் காரணங்கள் என்னென்னவோ இருக்கக் கூடும். எனக்கு இருப்பது வெறும் பொதுப் புத்தி தான். இழக்க பெற எனக்கு ஏதும் இல்லை. இன்று காலையில் தியாகராஜ் ஆராதனை பார்த்தேன்.தியாகராஜர் சமாதி முன் ஆராதனையின் போது கைகூப்பி நின்றுகொண்டே இருந்தார் மந்திரி ஒருவர். பா.விஜய் தான் தெய்வ பக்தி கொண்டவன் என்றும் முருக பக்தன் என்றும் கோவில்களுக்குச் செல்வது தன் விருப்பம் என்றும் சொல்லியிருக்கிறார். தினகரன் பத்திரிகை, இங்கு தமிழ் நாட்டில் தமிழனக்கு பேச்சு தான் உயிர். பேசிப் பேசியே அரசைக் கைப்பற்ற முடிந்திருக்கிறது என்று தலையங்கம் எழுதுகிறது. . திமுக தலைவரின் மஞ்சத் துண்டும், நாஸ்திகமும் பகுத்தறிவும் வேஷம் என்று தெரிகிறது.. ஆனால் யாராவது சொல்கிறார்களா? வாலி? பா.விஜய்.? திமுக மந்திரி? உலக நாயகன்? இதற்கு என்ன புத்தி ஜீவித்தனம் தேவை? ஏன் சொல்வதில்லை?.

  4. ஸ்ரீ வேங்கட சுவாமிநாதன் அவர்களுக்கு,
    உங்கள் கட்டுரையை ஆர்வத்துடன் படித்தேன். அதில் உள்ள செய்திகளை ஆமோதிக்கிறேன். ஆனால், பால. ஸ்ரீனிவாசன் உங்கள் நடையை விமர்சித்ததில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. (ஆனால் அவரும் கொஞ்சம் கனிவுடன் எழுதியிருந்தால் இந்த வாக்கு வாதத்தைத் தவிர்த்து இருக்க முடியும்). அதைத்தப்பாக எண்ணவேண்டாம். உங்கள் நடை நல்ல இலக்கிய நடையாக இருந்தாலும், கொஞ்சம் சிறிய சிறிய வாக்கியங்களாக எழுதினால், இன்னும் நன்றாக இருக்கும். நான் சொல்லுவதைத் தப்பாகப் புரிந்துகொள்ளவேண்டாம், தயவு செய்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *