பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி

முந்தைய பகுதிகள்:

திருவரங்கம், திருமலை ஆகிய இரண்டு தலங்களோடு மாத்திரம் அல்லாமல், தமிழகத்தில் மேலும் பல வைணவத் திருத்தலங்கள் சங்ககாலத்திலேயே பிரபலமான வழிபாட்டுத் தலங்களாக விளங்கியிருந்தன. அத் தலங்கள் பற்றி இப்பகுதியில் காண்போம்.

திருமாலிருஞ்சோலை (மாலிருங்குன்றம்):

திருமாலிருஞ்சோலை

பேச்சு வழக்கில் “அழகர் கோயில்” எனும் புகழ் பெற்ற திருமாலிருஞ்சோலையானது, பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்களில் பழமையிலும் பெருமையிலும் குறைவிலாத் தலமாகும். சங்ககாலத்தில் இத்தலத்தில் பலராமனுக்கும் கோயில் இருந்ததாகப் பரிபாடலிலிருந்து அறிகிறோம். இம்மலையும் அதைச் சார்ந்த கோயிலும் தொன்றூதொட்டு இன்றுவரை மக்களை ஈர்த்திருக்கிறது. இது பல இலக்கியக்குறிப்புகளிலிருந்து புலனாகிறது. டாக்டர். வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் அவர்கள் எழுதிய “108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” நூலில் உள்ள குறிப்புகளின் மூலம் இதை அறியலாம் [1][2]. இது தவிர இராமானுஜரின் பிரதான சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வானும் 132 சுலோகங்களைக் கொண்ட பெரிய நூலாகிய “சுந்தர பாஹு ஸ்தவம்” என்ற வடமொழி ஸ்தோத்திரத்தையும் படைத்திருக்கிறார்.

இக் கோயிலைப் பற்றிச் சங்கப் புலவர்களும் பாடியுள்ளனர். பதினைந்தாம் பரிபாடல் இத்தலத்தைப் பற்றிப் பெரிதும் சிலாகித்துப் பேசுகிறது. இப்பகுதியில், “மலைகளிலே புகழ் வாய்ந்த, பழம் புலவர்களால் பாடப்பெற்ற மலைகள் பல உள்ளன. அவற்றுள் மனிதர்களுக்குப் பல பயன்களைத் தரும் மலைகள் சிலவே உள்ளன. அவற்றுள் தெய்வங்கள் விரும்பும் மலைகள் இன்னும் சில. அச் சிலவற்றுள், பலதேவனையும் திருமாலையும் தாங்கி நிற்கின்ற மாலிருங்குன்றம் சிறந்ததாகும்” [– பரிபாடல், 15:1-14] என்று இத் தலத்தின் சிறப்பு பாடப்படுகிறது.

தமிழகத்தின் வட எல்லையின் தலையாய திருத்தலம் திருவேங்கட மலை என்றால், அதற்கு ஈடாகத் தெற்கே திருமாலிருஞ்சோலைமலை உள்ளது.

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர்

என்று இராமானுச நூற்றந்தாதியில் திருவரங்கத்தமுதனாரும் அருளிச் செய்தார். பண்டைய தமிழிலக்கியங்களின்படி இவ்விரு மலைகளுக்கும் வேறொரு ஒற்றுமையுமுண்டு:

வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் – பொறிகட்கு
இருளீயும் ஞாலத்து இடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன்.

[முறைமை கொண்ட வேடத்தை உடையோய்! நீயும் நறுமணைத்தை உடையதாகிய – ஒலிக்கும் அருவிகளால் பொலிவுபெற்ற திருவேங்கடத்திற்குப் போவாயானால், ஐம்பொறிகளால் உண்டாகும் தீவினைகளெல்லாம் நீங்கப்பெற்று திருவாழியாகிய சக்கரப்படையை ஏந்தும் திருமாலின் அருளைப் பெறுவாய் — புறப்பொருள் வெண்பாமாலை, பாடாண் படலம், 42]

என்று தீவினைகளையெல்லாம் நீக்கி வீடுபேறு அளிப்பதாகப் பாடப்பட்ட வடவேங்கடத்திற்கு இணையாக, திருமாலிருங்குன்றமும் முக்தியளிக்கும் குன்றமாகத் தெற்கே விளங்கியிருப்பதை,

நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.
” [ — பரிபாடல், 15:15-18]

என்னும் சங்கப்பாடல் வரிகள் காட்டுகின்றன. இம்மாலிருங்குன்றமானது, திருமால் அருளாலன்றி பெறுதற்கரிய வீடுபேற்றினை, எளிதில் கிடைக்கக் கூடியதாகச் செய்யும் சிறப்பினை உடையது என்று மேற்கண்ட வரிகளில் புலவர்கள் பாடுகின்றனர்.

ஏவம் து3ர்லப்4ய வஸ்துனி-அபி ஸுலப4தயா ஹஸ்த2லப்3தே4 யத3ன்யத்
தன்வா வாசா தி4யா வா ப4ஜதி ப3த ஜன: க்ஷுத்3ரதைவ ஸ்பு2டேயம் |
ஏதே தாவத்3-வயம் து ஸ்தி2ரதரமனஸா விச்’வபீடா4பஹத்யை:
நிச்’-சே’ஷாத்மானமேனம் கு3ருபவனபுர-அதீச’ம்-ஏவ-ஆச்’ரயாம: ||

[இத்தகைய பெறுதற்கரிய (முக்தி நிலை என்னும்) பொருளானது (அனைவரும் வந்து அருள் பெறும்படி) எளிதில் கைக்கு எட்டும்பொழுது, அதை விட்டு (பொன்னும், பொருளும், புகழும், பதவியும் போன்ற) யாதொன்றை உடலாலோ வாக்காலோ புத்தியாலோ மக்கள் அடைய விரும்புகிறார்களோ, அப்பொருள் கீழானதென்று விளங்குகிறது. ஆகையால், நாம் உறுதி பூண்ட உள்ளத்துடன் அனைத்து பிறவித் துன்பங்களையும் நீக்கவல்ல குருவாயூர்க் கோமானாகிய கண்ணனையே தஞ்சமாகக் கொள்வோம். — ஸ்ரீமந் நாராயணீயம், 1.2]

என்று குருவாயூரைக் குறித்து ஸ்ரீ நாராயணபட்டர் பாடிய சுலோகத்தின் பொருளும் இங்கு ஒப்பிடத் தக்கது.

இத்தகைய பழம்பெருஞ் சிறப்பு வாய்ந்த இத் தலத்தில் “நூபுர கங்கை” என்ற புண்ணிய நதி இன்றும் உள்ளது. முத்துசுவாமி தீட்சிதர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ள “ஸ்ரீ ஸுந்த3ரராஜம் ப4ஜேஹம்” என்ற காசீராமக்ரியா (பந்துவராளி) இராகத்தில் அமைந்துள்ள கீர்த்தனையிலும் “நூபுரக3ங்கா3 தீர்த்த2 ப்ரபா4வ மாத4வம்” என்ற வரிகள் உள்ளன. தமிழில் இது “சிலம்பாறு” என்று வழங்கப்பெறும். “நூபுரம்” என்பதற்கு வடமொழியில் “சிலம்பு” என்று பொருள். திருமால் அண்டமனைத்தையும் ஈரடியால் அளந்தபொழுது பிரம்மாவின் லோகத்தை ஒரு பாதம் வருட, அப்பொழுது நான்முகக் கடவுள் தன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் திருமாலின் அப் பாதத்தைக் கழுவ, அதில் சில நீர்த்துளிகள் அவன் சிலம்பிற் பட்டு தெறித்ததால் ஏற்பட்ட நீரோடையே அது என்ற நம்பிக்கை உள்ளது. ஆகையால் “சிலம்பாறு” என்ற பெயர் ஏற்பட்டது. இச்சிலம்பாற்றின் பெருமையும் சங்க இலக்கியமாகிய பரிபாடலிலேயே திருமாலிருஞ்சோலைமலை குறித்த பாடலிலேயே வருகிறது. அதில், “ஆதிசேடனின் அவதாரமாகவும், கண்ணனுக்கு அண்ணனாகவும் விளங்கும் பலராமனுடைய வெண்கடம்பு மாலையைப் போல விளங்கி நின்ற சிலம்பாறு” என்று பின்வரும் வரிகள் கூறும்:

அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி,
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
” [— பரிபாடல், 15:19-23]

சிலப்பதிகாரமும் மதுரைக்காண்டம் காடுகாண் காதையில் திருமாலிருஞ்சோலை மலையின் சிறப்பினை விளக்குகிறது. அதில்,

நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை

என்ற வரியில் “நிலம் பிளக்கும் வண்ணம் ஆழ்ந்த சிலம்பாற்றின் அகன்ற கரை” என்று இளங்கோவும் பாடியுள்ளார். சிலம்பாற்றின் சிறப்பை இப்படிப் பல இலக்கியங்கள் பேசுகின்றன.

கள்ளழகர்

இம்மலையைப் பற்றிய மேலும் பல செய்திகளையும் கூறுகின்றது. “108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” புத்தகம் இதை நன்றாக விவரிக்கிறது:

“திருமாலைத் தரிசித்துவிட்டு திருவரங்கம் செல்லும் மாடலன் என்பான் இந்த மலையில் அமைந்துள்ள மூன்று தீர்த்தங்களைப் பற்றி வழியில் சந்தித்த கோவலன், கண்ணகி கவுந்தி அடிகள் ஆகியவரிடம் கூறுகிறான். ‘இங்கிருந்து நீங்கள் இடப்பக்கமாக உள்ள காட்டுவழியிற் சென்றால் திருமால் குன்றத்தை அடைவீர்கள். அங்கே ஒரு சுரங்கவழி இருக்கிறது. அவ்வழியிற் சென்றால் மூன்று தீர்த்தங்களைக் காணலாம். அவை புண்ணிய சிரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்பன. புண்ய சிரவணத்தில் நீராடினால் இந்திரனால் எழுதப்பட்ட “ஐந்திர வியாகரணம்” என்னும் நூலறிவை நீங்கள் பெறுவீர்கள். பவகாரிணியில் மூழ்கினால் பழம் பிறப்பைப் பற்றிய அறிவுண்டாகும். இட்டசித்தியில் நீராடினால் நினைத்ததெல்லாம் கைகூடும்.'”

மாலிருங்குன்றத்தின் சிறப்பைப் பரிபாடல் மேலும் பாடுகிறது. அவ்வரிகளின் பொருள் பின்வருமாறு:

“நீர்நிலைகளில் நறுமணம் கமழும் நீல மலர்கள் பூத்திருப்பதனாலும், அதனைச் சூழ அசோக மரங்களும் வேங்கை மலர்களும் பூத்திருப்பதனாலும் அம்மலை திருமாலின் தோற்றத்தைப் போலவே காட்சியளிக்கும். ஆகையால், கோயிலுக்குச் சென்று தொழ இயலாதவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே அம்மலையையாவது கண்டு தொழுங்கள்.

“அம்மலையிலே தத்தம் குட்டிகள் உடலைப் பற்றித் தழுவ குரங்குகள் ஒரு சிகரத்தில் இருந்து இன்னொரு சிகரம் வரை பாயும். மயில்கள் அகவ, குருக்கத்தி மரங்கள் இலையுதிர அதனின்றும் குயில்கள் கூவும். அம்மலையின் குகைகளிலே எழுகின்ற எதிரொலி நிற்காது.”

“கொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலை” [3a], “தண்டலை ஆர் திருமாலிருஞ்சோலை” [3b], “பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலைமலை” [3c] என்று திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய அழகர் அந்தாதியில் உள்ள வருணிப்பு இங்கு ஒப்பிடத்தக்கது. இங்ஙனம் பரிபாடல் அம்மலையின் இயற்கை எழிலையும் வருணிக்கிறது. “ஸர்வக3ந்த4” என்று சாந்தோக்ய உபநிஷத் சொல்வதால் வெறும் “நீல மலர்கள்” என்று அல்லாமல், “நறுமணம் கமழும் நீல மலர்களே” இவ்வரிகளில் திருமாலின் திருமேனிக்கு ஒப்பாகிறது.

புவ்வத் தாமரை புரையுங் கண்ணன்
வௌவற் காரிருண் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்துந் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்
அன்பது மேஎ இருங்குன் றத்தான்

[தன் உந்தியிலே தோன்றிய தாமரை மலர் போன்ற திருக்கண்களையும், நீரைத் தாங்கிச் செல்லும் மேகத்தையும் நீல மணியையும் ஒத்த திருமேனியையும் உடையவனாய், எல்லா உலகத்திலும் வெளிப்பட்டு, உயிர்க்கூட்டங்களின் பிறவித் துன்பத்தை அறுக்கும் திருமால், அக்குன்றத்தே ஆர்வத்தோடு எழுந்தருளியிருக்கிறான் — பரிபாடல், 49-53]

இவ்விடத்தில் கண்களை வருணிக்கும்பொழுது “தஸ்ய யத: கப்யாஸம் புண்ட3ரீகம் இவ அக்ஷிணீ” என்ற சாந்தோக்ய உபநிஷத் வாக்கியமும், திருமேனியை வருணிக்கும்பொழுது “நீல தோயத3 மத்4யஸ்த2 வித்3யுல்லேகை3வ பா4ஸ்வர:” என்ற தைத்திரீய உபநிஷத் வாக்கியமும் புலவர்களால் தமிழாக்கப்பட்டுள்ளது. “அவ்வயின் மன்பது மறுக்கத் துன்பங் களைவோன் (உயிர்க்கூட்டங்கள் பிறவித்துன்பம் களையப்பெற தஞ்சம் புகும் இடம்)” என்பது “நாராயணன்” என்ற திருநாமத்தின் பொருளை உணர்த்துகிறது. அங்ஙனம் பிறவியறுக்கும் திருமாலே அம்மலையில் எழுந்தருளியுள்ளான் என்று கூறியிருப்பதும் பழந்தமிழர்கள் ‘கோயிலில் எழுந்தருளியிருப்பவன் தெய்வமே வெறும் கற்சிலை அன்று’ என்ற கொள்கையை உடையவர்களாயிருந்ததைக் காட்டுகிறது. “அன்பது மேஎ இருங்குன் றத்தான (ஆர்வத்தோடு எழுந்தருளியிருக்கிறான்)” என்பது மற்ற இடங்களில் பொதுவாக வியாபித்திருப்பது போல் அல்லாமல், தன் திருக்கல்யாண குணங்களுடன் சிறப்பாக எழுந்தருளியிருப்பதைக் காட்டுகிறது.

கூடல்/இருந்தையூர் (மதுரை):

கூடல் அழகர்

“திருக்கூடல்” என்று அழைக்கப்பெறும் மதுரைக் கூடலழகர் கோயிலைப் பற்றிய செய்தியும் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது:

வானார் எழிலி மழைவளம் நந்தத்
தேனார் சிமய மலையின் இழி தந்து
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வாநின்
திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே
” [— பரிபாடல் திரட்டு, 1]

என்று பரிபாடல் இத்தலம் பற்றிக் கூறும். இங்கு திருமால் இருந்த (அமர்ந்த) திருக்கோலத்தில் காட்சியளிப்பதால் அந்நகரத்திற்கு “இருந்தையூர்” என்ற பெயரும், “இருந்தையூர் அமர்ந்த செல்வன்” என்று அவ் விறைவனுக்குப் பெயரும் ஏற்பட்டது. இந்நகர்வாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், இயற்கை எழில், முதலிய கூடல்மாநகரின் பல சிறப்புகளைப் பாடும் இதே பரிபாடல், அங்கு ஆதி சேடனுக்கும் கருடனுக்கும் தனியாகக் கோயில்கள் இருந்ததாகக் கூறுகிறது.

மதுரை மாநகரத்திற்குக் “கூடல்” என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தை “108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” நூலில் ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார். சுட்டப்படும் வரிகளில், சங்க காலத்திலேயே வடநாட்டு நம்பிக்கைகளுக்கும் தென்னாட்டு நம்பிக்கைகளுக்கும் இருந்த ஒற்றுமை புலனாகிறது:

“ஆறுகள் கூடும் துறைகளையே புனிதமான இடங்களாக கருதும் பழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவுவதாகும். வடநாட்டில் கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடும் இடம் ‘திரிவேணி சங்கமம்’ ஆயிற்று.

“தமிழர்களும் இவ்விதம் ஆறுகள் கூடும் இடங்கட்கு முக்கியத்துவமும் புனிதத்துவமும் அளித்தனர். மூன்று நதிகள் கூடும் இடத்தை முக்கூடல் எனவும் இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர் எனவும் தமிழர் பெயரிடலாயினர். தொண்டை நாட்டில் பாலாறு, சேயாறு, கம்பையாறு மூன்றும் சேரும் இடத்தை திருமுக்கூடல் என்று பெயரிட்டனர். நெல்லையில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி என்னும் கயத்தாறு, இம்மூன்றும் சேருமிடம் முக்கூடல் ஆயிற்று. முக்கூடற் பள்ளு என்னுஞ் சிறந்த நாடகம் இவ்வூரைப் பற்றியெழுந்ததே.

“இஃதே போன்று ‘கிருதமாலா’ என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து இவ்வூரை (மதுரை) அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று.”

வைகையாற்றால் சூழப்பட்ட மதுரையில் எழுந்தருளியிருப்பதால் இப்பெருமானை, “நீடுநீர் வையை நெடுமால்” என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இக்குறிப்பு, ஆய்ச்சியர் குரவை முடிந்தவுடன் மாதரி என்ற ஆயர் மகள் புஷ்பம், தூபம், சந்தனம், மாலை முதலானவற்றால் இத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்குவதாக உள்ளது:

ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவூம் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
தூவித் துறை படியப் போயினாள்.

[— சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், துன்ப மாலை:2-7]

மேற்கண்ட பகுதியில், “நெடுமால்” எனும் இடத்திற்கு, “இருந்த வளமுடையான்” என்று அரும்பத உரையாசிரியர் இட்டிருப்பதிலிருந்து கூடல் மாநகரில் உள்ள அழகர் எழுந்தருளிய கோயிலே இங்கு குறிக்கப்படுவதற்குச் சான்றாகிறது. மதுரைக்காஞ்சியிலும்,

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்,
” [590-591]

எனும் வரிகள் ஆவணி மாதத் திருவோணத்தில் கூடல் அழகருக்கு விழா நடந்திருப்பதைக் கூறுவதாக அறிஞர் கொள்வர்.

திருவிதாங்கோடு (திருவனந்தபுரம்):

பத்மநாபன்

இன்று ஸ்ரீ பத்மனாப சுவாமி கோயில் என்று வழங்கப்படும் திருத்தலம் குறித்த செய்தி சங்க இலக்கியத்தில், எட்டுத் தொகை நூல்களுள், மலைநாட்டு-சேர-அரசர்கள் பற்றிய பதிற்றுப்பத்தில் காணப்படுகிறது. இவ்வாலயத்திற்கு, மக்கள் தலைமேல் கைகூப்பி நான்கு திசைகளிலிருந்தும் திறள் திறளாக வந்து வணங்குவதாகக் கூறிவிட்டு, கோயில் கொண்டுள்ள திருமால் விக்கிரகத்தை வருணிக்கிறது:

வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி
” [— பதிற்றுப்பத்து, 31:7-12]

(திருஞெமர் அகலம் = இலக்குமிப் பிராட்டி விரும்பும் மார்பு; திகிரி = சக்கரம்)

திருவிதாங்கோட்டு மன்னர்கள் ஈராயிரம் வருடங்களுக்கும் மேலாக ஸ்ரீ பத்மனாபனின் திருவடிகளைத் தொழுபவர்களாக இருந்து வருவது சிலப்பதிகாரத்திலுள்ள சில வரிகள் காட்டுகின்றன. “108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” கூறும் சிலப்பதிகாரச் செய்தி:

“சிலப்பதிகாரம் திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று வர்ணிக்கிறது.
சேரமன்னன் செங்குட்டுவன் வடபுலத்தின் மீது படையெடுத்துச் செல்கின்ற
போது ஆடகமாடமாகிய திருவனந்தபுரத்தில் அறிதுயலமர்ந்த மணிவண்ணன்
அணிந்த மாலையை வாங்கி செங்குட்டுவன் சூடிச்சென்று ‘தொடுத்த
தூவாய்முடி சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்’ என்ற
பெரியாழ்வாரின் வாக்குப்படி சென்றான் என்பதை,

” ‘ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம்கொண்டு சிலர் நின்றேத்த
ஆங்கது வாங்கி அணிமணி புயத்துத் தாங்கினன்
ஆசித்தகை மையின் செல்வுழி’

என்கிறார் இளங்கோவடிகள். ஆடக மாடம் – திருவனந்தபுரம் சேடம் – மலர்மாலை.”

கச்சி மூதூர் (திருவெஃகா/காஞ்சிபுரம்):

திருவெஃகா

கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய ‘பெரும்பானராற்றுப்படை’ என்னும் பத்துப்பாட்டு நூலில், கச்சி மூதூரில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் பற்றி தெளிவாக உள்ளது. இவ்வரிகள், திருமால் பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பதற்குக் குன்றுதனில் யானை படுத்திருப்பதை உவமையாகக் கூறுகிறது:

நீடுகுலைக் காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடி

அருந்திறற் கடவுள் வாழ்த்தி…

[– பெரும்பாணாற்றுப்படை, 372-391]

இங்ஙனம் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் ஆலயங்களில் திருமால் வழிபாட்டின் தொன்மை வெளிப்படுகிறது. வேதாந்தம், சிருஷ்டி, பிரபஞ்சவியல் தத்துவங்களைப் பல இடங்களில் பாடிய பண்டைத் தமிழ்ச் சான்றோர் உருவ வழிபாட்டையும் விரும்பிக் கடைப்பிடித்திருந்தது இச்சான்றுகளிலிருந்து தெரிகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்

^[1] “பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய 6 ஆழ்வார்களால் 123 பாக்களால் பாமாலை சூடப்பட்ட மாண்புடைத்து இத்தலம். தந்தையும் மகளுமான ஒரு வீட்டு ஆழ்வார்களான பெரியாழ்வாரும். ஆண்டாளும் இப்பெருமானிடம் கொண்ட பக்தி பற்றி தனி நூல் ஒன்றே எழுதிவிடலாம்.”

^[2] “திருப்புகழ் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. … கந்த புராணத்தில் “முக்திதரு பேரழகு திருமலை” என்று போற்றப்படுகிறது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்னும் அழகிய மணவாளதாசர் இந்த அழகரைப்பற்றி அழகர் அந்தாதி பாடியுள்ளார். சுமார் 300 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த கவிகாலருந்திரர் என்னும் புலவர் ஒருதனிப் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். வேம்பத்தூரைச் சேர்ந்த கவிகுஞ்சரம் அய்யர் என்பவர் அழகர் கலம்பகம் என்னும் நூலை இயற்றியுள்ளார். 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல பட்டடை சொக்க நாதப் புலவர் “அழகர் கிள்ளை விடு தூது என்னும் இலக்கிய மணி மாலையை அழகருக்குச் சமர்ப்பித்துள்ளார். “கவிக் குஞ்ச(ர?) பாரதி” சோலைமலைக் குறவஞ்சி என்னும் நூலில் மலையழகையும், அங்குள்ள கோவில்களையும், இயற்கை காட்சிகளையும் வர்ணிக்கிறார். மற்றும் திவ்ய சூரி சரிதம், ஸ்ரீகம்ச சந்தேகம் (ஸ்ரீ ஹம்ஸ ஸந்தேசம்?), போன்ற நூல்களும் இத்தலம் பற்றிப் பேசுகின்றன. கோவில் ஒழுகு என்னும் நூலும் இத்தலம் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கின்றது.”

^[3a] அழகர் அந்தாதி, 22. பொருள்: விரும்பிப் பறிக்கத்தக்க வாசனையுள்ள மலர்கள் சிந்தப்பெற்ற திருமாலிருஞ்சோலைமலை.

^[3b] அழகர் அந்தாதி, 23. பொருள்: குளிர்ச்சியான இடத்தையுடைய சோலைகள் நிறைந்த திருமாலிருஞ்சோலை.

^[3c] அழகர் அந்தாதி, 25. பொருள்: குஞ்சுகளுடன் மயில்கள் சூழப்பெற்ற குளிர்ந்த திருமாலிருஞ்சோலைமலை.

129 Replies to “பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி”

  1. திருமாலிருஞ்சோலையில் தற்போது பலராமனுக்கு ஆலயம் இல்லை.. ஆக, இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிற முருகனைத் தான் வைணவர்கள் அல்லது விஷ்ணு பக்தர்கள் பலராமனாகக் கண்டார்களா? என ஐயுறுகிறேன்..

    சாதாரணமாக கண்ணனும் கந்தனும் ஒன்றாகச் சங்கமிக்கும் சோலை மலையில் இவ்விரு தெய்வங்களும் ஒன்றாகக் காட்சியளிக்கின்ற சிறப்பு இந்து சமயத்தின் நீண்ட பெரும் ஒற்றுமையின் ஆதாரமாகக் காட்டலாம்.. இங்கே திருமுருகாற்றுப்படையையும் இணைத்துச் சிந்திப்பது அத்தியாவசியமானது..

  2. முருகன் தான் பலராமனா என்று எனக்குத் தெரியாது. ஆனால், என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் பகவானின் சதுர்வியூக வடிவங்களை மும்மூர்த்திகளாக ஒப்பிடலாம். வாசுதேவன், சங்கர்ஷணன், பிரதியும்ணன், அநிருத்தன் ஆகியவை சதுர்வியூகங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவையே முறையே கண்ணன், பலராமன், கண்ணனின் முதல் மகன், முதல் பேரனாக துவாபர யுகத்தில் அவதரித்தனர். உபன்யாசகர்தாக்களின் வார்த்தைகள்படி பிரதியும்ணன் படைப்புதொழிளையும் (பிரம்மதேவன்), அநிருத்தன் காத்தலையும் (திருமால்), சங்கர்ஷணன் அழித்தலையும் (சிவபெருமான்) செய்கின்றனர். வாசுதேவனான பரமாத்மா முத்தொழிலையும் புரிகிறான். இந்த சங்கர்ஷணன் என்ற பெயர் எனவே பகவானின் முதல் வியூகமான பலராமனுக்கும் பொருந்துகிறது. சிவபெருமானின் தலைசிறந்த துதியான ஸ்ரீ ருத்ரத்திலும் ‘சங்கர்ஷன மூர்த்தி ஸ்வரூபோ யோசா வாதித்யா’ என்று வருவது குறிப்பிடத்தக்கது. “பலராமனின் அம்சம் சிவன்” என்பது வைணவம், “சிவனின் அம்சம் பலராமன்” எனலாம் சைவம். அது அவரவர்களது நம்பிக்கை. மேலும், திருமாலின் தொழிலான காத்தலையே அநிருத்தன் செய்கிறான். “கண்ணனைப்போலவே அவன் முதல் பேரனான அநிருத்தன் விளங்கினான்” என்கிறது பாகவதம்.

    சற்று விளக்குங்கள்…

    நன்றி,
    பாலாஜி.

  3. ஏகாதசி நன்னாளில் அழகனைப்பற்றிய இவ்வழகிய வ்யாசம் வாசிக்க நேர்ந்தது குரு க்ருபையே. சில நாட்களாய் அடுக்கடுக்கான நாழங்களும் அதற்கான உத்தரங்களும் படித்துப்புளித்தபின் இந்த வ்யாசம் வாசிப்பது கூட அடுத்தபடியே. நிகரிலா புவன சுந்தரனின் திருவிண்ணகரமும் அதன் பின்னே காட்சியளிக்கும் குளிர்மாமலையின் சித்ரமும் கூட அழகு பொலியவே இருக்கிறதே. கீழ்க்கண்ட பாசுரம் ஞாபகம் வருகிறது.

    பலபல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை
    அலவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன்மலை
    குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை
    நிலமலை நீண்டமலை திருமாலிருஞ்சோலையதே.

    \\\\\\நீர்நிலைகளில் நறுமணம் கமழும் நீல மலர்கள் பூத்திருப்பதனாலும், அதனைச் சூழ அசோக மரங்களும் வேங்கை மலர்களும் பூத்திருப்பதனாலும் அம்மலை திருமாலின் தோற்றத்தைப் போலவே காட்சியளிக்கும். ஆகையால், கோயிலுக்குச் சென்று தொழ இயலாதவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே அம்மலையையாவது கண்டு தொழுங்கள்\\\\

    கனம்கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்துஅகல் ஞாலமெல்லாம்
    இனம்குழு வாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே.

    ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பலவாயிரமும்
    ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே..

    இதைப்படிக்குங்காலே சுந்தர சைலத்தின் தண் காற்று நம்மைத் தொட்டருள் புரிவது போலுள்ளது.

    \\\\\\\\\அம்மலையிலே தத்தம் குட்டிகள் உடலைப் பற்றித் தழுவ குரங்குகள் ஒரு சிகரத்தில் இருந்து இன்னொரு சிகரம் வரை பாயும்\\\\\\\\

    ஸுந்தரபாஹுஸ்தவத்தில் இந்த மந்திகளைப்பற்றி ஒரு ச்லோகம் வரும். இவ்வழகர் மலைவாழும் மந்திகள் கூட எப்படி தீர வைஷ்ணவர்கள் எனப்பொருள்படும் படியான ச்லோகம். நினைவில் வரவில்லை.

    \\\\\\\\\\ சுட்டப்படும் வரிகளில், சங்க காலத்திலேயே வடநாட்டு நம்பிக்கைகளுக்கும் தென்னாட்டு நம்பிக்கைகளுக்கும் இருந்த ஒற்றுமை புலனாகிறது:

    “ஆறுகள் கூடும் துறைகளையே புனிதமான இடங்களாக கருதும் பழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவுவதாகும். வடநாட்டில் கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடும் இடம் ‘திரிவேணி சங்கமம்’ ஆயிற்று.\\\\\\\\\\

    அழகனைப்பற்றிய வ்யாசத்தில் தேச ஒற்றுமை பற்றிய ப்ரஸ்தாபம் ச்லாக்யமானது. ஆழிப்பேரலை போன்று தேசத்தைக் கபளீகரம் செய்யவிழைந்த ம்லேச்சப்பதர்களை ஹிந்துஸ்தானம் முழுதும் பகவன்னாம வைபவத்தால் எதிர்கொண்டவர்கள் வைஷ்ணவர்களன்றோ?

    ஸுந்தரசைலம் பஜத

  4. சேரன் செங்குட்டுவன் , “செஞ்சடை வானவன் (சிவபெருமான்”) அருளினில் விளங்க; வஞ்சித் தோன்றிய வானவன்”; “ஆனே றூர்ந்தோன் அருளில் தோன்றி, மாநிலம் விளக்கிய் மன்னவன்”. ஆதலின் , ஆடகமாடத் தறிதுயி லமர்ந்தோன், சேடங்கொண்டு சிலர்நின்றேத்த (அந்தணர் ஸ்வஸ்தி வாசகம் சொல்லி ஆசீர்வதிக்க), அவன் சைவநெறி நிற்போனாகையால், பெருமாளின் சேடத்தை அலட்சியம் செய்யாமல் “ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்”. புயத்துத் தாங்கினன் என்றதை நன்கு கவனிக்கவும் . மாலையாக மார்பில் அணியவில்லை. சேடம் என்பதற்கு மாலை என்பது பொருளோ? அத்தகைய சொல்லாட்சி இருப்பதாகத் தெரியவில்லை. சேடம் – பிரசாதம் என்னலாம். சேரன் செங்குட்டுவனின் தலைநக்ர் வஞ்சி எனப் பெயரிய கொடுங்கலூராம். அதற்கும் திருவனந்த புரத்திற்கும் இடையே அமைந்துள்ள தூரம் எவ்வளவு என்றும் அதனைக் கடக்க அக்காலத்தில் சேடக் குடும்பிக்கு எவ்வவளவு நாட்கள் ஆகியிருக்கும் என்றும் ஆடகமாடத் தறிதுயிலமர்ந்தோன் சூடிக் களைந்த மாலை வஞ்சிக்கு வருவதற்குள் சறுகாகியிருக்கும் என்றும் சொல்லத் தேவையில்லை.

    பொதுவாக பெருமானின் பிரசாதம் எனினும் பெருமாளின் பிரசாதம் எனினும் உச்சியின் மீது வைத்துப் போற்றிப் பின் நெற்றியிலோ மார்பினிலோ அணிவது சமயநெறி. சேரன் ஏன் அவ்வாறு செய்யவில்லை? சேரனின் இளவல் இளங்கோ அடிகள் காரணத்தைத் தெளிவாகக் கூறுகின்றார். செங்குட்டுவனின் சிரசின் மீது ஏற்கெனவே சிவபரம்பொருளின் சேவடி பதிந்துள்ளது. “தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்”. சூடுவோன் உள்ளத்தின் நிலைக்கும் தாங்குவோன் உள்ள நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு பெரிது.

    சிவனடியானாகிய சேரன் செங்குட்டுவன் மிகச் சிறந்த சமயப் பண்பாட்டை ஒழுகிக் காட்டினான்.

  5. மனம் கவரும் படங்கள்;
    அருமையான கருத்துகள்.
    சோலைமலை மூலவரான பரம ஸ்வாமியின்
    படத்தையும் போட்டிருக்கலாம்.
    ‘சங்க சக்ர கதா கட்க பாணிம்’
    என ஸ்ரீ தீக்ஷிதரவர்கள் அப்படியே
    வர்ணித்திருப்பார்.

    கந்தர்வன் அவர்களுக்கு வாழ்த்துகள்

    தேவ்

  6. “.// “பலராமனின் அம்சம் சிவன்” என்பது வைணவம்சிவனின் அம்சம் பலராமன்” எனலாம் சைவம். அது அவரவர்களது நம்பிக்கை.///

    செத்துப்பிறக்கின்ற மாபாரத மாநுடர்களைச் சிவம் என்பவன் சைவனாகான். எச்சைவனும் இவ்வாறு கூறான்.
    “பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
    நீலமணிமிடற் றொருவன் போல
    மன்னுக பெரும நீயே” (புறம்)

    பிறவாயாக்கைப் பெரியோன்” சிலப்பதிகாரம்) ‘எட்ன்றும் பிறவாத யாக்கையையுடைய இறைவன் கோயிலும்’, ‘யாக்கையிற் பிறவாப் பெரியோன் எனினுமமையும்; என்றது அரூபி’ என்றபடி எனும் உரை

    “விண்ணோ ரமுதுண்டு சாவ வொருவரும்
    உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்வோய்” சிலம்பு

    “கறைமிட றணியலு மணிந்தன்று அக்கறை
    மறைநவி லந்தணர் நுவலவும் படுமே” (புறநானூறு) முதலிய சங்கச் சான்றோர் வாக்குகளால் சிவன் யாரென அறிக.

    சிவனைச் சார்ந்தவர்கள் தீயவரெனினும் உய்ந்து சிறப்புறுவர். இக்கருத்தை வைணவப் பாகவதமும் இயம்பும்.
    “விடமும்வந் தீசன் கோல மிடற்றினி னீல வண்ண
    வடிவுபெற் றணிய தாகி வயங்கிற்றுப் பெரிது மென்றால்
    கொடியரும் பெருமையோரைக் கூடின்வெங் கோது நீங்கி
    ஒடிவறு நலம்பெற் றுய்த லுரைப்பதெ னுலகி னம்மா”

    பலராமனும் கண்ணனும் இராமனும் அவ்வாறு உய்ந்தோராவர் .இவர்கள் சிவனருள் பெற்றோரெனவே, சைவர்கள் இவர்களைச் சிவனடியார்கள் எனக் கொண்டாடவே செய்வர்.

  7. // செத்துப்பிறக்கின்ற மாபாரத மாநுடர்களைச் சிவம் என்பவன் சைவனாகான். //

    இப்படிச் சொல்ல வேண்டாமே. சைவத்தில் பலராமனை சிவனின் அம்சமாகக் கொள்வதில்லை என்று சொன்னாள் போதுமே.

    மகாபாரதமும் பாகவதமும் பலராமனை முழுமுதர்போருளின் வடிவமாகியி திருமாலின் அம்சமாகத் தானே கூறுகிறது? அத்துடன், இவ்வரிகளில் பலராமன் ஆதி சேடனின் அவதாரம் என்று மகாபாரதம், பாகவதம், சங்க இலக்கியங்கள் கூறுகின்றபொழுது, எப்படி “செத்துப் பிறக்கின்ற மானிடர்” என்று சொல்ல முடியும்?

    //
    “கறைமிட றணியலு மணிந்தன்று அக்கறை
    மறைநவி லந்தணர் நுவலவும் படுமே” (புறநானூறு) முதலிய சங்கச் சான்றோர் வாக்குகளால்
    //

    இது பிற்காலத்தில் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது ஆயிற்றே, இதெப்படி

  8. முந்தைய மறுமொழியை நிறைவு செய்ய மறந்து விட்டேன்…

    //
    “கறைமிட றணியலு மணிந்தன்று அக்கறை
    மறைநவி லந்தணர் நுவலவும் படுமே” (புறநானூறு) முதலிய சங்கச் சான்றோர் வாக்குகளால்
    //

    இது பிற்காலத்தில் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்ட கடவுள் வாழ்த்து ஆயிற்றே, இது சங்க காலத்திற்கும் பிற்பட்டதாகும்.

  9. // புயத்துத் தாங்கினன் என்றதை நன்கு கவனிக்கவும் . மாலையாக மார்பில் அணியவில்லை. சேடம் என்பதற்கு மாலை என்பது பொருளோ? அத்தகைய சொல்லாட்சி இருப்பதாகத் தெரியவில்லை. //

    தவறிருக்கலாம். இது ‘108 வைணவ திவ்ய தேச” நூலாசிரியர் கருத்தாகும். அந்நூலிலிருந்து இட்ட மேற்கோள் தான் அது. இடங்கோவடிகளின் கருத்தோ, உரையாசிரியர் நச்சினார்க்கிநியருடைய கருத்தோ, அல்லது அரும்பத உரைக்காரருடைய கருத்தாகவோ தெரியவில்லை என்று தெளியலாம்.

  10. நல்ல தொகுப்பு கந்தர்வன்.

    // ஆடகமாடத் தறிதுயி லமர்ந்தோன் //

    சமீபத்தில் ஒரு இலக்கிய அறிஞருடன் பேசிக் கொண்டிருக்கையில் இது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தைக் குறிக்கலாம் என்று கூறினார். சங்க இலக்கியங்களில் திருவனந்தபுரம் பற்றிய நேரடிக் குறிப்பு இல்லை. ஆனால் “வளநீர் வாட்டாறு” என்ற குறிப்பு உள்ளது.

    திருவனந்தபுர ஆலய கட்டுமானத்தை விட திருவட்டாறு ஆலயத்தின் கட்டுமானம் பழமையானது. அளவிலும், கலைநேர்த்தியிலும் சிறப்பானது. எனவே “ஆடக மாடம்” எனப்பட்ட அணிமாடக் கோயில் அதுவாகவே இருக்கலாம் என்கிறார் அவர். என்ன நினைக்கிறீர்கள்?

  11. அன்புள்ள பாலாஜி அவர்களுக்கு,

    பொதுவாக, பலராமனைப் பற்றிய பல வர்ணனைகள் (மதுபானத்தால் சிவந்த கண்கள், முன்கோபம்.. ) அவனை தாமச குணமுடையோனாகவே சித்தரிக்கின்றன. யமுனையைத் தன் கலப்பையால் கீறி வரவழைத்த தொன்மம் விவசாயத்திற்காக ஆற்றைத் திருப்பி வாய்க்கால் உருவாக்குதல் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம். வரலாற்று, சமூகவியல் ரீதியாக பலராமன் விவசாயத் தெய்வமாகவே கருதப் படுகிறான். அதனால் தான் கலப்பை அவனுக்கு ஆயுதமாகிறது. வைஷ்ணவ இறையியலில் ருத்ரனை பொதுவாக தாமச குணத்துடனேயே தொடர்பு படுத்துவார்கள். அதனடிப்பையில் நீங்கள் கூறுவது போன்ற கருத்தாக்கங்கள் எழுந்திருக்கலாம்.

    அன்புள்ள முத்துகுமாரசுவாமி அவர்களுக்கு,

    // செத்துப்பிறக்கின்ற மாபாரத மாநுடர்களைச் சிவம் என்பவன் சைவனாகான். எச்சைவனும் இவ்வாறு கூறான்.//

    பூவினில் கந்தம் பொருந்தியவாறு போல்
    சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது

    என்ற திருமூலர் வாக்கையும் மனதில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

    துர்வாசர், கௌசிகர், பிரம்மா, மிருகண்டு முனிவரின் புத்திரர்கள், தேவேந்திரன், பாணாசுரன், ஹரி, சக்தி, கண்வர், அத்ரி, ததீசி, பிருஹஸ்பதி, கௌதமர் ஆகிய முனிவர்கள், ராமர்கள் (பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன்), ஆகியோர் பாசுபதர்கள் என்று கூறும் ஒரு சுலோகத்தைப் படித்திருக்கிறேன்.

    தூர்வாச கௌசிக விரிஞ்சி மிருகண்டு புத்ரான்
    தேவேந்த்ர பாண ஹரி சக்தி ததீசி ராமான்
    கண்வாத்ரி பார்கவ பிரஹஸ்பதி கௌதமாதீன்
    புண்யான் இமான் பரம பாசுபதான் ஸ்மராமி.

    பாசுபதர்கள் சிவாம்சம் பெற்றவர்கள் என்பது புராண வழக்கு. எனவே பலராமனை சிவாம்சம் உடையவன் என்று கருதுவது தவ்றாகாது என்பது சைவ நெறிப்படியே கூட தவறாகாது என்று தோன்றுகிறது.

  12. அன்புள்ள ஜடாயு அவர்களே,

    // சமீபத்தில் ஒரு இலக்கிய அறிஞருடன் பேசிக் கொண்டிருக்கையில் இது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தைக் குறிக்கலாம் என்று கூறினார். //

    இது புதிதாக உள்ளது. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்களின் பதிற்றுப் பத்தின் பழைய உரையில்,

    “செல்வனென்றது திருவனந்தபுரத்துத் திருமாலை. ” என்று உள்ளது. அதற்கடியில் அடிக்குறிப்பாக சுவாமிநாத ஐயர் கூறுவது – “ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்” (சிலப். 26 : 62) என்றவிடத்து
    ‘ஆடகமாடம் – திருவனந்தபுரம்’ என்று அரும்பதவுரையாசிரியர் எழுதிய
    குறிப்பு இங்கே கருதற்குரியது.”

    அரும்பதவுரைக்காரர் காலம் நச்சினார்க்கினியர் காலத்திற்கும் முந்தையது என்பது நிதர்சனம்.

    இது தவிர பத்தாம் நூற்றாண்டில் சர்வஞாத்மா முனிகள் என்ற அத்வைத ஆச்சாரியார் பத்மநாபனைத் தமது படைப்பில் மங்கள சுலோகத்தால் பாடியுள்ளார். இது பற்றி வேண்டுமானால் அடுத்த மறுமொழியில் விளக்குகிறேன். பத்மநாப சுவாமி ஆலயம் மிகப்பழையது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது (contrary to the newsmedia’s widespread report that it was built in the 16th century!!!!).

  13. பழந்தமிழ் இலக்கியங்கள் போற்றும் திருமாலின் இரு ஆலயங்கள் பற்றி அழகாக திருமாலடியார் எழுதியிருக்கும் கட்டுரை அருமை. ஆனால் சைவர்கள் சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை பிறப்பதே இல்லை என்றே நம்புகிறார்கள். யாரையும் சிவபெருமானின் அவதாரமாகக் கருதுவதில்லை அப்படி கருதினால் அவர்கள் சைவர் அன்று. என்று முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா கூறுகிறார். அதுவே மிகச்சரியானது.
    திரு கந்தர்வன்
    பலராமன் ஆதி சேடனின் அவதாரம் என்று மகாபாரதம், பாகவதம், சங்க இலக்கியங்கள் கூறுகின்றபொழுது, எப்படி “செத்துப் பிறக்கின்ற மானிடர்” என்று சொல்ல முடியும்? எங்கிறார்.
    அவதார புருஷர்களான ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோர் பிறந்ததும் இறந்ததும் ஆதாரப்பூர்வமானது. இதில் என்ன ஐயம். சைவர்களின் கருத்து இறைவன் அவதாரம் செய்வதில்லை என்பது. வைணவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் சைவர் இதனை ஏற்பதில்லை. அவ்வளவுதான்.

    திரு ஜடாயு கூறுகிறார்
    பூவினில் கந்தம் பொருந்தியவாறு போல்
    சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது

    என்ற திருமூலர் வாக்கையும் மனதில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
    திருமூலர் சொல்வது ஆன்மாவின் ஆன்மாவாக இறைவன் இருக்கிறார் என்பதே. ஆன்மாக்கள் இறைவனின் அம்சம் என்பதனை அல்ல.

    திரு ஜடாயு சொல்வது போல் சைவர் போற்றும் சைவர் ருத்ரன் அன்று. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன், சதாசிவன், ருத்திரன் ஆகிய மூர்த்திகளுக்கு மேலான பரம்பொருளே சிவம். சிவபெருமானை முழுமுதலாகக் கருதுவோரே சைவர். இதற்கு வேதத்திலும், சிவாகமங்களிலும், புராணங்களிலும் சான்று உண்டு. சைவருள் பலப் பிரிவுகள் சைவர், வீரசைவர், காசுமீரசைவர் என் உண்டு. ஆயினும் எல்லோரும் இந்த அடிப்படைகளை நம்புகின்றார்கள்.
    சைவ சித்தாந்தம் பஞ்சமூர்த்திகளில் ஒருவரான ருத்திரனை குணி ருத்ரன் என்றும் பரமேஸ்வரனை மகாருத்ரன் என்றும் போற்றும்.
    திரு ஜடாயு சொல்வது போல் பாசுபதர்கள்,சாம்பவர்கள், ஜங்கமர்கள் அதாவது சிவனடியார்கள் எல்லாம் வணக்கத்திற்குறியவர் எனினும் சிவஅம்சம் அன்று. பலராமர் சிவ பக்தர் தான் ஆனால் அவர் சிவ அவதாரம் அன்று என்பதே இங்கு கருத்து. சிவபெருமானை அவதரிப்பவர் என்றும் உருத்திரன் என்றும் நம்புவோர் ஸ்மார்த்தர்கள் அன்றி சைவர் அல்லர் என்பதே துணிபு.

  14. ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
    வ்யாஸாம்பரீஷ சுக சௌனக பீஷ்மதால்ப்யான்
    ருக்மாங்கதார்ஜுன வஸிஷ்ட விபீஷணாதீன்
    புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி

    என்று ஹரி பக்தர்களான பாகவதர்களைப் பற்றி சம்ஸ்க்ருத ச்லோகம் கேட்டுள்ளேன்.

    தூர்வாச கௌசிக விரிஞ்சி மிருகண்டு புத்ரான்
    தேவேந்த்ர பாண ஹரி சக்தி ததீசி ராமான்
    கண்வாத்ரி பார்கவ பிரஹஸ்பதி கௌதமாதீன்
    புண்யான் இமான் பரம பாசுபதான் ஸ்மராமி.

    என சிவபக்தர்களைப் பற்றியதான ச்லோகம் முதல்முறையாக கேழ்க்கிறேன். நன்று.

    மறந்தும் புறந்தொழார் என வைஷ்ணவர்களைப் பற்றி கேட்டிருக்கிறேன். சைவமும் அப்படியே என அறிகிறேன். அதனதன் படி இரண்டும் அழகே. தொன்று தொட்டு சான்றோர் அளித்த பக்தி நெறிமுறைகளாயிற்றே.

    வைஷ்ணவர்கள் மற்றும் சைவர்களைத் தவிற சங்கரநாராயணர்களை ஒருங்கே பஞ்சாயதன பூசையில் வழிபடுவோரும் உண்டே,

    சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு: விஷ்ணோஸ்ச ஹ்ருதயம் சிவ:
    யதா சிவமயோ விஷ்ணு: ஏவம் விஷ்ணு மய: சிவ:

    என சங்கரனையும் நாரணனையும் ஒருங்கே வழிபடும் வழிமுறையும் உண்டு.

    இவ்வழிமுறையிலும் புறந்தொழல் என்ற கோட்பாட்டின் படி இல்லாவிடினும் ஏகாக்ர பக்தி வலியுறுத்தப்படுகிறதே

  15. //
    அவதார புருஷர்களான ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோர் பிறந்ததும் இறந்ததும் ஆதாரப்பூர்வமானது. இதில் என்ன ஐயம். சைவர்களின் கருத்து இறைவன் அவதாரம் செய்வதில்லை என்பது. வைணவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் சைவர் இதனை ஏற்பதில்லை. அவ்வளவுதான்.
    //

    திரு சிவஸ்ரீ விபூதி பூஷன் அவர்களே,

    கண்ணன் பிறப்பு நம்முடைய பிறப்பைப் போன்றதா? நாம் பிறப்பது கர்மாதீனமாக. இறைவன் பிறப்பது தன்னுடைய படைப்புகளான உயிர்களைக் காப்பதற்கு ஆசைப்பட்டு அவதரிப்பது. இது பற்றி நான் “அச்சுதனின் அவதாரப் பெருமை” கட்டுரைத் தொடரில் ஏற்கனவே எழுதியாயிற்று. சுருக்கமாக, சங்க இலக்கியத்தில் சான்றோர்கள் திருமாலை இப்படிப் பாடுகிறார்கள்:

    “முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே” – பரிபாடல். பிறப்பித்தவர் இல்லாததால் அது கர்ம விளைவால் அன்றி தனிச்சிறப்பு வாய்ந்த பிறப்பு – தன்னிச்சையாக, அப்ராக்ருதமாகக் கொள்ளும் பிறப்பு. இந்த செய்தியையே

    “அமூர்த்திமான்”, “அனேகமூர்த்தி” என்ற விஷ்ணு சஹாஸ்ரனாமத்திற்கு பாஷ்யமிடும் பொழுதும் சங்கரர் கூறியுள்ளார். “அமூர்த்திமான்” = பிறப்பித்தோர் இல்லை; அநேக மூர்த்தி = “பிறவாப் பிறப்பிலை”.

    கண்ணன் “இறந்ததாக” எந்தப் புராணத்திலும் இல்லை. தன்னுடைய திருமேனியுடன் அப்படியே வைகுந்தத்தில் எழுந்தருளினான் என்று பாகவதம் கூறுகிறது.

  16. // இது புதிதாக உள்ளது. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்களின் பதிற்றுப் பத்தின் பழைய உரையில், //

    உ. வே சாம்நிநாத ஐயர் அவர்கள் பதிப்பித்த பழைய உரை – உ. வே. சாமினாதருடைய உரையன்று. சரியாக எழுதியிருக்க வேண்டும்.

  17. நண்பர் சிவ ஸ்ரீ விபூதி பூஷன் அவர்களே

    //
    பலராமன் ஆதி சேடனின் அவதாரம் என்று மகாபாரதம், பாகவதம், சங்க இலக்கியங்கள் கூறுகின்றபொழுது, எப்படி “செத்துப் பிறக்கின்ற மானிடர்” என்று சொல்ல முடியும்? எங்கிறார்.
    அவதார புருஷர்களான ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோர் பிறந்ததும் இறந்ததும் ஆதாரப்பூர்வமானது. இதில் என்ன ஐயம். சைவர்களின் கருத்து இறைவன் அவதாரம் செய்வதில்லை என்பது. வைணவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் சைவர் இதனை
    //

    இப்படி கந்தர்வன் எழுதுவதற்க்கு முன் அனுபவமே காரணம். நம்பிக்கை இருக்கலாம் அதனாலேயே

    “செத்து பிறக்கின்ற” என்ற வார்த்தை பிரயோகம் அழகாகவா உள்ளது

    சரி சைவத்தில் அத்வைதமும் உண்டல்லவா – அங்கண் நோக்கினால் இப் பிரயோகம் அர்த்தமற்று தானே போகும்

    பிறப்பது இறப்பது என்பது ஆன்மாவுக்கும் கிடையாது அப்படி இருக்க கர்ம வினையினால் உடல் எடுப்பது சிவமாகத்து என்று எழுதிவிட்டு போயிருக்கலாமே. ஒவ்வொரு ஆன்மாவும் உத்தமான ஒன்றே – அப்படி இருக்க இப்படிப்பட்ட வார்த்தை பிரயோகம் வருத்தத்தையே அளிக்கிறது.

  18. பூவினில் கந்தம் பொருந்தியவாறு,பலராமனின் உள்ளத்தில், சிவமணம் பூத்ததெனில் பலராமன் சிவாம்சம் பொருந்தியவனே. கண்ணபெருமான் அத்தகையவர் என்று சைவர் கொள்ளுவர். ஆனால் “பலராமனின் அம்சம் சிவன்” என்பது வைணவம், “சிவனின் அம்சம் பலராமன்” எனலாம் சைவம். அது அவரவர்களது நம்பிக்கை” என்னும் தொடரில் அந்தக் கருத்து உள்ளதா?

    பாரதம் பாடிய பெருந்தேவனாரின் நற்றிணைக் கடவூள் வாழ்த்துப் பாடல் திரு கந்தருவன் அவர்களால் முந்திய கட்டுரையில் எடுத்துக் காட்டப்பட்டது. பெருந்தேவன் என்னும் பெயரே அவர் சைவர் எனக் காட்டும். மஹாதேவன் என்னும் பெயரே அழகு தமிழில் பெருந்தேவன் எனப்பட்டது. சம்போ மஹா தேவ,ஹரஹர மஹாதேவா என்னும் மொழி பாரதம் முழுதும் சிவாஜி போன்ற வீரர்களின் நாவில் ஒலித்த மந்திரமாகும். பெருந்தேவனார் சைவப் பண்பாட்டிற்கேற்ப , அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, ஆகியவற்றில் சிவனையும், குறுந்தொகையில் முருகவேளையும், நற்றிணையில் திருமாலையும் கடவுள் வாழ்த்தில் பாடியுள்ளார். பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாக இருக்கலாம் என நச்சினார்கினியர் கருதும் பாடல் ஒன்று தொல்காப்பியம் உரையில் உள்ளது. அது வும் சிவத்தைப் பற்றியதே.

    “தவநிந்தை செய்யாத சக்கரமால் அன்ப!
    சிவநிந்தை இன்றிநீ செல்லின் – அவநிந்தை
    காணாது வைகுந்தம் கண்டுமகிழ் வாய்அன்றேல்
    வீணாளர் போல்உழல்வாய் மிக்கு”

  19. சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு: விஷ்ணுஸ்ய ஹ்ருதயம் சிவ:

    சின்னப் பிள்ளைகள் கூடச் சொல்லுமே.. “அரியும் அரனும் ஒண்ணு அறியாதார் வாயில் மண்ணு”

    ஆக, அன்பிற்குரிய ஆய்வாளர்கள் ஹிந்துக்களாக அமையும் போது நடுநிலை நின்று சிந்திக்க வேண்டும்..

    முக்கியமாக இக்கட்டுரையில் திருமாலிருஞ்சோலை பற்றி எழுதியிருக்கிற மதிப்பிற்குரிய கந்தர்வன் அவர்கள் நிச்சயமாக அதே திருமாலிருஞ்சோலை மலை பற்றி பழமுதிர்சோலை என்று பழந்தமிழ்ச் சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை குறிப்பிட்டுப் புகழ்வதை கட்டாயம் சுட்டிக் காட்டியிருக்கலாம்.. ஒன்றைக் காட்டி ஒன்றை மறைப்பது என்பது தவறான அபிப்ராயங்களுக்கு இட்டுச் செல்லுமல்லவா..?

    ஹிந்துக்கள் எல்லோரும் சந்தியாவந்தனம் முதலாக எங்கணும் சங்கர நாராயண வந்தனம் செய்ய வேண்டும் என்பதே அடியேனின் அவா..

  20. முனைவர் அய்யா, திரு.கந்தர்வன், திரு.ஜடாயு, திரு.சிவஸ்ரீ வித்யாபூஷன் மற்றவர்களுக்கும்,
    உங்கள் ஞானத்திற்கு முன்னால் நான் துச்சம்.. எனக்கு திருமுறையோ, பிரபந்தமோ பாகவதமோ தெரியாது. இருப்பினும் “இறந்து பிறக்கும் அற்ப மானுடப்பதர்” என்பது மிகவும் கேவலமான வார்த்தைகள்.. கீழே படிக்கவும், முழகுவதுமாக:-

    “Proceeding then to the forest, Keshava beheld Rama sitting in a solitary spot thereof. He also saw that
    Rama had set himself to Yoga and that from out his mouth was issuing a mighty snake. The colour of
    that snake was white. Leaving the human body (in which be had dwelt so long), that high-souled naga of
    a 1,000 heads and having a form as large as that of a mountain, endued besides with red eyes, proceeded
    along that way which led to the ocean. Ocean himself, and many celestial snakes, and many sacred
    Rivers were there, for receiving him with honour. There were Karkotaka and Vasuki and Takshaka and
    Prithusravas and Varuna and Kunjara, and Misri and Sankha and Kumuda and Pundarika, and the highsouled
    Dhritarashtra, and Hrada and Kratha and Sitikantha of fierce energy, and Chakramanda and
    Atishanda, and that foremost of Nagas called Durmukha, and Amvarisha, and king Varuna himself, O
    monarch. Advancing forward and offering him the Arghya and water to wash his feet, and with diverse
    other rites, they all worshipped the mighty Naga and saluted him by making the usual enquiries.
    “After his brother had thus departed from the (human) world, Vasudeva of celestial vision, who was
    fully acquainted with the end of all things, wandered for some time in that lonely forest thoughtfully.
    Endued with great energy he then sat down on the bare earth. He had thought before this of everything
    that had been fore-shadowed by the words uttered by Gandhari in former days. He also recollected the
    words that Durvasas had spoken at the time his body was smeared by that Rishi with the remnant of the
    Payasa he had eaten (while a guest at Krishna’s house). The high-souled one, thinking of the destruction
    of the Vrishnis and the Andhakas, as also of the previous slaughter of the Kurus, concluded that the hour
    (for his own departure from the world) had come. He then restrained his senses (in Yoga). Conversant
    with the truth of every topic, Vasudeva, though he was the Supreme Deity, wished to die, for dispelling
    all doubts and establishing a certainty of results (in the matter of human existence), simply for upholding
    the three worlds and for making the words of Atri’s son true. Having restrained all his senses, speech,
    and mind, Krishna laid himself down in high Yoga.
    “A fierce hunter of the name of Jara then came there, desirous of deer. The hunter, mistaking Keshava,
    who was stretched on the earth in high Yoga, for a deer, pierced him at the heel with a shaft and quickly
    came to that spot for capturing his prey. Coming up, Jara beheld a man dressed in yellow robes, rapt in
    Yoga and endued with many arms. Regarding himself an offender, and filled with fear, he touched the
    feet of Keshava. The high-souled one comforted him and then ascended upwards, filling the entire
    welkin with splendour. When he reached Heaven, Vasava and the twin Ashvinis and Rudra and the
    Adityas and the Vasus and the Viswedevas, and Munis and Siddhas and many foremost ones among the
    Gandharvas, with the Apsaras, advanced to receive him. Then, O king, the illustrious Narayana of fierce
    energy, the Creator and Destroyer of all, that preceptor of Yoga, filling Heaven with his splendour,
    reached his own inconceivable region. Krishna then met the deities and (celestial) Rishis and Charanas,
    O king, and the foremost ones among the Gandharvas and many beautiful Apsaras and Siddhas and
    Saddhyas. All of them, bending in humility, worshipped him. The deities all saluted him, O monarch,
    and many foremost of Munis and Rishis worshipped him who was the Lord of all. The Gandharvas
    waited on him, hymning his praises, and Indra also joyfully praised him.”

    – அத்தியாயம் நான்கு, மௌசால பர்வம், வியாச மகாபாரதம்.

    எத்தனையோ மகான்கள் பிறந்து இறக்கின்றனர். அவர்களில் பலரை நாம் இறைவனின் அம்சம் என்கிறோம். அப்படி இருக்கையில், பலராமன் சிவனின் அம்சம் என்று சொன்னால் இ-பீ-கோ படி தண்டனையா??

    திரு.ஜடாயு அவர்களுக்கு, பலராமன் மட்டுமல்ல, அனைத்து மானுடர்களுமே, மகான்கள், அவதராங்கள் உட்பட கோவப்பட்டிருக்கிரார்கள் (எனக்குத்தெரிந்து புத்தர், மகாவீரர் விதிவிலக்குகள்). கோவப்பட்டால் தெய்வத்தன்மை போய்விடுமா? தூர்வாச முனி எத்தனை பேரை சபித்துள்ளார்? அவரை சிவபெருமானின் அம்சம் என்று சிவமகாபுராணமே கூறுகிறதே!

    “சில வைணவ வெறியர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல” என்று முனைவர் அய்யா அடிக்கடி நிரூபிக்கிறார்.

    வெட்கப்படவேண்டிய விஷயம்!!!

  21. //செத்துப்பிறக்கின்ற மாபாரத மாநுடர்களைச் சிவம் என்பவன் சைவனாகான்.//

    அப்படியென்றால், “சிவோஹம்”.. நாந்தான் சிவம் என்று கூறிய சங்கரரையும், தன்னை சிவன் என்று எண்ணிக்கொள்ளும் ஆயிரக்கணக்கான அகோரிபாபாக்களும் உங்களைப் பொருத்தமட்டில் சைவர்களல்ல.. அப்படித்தானே!

  22. இறுதியாக,
    ஆலகால விஷத்தைப் பருகி அகிலத்தைக் காத்த ஐயனை எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபிகளுடன் ஒப்பிடுவது பெருமை, ஆனால் அண்டங்களைத் தாங்கும் பரந்தாமனைத் தாங்குபவனோடு ஒப்பிட்டால், அது கௌரவக் குறைவாம்!

    நமக்கு எதிரிகள் வெளியில் இல்லை.. நாமே நமக்கு எதிரிகள்!

  23. திரு மயூரகிரி ஷர்மா அவர்களே,

    //
    முக்கியமாக இக்கட்டுரையில் திருமாலிருஞ்சோலை பற்றி எழுதியிருக்கிற மதிப்பிற்குரிய கந்தர்வன் அவர்கள் நிச்சயமாக அதே திருமாலிருஞ்சோலை மலை பற்றி பழமுதிர்சோலை என்று பழந்தமிழ்ச் சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை குறிப்பிட்டுப் புகழ்வதை கட்டாயம் சுட்டிக் காட்டியிருக்கலாம்.. ஒன்றைக் காட்டி ஒன்றை மறைப்பது என்பது தவறான அபிப்ராயங்களுக்கு இட்டுச் செல்லுமல்லவா..?
    //

    முதல் கட்டுரையில் இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்தை என்னவென்று கூறினேன். திருமால் சமயம் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் வரும் குறிப்புகளை ஒன்றுதிரட்டி வைதிகவைணவ-பாகவத ஒழுக்கத்தின் தொடர்ச்சியைக் காட்டவே. ஆகவே முருக வழிபாடு பற்றிக் கூறவில்லை. கூறியிருந்தால் கட்டுரைத் தலைப்பிற்கும் தொடரின் நோக்கத்திற்கும் வெளியே போயிருக்கும்.

    அது தவிர நீங்கள் கூறியது விந்தையாக இருக்கிறது. “முருகனைத் தான் பலராமன் என்று கூறினார்கள்” என்ற ஒரு ஊகத்தை முன்வைத்தீர்கள் – சமரசத்துடன். நல்ல எண்ணத்துடன் தான் – மறுக்கவில்லை. அதைத் தொடர்ந்து திரு பாலாஜி “சங்கர்ஷண மூர்த்தி ஸ்வரூபோ யோ அசாவாதித்யாத்மக ருத்ர” என்று ஸ்ரீருத்ரத்தில் நியாசத்தில் ஸ்மார்த்தர்கள் ஓதுவதை ஒட்டியும், ஸ்ரீமத் பாகவதம், மோக்ஷதர்மம் முதலான பிரமாண நூல்களில் வலுவாகக் கூறியிருப்பதை ஒட்டியும் பலராமனுக்கும் சிவபெருமானுக்கும் தொடர்புண்டு என்று கூறினார். (சங்கர்ஷணன் முத்தொழில் புரியும் திருமாலின் சாக்ஷாத் வியூக மூர்த்தி – கண்ணனுடைய தமையனுக்கும், மகனுக்கும், பேரனுக்கும் வியூக மூர்த்திகளின் பெயர்களையே வைத்திருந்தனர், அது வேறு விஷயம்).

    மேற்கண்ட உரையாடலுக்குப் பிறகு பெரியார் ஒருவர்,

    பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
    நீல உருவின் நேமியோனும் என்று
    இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு -புறம்:58:14-16

    எனும் பழந்தமிழ்ப் பண்பாட்டுக்கு முரணாக “செத்துப் பிறக்கும் மாபாரத மானுடர்” என்ற சொற்பிரயோகம் செய்திருக்கிறார். இதிலிருந்து தானே சர்ச்சை கிளம்பியது? நான் எழுதியதில் இருந்தா?

    இத்துடன் நீங்கள் இரண்டு விஷயம் கவனிக்க வேண்டும்…

    (1) வைணவம் போற்றும் பரம்பொருள் திருமால் ஒருவர் தான் – ஆனால் மற்ற தெய்வங்களை “செத்துப் பிறக்கும் மானுடர்” என்று ஒரு நாளும் கூறுவதில்லை. மாறாக, “மற்ற தேவதைகளுக்கு ஆயிரம் சதுர்யுகங்கள் ஆயுள். ஆகையால் அவர்கள் அமரர்கள் (‘முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று’ – திருப்பாவை)” என்பதும் “அவர்களுக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவன் மேலான மும்மூர்த்திகள்” என்பதுமே வைணவர்களின் கொள்கை. “முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும் முதலாவான் மூரிநீர் வண்ணன்” – பொய்கையாழ்வார்.

    (2) “வைணவர்கள் முருகனைத் திருமாலாகக் காண்பர்” என்று நீங்கள் எழுதியதற்குக் கடுங்கோபம் கொண்டு செவிசுடும் சொற்களையா பயன்படுத்தினோம்? “எல்லாம் திருமாலின் அம்சமே – சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்ற கொள்கையின்படி இதுவும் ஏற்கத்தக்கதே. மேலும் திருமாலின் அளவற்ற ஒப்பற்ற சிறந்த விபூதிகளுள் முருகனும் உண்டு என்று என்று geethaiyileye கண்ணன் கூறியுள்ளான். இக்கொள்கையின்படியும் ஏற்கத்தக்கதே” என்று தான் எழுதினோம். இதை எந்த வைணவ நூலும் எதிர்த்ததில்லை, எதிர்ப்பதுமில்லை, எதிர்க்கப்போவதுமில்லை.

    இப்படியிருக்க, “தங்களை வயதிலும் அனுபவத்திலும் முதியவராக மதிக்கிறோம். அப்படி இருக்கும் பொழுது இத்தகைய பதிதமான வார்த்தைகள் தங்கள் கையெழுத்தாக வந்திருப்பது பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. இப்படிக் கூறியிருக்க வேண்டாம்” என்று அப்பெரியார் குறித்து இங்கு ஒருவராவது கூறினீர்களா? இப்படி இருக்க நமக்கு மட்டும் ஏன் இந்த சமரச போதனை?

  24. இன்னொரு விஷயம்…. எனக்குத் தோன்றியது. தவறிருந்தால் திரு மயூரகிரி ஷர்மா இடம் மன்னிக்கக் கேட்டுக் கொள்கிறேன்:

    // திருமாலிருஞ்சோலையில் தற்போது பலராமனுக்கு ஆலயம் இல்லை.. ஆக, இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிற முருகனைத் தான் வைணவர்கள் அல்லது விஷ்ணு பக்தர்கள் பலராமனாகக் கண்டார்களா? //

    இப்படி ஊகங்களை முன் வைக்குமுன், இதனால் விளையக்கூடிய அபவாதங்களை யோசிக்க வேண்டும். இதைப் பிடித்துக் கொண்டு மிஷ நரிகள் நாளைக்கு “பலராமனின் கோயிலைத் தான் சைவர்கள் அபகரித்தனர்” என்று சைவ-வைணவ சண்டையை மூட்டினாலும் மூட்டக்கூடும்.

    ஏற்கனவே வேறு ஒரு பெரியவர் நல்ல நோக்கத்துடன் “பூரி ஜகன்நாதம் பௌத்த விகாரமாக இருந்தது” என்று ஒரு ஊகத்தை முன்வைத்ததை வைத்து இன்று மிஷனரிகள் “திருப்பதி, பழனி, இப்படி எல்லாக் கோயில்களும் பிராம்மணர்களால் பௌத்தர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட விகாரங்களே” என்று கூறுகின்றனர்.

    அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூ⁴தாநாமீஸ்²வரோऽபி ஸந்|
    ப்ரக்ருதிம் ஸ்வாமதி⁴ஷ்டா²ய ஸம்ப⁴வாம்யாத்மமாயயா ||4-6||

    அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி = பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்
    பூ⁴தாநாம் ஈஸ்²வர: அபி ஸந் = உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்
    ஸ்வாம் ப்ரக்ருதிம் அதி⁴ஷ்டா²ய = யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று
    ஆத்ம மாயயா ஸம்ப⁴வாமி = என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்

    ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.

    பாரதம் முழுதும் ஏககண்டமாகப் போற்றப்படும் பகவத் கீதையின் மேற்கண்ட வாக்கைப் பொய்யாக்காமல் இருப்பது நன்று.

    கிறிஸ்தவர்கள் “incarnation” என்ற கொள்கையின் படி இயேசு மெய்யாகவே துன்பப்பட்டார், மெய்யாகவே இறந்தார், அவருடைய உடல் சதையும் மாமிசமும் கூடியது என்பதை வலுவாக நம்புபவர்கள். இதற்கும் சனாதன தர்மம் கூறும் அவதாரம் என்னும் கொள்கைக்கும் (திருமால் அவதாரம் அப்ராக்ருதம் – அமானுஷ்யம், அவர் மனிதர்களைப் போல பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை) உள்ள வேறுபாட்டினைப் புரிந்து பாராட்டுவது நம் தருமத்திற்கு நல்லது. இவ்விரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போல. இதைத் தெளிவாகக் காட்டுவது மிஷ நரிகளுக்கும் நல்ல பதிலடி.

    சமரசம் செய்கிறேன் என்று கிளம்பியதில் வீண் விவாதமும் கடுஞ்சொற்களும் தான் மிச்சம் – கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல. இனியாவது கட்டுரையின் கருப்பொருளுக்கு வருவோம்.

    இதற்கிடையில் இரண்டு அன்பர்களுடைய அழகிய மறுமொழிகளுக்கு பதில் கூறாமல் போய் விட்டதாயிற்று:

    திரு கிருஷ்ணகுமார்… பாசுர வரிகளைக் காட்டி சிறப்பித்ததற்கும், புனித ஏகாதசி நன்னாளை நினைவூட்டியதற்கும் நன்றி. தேவ் அவர்கள் மறுமொழியும் கண்டு மகிழ்ந்தேன். பரமச்வாமியின் படம் என்னிடம் இல்லை.

  25. திரு கந்தர்வன் அவர்கள் எழுதியுள்ள இத்தொடரில் அமைந்துள்ள இலக்கியச்சுவையையும் பக்திச் சுவையையும் சுவைத்தவர்களில் நானும் ஒருவன். இத்தொடரின் சிறப்பைப் பாராட்டலாம். அல்லது திருமாலின் வியூகங்களை எடுத்துக் காட்டி விளக்கலாம். வைணவத்தில் பலராமனின் இடத்தை விளக்கலாம். சிவத்தைப் பலராமனின் அம்சம் என்று கூறுவது விஷமம். என்னுடைய சொற்பிரயோகம் சைவவெறி என்றால் சிவனைப் பலராமனின் அம்சம் என்றும் சைவர்கள் வேண்டுமானால் பலராமனின் அம்சம் என்று சொல்லித் திருப்திப் பட்டுக்கொள்ளட்டும் என்று எழுதுவது வைணவவெறி அல்லாமல் வேறென்ன?

    சைவம் வைணவம் இரண்டும் இருவிதமான முத்திப் பேறுகளைப் பரமுத்தியகக் காட்டுகின்றன. அதற்கான வழிகளைச் சாத்திரங்களும் தோத்திரங்களும் போதிக்கின்றன. அதை விளக்கும் எல்லையில் நிற்க.

    பலராமனும் கண்ணனும் இராமனும் தாயின் குடல் விளக்கம் செய்யவந்த காவிய நாயகர்களன்றி யர்ர்? ஆதி சங்கரர் சிவோஹம் பாவனையால் சிவமேயாகத் திகழ்ந்தவர்தாம். கண்ணனும் உபமன்யு முனிவரிடம் “மந்த்ர சம்ஸ்காரதீட்சை” என்னும் விரஜாதீட்சை ” பெற்று சிவோகம் பாவனையால் சிவமாகத் திகழ்ந்ததை மஹாபாரத அநுசாஸநிக பர்வத்துப் 14ஆவது அத்தியாயத்திலும் பாரத துரோணபர்வத்திலும் காணலாம்.

    இராமன் மறைந்து நின்று விடுத்த அஸ்திரத்தான் மரணமடைந்த வாலியே கிருஷ்ணாவதாரத்தில் ஒருவேடனாய்த் தோன்றியிருந்து கிருஷ்ணன்காலைத் தானுண்ணும் பிராணியாக நினைத்து மறைந்து நின்று அம்போச்சினன். அதனாற் கிருஷ்ணன் மரணமடைந்தனன் என்னும் செய்தி மஹாபாரதம் முதலியவற்றிலிருந்து அறிய வருகின்றது.
    “இருப்புலக்கையின் சிறிய துணுக்கைத் தன் அம்புக்கு முள்ளாக வைத்துக் கொண்டவனான ஜரன் என்கின்ற வேடன் வந்தான். தூரத்திலிருந்து சுவாமியின் திருவடியை ஒருமிருகமாக நினைத்து, அவ்வம்பை அத்திருத்தாளினடிப்புறத்தில் எய்தான்” என்னும் செய்தி விஷ்ணுபுராணத்து 5ஆம் அமிசத்தின் 37ஆம் அத்தியாயத்தில் வருகின்றது.

    கிருஷ்ணனுடைய உடம்பில் அருச்சுனன் விதிப்படி உத்தரகிரியை செய்து கொள்ளி வைத்த செய்தி 38ஆம் அத்தியாயத்தில் உள்ளது.

    திரு பாலாஜி அவர்களே! பலராமன் , அண்டஙகள் அனைத்தையும் தாங்கும் பரம்பொருள் அல்லன். அப்பரம்பொருளைத் திருமால் என்றோ நாராயணன் என்றோ கூறுங்கள்.
    ” ஆலகால விஷத்தைப் பருகி அகிலத்தைக் காத்த ஐயனை எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபிகளுடன் ஒப்பிடுவது பெருமை”
    இப்படி யார் கூறினர்? நீங்களே ஒன்றைக் கற்பித்து ஒருவர்மேல் திணிப்பது நியாயமில்லை.

  26. விவாதம் தொடரட்டும். என்ன சமாதானங்கள் மொழிந்தாலும் பலராமன் சிவ அம்சமோ அவ்தாரம் என்ற கருத்து சைவர்க்கு ஏற்புடையது அன்று.
    திரு பாலாஜி
    “தூர்வாச முனி எத்தனை பேரை சபித்துள்ளார்? அவரை சிவபெருமானின் அம்சம் என்று சிவமகாபுராணமே கூறுகிறதே!”
    இது தவறு சாபம் கொடுத்தாலும் தவ ஆற்றல் வளரும் வல்லமைப் பெற்ற துர்வாச முனிவர் ருத்ராம்சம் பொருந்தியவர். அவர் மட்டுமல்ல ஆஞ்சனேயரும் அப்படியே. சைவர்க்கு சிவபரம் பொருள் வேறு ருத்திரன் வேறு.
    திரு பாலாஜி,
    “சில வைணவ வெறியர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல” என்று முனைவர் அய்யா அடிக்கடி நிரூபிக்கிறார். வெட்கப்படவேண்டிய விஷயம்!!!
    இதுதான் கண்டிக்கத்தக்கது தனிமனிதரின் கருத்துரிமை அவமதிப்பதாகும்
    ஐயாவின் கருத்தில் வெறி யேதும் துளியும் இல்லை. சைவர் யாரும் சிவபரம் பொருளை பிறவா யாக்கை பெரியோன் என்றே கொள்வர். சைவ நூல்கள் கருத்தினை அவர் மொழிந்தார் அவ்வளவே. ஹிந்து சமூகத்தின் ஒற்றுமைக்கு இக்கருத்து எதிர் இல்லை. சனாதனம் பல்வேறு பட்ட வழிபாடு முறைகளையும் சித்தாந்தங்களைக்கொண்டதாகும். ஐயா சொன்னது சைவப் பெரியோர் மொழி.
    திரு பாலாஜி
    அப்படியென்றால், “சிவோஹம்”.. நாந்தான் சிவம் என்று கூறிய சங்கரரையும், தன்னை சிவன் என்று எண்ணிக்கொள்ளும் ஆயிரக்கணக்கான அகோரிபாபாக்களும் உங்களைப் பொருத்தமட்டில் சைவர்களல்ல.. அப்படித்தானே! ஆம் இது ஸ்மார்த்தம் அத்வைதம் சைவம் அன்று. ஏன் சங்கர மடங்களில் கேட்டுப் பாருமே. விபூதி பூசினாலும் அவர்கள் சைவராகார். சமயத்தில் பைரவ உபாசகர்கள் தாந்த்ரீகர்களான அகோரிகள் தத்துவத்தில் அத்வைதிகள். அவர்கள் சைவர்கள் அல்லர்.
    இன்னொன்றும் சொன்னார் திரு பாலாஜி
    “ஆலகால விஷத்தைப் பருகி அகிலத்தைக் காத்த ஐயனை எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபிகளுடன் ஒப்பிடுவது பெருமை, ஆனால் அண்டங்களைத் தாங்கும் பரந்தாமனைத் தாங்குபவனோடு ஒப்பிட்டால், அது கௌரவக் குறைவாம்! நமக்கு எதிரிகள் வெளியில் இல்லை.. நாமே நமக்கு எதிரிகள்!” யார் நபியோடு ஈசனை ஒப்பிட்டது.
    ஹிந்து ஒற்றுமையை முழுமையாக ஏற்கும், அதற்கு எல்லோர்க்கும் முதலில் வழிகாட்டும் சைவர்கள், ஸ்மார்த்த வைணவக் கருத்துக்களை கண்ணைமூடிக்கொண்டு ஏற்க வேண்டுமா என்ன. அவசியம் இல்லை.
    திரு பாலாஜி போன்றவர்கள் பெரியவர்களை அறிஞர்களை மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும். கண்டபடி எழுதக்கூடாது. போற்றுதலுக்குறிய ஐயா அவர்கள் இதைப் பொறுத்தருளவேண்டும். தொடர்ந்து தங்களது கட்டுரைகள் இங்கே பதிப்பிக்க வேண்டும்.
    திரு மயூரகிரி சர்மா
    சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு: விஷ்ணுஸ்ய ஹ்ருதயம் சிவ: என்று கூறியுள்ளார். இது ஸ்மார்த்தம். சைவக்கொள்கை அன்று. ஹிந்துக்கள் எல்லோரும் இதனை ஏற்க வேண்டும் என்பது கட்டாயம் அன்று.

  27. திருமாலடியார் கந்தர்வன்
    கண்ணன் “இறந்ததாக” எந்தப் புராணத்திலும் இல்லை. தன்னுடைய திருமேனியுடன் அப்படியே வைகுந்தத்தில் எழுந்தருளினான் என்று பாகவதம் கூறுகிறது.
    ஆனால் மகாபாரதம் வேடன் மான் என்று தவறாக எய்த அம்பால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த யோகேஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ணர் இறந்தார் என்று உள்ளதே. ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தி சரயுவில் மூழ்கி ஜல சமாதியானார் என்றும் உத்தர ராமாயணம் கூறுகிறதே. இதை நீங்கள் ஏற்க வில்லையா என்ன.

    செத்து பிறக்கின்ற” என்ற வார்த்தை பிரயோகம் அழகாகவா உள்ளது.
    இதில் தவறு இல்லை. உங்களைப் புண்படுத்தும் எந்த உள் நோக்கமும் காண்கிலேன்.

    சரி சைவத்தில் அத்வைதமும் உண்டல்லவா – அங்கண் நோக்கினால் இப் பிரயோகம் அர்த்தமற்று தானே போகும்.
    தவறு. சைவத்தில் உள்ள அத்துவிதம் வேறு. அது சுத்தாத்வைதம், சிவாத்வைதம். சிவம் ஒன்றே என்பது அதன் பொருள். ஆத்மாவும் இறையும் ஒன்றே என்பது சங்கரரின் அத்வைதம். இதனை சுத்தாத்வைதிகள் கேவலாத்வைதம் என்பர்.

  28. // என சிவபக்தர்களைப் பற்றியதான ச்லோகம் முதல்முறையாக கேழ்க்கிறேன். நன்று. //

    அன்புள்ள க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு, நன்றி.

    நான் கொடுத்திருந்தது பாசுபதர்களைப் பற்றிய சுலோகம்.

    சிவபக்தர்களைப் பட்டியலிடுவது “ப்ரஹ்லாத நாரத” சுலோகத்துடன் சேர்த்து வழக்கமாக நான் கூறும் இன்னொரு சுலோகம். தங்கள் உவகை கருதி அதனையும் இங்கு தருகிறேன்.

    நந்தீச கும்பஜ ததீசி ம்ருகண்டுஸூனு
    ஸ்ரீசங்கரார்ய ஹரதத்தகுரூபமன்யூன்
    சண்டீச ப்ருங்கிரிடி ஸுந்த்ரமூர்த்தி முக்யான்
    சைவோத்தமான் ப்ரதிதினம் மனஸா ஸ்மராமி.

    கும்பஜ – அகஸ்தியர்
    ம்ருகண்டுஸூனு – மார்க்கண்டேயர்
    ஸ்ரீசங்கரார்ய என்றது ஆதிசங்கரரை
    ஹரதத்த குரு + உபமன்யு.
    ஸுந்த்ரமூர்த்தி முக்யான் – சுந்தரைத் தலைவராகக் கொண்ட அறுபத்து மூவர் திருத்தொண்டக் குழாம்

  29. அன்பர்களே, தயவு செய்து இப்பதிவை சமயப் பூசல் வளர்க்கும் விதமாகத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கட்டுரை ஆசிரியர் கந்தர்வன் இத்தொடரை மிகுந்த சமநிலையுடன் தான் எழுதிவருகிறார் என்பதையும் அனைத்து மறுமொழியாளர்களும் கவனிக்க வேண்டும்.

    தத்துவச் சிடுக்குகள் உள்ளன. அவற்றை ஒவ்வொரு தத்துவப் பிரிவையும் விளக்கிக் கூறும் அலசல்களில் விரித்துப் பேசலமாம். மற்றபடி பொதுவான விவாதங்களிலும், உரையாடல்களிலும் இந்து ஞான மரபில் இழையோடும் தத்துவ ஒருமையையே முன்வைத்துப் பேசலாம் என்று நினைக்கிறேன்.

  30. //
    கிருஷ்ணனுடைய உடம்பில் அருச்சுனன் விதிப்படி உத்தரகிரியை செய்து கொள்ளி வைத்த செய்தி 38ஆம் அத்தியாயத்தில் உள்ளது.
    //

    நாம் வேதாந்தம் அறிந்த அழகு நன்றாக இருக்கிறது. யாவரது உடல் ஆனாலும் ஒன்று தண்ணீரில் இட்டு முழுகடிக்க பட வேண்டும் அல்லது தீயில் இடப்பட வேண்டும் – ராமன் தன்னை தண்ணீரில் முழுகிக் கொண்டான். தண்ணீருக்கும் தீயிர்க்கும் உள்ள தன்மையினால் அப்படி விதிக்கப்பட்டு இருக்கிறது.

    அவதாரம் என்றாலும் இந்த விதியிலிருந்து விலக்கு கிடையாது. கண்ணன் சுவாமி ஆயிற்றே அவனுக்கு ஏன் பிருந்தாவனம் எழுப்ப வில்லை – இங்கேயும் கூட ஆஸ்ரம தர்மத்தை அனுசரணம் செய்கிறான் கண்ணன்.

    அவதாரம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் எழுதுவது தான் இதற்க்கு காரணம். மேலும் யாரோ ஒருவர் போட்ட நஞ்சு புத்தகத்திலிருந்து அச்சு அசல் எடுத்து இங்கு எழுதுவது தான் காரணம்.

    தான் பரமாத்வாவே ஆனாலும் பிரக்ருதியின் சட்டத்திலிருந்து தன்னை விடுவித்து கொள்ளாதவன் நாரணன் – அது அவனது நேர்மையை காட்டுகிறது – கடவுள் என்ற அடாவடித்தனமில்லாதவன் அப்படித்தான் இருக்க வேண்டும்.

    நானும் குறுக்கு உதாரணம் குடுத்து உங்களை சங்கடத்தில் தள்ள முடியும். அப்படி செய்ய விரும்பவில்லை என்றாலும் அது ப்ரசூரம் ஆகாது என்ற ஒரு நம்பிக்கை தான்.

    கீதை 9.9

    ந ச மாம் தானி கர்மணி நிபத்னந்தி தனஞ்சய
    உதாசீனமதாசீனம் அசக்தும் தேஷு கர்மசு

    nor do these actions bind me. o dananjeya for i remain as though un concerned unattached to these actions

    கீதை 9.11

    அவஜானந்தி மாம் மூட மானுஷீம் தனுமாஸ்ரிதம்
    பரம் பாவமஜானந்தோ மாமா ப்ஹோதமஹெஸ்வரம்

    the foolish disregard me, enshrined in human form knowing not my supreme state as the great lord of all beings

    அடுத்த கீதை 9.11 நான் விவரிக்கவில்லை – ஆசை உடைவர்கள் படித்து பார்க்கலாம்

    பெரியவாரனாவர் முன்னமே ராமன் சூர்பனகை சம்பாஷனையை தவறாக புரிந்து கொண்டு ராமன் காமமுர்றான் என்று சொல்லியாகிவிட்டது அடுத்து கண்ணன் அர்ஜுனனை போரிட வைத்து வஞ்சம் செய்தான் என்றும் சொல்லியாகிவிட்டது.

    இனி சொல்வதிற்கு ஒன்றும் இல்லை – நான் இனி பெரியவருக்கு புரிய வைக்க முயல மாட்டேன்.

    பரமாத்மாவை விட எமக்கு ஆடி சேடனான ராமனுசனே முக்கியம். அவனிடத்திலே தான் எமக்கு அன்பு. ஆம் பலராமன் பரமாத்மா இல்லை தான் அவன் ஒரு படி மேல் – அவனே உடையவன். பரமன், ஆழ்வார்கள் செய்ய இயலாதவற்றை செய்து முடித்த பெரியோன்.

    சேர்ந்து செய்ய வேண்டியா காரியங்கள் பல உள்ளன – இப்படி பொது தளங்களில் வாக்கியங்களை விடாமல் இருந்தால் நல்லது. இதை முன்பே பல முறை சொல்லியாகிவிட்டது. editor களும் நமது தர்மத்தின் நலன் கருதி இது போன்றவற்றை edit செய்து ப்ரசூரித்தால் நன்றாக இருக்கும்

    வருத்தத்துடன்

  31. திரு. முத்துக்குமாரசுவாமி அவர்களே,

    // திரு கந்தர்வன் அவர்கள் எழுதியுள்ள இத்தொடரில் அமைந்துள்ள இலக்கியச்சுவையையும் பக்திச் சுவையையும் சுவைத்தவர்களில் நானும் ஒருவன். இத்தொடரின் சிறப்பைப் பாராட்டலாம். அல்லது திருமாலின் வியூகங்களை எடுத்துக் காட்டி விளக்கலாம். வைணவத்தில் பலராமனின் இடத்தை விளக்கலாம்.//

    // சைவம் வைணவம் இரண்டும் இருவிதமான முத்திப் பேறுகளைப் பரமுத்தியகக் காட்டுகின்றன //

    இத்துடன் நிறுத்தியிருக்கலாம்.

    //பலராமனும் கண்ணனும் இராமனும் தாயின் குடல் விளக்கம் செய்யவந்த காவிய நாயகர்களன்றி யர்ர்?//

    விந்தையாக இருக்கிறது???

    (இந்த பல்லவியைப் பிடித்துக்கொண்டு “கதாநாயகர்களாகிய கற்பனைத் தெய்வங்களை வணங்குவதை விட்டு மெய்யான கர்த்தரை வணங்குங்கள்” என்று மிசனரிகள் நம்மைப் பார்த்து ஏசாத நாளில்லை. அந்தப் பாணியில் உள்ளது.)

    எத்தனை இடங்களில் வால்மீகி, வேதம் தொகுத்து வளர்த்த வியாசர், சங்ககாலத் தமிழர், காளிதாசர், கம்பர் முதலானோர், ஆதி சங்கரர் முதலான ஆசார்ய புருஷர்கள், இவரெல்லாம் ஏககண்டமாக கண்ணனும் இராமனும் பரம்பொருளான சாக்ஷாத் நாராயணனின் அவதாரம் என்று கூறியிருக்க, “வெறும் காவிய நாயகர்கள்” என்று கூறுவது வினோத பிரக்ருதிகளின் பேச்சு.

    அது தவிர சுருதியும் “ப்ரஹ்மண்யோ தேவகி புத்ர:, ப்ரஹ்மண்யோ மதுசூதன:” என்று தேவகி புத்ரனாகிய மதுசூதனனை பரப்பிரம்மம் என்று ஓதிற்று.

    “நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்” – இதுவும் சுருதி.

    தொன்றுதொட்டு ஸ்மார்த்த-வைஷ்ணவ விபாகமர அனைத்து அந்தனர்களாலும் இன்றுவரை அத்யயனம் செய்யப்படும் உபநிடதங்கள் இவை.

    கண்ணன் வெறும் கதாபாத்திரம் என்றால் இதையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்வதென்று தெரியவில்லை.

    // சிவத்தைப் பலராமனின் அம்சம் என்று கூறுவது விஷமம். //

    முதலில், பலராமனுக்கும் வியூக மூர்த்தியின் பெயர் அமைந்திருப்பதால் பலராமனும் வியூக மூர்த்தி சங்கர்ஷணனும் ஐக்கியம் அல்ல. (விவரம் தெரிந்த வைனவப்பெரியோர் தவறானால் விளக்குங்கள்).

    இரண்டாவதாக, சிவபெருமான் சந்கர்ஷனனுடைய அம்சம் என்பது விஷமம் என்றால், ஸ்ரீமத் பாகவதமும் விஷமம் ஆகிவிடும். அதைச் சொன்ன சுகர், அதை எழுதிய தந்தை வியாசர் – இவர்களெல்லாம் விஷமிகளா?

    சிவபெருமான் சங்கர்ஷணனின் அம்சம் என்பதற்குப் பிரமாணம் உண்டு:

    Bhaktivedanta VedaBase: Srimad Bhagavatam 5.17.16

    bhavani-nathaih stri-ganarbuda-sahasrair avarudhyamano bhagavatas catur-murter maha-purusasya turiyam tamasim murtim prakrtim atmanah sankarsana-samjnam atma-samadhi-rupena sannidhapyaitad abhigrnan bhava upadhavati

    SYNONYMS

    bhavani-nathaih — by the company of Bhavani; stri-gana — of females; arbuda-sahasraih — by ten billion; avarudhyamanah — always being served; bhagavatah catuh-murteh — the Supreme Personality of Godhead, who is expanded in four; maha-purusasya — of the Supreme Person; turiyam — the fourth expansion; tamasim — related to the mode of ignorance; murtim — the form; prakrtim — as the source; atmanah — of himself (Lord Siva); sankarsana-samjnam — known as Sankarsana; atma-samadhi-rupena — by meditating upon Him in trance; sannidhapya — bringing Him near; etat — this; abhigrnan — clearly chanting; bhavah — Lord Siva; upadhavati — worships.

    TRANSLATION

    In Ilavrta-varsa, Lord Siva is always encircled by ten billion maidservants of goddess Durga, who minister to him. The quadruple expansion of the Supreme Lord is composed of Vasudeva, Pradyumna, Aniruddha and Sankarsana. Sankarsana, the fourth expansion, is certainly transcendental, but because his activities of destruction in the material world are in the mode of ignorance, He is known as tamasi, the Lord’s form in the mode of ignorance. Lord Siva knows that Sankarsana is the original cause of his own existence, and thus he always meditates upon Him in trance by chanting the following mantra.

    // சிவனைப் பலராமனின் அம்சம் என்றும் சைவர்கள் வேண்டுமானால் பலராமனின் அம்சம் என்று சொல்லித் திருப்திப் பட்டுக்கொள்ளட்டும் என்று எழுதுவது வைணவவெறி அல்லாமல் வேறென்ன? //

    பாலாஜி அவர்கள் “திருப்திப் பட்டுக்கொள்ளட்டும்” என்று எழுதியதாகத் தெரியவில்லை. மேற்கொண்டு அவரே விளக்கலாம், விலக்காமலும் போகலாம்.

    // இராமன் மறைந்து நின்று விடுத்த அஸ்திரத்தான் மரணமடைந்த வாலியே கிருஷ்ணாவதாரத்தில் ஒருவேடனாய்த் தோன்றியிருந்து கிருஷ்ணன்காலைத் தானுண்ணும் பிராணியாக நினைத்து மறைந்து நின்று அம்போச்சினன். அதனாற் கிருஷ்ணன் மரணமடைந்தனன் என்னும் செய்தி மஹாபாரதம் முதலியவற்றிலிருந்து அறிய வருகின்றது. //

    மன்னிக்கவும் – மரணமடைந்தார் என்று இல்லை. இதற்குத் “திரோதானம்” (திருமேனியை மாயை எனும் திரையால் மறைத்தல்) என்று தான் கூறுவார்.

    அண்டமனைத்தையும் திருவடியால் அளந்தபோழுது எத்தனை முட்கள் குத்தியும் கலங்காத பரமனை கேவலம் ஒரே ஒரு அம்பு தைத்து மரிக்கச் செய்தது என்பது எப்படி அறிவிற்குப் பொருந்தும்?

    தானே ஒருவனைத் தேர்ந்தெடுத்து ஒரு நாடகத்தை நடத்தி அவதாரத்தை முடித்துக் கொண்டு எழுந்தருளினான் என்பதே தருக்கத்துக்கு ஒவ்வும். ஸ்ரீமத் பாகவதம்:

    śrī-bhagavān uvāca
    mā bhair jare tvam uttiṣṭha
    kāma eṣa kṛto hi me
    yāhi tvaḿ mad-anujñātaḥ
    svargaḿ su-kṛtināḿ padam

    SYNONYMS

    śrī-bhagavān uvāca — the Supreme Personality of Godhead said; mā bhaiḥ — do not fear; jare — O Jarā; tvam — you; uttiṣṭha — please get up; kāmaḥ — the desire; eṣaḥ — this; kṛtaḥ — done; hi — indeed; me — My; yāhi — go; tvam — you; mat-anujñātaḥ — given permission by Me; svargam — to the spiritual world; su-kṛtinām — of the pious; padam — the abode.

    TRANSLATION

    The Supreme Personality of Godhead said: My dear Jarā, do not fear. Please get up. What has been done is actually My own desire. With My permission, go now to the abode of the pious, the spiritual world.

    lokābhirāmāḿ sva-tanuḿ dhāraṇā-dhyāna-mańgalam
    yoga-dhāraṇayāgneyyādagdhvā dhāmāviśat svakam

    SYNONYMS

    loka — to all the worlds; abhirāmām — most attractive; sva-tanum — His own transcendental body; dhāraṇā — of all trance; dhyāna — and meditation; mańgalam — the auspicious object; yoga-dhāraṇayā — by mystic trance; āgneyyā — focused on fire; adagdhvā — without burning; dhāma — the abode; āviśat — He entered; svakam — His own.

    TRANSLATION

    Without employing the mystic āgneyī meditation to burn up His transcendental body, which is the all-attractive resting place of all the worlds and the object of all contemplation and meditation, Lord Kṛṣṇa entered into His own abode.

    rājan parasya tanu-bhṛj-jananāpyayehā
    māyā-viḍambanam avehi yathā naṭasya
    sṛṣṭvātmanedam anuviśya vihṛtya cānte
    saḿhṛtya cātma-mahinoparataḥ sa āste

    SYNONYMS

    rājan — O King Parīkṣit; parasya — of the Supreme; tanu-bhṛt — resembling the embodied living beings; janana — of birth; apyaya — and disappearance; īhāḥ — the activities; māyā — of His illusory potency; viḍambanam — the false show; avehi — you should understand; yathā — just as; naṭasya — of an actor; sṛṣṭvā — creating; ātmanā — by Himself; idam — this universe; anuviśya — entering it; vihṛtya — playing; ca — and; ante — in the end; saḿhṛtya — winding it up; ca — and; ātma-mahinā — with His own glory; uparataḥ — having ceased; saḥ — He; āste — remains.

    TRANSLATION

    My dear King, you should understand that the Supreme Lord’s appearance and disappearance, which resemble those of embodied conditioned souls, are actually a show enacted by His illusory energy, just like the performance of an actor. After creating this universe He enters into it, plays within it for some time, and at last winds it up. Then the Lord remains situated in His own transcendental glory, having ceased from the functions of cosmic manifestation.

    அது தவிர, வாலி தான் ஜரன் என்ற வேடனாக வந்ததாக எங்குமே இல்லை. கற்பனையில் விளைந்த நாடோடிக் கதையாக இருக்கும்.

  32. திரு ஜடாயு அவர்களே,

    // கட்டுரை ஆசிரியர் கந்தர்வன் இத்தொடரை மிகுந்த சமநிலையுடன் தான் எழுதிவருகிறார் என்பதையும் அனைத்து மறுமொழியாளர்களும் கவனிக்க வேண்டும். //

    மிக்க மிக்க நன்றி. இதை ஓரிருவராவது புரிந்துக் கொண்டால் சரி.

  33. நண்பர் சிவஸ்ரீ அவர்களே

    //
    செத்து பிறக்கின்ற” என்ற வார்த்தை பிரயோகம் அழகாகவா உள்ளது.
    இதில் தவறு இல்லை. உங்களைப் புண்படுத்தும் எந்த உள் நோக்கமும் காண்கிலேன்.
    //

    இது என்னை ஏன் (என்னையா) புண்படுத்த போகிறது.

    இதல் ஒரு தவறும் காணவில்லை என்ற உங்களது வாக்கினால் மகிழ்ச்சியே அடைந்தேன்.

    இதில் உள் நோக்கமெல்லாம் இலவே இல்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும். உள் நோக்கமெல்லாம் இருந்தால் நான் ஏன் மறு மொழி போட்டிருப்பேன். யதார்த்த ஞானம் ஏற்பட்ட பிறகு சந்தேகம் என்று ஒன்ருவருமோ.

    அதாவது மகிசத்தின் பாலின் நிறம் வெள்ளை என்ற யதார்த்த ஞானம் வந்து விட்டால். மகிசத்தின் பால் பச்சை நிறம் என்று சந்தேகம் வராதல்லவா

  34. முன்பு ஒரு கட்டுரை மறுமொழியில், சைவத்திலும் கூட அவதாரக் கோட்பாடு ஒருவகையில் போற்றப் படுகிறது என்று முனைவர் அவர்களுக்கு சுட்டிய ஞாபகம். ’தீதகன்று உலகம் உய்யத் திருவவதாரம் செய்தார்’ என்பது பெரியபுராணம். ‘ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன்’ என்ற கந்தபுராணப் பாடல் இடம்பெறுவது அதிலுள்ள ”திருஅவதாரப் படலத்தில்” தான். இது போக, சம்பந்தர் முருகப் பெருமானின் அவதாரம் என்று அருணகிரியார் உள்ளிட்ட பல சைவ சான்றோர்கள் சொல்லியுள்ளார்கள். இதற்கு கிருபானந்த வாரியார் சுவாமிகள் சுற்றி வளைத்து சுத்த சிவம், பர சிவம், அபர சிவம், அபர சுப்பிரமணியர் என்ற கருத்தாக்கங்களையெல்லாம் கூறி ஒரு நீண்ட விளக்கமும் அளித்துள்ளார். இதே போல “மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படுமாகிடிலே” என்று திருவாசகத்தில் உள்ளது போல சிவன் மீனவ வடிவில் “அவதரித்ததற்கும்” சைவ சித்தாந்தரீதியாக விளக்கம் உண்டு.

    மொத்தத்தில் அது சைவம் கூறும் அவதார விளக்கம். இதே போல வைஷ்ணவ சித்தாந்தத்திலும் அவதாரம் என்பதற்கு வேறு விதமான மிகச் சிறப்பான விளக்கம் உள்ளது, அவ்வளவே. எனவே அதைப் பழிக்கத் தேவையில்லை.

    மதிப்பிற்குரிய முனைவர் ஐயா அவர்கள் தனிப்பட்ட அளவில் வைஷ்ணவம் கூறும் அந்த அவதாரக் கொள்கையை ஏற்காமல் இருக்கலாம். ஆனால் கோடிக் கணக்கான இந்துக்கள் வணங்கிப் போற்றும் ஸ்ரீராம, ஸ்ரீகிருஷ்ண அவதாரங்கள் குறித்து இவ்வளவு கடும் சுடுசொற்களை உபயோகித்து எழுதுவது வருத்தமளிக்கிறது. அதற்கு அவசியமுமில்லை என்பதே எனது பணிவான எண்ணம்.

  35. திரு ஜடாயு
    “அன்பர்களே, தயவு செய்து இப்பதிவை சமயப் பூசல் வளர்க்கும் விதமாகத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்”.
    நிச்சயம் பூசல் வேண்டாம் தான் அதற்காக ஸ்மார்த்தத்தினை, ஸ்ரீ வைணவர்கள் கருத்துக்களை கண்ணை மூடிக்கொண்டு சைவர்கள் ஏற்கமுடியுமா என்ன. எமக்கு உடன்படாவற்றை கூறுகிறோம். அந்த உரிமையை நீங்கள் மறுக்கமுடியாது. மாறுபட்ட சித்தாந்தங்கள் வழிபடு முறைகள் கொண்டதே வைதீக சனாதனம். ஸ்ரீ நாராயணனை பரம்பொருள் அவரது அவதாரங்கள் பரம்பொருள் என்று வைணவர்கள் போற்றட்டும். அதனை சைவர் ஏற்பதில்லை.
    திரு கந்தர்வன்
    “சிவபெருமான் சந்கர்ஷனனுடைய அம்சம் என்பது விஷமம் என்றால், ஸ்ரீமத் பாகவதமும் விஷமம் ஆகிவிடும். அதைச் சொன்ன சுகர், அதை எழுதிய தந்தை வியாசர் – இவர்களெல்லாம் விஷமிகளா?
    ஆம் சிவனை ருத்திரன் என்போர் என்போர் எல்லாம் விசமிகளே. பாகவதம் எங்களுக்கு பிரமாணம் இல்லை என்கிறோம். அதனை பதினெண்புராணங்களில் ஒன்று என்றே சைவர் ஏற்பதில்லை. பதிணெண் புராணங்களில் உள்ளது தேவிபாகவதம். உங்கள் பாகவதம் வைதீகமானது அன்று அது தாந்த்ரீகமானது. அதில் வேத நிந்தனை உள்ளது என்பது சிவனருட் செல்வர்தம் கருத்து. தேவை எனில் அதனையும் எழுதுவோம்.

  36. திரு ஜடாயு
    ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன்’ என்ற கந்தபுராணப் பாடல் இடம்பெறுவது என்று அவதாரம் சைவத்தில் உண்டு என்கிறார். இது தோற்றம் பிறப்பு அன்று. அது யோனியில் நிகழ வேண்டும். சிவபெருமான் மானுட வடிவில் அருள் புரிய வந்தார் என்பது அவர் பிறந்தார் எனப் பொருள் படாது. ஸ்ரீ ராமன் மற்றும் ஸ்ரீ கிருஸ்ணர் ஆகியோர் பிறந்தனர் மறைந்தனர் என்பது உண்மை. இதில் இழிவென்ன?. எம் சித்தாந்தம் கூறுவதை எமது நம்பிக்கையை கூறுகிறோம். அவ்வளவே.

  37. // சிவபெருமான் மானுட வடிவில் அருள் புரிய வந்தார் என்பது அவர் பிறந்தார் எனப் பொருள் படாது. ஸ்ரீ ராமன் மற்றும் ஸ்ரீ கிருஸ்ணர் ஆகியோர் பிறந்தனர் மறைந்தனர் என்பது உண்மை.//

    ஐயா, இவ்வளவு தத்துவம் அறிந்தவர் நீங்கள்.. இது போன்ற சமயவாதங்கள் எவ்வளவு அற்பத் தனமானது, சிறுபிள்ளைத் தனமானது என்று இன்னொரு முறை படித்துப் பார்த்தால் உங்களுக்கே புலப் படும்.

    Neither born, nor dead, he simply walked on earth என்று ஒரு வாசகம் புணேவில் ஓஷோவின் கல்லறையில் எழுதப் பட்டிருந்ததை அங்கு போயிருந்தபோது பார்த்தேன்… பேசாமல் அவரையும் உங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் :))

    நம்மாழ்வார் போன்ற அதி உன்னத ஆன்மீக நிலையடைந்த மகான், தத்துவ ஞானக் கடல், உங்களாலேயே நகைப்புக்கிடமாகக் கருதக் கூடிய ஒரு விஷயத்தை தன் வாழ்நாள் முழுவதும் ஏத்திப் போற்றிப் பாடி உபதேசித்தார் என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? அப்படிக் கூட ஒரு எண்ணம் உங்கள் மனதில் தோன்றுமா என்ன?

    இதற்கு மேல் வேறென்ன சொல்வது என்று தெரியவில்லை.

    மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி
    ஈறில் இன்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்,
    பாறிப்பாறி அசுரர் தம் பல்குழாங்கள் நீறெழ, பாய்பறவையொன்று
    ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்!

    – திருவாய்மொழி

  38. மதிப்பிற்குரிய ஸ்ரீ கந்தர்வன் அவர்களுக்கு,

    தாங்கள் என்னை விழித்து எழுதியிருக்கிற மறுமொழியில் முடிவில் இப்படி இருக்கிறது.

    //இப்படியிருக்க “தங்களை வயதிலும் அனுபவத்திலும் முதியவராக மதிக்கிறோம். அப்படி இருக்கும் பொழுது இத்தகைய பதிதமான வார்த்தைகள் தங்கள் கையெழுத்தாக வந்திருப்பது பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. இப்படிக் கூறியிருக்க வேண்டாம்” என்று அப்பெரியார் குறித்து இங்கு ஒருவராவது கூறினீர்களா? இப்படி இருக்க நமக்கு மட்டும் ஏன் இந்த சமரச போதனை?//

    இது என்ன..? முனைவர் பரம சைவ சித்தாந்தி.. அவர் எழுதுவதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவரை கிருஷ்ணாவதாரம் தொடர்பில் மரியாதையுடன் எழுதும் வண்ணம் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

    கண்ணன் நம் காதலன் அல்லவா..? அவனை விட்டால் வேறு ஒன்றுமே தெரியவில்லை.. ஹிந்து தர்மத்தின் மூலவிருட்சம் கண்ணன் காட்டிய பாதை (பகவத்கீதை) அல்லவா..?

    //மிஷ நரிகள் நாளைக்கு “பலராமனின் கோயிலைத் தான் சைவர்கள் அபகரித்தனர்” என்று சைவ-வைணவ சண்டையை மூட்டினாலும் மூட்டக்கூடும்.//

    இது நல்ல நகைச்சுவை… பழைய கோயில்களில் எல்லாம் மூல விமானத்தில் தெற்கு மேற்கு வடக்கு திசைகளில் முறையே சிவ விஷ்ணு பிரம்ம வடிவங்கள் செதுக்கப்பெற்றிருந்தன என்று குறிப்பிடப்படுகிறது.. ஹிந்துகக்ளிடத்தில் இப்படி ஒரு பேதம் பழங்காலத்தில் கிடையவே கிடையாது.. மிஷனரிகள் சொன்னால் கேட்பதற்கு ஹிந்துக்களின் மண்டையில் என்ன கிடக்கிறது..?

    ஆக, ஜடாயு அவர்களின் வேண்டுதலை நானும் வழிமொழிகிறேன்… இந்த நல்ல தளத்தில் நல்ல கட்டுரையினை வைத்துக் கொண்டு சண்டையிட வேண்டாம்.. “நாம் அன்பே கடவுள் என்று நம்பும் ஹிந்துக்கள்..”

    “சிவஸ்ய ஹிருதயம் விஷ்ணு விஷ்ணுஸ்ய ஹிருதயம் சிவ” என்பதே அடியேனின் நம்பிக்கை..

  39. //தான் பரமாத்வாவே ஆனாலும் பிரக்ருதியின் சட்டத்திலிருந்து தன்னை விடுவித்து கொள்ளாதவன் நாரணன் – அது அவனது நேர்மையை காட்டுகிறது – கடவுள் என்ற அடாவடித்தனமில்லாதவன் அப்படித்தான் இருக்க வேண்டும்.////
    //ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன். //

    பரம்பொருளுக்குப் பெரியவர்கள் கூறும் இலக்கணம் களிப்பளிக்கின்றது. மிக்க நன்றி. இந்த விவாதத்தில் நான் பெற்ற மிகப் பெரிய அற்புதமான உண்மை.

    நம்மாழ்வார் ‘நம்’ ஆழ்வார். சிவதூஷணம் செய்யாதவர். மாறிமாறிப் பல்பிறப்பும் பிறந்து எனத் த்ம்முடைய பல்பிறவிகளையே கூறிக் கொண்டாரே அன்றி பரம்பொருளுக்குப் பிறப்புக் கூறவில்லை. சமயவாதத்தில் எமக்கும் உடன்பாடு இல்லை. ‘காதிமோதி வாதாடு நூல்கற்போர் மாறிலாத மாகாலன் ஊர்புக் குழல்வாரே’ என்பதில் எமக்கும் உறுதியான நம்பிக்கை உண்டு.

    ஆத்ம மாயை என்பது யாது? அது பரம்பொருளையும் பிறந்துழலச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது என்பதையும் இதிகாசங்களில் அவதாரநாயகர்க்ள் செய்தனவெல்லாம் அவர்கள் இயல்பே; அடாவடித்தனமன்று என்பதனையும் வடமொழி ஆங்கிலம் முதலியவற்றிலிருந்து சான்றுக்ள் காட்டித் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி
    ஆத்ம மாயை(கன்மம்)யால்தான் உயிர்கள் பிறப்பெய்துகின்றன, பிறந்து பிரகிருதிமாயையில் மயங்கி உழல்கின்றன என்று சைவசாத்திரங்களும் கூறுகின்றன தெளிவளித்தமைக்கு மிக்க நன்றி.

  40. // மாறிமாறிப் பல்பிறப்பும் பிறந்து எனத் த்ம்முடைய பல்பிறவிகளையே கூறிக் கொண்டாரே அன்றி பரம்பொருளுக்குப் பிறப்புக் கூறவில்லை. //

    இதுவும் தவறு. நீங்கள் திருவாய்மொழியை முழுவதும் வாசிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

    3615
    இதுவோ பொருத்தம் மின்னாழிப்
    படையாய். ஏறும் இருஞ்சிசிறைப்புள்,
    அதுவே கொடியா வுயர்த்தானே.
    என்றென் றேங்கி யழுதக்கால்,
    எதுவே யாகக் கருதுங்கொல்
    இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான்,
    மதுவார் சோலை யுத்தர
    மதுரைப் பிறந்த மாயனே? – திருவாய்மொழி 8.5.9

    3616
    பிறந்த மாயா. பாரதம்
    பொருத மாயா. நீயின்னே,
    சிறந்த கால்தீ நீர்வான்மண்
    பிறவு மாய பெருமானே,
    கறந்த பாலுள் நெய்யேபோல்
    இவற்று ளெங்கும் கண்டுகொள்,
    இறந்து நின்ற பெருமாயா.
    உன்னை எங்கே காண்கேனே? 8.5.10

    2995
    சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம்,
    இறப்பிலெய்துகவெய்தற்க, யானும்
    பிறப்பில் பல்பிறவிப்பெருமானை,
    மறப்பொன்றின்றி யென்றும்மகிழ்வேனே. 2.9.5

    // ஆத்ம மாயை என்பது யாது?//

    முன் காட்டிய தமிழ் மொழிபெயர்ப்பு சரியன்று. வேறு தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

    “ஆத்மமாயை” என்பது “தன்னுடையமாயை” அதாவது “தன்னுடைய ஒப்பற்ற மாயாசக்தி” என்ற பொருளை உடையது. “தாம் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய” என்பதற்கு “என்னுடைய மாயா சக்தியை ஆட்கொண்டு பிறக்கிறேன்” என்பது தான் பொருள். இதில் இங்கும் “பரம்பொருளையே மயக்கி பிறந்துழலச் செய்கிறது” என்று மனம்போனபடி அனர்த்தப்பட இடமில்லை.

  41. // உங்கள் பாகவதம் வைதீகமானது அன்று அது தாந்த்ரீகமானது. //

    //அதில் வேத நிந்தனை உள்ளது என்பது சிவனருட் செல்வர்தம் கருத்து.//

    வேடிக்கையாக இருக்கிறது. ஸ்ரீமத் பாகவதம் பாரதம் முழுவதும் ஏககண்டமாக அனைவராலும் ஏற்கப்படுவது. இதைப் புறந்தள்ளினால் சனாதன தருமமாகிய ஆலமரத்திலிருந்து அறுபட்டு விழுவதற்குச் சமமாகும்.

  42. கந்தர்வன்

    நீங்கள் புரிந்துகொள்ளவில்லை நம் ஆழ்வார் சிவனை நிந்திக்கவில்லை அதனால் தான் பரம்பொருளுக்கு பிறவி இல்லை என்று சொன்னதாக நாம் கற்பனை செய்கிறோம்.

    நம் ஆழ்வார் ஒரு அதீதஹர பக்தர் என்பது நாம் எப்படி தெரிந்து கொள்ளலாம்

    ஏ ஏ பாவம் பரமே ஏழ் உலகும்
    இ பாவம் செய்து அருளால் அளிப்பார் யார்
    மாபாவம் விட ஆறர்க்கு பிச்சை பெய்
    கோபாலக் கோலேறி வேறன்றியே

    பெரியவர் வயது கூட பாரமால் இன்று கூட கற்றுக்கொள்ளும் மனப்பாங்கில் உள்ளது என்னை பரவசத்தில் தள்ளி விட்டது.

    //
    உங்கள் பாகவதம் வைதீகமானது அன்று அது தாந்த்ரீகமானது. அதில் வேத நிந்தனை உள்ளது என்பது சிவனருட் செல்வர்தம் கருத்து. தேவை எனில் அதனையும் எழுதுவோம்.
    //

    இப்படி ஒருத்தர் எழுதிகிறார் – அவர் காட்டும் பிரமாணம் பாருங்களேன் எப்பேர்பட்ட ஒன்று

    சரி வியாசர் விசமி என்றால் – அவர் செய்த ப்ரம்மசூத்ரத்தை பின் பற்றி எழுதப்பட்ட பாடியங்கள் அனைத்தும் விஷமமா?

    சரி வ்யாசர் வேறு பாதாராயனர் வேறு என்று சொன்னால் – அப்புறம் எழுதுவோம் இதை பற்றி

  43. திரு.சிவஸ்ரீ வித்யாபூஷன் அவர்களுக்கும், முனைவர் அய்யா அவர்களுக்கும்:-
    தனி நபரைச் சாடும் பழக்கம் எனக்கில்லை. அவரது மறுமொழியையும் கருத்தையும் தான் எதிர்த்தேனே தவிர அவரை அல்ல. என் வார்த்தைகள் அப்படி அமைந்திருந்தால், மன்னிப்பு கேட்பதில் நான் வருந்தவில்லை. முனைவர் அவர்கள் மீதும், அவரது புலமை மீதும் எனக்கு மிகுந்த மதிப்புள்ளது.
    இரண்டாவது, என் பெயரையும் நான் எழுதிய மறுமொழியையும் வைத்து என்னை வைணவன் என்று எண்ண வேண்டாம். இதே தமிழ் இந்து தளத்தில், சைவத்தை ஆதரித்தும், சைவ-வைணவ ஒற்றுமைக்கும் நான் பல மறுமொழிகளை எழுதியிருக்கிறேன். அது முனைவர் அவர்களுக்கேத் தெரியும்.
    ஆனால், அவர் எழுதிய சிலவற்றை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இங்கு மட்டுமல்ல, முன்பொரு கட்டுரையில் அவர் எழுதிய கண்டனத்திற்குரிய வரிகளை எதிர்த்து நான் எழுதிய மறுமொழி காரணமாக தமிழ் இந்து தணிக்கைக்குழு அவ்வரிகளை பிரசுரிக்காமல் விட்டதை முனைவரே அறிவார் (அது என்னவென்று இங்கு குறிப்பிட்டு எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்ற விரும்பவில்லை).
    நான் பெரியவர்களை மதிக்க என்றுமே தவறியதில்லை. ஆனால், பெரியவர்கள் செய்வது சிறிய தவறானாலும் சிறியவர்கள் பெரியவர்கள் ஆவது தான் நியாயம். இது முருகப்பெருமான் சொல்லிக்கொடுத்த பாடம் (“பிறந்து இறக்கும் மானுடப்பதரை முருகனுடன் ஒப்பிடுபவன் சைவன் ஆகான்” என்று போதிக்கவேண்டாம்). நான் என்னை கடவுள் என்றோ அமரன் என்றோ கூறவில்லை. ஆனால் நமது புராணங்கள், இதிகாசங்களில் வரும் சம்பவங்கள் அனைத்துமே மனிதனுக்கு பாடம் கற்பிப்பதர்க்காகவே!

    சிவபெருமானை நபிகளுடன் நான் ஒப்பிடவில்லை, அதை வெக்கம்கேட்ட பலர் செய்கின்றனர். அந்த அநியாயத்தை நீங்கள் இதுபோல் தட்டிக் கேட்பீர்களா, அது அவமானம் என்று சொல்ல உங்களுக்குத் துணிவு இருக்குமா என்பது தான் என் கேள்வியாக இருந்தது (எனது ஆதங்கத்திர்க்காகச் சொன்னேன், கேட்டு உங்கள் தலையை இழக்க வேண்டாம்!). இதுபோன்ற இழிவுகளை சந்திக்கவேண்டியது நமது தலையெழுத்து.

    அம்மையப்பனானாலும் அரங்கனாலும் எனக்கு ஒரு பேதமும் இல்லை.

    நான் இதற்கு முன்பாக சொன்னது உங்களைக் காயப்படுத்தி இருந்தால், மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்.

    நன்றி,
    பாலாஜி.

  44. எல்லோருக்கும்,
    தவறு என்னுடையதுதான்.. அமைதியாக நடந்துகொண்டிருந்த விசுவாமித்ரரின் யாகத்தில் மாரிச்சனும் சுபாகுவும் இறைமாமிசங்களைத் தூவி அசுத்தப்படுத்தியதுபோல, ஆரோக்கியமாக போய்க்கொண்டிருந்த விவாதம் என்னால் திசைமாறிப் போனது மட்டுமல்லாது அனைவரின் நேரத்தையும் வீணடித்துவிட்டேன். அந்த தேவையில்லாத மறுமொழியை நான் எழுதவில்லை என்று யார் கேட்டார்..

    தணிக்கைகுழுவிர்க்கு, நான் எழுதிய அனைத்து மறுமொழிகளையும் தயவுசெய்து அழித்துவிடுங்கள்.

  45. வியாசரை விசமியாக்கும் முன் நாம் யோசித்திருக்க வேண்டிய இன்னொரு விஷயம்.

    வேதம் த்ரயி வித்யா என்று தான் இருந்தது அதற்குள் அதர்வண வேதத்தை எதிர்ப்பையும் மீறி சேர்த்தது வியாச பகவான் தான் – அதர்வண வேதத்தில் தானே அதர்வ சிரஸ் இருக்கிறது – அதை வைத்துக் கொண்டு தானே நாம் என்னோமோ சொல்வோமே, அது என்ன?

    நாங்க விடுவோமா – இதுக்கும் ஒரு வழி வச்சிருக்கோம் வியாசர் முன்னாடி நல்ல தான் இருந்தார் அப்புறம் புராணங்களை கோர்க்கும் பொது அவர் அறியாமையினால் செய்து விட்டார் என்று சொல்லுவோம் – இதோடு அல்லாமல் இதற்க்கு ஏறிச்சாமி சொன்ன பிரசித்திபெற்ற சான்றையும் நீட்டுவோம்.

    நமது சமயப் பற்று எவ்வளவு தூரம் ஆழமாக இருந்தால் வியாசரை விசமி என்போம்.

    வியாசர் ஒரு சந்தன தரமி மட்டுமல்ல – அவர் வேடத்தை எப்படி பிரித்துள்ளார் என்று தெரிந்தால் அதிர்ச்சி அடைவோம்

    வேதத்தில் உள்ள ரிக்குகளை அவர் பத்தாக பிரிக்கிறார்
    191, 43, 62,58,87,75,104,92,14,191,1017

    இதை கூட்டினால் mercury, venus, mars, jupiter, saturn இவைகள் சூரியனை சுற்ற எடுக்கும் நாள் கணக்கு வரும்.

    இது வெறும் ஒரு உதாரணமே

    இப்பேற்பட்ட ஒரு ஞான விஞான வானை விசமி என்று புறம் தள்ள எப்படி தான் மனம் வருகிறதோ. இது பாரத ஞான மரபுக்கே ஒரு பெரும் களங்கம்.

    நண்பரே அபிராமி அந்தாதியை வைணவர்கள் கிரமமாக படிப்பதில்லை – ஆனால் அது சொல்லும் விஞானம் அபாரம் அபாரம். அந்த ஒரு விசயத்திற்காகவே அபிராமி பாட்டரை போற்றி புகழ வேண்டும்

    விவேகானந்தரே நீங்கள் மறுபடியும் வர மாட்டீரா?

    வருத்தத்துடன்

  46. அன்புடையீர்,

    இந்த கட்டுரைத்தொடர் மற்றும் அதன் மீதான கருத்துப்பரிமாற்றங்கள் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது.

    சில ஆண்டுகளுக்கு முன், தினமணி கதிர் வார இதழில் வந்த ஒரு கட்டுரையில் , அனுமன் சிவனின் அவதாரம் என்று கட்டுரையாசிரியர் குறிப்பிட்டிருந்தார். உடனே, சைவ சித்தாந்திகள் மட்டுமின்றி , அத்வைதிகளில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடிதங்களை குவித்தனர். மறுப்புக்களையும் அதே பத்திரிகை ஆசிரியர் வெளியிட்டார்.

    இந்து மதத்தில் , பல குழுக்களிடையேயும் சண்டை மூட்டி, ரத்தம் குடிக்க மிஷினரிகள் பல பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். அது போதாதென்று இது வேறா ? இந்த நேரத்தில், ஒரு விஷயத்தை சுட்டி காட்ட விரும்புகிறேன்.

    திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர் இல்லம்( குடில்) உருவாக்கிய சுவாமி சித்பவானந்தா அவர்கள் மாணிக்க வாசகரின் திருவாசகம் , பகவத் கீதை இரண்டுக்கும் உரை எழுதியுள்ளார். தமிழில் அவற்றை விட சிறந்த உரைகளை காண்கிலேன். அவர் சைவ மூர்த்தி ஆவார். ஆன போதிலும் , திருவாசக உரையிலேயே சில பகுதிகளுக்கு உரை எழுதும்போது, சைவத்தை தவிர பிற பிரிவுகளை கண்டிக்கும் சில இடங்களில் , தமது மாற்றுக்கருத்தை பதிவு செய்துள்ளார். இது போன்ற நடுநிலை, வைணவர்களில் பொய்கையாழ்வாரிடமும், மேலும் நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரங்களில் சிலவற்றிலும், சிவனும், மாலும் ஒரே சக்தியின் இருவேறு தோற்றங்களே என்ற உண்மை வரையப்பட்டுள்ளது.

    சில தீவிர வைணவர்கள், இந்த பாசுரங்களை கூட படிக்காமலும், அவற்றை படித்துவிட்டு சில தவறான விளக்கம் கொடுத்து குறுகிய மனத்துடன் செயல்படுகின்றனர்.

    “ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ ” ( திருவாசகம் 235- திருத்தெள்ளேணம் – 1)

    மகாவிஷ்ணு பாற்கடலில் மட்டும் இல்லை, தூணிலும் துரும்பிலும் உள்ளான். அவனே சிவன். சிவனே அவன். அரியும் சிவனும் ஒண்ணு. பெயர்கள் மனிதர்களின் வசதிக்காக சூடப்படுபவை ஆகும். பெயர்களை வைத்து அடையாளம் காட்ட வசதி என்பதற்காக மனித இனத்துக்கு வடிவமும், பெயர்களும் தேவைப்படுகிறது.

    சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், தீவிர வைஷ்ணவ- தீவிர சைவ சண்டை அறியாமையால் நடந்தது. இந்து மதம் என்பது all inclusive ஆகும். When limitations are created, there is no scope for improvement. எல்லைகள் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு ஒரு தடை ஆகும்.

    ராமபிரானின் பக்தரான ஸ்ரீ ஹனுமார் போரில் ராமபிரானையே தோற்கடித்தார்.எவ்வாறு ? ராமபிரான் அனுமனின் நெஞ்சில் எப்போதும் நிலைத்திருப்பதால்.

    ஒரே சக்திதான் எல்லா உருவத்திலும் உள்ளது, அதுவே பரம்பொருள். விஷ்ணு அல்லது சிவன் அல்லது கணபதி அல்லது சக்தி அல்லது சூரியன் அல்லது முருகன் என்று எந்தபெயரில் வேண்டுமானாலும் இறைவழிபாடு செய்யலாம். எல்லா பெயர்களும், எல்லா உருவங்களும் சமமே ஆகும். ஒரு பெயரும், ஒரு உருவமும் மற்ற பெயர்கள் மற்றும் உருவங்களை விட உயர்வு, மற்றவை தாழ்ந்தவை என்று வாதிடும் மூடர்களை ஒதுக்குவோம்.

  47. அன்புள்ள பாலாஜி அவர்களே,

    அவசரப்பட வேண்டாம். இத்தளத்தில் பல நல்ல நடுநிலையான கட்டுரைகளும் தருக்கபூர்வமான விவாதங்களும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

    நீங்கள் சொல்லியுள்ள விஷயங்களில் எந்த துவேஷமும் இருக்க வாய்ப்பில்லை.

    இங்கு எழுதும் சிலர், சொல்லவருபவரின் உள்நோக்கத்தை எல்லாம் தாமாகவே தோண்டி எடுத்து ஊகித்துக் கொள்ளாமல், சொல்லப்படும் கருத்தை மாத்திரம் நடுநிலையாக ஆராய்ந்து அதற்கு அபிப்பிராய பேதம் இருந்தால் நாகரீகமான முறையில் விவாதிக்க வேண்டும். சொல்ல வந்த விஷயத்தை மாத்திரம் கத்தி முனை போன்று துல்லியமாக, சுருக்கமாக, தேவையான அளவுக்கு மாத்திரம் சொல்ல வேண்டும். சினத்தால் அபகரிக்கப்பட்ட சிந்தையுடன் ஒன்றை எழுதுகிறேன் என்று கிளம்பி சம்பந்தமில்லாத எதைஎதையோ எழுதுவது சரியன்று. இது பலருக்கு எளிதில் வந்து விடாது, ஒரு பெரிய வித்தை அல்லது கலை என்றே சொல்லலாம். இதற்குச் சமமான மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இங்கேழுதும் அனைவரையும் முடிந்தவரை இத்தகைய முறையைக் கையாளவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

    அல்லது ‘இந்த ரீதி முறையற்றது’ என்று சுட்டிக் காட்டப்பட்டால் தாம் அப்படி எழுதியதற்கு மன்னிப்புக் கேட்டு சொற்களைத் திரும்ப வாங்கிக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும். முதலிலேயே சமநிலையுடன் எழுதும் கலை தெரியாவிட்டாலும், இப்படியாவது செய்து மரியாதையுடன் பெருவதர்காவது வரவேண்டும். இதற்காவது சமமான மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    இப்படிச் செய்யாமல் ‘நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்று மீண்டும் மீண்டும் விதண்டாவாதங்களை எல்லாம் கண்டு நீங்கள் மனம் கலங்க வேண்டாம் என்று கோருகிறேன். ஆனால் சில சமயம் இத்தகைய விதண்டாவாதங்கள் சாதுக்களையும் பொறுமையிழந்து கடும்சினம் கொள்ள வைக்கும் என்பதை மறுக்கவில்லை.

    இனியாவது கட்டுரையிலுள்ளவர்ரைப் பற்றி உரையாடலாமா?

    அன்புள்ள ஜடாயு அவர்களே,

    //திருவனந்தபுர ஆலய கட்டுமானத்தை விட திருவட்டாறு ஆலயத்தின் கட்டுமானம் பழமையானது. அளவிலும், கலைநேர்த்தியிலும் சிறப்பானது. எனவே “ஆடக மாடம்” எனப்பட்ட அணிமாடக் கோயில் அதுவாகவே இருக்கலாம் என்கிறார் அவர். என்ன நினைக்கிறீர்கள்?//

    நீங்கள் கேட்ட சந்தேகத்திற்கு நான் இலக்கியச் சான்று சிலவற்றைக் காட்டினேன். ஆயிரம் வருடங்களுக்கும் முன் இருந்த உரையாசிரியர்களின் அபிப்பிராயம் தவறு என்று சொல்ல வேண்டுமானால் அதற்கு மிகவும் வலுவான சான்றுகள் வேண்டுமே? ஆதிகேசவப்பெருமாள் கோயில் தான் “ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தான்” என்று சொல்வதற்கு? அதற்கு நீங்கள் சுட்டியுள்ள அவ்வறிஞர் என்ன கூறினார்? ஆராய விழைகிறேன்.

  48. //////மகாவிஷ்ணு பாற்கடலில் மட்டும் இல்லை, தூணிலும் துரும்பிலும் உள்ளான். அவனே சிவன். சிவனே அவன். அரியும் சிவனும் ஒண்ணு. பெயர்கள் மனிதர்களின் வசதிக்காக சூடப்படுபவை ஆகும். பெயர்களை வைத்து அடையாளம் காட்ட வசதி என்பதற்காக மனித இனத்துக்கு வடிவமும், பெயர்களும் தேவைப்படுகிறது//////.

    சரியாக சொன்னீர்கள் ஸ்ரீ கதிரவன் அவர்களே, இதுவே உண்மை. இது எல்லா இந்துக்களின் உணர்வாக இருக்கவேண்டும்.இதை வணங்கி வரவேற்கிறேன்.

  49. திரு கந்தர்வன் திரு ஜடாயு திரு பாலாஜி, திரு சர்மா ஆகியோருக்கெல்லாம் அடியேன் சொல்லுவது. சிவ விஷ்ணு சம பாவனை சைவம் அன்று. திருமாலை சைவம் முழுமுதற் பொருளென்று எம் நெறி ஏற்பதில்லை. பெருமாளையும் அவரது அவதாரங்களையும் சிவனருட் செல்வரென்று வணங்குகின்றோம். முத்தி தரும் தன்னிகரில்லா தலைவன் சிவம் எம் இறை. அப்பரம் பொருள் பிறப்பு இறப்பு அற்றவர். உலகெங்கும் உள்ள ஹரே கிருஷ்ண இயக்கத்தினர், ஸ்ரீ வைணவர்கள்(கந்தர்வன் உட்பட) சிவ வழிபாடு முக்தி தராது என்றும் மொழிந்து வருகிறார்கள். இவையெல்லாம் நாம் என்னாளும் ஏற்போம் அல்லோம். ஸ்ரீ பாகவதமும் இக்கருத்துக்களை சொல்வதால் நாம் அதனையும் புறம்பு என்றோம். சிவ விஷ்ணு சமவாதம் பேசும் யாரும் சைவர் மட்டுமல்ல வைணவரும் ஆகார் எனவே அதனை நாம் கொள்வோம் அல்லோம். மாற்றுக்கருத்துக்களை உரைப்பதற்கு சைவர்க்கு உரிமை உண்டு. அதை யாரும் மறுத்தலும் கூடுமோ.
    மீனவப்பெண்ணின் மகன் வந்தான் வேதங்களையே வகுத்தளித்தான் என்று வரும் பாடல் வரிகள் எனக்கு என்றும் பிடித்தமானவை. பகவான் வியாசர் வணக்கத்திற்கு உரியவர். இன்றைய நமது ஹிந்து சமயத்தின் அடிப்படையான வேதவாங்மயம் வேத இலக்கியங்களுக்கு அவரது கொடை ஒப்பற்றது. ஆனால் பதிணெண் புராணங்களில் வராத பாகவதம் வேத இலக்கியத்தின் பகுதி அன்று. அது வேததினை நிந்தனை செய்கிறது வேதத்திற்கு விரோதமாக உள்ளது.

    ஒன்று. வியாச பகவான் வேதங்கள், பதிணெண் புராணங்கள் இரண்டு இதிகாசங்கள் எழுதியபின் ஞசானம் பெறாததால் பாகவதம் எழுதினார் என்று பாகவததில் உள்ளது. இது வேதமறுப்பாகும்.
    இரண்டு பாகவதத்தில் பத்தாவது கண்டத்தி பாகவத தர்மத்தினை மட்டுமே நம்பி மற்ற தர்மங்களை வெறுத்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது. வேதவேள்விகளையும் பாகவதம் மறுக்கிறது. எனவே பாகவதம் வைதீகமானது அன்று.

  50. சிவஸ்ரீ அவர்களே

    //
    ஒன்று. வியாச பகவான் வேதங்கள், பதிணெண் புராணங்கள் இரண்டு இதிகாசங்கள் எழுதியபின் ஞசானம் பெறாததால் பாகவதம் எழுதினார் என்று பாகவததில் உள்ளது. இது வேதமறுப்பாகும்.
    //

    வியாசர் புராணங்களை எழுதவில்லை – தொகுத்தார். புராணங்கள் அவரக்கு முன்பே இருந்தன. ஆதாரம் – ப்ரிஹுதாரன்யாக உபநிஷத். இந்த உபநிஷத் புராணங்களையும் ஒரு இதிகாசத்தையும் வேதத்திற்கு சமமாக சொல்கிறது.

    இதை சொன்னவர் யாஜ்யவல்கர் – சுக்ல யசுர் வேதத்தை கொண்டு வந்தவர்.

    வியாசர் சாணம் வரதாதால் பாகவதம் எழுதவில்லை – இவ்வளவு செய்தும் ஒரு நெருடல் அவர் மனதில் இருந்தால் பாகவதம் எழுதினார். வேதத்தை பிரித்து என்ன பிரயோஜனம், புராணம் சொல்லி என்ன பிரயோஜனம் – சாக்ஷாத் பரமனின் லீலைகளை எழுதாமல் விட்டோமே என்ற ஆதங்கம்.

    வியாசர் பாகவதம் எழுதி அதில் பரமன் யார் என்று சொல்லிவிட்டதால் உள்ள கடுப்பினால் அவரை குறை சொல்ல தேவை இல்லையே அவரை விசமியாக்க அவசியம் தான் என்ன.

    உங்களை எதையும் ஒத்துக் கொள்ள சொல்லவில்லை. உங்களுக்குள்ளே என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் விஷ்ணுவை திட்டிக் கொள்ளுங்கள். அனால் தமிழ் ஹிந்து மாதிரி பொது இடங்களில் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் அவ்வளவே. ஸ்ரீமன் கந்தர்வன் ஸ்ரீ வைஷ்ணவர் என்று எப்படி முடிவு கட்டினீர்.? அவர் எழுதிய கட்டுரைகளில் ஒரு இடத்திலாவது மற்ற தெய்வங்களை குறை கூறினாரா.

    நான் சைவான் எமக்கு இது உடன் பாடில்லை நான் பேசுவேன் என்பதானாலேயே பொதுவிடங்களில் என்ன வேண்டுமானாலும் பேசும் உரிமை உங்களுக்கு உண்டு என்று நீங்கள் நினைத்தால் சந்தோஷம்

    வேதத்தினை வேதமே நிந்தனை செய்கிறது – அத்ர மாதா அமாதா பிதா அபிதா, வேதா அவேதா. முக்தி நிலையில் வேதம் வேதமே இல்லை என்று வேதமே சொல்கிறது. இதை நிந்தனை என்று நினைத்தால் உங்கள் இஷ்டம்.
    சங்கரர் பகவத் கீதா பாஷ்யத்தில் வேதத்தினால் கடவுளை அறிய முடியாதுஹ் அது சும்மா தான் என்கிறார் – அப்போ அவர் வேதத்தை நிந்தனை செய்கிறாரா – சிவா குருபரர் ஒரு வாக்கியத்தை எடுத்து கொண்டு அப்படி சொன்னாலும் சொல்வார்.
    வியாசர் ஒரு நாளும் வேதத்தை நிந்திததில்லை. இப்படி தான் ஒரு வாக்கியத்தை எடுத்து பாரு பாகவதம் வேதத்தை நிந்திக்கிறது என்று சொன்னால் என்ன செய்ய.

    ஸ்வாமின் – ஸ்மார்த்தர்களுக்கு வேதா வேதாந்தம் தான் மிக மிக முக்கியமானது (வைணவர்கள் பிரபண்டத்திர்க்கு முக்கியத்துவம் தருகிறார்கள்). அப்படிப்பட்ட ஸ்மார்த்தர்கள் வேதத்தை பாகவதம் குறை கூறுகிறது என்று இருந்தால் அதன் பக்கமே போகமாட்டார்கள் – இன்றைக்கு பாகவத்தில் வெளுத்து வாங்குவது யார் – அத்வைதிகள் தான்.

    நீங்கள் சொல்ல வரும் விஷயத்தில் வரும் மற்றொரு லாஜிக் ஓட்டையை பார்ப்போம்.

    வியாசர் பாகவதம் எழுதி விட்டார் என்று தானே கடுப்படிக்கிரீர்கள். விஷ்ணு புராணத்தை அவரது அப்பா தான் எழுதினார் – அதை தான் ஆதி புராணமாக கருதி சாடிவைக் புராணங்களில் தலயானதாக கருதி வியாசர் சேர்த்துள்ளார். சிவா குருபரர் விஸ்ணு புராணத்தையும் வெளுத்து வாங்கினாரா – இதுவும் வேதத்திற்கு முரனா – இப்படி 18 புராணங்களிலிருந்து விஷ்ணுவை பற்றி நல்லதாக கூறும் புராணங்களை எடுத்து விட்டால் எஞ்சுவது சிவ புராணமும் லிங்க புராணமும் தான் – ஆகா ரெண்டே புராணங்கள் தான். இப்படி மொத்தமாக பதினெட்டு புராணங்கள் இல்லை ரெண்டு தான் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே – பாகவத்தின் மேல் மட்டும் என்ன கடுப்போ?

    நீங்கள் சொல்லும் விஷயத்திற்கு பின்புறம் ஆதாரம் இருக்கிறாத என்று ஒரு முறை அலசி விட்டு எழுதினால் நன்று

  51. //
    வேதவேள்விகளையும் பாகவதம் மறுக்கிறது. எனவே பாகவதம் வைதீகமானது அன்று.
    //

    இப்படி தான் சங்கரரும் சொல்கிறார். கிருஷ்ணரும் பகவத் கீதையில் சொல்கிறார் – உங்களது லிஸ்டில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    பாகவதம் மோக்ஷோபாயம்
    உபநிஷத்கள் மோக்ஷோபாயம்
    பகவத் கீதா மோக்ஷோபாயம்

    வேத வேள்விகள் மோக்ஷோபாயமா?

    ஸ்வாமின் – கர்ம காண்டத்தினால் முக்தி நிச்சயம் இல்லை. வேத வேள்விகள் பலன் கருதி செய்யப்படுபவை – மோக்ஷம் பெற ஒரு வேத வேள்வி காட்டுங்கள் பாப்போம். சொர்க்கம் பெற, ராஜ்ஜியம் பெற, ஆரோக்கியம் பேரம், சுத்தி பெற இப்படிதான் வேதத்தின் பூர்வ பாகம் போகிறது. உத்தர பாகத்தை பின்பற்றுபவர் வேதாந்தி. பூர்வ பாகத்தை பின் பற்றுபவர் பூர்வ மிமாம்சர்கள்.

    வியாசர் வேதாந்தி, சங்கரர் வேதாந்தி, பகவத் கீதா வேதாந்தம். சுக்ல யசுர் வேத வேள்விகள் வேதாந்தம் அல்ல

    ஏன் இப்படி தெரிந்து கொள்ளாமால் ஒரு உதவாத உதாரனத்தை எடுத்துகொண்டு வியாசரை விசமி ஆக்குகிறீர்கள்.

    எதாயவது எடுத்து எதாவது அர்த்தம் பண்ணுவது. ஏன் இப்படி. அதை ஆராய வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருப்பதா? இது நக்கு நல்லதல்லவே. யார் எழுதி வைத்தாலும் அதை நம்பி விடுவதா.

  52. //
    ஆனால் பதிணெண் புராணங்களில் வராத பாகவதம் வேத இலக்கியத்தின் பகுதி அன்று. அது வேததினை நிந்தனை செய்கிறது வேதத்திற்கு விரோதமாக உள்ளது.
    //

    வேடிக்கையிலும் வேடிக்கை – சங்கரர், பாஸ்கரர், ராமானுஜர், நிம்பர்கர், மத்வர், சங்கரதேவர், சைதன்யர், வல்லபர், சுவாமிநாராயனர் முதலான ஞானிகளைப் பின்பற்றிவரும் பாரத தேசம் முழுதும் உள்ள சம்பிரதாய வித்வான்கள் கண்டுபிடிக்காத உண்மை இது.

    முதல் சுலோகத்திலேயே “ஜன்மாதி அஸ்ய யதோ அன்வயாத் இதரஸ் ச அர்தேஷு அபிஜ்ஞ ஸ்வராட்” என்று தொடங்கி “ஸத்யம் பரம் தீமஹீ” பிரம்ம சூத்திரத்தின் முதல் சூத்திரத்தையும் காயத்ரி மந்திரத்தின் பொருளையும் சேர்த்துப் பாடும் பாகவதத்தை வேத நிந்தை செய்கிறது என்று கூறுவது அபத்தம்.

    பாகவதபுராணத்திற்கு பாஷ்யமிட்ட பிராசீனர்களுள் ஸ்ரீதரர் “பதினெட்டு புராணங்களில் இது தான் பாகவதம்” என்று பல சான்றுகளைக் காட்டி வெளுத்துக் கட்டியுள்ளார். அவர் காட்டும் சான்றுகளில் ஒன்று பாத்ம புராணத்தில் உள்ளது –

    “அம்பரீஷ சுக ப்ரோக்தம் நித்யம் பாகவதம் ச்ருணு
    படஸ்வ ஸ்வ முகேன-அபி யதி-இச்சசி பவ-க்ஷயம்”

    பொருள்: “அம்பரீஷராலும் சுகராலும் சொல்லப்பட்ட பாகவதத்தை தினமும் கேள் அல்லது வாயால் சொல் – முக்தி கிட்ட வேண்டும் என்றால்”.

    // பகவான் வியாசர் வணக்கத்திற்கு உரியவர். இன்றைய நமது ஹிந்து சமயத்தின் அடிப்படையான வேதவாங்மயம் வேத இலக்கியங்களுக்கு அவரது கொடை ஒப்பற்றது. //

    “வேதே ராமாயனே புண்யே பாராதே பரதருஷப
    ஆதௌ மத்யே ததா ச அந்தே விஷ்ணுஸ் ஸர்வத்ர கீயதே”

    “ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்யா ச புன புன
    இதமேகம் சுநிஷ்பன்னம் த்யேயோன் நாராயணஸ் சதா”

    “சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ருத்ய புஜம் உச்யதே
    வேதாத் சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்”

    என்று மகாபாரதத்தில் இறுதியில் அவர் ‘இது தான் வேதத்தின் துணிபு’ என்று முடிவாகக் கூறியிருப்பது மாத்திரம் பிரமானமாகாது போலும். இதற்கு எப்படி விளக்கம் கூறுவீர்கள் என்பது உங்கள் விவகாரம்.

  53. // பாகவதபுராணத்திற்கு பாஷ்யமிட்ட பிராசீனர்களுள் ஸ்ரீதரர் “பதினெட்டு புராணங்களில் இது தான் பாகவதம்” என்று பல சான்றுகளைக் காட்டி வெளுத்துக் கட்டியுள்ளார். //

    ஸ்ரீதரரும் அத்வைதி. கீதாபாஷ்யத்தில் “சங்கரர் சொன்னதையும் ஆனந்தகிரி சொன்னதையும் வழிமொழிகிறேன்” என்று முதலில் பாடியுள்ளார்.

  54. திராவிட வேதங்களான திருமுறைகள் எது சிவம் என எனக்குக் காட்டுகின்றன. திருஞானசம்பந்தசுவாமிகளது திருமறை “பெண்ணுரு ஆணுரு வல்லாப் பிரமபுரமேய அண்ணல்” என்று கூறுவதாலும், திருநாவுக்கரசு சுவாமிகளது திருமறை,”பெண்ணல்லை ஆணல்லை பேடுமல்லை பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே” என்றும் “விறகிற் றீயினன் பாலிற்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமதிச் சோதியான்” என்றுங் கூறுதலினாலும் மணிவாசகப் பெருமான் “நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே, காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே” என்று கூறுவதனாலும், அப்பரடிகளின் நின்றதிருத்தாண்டகம் ஸ்ரீருத்திரம்போல சிவம் பிரபஞ்சத்திலுள்ள அறிவுடைப்பொருளகள் அறிவிலாப் பொருள்கள் அனைத்திலும் கலந்துநின்று அவற்றை இயங்கச் செய்து அவற்றினின்றும் வேறாக இருத்தலைப் பகர்தலினாலும், ஆகமம் “சிவம் பராத்பரம் ஸூக்ஷ்மம் நித்யம்” என்று
    கூறுதலினாலும்
    சிவஞானசித்தியார்,
    “உலகினை இறந்து நின்றது அரனுரு என்பது ஓரார்;
    உலகு அவன் உருவில் தோன்றி ஒடுங்கிடும் என்றும் ஓரார்;
    உலகினுக்கு உயிரும் ஆகி உலகுமாய் நின்றதோரார்” என்று உரைப்பதினாலும்
    இன்னும் பல எண்ணற்ற திருவாக்குகளால் சிவம் அகண்டப் பொருள் என்று நான் அறிகிறேன். அருவமெனும் நிட்களப்பொருள். அவ்வகண்டப் பொருளே பரமசிவம். அகண்ட அத்த்தன்மையினால் சிவம் , சிற்பரவியோமரூபம் என்றும் ஞானாகாசம் , பராகாசம் பெயர் பெறும்.

    பார்க்கப்படும் உருவப் பொருளெல்லாம் சகளமான கண்டப் பொருளேயாம். கண்டப் பொருள்கள் காலம் இடம் ஆகிய வரையறைக்குட்பட்டனவே. பரசிவன் தன் வியாபகத் தன்மையால் எத்னையும் இருந்தாங்கு அறிவன். முழுவதையும் அறிவன். சகளப்பொருள் எத்துனை ஆற்றலுடையதேனும் சுட்டித்தான் அறியும்.

    பலராமன் உருவுடையவன். அவதாரமே எனினும் அவனுடைய வியாபகமும் அறிவும் காலத்தாலும் இடத்தாலும் வரையறைக்குட்பட்டதே. அகண்டவியாபகத்தில் துவந்துவங்கள் இல்லை. ஆனால் பலராமன் அவருடைய சோதரன் கண்ணன் இருவருடைய கருத்தும் ‘க்டவுள்ராயினும் கட்வுள் என்னும் அடாவடித்தனம்’ இல்லாமல் மாறுபடுகின்றன. வஞ்சனையை வஞ்சனையால் சூழ்ச்சியால்தான் வெல்ல வேண்டும் எனும் சாணக்கியத்தனம் பேசும் கண்ணன் கட்சியிலும், அதர்மமாயினும் போரினை அதற்குரிய நீதிமுறைக்கேற்பவே நடத்தவேணும் எனக்காந்தியம் பேசும் பலராமன் கட்சியிலும் மக்கள் பிரிந்து வாதிடலாம். ‘இன்றுபோய் நாளைவா” என்ற இராமனின் கம்பீரமான தோற்றம் கண்ணுக்குப் புலப்படுகின்றது.

    தமிழ் மட்டுமே அறிந்த எளியேனது கருத்து அகண்ட வியாபக வஸ்துவான பரசிவம், கண்டப் பொருளான, சகளமான, கால இட வரையறைகளுக்குக் கட்டுப்பட்ட பலராமனின் அம்சமாக இருக்க முடியாது. அப்படிக் கூறுவது தர்க்கத்துக்குப் பொருந்தாது. வியாசமுனி மற்ரும் யாரோ கூறியதாக மறுமொழிகளில் சுட்டிய வட்மொழி சுலோகங்களில் கூறப்பட்டது சைவசித்தாந்தம் கூறும் சிவம் அல்ல. வியாசர் அங்ஙனம் கூறார் என நம்பலாம். பரசிவத்தைச் சிறுமைக் குட்படுத்துவதாகக் கருதிக் கொண்டு யாரோ கூறிய கற்பனாக் கவுரவமே ஆகும். அவ்வளவில் மகிழ்க.

  55. வாசகர்கள் அனைவருக்கும்

    ஹயக்ரீவ பலராம ஜெயந்தி வாழ்த்துக்கள்

    ஷ்ரவண பூர்ணிமா, ரக்ஷா பந்தன வாழ்த்துக்கள்

    இன்று தான் சம்ச்க்ரித்த தினமும் கூட அதற்கும் சேர்த்து வாழ்த்துக்கள் – இதை ஏற்படுத்தி கொடுத்த வாஜ்பாய் அரசிற்கு நன்றி

  56. // ஹயக்ரீவ பலராம ஜெயந்தி வாழ்த்துக்கள் //

    ஜ்ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிக ஆக்ருதிம் |
    ஆதாரம் ஸர்வ வித்யானம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே ||

  57. சமஸ்கிருதம் செம்மையாக செய்யப்பட்ட அற்புதமான மொழிகளில் ஒன்று. அது உலக மொழி. அதனை மனித இனம் முழுவதற்கும் பொதுவானது என்பதை உணர்ந்து, அது மென்மேலும் வளர அனைவரும் எங்கும் நிறை சேவர் கொடியோனை இறைஞ்சுவோம்.

    இளைய தலைமுறைக்கு , சிறிய வயதிலேயே சமஸ்கிருதம் கற்க வசதிகள் செய்வோம்.

    வாழ்க வையகம், வாழ்க வளமுடன் .

  58. // வியாசமுனி மற்ரும் யாரோ கூறியதாக மறுமொழிகளில் சுட்டிய வட்மொழி சுலோகங்களில் கூறப்பட்டது சைவசித்தாந்தம் கூறும் சிவம் அல்ல. வியாசர் அங்ஙனம் கூறார் என நம்பலாம். பரசிவத்தைச் சிறுமைக் குட்படுத்துவதாகக் கருதிக் கொண்டு யாரோ கூறிய கற்பனாக் கவுரவமே ஆகும். அவ்வளவில் மகிழ்க. //

    ஐயா, மூன்று சுலோகங்களும் வியாச பாரதத்தில் உள்ளது.

    Bhandarkar Oriental Research Institute வெளியிட்ட Mahabharatam Critical Edition அதனுடைய Electronic version Bhandarkar oriental research institute தளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.

    அது தவிர, ‘Harivamsa edited by Pandit Ramachandrashastri Kinjawadekar and published by the Chitrashala Press in 1936’ என்ற பதிப்பில் மகாபாரத கிலா காண்டமாகிய ஹரிவம்ச புராணப் புத்தகமும் உள்ளது.

    இவ்விரு நூல்களிலும் நான் காட்டிய சுலோகங்கள் உள்ளன:

    13_013_0020 AloDya sarvazAstrANi vicArya ca punaH punaH
    13_013_0021 idam ekaM suniSpannaM dhyeyo nArAyaNaH sadA

    இது அனுஷாசணிக்க பார்வை ஸ்லோகம்.
    Source: https://bombay.indology.info/cgi-bin/welcome.cgi

    vede rAmAyaNe punye bhArate bharatarShabha |
    Adau chAnte cha madhye cha hariH sarvatra gIyate ||3-132-95

    இது மகாபாரத கிலா காண்டமாகிய ஹரிவம்சம்.
    Source: https://mahabharata-resources.org/harivamsa/bhavishyaparva/hv_3_132_mpr.html

    satyaM satyaM punaH satyamuddhR^itya bhujamuchyate l
    vedashAstrAtparaM nAsti na daivaM keshavAtparam ll 2-15

    இதுவும் ஹரிவம்சம்.
    Source: https://mahabharata-resources.org/harivamsa/sheshadharma/sheshadharma-chap2.html

    இவ்விரு நூல்களும் பாரத தேசத்திலிருந்து பல மூலைகளிலிருந்து பல பழைய Manuscript சுவடிகளிலிருந்து எடுத்து தொகுக்கப்பட்டது. Critical edition என்றால் எல்லா சுவடிகளிலிருக்கும் சுலோகங்களை மட்டுமே வெளியிடுவது வழக்கம். ஒரு சில சுலோகங்கள் இடைச்செருகலாக இருந்தால் ஓரிரு சுவடிகளில் மட்டுமே காணப்படும். நான் காட்டிய வாக்கியங்கள் அப்படி இல்லை. Critical edition-இல் தான் உள்ளது.

    அதுவும் தவிர ஆதி சங்கரர் மேலே காட்டியுள்ளவ்றில் முதல் சுலோகத்தை சஹஸ்ரநாம பாஷ்யத்தில் எடுத்து “இப்படி வியாசர் தீர்வாகக் கூறி முடித்துள்ளார்” என்று கூறுகிறார்:

    “ஆலோட்ய ஸர்வஶாஸ்த்ராணி விசார்ய ச புனஃ புனஃ|
    இதமேகம் ஸுனிஷ்பன்னம் த்யேயோ ~நாராயணஃ ஸதா||

    இதி மஹாபாரதான்தே பகவதா ஶ்ரீவெதவ்யாஸேனோபஸம்ஹ்றுதம்|” – ஆதி சங்கரரின் விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம்.

    ஆகையால், அவை வியாசரின் வாக்கியங்கள் என்று கொள்வதே சிறந்தது.

    ஆகையால் இவற்றை “கற்பனா கவுரவம்” என்று தள்ளுவதற்கு இடமே இல்லை. இதைச் சொல்பவர்கள் சனாதன தருமத்தை அப்படியே ஒட்டுமொத்தமாகத் தள்ள வேண்டியதுதான்.

  59. //சமஸ்கிருதம் செம்மையாக செய்யப்பட்ட அற்புதமான மொழிகளில் ஒன்று. அது உலக மொழி. அதனை மனித இனம் முழுவதற்கும் பொதுவானது//
    யார் கூறினார்கள்? அப்படி ஒன்று வந்தால் அந்த நாள் தான் நமது சமயங்களுக்கு தலைகூனிவு நாள்.
    தமிழ் பெருமக்கள் தமிழில் தம்தம் பரம்பொருளை வழிபடலாம். வாழ்வியல் சடக்குகளை தமிழ் மறைகளை ஓதியே செய்யலாம்.

  60. //இது போக, சம்பந்தர் முருகப் பெருமானின் அவதாரம் என்று அருணகிரியார் உள்ளிட்ட பல சைவ சான்றோர்கள் சொல்லியுள்ளார்கள். இதற்கு கிருபானந்த வாரியார் சுவாமிகள் சுற்றி வளைத்து சுத்த சிவம், பர சிவம், அபர சிவம், அபர சுப்பிரமணியர் என்ற கருத்தாக்கங்களையெல்லாம் கூறி ஒரு நீண்ட விளக்கமும் அளித்துள்ளார்//

    சம்பந்தர் முருகனின் அவதாரம் என உபசாரமாகக் கூறும் வழக்கத்தை அருணகிரிநாதர்தாம் தொடங்கி வைத்தார். அதனை திருப்போரூர் சிதம்பரசுவாமிகள், வடலூர் வள்ள்லார் முதலியோர் பின்பற்றினர். இதில் சுற்றிவளைத்து வியாக்கியானம் கூற வேண்டியதே இல்லை. அவர் ஒரு ஆன்மாவே. அதனை அவரே தம்முடைய திருத்துருத்தித் தேவாரத்தில் கூறுகின்றார்.பத முத்தியில் இருந்த அவரை மையல் செய்து இறைவன் மண்மேல் ஒருபயன் கருதிப் பிறக்கச் செய்தான்.

    “துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
    மறக்குமாறு இலாத என்னை மையல்செய்து இம்மண்ணின்மேல்
    பிறக்குமாறு காட்டினாய்” என்று சம்பந்தர் தம்மை ஒரு ஆன்மாவாகக் கூறினார். அவர் உமையம்மை அளித்த ஞானப் பாலை உண்டு , வைதிக சைவத்தையும் திருநீற்றொளியையும் பரப்பிய சிறப்பினால் அருணகிரிப் பெருமான் அவரை முருகனாகவே போற்றினார். சம்பந்தரை அவதாரம் எனப் போற்றியது உபசாரமே.
    அப்படியே முருகன் திருவவதாரம் செய்தான் எனக் கந்தபுராணம் கூறியதும் கவிநயம் கருதியே அன்றி உண்மையல்ல. ஏனெனில், “செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்” கந்தபுராணம் சைவசித்தாந்தக் கருத்துக்களை உருவகமாகக் கச்சியப்பசிவாசாரியர் பாடிய புராணமே..
    சைவநெறியில் பூரண அவதாரம் குறை அவதாரம் என்பனவெல்லாம் கிடையாது. புராணங்களில் அவதாரம் என்ற சொல்லாட்சியெல்லாம் உபசாரம் அல்லது கவிநயம் கருதிச் சொல்லப்பட்டவையே.

  61. //ஆகையால் இவற்றை “கற்பனா கவுரவம்” என்று தள்ளுவதற்கு இடமே இல்லை. இதைச் சொல்பவர்கள் சனாதன தருமத்தை அப்படியே ஒட்டுமொத்தமாகத் தள்ள வேண்டியதுதான்.//

    இதுதான் சனாதன தருமம் என்றால் அதனைத் தலைமுழுக வேண்டியதுதான்.

  62. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
    வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது
    நாதன் நாமம் நமச்சிவாயவே

  63. // இதுதான் சனாதன தருமம் என்றால் அதனைத் தலைமுழுக வேண்டியதுதான். //

    தெளிவுபடுத்தியதற்கு நன்றி 🙂

  64. ” சோமசுந்தரம்

    13 August 2011 at 9:48 pm

    யார் கூறினார்கள்? அப்படி ஒன்று வந்தால் அந்த நாள் தான் நமது சமயங்களுக்கு தலைகூனிவு நாள்.
    தமிழ் பெருமக்கள் தமிழில் தம்தம் பரம்பொருளை வழிபடலாம். வாழ்வியல் சடக்குகளை தமிழ் மறைகளை ஓதியே செய்யலாம்.”-

    அன்புள்ள சோமசுந்தரம் ,

    தமிழ் மக்கள் தமிழில் பல ஆயிரம் ஆண்டுகளாக பரம்பொருளை வழிபாட்டு வருகின்றனர். இது ஒன்றும் புதுமை இல்லை. எந்த மொழிபேசும் மக்களும் , தம் தம் மொழியில் தான் இறைவழிபாட்டினை செய்து வருகிறார்கள்.அதை யாரும் குறைகூறவில்லை.

    சமஸ்கிருதம் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. தமிழும் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. அவ்வாறு எதிரி என்று சொன்னால் அது தவறாகும்.

    சமஸ்கிருதம் அற்புதமான மொழிகளில் ஒன்று என்ற கூற்றிலும் எவ்வித தவறும் இல்லை. அது ஒரு உண்மை. சமஸ்கிருதம் மட்டுமே அற்புதமான மொழி என்று யாராவது கூறினால் தான் அது தவறு. சிறிய வயதில் சமஸ்கிருதம் கற்க முடியாததை நினைத்து பலர் வருத்தப்படுகின்றனர்.

    இன்றைய இளைய தலைமுறை ஆங்கில மீடியத்தில் படிப்பதால் பலருக்கு, தமிழில் உள்ள செய்தி தாள்களை படிக்க கூட தெரியாமல் உள்ளனர். எனவே நமது பிற்கால தலைமுறை தமிழ் படிக்காமல் போனதற்கு வருத்தப்படும். காலஞ்சென்ற திரு வலம்புரி ஜான் அவர்கள் ஒரு கட்டுரையில் ” மனித இனம் பெறக்கூடிய சாபங்களில் மிக கொடுமையானது , தன்னுடைய தாய் மொழி அல்லாத பிற மொழியில் அடிப்படை கல்வி கற்பது ஆகும்” என்று அழகாக குறிப்பிட்டுள்ளார். எனவே இன்றைய தமிழர்கள் தமிழில் படிக்காமல் , அந்த கடுமையான சாபத்தை பெற்றுள்ளனர்.

    சமஸ்கிருதம் கற்பதால் எந்த மொழிக்கும் , எந்த சமயத்துக்கும் எவ்வித குறைவும் வராது. சமஸ்கிருதத்தில் எவ்வளவோ பொக்கிஷமான நூல்கள் உள்ளன. அவற்றை மொழிமாற்றம் செய்யும்போது அவற்றின் சுவை, பொருள் பல இடங்களில் மாறிவிடுகிறது. அது கற்றோருக்கே தெரியும்.படிக்க சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை. படிக்காதவர்களுக்கே நட்டம்.

  65. நல்ல செய்திகளை கூறலாம். அக்கறை உள்ளோர் தெரிந்து கொள்வர். அக்கறை இருந்தும் நேரம் கிடைக்காதவர்களும், நேரம் இருந்தும் அக்கறை இல்லாதோரும் தெரிந்து கொள்ள முடியாது.

  66. இப்படி கூற வியாசர் ஆர் என்பதிலிருந்து வியாசர் இப்படி கூறார் என்று வந்ததற்கு மகிழ்ச்சியே.

    வியாசர் செய்ததெல்லாம் waste என்பதிலிருந்து மகாபாரத்ததில் ஊடுரவல்கள் என்று வந்துள்ளது இதுவும் ஒரு வித முன்னேற்றமே – மகிழ்ச்சியே

    வியாசரை விட்டு விட்டால் – நமது தர்மம் செம்ம அடி வாங்கும் என்பதை மனிதில் கொண்டாலே போதும்

    பலராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஒரு எல்லை உண்டாம் ?

    சைவத்திலிருந்து சில உதாரணங்கள் பாப்போம்

    சிவா பெருமானுக்கு ஏன் இரண்டு பிள்ளைகள் மட்டும் என்கிறோம். சனத் குமாரரை இருந்த முருகப் பெருமானின் பிறப்பு எப்படி நேர்ந்தது? சிவ பெருமானின் திர்க்குமாரர்கலான கணபதிக்கும் முருகப் பெருமானுக்கும் எல்லைகள் உண்டா? இல்லையா?

    சுந்தரர் மானுட உருவம் எடுத்து மீனாட்சியாக அவதரித்த பார்வதி அம்மையாரை மணக்கிறார். சிவனில் பாதி ஷக்தி – தன்னில் பாதி பிரக்ரிதி சம்பந்தத்தால் பிரப்புருகிறாள் (இதற்க்கு சைவ விளக்கங்கள் உண்டு தரப்படும் என்பது நான் அறிந்ததே, இதே போலத்தான் மாற்றுத் தரப்பினரும் சமாடானங்களும் விளக்கங்களும் தருவார்கள் – அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது பண்போடு மௌனம் காக்கும் மனம் நமக்கு வேண்டும்)

    சுந்தர் ஏன் ஒரு எல்லைக்கு உட் பட்டு தானும் மானுடராய் (உருவில்) வந்து பார்வதியை மணக்க வேண்டும்.

    மலை மகளாய் வந்த பார்வதியையும் இப்படி மானிடராய் வந்து தானே மணக்கிறார். இதெல்லாம் எல்லை இல்லையா.

    பலராமனுக்கும் கண்ணனுக்கும் எல்லையா? – அவதாரங்களில் பல வகை – நரசிம்ம, அவதாரம் போன்ர்றவை பிரகிருதி சம்பந்தம் இல்லாமல் தோன்றுபவை. கிருஷ்ண ராமாவதாரங்கள் பிரகிருதி சம்பந்தத்துடன்.

    நினைவில் வையுங்கள் வைணவருக்கு கண்ணனை விட சேஷன் தான் முக்கியம்.

    சென்றால் குடையாம் இருந்தால் சிம்மாசனமாம்
    நின்றால் மரவடியாம் நீள் கடலுள் – என்றும்
    புனையா மணிவிளக்காம் பூம் பட்டாம் புல்கு
    மனையாம் திருமார்க் கரவு

    ஊழி முதல்வனையே
    பண்ணப் பணித்த இராமானுசன் பரண் பாதமும்
    என் சென்னித்தரிக்க வைத்தான் எனக்கேதும் சிதைவு இல்லையே

    பரமாத்மா பிரகிருதி சம்பந்தத்துடன் ஒரு உடலில் தன்னை புகுத்தி கொள்ள மாட்டார் என்று எங்காவது வேதம் கூறுகிறதா? (வேதங்கள் மாறாக அவதாரங்களை போற்றி புகழ்கின்றன) உடனே பரமாத்மாவுக்கு பிறப்பில்லை இறப்பில்லை என்று சொல்ல வேண்டாம். வெறும் ஆத்மாவுக்கும் அதுவே செல்லும். வெறும் ஆத்மாவுக்கு கர்மத்தால் பிறப்பு. பரமாத்மாவுக்கு சங்கல்பத்தால் பிறப்பு.

    பலராமன் சிவனாரின் அம்சம் இல்லை என்றால் – நாங்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை என்பதுடன் விட வேண்டியது தானே.

    அதை விட்டு எல்லா பிரமானங்களுக்கும் எதிரான விஷயங்களை சற்றும் யோசிக்காமல் எழுதுவது தகுமோ? சரி எழுதுகிறோம், இதே போல சைவத்தில் ஏதாவது இருக்குமோ என்றாவது யோசித்தோமா? மேலே சொன்ன இரண்டே சம்பவத்திற்கு சால்ஜாப்பு சொல்லாமல் யோசித்தால் – கிருஷ்ணா பலராம அவதார்ணக்ளும் மீனாக்ஷி சுந்தரரின் தோற்றமும் சமானமேன்று தோன்றும்

    நீங்கள் பலராமன் சிவ பெருமான் தான் என்று ஒத்தது கொண்டே ஆக வேண்டும் என்று சொன்னது யார்?

    நீங்கலாக எதோ நினைத்துக் கொண்டு நீங்கலாக சேர் இறைத்தால் என்ன செய்வது. இதை மறுக்கப் போய் எவ்வளவு மகான்களை விசமிகள் ஆக்கிவிட்டோம். இதெல்லாம் நமக்கு தேவையா. முரண் படுவதற்கும் மாற்றுக் கருத்தை கூறுவதற்கும் இந்திய தர்மத்தில் அழகிய வழிகள் உண்டு, மொழி நடை உண்டு.

    ஏரிச்சாமி விடம் கக்கினால் நாமும் அதை இங்கே cut-paste செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

  67. இப்படி ஒரு சைவ வைணவ கருத்து மோதலை சிலர் பல நாட்களாக எதிர்பார்த்து நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைகின்றனர் கடந்த இரு வார கட்டுரைகளின் மறுமொழிகளை பார்த்தால் விளங்கும். அவர்களின் அல்ப ஆசை நிறைவேறியது வருத்தம் அளிக்கிறது.

    திரு கந்தர்வன் முன்பே ஒரு மறுமொழியில் (பிரபஞ்சவியல்) சைவ வைணவ கருத்து பேதங்களை விடுத்து இந்து மதத்துக்கான பொதுவான பிரச்சனைகளை எதிர்கொள்வது பற்றி யோசிப்போம் செயல் படுவோம் என கூறிவிட்டார்.
    இங்கும் திரு கந்தர்வன் மற்றும் ஏனைய வைணவ கருத்துக்கள் வரம்பு மீறாமல் தான் உள்ளன.
    சைவத்தில் பரம்பொருளே குற்றம் செய்யினும் குற்றம் குற்றமே என்பதே கருத்து.

  68. திரு திராவிடன்,

    //திரு கந்தர்வன் முன்பே ஒரு மறுமொழியில் (பிரபஞ்சவியல்) சைவ வைணவ கருத்து பேதங்களை விடுத்து இந்து மதத்துக்கான பொதுவான பிரச்சனைகளை எதிர்கொள்வது பற்றி யோசிப்போம் செயல் படுவோம் என கூறிவிட்டார்.
    இங்கும் திரு கந்தர்வன் மற்றும் ஏனைய வைணவ கருத்துக்கள் வரம்பு மீறாமல் தான் உள்ளன.//

    தங்களைப் போன்ற நடுநிலை காக்கும் நல்லார்களிடம் வரும் பாராட்டுக்கள் மிகவும் மனத் திருப்தியைத் தருகின்றன.

  69. மாயன்பிரம னுருத்திரன் மகேசனோ
    டாயுஞ் சிவமூர்த்தி யைந்து
    மாயனாகிய விஷ்ணுவும் பிரமனும் மகேசனும் வேதத்தில் ஆராயும் சதாசிவமும் ஐந்து பஞ்ச மூர்த்திகலாம்
    அவ்வையாரை விட நாம் சிறந்த சிவ பக்தர்களா?

    அபிராமி பட்டரின் வார்த்தைகள் அன்னையை விஸ்னுவாகவும் (தரங்க கடலுள் வெங்கண் பனி அணைமேல் துயில் கூறும் விழுப்பொருளே, பிரமன் முதாலாய தேவரை பெற்ற அம்மே )விஷ்ணுவின் தங்கையாகவும் (என்றும் மூவமுகுந்தற்கு இளையவளே)
    சிவனையும் படைத்தவளாகவும்
    தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்களமாம்
    (அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
    கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்)
    துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே

    சிவனை படைத்தவளாக வர்ணித்து அவளை தொழுபவற்கே சிவலோகமும் சித்திக்குமே என கூறுகிறார் நின் புது மலர்த்தாள் தொழுமவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும் (சிவலோகமும் சித்திக்குமே)
    பட்டர் நிலை நாட்டுவது விஷ்ணுவும் அவளும் ஒன்று அவள் சிவனின் வாம பாகத்தை பெற்றவள் அவளை தொழுதாலே சிவலோகம்.
    சைவ வைணவ இணைப்பாக படுகிறது.
    என்னவோ முன்னோர்கள் ரசித்த மதம் இன்று தாருமாரகிவிட கூடாது.

    வைணவர்களின் சைவ மதத்தின் மீதான இணக்கத்துக்கு சில எடுத்துகாட்டுகள்

    குடந்தை ஸ்ரீ சக்கரபாணி சுற்று பிரகாரத்தில் விநாயகர், கோபுரத்தில் விநாயகர்.மற்றும் இங்கு சக்கரத்தழ்வருக்கு சிவனுக்கு உரிய வில்வம் அர்ச்சனையும் உண்டு
    குடந்தை ஸ்ரீ ராமசாமி கோயிலில் சுற்று பிரகாரத்தில் விநாயகர்
    நாச்சியார்கோயில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் அன்னை காளிதேவியின் ஐம்பொன் விக்ரகம்
    சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும் ஸ்ரீ ரெங்கநாதன்.
    நேற்று முன்தினம் அன்னை காவிரிக்கு சீர்கொடுத்த ஸ்ரீ ரெங்கநாதன்
    திரு நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்) கோயிலில் முன்புற சுவரிலேயே தல வரலாற்றில் குறிப்பிட பட்டுள்ள வாசகம் சிவனும் விஷ்ணுவும் ஒன்றே (நீங்களும் விஷ்ணுவும் ஒன்றே என்பதை அறியாமல் நந்தி செய்த பிழையை நீங்கள் மன்னிக்க வேண்டுமென வியாசர் சிவபெருமானிடம் முறையிடுவது) இங்கு நந்திதேவர் பெருமாளை வழிபடுகிறார்.
    இவற்றை நான் குறிப்பிட காரணம் ஸ்ரீ வைனவத்தார் பிற சமயங்கள் மீது வெறுப்பு கொள்ளாதவர் என தெரிவிக்கவே

  70. அன்பரே சாரங், நீங்கள்மாற்றுத் தரப்பினரும் சமாடானங்களும் விளக்கங்களும் தருவார்கள் – அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது பண்போடு மௌனம் காக்கும் மனம் நமக்கு வேண்டும் என்று சரியாகவே கூறினீர்கள்.

    கிருஷ்ணனின் பெருமை பலராமனின் பெருமை, அர்ச்சாவதாரத்தின் சிறப்பு அர்ச்சைகள் அருள் வடிவம் என்னும் இவைபற்ரி எழுதுங்கள் நானும் படிப்பேன். நானும் எழுதுவேன் பாராட்டுவேன் இன்பப்படுவேன். அதனைவிட்டு தெரியாத ஒன்றைபற்றித் எதோகூறித் திசை திருப்ப வேண்டாம்.

    மீண்டும் சொல்லுகின்றேன். திருவிளையாடற்புராணம் போன்ற சைவபுராணங்கள் அனைத்துக் கற்பனையே. சிவனுக்கு உமை என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் என்பதெல்லாம் அகண்டப் பொருளை அனுபவத்திற்குக் கொண்டுவர, உருவுடைய மனுடப் பிறவி அறிந்துகொள்ளப் பெரியவர்கள் மேற்கொண்ட உத்தியே. புராணக் கதைகளை உன்மை என்று சாதிப்பார் சைவரில் ஒருவரும் இலர்.

    சிவநெறியும் திருமால் வழிபாடும் ஆகிய சைவம் வைணவம் இரண்டும் தமிழர் மேற்கொண்ட ஆன்மீக நெறிகளே. குறிக்கோள்வேறுவேறு. சைவம் பரமுத்தி எனக் காட்டுவது சிவவியாபகத்தில் ஆன்மா இரண்டறக் கலத்தல். அதனையே வள்ளுவர் ‘மற்றீண்டு வாரா நெறி’ என்பர்.
    வைணவத்தில் பெருமாளுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் நித்தியசூரிகளாய்க் கைங்கரியம் செய்துகொண்டு பெருமாளின் முகாரவிந்தத்தில் இன்புறுதல் என்பதாக அறிகின்றேன்.

    இந்த குறிக்கோளை நோக்கியே சைவசாத்திரங்களும் வைணவசாத்திரங்களும் தங்கள் கருத்துக்களைச் சொல்லும். தோத்திரங்களும் அவைகளுக்கேற்பவே அமையும்.

    சைவநெறியில் சிவயோக்ம் சிவபோகம் எனக் கூறுதல் போல விஷ்ணு யோகம் விஷ்ணுபோகம் எனக் கூறும் நிலைகள் இல்லை. ஆயினும் இருநெறிகளும் முழுதும் வேறுபட்டுள்ளவோ எனின் அவ்வாறும் இல்லை. யோக நரசிம்மர் எனும் வடிவமும் வைணவப் பெரியோர்களில் ஏகாங்கிகள் என்போர் நிலையும் வைணவத்திலும் ஒருவகை யோக நெறி இருப்பதைக் காட்டுகின்றன.

    சைவம் அந்தர்முக வழிபாட்டை வலியுறுத்தினாலும் அதற்குரிய பகிர்முக வழிபாட்டைக் கைவிடாதிருக்கவும் வலியுறுத்ட்த்துகின்றது. பகிர்முகவழிபாடு என்றால் அர்ச்சையும் வடிவமும் கட்டாயம் வேண்டும். அதன் சிறப்பைப் புகழும்போது இலக்கியமும் அதனைத்தொடர்ந்து கற்பனையும் செழுமை பெறுகின்றன. எனவே சிவநெறி முழுவதும் அருவ வழிபாட்டைக் கொண்டிராமல் அர்ச்சைவழிபாட்டையும் கொண்டுள்ளது.

    இரண்டு நெறிகளையும் அதன்போக்கிலேயே விளக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். இதுவே தமிழர் நெறி.

    இதனை விட்டுவிட்டுச் சநாதனநெறி என்றுகூறி வருணப்பாகுபாட்டையும் சாதிப்பிரிவினையையும் பிராமணமுதன்மை(ஆதிக்கம்?) யையும் வலியுறுத்திக் கூறிக் கூறி இந்து சமுதாயத்தைப் போதுமான அளவுக்குப் பலமிழக்கச் செய்தாயிற்று. பாடியங்களிலும் சைவம் என்பது அவைதிக வழிபாட்டு நெறிகளாகிய காளாமுகம் காபாலிகம் என்று காட்டிச் சிறுமைப்படுத்தியாயிற்று. இன்றும் அகோரிகள்தாம் சிவநெறியாளர்கள் என்றுவோரும் நம்மிடையே உள்ளனர். இப்படியெல்லாம் பேசிப்பேசிச் சைவர்களைப் பிராமணவெறுப்பாளர் வடமொழி வெறுப்பாளர் கூட்டத்தில் தள்ளியாயிற்று. மீண்டும் வியாசர் மொழி இது, இதுதான் சநாதனம் இந்தச் சநாதனத்தை ஏற்றுக் கொள்பவன்தான் இந்து ஆவான் என்றமுடிவுக்குச் சிலமறுமொழிகள் தள்ளுகின்றன.
    மீண்டும் சொல்கின்றேன். சநாதனம் என்றபெயரால் குழ்ப்பம் விளைக்க நினைப்பவன் யாரேயாயினும் விஷமிதான். அப்படிக் கூறும் நூல் தேவபாஷையாகக் கூறப்படும் வடமொழியில் இருந்தாலும் சமுதாயத்துக்கு ஊறு விளைப்பதுவேயாம் .

    நீங்கள் ஆசிரியர் குழுவுக்கு அவ்வப்பொழுது உறுதியான ஆலோசனைகளை வழ்ங்குகின்றீர்கள். தமிழ் இந்து என்ற தளத்தின் பெயர் நீக்கிவிட்டு “சமஸ்கிருதசநாதனம்” என்று பெயர்மாற்றம் செய்துவிட்டீர்கள் என்றால் என்னைப் போன்ற சநாதனப்புறமான பாஷண்டிகள் அவைதிகர்கள் இது நம் இடமல்ல என்று ஒதுங்கி அப்புறம் சென்றுவிடுவோம்.

  71. அவஜாநந்தி மாம் மூடா⁴ மாநுஷீம் தநுமாஸ்²ரிதம் |
    பரம் பா⁴வமஜாநந்தோ மம பூ⁴தமஹேஸ்²வரம் || 9- 11||

    மம பரம் பா⁴வம் = என்னுடைய மேலான இயல்பை
    அஜாநந்த: மூடா⁴ = அறியாதவர்களான மூடர்கள்
    மாநுஷீம் தநும் = மனித உடலை
    ஆஸ்²ரிதம் பூ⁴தமஹேஸ்²வரம் = தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு தலைவனான
    மாம் அவஜாநந்தி = என்னை புறக்கணிக்கிறார்கள்

    மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர்.

    சிவார்ப்பணம்

  72. இந்த அரங்கின் விவாதங்கள் திசை மாறிச்செல்கின்றன என்ற என் கருத்து சரியாக உள்ளது என்பது மேலே உள்ள கடிதங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களை பார்க்கும்போது தெரியவருகிறது.

    அன்புடையீர்,

    சனாதனம் என்பது
    (1 ) வைணவம்,
    (2 )சைவம்,
    (3 )சார்வாகம்,
    (4 )சாக்தம்,
    (5 ) கௌமாரம்,
    (6 )காணாபத்யம்,
    (7 )சௌரம்,
    (8 )ஜைனம்
    (9 ) பவுத்தம்
    ( 10 ) குலதெய்வ வழிபாடுகள்,

    மற்றும்

    (11 ) சீக்கியர்கள்,

    இன்னமும் இவற்றிலிருந்து தோன்றிவிட்ட ( வடகலை , தென்கலை சம்பிரதாயங்கள் போல) , ஆனால் இங்கு பட்டியலிடப்படாமல் விடுபட்டுப்போன மற்றும் மேற்சொன்ன பற்பல பிரிவுகளிலிருந்தும் எதிர்காலத்தில் தோன்றவிருக்கும் புதிய பிரிவுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது ஆகும்.

    எனவே, அறுவகை சமயத்தோர்க்கும் என்று வான் புகழ் மாணிக்கவாசகரே சொன்ன போதிலும், அந்த அறுவகையிலிருந்து பிரிந்த , மேலும் பிரியப்போகும் அனைத்தும் இதில் அடக்கமாகும். சனாதனம் என்றாலே எல்லைஅற்றது மற்றும் எல்லாவற்றையும் சேர்த்துச் செல்வது ( ALL INCLUSIVE) என்பது தான் உண்மையான பொருள்.

    ராமபிரான் கடவுளின் அவதாரம் என்று நம்புகிற இந்துக்களும் , ராமபிரான் கடவுள் அவதாரம் அல்ல என்று விதண்டாவாதம் செய்கிற சார்வாக மற்றும் ஆக்ஞேய ( AGNOSTICS) குழுக்களும் அடங்கும். நமது மாண்பு அமை உச்சநீதி மன்றம் இந்து என்பதற்கு, நடைமுறையில் உள்ள இந்து லாவின்படி, அற்புதமான விளக்கம் தந்துள்ளது. எனவே ஜைனர்களுக்கும், பவுத்தர்களுக்கும், சீக்கியர்களுக்கும் இந்து சட்டமே பின்பற்றப்படுகிறது. என்ன காரணம் எனில், இந்து மதத்தின் பன்முகத்தன்மை உலகு அறிந்தது.

    புனிதம் என்பது இறைநம்பிக்கையால் மட்டும் வந்துவிடாது. தான் நம்பும் இறைவழிபாட்டு முறையை உயர்வாக நினைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் அதே சமயம் ஆனால் அதே சமயம் பிற நம்பிக்கைகளை தாழ்வாக நினைக்க கூடாது பெயர்ச்சண்டை கூடாது.

    சுமார் சில அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல்கள் மற்றும் இலக்கியங்களை எடுத்து வைத்துக்கொண்டு, அது தான் சரி, அல்லது இது தான் சரி என்ற முறையில் சண்டையிட தேவையில்லை. ஏனெனில் வைணவர்களில் சிலரும், சைவர்களில் சிலரும், தெய்வத்திற்கு பிற பெயர்களும் , பிற உருவங்களும் இல்லை என்று கருதி, தெய்வத்தின் இலக்கணத்தில் குறுகிய எல்லைகளை புகுத்த முயல்கிறார்கள்.மேலும் இந்த இலக்கியங்கள் அனைத்தும் சைவ வைணவ சண்டைகள் மிக தீவிரமாக இருந்த காலத்தில் , தவறான புரிந்துகொள்ளல் காரணமாக விளைந்தவை.

    எங்கள் குல தெய்வம் ” பெரியசாமி ” ஆகும். மறைந்த எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களின் பிரம்ம சூத்திர வியாக்கியான முன்னுரையின் படி, வேதங்களில் “விச்வே தேவா” ( தேவர்களுக்கு தேவன் அல்லது ” பெரியசாமி” ) என்ற சொல் அடிக்கடி வருகிறது. எனவே, நானும், எங்கள் குடும்பத்தினரும்,
    ” பெரியசாமி” தான் ஒரே தெய்வம், மற்றவை அதற்கு கீழ்ப்படிந்தவை, அல்லது மற்றவை அதைவிட மட்டமானவை என்று சொல்லி வாதிட்டால் ,

    அது எவ்வளவு அறியாமையோ,

    அதே போல தான், எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல, யாதும் அறிந்த இறைச்சக்திக்கு , பெயரிலும், உருவத்திலும் , இது மட்டுமே பெயர், இது மட்டுமே உருவம் என்று குறுகிய எல்லைகள் வகுப்பதும், அவருக்கு உருவமே கிடையாது என்று சொல்வதும் ஆகும்.

    “உருவாய், அருவாய்” என்றனர் நம் முன்னோர். எல்லா பெயர்களும், உருவங்களும், பெயரும், உருவமும் இல்லாமல் இருப்பவனும் அவனே ஆகும். எனவே தான், பாற்கடலில், வைகுண்டத்தில் மட்டும் அவன் இருக்கிறான், என்ற தவறான கருத்தை போக்க, பிரகலாதன் “தூணிலும், துரும்பிலும் அவனே உள்ளான்” என்பதை நிலை நாட்டினான்.

    ALWAYS BE INCLUSIVE. DON’T TRY TO BE EXCLUSIVE. MISSIONARIES ARE ALREADY TRYING TO MAKE US EXCLUSIVE AND TAKE AWAY OUR BROTHERS AND SISTERS TO THE ABRAHAMIC FOLD.

    ஒன்றை விட மற்றொன்று உயர்ந்தது என்ற சிந்தனையை நான் தனியே வைத்துக்கொள்கிறேன் – நீங்கள் அதனை ஏற்குமாறு நான் கட்டாயப்படுத்த வில்லையே அய்யா என்று நம்மில் சிலர் சொல்லலாம்.

    ஆனால் நம் மனத்தளவில்,

    ” நாம் பிறரைவிட உயர்ந்தவர்கள், நம் கொள்கையும், நம் வழிபாட்டு முறைகளும் மற்றவரின் கொள்கைகளையும் மற்றவரின் வழிபாட்டு முறைகளையும்விட உயர்ந்தவை”

    என்று கருதினால், ஒற்றுமை வளராது. மேலும் தேவை இல்லாத சண்டைகளும், பிளவுகளுமே வரும். இந்த பிளவுகளை உருவாக்க மிஷினரிகளும், பிற ஆபிரகாமிய மதத்தவரும் வெளிநாட்டு பண மூட்டைகளுடன் காத்திருக்கின்றனர்.

    இறுதியாக , ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.

    பிள்ளையார் பிடிக்கும்போது, அல்லது செய்யும்போது,
    அரிசிமாவு,
    களிமண்,
    வெள்ளெருக்கு,
    தாமிரம் ,
    வெண்ணை,
    வெள்ளி,
    சந்தன மரம்,
    தங்கம்,
    பிளாட்டினம்

    என்று எதில் வேண்டுமானாலும் செய்யலாம். களிமண்ணில் செய்த பிள்ளையாரும், தங்கத்தில் செய்த பிள்ளையாரும் ஒரே சக்தி படைத்தவை தான். இதில் தங்கம் உசத்தி, மற்றது மட்டம் என்றோ, களிமண் உசத்தி மற்றவை மட்டம் என்றோ யார் கூறினாலும், அவர்களை பார்த்து சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. வைணவமும், சைவமும் வெவ்வேறு பொருட்களால் செய்யப்பட்ட பிள்ளையார் போன்றவையே ஆகும்.

    ” யத் பாவம் தத் பவதி ” என்றனர் நம் முன்னோர். அதுவே உண்மை. இது போன்ற சண்டைகள்தான் நம் புதிய, இளைய தலைமுறையை , நாத்திக பேய்களை நோக்கி நடைபோட செய்கிறது. அதை தவிர்க்கும் வழிகளை சிந்திப்போம். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

  73. //மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர்.//

    திராவிடன் என்ற பெயர் தாங்கியுள்ள பெரியீர் யாரெனத் தெரியாவிட்டாலும் இப்பெயர் தாங்கியுள்ளமையால் சில உண்மைகளையும் வெளியிடுகின்றீர். தமிழன் என்னும் பெயர்தான் திராவிடன் என மருவியது என்பர் மொழி நூலாசிரியர்கள். திராவிடன் என்று முகத்தைக் காட்டினாலும் கீர்வாணர் என்றே புலப்படுகின்றது.

    உங்களுடைய மேற்குறித்த வாசகம் எனக்கு முழுச் சம்மதம். ஆனால் இது யாரைக் குறித்த்ச் சொல்லப்பட்டது? சிவோஹம் பாவனையில் சிவமாகவே திகழும் சீவன் முத்தர்களை மானுடச்சட்டை தாங்கியுள்ள காரணத்தால் நம்மைப்போல சாதரனமனிதனாக்க் கருதுவது மூடம்.

    சிவம் தன் சொரூப நிலையிலிருந்து பக்குவப்பட்ட ஆன்மா ஆட்கொள்ள குருவாகத் தடத்த வடிவங் கொண்டு வரும் . குரு மானுடச் சட்டைதாங்கி இருத்தலால் அவரை நம்மைப் போன்ற சாதாரணமனிதராகக் கருதுவது மூடம்.

    நீங்கள் காட்டியிருக்கும் வடமொழிச் சுலோகம் கண்ணனின் கீதையெனில் அதுவும் எமக்கு உடன்பாடே.. கண்ணன் உபமன்யு முனிவரிடம் பாசுபத தீக்கை பெற்று, சிவோஹம் பாவனை கைவரப் பெற்றவர். சிவவியாபகத்தில் அருணகிரிப் பெருமான் கூறியதைப் போல,” எனது யானும் வேறாக எவரும் யாதும் யானாகும் இதயபாவனாதீதத்தில்” சர்வ வியாபக நிலை கூடும் என்பது பெரியோர் வாக்கு. கண்ணபெருமான் அந்நிலையி விசுவருபம் காட்டிக் கூறியதில் எனக்கு மட்டுமன்றி சைவர்களுக்குக் கருத்து வேறுபாடுஇருக்க ஏது இல்லை. அருச்சுனனுக்குச் சிவத்தைக் காட்டிய குருவாகவும் கண்ணபிரான் இருந்தார் என்பதைத் தமிழ்ப் பாரதம் கூறும்.
    “குறியொடு தாமழியும் நெறியதனால் சிவமேயாய் நின்றிடுவர்
    என்றால் நேசத்தால் தொழுதிடு நீ” (சிவஞானசித்தியார்)
    “முருகன் தனிவேல் முனிநம் குருவென்று அருள்கொண்
    டறியார் அறியுந் தரமோ?” (கந்தரநுபூதி )

    எனவே, சிவஞானியரையும் குருவையும் சாதாரண மனிதர்கள் எனக் கருதுவது மூடம் யாரும் சொல்லித் தெரியவேண்டிய புதிய செய்தியல்ல.

    சிவார்ப்பணம். சிவமயம்

  74. அன்புள்ள திராவிடன், அபிராமி பட்டரின் திருவாக்கு பற்றிய விளக்கமாக் நீங்கள் எழுதியவற்றை நான் எழுதியிருப்பின் மும்முனைத் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பேன்.

  75. ///திராவிடன் என்று முகத்தைக் காட்டினாலும் கீர்வாணர் என்றே புலப்படுகின்றது.////
    பெரியவர் திரு C.N.Muthukumaraswamy அவர்களே,கீர்வாணர் என்றால் என்ன என்று புரியவில்லை.
    திராவிடன் என்பது தென் பகுதி வாழும் மக்கள் மற்றும் தமிழன் என ஒரு விளக்கம் கேள்விபட்டமையால் அதனை வைத்து கொண்டேன்,இன்று திராவிடன்,தமிழன் என்றால் இறைமறுப்போர் என்ற அர்த்தம் மட்டுமே உள்ள காலத்தில் தென் பகுதி வாழும் மக்கள் என்பார் இறைமறுப்பார் அல்ல என காட்டவே அப்பெயரை வைத்துள்ளேன்.முன்னம் அடைப்பு குறியில் (தென்னாடுடையான்) என்றும் வைத்து இருந்தேன். தென்னடுடையவன் சிவன் என்பது என் கருத்து ஆகையால் அதனையும் வைத்திருந்தேன். பின்னர் இங்கு சைவ வைணவ தர்க்கம் வந்த பின்பே அதனை நீக்கினேன் .
    மேலும் கீதை ஸ்லோகம் இங்கே சுட்டி கொடுக்கப்பட்டுள்ள சங்கதம் தளத்தில் எளிமையான கிடைத்த தமிழ் விளக்கம் ஆகையால் காப்பி பேஸ்ட்
    செய்தேன்.
    நான் சைவன் அல்ல என்று நீங்கள் முடிவு செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.நான் சைவனும் ஆவேன்.

    தயவு செய்து யாரவது கீர்வாணர் என்றால் என்னவென்று சொல்லுங்கள்

  76. ////சிவம் தன் சொரூப நிலையிலிருந்து பக்குவப்பட்ட ஆன்மா ஆட்கொள்ள குருவாகத் தடத்த வடிவங் கொண்டு வரும் . குரு மானுடச் சட்டைதாங்கி இருத்தலால் அவரை நம்மைப் போன்ற சாதாரணமனிதராகக் கருதுவது மூடம்./////
    மதிப்பில் பெரிய ஐயா
    சிவன் அல்ல சிவம் என்று தான் நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள் சிவம் என்ற பரம்பொருள் ஆட்கொண்ட மூர்த்தம் சிவனாகவும் இருக்கலாம், கிருஷ்ணனாகவும் இருக்கலாம். ஏன் அந்த சிவமே விஷ்ணுவாகவும் இருந்து கிருஷ்ணனாக வந்திருக்கலாம் சுருக்கமாக கைலாயத்திலுள்ள சிவன் கூட சிவத்தின் ஒரு மூர்த்தமே என்பதே என் முடிவு.
    யாரும் தவறாக எடுக்க வேண்டாம் பரம்பொருளாகிய விஷ்ணுவின் மற்றோர் பெயர் சிவம் அந்தப் பரம்பொருளே சிவன் மற்றும் விஸ்ணு என்பதும் இதில் அடக்கம் சுருக்கமாக LHS = RHS ஆகையினால் LHS என்பதும் RHS என்பதும் வேறுவேறல்ல என்றுதான் சொல்லவருகிறேன்.

    பரம்பொருள் தவறிழைப்பினும் குற்றம் குற்றமே —– சிவமயம்

  77. ஸ்ரீ பாகவதம் அதாவது ஹரிகதைக் கேட்டாலே முக்தி என்று சொல்வார்களே அதனை பிரமாணமாக சிரமேல்கொள்வர் வைணவர்கள். ஆயினும் பரம வைதீகரான சைவர்கள் புராணங்களில் ஒன்றென்றோ வேத சம்மதமானது என்றோ ஏற்பதில்லை. ஆதி சங்கரர் பாகவதத்தினை ஏற்கவில்லை. அனால் பின்னல் வந்த ஸ்மார்த்தர்கள் சிலர் அதனை ஏற்றால் என்ன அதனை நாம் ஏற்பதில்லை. சைவர்கள் ஸ்ரீ சங்கரரை ஏற்பதில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டோம். ஸ்ரீ சங்கரரின் பரம்பொருள் நிர்குணம் என்பதையோ உபாசனை வழிபாடு சித்தசுத்தி மட்டும் நல்கும் முக்தி நல்காது என்கிற அடிப்படைக் கருத்தை சைவச்சார்யார்கள் ஏற்பதில்லை.
    சைவக்கருத்துக்களை வலியுறுத்தும் பொருட்டு சைவர்களாகிய நாம் விஷ்ணு துவேசம் ஏதும் செய்யவில்லை. சில வைணவ ச்மார்த்தக் கோட்பாடுளை ஏற்க முடியாது என்கிறோம்.
    திரு சாரங்கன் அவர்கள் அதர்வ வேதம் மட்டுமல்ல வேதம் அணைத்தலும் சிவபரமியத்திற்கு ஆதாரம் உண்டு. சிவச்சின்னங்கலான திரு நீறு, கண்டிகை(அக்கமணி ருத்ராக்ஷம் ), சிவநாமம், சிவலிங்கம், வில்வம் இவையாவும் வேதத்தில் உள்ளவை. ஆக அதர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு நாங்கள் வைதீகம் என்று எமது சமயத்தை நிலை நிறுத்தவில்லை. வைதீகத்தில் முதல் சமயம் சைவம் என்றே ஆன்றோர் புகன்றதை ஓர்க.
    புராணங்கள் பதினெட்டில் பெரும்பான்மை சிவ பரமியத்தினைக் கூறுவன. ஸ்லோகங்களின் எண்ணிக்கையிலும் சிவ புராணங்களின் எண்ணிக்கையே மொத்தத்தில் அதிகம்.
    வேதத்தினைக்க் காட்டிலும் பாகவதம் உயர்ந்தது என்று பாகவதத்தில் சொல்வதால் அது அவைதீகம் என்பது ஆன்றோர் கருத்து. வேதம் மூலம் ஆதலின் அதனைத்தாழ்த்திய பாகவதம் ஏற்புடையது அன்று என்பர் எமனோர்.
    கர்மகாண்டம் மோக்ஷத்தினை அருள வல்லது அன்று என்பதை அறிவோம். அனால் பாகவதம் மோக்ஷோபாயம் எமக்கன்று. ஸ்ரீ கீதையை கொள்வோம் அனால் ஸ்ரீ கிருஷ்ண பரம் என்பதை அன்றி அவருக்கும் அகமாயுள்ள சிவத்தையே. உபநிடதங்களுள் சிவ பரமியத்தை பல பல நிலை நாட்டுவன என்பதை உணர்க.
    ஸ்ரீ வியாசரை விசமி என்று முன் மொழிந்தது நான் அன்று. மாறாக சிவத்தினை தாழ்வாக கூறுவோர் விசமி என்றோம். அவ்வளவே.
    சிவம் மானிட வடிவம் தாங்கி வந்தாலும். திரு முருகன், ஸ்ரீ விநாயக வடிவம் கொண்டாலும் அவர்க்கு எல்லை இல்லை ஏன் எனில் அது தோற்றமே. அன்றி மானிட யோனியில் நிகழ்ந்த பிறப்பு அன்று.
    திரு கந்தர்வன்
    ஸ்ரீ பாகவதம் காயத்திரி மற்றும் பிரம்மசூத்திரம் ஆகியவற்றை போற்றுகிறது என்பது உண்மையாக இருக்கலாம். அனால் பிரம்மசூத்திரத்திற்கு பாகவதம் விருத்தம் என்று ஸ்ரீ சங்கரர் கூறுகிறார். ஸ்ரீ காயத்ரி மந்த்ரத்தில் வரும் பர்கோ தேவன் என்பது பரம் பொருளாகிய சிவபெருமானை குறித்தது என்பர் எமது ஆச்சாரியார்கள்.
    உங்கள் பல ஆச்சாரியார்களில் பாகவத தந்திரத்தினை போற்றுவோர் ஸ்ரீ சங்கரர் தவிர அனைவரும் வைணவர்கள். ஸ்ரீ சங்கரர் எங்கே பாகவததை மோக்ஷ உபாயம் என்று கூறுகிறார். ஆதாரம் காட்டுங்களேன்.
    சரி பத்ம புராணத்தில் எப்படி சுகர் வந்தார் . அவர் வியாசரின் புதல்வர். அவரே பரீக்ஷித்திற்கு பாகவதம் சொன்னார் எனும் போது அவர் பிறப்பதற்கு முன்னே பத்ம புராணம் எழுதப்பட்டிருக்கும் அன்றோ. இது இடைச்செருகல் என ஒர்க.
    ஸ்ரீ வியாசர் மகா பாரதம் மற்றும் ராமாயணத்தில் விஷ்ணு பரத்தினை கூறுகிறார் என்கிறீர்கள். மாபாரதமும் ராமாயணமும் சிவ பரத்தை செப்புவன என்று மகான் ஸ்ரீ அப்பைய தீட்சிதர் தனிதனியே நூல் எழுதி நிரூபித்தார். ஸ்ரீ கிருஷ்ணரும் புருஷோத்தமனான ஸ்ரீ ராமனும் சிவ பூஜை செய்தனர். சிவபெருமானின் திருவருளாலே பாசுபதம் என்னும் ஆயுதத்தாலே பாண்டவர் வென்றனர் பாரதப் போரில். ஸ்ரீ ராமரே சிவகடாக்ஷத்தால் ராவணனை வென்றோம் என்று ஸ்ரீ சீதப் பிராட்டியிடம் கூறுகிறார் புஷ்பகவிமானத்தில் அயோத்தி திரும்பும் சமயத்தில் . இந்த இருபெரியோர்களும் விபூதி ருத்ராக்ஷ தாரணம் செய்யும் சாம்பவர்களாக விளங்கினர் என்பதும் உண்மை. இவர்கள் மறந்தும் புறன் மனை தொழாது விஷ்ணு வழிபாடு செய்தார்கள், திருமண்காப்பு, துளசி மாலை மட்டுமே அணிந்தார்கள் என்பதற்கு நீங்கள் ஆதாரம் காட்டலாமே.

  78. முனைவரே,

    // இதனை விட்டுவிட்டுச் சநாதனநெறி என்றுகூறி வருணப்பாகுபாட்டையும் சாதிப்பிரிவினையையும் பிராமணமுதன்மை(ஆதிக்கம்?) யையும் வலியுறுத்திக் கூறிக் கூறி இந்து சமுதாயத்தைப் போதுமான அளவுக்குப் பலமிழக்கச் செய்தாயிற்று… அப்படிக் கூறும் நூல் தேவபாஷையாகக் கூறப்படும் வடமொழியில் இருந்தாலும் சமுதாயத்துக்கு ஊறு விளைப்பதுவேயாம் .//

    ஏதாவது தத்துவ சிடுக்கு, விவாதம் என்று இறங்கி விட்டு அது வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் இப்படி சாதிப் பிரச்சனை, மொழிப் பிரச்சனை என்று வேறு களம் இறங்க வேண்டாம். வாய்விட்டு “அந்த சுடுசொற்களை உபயோகித்திருக்கக் கூடாது. வருந்துகிறேன்” என்று கூறினால் பிரச்சனை தீர்ந்தது.

  79. திரு சிவஸ்ரீ அவர்களே,

    //ஸ்ரீ சங்கரரின் பரம்பொருள் நிர்குணம் என்பதையோ உபாசனை வழிபாடு சித்தசுத்தி மட்டும் நல்கும் முக்தி நல்காது என்கிற அடிப்படைக் கருத்தை//

    இது சுத்த தவறு. சங்கரர் பிரம்ம சூத்திரத்தின் கடைசி சூத்திரத்தில் “சகுண உபாசனை, நிர்குண உபாசனை இரண்டுமே முக்தி நல்கும்” என்று கூறியுள்ளார்:

    And as those also who rely on the knowledge of the qualified Brahman in the end have recourse to that (Nirvâna), it follows that they also do not return.–The repetition of the words, ‘Non-return, according to scripture,’ indicates the conclusion of this body of doctrine.
    (ஆங்கில மொழிபெயர்ப்பு)

    கீதா பாஷ்யத்திலே,

    “ஏவஂ பகவதஃ ஸத்யப்ரதிஜ்ஞத்வஂ புத்த்வா பகவத்பக்தேஃ அவஷ்யஂபாவி மோக்ஷபலம் அவதார்ய பகவச்சரணைகபராயணஃ பவேத் இதி வாக்யார்தஃ” (18.56) இதில் சங்கரர் கூறுவது “இப்படி பகவானுடைய வார்த்தைகள் உண்மையே என்று திடமாக நம்புவது, பகவத் பக்தியினால் அவசியம் மோட்சம் கிடைக்கும் என்று புத்தி பண்ணிக்கொண்டு பகவானுடைய பாதங்கள் ஒன்றையே புகலிடமாகப் பற்றி இருக்க வேண்டும் என்று வாக்கியார்த்தம்”.

    அவருடைய சாக்ஷாத் சீடராகிய சுரேஸ்வரரும் “த்வாந்தச்சிதே நமஸ்தஸ்மை ஹரயே புத்தி சாக்ஷினே” அதாவது அஞானமாகிய திரையைக் கிழிக்கும் அரிக்கு – புத்திக்கு சாட்சியாய் இருப்பவனுக்கு நமஸ்காரம் என்று சகுண மூர்த்தியை மங்கள சுலோகத்தில் புகழ்கிறார். இது தோத்திர நூலில் அல்ல, அத்வைதத் தத்துவத்தை விளக்கும் தத்துவ நூலாகிய நைஷ்கர்ம்ய சித்தியில் தான் வருகிறது.

    எங்குமே “சகுண உபாசனை வெறும் சித்த சுத்தியை மட்டுமே தருவது” என்று கூறியதில்லை. எங்கே ஒரு வாக்கியம் காட்டுங்கள் பார்ப்போம்?

    //அனால் பிரம்மசூத்திரத்திற்கு பாகவதம் விருத்தம் என்று ஸ்ரீ சங்கரர் கூறுகிறார்//

    சுத்தம் – ‘பாகவதர்கள்’ என்ற வார்த்தையைப் பார்த்துவிட்டாலே அது ஸ்ரீமத் பாகவத புராணம் தானா? சங்கரர் இங்கு பாஷ்யத்தில் பாஞ்சராத்ரம் பற்றிக் கூறும்பொழுது பாகவத தருமங்களுள் ஒன்றாகிய பாஞ்சராத்திர மதத்தின் “வியூக நிலை விளக்கத்தை” மாத்திரம். எங்குமே “பாகவத புராணம் பிரம்ம சூத்திர விருத்தம்” என்று கூறவில்லை. “பாஞ்சராத்திரத்தில் இறைவனை வழிபடும் முறைகள் சடங்குகள் எல்லாம் வைதீகமே. அதை நாங்களும் பின்பற்றுவோம். ஆனால், வியூக நிலை குறித்தும், ஓரிரு சந்கிதைகளில் இருக்கும் சில வசனங்களைக் குறித்தும் எங்களுக்கு மாறுபாடு உண்டு” என்று தான் கூறியுள்ளார். படித்துத் தான் பாருங்கள். பல முறையில் அதை இத்தளத்தில் சுட்டியாச்சு:

    It is true, we reply, that a part of the system which we are going to discuss agrees with the Vedânta system, and hence affords no matter for controversy; another part of the system, however, is open to objection, and that part we intend to refute.

    The so-called Bhâgavatas are of opinion that the one holy (bhagavat) Vâsudeva, whose nature is pure knowledge, is what really exists, and that he, dividing himself fourfold, appears in four forms (vyûha), as Vâsudeva, Sankarshana, Pradyumna, and Aniruddha. Vâsudeva denotes the highest Self, Sankarshana the individual soul, Pradyumna the mind (manas), Aniruddha the principle of egoity (ahankâra). Of these four Vâsudeva constitutes the ultimate causal essence, of which the three others are the effects.–The believer after having worshipped Vâsudeva for a hundred years by means of approach to the temple (abhigamana), procuring of things to be offered (upâdâna), oblation (îgyâ), recitation of prayers, &c. (svâdhyâya), and devout meditation (yoga), passes beyond all affliction and reaches the highest Being.

    இனி கவனியுங்கள்:

    Concerning this system we remark that we do not intend to controvert the doctrine that Nârâyana, who is higher than the Undeveloped, who is the highest Self, and the Self of all, reveals himself by dividing himself in multiple ways; for various scriptural passages, such as ‘He is onefold, he is threefold’ (Kh. Up. VII, 26, 2)’, teach us that the highest Self appears in manifold forms. Nor do we mean to object to the inculcation of unceasing concentration of mind on the highest Being which appears in the Bhâgavata doctrine under the forms of reverential approach,&c.; for that we are to meditate on the Lord we know full well from Smriti and Scripture.

    இதில் “பாகவத தருமத்தால் மோட்சம் கிட்டுகிறது” என்பதை சங்கரர் எங்குமே கண்டிக்கவில்லை.

  80. சிவஸ்ரீ அவர்களே,

    // சரி பத்ம புராணத்தில் எப்படி சுகர் வந்தார் . அவர் வியாசரின் புதல்வர். அவரே பரீக்ஷித்திற்கு பாகவதம் சொன்னார் எனும் போது அவர் பிறப்பதற்கு முன்னே பத்ம புராணம் எழுதப்பட்டிருக்கும் அன்றோ. இது இடைச்செருகல் என ஒர்க. //

    சரி, மகாச்சாரியார் ஒருவர் காட்டும் பத்ம புராண வசனத்தை இடைச்செருகல் என்று ஓரக.

    // ஸ்ரீ வியாசர் மகா பாரதம் மற்றும் ராமாயணத்தில் விஷ்ணு பரத்தினை கூறுகிறார் என்கிறீர்கள். //

    மகாபாரதத்தைக் காட்டியும், ஆதி சங்கரர் பிரமாணமாக எடுத்திருப்பதைக் காட்டியும் “கூறினார்” என்று சொல்லாமல் “கூறினார் என்று நான் சொல்கிறேன்” என்று எழுதும் அளவுக்கு நீங்கள் போய் விட்டீர்கள். உங்களுக்கு ஒரே ஒரு சவால் தான்…

    //
    13_013_0020 AloDya sarvazAstrANi vicArya ca punaH punaH
    13_013_0021 idam ekaM suniSpannaM dhyeyo nArAyaNaH sadA

    இது அனுஷாசணிக்க பார்வை ஸ்லோகம்.
    Source: https://bombay.indology.info/cgi-bin/welcome.cgi

    vede rAmAyaNe punye bhArate bharatarShabha |
    Adau chAnte cha madhye cha hariH sarvatra gIyate ||3-132-95

    இது மகாபாரத கிலா காண்டமாகிய ஹரிவம்சம்.
    Source: https://mahabharata-resources.org/harivamsa/bhavishyaparva/hv_3_132_mpr.html

    satyaM satyaM punaH satyamuddhR^itya bhujamuchyate l
    vedashAstrAtparaM nAsti na daivaM keshavAtparam ll 2-15

    இதுவும் ஹரிவம்சம்.
    Source: https://mahabharata-resources.org/harivamsa/sheshadharma/sheshadharma-chap2.html
    //

    அந்த மூன்று மகாபாரத சுலோகங்களுக்கு நீங்கள் என்ன சமாதானம் கூறுகிறீர்கள்?

  81. ஐயா கந்தருவன் அவர்களே, வடமொழியில் ஏதோ ஒருநூலில் இருக்கும் ஒரு செய்தியைத் தாங்கள் கூறிவிட்டு இதுதான் ச்னாதனதர்மம், இதனை ஏற்றுக்கொண்டவர்கள்தாம் இந்துக்கள். இந்தச் சனாதன தருமத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்களை ‘இதைச் சொல்பவர்கள் சனாதன தருமத்தை அப்படியே ஒட்டுமொத்தமாகத் தள்ள வேண்டியதுதான்’ என்ற தங்களின் கருத்துக்கு மறுமொழி அது. நான் ஒன்றும் சாதிப் பிரச்சினைக்கோ மொழிப் பிரச்சினைக்கோ வரவில்லை. நம்முடைய சமுதாயம் இவற்றையெல்லாம் தாண்டி வளர்ந்தாயிற்று. இன்று சாதி வருணம் என்பன பெயரளவில்தான் உள்ளன. மீண்டும் சனாதனம் பேசிக் குட்டையைக் குழப்ப வேண்டாம் என்பதுதான் என் கருத்து.
    என்னுடைய வாதம் ‘ஒர்க் அவுட்’ ஆகவில்லை எனப் பின் வாங்கவும் இல்லை. எனக்குத் தமிழ்ச் சமுதாயம் தமிழ்ச் சமயம் பற்றி மட்டுமே அக்கறை. வடமொழியிலிருந்து தாங்கள் அடுக்கிக் கூறும் சனாதன தர்மம் குழப்பமே விளைக்கின்றது. உங்களுக்குத் தெளிவிருக்கலாம்.

  82. இங்கே என்ன நடக்கிறது?
    என் மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய அனைவரும் ஏன் இப்படி என் நெஞ்சில் உதிரம் வடியச் செய்கிறீர்க்ள்? சச்சரவுகளுக்கு இதுவா நேரம்? நாமே நமக்குள் ஒருவருக்கொருவர் காயப்படுத்திக்கொள்வதில் என்ன சுகம் காண்கிறீர்கள்? எனக்கு ராத் தூக்கம் கூட இல்லாமல் செய்துவிட்டீர்களே எல்லோருமாகச் சேர்ந்து? இதற்காகவா தமிழ் ஹிந்து தளம் தொடங்கி நடத்தப்ப்ட்டு வருகிறது? இன்று ஹிந்து சமூகமும் ஹிந்துஸ்தானமும் எதிர் நோக்கியுள்ள பேராபத்துகளை மறந்தீர்களா? முன் எப்போதையும் விட ஹிந்துக்கள் விழிப்புடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டிய நேரம் அல்லாவா இப்போது?
    காலையில் நான் செய்வது முறைப்படியிலான சிவ பூசனையே. பின் என் குல தெய்வ அம்பாளின் பூசை. ஆனால் என்னுடன் 24 மணி நேரமும் கலந்துறவாடுபவன் என் உயிரோடு இரண்டறக் கலந்த என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன்தான். என்னுள் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாய் இருந்து என்னை வழி நடத்துகின்றனர். எனினும் ஸ்ரீமத் பாகவத்ததை அதற்குரிய் இடத்திலேதான் வைத்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த, என்னுடன் உரையாடி மகிழ்விக்கிறவன் மஹா பாரதக் கிருஷ்ணனேயாவான். அவன் மானிடனாய் தாயின் குடல் விளக்கம் செய்ய வந்துதித்து அன்னை சொரூபத்தை மகிமைப் படுத்தியவன். அதில் இழிவெனொன்றுமில்லை. மானிட இனத்திற்கு அதனால் கெளரவம் கிடைத்தது. இன்றளவும் அவன் ஸ்தூலமாய் இருந்தே வருகிறான் என்பதை மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.. ஸ்ரீ ராம பிரான் சிவ பூசை செய்து .ஆசி பெறத் தவறியதில்லை. சிவபிரான் திருவிளயாடல் புராணத்திலுங்கூட ஒரு தாயின் வயிற்றில் பிறந்து வளர்ந்து வந்ததில்லை. அதற்க்காக அது பெருமைக்குரிய விஷயமும் இல்லை. திருமாலும் எல்லா அவதாரங்களிலும் அவ்வாறாக வந்ததில்லை. அவ்வாறு வந்ததால் மாற்றுக் குறைந்திடவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அப்படி வந்ததாலேயே நம் நாடி நரம்புகளில் எல்லாம் அந்த அவதாரங்கள் ஓடுகின்றனர். வடக்கே ஒருவரை ஒருவர் முகமன் கூறிக்கோள்வதே ராம் ராம் என்றோ ஜெய் ராம்ஜிக்கி என்றோதான். இறுதி யாத்திரையில் சொல்லப்படுவது ராம் நாம் ஸ்த்ய ஹை என்பதுதான். இதில் சைவர் சாக்தர் வைணவர் என்கிற பேதம் எல்லாம் இல்லை. அனவரும் சொலவ்து ராம் ராம், அனைவருக்காவும் சொல்வது ராம் நாம் ஸ்தய ஹைதான். ஆகையால் வாதில் வெல்ல வேண்டும் என்ற வேகத்தில் மேலும் மேலும் பிரமாணங்களை முன் வைத்து எழுதிக் கொண்டிராமல் உடனே நிறுத்துங்கள். நமக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அனைவ்ரின் அருளும் நமக்கு அவசியமாயிருக்கிறது. மிக உயர்ந்த நிலையிலான தத்துவ விசாரங்களையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்வோம். இன்று சமூக நிலவரத்தில் கவனம் செலுத்துவோம். நிலைமை சீரானபின் நிதானமாக வாதப் பிரதி வாதங்களில் சினேக பாவம் குன்றாமல் அறிவை விருத்தி செய்துகொள்ளும் ஒரே நோக்கத்துடன் நடத்துவோம். தயவு செய்து என்னைத் துன்புறுத்தாதீர்கள் என அனைவரிடமும் வேண்டுகிறேன்.
    -மலர்மன்னன்

  83. திரு சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களே,

    //ஸ்ரீ வியாசர் மகா பாரதம் மற்றும் ராமாயணத்தில் விஷ்ணு பரத்தினை கூறுகிறார் என்கிறீர்கள். மாபாரதமும் ராமாயணமும் சிவ பரத்தை செப்புவன என்று மகான் ஸ்ரீ அப்பைய தீட்சிதர் தனிதனியே நூல் எழுதி நிரூபித்தார். ஸ்ரீ கிருஷ்ணரும் புருஷோத்தமனான ஸ்ரீ ராமனும் சிவ பூஜை செய்தனர். சிவபெருமானின் திருவருளாலே பாசுபதம் என்னும் ஆயுதத்தாலே பாண்டவர் வென்றனர் பாரதப் போரில். ஸ்ரீ ராமரே சிவகடாக்ஷத்தால் ராவணனை வென்றோம் என்று ஸ்ரீ சீதப் பிராட்டியிடம் கூறுகிறார் புஷ்பகவிமானத்தில் அயோத்தி திரும்பும் சமயத்தில் . இந்த இருபெரியோர்களும் விபூதி ருத்ராக்ஷ தாரணம் செய்யும் சாம்பவர்களாக விளங்கினர் என்பதும் உண்மை. இவர்கள் மறந்தும் புறன் மனை தொழாது விஷ்ணு வழிபாடு செய்தார்கள், திருமண்காப்பு, துளசி மாலை மட்டுமே அணிந்தார்கள் என்பதற்கு நீங்கள் ஆதாரம் காட்டலாமே.//

    அப்பைய தீட்சிதர் குறித்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? விஷ்ணு அபரத்துவம் பேசும் அவருடைய ஒரு சில நூல்களில் சங்கரருடைய கொள்கைகளைப் பலவாறு கண்டித்துள்ளார். இதற்கான சான்றுகளை அடுக்கடுக்காக என்னால் காட்ட முடியும்.

    ஆனால், அதே ஸ்ரீ அப்பைய தீட்சிதர் “சித்தாந்த லேச சங்கிரகம்” என்ற நூல் ஒன்று எழுதியுள்ளார். அதில் ஆதி சங்கரருடைய கொள்கைகளையும், விஷ்ணு பக்தராகிய சர்வஞ்ய முனிகள் உட்பட பல பிராசீன அத்வைத ஆச்சாரியார்களுடைய கொள்கைகளையும் புகழ்ந்து “இது தான் வேதாந்தம்” என்று எழுதியுள்ளார். அதில் மங்கள சுலோகத்தில் கூட கங்கையை விஷ்ணுபாத தீர்த்தமாகப் பாடியுள்ளார். ஸ்ரீராமனுக்கு பிருகு சாபம் வெறும் நிமித்தம், வெறும் நாடகம், அதை வைத்து அவரை சீவன் என்று சொல்ல முடியாது என்று அழுத்திக் கூறியுள்ளார்.

    Victorious is the auspicious birth-destroying discourse (the Sutrabhasya) , which issues from the blessed lotus face of the Bhagavat-pada, has for its sole purport the non-dual Brahman, and is diversified a thousand-fold on reaching the (numerous) ancient preceptors (who expounded it), in the same way as the river (Ganga), which, issuing from the foot of Visnu, 1 is diversified on reaching different lands. (1)

    இது அந்நூலின் முதல் சுலோகம் ஆதி சங்கர பகவத்பாதரை முழுமனதுடன் பூஜிக்கும் சுலோகம்.

    4-223 Nor is there the contingence of fresh bondage for the released, if they attain the state of the Lord, since ignorance, association with misery and so on are declared for the Supreme Lord in such incarnations as Raghunatha ; for, that has for purport only the acting of these (ignorance etc.,) by the Lord, like an actor, in order to uphold the rule made by Himself as to the non-futility of the curses of sages, and to create faith somehow in the curse of Bhrgu etc.; otherwise, there would be conflict with the Scriptural declaration of His being eternally released, unrestrictedly free, without an equal or superior and so on.

    இதிலிருந்து அப்பைய தீட்சிதர் பல விவாதங்களுக்குப் பிறகு ஒரு பட்சத்திலிருந்து இன்னொரு பட்சத்திற்குச் சென்றிருக்கிறார் என்று தான் தெரிகிறது.

  84. தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்அவன்
    எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
    பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
    வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே ——56

    மதிப்பிற்குரிய முனைவர் ஐயா இந்த சிவவாக்கியத்திற்கு தாங்களின் பதில் என்ன?
    ////திராவிடன் என்ற பெயர் தாங்கியுள்ள பெரியீர் யாரெனத் தெரியாவிட்டாலும்////
    ஐயா நான் உங்களைவிட மிக சிறியவன்

  85. ஸ்ரீ கந்தர்வன் கூறுகிறார்
    // ஏதாவது தத்துவ சிடுக்கு, விவாதம் என்று இறங்கி விட்டு அது வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் இப்படி சாதிப் பிரச்சனை, மொழிப் பிரச்சனை என்று வேறு களம் இறங்க வேண்டாம் //
    முனைவர் முத்துகுமாரசுவாமி அய்யா எந்த கடும் சொல்லை யும் சொல்லவில்லை. திரு கந்தர்வன் அவர்களது பார்வையின் நீட்சியே வர்ண அடுக்கினை ஆதரிக்கும் போக்கு.தமிழை தாழ்த்தும் போக்கு. அனைவருக்கும் சாதிகளுக்கு அப்பால் பொது என்பது அவரது முழக்கம்.அவரை சனாதனத்தை நிராகரிக்க செய்வோம் என்று சொல்லவைத்தது உங்கள் வாதத்தின் தொனி . அவரது கோணம் சரிதான். நீங்கள் அதற்கு இல்லை வர்ண ஏற்றத்தாழ்வை ஏற்பதில்லை நாம் என்று கூறலாமே.
    நீங்கள் என்ன சொல்கிறீர்கள் தெளிவு படுத்தியதற்கு நன்றி. பலரையும் வைதீகத்திலிருந்து வெளியேற்றவா இணையத்தில் கட்டுரை எழுதுகிறீர்கள். அவர் சொன்னதை மறுத்து இல்லை அப்படி யாரும் செய்யவில்லை என்று உங்களால் நிருபிக்க முடியுமா. இன்றும் வேதத்தைக் காட்டி மாந்தருள் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துவோர் உள்ளனரே. உபநயனம் வேதியர் குலத்தில் பிறந்தவர்க்கும் மட்டுமே என்ற நிலைதானே. தெய்வத்தமிழ் மொழியை நீச்ச பாசை என்று மொழிந்தனரே.
    ஐயா அவர்கள் எந்த வருத்தமும் தெரிவிக்கவேண்டாம். சிவபெருமானை பலராமன் என்ருகூரியதைவிட அவர் சொல் இனிமையாகவே உண்மையாகவே உள்ளது.
    போற்றுதலுக்குரிய முனைவர் ஐயா அவர்களுக்கு
    தமிழரிஞர் பலரும் வேதம் சிவ பெருமானை ஏற்கவில்லை என்றும் மதிக்கவில்லை என்று வடமொழியோடு வேதத்தை நிராகரித்து தமிழ் மறைகள் அனைத்துக்கும் போதும் என்று முழங்கு கின்ற இக்காலத்தே. தமிழர் சமயம் வைதீக சமயம் என இணையத்தில் எழுதியது நீங்கள் அன்றோ. சாதிக்கு அப்பால் வேதம் அனைவருக்கும் பொது வென்று முழக்கம் செய்தீர். தமிழ் வழிபாட்டை குடமுழுக்கை தமிழ் மறைகளை சிரம் மேற்கொண்ட அறிஞர் நீங்கள். உங்கள் கட்டுரை வேதத்தையும் தமிழ் மறைகளையும் ஒருங்கே போற்றி வாழ்வது எங்கனம் என கேட்கும் எமக்கு விடையாயின உங்கள் கருத்துக்கள். வேதாந்த நூல்கள் வேத ஒளியின் கம்பீரம் சிவ நாமங்களில் தலையான திருவைந்தெழுத்து இவை வேதத்தில் இருப்பதால் வேதத்தை ஏற்றோம். சிவம் மட்டுமே அம்ருதம் என்பது வேதம்.
    சிவபரமபொருளை கண்டவர்கள் அவரோடு சோதியில் கலந்தவர், மரணமிலாப் பெருவாழ்வு பெற்றோர் தமிழிலே இறைவனை வழிபட்ட அறுபத்து மூவர் என உணர்ந்தோம். தாய் மொழி தமிழ் இல்லை ஆதலால் தந்தை மொழியென தமிழைகொண்டோம். வடமொழியில் மந்திரங்கள் சில உரைத்தாலும் பெரிதும் தமிழ் வழி வழிபடுகின்றோம். ஆயினும் அறிஞர் நூல் தேடுங்கால் தமிழ் சமஸ்கிருதம் ஒருபக்கம் சாயகின்றோரைக்காண்கிரோம், இரண்டையும் ஏற்றுப் போற்றுவோரை அறிகிலோம் . உங்கள் கட்டுரையே எம்முடைய நிலைப்பாட்டிற்கு உரம் சேர்த்தது. உங்கள் மறுமொழி பலவும் தமிழ் வழிபாடையும் வேத நெறியையும் ஒருங்கே போற்றின.
    ஆகவே உங்களை எம்மைப் போன்றவர் இணைய சைவாசிரியராக கொள்கிறோம்.
    நீங்கள்
    // இதுதான் சனாதன தருமம் என்றால் அதனைத் தலைமுழுக வேண்டியதுதான்.//
    என்று சொல்லக்கூடாது. இது அடியேனுக்கு வருத்தம் அளிக்கிறது.இவர்தம் முன்னவர்கள் இப்படி சொல்லியே நம் நாட்டை நெறியை குன்றச்செய் தனர் பலர் வெளியேறினர் என்பதும் உண்மையே.

    இது மட்டும் தான் சனாதனம் என்று சொல்ல இவர்கள் யார் என்றே கேட்க வேண்டும். சைவசித்தாந்திகள் புராணங்களை எப்போதும் பிரமாணங்கள் எனக்கொள்வதில்லை. அவ்வளவு இவர்களுக்கு போதும்.

  86. அன்புள்ள திராவிடன் அவர்களே, திராவிடன் என்ற பெயருக்குத் தாங்கள் கூறிய விளக்கம் சரியானதே. பிராகிருத மொழிகளான திராவிடம் முதலியவற்றின் உயர்ந்ததாகக் கருதப்படும் மொழி கீர்வாணம்.
    உங்களுடைய சமயம் பற்றி எனக்கு எந்த முடிவும் கிடையாது. ஆனால் உங்களியறியாமலேயே சைவசித்தாந்தக் கொள்கையைக் கூறியிருக்கின்றீர்கள்.
    //அந்த சிவமே விஷ்ணுவாகவும் இருந்து கிருஷ்ணனாக வந்திருக்கலாம் சுருக்கமாக கைலாயத்திலுள்ள சிவன் கூட சிவத்தின் ஒரு மூர்த்தமே என்பதே என் முடிவு.// இந்த சிந்தனை சரியானதே.

    சிவம் எனக்கூறப்பட்டது சொரூபநிலை. கயிலாயத்தில் உள்ளதாகக் கூறப்படுவது தடத்தம்தான்.

    சிவமே திருமால் (விஷ்ணு))ஆகவும் உளது. இதற்குத் திருமுறைகளிலேயே சான்று உளது. திருஞானசம்பந்தரின் தேவாரம் சிவமே பிரமனாக இருந்து படைப்புத் தொழிலைச் செய்வதை,
    “பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
    சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே” என்றும்,
    திருமாலாக இருந்து காத்தற்றொழிலைச் செய்வதை,
    “அலைகடல் நடுவறி துயிலமர் அரிஉரு வியன்பர னுறைபதி
    சிலைமலி மதிசிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே” என்றும்,
    உருத்திரமூர்த்தியாக சங்காரத் தொழில் செய்வதை,
    “முழுவதும் அழிவகை நினைவொடு முதலுரு வியல்பர னுறைபதி
    செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே” என்றும் பாடுகிறார்.

    சொரூபசிவம் உயிர்களுக்கு அருளும்பொருட்டுக் கொள்ளும் மாகேஸ்வர வடிவங்களுள் ஒன்று திருமால் வடிவம். எப்படி அம்பிகை விநாயகன் கந்தன் என்பன சிவமூர்த்தங்களோ அப்படியே திருமாலும் சிவமூர்த்தமே . இவற்றிற்ற்கும் சிவத்திற்கும் பேதமில்லை. அதனால் தான் சிவன் திருக்கோயில்கலில் சிவபரம்பொருளின் அர்வுருமூர்த்தமாகிய சிவலின்கத் திருமேனி மூலவராகக் கருவறையிலும், விநாயகன், கந்தன், அம்பிகை, திருமால் ஆகிய மூர்த்தங்கள் தனித்தனிக் கோயில்களிலும் வைத்து வழிபடப் பெறுகின்றனர். திருக்கயிலையிலிருந்து சைவம் சப்தகுருமார்களின் வழியே வந்தது. சைவ சப்த குருமர்களின் துதி,
    “திருமால் இந்திரன் உபமனியன் தபனன்நந்தி
    செவ்வேள் ஆதி
    தருமமுது குரவருக்கும் தனதருளால் ஆசிரியத்
    தலைமை நல்கி
    வரும் எவர்க்கும் முதற்குருவாய் மெய்ஞ்ஞான முத்திரைக்
    கைம்மலரும் வாய்ந்த
    உருவழகும் குறுநகையும் காட்டியருள் தரும் சிவனை
    உளத்தில் வைப்பாம்”

    சிவம் திருமாலாக முதற்குருவாக இருந்து ஞானநெறியைப் போதித்தது.
    மீண்டும் சொல்லுகின்றேன். சிவபெருமானுக்கும் பிறப்பிறப்பில்லை; திருமாலுக்கும் பிறப்பிறப்பில்லை.சிவன் எந்த தாய்தந்தையர்க்கும் மகவாய்ப் பிறந்ததில்லை. திருமாலும் எந்த தாய் தந்தையர்க்கும் மகவாகப் பிறந்ததில்லை.. சிவமே திருமால். சிவபெருமான் உலகத்தைக் காத்தல் தொழில் செய்வதற்காகத் தானே திருமாலாகத் திருமேனி கொள்கிறார். சைவசமயத்தில் சிவபேதங்கள் கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருமால் வடிவம். அனைத்துவடிவமும் சிவமே.
    சிவசகஸ்ரநாமங்களில் 241 ஆவது திருநாமம் ‘வைஷ்ணவாய நம்:’ என்பதாம்.
    ‘ஈசர் விஷ்ணுவை சேவைசெய்வோரை இகழ்வோர் ஏழுபிறவியிலும் நரகில் உழல்வார்’ என்பது அருணகிரிமுனிவர் வாக்கு.

    இவை சைவமரபில் திருமாலுக்கு உரிய சிறப்பான இடங்கள். திருமால் வழிபாட்டைச் சைவம் தனிச் சமயமாகக் கருதவில்லை. திருமால் வழிபாடும் சிவவழிபாடே.

  87. திரு கந்தர்வன் பஞ்சராத்திரமும் அவைதீகம் தான். பிரம்மா சூத்திரம் அப்படித்தான் சொல்கிறது. அதை திரித்துப் பொருள் கொள்வது தான் பிரம்மசூத்திரம் பஞ்சராத்திரத்தை ஏற்பதாக கூறுவது என்று ஸ்ரீ கண்டாச்சார்யார் கூறுகிறார். ஸ்ரீ வைணவ சின்னங்களாக பஞ்சராத்திராகமம் கூறும் சக்ரான்னிகம்(முத்திரை வைத்தல் திருவடி சம்மந்தம் என்று போற்றப்படுவது), துளசி மாலை, திருமண்காப்பு இவை எதுவும் வேதத்தில் இல்லை. சிவச்சின்னங்கள் யாவும் வேதம் போற்றுவது.

    நீங்கள் மேற்கோள் காட்டும் மகாபாரத சுலோகங்களை யான் காண இயலவில்லை. முக்கியமானது இங்கே பரம பொருள் பற்றியது. திருமாலே பரம என்றால் சிவ ஆராதனையை ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்கள் வழிபடுவது ஏன். அவர்கள் ஏன் பரம வைணவர்களாக உங்கள் ஆகமங்கள் கூறும் படி வாழ்ந்துக் காட்டவில்லை என்று விளக்குங்கள்.

  88. // இன்று ஹிந்து சமூகமும் ஹிந்துஸ்தானமும் எதிர் நோக்கியுள்ள பேராபத்துகளை மறந்தீர்களா? முன் எப்போதையும் விட ஹிந்துக்கள் விழிப்புடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டிய நேரம் அல்லாவா இப்போது? //

    இப்போது தான் சிலுவையில் இந்தியக் கல்வி கட்டுரையைப் படித்தேன்.. கல்வித் துறை என்ற ஒரு துறையிலேயே இவ்வளவு சமாசாரம் நடந்து கொண்டிருக்கிறது என்பது மலைப்பாக இருக்கிரது. மலர்மன்னன் அவர்கள் சொல்வது இந்த விசயத்தில் எவ்வளவு சரியானது என்று புரிகிறது.

    மரியாதைக்குரிய சைவ,வைணவ, சாஸ்திர,புராண,இதிகாச,தத்துவ பெரியோர்களே, தயவு செய்து இந்த விவாதத்திற்கு ஒரு மங்களம் பாடி ஓம் சாந்தி சாந்தி சாந்தி சொல்லி முடித்து விடுங்கள். ப்ளீஸ்.

  89. அன்புள்ள சிவஸ்ரீ அவர்களே,

    // ஸ்ரீ வைணவ சின்னங்களாக பஞ்சராத்திராகமம் கூறும் சக்ரான்னிகம்(முத்திரை வைத்தல் திருவடி சம்மந்தம் என்று போற்றப்படுவது), துளசி மாலை, திருமண்காப்பு இவை எதுவும் வேதத்தில் இல்லை. //

    உங்களுக்கு வைணவ சின்னங்கள் குறித்து சந்தேகங்கள் இருக்கின்றன. சந்தேகங்கள் இருப்பதில் தவறல்ல. நியாயமே. அந்த நியாயமான சந்தேகங்களுக்கு நான் விட கூற மகிழ்கிறேன்.

    Source: https://www.stephen-knapp.com/ramanuja.htm

    In the Sruti it is said:

    sa te visnorabja-cakre pavitre[2]

    janmambodhim tartave carnaninra

    mule bahvordadhate’nye purana

    linganyamge tavakanyarpayanti

    “To free themselves from the ocean of repeated birth and death, the best of men decorate their bodies with the symbols of the lotus and cakra of Visnu.

    aibhirbayamurukramasya cihnai rahnkita loke subhaga bhavamah

    tad visno paramam padam ye’dhigaccanti lacchata[3]

    “Just as those who go to the holy abode of Visnu are decorated with the conch, lotus, disc, and club, so shall we also wear these marks and thus attain that divine abode.

    upavit-adi-baddharyah sanka-cakradayas tatha[4]

    brahmanasya visesena vaisnavasya visesatah

    “Brahmanas should not only wear the sacred thread, but they should also decorate their bodies with the conch, lotus, cakra, and club of Visnu,thus identifying themselves as Vaisnavas.

    hare padakrtim atmano hitaya madhye cchidram-urdhva-purndram[5]

    yo dharayati sa parasya priyo bhavati sa punyavan bhavati sa muktiman bhavati.

    “One who decorates himself with the tilaka markings resembling the lotus feet of Visnu with a space in the middle becomes dear to the Paramatma, becomes pious, and attains liberation.”

    [2] From the ®k-Ba›kala-sakha

    [3] From Atharva-Veda

    [4] From the Vayavya Upa-purÅna, a section of the BrahmaˆÎa-sa˜hita.

    [5] From the Atharva-Veda.

    // அவர்கள் ஏன் பரம வைணவர்களாக உங்கள் ஆகமங்கள் கூறும் படி வாழ்ந்துக் காட்டவில்லை என்று விளக்குங்கள்.//

    ஸ்ரீராமன் தான் பட்டாபிஷேகம் ஏற்கும் முந்தைய நாள் ஸ்ரீமான் நாராயணனை ஆலயத்தில் வழிபடுவது ஆதி காவ்யமாகிய ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் உள்ளது:

    gate purohite raamaH snaato niyatamaanasaH |
    saha patnyaa vishaalaakshyaa naaraayaNamupaagamat || 2-6-1

    1. purohite=(After) the family priest; gate= left; raamaH= Rama; snaataH= took bath; upaagamat= (and) meditated; naaraayaNam= on Narayana; niyatamaanasaH= with undistracted mind; saha= along with; vishaalaakshyaa= the wide eyed; patnyaa= wife (Seetha).

    After Vasistha left, Rama took bath and meditated on Lord Narayana with undistracted mind along with his wide-eyed wife, Seetha.

    pragR^ihya shirasaa paatraM havishho vidhivattadaa |
    mahate daivataayaajyaM juhaava jvalitaanale || 2-6-2

    2. tadaa= then; pragR^ihya= taking; paatram= vessel; havisho= of clarified butter; sirasaa= on head; vidhivat= as per ordinance of the scriptures; juhova=(Rama) offered; mahate daivataaya= to the great lord Vishnu; aajyam= the clarified butter; jvalitaanale= (by dropping it ) into blazing fire.

    Taking the vessel with clarified butter on his head as per scriptures, he offered to Lord Vishnu the clarified butter, by dropping it into the blazing fire.

    sheshhaM cha havishhastasya praashyaashaasyaatmanaH priyam |
    dhyaayannaaraayaNaM devaM svaastiirNe kushasaMstare || 2-6-3
    vaagyataH saha vaidehyaa bhuutvaa niyatamaanasaH |
    shriimatyaayatane vishhNoH shishye naravaraatmajaH || 2-6-4

    3, 4. naravaraatmajaH= The prince Rama; aashaasya= desiring; aatmanaH= his own; priyam= good; praashya cha= ate; sesham= remainder; tasya havishaH= of that clarified butter; dhyaayan= meditating; devam= on Lord; naaraayaNam= Narayana; bhuutvaa= becoming; vaagyataH= one of restrained speech; niyatamaanasaH= with regulated mind; sishye= slept; vaidehyaa saH= along with Seetha; svaastiirNe= on properly laid; kusha saMstare= bed of Kusa grass; shriimati aayatane= in a splendid temple; vishhNoH= of Lord Vishnu.

    Rama ate the remainder of clarified butter after finishing the sacrifice, which he performed for his own good, silently meditated on Lord Narayana with controlled mind and slept along with Seetha on a properly laid bed of Kusa grass in a splendid temple of Lord Vishnu. *

    ekayaamaavashishhTaayaaM raatryaaM prativibudhya saH |
    alaJNkaaravidhiM kR^itsnaM kaarayaamaasa veshmanaH || 2-6-5

    5. saH= He; prativibudhya= woke up; ekayaama avashishhTaayaam= with three hours of night yet remaining; kaarayaamaasa= (and) made done; kR^itsnam= entire; alankaaravidhim= required decoration; veshmanaH= of the house .

    Rama woke up three hours before dawn and caused to complete the entire decoration of the house.

    tatra shR^iNvan sukhaa vaachaH suutamaagadhavandinaam |
    puurvaaM sandhyaamupaasiino jajaapa yatamaanasaH || 2-6-6

    6. tatra= there; sR^iNvan= listening to; sukhaaH= gladdening; vaachaH= verses; suutamaagadha vandinaam= of professional reciters like Suta; Maagadha and Vandi; upaasiinaH= worshipping; puurvaam sandhyaam= the early sunrise(on Gayatri); jajaapa= meditated ; yata maanasaH= with undistracted mind.

    Listening to the pleasing verses of professional reciters, he worshipped the early sunrise and meditated on Gayatri* with an undistracted mind.

    Verse Locator

    tushhTaava praNatashchaiva shirasaa madhusuudanam |
    vimalakshaumasaMviito vaachayaamaasa cha dvijaan || 2-6-7

    7. tushhTaava= (He) praised; madhusuudhanam= Lord Vishnu; praNataH= by bowing; shirasaa= the head; vimalakshouma samviitaH= by wearing pure silk clothes; vaachayaamaasa= got valedictory text recited by; dvijaan= Brahmans.

    He praised Lord Vishnu by bowing his head before Him. By wearing pure silk clothes, he got valedictory text recited by Brahmans.

    இது வால்மீகி ராமாயணம் கூறுவது. நீங்கள் கேட்ட

    // அவர்கள் ஏன் பரம வைணவர்களாக உங்கள் ஆகமங்கள் கூறும் படி வாழ்ந்துக் காட்டவில்லை என்று விளக்குங்கள்.//

    என்ற கேள்விக்கு இவை விடையாக இருக்கிறதென்று தெரிகிறது. சந்தேக பரிகாரங்களைக் கேட்டு தீர்த்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

  90. பெரு மதிப்பிற்குரிய மலர்மன்னன் ,

    தாங்கள் வருத்தப்படுவதற்கு இதில் ஒன்றுமில்லை. தீவிர வைணவமும், தீவிர சைவமும், இப்போதே இவ்வளவு பிரச்சினை என்றால் அந்த காலத்தில் நம் மக்களை என்ன பாடு படுத்தி இருப்பார்கள் என்பதை தயவு செய்து நினைத்துப்பாருங்கள்.

    தன்னுடைய முறையே உயர்வு என்ற கருத்தும், மற்றவை தன்னைவிட சிறிதாவது குறைவு என்ற கிறுக்குத்தனமுமே, இதுபோன்ற தேவை இல்லாத விவாதங்களுக்கு காரணமாகிறது.

    நான் ஒரு முருக பக்தன். என்னைப்பொருத்த மட்டில், பகவத் கீதை, திருவாசகம், திருப்புகழ், தேவாரம் எல்லாமே ஒரே கடவுளைப்பற்றிய கருத்தாக்கமே என்பதை நான் உணர்கிறேன்.

    கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகனும் இந்துவே. நாத்திகர்களுக்கு உலகில் வேறு எங்கும் புகலிடம் இல்லை. அப்படி இருக்கும் போது, இந்த சண்டைகள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விடும். ஏனெனில் சண்டை போட இவர்கள் இருக்கமாட்டார்கள். வருங்கால இளைய தலைமுறை இவர்களை குப்பை கூடையில் தூக்கி போட்டுவிடும்.

  91. நாராயணனும் தெய்வம், சிவனும் தெய்வம் என்பதே சரி. நாராயணனே தெய்வம், சிவனே தெய்வம் என்று கூறுவது மன்னிக்க முடியாத ஒரு பாவம் ஆகும். நாராயணனும், சிவனும் ஒரே இறை சக்தியின் இரு வேறு பெயர்களே ஆகும். அவை இரண்டும் ஒரே சக்தியின் இருவேறு தோற்றங்கள் ஆகும்.

    உங்களின் அறியாமை இருள் விலக, எல்லாம் வல்ல இறைவன் நல்ல புத்தியை வழங்கட்டும். பழைய புராணங்களின் அடிப்படையில் வீண் விவாதம் வேண்டாம்.

  92. பிறப்பால் நான் ஒரு கிறிஸ்துவ தமிழன்.(சத்தியமாக மிஷி நரி இல்லை) மலேசியாவில் பிறந்தவன். அனாலும் தமிழ் பள்ளியில் படித்ததால் நெறைய வேத புராண கதைகளை படித்திருக்கிறேன் .

    எனக்கு சைவத்தை விட வைணவம் மேலே ஈடுபாடு அதிகம் உண்டு. என் ஹிந்து நண்பர்கள் எல்லாம் சைவர்கல்தான் . அவர்களுக்கு வைணவம் பற்றி எதுவுமே தெரியாது. இங்கே சகோதரர் கந்தர்வன் அவர்கள் எழுதும் தொடர் மிகவும் அற்புதமாக இருக்கிறது. அவருக்கு எமது நன்றிகள்.

    அது மட்டும் இல்லை. இங்கே பல பெரியவர்கள் செய்யும் விவாதம் என்னை பிரமிக்க வைக்கிறது. பல விஷயங்கள் எனக்கு புரியவில்லை என்றாலும், எதோ சில கருத்துக்கள் நன்றாக புரிகிறது. வேதம் புராணம் இதிகாசங்களில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? அற்புதம் ! அற்புதம்!

    எப்போதெல்லாம் அடிக்கடி இந்த தளம் வருகிறேன்.நெறைய படிக்கிறேன்.கூடிய விரைவில் நெற்றியில் திருநாமம் தரிக்க போகிறேன். விளையாட்டு இல்லை. உண்மை.! சத்தியம்! எனக்கு நாலாயிர திவ்ய ப்ரபந்தம், பாடல்களுடன் எளிய தமிழ் விளக்கம் உள்ள புத்தகம் வேண்டும். யாரவது நல்ல புத்தகத்தை எனக்கு அறிமுக படுத்துங்கள்.

    மற்றும் தமிழ் வேதம் செய்த நம்மாழ்வாரை பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன் ! அவரின் திருவாய்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். என்ன சொல்கிறார் என்பது புரியாது.அனால், அந்த தமிழ் நடை மிகவும் அருமை.

    திரு கந்தர்வன் அவர்களுக்கு எமது நன்றிகள்.

  93. //நான் ஒரு முருக பக்தன். என்னைப்பொருத்த மட்டில், பகவத் கீதை, திருவாசகம், திருப்புகழ், தேவாரம் எல்லாமே ஒரே கடவுளைப்பற்றிய கருத்தாக்கமே என்பதை நான் உணர்கிறேன்.//

    முருக வழிபாடும் திருப்புகழும் இந்தக் கண்ணோட்டத்திலேயே சிறப்படைகின்றன. தமிழகம் வழிபாட்டுநெறி பேதங்களால் சிதைவுறாதவாறும் சிவநெறி திருமால்நெறி சத்திவழிபாடு மூத்தபிள்ளையார் வழிபாடு என அனைத்தையும் ஒன்றிணைத்து ஒருநெறியாக்கியது முருக வழிபாடு. அதற்குச் செம்மையான தளம் அமைத்தது திருப்புகழ்.

    “இருவினை முமலமுமற இறவியொடு பிறவியற ஏகபோகமாய் நீயு நானுமாய் இருகும்வகை பரமசுகம் அதனையருள்” ஏகநாயகன் லோகநாயன் முருகன்.

    //முருகபக்தர் கதிரவன் வாழ்க!நாராயணனும், சிவனும் ஒரே இறை சக்தியின் இரு வேறு பெயர்களே ஆகும். அவை இரண்டும் ஒரே சக்தியின் இருவேறு தோற்றங்கள் ஆகும்//

    உண்மை. என்னுடைய 15ஆம் தேதியிட்ட மறுமொழி காண்க.

  94. திரு david navindran,

    நாலாயிரம் முழுவதற்கும் விளக்கங்களை ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் சுவாமி (PBA Swamy) அவர்களின் எளிய தமிழ் நடை விளக்க உரைகளுடன் “திவ்யார்த்த தீபிகை” என்ற நூற்தொகுப்புகளில் செய்துள்ளார். அது முழுவதும் இந்தத் தளத்தில் மின்மயமாக்கியுள்ளனர்: https://dravidaveda.org/ அங்கே இலவசமாக எளிதில் படிக்கக் கூடிய விதம் யூனிகோடு ஒருங்கியல் குறியில் உள்ளது.

  95. திரு david navindran,

    தங்கள் வரவு நல்வரவாகுக, வாழ்த்துக்கள்

  96. திரு. மலர்மன்னன் ஐயா அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்….வரவேற்கிறேன்….

    அரியும் சிவனும் ஒன்னு…இதை அறியாதவர் வாயிலே மண்ணு…..

  97. மலர் மன்னன் அவர்களின் 15ஆம் தேதியிட்ட மறுமொழி உண்மையிலேயே கண்ணீரை வரவழக்கின்றது. தமிழ் இந்து இணையதளம் உருவாக்கப்பட்ட நோக்க்ம் தோற்றுவிடுமோ என்ற அச்சம் உடன் பிறக்கின்றது.

    //உங்களின் அறியாமை இருள் விலக, எல்லாம் வல்ல இறைவன் நல்ல புத்தியை வழங்கட்டும். பழைய புராணங்களின் அடிப்படையில் வீண் விவாதம் வேண்டாம்.//

    உண்மையே.

  98. கண்ணனையும் ராமனையும் கலங்கடித்து என்னத்தை சாதிக்க போகிறோம் அவர்கோல் இத் தேசத்தின் உயிர் மூச்சு.

    தீடீர் தீடீர் என்று புராணங்கள் எல்லாம் புருடா – இதி ஹாசங்கள் எல்லாம் புருடா என்று நாம் சொல்லி விடுகிறோம் – மிசநரிகளுக்கு ஒரே சந்தோசம் – எனக்கு ஒரு சந்தேகம் நாம் தான் குருடா என்று.
    ஸ்கந்தர், விநாயகர் எல்லாம் கற்பனையே என்கிறார் – அப்போ வேதத்தில் வரும் காயத்ரிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் – அப்போ அதும் பூ சுத்தலா. நமது மனதில் தொன்றியத்தை எல்லாம் எழுதி விடுகிறோம் அதனால் எதெதெல்லாம் அடி வாங்கும் என்று கூட யோசிக்காமல். எல்லாத்தையும் கிளப்பி விட்டு விட்டு கடைசியில் ஆம் நாடு நிலையே சிறந்த வழி என்று ஒருவர் சொன்னார் அதையே நானும் உண்மை என்று சொல்கிறேன் என்று வேறு சொல்கிறோம். ஒரே கொழப்பமா இருக்கு.

    இங்கு சிவ ஸ்ரீ என்பவர் மிக அற்புதமாக எழுதி வருகிறார். அவரது எழுத்தில் பல நாடு நிலையாளர்களை மேற்கோள் காட்டுகிறார், சிறந்த ஆராய்ச்சிக்கு அப்புறமே அவர் எழுதுகிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    சிவ ஸ்ரீ அவர்களே – நான் என்ன சொன்னால் நீங்கள் இப்படி கஷ்டப்பட்டு கோவப்பட்டு எழுதுவதை நிப்பாட்டுவீர்கள் என்று சொல்லுங்கள் சொல்லிவிடுகிறேன் சிவேந ஜீவனம் பவதி, சலதி, லயதி போதுமா.

    [Edited and published]

  99. கண்ணனையும் ராமனையும் கலங்கடித்து என்னத்தை சாதிக்க போகிறோம் அவர்கோல் இத் தேசத்தின் உயிர் மூச்சு.

    தீடீர் தீடீர் என்று புராணங்கள் எல்லாம் புருடா – இதி ஹாசங்கள் எல்லாம் புருடா என்று நாம் சொல்லி விடுகிறோம் – மிசநரிகளுக்கு ஒரே சந்தோசம் – எனக்கு ஒரு சந்தேகம் நாம் தான் குருடா என்று.
    ஸ்கந்தர், விநாயகர் எல்லாம் கற்பனையே என்கிறார் – அப்போ வேதத்தில் வரும் காயத்ரிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் – அப்போ அதும் பூ சுத்தலா. நமது மனதில் தொன்றியத்தை எல்லாம் எழுதி விடுகிறோம் அதனால் எதெதெல்லாம் அடி வாங்கும் என்று கூட யோசிக்காமல். எல்லாத்தையும் கிளப்பி விட்டு விட்டு கடைசியில் ஆம் நாடு நிலையே சிறந்த வழி என்று ஒருவர் சொன்னார் அதையே நானும் உண்மை என்று சொல்கிறேன் என்று வேறு சொல்கிறோம். ஒரே கொழப்பமா இருக்கு.

    இங்கு சிவ ஸ்ரீ என்பவர் மிக அற்புதமாக எழுதி வருகிறார். அவரது எழுத்தில் பல நாடு நிலையாளர்களை மேற்கோள் காட்டுகிறார், சிறந்த ஆராய்ச்சிக்கு அப்புறமே அவர் எழுதுகிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    சிவ ஸ்ரீ அவர்களே – நான் என்ன சொன்னால் நீங்கள் இப்படி கஷ்டப்பட்டு கோவப்பட்டு எழுதுவதை நிப்பாட்டுவீர்கள் என்று சொல்லுங்கள் சொல்லிவிடுகிறேன் சிவேந ஜீவனம் பவதி, சலதி, லயதி போதுமா.

    [Edited and published]

  100. நான் தமிழ்ஹிந்து. எனக்கு தமிழ் தவிர எதுவும் தெரியாது. ஏதோ ஆங்கிலம் இப்போது கற்றுத் தருவதால் படித்தேன். சமஸ்கிருதம் படிக்கும், வேதம் படிக்கும் வழக்கம் பரம்பரைக்கே இல்லை. இங்கே எழுதியிருப்பதைப் படித்தால் நான் மோட்சம் போக வாய்ப்பில்லை போலிருக்கிறது. வெறுமே மாரியம்மனைக் கும்பிட்டால் மோட்சம் கிடையாது என்றே வேதம் சொல்கிறது போலத் தோன்றுகிறது. மாரியம்மன் எல்லாம் லொள்ளாக்காட்டிக்கு போல.

    ///“To free themselves from the ocean of repeated birth and death, the best of men decorate their bodies with the symbols of the lotus and cakra of Visnu./// என்று வேதத்தில் சொல்லியிருக்காமே

    நான் இதெல்லாம் அணிவதில்லை. அதாவது நான் நல்ல மனிதன் இல்லை என்று வேதம் சொல்வதாக ஆகிறது. இப்படியெல்லாம் உங்களைப் போன்றவர்கள் சொல்லித்தானே என்போல இருந்த எத்தனையோ பேர் மதம் மாறினார்கள்?. இன்னமும் இப்படி சொல்வதை நிறுத்தவில்லை. (நான் மாற மாட்டேன் என்பது வேறு விஷயம் பலர் இப்படிப்பட்ட ஏச்சால்தான் மாறுகிறார்கள் என்பது உண்மை.)

    அப்புறம் ஏன் மலர்மன்னன் அய்யா தாய் மதம் திரும்ப வைப்பதே முக்கியம் என்று கட்டுரை எழுதுகிறார்?.

    நீங்கள் கட்டுரை கட்டுரையாக மறு மொழியாக மறு மொழியாக மனிதர்களை ஏசி விரட்டுவீர்கள். மலர்மன்னன், பேரூர் ஆதீனம், தயானந்த சரஸ்வதி நிறுவிய ஆரிய சமாஜ்காரர்கள் ஆகியோர் மதம் மாறியவர்கள் தாய் மதம் திரும்ப நூற்றாண்டுகளாக “மீண்டும் மீண்டும் பிறந்து” உழைக்க வேண்டும். நீங்கள் எங்களை எல்லாம் ஹிந்து மதத்திலிருந்து விரட்டிவிட்டு இதில் சொல்லப்பட்ட அனைத்து சின்னங்களையும் அணிந்து மீண்டும் பிறவாமல் மோட்சம் போய் விடுவீர்கள்.

    சரிதான் நல்ல நியாயம்.

    வேதத்தில் சொல்லியிருக்கிறதே, சரியாகத்தான் இருக்கும்.

  101. அன்புள்ள அஞ்சன்குமார் அவர்களே,

    /////“To free themselves from the ocean of repeated birth and death, the best of men decorate their bodies with the symbols of the lotus and cakra of Visnu./// என்று வேதத்தில் சொல்லியிருக்காமே//

    //நான் இதெல்லாம் அணிவதில்லை. அதாவது நான் நல்ல மனிதன் இல்லை என்று வேதம் சொல்வதாக ஆகிறது. இப்படியெல்லாம் உங்களைப் போன்றவர்கள் சொல்லித்தானே என்போல இருந்த எத்தனையோ பேர் மதம் மாறினார்கள்?. இன்னமும் இப்படி சொல்வதை நிறுத்தவில்லை. (நான் மாற மாட்டேன் என்பது வேறு விஷயம் பலர் இப்படிப்பட்ட ஏச்சால்தான் மாறுகிறார்கள் என்பது உண்மை.)//

    லைட்டாக சொல்ல வேண்டுமென்றால் – நானும் திருமண் அணியாதவனே. இந்த வாக்கியத்தினால் எனக்கும் ஒன்றும் இலாபம் இல்லை :-).

    சீரியசாகச் சொன்னால் நீங்கள் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும்…

    ஒன்று, இந்த வாக்கியத்திலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது – இந்த வாக்கியம் திருமண் சங்கு-சக்கர முதலானவற்றை மேனியில் சாத்திக் கொள்வதை ஊக்குவிக்கிறது, அவற்றை கவுரவிக்கிறது. இதைக் கொண்டு “திருமண் முதலியவற்றை அணியாதவர்கள் கயவர்கள்” என்று அர்த்தம் பண்ணிக் கொள்வது கிடையாது. ஆங்கிலத்தில் சொன்னால் – it encourages a particular practice, rather than condemning something else.

    இரண்டு, “ஒருசிலர் தான் திருமண் அணிய வேண்டும்” என்று எந்த விதமான பாகுபாடும் கிடையாது. யாராக இருந்தாலும் விரும்பினால் அணிந்துக் கொள்ளலாம். இது நேற்றைக்கு இன்றைக்கு தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வந்த விஷயம் அல்ல. தொன்று தொட்டு.

    மூன்று, “திருமண் அணிந்துவிட்டாலே மோட்சம்; திருமண் அணிந்து விட்டாலே நல்ல மனிதன் தான்” என்று அர்த்தம் பண்ணிக் கொண்டால் பல கயவர்களை நல்ல மனிதர்கள் என்று ஏற்க வேண்டி வரும். திருமண் அணியாத எவ்வளவோ மெய்யான விஷ்ணு பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் வீண் போவார்களா என்ன? கழுகாகப் பிறந்த ஜடாயுவுக்கு மோட்சம் இல்லையா? யானையாகப் பிறந்த கஜேந்திரனுக்கு மோட்சம் இல்லையா? அல்லது வேட்டுவ குலத்தைச் சேர்ந்த சபரிக்கு இல்லையா? அல்லது இவர்களெல்லாம் திருமண் சாத்திக் கொண்டனரா? அந்தக் காலத்தில் தலித் சமுதாயத்தில் பிறந்த திருப்பாணாழ்வார் என்ன சாத்தியிருப்பார்? அவருக்கு இல்லையா மோட்சம்?

    வேத வாக்கியங்கள் சில புற ஒழுக்கங்களை புகழ்ந்து அதை நாம் ஏற்குமாறு விதிக்கின்றன. அதற்காக அது செய்ய இயலாதவர்களுக்கு ஒன்றுமில்லை என்று ஆகிவிடாது.

    கடைசியாக ஒரு விஷயம்:

    //இப்படியெல்லாம் உங்களைப் போன்றவர்கள் சொல்லித்தானே என்போல இருந்த எத்தனையோ பேர் மதம் மாறினார்கள்?//

    இன்றைக்குத் தான் ஒருவர் மறுமொழி இட்டிருந்தார். அதை மீண்டும் உங்கள் கவனத்திற்காக இங்கு இடுகிறேன்:

    //
    david navindran
    15 August 2011 at 11:35 pm

    பிறப்பால் நான் ஒரு கிறிஸ்துவ தமிழன்.(சத்தியமாக மிஷி நரி இல்லை) மலேசியாவில் பிறந்தவன். அனாலும் தமிழ் பள்ளியில் படித்ததால் நெறைய வேத புராண கதைகளை படித்திருக்கிறேன் .

    அது மட்டும் இல்லை. இங்கே பல பெரியவர்கள் செய்யும் விவாதம் என்னை பிரமிக்க வைக்கிறது. பல விஷயங்கள் எனக்கு புரியவில்லை என்றாலும், எதோ சில கருத்துக்கள் நன்றாக புரிகிறது. வேதம் புராணம் இதிகாசங்களில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? அற்புதம் ! அற்புதம்!

    எப்போதெல்லாம் அடிக்கடி இந்த தளம் வருகிறேன்.நெறைய படிக்கிறேன்.கூடிய விரைவில் நெற்றியில் திருநாமம் தரிக்க போகிறேன். விளையாட்டு இல்லை. உண்மை.! சத்தியம்! //

    அன்புடன்

  102. அஞ்சன் குமார் அவர்களின் ஆதங்கத்தில் முழுக்க முழுக்க நியாயம் உள்ளது.
    நானும் அவரைப் போன்றவன்தான்…..அவரவர் தெய்வத்தை உயர்த்துவதாக எண்ணிக்கொண்டு மற்றவரை [ அதாவது நம்மவரை ] தாழ்த்துகிறோம்……சிறு தெய்வ வழிபாடோ ,குல தெய்வ வழிபாடோ செய்பவன் ஹிந்து இல்லையா ?

    நவீன கால பட்டிமன்றங்கள் போலாகிவிட்டது…..கற்பில் சிறந்தவள் கண்ணகியா அல்லது சீதையா என்று பட்டிமன்றம் வைத்தால், இரு அணியினரும் ஒருவர் மீது ஒருவர் அவதூறு வீசி, இறுதியில் அந்த இருவர் கற்பின் மீதும் நமக்கு சந்தேகம் வந்து விடும். அதுபோலாகி விட்டது இந்த விவாதம்……..

    அறிவுசார் சான்றோர்கள் யோசிக்கவும்………

  103. அஞ்சன் குமார் அவர்களே

    ///“To free themselves from the ocean of repeated birth and death, the best of men decorate their bodies with the symbols of the lotus and cakra of Visnu.///

    என்று தானே இருக்கிறது

    the only way to free themselves
    ///“from the ocean of repeated birth and death, the best of men decorate their bodies with the symbols of the lotus and cakra of Visnu.///

    என்றில்லையே.

    மாரியம்மன் குங்கும பொட்டு போதுமே – மொத்தத்தில் ஹிந்து என்று பெருமிதத்துடன் காட்டிக்கொள்ள நெற்றியில் ஏதாவது இருந்தால் போதும்

  104. \\\\\\\\தாங்கள் வருத்தப்படுவதற்கு இதில் ஒன்றுமில்லை. தீவிர வைணவமும், தீவிர சைவமும், இப்போதே இவ்வளவு பிரச்சினை என்றால் அந்த காலத்தில் நம் மக்களை என்ன பாடு படுத்தி இருப்பார்கள் என்பதை தயவு செய்து நினைத்துப்பாருங்கள்.

    தன்னுடைய முறையே உயர்வு என்ற கருத்தும், மற்றவை தன்னைவிட சிறிதாவது குறைவு என்ற கிறுக்குத்தனமுமே, இதுபோன்ற தேவை இல்லாத விவாதங்களுக்கு காரணமாகிறது.

    நான் ஒரு முருக பக்தன். என்னைப்பொருத்த மட்டில், பகவத் கீதை, திருவாசகம், திருப்புகழ், தேவாரம் எல்லாமே ஒரே கடவுளைப்பற்றிய கருத்தாக்கமே என்பதை நான் உணர்கிறேன்

    இந்த சண்டைகள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விடும். ஏனெனில் சண்டை போட இவர்கள் இருக்கமாட்டார்கள். வருங்கால இளைய தலைமுறை இவர்களை குப்பை கூடையில் தூக்கி போட்டுவிடும்..\\\\\\\\

    அன்பார்ந்த ஸ்ரீ கதிரவன், தயவு செய்து இவ்வாறு கூறாதீர்கள். வள்ளல் அருணகிரிப்பெருமான் வாக்கைப்பாருங்கள் :-

    “ஓதுவித்தவர் கூலிகொடாதவர்” என்ற திருப்புகழில் நரகுழலத்தக்காரின் பட்டியல் தருகிறார் அருணகிரிப்பெருமான்.

    “ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை …… யிகழ்வோர்கள்

    ஏக சித்ததி யானமி லாதவர்
    மோக முற்றிடு போகித மூறினர்
    ஈன ரித்தனை பேர்களு மேழ்நர …… குழல்வாரே”

    இந்த திருப்புகழில் இரண்டு விஷயங்கள்.

    முதலில், “ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை யிகழ்வோர்கள்”.

    வள்ளல் அருணகிரிப்பெருமான் இதைக்கடுமையாக கண்டிப்பதால் எக்காரணமாயினும் நாம் ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்களை இகழ்தல் என்பதில் அறவே ஈடுபடக்கூடாது. வள்ளல் பெருமான் வாக்கை மீறக்கூடாதல்லவா.

    “தீவிர வைணவமும், தீவிர சைவமும், இப்போதே இவ்வளவு பிரச்சினை என்றால்”- நாம் பார்க்கும் கோணம் தான் தவறு என்பது என் அபிப்ராயம்.இதே திருப்புகழில் வள்ளல் பெருமான் சொல்லும் இன்னொரு விஷயம் பாருங்கள். “ஏக சித்த தியானமி லாதவர்”. தீவ்ரதை என்பதில் தோஷம் பார்க்காது குணத்தைப்பாருங்கள். தீவ்ரமான சைவரோ அல்லது வைஷ்ணவரோ நாம் நினைப்பது போல் சண்டையில் மட்டும் ஈடுபடுபவர் என்பது மிகத் தவறான கருத்தாகும். ஆசுதோஷியான சிவபெருமானிடத்தும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருமாலிடத்தும் ஒரு க்ஷணம் கூட தம் சித்தத்தை அகற்றாதார் தீவ்ரமான சைவரும் வைஷ்ணவரும். நாம் வழிபடுவது முருகனாயிருக்கட்டும் மாரியம்மனாயிருக்கட்டும் அல்லது வேறு எந்த தெய்வமாகத்தான் இருக்கட்டுமே. தீவ்ரமான சைவ வைஷ்ணவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இந்த ஐகாக்ரியத்தைத் தான். அத்தெய்வத்திடம் மனம் ஆழ்ந்து ஈடுபட்டால் நாம் விரும்பினாலும் சரி விரும்பாவிடினும் சரி மனதகலாமல் ஓரிடத்திலேயே ஐக்யமுறும். நா மும் புறந்தொழாதார் ஆகிவிடுவோம்.

    இகழ்ச்சி என்பது அவகுணம். என்னிடம் சற்று கூட தங்களிடம் சற்று குறைவாக என இந்த அவகுணம் இருக்கலாம். ஆனால் இகழ்ச்சி என்பது அவகுணம் என்று அறிந்து களைய முயற்சிக்கலாமே.அதுவும் அடியார்கள் பக்ஷத்தில் அறவே இகழ்தலையொழித்தல் என்றிருக்கலாமே.

    \\\\\\ஆதி சங்கரர் பாகவதத்தினை ஏற்கவில்லை. அனால் பின்னல் வந்த ஸ்மார்த்தர்கள் சிலர் அதனை ஏற்றால் \\\\\\

    அன்பார்ந்த ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களின் மேற்கண்ட முதல் விஷயத்திற்கு ஸ்ரீ கந்தர்வன் உத்தரமளித்துள்ளார்.

    இரண்டாவதான தங்கள் ப்ரஸ்தாபத்திற்கு ஸ்ரீமத் பாகவதத்திலேயே உத்தரமுள்ளது. ஸ்ரீமத் பாகவதம் யாருக்கு மேலானது?

    ஸ்ரீமத் பாகவதம் புராணம் அமலம் யத் வைஷ்ணவானாம் ப்ரியம்
    யஸ்மின் பாரமஹம்ஸ்யமேவம் அமலம் ஞானம் பரம் கீயதே

    பரமஹம்ஸர்கள் அறியத் தக்க ஞானத்தை வழங்கும் பாகவதம் வைஷ்ணவர்களுக்கு ப்ரியமானது.

    நிகம கல்பதரோர் களிதம் பலம்
    சுகமுகாத் அம்ருத த்ரவ சம்யுதம்
    பிபத பாகவதம் ரஸமாலயம்
    முஹுரஹோ ரஸிகா: புவி பாவுகா:

    சுகமுனிவரின் வாக்கால் அறியப்பட்ட ஸ்ரீமத் பாகவதம் என்ற அமுதம் வேதம் என்ற மரத்தினின்று கிடைத்த பழம். முழுதும் சாறாகவேயான பழம். பூலோகமெங்கும் உள்ள ரசிகர்காள் இதைப்பருகுவீர்.

    வேதத்தை விபாகம் செய்த வ்யாசரின் புத்ரர் வாக்கு எப்படிப்பொய்க்கும். கடல் கடந்து த்வீபாந்தரத்தில் நம் தாய் மதமான ஹிந்து மதத்தை எப்போதோ இழந்தவர்கள் இன்று ருசித்து ருசித்து வாசிக்கும் மஹாபுராணம் ஸ்ரீமத் பாகவதம்.

    சைவர்களுக்கு ஸ்ரீமத் பாகவதம் ஏற்பில்லை என்று தாங்கள் கூறலாம்.

    ஆனால்,

    “பின்னல் வந்த ஸ்மார்த்தர்கள் சிலர் அதனை ஏற்றால்” ………..தவறென்ன?

    ஆனால் பின்னால் வந்த ஸ்மார்த்தர்கள் என்பது புரியவில்லை. வைதிகர் அனைவரும் ஸ்மார்த்தர்களே. இதில் பின்னால் என்ன முன்னால் என்ன. சைவரானால் என்ன வைஷ்ணவரானால் என்ன ஸ்மார்த்தரானால் என்ன ஆபஸ்தம்பமோ போதாயனமோ ஆஸ்வலாயனமோ த்ராஹ்யாயணமோ எல்லோருக்கும் ஒன்று தானே. ஸ்மார்த்தர் என்பது மட்டுமின்றி மேலதிகமாக ஆகம ப்ரகாரம் தீக்ஷை எடுத்து சிலர் வைஷ்ணவர் சிலர் சைவர். தவறிருந்தால் திருத்துங்கள்.

    ப்ரம்ம ஸூத்ரமும் பாகவதமும் ஒரே போல் “ஜன்மாத்யஸ்ய யத:” என்றாரம்பிப்பதும் அந்த மஹாபுராணத்தின் மேன்மையைக்காட்டுகிறது.

    \\\\\\\\\உலகெங்கும் உள்ள ஹரே கிருஷ்ண இயக்கத்தினர், ஸ்ரீ வைணவர்கள்(கந்தர்வன் உட்பட) சிவ வழிபாடு முக்தி தராது…………..\\\\\\\\\

    சொல்லியிருக்கலாம். கௌடிய வைஷ்ணவர்கட்கு முக்யமான ஹரிபக்தி விலாஸம் என்ன சொல்கிறது பாருங்கள்:-

    வைதிகர்கட்கு ஸ்ம்ருதிமுக்தாபலம் (வைத்யனாததீக்ஷிதீயம்) எப்படியோ அப்படியே கௌடிய வைஷ்ணவர்கட்கு ஹரி பக்தி விலாஸம்.
    இயற்றியவர் ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவின் சிஷ்யரான ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமியவர்கள். இவர் மஹாப்ரபுவிற்கு தக்ஷிணபாரதத்தின்று கிடைத்த ரத்னம். இதற்கு இன்னொரு சிஷ்யரான ஸ்ரீ ஸனாதன கோஸ்வாமியவர்கள் திக்தர்ஷனீ டீகா என்றொரு வ்யாக்யானமும் எழுதியுள்ளார்.

    இருபது விலாஸங்களாய் (பாகம்) அதிவிஸ்தாரமாய் வைஷ்ணவர்களின் தினசர்யை, தீக்ஷாமுறை, நித்யோத்சவ, பக்ஷோத்சவ மாஸோத்சவங்களை சொல்லிக்கொண்டு போகுங்கால் பதினான் காவது விலாஸத்தில் பால்குன மாதத்தில் சிவராத்ரி வ்ரதத்தைப் பற்றி சொல்கிறார்.

    சிவராத்ரி வ்ரதமிதம் யத்யபி ஆவஸ்யகம் ந ஹி
    வைஷ்ணவானாம் ததாபி அத்ர ஸதாசாராத் விலிக்யதே (186)
    சிவராத்ரி வரதம் க்ருஷ்ண சதுர்தஸ்யாந்து பால்குனே
    வைஷ்ணவை: அபிதத் கார்யம் ஸ்ரீக்ருஷ்ணப்ரீதயே ஸதா (187)

    வ்யாக்யானமெழுதிய ஸ்ரீ ஸனாதன கோஸ்வாமியவர்களும்
    நனு வைஷ்ணவானாம் கிம் சிவராத்ரிவ்ரத கரணேன? தத்ர லிகதி . ஸ்ரீ க்ருஷ்ண ப்ரீதய இதி. என எழுதியுள்ளார்.

    புறந்தொழா வைஷ்ணவர்கட்கு சிவராத்ரி வ்ரதம் ஆவஸ்யகமில்லாவிடினும் ஸதாசாரப்படி நியமிக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீக்ருஷ்ணருக்கு ப்ரீதி என்ற படிக்கு வைஷ்ணவர்கள் சிவராத்ரி வ்ரதம் அனுஷ்டிக்கவேணும்.

    மேலும்,

    மத்பக்த: சங்கரத்வேஷி மத்த்வேஷி சங்கரப்ரிய:
    உபௌதௌ நரகௌ யாதௌ யாவச்சந்த்ர திவாகரௌ (191)

    சங்கரரை த்வேஷிக்கும் ஹரிபக்தனும் ஹரியை த்வேஷிக்கும் சங்கர பக்தனும் சந்த்ர ஸூர்யர்களிருக்கும் வரை நரகுழல்வார்.

    வள்ளல் அருணகிரிப்பெருமான் வாக்கும் இங்கே நினைவுக்கு வருகிறது

    ஹயசீர்ஷ பஞ்சராத்ரத்தில் இருப்பதாய் குறிப்பிடுகிறார்.

    ய: சிவ: ஸோஹமேவேஹ யோஹம் ஸ பகவான் சிவ:
    நாவயோரந்தரம் கிஞ்சிதாகாஸானிலயோரிவ (192)

    எது சிவமோ அது நான்; எது நானோ அது சிவம். கார்ய காரண நிமித்தமாய ஆகாசத்திற்கும் வாயுவிற்கும் எப்படி பேதம் என்பது அபேத துல்யமோ அப்படியே ஹரிஹரர்களிடையே பேதமில்லை. (சைவர்கள் மறுக்கலாம்)

    ஆரம்பத்தில் என் உத்தரத்தில் எழுதிய ஸ்லோகம்

    பஹ்வ்ருச பரிசிஷ்டத்தில் இருப்பதாய சொல்கிறார் :

    சிவாய விஷ்ணு ரூபாய சிவரூபாய விஷ்ணவே
    சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு: விஷ்ணோஸ்து ஹ்ருதயம் சிவ: (193)

    ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமியவர்கள் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த பெருமகனார். பின் ஸ்ரீ க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபுவிடம் மனம் ஈடுபட்டு அவர் வழி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    \\\\\\\\\\மீண்டும் சொல்லுகின்றேன். திருவிளையாடற்புராணம் போன்ற சைவபுராணங்கள் அனைத்துக் கற்பனையே. \\\\\\\\\
    ஐயன்மீர், முத்துக்குமார ஸ்வாமி மஹாசய, மேற்கண்ட வாசகம் குழப்புகிறது. திருவிளையாடற்புராணம் போன்ற சைவபுராணங்கள் அனைத்தும் கற்பனையே என்றால் வாதபுரீசரும் நரியும் பரியும் பிட்டுக்கு மண் சுமந்ததும் பிரம்படி பட்டதும் அதைப்போற்றி அடியார்கள் தேவபாஷைகளாம் தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் எழுதி வைத்த திருவிளையாடற்புராணம் மற்றும் சிவலீலார்ணவம் இவையெல்லாம் வெறும் கற்பனையா? வெறும் கற்பனை மட்டும் தானா?

  105. சகோதரர் கந்தர்வன் அவர்களே… திவ்ய பிரபந்தம் பற்றி அருமையான தளம் தந்துள்ளிர்கள். இதைதான் பல வருடமாக நான் தேடிகொண்டிருந்தேன் !

    இயேசுவின் அருளால் நான் அவரின் தந்தையை , ஆதிதேவனை , மூல கடவுளை ,போற்றும் ஆழ்வார்களின் பாசுரங்களை படித்து புண்ணியம் பெற போகிறேன். இந்த வாய்ப்பை அளித்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள்!

  106. Interesting, intelligent,informed and involved exchange among intellectual(as well as spiritual, may I add?)individuals which is worth continuing so long as there is no personal animosity and acrimony. I am certainly not equipped nor qualified to participate in this well meant discussion among very learned persons.. Nevertheless, there is one thing which I wish to humbly submit is that everyone including all those who contribute to and view these postings that the essence of all our philosophy is that there IS ONLY ONE WHOM THE LEARNED CALL/. PERCIEVE IN SO MANY WAYS.
    Regards

  107. கந்தர்வன், சாரங்,

    சமஸ்கிருதம் தெரியாத இந்தத் தமிழ் ஹிந்துவுக்கு மதித்து பதில் தந்ததற்கு நன்றி. என்னைப் போலவே ஆதங்கம் உள்ளவன் நான் என்று இங்கே துணிந்து தன்னை அடயாளம் காட்டிக் கொண்ட சரவனகுமாருக்கு நன்றி.

    நான் இதைக் கேட்டபின்னால் இத்தனை விளக்கம் எழுதும் கந்தர்வன் அந்த மறுமொழியை எழுதும்போதே யோசிக்க வேண்டாமா? அப்படிச் செய்யாததால் இப்போது எழுதுவதெல்லாம் வெறும் சால்ஜாப்பு என்றுதானே ஆகிறது? முதலிலேயே இதுதான் ஆதாரம்னு காட்டறதுக்கு முன்னால் இதை இப்பிடி எழுதினால் சமஸ்கிருதம் படிக்காத என்போன்றோர் பற்றி என்ன ஆகும்னு கொஞ்சம் யோசியுங்க சாமி.

    சரவணகுமார், நம்ம சாமியை நாமே என் சிறு தெய்வம்னு சொல்லணும்.?

    யாராவது சொன்னாலும் சொன்னவங்களை சும்மாவிடக் கூடாது. இங்கே நீங்க பாக்கலே என்சாமிதான் பெருசுன்னு ஆளாளுக்கு எத்தனை நீளத்துக்கு விளக்கம்? அவங்க சாமிய அவங்க விட்டுக் குடுக்கறாங்களா? அதுதான் பக்தி.

    என்ன நமக்குத் தெரியாத மொழியிலிருந்துதான் அவங்க ஆதாரம் எல்லாம் போடுவாங்க. அதனாலென்ன பரவாயில்லை. கேட்டுடுவோம், வேதத்துலே எங்கே என்சாமி சின்ன சாமின்னு சொல்லியிருக்குன்னு? அவங்களும் பத்து பக்கத்துக்கு பாட்ட எடுத்துப் போடட்டும்? ஒருவேளை என்சாமியை சாமியே இல்லன்னு சொல்லியிருக்குன்னு சொன்னாலும் சொல்லுவாங்க.

    அட அப்படியே மாரியாத்தா பத்தி வேதத்துல சொல்லலேன்னு இவங்க “தீர்ப்பு சொல்லிட்டா கூட” கண்டிப்பா இவங்களை விட அந்த மாரியாத்தா பெரிசு இல்லையா? அது பாத்துக்கும்.
    .

  108. அன்புள்ள டேவிட் நவீந்திரன்,

    // இயேசுவின் அருளால் நான் அவரின் தந்தையை , ஆதிதேவனை , மூல கடவுளை ,போற்றும் ஆழ்வார்களின் பாசுரங்களை படித்து புண்ணியம் பெற போகிறேன். இந்த வாய்ப்பை அளித்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள்! //

    உங்களுடைய ஆர்வம் என்னை நெகிழ வைத்தது. இருப்பினும் உங்கள் மேற்கூறிய கூற்றில் எனக்குக் குழப்பங்கள் இருக்கின்றன.

    ஆழ்வார்களுடைய பாசுர வியாக்கியானங்களை படித்து அதில் உள்ளவற்றை அப்படியே ஏற்பது தான் சரி. ஆழ்வார்களை இயேசுவுடன் சம்பந்தப்படுத்தி ‘ஆழ்வார்கள் கிறிச்துவத்திற்குக் கடன்பட்டிருக்கின்றனர்’ என்று பறை அறைய பல மிஷனரிகள் காத்திருக்கிறார்கள். ஆகையால் ஆழ்வார் பாசுரத்தை, ‘நான் மோசேவின் ஆணைக்கு எதிராக எதையும் கூறப்போவதில்லை’ என்று மோசேவை புகழ்ந்த இயேசுவுடன் சம்பந்தப்படுத்தி அனுபவிப்பது பாவமாகும்.

    ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
    தாழ்வா நினைப்பவர் தாம் நரகில் – வீழ்வார்கள்
    என்று நினைத்து நெஞ்சே! எப்பொழுதும் நீ அவர்பால்
    சென்று அணுகக் கூசித் திரி!

    முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
    பின்னோர்ந்து நாம் அதனைப் பேசாதே – தம் நெஞ்சில்
    தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவர
    வாற்றது என்பவர் மூர்க்கர் ஆவார்.

    — மணவாள மாமுனிகளின் உபதேச்ச இரத்தின மாலை

    விவிலியத்தில் சில நல்ல விஷயங்கள் இருக்கலாம். அதற்காக ‘இதைத் தான் அதுவும் சொல்கிறது’ என்று கூறுவது தவறாகும். நம் இந்து நண்பர்களும் இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

  109. திரு அஞ்சன்குமார்,

    //
    நான் இதைக் கேட்டபின்னால் இத்தனை விளக்கம் எழுதும் கந்தர்வன் அந்த மறுமொழியை எழுதும்போதே யோசிக்க வேண்டாமா? அப்படிச் செய்யாததால் இப்போது எழுதுவதெல்லாம் வெறும் சால்ஜாப்பு என்றுதானே ஆகிறது? முதலிலேயே இதுதான் ஆதாரம்னு காட்டறதுக்கு முன்னால் இதை இப்பிடி எழுதினால் சமஸ்கிருதம் படிக்காத என்போன்றோர் பற்றி என்ன ஆகும்னு கொஞ்சம் யோசியுங்க சாமி.
    //

    இங்கு ‘வேதத்தில் திருமான் (நாமம்), சங்க-சக்கர தாரணம் முதலான வைஷ்ணவப் புற ஒழுக்கங்களைப் பற்றி எங்கும் இல்லை. ஆகையால் அவை அவைதீகம்’ என்ற கேள்வி எழுந்தது. ‘அது சரி அல்ல, வேதத்தில் இவற்றுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறது’ என்று வேத வாக்கியங்களை அவருக்குக் காட்டினேன். அவ்வளவே. உங்களையோ, வேறு எவரையோ குறை கூறுவதற்காக அல்ல. அந்த மறுமொழியைப் படித்தாலே உங்களுக்குப் புரியும்.

  110. சிறு தெய்வம் என்று சொல்வது தவறுதான். உடனே அடையாளப்படுத்திப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இந்த சொற்பிரயோகத்தை நானும் பல இடங்களில் பயன்படுத்தும் குற்றத்தை இழைத்துள்ளேன். ஸ்ரீ அஞ்சன குமாரனும் ஸ்ரீ சரவண குமாரனும் என்னை மன்னிக்க வேண்டும். நான் சிறு தெய்வம் எனக் குறிப்பிடுகையில் நம் தெய்வங்களில் சிறியவை பெரியவை என்கிற பாகுபாடுகள் உள்ளன என்கிற உணர்வுடன் எழுதவில்லை என உறுதி கூறுகிறேன். என் வீட்டிற்கு மூன்றாவது வீட்டில்தான் ஸ்ரீ திருவீதி அம்மன் கொலுகிருக்கிறாள். அவளை வணங்காமல் நான் அந்தக் கோவிலைத் தாண்டிச் சென்றதில்லை.

    -மலர்மன்னன்

  111. சுக்ல பக்ஷ ஏகாதசியில் ஆரம்பித்த வ்யாசம். நூறுக்கு மேற்பட்ட உத்தரங்கள். அழகரைப்பற்றிய அழகான வ்யாசம்.

    மற்ற திவ்ய தேச பெருமாளுக்கு சிவபெருமானின் சம்பந்தம் எவ்வளவோ, இங்கு உத்தரமெழுதும் வைஷ்ணவ ஸ்ரேஷ்டர்கள் அறிவர். மதுரை என்றால் கண் முன் வந்து நிற்பது பெருமாள் தம் தமக்கையையை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் அழகான காட்சி. அப்படி ஒரு சம்பந்தம் இருந்தும் இங்குள்ள அபிப்ராய பேதங்களை அழகரும் ஆசுதோஷியுமே களையவல்லார்.

    ஆரோபங்களும் ப்ரத்யாரோபங்களும் சளையில்லாமல் தொடர்ந்ததில் ஏதோ சங்கல்பமே செய்தது போல் அழகரைப்பற்றி பேசாது மற்ற சகல விஷயங்களும் பரிமாறியாகி விட்டது. அழகரைப்பற்றிப் பேசாதது புறந்தொழா சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் உறுத்தாமலிருக்கலாம். ஆனால் சிவபெருமானையும் மஹாவிஷ்ணுவையும் ஒருங்கே நிதம் தொழும் என்னைப்போன்றோருக்கு உறுத்துகிறதே. ப்ரதேசாந்தரத்தில் இருக்கும் என்போன்றோர் இந்த வ்யாஜத்தில் அழகரைப்பற்றி கற்றறிந்த வைஷ்ணவர்களிடமிறிந்து சுவை மிக பற்பல விஷயங்களை அறிவோம் என மிக ஆவலாக இருந்திருப்பர்..

    அறைகுறையாக இருப்பினும் சரி. அழகர் மலை பற்றி நான் வாசித்து ரசித்தது:-

    முதலில் குரங்கு வ்ருத்தாந்தம்.

    \\\\\\\\\அம்மலையிலே தத்தம் குட்டிகள் உடலைப் பற்றித் தழுவ குரங்குகள் ஒரு சிகரத்தில் இருந்து இன்னொரு சிகரம் வரை பாயும்\\\\\\\\
    ஸுந்தரபாஹுஸ்தவத்தில் இந்த மந்திகளைப்பற்றி ஒரு ச்லோகம் வரும். இவ்வழகர் மலைவாழும் மந்திகள் கூட எப்படி தீர வைஷ்ணவர்கள் எனப்பொருள்படும் படியான ச்லோகம். நினைவில் வரவில்லை.\\\\\\\

    यदीयशिखरागताम् शशिकलाम् तु शाखाम्रुगा:
    निरीक्षय हरशेखरी भवनमामृशन्तस्तत:
    स्पृशन्ति न हि देवतान्तरसमाश्रितेति स्फुटम्
    स एष सुमहातरुव्रजकिरिर्गृहम् श्रीपते:

    யதீய சிகராகதாம் சசிகலாம் து சாகாம்ருகா:
    நிரீக்ஷ்ய ஹரசேகரீபவனமாம்ருசந்தஸ்தத:
    ஸ்ப்ருசந்தி ந ஹி தேவதாந்தர சமாஸ் ரிதேதி ஸ்புடம்
    ஸ ஏஷ சுமஹாதருவ்ரஜகிரி: க்ருஹம் ஸ்ரீபதே:

    அழகர் மலையுச்சியில் வாழும் குரங்குகள் சந்த்ரனைப்பார்த்து தொடலாமோ என எண்ணியதாம். ஆனால் சந்த்ரசூடன் என்ற படிக்கு தேவதாந்தர சம்பந்தம் இருக்கிறதே. நாம் அழகரின் திருவடியை ஆஸ்ரயித்த வைஷ்ணவர்களாயிற்றே என்று திரும்பி விடுகின்றனவாம்.

    இது ஞாபகத்தில் இருப்பது எனக்கும் என் சஹோதரனுக்குமிடையே நிகழ்ந்த சம்வாதத்தால்

    சஹோ :- அண்ணா இதைப்படித்தயா, பார் சிவத்வேஷத்தை
    நான் :- இதில் த்வேஷம் என்னத்தை கண்டு விட்டாய்
    சஹோ :-பக்ஷபாதமாய் பேசாதே
    நான் :- ராகவா, இதில் த்வேஷம் என்ன இருக்கு
    சஹோ :- சந்த்ராம் சந்த்ர சஹோதரீம் என்று சொல்கிறோம் தானே
    நான் :- ஆமாம்
    சஹோ :- சந்த்ரன் மஹாலக்ஷ்மியின் சஹோதரன் என்று குரங்குகள் பார்த்திருந்தால் ஸ்லோகம் இப்படி இருக்காது இல்லையா?
    நான் :- உன்னுடையது கேள்வி அல்ல பதில்
    சஹோ :- எப்படி
    நான் :- ஸ்லோகத்தில் இருப்பது பாவம் (bhavam) த்வேஷமில்லை; மஹாலக்ஷ்மியின் சஹோதரன் என்ற பாவத்தில் சந்த்ர தர்சனம் செய்திருந்தால் அக்குரங்குகள் அழகர் மலை சிகரத்தில் உள்ள பூக்களை கொய்து சந்த்ரனுக்கு சமர்ப்பித்திருக்கலாம். தேவதாந்தர சம்பந்தம் என்ற பாவத்தில், த்வேஷத்தில் அல்ல , பார்த்ததால் திரும்பி வந்தன. ஆகவே,இஷ்டத்துக்கு அத்யாரோபம் செய்யாதே.
    சஹோ :- அண்ணா, நீ வைஷ்ணவ வானரர்களுக்கு பரிந்து பேசுகிறாய்
    நான் :- பின் என்னவாம், நீ வெறும் வானரமாய் பார்க்கிறாய், நான் ராமாலிங்கனம் கிடைக்கப்பெற்ற ஹனுமனாய் பார்க்கிறேன்.
    சஹோ :- எப்படி
    நான் :- ராமபிரான் அளித்த அங்குளீயத்தை அசோகவனத்தில் சீதாபிராட்டிக்கு சமர்ப்பித்து பின் சீதாபிராட்டி கொடுத்த சூடாமணியை திரும்ப ராமபிரானிடம் சமர்ப்பித்த போது, தேவியை நினைத்து கண்ணீர் மல்கி, ஹனுமனே உன்னைப்போல் இன்னொரு கைங்கர்யபரன் இருப்பனோ? நீ செய்த கைங்கர்யத்துக்கு கைம்மாறறியேன் என ப்ரபு ஹனுமனை ஆலிங்கனம் செய்தார். ஆனால் ராம பக்தர்களில் மிக ஸ்ரேஷ்டரான ஹனுமார் அதி வினயத்துடன் நாத்தழுதழுக்க, ப்ரபோ! என்னைப்போல் தங்களுக்கு ஆயிரம் பேர் கிட்டுவர், ஆனால் தங்களைப்போல் இன்னொரு ஸ்வாமி எங்களுக்கு கிடைக்கவொண்ணாரே என்று சொல்லி நமஸ்கரித்தாராம்.
    சஹோ :- அண்ணா, க்ஷமிக்கவும் இப்படித்தான் பாவம் சித்திக்க வேணும்
    நான் :- மிகச்சரி, போய் “உடுக்கத் துகில் வேணு நீள்பசி” திருப்புகழ் பாராயணம் செய்

    க்ருபைச்சித் தமுஞான போதமு
    மழைத்துத் தரவேணு மூழ்பவ
    கிரிக்குட் சுழல்வேனை யாளுவ …… தொருநாளே

    அருட்பொற் றிருவாழி மோதிர
    மளித்துற் றவர்மேல் மனோகர
    மளித்துக் கதிர்காம மேவிய …… பெருமாளே.

    மேற்கண்ட வரிகளில் சித்தத்தை இருத்தி வாசி. கதிர்காமக் கந்தன் நமக்கு தெளிந்த சித்தம் நல்கட்டும்.

    ———
    அடுத்து நாச்சியார் வாக்கு

    நாறுநறும் பொழில் திருமாலிருஞ்சோலைநம்பிக்கு நான்
    நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
    நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
    ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ

    என நாச்சியார் சொன்னதும்

    பிற்காலத்தே ராமானுஜாசார்யார் நூறு தடா அக்கார அடிசில் பெருமாளுக்கு சமர்ப்பித்ததுமான வ்ருத்தாந்தம் ஸ்ரீவைஷ்ணவர்கள் சொல்லிக்கேட்டாலேயே பக்தி பாவம் ததும்ப இருக்கும். சமயப்பிணக்குகளன்றி இந்த வ்ருத்தாந்தம் பற்றியும் எழுதுமாய் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரேஷ்டர்களிடம் விக்ஞாபித்துக் கொள்கிறேன்.

  112. திருமாலடியார் கந்தர்வன் அவர்களின் கட்டுரை யை தொடர்ந்து ஒரு நெடிய விவாதம் அதிலே பங்கேற்றதில் மகிழ்ச்சி. திரு கந்தர்வன் இன்னும் தொடர்ந்து சங்க இலக்கியம் பற்றி கட்டுரை எழுதவேண்டுகிறேன்.
    சமயப் பிணக்கு என்பது இன்றைய சூழ் நிலையில் வேண்டாம் என்று பெரியோர் பலரும் எழுதியுள்ளீர்கள். எனது வணக்கத்திற்குரிய மலர்மன்னன், முனைவர் அய்யா மற்றும் பெரியவர் க்ருஷ்ண்குமார் மற்றும் அன்பர்கள் கதிரவன். உங்களோடு முழுமையாக 100% உடன் படுகின்றேன்.
    வைதீகர்கள் வைதீகரல்லாதோர், வைணவர்கள் மற்றும் சைவர்கள், சித்தாந்திகள் வேதாந்திகள், அத்வைதிகள் மற்றும் த்வைதிகள் எனப் பலத்தரப்புகள் கொண்டதே நமது தர்மம். பல வழிபாட்டு நெறிகளும் சித்தாந்தங்களும் நம் தாயகமாம் புண்ணிய பூமியில் செழித்து வாழவேண்டும்.
    ஆபிராகாமியம் போல் ஒரே நூல், ஓரே தூதுவர், ஒரே கடவுள் என்ற நிலை நமக்கு ஏற்புடையது அல்ல. ஏக இறைவன் என்ற கருது மட்டுமே நம்முள் வைதீகருக்கு உண்டு. இறைவழிபாடு இன்றியே விடுதலை சாத்தியம் என்ற ஜைனரும் பவுத்தரும் நம்மவரே. குலதெய்வ வழிபாடுகளும், ஊர்தெய்வ வ்ழிபாடுகளும் நம்மவையே. இதுவே எனது நிலைப்பாடு.
    இதை எல்லோறும் ஏற்க சொல்லவில்லை. நமது தர்மத்தின் பன்முகத்தன்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
    சமய் அறிஞர்களை அணுகி விவாதிக்கவேண்டும் அவ்வளவே.
    அடியேனைப் பொறுத்தவரையில்
    வைதீக சைவம் எனது சமயம் வேதாந்தம் சித்தாந்தம் எனது் தத்துவம். அதன் வழி நித்தியமாக சிவ வழிபாடு செய்தாலும் குல தெய்வ வழிபாடும், திருமால் வழிபாடும் செய்கின்றேன். எனது செல் பேசியில் மீனாட்சி கல்யாணக் கோலத்தில் அம்மையப்பரோடு அழகரான பெருமாள் எப்போதும் காண்கிறேன். என் தந்தைவழியில் மூன்று தலைமுறைக்கு மேலே சிவ நாமங்கள் பெயர்களாயும் தாய்வழியிலே அனைத்தும் திருமாலின் திருப்பெயர்கள் அமைந்தது கண்டு ஆச்சரியம் தான். எனது தாய்வழிப்பாட்டனார் ஒரு முத்திரைவைக்கப்பெற்ற தாசர்.ஆகவே திருமாலை போற்றுவது மட்டுமே இயலும்.

  113. திருப்புகழ் அன்பர் திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, தக்கள் திருமுகம் இங்குக் காணப் பெற்றமிக்குப் பெரிதும் மகிழ்கின்றேன். அடியேனும், ‘உனது காவிய நூலாராய்வேன் இடர்படாதருள் வாழ்வே நீயே அருள்வாயே’ என்றும் ‘சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகரார்வம் ஈ’ என்றும் நாள்தோறும் குமார பரமேசுவரரை இறைஞ்சும் தொண்டன். தாங்கள் தங்கள் மறுமொழிய்ல் காட்டிய திருப்புகழை என் மறுமொழியில் மேற்கோள் காட்டியுள்ளேன்.

    புராணம் பற்றி நான் எழுதியன குறித்து விளக்கம் கேட்டிருந்தீர்கள். அதனைப் பலரும் அறிவது முறையே. மணிவாசகப் பெருமான் தம்முடைய திருவாசகத்தில் அகச் சான்றாகத் தம்மைப் பாண்டிய மன்னன் பெருந்திரவியத்தைக் கொடுத்துக் குதிரை வாங்கக் கொற்கைக்கு அனுப்பியதையும் அவழியில் திருப்பெருந்துறையில் சிவபெருமான் அந்தணனாக வந்து ஆட்கொண்டதையும் பின் மதுரைமன்னன் சினந்து ஒறுத்ததையும் வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்ததையும் பெருமான் கூலியாளாகப் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டதையும் நரியைக் குதிரையாக்கியதையும் மீண்டும் குதிரையை நரியாக்கினதையும் கூறியுள்ளார்.

    பரஞ்சோதியாரின் திருவிளையாடல், வேம்பத்தூரர் பாடிய திருவிளையாடல் திருவாதவூரர்ப் புராணம் திருபெருந்துறைப் புராணம் வடமொழி ஹாலாஸ்ய மான்மியம் முதலிய புராணங்கள் நடந்த உண்மை நிகழ்ச்சியினைக் கற்பனை வளத்துடன் பாடியுள்ளன். அடிப்படை நிகழ்ச்சிகள் இவற்றில் ஒருபடித்தாக இருப்பினும் கவிஞனின் கற்பனை வளத்தால் பல வேறுபாடுகள் இவற்றிடையே காணப் பெறுகின்றன. இன்ன புராணம் கூற்வதுதான் உண்மையில் நிகழ்ந்தது எனத் தீர்மானித்தல் ஆகாது.

    மணிவாசகர் காலத்தால் ஏனைய சைவசமயாச்சாரியர் மூவருக்கும் முந்தியவர். ஆத்லால். அவர்காலத்தில் வழங்கிய பல வரலாறுகளையும் கதைகளையும் கீர்த்தித் திருவகவல் என்னும் பகுதியில் கூறுகின்றார். பெயரளவிலேயே அவை அறிய வருகின்றன. அக்கதை அல்லது வரலாறு இன்னதெனத் தெளிவாக அறியக்கூடவில்லை.

    அவற்றுள் ஒன்று,”கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும், மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் ” என்பது. கேவேடர் – செம்படவர். கெளிறு ஒருவகை மீன்.

    இவ்வரியைப் பரஞ்சோதியார் ஒரு கதையாக ஆக்கிக் கொண்டார். சிவபிரான் அம்பிகைக்கு ஆகமம் போதித்தார் என்றும் அதனை பராக்குடை மனத்துடன் அம்பிகை கேட்டாரென்றும், அதனால் சினமுற்ற இறைவன் அம்மையைப் பரதவ்ர் குலத்தில் பிறக்கச் சபித்தார் என்றும், அம்மையின் மேல் அன்புடைப் பிள்ளைகள் கந்தனும் விநாயகனும் இந்த ஆகமநூல்தானே எம்மை அம்மியிடமிருந்து பிரித்தன என்று அவற்றைக் கிழித்துக் கடலில் எறிந்தனர் என்றும் அப்பிள்ளைகளை படிக்கும் இடத்தில் வரவிட்ட் நந்திதேவரை சுறாமீனாகுமாறும் சபித்தார் என்றும் இப்புராணம் கூறும்
    இக்கதை வலியுறுத்த வந்த கருத்து இறைவன் நூலைப் பராக்கறக் கற்க வேண்டும் என்பதுதான். இதற்குச் சிவனுடன் பிரிக்கமுடியாத அனன்னிய தாதான்மிய சம்பந்த முடைய சத்தியைத் தனியே ஒரு பெண்ணாகப் பிரித்தும் சிவத்தின் மாகேசுர மூர்த்தங்களான அறுமுகச் சிவனையும் மாமுகத்தனையும் தனி மானுடர்போலப் பிரித்தும் அவர்களைச் சிவன் சபித்தனன் என்றும் கதைத்து அப்பின்னணியில் தாம் கூற வந்த கருத்தைப் பரஞ்சோதியார் வலிறுத்தினார். இது கதையே அன்றி வரலாறு அன்று. இதுபிரமாணமாகாது.

    ஸ்காந்தபுராணம் வீரமாஹேந்திரகாண்டம் “தஸ்யதேஹேஸ்முத்பதிம் யாந்த்யண்டாநிபுநர்லயம்” என்று கூறுகின்றது. குமாரபரமேசுரன் சிவத்தினின்றும் பிரிக்கப்படா வொப்புயர்வில் பரம்பொருள் என்று சாத்திரங்களும் தோத்திரங்களும் கூற இப்புராணம், “அருவரை நெஞ்சு போழ்ந்த வள்ளிலை வடிவேற் செங்கை – முருகனை வணிகர் தம்மின் மூங்கையா கென்றான்” என்று சாபத்தினுட்படுத்தப் பட்ட ஓரான்மா எனக் கூறுகின்றது. இவைபோன்ற கதைகளே விருகாசுரன் என்னும் பஸ்மாசுரனுக்குப் பயந்து ஒருசெடியினுள் சிவனொளித்துக் கொண்டனன்; திருமழிசையாரது காலின் நகக்கணழலாற் சிவன் துரத்தப்பட்டனன் என்னும் வைணவப் புத்தக அசப்பியக் கதைகள் தோன்றக் காரண்மாயின.

    வைணவப் புத்தக அசப்பியக் கதைகளைச் சைவர்கள் புறந்தள்ளுவது போன்றே சைவபுராணங்களில் உள்ள் இக்கதைகளின் சாரங்களை மட்டும் கொண்டு சக்கைகளைப் புறந்தள்ளுவர்.

    திருவிளையாடற்புராணத்தில் இங்குக் காட்டப் பட்டவை போன்ற கதைகளைச் சைவர்கள் பொருட்படுத்தாத போதிலும் இப்புராணம் சைவர்களுக்கு முக்கியமானதொரு புராணமே யாகும்.
    .

  114. //விவிலியத்தில் சில நல்ல விஷயங்கள் இருக்கலாம். அதற்காக ‘இதைத் தான் அதுவும் சொல்கிறது’ என்று கூறுவது தவறாகும். நம் இந்து நண்பர்களும் இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.//

    திரு கந்தர்வன், என்னுடைய மதிப்பில் தாங்கள் மேலும் உயர்ந்துள்ளீர்கள். போப்பின் பாராட்டால் மணிவாசகர் அடைந்த நிலையை நான் அறிந்துள்ளமையால் இந்த எச்சரிக்கையின் உயர்வை நன்கு மதிக்கின்றேன்.

  115. பெரியவர் மலர்மன்னன் அய்யா அவர்களுக்கு,

    இந்தச் சிறியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    நீங்கள் என்கிட்டே மன்னிப்புன்னுல்லாம் சொல்லாம இருக்கிறது என்னை திமிர் கொள்ளாமல் என் நிலையில் வைத்திருக்கும், உங்கள் அனுபவம், அறிவு, ஆற்றல் இவை அனைத்துக்கும் மேலாக நீங்கள் இந்த நாட்டுக்கும் பாரம்பரியம் மிக்க பண்பாட்டுக்கும் ஆற்றிய ஆற்றி வரும் தொண்டு இவை எல்லாம் கும்பிடத் தக்கவை.

    எனது ஆதங்கம், நீங்களெல்லாம் தெருவில் இறங்கி வேலை பார்த்து பாதுகாத்ததை சிலர் ஏ.சி. அறையில் இருந்துகொண்டு எதை எதையோ யோசிக்காமல் எழுதி பாழ் படுத்துவதைக் கண்டு வந்த ஆதங்கம்தான்.

    மாரியாத்தாவை யாரோ ஏதொ எழுதிவிட்டார்கள் என்றெல்லாம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதில் எனக்கு ஆசையில்லை. யாரும் எந்த வேதத்திலிருந்தும் சர்டிபிகேட் கொடுத்து மாரியாத்தாவைக் கடவுள் என்று சொல்லும் நிலையில் மாரியாத்தா இல்லை என்பதை நான் இங்கே இருக்கறவங்களுக்கு உணர்த்தியே ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன் அவ்வளவுதான்.

    நம்ம கேடுகாலம், நம்ம பண்டிதர்கள் தங்களது படித்த அறிவைக் காட்டும் அளவுக்கு பக்கத்திலிருக்கும் இன்னொரு தமிழ் ஹிந்துவைப் பத்தி யோசிக்கவே மாட்டேங்கிறாங்க. வழக்கமா கோவம் கண்ணை மறைக்கும் அப்படிம்பாங்க, வித்தியாசமா, அறிவு அவங்க கண்ணை மறைக்குது!!! “வேதம் நான் படிச்சிருக்கேன், இதுக்குப் பதிலை நான் வேதத்திலிருந்து சொல்லியே ஆகணும்”, அப்பிடின்னு ஒரு உந்துதல் இருக்கு, என்ன பண்றது? அட பக்கத்துலே இருக்கறவனுக்குப் பாஷை புரியாதே அப்பிடின்னு எண்ணம் வரமாட்டேங்குது.

    இவங்க இங்க வாதத்துலே வென்னுடுவாங்க. வாழ்க்கையிலே???? என்ன மாதிரி இருக்கரவங்கள்ளே பல பேரு இது வேணாண்டா , நமக்குப் புரியாத விஷயம், நம்மளை மதிக்காத இடம், ‘நாம கும்பிடற சாமிய விட அவங்க கும்பிடற சாமி ஒசந்ததுன்னா நம்ம விட அவங்க ஒசந்தவுங்க’ன்னு திருப்பித் திருப்பிச் சொல்லிக் காட்டறாங்க, நாம ஒதுங்கிடுவோம்னு ஒதுங்கிப் போயிடுவாங்க.

    அப்புறம் நீங்க தெருத்தெருவா இறங்கி அவங்க கிட்டே போய் கீதையிலே ஒசந்தவன் தாழ்த்தி எல்லாம் சொல்லல, அப்பிடின்னு சொல்லி அவங்கள்ள யார் திரும்பரான்களோ அப்படித் திரும்பறவன்களக் கூட்டி வரணும். ஆனா இங்கே வேதாளம் முருங்க மரத்த விட்டு இறங்காதே? எது எதுக்கோ வேதத்தக்காட்டி வாதம் செய்றவங்க, நான் கேட்டேனேன்னு சால்ஜாப்புதானே சொல்றாங்க. நீங்க ஒப்புக்கிற மாதிரி எல்லா சாமியும் ஒண்ணுதான்னு ஒப்புக்குவாங்களா? மாட்டாங்க. ஏன்னா அவங்க படிச்சவங்க, வேதம் சம்ஸ்கிருத அல்லாம் படிச்சவங்க.

    மொதல்ல ஒசந்த மனிதர் ‘சங்கு சக்கரம்’ வைப்பார், வைத்து மோட்சம் போவார், என்று சொன்னவர், நான் அது பற்றி கேட்டதும், இப்போ ‘தான் திருமண் இடரதில்லே’ன்னு சொன்னா அதை என்னன்னு சொல்றது? இப்பவும் தான் சொல்றதுதான் சரி என்கிற எண்ணம்தானே? அதாவது தான் கும்பிடற சாமிதான் பெருசு, பெரிய சாமி யாருன்னு கூட உனக்குத் தெரியல என்ற எண்ணம்தானே? நம்ம மதத்தைக் காப்பாத்தணும்னா, தாய் மதத்துக்குத்
    திரும்ப வைக்கறது மாதிரியே, இங்க இருக்கறவங்களையும் கூட இருக்கற சக ஹிந்துவோட உணர்வுகளை மதிக்கக் கத்துக் குடுக்கணும், சும்மா சும்மா வேதம சொல்லுதுன்னு சொல்லாம மனிதம் என்ன சொல்லுதுன்னு பாக்கணும். எனக்குத் தமிழ் மட்டும்தான் புரியும்னா, என்கிட்டே தமிழில்தானே பேசணும்? நீ சும்மா சும்மா சம்ஸ்க்ருதப் பாட்டப் போட்டு சொல்றதெல்லாம தப்புன்னு சொல்லலாமா? வேதம் ஒசத்திதான், ஆனால் அதவிட ஒசத்தி மனிதம்.
    மத்தவன் மனசை நோகடிச்சிட்டு பொழுதுக்கும் வேதம் ஓதி மோட்சம் போயுடுவேன்னா அத யாராவது சரிம்பான்களா ? நான் சொல்றதுல ஏதாவது தப்புன்னா மலர்மன்னன் அய்யா சொன்னா மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.

  116. பெரியவர் மலர்மன்னன் அய்யா அவர்களுக்கு,

    இந்தச் சிறியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    நீங்கள் என்கிட்டே மன்னிப்புன்னுல்லாம் சொல்லாம இருக்கிறது என்னை திமிர் கொள்ளாமல் என் நிலையில் வைத்திருக்கும், உங்கள் அனுபவம், அறிவு, ஆற்றல் இவை அனைத்துக்கும் மேலாக நீங்கள் இந்த நாட்டுக்கும் பாரம்பரியம் மிக்க பண்பாட்டுக்கும் ஆற்றிய ஆற்றி வரும் தொண்டு இவை எல்லாம் கும்பிடத் தக்கவை.

    எனது ஆதங்கம், நீங்களெல்லாம் தெருவில் இறங்கி வேலை பார்த்து பாதுகாத்ததை சிலர் ஏ.சி. அறையில் இருந்துகொண்டு எதை எதையோ யோசிக்காமல் எழுதி பாழ் படுத்துவதைக் கண்டு வந்த ஆதங்கம்தான்.

    மாரியாத்தாவை யாரோ ஏதொ எழுதிவிட்டார்கள் என்றெல்லாம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதில் எனக்கு ஆசையில்லை. யாரும் எந்த வேதத்திலிருந்தும் சர்டிபிகேட் கொடுத்து மாரியாத்தாவைக் கடவுள் என்று சொல்லும் நிலையில் மாரியாத்தா இல்லை என்பதை நான் இங்கே இருக்கறவங்களுக்கு உணர்த்தியே ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன் அவ்வளவுதான்.

    நம்ம கேடுகாலம், நம்ம பண்டிதர்கள் தங்களது படித்த அறிவைக் காட்டும் அளவுக்கு பக்கத்திலிருக்கும் இன்னொரு தமிழ் ஹிந்துவைப் பத்தி யோசிக்கவே மாட்டேங்கிறாங்க. வழக்கமா கோவம் கண்ணை மறைக்கும் அப்படிம்பாங்க, வித்தியாசமா, அறிவு அவங்க கண்ணை மறைக்குது!!! “வேதம் நான் படிச்சிருக்கேன், இதுக்குப் பதிலை நான் வேதத்திலிருந்து சொல்லியே ஆகணும்”, அப்பிடின்னு ஒரு உந்துதல் இருக்கு, என்ன பண்றது? அட பக்கத்துலே இருக்கறவனுக்குப் பாஷை புரியாதே அப்பிடின்னு எண்ணம் வரமாட்டேங்குது.

    இவங்க இங்க வாதத்துலே வென்னுடுவாங்க. வாழ்க்கையிலே???? என்ன மாதிரி இருக்கரவங்கள்ளே பல பேரு இது வேணாண்டா , நமக்குப் புரியாத விஷயம், நம்மளை மதிக்காத இடம், ‘நாம கும்பிடற சாமிய விட அவங்க கும்பிடற சாமி ஒசந்ததுன்னா நம்ம விட அவங்க ஒசந்தவுங்க’ன்னு திருப்பித் திருப்பிச் சொல்லிக் காட்டறாங்க, நாம ஒதுங்கிடுவோம்னு ஒதுங்கிப் போயிடுவாங்க.

    அப்புறம் நீங்க தெருத்தெருவா இறங்கி அவங்க கிட்டே போய் கீதையிலே ஒசந்தவன் தாழ்த்தி எல்லாம் சொல்லல, அப்பிடின்னு சொல்லி அவங்கள்ள யார் திரும்பரான்களோ அப்படித் திரும்பறவன்களக் கூட்டி வரணும். ஆனா இங்கே வேதாளம் முருங்க மரத்த விட்டு இறங்காதே? எது எதுக்கோ வேதத்தக்காட்டி வாதம் செய்றவங்க, நான் கேட்டேனேன்னு சால்ஜாப்புதானே சொல்றாங்க. நீங்க ஒப்புக்கிற மாதிரி எல்லா சாமியும் ஒண்ணுதான்னு ஒப்புக்குவாங்களா? மாட்டாங்க. ஏன்னா அவங்க படிச்சவங்க, வேதம் சம்ஸ்கிருத அல்லாம் படிச்சவங்க.

    மொதல்ல ஒசந்த மனிதர் ‘சங்கு சக்கரம்’ வைப்பார், வைத்து மோட்சம் போவார், என்று சொன்னவர், நான் அது பற்றி கேட்டதும், இப்போ ‘தான் திருமண் இடரதில்லே’ன்னு சொன்னா அதை என்னன்னு சொல்றது? இப்பவும் தான் சொல்றதுதான் சரி என்கிற எண்ணம்தானே? அதாவது தான் கும்பிடற சாமிதான் பெருசு, பெரிய சாமி யாருன்னு கூட உனக்குத் தெரியல என்ற எண்ணம்தானே? நம்ம மதத்தைக் காப்பாத்தணும்னா, தாய் மதத்துக்குத்
    திரும்ப வைக்கறது மாதிரியே, இங்க இருக்கறவங்களையும் கூட இருக்கற சக ஹிந்துவோட உணர்வுகளை மதிக்கக் கத்துக் குடுக்கணும், சும்மா சும்மா வேதம சொல்லுதுன்னு சொல்லாம மனிதம் என்ன சொல்லுதுன்னு பாக்கணும். எனக்குத் தமிழ் மட்டும்தான் புரியும்னா, என்கிட்டே தமிழில்தானே பேசணும்? சும்மா சும்மா சம்ஸ்க்ருதப் பாட்டப் போட்டு நீ சொல்றதெல்லாம தப்புன்னு சொல்லலாமா? வேதம் ஒசத்திதான், ஆனால் அதவிட ஒசத்தி மனிதம்.
    மத்தவன் மனசை நோகடிச்சிட்டு பொழுதுக்கும் வேதம் ஓதி மோட்சம் போயுடுவேன்னா அத யாராவது சரிம்பான்களா ? நான் சொல்றதுல ஏதாவது தப்புன்னா மலர்மன்னன் அய்யா சொன்னா மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.

  117. திரு அஞ்சன் குமார்

    //
    அஞ்சன்குமார்
    17 August 2011 at 7:41 am
    கந்தர்வன், சாரங்,

    சமஸ்கிருதம் தெரியாத இந்தத் தமிழ் ஹிந்துவுக்கு மதித்து பதில் தந்ததற்கு நன்றி.
    //
    ஏன் இப்படி நினைக்கிறீர்கள். ரெண்டு வார்த்தை சமஸ்க்ரிதம் தெரிந்து விட்டால் நான் பெரிய ஆளா – நான் மதித்து பதில் எழுதியதற்கு நன்றி வேற சொல்லனுமா. நண்பரே நீங்களே உங்களை ஏன் தாழ்த்திக் கொள்ளுகிறீர்கள். நீங்கள் கேள்வி கேட்டால் பதில் எழுதக் கூடாது என்று கூட மனிதர்கள் இருக்கிறார்களா?

    தயவு செய்து இப்படி பரஸ்பர வித்யாசம் பார்க்காதீர்கள்.

    சமஸ்க்ரிதம் ஒன்றும் எட்டாக் கனி அல்ல. அது ஒரு சாமான்யமான சரளமான பாஷை தான். அதில் பேசுவது வெகு சுலபமே.

    ஜெயமோகன் ராஜ ராஜ சோழனை பற்றி எழுதிய கட்டுரையில் – சோழர் காலத்தில் எல்லா தரப்பு மக்களுக்கும் சமஸ்க்ரிதமும் தமிழும் கற்றுத் தரப்பட்டது என்பதற்கு சான்று இருக்கு என்கிறார்.

  118. சகோதரர் கந்தர்வன் அவர்களே, என்னை தவறாக என்ன வேண்டாம்.! என் மதத்தை சேர்ந்த போதகர்கள் செய்யும் செயல்களை நான் நன்றாக அறிவேன். ஏசுவையும் ஆழ்வார்களையும், நான் சம்பந்த படுத்தவில்லை. இதுவும் அதுவும் ஒன்று என்று கூற வரவில்லை.

    இயேசு என்ற ஒருவர் பிறந்தார். இறைவனை பற்றி உபதேசித்தார் ! இது உண்மை!. அனால், அதன் பிறகு இயேசுவின் பெயரால், உலகம் முழுதும் செய்த அநியாயங்களுக்கு, நான் வக்காலத்து வாங்க வரமாட்டேன்.

    இயேசு எவரை தந்தை என்றாரோ, அவரை பற்றி ஆழ்வார் பாசுரங்கள் மூலம் நான் மேலும் தெரிந்துகொள்ள போகிறேன். இதைதான் நான் சொல்ல வந்தேன்.

    ஆழ்வாருக்கு காரணம் இயேசு, வள்ளுவருக்கு காரணம் இயேசு என்று, இயேசுவே, ஆண்டாளுக்கு , தமிழ் சொல்லி கொடுத்தார் என்ற நரியின் ஓலம் எல்லாம் எனக்கு தெரியாது!

    விவிலியமும் அல் குரானும் , இறைவனின் செய்திகளை சொல்கின்றன . அதற்காக ஒருகாலும் அவைகள், வேதங்களுக்கு ஈடாகாது.
    உண்மையான நேர்மையான மனிதன், தன் மத பற்றை தூர எறிந்துவிட்டு , ஆராய்ச்சி செய்தால், கண்டிப்பாக ஒரு உண்மை புலப்படும்.

    தவறாக பேசியிருந்தால் மன்னியுங்கள். மிண்டும் உங்களுக்கு நன்றி!

  119. திரு அஞ்சன குமார் அவர்களுக்கு வேதத்தினை விட மனிதம் உயர்ந்தது. ஏன் எனில் அந்த வேதம் கண்ட அறிவர்கள் மனிதர்களின் ஆன்மீக உயர்வுக்கு அதனை போதித்தார்கள். வேதம் அன்று மட்டுமல என்றும் மகான்களால் காணப்படத்தக்கதே. நமது நாயன்மார்கள், ஆழ்வார்கள், மற்றும் பாரத தேசமுழுதும் உதித்த பரம் பொருளைப் பாடிப் பரவி சொன்னவை வேதமொழிகளே. சீக்கிய பெருமக்கள் வேதமெனக்கொண்டாடும் மக்களின் மொழியில் உள்ள ஆதிகிரந்தம் அப்படிப்பட்டதே. திராவிட வேதம் என்று தேவாரமும் நாலாயிரதிவ்ய பிரபந்தமும் போற்றப்படுவது அதனால் தான்.

    மாரியம்மன் வழிபாடு தென்னகத்தில் பிரசித்தம். மாரியம்மன் பரசுராமரின் தாய் என்பது ஐதீகம். மாரியம்மனின் நிறம் பொன். ஆனால் கருமாரியும் உண்டு. வண்ணமாரி என்பதுதான் பண்ணாரி என கன்னடத்தில் விளங்குகிறது.
    ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று வேதம் முழங்குகிறதே ஸ்ரீ சுக்தத்தில். அதனை மாரியம்மனோடு ஒப்பு நேக்குங்கள்.

  120. திரு டேவிட் நவீந்திரன்,

    நான் உங்களைச் சந்தேகப்படவில்லை. நீங்கள் கிறித்தவப் பின்னணியிலிருந்து வருகிறீர்கள். நீங்கள் மெய்யான திருமால் பக்தராக இருந்தால் உங்களை வைஷ்ணவராக ஏற்றுக்கொள்வதில் எவருக்கும் எந்தத் தடையும் இருக்காது என்றே நினைக்கிறேன். வைணவச் சுடராழி D A Joseph போன்றவர்களை வைஷ்ணவ உலகம் பரிபூரணமாக ஏற்றது.

    // இயேசு என்ற ஒருவர் பிறந்தார். இறைவனை பற்றி உபதேசித்தார் ! இது உண்மை! //

    இப்பொழுது நான் கேட்கப்போவது உங்களைக் குறை கூறுவதற்காக அல்ல. இது தர்க்கமான கேள்வி. அதாவது logical question.

    நீங்கள் புதிய ஏற்பாட்டை முழுமனதாக ஏற்கிறீர்களா இல்லையா? ஏற்கிறீர்கள் என்றால், புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் விக்கிரக ஆராதனை செய்யக் கூடாது என்று வருகிறது.

    1 Corinthians ௧௦

    10:19 What say I then? that the idol is any thing, or that which is offered in sacrifice to idols is any thing?

    10:20 But I say, that the things which the Gentiles sacrifice, they sacrifice to devils, and not to God: and I would not that ye should have fellowship with devils.

    10:21 Ye cannot drink the cup of the Lord, and the cup of devils: ye cannot be partakers of the Lord’s table, and of the table of devils.

    ஆழ்வார்கள் முழுக்க முழுக்க அர்ச்சாவதாரத்தில் – அதாவது கோயில் கொண்டுள்ள மூர்த்திகளில் தான் ஈடுபட்டு வந்தனர். நீங்கள் ஆழ்வார்களை ஏற்றால் புதிய ஏற்பாட்டைத் தள்ள வேண்டியது தான்.

    புதிய ஏற்பாட்டை நீங்கள் (முழுவதும்) ஏற்கவில்லை என்றால், அடுத்த கேள்விக்கு வர வேண்டும்.

    இயேசு சொன்னதாகப் புதிய ஏற்பாட்டில் வருவதெல்லாம் உண்மையிலேயே அவர் சொன்னது தானா?

    Matthew:

    5:17 Think not that I am come to destroy the law, or the prophets: I am not come to destroy, but to fulfil. (an observer’s comment: In other words, there is no slightest objection to the cruelties of the Old Testament)

    8:4 And Jesus saith unto him, See thou tell no man; but go thy way, shew thyself to the priest, and offer the gift that Moses commanded, for a testimony unto them.

    இக்கேள்விக்கு பதில் ‘ஆமாம்’ என்றால் மோசே கூறியதை எல்லாம் இயேசுவும் ஆதரித்தார் என்று கொள்ள வேண்டி வரும். இதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? இருக்கிறது என்றால், Moses-இன் பத்து commandments பிரகாரம் விக்கிரக ஆராதனை புரியக் கூடாது என்று இயேசு கூறியிருக்கிறார் என்று தான் கொள்ள வேண்டி வரும்.

    இதன் படியும் ஆழ்வார்களை ஏற்பவர்கள், இயேசு கூறியிருப்பதைத் தள்ள வேண்டியது தான்.

    அப்படி நீங்கள் இயேசு கூறியவற்றை எல்லாம் பழைய ஏற்பாட்டில் திரித்துக் கூறிவிட்டனர் என்று கூறினால், எது இயேசு உண்மையிலேயே சொன்னது, எது இயேசு சொல்லவில்லை என்று நிர்ணயிக்க எந்த வழியும் இல்லை. மேலும், இயேசு என்ற ஒரு மனிதரைப் பற்றிய முக்கிய வரலாற்று ஆவணம் புதிய ஏற்பாட்டைத் தவிர வேறு கிடையாது.

    இறுதியாக, சில வாக்கியங்களைக் கவனியுங்கள்:

    Luke 14
    14:26 If any man come to me, and hate not his father, and mother, and wife, and children, and brethren, and sisters, yea, and his own life also, he cannot be my disciple.

    Matthew 10
    10:35 For I am come to set a man at variance against his father, and the daughter against her mother, and the daughter in law against her mother in law.
    10:36 And a man’s foes shall be they of his own household.
    10:37 He that loveth father or mother more than me is not worthy of me: and he that loveth son or daughter more than me is not worthy of me.

    Vishnu Purana 3.7:

    That vile wretch is no worshipper of Vishńu, who through avarice is unkind to his nearest friends and relations, to his wife, children, parents, and dependants.

    இரண்டுக்கும் வித்தியாசம் புரியும் என்று நினைக்கிறேன்.

  121. திரு டேவிட் அவர்களே,

    நான் கேட்ட கேள்விகள் நீங்கள் தங்களிடமே கேட்டுக் கொள்ள வேண்டியவை. பரவசப்பட்டு ஒரு முடிவுக்கு வருவதைக் காட்டிலும் ஆராய்ந்து வேறு முடிவுக்கு வருவதே நல்லது.

  122. திரு. மலர்மன்னன் ஐயா அவர்களுக்கு…..

    காரணம் எதுவாக இருந்தாலும் , என்னைப் போன்ற சிறியவனிடம் தங்களைப் போன்ற பெரியவர்கள் மன்னிப்பு கேட்பது தகாது…
    தங்கள் வயதிலோ, அனுபவத்திலோ,சேவையிலோ சிறு அளவு கூட இல்லாத என்னிடம் தாங்கள் வருந்துவது என்னை கூனிக்குறுக வைக்கிறது….தங்கள் மனம் புண்படும் படி ஏதேனும் எழுதியிருந்தால் மன்னிக்கவும்…………

  123. எதற்காக இது சைவ வைஷ்ணவ விவாதங்களாக மாறிக் கொண்டு இருக்கிறது.
    காத்தலும் அழித்தலும் அதனதன் முழுப்பரிமாணம் கொண்டு பார்க்கப்பட வேண்டும். இப்படி விவாதிப்பது வருத்தம் தருகிறது.

    பரசுராமர் விஷ்ணு அவதாரம். அவர் சிவ பக்தர். ராமாயணத்தில் ஸ்ரீ ராமர் சிவ தனுசை மீட்டி தான் சீதையை மணக்கிறார். பரசுராமரை எதிர் கொள்ளும் போது அவருக்கான மரியாதையை செலுத்துகிறார்.
    சிவ பக்தனான ராவணனை கொன்ற பாவத்துக்கு சிவ பூஜை செய்கிறார். ஏன் ஸ்ரீ ராமர் சிவ பூஜை செய்ய வேண்டும்?

    பாவங்களை அழித்தல் என்று வரும் போது சிவனும் வாழ்தல் என்று வரும் போது திருமாலும் என்று அழகாக சொல்லப்படும் போது இப்படி உயர்வு தாழ்வு சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

  124. சகோதரர் கந்தர்வன் அவர்களே, பழைய ஏற்பாடோ, அல்லது புதிய ஏற்பாடோ, … எல்லாவற்றிலும் அதிகம் இடைசெருகல் உள்ளது என்று ஒரு கிருஸ்துவ பெரியவரே என்னிடம் கூறினார். சிறுவயது முதல் எனக்கு என் மதத்தில் மீது பற்று இல்லை. எதோ எப்போதாவது தேவாலயம் செல்வேன். அனால், இயேசு என்ற ஒரு மகான் வாழ்ந்ததை நான் நம்புகிறேன்.

    அப்படி நம்புவதால், உடனே, நான் 100 சதவிகிதம் கிருஸ்துவன் என்று அர்தம் இல்லை. என்னை பொருத்தவரை, இயேசு சொன்னதை , பிற்காலத்தில் வந்தவர்கள், நெறைய மாற்றம் செய்து உள்ளார்கள். மறுபடியும் சொல்கிறேன். இயேசு என்பவர் உண்மை. அனால், அவரின் போதனை என்று கூறப்படும் பைபளில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை.

    என் வாழ்நாளில், தேவாலயம் சென்றதை விட , கோவிலுக்கு சென்றதுதான் அதிகம்.பைபிள் படித்ததை விட, மகாபாரதம் படித்ததுதான் அதிகம்.

    பைபளில் விக்கிரக வழிபாடு கண்டிக்கபடுகிறது என்றால், இங்கு நான் வசிக்கும் ஊரில் தேவாலயத்தில் இயேசுவே சுவரில் விக்ரகமாகதான் உள்ளார். இதை மட்டும் கிருஸ்தவர்கள் ஏன் வழிபடுகிறார்கள்? இந்த கேள்வி 15 வயதிலே நான் கேட்டுவிட்டேன். இன்னும் நிறைவான பதில் வரவில்லை.

    எதோ எப்படியோ, ஹிந்து மதத்தில் விக்ரக வழிபாட்டின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆழ்வார்கள் ஒவ்வொரு திவ்யதேசம் சென்று அங்கு கோவில் கொண்டுள்ள மூர்த்தியை மங்களாசாசனம் செய்தார்கள் என்பதை நான் அறிவேன் .. திருமழிசை ஆழ்வாரை , அரசன் ஊரை விட்டு விரட்டியபோது , அந்த ஊரில் உள்ள பெருமாளும், ஆழ்வாரை பின் தொடர்ந்தார் என்பதை நான் அறிவேன். இவை எல்லாவற்றையும் நம்பாமலா , எனக்கு வைணவம் மீது பற்று வந்தது?

    இயேசு என்பவர் வாழ்ந்தார். அனால் , அவர்தான் இறைதூதர் . அவர் சொன்னதுதான் வேதம், அவரை மட்டும் வணங்க வேண்டும். மற்ற மதங்கள் போலி,அந்த மதத்தின் தெய்வங்கள் எல்லாம் சாத்தான்கள், என்று கூறுபவர்களை நான் வெறுக்கிறேன். பாவிகளே ! என்று தமிழ் நாட்டில் தெருவில் நின்று கூச்சல் போடுவார்கள் , என்று கேள்விபட்டேன். அந்த பைத்தியகார கூட்டத்தின் நானும் ஒருவன் என்று என்ன வேண்டாம்.

    இறுதியாக , என் தாத்தா கடைபிடித்த தர்மதிட்கு நான் திரும்ப போகிறேன்.15 வயதில் இதை செய்திருந்தால் வீட்டில் உதை விழுந்திருக்கும். இப்போது ,30 வயதில் யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது… வயது உள்ளது.! அனுபவம் உள்ளது. சிந்திக்க மூளையும் உள்ளது. ஆகவே உண்மையான நித்தியமான தருமதிட்கு திரும்ப விரும்புகிறேன்.

    இங்குள்ள பெரியவர்கள் என்னை ஆசிவதியுங்கள். நன்றி.

    .

  125. பல நாட்களுக்குப் பிறகு இன்றுதான் இத்தளத்தையும் இங்கு பலர் எழுதிய மறுமொழிகளையும் பார்த்தேன். மீண்டும் மறுமொழி எழுத பயமாக இருந்தாலும், சமரசமாக இருக்கும் என்று மதியீனத்தால் நான் எழுதிய மறுமொழி இப்படியொரு சமயச்சண்டையை உருவாக்கியதால், நான் மீண்டும் ஒரே ஒரு மறுமொழி எழுதிக்கொள்கிறேன். ஞானசாகரங்கள் வாதிடும் இந்த தளத்தில், ஞானசூநியனான நான் மறுமொழியிட்டது முதல் தவறு.
    இரண்டாவது, ஏதோ தவறாக எழுதி இப்படியொரு பூகம்பத்தைக் கிளப்பிவிட்டேன். சரி, அத்துடன் நிறுத்தியிருக்கலாம். முனைவர் அய்யா போன்ற வயதில் முதிர்ந்தவர்களை மரியாதைக் குறைவாக பேசியது மன்னிக்கமுடியாத குற்றம் என்பதை உணர்கிறேன், வருந்துகிறேன்.. ஏற்கனவே மன்னிப்பு கேட்டிருந்தாலும், மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    //இதுதான் சனாதன தருமம் என்றால் அதனைத் தலைமுழுக வேண்டியதுதான்.//
    முனைவர் அய்யா அவர்களே,
    உங்கள் வயதை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், மரியாதைக் குறைவாக பேசியது மிகப்பெரும் தவறு. உங்களுக்கு என்மேல் நிச்சயம் வருத்தம் இருக்கும். இருப்பினும், மறுமொழி எழுதவேண்டாம் என்று நினைத்த நான் உங்களின் இந்த வார்த்தைகளைப் பார்த்து திடுக்கிட்டுவிட்டேன். நீங்கள் மிகவும் படித்தவர், இப்படிப் பேசலாமா? திரு.கந்தர்வன் கூறியதை நான் ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. அவர் அப்படி நினைப்பதில் எந்த தவறுமில்லை. அதேபோல, உங்களுக்கு பிடித்த மார்கத்தையும் சமயத்தையும் சாஸ்திரங்களையும் பின்பற்றுவது உங்கள் சுதந்திரம், உரிமை. இந்து மதத்தில் அனைத்திற்கும் இடமுண்டு. நீங்கள் எழுதிய வார்த்தைகளை கிறித்தவ, இஸ்லாமிய மிஷனரிகள் பார்த்தல் என்ன நடக்கும் என்பதை யோசித்தீர்களா? இதற்காகத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தெருவில் கிடக்கும் சாணியை நாமே எடுத்து வாயில் போட்டுக்கொள்ளலாமா? சமயச்சண்டை வருவது சகஜம்தான். அதற்காக, நமது வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், திருமுறை மற்ற இலக்கியங்களையும் சிவபெருமானையும் ஒரே வாக்கியத்தில் நிராகரித்து விடுவீர்களா?? ஒரு உதாரணம் சொல்கிறேன்:- வட இந்தியாவில் வாழும் கண்யகுப்ஜா என்ற அந்தணர்கள் இராவணனை குலதெய்வமாக வழிபடுவார்களாம்! அவர்கள் இந்துக்கள் என்றால், சனாதான தர்மீக்கள் என்றால், மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ பரமேஸ்வரனை வழிபடும் நீங்கள் இந்து இல்லையா, சனாதான தர்மி இல்லையா? (கொடிய இராவணனை ஸ்ரீ மகாதேவனுடன் ஒப்பிடவில்லை, இது ஒருவிதமான தர்க்கம்).

    இந்து மதம் எனும் சனாதான தர்மம் ஒரு உணவகத்தை போன்றது. பல உணவு வகைகள் கிடைக்கும். எனக்கு இட்லி, வடை பிடிக்கும். ஆனால் தோசையோ பொங்கலோ கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லமாட்டேன். (வேத, புராண ஆகமங்களில் போற்றப்படும் அனைத்து தெய்வங்களையும் நான் ஏற்கிறேன்). ஆனால் சிக்கன் பிரியாணியோ முட்டை பரோட்டவோ கொடுத்தால் வேண்டாம் என்றுதான் சொல்வேன் (எது என்று நீங்களே அறியலாம்). அதையும் ஏற்றுகொள்ளும் இந்துக்களும் இருக்கிறார்கள், அதுவும் தவறில்லை. “எனக்கு பிடித்த உணவு வகையை மட்டுமே உண்பேன்” (புறம்தொழாமை) என்று சொல்வதிலும் தவறில்லை. அது அவரவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை, கொள்கை. நமது மதத்தில் கிடைக்கும் சுதந்திரம் வேறு எந்த மதத்திலும் கிடையாது. நான் எந்த சாஸ்திரத்தையும் முழுவதுமாக ஏற்றுக்கொள்வதில்லை (அதே சமயம் எந்த சாஸ்திரத்தையும் முழுவதுமாக நிராகரிப்பதுமில்லை), எந்த சம்பிரதாயத்தையும் முழுவதுமாக ஏற்றுக்கொள்வதுமில்லை, நிராகரிப்பதுமில்லை. நான் என்னை சைவன் என்றோ வைணவன் என்றோ சாக்தன் என்றோ வேறு எந்த சமயத்திலோ அடையாளப் படுத்திக்கொள்வதில்லை. ஏனெனில் எனக்கு அனைத்தும் வேண்டும்! நான் வேறெந்த ஒரு மதத்திலும் இருக்க முடியாது, துரத்தி விடுவார்கள். ஆனால் இந்து மதத்தில் அப்படியில்லையே!

    நான் கூறியதில் முனைவர் அய்யாவுக்கு மட்டுமல்ல, வேறு எவருக்கும் எந்த வருத்தமும் இருக்காது என்று நம்புகிறேன்.

    திரு.டேவிட் நவிந்திரன் அவர்களுக்கு, குழந்தை கண்ணன் உங்களுடன் என்றும் இருக்கட்டும்…

    அனைவருக்கும் ஜன்மாஷ்டமி மற்றும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

    அன்புடன்,
    பாலாஜி.

  126. ” “எனக்கு பிடித்த உணவு வகையை மட்டுமே உண்பேன்” (புறம்தொழாமை) என்று சொல்வதிலும் தவறில்லை. ”

    அன்புள்ள பாலாஜி,

    தங்கள் கடிதம் மிகவும் நன்றாக உள்ளது. இங்கு ஒரு விஷயத்தை மீண்டும், மீண்டும் நம்முடைய சகோதரர்களுக்கு வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன். மேற்கோளிட்ட நண்பர் பாலாஜியின் கடிதத்தின் வரிகளைப்போல ‘ “எனக்கு பிடித்த உணவு வகையை மட்டுமே உண்பேன்” (புறம்தொழாமை) என்று கூறுவதை யாரும் ஆட்சேபிக்க வில்லை.

    ஆனால், ” எனக்கு பிடித்தது மட்டுமே உணவு, மற்றவை உணவல்ல, இது மட்டுமே தெய்வம், மற்றவை மட்டம் ” என்பது தான் சண்டைகளுக்கு வழி வகுக்கும். ஆபிரகாமிய மதங்களின் மேற்படி கொள்கைகளை எதிர்க்கிற நாம், அதேபோன்ற ஒரு அழுக்கான மனப்பாங்கினை எங்கு கண்டாலும் ஒதுக்கவேண்டும்.

    புறந்தொழாமை ஒரு குற்றம் அன்று. ஆயினும், புறத்தை மட்டமாக கூறுதல் குற்றமே ஆகும். ஆபிரகாமிய மதங்கள் இந்த செயலை செய்து, பல நூறு கோடி மக்களை, கடந்த ஈராயிரம் வருடங்களில் , கொலை செய்து தங்கள் ரத்த வெறியை காட்டியிருக்கிறார்கள். ஆனால், மனித இனம் மட்டுமல்ல, உலகில் எல்லா உயிர்களும் அன்பைத்தான் விரும்புகின்றன. சில வக்கிர புத்தி, படைத்தவர்களால் தீய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, நல்லவர்கள் வாய்மூடி வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது. வன்முறை கூட்டத்தை தடுக்க முடிவதில்லை.

    இந்த விவாதத்தில், “பலராமனின் அம்சம் சிவன்” என்று ஒருவர் எழுதப் போய்த்தான் , பிறவாதோனை வணங்கும் பக்தர்கள் மனவேதனை அடைந்தனர். பழைய சைவ- வைணவ சண்டைகளை நாம் யாரும் புதுப்பிக்க கூடாது. பழைய இலக்கியங்களிலும், புராணங்களிலும் உள்ள நற்கருத்துக்கள் ஏராளம், அவற்றை மட்டும் கொள்வோம். அவற்றில் இடைச்செருகல்கள் ஏராளம் ஏற்பட்டு, ராமாயணத்தில் முன்னூறுக்கு மேல், மகாபாரதத்தில் பத்துக்கு மேல் என்று , ஒவ்வொன்றும் சிறிது சிறிது வேறுபாடுகளுடன் உள்ளன. இவற்றை பயன்படுத்தி, மிசிநரிகள் நமக்குள் மீண்டும் சண்டை மூட்ட காத்திருக்கின்றன.

    மதங்களின் பெயரால், அறியாமை பரப்பப்படக்கூடாது. அதனை செய்வதற்கு ஆபிரகாமிய மதங்கள் உள்ளன. நாம் மதங்களின் பெயரால் அன்பை மட்டுமே பரப்புவோம். ஏனெனில், அதுவே நம் சனாதன தர்மம்.

  127. //இந்த விவாதத்தில், “பலராமனின் அம்சம் சிவன்” என்று ஒருவர் எழுதப் போய்த்தான் , பிறவாதோனை வணங்கும் பக்தர்கள் மனவேதனை அடைந்தனர்.//

    கதிரவன் சார், அது நான்தான். அதற்காகத்தான் வருத்தம் தெரிவித்தேன், மன்னிப்பும் கேட்டேன். பரமேஸ்வரன் அவதாரம் எடுப்பதில்லை எனும் சைவர்களின் நம்பிக்கை எனக்குத் தெரியவில்லை. மேலும் சங்கர்ஷணன் எனும் பகவானின் பெயரைக் குறிப்பிடுவதற்கு மாறாக பலராமன் என்று எழுதிவிட்டேன். தவறெனில் திருத்திக் கொள்கிறேன்.

    ஒரு சிறு விஷயத்தில் உங்களுடன் மாறுபடுகிறேன். நீங்கள் கூறியது உண்மையே. இருப்பினும், “என் தெய்வம் மட்டுமே தெய்வம், மற்றவை அல்ல” என்று எந்த இந்துவும் (சைவர், வைணவர், சாக்தர், ஸ்மார்த்தர்) வேறு எந்த சமயத்தவரோ கூறுவதில்லை. ஏனெனில், ஒரு சில இடங்களைத் தவிர்த்து வேறெங்கும் மற்ற தெய்வங்களை மட்டமாகப் பேசுவதில்லை. சைவ புராணங்களில் ஸ்ரீ ஹரியையும் வைணவ புராணங்களில் ஸ்ரீ பரமேஸ்வரனையும் பல இடங்களில் போற்றப்பட்டுள்ளனர். மக்களுக்கு ஒரு variety தேவைப்படும் என்பதாலோ, பலதரப்பட்ட மக்கள் அவற்றைப் படிப்பாகள் என்பதாலோ என்னவோ வியாச முனிவர் பலவகைப் பட்ட புராணங்களை எழுதியுள்ளார். (இது எனது சொந்த கருத்து, தவறாகவும் இருக்கலாம்).

    பிரச்சனை புறன்தொழாமையால் அல்ல. சிவபெருமான் சைவத்திற்கு மட்டுமே சொந்தம், திருமால் வைணவத்திற்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பதால்தான். “ஏதோ அதில் அப்படி கூறப்பட்டுள்ளது. அது உண்மையோ பொய்யோ, நமக்கு ஏற்புடையதல்ல. அது நமக்கு வேண்டாம்” என்று விட்டுவிட்டு, நமக்கு பிடித்தவற்றை மட்டும் எடுத்துக்கொண்டால் பிரச்சினையே இல்லை.

    சனாதான தர்மத்தில் இருக்கும் சுதந்திரம் வேறெங்கும் காணக்கிடைக்காது. மற்ற எந்த மதத்திலும் “எனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு மற்றவற்றை நிராகரிக்கிறேன்” என்று சொன்னால் உதைதான் விழும். மதநூல் என்றால் அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இங்கு அப்படியல்ல.

    இந்து எதிரிகள் கூறுவதுபோல நமது மதத்தில் “யோசிக்காதே, சிந்திக்காதே” என்று சொல்லப்படவில்லை. மாறாக, கண்ணபிரான் முதல் ஆதி சங்கரர் வரை “உன் அறிவுக்கு ஏற்றுக்கொள்ளும் படி இருப்பதை எடுத்துக்கொள்” என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. மகாரதன் அர்ஜுனன் கூச்சப்படாமல் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக விடையளித்து அவனது சந்தேகம் தீரவில்லை என்பதை உணர்ந்து தனது விஸ்வரூபத்தைக் காட்டிய அதி அற்புதமான மார்க்கம் நமது சனாதான தர்மம்.

    இந்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொண்டால் அனைவருக்கும் நல்லது. நான் மீண்டும் மறுமொழி எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் என்னால் இப்படி நடந்து விட்டதே என்ற குற்ற உணர்ச்சியினால்தான் மீண்டும் எழுதினேன்.

    அன்புடன்,
    பாலாஜி

  128. வியாசர் எழுதிய மாபாரததில்

    வனபர்வத்தில் அர்ஜுனன் மூலமாக வியாசர் சிவ வடுவத்தில் விஷ்ணுவையும் விஷ்ணு வடிவத்தில் சிவனையும் வணங்குகிறோம், ஹரி ருத்ரனை வணங்குகிறோம்என்க் கூறுகிறார்.

    அதே போலே மாபாரததில் சாந்தி பர்வத்தில் சிவஸகச்ரனாமத்தை வியாசரே வழங்கியும் உள்ளார்.
    அதில் பீஷ்மர்
    Poorva Bhaga

    Early part
    Yudhishtra Uvacha:-
    Thwayaapagheya naamani sruthaniha jagatpathe,
    Pithamahesaaya vibhor namanyaa chakshwa sambhave., 1
    Bhabhrave viswaroopaya, mahabhagyam cha thathwatha,
    Surasura gurou deve shankaravyaktha yonaye., 2
    Yudhishtra asked:-
    Oh my dearest grandpa,
    Be pleased to tell me the various names,
    Of him who is the lord of the universe,
    Who is Shambhu with a gold coloured body,
    Whose form is of the universe,
    Who is the teacher of Asuras and devas,
    Who is the god of all devas,
    Who does all good,
    And who is the cause of the eternal basis,
    And also his fame,
    As you have heard from others.
    Bheeshma Uvacha:-

    Asakthoham gunaan vakthum maha devasya dheematha,
    Yo hi sarva gatho na cha sarvathra drusyathe., 3

    Bheeshma replied:-Incapable I am to tell about the properties,Of the great God who is very great,For he is seen everywhere but seen nowhere.

    Brahma Vishnu suresaanaam srushtaa cha prabhureva cha,
    Brahmaadaya pisachaantha yam hi deva upasathe., 4
    He is the one who created Brahma, Vishnu and other devas, He is their Lord and he is worshipped by,Brahma, devas, ghosts and others.

    https://www.hindupedia.com/en/Shiva_Sahasranamam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *