எழுமின் விழிமின் – 30

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

 ***

<< முந்தைய பகுதி

 

தொடர்ச்சி..

உண்மையிலேயே வெற்றிகரமான வாழ்வின் ரகசியம்

(அல்லது)

‘வேலை’ செய்வதில் உள்ள விஞ்ஞான முறையும் கலையும்

.

உள்ளத்தையும் மூளையையும் உயர் லட்சியங்களால் நிரப்பி வையுங்கள்:

.

Aimதசைகளின் மூலமாக சிறிதளவு சக்தியை வெளிப்படுத்துவதற்கு ‘வேலை’ என்று பெயர்.  ஆனால் சிந்தனை எங்கே இல்லையோ, அங்கே வேலையும் இராது.  ஆகையால் உங்களது மூளையை உயர்ந்த சிந்தனைகளால்,  மகோன்னதமான லட்சியங்களால் நிரப்பி வையுங்கள்.  இரவும் பகலும் அவற்றை உங்கள்  கண் முன் வையுங்கள்.  அதிலிருந்து மகத்தான வேலை உருவாகி வெளிவரும்.
.
வானத்தை எல்லோரும் பார்க்க முடியும்.  நிலத்தில் ஊர்ந்து செல்கிற புழுவும் கூட நீலவானத்தைப் பார்க்கத் தான் செய்கிறது. ஆனால் வானத்திலிருந்து அது எவ்வளவு தூரத்திலிருக்கிறது பாருங்கள்!  நமது லட்சியமும் அப்படித்தான் இருக்கிறது.  அது நெடுந்தொலைவில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் அதே நேரத்தில் நாம் அதனை அடைந்தே தான் தீர வேண்டும்.  ஈடு இணையற்ற மகோன்னதமான ஒரு லட்சியத்தை நாம் கண்டிப்பாக வைத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
.
துரதிஷ்டவசமாகப் பெரும்பான்மையான மக்கள் தமது இருண்ட வாழ்க்கையில் எந்த லட்சியமும் இன்றித் தட்டுத் தடுமாறி அலைகிறார்கள்.  லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள மனிதன் ஆயிரம் தவறுகள் இழைக்கிறான் என்றால், லட்சியமற்றவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்கிறான் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆகவே லட்சியம் ஒன்றை வைத்துக் கொள்வது மிக நல்லது.
.
இந்த லட்சியத்தைப் பற்றிEarth warm முடிந்த அளவு அதிகமாக நாம் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அது நமது உள்ளங்களில் நுழைந்து, ஒவ்வொரு துளி ரத்தத்திலும் துடிதுடிக்கிற வரையில்,  நமது உடலிலுள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் வியாபித்து நிற்கிற வரையில், லட்சியத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.  அதைக் குறித்துத் தியானம் செய்ய வேண்டும்.  உள்ளம் நிரம்பிப் பெருகும் பொழுது கைகளும் வேலை செய்கின்றன.
.
முத்துச்சிப்பியைப் போல் இருங்கள்:
.
நீங்கள் முத்துச் சிப்பியைப் போல இருக்க வேண்டும். பாரத நாட்டில் அழகான ஒரு கற்பனைக் கதையுள்ளது.  அதாவது சுவாதி நட்சத்திரம் உச்சமாக இருக்கும் பொழுது மழை பெய்து, அதிலிருந்து ஒரு மழைத்துளி சிப்பிக்குள் விழுந்தால், அந்த மழைத்துளி முத்தாக மாறிவிடுமாம். முத்துச் சிப்பிகளுக்கு இது தெரியும்.
.
சுவாதி நட்சத்திரம் பிரகாசிக்கும் பொழுது அவை மேலே வருகின்றன. அரியதான அந்த மழைத்துளியைப் பிடித்து வைத்துக்கொள்ள அன்று காத்திருக்கின்றன. அவற்றுக்குள்ளே ஒரு நீர்த்துளி விழுந்ததும், முத்துச் சிப்பிகள் தமது ஓடுகளை அக்கணமே மூடிக்கொண்டு கடலின் அடிமட்டத்துக்குப் பாய்ந்து சென்று  விடுகின்றன.  அங்கே அந்த நீர்த்துளியைப் பொறுமையுடன் முத்தாக வளர்க்கக் காத்திருக்கின்றன.pearl
.
நாமும் அதுபோலவே இருக்க வேண்டும்.  முதலில் செவிகளால் கேட்க வேண்டும்; பிறகு புரிந்து கொள்ளவேண்டும்; அதன் பின்னர் மனத்தை அலைக்கழிக்கிற எல்லாக் காரியங்களையும் கைவிட்டு விட்டு, வெளிக் கவர்ச்சிகளால் பாதிக்கப்படாதபடி மனக்கதவை மூடித் தாழிட்டு, அந்தப் பேருண்மையை நமக்குள்ளே வளர்த்துக் கொள்வதில் முழு மனத்துடன் ஈடுபட வேண்டும்.
.
ஒரு கருத்து புதுமையாக இருக்கிறது என்பதற்காக மட்டும் அதனை ஒப்புக்கொண்டு ஏற்று வேலை செய்துவிட்டு, அதைவிடப் புதிதாக வேறு ஒன்று கிடைத்ததும் பழையதைக் கைவிடுவதால் உனது சக்தியை வீணடித்து விடுவாய்.  இது அபாயகரமானது.  ஒரே வேலையை ஏற்றெடுத்துக் கொள்;  அதனைச் செய்.  அந்த வேலையை இறுதி வரையில் செய்.  முடிவைக் காண்பதற்கு முன்னால் அதனைக் கைவிடாதே.
.
ஒரே ஒரு கருத்துக்குத் தனது மனத்தைப் பறிகொடுத்துவிட்டுப் பைத்தியமாக ஆகக் கூடிய மனிதன் மட்டும் தான் இறுதி ஒளியைக் காண்பான்.  இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சகமுமாக வாய் வைத்து மேய்கிறவன் ஒரு நாளும் எதையும் எய்த மாட்டான்.  அவ்வாறு செய்வதால் அவனுக்குச் சிறிதளவு உற்சாகக் கிளுகிளுப்பு ஏற்படலாம். ஆனால் அத்துடன் அது மாய்ந்து போகும்……..
.
World in hand….ஒரு கருத்தை ஏற்றுக்கொள்.  அந்த ஒரு கருத்தை உனது வாழ்வாக மாற்றிக் கொண்டுவிடு. பிறகு அதைப் பற்றியே சிந்தனை செய்ய வேண்டும்.  அதைப் பற்றியே கனாக் காண வேண்டும்.  அந்தக் கருத்தைக் கொண்டே உயிர் வாழ வேண்டும். உனது மூளை,  தசைகள், நரம்புகள்,  உனது உடலின் உறுப்புகள் இவையெல்லாம் அந்தக் கருத்தால் நிரம்பி விடட்டும்.  மற்றெல்லாக் கருத்துக்களையும் அப்படியே கைவிட்டு விடு.  வெற்றிக்கு இதுவே வழி. ஆத்மிகச் சிங்கங்கள் இந்த வழிமுறை மூலம் தான் உண்டாக்கப்படுகிறார்கள். மற்ற மக்கள் எல்லோரும் பேசுகிற வெறும் இயந்திரங்கள் தான்……….
.
…..வெற்றி பெற வேண்டுமானால் உங்களுக்கு அபாரமான விடாமுயற்சியும், அபாரமான மன வலிமையும் இருக்க வேண்டும்.  இடைவிடாது முயற்சி செய்கின்ற ஓர் ஆத்மா, “நான் கடல் நீர் முழுவதையும் குடித்துவிடுவேன். எனது மனோ வலிமையால் மலைகளைப் பொடிப் பொடியாக்கி விடுவேன் ” என்று கூறுகிறது.  அத்தகைய சக்தித் துடிப்பும், அத்தகைய மனோ சக்தியும் பூணுங்கள்.  கஷ்டப்பட்டு வேலை செய்யுங்கள். நீங்கள் குறிக்கோளைக் கண்டிப்பாக எய்தி விடுவீர்கள்.

.

 ***

மகாவீரர் உங்கள் லட்சியமாகட்டும்:
.

Hanuman

மகாவீர ஹனுமானின் ஒழுக்கப் பண்பினை உங்களது லட்சியமாக நீங்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும்.  ராமசந்திரரின் ஆணையால் அவர் எவ்வாறு கடலைக் கடந்தார் என்பதைப் பாருங்கள். வாழ்வையோ சாவையோ பற்றி அவர் ஒரு சிறிதும் அக்கறைப்படவில்லை.  புலன்களனைத்தும் அவர் வசப்பட்டிருந்தன. ஆச்சரியகரமான விவேகி அவர்.  தனி ஒரு மனிதனுக்கு எப்படித் தொண்டாற்ற வேண்டும் என்பதற்குப் பெரும் உதாரணமாக விளங்கிய அவரது வாழ்க்கையை ஒட்டி நீங்கள் உங்களது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.  அந்த ஒன்றிலிருந்து மற்ற எல்லா லட்சியங்களும் படிப்படியாக உங்கள் வாழ்வில் வெளித்தோன்றும்.

.
மறு பேச்சின்றி குருவுக்குக் கீழ்ப்படிவது,  பிரம்மசரியத்தைக் கடுமையாகக் கடைபிடிப்பது,  இதுதான் வெற்றியடைவதன் ரகசியம்.  தொண்டாற்றுகிற லட்சியத்தை ஹனுமான் தமது வாழ்வின் ஒரு பக்கத்தில் பிரதிபலிப்பதைப் பார்க்கிறோம் என்றால், மறுபுறம் சிங்கத்தை ஒத்த அவரது தைரிய உணர்ச்சி உலகத்தை பிரமிப்படைய வைக்கிறது.
.
ராமருடைய நன்மைக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வதில் அவருக்கு எள்ளளவும் தயக்கமில்லை. ராம சேவையைத் தவிர மற்ற அனைத்திடமும் அவருக்குத் தினையளவும் அக்கறை கிடையாது.

.பிரம்மபதவி,  சிவபதவி,  அல்லது உலக தேவதைகளின் பதவி கிடைப்பது பற்றிக் கூட அவருக்கு அக்கறையே இல்லை. ஸ்ரீராமனின் கட்டளையை நிறைவேற்றுகிற ஒரு காரியம் மாத்திரமே அவரது வாழ்க்கையின் விரதமாகும். அத்தகைய முழுமனமுள்ள பூரண பக்தியே நமக்குத் தேவை.Hanuman 2
.
தேடுங்கள்: உங்களுக்குக் கிடைக்கும்…
.
சோம்பேறியான வழிப்போக்கன் ஒருவன் ஒரு நாள் ஒரு வீதி வழியே மெல்லப் போய்க் கொண்டிருந்தான்.  ஒரு கிழவர் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.  உடனே அங்கு நின்று அவரிடம் ஒரு குறிப்பிட்ட கிராமம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது என்று தயங்கியவாறே கேட்டான்,  “பெரியவரே! இன்ன கிராமம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது? ”  என்று வினவினான். கிழவர் பதில் அளிக்கவில்லை.
.
பல தடவை அதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டான். பிறகும் பதிலில்லை. அலுத்துப்போய் அவன் தன் வழியே நடக்கத் தொடங்கினான்.  உடனே கிழவர் எழுந்து நின்று “நீ கேட்கிற கிராமம் இங்கிருந்து ஒரு மைல் தூரத்தில்தான் உள்ளது” என்றார்.
.
உடனே வழிப்போக்கன் “ஏன்? இதற்கு முன்னர் உங்களிடம் கேட்டபோது நீங்கள் ஏன் பேசவில்லை?” என்று வினவினான்.  அதற்கு மறுமொழியாக கிழவர், ” ஏனெனில் அப்பொழுது தயங்கித் தடுமாறிக் கொண்டு அந்த ஊருக்குப் போவது பற்றி அக்கறையின்றி நீ காணப்பட்டாய். ஆனால் இப்பொழுது நல்ல உறுதியுடன் புறப்பட்டு விட்டாய். பதில் பெறுவதற்கு உனக்கு உரிமையுண்டு” என்றார்.
.
என் மகனே! இக்கதையை நீ நினைவில் கொள்வாயா? வேலை செய்யப் போ. மற்றவை எல்லாம் வரும்.

.

அனன்யாஸ் சிந்தயந்தோமாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம்நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்

.

” என்னைத் தவிர வேறு எதனையும் எண்ணாமல், என்னிலே உறைந்து, என்னையே சார்ந்து வாழ்கிறவனுக்குத் தேவைப்படுகிற அனைத்தையும் நான் அளித்துவிடுகிறேன்.”

(கீதை 9-22)

.

…. கிறிஸ்துவின் சொற்களை நினைவிற் கொள்ளுங்கள்: ” கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள்,  அது உங்களுக்குக் கிடைக்கும். தட்டுங்கள்; அது உங்களுக்குத் திறக்கப்படும்”. இதில் ஒவ்வோர் எழுத்தும் உண்மைதான். அது வெறும் சொல் அலங்காரமோ, கற்பனையோ அல்ல.
.
…. நீ உண்மையாகவே விரும்பிய ஏதேனும் உனக்குக் கிடைக்காமல் இருந்ததா? அப்படி ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில் தேவை தான் மனித உடலை உண்டாக்குகிறது. முதலில் ஒளி இருந்தது. அதுதான் உனது தலையில், ‘கண்கள்’ என்று அழைக்கப்படுகிற துளைகளைப் போட்டது. ஒளி இருந்திருக்கவில்லை என்றால் உங்களுக்குக் கண்களே இருந்திருக்காது. ஒலிதான் காதுகளை உண்டாக்கியது. உறுப்புத் தோன்றுவதற்கு முன், உணர வேண்டிய பொருள் முதலிலே தோன்றியிருந்தது.
.
கேளுங்கள்அது கொடுக்கப்படும்:
.
……ஒரு விருப்பத்துக்கும் வேறெரு விருப்பத்துக்கும் இடையே வேறுபாடு உண்டென்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்…..
.
ஒரு சிஷ்யன் தன் குருவிடம் சென்றான்,  ”ஐயனே! எனக்குச் சமயம் வேண்டும்” என்று கூறினான்.
.
GuruSishyaகுருநாதன் அந்த இளைஞனைப் பார்த்தார். ஒன்றும் பேசாமல் சற்றே சிரித்தார்.
.
அந்த இளைஞன் தினமும் வருவான். ”சமயம் வேண்டும்” என்று வலியுறுத்திச் சொல்வான். ஆனால் அந்த இளைஞனைவிடப் பெரியவருக்கு விஷயங்களெல்லாம் நன்கு தெரியும்.
.
ஒருநாள் உஷ்ணம் அதிகமாக இருந்தது. ஆற்றுக்குப் போனதும் இளைஞன் நீரில் மூழ்கினான்,  பெரியவர் அவனைப் பின்தொடர்ந்தே சென்று அவன் தண்ணீருக்குள் இருக்கும் பொழுது அவனை அழுத்திவைத்துப் பிடித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அந்த இளைஞன் திக்குமுக்காடித் துடித்த பிறகு அவனை விட்டுவிட்டார்.
.
“தண்ணீருக்குள் இருந்தபோது, நீ மிக முக்கியமாக எதை விரும்பினாய்?” என்று கேட்டார்.
.
“ஒரு தடவை மூச்சு இழுத்து விடுவதற்காகக் காற்றை விரும்பினேன்” என்று பதிலளித்தான் சிஷ்யன்.
.
“அந்த அளவு தீவிரத்துடன் நீ கடவுளைக் காண வேண்டுமென விரும்புகிறாயா? அப்படி விரும்பினால் ஒரு கணத்திலேயே அவனை அடைவாய்” என்று குரு கூறினார்.
.
“அத்தகைய தாகம், அத்தகைய தீவிர விருப்பம்  இல்லையேல் சமயம் உனக்குக் கிடைக்காது. உனது மூளை,  அறிவு,  உனது புத்தகங்கள், உனது அமைப்பு முறைகள், இவை எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு நீ எவ்வளவு தான் போராடினாலும் உனக்குச் சமயம் கிடைக்காது” என்றார் குரு.
.
புத்தரைப் போல் உணர்ச்சி கொள்ளுங்கள்: அவரைப் போலவே ஆகி விடுவீர்கள்:
.
……மனப்பூர்வமாக மற்றவர்களைப் பற்றிய உணர்ச்சி உனக்கு உள்ளதா? உணருகிறாய் என்றால், நீ ஒருமையை நோக்கி வளர்ந்து செல்கிறாய்.  பிறர்பொருட்டு நீ மனவெழுச்சி கொள்ளாவிட்டால், உலகில் பிறந்த அறிவாளிகளில் நீ மிக மிகப் பெரியவனாக இருந்தாலும் கூட,  நீ ஒன்றுமில்லாத பூஜ்யம்தான். நீ வெறும் வறட்டு அறிவாளி; நீ அப்படியேதான் வாழ்வாய்……
.
தீர்க்கதரிசிகளுடைய சக்தி எங்கே உறைந்துள்ளதென்று நீ உலக வரலாற்றிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறாயா? எங்கு இருந்தது? அறிவுத் திறமையிலா? அவர்களில் எவராவது ஒரு புத்தகத்தையோ, தத்துவ சாஸ்திரத்தையோ, மிக நுணுக்கமான அநுமானங்களுடBudhaன் கூடிய தர்க்க சாஸ்த்திரத்தையோ இயற்றியிருக்கிறார்களா? ஒருவர் கூட அவ்வாறு எழுதவில்லை.
.
அவர்கள் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசினார்கள். கிறிஸ்துவைப் போன்ற மனப்பூர்வமான உணர்ச்சி கொண்டால், நீ கிறிஸ்து ஆவாய்.  புத்தரைப் போன்ற ஆழ்ந்த உணர்ச்சி கொண்டால், நீ புத்தராக ஆவாய். இதய பூர்வமான உணச்சிதான் வாழ்க்கை ஆகும்; அதுவே சக்தி.  அதுவே வீரியம். அது இல்லாமல் அறிவுத் திறமையைக் கொண்டு எவ்வளவுதான் பாடுபட்டாலும் கடவுளை எய்த முடியாது.
.
அறிவு என்பது நடமாடும் சக்தியில்லாத உடல் உறுப்புக்களைப் போன்றதாகும். அவற்றினுள்ளே உணர்ச்சியானது புகுந்து அவற்றை நடமாட வைக்கும் பொழுது தான், அவை அசைந்து கொடுத்து வேலை செய்கின்றன. உலகம் முழுவதும் இதுவே நிலை;  இதனை நீங்கள் எப்பொழுதும் நினைவிற் கொள்ள வேண்டும்……..
.
வால்மீகியின் முதற் பாட்டு – தீவிரமான இரக்க உணர்ச்சியிலிருந்து தோன்றிற்று:
.
…மகரிஷியான வால்மீகி புனித கங்கா நதியில் நீராடுவதற்காக ஒரு நாள் சென்றபோது ஒரு புறா ஜோடியானது வானத்தில் வட்டமிட்டுப் பறந்துகொண்டே ஒன்றையன்று முத்தமிட்டு விளையாடிக் கொண்டிருந்தது. மகரிஷி மேலே பார்த்தார். அக்காட்சியால் மனங்களித்தார்.  ஆனால் மறுகணமே அவரைத் தாண்டிப் பாய்ந்து சென்ற ஓர் அம்பு, ஆண் புறாவின் மீது தைத்து அதனை உடனே கொன்றது.
.
புறா செத்துத் தரைமீது விழுந்ததும் பெண்புறா, ஆண் புறாவின் சடலத்தைச் சுற்றிச் சுற்றித் துக்கத்துடன் வட்டமிட்டுப் பறந்தது. ஒரு கணத்துக்குள் மகரிஷிக்குச் சகிக்க முடியாத துக்கம் மூண்டுவிட்டது. திரும்பி அந்த வேடனை நோக்கினார்.

.

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: சாச்வதீஸ் ஸமா:
யத் க்ரௌஞ்ச மிதுனாதேக மவதீ: காம மோஹிதம்.                      

(வால்மீகி ராமாயணம் – பாலகாண்டம்)

.

“நீ ஈவிரக்கம் சிறிதுமற்ற ஒரு கொலை பாதகன். அன்பைக் கண்டும் கூட உனது கொலைக்கரம் நிற்கவில்லையே?”

.

என்று கதறினார்.
.
‘இது என்ன? நான் என்ன பேசுகிறேன்?’ என்று கவி தமக்குள்ளேயே சிந்தித்தார். Valmikiஇதுபோல இதற்கு முன்னர் நான் பேசியதே கிடையாதே?’ என்று எண்ணமிடலானார். உடனே அசரீரி வாக்கு ஒலித்தது.
.
“அஞ்சாதே; உன் வாக்கிலிருந்து வெளிவருவது கவியாகும். உலக நன்மைக்காக ராம சரித்திரத்தைக் கவிதையாக எழுது” என்று கட்டளை பிறந்தது.
.
முதற் கவிதை இப்படித்தான் துவங்கியது. ஆதி கவியான வால்மீகியின் வாயிலிருந்து புறப்பட்ட முதற்கவிதை, தீவிரமான இரக்க உணர்ச்சியின் காரணமாக எழுந்தது. அதற்குப் பிறகுதான் ராமனின் சரித்திரமாகிய அழகொழுகும் ராமாயணத்தை அவர் இயற்றினார்.

.

(தொடரும்)

 அடுத்த பகுதி >>

//

One Reply to “எழுமின் விழிமின் – 30”

  1. இந்த வலைத்தளத்தில் உள்ள கதைகள் அனைத்தும் எனக்கு மிகவும் வழிகாட்டியாக உள்ளது.

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *