சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு (எப்.டி.ஐ) எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்புகள், நமது அரசியல் கட்சிகளின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி இருக்கின்றன. இதன்மூலமாக ‘LAW MAKERS’ என்று ஜனநாயகத்தில் பெருமையாகக் குறிப்பிடப்படும் நமது மக்கள் பிரதிநிதிகளில் பலரின் சாயம் வெளுத்திருக்கிறது; தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தரம் (ஏற்கனவே என்ன தரத்தைக் கண்டீர்கள் என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்) அதல பாதாளத்துக்கு சரிந்திருக்கிறது. ஆனால் இம்முடிவு தெரிவதற்குள் நடந்த நாடகங்கள் தான் எத்தனை, எத்தனை?

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது என்ற முடிவை அமலாக்க சென்ற ஆண்டே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயன்றது. பிரதமர் மன்மோகன் சிங், ”ஒரே வணிக முத்திரை கொண்ட நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடும், பல்வேறு வணிக முத்திரைகள் கொண்ட நிறுவனங்களில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீடும் செய்ய அனுமதி அளிக்கப்படும். இதனால் நமது நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படும்; விவசாயிகள் பலன் அடைவார்கள்’’ என்றெல்லாம் சொன்னார் (நவ. 24, 2011). இதற்கு காங்கிரஸ் தவிர்த்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ.யை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியபோது, ‘சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை மத்திய அரசு கொள்கை அடிப்படையில் அனுமதிப்பது என்றும், தத்தமது மாநிலத்தில் இதனை அனுமதிப்பது பற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைக் காட்டி கட்சிகளை சமாளிக்க காங்கிரஸ் அரசு தந்திரங்களை செய்தது.

2011 நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே எப்.டி.ஐ.க்கு ஒப்புதல் பெற்றுவிட காங்கிரஸ் முயன்றது. ஆனால், அப்போது காங்கிரஸ் பக்கம் சாதகமாகக் காற்று வீசவில்லை. கூட்டணி அரசின் முக்கிய உறுப்பினரான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக, காங்கிரஸ் கட்சியின் கனவு கலைந்தது. தவிர, கோவா, உத்தர்கண்ட், உ.பி, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற இருந்த நிலையில் சில்லறை வர்த்தகர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க அரசு தயாராகவும் இல்லை

எனினும் காங்கிரஸ் கட்சி ‘நூல்’ விட்டுப் பார்த்தது. ஆளும் தரப்பிலேயே எழுந்த கடும் எதிர்ப்பால் பிறகு பின்வாங்கியது. ‘அனைத்துக் கட்சிகளும் ஒரே புரிதலுக்கு வரும் வரை, இவ்விஷயத்தில் தனது முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக’ நாடாளுமன்றத்தில் அரசு அறிவித்தது. நாட்டின் வர்த்தகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் குறித்து சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நாடு முழுவதும் பிரசார இயக்கத்தை முன்னெடுத்ததும் அரசின் அந்தர்பல்டிக்கு காரணமாக அமைந்தது.

” அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ”தற்போது ஒரு இடைத்தேர்தலை நாங்கள் விரும்பவில்லை என்பதுதான் முடிவைத் தள்ளி வைக்க காரணம்” என்று வெளிப்படையாகவே கூறினார். அதற்கேற்ப “‘சட்டசபை தேர்தல்கள் முடிந்தவுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடன் விரிவாக விவாதித்து, அனைவரது ஒத்துழைப்புடன் சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ. கொண்டுவரப்படும்” என்று பிரதமர் மன்மோகனும் சொன்னார். அதாவது, அரசு தனது நிலையை தற்காலிகமாக மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது என்பதை அவர் பகிரங்கப்படுத்தினார்.

அதேபோல, இப்போது காங்கிரஸ் கட்சி தனக்குத் தெரிந்த அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு, எப்.டி.ஐ. விவகாரத்தில் அரசியல் சடுகுடு ஆடியிருக்கிறது. ‘அனைத்து அரசியல் கட்சிகளுடன் விவாதித்து கருத்தொற்றுமையுடன் முடிவு காணப்படும்’ என்ற மன்மோகன் சிங், இப்போது அனைத்து அரசியல் கட்சிகளையும் பிளவுபடுத்தி, எதேச்சதிகாரத்துடன் எப்.டி.ஐ. தீர்மானத்தில் அரசு ‘வெற்றி’ பெற ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு, ‘மதவாத பூச்சாண்டி’ காட்டிக்கொண்டே, காங்கிரஸ் கட்சிக்கு வால் பிடிக்கும் முலாயம், மாயாவதி கருணாநிதி கும்பல்கள் உதவி இருக்கின்றன.

2011 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மூக்கடி பட்டு ஜகா வாங்கிய காங்கிரஸ், கொல்லைப்புற வழியாக 2012 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கட்சிகளை விலை பேசியும், மிரட்டியும் ஜனநாயகத்தின் மூக்கை உடைத்திருக்கிறது. வர்த்தகர்களுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடித்த சில சுயநல அரசியல்வாதிகள் ஜகா வாங்கியதைக் கண்டு இந்திய வர்த்தக உலகம் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது. நமக்கு வாய்த்த தலைவர்களின் யோக்கியதையை நாடு இம்முறை தெள்ளத் தெளிவாகக் கண்டுகொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற லோக்சபாவில் இதுகுறித்த விவாதம் நடந்தபோது, எப்.டி.ஐ.க்கு அளித்த அனுமதியை திரும்பப் பெறுமாறு சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன. ”எப்.டி.ஐ.யை சில்லறை வர்த்தகத்தில் அனுமதித்தால் அடுத்த தேர்தலில் அது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்; பாஜகவுக்கு சாதகமாக அது அமையும்’ என்றும் கூட முலாயம் சிங் யாதவ் லோக்சபாவில் பேசினார். ”சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ.யை அனுமதித்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்று சொல்வதெல்லாம் மாயை. அதனால் 25 கோடி சிறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். சோனியா தனது பெயரில் ஏற்றுக் கொண்டிருக்கும் காந்தி என்ற பெயருக்காகவேனும் இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று அவர் உருக்கமாகவே பேசினார்.

பல்டி அடிப்பதில் சமர்த்தரான திமுக தலைவரை சொல்லவே வேண்டாம். ”எப்.டி.ஐ. விவகாரத்தில் அரசின் நிலையை திமுக ஆதரிக்கவில்லை இவ்விஷயத்தில் திமுக என்ன நிலையை எடுக்கும் என்பது சஸ்பென்ஸ்” என்றெல்லாம் கூறிய பகுத்தறிவுப் பகலவன், ‘’பாஜக வென்றுவிடக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தில் எப்.டி.ஐ.க்கு ஆதரவாக வாக்களிப்போம்” என்று குட்டிக்கரணம் அடித்தார். இதற்கு பின்புலமாக கருணாநிதிக்கு அளிக்கப்பட வாக்களிப்பு என்னவோ? கனிமொழிக்கும் ராசாவுக்குமே வெளிச்சம்!

இத்தனைக்கும் பாஜகவுடன் கூடிக் குலாவி தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்ததை தாத்தா வசதியாக மறந்துவிட்டார். அமைச்சராக இருந்த முரசொலி மாறன் படுத்த படுக்கையாக, நினைவின்றிக் கிடந்தபோதும் அவரை நீக்காமல் கூட்டணி தர்மம் காத்த பிரதமர் வாஜ்பாய்க்கு செம்மொழி கொண்டான் நல்ல நன்றிக்கடன் செலுத்தி இருக்கிறார். அதிமுக ஆதரவுடன் 1998 ல் வாஜ்பாய் அரசு அமைந்தபோது, அப்போதைய திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜெயலலிதாவின் பிடிவாதத்துக்கு சம்மதிக்காததால் தான், அவரது ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்தது. அதையும் நன்றி மறந்த கருணாநிதி மறந்துவிட்டார். எல்லாம் காலக்கொடுமை!

இவரைவிட அற்புதமான பல்டி அடித்திருக்கிறார் மாயாவதி. கருணாநிதியாவது, முதலிலேயே தனது நிலையைத் தெளிவு படுத்தினார்; தான் நன்றி கொன்றவன் தான் என்பதை ருசுப்படுத்தினார். வியாபாரிகள் நலம் எல்லாம் தனது சுயநலத்துக்கு அப்பால் தான் என்பதை அவர் சொல்லாமல் சொன்னார். மாயாவதியோ, லோக்சபாவில் ஒரு முடிவும், ராஜ்யசபாவில் ஒரு முடிவும் எடுக்கிறார்! இதே மாயாவதி பாஜக ஆதரவுடன்தான் இருமுறை உபி முதல்வரானார். இப்போது பாஜக அவருக்கு மதவாதக் கட்சியாக மாறி இருக்கிறது! தங்கள் பேரங்களை சாமர்த்தியமாக முடித்துக்கொள்ள உதவும் மதவாத பூச்சாண்டிக்கு இந்த அரசியல் தரகர்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.

”சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம்” என்று லோக்சபாவில் பேசிய பகுஜன் சமாஜ் உறுப்பினர் தாரா சிங், ‘எப்..டி.ஐ. விவகாரத்தில் மதவாத சக்திகள் பக்கம் இருப்பதா (அரசை எதிர்ப்பதா) அல்லது அவர்களை எதிர்ப்பதா (அரசை ஆதரிப்பதா) என்று மறுநாள் முடிவு செய்வதாக’ அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே, லோக்சபாவில் எப்.டி.ஐ.க்கு எதிர்ப்பு தெரிவித்து மாயாவதி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக முலாயம் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர். முதுகெலும்பற்ற திமுக அரசை ஆதரித்தது. விளைவாக, எப்.டி.ஐக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தீர்மானம் அரசால் 253- 218 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. அத்துடன் அந்நிய செலாவணி நிர்வாக சட்டம் (பெமா) குறித்த இடதுசாரிகளின் தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

லோக்சபாவில் காங்கிரஸ் வென்றாலும், ராஜ்யசபாவில் காங்கிரஸ் தரப்புக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், அங்கு எதிர்க்கட்சிகளின் தீர்மானம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு ‘அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பது’ என்று அந்தர்பல்டி அடித்து அரசைக் காப்பாற்றி இருக்கிறார் மாயாவதி. லோக்சபாவில் ஒரு வேஷம்; ராஜ்யசபாவில் ஒரு வேஷம். இவரைத் தான் நாட்டின் முக்கியமான தலித் தலைவியாக கொண்டாடுகிறார்கள். மாமேதை அம்பேத்கர் தலைமை தாங்கிய தலித் மக்களுக்கு இப்போது வாய்த்துள்ள தலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இதே முலாயமும் மாயாவதியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடுமிப்பிடி சண்டையிடுகிறார்கள். இவர்களை இன்னமும் நம்பும் உ.பி. மக்களை நினைந்தால் மிக மிக பாவமாக இருக்கிறது.

இதில் விசேஷம் என்னவென்றால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் வென்றிருந்தாலும் கூட, அரசுக்கு ஆபத்தில்லை. ஏனெனில் இது அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அல்ல. எப்.டி.ஐ. முடிவு தள்ளிப் போயிருக்கும். அவ்வளவுதான். அதற்கும் கூட காங்கிரஸ் விடவில்லை. இதை தனது கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு, நாட்டின் கௌரவத்தை அடகு வைத்திருக்கிறது காங்கிரஸ். சுதந்திரம் அடைந்தவுடனேயே, ‘காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டும்’ என்று மகாத்மா காந்தி ஏன் சொன்னார் என்பது இப்போது புரிகிறது.

இந்தக் கழிசடைகளை நம்பித் தான் சிறு வணிகர்களும் விவசாயிகளும் இருக்கிறார்கள். மதவாதம் என்று அச்சுறுத்திக்கொண்டு தங்கள் பேரங்களை முடித்துக்கொண்டு, வீராவேசமாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல நூறு கோடிகளைக் கூட்டிக்கொண்டு, கடைசி நேரத்தில் பல்டி அடித்து, அரசியல் சாகசம் செய்பவர்கள் தான் இன்று ராஜதந்திரிகள். இதைக் கண்டிக்க வேண்டிய ஊடக உலகம் மௌனம் காக்கிறது. குறைந்தபட்சம் இடதுசாரிகள் எப்.டி.ஐ.யை எதிர்ப்பதற்காகவேனும், ஊடகங்கள் நியாயமாகச் செயல்பட்டிருக்கலாம். சில பத்திரிகைகள் தவிர பெரும்பாலானவை, அரசின் வெற்றியை மெச்சுகின்றனவே ஒழிய, அது எந்த வழியில் பெறப்பட்டது என்பதைச் சொல்லவும் தயங்குகின்றன. அவையும் மதவாத பூச்சாண்டிக்கு ஆட்பட்டுவிட்டனவா?

மொத்தத்தில் நமது நாட்டின் சுயநிர்ணயமும் வர்த்தக சுதந்திரமும் காலவதியாகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக எப்.டி.ஐ. அனுமதியை அரசு நிறைவேற்றி இருப்பதில், அந்நிய நிறுவனங்களின் ‘கோடிக் கரங்கள்’ நீண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதைக் கண்டுபிடிக்க வேண்டிய மத்திய புலனாய்வுத் துறையோ, எதிர்க்கட்சிகளை வழிக்குக் கொண்டுவரப் பயன்படும் வேட்டைநாயாக மாறி இருக்கிறது. ஆக, இந்திய ஜனநாயகம் மீதான நம்பகத்தன்மை மிகவும் குலைந்துள்ள காலகட்டத்தில் நாம் வாழ்வது உறுதியாகி இருக்கிறது.

இந்த நேரத்தில் எப்.டி.ஐ.யை இறுதிவரை எதிர்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், இடதுசாரிகள், மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெயலலிதாவின் அதிமுக, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு நாடு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஏனெனில், ‘நாங்கள் அடிமைகள் அல்ல’ என்று நாடாளுமன்றத்தில் கூற 218 பேரேனும் இருந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.

இந்தத் தோல்வி தற்காலிகமானது. நாட்டை விலைபேசும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மன்றத்தில் பாடம் கற்பிக்கும் வாய்ப்பு விரைவில் வரும். அதற்கு இக்கட்சிகள் தயாராக வேண்டும். தங்களிடையிலான அரசியல் பேதங்களை மறந்து, நாட்டு நலனுக்காக இக்கட்சிகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். அதையே, தற்போதைய சில்லறை மனிதர்களின் தகிடுதத்தங்கள் நினைவுபடுத்தி இருக்கின்றன.

அரசுக்கு வெற்றியா?

சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ. க்கு அனுமதி என்ற அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்திருப்பதை அரசு வெற்றி பெற்றுவிட்டதாகக் கொள்ள முடியுமா? இக்கேள்விக்கு இல்லை என்பதே பதில்.

லோக்சபாவில் மொத்தமுள்ள 545 எம்.பி.க்களில் அரசு பெரும்பான்மை பெற வேண்டுமானால் 272 என்ற மந்திர எண்ணிக்கையைப் பெற்றே ஆக வேண்டும். சோனியா முன்னொரு முறை (1999) அந்த மந்திர எண் தன்னிடம் இருப்பதாகக் கூறிக்கொண்டு ஜனாதிபதியிடம் சென்று அவமானப்பட்டதை நாடு மறந்திருக்காது.

சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ. தொடர்பான எதிர்க்கட்சிகளின் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தபோது, எப்.டி.ஐ.யை சில கட்சிகள் எதிர்த்தபோதும், ‘பாஜகவுக்கு சாதகமாகச் செயல்பட விரும்பவில்லை’ என்று கூறி, வெளிநடப்பு செய்தன. எப்.டி.ஐ.யை எதிர்த்தபோதும், அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதைத் தவிர்க்க தீர்மானத்தை எதிர்த்து திமுக வாக்களித்தது. இது போன்ற காரணங்களால் தான் எப்.டி.ஐ.க்கு எதிரான தீர்மானம் தோற்றதே ஒழிய, இவ்விஷயத்தில் அரசு வென்றதாகக் கூற முடியாது.

இத்தீர்மானத்துக்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் 218; எதிராக (அரசுக்கு சார்பாக) விழுந்த வாக்குகள் 253. எனினும், எப்.டி.ஐ.யை எதிர்த்தவர்களின் எண்ணிக்கை 253ஐ விட அதிகம். மொத்தம் வாக்களித்த 471 பேரை மட்டும் கொண்டு, நாடாளுமன்றம் எப்.டி.ஐ.யை ஆதரித்துவிட்டதாகக் கூற முடியாது.

இதை லோக்சபாவில் நடந்த விவாதத்திலேயே (05.12.2012) எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சுட்டிக்காட்டினார். ”அவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய 8 கட்சிகளைச் சார்ந்த 22 தலைவர்களில் 14 பேர் தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். அதன்படி கணக்கிட்டால் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பவர்களின் எண்ணிக்கை 282 ஆகவும், எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை 224 ஆகவும் இருக்க வேண்டும். ஆனால், வெளிநடப்பு உள்ளிட்ட நாடகங்களால், எதிர்க்கட்சிகள் நினைத்து நடக்காது என்று எனக்குத் தெரியும்” என்றார் அவர். அதுவே யதார்த்தமான உண்மை. இந்த நிலலையில் அரசு வென்றுவிட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் ஆர்ப்பரிப்பதில் எந்தப் பொருளும் இல்லை.

ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 244 உறுப்பினர்களில் 10 நியமன உறுப்பினர்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் 94 உறுப்பினர்களுடன் சேர்த்து 104 பேர் மட்டுமே அரசு சார்பாக இருந்தனர். மாயாவதியின் திடீர் பல்டியால் (இவர் எப்.டி.ஐ.யை எதிர்ப்பவராம்!) பகுஜன் சமாஜ் கட்சியின் 15 உறுப்பினர்கள் அரசை ஆதரிக்க , முலாயமின் (இவரும் எப்.டி.ஐ.யை எதிர்ப்பவராம்!) சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்ய, ராஜ்யசபாவிலும் காங்கிரஸ் அரசியல் வெற்றி பெற்றிருக்கிறது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் எண்ணிக்கை வலுவுடன் இருந்தும் பயனில்லாமல் போனது.

ராஜ்யசபாவிலும், சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ.யை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை (சுமார் 140) அதை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை (104) விட அதிகம். ஆயினும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் ‘ஏதோ ஒரு முறையில்’ தோற்கடிக்கப்பட்டுவிட்டதால், அரசு நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறது. இது கையாலாகாதவன் பீம புஷ்டி லேஹியம் சாப்பிட்டது போலத் தான் இருக்கிறது.

11 Replies to “சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்”

  1. இது அரசின் வெற்றியல்ல இந்தியா மக்களின் தோல்வி

    சுந்தரராஜன்

  2. இந்தியாவை அழிப்பதில் மும்மரமாக உள்ளனர். ஆனால் இந்தியாவின் பலம் என்ன என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
    விதை நெல்லுக்குக் கூட அந்நியர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடுவார்கள் போல உள்ளது.
    நன்றி. வாழ்க பாரதம்!

  3. நெஞ்சு பொறுக்குதில்லையே, நெஞ்சு பொறுக்குதில்லையே
    நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
    நெஞ்சு பொறுக்குதில்லையே!

  4. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் அன்னிய சோனியா காங்கிரசு நாட்டிற்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது.அன்னை பாரதத்தின் வரலாற்றில் இது ஒரு பெரும் குற்றமாகவே கருதப்படும். இதில் ஒரு முக்கியவிடயம் முல்லா முலாயமும், கபடர் கருணாவும், மாயாவதியும் எந்த அளவுக்குப்போலியானவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர் என்பதும் நிரூபணமாகியிருக்கிறது.
    தேசிய அரசியலில் மூன்றாவது அணி என்பதே சாத்தியம் இல்லை என்ற நிலைக்கு இந்த நிகழ்வு வழிகோலியிருக்கிறது.பாரத நாட்டின் குடிமக்களில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்ப்பவர்கள் அதிகம்.
    அன்னிய முதலீடு சில்லரைவணிகத்தில் வந்துவிட்டது. இனி என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கவேண்டும். இதனை அரசியல் மாற்றத்தின் மூலம் பாஜக ஆட்சிக்கு வரவைப்பதன் மூலம் மாற்றமுடியும். அதனைவிட சமூகப்பொருளாதார இயக்கத்தின் மூலம் அன்னிய சில்லரை வணிகத்தைத் தோற்கடிக்கவேண்டும். தேசிய அளவில் ஒரு பெரும் ஸ்வதேசி இயக்கம் நடத்தப்படவேண்டும். அன்னியக் கடைகளை பகிஸ்கரிக்கும் புறக்கணிக்கும் விழிப்புணர்வு மக்களிடையே எழுந்தால் ஆங்கிலேயரைப்போல அன்னியக்கம்பெனிகளும் நாட்டைவிட்டு ஓடும் நிலைவரும். வணிகர் சங்கங்களும் தங்கள் வணிகத்தை நவீனப்படுத்துதல், சேவையின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்துதல், தொழில் நுட்பத்தின் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுதல் மூலமாக இந்த அன்னியத்திருடர்களை ஓட ஓடவிரட்டவேண்டும்.
    ஓங்குக ஸ்வதேசி விழிப்புணர்வு! வீழ்க விதேசிய மோகம்!
    சிவஸ்ரீ

  5. திரு.சேக்கிழான்,

    சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவிற்கு இலாபமா?நஷ்டமா?
    என்ற விவாதத்தில் நீங்கள் இறங்காமல், அரசியல் ரீதியாக இப்பிரச்சினையை
    அனுகியுள்ளீர்கள். நானும் அரசியல் ரீதியாக மறுமொழி அளிக்கிறேன்.

    முதலில் ஒரு தன்னிலை விளக்கம். நான் சில்லரை வர்த்தகத்தில் மட்டுமல்லாது,
    பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டை
    ஆதரிக்கிறேன்.

    ஜப்பானுக்கும் சீனாவுக்கும் (அமேரிக்காவிற்கு செல்ல முடியவில்லை) சென்று,
    தொழில் அதிபர்களை குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு வருகிறாரே ஒரு முதல்வர்,
    அவரை ஆதரிப்பவன் நான்

    வருடக்கணக்காக விவாதம் செய்தாகி விட்டது. 25 கோடி மக்களின் வாழ்வு
    நாசம்தான் என்று முடிவு செய்துவிட்டது ஒரு கூட்டம். நாசக்கார
    வணிகத்தரகர்களை (எழுத்தாளர் ஜெயமோகன் இவர்களை Mafia என்று
    அழைக்கிறார்.) கொஞ்சம் கூட கருணையில்லாமல் அடக்கி ஒடுக்க,
    விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இலாபத்தின் பங்கு அதிகரிக்க வேண்டும்
    என்கிறது ஒரு கூட்டம். நான் 2வது கூட்டத்தில் இருக்கிறேன்.

    சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். இந்தியாவில் ஜாதி, மதம், மொழி, இனம் என்று
    பல்வகை பிரிவுகளை கைக்குள் போட்டுக்கொண்டுதான் அரசியல் செய்தாக
    வேண்டும். இதைத்தாண்டி பலர் அதிகம் நோக்காத இன்னொரு பிரிவு
    தற்காலத்தில் உருவாகியுள்ளது. நகர, கிராம பிரிவுதான் அது. 1991க்கு பிறகான
    நவீன இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கலினால் இலாபமடைந்த பல
    கோடி யுவ,யுவதிகள் இன்று நகரங்களில்தான் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 20000
    சிறிய மற்றும் பெரிய நகரங்களில் பல கோடி மக்கள் இன்று நடுத்தர, உயர்நடுத்தர
    பொருளாதார நிலைகளில் வசிக்கின்றனர். மேலும் கீழ்நடுத்தர நிலையில்
    உள்ளோரும், மேல்நிலைக்கு வர படிப்பு, நவீன தொழில்சார் பயிற்சி என்று
    முயற்சிக்கின்றனர்.

    பா.ஜ.க என்ற கட்சிக்கு ஆதரவு பலம் எங்கு என்ற கேள்வி கேட்டால் விடை
    சுவாரசியமாக இருக்கும். பா.ஜ.கவின் ஆதரவு தளம் கிராமங்களில் கிட்டத்தட்ட
    இல்லை என்றே கூறி விடலாம். நகரங்களில்தான் ஆதரவு அதிகம். தேசப்பற்று,
    போலி மதச்சார்பின்மைக்கான எதிர்ப்பு, இந்தியா முன்னேற வேண்டும் என்ற துடிப்பு
    போன்றவற்றை உடைய யுவ, யுவதிகள் நகரங்களில் பல கோடி பேர் உள்ளனர்.
    1991க்கு பிறகான இராமர் கோயில் விவகாரத்தினால் ஒருபுறம் கவரப்பட்டவர்கள்
    பொருளாதார நிலையிலும் மேம்படும் வாய்ப்பும் கைகூடிவர, பா.ஜ.கவுக்கு ஆதரவு
    தளம் பன்மடங்கு பெருகியது.

    நடுவில் காங்கிரஸ் கட்சியை கொஞ்சம் கவனிக்கலாம். 2009ல் காங்கிரஸ் அடைந்த
    வெற்றியில் பெரும் பங்கு நகரங்களில்தான் ஏற்பட்டது. அதாவது,
    பா.ஜ.கவிடமிருந்து காங்கிரஸ் ஆதரவை மீட்டுக் கொண்டது. ஆனால் டோங்கிரி
    மானிய திட்டங்களை தீட்டுவதிலேயே 3 வருடங்களை கழித்து விட்டது. ஆகவே
    நகர மக்களின் ஆதரவை இழந்தது மட்டுமல்லாமல் ஊழல்களிலும் சிக்கி
    திணறுகிறது.

    சரி, பா.ஜ.கவிற்கு ஆதரவோ நகரங்களில்தான் அதிகம். நகரங்களில் வாழும் யுவ,
    யுவதிகளின் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றார்போல் தொழில் அபிவிருத்தி,
    உயர்கல்வி, நகர கட்டுமானம் என்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதை
    விட்டு, இடதுசாரிகளின் ஊசிப்போன விவசாயிகள், தொழிலாளர்கள், அமேரிக்க
    எதிர்ப்பு என்ற செல்லரித்துப்போன வார்த்தைகளை இன்றைய பா.ஜ.க
    கைக்கொண்டுள்ளது.

    இந்திய-அமேரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தது, தற்பொழுதைய அந்நிய
    நேரடி முதலீட்டை எதிர்ப்பது என்று இன்றைய யுவ, யுவதிகளின் கனவுகளை
    சர்வநாசம் செய்ய அவதரிக்க வந்ததைப் போன்று பா.ஜ.க செயல்படுகிறது.

    (1) நான் ஆதரிக்கும் பா.ஜ.கவின் முதல்வர், பிரதமராகும் பட்சத்தில், இன்றைய
    அமேரிக்க எதிர்ப்பு பூச்சாண்டியெல்லாம் ஒன்றும் இல்லாததாகிவிடும். மொத்தமாக
    வெள்ளை தொழிலதிபர்களை அலேக்காக தூக்கிக் கொண்டு வந்துவிடுவார்.
    ஹிந்துத்துவா அமைப்புகளில் சுதேசி இயக்க சித்தாந்தத்தை அனுசரிப்பவர்கள்
    அமேரிக்காவை எதிர்த்துக் கொண்டு குய்யோ-முய்யோ என்று கதறிக்கொண்டு
    வாழ்ந்து விட்டு போகட்டும். மற்றவர்கள் அடக்கி வாசிப்பது நல்லது.

    ஏனெனில், பா.ஜ.க ஆட்சிக்கு வரும்பட்சத்தில், பொருளாதார தாராளமயமாக்கல்
    இதைவிட சூப்பர் டீலக்ஸ் வேகத்தில் நடக்கவே செய்யும்.(திரு.வாஜ்பாய்
    ஆட்சியைப் போன்று!) இந்திய-அமேரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதே
    தவிர, இன்னும் செயல்படுத்தப்பட வில்லை. அதுவும் செயல்படுத்தப்படும்.

    (2)சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்பது முடிஞ்சு போச்சு; மேட்டர்
    ஓவர். நாங்கள் வென்று விட்டோம். ஒன்றரை வருடத்தில் மும்பையிலும்,
    டில்லியிலும், எனதருமை அமேரிக்க நண்பர்களான வால்மார்ட் கூட்டாளிகள்
    பெரும் கடைகளை துவக்கப்போவதாக அறிவித்து விட்டார்கள். மற்ற கம்பெனிகளும்
    வந்து விடும். நாசக்கார வணிகத்தரகர்கள் நாசமாகப்போகட்டும். சில வருடங்கள்
    கழித்து ஒன்றும் நடக்காதது போல தமிழ்நாடு, ஒரிஸ்ஸா, பீகார் போன்ற
    மாநிலத்தின் பெரும் நகரங்களிலும் அமேரிக்க கடைகள் வந்து விடும். சுபமஸ்து.

    வணிகத்தரகர்கள் ஒழிக;வியாபாரம் ஓங்குக.

    (3)இந்த வார துக்ளக்கில், குஜராத் தேர்தலைப் பற்றின கட்டுரை ஒன்றில் ஒரு
    கிறிஸ்தவர் திரு. மோடியை ஆதரிப்பதாக கூறுகிறார். இன்று கிரிக்கெட் வீரரான
    திரு.இர்ஃபான் பதான் (ஒரு முஸ்லீம்) திரு. மோடியை ஆதரிப்பதாக கூறுகிறார்.
    ஜாதி, மத பேதமெல்லாம் நகரங்களில் குறைந்து கொண்டு வருகிறது (இல்லை என்று
    கூற வில்லை).

    முதலில் பணம். பிறகுதான் மதம்.

  6. Traitors led by Manmohan and ably assisted by Karunanidhi,Mulayam,Mayavati,sharad pawar,Lalu Prasad , Abdullah are destroying the Nation by mortgaging to the new ‘ West India Company’

    Every citizen has to wake up to this treachery and defeat these mosnsters in the next elections.

    A strong Swadeshi movement has to be started.

    People should boycott the MNC stores even if they are opened against their resistance.

  7. அன்புள்ள நண்பர் பாலாஜிக்கு,

    சில்லறை வர்த்தகம் மட்டுமல்ல அனைத்து விஷயங்களிலும் அந்நிய முதலீட்டை ஆதரிப்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். நீங்கள் சொல்வது போலவே, அது சரியா என்ற விவாதத்துக்கே நான் வரவில்லை. எனது கேள்வி, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான தீர்மானம் எந்த முறையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது? அதன் பின்னியில் புதைந்துள்ள சதிகள் எத்தனை? என்பது பற்றித் தான்.

    சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டின் விளைவுகள் குறித்து இதே தளத்தில் நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அது தனிக் கட்டுரை. எனது கேள்வி, எந்த ஒரு தார்மிக நெறிகளும் இன்றி செயல்படும் நமது அரசியல் கட்சிகளும் நமது அரசியல் தன்மையும் சரியானவையா என்பதே. எந்த ஒரு செயலிலும் வழிமுறை தவறாக இருந்தால் முடிவும் தவறாகவே இருக்கும். அதே போல நோக்கம் சரியானதாக இருந்தால் வழிமுறையும் முடிவும் சரியாகவே அமையும், இது மறுக்க இயலாத உண்மை. அந்த அடிப்படையிலும், சில்லறை மனிதர்களின் தரம் இங்கு பல்லிளித்திருக்கிறது. அது தான் வேதனை.

    இங்கு பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியின் ஆதரவுத் தளங்கள் யார் என்பது கேள்வியல்ல. அதற்காக, பிற நாடகக் கட்சிகளை விலை பேசி நாடாளுமன்றத்தை கேலிக்குரியாக்கியதை எவ்வாறு நியாயப்படுத்துவது? நாளை பாஜக ஆட்சிக்கு வந்தாலும் அன்னிய முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும் என்ற யூகங்களை பிரசாரம் செய்வதால் நிச்சயம் நாட்டிற்கு லாபமில்லை.

    இப்போதே, இந்தியாவில் அனுமதி பெற வால்மார்ட் ரூ. 125 கோடி செலவு செய்ததாக வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. இதற்கு உதவியவர்கள் அமெரிக்க எம்பிக்கள் தான் என்பது, அந்நாட்டு பத்திரிகைகளே வெளியிட்டுள்ள தகவல். அந்தப் பணம் இந்தியாவில் யாருக்கு வந்து சேர்ந்தது என்று ஆராய, விசாரணையை நமது அரசே செய்ய உள்ளது (பாலுக்கு பூனையை காவல் வைத்த கதை தான். வேறென்ன சொல்வது?) வெளியே தெரிந்த பணம் இவ்வளவு. தெரியாத கோடிகள் எவ்வளவோ, தந்தவர்களுக்கும் வாங்கியவர்களின் பினாமிகளுக்கும் மட்டுமே தெரிந்த சிதம்பர ரகசியம் அது. இப்படி எந்தக் கழிசடைகளோ அன்னியப் பணத்தை பல்லாயிரம் கோடிகளில் அள்ளவா நாம் ஜனநாயகம் என்ற பெயரில், சுதந்திரம் என்ற பெயரில், ஓர் ஆட்சியை நமக்கு நாமே நடத்திக் கொண்டிருக்கிறோம்?

    ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய குற்றச்சாட்டான நிதி இழப்பை சரிக்கட்ட போலி ஏலம் நடத்தி முடித்தாயிற்று. அன்னிய முதலீட்டின் ஆபத்தை சரிக்கட்ட நாடாளுமன்றத்தை சரிக்கட்டியாகிவிட்டது. காங்கிரஸ் இயக்குநர்களுக்குத் தான் இந்த அபத்த நாடகத்தின் அடுத்த காட்சிகள் தெரியும், கரவொலி எழுப்பி கல்லாப் பெட்டியை நிரப்பும் ஊடகங்கள் தயாராக உள்ளவரை, இந்த நாடகங்கள் தொடரும்.

    நீங்கள் மிகவும் புகழும் மோடிக்கு அமெரிக்க விசா மறுப்பதாக (அவர் இதுவரை அதற்கு விண்ணப்பிக்கவே இல்லையென்பது தனிக்கதை) குஜராத் தேர்தல் சமயத்தில் அமெரிக்க எம்பிக்கள் கோரிக்கை வைப்பதும், அதன்படி அமெரிக்க அரசு ஆணை பிறப்பிப்பதும் எத்தனை துல்லியமான திட்டமிட்ட நாடகங்கள் என்று பாருங்கள். அப்போது தெரியும், அமெரிக்காவின் பித்தலாட்டமும், இந்திய பித்தலாட்டக்காரர்களுக்கு உதவத் துடிக்கும் அமெரிக்க அழுகுனித் தனமும்.

    அமெரிக்காவைப் பொறுத்த வரை, மோடிக்கு விசா மறுக்க கோரி அந்நாட்டு எம்பிக்கள் திரள்வதும், இந்தியாவில் நேரடி அன்னிய முதலீட்டை ஊக்குவிக்க அதே எம்பிக்கள் உதவி புரிவதும் அனுமதிக்கப்படும் நாடகங்கள். இந்த இரண்டு காட்சிகளிலேயே அமெரிக்காவின் யோக்கியதை வெளிப்படுகிறது. அந்த அமெரிக்காவை நீங்கள் புகழ்வதைப் பற்றி நான் என்ன சொல்வது?

    ‘விநாச காலே விபரீத புத்தி’- இது நமது முன்னோரின் பழமொழி. இதில் உள்ள எச்சரிக்கையை எளிதாகப் புறந்தள்ள முடியாது.

    -சேக்கிழான்

  8. 1.Wallmart and other supermarkets are in spcific areas in a conglomeration called Malls.People in small villages clled cities counties etc are entirely dependant on what is called Pop and Mom stores.Most of them do not have imported cheap articlesWallmart and others cater to urban population and those have transport to reach the MallsCities which could be compared our district hqrs. are not served by these but by local entrpreneurs.The problem is India does not have good roads tohave access to the business clusters,not every family has transport, three when these MNC go for whole purchase from the producers those Pop and Mom stores (small traders who cater to lcal needs)wll be without suppliers ad ultimatrlu disaappear,It is fraught with more problems and benefit only theuppermiddleclass. Thiruvengadam

  9. அன்னிய முதலீடு மற்றும் அமெரிக்க ஆதிக்கம் ஆகியவை பாரதனாட்டிற்கு நன்மையே செய்யும் என்று எந்த ஒரு ஆதாரமும் அடிப்படையில்லமலும் முழங்கிவரும் திரு பாலாஜி மீண்டும் தண்டோராவைத்தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். என்னடா ஆளை இன்னும் காணவில்லை என்றுப்பார்த்தேன்.
    போதாக்குறைக்கு திரு ஜெயமோகனின் சில்லரைவணிக மாபியா என்ற வாதத்தினையும் சேர்த்துக்கொண்டார் இப்போதைக்கு. அவருக்கு சிலகேள்விகள்?
    1. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு வருவதால் இந்தியா எப்படி முன்னேறும். அந்த பாத்வே யை- ப்ராஸஸ் ஐ கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்.
    2. வேலை வாய்ப்புகள் அன்னிய முதலீட்டால் சில்லரைவணிகத்தில் உயருமா.
    3. விவசாயிகளுக்கு அன்னிய முதலீடு எப்படிப்பயனளிக்கும் என்றும் சொல்லுங்கள்.
    என்னைப்பொறுத்தவரையில் அன்னிய முதலீடு இந்திய மண்ணில் அன்னிய சோனியாவின் அரசாலும் அவர்களின் அடிவருடிகளாலும் கோடிக்கணக்கில் இலஞ்சம் பெற்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதனை நிச்சயம் இந்திய ஸ்வதேசி இயக்கம் தோற்கடிக்கும். விதேசியப்பொருள்களை பகிஷ்கரிக்கவும் மக்கள் செய்வார்கள். என்னைப்போன்ற இயற்கை விவசாயத்தினை ஆதரிப்பவர்கள் நஞ்சற்ற உணவினை விரும்புபவர்கள் விதேசிக்கடைகளுக்கு நிச்சயம் செல்லமாட்டோம். இயற்கை வழியில் விவசாயத்தினை செய்வோர் அதிகரிப்பர்.
    இதுவரையிலும் சில்லரைவணிகர்கள் அங்கங்கே நகரளவில் நெட்வொக்காக செயல் பட்டு வந்தார்கள். இனிமேல் அந்த நெட்வொர்க் விரிவடையும் புதிய தொழிழ்னுட்ப உதவியுடன். இந்தியப்பெருமுதலாளிகள் சில்லரை வியாபாரத்திற்கு வந்தபோது ஏற்பட்ட நிலமை அன்னிய பன்னாட்டுக்கம்பெனிகளுக்கும் வரும்.
    இந்த சில்லரைவணிகத்தால் பாதிக்கப்படுவோர் வருங்காலத்தில் நிச்சயம் பாரம்பரியத்திலும் ஸ்வதேசியிலும் நம்பிக்கை அற்றவர்களாகத்தான் இருக்கும்.
    சிவஸ்ரீ.

  10. திரு.சேக்கிழான் அரசியல் ரீதியாக சில தலைவர்களை விமர்சிக்கிறார். அது
    ஒருபுறம் இருக்கட்டும். நிர்வாக நடவடிக்கையின் மூலமே இந்த சட்டத்தை
    அமல்படுத்த நாட்டை ஆளும் அரசுக்கு உரிமை உண்டு. இது நன்றாகவே தெரிந்தும்,
    பா.ஜ.க உட்பட சில கட்சிகள் நாடாளுமன்ற ஓட்டெடுப்புக்கு வம்பிழுத்தன.

    நிர்வாக நடவடிக்கைகளுக்கு எல்லாம் நாடாளுமன்ற ஓட்டெடுப்பு என்ற நிலை
    வருவது எதிர்கால இந்தியாவிற்கு நல்லதல்ல. ஜனநாயகத்தில் எதிர்ப்பை
    தெரிவிக்க பல வழிமுறைகள் உள்ளன. பெரும்பாலான நகரமக்கள் இதை
    ஆதரிக்கவே செய்கின்றனர். எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக
    கூடங்குளம் அணுவுலையை மூடிவிட்டோமா என்ன? பெரும்பாலானோர்
    ஆதரிக்கின்றனர். ஆகவே அணுவுலை வரவே செய்யும். அதுபோலத்தான் இதுவும்.

    திரு.சிவஸ்ரீ.விபூதிபூஷணுக்கும் எனக்கும் நோக்கம் ஒன்றுதான். உயர்ந்ததுதான்.
    அது இந்தியா முன்னேற வேண்டும். என்ன வழிமுறைகளில் ஒரு சிறு விஷயத்தில்
    கூட ஒத்துப்போகாது.

    என் அப்பா Topaz Bladeல்தான் Shave செய்து கொள்கிறார். ஷவரத்திற்கு பின்
    எரிச்சலை குறைக்க சில நாள் படிகாரத்தை உபயோகப்படுத்துவார். பல நாள்
    எதுவுமில்லை. இந்தியா சோஷலிஸ லூசுத்தனத்தில் பயணித்த போது சுங்க வரி
    போன்றவற்றால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் யானை விலை விற்கும். நடுத்தர வர்க்கத்தில் இருந்த பெரும்பான்மையானோர் சிறு சிறு மகிழ்ச்சிகளுக்கு
    கூட அண்ணாந்துதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில கீரல்களுடன்
    அலுவலகத்துக்கு செல்வது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை.

    இந்தியாவில் Bladeஐக் குறித்த எந்த முன்னெடுப்பும் நிகழவில்லை. ஷவரத்திற்குப்
    பின்னதான எரிச்சலைக் குறைக்கவும் எதையும் கண்டுபிடிக்கவும் இல்லை.
    ஏனெனில் அந்த கால மனநிலையே அப்படித்தான். அமேரிக்காவை எதிர்க்க
    வேண்டும். சோவியத் யூனியனிடம் உண்டகட்டியை வாங்கி உண்டால் பெருமை.
    இந்தியர்களால் எல்லாம் முடியும் என்ற ஜம்பம்.

    ஆனால் நான் சம்பாதிக்க ஆரம்பித்தது 1991க்கு பின்னதான இந்தியாவில்.
    எனதருமை வெள்ளைக்கார நண்பர்கள் சுகாதாரத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ
    ஏற்கெனவே சிலவற்றை கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். ஆகவே நான் Gillette
    Mach3 Turbo Bladeஐத்தான் உபயோக்கிறேன். ஷவரத்திற்கு பின் Oldspice After Shave
    Lotionஐ பயன்படுத்துகிறேன். 20 விநாடிகளுக்கு பிறகு பனிக்கட்டியை தொட்டுக்
    கொண்டிருப்பது போன்ற உணர்வை முகம் பெறுகிறது.

    ஒன்று, இந்தியா இது போன்ற பொருட்களை கண்டுபிடிக்க வேண்டும். தரத்துடன்
    இருந்தால் பயன்படுத்த தயாராக என்னைப் போன்றவர்கள் உள்ளோம். எது எப்படி
    இருப்பினும் Topaz எங்களுக்கு வேண்டாம்.

    சிவஸ்ரீ.விபூதிபூஷண் Topaz காலத்திற்கு இந்தியாவை இட்டுச்செல்ல முனைகிறார்.
    ஆனால் நாங்கள், வெள்ளையர்களோ வேறு யாரோ, ஏற்கெனவே கண்டுபிடித்ததை
    உடனடியாக பயன்படுத்த ஆசைப்படுகிறோம். மகிழ்ச்சி வாழ்க்கையின் சின்ன
    சின்ன தருணங்களில் அடங்கியிருக்கிறது.

    எரிச்சலுடன் வாழ்ந்து கொண்டு (முக எரிச்சல், வயிற்று எரிச்சல்), அமேரிக்காவை
    எதிர்த்துக் கொண்டு, Jingoistic Patriotismஐயும் வெளிப்படுத்திக்கொண்டு வாழ்வது
    சிவஸ்ரீ.விபூதிபூஷணுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

    எரிச்சல் இல்லாமல், சுகாதாரத்துடனும், சின்ன சின்ன வாழ்க்கை தருண
    மகிழ்ச்சிகளுடனும் களித்துக் கொண்டு, நவீன வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு,
    ஏற்கெனவே உலகின் மறு புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை அவசியமில்லாமல்
    மீண்டும் கண்டுபிடிக்காமல், அதையே பயன்படுத்திக் கொண்டு, எதிர்கால
    நம்பிக்கையுடனும், கனவுகளுடனும் வாழ்வது என்னைப் போன்றவர்களுக்கு
    மகிழ்ச்சியை தருகிறது.

    சரி, விஷயத்திற்கு வருகிறேன்.
    சிவஸ்ரீ.விபூதிபூஷண் மறுமொழியை ஆரம்பிக்கும் போதே “அமேரிக்க ஆதிக்கம்”
    என்பதை என்னைப் போன்றவர்கள் முழங்குவதாக எழுதுகிறார். இது பயப்
    பூச்சாண்டிதான். இந்த அமேரிக்க ஆதிக்க வியாபார சொல்லாடல்கள் ரொம்பவும்
    பழையது. மாறிவரும் உலகில், முழுமையான அமேரிக்க ஆதிக்கம் எந்த நாட்டிலும்
    ஏற்பட முடியாது. இது அவருக்கும் தெரியும். சும்மா பூச்சாண்டி காட்டுகிறார். சில
    சுரண்டல்கள் இருக்கும். சில மிரட்டல்கள் இருக்கும். இந்தியா தனக்கு கீழான
    நிலையிலுள்ள நாடுகளை மிரட்டுகிறதே அதைப் போன்று (!).

    என்னிடம் 3 கேள்விகள் கேட்டிருக்கிறார்.
    அனைத்து கேள்விகளுக்கும் பதிலை பல நிபுணர்கள் தெளிவாக எழுதியுள்ளார்கள்.
    என்ன சொன்னாலும் அவர் ஏற்றுக் கொள்ள போவதில்லை. அது அவர் உரிமை.

    3வது கேள்விக்கு மட்டும் ஒரு உதாரணத்தை தருகிறேன். இதுவும் நிபுணர்களால்
    சுட்டிக்காட்டப்பட்டதுதான். என் சரக்கு இல்லை.

    தஞ்சாவூர் அல்லது கும்பகோணத்தின் Whole Sale சந்தையை எடுத்துக் கொள்வோம்.
    உதாரணத்திற்கு தக்காளியை எடுத்துக் கொள்வோம். தக்காளி உற்பத்தியாளர்கள்
    (விவசாயிகள்) லாரிகளில் சந்தைக்கு கொண்டு வந்து தருவார்கள். அது அடுத்த
    கட்ட வணிகர்களுக்கு விற்கப்படும். பிறகு அது வாடிக்கையாளர்களால்
    வாங்கப்பட்டு பயன்படுத்தப்படும். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

    இதில் முக்கிய கேள்வி. தக்காளிக்கான விலையை யார் நிர்ணயம் செய்கின்றனர்?
    இங்குதான் வணிகத்தரகர்களின் லீலைகள் அடங்குகிறது.

    தஞ்சாவூர் நகரத்திற்கு 950 கிலோ தக்காளி தேவைப்படுகிறது என்று வைத்துக்
    கொள்வோம். தினமும் எவ்வளவு தக்காளி சந்தையில் விற்கிறது என்பதை
    வைத்துக் கொண்டு இது முடிவு செய்யப்படும். வணிகர்களுக்கான ஒரு தரகர்
    ஒவ்வொரு நாளும் ஒரு வேலையை செய்வார். அதாவது இன்று 1000 கிலோ
    தக்காளியை கொள்முதல் செய்யலாம். 1 கிலோ தக்காளியின் விலை 10 ரூபாய்.

    முதலில் இதற்கான +veஐ பார்க்கலாம். சீசன் இல்லாத காரணத்தாலோ, வேறு
    ஏதாவது காரணத்தாலோ, மொத்தமாக 800 கிலோ தக்காளிதான் சந்தைக்கு
    வருகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே தரகர் 1 கிலோ தக்காளியின்
    விலை 12 ரூபாய் என்று நிர்ணயித்து விடுவார். இதில் தவறொன்றும் இல்லை.
    Supply குறைகிறது. Demand அதேதான். ஆகவே விலையேற்றம் தவிர்க்க
    முடியாதது.

    சரி, இப்பொழுது இன்னொரு Situation. 1200 கிலோ தக்காளி சந்தைக்கு வருகிறது
    என்று வைத்துக் கொள்வோம். ஒரு வியாபாரம் எவ்வாறு நடக்க வேண்டும்? Supply
    அதிகமாவதால், விலையை 8 ரூபாய்க்கு குறைத்து விற்க வேண்டும்? ஆனால்
    இங்குதான் வர்த்தக Mafia இந்தியாவில் நடக்கிறது. 1000 கிலோ தக்காளியை
    மட்டுமே சந்தையில் கொள்முதல் செய்வார்கள். மீதமுள்ள கொள்முதல்
    செய்யப்படாத 200 கிலோ தக்காளியை விவசாயி மீண்டும் எடுத்துச்செல்ல
    வேண்டும். அதை வேறு எங்கும் விற்க அவருக்கு இன்றைய சூழலில்
    வாய்ப்பில்லை. அழுகாமல் பதப்படுத்தி வைத்து அடுத்த நாள் விற்கவும்
    வழியில்லை. ரோடோரத்தில் கொட்டி விட்டு போகும் பரிதாப நிலையை நீங்கள்
    சர்வ சாதாரணமாக காணலாம்.

    வால்மார்ட் வந்தால் என்ன நடக்கும்? 1200 கிலோ தக்காளியையும் கொள்முதல்
    செய்து கொள்ளும். விற்காததை பதப்படுத்தி அடுத்த நாள் விற்கும். அல்லது வேறு
    ஒரு பிராந்தியத்திற்கு கொண்டு போகும். எது எப்படி இருப்பினும் விவசாயிக்கு
    இழப்பு இருக்காது.

    சரி, இந்தியாவால் இதை செய்ய முடியாதா? இது ஒரு சுவாரசியமான கேள்வி.
    இந்த நாசக்கார வணிகத்தரகு கொள்ளைக்கார கும்பலை எமர்ஜென்சியில் கூட
    ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் இது ஜாதி ரீதியாக மிகவும் வலுவான
    கூட்டம். எதிர்த்து எந்த பிராந்திய அரசியல்வாதியாலும் அரசியல் செய்ய முடியாது.
    கடந்த ஒரு தசாப்தமாக அம்பானிகள் கூட இந்த மொத்த விற்பனையில் ஈடுபட்டு
    வருகின்றனர். அவர்களால் கூட இந்த கொள்ளை கும்பலை ஒன்றும் செய்ய
    முடியவில்லை என்பதை நாம் அனைவரும் நிதானமாக கவனிக்க வேண்டும்.

    ஜாதி, மதம் என்ற ரீதியிலெல்லாம் பார்க்காமல், வர்த்தக நோக்கில் மட்டுமே
    வர்த்தகத்தை நடத்தி, அதுவும் பெரிய ஸ்கேலில் நடத்துகையில், இந்த கும்பலின்
    வலு சிறிது சிறிதாக குறையும். இதுவும் எளிதல்லதான். ஆனால் வால்மார்ட்,
    கேரிஃபோர் போன்ற பெரும் கம்பெனிகளால் தற்காலிகமாக சில
    அச்சுறுத்தல்களையும், நஷ்டத்தையும் தாங்க முடியும்.

    அட, வந்தாச்சுங்க வால்மார்ட்டும் பிற கடைகளும், என்ஜாய் பண்ண
    ரெடியாயிடுங்க!
    (சிவஸ்ரீ.விபூதிபூஷண் மட்டும் கரப்பு புழுக்கையுடன் விற்கப்படும் அண்ணாச்சி
    கடை பொருட்களை, சுதேசி கொள்கையை ஜபித்துக் கொண்டு வாங்கி மகிழட்டும்!)

  11. There is a second war monument in Kohima which says “Traveller tell them for their tomorrow we sacrificed our present”. It appears Balaji and others want to say to their descendants “We sacrificed your tomorrow for our present”. My only request to them a book”TRAVEL AS APOLITICAL ACT’ by RICK STEVES” a well known travel organiser and writer. He quotes one person’s reaction to globalization “Freedom and Liberty means to USA means freedom for them to take other people’s natural resources and liberty to use their cheap labour. “Atleast it may help the people to see the thorns in the garland of roses.

    -A.Thiruvengadam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *