தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1

அண்மையில் திரு.எம்.டி.முத்துகுமாரசுவாமி எனும் தமிழக அறிவுஜீவி தமது வலைத்தளத்தில் அன்பர் ஒருவரின் கேள்விக்கு எழுதியிருந்த ஒரு பதிலை படிக்க நேர்ந்தது. கேள்வி இதுதான்: “இந்து மதத்தின் மூல நூல்களில் (சுருதி) தீண்டாமை (untouchability) எங்குமே குறிப்பிடப்படவில்லை, அதைச் சொல்வது ஸ்மிருதி நூல்கள்தான் அவை காலத்தால் மாறக்கூடியவை என்ற கருத்து பலரால் பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?”

இதற்கு திரு.எம்.டி.முத்துகுமாரசுவாமி பின்வருமாறு பதிலளிக்கிறார்:

இந்து மூல நூல்கள் நான்கு வர்ணத்தாருக்கு அப்பாற்பட்ட இனக்குழுக்களை தன் சமூகப் பிரஜைகளாகவே கருதவில்லை; அப்படிப்பட்ட இனக்குழுக்களை சார்ந்தவர்களையே வர்ணாசிரம தர்மத்தை செயல்படுத்தியவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனக் குறிப்பிட்டு கொடும் அநீதி இழைத்து வந்தனர் என்பதற்கான பல ஆதாரங்களை மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் நாம் பார்க்கலாம்.

பின்னர் மகாபாரதத்தில் நால் வர்ணத்துக்கு அப்பால் உள்ளவர்கள் மனிதர்களாகவே கருதப்படவில்லை என்பதற்கு மூன்று ஆதாரங்கள் அளிக்கிறார். அவை ஒவ்வொன்றையும் விரிவாக காணலாம்.

(1)

அரக்கு மாளிகை சம்பவத்தில் ஒரு நிஷாத பெண்ணும் அவளுடைய ஐந்து மகன்களும் இறந்துவிடுகின்றனர். அவர்களை பாண்டவர்களே ‘தப்பிச் செல்கையில் தமக்கு பதிலாக ’ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்த தாயையும் அவளுடைய ஐந்து மகன்களையும் அரக்குமாளிகையில் தூங்க வைத்துட்டு செல்கின்றனர்’ என்கிறார் எம்.டி.முத்துகுமாரசுவாமி. பீமனால் சுமந்து செல்லப்படும் போது குந்தி அந்த பெண்ணும் ஒரு தாய்தானே என கேட்கிறாளாம், அதற்கு தர்மர் சொல்கிறாராம்: ‘தாயே கவலைப்படாதே அவர்கள் நால் வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல மிருகங்களுக்கு சமானமானவர்கள் அவர்கள் இறப்பதால் நமக்கு எந்த பாவமும் வராது.’

உண்மை:

அரக்கு மாளிகை சம்பவம் ஆதிபர்வத்தில் ஆறாவது பர்வமாக உள்ளது. அதில் பாண்டவர்கள் வேண்டுமென்றே நிஷாத சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை அவர்கள் புதல்வர்களுடன் தமக்கு பதிலாக படுக்க வைத்தனர் என எங்கும் வரவில்லை. மாறாக, தற்செயலாக அங்கு வரும் பெண் அங்கேயே நன்றாக உண்டு மது அருந்தி படுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த விருந்து அன்று பிராம்மணர்கள் உட்பட பலர் வந்து பங்கு கொள்ளும் விருந்தாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து உண்மையில் நமக்கு கிடைக்கும் சித்திரம் என்னவென்றால் ஒரு நிஷாத பெண் அரச குடும்பத்தவர் நடத்தும் விருந்தில் பங்கு கொள்ள முடிந்தது மட்டுமல்ல அவர்கள் வாழும் மாளிகையிலேயே அவள் படுத்து தூங்கவும் முடிந்திருக்கிறது என்பதுதான். அவள் தற்செயலாக (விதிவசத்தால்) அங்கு வந்து சேர்ந்தாள் என்பது மகாபாரதத்தில் இருமுறை தெள்ளத் தெளிவாக சொல்லப்படுகிறது. அவள் அப்பாவி என அவள் மரணத்தை சோகத்துடனேயே கதை சொல்லி கூறுகிறார். மேலும் முத்துகுமாரசாமி கூறும் அந்த உரையாடல் – குந்திக்கும் தர்மராஜனுக்கும்- வியாச மகாபாரதத்தில் இல்லை. இன்னும் சொன்னால் அரக்குமாளிகை சதியின் மூலகர்த்தாவான புரோசனன் எரிக்கப்பட்டானா என்பது கூட அவர்களுக்கு தெரியாது என்று யுதிஷ்டிரன் சொல்கிறான். [காண்க: பின் இணைப்பு-1]

எனவே அவர்களுக்கு இந்த நிஷாத பெண் மற்றும் அவர்கள் புதல்வர்கள் உள்ளே இருந்த விஷயமே தெரியாது என்றாகிறது. ஆக அவள் திட்டமிட்டு அங்கே படுக்க வைக்கப் பட்டாள் என்பதும் பின்னர் அவள் நால் வர்ண அமைப்பில் வராததால் அவள் மனிதராகவே கருதப்பட முடியாதவள் என்று தருமர் குந்தியும் சொன்னதாக சொல்லப்படுவதும் மூலநூலில் இல்லாதது. சுத்தமாக எம்டி முத்துகுமாரசுவாமியாலோ அல்லது வேறேதோ ஒரு மறுவாசிப்பு ஆசாமியாலோ உருவாக்கப் பட்ட பொய். முழுப் பொய்.

(2)

அடுத்த ஆதாரமாக எம்.டி.முத்துகுமாரசுவாமி சொல்வது: காண்டவ வனத்தில் காலங் காலமாக வசிக்கும் காட்டு வாசிகள், பழங்குடியினர் வன அழிவினை அனுமதிக்க முடியாது என்று வாதிடுகின்றனர். போர் மூள்கிறது. போரில் வென்ற கிருஷ்ணனும் அர்ஜுனனும் ஏராளமான பழங்குடி மக்களும் பறவைகளும் விலங்குகளும் உள்ளிருக்கவே காண்டவ வனத்தினை தீயிட்டுக் கொளுத்தி சாம்பலாக்குகின்றனர். அப்போதும் அர்ஜுனன் கேட்கிறான் – ஏராளமான மக்கள் வனத்தினுள்ளே இருக்கிறார்களே அவர்களை அழிப்பது முறையா என்று. கிருஷ்ணன் சொல்கிறான் அவர்கள்தான் நால் வர்ணத்திற்குள்ளாகவே வரமாட்டார்களே அவர்கள் மிருகத்திற்குச் சமமானவர்கள்தானே அவர்களை அழிப்பதில் என்ன தவறு என்று.

உண்மை:

காண்டவ வன எரிப்பு சம்பவம் ஆதிபர்வத்தில் 17 ஆவது நூலாக நாம் காண்கிறோம். அங்கு தக்ஷகன் என்கிற நாகன் அவன் குடும்பத்துடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை நாகர் சமுதாயம் ஒன்று அங்கிருந்ததாகவே எடுத்து கொள்ளலாம். எனில் இங்கு சொல்லப்படும் சம்பவங்களில் ஒரு சுவாரசியமான வரலாற்று மோதலும் பண்பாட்டு மோதலும் வெளிப்படுகிறது. ஸ்வேதகி எனும் அரசனின் வேத வேள்வி குறித்து அக்னி அர்ஜுனனிடம் சொல்கிறான். அந்த வேள்வியில் தொடர்ந்து நெய்யைத் தவிர வேறெதையும் உண்ணாததால் தன் உடல் ஒளி குன்றிவிட்டதாக அக்னி கவலைப்படுகிறான். இந்த தகவல் முக்கியமானது. ஏதோ ஒரு தொல்-வரலாற்றில் வேத வேள்வியில் மிருகபலி நின்றிருப்பதை இது சுட்டுவதாக இருக்கலாம். இப்போது அக்னி தனக்கு உணவாக காண்டவ வனத்தை அளிக்குமாறு கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் கேட்கிறான். ஏன் இவர்கள் இருவரின் உதவி தேவைப்படுகிறது?

இங்கும் ஒரு முக்கிய தகவல் சொல்லப்படுகிறது: காண்டவ வனம் இந்திரனால் பாதுகாக்கப்படுகிறது. ஏனெனில் இந்திரன் நாகனான தக்ஷகனின் நண்பன். ஆக இது பழங்குடியினருக்கு எதிரான வேத பண்பாட்டின் போர் அல்ல. மாறாக, வேத பண்பாட்டிலேயே வாழும் இரு சமுதாயக் குழுக்களிடையேயான போராகவே (அவ்வாறு மானுடவியல் முறையில் மட்டுமே இத்தொன்மத்தை அணுகுவதென்றால்) நாம் அணுக வேண்டும். நாகர்களும் இந்திரனும் ஒரு புறமும் நர-நாராயணர்களான பார்த்தன்-கிருஷ்ணன் மறுபுறமுமாக ஒரு போராட்டம் அங்கே நிகழ்கிறது. ஒரு கட்டத்தில் நாகர்களைக் காப்பாற்றுவதற்காக இந்திரன் தன் மகனான அர்ஜுனனையே மயக்கம் ஏற்படுத்தும் விதமாக தாக்குகிறான். இப்போரின் இறுதியாக வசுக்கள், ருத்ரர்கள், காந்தவர்கள், யட்சர்கள், பூஷன், பவன், சாவித்ரி, மருத்துகள் யமன், இந்திரன், ஸ்கந்தன் என அனைத்து வேத தெய்வங்களும் இணைந்து அர்ஜுன-கிருஷ்ணனுக்கு எதிராக காண்டவ வன தகனத்தை எதிர்த்து போரில் இறங்குகிறார்கள். [காண்க: பின் இணைப்பு -2].

எனில் இதை எப்படி காண்பது? மிக மிக தெளிவாக வேத பண்பாட்டைச் சார்ந்த ஒரு குழுவினர் இந்த காண்டவ வன தகனத்தை கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

வேத வேள்விகளில் ஏற்பட்ட மாறுதல்கள், ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படும் கிருஷ்ணனின் இந்திர பூஜை எதிர்ப்பு – இவை அனைத்தையும் இங்கு இணைத்து பார்க்கப்படும் பட்சத்தில் எம்.டி.முத்துகுமாரசாமியின் இரட்டை பார்வை எத்தனை ஆழமற்ற, சரித்திர அறிதலற்ற பார்வை என்பது விளங்கும். ஒரு பண்பாட்டு மாற்றத்தின் மோதலே இங்கே காட்டப்படுகிறது. ஏற்கனவே தாய் பண்பாட்டிலிருந்து மாற்றங்களுடன் எழும் மற்றொரு பண்பாடு அதன் நில விஸ்தீரணத்துக்காக நடத்திய போராக இதை காணலாம். ஆனால் இதற்கும் வர்ண அமைப்புக்கும் எவ்வித தொடர்பையும் காண முடியாது. அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்பதும் கிருஷ்ணன் இவர்களெல்லாம் வர்ண அமைப்பைச் சார்ந்தவர்களல்ல என சொல்லுவதுமாக கூறப்பட்டிருப்பவைக்கு வியாச பாரதத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. சொந்த கைச்சரக்கை அல்லது மறுவாசிப்பு கற்பனையை கலந்து கலப்படம் செய்திருக்கிறார் எம்.டி.முத்து குமாரசாமி. ஆக, இதுவும் பொய்.

(3)

அடுத்த ஆதாரமாக எம்.டி.முத்துக்குமாரசாமி கூறுகிறார்:கர்ணனின் இந்திராஸ்திரத்துக்கு கடோத்கஜன் மடிந்தான் என்பதை அறியும் கிருஷ்ணன் புன்னகைக்கிறான். அர்ஜுனனைக் கொல்ல கர்ணனிடம் இந்திராஸ்திரம் இல்லை என்பதால் மட்டுமல்ல உண்டாவது அந்தப் புன்னகை! போனது ஒரு காட்டுவாசி உயிர்தானே என்பதாலும் ஏற்படுகின்ற அலட்சியத்தின் வெளிப்பாடு அந்தப் புன்னகை. அதை கிருஷ்ணன் கடோத்கஜனின் மரணத்திற்கு பீமனைத் தேற்றி ஆறுதல் சொல்லும்போது ‘எதற்காக இவ்வளவு துக்கப்படுகிறாய் போனது ஒரு காட்டுவாசிதானே’ என்று வெளிப்படையாகவே சொல்கிறான். நால் வர்ண மணக் கலப்புக்குள் ‘முறையாகப்’ பிறந்த அபிமன்யுவின் மரணத்திற்கு பெரும் துக்கம் அனுஷ்டிக்கும் பாண்டவ சேனை கடோத்கஜனின் மரணத்திற்கு எந்த துக்கமும் அனுஷ்டிக்கவில்லை.

உண்மை:

உண்மையில் மகாபாரதத்தில் கடோத்கஜனின் மரணத்துக்கு பாண்டவர்கள் கண்ணீர் வடித்து துக்கம் அனுஷ்டிக்கவே செய்கிறார்கள். ஆனால் கிருஷ்ணன் மட்டும் ஆனந்தப் படுகிறான். ஏன்? அர்ஜுனனை கொல்லும், ஒரு முறை மட்டுமே பிரயோகிக்கக் கூடிய ஆயுதம் பயன்படுத்தப் பட்டு விட்டது என்பதே முதன்மையான காரணம். இரண்டாவதாக கடோத்கஜன் ஒரு அரக்கன் – வேத வேள்விகள், அந்தணர்களுக்கு எதிரானவன் என்பது. ஆனால் இதற்கும் கடோத்கஜன் ஒரு வனவாசி என்பதற்கும் தொடர்பில்லை. ஏனென்றால் ஜராசந்தன் எனும் சேதி நாட்டு அரசனையும், நிஷாத இளவரசனான ஏகலைவனையும் கடோத்கஜனுடன் இணைத்தே கிருஷ்ணன் சொல்கிறான். எனவே இது வர்ணத்துக்கோ அல்லது வனவாசி என்பதற்கோ தொடர்புடைய ஒரு விஷயமல்ல என்பது தெரிகிறது.

கர்ணன் – கடோத்கஜன் யுத்தம் (பாலித் தீவில் உள்ள சிற்பம்)

மேலும் நிஷாதர்கள் குறித்து மகாபாரதம் அளிக்கும் சித்திரமும் அவர்கள் மனிதர்களே அல்ல என்பதெல்லாம் அல்ல. இன்னும் சொன்னால் மகாபாரதத்தில் நள சரிதம் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. தமயந்தி நிஷாதர்களின் அரசனான நள மகாராஜனை தேவர்களையெல்லாம் விட சிறந்தவனாக கூறுகிறாள். தனியாகவே கூட நள-தமயந்தி சரிதம் ஹிந்துக்களுக்கு சமய முக்கியத்துவம் உடையதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. நிஷாத அரசனான நளன் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவனாகவே கூறப்படுகிறான். ஆக, ஏகலைவன் மீதான பகையும் நிஷாதர்கள் எனும் வகுப்பின் மீதான பகையாக கூற இயலாது. [காண்க: பின் – இணைப்பு-3]

ஆக, பாரதத்தின் வனவாசி சமூகங்களுக்கும் இதர சமூகங்களுக்குமான உறவு உயிர்த்துவமுடைய உறவே ஆகும். நிஷாத இளவரசனான ஏகலைவனுக்கும் யாதவர் மற்றும் பாண்டவர்களுக்கும் இடையிலான பகை அரசியல் பகை மட்டுமே ஆகும். அது மதம் சார்ந்தோ- அல்லது வர்ணாசிரம அமைப்பு சார்ந்தோ , இனம் சார்ந்தோ ஏற்பட்ட பகை அல்ல. எனில் அதே நிஷாத அரசனான நளன் அதே மகாபாரதத்தின் வன-பர்வத்தில் மிகச்சிறந்த உயர்வுடன் பேசப்படுவது எப்படி?

ராமாயணத்தில்:

அடுத்ததாக ராமாயணத்திலிருந்து எம்.டி.முத்து குமாரசுவாமி வழமையாக எல்லா முற்போக்கு அறிவுஜீவிகளும் சுட்டிக்காட்ட மறக்காத சம்பூக வதத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால், இதையும் நாம் ராமாயணம் பற்றிய முழுமைப் பார்வையுடன் இணைத்து காண வேண்டுமே அல்லாது, தனியாக பிய்த்து எடுத்து அல்ல.

சம்பூகன் ஒரு சூத்திரன் ஆவான். அவன் வேதங்களை ஓதுவதால் வேத சடங்குகளை செய்வதால் ராமனால் தண்டிக்கப்படுகிறான். மரண தண்டனை. நிச்சயமாக இது அதீதமான தண்டனையேதான். ஜனநாயக மதிப்பீட்டின் அடிப்படையில் எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்றுதான். இந்திய பொதுமனமும் இதை உணர்ந்தே வந்துள்ளது. எனவேதான் பிராம்மணனான ராவணனை ராமன் வதம் செய்ததும், பிராம்மணனான பரசுராமனின் கர்வத்தை ராமன் பங்கம் செய்ததையும் தன் அனைத்து மொழிகளிலும் விதந்தோதி வழிபடும் பாரத பண்பாடு சம்பூக வதத்தை பெரும் வீர செயலாக பரவி ஏத்தவில்லை.

ஆனால் இங்கு கேள்வி அது மட்டுமல்ல. இந்த சூத்திர வர்ணம் என்பது அல்லது சண்டாளர்கள் என்பது பிறப்படிப்படையில் அமைந்ததா என்பதே. விஷ்ணு புராணம் அளிக்கும் ராமரின் வம்சாவளி சில சுவாரசியமான தரவுகளை இத்திசையில் அளிக்கிறது:

அ) ராமனின் முன்னோர்களில் ஒருவனான புரூகுச்சன் எனும் அரசன் நாகர்களுக்காக கந்தர்வர்களுடன் போர் புரிந்தான். எனவே அவனுக்கு நாக இளவரசியான நர்மதையை நாகர்கள் திருமணம் செய்து வைத்தார்களாம். எனவே நாக வம்ச கலப்பும் ராமனின் வம்சாவளியில் இருப்பதை காண்கிறோம். இவனுக்கும் நாக இளவரசியான நர்மதைக்கும் பிறந்த திரசதஸ்யு என்பவனின் மகனான அநரண்யன் என்பவனை ராவணன் கொன்றதாக விஷ்ணுபுராணம் கூறுகிறது. இந்த ராவணன் ராமர் காலத்தவனாக இருந்திருக்க முடியாது எனினும் புராண கற்பனையில் எதுவும் சாத்தியமே.

ஆனால் இது காட்டும் ஒரு உண்மை ஏதேனும் உண்டெனில் அது இப்படியாக இருக்குமென ஊகிக்கலாம்: ராவணன் ஐதீகங்களில் இசை வல்லுனனாக காட்டப்படுவதும், நாகர்களுக்கும் கந்தர்வர்களுக்குமான மோதல் இருந்ததாக சொல்லப்படுவதும் – ராம –ராவண போரின் பின்னால் ஒரு நெடுங்காலத்திய பகையை ஊகிக்க முடிகிறது. ஆனால் நாகர் குலம் ராவணனுக்கு எதிரானதாக இருந்திருக்கிறது. எனவே நாகர்கள் பூர்வ பழங்குடிகள் என கருதினால், ராமன் அப்பூர்வ பழங்குடிகள் வம்சாவளியில் வந்தவன் என்றே கருத வேண்டி உள்ளது.

ஆனால் நாகர்களோ நாகரல்லாதவரோ இந்த மண்ணின் பழங்குடிகளே. அனைவரும் தொல் பழங்காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கு குடியேறிய மானுட குழுக்களைச் சார்ந்தவர்களே, அவர்களிடையே இருந்தது பண்பாட்டு பன்மை மட்டுமே. எனவே இந்த வரையறைகள் நெகிழ்ச்சியானவை என கருதினால் பல விஷயங்கள் சரியாகவே பொருந்துகின்றன. நாகர் – நாகரல்லாதவர் என்பது இன்று நாம் காணும் சான்றிதழ் போல கறாரான விஷயங்களல்ல. துரதிர்ஷ்டவசமாக நல்ல சமூகவியலாளர்கள் கூட இந்திய தொல் வரலாற்றையும் பழமையான சமய இலக்கியங்களையும் ஐரோப்பிய காலனிய வாதம் அளித்த இனவாத சட்டகங்கள் மூலமே அறிய முற்படுகின்றனர். இது அபத்தமான கதையாடல்களை மட்டுமே உருவாக்குகிறது.

ஆ) ராமனின் பிறிதொரு முன்னோரான சத்யவிரதன் வசிஷ்டரால் சபிக்கப்பட்டு சண்டாளனாக்கப் பட்டான். ஆனால் சண்டாளன் என ஆக்கப்பட்ட பின்னர் அவன் எஜமானனாக யாகத்தை செய்தான் என்றும் அதை விஸ்வாமித்திரர் நடத்தி வைத்தார் என்பதும் கூறப்படுகிறது. அவனது மகனே ஹரிசந்திரன். அவனும் நாடிழந்து மாயானத்தில் வேலை செய்தான். ராமனின் மற்றொரு முன்னோரான சவுதாசன் வசிஷ்டரால் 12 ஆண்டுகள் ஒதுக்கப்பட்டவனாக சபிக்கப்படுகிறான்.

இங்கு வசிஷ்டர் ராமரின் பல தலைமுறைகளில் குலகுருவாக இருப்பதாக சொல்லப்படுவதன் மூலம் வசிஷ்டர் ஒரு குறிப்பிட்ட குலக் குழு (clan) என ஊகிக்கலாம். இக்குலக்குழுவுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் அடிக்கடி மோதல் வருவதும் அப்போதெல்லாம் அரசர்கள் சூத்திரராக அல்லது சண்டாளர்களாக சபிக்கப்படுவதும் தொடர்ந்து காட்டப்படுகிறது. அரசனை சூத்திரன் அல்லது சண்டாளனாக்குவது என்பது ஒரு வலிமையான அமைப்பாக குலகுருக்கள் இயங்கி அரசதிகாரத்திலிருந்து அரசனை நீக்குவது அல்லது அவனுக்கு சடங்கு ரீதியாக சில சிறப்புகளை மறுப்பது என ஊகிக்க முடிகிறது.

ஆனால் இதிலெல்லாம் தெரிவது என்னவென்றால் ஒருவன் சூத்திரனாக்கப் படுவது அல்லது சண்டாளனாக்கப் படுவது பிறப்படிப்படையில் அல்ல. அது அந்த காலகட்டத்தில் நிலவிய ஒரு தண்டனை முறை மட்டுமே. அந்த தண்டனை அத்தண்டனைக்கு உள்ளாகியவர்களின் வம்சாவளியை பாதித்ததும் இல்லை. இவ்விதத்தில் பார்க்கும் போது சம்பூகன் பிறப்பால் அரசகுலத்தவனாகவோ அந்தணனாகவோ இருந்து தண்டனை பெற்று சூத்திரனாகியிருக்க வேண்டும் என்றும் பின்னர் அந்த தண்டனையை மீறியதால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஊகிக்க இடமிருக்கிறது. ஆனால் இந்த தண்டனையும் பாரதத்தின் பொது பண்பாடு ஏற்க மறுத்து விட்டது என்பதையும் புரிய முடிகிறது.

ஆக, ஹிந்து மூல நூல்களில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது என்பதற்கோ அல்லது வனங்களில் வாழ்ந்த சமூகங்கள் வர்ண அடிப்படையில் வெளியே ஒதுக்கப்பட்டு அவை மனிதர்களாகவே கருதப்பட வில்லை என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை.

அப்படியானால் புருஷ சூக்தம், பகவத் கீதையின் வர்ண அமைப்பு அவற்றுக்கும் மனு ஸ்மிருதி போன்ற ஸ்மிருதி இலக்கியங்கள் கூறும் சமூக அமைப்புக்குமான தொடர்பு அல்லது முரண் என்ன என்பதை அடுத்த பகுதியில் காணலாம்.

(தொடரும்)

பின் இணைப்புகள் அனைத்தும் வியாச மகாபாரதம் – கிஸாரி மோகன் கங்குலியின் ஆதார பூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்து எடுக்கப் பட்டவை.

பின் இணைப்பு -1

Mahabharata:English/ Book 1: Adi Parva /Section 150

இணைய பக்கம்: https://www.sacred-texts.com/hin/m01/m01151.htm

Vaisampayana continued, ‘Then on the occasion of an almsgiving, O king, Kunti fed on a certain night a large number of Brahmanas. There came also a number of ladies who while eating and drinking, enjoyed there as they pleased, and with Kunti’s leave returned to their respective homes. Desirous of obtaining food, there came, as though impelled by fate, to that feast, in course of her wanderings, a Nishada woman, the mother of five children, accompanied by all her sons. O king, she, and her children, intoxicated with the wine they drank, became incapable. Deprived of consciousness and more dead than alive, she with all her sons lay down in that mansion to sleep. Then when all the inmates of the house lay down to sleep, there began to blow a violent wind in the night. Bhima then set fire to the house just where Purochana was sleeping. Then the son of Pandu set fire to the door of that house of lac. Then he set fire to the mansion in several parts all around.

Mahabharata:English/ Book 1: Adi Parva /Section 152

இணைய பக்கம்: https://www.sacred-texts.com/hin/m01/m01153.htm

Meanwhile the Pandavas endued with great strength with their mother forming a company of six going out of the town of Varanavata arrived at the banks of the Ganga. They then speedily reached the opposite bank aided by the strength of the boatmen’s arms, the rapidity of the river’s current, and a favourable wind. Leaving the boat, they proceeded in the southern direction finding their way in the dark by the light of the stars. After much suffering they at last reached, O king, a dense forest.

They were then tired and thirsty; sleep was closing their eyes every moment. Then Yudhishthira, addressing Bhima endued with great energy, said, ‘What can be more painful than this? We are now in the deep woods. We know not which side is which, nor can we proceed much further. We do

not know whether that wretch Purochana hath or hath not been burnt to death. How shall we escape from these dangers unseen by others? O Bharata, taking us on thyself, proceed thou as before. Thou alone amongst us art strong and swift as the wind.’ “Thus addressed by Yudhishthira the just, the mighty Bhimasena, taking up on his body Kunti and his brothers, began to proceed with great celerity.'”

பின் இணைப்பு -2

Mahabharata:English/Book 1: Adi Parva/Section 224

இணைய பக்கம்: https://ltrc.iiit.ac.in/gwiki/index.php/Mahabharata:English/Book_1:_Adi_Parva/Section_224

‘I do not desire to eat ordinary food. Know that I am Agni! Give me that food which suiteth me. This forest of Khandava is always protected by Indra. And as it is protected by the illustrious one, I always fail to consume it. In that forest dwelleth, with his followers and family, a Naga, called Takshaka,

who is the friend of Indra. It is for him that the wielder of the thunderbolt protecteth this forest. Many other creatures also are thus protected here for the sake of Takshaka. Desiring to consume the forest I succeed not in my attempts in consequence of Indra’s prowess….’

Mahabharata:English/Book 1: Adi Parva/Section 228

இணைய பக்கம்: https://ltrc.iiit.ac.in/gwiki/index.php/Mahabharata:English/Book_1:_Adi_Parva/Section_228

Then all the illustrious dwellers in heaven went in a body unto him of a hundred sacrifices and thousand eyes, viz., their chief, that grinder of Asuras. Approaching Indra, the celestial said, ‘Why, O lord of immortals, doth Agni burn these creatures below? Hath the time come for the destruction of the world?’ “Vaisampayana continued, ‘Hearing these words of the gods, and himself beholding what Agni was doing, the slayer of Vritra set out for the protection of the forest of Khandava.

Mahabharata:English/Book 1: Adi Parva/Section 229

இணைய பக்கம்: https://ltrc.iiit.ac.in/gwiki/index.php/Mahabharata:English/Book_1:_Adi_Parva/Section_229

Beholding the fierce thunderbolt about to be hurled by their chief, the celestials all took up their respective weapons. Yama, O king, took up the death-dealing mace, and Kuvera his spiked club, and Varuna his noose and beautiful missile. And Skanda (Kartikeya) took up his long lance and stood motionless like the mountain of Meru. The Aswins stood there with resplendent plants in their hands. Dhatri stood, bow in hand, and Jaya with a thick club. Tvashtri of great strength took up in wrath, a huge mountain and Surya stood with a bright dart, and Mrityu with a battle-axe. Aryaman stalked about with a terrible bludgeon furnished with sharp spikes, and Mitra stood there with a discus sharp as a razor. And, O monarch, Pusha and Bhaga and Savitri, in wrath, rushed at Krishna and Partha with bows and scimitars in hand. And Rudras and the Vasus, the mighty Maruts and the Viswedevas and the Sadhyas, all resplendent with their own energy,–these and many other celestials, armed with various weapons rushed against those exalted of men, Krishna and Partha, for smiting them down.

பின் இணைப்பு-3

Mahabharata:English/Book 7: Drona Parva/Section 179

இணைய பக்கம்: https://www.sacred-texts.com/hin/m07/m07177.htm

Beholding Hidimva’s son slain and lying like a riven mountain, all the Pandavas became filled with grief and began to shed copious tears. Only Vasudeva filled with transports of delight,…O Arjuna, for thy good, with the aid of diverse contrivances I have slain, one after another, Jarasandha and the illustrious ruler of the Chedis and the mighty-armed Nishada of the name of Ekalavya. Other great Rakshasas having Hidimva and Kirmira and Vaka for their foremost, as also Alayudha, that grinder of hostile troops, and Ghatotkacha, that crusher of foes and warrior of fierce deeds, have all been slain.’

93 Replies to “தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1”

  1. அரவிந்தனின் இந்த பதில் என்னைப் போன்ற இந்துக்களுக்குக்கும் ஒரு திறப்பை அளிக்கிறது என்றால் மிக இல்லை. மிக நல்ல சேவை. மிக்க நன்றி. அடுத்த பகுதிகளையும் படிக்க ஆவலாய் உள்ளேன்.

  2. Mahabharata could be the real time happenings directly seen and recorded by Vedavyasa… It is evident that Vyasa himself is a character and a grand father of both Pandavas and Kauravas. You can definitely find all proper justifications in this great epic for the happenings which have been wrongly understood by the present society.

    I would suggest Tamilhindu to work on the proper translation of Mahabharata in Tamil and there by help our upcoming generation to understand our values better than what we have understood now.

    My sincere thanks for this article.

  3. அப்ப இது எந்த முகம்?:
    https://mdmuthukumaraswamy.blogspot.in/2011/09/blog-post_26.html
    கடந்த ஒன்பது ஆண்டுகளாக என் அதிகாலை என்பது சந்தியா வந்தனம், சூரிய நமஸ்காரம், ஶ்ரீருத்ரஜெபத்தினோடு கூடிய சிவ பூஜை என்பதாக இருக்கிறது. சிவாலயங்களில் நடப்பது போலவே ஶ்ரீருத்ரத்திற்கு பிறகு பஞ்சசூக்தம் சொல்லி மந்திர புஷ்பத்தோடு என் தின சிவ பூஜை நிறைவு பெறும். போதுமான நேரமில்லையென்றால் பஞ்சசூக்தத்தை விட்டுவிடுவேன். எழுத்தாளர் கி.ஆ.சச்சிதானந்தன் எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பது தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே என்ற தாயுமானவரின் வரியையும் தினசரி ஜெபத்தினோடு சேர்த்துக்கொள்ளச்சொன்னார்; சேர்த்துக்கொண்டேன். எப்பொழுதுமே சைவ உணவுதான். குடிப்பதில்லை புகைப்பதில்லை.
    ஶ்ரீருத்ரம் கிருஷ்ண யஜுர் வேதத்தின் பகுதி. சமஸ்கிருத அறிவு விருத்தியாக விருத்தியாக நான்கு வேதங்களையும் கற்றுக்கொண்டேன். கூடவே பல சமஸ்கிருத இலக்கிய இலக்கண நூல்களையும்.
    கடந்த சில வருடங்களாக மனம் ஆழமான அமைதியை அடைந்துவிட்டது.

  4. அரவிந்தா சபாஷ். தெளிவான விளக்கங்கள். நன்றி.

  5. அன்புள்ள அநீ,

    தவறுதலாக புரிந்துகொண்டோருக்கு நல்ல விளக்கம் தந்த நீவிர் பல்லாண்டு வாழ்க.

  6. ஆ… என்னே அற்புதமான ஆய்வு… பண்பாட்டு வேர்களை எடுத்துக் கொண்டு, மிகவும் நல்ல தமிழில், சீரான நடையில், மிக ஆழமான கருத்துக்களை மரியாதைக்குரிய அரவிந்தன் நீலகண்டன் பொழிந்து செல்வதைப் பார்க்கிற போது பிரமிப்பாக இருக்கிறது..

    இராவணன் பற்றி வந்தமை தொடர்பில் மட்டும் ஒன்று சொல்வேன்… இராவணனை பிராமணனாகச் சொல்லும், அதே வேளை அவன் பழங்குடி மரபில் இயக்கர் என்ற வம்சத்தைச் சேர்ந்தவனாகவும் சொல்லப்படுகிறான்… இந்த இயக்க மரபு நாகர்களைப் போலவே, பழமையான ஒரு குடி மரபாகச் சொல்லப்படுகிறது…

    இலங்கையைப் பொறுத்தவரையில், வட இலங்கையில் நாகர்களும், தென் இலங்கையில் இயக்கர்களும் வாழ்ந்து வந்ததாக குறிப்புகள் உள்ளன…

    இந்த அடிப்படையில், நீங்கள் கருதுவது போல, இராமன் நாகர்களின் வழி வந்திருக்கலாம்.. இதனால், இவர்களிடையே ஒரு பகை எப்போதும் இருந்து வந்திருக்கலாம்…

    இந்தக் கட்டுரையின் தொடர்ச்சிகளை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்..

  7. அதி அற்புதம். அ நி அவர்களே . அறிவோம் அறிவிலிகளுக்கு அறிவு செய்வோம்.
    -சூர்யா

  8. Brahmins = CEO, CIO, MD = President, Prime Minister, Chief Ministers, etc.,
    Kshathriyar = Army , Navy, Air Force, & Police Officers
    Vaisyar = IAS officers = Ministers, = Business Corporate, Business Analyst
    Soothra = Workers, Laborers = Software Developers, Testers = Govt Servants.

    எல்லாமே தொழில் சம்பந்தபட்டதே! வர்ணம் என்பதை ஒழிக்க முடியாது. அன்றும் இருந்தது, இன்றும் வேறு முறையில் இருக்கிறது. என்றும் இருக்கும். இதை தான் இந்து மதம் கூறுகிறது.

  9. புலஸ்தியர் என்ற பிராமணரின் மகனே ராவணன்…..பிராமணனாகிய ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டே ராமேஸ்வரத்தில் ராமர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்…… ராமனோ சத்திரியன் …….பிராமணரான பரசுராமரை கர்வ பங்கம் செய்தவர்…..இந்நிலையில் கழக அறிவுக்கொழுந்துகளும் , இதர ஹிந்து விரோதிகளும் , ராவணன் நம்மவன் , ராமன் ஆரியன் என்று கூறுகிறார்கள் என்றால் அவர்கள் அறிவின் விசாலம் அவ்வளவுதான் ……

    மகோதரன் என்ற ராவணனின் மந்திரியை , ராவணனுக்கு கள் இறக்கித்தந்தவன் என்றும் , [ கள் இறக்கும் தொழிலாளி எப்படி மந்திரியாக இருக்க முடியும்?அல்லது எந்த மந்திரி மரம் ஏறி கள் இறக்குவான் ? ] அவன் வழி வந்தவர்களே நாடார்கள் என்றும் , ஆகவே நாடார்கள் தமிழகத்தின் பூர்வ குடிகள் அல்ல,…இலங்கையிலிருந்து வந்தேறிகள் என்று உளறிய கால்டுவெல்லுக்கு மணிமண்டபம் அமைக்கும் முட்டாள் கும்பலிடம் தர்க்க ரீதியான நியாயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

    கர்ணன் கடோத்கஜன் மீது பிரயோகித்தது இந்திராஸ்திரம் அல்ல…..சக்தி ஆயுதம்…..ஒரு வேளை கர்ணன் சக்தி ஆயுதத்தை அர்ஜுனன் மீது பிரயோகித்திருந்தால் அதை எதிர்கொள்ளும் அஸ்திரம் அர்ஜுனனிடம் இல்லை…..ஆகவேதான் கிருஷ்ணர் அதுவரை கர்ணன் – அர்ஜுனன் நேரடி மோதல் நிகழாமல் தவிர்க்கிறார்….கடோத்கஜன் வதத்தன்று சண்டை இரவிலும் நீள்கிறது…..இரவில் அசுரர்களுக்கு பலம் அதிகமாகிவிடும் என்பதால் வேறு வழியின்றி அர்ஜுனனை கொல்ல வைத்திருந்த சக்தி ஆயுதத்தை கடோத்கஜன் மீது பிரயோகிக்க நேர்ந்தது…..அந்த ஆயுதத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த இயலும்….[ கடோத்கஜனை வீழ்த்திய பின் சக்தி ஆயுதம் பராசக்தியை சென்று அடைகிறது ] இனிமேல் அர்ஜுனன் உயிருக்கு ஆபத்தில்லை என்பதாலேயே கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைகிறார்…..

    சக்ர வியூகத்தில் இருந்து வெளியேறும் வழியை சுபத்திரைக்கு [ அப்போது வயிற்றில் இருந்த குழந்தையான அபிமன்யு கேட்டுக்கொண்டிருந்தான் ] முழுமையாக சொல்ல விடாமல் தடுத்து அழைத்து சென்றவர் கிருஷ்ணர்….இத்தனைக்கும் சுபத்திரை கிருஷ்ணரின் சகோதரி…..போரில் அரைமனதாக சண்டையிட்டுக்கொண்டிருந்த அர்ஜுனனை முழுமையாக ஈடுபட வைக்க , தன் மருமகன் அபிமன்யுவை தெரிந்தே பலியாக வைக்கிறார் கிருஷ்ணர்…..இன்று அபிமன்யுவை கொன்று விடுவார்கள் என்று தெரிந்தே அர்ஜுனனை வேறுபக்கம் [ திரிகர்த்தர்களுடன் சண்டையிட ] அழைத்துச்சென்று விடுகிறார் கிருஷ்ணர்…..

    அபிமன்யு மறைவால் துக்கம்……கடோத்கஜன் மறைவுக்கு யாரும் கவலைப்படவில்லை என்பதெல்லாம் வெறும் துவேஷப்பிரச்சாரம்…..

  10. அன்புள்ள சான்றோன் அவர்களே,

    திராவிட இயக்கத்தையும் அறிவினையும் தொடர்புபடுத்தி, தாங்கள் எழுதியதை அவ்வியக்கத்தினர் படித்தால் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வார்கள். என் இயக்கத்துக்கு படித்தவன் வேண்டாம், படிக்காதவர்கள் தான் வேண்டும் என்று அறிவித்த ஞானி அவர்களின் வெண்தாடி. அறிவு இருந்தால் அல்லவா விசாலம் அல்லது குறுகல் என்று வகைப்படுத்த முடியும். ஞான சூன்யங்களை பற்றி நாம் எப்படி வகைப்படுத்த முடியும் ? தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவரை , தங்கள் தலைவன் என்று சொல்வோருக்கு , பாவம் நீங்கள் சொல்வது உரைக்காது. எருமை மாடுகள் மீது மழை பொழிந்த கதைதான்.

  11. எம்.டி.முத்துக்குமாரசுவாமி தனது பதிலின் முதல் வரியிலேயே

    //இந்து மூல நூல்கள் நான்கு வர்ணத்தாருக்கு அப்பாற்பட்ட இனக்குழுக்களை தன் சமூகப் பிரஜைகளாகவே கருதவில்லை; அப்படிப்பட்ட இனக்குழுக்களை சார்ந்தவர்களையே வர்ணாசிரம தர்மத்தை செயல்படுத்தியவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனக் குறிப்பிட்டு கொடும் அநீதி இழைத்து வந்தனர் என்பதற்கான பல ஆதாரங்களை மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் நாம் பார்க்கலாம்//

    என்று எழுதி தனது தவறான புரிதலையும், உள்நோக்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறார்.

    நால் வருணங்களுக்கு அப்பாற்பட்ட *இனக்குழு* என்று திரும்பத் திரும்ப எழுதுவதன் மூலம் இல்லாத ஒன்றை சாமர்த்தியமாக நிறுவப் பார்க்கிறார். பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்திர என நால் வருணங்களிலும் தவறுகள் அல்லது மீறல்கள் செய்ததாக அன்று கருதப்பட்டவர்கள் பண்ணியவர்களே அதற்குத் தண்டனையாக அவரவர் வருணத்திலிருந்து விலக்கப்பட்டார்கள். அவ்வாறு தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே வருண விலக்கை அனுபவித்தனரே அன்றி அவர்கள் சந்ததிகளை அத்தண்டனை பாதிக்கவில்லை. எனவே விலக்கப்பட்டவர்கள் என்று ஒரு “இனக்குழு” எல்லாம் கிடையாது, தனிநபர்கள் மட்டுமே. இதை அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் விளக்கத்தில் இருந்து, இராமனது முன்னோர்களில் சண்டாளர்களாக விலக்கப்பட்ட அரசர்களையும் அதற்குப் பின் வந்த அவர்கள் வாரிசுகளே தொடர்ந்து க்ஷத்ரியர்களாக இருந்து நாடாண்டதையும், அவர்கள் வழியில் தோன்றிய ஸ்ரீ ராமன் தெய்வமாகவே வணங்கப்படுவதையும் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளலாம். மேலும் இந்த ராம கதையை முதன் முதலில் எழுதியவரும் நிஷாதர் தான் என்பதையும் எம்.டி.முத்துக்குமாரசுவாமி வசதியாக மறப்பதில் ஆச்சரியம் இல்லை.

    எம்.டி.எம் தொடர்ந்து எழுதுகையில்
    //யஜுர் வேதம் அத்தியாயம் 16இல் 66 சுலோகங்களுமே அன்று வேத கால சமூகத்திலிருந்த சாதியினரை வரிசைப்படுத்துகின்றன. அவற்றில் சூத்ர வர்ணத்தைத் தாண்டிய சாதியினரின் பெயர்களைக் குறிப்பதில்லை. // என்று குறுப்பிடுகிறார். குறைந்த பட்சம் இதை எழுதும் போதாவது அவர் யோசித்திருக்கவேண்டும்- ஏன் சூத்திர வர்ணத்தைத் தாண்டிய சாதிப்பெயர்கள் இடம்பெறவில்லை? என்று. ஏனென்றால் அப்படி எந்த “சாதி”யும் இந்து மூலநூல்கள் வகுக்கவே இல்லையே!. பின் எங்கிருந்து எம்.டி.எம்மிற்கு அப்பெயர்கள் ‘கிடைக்கும்’?!

    பதிவின் தலைப்பை தீண்டாமையைப் பேசுகின்றனவா இந்து *மூல நூல்கள்* என்று வைத்துவிட்டு இதிகாசங்களிலிருந்து மட்டுமே உதாரணம் காட்டியுள்ளார். அதுவும் எல்லாம் பொய்யான, இல்லாத சம்பவங்களையும், உள்ள சம்பவங்களில் இட்டுக்கட்டப்பட்ட கற்பனையான ‘மீள்வாசிப்பு’ மூலமாகவும் முயன்று தோற்றுள்ளார். இதற்கு ஸ்ருதியிலிருந்து மேற்கோள் காட்ட எல்லோரும் வழக்கமாக எடுத்துக்காட்டும் ரிக் வேதத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த வரிகளையே திரும்பவும் எடுத்துப்போட்டிருக்கிறார். மறுபடியும் கட்டுரையின் தலைப்பு *தீண்டாமையைப்* பேசுகின்றனவா இந்து மூல நூல்கள்? -என்பதை அவர் மறந்துவிட்டு புருஷ சூக்த வரிகளை எழுதியுள்ளார். அந்த வரிகளிலும் *தீண்டப்படாத வர்ணம்* என்று ஒரு பிரிவு குறிக்கப்படவில்லையே – இதுவே இந்துமூல நூல்கள் தீண்டாமை என்றொரு கருத்தையே கற்பனைகூட செய்திருக்கவில்லை என்பதற்கு சான்று. ஆம், முத்துக்குமாரசுவாமி மேற்கோள் காட்டிய வரிகளிலேயே அவர் வாதத்துக்கு நேர்-எதிரான கருத்து உள்ளது. அதையும் அவர் யோசிக்கவில்லை – இந்து தர்ம மூல நூல்களை தீண்டாமையை ஆதரிக்கும் நூல்களாகக் காட்டவேண்டிய ஆத்திரம் கண்ணை மறைத்திருக்கலாம்.

    ‘ச்ருதி’ என்பது எக்காலத்துக்கும் பொருத்தமான, மாறாத தருமங்கள் (உண்மையைப் பேசு, அறத்தின் வழி நட, அன்னையை, தந்தையை, ஆசானை, விருந்தினனை -கடவுளாக மதி…போன்றவை), ‘ஸ்ம்ருதி’ என்பது காலத்துக்குத் தக்கபடி மாற்றம் கொள்ளக்கூடிய தற்காலிகமான நியதிகள் என்னும் அடிப்படை தெளிவு கூட இல்லாமல், //வேதம் கேட்க விரும்புகிற சூத்திரன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்கிறது மனு நீதி// என்று அடுத்த ஆதாரம் காண்பிக்கிறார். மனு நீதி என்று அவர் சொல்வது ஒரு *ஸ்ம்ருதி* நூல், அது சுருதி என்று போற்றப்படும் மூல நூல் அல்ல. மறுபடியும் தனது கட்டுரையின் தலைப்பிற்குப் (-*மூல நூல்*) பொருந்தாமல் எழுதியுள்ளார். ஒருவேளை மனு நீதி என்பது சுருதியா – ஸ்ம்ருதியா என்கிற வித்தியாசம் தெரியாமல் எழுதுகிறாரோ என்று பார்த்தால், //ஸ்ருதி இந்து மூல நூல்கள் என்று பேசும்போது நாம் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள், 108 தொகுப்பட்ட உபநிடதங்கள், வேதாங்கங்கள் ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடுகிறோம் என்பதை மறந்துவிடலாகாது.// என்று அவரே தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இருந்தும் வேண்டுமென்றே மனுஸ்ம்ருதி, இதிகாசங்கள் என்று தரவு தேடி ஓடக் காரணம் -அவர் எவ்வளவு ‘தேடினாலும்’ இந்து மூல நூல்களில் *தீண்டாமையைக்* கண்டுபிடிக்க முடியாது என்பதே.

    ஸ்ம்ருதிகள் தெளிவாகவே கூறுகிறது, ‘பிறப்பால் அனைவரும் சூத்திரர்கள், செயல்களால் இருபிறப்பாளர் ஆகின்றனர், பிரம்ம ஞானத்தால் பிராமணன் ஆகின்றனர்” (ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா ஜாயதே த்விஜ: ப்ரஹ்மக்ஞானேதி ப்ராஹ்மணா ). அதாவது பிராமணராக பிறந்தததால் ஒருவன் வேதம் முதலியவற்றைக் கற்று பிரம்மஞானம் அடைவதில்லை, மாறாக யார் வேதங்களைக் கற்று உணர்ந்து பிரம்ம ஞானத்தை அடைகிறானோ அவனே பிராம்மணன் என்று அறியப்படுவான் என்று சந்தேகத்துக்கு இடமன்றி வகுக்கிறது. இன்னும் தெளிவாக, “கேவலம் ய: மனுஷ்ய: ப்ரஹ்ம ஞானம் ப்ராப்னோதி, ஸ ஏவ ப்ராஹ்மணா இதி நாம்னாத் ஞாதவான்” – எந்த மனிதன் பிரம்ம ஞானத்தை அடைகிறானோ அவன் ஒருவன் மட்டுமே பிராமணன் என்னும் பெயரால் அறியப்படுவான் என்று சொல்கிறது.

    வேத காலச் சமூகத்தில் ஒரே குடும்பத்தில் இருக்கும் அங்கத்தினர் வெவ்வேறு தொழில் புரிபவராக – வர்ணத்தினராக இருந்தார்கள். அதாவது ஒருவரின் வர்ணம் அல்லது தொழில் என்பது அவரது பிறப்பால் நிர்ணயிக்கப்படுவது இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஒரு ரிக் வேதச் செய்யுளில் அதன் ஆசிரியரான ரிஷி சொல்கிறார், “நான் புலவன், என் தந்தை மருத்துவர், என் தாய் கல்லால் தானியங்களைப் பொடி செய்பவள். பசுக்கள் வெவ்வேறு மேய்ச்சல் நிலங்களில் உணவு தேடுவதைப் போல, நாங்கள் குடும்பத்தின் வளத்திற்கும் மகிழ்ச்சிக்கும் வேண்டி வெவ்வேறு தொழில் செய்கிறோம்.” (ரிக்வேதம்: மண்டலம் 9, ஸூக்தம் 112, ரிக் 3). வேதத்தில் எந்த இடத்திலும் பிறப்பினால் சாதியும் இல்லை, ஆகவே தீண்டாமையும் இல்லை.

    இந்துக்களின் மூல நூல்களில் பிறப்பினால் வருணம் ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை, தீண்டாமை என்கிற சொல்லைக் கூட அதில் கண்டுபிடிக்க முடியாது.

    சிவனின் திருமுடியைக் காண முடியாத நான்முகன் கண்டதாக பொய் சொன்னது போல இந்து மூல நூல்களில் தீண்டாமையைக் காண முடியாத எம்.டி.எம் கண்டதாக பொய் சொல்லலாம். பரிகாரமாக ஸ்ரீ ருத்ரம் சொல்லி காலையில் சிவபூஜை செய்யலாம்.

  12. // ‘தப்பிச் செல்கையில் தமக்கு பதிலாக ’ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்த தாயையும் அவளுடைய ஐந்து மகன்களையும் அரக்குமாளிகையில் தூங்க வைத்துட்டு செல்கின்றனர்’ என்கிறார் எம்.டி.முத்துகுமாரசுவாமி. பீமனால் சுமந்து செல்லப்படும் போது குந்தி அந்த பெண்ணும் ஒரு தாய்தானே என கேட்கிறாளாம்,//

    இவ்வாறு எஸ்.எல். பைரப்பாவின் பருவம் நாவலில் படித்ததாக ஞாபகம்.

  13. எனக்கு தெரிந்து ரிஷிகளுக்கு கூட சாதி கிடையாதே. அவர்கள் கூட நான்கு வர்ணத்திற்கு உள் இல்லாதவர்கள் தானே

  14. Moral of the story – Always read the original to understand.

    (edited and published)

  15. இந்து மதத்துக்கு மூல நூல் ஏராளம். இன்னும் எதிர்காலத்திலும் புதிய நூல்கள் பிறக்கும். திரு முத்துக்குமாரசாமி அவர்கள் புரிந்துகொள்ளாமல் அரைகுறையாக வெளியிட்ட கருத்துக்கள் நமக்கு நல்ல நகைச்சுவையாக உள்ளன. இவரைப்போன்று இன்னும் எத்தனை நண்பர்களோ ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

  16. ஆழமான கருத்துக்கள்.. நல்ல விளக்கம்

  17. அன்பு சான்றோன்
    ஆண்டாண்டு காலமாக சாதி தாயை வைத்து தான் இருந்தது,இட ஒதுக்கீடு வரும் காலம் வரை
    பீஷ்மர் பட்டம் ஏற்க மறுத்து விட்டதால் அரச வாரிசுக்கு என்ன செய்வது என்று வேத வியாசர் அழைக்கப்பட்டார்
    மூத்த ராணி அவரை பார்த்து கண்களை மூடி கொண்டதால் பார்வை இல்லாத திருதராட்டினன் பிறந்தார்.
    பயத்தில் இரண்டாவது ராணி முகம் வெளுத்ததால் வெளுப்பாக பாண்டு
    கண் இல்லாத வாரிசு என்பதால் இரண்டாவது வாய்ப்பு.இருந்தும் பயம் போகாத ராணி தனக்கு பதில் தாசியை அனுப்ப அவளின் முகம் சுளிக்காத பணிவிடையால் பிறந்தவர் விதுரன்.மூவரில் சிறந்தவர்
    கண் இல்லாததால் அரச பதவி கிட்டாமல் போனாலும் பாண்டுவிற்கு வந்த சாபத்தால் திருதராடினனுக்கு கிட்டியது
    ஆனால் மூவரில் சிறந்த விதுரருக்கு எதனால் மறுக்கப்பட்டது
    அது தான் ஐயா தீண்டாமை .சாதியால் மூவரில் சிறந்தவராக இருந்தாலும் ஒதுக்கபடுவது

    ராவணின் தாயை வைத்து தான் சாதி. அவன் அரசன் ஆவதும் அப்படி தாய் வழி அரசுக்கு தான்
    ராமர் சூர்பனகையை தட்டி கழிக்கும் போது அவளின் பதில்களில் அவர்கள் எந்த சாதி என்ற அவளின் கூற்றும் கூட தான் வருகிறது
    பிராமண தொடர்பு இருப்பதால் பயத்தில் பிரம்மஹதி தோச நிவர்த்தி செய்வதால் ராவணன் சாதி பிராமணர் சாதி ஆகி விடாது

    வேறு சாதி மனைவிக்கு பிறந்து பிராமண பீடங்களில் பதவிக்கு,ஏன் அர்ச்சகர் வேலைக்கு வந்தவர் யாரவது காட்ட முடியுமா

  18. அஸ்வத்தாமன் கருவில் இருக்கும் குழந்தை முதல் கொண்டு அனைவரையும் அழிக்கும் அஸ்திரத்தை பிரயோகிக்கும் போது கிருஷ்ணரால் அபிமன்யுவின் வாரிசு தானே காப்பாற்ற படுகிறது,கடோத்கசனின் வாரிசா காப்பாற்றபடுகிறது
    கடோத்கஜனின் வாரிசு அரசன் ஆகியிருக்க முடியுமா என்ன
    தேவதாசிகளோடு உயர்சாதியினர் தொடர்பு வைத்து அவர்களை பெருமை படுத்தினார்கள் இது தீண்டாமை இல்லாமல் இருந்த நிலையை காட்டுகிறது என்று எழுதுவது போல எடுத்துக்காட்டுகளை கொண்ட நகைச்சுவை இந்த கட்டுரை
    கர்ணனோடு போட்டி போடுவதே கேவலம் எனபது எந்த அடிப்படையில்

  19. அரவிந்தன் நீலகண்டன் அருமையான விளக்கத்தினை அளித்துள்ளார். ஆனால் திராவிடக் கண்ணாடி அணிந்து பார்த்தால் எல்லாம் தவறாகத்தான் தெரியும். மஹாபாரதத்தை ஆன்மிக நோக்கோடும் காணவியலும். சமூக நோக்கோடும் காணவியலும். ஆன்மிக நோக்கத்தில் பெரும்பாலும் சர்ச்சைகள் வருவதில்லை. சமூக நோக்கில் ஆராய்ந்தால் பெரும்பாலும் ஹிந்து எதிர்ப்புதான் “அறிவு ஜீவி”களால் எழுப்பப் படும். காரணம் இடது சாரி சிந்தனையாளர்கள் எழுப்பும் அழுகிய சிந்தனைகள்தான். வாழ்க அரவிந்தன் நீல கண்டன்,

  20. அரவிந்தன் நீலகண்டன், நீர் வாழ்க பல்லாண்டு

  21. வியாச பாரதம் சமஸ்கிருதத்திலிருந்து நேரடியாக தமிழில் கும்பகோணம் தமிழ் பண்டிதர் ம.வீ.இராமானுச்சாரியாரால் முதன் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் கும்பகோணம் சிவராமகிருஷ்ண ஐயர் அதன் பதிப்புரிமை பெற்று ஶ்ரீமகாபாராத பிரஸ்ஸில் அச்சிட்டு வெளியிட்டார். இந்த மொழி பெயர்ப்பு பதினெட்டு பாகங்களாக, பதினெட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன; 1. ஆதி பர்வம் 2. ஸபா பர்வம் 3. வன பருவம் 4.விராட பருவம் 5. உத்யோக பருவம் 6.பீஷ்ம பர்வம் 7.துரோண பருவம் 8. கர்ண பர்வம் 9. சல்ய பருவம் 10. சாந்தி பருவம் 11. அனுசாஸன பர்வம் 12. ஸ்த்ரீ பர்வம் 13.ஆச்வதிக பர்வம் 14 மௌஸலை பர்வம் 15 சௌப்திக பர்வம் 16. மஹாப்ரஸ்தானிக பர்வம் 17.ஆச்ரமவாஸிக பர்வம் 18. ஸ்வர்க்கா ரோஹண பர்வம்.

    இதில் பெரும்பான்மையான பர்வங்களை தமிழில் மொழி பெயர்த்தவர் கும்பகோணம் தி.ஈ.ஶ்ரீநிவாஸாசாரியார். சாந்தி பர்வம் பைங்காநாடு கணபதி சாஸ்திரிகளாலும் உத்யோக பர்வம் கருங்குளம் கிருஷ்ணசாஸ்திரிகளாலும் விராடபருவம் கும்பகோணம் அ.வேங்கடசாசாரியாராலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த பதினெட்டு பர்வங்களும் ஒரு காலத்தில் எங்கள் வீட்டிலிருந்தன. 1980களில் இந்த மொழிபெயர்ப்புகளை முழுமையாக வாசிக்க முனைந்தபோது பதினெட்டு பர்வங்களில் ஒன்றிரெண்டே எனக்குக் கிடைத்தன. 1988 இல் கோணங்கி அத்தனை பர்வங்களையும் எங்கிருந்தோ மொத்தமாக கொண்டுவத்திருந்ததாகச் சொன்னார். கோவில்பட்டிக்கு உடனடியாகக் கிளம்பிப்போய் அவரிடமிருந்து ஏழு பர்வங்களை வாங்கி வந்து ஒளி நகல் எடுத்துவிட்டு அவரிடம் திருப்பிக்கொடுத்தேன்.

    இந்த மொழிபெயர்ப்புகளின் உரிமை பெற்றிருந்த கும்பகோணம் சிவராமகிருஷ்ணனின் பேரன் எஸ்.வெங்கட்ரமணனை 2002 இல் ஒரு முறை சந்தித்தேன். வியாச பாரதத்தின் மொழி பெயர்ப்புகளை திரும்ப அச்சில் கொண்டுவர பணமில்லாமல் மிகுந்த சிரமத்திற்கிடையே ஒவ்வொரு பர்வமாக அச்சிட்டு வெளியிடுவதாகச் சொன்னார். 2002இல் ஆரம்பித்து 2007 வரை வருடம் ஒன்று இரண்டு என ஒரு வழியாக பதினெட்டு பர்வங்களையும் தன் விடா முயற்சியால் வெங்கட்ரமணன் மீண்டும் பதிப்பித்துவிட்டார்.

    ‘தமிழ் ஹிந்து’ தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் என்னுடைய ‘தீண்டாமையைப் பேசுகின்றனவா இந்து மூல நூல்கள்’ கட்டுரைக்கு எதிர்வினையாக ஒரு கட்டுரை எழுதியிருப்பதை இன்று படித்தேன். அவருடைய எதிர்வினையில் அவர் மோகன் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை மேற்கோள் காட்டுவதை படித்தபோது அவருக்கு தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்திருப்பது தெரியாதோ என்று சந்தேகம் எழுந்தது. அதற்கு ஏற்றார் போல அவர் கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட அன்பர் ஒருவர் அவரிடம் வியாச பாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யக்கூடாதோ என்று கேட்டிருப்பதையும் படித்தேன். அதனால் அரவிந்தன் நீலகண்டனுக்கு பதில் எழுதுவதற்கு முன் ஏற்கனவே வெளிவந்துள்ள இந்த பதினெட்டு பாகங்களிலான மொழிபெயர்ப்பைப் பற்றி எழுதிவிடுவோமென்று இந்தப் பதிவை இடுகிறேன்.

    வியாச பாரதம் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாங்க:

    எஸ்.வெங்கட்ரமணன்
    அலைபேசி எண்: 9894661259
    ஶ்ரீசக்ரா பப்ளிகேஷன்ஸ்
    பிளாட் எண் 78, செல்வராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் II
    சர்வே எண் 46/18 எண் 4
    ஊரப்பாக்கம் கிராமம்
    செங்கல்பட்டு தாலுகா
    செங்கை எம்ஜியார் மாவட்டம்

    இது முத்துக் குமாரசாமி அவர்களின் தளத்திலிருந்து பெறப் பட்டது.

    மேலும் இந்த புத்தக பதிப்பாளரின் அலைபேசி எண் என்னிடம் இருந்தது.
    நன்றி.
    வாழ்க பாரதம்!
    முத்துக் குமாரசாமி அவர்களுக்கு மட்டுமல்லாது நிறைய பேர்களுக்கு தெளிவு ஏற்படட்டும்.
    நன்றி. வாழ்க பாரதம்.

  22. முத்துகுமாரசாமி குறிப்பிட்டிருப்பதைப் போல அவர் சொல்லியிருக்கும் தமிழ் மொழி பெயர்ப்பு புத்தகத்திலும் காணப்படவில்லை.
    நன்றி.
    வாழ்க பாரதம்.

  23. கட்டுரை மிகப்பிரமாதம். அதைவிட மறுமொழிகள் மிகமிகப் பிரமாதம்.

    திரு.முத்துக்குமாரசாமி அ.நீ யை கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை விடுத்து தமிழில் வெளியாகியிருக்கும் நேரடித் தமிழாக்கங்களைப் படித்துப் பார்க்குமாறு வேறொரு பதிவில் வேண்டியிருக்கிறார். கங்குலியின் மொழிபெயர்ப்புக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கு (அதன் உண்மைத் தன்மையை நிறுவுவதில்) கிடைக்கவில்லை என்பதை வசதியாக மறைக்கிறார் முத்துக்குமாரசாமி.

    javakumar சுட்டிக்காட்டியிருக்கும் சுட்டியில் முத்துக்குமாரசாமி வேறு மாதிரியாகத தெரிகிறார். அ.நீ சுட்டிக்காட்டியிருக்கும் சுட்டியில் வேறு மாதிரியாகத் தெரிகிறார். ஆக அவரே குழம்பிப் போய்தான் இருக்கிறார்.

    இந்துநால்களை விமர்சம் செய்வதிலும், மறுவாசிப்பு செய்வதிலும் இந்த முற்போக்குவாதிகளுக்கு இருக்கும் தெம்பு, மற்ற மத நூல்களை விமர்சிப்பதிலும் மறுவாசிப்பு செய்வதில் இல்லை பார்த்தீர்களா?

    முற்போக்காளர்கள் புரட்டுகளில் சிலவற்றை நானும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். கீழுள்ள சுட்டியில் படித்துப் பாருங்கள்.

    இராமாயணம் ஒரு ஆய்வு | தோழர்களின் புரட்டு வேலை
    நான் ஏகலைவன்

  24. திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களை நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ் ஹிந்துவில் படிப்பதில் மகிழ்கிறேன்.

    சமீபத்தில் அவர் எழுதிய “பஞ்சம், படுகொலை, பேரழிவு – கம்யூனிசம்” படிக்க வாய்ப்பு கிடைத்தது. அற்புதமான படைப்பு.

    இடது சாரி முற்போக்காளர்கள் என்று தன்னை முன்னிலைப்படுத்தி, தான் சார்ந்த சமூகத்தை இழிவு படுத்தும் “ஏகலைவர்களின்” நிஜ முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு அ.நீ. அவர்களுக்கு நன்றி.

    இது போன்ற புத்தகங்கள் இன்னும் பல வந்தால்தான் இடதுசாரிகள் ஏற்படுத்தியிருக்கும் மாயவலையை அறுக்க முடியும். அவர்களால் “பின்தொடரும் நிழலுக்கும்” “ப.ப.பே.-கம்யூனிசத்திற்கும்” அறிவார்ந்த பதில் கொடுக்க முடியாது. வசைமாரி பொழியமட்டுமே முடியும்.

  25. BAIRAPPA’S PARVAM IS CONSIDERED TO BE NOVEL. HE NEVER TOLD, THAT IT IS AUTHENTICATED. ALL CONVERSATIONS NOT BASED ON VISAR’S MAHABARATHAM .

  26. அன்புள்ள அரசன்,

    தீக்கதிர் கம்யூனிஸ்டுகளின் மோசடிகளை நன்றாக அம்பலப்படுத்திவிட்டீர்கள். வாழ்க. வளர்க. உங்களுக்கு இறைஅருள் ஓங்குக.

  27. இந்து சமுதாயத்தில் வர்ணப் படிநிலைகளும், தீண்டாமையும் நீண்ட காலமாகவே இருந்துள்ளன. அப்படி இல்லை என்று சப்பைகட்டு கட்டுவதால் பயனில்லை. இந்து மதத்தில் உள்ள நல்ல விஷயங்கள் என்ன, அவற்றை மட்டும் நிலை நிறுத்தி, தீயவற்றை நீக்குவது எப்படி என சிந்திப்பதும், வினை ஆற்றுவதுமே இந்து என உணர்பவனின் முக்கியப் பணியாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

  28. இவர் மேலும் மேலும் காமெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார்:

    https://mdmuthukumaraswamy.blogspot.com.au/2012/12/blog-post_10.html

    ” தான் வைத்த தீக்கு புரோசனன் மடிந்தானோ இல்லையோ அவன் உயிரோடிருந்து துரியோதினாதிகளிடம் செத்தவர்கள் பாண்டவர்கள் இல்லை என்று சொல்லிவிடுவானோ என்று விசனப்படுகிறான் பீமன். அரவிந்தன் நீலகண்டனோ பாண்டவர்கள் போல ஐந்து மகன்களையுடைய தாய் அங்கே தற்செயலாய் வந்ததாகவும், குடித்துவிட்டு அவர்களே தானாகவே பற்றிக்கொண்ட மாளிகையில் இறந்துவிட்டது போலவும் புரோச்சனன் இறந்தது கூட தெரியாமல் பாண்டவர்கள் அவனுக்காக வருந்தினர் என்று எழுதுகிறார். அவர் மேற்கோள் காட்டுகிற மோகன் கங்குலி ஆங்கில மொழிபெயர்ப்பு பத்திகளில் இருப்பதையே அதே பதிவில் தமிழில் இப்படி புரட்டி எழுதுகிற அரவிந்தன் நீலகண்டனிடம் குந்தி-தர்மன் உரையாடல் எந்த மகாபாரதத்தில் வருகிறது என்பதைச் சொல்வதால் என்ன பிரயோஜனம் ஏற்படக்கூடும்? ”

    “மேலும், அரவிந்தன் நீலகண்டனும் அவருடைய ஆதரவாளர்களும் ஆராய வேண்டியது என் கருத்துக்களை அல்ல என் கருத்துக்களுக்கு ஆதாரமாக இருக்கும், மலை போல் குவிந்து கிடக்கும் ஆராய்ச்சி நூல்களை.” 😀 😀 😀

  29. //கண் இல்லாததால் அரச பதவி கிட்டாமல் போனாலும் பாண்டுவிற்கு வந்த சாபத்தால் திருதராடினனுக்கு கிட்டியது
    ஆனால் மூவரில் சிறந்த விதுரருக்கு எதனால் மறுக்கப்பட்டது
    அது தான் ஐயா தீண்டாமை .சாதியால் மூவரில் சிறந்தவராக இருந்தாலும் ஒதுக்கபடுவது//

    சாதிய படிநிலைகள் நிச்சயமாக தீண்டாமை அல்ல. தீண்டாமை ஏன் எப்படி ஏற்பட்டது என்பதை மிகத் தெளிவாக பாபா சாகேப் விளக்கியுள்ளார். மேலும் இந்த படிநிலை அன்று நிலவியது. ஆனால் அப்படிநிலை சமூகச்சூழல் மட்டும்தான். அதை மகாபாரதம் நியாயப்படுத்தவில்லை. மாறாக பிறப்படிப்படையில் ஏற்றதாழ்வு பார்ப்பது தவறு என சொல்லும் கீதை மகாபாரதத்தில்தான் இணைந்துள்ளது.

  30. அ.நீயின் எதிர்வினை குறித்த முத்துக்குமாரசாமியின் பதிவைப் பார்த்தேன் – https://mdmuthukumaraswamy.blogspot.com/2012/12/blog-post_10.html

    இந்த விஷயத்தில் அதிகமாகப் பேசுமளவுக்கு, அவர் expose ஆகிக் கொண்டிருக்கிறார். நல்ல விஷயம். தான்.

    கிஸாரி மோகன் கங்குலியின் மகாபாரத ஆங்கில மொழி பெயர்ப்பு ஒரு மாபெரும் சாதனை. பண்டார்கள் பிரதிகளுக்குக் கூட முன்னோடியாக விளங்கியது அது. இன்றளவும் மகாபாரதம் சார்ந்த கற்றலுக்கும், ஆய்வுகளூக்கும் ஆதாரபூர்வமாகக் கொள்ளப் படும் பிரதி அது. இதை அடிப்படையாக வைத்து மகாபாரதத்திற்கு மட்டுமான, ஒரு அட்டகாசமான விக்கி / கலைக்களஞ்சியம் தளத்தை ஒருவர் உருவாக்கியிருக்கிறார்- https://ancientvoice.wikidot.com/source:mahabharata. எல்லா விதமான சொல்/பொருள் தேடல்களையும் இதன் மூலம் செய்யலாம்.

    எனவே, எம்.டி.எம் சொல்லுமளவுக்கு மகாபாரத மூலப் பிரதிகளோ, அது குறித்த ஆராய்ச்சியோ ஒன்றும் பூடகமானவையோ, தேடல் கொண்ட வாசகன் ஒருவனுக்கு கிட்டாதவையோ அல்ல. அதுவும், இணையமும் இன்றைய தொழில்நுட்பமும் இது எல்லாவற்றையும் நம் கையில் கொண்டு வந்து தருகிற்து.

    அ.நீ தனது எதிர்வினையில், தெள்ளத் தெளிவாக, மூல நூலில் உள்ள பர்வம் – அத்தியாயம் – சுலோகம் வரை சான்று அளித்திருக்கிறார். ஆனால், எம்.டி.எம் குறிப்பிடும் மூன்று சம்பவங்களில், அவர் மகாபாரத பாத்திரங்கள் சொல்லியதாகக் கூறப் படும் “கொல்லப் பட்டவர்கள் மனிதர்களே அல்ல” என்ற தொனி வருமான வாசகங்களுக்கு அவர் இது வரை எந்த சான்றும் அளிக்கவில்லை. பொதுவாக ஏற்கப் படும் வியாச பாரதப் பதிப்பு துல்லியமானதல்ல என்று இவர் கருதினாலும்,. பண்டார்கர் ஆய்வு மையத்தில் Critical Edition புத்தகத்தில் இருந்தே கூட அவர் தனது கருத்துக்களுக்கான சான்றுகளை அளிக்கட்டுமே.. அவரால் முடியாது, ஏனென்றால், எந்த மகாபாரதப் பிரதியிலும் அது போன்ற வாசகங்கள் கிடையாது.

    ஒரு வேளை இடது சாரி, முற்போக்கு எழுத்துக்கள் வகையறா பிரசார இலக்கியம் போல வியாச பாரதம் இருக்கும் என்று எம்.டி.எம் நினைத்து விட்டாரோ என்னவோ – ஒரு *பொது எதிரியை* குறித்து ஒரே விதமான டயலாக்கை மூன்று இடங்களில் ஒரே மாதிரி பேசுவார்கள் என்று! கொடுமை.

    மகாபாரதத்தை சமூக வரலாற்று ரீதியாக பார்க்கும்போது நமக்குக் கிடைப்பது எந்த ஒற்றைப் படையான சித்திரமும் அல்ல என்பதே பாரபட்சமற்ற முடிவாக இருக்கும். ஒரு புறம் ஏழைப் பிராமணர் துரோணர் வில்லைத் தூக்குவது பரிகசிக்கப் படுகிறது, தேரோட்டி மகன் கர்ணன் வில்வித்தைப் போட்டியில் பங்கு பெறும் உரிமை மறுக்கப் படுகிறது.. மறுபுறம், இதே துரோணர் பாஞ்சால அரசன் துருபதனையே பழிவாங்கி அவமதிக்கிறார்,.. துரியோதனன் நட்பு என்ற ரீதியில் உடனடியாக கர்ணனை ஏற்று அங்கீகரித்து அங்க ராஜனாக ஆக்க முடிகிறது. ராஜசூய யாகத்தின் பரிகசிப்பு பேச்சின் போது சிசுபாலன் ‘”இதோ நிற்கிறான் புகழ்மிக்க நிஷாத ராஜன் ஏகலைவன், இந்த மன்னர் குலத்தவனை விட்டு ஏன் இடையன் கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை அளிக்கிறாய்” என்று பேசுகிறான்.. ஆனால் அதே இடையன் கிருஷ்ணன் தனது பேரறிவாலும், ராஜதந்திரத்தாலும் மாமன்னர்களையே போரில் தோற்கடிக்கிறான்.. அதிகார வெறியர்களான திருதராஷ்டிரனும், துரியோதனனும் விதுரனை அவனது குலத்தைச் சுட்டிக் காட்டி அவமதிக்கிறார்கள் தான். ஆனால் தர்மத்தின் உருவினராக காட்டப் படும் யுதிஷ்டிரனும் கிருஷ்ணனும் நாரதரும் பிற ரிஷிகளும் அவனை பெரிதும் மதிக்கிறார்கள்.. இப்படி பல முரண்களை சுட்டிக் காட்டலாம்.

    நான்கு வர்ண அமைப்பு முறை அதன் நெகிழ்வுத் தன்மையில் இருந்து மேலும் மேலும் இறுக்கத்தை அடைகிறது. ஒருவனது சமூகத் தகுதி பிறப்பினாலா அல்லது செயல்களாலா என்ற விவாதம் தொடர்ந்து மகாபாரதம் முழுவதும் பல்வேறு களங்களில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் (இதில் வனவாசி சமுதாயங்களும் அரசுகளும் அடக்கம்) பாரதப் போரில் கௌரவர்/ பாண்டவர் என்று இரு தரப்புகளில் ஒன்றுடன் இணைவதன் மூலமாக அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கான இடத்தையும் மதிப்பையும் தேடுகிறார்கள் – இது தான் மகாபாரம் அளிக்கும் ஒட்டுமொத்த சித்திரம். சந்தியா ஜெயின் அவர்கள் எழுதியுள்ள Hindu Tribal Confluences குறித்த மானுடவியல் நூலில் ஒரு அத்தியாயம் முழுவதும் மகாபாரத சமூகக் குழுக்கள் பற்றி அருமையாக அலசியுள்ளார். உண்மையில் எம்.டி.எம் மோதவேண்டிய எதிர்த் தரப்பு அது.

    ஒரு நடுநிலையான ஆய்வாளர் இந்த முரண்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டே தனது பார்வையை வைக்க வேண்டும்.. ஆனால் ஐராவதி கார்வே போன்றவர்கள் செய்வது இந்த grand narrative பிரதியை சிதைத்து, அதில் குறூக்கல்வாதங்களை நுழைத்து தங்களது முன்முடிவுகளை நிறுவ விரும்புவது. எம்.டி.எம் இன்னும் ஒரு படி மேலே சென்று இதை அப்படியே “இந்து மூல நூல்கள்” எல்லாவற்றுக்கும் நீட்டிக்கிறார். அதனால் தான் இத்தகைய எதிர்வினை அவசியமாகிறது.

  31. “அரசகுலத்தவனாகவோ அந்தணனாகவோ இருந்து தண்டனை பெற்று சூத்திரனாகியிருக்க வேண்டும்” .. மிக்க நன்று. சூத்திரன் என்பது தண்டிக்க பட்டவர்கள். எனில், நிச்சயமாக ராமர் என்ற அவதாரம் மக்கள் இடையே தீண்டாமையை ஒழிக்க வந்ததாகவே இருக்கட்டும்.

  32. அரவிந்தன் நீலகண்டனைப் பற்றீ ஏதோ இப்போது தான் கேள்விப் படுவது போன்ற ஒரு டிபிகலான கல்லூரி பேராசிரியர் தோரணையில் எழுதுகிறார் எம்.டி.எம்…. தமிழ் கருத்துலகில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருபவர் அ.நீ. உடையும் இந்தியா, பஞ்சம் படுகொலை, பேரழிவு – கம்யூனிசம், நம்பக்கூடாத கடவுள் ஆகிய நூல்களையும், நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும் எழுதியிருப்பவர்.. தமிழ் இணையத்தைப் பொறுத்த வரையில், முத்துக்குமாரசாமியை விட அரவிந்தன் நீலகண்டனை ஏராளமான வாசகர்களுக்குத் தெரியும்..

    அரவிந்தன் நீலகண்டனின் கருத்து *ஹிந்துத்துவ* தளத்தில் வந்துள்ளது; எனவே அது சார்பு நிலை கொண்டது என்று ஒரு “வசதியான மழுப்பல்வாதத்தை முன்வைக்கிறார் எம்.டி.எம். முழுக்க முழுக்க இடது சாரி, மார்க்சிய சட்டகங்களை மட்டுமே வைத்து செய்யப் படும் ஆய்வுகள் “நடுநிலையானவை” என்று அவர் உண்மையிலேயே நம்புகிறாரா என்ன? திராவிட இயக்க பிராமண-வெறுப்பு கருத்தியலை மார்க்சியத்துடன் குழைத்து இந்திய தேசிய எதிர்ப்பை கட்டமைக்கும் எஸ்.வி.ராஜதுரை போன்ற ஒருவரை தனது குருநாதர்களில் ஒருவராக குறிப்பிடும் எம்.டி.எம் அவர்களுக்கு அ.நீயின், தமிழ்ஹிந்துவின் நடுநிலை பற்றி பேச என்ன தார்மீக நியாயம் உள்ளது?

    ஒரு காத்திரமான தரப்பை இப்படி முத்திரை குத்துதல் மூலமே :”மறுதலிக்கும்” சமாசாரம் எல்லாம் இணையம் போன்ற சுதந்திர கருத்து வெளியில் செல்லுபடியாகாது என்பதையாவது மரியாதைக்குரிய பேராசியர் அவர்கள் உணர வேண்டும். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள், முத்திரை குத்தலால் அல்ல.

  33. மகாபாரதம் ஒரு பெருங்கடல். அதில் முழுமையான சொல்-தேடல் செய்வது என்பது அசாத்தியமான காரியம். ஆனால் நான் முன்பு அளித்த அந்த Wiki இணைப்பு, மிக எளிதாக இதை சாத்தியமாக்குகிறது. சில உதாரணங்கள் –

    மகா பாரத்தில் பேசப்படும் மக்கள் கூட்டங்கள் / குலங்களின் பெயர்கள் & அந்தப் பெயர்கள் எங்கெங்கு வருகின்றன என்பதற்கான பட்டியல்கள் –

    Tribe_Exotic – https://ancientvoice.wikidot.com/mbh-category:tribe-exotic
    Tribe_Generic – https://ancientvoice.wikidot.com/mbh-category:tribe-generic
    Tribe_Sage – https://ancientvoice.wikidot.com/mbh-category:tribe-sage

    சூத்திர என்ற பதம் & தொடர்புடைய கதை மாந்தர்கள் (உப கதைகள் உட்பட):
    https://ancientvoice.wikidot.com/mbh-category:sudra

    (இதில் ஒரே ஒரு சுலோகத்தில் வரும் Paijavana என்ற சூத்திர அரசன் பற்றிய குறிப்பை மிக விரிவாக “சூத்திரர்கள் யார்” என்ற தனது புத்தகத்தில் அம்பேத்கர் ஆராய்கிறார்)

    சூதர் என்ற பதம் & தொடர்புடைய கதை மாந்தர்கள்:
    https://ancientvoice.wikidot.com/mbh-category:suta

    மகாபாரதத்தில் ”திராவிடர்”
    https://ancientvoice.wikidot.com/mbh:dravidas

  34. அன்பார்ந்த ஸ்ரீ அ.நீலகண்டன் அவர்களது எதிர்வினை அவர் எழுதும் மற்றைய விஷயங்களில் எவ்வளவு உழைப்பு இருக்குமோ அத்தனை உழைப்புடன் கூடி பரிமளிப்பதாய் இருக்கிறது.

    புராண இதிஹாசங்களை வாசித்து அவை சொல்ல வருவது என்ன என்பதை பக்ஷபாதமில்லாது சொல்ல விழைவது என்பது ஒரு நேர்மையான முயற்சியாக இருக்கும். அது ஸ்ரீ அ.நீ அவர்களது எழுத்தில் தெரிகிறது.

    இன்னொரு வகை முயற்சி தன்னுடைய pet theories என சில கோட்பாடுகளை முன்வைப்பது. பின்னர் உலகம் மற்றும் தான் எதிர் கொள்ளும் நூற்கள் இவையெல்லாம் அதைத்தான் சொல்கிறது என நிறுவ முயற்சிப்பது.

    பாதரக்ஷைக்கு ஏற்ப பாதத்தைச் செதுக்குவது என்பது சாதாரணமான காரியம் அல்ல அது எதில் முடியும் என்பதை ஸ்ரீ எம்டிஎம் அவர்களது முயற்சி தெரிவிக்கிறது என்றால் மிகையாகாது.

    நாகர்கள் (அதுவும் நவ நாகர்களில் ஒருவனான தக்ஷகன் என்ற பெயரை வாசித்த பின்பும்) என்பவர்களை காட்டுவாசிகள் பழங்குடிகள் என்று சித்தரிப்பது இப்படியான அசஹாயமான கார்யம் தான். விட்டால் யக்ஷர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள், தேவர்கள் போன்றோர் யாராவது ராஜாவால் அடிஉதை வாங்கி அதைப்பார்த்து யாராவது ஒரு ப்ராம்மணனோ அல்லது இன்னொரு தேவனோ சிரித்தான் என்று ஒரு குறிப்பிருந்தால் தேவதைகள் மற்றும் யக்ஷர்கள் உட்பட celestials எல்லோரையும் பழங்குடிகள் என்று சித்தரிக்க முனைவார்கள் போலும்.

    மற்ற பாகங்களை எதிர் நோக்குகிறேன்.

    நேர்மையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  35. எம்.டி.எம் அவர்கள் தனது பதிவில்

    // குல தர்மம், ஸ்வதர்மம் ஆகியன பற்றியும் ஜடாயு உரையாற்றினார் என்று குறிப்பு இருந்தது. குல தர்மத்தைப் பேசுகிறவர்கள் சாதி அமைப்பிற்கு சாதியத்திற்கு எதிரான சிந்தனையுடையவர்களா என்று என்னால் அறியமுடியவில்லை.//

    என்று குறிப்பிட்டுள்ளார்.

    அந்த உரையில் நான் குலதர்மம் என்ற கருத்தாக்கத்தைப் *பற்றீ* பேசினேன்,. ஆனால் அதை ஆதரித்துப் பேசவில்லை. அதை மறுத்து எப்படி கீதை ஸ்வதர்மம் என்ற மானுட அறக் கருத்தை முன்வைக்கிறது என்பது பற்றீயே பேசினேன்.

    எனது உரையின் அந்த 5 நிமிடப் பகுதியை (15:08 – 20:08) கீழே உள்ள இணைப்பில் கேட்டுப் பார்த்து விட்டு பிறகு தங்கள் கருத்தைச் சொல்லவும்.

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZJS7CSPFSIA#t=908s

  36. விதுரர் குலம் என்ன
    பாண்டு,திருதராட்டினர்,விதுரர் மூவருக்கும் தந்தை ஒன்று தானே
    நமக்கு வேண்டிய மாதிரி சில விஷயங்களை எடுத்து கொண்டு சிலவற்றை விடுவது சரியா
    ஆணை வைத்து தான் வர்ணத்தில் நெகிழ்வுகள் இருந்தன
    உயர் வர்ண ஆணுக்கும் கீழ் வர்ண பெண்களுக்கும் பிறந்த வாரிசுகளால் தான் வேறு வழியில்லாத நிலையில் வர்ணாஸ்ரமத்தில் சில நெகிழ்வுகள்,சில கடுமையான நிபந்தனைகளுக்கு ,விதிமுறைகளுக்கு பிறகு சிலரை ஏற்று கொள்ளுதல் உண்டு.
    ஆனால் மாறாக கீழ் வர்ண ஆணுக்கும் மேல் வர்ண பெண்ணுக்கும் பிறந்த வாரிசுகள் எப்போதுமே ஒதுக்கப்பட்டவர்கள் தான்
    அர்ஜுனனின் பல மனைவியருள் பிராமணர் யாராவது உண்டா

    சாதியை காட்டி/ பிறப்பை காட்டி விதுரனுக்கும் ,கர்ணனுக்கும் கிடைக்கும் வசவுகள் ,அவர்கள் நடத்தப்படும் விதம் தீண்டாமை இல்லாமல் வேறு என்ன
    தந்தை உயர் வர்ணம் என்பதால் நேரடி தீண்டாமை கிடையாது,ஆனால் கிடைத்த சாதி தாயின் சாதி தான்
    தந்தை கீழ் வர்ணமாக /தாய் உயர் வர்ணமாக இருக்கும் கதை மாந்தர்களே எவ்வளவு தேடினாலும் கிடைக்க மாட்டேன் என்கிறார்களே

  37. ராமாயணம் எழுதிய வால்மீகி ஒரு வேடர் குலத்தை சேர்ந்தவர். மகாபாரதம் எழுதிய வியாசர், பராசர முனிக்கும் செம்படவ பெண்ணிற்கும் பிறந்தவர். இவர்கள் பழங்குடி மக்களை தாழ்வாக எழுதி இருக்க மாட்டார்கள்.

  38. \\\\அதிகார வெறியர்களான திருதராஷ்டிரனும், துரியோதனனும் விதுரனை அவனது குலத்தைச் சுட்டிக் காட்டி அவமதிக்கிறார்கள் தான். ஆனால் தர்மத்தின் உருவினராக காட்டப் படும் யுதிஷ்டிரனும் கிருஷ்ணனும் நாரதரும் பிற ரிஷிகளும் அவனை பெரிதும் மதிக்கிறார்கள்.. இப்படி பல முரண்களை சுட்டிக் காட்டலாம்.\\\\

    ம்………த்ருதராஷ்ட்ர மஹாராஜனும் கூட மதிக்கிறான். அதர்மங்களுக்குத் துணை போய் ராத்தூக்கமில்லாது தவிக்கும் த்ருதராஷ்ட்ர மஹாராஜனுக்கு விதுரர் செய்யும் தர்மோபதேசமான விதுர நீதி மஹாபாரதத்தின் அதிமுக்யமான நீதி சாஸ்த்ரமாக சான்றோர்களால் எடுத்தாளப்படுகிறது. யாருக்கெல்லாம் தூக்கம் கெடும் என விதுரர் ஆரம்பிக்கும் விதுர நீதி முக்யமான நீதி சாஸ்த்ரம்.

    धृतराष्ट्र उवाच
    प्रवेशय महाप्राज्ञम् विदुरं दीर्घदर्शिनम् ।

    ப்ரவேசய மஹாப்ராக்ஞ விதுரம் தீர்க்கதர்சினம் (விதுர நீதி – ச்லோகம் – 5)

    த்ருதராஷ்ட்ர ராஜனின் விண்ணப்பித்தபடிக்கு ராஜனிடம் வருகை தந்த விதுரர் ராஜனைப் பார்க்க வந்திருக்கும் செய்தியைச் சொல்லிய ஊழியனிடம், த்ருதராஷ்ட்ர மஹாராஜன்,

    ஞானவானும் தீர்க்கநோக்கு உள்ளவனுமான விதுரன் (அறைக்குள்) வரட்டும்.

    \\\\ஒரு காத்திரமான தரப்பை இப்படி முத்திரை குத்துதல் மூலமே :”மறுதலிக்கும்” சமாசாரம் எல்லாம் இணையம் போன்ற சுதந்திர கருத்து வெளியில் செல்லுபடியாகாது என்பதையாவது மரியாதைக்குரிய பேராசியர் அவர்கள் உணர வேண்டும். \\\

    பேராசிரியப் பெருந்தகையான ஸ்ரீமான் எம்டிஎம் அவர்களது வித்வத்திற்கு என் பணிவான வணக்கங்கள்.

    மாற்றுக்கருத்தை ஏற்காமல் ஒதுக்கித்தள்ளுதல் என்ற நிலையை அவர் எடுத்திருந்தால் தவறானது என்றாலும் ஒப்புக்கேனும் ஏற்கத்தக்கது. முன்முடிபு முத்திரை குத்தி மாற்றுக்கருத்தைச் சிறுமைப்படுத்துவது நசுக்க விழைவது என்பது அறிவுசார் உலகமே ஆயினும் பதிலறியா ஆராய்ச்சியாளர்கள் கையாளும் தரம்தாழ்ந்த யுக்தி.

    ஸ்ரீமான் எம்டிஎம் என்ற மதிப்பிற்குறிய பேராசிரியப்பெருந்தகை அவர்களும் இந்த யுக்தியை கையாளுகிறார். துரத்ருஷ்டவசமாக இணையத்தை வாசிப்பவர்கள் வினை மற்றும் எதிர்வினை இரண்டையும் சீர்தூக்கிப் பார்ப்பார்கள் என்பதை அறியாது செய்யப்படும் பிழையான பலஹீனமான யுக்தி இது.

  39. பூவண்ணன் சார்

    கட்டுரையிலேயே ஆநீ நள தமயந்தியை பற்றி கொடுத்துள்ளாரே.

    கீழ்வர்ண ஆண் மேல் வர்ண பெண். இது சாத்திய பிரச்சனையை இல்லை, இது ஓரி பெண்ணிய பிரச்சனை என்று உங்களுக்கு புரிந்தால் சரி.

    விதுரரை சாதியால் கேலி செய்பவர்கள் மோசமான வில்லன்களாகவே மகாபாரதத்தில் சித்தரிக்கப்படுகிறார்கள். கிருஷ்ணர் அவர் வீட்டில் தங்கி உவந்து விருந்துன்டத்தை தான் பெரிதாக பேசுகிறார்கள்.

    யுத்தத்தில் தனக்கு உடன்பாடில்லை என்றாலும் பீஷ்மரைபோல அல்லாமல் எந்த ஒரு பக்கமும் சாராமல் தீர்த்த யாத்திரை புறப்படும் ஒரு நேர்மையானவராக தார்மீகராக சித்திரிக்கப் படுபவர் தான் விதுரர்

    “அகமொழித்து விட்டேனோ விதுரரை போல” என்பது திருக்கோளூர் அம்மாள் வார்த்தை. இது இவர் ராமானுஜருக்கு செய்த உபதேசம் போல காட்டப்படுகிறது. இப்படிதான் ஒரு ஞானியாக சித்தரிக்கப்படுகிறார் விதுரர்.

    நீங்கள் என்னமோ சமஸ்க்ரித்த காவியங்களை கரைத்து குடித்தார் போல கீழ் வர்ண ஆண் மேல் வர்ண பெண் பற்றி பேசுகிறீர்கள்.
    சமஸ்க்ரிதத்தில் பல காவியங்களில் பிராமணப் வைஷ்ய, பிராமண க்ஷத்ரிய விவாஹம் கூறப்பட்டுள்ளன. உடனே பிராமண சூத்ர விவாஹம் உள்ளதா காட்டு என்று குதிக்க வேண்டாம்.
    கிருஷ்ணன் இடையன் தான் அவனுக்கு ருக்மிணி சத்யபாமா, நப்பின்னை இப்படி அரசப் பெண்கள் வாய்க்கவில்லையா?

    தமிழில் அம்பிகாபதி அமராவதி கதை கேட்டதில்லையா சார்.

  40. திரு.அரவிந்தன் நீலகண்டனின் இது போன்ற விளக்கம் நெடுங்காலமாக தமிழ் சூழலில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இதுவரை இதைச் செய்ய ஸ்ருதி, ஸ்மிருதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள்(?!) ஏன் தயாராக இல்லை என்ற குழப்பத்தை நீக்கிய அ.நீ. க்கு வாழ்த்துக்கள். திரிபுகளையும், இட்டுக்கட்டல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் இத் தொடர் புத்தக வடிவிலும் வரவேண்டும்.

  41. Dear Mr. Poovannan,

    “விதுரர் குலம் என்ன
    பாண்டு,திருதராட்டினர்,விதுரர் மூவருக்கும் தந்தை ஒன்று தானே”

    Definitely vyasa was the father of all these three. We dont have any doubts. But Ambika and Ambalika were princes married to Vichitracirya who died unexpectedly in an young age. Vyasa appears for the request of his mother Sathyavati under the condition that he will give the children to the queens only for the sake of national welfare but he will not approach them for any lustful intention. that is why he carries a very dirtiest appearance with a foul smelling odour.

    “கண் இல்லாததால் அரச பதவி கிட்டாமல் போனாலும் பாண்டுவிற்கு வந்த சாபத்தால் திருதராடினனுக்கு கிட்டியது
    ஆனால் மூவரில் சிறந்த விதுரருக்கு எதனால் மறுக்கப்பட்டது”
    It is obvoius that Dhritarashtra could not have the rajya because he was blind. Pandu single handedly had proven his ability in taking the entire Bharata under his control through his prowess. When Pandu died, yudishthira was 16 years old. Bhima & Duryodhana were 14 years old. When the princes are at their teens, it would not be proper to make their paternal uncle ascend the throne. The question was someone had to take up the responsibility of being the King for the welfare of the masses. Among Dhritharashtra and Vithura who can be the King? Obviously Dhritharashtra. why because he was born to the intended Ambika. Vithura on the other hand though capable could not ascend the throne why because his birth to Vyasa was more of an accident because of Ambika’s fear of approaching Vyasa in his disgustful form.

    When selecting the one who can take care of the country for the time being till Yudhishthira attains the right age to be the King, Dhritharashtra was the rightful selection for the King – incharge. Further Vithura’s birth to Vyasa has a flash back that Dharmaraj(Yama) got cursed by Mandavya Rishi for his wrongful punishment to Mandavya for commiting a mistake of torturing a little insect when he was too young to know that what he did was a sin. Hence Dharma born in the earth as Vithura. Vithura’s birth was purposeful and it was not for ruling the country. It was due to this curse of Mandavya.

    Bhishma gave Dhritharashtra the chance of being the King -incharge and refused it for Vithura why because it was more of an unexpected happening. Secondly there were sons who were at their teens for both Pandu & Dhritharashtra. hence making Vithura a king might further lead to competetions for ascending the throne between cousins. Having analyzed all these probability, if you were at the situation, I am sure you would also choose Dhritharashtr and not Vithura.

    Having analyzed the pros and cons, also taking the purpose of Vithura’s birth into consideration, Dhritharashtra became the King- incharge. The problem araised when Yudhishthira was refused the reign by Duryodhana and Dhritharashtra supported it! I guess you know Mahabharata!

    “வேறு சாதி மனைவிக்கு பிறந்து பிராமண பீடங்களில் பதவிக்கு,ஏன் அர்ச்சகர் வேலைக்கு வந்தவர் யாரவது காட்ட முடியுமா”
    Please read the history of Viswamithra who was a Kshatriya became a brahmana by sheer determination. You can also take the example of Sathyakama. Hindu dharma is not literally based on birth.

  42. உயர் வர்ணத்தவராக ஏற்று கொள்ள படுவதற்கும்,உயர் வர்ண பெண்ணை மணமுடிப்பதர்க்கும்,அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் உயர் வர்ணத்தவராக ஏற்று கொள்ளபடுவதர்க்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு
    அம்பேத்காரின் படத்தை சாதி கட்சிகள் தங்கள் கட்சி தலைவர்களோடு சேர்த்து போட்டு கொள்வதால் அவை சமத்துவத்தை போதிக்கிற ,சாதிமறுப்பை ஆதரிக்கின்றன என்று வாதிடுவதர்க்கும் விச்வாமித்திரரை ஆதாரமாக காட்டுவதற்கும் வித்தியாசம் இல்லை
    விதுரர் சாதியின் பெயரால் இழிவு செய்யபடுகிறார் அல்லவா மகாபாரதத்தில்.கோவம் கொண்டு தானே நான் போரில் பங்கெடுக்க மாட்டேன் என்கிறார். அதை சாதிக்க தான் கிருஷ்ணன் அவர் இல்லம் செல்வதாக அல்லவா படித்த ஞாபகம்
    அனைத்து கலைகளிலும் சிறந்தவர் விதுரர் என்று வரும் போது பாண்டு சிறந்த வீரன் என்பதால் அவனுக்கு பட்டம் கிடைத்தது என்ற வாதம் சரியா
    தங்கள் இன பெண்களை கீழ் உள்ள வர்ணங்களிற்கு கொடுக்க மறுக்கும் எண்ணம்/அது மிகவும் ஈனமான காரியம் என்ற நம்பிக்கை/வெறி மகாபாரத,ராமாயண காலங்களில் இருந்து வருகிறதா இல்லையா
    பிராமண ஆணுக்கும் செம்படவ பெண்ணுக்கும்,பிராமண ஆணுக்கும் அசுர/க்ஷத்ரியருக்கும் பிறந்த ராவணன் ,என்று தானே வருகிறது
    செம்படவ ஆணுக்கும் பிராமண பெண்ணுக்கும் பிறந்த ,உல்டா வரருசி கதைகள் எங்கே
    https://www.jeyamohan.in/?p=27457

  43. இடதுசாரிகள் – முற்போக்கு வாதிகள் பழங்குடி மற்றும் வந்தேறி போன்ற குழுப்பிரிவினைகளை அடையாளம் காண்பது எதன் அடிப்படையில் என்பது புரியாத புதிர்.

    அல்லது யார் தமிழன் என சான்றிதழ் வழங்கும் அதிகாரம் பெற்ற கழகக் கண்மணிகள் போல இதுவும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விஷயமா தெரியவில்லை

    சட்டென்று நினைவுக்கு வராததால் உடன் எழுத இயலவில்லை.

    இரண்டு ச்லோகங்கள் :-

    நவ நாகர்கள் பற்றியது :-

    அனந்தம் வாசுகிம் சேஷம் பத்மநாபஞ்ச கம்பளம்
    சங்கபலம் த்ருதராஷ்ட்ரம் தக்ஷகம் காளியம் ததா

    யேதானி நவ நாமானி நாகானாஞ்ச மஹாத்மனாம்

    மேற்சொன்னவையாவும் மஹான் களான ஒன்பது நாகர்களின் பெயர்கள்.

    சாயங்காலே படேன்நித்யம் ப்ராத: காலே விசேஷத:
    தஸ்ய விஷம் பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத்

    மாலையிலும் விசேஷமாகக் காலையிலும் இவர்கள் பெயரைசொல்பவர்கள் விஷபயத்திலிருந்து விடுபடுவர். எப்போதும் வெற்றி கொள்வர்.

    நிஷாத ராஜனான நளன் பற்றியது மற்றொரு ச்லோகம்

    கார்க்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்ய ச
    ரிதுபர்ணஸ்ய ராஜரிஷே: கீர்த்தனம் கலிநாசனம்

    கார்க்கோடகன் (என்ற நாகன்), தமயந்தி, நளன் (என்ற நிஷாத ராஜன்), ரிதுபர்ணன் (என்ற ராஜரிஷி) இவர்கள் பெயரைச் சொல்பவர்களுக்கு கலியினால் தீங்கிருக்காது.

    எந்த ஜாதியைச் சார்ந்தவர்களாயினும் மேற்கண்ட சம்ஸ்க்ருத ச்லோகங்கள் எல்லோராலும் (சம்ஸ்க்ருதத்தை ஒதுக்காதவர்கள்) சொல்லப்படுபவை. முதல் ச்லோகம் ஒரு நாகன் இல்லை நான் முன்னமே சொன்ன நவநாகர்களையும் வணங்கிப் போற்றும் ச்லோகம்.

    இரண்டாவது ச்லோகத்தில் கார்க்கோடகன் என்ற நாகன், தமயந்தி, நளன் என்ற நிஷத ராஜன், ரிதுபர்ணன் என்ற ராஜரிஷி இவர்களையெல்லாம் ஸ்மரித்தால் ஏழரை நாட்டு சனியிடமிருது துயரங்கள் குறையும் என்பது ஐதிஹ்யம்.

    புராண இதிஹாஸங்கள் மற்றும் கடவுளர்கள் (நாகர்களை), நிஷாதர்களை இழிவு படுத்துகின்றன என்று சொல்லியுள்ளார். தவறு என்று மேற்கண்ட ச்லோகங்கள் தெரிவிக்கின்றன.

    மேல் ஜாதியை சார்ந்தவர்கள் (நாகர்கள்) மற்றும் நிஷாதர்களை இழிவு படுத்துவதிலும் அவர்கள் அழிவிலும் உவகை கொள்கிறார்கள் என்ற கருத்தை புராண இதிஹாஸங்களை திரித்து முன்வைக்கிறார். நாகர்கள் மற்றும் சில நிஷாதர்களை எல்லோரும் போற்றுகின்றனர் என்பது வெளிப்படை.

    முடிபு என்றால் என்ன முன்முடிபு என்றால் என்ன தவறான முடிபுகளை தகுந்த சான்றுகளின் அடிப்படையில் ஏற்பது அல்லது மறுப்பது அறிவுடைமை.

    சான்றுகளின் மீது கையையே வைக்காது ச்லோகம், அத்யாயம், பர்வம் என்று பளிச்சென சுட்டிக்காட்டாது சொந்தக்கருத்துக்களை மஹாபாரதம் சொல்கிறது ராமாயணம் சொல்கிறது என்று சொல்வது பொய்யே பேசுவோம் என்று கச்சம் கட்டியுள்ள கும்பல்களுக்கு வேண்டுமானல் சரியாகலாம். பேராசிரியப் பெருந்தகை அவர்களுக்கு அல்ல.

    \\\“மேலும், அரவிந்தன் நீலகண்டனும் அவருடைய ஆதரவாளர்களும் ஆராய வேண்டியது என் கருத்துக்களை அல்ல என் கருத்துக்களுக்கு ஆதாரமாக இருக்கும், மலை போல் குவிந்து கிடக்கும் ஆராய்ச்சி நூல்களை.” \\\\

    அதைத்தான் அந்த ஆதாரம் எது எது எது என இங்கு ஒவ்வொரு வாசகரும் கேழ்க்கின்றனர்.

    ம்…….ஸ்ரீமான் எம்டிஎம் “நாயர் புடிச்ச புலிவால்” என்று கேட்டிருக்கலாம். இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை.

    அடுத்த பாகத்தைப் பார்ப்போம். இன்னும் என்னென்ன சொந்தக் கருத்துக்கள் களையெடுக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரியலாம்.

    நமது புராண இதிஹாஸங்களில் நாகர்கள் மற்றும் நிஷாதர்களை போற்றும் ச்லோகங்கள் இல்லையா அவை ஸ்ரீமான் எம்டிஎம் அவர்கள் கண்ணில் படவில்லையா அல்லது அவர் தன் முற்போக்கு என்ற போர்வையில் உள்ள முன்முடிவுகளை புனராலோசிப்பது உசிதமா

  44. Prasannasundhar N on December 10, 2012 at 2:35 pm

    நல்ல தெளிவான விளக்கங்கள் கொடுத்த திரு பிரசன்னா சுந்தர் அவர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும்.

  45. பூவண்ணன் முழு சமஸ்க்ரித்த பெயரை கொண்ட வீரமணியை போல பதிலை படித்தும் மறுபடியும் மறுபடியும் அதே கேள்வியை கேட்க ஆரம்பித்து விட்டார். வாத்தியார் பாடம் நடத்தும் போது, கேள்விக்கு போதிய விளக்கம் தந்த பின்னும் மறுபடியும் மறுபடியும் அதே கேள்வியை கேட்கும் மாணவர்கட்கு ஒரு நல்ல பெயர் உண்டுதானே?

    கொஞ்சமாக யோசித்து பாருங்கள் பூவண்ணன். அந்த காலத்தில் ஒரு பிராமண பெண்ணுக்கும், வேறு குல ஆணுக்கும் காதல் கல்யாணம் நடந்திருக்காது என்கிறீர்களா?

    அப்படியே இல்லை என்றாலும் அது சாதித்துவ பிரச்சனையை அல்ல, அது ஒஉர் பெண்ணியத்து பிரச்சனையை என்று நீங்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன்.

    அத்விகாவுக்கு பயந்து அல்லது அவர் எந்த கோணத்தில் பார்பார் என்று தெரியாமல் எதையாவது எழுதி திட்டு வாங்குவதற்கு பயந்து அந்த பெண்ணிய பிரச்சனையை என்ன என்று இங்கு சொல்லமுடியவில்லை.

    அந்த காலத்தில் இன்னும் கொஞ்சம் அத்யயனம் செய்கிறேன் என்று மனைவியை விட்டு விட்டு சென்ற புமான்கள் ஏராளம். அப்போதெல்லாம் அந்த பெண்கள் என்ன செய்தார்கள். அந்த பெண்கள் மறு மனம் செய்து (வேறு குல ஆண்களை) குழந்தை செல்வங்களுடன் சௌக்கியமாக வாழ்ந்ததை எல்லாம் காவியங்கள் சொல்கின்றன. இதே மாதிரி தான் வைசியர்கள் வியாபரம் செய்யப் போறேன்னு ஊர் ஊரா சுத்துவார்கள். ஊடு திரும்ப நாலஞ்சு வருசமாகும்.

    நீங்கள் தமிழ் சினிமா பாத்து கெட்டுபோயச்சு. அங்கு தான் ஒரு பரம ஏழையான ஒரு கூலித் தொழில் அல்லது ரிக்ஷா ஓட்டும் பையனை பார்த்து ஒரு பணக்கார பொண்ணுக்கு காதல் வரும், அப்புறம் ஹீரோ தடை கட்டுக்களை படிக்கட்டுகளாக மாற்றி பெண்ணின் அப்பா செய்யும் கஞ்சா தொழிலை எதிர்த்து போராடி வெற்றி கொண்டு பெண்ணையும் மனம் முடிப்பார். வாஸ்தவம் அப்படியா இருக்கு.

    எப்படி ஒரு பணக்கார பைய்யன் ஏழை பெண்ணை மனம் செய்வது எளிதோ, தடங்கல் இல்லாமல் வாழ்கை நடத்துவது இயலுமோ அப்படி தான் மேல் வர்ண (என்று வழங்கப்படும்) ஆண் கீழ் வர்ண(என்று வழங்கப்படும்) பெண்ணை மனம் செய்வது சாத்தியம்.

    மற்றபடி மகாபாரதம் முழுக்க முழுக்க க்ஷத்ரியர்களின் கதை, பூவண்ணன் திரும்ப திரும்ப பிராமணன் பிராமணன் என்று புலம்புவது பலமான மணி ஓசை கேட்பது போல இருக்குங்க.

    கடைசியாக – உங்களுக்கு ஞாபகம் வருவதெல்லாம் மகாபாரதம் இல்லை. என்ன இருந்தாலும் எப்படி பார்த்தாலும், விதுரர் மகாபாரதம் முழுவதும் நல்லவராகவே நல்லவர்கள் வாய் முகமாக காட்டப்படுகிறார். விதுரரை தரம் தாழ்ந்து திட்டுவோர் எல்லாம் கேவலமாக சித்தரிக்கப் படுகின்றார் என்பது திண்ணம்.

    இதை புரிந்து கொள்ள சக்தி இல்லாத பூவண்ணன் எதை தான் புரிந்து கொள்வார். ஒரு விட அஜெண்டாவுடன் வந்து விட்டால் அதை மாத்த முடியுமா ஏன்னா?

  46. Dear Mr. Atwika,

    Thanks for the appreciation and support.

    Dear Mr. Poovannan,

    “விதுரர் சாதியின் பெயரால் இழிவு செய்யபடுகிறார் அல்லவா மகாபாரதத்தில்.”
    Yes. I agree. Vidura was insulted by Duryodhana when Vidura tried to advise Dhritharashtra for making peace with the Pandavas by providing them their share of regions. He was not insulted by the divine Krishna or the heroic Pandavas or by any good natured elders in the story. You are knowing Mahabharata here and there as bits and pieces but not in full. Your perception and understanding about the events of the story have to be modified.

    Vidura was always righteous in his conduct and behaviour as he himself was the God of Righteousness, Dharma! He never misguided Dhritharashtra at any point of time in this great epic at any circumstances. But Dhritharashtra was completely out of his mind so he deviates from Dharma by not stopping his sons’ sinful intentions and actions. Vidura was insulted by Duryodhana and not by the Author of this great epic. Even now in this present scenario so many eminent people have been degraded by many others. Will that leave sense if we consider all those in to account? Please try to understand that this is not a fiction or novel. This is a great epic. In sanskrit we call it as Ithihaas, which means – “this has happened this way”.

    Vedavyasa has recorded everything as it had happened. Duryodhana insulted Vidura. Vyasa has recorded it. It does not literally mean that Vyasa is degrading Vidura at any point of time.If you consider the values of Duryodhana upon good people as a justification, then your interpretation itself is totally wrong. Please try to perceive the epic as how the author narrates. Not by any preset notions.

    “கோவம் கொண்டு தானே நான் போரில் பங்கெடுக்க மாட்டேன் என்கிறார். அதை சாதிக்க தான் கிருஷ்ணன் அவர் இல்லம் செல்வதாக அல்லவா படித்த ஞாபகம்”
    Vidura did not want to participate in the war as both Pandavas and Kauravas were equal unto him. He breaks his bow having been insulted and irritated by Duryodhana & Co where Krishna did not have anything to claim for. It was not Krishna who achieved Vidura’s non acceptance to participate in the war. It was really Duryodhana who spoilt Vidura’s participation.

    Krishna went to Hastinapura for making peace between Pandavas and Kauravas. But when he entered the city he directly went to Dhritharashtra’s palace and honoured all the elders. But for having food, he chose Vidura’s home as the suitable one because Vidura never deviates the path of Virtue. Then he goes on to meet Kunti at her abode. The next day he comes to Dhritharashtra’s palace where Duryodhana greets him to eat at his place, but Krishna refuses it saying he will not eat at Duryodhana’s residence until the purpose of his visit gets fulfilled.
    Mahabharata: Kisari Mohan Ganguly – Book 5 – Udyoga Parva – Bhagawat Yana Parva – Section XCI- “Vaisampayana continued, ‘The high-souled Govinda, of eyes like lotus leaves, then raising his mighty (right) arm, and in a voice deep as that of the clouds, replied unto the king in excellent words fraught with reasons,–words that were clear, distinct, correctly pronounced, and without a single letter dropped, saying, ‘Envoys, O king, eat and accept worship only after the success of their missions. Therefore, O Bharata, after my mission becomes successful, thou mayest entertain me and my attendants.'”

    But his mission was unsuccessful. Because Duryodhana refused to agree to share the least of land with the pandavas. He avoids the good advise of Krishna, Vidura, Narada, Kanwa, Bhishma, Drona and also of Dhritharashtra. He goes out of the court when all these eminent men attempted to make peace. Krishna did not persuaded Vidura for his non participation in the war. You can’t really see such an event happening anywhere in the epic. Further Duryodhana goes on trying to seize Krishna by treading. That was when Krishna gives his Swarupa which every one was unable to bear.

    “அனைத்து கலைகளிலும் சிறந்தவர் விதுரர் என்று வரும் போது பாண்டு சிறந்த வீரன் என்பதால் அவனுக்கு பட்டம் கிடைத்தது என்ற வாதம் சரியா”
    Again a wrong perception. Pandu was the one who took the entire nation of Bharata under his control by his sheer prowess of arms. He extended the boundaries. Though younger to Dhritharashtra, When Pandu was elder to Vidura, naturally he will be given the first chance to the throne. He had proven his prowess and ruled the country. So this is the proper dharma.

    Why does M.K Stalin predominantly has influence in his party? Because he had contributed at the earlier stages to party than M.K Azhagiri who is in the limelight only from 2006. I am sure you know Tamilnadu politics. Azhagiri surely does not have support like Stalin which merely prevailed in Madurai. That too is doubtful now. Your question is not even like this. It is like “why have not you support M.K Tamilarasu to be the chief of the Party?” Sorry to everyone I am quoting this examples but to make some one understand I dis not find anything suitable.

    “அம்பேத்காரின் படத்தை சாதி கட்சிகள் தங்கள் கட்சி தலைவர்களோடு சேர்த்து போட்டு கொள்வதால் அவை சமத்துவத்தை போதிக்கிற ,சாதிமறுப்பை ஆதரிக்கின்றன என்று வாதிடுவதர்க்கும் விச்வாமித்திரரை ஆதாரமாக காட்டுவதற்கும் வித்தியாசம் இல்லை”
    You have decided not to accept the original Hindu’s texts as they are. Citing example of Vishwamithra does not seem good to you. That is why I have cited example of real time people.You know something Mr. Poovannan? I have heard that Ambedkar is the real name of Dr.B.R Ambedkar’s teacher who was a brahmin. Dr.B.R.Ambedkar’s real name is Bheemarao Ramji. When his young age he suffered out of poverty his teacher helped him to learn and that is what made Dr.B.R.Ambedkar what he was in his later stages. Out of his love for his Teacher, he had named himself as Ambedkar.

    Whatever is said and done, Mahabharata narrates all the events even the minute details happened. It is you who has to rightly interpret and understand things correctly. Just because the evil characters talk rubbish about good people in a story does not really mean it is the view of the Author. Wrong ones are always Wrong ones at any time. Right ones are always right ones at any time. Both at the times of Mahabharata and the times of today’s modern world! Please learn to identify the right ones.

    Thank you very much!!

  47. பூவண்ணன் சார்,

    ரொம்ப கோவமா இருக்கீங்க போல. இங்கு இட வேண்டிய பதிலை, வேறு ஒரு இடத்தில் இட்டுவிட்டீர்கள் போல.

    மறுபடியும் மறுபடியும் நீங்கள் புரியாதது போலவே பேசுவதால் உங்களுக்கு புரிய வைக்க ஒரு உதாரணம்

    கலைஞர், தமிழ் காவலரின் அரசியல் வாரிசு யார்? அவரது மனைவியாரின் மகன் ஸ்டாலின் தானே! அவரது துணைவியாரின் மகள் கனிமொழி இல்லையே? துணைவியின் மகளுக்கு கவி வாரிசாகவும் ராஜ்ய சபா மந்திரியாகவும் தானே தகுதி. அது போல தான் விதுரர் கதையும். இதற்கு மேலும் உங்களுக்கு புரியவில்லை என்றால் நல்லா புரியும்படிக்கு ஒரு உதாரணம் சொல்லலாம். அது பிரசுராமாகதேன்பது வேறு விஷயம்.

    சரி இதே விஷயத்தை வைத்துக்கொண்டு முத்தமிழ் காவலர் பெண்னடிமைவாதி என்று கூட பார்க்கலாமே நீங்கள்?

    யுதிஷ்டிரர் மனைவியை அடிமை வைக்கும் முன் தம்பிகளை அடிமை வைத்து விளையாடினார். அப்புறம் வேறு வழி இல்லாமல் மனைவியை அடிமை வைத்தார். அவரது தம்பிகள் அனைவரும் ஆண்களே. அதனால் முதலில் யுதிஷ்டிரர் ஒரு பெரும் ஆணடிமைவாதி. இதை வைத்து நாம் காணுவது என்னவென்றால் அந்தகாலத்தில் பெரியவர்கள் அனைவரும் பெரும் ஆணடிமைவாதிகள்.

    சரி மனைவியை அடிமை வைத்து விளையாடியதாக எத்தனை சான்றுகள் நீங்கள் வைத்துள்ளீர்கள்? கலைஞர் தான் பெண்ணையும் மனைவி துணைவிகளையும் வைத்து அரசியல் செய்கிறார்.

    இது மகாபாரத்ததில் வரும் நிகழ்வு. அதற்கப்புறம் பாஞ்சாலி யுதிஷ்டிரரை எல்லோர் முன்பும் எக்குதப்பாக திட்டுவதும், தன்னை அடிமையாய் வைத்து விளையாட தகுதி இல்லாததையும், ஏன் பீஷ்மாதிகள் கோழைகளாக பேசாமல் இருந்தார்கள் என்பதையும் மகாபாரதமே சொல்கிறது. அதை எல்லாம் படிக்க மாட்டோம்ல நாம?
    இந்த கேவலத்தை செய்த அனைவரும் என்ன நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது மகாபாரத்தில் அடுத்து வருகிறது.

    இந்திய பெண்களின் நிலை என்று ஒரு ஆராய்ச்சி புஸ்தகம் போட்டிருக்காங்க சார். அதை முடிஞ்சா வாங்கிப் படிங்க. நிலைமை சீரழிய தொடங்கியது, புத்தர் அல்லது அலேக்ஸ்சாண்டர் காலத்திற்கு அப்புறமே என்று விளங்கும். (குறிப்பு புத்தருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை)

  48. பூவண்ணன் சார்

    இதே மகாபாரத தொடக்கத்தில் துஷ்யந்தன் என்ற க்ஷத்ரியர் சாகுன்தலை என்ற பிராமண பெண்ணை கல்யாணம் கட்டிக்கொண்டு பரதனை பெற்றெடுக்கிறார். பரதர் தனது உதவாக்கரை பசங்களை அரியணை ஏற்றாமல், பூமன்யுவை அரியணை ஏற்றுகிறார். இதை பற்றி முன்பு தமிழ் ஹிந்துவில் வாசித்த ஞாபகம்.

    பரதர் தனது மூன்று மனைவிகளையும் மனைவிகள் என்று தான் சொல்கிறார், மனைவி, துணைவி, இணைவி என்றெல்லாம் இல்லை.

    க்ஷத்ரிய ஆண் பிராமண பெண் விவாஹம் எளிதில் சாத்தியம், வைஷ்ய ஆண் பிராமண பெண் அல்லது க்ஷத்ரிய பெண் விவாஹம் கொஞ்சம் அசாத்தியம் என்பது விளங்குகிறதா இல்லையா. இது வர்ண பிரச்சனை இல்லை தானே?

  49. பூவண்ணன் அவர்களே…..

    எப்படி….மகாபாரத காலத்தில் தாய்வழி அரசுரிமையா? ..இந்த ராகுல சாங்கிருத்தியாயன் பிட்டெல்லாம் இங்கே வேண்டாம்…..

    திருதராஷ்டிரன் மகன் என்பதால் தான் துரியோதனன் அரசனாக முடிந்தது….பாண்டுவின் மகன் என்பதால்தான் யுதிஷ்டிரன் அரசனாக முடிந்தது……

    அம்பிகையும் , அம்பாலிகையும் அரசகுமாரிகள்……அவர்களின் மக்களே அரசர்களாக முடியும்…..வேலைக்காரியின் மகன் எப்படி அரசனாக முடியும்? உங்கள் சொத்தை உங்கள் மகனுக்குத்தான் கொடுப்பீர்கள்…. வேறு யாருக்கேனும் எப்படி கொடுப்பீர்கள்…..? இருப்பினும்,பாரதத்தில் விதுரருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது……

    பிரம்மசிராஸ் அஸ்திரத்தைஅஸ்வத்தாமா ஏவியவுடன் அர்ஜுனனும் பதிலுக்கு பிரம்மசிராஸ் அஸ்திரத்தை ஏவுகிறார்……இரண்டு அஸ்திரங்களும் இந்த உலகையே அழித்துவிடும் என்பதால் , இரண்டு அஸ்திரங்களுக்கும் நடுவில் நாரதரும் , வியாசரும் வந்து நின்று கொள்கிறார்கள்…..உலக நன்மையை உத்தேசித்து இருவரும் தங்கள் அஸ்திரங்களை திரும்பப்பெறுமாறு கூறுகிறார்கள்…..மன உறுதியுள்ள அர்ஜுனன் அஸ்திரத்தை திரும்பப்பெறுகிறார்…..காழ்ப்புணர்வின் உச்சத்தில் இருந்த அச்வத்தாமாவால் பிரம்மசிரசை திரும்பப்பெற முடியவில்லை……அஸ்திரம் ஏதோ ஒரு இலக்கை தாக்கியே ஆகவேண்டும் என்பதால் , அது உத்தரையின் கர்ப்பத்தில் போய் விழவேண்டும் என்று அச்வத்தாமாவே கூறுகிறான்….
    கிருஷ்ணர் தலையிட்டு , நான் அந்தக்குழந்தையை உயிர்ப்பிக்கிறேன் என்று கூறுகிறார்……இதுதான் நடந்தது……கடோத்கஜன் மனைவி கர்ப்பமாகவும் இல்லை…..அவள் கர்ப்பத்தை குறிவைத்து அஸ்திரமும் ஏவப்படவில்லை…..

  50. // புராண இதிஹாஸங்கள் மற்றும் கடவுளர்கள் (நாகர்களை), நிஷாதர்களை இழிவு படுத்துகின்றன என்று சொல்லியுள்ளார். தவறு என்று மேற்கண்ட ச்லோகங்கள் தெரிவிக்கின்றன. //

    திரு. கிருஷ்ண குமார் அவர்களின் உதாரணங்கள் அருமை.

  51. பிரசன்னா சார்
    பாண்டுவிர்க்கு அண்ணனுக்கு கண் இல்லை என்பதால் தான் கிரீடம் கிடைத்தது.சரி
    அவருக்கு சாபம் கிடைத்து அவரை அரச பதவியை துறந்த பிறகு பதவி எப்படி கண் இல்லாததால் மறுக்கப்பட்டவருக்கு சென்றது எனபது தானே கேள்வி
    அவர் அரச பதவியை துறந்து காட்டுக்கு சென்ற போது யாருக்கும் குழந்தை கிடையாது
    அப்போது பாண்டுவிர்க்கு அடுத்த விதுரருக்கு தானே வந்து இருக்க வேண்டும்.வரவில்லையே
    கண்ணை விட சாதி முக்கியம் என்பதை இது காட்டவில்லையா
    அந்த காலகட்டத்தில் மக்கள் தாசி பெற்ற மகனை அவன் எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று மகாபாரதம் கூறுகிறது என்பதை ஏற்று கொள்வதில் என்ன தயக்கம்

    கடோத்கஜனுக்கும் அபிமன்யுவிர்க்கும் தாயின் சாதியை தவிர வித்தியாசம் என்ன
    இதில் அபிமன்யுவின் வாரிசு தானே மன்னன் ஆகிறான்

  52. வியாச பாரதம் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாங்க:
    வால்மீகி ராமாயணமும் கிடைக்கும்

    எஸ்.வெங்கட்ரமணன்
    அலைபேசி எண்: 9894661259
    ஸ்ரீ சக்ரா பப்ளிகேஷன்ஸ்
    புது எண் 9 நம்மாழ்வார் தெரு
    கிழக்கு தாம்பரம்
    சென்னை.

  53. அருமையான பதிவு மிக தெளிவான நிதர்சன விளக்கங்கள்! வாழிய நீவீர் திருமிகு அ நீ அவர்களே!

  54. பூவண்ணன்,

    இன்னும் முயற்சி செய்யுங்கள், இன்னும் நல்லா?

    அரசியல் காரணத்துக்காக சூத்திரனாக கருதப்பட்ட கர்ணன் என்ற மகா யோக்யருக்கு அங்க தேச அரசுரிமை கிடைத்ததே அதுவும் அதே மகாபாரத்ததில் தானே?

    இதை ஏன் சார் நீங்கள் கவனிக்கவில்லை.

    சார் இதெல்லாம் அரசியல் காரணம், நீங்கள் மறுபடியும் மறுபடியும் இப்படி ஜாதியை இழுத்துவிடுவதென்பது ஒரு ஐம்பதாண்டுகளாக தமிழகம் பார்க்கும் அரசியல் காரணம்.

    சரி இப்படி கொஞ்சம் யோசிப்போம். ஸ்டாலின் எனக்கு தமிழ் நட்டு அரசியலே வேணாம், பேசாம மங்கோலியா போய் மாமூகா என்ற கட்சியை அண்ணன் செங்கிஸ் கான் நினைவாக ஆரம்பித்து பொழப்பு நடத்தலாம்னு முடிவு செய்தா, முத்தமிழ் வித்தகரின் அரசியல் வாரிசு யாராக இருப்பார். மனிவியாரின் மகன் அழகிரியா? துணைவியாரின் மகள் கனிமொழியா?

    காங்கிரஸ் ஏன் ராகுல் காந்தி பின்னாடி நிக்கி. ஏன் பிரியங்கா பின்னாடி நிக்கல? பெண்ணடிமையா இது? இதெல்லாம் வெறும் அரசியல் சார்.

  55. பூவண்ணன்

    //
    கடோத்கஜனுக்கும் அபிமன்யுவிர்க்கும் தாயின் சாதியை தவிர வித்தியாசம் என்ன
    இதில் அபிமன்யுவின் வாரிசு தானே மன்னன் ஆகிறான்
    //

    ஐயாயிரம் ஆண்டுகள் கடந்து சாக்ஷாத் அசுர ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடந்தது என்ன செய்ய.

    கல்யாண சமையல் சாதம் பாத்தீங்கல்ல தினமும் ஒரு ராஜ அப்படி சாப்ட கஜானா காலி தான்.

    கடோத்கசனின் பசங்களை பத்தி அப்புறம் பேசுவோம்.

  56. கிறிஸ்துவர்களிடம் அவர்கள் மதம் குறித்து கருத்து விவாதம் செய்து பாருங்கள், அனைத்திலும் பதில் சொல்ல முடியாமல் திணறினாலும் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். அதுபோல்தான் இந்த பூவண்ணன் அவர்களும். அவருக்கு சான்றோன் கொடுத்துள்ள விளக்கங்கள் நெற்றிபோட்டில் அடித்து புரிய வைப்பது போல் உள்ளது. ஆனாலும் புரிய வேண்டுமே! அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் எழுத்து சேவை அனைவர் மத்தியிலும் போய் சேருமாறு நாம் பார்த்து கொள்ளவேண்டும். சாரங், கிருஷ்ணகுமார், சான்றோன், பிரகாஷ் சங்கரன் போன்றோர் மறுமொழிகளோடு நின்று விடாமல் கட்டுரைகளும் தர வேண்டும். சுவாமி விவேகானந்தர் சொன்னது போல் ஒவொரு இந்துவும் ஒரு இயக்கமாக மாறி வேலை செய்ய வேண்டும்.

  57. Dear Mr. Poovannan,

    “அவர் அரச பதவியை துறந்து காட்டுக்கு சென்ற போது யாருக்கும் குழந்தை கிடையாது
    அப்போது பாண்டுவிர்க்கு அடுத்த விதுரருக்கு தானே வந்து இருக்க வேண்டும்.வரவில்லையே
    கண்ணை விட சாதி முக்கியம் என்பதை இது காட்டவில்லையா”
    There is nowhere in Mahabharata stated that Pandu went to woods after he got the curse from the Brahmana. It is again your wrong understanding of this great epic. Pandu goes to woods after he had acquired all the wealth from the countries he defeated. He goes to the forest with his two wives more of a tour after the war. See the references below.
    Reference: Mahabharata: Kisari Mohan Ganguly- Adi Parva- Sambhava Parva- Section CXIII:-
    “And, O king of kings, that best of monarchs then gave himself up to enjoyment in the company of his two wives as best he liked and to the limit of his desires. And after thirty days had elapsed, the Kuru king, O monarch, started from his capital for the conquest of the world. And after reverentially saluting and bowing to Bhishma and the other elders of the Kuru race, and with adieus to Dhritarashtra and others of the family, and obtaining their leave, he set out on his grand campaign, accompanied by a large force of elephants, horses, and cars, and well-pleased with the blessings uttered by all around and the auspicious rites performed by the citizens for his success. And Pandu, accompanied by such a strong force marched against various foes. And that tiger among men–that spreader of the fame of the Kurus–first subjugated the robber tribes of asarna. He next turned his army composed of innumerable elephants, cavalry, infantry, and charioteers, with standards of various colours against Dhirga–the ruler of the kingdom of Maghadha who was proud of his strength, and offended against numerous monarchs. And attacking him in his capital, Pandu slew him there, and took everything in his treasury and also vehicles and draught animals without number. He then marched into Mithila and subjugated the Videhas. And then, O bull among men, Pandu led his army against Kasi, Sumbha, and Pundra, and by the strength and prowess of his arms spread the fame of the Kurus. And Pandu, that oppressor of foes, like unto a mighty fire whose far-reaching flames were represented by his arrows and splendour by his weapons, began to consume all kings that came in contact with him. These with their forces, vanquished by Pandu at the head of his army, were made the vassals of the Kurus. And all kings of the world, thus vanquished by him, regarded him as the one single hero on earth even as the celestials regard Indra in heaven.”

    Adi Parva- Sambhava Parva- Section CXIV:-
    “Vaisampayana said, ‘Pandu, then, at the command of Dhritarashtra, offered the wealth he had acquired by the prowess of his arms to Bhishma, their grand-mother Satyavati and their mothers. And he sent portion of his wealth to Vidura also. And the virtuous Pandu gratified his other relatives also with similar presents. Then Satyavati and Bhishma and the Kosala princes were all gratified with the presents Pandu made out of the acquisitions of his prowess. And Ambalika in particular, upon embracing her son of incomparable prowess, became as glad as the queen of heaven upon embracing Jayanta. And with the wealth acquired by that hero Dhritarashtra performed five great sacrifices that were equal unto a hundred great horse-sacrifices, at all of which the offerings to Brahmanas were by hundreds and thousands.

    “A little while after, O bull of Bharata’s race, Pandu who had achieved a victory over sloth and lethargy, accompanied by his two wives, Kunti and Madri, retired into the woods. Leaving his excellent palace with its luxurious beds, he became a permanent inhabitant of the woods, devoting the whole of his time to the chase of the deer. And fixing his abode in a delightful and hilly region overgrown with huge sala trees, on the southern slope of the Himavat mountains, he roamed about in perfect freedom.”
    “And at the command of Dhritarashtra, people were busy in supplying Pandu in his retirement with every object of pleasure and enjoyment.”

    So it is very evident that as a King Pandu went to woods and Dhritharashtra was maintaining the masses. But he was not the King. So the arguement why Vidura was not made to be a King becomes invalid.

    Pandu later some time got cursed by the brahmana who was in the form of a deer.
    Adi Parva- Sambhava Parva- Section CXVIII:-
    “Vaisampayana said, ‘O king, one day Pandu, while roaming about in the woods (on the southern slopes of the Himavat) that teemed with deer and wild animals of fierce disposition, saw a large deer, that seemed to be the leader of a herd, serving his mate. Beholding the animals, the monarch pierced them both with five of his sharp and swift arrows winged with golden feathers. O monarch, that was no deer that Pandu struck at, but a Rishi’s son of great ascetic merit who was enjoying his mate in the form of a deer.”
    “The deer then said, ‘O, king, I did not blame thee for thy having killed
    a deer, or for the injury thou hast done to me. But, instead of acting so cruelly, thou shouldst have waited till the completion of my act of intercourse.”
    “And that wife of thine with whom thou mayst be united in intercourse at the time of thy death shall also follow thee with affection and reverence to the domains of the king of the dead. Thou hast brought me grief when I was happy. So shall grief come to thee when thou art in happiness”

    Adi Parva- Sambhava Parva- Section CXIX:-
    “Vaisampayana continued, ‘The king, having thus wept in sorrow, with a sigh looked at his two wives Kunti and Madri, and addressing them said, ‘Let the princess of Kosala (my mother), Vidura, the king with our friends, the venerable Satyavati, Bhishma, the priests of our family, illustrious Soma-drinking Brahmanas of rigid vows and all elderly citizens depending on us be informed, after being prepared for it, that Pandu hath retired into the woods to lead a life of asceticism.'”

    “அவர் அரச பதவியை துறந்து காட்டுக்கு சென்ற போது யாருக்கும் குழந்தை கிடையாது”
    But when Pandu was in woods he becomes a Brahmarishi. (One more example apart from vishwamitra for a previous question of yours)
    Adi Parva- Sambhava Parva- Section CXX:-
    “Vaisampayana said, ‘Pandu, possessed of great energy, then devoted himself to asceticism. Within a short time he became the favourite of the whole body of the Siddhas and Charanas residing there. And, O Bharata, devoted to the service of his spiritual masters, free from vanity, with mind under complete control and the passions fully subdued, the prince, becoming competent to enter heaven by his own energy, attained to great (ascetic) prowess. Some of the Rishis would call him brother, some friend, while others cherished him as their son. And, O bull of Bharata’s race, having acquired after a long time great ascetic merit coupled with complete singleness, Pandu became even like a Brahmarshi (though he was a Kshatriya by birth).”

    He realises he can’t attain the abode of gods with out having children being born as a human being in the earth. Hence he decides to have kids. This is when Kunti’s boon from Durvasa Rishi helps them to beget children from Dhrama (Yudhishthira), Vaayu(Bheema) Indra (Arjuna) and Aswins (Nakula & Sahadeva – for Madri.)

    Only after Yudhishthira’s birth Duryodhana is born to Gandhari. After that, 99 sons & 1 daughter were born to Gandhari. There names have also been elaborated in this great epic.

    Adi Parva- Sambhava Parva- Section CXX:-
    “According to the order of birth, king Yudhishthira was the oldest. The news of Duryodhana’s birth was carried to Bhishma and the wise Vidura. The day that the haughty Duryodhana was born was also the birth-day of Bhima of mighty arms and great prowess”

    When all the children to both Pandu and Dhritharashtra took birth, it is very evident that even after retiring to woods, Pandu was the king. Because there is a possibility any time he can come back and start ruling the country. Though he retired to woods to practice severe penances, a king cannot be replaced when he is alive.

    And when he died having the intercourse with Madri, and Madri ascending his funeral pyre, Kunti took her 5 children accompanied by plenty of public comes to Hastinapura carrying the ashes of both pandu and Madri.

    “அன்புள்ள பிரசன்னகுமார்
    மூத்தவர் திருதராட்டினர்.அவர் கண் பார்வை இல்லாதவர் என்பதால் அரச பதவி மறுக்கபடுகிறது.பாண்டுவிர்க்கு செல்கிறது
    ஒரு சூழ்நிலையில் பாண்டு அதை துறக்க நேரிடும் போது ,அவர் பதவியை துறந்து காட்டில் வசிக்கும் போது தானே குந்திக்கு குழந்தைகள் பிறக்கின்றன .அப்படி இருக்கும் போது தர்மருக்கு எப்படி 16 வயது ஆகும்”

    Here we go…. Vyasa has clearly mentioned even the dates exactly when each event have happened. If you are ready to spend some time on it, please visit the link https://www.hindunet.org/hindu_history/ancient/mahabharat/mahab_patnaik.html.
    You can be very much sure that when Yudhishthira the very first time came to Hastinapura, after Pandu’s death he was 16 years old.

    Here it is clearly justified why Vidura was not selected as a King -in charge. When a Kshatriya (Pandu) can become a brahmarishi (as a brahmana) through his asceticism, there is no gate closed for any body to be a King (as a Kshatriya) through their prowess. But here Bhishma gave the in charge to Dhritharashtra just to avoid most contest for the ascension of the throne as already there were sons in their teens to both Pandu & Dhritharashtra.

    “கடோத்கஜனுக்கும் அபிமன்யுவிர்க்கும் தாயின் சாதியை தவிர வித்தியாசம் என்ன
    இதில் அபிமன்யுவின் வாரிசு தானே மன்னன் ஆகிறான்”
    Do you really know whether Gadotkacha had sons? Have you really came across their names? Can you atleast tell me when he has exactly had a son and by whom? Without reading the original text and understanding the epic correctly, you are making weird guesses my dear friend.

    Please read the original text fully and if you have any doubts come back to us. We all are here to resolve your queries.
    Just start reading Hindu original texts/ translations atleast from now on. For your reference please check this link below.

    https://www.mahabharataonline.com/

    My Sincere thanks!!

  58. திரு பூவண்ணன் அவர்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களும் பதிலையும் சாந்தமாகவும், புரிந்து கொள்ளும்படியாகவும் விளக்கம் அளித்து கொண்டிருக்கும் அன்பர்கள் திரு ஜடாயு, திரு பிரசன்னா, திரு சாரங், திரு கிருஷ்ணகுமார் – உங்களுக்கு நன்றிகள்

  59. dear prasannasundar
    விசித்திர வீர்யர் இறந்த பிறகு ராஜ்யத்தை யார் பார்த்து கொண்டது
    பீஷ்மரா
    அப்படி இருக்கும் போது பாண்டு இறந்த பிறகும் யுதிஷ்டிரர் பதவி ஏற்கும் வயது,தகுதி வரும் வரை அவர் பார்த்து கொண்டு இருக்கலாமே
    மனைவியோடு கூடி வாரிசு பெரும் வாய்ப்பு இல்லை என்ற சாபம் வந்ததால் காட்டிற்கு சென்று விடுகிறார் பாண்டு.
    அப்போது அடுத்த வாரிசு யார் என்று மூத்தோர்கள் யோசிக்கவில்லையா
    குழந்தைகள் இருக்கும் திருதராடினரை மன்னர் ஆக்குவது குழப்பத்திற்கு வழி வகுக்குமா இல்லை வாரிசு இல்லாத விதுரரை ஆக்குவது குழப்பங்களுக்கு வழி வகுக்குமா
    விஸ்வாமித்திரர் கதை ,அல்லது லட்சத்தில் கோடியில் ஒருவர் ஏற்று கொள்ளப்படும் கதைகள் ஆஸ்திரேலியா அரசு டெண்டுல்கர் அவர்களுக்கு கௌரவ குடியுரிமை வழங்குவது போல .
    சாதனையாளர்களை அங்கீகரித்ததால் அவர்கள் பெயரில் கோத்திரம்,பயிற்சி மையம் துவங்குவதால் நிற வெறி இல்லாத இடம் என்று கூற முடியுமா
    வெறும் பிறப்பால் லட்சகனக்காவர்கள் சச்சின் நிலையை அடைவதற்கும் ,கோடிகணக்கான மக்கள் சச்சினாக இருந்தால் தான் ஏற்று கொள்ளபடுவர் என்பதற்கும் வித்தியாசம் இல்லையா

  60. பூவண்ணன் சார்

    /
    அப்படி இருக்கும் போது பாண்டு இறந்த பிறகும் யுதிஷ்டிரர் பதவி ஏற்கும் வயது,தகுதி வரும் வரை அவர் பார்த்து கொண்டு இருக்கலாமே
    /
    அது ஏன் சார் விதுரர். மறுபடியும் பீஷ்மரே பாத்துக்கலாம்ல. விதுரரை பற்றி அவரது சிந்தனை ஓட்டம் பற்றி உங்களுக் தெரியுமா? யுத்தம் முடிந்த பிறகு யுதிஷ்டிரர் பிரதான மந்திரி கொடுத்தார் அதை மறுத்தார் அவர். மேலும் அவர் குரு வம்சத்தவர் அல்ல. அவர் ஒரு பக்கத்து நாட்டு ராஜவுக்கு பிறந்து ஹச்தினாபுரத்துடன் தனது ராஜ்யத்தை இணைத்திருந்தாலும் அவருக்கு அரியணையை பாதுகாக்கும் உரிமை கிடைத்திருக்காது.

    இவ்வளவு ஏன், வியாசர் மூலமாக குழந்தை பெற்று ராஜவாக்குவதர்க்கு பதில் பேசாமல் வ்யாசரையே ராஜாவாக்கி இருக்கலாமே.

    கலைஞர் கழகத்த துணைவியாரின் மகளுக்கு கொடுத்தாலும் கொடுப்பாரே ஒழிய கோபால்சாமிக்க கொடுப்பார்.

    நீங்கள் கர்ணன் எப்படி ராஜா ஆனார் என்பதை கண்டுக்கவே இல்லையே ?

  61. Dear Mr. Poovannan,

    When Vichitravirya died there was no younger brother to him. So Bhishma maintained the masses without being a King. Even after the compulsion from Satyavati and others Bhishma refuses to marry and ascend the throne. That is why Satyavati requests Vyasa to beget Children upon Ambika & Ambalika. Till the time Dhritharashtra & Pandu attained the right age to rule the Kingdom, it was Bhishma took care of the country without being a King. As per the story, Bharata was without a King. Why because he did not have any other option.

    But when Pandu died he had an option – Dhritharashtra to take care of the nation. It is evident that Pandu extended the length & breadth of the nation. Dhritharashtra commanded his courtiers to serve Pandu with all the requirements for a perfect vacation. It was not vidura who took care of Pandu’s assistance.

    Hence it is clear Vidura was never interested in being a king or inspired by the Kingly attitude to command the masses or make orders. He was completely devoted to virtue and acted more of a minister. A kshatriya becomes through his character & professional likes. Vidura was not protrayed with that kind of Kshatriya’s attitude. His charater is completely devoted to truthfulness and virtue.

    Further his birth’s reason was Mandavya’s curse to Yamadharma. Apart from this Vidura did not have much to do with the great cause of reducing the Bhoo- Bhara! i.e., a mass killing to take place in Kurukshetra! Vidura always supports Pandavas who were devoted to righteousness. He does not have any adverse opinion on Krishna being the incarnation of Lord Vishnu!

    Vidura’s non ascension of the throne is mainly because of his inborn character. There is no where in this great epic recorded as Vidura aspired to become the King! But a foremost quality of a Kshatriya those days was to take the incharge through the power of arms. We could see all through the epic Vidura never showed up such kind of attitude. He was the incarnation of Yamadharma, born due to Mandavya’s curse, stood morally by the Pandavas and helped Pandavas when Varanavata was fired. This was his role in Mahabharta. Please dont confuse yourself by getting in to weird guesses.

    Thanks & Regards!!

  62. அன்பு அரவிந்தன் அறிவுஜீவி திரு முத்துக்குமாரசாமி அவர்களுக்கு சரியான ஆதாரங்களோடு பதில் அளித்திருக்கிறார். அதற்கு பதிலாக எந்த ஆதாரத்தையும் திரு எம்டி அவர்களால் கொடுக்கமுடியவில்லை என்பதை ஸ்ரீ கந்தர்வன் சுட்டிய இணையப்பக்கங்களில் காணமுடிகிறது.
    ஒரே இடத்தில் அடியேனுக்கு ஸ்ரீ அநீ அவர்களின் கருத்தில் அடியேனுக்கு ஐயமுள்ளது. அது சண்டாளன் என்பதும் சூத்திரன் என்பதும் ஒன்று என்ற ஸ்ரீஅநீ அவர்களின் வாதம்.சூத்திரன் என்பது சமூக அமைப்பில் கடைசிப்படிநிலை. சமூகத்தின் வரைமுறைகளை மீறியதால் சமூகத்தின் பல நிலைகளில் இருக்கும் ஒரு சிலர் விலக்கப்படும் போது அவர்கள் சண்டாளர். ஆக இருவரும் வேறு வேறு என்பதே அடியேனின் புரிதல்.த்ரிசங்கு என்ற சூர்ய குல மன்னன் தமது குலகுருவின் ஆணையை மீறியதால் அவரால் சண்டாளனாக சபிக்கப்பட்டது இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.
    சிவஸ்ரீ

  63. சாரங் சார்
    விதுரர் ராஜ்ஜியத்தை ஆள கூடியவர் என்ற எண்ணம் கூட எழாத நிலையை என்ன என்று கூறுவது
    தந்தையை வைத்து ராவணனை பிராமணன் என்று திரு சான்றோர் கூறும் போது
    விதுரருக்கு அது பொருந்தாதா (சான்றோன் சார் கேட்டுகோங்க,ராவணன் பிராமணன் அல்ல,பிராமண ஆணுக்கும் ,பிராமண பெண்ணுக்கும் பிறந்தவன் மட்டும் தான் பிராமணன் )
    தாயை வைத்து தான் சாதி .அதனால் அது தாய்வழி சமூகம் ஆகி விடாது.உயர் வர்ண ஆண் தனக்கு கீழ் உள்ள வர்ணங்களில் துணையை தேடி கொள்வதை எந்த காலத்திலும் எந்த நீதியும் தடுத்தது கிடையாது.பெண்ணுக்கு தான் அந்த தடை
    தண்டனையாக ஒதுக்கபடுதலும் பெண் உயர்வர்ணமாக இருந்தால் தான்
    மகாபாரதத்திலிருந்து தருமபுரி வரை அதே நிலை தான்
    அந்த காலகட்டத்தில் வாரிசு இல்லை என்றால் உயர் வர்ணத்தவர் துணை கொண்டு வாரிசு பெறுவது,பல தார மணம்,பல கணவர்கள் எதுவும் தவறுகிடையாது
    அது இழிவும் கிடையாது
    இழிவு,தவறு வர்ணத்தை வைத்து தான்.கீழ் வர்ண ஆணை துணையாக கொள்ளுதல் தான் பெரிய குற்றம்

    அரசர்கள் க்ஷத்ரியர்களாக எற்றுகொள்ளப்பட்டார்கள்.அதனால் தான் துர்யோதனன் கர்ணனுக்கு பட்டம் கட்டி அரசன் ஆக்கினான்
    சிறந்த வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் ஐ ஹிட்லர் கூட ஏற்று கொண்டிருப்பார்.அவரை தலைவராக கொண்டு ஆர்ய வீரர்களை உருவாக்கும் பணியை கொடுக்கவும் தயங்கி இருக்க மாட்டார்
    அப்படி செய்திருந்தால் அவர் நிறவெறி இல்லாதவர் என்று அர்த்தம் எடுத்து கொள்வோம் எனபது ஆச்சரியம் தான்

  64. நம்முடைய கிறிஸ்தவ நண்பர் திரவிட இயக்கப் புரவலர் திரு பூவண்ணன் எழுப்பிய இரு வினாக்களுக்கு விடையளிக்க விளைகின்றேன்.
    ஒன்று “அப்போது பாண்டுவிர்க்கு அடுத்த விதுரருக்கு தானே வந்து இருக்க வேண்டும். வரவில்லையே கண்ணை விட சாதி முக்கியம் என்பதை இது காட்டவில்லையா”.
    பூவண்ணன் இதனை விளங்கிக்கொள்ள நியோகம் என்ற பண்டைய முறையை புரிந்துக் கொள்ளவேண்டும்.இது லெவிரேட் என்றும் சமூக மானுடவியல் அறிஞர்களால் கூறப்படுகிறது. இணையத்தில் காண https://en.wikipedia.org/wiki/Levirate_marriage
    தந்தை வழி சமூகத்தில் காணப்படும் வழக்கமான இந்த முறைப்படி மூத்த சகோதரன் இறந்துவிட்டால் அவனது இளைய சகோதரன் விதவையான அண்ணன் மனைவியை மணந்து கொள்ளுதல் நடைபெறும். அவளுக்குக் வாரிசுகள் பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கில் இந்த முறை பண்டய நாளில் இந்த முறை நிலவியது. இன்றும் சிலபழங்குடிகளில் இதுப்பின்பற்றப்படுகிறது.
    குருகுல மன்னன் விசித்ரவீர்யனின் மரணத்திற்குப் பின்னால் நியோக முறைப்படி அம்பிகையையும் அம்பாலிகையையும் மணந்து அரச போகத்தினையும் ஏற்கும்படி அன்னை சத்யவதி மூத்த மகனான பீஸ்மரை வேண்டினால். அவர் மறுக்கவே குருகுலம் தழைக்கவேண்டும் என்பதற்காக தனக்குப் ஸ்ரீ பராசரரிஷி மூலம் பிறந்த ஸ்ரீக்ருஷ்ண த்வைபாயண வியாசரை அழக்கிறாள் அன்னை சத்யவதி. அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பிறந்தவர்கள் மட்டுமே குரு குலத்தினர் ஏன் எனில் திருமணம் மூலம் தந்தை என்ற நிலையை வியாசர் பெறவில்லை. த்ருதிராஷ்டிரன் பாண்டு ஆகியோரின் தந்தை வியாசர் அல்ல பூவண்ணன். அவர்களின் தந்தை சாஸ்திரப்படி ஸ்ரீ விசித்ரவீர்யன் மட்டுமே. தாசிக்கும் ஸ்ரீ வியாசருக்கும் பிறந்த ஸ்ரீ விதுரர் குருகுலத்தின் வாரிசு அல்லர். இவ்வகையில் சமூகமானுடவியல் அறிஞர்கள் Father மற்றும் Genitor இரண்டும் வேறு வேறு என்று சொல்வார்கள். ஸ்ரீ வியாசர் ஜெனிடர் மட்டுமே. விசித்ரவீர்யன் பாண்டுவுக்கும் த்ருதரஷ்டிரனுக்குமட்டுமே தந்தை என்பதால் ஸ்ரீ விதுரனை யாரும் வாரிசாகக்கருதவில்லை.

  65. இரண்டு பூவண்ணன் “தந்தை கீழ் வர்ணமாக /தாய் உயர் வர்ணமாக இருக்கும் கதை மாந்தர்களே எவ்வளவு தேடினாலும் கிடைக்க மாட்டேன் என்கிறார்களே”
    ஏன் இல்லை யாயாதி கதை இல்லையா படியுங்கள் இதனை பூவண்ணன்.
    https://en.wikipedia.org/wiki/Yayati
    பிராமணரான அசுரகுரு ஸ்ரீ சுக்ராச்சாரியாரின் மகள் தேவயாணியை மணக்கிறான் யயாதி என்ற சத்ரியன்.
    சிவஸ்ரீ.

  66. “விதுரர் ராஜ்ஜியத்தை ஆள கூடியவர் என்ற எண்ணம் கூட எழாத நிலையை என்ன என்று கூறுவது”

    Viduraruku andha yennam yezha villai endral adhan kaaranam avarin pirappin nokkam arasaalvadhu alla nanba! Adharkaga dan Mandavyarin flashbackai thelivaga eduthu sonen! Avaruku Mandavyaral saabam! Yamadharman Manidhanaga pirandhu avasthai pada vendum endru! Pirandhar, Dharmathin paadhai thavaramal vaazhndhar. Pandavargaluku advisoraga supportivaga councilloraga irundhar. Respectable minister post madri irundhar. Avalavu dan avar seidhar. Avaruku yen andha ennam yezha villai endru vidhanda vaadhamaga kettal enna solvadhu? Mu. Ka. Tamizharasu yen arasiyaluku varavillai? Samooga amaipinal avaruku arasiyal sindhanaiye varavillai, idhu samoogathin kutram endru solvadhai pol dan irukiradhu…

    Pandu brahmarishi alavuku ponar. Vidurar arasalavum asai pada villai, asceticagavum agavillai. Anaal avar miga sirandha arivaliagavae indha ithikaasam muzhudhum kanbika padugirar. Avar thozhilai avar therndheduthar! Idhil enna sir thappu???

    Idhuku mela ketkadhinga! Unga kelvia thanjavur kalvettula vetti vechutu adhuku pakathulaye ukkarndhukonga! Ungaluku pinnadi vara sandhadhigal, padichu paathu theiva nadandhupanga!

    ssssssss……. Mudiyala pa!!

  67. பூவண்ணன் அவர்களே…..

    பதில் சொல்ல முடியாத இடங்களை அப்படியே விட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறீர்கள்…..பரவாயில்லை …கழக காளைகளின் வழக்கமே அதுதானே…….

    உயர் சாதியினர் மட்டுமே ஆண்டார்கள் என்கிறீர்கள்……கர்ணன் ஆண்டானே என்றால் அது விதி விலக்கு என்கிறீர்கள்…….

    சிவஸ்ரீ.விபூதிபூஷன் அவர்கள் யயாதியை பற்றி குறிப்பிட்டுள்ளார்….அதற்காவது பதில் வருமா? இல்லை வழக்கம் போல் எஸ்கேப் தானா?

    பாரதத்தில் பிராமணனான அஸ்வத்தாமா இகழப்படுவது போல் வேறு யாரும் இகழப்படுவதில்லை……கோழைத்தனமாக அவன் இரவில் மேற்கொண்ட பயங்கர தாக்குதல் எந்த ஒளிவு மறைவுமின்றி விவரிக்கப்படுகிறது……

    .மீண்டும் மீண்டும் விதுரரையே பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள்……அவர் அரசியின் மகனல்ல….ஆகவே அவர் அரசராக முடியாது……

    ”சமூக நீதி” கண்ட கழகத்தில் , திருச்சி .சிவாவை விட , செல்வேந்திரனை விட……கனிமொழியும் , தயாநிதி மாறனும் தான் தகுதி உள்ளவர்களாக உங்கள் தலைவர் கண்ணுக்கு தெரிகிறது……

    இன்று வரை பிரிட்டனில் அரச குடும்ப வாரிசுகள் மட்டுமே மன்னராக முடிகிறது……அங்கெல்லாம் உங்களைப்போல யாரும் விதண்டாவாதம் செய்வதில்லை……

  68. திரு பூவண்ணன் அவர்களே,

    இதற்கு மேலும் நீங்கள் மீண்டும் மீண்டும் அக்காலத்து மகாபாரத சமூஹத்தை குறை மட்டும் சொல்லி கொண்டிருந்தால் அதற்கு விதுரர் தான் பொறுப்பு. பீஷ்மர் அல்ல. இயற்கையிலேயே விதுரரிடம் இருந்த குணம் அதற்கு காரணமாகிறது. அதை தான் கிருஷ்ணர் கீதையில் தெளிவாக சொல்கிறார் – வர்ணங்கள் குணங்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது என்று.

    விதுரருக்கு ராஜ்ய பரிபாலனத்தில் விருப்பமில்லாமல் போனது உங்களுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. அதை விடுத்து வேறொரு Character- ஐ analyse பண்ணுங்களேன். அதற்கு தான் திரு. சாரங் அவர்கள் கர்ணனை ஏன் உதாரணமாக எடுத்து கொள்ள மறுக்கிறீர்கள்? என்று கேட்கிறார். க்ருஷ்ணரையே எடுத்துக் கொள்ளுங்களேன். அவர் ஒரு இடையர் தான். ஆனால் அவர் க்ஷத்ரிய தர்மத்தை கைக்கொண்டார். யுத்தத்தில் ஈடு பட்டார்.
    துரோணர், கிருபர், அஸ்வத்தாமன் மூவரும் பிறப்பால் பிராமணர்கள் தான். ஆனால் யுத்தம் செய்வதையும் பயிற்றுவித்தலையும் மேற்கொண்டார்கள். இயல்பிலேயே அவர்களுக்கு அதில் ஆர்வமில்லாமல் இருந்திருந்தால் அது வேறு விஷயம். அவர்கள் யுத்தம் செய்ததையும் நாம் தவறென்று கூற முடியாது. விதுரருக்கு ராஜ்ய பரிபாலனத்தில் விருப்பம் இல்லாமல் போனதற்கும் நாம் யாரையும் குறை கூற முடியாது. தாசி மகன் என்பதால் மட்டும் ராஜ்யம் மறுக்க பட்டது என்பது விதண்டா வாதம்.
    நீங்கள் சொல்வது போல தாய் வழி சாதி தான் முதல் criteria என்றால் மீனவ பெண்ணான சத்யவதி யின் மைந்தரான வியாசருக்கு பிறந்தவர்கள் தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர். எனவே மூவருமே வேண்டாம் என்று கூறப்பட்டிருக்கும் அல்லவா?

    எனவே தாய் வழி சாதி தான் முக்கியம் என்பது அர்த்தமற்று போகிறது.

    இதற்கு மேல் விளக்க இதில் ஒன்றுமே இல்லை.

    மிக்க நன்றி.

  69. பூவண்ணன் சார்

    இப்பொழுது நீங்கள் அனைசத்திர்க்குள் சென்று விட்டீர்கள், நீங்கள் முதலில் என்ன சொன்னீர்கள். கடைசி மறுமொழியில் என்ன சொன்னீர்கள் என்று குழம்பி போய் விட்டீர்கள். கடைசியாக நீங்கள் எழுதியது தமிழ், அதாவது அதில் விஷயம் இல்லை என்று புரிந்துகொள்ளுக.

    //
    அரசர்கள் க்ஷத்ரியர்களாக எற்றுகொள்ளப்பட்டார்கள்.அதனால் தான் துர்யோதனன் கர்ணனுக்கு பட்டம் கட்டி அரசன் ஆக்கினான்
    //

    புரியலையே சார். கர்ணன் எங்கே அரசனாக இருந்தான், தேரோட்டி மகன்னு தானே பாரதம் சொல்கிறது. யதனால துரியோதனன் கர்ணனை ஏற்றுக் கொண்டான். அரசன் என்பதனாலா. இல்லையே, துரியோதனன் தான் கர்ணனை அரசனாக்குகிறான். அதாவது தேரோட்டி மகனை அரசனாக்குகிறான். அதற்க்கு முன் அவன் (துரியோதனன் அறிந்தமட்டில்) ஷத்ரியனும் கிடையாது அரசனும் கிடையாது, இருந்தும் அவனை அரசனாக்கினான். இது கர்ணனின் திறமையை கண்டு மட்டுமே, துரியோதனனுக்கு எதோ தாராள மனசு என்றில்லை. அர்ஜுனனை மடக்க தேவைப்படும் என்று தான்.

    ஆகா அந்த கால வழக்கப்படி. ஜாதியை மட்டுமோ திறமையை மட்டுமோ பார்த்து ஒரு செயல் செய்யப்படவில்லை. அந்த செயலின் பலனை பார்த்தே செய்யப்பட்டது என்று தேறுகிறது.

    தருமபுரியிலோ வேறெங்கோ பிராமணாள் யாரும் யாரையும் கொல்லவில்லை. அன்னிலேருந்து பாத்திங்கன்னா இதே நிலைமை தான், அம்பிகாபதி பாவம் அரசர் கையால் சாகடிகப்பட்டான்.

    தருமபுரி, ஜாதி, பிராமணாள், அன்று, இன்று, இல்லை, அடிமை, திமிரு இப்பைபட்ட தமிழ் வார்த்தைகளை மாத்தி மாத்திப் போட்டு வரிகள் தயார் செய்தது போதும் சார்.

  70. பூவாணன்

    எதோ விதுரருக்கு வரிந்து கட்டிக்கொண்டு பேசுவது போல பிட்டுக்கள் வேண்டாம். விட்டால் விதுரர் முன்னேற்ற கட்சியே ஆரம்பிச்சிடுவீர்கள் போல? மகாபாரத்தின் கண்ணோட்டத்தில் இன்றைய மற்றும் நமது முன்னோர்களின் (ஆசார்யர்கள் உட்பட) கண்ணோட்டத்திலும் விதுரர் ஒரு பிராமணர் அதாவது பார்பனர் அதாவது பிரம்மத்தை பார்ப்பவர் அதாவது ஞானி.

  71. நீலகண்டரே…..
    மகாபாரதம் எளிய நடையில் நீங்கள் எழுதவேண்டும்…

  72. சாரங் சார்
    ராஜாவாக யானை மாலை போட்டு ஆனவனும் உண்டு,அடிமையாக இருந்து ஆனவனும் உண்டு ,வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு ஆண்டவனும் உண்டு
    செளுகுஸ் வந்து இந்தியாவில் தங்கி விட்டால் கமல் தேவர்மகன் படத்தில் சொல்வது போல சமமான சாதி என்று சில சாதியில் பெண் எடுப்பார்கள் ,பெண் கொடுப்பார்கள் .சண்டை போட்டு செயித்ததால் க்ஷத்ரியர் ஆகி விடுவார்கள்
    லட்சத்தில் ஒரு யயாதி கதையில் கூட சாபம் வந்து அதனால் அசுரர்களின் குருவால் ஒத்து கொள்ளபடுகிறது.
    கீழ் வர்ணத்தோடு திருமணம்,பிறப்பு(யமனின் விதுரர் பிறப்பு கூட சாபம் தானே )
    ஒரு பிறப்பு ,திருமணம் சாபம் எனும் போது அது எதை குறிக்கிறது

    அகலிகையை ஏமாற்றி கடவுள் ஆன இந்திரன் கலவி செய்ததால் பயங்கர தண்டனை
    ஆனால் பணிப்பெண்ணை தனக்கு பதிலாக அனுப்பினால் பணிபெண்ணுக்கோ,இல்லை அப்படி அனுப்பிய அரசிக்கோ எந்த தண்டனையும் கிடையாது.அவர்களின் வர்ணத்தின் காரணமாக
    எந்த வித எண்ணமும் இல்லாமல் குழந்தைக்காக வரும் வியாசர் பணிப்பெண்ணோடு தொடர்பு கொள்வது கூட சாபத்தை நிறைவேற்றுவதற்காக தானே
    கீழ் வர்ண பிறப்பு எனபது தானே சாபம்

  73. அன்பு சான்றோன்
    பதில் சொல்லாத இடம் எது என்று சொல்ல முடியுமா .ஒருவழியாக ராவணன் பிராமணன் அல்ல என்று ஒத்து கொண்டீர்களே
    பிராமணன் என்றால் தாய் தந்தை இருவரும் பிராமணராக இருக்க வேண்டும் எனபது ராமாயண ,மஹாபாரத காலத்தில் இருந்து இன்று வரை இருக்கும் நியதி

    சிவஸ்ரீ சார் நீங்கள் சொல்வதை தான் நானும் கூறுகிறேன்.தந்தை ஒன்றாக இருந்தாலும் எல்லாரும் ஒன்று கிடையாது.தாயை வைத்து தான் சாதி/வர்ணம் என்று

    இது மற்ற வர்ணத்தவருக்கு கிடையாது.உயர் வர்ணத்தில் பிறந்து ஒதுக்கப்படும் ,தண்டிக்கபடும் அனைவரும் சூத்திரர் அல்லது பஞ்சமர் ஆவது எதை காட்டுகிறது .

    சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலிய அரசு சிறப்பு குடியுரிமை கொடுப்பது போல கீழ் வர்ணத்தில் பிறந்த கோடிகணக்கில் தலை சிறந்து விளங்கிய சிலரை உயர் வர்ணமாக ஏற்று கொள்வது வர்ண வெறி இல்லாமல் வேறு என்ன .
    சந்தடி சாக்கில் சாரங் சார் வேறு விதுரர் பிராமணர் என்று புது கதை விடுகிறார்.ஆயிரகணக்கான ஆண்டுகளாக இருக்கும் சங்கர மடங்கள் இன்றும் உண்டு. அதில் வேறு வர்ணத்தில் பிறந்து ,கலப்பு மணத்தின் வாரிசுகள் யாராவது பதவி வகித்த எடுத்துக்காட்டுகளை கொடுக்க முடியுமா
    நந்தனாரின் வாரிசுகளை கடவுளே நந்தியை நகர்த்தினார் என்பதால் பிராமணராக ஏற்று கொண்டு கோவிலில் பூசை செய்ய விடுகிறார்களா என்ன
    சேர,சோழ,பாண்டிய,பல்லவ ராஜா எந்த சாதியை சார்ந்தவர் இன்று கூற முடியுமா .முக்கால்வாசி சாதிகளோடு அவர்களுக்கு தொடர்பு உண்டு.வெற்றி வர்ணத்தை மாற்றும்.
    வெற்றி பெற்ற சிவாஜி சூத்திரர் என்பதால் பட்டம் கட்ட மறுக்கப்பட்டார்.அவர் வேறு ஊரில் இருந்து பிராமணர்களை அழைத்து வந்து பட்டம் கட்டி கொண்டு க்ஷத்ரியர் ஆகி விட்டார்.

  74. //பிரகாஷ் சங்கரன் … ரிக் வேதத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த வரிகளையே… கட்டுரையின் தலைப்பு *தீண்டாமையைப்* பேசுகின்றனவா இந்து மூல நூல்கள்? -என்பதை அவர் மறந்துவிட்டு புருஷ சூக்த வரிகளை எழுதியுள்ளார். //
    புருஷஸூக்தம் ரிக் வேதப் பகுதியென்றால் மூலநூல்களிலிருந்து தரப்பட்ட மேற்கோள் தானே?
    ஆனால் அந்த மேற்கோள் தவறானது. பலரும், கிறித்தவர்கள் உட்பட – இது ஏசுவைக் குறிக்கிறதாம் அவர்களுக்கு. ஏசு என்று இரண்டு பெண்டாட்டி கட்டினாரோ தெரியாது. ஏசு நான்கு வர்ணங்களாலான வேறுபாட்டையும், மற்றவர்கள் கூறுவது போல, கூறினாரா தெரியாது – பலகாலமாக இதனை மிகவும் தவறாகவே மேற்கோள் காட்டி வருவதால் இதனைச் சற்று விரிவாக ஆராய்தல் நலம் என்று எண்ணுகிறேன்.
    1. அது நான்கு வர்ணங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. //பிரகாஷ் சங்கரன் …. அந்த வரிகளிலும் *தீண்டப்படாத வர்ணம்* என்று ஒரு பிரிவு குறிக்கப்படவில்லையே – இதுவே இந்துமூல நூல்கள் தீண்டாமை என்றொரு கருத்தையே கற்பனைகூட செய்திருக்கவில்லை என்பதற்கு சான்று. ஆம், முத்துக்குமாரசுவாமி மேற்கோள் காட்டிய வரிகளிலேயே அவர் வாதத்துக்கு நேர்-எதிரான கருத்து உள்ளது. அதையும் அவர் யோசிக்கவில்லை – இந்து தர்ம மூல நூல்களை தீண்டாமையை ஆதரிக்கும் நூல்களாகக் காட்டவேண்டிய ஆத்திரம் கண்ணை மறைத்திருக்கலாம். // தீண்டாமையைக் குறிப்பிடவில்லை.

    நான்கு வர்ணத்தவரும் இறைவனே, எனவே அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வில்லை என்று குறிப்பிடுகிறது. எப்படி?

    இறைவனே எல்லாமாகியிருக்கிறான். பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தம் என்று நிறுவுவது அந்தப் பகுதியின் நோக்கம். எல்லா தலைகளும் அவன் தலைகளே. எல்லா கண்களும், பாதங்களும்…அந்த வரிசையில் அது எப்பொழுதும் இருப்பதும் இறைவனே என்றும் கூறுகிறது. அது தொடர்ந்து அந்த இறைவன் எவ்வாறு இந்த உலகாக ஆனான், தங்கம் நகைகளாக மாறுவது போல என்று கூறுகிறது. அவ்விதம் உருவகமாகக் கூறிவரும்பொழுது அவரிடமிருந்து எல்லாம் உண்டாயின என்றுகூறுகிறது. அப்பொழுது அவரே மனித இனமாக மாறினார் என்று கூற வரும்பொழுது அவரது முகம் எதுவாயிற்று?, கைகளாக எது சொல்லப்படுகிறது?, தொடைகளாகவும், பாதங்களாகவும் எது கூறப்படுகிறது? என்று கேள்வி கேட்டு பதிலாக – அவரது முகம் பிராம்மணனாக ஆயிற்று. கைகள் க்ஷத்திரியனாக ஆயின. தொடைகள் வைஶியனாக ஆயின. பாதங்கள் ஶூத்ரன் தோன்றினான் – என்று கூறியது.

    பாதங்களிலிருந்து பிறப்பது இழிவானதாக அவர்களே ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்தி அந்த நெருப்பில் குளிர்காய்ந்து வருகிறார்கள். பாதம் அடித்தளம் போல அது இல்லாமல் மீதி உடல் நிற்பது எங்ஙனம் என்று யாரையும் யோசிக்கவும் விடுவதில்லை. ஆனால் அந்த ஸூக்தம் அத்துடன் நின்றுவிடவில்லை. அது தொடர்கிறது – மனத்திலிருந்து சந்திரன் தோன்றினான்.கண்ணிலிருந்து ஸூரியன் தோன்றினான். முகத்திலிருந்து இந்திரனும், அக்னியும் தோன்றினர். பிராணனிலிருந்து வாயு தோன்றிற்று.

    தொப்புளிலிருந்து வானவெளி உண்டாயிற்று. தலையிலிருந்து ஸ்வர்கம் உண்டாயிற்று. பாதங்களிலிருந்து பூமியும், காதிலிருந்து திசைகளும், அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப்பட்டன.

    இப்போதாவது முஸ்லீம் அன்பர்களுக்குப் புரிந்திருக்கலாம். ஏன் இந்துக்கள் படைப்பை வணங்குகிறார்கள் என்று. படைப்பவனே படைப்பாக இருக்கிறான். அவனுக்கு அந்நியமாக படைப்பு என்று ஒன்று இல்லை. இருந்தால் அது படைப்பவனைச் சிறுமைப்படுத்திவிடும். படைப்பு படைப்பவனைச் சிறுமைப்படுத்திவிடும். படைப்பவனை விட படைப்பு பெரிதாக இருக்கும். படைப்பு எங்கும் இருக்கும். படைப்பவனோ எங்கோ இருப்பான், ஏழாவது வானத்தில். அதைத் தவிர எங்கும் அவன் இரான். அவன் நமது இன்னொரு மாமா அவ்வளவுதான். ஒரு மாமா சென்னையில், இன்னொரு மாமா, தஹேலியில், மற்றொரு மாமா நியூயார்க்கில், கடவுள் மாமா ஜன்னத்தில். அவ்வளவுதான்.

    இங்கு நாம் பார்ப்பது எந்த பாதத்திலிருந்து ஶூத்ரன் தோன்றினானோ, அதே பாதத்திலிருந்தே நாம் வணங்கும் பூமாதேவித்தாயும் தோன்றினாள். பாதத்திலிருந்து ஶூத்ரன் பிறப்பது எந்த விதத்தில் குறைவானது? அவனும் இறைவனே அல்லனோ? நிற்க,

    வேதவிஜ்ஞானம் – க்ருஷ்ணப்ரேமி பக்கம் – 500-502.
     
    ப்ராஹ்மணன் – ஆடு
    க்ஷத்ரியன் – செம்மறி ஆடு
    வைஶ்யன் – மாடு
    ஶூத்ரன் -குதிரை
    न शूद्रे पातकम् किञ्चित् न च संस्कारमर्हति ।। – मनुः
    ஶூத்ரனுக்கு, இயல்பிலேயே நல்லவனாக இருப்பதால், தூய்மைப்படுத்தும் வேத சடங்குகள் தேவையில்லை. – மநு
    पद्भ्यां शूद्रो अजायत । … पद्भ्यां भूमिः ।(पुरुषसूक्तम्)
    ஈஶ்வரன் பாதத்திலிருந்து கங்கை வந்தது. அதே பாதத்திலிருந்து ஶூத்ரன் வந்ததாகவும், பூமி வந்ததாகவும் கூறுவதால் ஶூத்ரர்கள் எப்போதுமே தூய்மையானவர்கள் போலும்
    தர்ம வியாதனிடம் கௌஶிகர் என்ற ப்ராம்ஹணர் தர்மம் படிக்க வந்த கதை மஹாபாரதத்தில் உள்ளது.
    शुचं द्रावयन्ति इति शूद्राः ।
    யாவருடையவும் துக்கத்தைப் போக்குவதால் ஶூத்ரர்கள் என்று பெயர்.
    वृषँ लाति इति वृषलः ।
    தர்மத்தை கிரஹிக்கிறான் என்பதால் வ்ருஷலன் என்றும் பெயர்.
    விஷ்ணு புராணத்தில் शूद्रः साधुः – ஶூத்ரன் ஸாது என்று வ்யாஸர் புகழ்கிறார்.

    //குந்தியின் மனசாட்சி விழித்துக்கொள்கிறது. அவள் கேட்கிறாள் பீமா அவளும் என் போல் தாய்தானே அவர்களும் உங்களைப் போல பிள்ளைகள்தானே அவர்களைச் சாகவிட்டுவிட்டு நாம் மட்டும் தப்பிப்பது முறையா என்று. கூடவே உயிர் பிழைக்க ஓடிக்கொண்டிருக்கும் தருமபுத்திரர் சொல்கிறார்: ‘தாயே கவலைப்படாதே அவர்கள் நால் வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல மிருகங்களுக்கு சமானமானவர்கள் அவர்கள் இறப்பதால் நமக்கு எந்த பாவமும் வராது.’// இது முத்துக்குமார சுவாமி அல்லது அவரது மூலம் இட்டுக் கட்டினது என்பது அந்த எழுத்து நடை எல்லா இடங்களிலும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக வருவதிலிருந்து தெரிகிறது.

    பிராம்ஹணன் யார் என்ற யக்ஷனுடைய கேள்விக்கு தரும புத்திரன் குணத்தாலேயே தீர்மானிக்கப்படுவதாக மஹாபாரதத்தின் யக்ஷப்ரஶ்னத்தில் கூறுகிறார்.

    மஹாபாரதத்தின் முக்கிய சிறுநூலாகிய கீதாவிலும்,
    चातुर्वर्ण्यं मया सृष्टं गुण-कर्म-विभाकशः ।
    तस्य कर्त्तारमपि मां विद्ध्यकर्त्तारमव्ययम् ।। गीता ४ : १३ ।।
    சாதுர்வர்ண்யம் மயா ஶ்ருஷ்டம் குணகர்ம-விபாகஶஹ
    தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்தி அகர்த்தாரம் அவ்யயம் (கீதா ௪ :௧௩)
    நான்கு வர்ணங்கள் என்னால் குணத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டன. அவற்றை நான் படைப்பது போல் தோன்றினாலும், நான் படைக்கவில்லை. (இந்த குணத்தைச் சாரந்தவர்கள் இந்த வர்ணம் என்பது பகவானின் சட்டம். அவரவர்களே தங்கள் குணங்கள் மூலமாக ஓரொரு வர்ணத்தைச் சார்ந்தவர்களாகிறார்கள். பள்ளிக்கூட மாணவனுக்கு வெற்றி மதிப்பெண்ணோ, தோல்வி மதிப்பெண்ணோ போடுவது ஆசிரியரானாலும் அது மாணவனின் படிப்பின் அடிப்படையிலேயே இடப்படுவதால் மாணவனே தனது வெற்றி, தோல்வியை முடிவு செய்கிறான்.)
    ब्राम्हण-क्षत्रिय-विशां शूद्राणां च परन्तप ।
    कर्माणि प्रविभक्तानि स्वभाव-प्रभवैर्गुणैः ।। गीता १८ : ४१-४४ ।।
    ப்ராம்ஹண-க்ஷத்ரிய-விஶாம் ஶூத்ராணாம் ச பரந்தப
    கர்மணி ப்ரவிபக்தானி ஸ்வபாவ-ப்ரபவைர்குணைஹீ (கீதா ௧௮ :௪௧-௪௪)
    ப்ராம்ஹணர், க்ஷத்ரியர், வைஶ்யர் மற்றும் ஶூத்ரர்களின் செயல்கள் அவர்களுக்கு இயல்பாயமைந்த குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. (கவனிக்கவும் பிறப்பின் அடிப்படையில் அன்று.)
    ब्राम्हणः क्षत्रियो वैश्यस्त्रयो वर्णा द्विजातयः ।
    चतुर्थ एकजातिस्तु शूद्रो नास्ति तु पञ्चमः ।। मनु १० : ४ ।।
    ப்ராஹ்மணஹ க்ஷத்ரியோ வைஶ்யஸ்த்ரயோ வர்ணா த்விஜாதயஹ
    சதுர்த்த ஏகஜாதிஸ்து ஶூத்ரோ நாஸ்தி து பஞ்சமஹ (மநு ௧0 :௪)
    ப்ராம்ஹணர், க்ஷத்ரியர், வைஶ்யர் ஆகிய மூவரும் த்விஜர்கள். நான்காவது ஶூத்ரர். ஐந்தாவது ஒரு வர்ணம் என்பது கிடையாது.
    ஆயிரக்கணக்கில் இருக்கும் ஜாதிக்கும், நான்கேயான வர்ணத்திற்கும் முடிச்சு போடுவது மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல உள்ளது.
    கீதாவைச் சொன்னவனும் ப்ராம்ஹணன் அல்லன். கேட்டவனும் ப்ராம்ஹணன் அல்லன். எழுதினவனும் ப்ராம்ஹணன் அல்லன். அதைப் படிப்பவனும் ப்ராம்ஹணனாக இருக்கவேண்டியதில்லை. யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

    //பிரகாஷ் சங்கரன் … // -ஐத் தொடர்ந்து சான்றோனும் அற்புதமாகப் பதிலளித்திருந்தார்.
    //சான்றோன் on December 8, 2012 at 11:50 am
    கர்ணன் கடோத்கஜன் மீது பிரயோகித்தது இந்திராஸ்திரம் அல்ல…..சக்தி ஆயுதம்…..ஒரு வேளை கர்ணன் சக்தி ஆயுதத்தை அர்ஜுனன் மீது பிரயோகித்திருந்தால் அதை எதிர்கொள்ளும் அஸ்திரம் அர்ஜுனனிடம் இல்லை…..ஆகவேதான் கிருஷ்ணர் அதுவரை கர்ணன் – அர்ஜுனன் நேரடி மோதல் நிகழாமல் தவிர்க்கிறார்….கடோத்கஜன் வதத்தன்று சண்டை இரவிலும் நீள்கிறது…..இரவில் அசுரர்களுக்கு பலம் அதிகமாகிவிடும் என்பதால் வேறு வழியின்றி அர்ஜுனனை கொல்ல வைத்திருந்த சக்தி ஆயுதத்தை கடோத்கஜன் மீது பிரயோகிக்க நேர்ந்தது…..அந்த ஆயுதத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த இயலும்….[ கடோத்கஜனை வீழ்த்திய பின் சக்தி ஆயுதம் பராசக்தியை சென்று அடைகிறது ] இனிமேல் அர்ஜுனன் உயிருக்கு ஆபத்தில்லை என்பதாலேயே கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைகிறார்…..
    சக்ர வியூகத்தில் இருந்து வெளியேறும் வழியை சுபத்திரைக்கு [ அப்போது வயிற்றில் இருந்த குழந்தையான அபிமன்யு கேட்டுக்கொண்டிருந்தான் ] முழுமையாக சொல்ல விடாமல் தடுத்து அழைத்து சென்றவர் கிருஷ்ணர்….இத்தனைக்கும் சுபத்திரை கிருஷ்ணரின் சகோதரி…..போரில் அரைமனதாக சண்டையிட்டுக்கொண்டிருந்த அர்ஜுனனை முழுமையாக ஈடுபட வைக்க , தன் மருமகன் அபிமன்யுவை தெரிந்தே பலியாக வைக்கிறார் கிருஷ்ணர்…..இன்று அபிமன்யுவை கொன்று விடுவார்கள் என்று தெரிந்தே அர்ஜுனனை வேறுபக்கம் [ திரிகர்த்தர்களுடன் சண்டையிட ] அழைத்துச்சென்று விடுகிறார் கிருஷ்ணர்…..
    அபிமன்யு மறைவால் துக்கம்……கடோத்கஜன் மறைவுக்கு யாரும் கவலைப்படவில்லை என்பதெல்லாம் வெறும் துவேஷப்பிரச்சாரம்…..//

    அவருக்கு மூலத்தைத் தவிர எல்லாம் ஆதாரநூல்களாகத் தெரிவது வேடிக்கை.

    ஒரு குறிப்பு சொல்ல ஆசைப்படுகிறேன் – பாண்டார்க்கர் ஆய்வுக்கூடத்தின் ஆராய்ச்சி முழுக்க உண்மையை விட புத்தி விளையாட்டுக்கு (Intellectual Gymnastics) முக்கியத்துவம் தருவதாகும். மாண்டூக்ய காரிகை பதிப்பில் கண்டோம். நாம் கண்ட Invading the sacred போல.

    //வால்மீகி ராமாயணத்திலோ ராமன் வேதங்களைக் கற்றுகொண்டு தவம் புரிய முற்பட்ட சுரோத்தமன் என்ற காட்டுவாசியை கொன்று அழித்தான் என்று ஒரு சம்பவம் வருகிறது.//
    சம்பூகன் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். இது குறித்து தமிழ் இந்து இணைய தளத்திலேயே ஏற்கனவே வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.

    நிஷாத (निषाध) நளனுக்கும், நிஷாத (निषाद) ஏகலவ்யனுக்கும் வடமொழியில் வேறுபாடுண்டு. அகராதி, வேடன், மலைவாசி, மீனவன், கலப்பு வர்ணத்தவன் என்றெல்லாம் கூறுகிறது. கலப்பு வர்ண விவரம் பின்னர் காண்க.

    மேலும், வியாஸர் புரிந்தது விசித்திர வீரியன் மனைவியருடன் நியோகம் ஆகும். வர்ண ஸங்க்ரஹம், நியோகம் போன்ற பல அந்தக்கால நடைமுறைகள் தெரியாமல் நாம் அந்தக்கால விஷயங்களை விமர்சிப்பதோ, விவாதிப்பதோ பொருளுள்ளதாகாது. நியோகம் என்கிற ஒரு ஒப்பந்த முறை மநுவில் குறிப்பிட்டுள்ளது. அதை மஹரிஷி தயாநந்தரின் ஸத்யார்த்த பிரகாசத்திலிருந்து தருகிறேன்.
    தொடரும்…

  75. எல்லாம் பூவண்ணனார் புண்ணியந்தான் இந்த நீளமான பதில் தேவைப்படுகிறது.
    தொடர்ச்சி
    மேலும், வியாஸர் புரிந்தது விசித்திர வீரியன் மனைவியருடன் நியோகம் ஆகும். வர்ண ஸங்க்ரஹம், நியோகம் போன்ற பல அந்தக்கால நடைமுறைகள் தெரியாமல் நாம் அந்தக்கால விஷயங்களை விமர்சிப்பதோ, விவாதிப்பதோ பொருளுள்ளதாகாது. நியோகம் என்கிற ஒரு ஒப்பந்த முறை மநுவில் குறிப்பிட்டுள்ளது. அதை மஹரிஷி தயாநந்தரின் ஸத்யார்த்த பிரகாசத்திலிருந்து தருகிறேன்.
    பக்கம் – 141,142
    மறுமணம்
    மறுமணத்தின் கெடுதல் –
    1. ஆண், பெண் விரும்பியபோது ஒருவரை ஒருவர் கைவிட்டு இன்னொருவருடன் சேர இடமாகும்.
    2. வாழ்க்கைத்துணை இறந்து போனால் மற்றவரின் சொத்துக்களை எடுத்துப்போவார்கள். அதனால் குடும்பத்தில் சண்டையுண்டாகும்.
    3. நல்ல குடும்பங்களின் பெயர் அழிந்து சொத்து ஸுகங்கள் சின்னாபின்னமாகும்.
    4. ஸ்திரீ, புருஷர் இரு பாலாரின் கற்பும் அழியும். துவிஜர்கள் மறுமணமாவது, பல மணமாவது செய்துகொள்ளக்கூடாது.
    மறுமணம்
    நியோகம்
    1. விவாகமான பெண் தகப்பன் வீட்டை விட்டு கணவன் வீட்டிலேயே வசிக்கிறாள்.
    நியோகம் செய்துகொண்ட விதவையும் இறந்துபோன தன் கணவன் வீட்டிலேயே வசிக்கிறாள்.
    2. கலியாணமான பெண்களின் பிள்ளைகள் அவர்கள் கணவரின் சொத்துக்குரியவ ராகிறார்கள்.
    நியோக விதவையின் பிள்ளைகள், கர்பாதானம் செய்பவனின் சந்ததி யன்று, கோத்திரமுமன்று, அவன் சொத்துக்குரியவர்களுமன்று. அவர்கள் தம் தாயின் முன் கணவன் கோத்திரம், அவன் பிள்ளைகள், அவன் சொத்திற்கே உரியவர்களாய் அவன் வீட்டிலேயே வசிக்கிறார்கள்.
    3. மணம் புரிந்த சதி, பதிகள் ஒருவருகிகொருவர் சேவை செய்வது கடமை.
    நியோக ஸ்திரீ, புமான்களுக்கு இச்சமபந்தமில்லை. ஒப்பந்தம் முடிந்ததும் ஒட்டுறவில்லை.
    4. மணவாளர் சம்பந்தம் சாகுமட்டும் இருக்கும்.
    நியோக சம்பந்தம் காரியமானால் அத்துடன் சரி.
    5. விவாகமான ஸ்திரீ-புருஷர்கள் வீட்டுக் காரியங்களைச் சேர்ந்து நிர்வகித்து நடத்தவேண்டும்.
    நியோகத்தில் ஸ்திரீ-புருஷர்கள் அவரவர்கள் வீட்டுக் காரியங்களை ஒருவருக்கொருவர் சம்பந்தமின்றி தனித்தனியே கவனித்துக் கொள்கிறார்கள்.
    6. மணம் புரிந்த சதி, பதிகள் பத்து குழந்தைகள் வரையில் பெறலாம்.
    நியோகிகள் இரண்டு அல்லது நான்கு குழந்தைகளுடன் நிற்கவேண்டும்.
    7. கன்னிக்கும், குமரனுக்கும் திருமணம் நடக்கிறது.
    நியோகம் விதவைக்கும், விதவனுக்கும் நடக்கிறது. அது குமரனுக்கும், குமரிக்கும் அன்று.
    8. மணமான தம்பதிகள் எப்போதும் சேர்ந்து வாழலாம்.
    நியோகிகள் கர்பாதானத்தின்போதுதான் சேர்ந்திருப்பார்கள். இரண்டாவது கர்பத்துடன் நியோகஸ்திரீ புருஷ சம்பந்தத்தை நிறுத்திக் கொள்ளவேண்டும். நியோக புருஷனும் அப்படியே. நியோக புருஷனுக்காகப் பெற்ற குழந்தையை நியோக விதவை இரண்டு, மூன்றாண்டுகள் வளர்த்து அப்புருஷனிடம் தந்துவிடவேண்டியது. இவ்வாறு ஒரு கைம்பெண் தனக்காக இரண்டு குழந்தைகளையும், நான்கு நியோக புருஷர் ஒவ்வொருவருக்கும் இரண்டு குழந்தைகளையும் பெற்றுத் தரலாம். இவ்வாறே ஒரு விதவனும் தனக்காக இரண்டு குழந்தைகளும், தனது நியோக விதவைகள் நால்வருக்கும் இரண்டிரண்டு குழந்தைகளும் உற்பத்தி செய்யலாம். இவ்வாறு நியோகத்தால் பத்துக் குழந்தைகள் வரை மட்டும் பெறலாம்.
    பக்கம் – 143
    9. உலகறிய நடக்கும்
    உலகறிய நடக்கும்.
    10. நல்லோர் அனுமதியும், காதலர் திருப்தியும் வேண்டும்.
    நியோகத்திற்கும் நியோகம் கொள்ளும் காதலர் தங்கள் குடும்ப உறவினர்முன், சந்தானத்திற்காகவே நியோகம் கொள்வதாகவும், நியோக உத்தேஶம் நிறைவேறியதும் பிரிவோம் என்றும் பகிரங்கஞ் செய்யவேண்டும். இதற்கு எதிராக நடப்பவர்கள் பாபிகள். அவர்கள் சாதி அல்லது அரச தண்டத்திற்குரியவர்கள் ஆவார்கள். நியோக தம்பதிகள் மாதம் ஒருமுறை கர்பாதானம் செய்க. கரு நிலைத்தபின் ஓராண்டு பிரிந்திருக்கவேண்டும்.
    பக்கம் – 144
    பெண் தன் குலம் அல்லது தன்னின் உயர் குல புமான்களுடன் நியோகம் செய்யலாம். அதாவது வைஶ்யப்பெண் வைஶ்யர், க்ஷத்திரியர் அல்லது பிராம்ஹணருடன், க்ஷத்ரியப்பெண் க்ஷத்ரியர் அல்லது ப்ராம்ஹணருடன் நியோகம் கொள்ளலாம்.
    பக்கம் – 147
    தேவரர்
    देवरः कस्माद् द्वितीया वर उच्यते ।। (नृक्तम् 3-15)
    देवराद् वा सपिणडाद् वा स्त्रिया सँयङ् नियुक्तया ।
    प्रजेप्सिताधिगन्तव्या सन्तानस्य परिक्षये ।।मनु 9-58।।
    ज्येष्ठो यवीयसो भार्य्यो यवीयान्वाग्रजस्त्रियम् ।
    पतितो भवतो गत्वा नियुक्तावप्यनापदि ।।मनु 9-59।।
    औरसः क्षेत्रजश्चैव ।।मनु 9-159।।
    தன் புருஷனுடைய தமையன், தம்பி, மைத்துனன், கணவனின் ஆறாவது வம்ஶத்திற்கு உட்பட்ட உறவின்முறையாருடன், உறவு, சுற்றம் யாராயினும் ஒரு விதவையின் இரண்டாம் புருஷன் தேவரர் எனப்படுகிறார்.
    பக்கம் – 148
    प्रोषितो धर्मकार्यार्थं प्रतीक्ष्योष्टौ नरः समाः ।
    विद्यार्थं षड्यशोर्थं वा कामार्थं त्रींस्तु वत्सरान् ।।मनु 9-76।।
    குலப்பெண், தனது கணவர் தர்மார்த்தமாகப் பரதேஶஞ் சென்றிருந்தால் எட்டாண்டுகள், கல்வி, புகழுக்காக சென்றிருந்தால் ஆறாண்டுகள், பொருளீட்டல் முதலிய விருப்பங்களை நிறைவேற்றச் சென்றிருந்தால் மூன்றாண்டுகள் பொறுத்திருந்து பிறகு நியோகம் கொண்டு சந்ததி வளர்க்கவேண்டும். சொந்தக் கணவன் வந்ததும் நியோக பதியை விலக்கவேண்டும்.
    பக்கம் – 149
    वन्ध्याष्टमेधिवेद्याब्दे दशमे तु मृतप्रजा ।
    एकादशे स्त्रीजननी सद्यस्त्वप्रियवादिनी ।।मनु 9-81।।
    அதேமாதிரி புருஷனும் மனைவி மலடானால் கலியாணமானது முதல் எட்டாண்டுகள், குழந்தைகளெல்லாம் இறந்தால் பத்தாண்டுகள், பெண் குழந்தைகளே பெற்றால் பதினோராண்டுகள் பொறுத்தும், அடங்காப் பிடாரி, சண்டைக்காரி, வாய்ப்பட்டியானால் உடனேயும் நியோகம் செய்துகொண்டு மற்றொரு பெண் மூலம் சந்ததியை வளர்க்கவேண்டும்.
    அவ்வாறே புருஷன் பொறுக்கமுடியாத இடும்பை செய்தால், துயரீந்தால், நோயாளியானால், மனைவியும் நியோகங்கொண்டு அதனால் பிறக்கும் மகவிற்கு கணவனின் சொத்தைத் தரவேண்டும். விவாகத்தால் பிறந்த ஔரஸ் புத்திரன், தந்தையின் சொத்திற்குரியவனாதல் போலவே, நியோகத்தாற் பிறந்த க்ஷேத்ரஜ புத்திரனும் தயாபாகத்திற்குரியவனாகிறான்.

  76. இதுவரை நியோகம் பார்த்தோம். இனி வர்ண ஒழுங்கைப் பார்ப்போம். ஓரளவுக்கு மட்டும், இப்படி நிறைய அடிப்படை விஷயங்களைத் தெரியாமலேயே, தெரிந்துகொள்ள விரும்பாமலேயே நாம் பேசவும், எழுதவும் தலைப்படுகிறோம் என்பது புரியுமானால் மகிழ்ச்சி. பழைய காலத்தைப் பற்றிப் பேசும்போது அந்தக் காலத்து நடைமுறையை மனதில் பதித்துக் கொள்வது அவசியம். அதனால்தான் ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் SOCIAL HISTORY OF ENGLAND படிக்கிறார்கள். உண்மையை அறிய உண்மையான தாகம் இருந்தால் முதலில் அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ள முயற்சிப்பது அவசியம். இனி விஷயம்.
    \ENM10.05a/ सर्ववर्णेषु तुल्यासु पत्नीष्वक्षतयोनिषु |
    \ENM10.05c/ आनुलोम्येन संभूता जात्या ज्ञेयास्त एव ते ||||
    அந்தந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் மணந்துகொண்டால் அவர்கள் அந்தந்த ஜாதியைச் சார்ந்தவர்களே.
    \ENM10.06a/ स्त्रीष्वनन्तरजातासु द्विजैरुत्पादितान् सुतान् |
    \ENM10.06c/ सदृशानेव तानाहुर्मातृदोषविगर्हितान् ||||
    அடுத்த கீழ் வர்ணத்தைச் சார்ந்தவளுக்கு பிறந்த குழந்தையானால், தந்தையின் அதே வர்ணத்தையே சார்ந்ததானாலும், கலப்பினமே, தாயின் கீழ் வர்ணம் காரணமாக.

    இதிஹாஸ, புராணங்களைப் படிக்கவும், சொல்லவும் ஸூதர்களுக்கும், மாகதர்களுக்கும் உரிமையுண்டு. இவர்களிடம் ப்ராம்ஹணர்கள் கூட மிகவும் வணக்கத்துடன் இதிஹாஸ, புராணங்களைக் கேட்டு மகிழ்ந்தனர்.

    Edited and pubished)

    Editor’s note:

    “[1] வேதவிஜ்ஞானம் – க்ருஷ்ணப்ரேமி பக்கம் – 499” என்ற புத்தகத்திலிருந்து அளிக்கப் பட்ட நீண்ட “வர்ணக் கலப்பு” பட்டியலை நீளம் கருதி வெளியிடவில்லை)

  77. சந்தோசம் என்னுள் பொங்குதே
    அல்லேலுயா சுவாமி நிஷ்டானந்தா சரஸ்வதி என்னை ரட்சித்தார்
    சந்தோசம் என்னுள் பொங்குதே
    எவ்வளவு அற்புதமாக விளக்கி விட்டீர்கள் சுவாமி
    ஒரு பின்னூட்டத்தில் அனைவரும் ஒன்று ,அனைத்து வர்ணமும் ஒன்று என்று கூறி விட்டு
    அதற்க்கு கீழயே

    பக்கம் – 144
    பெண் தன் குலம் அல்லது தன்னின் உயர் குல புமான்களுடன் நியோகம் செய்யலாம். அதாவது வைஶ்யப்பெண் வைஶ்யர், க்ஷத்திரியர் அல்லது பிராம்ஹணருடன், க்ஷத்ரியப்பெண் க்ஷத்ரியர் அல்லது ப்ராம்ஹணருடன் நியோகம் கொள்ளலாம்.

    என்று இதையும் எழுதி
    தன்யனானேன் சுவாமி

  78. சுக்ராச்சாரியார் ஏன் வில்லன் என்பதற்கு இப்போது காரணம் புரிகிறது.
    அவர் கெட்டவர்களோடு @அசுரர்களோடு தொடர்பு கொண்டவர்,அவர்களுக்கு பெண்ணையும் கொடுத்தவர்

    https://en.wikipedia.org/wiki/Kacha_%28sage%29

    After completion of his education, Devayani asked Kacha to marry her, but he refused on the grounds that she is his sister as he had come out of Shukracharya. She cursed him that he would never be able to use his art again. To this, Kacha replied that he would only not be able to use it, but he would definitely be able to teach it

    https://en.wikipedia.org/wiki/Yayati

    Devayani was the daughter of Sage Shukracharya, the guru of all Asuras, she had been cursed by sage Kacha that she would not marry another Brahmana.

  79. பூ வண்ணன்

    வேறு ஊரில் வந்து ராஜவானர்வகள் காலம் மகாபாரத காலமா ?

    வசதிக்கு வந்தபடி வளைக்கலாமா. இது எப்படின்னா கலைஞர் 1950துல காசே இல்லாம ஒரு நாள் பூர சோறு திங்கள. அவரா ஊழல் பண்ணுவாரு என்கிற மாதிரி இருக்கு.

    கர்ணன் க்ஷற்றியத்துவத்தை காட்டியதால் அரசனானான் என்றால் விடுறார் அதை காட்டாததால் ஆகவில்லை. விதுரர் சூத்திரர் என்பதனால் அவரை ஒதுக்கி வைக்க வில்லை, அவரது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தியே கொண்டார்கள் அமைச்சராக நியமித்து.

    //
    அகலிகையை ஏமாற்றி கடவுள் ஆன இந்திரன் கலவி செய்ததால் பயங்கர தண்டனை
    ஆனால் பணிப்பெண்ணை தனக்கு பதிலாக அனுப்பினால் பணிபெண்ணுக்கோ,இல்லை அப்படி அனுப்பிய அரசிக்கோ எந்த தண்டனையும் கிடையாது.
    //

    அகல்யை பிராமன ரிஷியின் பத்னி, அவளுக்கு தண்டனை. பணிப்பெண்ணை அனுப்பியது மகாராணி. ஒருவேளை அந்த பணிபென்னுக்கு புருஷன் இருந்திருந்தால் மகாராணியை சபித்திருப்பான்.

    ரொம்ப கொழம்பிட்டீங்க சார்.

  80. These people never wanted to go by the Hindu religious teachings and guidelines given for having a peaceful society. They will always intend to spoil this hindu social system by making every thing cosmopoliton. The reason is they dont care about whether Varnasrama is based on birth or the profession, they just care about the respect and value that was given to each roles.

    A doctor or a scientist or a scholar is always highly respected than a labourer even at this present scenario. Can these people arrange marriages for all labour class men with the daughters of present world doctors or the scientists? Your respect is mostly out of what you do and thats how you respect others.

    But I do value the contributions of an ordinary working class man without which normal life cannot be lead. But there is always a difference between ordinary and extra ordinary interms of contributions. All cinema heroes are wanting to be MGR because he was extra ordinary. All small musicians are wanting to be Illaiyaraja and AR Rahman because they are extraordinary. All cricketers do model Sachin. All foot ballers do model Messi and Ronaldo. So we can show only extra ordinaries as examples. Quoting Vishwamithra who was an extra ordinary seems to be unfair to Mr. Poovannan but whatever is said & done, this world follows only the extra ordinary people. This applies both to the times of Mahabharata and at the modern times.

  81. அன்புள்ள பூவண்ணன்,

    உலகு தோன்றிய நாள் முதலாக எல்லா மொழிபேசும், எல்லா மத, கலாசார பிரிவினை சேர்ந்த மனித இனத்திலும் , நல்லோரும் அல்லோரும் சேர்ந்து கலந்தே இருந்து வந்துள்ளனர்.

    ஒரு ஆசிரியர் தவறு செய்தால், உலகில் உள்ள ஆசிரியர்கள் அனைவருமே தவறு செய்பவர்கள் என்று ஜெனரலைஸ் (generalise ) பண்ணக்கூடாது. ஒரு சாமியார் தவறாக நடந்தார் என்பதற்காக , எல்லா சாமியார்களும் அப்படித்தான் என்று சொல்ல கூடாது. ஒரு அரசியல் கட்சியின் தலைவரும், அவரது குடும்பத்தினரும் அதிக ஊழல் செய்து கொள்ளை அடித்து, சுரண்டிய பணத்தை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் திருட்டு தனமாக சேமித்து வைத்துள்ளனர் என்பதற்காக எல்லா அரசியல் வாதிகளும் அப்படித்தான் என்று எடை போட கூடாது.

    இராமாயண , மகா பாரத காலங்களில் யாரோ ஒருவர் தவறான கருத்தை சொல்லியிருந்தாலும் , அது ஒன்றும் வேதம் அல்ல. இந்து மதத்தின் சிறப்பே, இங்கு ஒரே புத்தகத்தை கட்டிக்கொண்டு அழவேண்டும் என்பது யாருக்கும் தலைவிதி இல்லை. நீங்களும் நாராயண குருவைப்போல , புதிய வழியை உருவாக்குங்கள். தயானந்த சரஸ்வதியைப்போல, செயல்படுங்கள். அதை விடுத்து, மனு ஸ்ம்ருதியை போல, ஏதோ ஒரு புத்தகத்தில் எவனோ உளறி இருப்பதை எடுத்துக்கொண்டு வீண் விவாதம் செய்தால் யாருக்கும் புண்ணியம் இல்லை. நீங்கள் சொல்லும் உதாரணங்கள் , வேலை வெட்டியற்ற நாத்திக ஆபாச கும்பல் சொல்லும் பேச்சாக உள்ளது. நமக்கு எவனும் தலைவன் இல்லை. இறைவன்/ இறைவி/ இறைச்சக்தி மட்டுமே நம் தலைவன்/தலைவி/ தலைமை சக்தி.

    பெரியாரின் பேச்சுக்களில் கூட எவ்வளவோ முன்னுக்கு பின் முரணும் உளறலும் உள்ளன. அந்த ஒரு காரணத்திற்காக , அவரை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க முடியாது. நல்லது எங்கு இருந்தாலும் கொள்வோம். தீயது எங்கிருந்தாலும் தள்ளுவோம். அவருடைய பேச்சில் உருப்படியாக எது இருப்பினும் கொள்க. உளறல்களை ஒதுக்குவோம்.

    உயர்ந்த எண்ணங்களும், சிந்தனையும் உலகின் பல்வேறு திசைகளில் இருந்தும் நம்மை வந்து சேரட்டும். ( ரிக் வேதம்- let noble thoughts come from all sides)

  82. பிரசன்னா சுந்தர் அவர்கள் சரியாக பொருத்தமான உதாரணங்களை கூறி விளக்கி உள்ளார்.

    நம் உலகில் அனைவரும் அசாதாரணமானவர்களைத் தான் உதாரண புருஷர்களாகக் கருதுகின்றனர். சாதாரணமான மனிதர்களை யாரும் பார்த்து, எளிய வாழ்வு வாழ விரும்புவதில்லை. அப்படி உள்ளவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

    நான் யார் என்று ரமண மகரிஷியை போல உள் ஆராய்ச்சி செய்வோர் சிலரே.

  83. ஒரு மகான், ஒரு புத்தகம் இவற்றை நம்பி ஹிந்துமதம் இல்லை. அதுவே இதன் பலம்.

    ‘மனு ஸ்மிருதி’ என்பது இன்றளவும் நம்மிடையே பிரிவினை விரும்பி அரசியல்வாதிகளால் விரும்பி உபயோகிக்கப்பட்டு வருகிறது.

    இதன் முதல் ஆங்கில மொழியாக்கம் காலனி காலத்தில் நடந்ததென்றால், அதில் இடைசெருகல்கள் இருந்திருக்கலாமா இல்லையா என்பது ஒருபுறம். ‘எல்லாம் உங்க ஆளுங்க எழுதினது தான்’ என்று ஒரே அடி அடித்தாலும், தன் கிராமம், தனது பெற்றோர் மூலம் நல்லது கேட்டது என்பது என்ன அன்று அறியும் சாமானிய ஹிந்து இந்த மனு ஸ்மிருதியிலேயே தன் மனம் சகிக்காத விஷயங்கள் இருந்தால் அதை தூக்கி ஏறிந்து விடுவான்/எறிந்தும் இருக்கிறான்.

    இன்றைக்கு பிரிவினை அரசியல் செய்வோருக்கு இது மிக மிக உபயோகம். மற்றையோருக்கு நான் மேலே சொன்ன தனது சமூகம், தனது பெற்றோர் அளித்த பண்பாடு, தனது மனோதர்மம் தான் முக்கியம்.

    என் சிறிய மூளைக்கே இந்த ‘நியோகம்’ என்று சொல்லப்படும் விஷயத்தை பற்றி ஒன்று புரிகிறதே?
    மகாபாரதத்தில் விதவைகள் பிள்ளை பெறுவது நாராயணனனின் அம்சமாகப் போற்றப்படும்- வேதங்களை வகுத்தளித்த வியாச மகரிஷி மூலம். இவர் சாமானிய மனிதர் அல்ல; காமத்திற்கோ பந்த பாசங்களுக்கு கட்டுப்பட்டவர் அல்லர்.

    குந்தி பெறுவதோ தேவர்களின் மூலம். இவர்களும் மனித நிலையை விட மேம்பட்டவர்களே. வாழ்கையை இழந்த மனிதர்களுக்கு மறுமணம் என்பதே நல்ல தீர்வு. இந்த நியோகம் என்று இங்கு சொல்லப்படும் கருத்தாக்கத்தை அப்படியே சாதாரண மனிதர்களுக்கு ஓட்ட வைத்தால் விபரீதம் தான்.

    அதிகம் படிக்காத ஹிந்துவிற்கு கூட ஒரு புத்தகம் ஒரு தீர்வு என்ற நிலை இல்லாமல் இருப்பதால், சொந்தமாக யோசிக்க முடிகிறது.

    – சாய்.

  84. சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்க அநீ… பூவண்ணன் பின்னூட்டங்கள் படிச்சு படிச்சு முடியல… அவருக்கு வேல மெனகெட்டு பதில் சொல்லிகிட்டு இருக்காங்க…

  85. நமஸ்தே ஜீ ! இதன் இரண்டாம் பாகத்தை எப்போது வெளியிடுவீர்கள்?

  86. பூவண்ணன் on December 14, 2012 at 11:07 am ஒரு பின்னூட்டத்தில் அனைவரும் ஒன்று ,அனைத்து வர்ணமும் ஒன்று என்று கூறி விட்டு
    அதற்க்கு கீழயே…//
    அன்பு பூவண்ணன் அவர்களுக்கு,
    நான் அனைத்து வர்ணமும் ஒன்று என்று கூறியிருப்பதாக என் எழுத்தின் தொனி உங்களுக்கு தோன்றியிருந்தால் அதை மறுக்கிறேன். எல்லாம் ஒன்று என்பது என் கருத்தன்று. வேறுபாடுகள் உண்டு. ஆனால் கீழ், மேல் என்பது இல்லை என்பதுதான் நான் புரிந்துகொண்ட கருத்து. ஸமத்துவம் என்பது அழிவு, வேறுபாடுகளே படைப்பு என்பது விவேகாநந்தரின் கூற்று. மேலும் இப்படிச் சொன்னால் புரிகிறதா என்று பாருங்கள். – ….இங்கே கிருஷ்ணர் புலக்கட்டுப்பாட்டுக்கு ஆமையினுடைய எடுத்துக்காட்டைப் பயன்படுத்துகிறார். ஆமைக்குத் தன்னைக் காத்துக்கொள்ள ஒரு சார்பான கடவுள் ஏதும் கொடுக்கவில்லை.

    நமக்கு ஆடை விதவிதமாக வேண்டும். நகை விதவிதமாக வேண்டும். கொண்டை விதவிதமாக வேண்டும். ஒப்பனை விதவிதமாக வேண்டும். உணவு விதவிதமாக வேண்டும். ஆனால் கடவுள் மட்டும் எல்லாரையும் ஒரேவிதமாகப் படைக்கவேண்டும்.

    கடவுள் எனக்கு இறக்கைகளைத் தரவில்லை. தோகைகளைத் தரவில்லை. துடுப்புகளைத் தரவில்லை. மணத்தைத் தரவில்லை. மென்மையைத் தரவில்லை. வலிமையைத் தரவில்லை. குறைந்தபக்ஷம் ஆண்களைப் போலவாவது படைக்கக் கூடாதா. கடவுள் என் முன்னால் வந்தால் அவரை நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நாலு கேள்வி கேட்காமல் விடமாட்டேன் என்றெல்லாம் நினைக்கிறோம். நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பதில் மகிழவேண்டும். மானைப்போல மாட்டிக்கொள்ளக்கூடாது.

    கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் படைத்திருக்கிறார், அவருக்கு அபாரமான கற்பனைவளம் இருப்பதால். உண்மையான கலைஞர் அவர்தான். எனவே ஆமையைத் தன்னைப் பதுகாத்துக்கொள்ள நகமோ, மயிரோ, பல்லோ, கொடுக்கோ, விஷமோ, கெட்ட நாற்றமோ, ஓட்டமோ, பறப்போ, முள்ளோ, ஊரலோ, கட்டித்தோலோ, கொம்போ… எதுவுமே கொடுக்கவில்லை.

    வலுவான ஓட்டைக் – ஓட்டையை அன்று, வாக்கை அன்று – கொடுத்திருக்கிறார். நிதானமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு போகும். ஆபத்தைக் கண்டவிடத்து நான்கு கால்கள், ஒரு தலை ஆக ஐந்து உறுப்புகளையும் ஓட்டுக்குள் ஒடுக்கிக் கொண்டுவிடும். எதுவரை – ஆபத்து விலகும்வரை….
    வேற்றுமேயை ஏற்றத்தாழ்வாக மாறறுவதே தவறு என்பதே நான் சொல்லவந்தது.
    ஒரு அன்பு இல்ல மாணவன் ஒரு தி.க.வுக்குக் கூறிய பதில் – சரிங்க, …டிச் வழிக்க வைக்கிறது அநியாயந்தான். அதனால் இனிமேல் நீங்களே டிச் வழிச்சு ஸூகாதாரத்தைப் பேணுங்கள் – என்றார். மறுதரப்பு சீர்திருத்தவாதி மூச்.

  87. //Editor’s note:

    “[1] வேதவிஜ்ஞானம் – க்ருஷ்ணப்ரேமி பக்கம் – 499″ என்ற புத்தகத்திலிருந்து அளிக்கப் பட்ட நீண்ட “வர்ணக் கலப்பு” பட்டியலை நீளம் கருதி வெளியிடவில்லை)//
    மன்னிக்கவும், தங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளத் தூண்டியமைக்கு. வர்ணக் கலப்பு பட்டியல் வேத விஜ்ஞானத்தின் பகுதி அன்று. மநு ஸ்ம்ருதியிலிருந்து நேரடியாக எனது மொழிபெயர்ப்பே. சண்டாளன், நிஷாதன் (NISHDA & NISHADHA), ஸூதன்…போன்ற வர்ணக் கலப்புப் பிரயோகங்கள் அவற்றின் ஆழம் தெரியாமல் பயன்படுத்தப்பட்டதால் அதைக் குறித்தேன்.

  88. /டிச் வழிக்க வைக்கிறது அநியாயந்தான். அதனால் இனிமேல் நீங்களே டிச் வழிச்சு ஸூகாதாரத்தைப் பேணுங்கள்//

    ithu puriyala.

    ditch enraal enna?

  89. மேலே திரு.அ.நீ. அவர்கள் கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அதே பதிப்பு தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட வருகிறது. சபா பர்வம் வரை முடிந்துள்ளது. மேலே அ.நீ. குறிப்பிட்டுள்ள பகுதிகளைத் தமிழில் படிக்க கீழ்க்கண்ட லிங்குகள் பயன்படும்.

    1. இந்த அரக்கு மாளிகை எரிப்பு சம்பவம், ஜதுக்கிரக பர்வம் என்று ஆதி பர்வத்தின் உப பர்வமாக பகுதி 143 முதல் 153 வரை வருகிறது.

    அந்தப் பகுதியின் முழு தமிழ் மொழி பெயர்ப்பைப் படிக்க https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9C%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D என்ற லிங்குக்கு செல்லவும்

    2. இந்த காண்ட வன எரிப்பு சம்பவம், காண்டவ தகா பர்வம் என்று ஆதி பர்வத்தின் உப பர்வமாக பகுதி 224 முதல் 236 வரை வருகிறது.

    அந்தப் பகுதியின் முழு தமிழ் மொழி பெயர்ப்பைப் படிக்க
    https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *