கடவுள் என்றால் என்ன? – 1

மூலம்:  சுவாமி  தயானந்த சரஸ்வதி (Discourses on certain topics என்ற நூலில் இருந்து)
தமிழில்: வேதம் கோபால்

111212016_640

கடவுள் என்ற தலைப்பு நம் எண்ண கருத்தாக்கத்திற்கோ நம் கற்பனையாலோ பேசப்படும் விவாத பொருள் அல்ல. இருப்பினும் இது ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும், ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறாகவே பேசப்பட்டு வருகிறது. கடவுள் யார் என்று ஒருவருக்கும் தெரியாது. இருந்தாலும் எல்லோரும் ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதைபோல் கடவுள் என்ற தத்துவத்தை வசைமாரி பொழிந்ததுபோல் எதையுமே சாடி இருக்கமுடியாது. அதையும் கடவுள் ஒருவரால்தான் கையாளமுடியும். அவரை பல பெயர் சொல்லி அழைக்கின்றோம். கடவுள் தண்டனை அளிப்பவர் என்றும், பயங்கரமானவர் என்றும், அதே நேரத்தில் அவர் அன்பே உருவானவர் என்றும் சொல்லுகிறோம். சில தத்துவங்கள் இரண்டு செய்தியை சொல்லுகிறது – கடவுள் உன்னிடம் அன்பு பாராட்டுகிறார் ஆனால் நீ விழிப்புடன் ஜாக்கிரதையாக நடக்கவேண்டும். இது எப்படி இருக்கின்றது என்றால் நான் அன்பு பாராட்டுவேன், ஆனால் என் கண்களில் படாதே என்பதுபோல். இப்படி கடவுள் பலவாராக விளக்கப்படுகிறார். கடவுள் மறுப்பாளர்கள் கூட நீங்கள் எந்த கடவுளை மறுக்கிறீர்கள் என்றால் அவர்கள் மேல் உலகில் அமர்ந்துகொண்டு இந்த அண்டங்களை கீழே உருட்டி விட்டவராகக் கருதும் கடவுளைத் தான் என்கின்றார்கள். நாமும் அந்த கடவுளை மறுக்கின்றோம். அப்படி ஒரு கடவுள் இல்லை என்பதை நம்மால் நிருபிக்கமுடியும்.

ஒருவர் கடவுள் உண்டு என்றோ அல்லது இல்லை என்றோ சொன்னாலும் அவரது இருப்பு ஒரு புரியாத புதிர்தான். ஆனால் அதைப் புரிந்துகொள்ள நிறைய திட்ட வழிமுறைகளும், இயற்கை நியதிகளும் உள்ளன. இவை பலவானதும் வேறுபாடுகள் கொண்டதும் ஆகும். ஆனால் அதுவே பிரபஞ்சம் ஆகாது. இந்த உலகம் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல இயற்கை நியதிகள் அளிக்கப்பட்டுள்ளன. நமக்கு பௌதீக உடல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளேயே உடல் வளர பல சுழல் செயல்பாடுகள் முறையே அளிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருக்க பிராணவாயு அளிக்கப்பட்டுள்ளது. வயிற்றுப் பசியை போக்க உணவு தேவை, அது தாராளமாக வெளியில் கிடைக்கிறது. இந்த உணவு சக்திகளை தர ஜீரணசக்தி அளிக்கப்பட்டுள்ளது. பல வித உணர்வுகள், உணர்ச்சியை வெளிப்படுத்த சிந்திக்க மூளை, அதன் மூலம் பலவற்றைத் தெரிந்துகொள்ள ஏதுவாக அளிக்கப்பட்டுள்ளது.

dayananda_swamiji
சுவாமி தயானந்த சரஸ்வதி

இதனால் நமது தேவைகளை அடைய, சுதந்திரமாக சிந்திக்க, குறிக்கோள்களை அடைய என்று பலவிதமான தெரிந்த இயற்கை நியதிகளும், நமக்கு இருக்கின்றதா என்று தெரியாத இயற்கை நியதிகளும், இருக்கின்றது என்று தெரிந்தும் தெரிந்துகொள்ள முடியாத இயற்கை நியதிகளும் உள்ளன. புதிய கண்டுபிடிப்புகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. எல்லா விஞ்ஞான முன்னேற்றமும் நமக்கு ”அளிக்கப் பட்டதே” ஆகும். உண்மையில் எதுவும் நம்மால் படைக்கப் படவில்லை. ஒரு துளி பொருளை நாம் உணடாக்கவும் இல்லை அழிக்கவும் இல்லை. இப்படி நமது தேவைகள் எல்லாமுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் செயல் முறையும் அதிசயத்தக்கது. இப்படி நமது தேவைகளை அளித்தவர் என்று ஒருவர் நிச்சயம் இருக்கிறார்.

கடவுள் என்றால் என்ன என்ற கேள்வியை நாம் தவிர்க்கமுடியாது. இது உடலோடும், உயிரோடும் ஒன்றியது. உண்மை என்னவென்றால் கடவுள் இப்படித்தான் என்ற எல்லை உடையவர். இதை அவர் அவர் எண்ண ஓட்டத்தின்படி சித்தரிக்கப்படுபவர் அல்ல. ஒன்றும் ஒன்றும் கூட்டினால் மூன்றுதான் என்பது என்நாட்டில் வழக்கம் என்றோ அல்லது ஒனறும் ஒன்றும் கூட்டினால் நான்குதான் எங்கள் கலாசாரம் என்றோ கூறமுடியாது. அதைப்போல் கடவுள் என்ற உண்மைக்கு ஒரு இறுதி தீர்ப்புதான் இருக்கமுடியும். கடவுள் என்பது உண்மை என்றால் நாம் அவரை நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும். கடவுள் என்ற சொல் பல பாதிப்புக்களை உடையதால் புனிதமான சமஸ்கிருத சொல்லான ஈஸ்வரன் என்ற சொல்லை பயன் படுத்துவோம்.

ஈஸ்வரன் என்ற வேதத்தின் பதமே ஒரு வித்தியாசமானது. நான்கு வேதங்கள் முடிவில் வேதாந்தத்தை பற்றி கூறுகையில் இந்த ஈஸ்வரன் பற்றி சில சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் ஈஸ்வரன் என்பதே அறிவிற்கு ஒரு வழிகாட்டியாக பிரமாணமாக உள்ளது. ஈசாவாஸ்ய உபநிடதம் ”ஈசாவாஸ்யம இதம் சர்வம்” (இங்கே உள்ளது அனைத்தும் ஈசனே) என்கிறது. எனவே நாமும் அதை அப்படியே உற்று நோக்குவோம். இங்கே இருப்பதெல்லாம் ஈஸ்வரன்தான், ஈஸ்வரன் அல்லாது வேறு ஒன்று இல்லை. நாமும் தூய்மையான எண்ணத்துடன் எல்லாம் ஈஸ்வரன்தான் என்று பார்ப்போம். வேதம் இங்கே இருப்பது ஒரு ஈஸ்வரன் என்று சொல்லவில்லை இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரன்தான் என்கிறது. (The Veda is not saying there is one Ishwara; its says there is only Ishwara ) .

நீ அதை பார்க்கவில்லை என்றால் அதை உண்மையில்லை என்று நிரூபிக்க வேண்டும். அது ஒரு வெறும் நம்பிக்கையை சார்ந்தது அல்ல. இது நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று. நாம் புரிந்துகொண்டு விட்டோமானால் அதுவே சர்வ நிச்சயம், யதார்த்தம். இங்கே ஊகத்திற்கு வேலை இல்லை. ஈஸ்வரன் என்பது நம்பிக்கை சார்ந்த ஒரு பொருள் அல்ல. புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றேயாகும். நாம் ஈஸ்வரனை மானசீகமாகவோ, பட்டும் படாமலுமோ பாராட்டலாம். ஆனால் இங்கே நம்பிக்கைக்கு வேலை இல்லை. இங்கே எனக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. நான் எதையும் நம்ப தேவையில்லை. ஒரு பௌதீக பேராசிரியர் சக்தி-பொருண்மை (Energy-matter) என்பதை கூறுகையில் E=mc2 என்கிறார். ஒரு எம்.எஸ்.சி. மாணவன் அவர் வகுப்பில் எழுந்து எனக்கு உங்கள்மேல் நம்பிக்கையிருப்பதால் எனக்கு அந்த சமன்பாடு பற்றி புரியாவிட்டாலும் பரவாயில்லை என்பது எப்படி முட்டாள் தனமோ அப்படித்தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பதுவும். இந்த அகிலமே ஈஸ்வரன்தான் என்றால் அது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல; நாம் துருவித் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

Baya weaver nest-1


ஈஸ்வரன் என்றால் என்ன ?

இங்கே நாம் காண்பதெல்லாம் பல இயற்கையாகவே உருவானவை, பல இயற்கையில் உருவான ஒன்றோடு ஒன்று புத்திசாலித் தனமாக இணைந்து காணப்படுகிறது. ஆனால் இப்படி பிணைக்கப் பட்ட ஒன்று பிணைத்தபின் பிரித்தால் பிணைப்பினால் உண்டான செயல் திறன் இருப்பதில்லை. ஒரு மோட்டார் வண்டியை எடுத்துக்கொள்வோம். அது பல பாகங்களைக் கொண்டு புத்திசாலித்தனமாக இணைக்கப் பட்டு செயல் படுகிறது. இப்படிப் பட்ட புத்திசாலிதனத்துடன் இணைக்கப்பட்டு ஒரு செயற்கையான செயல் திறனை வெளிப்படுத்துவதை நாம் சிருஷ்டி என்கின்றோம். இது ஒரு அதிசயமான நிஜம். தூக்கணாம் குருவியின் கூடு ஒரு சிருஷ்டி. மோட்டார் வாகணம் ஒரு சிருஷ்டி. இரண்டு சக்கர சைக்கிள், ஒலிபெருக்கி இங்கே உள்ள பெறும் சுவர்கள் இவை எல்லாமே ஒரு சிருஷ்டிதான். நாம் ஒரு தூக்கணாம் குருவி கூடு மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பதை காண்கையில் அது இயற்கையிலேயே கிடைக்கும் தழைகள், நார்கள் கொண்டு பின்னப்பட்டாலும் அதை நாம் ஒரு இயற்கையில் உண்டான பொருளாகக் காணவில்லை.. இந்த இயற்கைப் பொருள்கள் புத்திசாலிதனமாக பின்னப்பட்டுள்ளது. அது தானே மேலே பறந்து ஒரு கூடாக மாறவில்லை. அந்த பொருட்களை பறவை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து சாமர்த்தியமாக புத்திசாலித்தனத்துடன் இணைத்துக் கூடாக மாற்றியிருக்கிறது.

மேலும் பல இயற்கையான பொருள்கள் உண்டு. நம் கண்ணே ஒரு இயற்கைப் படைப்புதான். அது ஒரு தாய் தந்தையரால் உருவாக்கப்பட்டது அல்ல. அதுவும்கூட புத்தி சாதுரியத்துடன் பல பாகங்களைக் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. கரோனா, ரிடினா, ஆப்டிக் நர்வ் என்று சேர்ந்து அதன் செயல்பாடுகள் வியக்கதக்க அளவில் உள்ளது. நமது இருதயம் ரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு பம்ப் செய்கிறது. இந்த ரத்தம் இல்லாமல் ஒரு திசுக்களும் உயிரோடு இருக்காது, அது இறந்துவிடும். நமது இதயமே ஒரு ’பம்ப்’ (காற்றடிக்கும் சாதனம்). அது இடைவிடாது ஒருவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வேலை செய்கிறது. இதுவும் ஒரு அதிசயக்கத் தக்க உடல் உறுப்பே ஆகும். மேலும் இருதயம் ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கு தானே பம்ப் செய்வதோடு அல்லாமல் சாமர்த்தியமாக ரத்தத்தை தன்னுள்ளும் இழுத்துக் கொள்கிறது. இங்கே எல்லாவற்றைவிட உயர்வான செயல் திறன் வெளிப்படுகிறது. இது மிகவும் முக்கியமான நிஜம். அது எப்படி செயல்படுகிறது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் புரிந்துகொண்ட வகையில் இவை எல்லாமுமே ஒர் அறிவாற்றலைச் சார்ந்தது. நாம் நுண் உயிர் செல்களை பரிசோதிக்கையில் நமக்கு மேலும் பல விஷயங்கள் தெரியவருகிறது. இந்த நுண் உயிர் செல்கள் உயிரியலின் (biology) நியதிகளுக்குக் கட்டுப்பட்டது. உண்மையில் நுண் செல் என்பது ஒரு உயிரியல் அலகு. அது பொதுவான பல தன்மைகளை எல்லா நுண் செல்களிடத்திலும் கொண்டுள்ளது. ஒரு பேச்சுக்காக இந்த நுண் செல் கூறுகள் சுவாமி தயானந்தருக்கு என்று ஒரு மாதிரியாகவும் (ஏன் என்றால் அவர் சுவாமிஜி!) என்றும் மற்றவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும் என்பது உண்மையில் நிஜம் இல்லை. நமது கண்கள் பல அணுக்கூறுகளின் சேர்க்கை. காதும் அவ்வாறே, அதில் ஏதும் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த மொத்த அணுக்கூறுகளும் பல்வேறுவிதமாக இணைக்கப்பட்டு, பல்வேறுவிமான செயல்திறன்களை வெளிப்படுத்துவது என்பது ஒரு புத்தி சாதுரியத்துடன் செய்யப்பட்டுள்ளது. இப்படி அதிசயத்தக்க புத்தி சாதுரியத்துடன் இயற்கையாகவே பிணைக்கப் பட்டுள்ளவைகளை நாம் அந்த அணுக்கூறுகள் தாமே இயங்கி இணைந்தது என்று கூறமுடியாது. சலனமற்ற புத்திசாதுரியம் இல்லாத அணுக்கூறுகள் தானாகவே இயங்கி ஒன்றுபட்டு நமது கண், காது, இருதயமாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏன் இந்த மொத்த உடலே ஒரு புத்தி சாதுரியத்துடன இணைக்கப் பட்டுள்ளது. இதில் எந்த தனிப்பட்ட மனிதனின் பங்கும் கிடையாது. எனவே இது ஒரு அதிசயதக்க செயல்பாடு என்பதும், அது இந்த ஜகத்தின் ஒரு அங்கம் என்பதும் உண்மை.

quantum

க்வாண்டம் இயற்பியலை எடுத்துக் கொண்டால், நாம் புரிந்து கொள்வது, கண் எதிரே உள்ள உலகம், இந்த பூமி, நாம் உயிர் வாழ்வதற்க்காக உண்டான இந்த உடல், மூளை, உணர்வு பாகங்கள் எல்லாமுமே ஒரு புத்தி சாதுரியத்துடன் பிணைக்கப் பட்டுள்ளது என்ற விஷயம் தான். இதுதான் சிருஷ்டி என்பதாகும். எனவே இந்த பிரபஞ்ச படைப்புகள் எல்லாம் ஆச்சரியத்தில் அமிழ்த்தும் ஒர் உன்னத சிருஷ்டியாகும். எனவே இந்த பிரபஞ்சமே ஒரு அதிசயதக்க உருவாக்கமே ஆகும். இந்த உருவாக்கம் மிகவும் சாமர்த்தியத்துடன் பிணைக்கப் பட்டுள்ளது. உருவாக்கம் என்றால் அது அறிவு சார்ந்ததே ஆகும். அறிவு இயங்கக் கூடிய ஒரு வஸ்து ஜடப் பொருளாக (inert) இருக்கமுடியாது.

அவர் நமது உணர்வுகளுக்கு புலப்படும் அறிவாற்றலை உடையவர். அவரை நாம் புரிந்துகொள்ள வேண்டும், பின் பற்ற வேண்டும். அவரை நாம் காண்கிறோமோ இல்லையோ என்பது வேறு. நாம் ஒரு அழகிய ஓவியத்தைப் பார்க்கையில் நம் கண் எதிரே ஓவியமும் அதை உருவாக்கியவர் திறமையும் மனக்கண் முன் தோன்றுகின்றன. அதைபோல நாம் இந்த பரந்த பிரபஞ்சமான, புத்தி சாதுரியத்துடன் உருவாக்கப்பட்ட ஜகத்தை கண்ணால் பார்க்கின்றோம் அதை உருவாக்கியவர் இங்கிருந்தாலும் எங்கிருந்தாலும் அவர்தான் அனைத்தும் செய்பவர் (”சர்வஸ்ய கர்த்தா”) அனைத்தும் அறிந்தவர் (”சர்வகஞ:”), எல்லா மன உணர்வுகளுக்கும் புலப்படும் இந்த சர்வசக்திமானையே நாம் சமஸ்கிருத மொழியில் ”ஈஸ்வரன்” என்றும், ஆங்கிலத்தில் God என்றும் சொல்கின்றோம்.

எங்கே கடவுள் ?

யாராவது எங்கே கடவுள் என்று கேட்ட மாத்திரத்தில், அவர்கள் கடவுள் என்பவர் உள்ளுரில் இருப்பவர் அல்லது இல்லை என்ற முடிவுடன் கேட்கிறார்கள். அவர் அப்படிக் கூறுவது அறிவு வளர்ச்சியடையாத காலகட்டத்தைச் சேர்ந்த மனிதப் பழங்குடியினர் சிந்தனையில் ஓடும் கேள்வியை போல்தான். ஒருவருக்கு கடவுள் என்பது என்ன என்று தெரியாமல் அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்கும் தகுதி கிடையாது. எனவே ஒருவர் முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஈஸ்வரன் என்பவர் நிச்சயமான, என்றும் இருக்கின்ற, அறிவாற்றல் பொருந்திய இந்த ஜகத்தை உருவாக்கவும், காக்கவும், அழிக்கவும் ஆற்றலையுடைய சர்வ வல்லமை படைத்தவர்.

எந்த உருவாக்கத்திற்கும் புத்திசாதுரியமும், பொருளும் தேவை. பொருள் இல்லாமல் எதையும் உருவாக்கமுடியாது. அது தானாகவே இயங்கி செயல்பட்டு பல உருவாக்கங்களை ஏற்படுத்த முடியாது. எனவே ஏதோ ஒரு பொருளைக் கொண்டே ஈஸ்வரன் அதிலிருந்து பல பொருட்களை உருவாக்கி இருக்கிறார். ஒரு பேச்சுக்கு கடவுள் X என்ற பொருளிலிருந்து இந்த ஜகத்தை உருவாக்கினார் என்று வைத்துக்கொண்டால், இந்த X என்ற பொருள் எதிலிருந்து வந்தது என்ற கேள்வி வரும். உடனே அது W என்ற பொருளிலிருந்து வந்தது என்றால, இந்த W எந்த பொருளிலிருந்து வந்தது என்ற கேள்வி எழும். இப்படி UV என்ற அடிக்கிக்கொண்டே A சென்றாலும் முடிவு பெறாது. கடவுள் A என்ற பொருளை அங்கிருந்து பெற்றார் என்றால், அந்த “அங்கு” என்பது ஆகாயவெளி, அந்த ஆகாயவெளியும் கடவுள் உருவாக்கத்தில் உட்பட்டதுதான், பிரபஞ்ச விஸ்தரிப்புதான். அதைபோல் காலமும் அதற்குள் இருப்பதுதான். காலமும் வெளியும் இந்த பிரபஞ்சத்திற்கு உட்பட்டதுதான் என்பதை நவீன பௌதீக ஆராய்ச்சி ஒத்துக்கொள்கிறது. எனவே உருவகப் பொருள் இங்கே, அங்கே என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஈஸ்வரன் இந்த உருவகப் பொருளை யாரிடமிருந்தோ கடனாக பெற்றிருக்க முடியாது. கடன் தருவதற்கு இங்கே யாரும் இல்லை. எல்லோருமே உருவாக்கப்பட வேண்டியவர்கள்தான். எனவே இந்த ஜகத்தின் உருவகப் பொருளும் இந்த ஜகத்தை உருவாக்கியவரும் ஈஸ்வரன்தான்.

நாம் நினைக்கின்றோம் – உருவகப் பொருளும், உருவாக்கியவரும் (படைப்புகளும், படைப்பவரும்) ஒன்றாக இருக்க சாத்தியகூறுகள் இல்லை என்று. அதைப் போன்ற உதாரணங்களை நாம் கண்டதில்லை. ஆனால் அவை ஒன்றே என்று வேதம் சொல்கின்றது. இந்த மொத்த ஜகத்தின் உருவாக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள போதிய முன் அனுபவத்தை பெற முடியாததால், இந்த தர்க்க வாதத்தை விட்டு நாம் அதை அணுகவேண்டும். வேதம் சொல்கிறது – அதை அவர் உருவாக்கினார் அவரே அதுவாக ஆனார் (”ஸ்வயம் அக்ருத ஸ்வயம் அபாவத”). எனவே அவரே உருபொருளும், உருவாக்கியவரும் ஆவார். இதை உருவகித்துக் கொள்ள, சிலந்தியை உதாரணமாக கொள்வோம்.

7985938-white-spider-and-spider-web-isolated-on-the-black-background

சிலந்தி தன் வாய் உமிழ் நீரிலிருந்து இழையை உண்டாக்கி அதை உத்திரத்தின் ஒரு இடத்தில் பதித்து இழை பிரியாமல் தொங்கி கிழே மற்றொரு இடத்தில் பதியவைக்கும். இப்படி இழை ஏற்ப்படுத்திக் கொண்டு இழை பிரியாமல் மேலும் கீழும் சென்று ஒர் அதிசயக்கத் தக்க கூட்டை உருவாக்குகிறது. இங்கே சிலந்தியே உருவகப் பொருளுக்கும், உருவாக்கியதற்கும் காரணம் ஆகும். அதைப்போல்தான் இந்த ஜகமாக உருவாகும் பொருளும், உருவாக்கியவரும் ஈஸ்வரன்தான்.

வேதம் நாம் காண்கின்ற கனவை மற்றொரு உதாரணமாக சொல்லுகிறது. இந்த கனவு உலகத்தை நாம் படைக்கையில் அதற்கான பொருளையோ அதை உருவாக்குபவரையோ நாம் யாசிப்பதில்லை. நமது அறிவாற்றலின் படி நமது மனக்கண் முன்னே கனவு உலகத்தையும், பரந்த வெளியையும், கால, நேரத்தையும் நம்மால் நிர்ணயம் செய்யமுடிகிறது. விழித்ததும் அது மறைந்து விடுகிறது. மறுபடி தூங்குகையில் அதையே திரும்பப் படைக்க முடிகிறது. இவை எல்லாமே உங்களது உருவாக்கம்தான். இதையே நம் சாஸ்திரங்கள் உருவகப்பொருளும், உருவாக்குபவரும் ஒன்றே என்கிறது.

இதிலிருந்து நமக்கு ஒன்று புலப்படுகிறது, ”எந்த ஒரு உருவாக்கப்பட்ட பொருளும் அதன் அதன் மூலப்பொருள் அதன் உள்ளேயே இருந்தாலும் அந்த மூலப்பொருள் அதன் தன்மையை இழந்துவிடுகிறது அல்லது உருவாக்கப்பட்ட பொருள் மூலப்பொருளின் தன்மையை கொள்வதில்லை.”

நமது சட்டை ஒருவகை நார். நார் இல்லாமல் சட்டை இல்லை. நார் இழை இல்லாமல் நார் இல்லை. மூலக்கூறுகள் (Molecules) இல்லாமல் நார் இழை இல்லை. அணுக்கள் இல்லாமல் மூலக்கூறுகள் இல்லை. இப்படி முடிவின்றி சொல்லிக்கொண்டே போனாலும் நாம் இறுதியாக உருவாக்கிய பொருளிலிருந்து இவற்றைப் பிரிக்கமுடியாது.

வேதத்தின்படி ஐந்து பெரிய சக்திகளான அண்டவெளி (இதில் காலமும் அடங்கும்), காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி இவை அனைத்தும் ஈஸ்வரனுடைய ஜகத்தின் அங்கமே. நமது பௌதீக உடலும் இந்த ஐந்து சக்திகளைக் கொண்டதுதான். எனவே இந்தப் பிரபஞ்சம், நம் உடல், மூளை, உணர்வு பாகங்கள் எல்லாமுமே ஈஸ்வரனுடைய படைப்புதான்.

எனவே வேதம் கூறுகின்ற ”தீவிஸ்தன் ஸ்ர்வம் கரோதி” என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதாவது ஈஸ்வரனின் ஒளி வெள்ளத்தில்தான் இவை எல்லாமுமே தோன்றின என்பதை நாம் எல்லோருமே புரிந்துகொள்ள வேண்டும். சிருஷ்டியும், சிருஷ்டிப்பவரும் கடவுள்தான் என்பது வேதத்தின் இறுதி தீர்ப்பு. இங்கே படைப்பும் படைப்போனும் வேறு வேறு இல்லை. எனவே இந்த ஜகத் என்பது ஈஸ்வரனின் விரிவாக்கமே அன்றி உருவாக்கம் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

(தொடரும்)

89 Replies to “கடவுள் என்றால் என்ன? – 1”

  1. நமது தமிழ் இந்து தளத்தில் பலரும் அற்புதமான விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அது பாராட்டுக்குரியது. அருள்மிகு தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் ஆங்கில நூலின் தமிழாக்கம் மிக சிறப்பாக உள்ளது. திரு வேதம் கோபால் அவர்களுக்கு நமது நன்றியும், பாராட்டுக்களும் எப்போதும் நிலைத்து நிற்கும்.

    கடவுள் என்பதற்கு இவ்வளவு சிறப்பான விளக்கத்தை அனைவரும் எளிதாக , புரிந்து கொள்ளும் வகையில் திரு தயானந்த சரஸ்வதியைப்போல விளக்கி சொல்பவர்கள் வெகு சிலரே . மிக உயர்ந்த கட்டுரையை வெளியிட்ட தமிழ் இந்துவுக்கு நமது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

  2. /”எந்த ஒரு உருவாக்கப்பட்ட பொருளும் அதன் அதன் மூலப்பொருள் அதன் உள்ளேயே இருந்தாலும் அந்த மூலப்பொருள் அதன் தன்மையை இழந்துவிடுகிறது அல்லது உருவாக்கப்பட்ட பொருள் மூலப்பொருளின் தன்மையை கொள்வதில்லை.”/ மூலப் பொருளின் தன்மை என்றது மூலப்பொருளின் வடிவத்தையா? அல்லது அதன் குணத்தையா? விளக்கம் வேண்டும். பொன்னால் ஆண அணிகலன் என்றால் , அணிகலனில் மூலப் பொருளின் ஒளியும் கனமும் இருக்கத்தானே செய்கின்றது? செம்மண்ணால் செய்யப்பட்ட பாணை என்றால் மண்ணின் சிவப்பு நிறமும் கடினத்தன்மையும் காரியத்தில் இருக்கத்தானே செய்கின்றது. மண்பானை உடைந்தால் மண்தானே ஆகின்றது. பொன்ன்னால் ஆன நகையை உருக்கினால் பொன் தானே ஆகின்றது. இழத்தல் எது?

  3. நாம் நினைக்கின்றோம் – உருவகப் பொருளும், உருவாக்கியவரும் (படைப்புகளும், படைப்பவரும்) ஒன்றாக இருக்க சாத்தியகூறுகள் இல்லை என்று. அதைப் போன்ற உதாரணங்களை நாம் கண்டதில்லை. ஆனால் அவை ஒன்றே என்று வேதம் சொல்கின்றது. இந்த மொத்த ஜகத்தின் உருவாக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள போதிய முன் அனுபவத்தை பெற முடியாததால், இந்த தர்க்க வாதத்தை விட்டு நாம் அதை அணுகவேண்டும். வேதம் சொல்கிறது – அதை அவர் உருவாக்கினார் அவரே அதுவாக ஆனார் (”ஸ்வயம் அக்ருத ஸ்வயம் அபாவத”). எனவே அவரே உருபொருளும், உருவாக்கியவரும் ஆவார். இதை உருவகித்துக் கொள்ள, சிலந்தியை உதாரணமாக கொள்வோம்./ குயவனே மண்பாண்டம் ஆனால்தான் படைத்தவரே பிரபஞ்சம் ஆகலாம். சிலந்திவலை சிலந்தியின் எச்சிலாகிய சடத்திலிருந்து உருவாகியதே. சிலந்தியின் உயிர் சித்து. அதுதான் சடமாகிய எச்சிலிலிருந்து வலையை உருவாக்கியது. வலைக்கு மூலப்பொருள் எச்சில். அந்தமூலப்பொருள் சிலந்திப்பூச்சியிடமே உள்லது. தன்னிடத்திலுள்ள சடமாகிய எச்சிலை மூலப்பொருளாகக் கொண்டுதான் சிலந்தி வலையைப் பின்னியதே யொழிய சித்தாகிய தான் சடமாகிய வலையாகா ஆகியதன்று. அபிமானமின்றி வேத வக்கியத்தைச் சிந்திக்க வேண்டுகின்றேன். தாமரை கிழங்காகிய வித்திலிருந்து முளைக்கின்றது. கிழங்குக்கு ஆதாரம் சேறு. இடத்தின் பெயர் அதில் உள்ள பொருளுக்கு ஆகிவருவதுஇடவாகு பெயர் என்று தமிழ் இலக்கனம் கூறும். அவ்வாறே சேறு ஆதாரமாக இருப்பதால் கிழங்கிலிருந்து முளைத்த தாமரைக்குப் பங்கஜம் என்ற பெயர் விளங்குகிறது. சேறு எப்படி தாமரையாகாதோ அப்படியே சித்தாகிய சிவம் அல்லது பிரமம் சடமாகிய பிரபஞ்சம் ஆகாது.

  4. /இந்த ஜகத் என்பது ஈஸ்வரனின் விரிவாக்கமே அன்றி உருவாக்கம் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்./ ஈசுவரனின் விரிவாக்கமே இந்த ஜகத் என்றால், காரியத்தில் காணப்படும் அனைத்துக் கேடுகளும் குறைகளும் நலிவுகளும் ஈசுவரனிடத்திலிருந்தே, அந்த மையத்திலிருந்தே விரிவடைந்தனா என்ற குற்றம் வருமே. ஈசுவரனின் பரிணாமமே இந்த ஜகத்தா. சித்து பரிணமிப்பது உண்டா? விரிவும் சுருக்கமுமாகிய நிலைமாற்றம் சடத்துக்கே யன்றி சித்துக்கில்ல. சித்து என்றும் நிலைமாறாது என்றும் கூறக் கேட்டுள்ளேன். அடுத்து வருக் கட்டுரையில் இந்த ஐயங்களுக்கு விளக்கம் கிடைக்கும் என நம்புகின்றேன்.

  5. திரு.குமாரஸ்சுவாமி ஐயா மற்றும் தமிழ் ஹிந்து வாசகர்களுக்கு
    நான் ஆண்மீகத்தை பற்றி சற்றேனும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் ஒரு பார்வையாளன் என்ற நிலையில் இருப்பவன். பெரியவரின் இந்த கட்டுரை எனக்குள் ஒரு ஈர்பை ஏற்படுத்தியதால் மொழிபெயர்த்து இந்த வலை தளத்திற்கு அனுப்பினேன். நான் ஆண்மீகத்தில் பார்வையாளன் என்ற நிலையிலிருந்த விளக்கம் சொல்லும் அளவிற்கு அதன்பின் விவாதம் செய்யும் அளவிற்கும் வளரவேண்டும். இந்த தளத்தில் பல கற்றவர்கள் விளக்கங்களை அளிக்கிறார்கள். அவர்களை நான் ஐயாவின் கேள்விக்கு பதில் தருமாறு வேண்டுகிறேன். திரு.குமாரசாமி ஐயா அவர்களின் முதல் மறுமொழி கேள்விக்கு நான் தவறாக மொழி பெயர்திருக்கிறேனா என்று தெரியவில்லை. மேலும் சில வரிகளை நீளம் கருதி மொழி பெயர்கவில்லை. இதுதான் அந்த புத்தகத்திலுள்ள ஆங்கில வாசகம் (Anything created from a material is not going to be independent of that Material. Therefore no product is independent of the material of which it is made of.)
    அதைபோல் 2வது மறுமொழிக்கு ( We think that the maker and material cannot be identical because we did not come across such an example. But, the Veda says they are identical. Our experience is not going to work when we take the entire creation. So the logic has to give it way to accommodate something which is outside our logic. Veda says: Swayam akuruta and Swayam abhavata also. He made and He became. He is not only the maker but also the material for the creation. To assimilate this concept it also gives us a model-Urnanabhihi a spider. A spider produces a thread. It sticks one end of the thread to the ceiling and then comes down safely. When the thread is touched, it will go up, it rolls the whole thing back into its mouth and again brings it down. The thread is said to be very strong. It is able to hold the weight of the spider: it does not break at all. The spider is therefore the maker as well as the material cause of its web. Just as the spider creates the web and resoles it into itself, so too, this entire Jagat also has come from Ishvara, He is the maker and the material)

  6. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

    ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

    கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டுவானாகி நின்றாயை

    என் சொல்லி வாழ்த்துவனே.- – மாணிக்க வாசகர்..

    மனித மொழிகள் பூரணமானவை அன்று. ஏனெனில் இறைமை மொழிபேசமுடியாத ஊமைகளும் , மொழியே இல்லாத பிற உயிர்களும் கூட உணரவேண்டிய ஒன்று தான். வாய் வார்த்தைகள் என்ன பயனும் இல. ஒன்றே எல்லாமாகவும் இருக்கிறது என்பதும் இன்றைய விஞ்ஞான ( அறிவியல்) உண்மை ஆகும். ஈசுவரனின் பரிணாமமாக இல்லாத ஜகத்து என்பது இருக்கமுடியாது என்றே என்னுடைய சிற்றறிவுக்கு தோன்றுகிறது. மாறுபட்ட கருத்துக்களும் சுவை தருகின்றன. எல்லாப்படைப்புக்களும் விரிவாக்கம் தான். புதியதாக எதுவும் வர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

  7. // ஈசுவரனின் விரிவாக்கமே இந்த ஜகத் என்றால், காரியத்தில் காணப்படும் அனைத்துக் கேடுகளும் குறைகளும் நலிவுகளும் ஈசுவரனிடத்திலிருந்தே, அந்த மையத்திலிருந்தே விரிவடைந்தனா என்ற குற்றம் வருமே. . ஈசுவரனின் பரிணாமமே இந்த ஜகத்தா. சித்து பரிணமிப்பது உண்டா? விரிவும் சுருக்கமுமாகிய நிலைமாற்றம் சடத்துக்கே யன்றி சித்துக்கில்ல. சித்து என்றும் நிலைமாறாது என்றும் கூறக் கேட்டுள்ளேன். //

    மேற்கண்ட ஆட்செபங்களுக்கு விடை உண்டு.

    முதலில், ‘ஈசுவரனின் பரிணாமமே இந்த ஜகத்து’ என்று கூறுவதற்குப் பிரமாணங்கள் உண்டு:

    “யதோ வா இமானி பூதானி ஜாயந்தே.. தத் ப்ரஹ்ம” [எதிலிருந்து இந்த உயிர்கள் எல்லாம் பிறக்கின்றனவோ அதுவே பிரம்மம் என்று அறிவாயாக] – தைத்திரீய உபநிஷத்

    “யத: ஸர்வாணி பூதானி பவந்தி ஆதி யுகாகமே” [எவரிடத்திலிருந்து இந்த உயிர்களெல்லாம் யுகத்தின் தொடக்கத்தில் பிறக்கின்றனவோ] – மகாபாரதம்

    இவ்விரு இடங்களில் “எவரால் படைக்கப்பட்டது” என்று கூற இடமிருப்பினும், “எவரிடத்திலிருந்து தோன்றின” என்று விசேஷித்துக் கூறுவதால் ஈசுவரனின் பரிணாமமே ஜகத் என்று விளங்குகிறது.

    “நாராயணனிடமிருந்து பிரபஞ்சம் அனைத்தும் தோன்றியது” என்று உபநிஷத் கூறியது. இவ்விடத்திலும் “நாராயணன் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தான்” என்று கூறாமல் விசேஷித்துக் கூறப்பட்டது.

    “As gold is one substance still, however diversified as bracelets, tiaras, or earrings, so Hari is one and the same, although modified in the forms of gods, animals, and man.” – விஷ்ணு புராணம் 3.7

    இரண்டாவதாக, மேற்கூறிய ஆட்சேபத்திற்கு சமாதானம் உண்டு:

    “சித்து பரிணமிக்காது” என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு “பிரபஞ்சம் ஈஸ்வரனின் பரிணாமம்” என்பது “சரீர-சரீரி” நோக்கத்தில் சொல்லப்பட்டது. பிறத்தல், இறத்தல், விரிதல், குறைதல் முதலியன ஜீவான்மாவுக்கும் கிடையாது. ஆனால் “இவன் பிறந்தான்”, “இவன் இறந்தான்”, “பெருத்து விட்டான்”, “இளைத்துப் போய் விட்டான்” என்ற வழக்கு உண்டு. அதே போல ஈஸ்வரனுக்கும்.

    ஈஸ்வரனுக்கு பஞ்ச பூதங்களால் ஆன பிரபஞ்சம் சரீரமாக முடியுமா? அப்படி இருந்தால் ஈஸ்வரனுக்கு மல சம்பந்தம் உண்டாகுமே? என்ற ஆட்சேபம் எழுகிறது. இதற்கும் பதில் உண்டு — ஜீவாத்மா எடுக்கும் சரீரம் கர்ம வினையால், தன்னிச்சையாக உடலைத் தேர்ந்தெடுப்பதில்லை. அதே கர்ம வினையால் பிணி, மூப்பு, வலி, துக்கம் முதலியவைகளாலும், தன கட்டுப்பாட்டில் இல்லாத நுண்ணுயிர்கள் விலங்குகள் முதலியன அவன் உடலுக்குத் தீங்கு செய்வதாலும் சீவான்மா வாட்டப்படுகிறான்; அஞானத்தால் சம்சாரத்தில் உழல்கிறான் — இவை அனைத்துமே அந்த ஜீவனின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.

    ஆனால், பிரபஞ்சமனைத்தும் பரமனது சரீரமானாலும் அது முழுவதும் அவன் கட்டுப்பாட்டில் – இதைத்தான் லீலா விபூதி என்கிறோம். அது எப்பொழுது விரிவடையும், எப்பொழுது சுருங்கும், எப்பொழுது அழிந்து ஸ்தூல நிலைக்குச் செல்லும் என்பது அனைத்தும் ஈஸ்வரன் கட்டுப்பாட்டில், அவன் தன்னிச்சையாகச் செய்வது. இதனால் அவனுக்குப் பிணி, மூப்பு, முதலானவைகளால் துன்பங்கள் இல்லை. இத்தகைய சம்பந்தத்தினால் அவனுக்கு ஒரு குறையும் இல்லை.

    இறுதியாக, ஈஸ்வரனுக்கு பிரபஞ்சமாகிய லீலா விபூதி தவிர, பிரகிருதி சம்பந்தம் இல்லாத நித்ய விபூதி உண்டு என்று புருஷ சூக்தத்தில் பிரமாணம் உண்டு.

  8. ஈஸ்வரன் என்று ஒருவன், பிரபஞ்சத்திற்கு மூலப்பொருள் என்று ஜடம் என்று தனித்தனியாக இரண்டு இருந்தால் “முதலில் ஒன்று தான் இருந்தது” என்ற வேத வாக்கியத்திற்கு முரணாகிவிடும். மூல பிரகிருதி ஈஸ்வரனை ஆஷ்ரயமாக, அதாவது ஈஸ்வரனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று கூறினால் தனித்தனியாக இரண்டாகக் கூற அவசியமில்லை. அது தவிர, குயவன்-மண்பானை போன்ற ஒரு சம்பந்தத்தை ஈஸ்வரனுக்கும் ஜகத்துக்கும் கூறினால், “குயவன் தரையில் நின்றுகொண்டு மன்பானையைப் படைத்தான் என்று கூறுவது போல, ஈஸ்வரன் எங்கு இருந்துக்கொண்டு ஜகத்தை சிருஷ்டித்தார்?” என்ற கேள்விக்கு சமாதானம் கூற இயலாது.

  9. @ C.N.Muthukumaraswamy on January 10, 2013 at 2:55 pm
    மூலப் பொருளின் தன்மை என்றது மூலப்பொருளின் வடிவத்தையா? அல்லது அதன் குணத்தையா? விளக்கம் வேண்டும். பொன்னால் ஆண அணிகலன் என்றால் , அணிகலனில் மூலப் பொருளின் ஒளியும் கனமும் இருக்கத்தானே செய்கின்றது? செம்மண்ணால் செய்யப்பட்ட பாணை என்றால் மண்ணின் சிவப்பு நிறமும் கடினத்தன்மையும் காரியத்தில் இருக்கத்தானே செய்கின்றது. மண்பானை உடைந்தால் மண்தானே ஆகின்றது. பொன்ன்னால் ஆன நகையை உருக்கினால் பொன் தானே ஆகின்றது. இழத்தல் எது?//

    ஐயா இங்கே வருபவர்கள் அளவிற்கு எனக்கு வேதமோ, சமிஸ்கிருதமோ தெரியாது. ஏதோ என் அறிவிற்கு எட்டிய அளவில் விளக்க முயற்சிகிறேன்.

    வெளியே இருக்கும் வரை வாழைபழம் வயிற்றுக்கு போனபின்னும் அது வாழைபழமா அல்லது ‘நான்’ – அ ? இங்கே இழந்தது எதுவோ ஆனது எதுவோ?

    பிரித்து பிரித்து நாம் ஆராயும் கடவுள் உண்மை எனில். நமக்கு உண்மையை உண்மை என்று உணர்த்தும், புலன்கள், அறிவு, அறிவியல் இவற்றின் நம்பக தன்மை முதலில் சரியானது தானா ?

    புலன்கள் – உணர்த்துவது ஒப்பீடுகளால் (comparing) மட்டுமே. (உதாரணமாக- நாம் தொடும் பொருள் குளிர்ச்சியா அல்லது வெப்பமா?அது பொருளின் வெப்பம் மற்றும் நமது கையின் வெப்பத்தை பொருத்து தான். உண்மையாக அந்த பொருளின் நிலை என்ன? புலன்கள் உண்மையை உணர்த்தாது .

    அறிவு, அறிவியல் – எது நம்முள் சென்றாலும் நமது புலன்களால் மட்டுமே செல்ல முடியும். அப்படியானால் ஒப்பீடு இல்லாமல் எதுவும் நமக்கு புரியாது. கடவுள் – உண்மை எனில் அவரை எதனுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்வது? ஒப்பிட முடியாத – அவர் எல்லாதிற்கும் மேல அப்படின்னா உடனே மேல பார்க்க ஆரம்பிசிட்ரறோம்.
    அது தான் நமது அறிவு.

    எல்லாமே அவன் தான் அவரை பற்றி வார்த்தையால் விளக்க முடியாது – அவனை உணரமட்டுமே முடியும். எப்படி? நமக்கு ஒப்பிடாமல் விளங்காது. ஆகையால் ஒரு சின்ன விளக்கம் – ஒரு மலர் பார்க்கிறோம் மிகவும் அழகான அற்புதமான மலர், அழகிய வண்ணம்,நல்ல மனம், இதழ்களின் மென்மை எல்லாம் ஒருசேர அதை முழுதாக ரசிக்கிறோம். நமது ரசனை எதுவரை? அதை அறிவிற்கு எடுத்து செல்லும் வரை மட்டுமே. அது ரோஜா என்று பெயர் நமது அறிவிற்கு எட்டியவுடன் அதை பற்றிய எல்லா அறிவும் சேர்க்க, நமது உணர்வு, ரசனை, எல்லாம் முடிந்து அறிவு மட்டும் விரிவடைகிறது.
    அறிவியல் ஒருபடி மேல் சென்று ஒவ்வொரு இதழையும் தனியாக பிரித்து ஆராய்கிறது. எங்கே உணர்வது உண்மையை, முழுமையை, உன்னதத்தை?

    மகான்கள், ரிஷிகள், முனிகள் ஒரு வாக்கியத்தில் சொல்வது ஐம்புலன்களை அடக்கினால் ஆண்டவனை அடையலாம். அண்டத்தில் எதுவோ அதுவே இந்த பிண்டத்திலும்.

    நன்றி

  10. கந்தர்வன் அவர்களின் விளக்கம் தெளிவாக இருக்கிறது. ஆனால் உண்மையான பகுத்தறிவு வாதிகள் கருத்துப்படி , ( பகுத்தறிவு என்றவுடன் போலிகளான ஈவேரா , பரிசுத்த ஆவி வீரமணி, சுபவீ மாமா ஆகியோரை கருதற்க) ஆன்மீகத்துக்கும், உண்மைப்பகுத்தறிவுக்கும், இடையே மிக குறைந்த வேறுபாடுகளே இருப்பதாக கருதுகின்றனர்.

    1.கடவுள் அல்லது பரமசிவன், அல்லது பார்வதி, அல்லது கணபதி அல்லது முருகன் அல்லது மகாவிஷ்ணு போன்ற சொற்கள் மற்றும் பெயர்களுக்கு பதிலாக இயற்கை அல்லது அளக்கமுடியாத சக்தி என்ற சொற்களை பயன்படுத்துகின்றனர்.

    2. தினசரி வழிபாடு, வாரவழிபாடு, மாதவழிபாடு, அல்லது ஒரே நாளில் பல முறை வழிபாடு என்ற வழிபாடுகளை தேவை இல்லாதது என்று உண்மையான பகுத்தறிவாளர் கருதுகின்றனர் ஆனால் கடவுள் என்ற பெயரில் வழிபடுவோரை மூடர்கள், காட்டுமிராண்டி, அயோக்கியன் என்றெல்லாம் வசை பாடுவதில்லை.

    3. உண்மையான கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் , கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வசைபாடுவதில்லை. காலப்போக்கில் அனுபவம் ஏற ஏற , இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட, கடவுள் நம்பிக்கை தானே வரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

    4. ஆபிரகாமிய மதத்தினரைப்போல, பிறமதத்தினரின் வழிபாட்டு தளங்களை இடித்தோ, தீயிட்டோ, வெடிவைத்தோ அழிப்பதின் மூலம் அந்த மதங்களை அழித்துவிடமுடியும் என்ற மூடநம்பிக்கை எதுவும் உண்மை பகுத்தறிவாளர்களுக்கு கிடையாது.

    5. சொர்க்கம் அல்லது நரகம் என்ற இரண்டுமே இந்த உலகத்திலும் உள்ளது. அதனை தேடி வேறு எங்கும் செல்ல தேவை இல்லை என்று உண்மை பகுத்தறிவாளர்கள் கருதுகின்றனர்.

    ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் மேற்படி ஆங்கில உரைகளின் தொகுப்பு படிக்க மிகவும் சுவையாக இருக்கும். தமிழாக்கத்தினை புரிந்துகொள்ள சிரமமாக நான் கருதவில்லை. ஆனால் யாராவது அன்பர்கள் தமிழ் சிரமமாக இருப்பதாக கருதினால் , ஆங்கில வெளியீட்டினை படித்து பலன் பெறலாம் .
    .

  11. /“நாராயணனிடமிருந்து பிரபஞ்சம் அனைத்தும் தோன்றியது” என்று உபநிஷத் கூறியது. இவ்விடத்திலும் “நாராயணன் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தான்” என்று கூறாமல் விசேஷித்துக் கூறப்பட்டது/.ஆனால், பிரபஞ்சமனைத்தும் பரமனது சரீரமானாலும் அது முழுவதும் அவன் கட்டுப்பாட்டில் – இதைத்தான் லீலா விபூதி என்கிறோம். அது எப்பொழுது விரிவடையும், எப்பொழுது சுருங்கும், எப்பொழுது அழிந்து ஸ்தூல நிலைக்குச் செல்லும் என்பது அனைத்தும் ஈஸ்வரன் கட்டுப்பாட்டில், அவன் தன்னிச்சையாகச் செய்வது. இதனால் அவனுக்குப் பிணி, மூப்பு, முதலானவைகளால் துன்பங்கள் இல்லை. இத்தகைய சம்பந்தத்தினால் அவனுக்கு ஒரு குறையும் இல்லை/
    இம்மறுமொழியில் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும் நாராயணனுக்கும் சம்பந்தமே இல்லை போலக் கூறப்பட்டது. அடுத்த பகுதியில் சுருங்குவதும் விரிவதும் அவனது கட்டுப்பாடில்தான் உள்ளது என்று கூறப்படுகின்றது. பிரபஞ்சத்தின் தோற்றத்திலும் படைப்பிலும் நாராயணனின் சங்கற்பமும் கர்த்திருத்துவமும் உண்டா இல்லையா? பிரபஞ்சமான சடத்திற்கு உபாதானம் அல்லது முதற்காரணம் எது? என்னுடைய வினாவுக்கும் ஐயத்துக்கும் நேரடியான தெளிவான விடை கிடைக்கவில்லை என நினைக்கின்றேன். லீலா விபூதியில் ஆன்மாக்கள் அல்லது ஜீவன்களின் நிலை என்ன என்பதும் வரும் பகுதியில் விளக்கப்படும் என நம்புகின்றேன். “ஏகமாத்விதீயம்” என்னும் சுருதி வசனத்துக்கு இரண்டாவதற்ற பிரமமச், அதாவது, இணையற்ற பிரமம் ஒன்றே என்ற பொருளைப் பயக்கும் அன்றி பிர்மத்தின் வியப்பியத்தில் உடங்கியைந்து நிற்கும் வேறு பொருள் இல்லை என்பதை உணர்த்தாது. ‘இவ்வுலக சிருட்டிக்கு முன்னே ஆன்மா ஒன்றே இருந்தது; வேறு எவ்வித யாதும் இன்று; அவ்வான்மா உலகைச் சிருட்டிக்க வேண்டுமென நோக்கிற்று’ என்னும் ஐதரேய உபநிடத வாக்கியம் பிரமம் உலகத்தைப் படைக்கச் சங்கற்பம் செய்து கொண்டதை குறிக்கும். எனவே பிரபன்சம் தானாகத் தோன்றியதல்ல. “அவனிடத்திலேயே எல்லாப் பிரபஞ்சமும் சித்திரம் சுருட்டப்பட்டமைபோல அடங்கியிர்ந்தது’ என்னும் பங்கலோபநிஷத் வாக்கியம் பிரமம் வேறு, அதன் வியாபகத்தில் சத்தி ரூபமாகப் பிரபஞ்சம் அடங்கியிருந்தது. பிரமம் (நாராயணன் அல்லது சிவன்) சங்கற்பிக்க விரிந்தது எனப் பொருள் கொள்ள இருக்கின்றது. எனவே, பிரபஞ்சத்திற்கு உபாதானகாரணமாகிய மூலப்பொருள் பிரமத்தின் வியாபகத்திலேயே இருந்தது, பிரமம் அதன் ஆதார அந்தர வஸ்துவாக இருந்து தன் சங்கற்பத்தால் பிரபஞ்சத்தைப் படைத்தான் எனக் கொள்ளுவதற்கு வேத வாக்கியங்களே இடம் கொடுக்கின்றன. எனவே, பிரபஞ்சம் தானாகத் தோன்றியத்னறு என்பதும் பெறப்படும்.ஈஸ்வரன் எங்கிருந்துசிருஷ்டித்தான் என்ற வினாவும் எழ வழியில்லை.

  12. ஸ்ரீ வேதம் கோபால் அவர்களது நல்ல ப்ரயாசைக்கு வாழ்த்துக்கள்.

    எனது புரிதலின் படி எனது விளக்கம்.

    சங்கரரின் தக்ஷிணா மூர்த்தி ஸ்தோத்ரம் – ச்லோகம் – 2

    बीजस्यान्तरिवाङ्कुरो जगदिदं पाङ्निर्विकल्पं पुन:
    मायाकल्पित देशकालकलना वैचित्र्यचित्रीकॄतम् ।

    मायावीव विजॄम्भयत्यपि महायोगीव य: स्वेच्छया
    तस्मै श्रीगुरुमूर्तये नम इदम् श्रीदक्षिणामूर्तये॥

    பீஜஸ்யாந்தரிவாங்குரோ ஜகதிதம் ப்ராங்நிர்விகல்பம் புன:
    மாயாகல்பித தேசகாலகலனா வைசித்ர்யசித்ரீக்ருதம்

    மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹாயோகீவ ய: ஸ்வேச்சயா
    தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

    எப்படி ஒரு மரமானது வெளிப்படுமுன் விதையில் அடங்கியுள்ளதோ அதற்கொப்ப ஒரு மாயாவி அல்லது யோகியைப் போன்று காலம் வெளி என சித்ர விசித்ரமாக தன் மாயையால் (உலகத்தை) கல்பிக்கிறாரோ குரு ரூபமான அந்த தக்ஷிணாமூர்த்திக்கு என் நமஸ்காரம்.

    கண்ணெதிரில் தெரியும் ப்ரபஞ்சம் மாயா கல்பிதம். வ்யவஹாரத்தில் அது சத்யமே. பார்க்கிறோம் அனுபவிக்கிறோமே.

    ஆனால் அது பாரமார்த்திக சத்யமன்று

    காட்சியளிக்கும் ப்ரபஞ்சம் மாயையே. ப்ரம்ம சத்யம் ஜகத் மித்யா. ஸ்வப்னத்தின் போது சுகம் துக்கம் எல்லாம் அனுபவிக்கப்படும். மேலும் ஸ்வப்னம் என்ற ஸ்திதியில் அவையெல்லாம் உண்மையாகவே இருக்கும். ஆனால் விழிப்பு நிலையில் அது உண்மையல்ல என உணரப்படும். அது போலவே ஒளி தோன்றிட இருளகல்வது போல் ஒன்றேயான ப்ரம்மஞான அனுபவம் ஏற்பட மாயை மறையும்.

    முறையான வேதாந்த பாடம் கேட்டு பல வருஷங்களாயிற்று. எனக்குப் புரிந்த படிக்கே என் நினைவில் உள்ள படிக்கு விளக்கியுள்ளேன்.

  13. பெரியவர் ஸ்ரீ கிருஷ்ணகுமார் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி துதியின் தமிழ்மொழிபெயர்ப்பு “வித்துக்குள் முளைபோற் படைப்புக்கு முன்பேதும் வேற்றுமை யிலாத தாகி பித்துச்செய் மாயையால் தேசகா லங்களால் பேதங்களா னவுலகைச் , சித்துச்செய் மாயாவி யோகியைப் போலச் சிருட்டித்த தேவ தேவே, சித்தர்க்குள் உறுமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி திருவடிகள் போற்றி போற்றி” பொய்ப் பொருளுக்கும் இல்பொருளுக்கும் வேற்றுமை உண்டு, முயலுக்குக் கொம்பில்லை. அது பொய்ப்பொருள் பசுவின் கன்றுக்குக் கொம்பில்லை; அது உரியபருவத்தில் தோன்றும். கன்றின் சிரசில் கொம்பு சூக்கும் சத்திரூபமாகவுள்ளது. அது உரியகாலத்தில் பருப்பொருளாக வெளிப்படும். சித்தாந்த சாத்திரத்தில் எல்லாப் பொருள்களும் உள்பொருள்களே. அவை உரியகாலத்தில் தோன்றிப் பயன் படும். பிரமம் ஒரு பொருளே இருந்தது எனச் சுருதி பகருவது, கருவுற்ற தாய் ஒருத்தியே இருந்தனள் என்பது போன்றதாம். தாயின் வயிறில் குழந்தை கருவாக இருந்து உரிய பருவத்தில் அவள் கருவுயிர்த்த பொழுது வெளிவருதலைப் போன்றது கடவுட் சங்கற்பத்தால் பிரபஞ்சம் தோன்றுவது. பொய்ப்பொருள் என்பது முயற்கொம்பு, ஆகாயத் தாமரை போன்று என்றும் எப்பொழுதும் எவ்விடத்தும் இல்லாதபொருள் அது பற்றித் தத்துவஞானம் பேசுவதில்லை. இல்பொருள் எனத் தத்துவஞானம் பேசுவது காரணகாரிய நிலை மாற்றங்கட்கு உட்பட்டு வரும் பொருளையே.. மாயை என்பது பொய்ப் பொருளன்று. அது ஜடசத்தி. அதுவே பிரபஞ்சோற்பத்திக்கு முதற்காரணம்.மாயை உள்பொருள் பரிக்கிரகசத்தி அல்லது வேண்டும்போது பயன் படுத்திக் கொள்ளும் சத்தி . அது சிவத்தின் தாதான்மியசத்தியாகிய திருவருளில் பொருந்திச் சிவவியாபகத்தில் அடங்கியிருக்கும். சிவசங்கற்பத்தில், சிவசத்தியாகிய திருவருளால் தனு கரணபுவன போகங்களாக வெளிப்படும் என்பது சைவர்கள் கொள்கை. திரு வேதம் கோபால் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கின்றேன். அவ்ருடைய கட்டுரை தென்னாட்டில் தழிழுடன் தோன்றி வளர்ந்த சிந்தனையை வெளிப்படுத்த் அருமையான வாய்ப்பினை அளிக்கின்றது. அறிஞர்கள் இச்சிந்தனைகளை ஒப்பு நோக்கி அறிவானந்தம் அடைவர்களாக. .

  14. இருப்பது எல்லாமே கடவுள் தான். ஆனால் இருப்பது மட்டும் அல்ல. இல்லாததும் அதுவே. இல்லாதது கடவுள் அல்ல என்று சொல்வது எல்லைகள் வகுத்து கடவுள் தத்துவத்தை குறுக்குவதும், கேலி செய்வதுமாகிவிடுகிறது. எனவே தான் நம் ஞானியர் தங்கள் வாக்கில் ” உருவாய் அருவாய் உளதாய் இலதாய் ” – ” உண்மையுமாய் இன்மையுமாய்” = என்றனர்.எனவே இல்லாததும் கடவுளே. இந்த கருத்தாக்கத்தை ஆழ்ந்து சிந்தித்தால் தான் புரிந்துகொள்ள முடிகிறது.

  15. அன்புள்ள முனைவர் அவர்களுக்கு,

    // இம்மறுமொழியில் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும் நாராயணனுக்கும் சம்பந்தமே இல்லை போலக் கூறப்பட்டது. //

    இப்படி எடுத்துக்கொள்ள வாய்ப்பே இல்லை. எல்லா இடங்களிலும் “பிரம்மமே அனைத்தையும் படைத்தது” என்று கூறாமல், சில இடங்களில் “பிரம்மத்திடமிருந்து அனைத்தும் தோன்றியது” என்று கூறியிருப்பது ‘உபாதான காரணமும் பிரம்மமே’ என்பதற்குச் சான்று என்பதைக் கூற வந்தேன் அவ்வலவே. இரண்டிற்கும் முரண்பாடு இல்லை.

    // பிரபஞ்சத்தின் தோற்றத்திலும் படைப்பிலும் நாராயணனின் சங்கற்பமும் கர்த்திருத்துவமும் உண்டா இல்லையா? //

    கண்டிப்பாக உண்டு. “அந்த பிரம்மம் ‘நான் பலவாக விரியக்கடவேன்’ என்று சந்கர்பித்தது” (சாந்தோக்ய உபநிஷத் 6.2.3). நாராயண உபநிஷத்தின் தொடக்கத்திலேயே “நாராயணன் அனைத்தையும் படைக்க சங்கற்பித்தான்” (நாராயணோ அகாமயத் ப்ரஜா ச்ருஜெயெதி) என்றும் உள்ளது.

    // “ஏகமாத்விதீயம்” என்னும் சுருதி வசனத்துக்கு இரண்டாவதற்ற பிரமமச், அதாவது, இணையற்ற பிரமம் ஒன்றே என்ற பொருளைப் பயக்கும் அன்றி பிர்மத்தின் வியப்பியத்தில் உடங்கியைந்து நிற்கும் வேறு பொருள் இல்லை என்பதை உணர்த்தாது //

    “சத் ஒன்றே முதலில் இருந்தது” (சத் ஏவ ஸௌம்ய இதம் அக்ர ஆஸீத்) என்பது சுருதி. “ஈஸ்வரன் தனியாகவும் மூல பிரகிருதி தனியாகவும் இரண்டு இருந்தது” என்று கூறப்படவில்லை.

    // “அவனிடத்திலேயே எல்லாப் பிரபஞ்சமும் சித்திரம் சுருட்டப்பட்டமைபோல அடங்கியிர்ந்தது’ என்னும் பங்கலோபநிஷத் வாக்கியம் பிரமம் வேறு, அதன் வியாபகத்தில் சத்தி ரூபமாகப் பிரபஞ்சம் அடங்கியிருந்தது. //

    இரண்டும் வேறென்றால் “அவனிடத்திலேயே” என்று கூறுவதன் பயன் என்ன? “குயவனிடத்தில் மண் இருந்தது” என்று கூற இயலுமா? மண் குயவனின் வியாபகத்தில் இருந்தால் அந்த மண்ணும் அவனுடைய உடலின் அங்கமாகத் தான் இருக்க இயலும்.

    பிரம்மம் உபாதான காரணம் இல்லையென்றால், “நானே அனைத்துமாக விரியக்கடவேன்” என்று பிரம்மம் சங்கற்பித்ததற்கு அர்த்தம் இருக்காது.

    விஷ்ணு புராணம் முதல் அத்தியாயத்தில் மைத்ரேயர் கேட்கிறார் “இந்த உலகம் யாதொன்றின் மயமாக இருக்கிறது? எதிலிருந்து உயிர்கள் தோன்றின? எதனில் உயிர்கள் ஒடுங்குகின்றன?” என்று கேட்டதற்கு பராசர முனிவர் விடையாக, “இந்த உலகம் மூல பிரகிருதி மயமானது” என்று கூறி மூல பிரகிருதியின் சிறப்புகளைக் கூறவில்லை.

    மாறாக, “விஷ்ணுவிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. விஷ்ணுவே பிரபஞ்சத்திற்கு இருப்பிடம். விஷ்ணுவே அதன் தொடர்ச்சிக்கும் முடிவுக்கும் காரணம். விஷ்ணுவே இந்த பிரபஞ்சமனைத்தும்” என்று கூறியதும் பிரம்மத்தின் உபாதான காரணத்துவத்தையே காட்டுகிறது.

  16. இக்கட்டுரையை படித்ததும் என் மனதில் ஒரு ஒப்பீடு தோன்றியது. நிர்வாண உபநிஷத்தின் மீதான தொடர் உரைகளில் ஞானி ஓஷோ பேசும் பொது கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

    ” உண்மைக்கு எண்ணிறந்த பெயர்கள் உண்டு என்று இந்திய ஞானியர்கள் தொடர்ந்து கூறிவந்துள்ளனர். உண்மைக்கு நீங்கள் என்ன பெயரை கொடுத்து அழைத்தாலும் அவர்களுக்கு ஓ. கே தான். ஒரு குறிப்பிட்ட பெயர் மட்டுமே போதுமானது என்று அவர்கள் கருதவில்லை. எந்தப்பெயராயினும் அது உபயோகமாகும் என்பதை இந்து ஞானியர் அறிந்திருந்தனர். பல்வேறு பெயர்களும் கூட உதவிகரமாக இருக்க முடியும். எனவே தான் அவர்கள் பிற வழிகளையும் பிற பெயர்களையும் பின்பற்றுவோரை/ பயன்படுத்துவோரை, தங்கள் வழிக்கு கொண்டுவரவேண்டும் என்று நினைத்ததே இல்லை. ஏனெனில் எல்லா வழிகளும் , இறுதியில் சரியான முடிவை நோக்கி அழைத்து செல்லும் என்ற உண்மையை அவர்கள் அறிந்திருந்தனர்.

    மாறக்கூடியவை நிரந்தரம் இல்லாதவை. எனவே அவற்றில் பழையது புதியது என்று வேறுபாடுகளுக்கு இடம் இருக்கிறது. ஆனால் உண்மை சாஸ்வதமானது, நிரந்தரம் ஆனது . உண்மை இருக்கிறது அவ்வளவுது தான்.அது பழையதாக மாறமுடியாது. ஏனெனில் அது என்றுமே புதியதாக இருந்ததில்லை. புதியதாக இருப்பது தான் சிறிது காலம் சென்ற பின்னர் பழையதாக மாறமுடியும். எனவே உண்மை இல்லாத காலம் என்ற ஒன்று இல்லை. ஒரு காலத்தில் இல்லாது இருப்பது, உருவாகும் போது புதியது என்று சொல்கிறோம். எது பழையதாக ஆக முடியாதோ அது புதியதாகவும் இருந்திருக்க முடியாது.”

    எனவே ஈஸ்வரன் மட்டுமே எங்கும் உள்ளான்/ உள்ளாள் / உள்ளது என்ற கருத்தாக்கம் நமது ஈசாவாஸ்ய உபநிஷத்தின் அற்புதமான வெளிப்பாடு.

    அனைத்து உபநிஷத்துக்களையும் நாம் தொடர்ந்து படிக்கும் போது, இந்த உயர்ந்த கருத்து பல்வேறு இடங்களில் வலியுறுத்தி சொல்லப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

    சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் (Discourses on certain topics என்ற நூலில் இருந்து) இனிய, மனநிறைவு தரும் மகா வாக்கியங்களை தொகுத்து தந்த திரு வேதம் கோபால் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அவரது பணி மேலும் சிறக்க தில்லை அம்பலவாணன் அவருக்கு துணை நிற்கட்டும்.

  17. ஈசுவரனிடத்திலிருந்து பிரபஞ்சோற்பத்திக்குக் குயவன் பாண்டம் உவமை சரியாகப் பொருந்தாது. குயவச்ன் என்னும் நிமித்த காரணன் இன்றி முதற்காரகாரியம் ஆகாது என்னும் கருத்தைக் குறிக்கவே அமையும். பிரபஞ்சோற்பத்திக்கு முண்டகோபநிஷத்து கூறும் ஊர்ண நாபி உவமையே பொருந்தும். சிலந்ஹிப் பூச்சியின் உயிர் வேறு அதன் உடல் வேறு. இழை உயிரிலிருந்து தோன்றவில்லை.. உடலிலிருந்து, அதாவது சடத்திலிருந்தே தோன்றியது. அவ்வாறு தோன்றுவதற்குச் சிலந்தியின் உயிர் நிமித்த காரணமாக இருந்தது. நிமித்த காரணமாகிய உயிர் இன்றி சிலந்தியின் உடலிலிருந்து எச்சில் வலை தோன்றாது.”காரணம் காரியத்தினின்றும் வேறன்று; காரியமதன் காரணரூபத்தில் எஞ்ஞான்றும் நிலைபேறுறுகின்றது. இதற்கு வேறு கூறுதல் தவறே” இது பஞ்சப் ப்ரஹ்மோபனிடத வாக்கியம். எனவே , சமாகிய பிரபஞ்சம் சடமாகிய முதற்காரணத்திலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும். நாராயணப் பிரமமோ அல்லது சிவப்பிரமமோ அல்லது பரமேசுவரனோ மூலமாகிய சடத்திலிருந்து காரியமாகிய சடம் தோன்ற நிமித்தம் அல்லது கருத்தாவாக வேண்டும். சுக்குமமான பிரமத்தின் வியாபகத்தில் சூக்குமமான சடசக்தி வியப்பியமாக இருந்தது. ‘மருவி எப்பொருளும் வலர்ப்போன் காண்க’ என்பதற்கேற்ப அநந்நியமாக அதில் மருவியுள்ள பிர்மம் பிரபஞ்சத் தோற்றத்திற்கு நிமித்தமாகும். பிரமத்தின் ஆதாரத்தில்தான்சடம் உள்ளது; பிரமத்தின் சங்கல்பம் இன்றி சடம் பிரபஞ்சம் ஆகாது. ஒரு காரியத்தின் தோற்றத்திற்குப் பலகாரணங்கள் இருந்தால் அவற்றில் எது பிரதானமோ அதையே காரணம் என்பது வழக்கு. அதற்குச் ‘செரேஷ்ட நியாயம் என்பர்’ பிரபஞ்சத் தோற்றத்திற்கு சடமாகிய முதற்காரணம், திருவருளாகிய துணைக் காரணம், ஈசுவரனாகிய நிமித்தம் அல்லது கருத்தா காரணம் மூன்றும் இருக்கும். சடமாகிய முதற்காரணமே பிரபஞ்சமாகக் காரியப்பட்டதென்றாலும் நிமித்தமாகிய ஈசுவரனே பிரபஞ்சமாயிற்று என்று கூறுவது இந்தச் சிரேஷ்ட நியாயத்தின்பாற் படுமேயன்றி உண்மையாகாது. இந்த சிந்தனைகளை தமிழ் ஹிந்து அன்பர்கள் ஆபிராமியமதங்கள் பிரபஞ்சத் தோற்றத்திற்குக் கூறும் பொருத்தமற்ற காரணங்களோடு ஒப்பிட்டு உண்மை அறிவார்களாக. நம் வைதிக மதம் அறிவு பூர்வமாக சிந்திக்க அனுமதி அளிப்பதையும் நோக்குக.

  18. சிரேஷ்ட ஞாயம் – இது பற்றிக் கேள்விப்பட்டதில்லை. அறிந்தவர்கள் நூற்குறிப்பு ஏதேனும் இருந்தால் தரலாம்.

    சரி, அந்த ‘சிரேஷ்ட நியாயத்தின்படியே’, “சடமாகிய முதற்காரணமே பிரபஞ்சமாகக் காரியப்பட்டதென்றாலும் நிமித்தமாகிய ஈசுவரனே பிரபஞ்சமாயிற்று என்று கூறுவது” இருப்பினும், அந்தப் பிரம்மமே எதற்கு “நானே அனைத்துமாக ஆகக் கடவேன்” (சாந்தோக்ய உபநிஷத், 6.1.3) என்று சங்கல்பிப்பது எதற்கு? “நானே அனைத்தையும் ஆக்குகிறேன்” என்ற சங்கல்பமே பொருத்தமாக இருக்குமே?

  19. இங்கு சொல்லும் சிலந்தி உவமையை வைத்து ஜகத் காரணம் அசத என்று எப்படி சொல்லமுடிகிறது. ஜகத் என்றால் வெறும் சிலந்தி வலை போன்றா? இங்கே உயிர்கள் இல்லையா? இந்த உயிர்கள் எப்படி உருவாகின ? ஜடத்திலிருந்து என்றால் உயிர்களும் ஜடங்கள் என்றல்லவா தேறும்?

    இந்த சிலந்தி உவமையானது உபநிஷத்துக்களில் எடுக்கப்பட்ட காரணம், எல்லாம் ஒரு இடத்திலிருந்து தொட்ன்ருகின்றன என்பதை சொல்லவே தான். இதை வைத்துக் கொண்டு சதசத் கார்ய வாதம் செய்ய இயலாது. அதற்கு இது திருஷ்டாந்தம் இல்லை.

  20. மாணிக்கவாசகர் சொல்கிறார் “வேறு வேறு உருவம், வேறு வேறு இயற்கை , நூறு நூறு ஆயிரம் இயல்பினராகி” – மற்றொரு பாடலில் ” ஓர் நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு, ஆயிரம் திருநாமம் படி தெள்ளேணம் கொட்டாமோ” – இன்னும் சொல்லபோனால் சாதாரண என்னைபோன்ற மக்களுக்கு, திருமூலர் ” மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமத யானை, பரத்தை மறைத்தது பார் முதல் பூதங்கள், பரத்தில் மறைந்தது பார் முதல் பூதங்களே” இன்னும் ஒரு பாடலில் “பொன்னை மறைத்து பொன்னணி பூடணம், பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம், தன்னை ,மறைத்தது தன கரனங்கலாம், தன்னில் மறைந்தது தன கரணங்களே”

  21. /இங்கே உயிர்கள் இல்லையா? இந்த உயிர்கள் எப்படி உருவாகின ?/ ஜடத்திலிருந்து சித்தாகிய உயிர்கள் தோன்றியிருக்க முடியாது. இதே சந்ஃதேகந்தான் எனக்கும். சித்தாகிய பிரமத்திலிருந்து உயிர்கள் தோன்றின என்றால் பிரமத்தைப் போன்ற அறிவுடையதாகத் தானே இருக்க வேண்டும்”

  22. //
    சித்தாகிய பிரமத்திலிருந்து உயிர்கள் தோன்றின என்றால் பிரமத்தைப் போன்ற அறிவுடையதாகத் தானே இருக்க வேண்டும்”
    //

    அறிவுடையடாக தானே இருக்க வேண்டும் என்றால். இல்லை. நெருப்பிலிருந்து தோன்றும் நீர் குளுமையாக இருக்கிறது. உருவமில்லாத வாயுவிலிருந்து உருவமுள்ள அக்னி தோன்றுகிறது. உருவமுடைய நீர் கொதித்து உருவமில்லா ஆவியாகிறது.

    அறிவுடைய ஜீவனிடமிருந்து விழும் நகத்திற்கு அறிவு இல்லையே? அவனது கை கால்களுக்கு தனியே அறிவு இல்லையே?

  23. அய்யா திரு முத்துக்குமர சுவாமி அவர்களுக்கு, தங்கள் சந்தேகம் – பிரம்மத்தில் இருந்து பிறந்தது அறிவு உள்ளதகதான் இருக்க வேண்டும் – நிச்சயமாக – ரமணர் இந்த ஐயத்தை தீர்த்து வைக்கிறார் – சுத்த அறிவு -ஏற்கனவே உள்ளது, “சத் சித் ஆனந்தம்” இதை “இருப்பு – அறிவு – இன்பம்” என்கிறார். அய்யா உங்கள் மறுமொழி படிக்கும்போது மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது.

  24. /அறிவுடைய ஜீவனிடமிருந்து விழும் நகத்திற்கு அறிவு இல்லையே? அவனது கை கால்களுக்கு தனியே அறிவு இல்லையே?/
    என்னுடைய கைகால்களில் உள்ள நகங்கள், தலைமுடி முதலியன அனைத்தும் சடம் என்றும் அவை என்னுடைய உயிரிலிருந்து பிறந்தன அல்லவென்றும், என்னுடைய உயிர் உடலிலிருந்து பிரிந்துவிட்டால், இவை என் உடலில் வளரா என்றும் என்னுடைய உயிரே உடம்பில் இவை வளர்வதற்கு நிமித்தமாக இருக்கின்றது என்று என் சிற்றறிவுக்குப் படுகின்றது. நகம் முடி முதலியன் உயிருடன் நேரடி சம்பந்த்தம் அற்றனவாக இருப்பதால் தான் அவை நறுக்கப்படும்போது உயிர் வேதனைப் படுவதில்லை. முண்டகோபநிஷத் வாக்கியம்- “ஊர்ணநாபி-(சிலந்திப்பூச்சி) யானது எப்படி நூலைச் சிருட்டிக்கின்றதோ, பூமியில் எப்படி ஓஷதிகள் உண்டாகின்றனவோ , புருடன் மேனிமீது எப்படித் தமைமயிர் உடம்புமயிர் உண்ட்சாகின்ரனவோ அப்படியே பிரமமாகிய அக்ஷரத்திலிருந்து யாவும் உண்டாகின்றன” என்பதாம். இந்த உபநிடத வாக்கியத்தை ஆராயபவர்க்கு சிலந்திவாய் நூலும் உடம்பிலுள்ள மயிர் நகங்களும் சித்தல்லாத அசித்தயிருத்தலைக் கொண்டே, அவை சிதிலிருந்து தோன்றையவை அல்ல, சித்துப்பரிணமியாது. நிமித்தகாரணம் ஒன்றே சித்டாகிய பிரமத்துக் குரித்து. உபாதானகாரணம் உரித்தன்று. ஊர்ணநாபியின் உடம்பே உபாதான காரணமும் அதன்கண்ணுள்ள உயிரே நூலினைச் செய்யும் நிமித்த காரணமுமெனல் தெளிவு. நிமித்த காரணமாகிய பிரமம் அனைத்துக்கும் ஆதாரமாக அனைத்திலும் அந்தர ஆதர வ்ஸ்துவாக விசிட்டமாக வியாபித்து இருத்தலினால் பிரமத்திற்கு உபாதான காரணக் கூறுதல் ஒருவகைப் போலி நியாயமாகுமே யன்றி உண்மை ஆகாது. சைவசித்தாந்தம் இந்த உபாதான காரனத்தை மாயை என்றும், அது சிவசத்தியோடு சம்பந்தம் உடையதாய் சிவத்தின் ஆதாரத்தில் இருக்கும் என்றும் சைவசித்தாந்தம் கூறும்.

  25. /நெருப்பிலிருந்து தோன்றும் நீர் குளுமையாக இருக்கிறது. உருவமில்லாத வாயுவிலிருந்து உருவமுள்ள அக்னி தோன்றுகிறது. உருவமுடைய நீர் கொதித்து உருவமில்லா ஆவியாகிறது./இதனைச் சைவசித்தாந்தம் ஏற்றுக் கொள்வதில்லை. ஐம்பூதங்களும் அவற்றுக்குரிய தன்மாத்திரைகளிலிருந்தே பரிணமிக்கின்றன. சப்த ஸ்பரிச ரூப இரச கந்த தன்மாத்திரைகளிலிருந்து முறையே ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதிவி ஆகிய பூதங்கள் பரிணமிக்கின்றன. மண்ணில் ஏனைய நான்கு பூதங்களும் கலப்பதால், சப்த ஸ்பரிச ரூப ரச கந்தம் என்னும் ஐந்து குணங்களும் அவற்றில் கந்தம் எனும் குணம் மிக்கும் இருக்கும். நீரில் சப்தம் ப்ரிசம் உருவம் இரசம் என்னும் நான்கு குணங்கள் உள. அவற்றில் சுவை எனும் குணம் மிக்கிருக்கும்.தீயில் சப்தம் பரிசம் உருவம் என்னும் மூன்று குணங்கள் உளா . அவற்றில் உருவம் எனும் குணமே ஓங்கியிருக்கும். காற்றில் சப்தம் பரிசம் எனும் இரண்டு குணங்கள் இருக்கும், அவற்றில் பரிசம் எனும் குணமே ஓங்கியிருக்கும். ஆகாயத்தில் சப்தம் என்ற ஒரு குணமே இருக்கும். எனவே, சப்தம் எனும் ஒரு குணமே யுள்ள ஆகாயம் ஒன்றுக்கு மேற்பட்டுள்ல குணங்களையுடைய பிற பூதங்களுக்குக் காரணமாகாது.. அவற்றின் தன்மாத்திரைகளே காரணம்.என்க இதனைத் திருவாசகம் போற்றித் திருவகவல் , “பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றிநீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றிதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றிவெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி” என்க் கூறுகின்றது. ஆகாயம் ஏனைப் பூதங்களுக்கு இருப்பிடத்தை அளிக்கின்றது. இதனைத் திருவாசகம், திருவண்டப் பகுதி, ” வானில் கலப்பு வைத்தோன்” என்று கூறுகின்றது. வாந் வெளி. அது வெற்றிடமாகிய உள்பொருள். கலப்பு-வியாபகத்தன்மை. வான், எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து அவற்றைத் தன்னுள் அடக்கிக் கொள்வது.

  26. அடக்கம் செய்யப்பட்ட சடலத்தின் முடியும் நகங்களும் நீண்ட காலம் வரை வளர்ந்து கொண்டிருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உடலிலிருந்து உயிர் பிரிந்துவிட்டது என்ற தகவல் அவற்றுக்கு உடனே போய்ச் சேராததுதான் காரணம். இறந்தானபின் வெகு நேரம் உடலில் வெப்பம் இருப்பதும் உண்டு என்பதை அனுபவத்தில் அறிவேன். உண்மையில் சடம் என்று நாம் கருதுவனவாகிய கல் மண் போன்றவற்றிலும் உயிர்ச் சலனம் உண்டு. ஏனெனில் அவை உறை நிலையில் உள்ள சக்தியே. ஸ்ரீ அரவிந்தரும் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
    -மலர்மன்னன்

  27. எந்த ஒரு மனிதனும் தன்னுடைய விருப்பங்களை வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் தன்னுடைய விருப்பங்களை பிறர் மீது திணிப்பதும், பிறரும் தன்னுடைய வழியை மட்டுமே பின்பற்றவேண்டும் என்று கட்டாயப்படுத்தி , கொடுமைகள்செய்வதும் காட்டுமிராண்டிதனமான விஷயமாகும்.

    தறி கெட்டு ஓடும் மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக நமது மனிதஇனமுன்னோர்கள் இறைவழிபாடு சடங்குகள்ஆகியவற்றை உருவாக்கினர். ஆனால் இன்று நாம் காணும் நிலை என்ன ? தங்கள் வழி மட்டுமே உயர்ந்தது என்று சொல்லி , ஆபிரகாமிய மத வெறியர்கள் பிற நம்பிக்கை உடையோரை அழித்து , மனித சமுதாயத்தின் நிம்மதியை குலைத்து வருகின்றனர். வாரம் தவறாமல் ஷியா முஸ்லீம்களை சன்னி முஸ்லீம்கள் கொன்று குவிப்பது பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகவருகிறது. அவர்கள் அன்புமதம் என்று சொல்லிக்கொண்டே இத்தனை கொலைகளை செய்கிறார்கள். பிற மதங்களை சேர்ந்தவர்களை தன்னுடைய மதத்துக்கு மாற்ற , பணம், பதவி ஆசை, இன்னும் பல லாகிரி வஸ்துக்களை இலவசமாக கொடுத்தாவது எப்படியும் மதமாற்றம் செய்யவேண்டும் என்று ஆபிரகாமியர்கள் துடிக்கிறார்கள்.

    உலகம் அமைதியாக இருக்க வேண்டுமானால் , மதமாற்றம் செய்வோரும், பெண்களுக்கு சமஉரிமை கொடுக்காமல் கொடுமைப்படுத்துவோரும் திருந்தவேண்டும். இல்லை என்றால் அப்படிப்பட்ட அந்த மதங்களை தடை செய்வது மனித இனத்துக்கு நல்லது.

  28. நகமும் மயிரும் சடத்திலிருந்துதான் தோன்றுகின்றன.; சித்தாகிய ஆன்மா (பிரமம்) விலிருந்தன்று என்பதற்கு உயிர் நீங்கிய பின்னும் அவை வளர்கின்றன என்பதொரு சான்றாம். உயிர் நீங்கியபின் உடலில் பல வேதியல் மாற்றங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் ஒன்றுதான் செத்த உடலில் தோன்றும் மயிர் நகம் வளர்ச்சி போன்றன். உய்ருள்ள உடலில் வளரும் இவ்வளர்ச்சிக்கும் உயிர் நீங்கிய உடலில் வளர்ச்சி போன்ற இவ்வேதியல் மாற்றத்திற்கும் வேறு பாடு உண்டு. சடத்திலும் திருவ்ருளாகிய சிவசத்தில் கலந்து இயக்குகின்றது.சடத்துக்கும் சத்தி உண்டு. அது இயங்கும் சத்தி. சிவ்சத்தி அதனை இயக்கும் சத்தி என்பர்.

  29. ஒன்று வளர வேண்டுமானால் அறிவு இருக்க வேண்டுமா? உயிர் இருக்க வேண்டுமா? இப்படி யார் சொன்னது. அண்டமும் கூடத்தான் விரிந்து கொண்டு இருக்கிறது. வெயில் காலத்தில் தண்டவாளம் கூட தான் வளர்கிறது அதற்க்கு அறிவா இருக்கிறது உயிரா இருக்கிறது.

    இதற்கும் ஆசத் வாதத்திற்கும் என்ன சம்பந்தம். உமானத்தை விரித்தால் இப்படி தான் விபரீத அர்த்தம் பிறக்கும். அவள் சந்திரனை போல இருக்கிறாள் என்றால் அவள் வானத்தில் அலைந்து கொண்டிருக்கிறாள் என்றா அர்த்தம்?
    நாம் எடுத்துக் கொண்ட விஷயம் அசத்திலிருந்தான் அசத் தோன்றியது என்பது. அதை மறுக்க கொடுத்த இரு திருஷ்டாந்தங்கள் தான்.

    நீர் நெருப்புக்கும் இதே தான் விஷயம். சைவ சித்தாந்தம் ஏற்கிறதா இல்லையா என்பது விஷயம் அல்ல. சைவ சித்தாந்தம் ஒத்துகொள்ளதேல்லாம் உண்மை இல்லை என்றும் ஆகிவிடாது.

    அது ஒரு உதாஹரணம். உங்களுக்கு வேண்டுமென்றால் வேறு ஒரு உதாஹரணம் உருவமுள்ள தண்ணீரில் உருவமில்லா பிராண வாயுவும் ஹைட்ரஜனும் இல்லையா? உதாரணத்தை இந்த கோணத்தில் அணுக வேண்டும் அதையே வேறு ஒரு கோணத்தில் பார்த்து சர்ச்சை பொருளாக ஆக்குவது சரி அல்ல.

    //
    எனவே, சப்தம் எனும் ஒரு குணமே யுள்ள ஆகாயம் ஒன்றுக்கு மேற்பட்டுள்ல குணங்களையுடைய பிற பூதங்களுக்குக் காரணமாகாது..
    //

    அப்படி என்றால் தன் மாத்திரைகளை காட்டுங்கள். தன் மாத்திரைக்கு உருவம் இருந்தால் தான் அதிலிருந்து அக்னி உருவம் பெற முடியும் அல்லவா? தண்ணீரை கொதிக்க விட்டால் அதற்க்கு உருவம் கொடுக்கும் தன்மாத்திரைகள் என்னாவகின்றன. அது ஏன் உருவமில்லாமல் ஆகிறது. ஒரு அண்டா நிறைய தண்ணீரை கொதிக்க விட்டால் அவ்வ்வளவு தன் மாத்திரைகளும் சேர்ந்து இருக்க வேண்டுமே அது கண்ணுக்கு தெரியா வேண்டுமே?

    மேலும் பிரம்மத்திடம் எல்லா குணங்களும் இருந்தால் தான் (மலின குணங்கள் உட்பட) இங்கு எல்லாம் தோன்றி இருக்க முடியும்.

    நீங்கள் சொல்லும் அசத்திற்கும் எல்லா குணங்களும் இருந்திருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் இங்கு எல்லாம் தோன்றி இருக்க முடியும். எல்லா குணங்களையும் அசத் கொண்டுள்ளதென்றால் அதுவே பிரம்மமாகிவிடும் பிரம்மம் அசத்தாகிவிடும்.

  30. நகம் மற்றும் மயிர் வளர்வதை பற்றி இங்கே பல மறுமொழிகள் வந்துள்ளன. நகமோ அல்லது முடியோ வெட்டி எறிந்த பின்னே வளர்வதில்லை. இறந்த பிணத்தின் நகங்கள், முடிகள் தான் சில நேரம் உயிர் துடிப்போடு இருக்கிறது. எப்படி ஒரு பல்லியின் வால் வெட்டப்பட்ட பின் சிறிது நேரம் துடிக்கிறதோ அதைப் போலத் தான்.

  31. /வெயில் காலத்தில் தண்டவாளம் கூட தான் வளர்கிறது அதற்கு அறிவா இருக்கிறது உயிரா இருக்கிறது./ சரியான உண்மை. ஒரு தண்டவாளத் துண்டை வெயிலில் வைத்து வளரச் செய்து அதனை வெட்டி வெட்டி நம் இரயில் பாதைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்./.அப்படி என்றால் தன் மாத்திரைகளை காட்டுங்கள். தன் மாத்திரைக்கு உருவம் இருந்தால் தான் அதிலிருந்து அக்னி உருவம் பெற முடியும் அல்லவா? தண்ணீரை கொதிக்க விட்டால் அதற்க்கு உருவம் கொடுக்கும் தன்மாத்திரைகள் என்னாவகின்றன. அது ஏன் உருவமில்லாமல் ஆகிறது. ஒரு அண்டா நிறைய தண்ணீரை கொதிக்க விட்டால் அவ்வ்வளவு தன் மாத்திரைகளும் சேர்ந்து இருக்க வேண்டுமே அது கண்ணுக்கு தெரியா வேண்டுமே?// உண்மை! உண்மை!!. மறுக்க முடியாத வாதம்!

    சைவசித்தாந்தம் கூறும் உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுவதில்லை. ஏற்றுக் கொள்ள முடியாதுதான்.பிரமாணமாக எடுத்துக் கொண்ட உபநிடதங்களிலேயே கருத்து வேற்றுமைகள் காணப்படுகின்றன. என்னுடைய அறிவுக்கு. தமிழ்ச் சான்றோர் அறிவுறுத்திய கொள்கைகளுக்கும் உகப்பானவற்றை நான் எடுத்துக் காட்டாதுபோனால், தத்துவ சிந்தனை ஒருசார்பாக முடக்கப்பட்டு விடும்.

    இது தமிழ் இந்து வாசகர்களின் ஆராய்ச்சிக்கு உரிய சில கருத்துக்கள். விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து வேண்டுவார் வேண்டும் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம். பிரபஞ்சத்தில் இருக்கும் மலின சிந்தனைகளுக்கு பிரமத்திலிருக்கும் மலினமே காரணம் என்னும் கருத்து சரியா என்பதை அன்பர்களே சிந்தித்துத் தெளிந்து கொள்வார்களாக! எல்லா மலினங்களும் பிரமத்துக்கே உரித்தாகுக!

    உயிரினங்களிடமிருக்கும் குறைகளுக்கும் மலினங்களுக்கும் அவற்றையுடைய பிரமமே காரணமாவதன்றி, ஏனைய மக்களையோ உயிரினங்களையோ குறை கூறக் கூடாது. அறநூல்கள் எல்லாம் மலினமுடைய பிரமத்துக்கே உரைக்கப்பட்டன அன்றி அவற்றிற்குக் காரணமாகாத உயிர்களுக்குக் கூறப்பட்டதன்று! நீங்கள் கூறும் பிரமம் மலினமுடையதாக இருக்க, சாமவேத மைத்ராயண்யுபநிஷத் _” ஆன்மா யார்? சுத்தன், நின்மலன், சூனியன், சாந்தன் முதலிய இலக்கணங்கள் உள்ளவன்தான் ஆன்மா. இயல்பான இவ்விலக்கணங்களாலேயே அவனறியத் தக்கவன்’ என்று கூறுகின்றது.

    “மாண்டூக்கியம், “பிரபஞ்ச லயத்தானமாயுளதும், சாந்தமாயிருப்பதும், அத்வைதமாயுளதுமாகிய சிவம்” என்கின்றது.’சைதன்யம் ஆத்மா’ என்று சிவசூத்திரம் கூறுகிறது. எனவே, ஆத்மாவாகிய பிரமம் சடமன்று என்று அறிதல் நன்று.

  32. உயிர்கள் படைக்கப்பட்டன (ஜீவோற்பத்தி) செல்லாது. சித், அசித் விசிஷ்டமான சரீரத்தைக் கொண்ட பரம்பொருள் உலகமாக விரிந்தது என்னும் வாதத்தில் தோஷமில்லை. இதில் சமாதானம் காட்ட முடியாத ஒன்று இருந்தால் சுட்டிக் காட்டவும்.

    “நிமித்த காரணமாக மாத்திரம் இருக்கும் ஈசுவரன் ஜட பிரகிருதியை உபாதானமாகக் கொண்டு பிரபஞ்சத்தை சிருஷ்டித்தார்” என்று கூறுபவர்கள் உயிர்கள் அல்லது ஜீவன்களின் நிலை பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு முன் என்ன என்பதைத் தெளிவாக விளக்கினால் நல்லது. உயிர்களும் இருந்தன என்றால் “ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத்” (சத் ஒன்றே முதலில் இருந்தது) என்பது எப்படிப் பொருந்தும் என்றும் விளக்க வேண்டும்.

    மேற்கூறிய இரண்டாம் தரப்பினர், “நானே அனைத்துமாக ஆகக் கடவேன்” என்று பிரம்மம் சங்கல்பித்ததாக சாந்தோக்ய உபநிஷதத்தில் வருவது என்னாகுமோ இன்னும் விளக்கம் சொல்லவில்லை.

    // இதனைச் சைவசித்தாந்தம் ஏற்றுக் கொள்வதில்லை. ஐம்பூதங்களும் அவற்றுக்குரிய தன்மாத்திரைகளிலிருந்தே பரிணமிக்கின்றன. சப்த ஸ்பரிச ரூப இரச கந்த தன்மாத்திரைகளிலிருந்து முறையே ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதிவி ஆகிய பூதங்கள் பரிணமிக்கின்றன. //

    “ஆகாசாத் வாயு: வாயோர் அக்னி: அக்னேர் ஆப: அப்த்ய: ப்ருதிவீ ” – தைத்திரீய உபநிஷத், 2.1.1. (ஆகாயத்திலிருந்து வாயு தோன்றியது, வாயுவிலிருந்து அக்னி, அக்னியிலிருந்து தண்ணீர், தண்ணீரிலிருந்து மண்).

    சுபாலோபனிஷத்தின் முதல் மந்திரமும் அவ்வாறே. சுபாலோபனிஷத்திலேயே, பிரளய காலத்தில் “மண் தண்ணீரில் லயமாகிறது, தண்ணீர் நெருப்பில், நெருப்பு வாயுவில், வாயு ஆகாயத்தில்” என்று முறைப்படி கூறப்பட்டது. (1.2.4)

  33. சித் ஆகிய ஜீவன்களும் அசித்தாகிய சடமும் பிரம ஆதாரத்தில் இருந்தன. பிரமம் பிரபஞ்சத் தோற்றத்தைச் சங்கற்பித்தது என்று நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். . ” The theory of Yadavaprakasa that prkriti and purusha are the very manifestations of Brahman is not tenable because both purusha and prakriti are anadi, as stated in the Gita and hence they cannot originate from Brahman. It would also militate against the Scriptural texts speaking of Brhaman as nirvikara
    Sristi or creation of a tattva is to be understood in the sense that Brahman as associated with cit and acit in their subtle forms , assumes as different state, that is , cit and acit in their manifest forms. ( சித்துக்களாகிய சீவர்கலும் அசித்தாகிய சடமும் சூக்கும் சத்தியாக பிரபஞ்சத் தோற்றத்துக்கு முன் பிரம ஆதாரத்தில் இருந்தன. பிரமம் சங்கற்பிக்க அவை தோன்றின என்றும் கூறியிருக்கின்றேன்) The same view is expressed by sage Manu in the following statement: All this (the universe) was in the beginning (prior to creation) tamas (unmanifest) He (Paramatmn) by his will ( (will-சங்கற்பம்)created all the living beings. ( தமசு என்றதைச் சைவம் மாயை என்னும் பொருளாகக் கூறும். பிரமத்தில் unmanifest ஆக இருந்ததை, கர்ப்பிணியான பெண் ஒருத்தியே இருந்தாள் என்று கூறுவதை ஒக்கும் என்றும் கூறியிருந்தேன்). ச்த் ஒன்றே இருந்தது என்பதற்கு இதுவே விளக்கம்.(ஆங்கிலப் பகுதி A Critical Review based on Vedanta Desik’s Paramata bhanga) by S.M.S. Chari

  34. தன் மாத்திரைகள் குறித்து:”Akasa possesses the quality of sound only. Air possesses the qualityties of sound and touch. Tejas or fire possesses three gunas, viz., sound , touch, and colour. Water is characterized by sound , touch, colour, and taste. Prothvi possesses allthe five gunas.- sound, touch, colour, taste, and odour. Since the bhutas evolve one after another in a successive order stating from Akasa , qualities inherent in the respective elements are transmitted to the next one” இதில் இறுதியில் உள்ள கருத்தில் மட்டும் சைவம் மாறுபடுகின்றது.. மாறுபடுதல் தத்துவ உலகில் காண்படுவதே. உரிமையும் கூட.உள்ள பொருளே தோன்றும் என்பது இந்தியத் தத்துவஞானத்தில் “சற்காரியவாதம் என்னும் கொள்கை. இல்லாதது என்றும் தோன்றாது. எனவே பூதங்கள் அவ்வத் தன்மாத்திரைகளினின்றே தோன்றின என்பது சைவசித்தாந்தம். ஆகாயத்திலிருந்து ஏனைய பூதங்கள் தோன்றின என்றால் ஆகாயத்தில் இந்த ஐந்து குணங்களும் இருந்தாக வேண்டும். ஒரு குணமே உடைய ஆகாயம் ஐந்து குணமுடைய பிருதிவியின் தோற்றத்துக்குக் காரணமாக இருக்க முடியாது . இது சிந்தனையின் வளர்ச்சி.//அப்படி என்றால் தன் மாத்திரைகளை காட்டுங்கள். தன் மாத்திரைக்கு உருவம் இருந்தால் தான் அதிலிருந்து அக்னி உருவம் பெற முடியும் அல்லவா? தண்ணீரை கொதிக்க விட்டால் அதற்க்கு உருவம் கொடுக்கும் தன்மாத்திரைகள் என்னாவகின்றன. அது ஏன் உருவமில்லாமல் ஆகிறது. ஒரு அண்டா நிறைய தண்ணீரை கொதிக்க விட்டால் அவ்வ்வளவு தன் மாத்திரைகளும் சேர்ந்து இருக்க வேண்டுமே அது கண்ணுக்கு தெரியா வேண்டுமே// அப்படி யென்றால் ஆகாயத்தில் இக்குணங்கள் எல்லாம் உள்ளன என்று ஏதாவது செய்து காட்டுங்களேன்..

  35. /சிரேஷ்ட ஞாயம் – இது பற்றிக் கேள்விப்பட்டதில்லை. அறிந்தவர்கள் நூற்குறிப்பு ஏதேனும் இருந்தால் தரலாம்/ நியாய சகஸ்ஸ்ரீ (ஆயிரம் நியாயங்கள் என்னும் வடமொழி நூல்) அதன் தமிழ் மொழிபெயர்ப்பு ‘நியாயக் களஞ்சியம்’ பேரூர் புலவர் பேரவை வெளியீடு. அதில் ‘488.சிரேஷ்ட நியாயம்’ என்றதன் கீழ் உள்ள விளக்கம்:.ஒரு வினையை அரசனுடைய ஏவலர்கள் செய்து முடிப்பினும் தலைமை பற்றி அரசன் செய்தான் என்று கூறுவர். உயிர் இன்றேல் உடம்பு அழியும். அதுபோல், மாயைக்கு ஆதாரமாய் அத்னுடன் ஒன்றி நிற்கும் பிரமம் இன்றேல் அம் மாயை நில்லாது. அதனால், மாயையினும் பிரமம் சிரேஷ்டம் உடையதாகின்றது. விகாரமுடைய பிரபஞ்சம் விகாரமுடைய மாயையினின்றும் தோன்றியது. காரியம் காரனத்தின் மாறுபட்ட குணமுடையதாக இருத்தல் இயலாதாதலின் விகாரியான பிரபஞ்சத்திற்கு நிர்விகாரியான பிரமம் உபாதான காரணமாயிருத்தல் பொருந்தாது. எனினும் பிர்மத்தினின்றும் பிரபஞ்சம் தோன்றியது எனச் சில நூல்கள் கூறுவது சிரேஷ்ட நியாயம் பற்றி என்பர்.

  36. // சித் ஆகிய ஜீவன்களும் அசித்தாகிய சடமும் பிரம ஆதாரத்தில் இருந்தன. //

    சரி, அப்படியானால் “நானே அனைத்துமாக ஆகக் கடவேன்” என்று பிரம்மம் சங்கல்பித்ததாக சாந்தோக்ய உபநிஷதத்தில் வருவது எப்படிப் பொருந்தும்?

  37. மிக அருமையான விவாதங்கள். திரு முத்துகுமாரசாமி மற்றும் திரு கந்தர்வன் அவர்களின் கேள்வி-விளக்கங்கள் மிக அருமை.
    ஒரு விவாதம் எப்படி காழ்புணர்ச்சி இல்லாமல் விவாதிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

  38. ஹிந்து மதம் கூறும் கருத்துகள்-சுவாமி ஹர்ஷானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு
    பிரபஞ்ச படைபின் ரகசியத்தை நமது ரிஷிகள் தங்கள் அனுபூதியில் உணர்ந்தவற்றையும், வேதங்களின் கூற்றையும் அடிப்படையாகக் கொண்டு சில தீர்வுகளை அளித்துள்ளார்கள். இதற்கு ”ஷட்தர்சனங்கள்” அதாவது ஆறுவகை அனுபவ ஆராய்ச்சி முடிவுகள்.
    1.கௌதமரின் நியாயத் தத்துவம் 2. கானடரின் வைசேஷிகத் தத்துவம்.
    இவை இரண்டும் தொடக்கமும், முடிவும்மற்ற என்றும் உள்ள அணுக்களிலிருந்து பிரபஞ்சத்தைப் படைத்தார் ஈஸ்வரன் என்று சொல்லுகின்றன. பிறத்தல், வாழ்தல், அழித்தல் என்று பிரபஞ்சம் சக்கரம்போல் சுழல்முறையில் முடிவில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது காணும் பிரபஞ்சப் படைப்புகளின் அமைப்பு முறை, தனித்தனி ஆன்மாக்களான பல்வேறு ஜீவன்களின் அதிருஷ்டத்தைப் பொறுத்தே ஏற்பட்டுள்ளது. முந்தைய சுழற்சியில் பிரபஞ்சத்தின் ஜீவன்களால் தீர்க்கப்படாமல் எஞ்சியுள்ள, நாம் காண இயலாத பலன்களே அதிருஷ்டம் எனப்படும். அணுக்கள் இணைவதும் கலைந்து போவதும் முறையே பிரபஞ்சத்தின் தோற்றமும் பிரளயமும் ஆகும்.
    3. சாங்கியத் தத்துவம் கபிலருடையது 4. யோகத் தத்துவம் பதஞ்சலியுடையது.
    இவ்விரண்டும் படைப்புப் பொருள்களுக் கொல்லாம் ஆதாரம் பிருகிருதி என்று கூறுகின்றன. தனித் தனி ஜீவான்மாக்கள் அல்லது புருஷர்களின் முன்னிலையில் பிரகிருதி இந்தப் பிரபஞ்சமாக உருவாகிறது. புருஷர்கள் அதற்குச் செயல் ஊக்கிகளாக இருக்கிறார்கள். உண்மையில் பிரபஞ்ச படைப்பு என்பதே இந்த புருஷர்களுக்காகத்தான் நிகழ்கிறது. படிப்படியாக ஒவ்வொரு புருஷனும் ஆன்மீகத்தில் மலர்ந்து முதிர்ந்து விடுதலை பெறவேண்டும். நிலம், நீர் முதலிய பஞ்ச பூதங்களும், ஐம்புலன்களும், மனமும் பிரகிருதியிலிருந்து முளைத்தவையே. இவற்றின் கலவையும் கூட்டுமே இந்தப் பிரபஞ்சம். புருஷன் பிரகிருதியிடமிருந்து விடுபட்ட நிலையில்தான் இருக்கிறான். ஆனால் பிரகிருதியுடன் அதிலிருந்து விளைந்த பிரபஞ்சத்துடன் புருஷனுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டால் அதுவே தளையாக மாறி திரும்பத் திரும்ப் பல பிறவிகளுக்கு காரணம்மாகிறது. விவேகமும் ஞானமும் துணை கொண்டு புருஷன் இந்த தளைகளை வெற்றிகரமாக அறுத்துக் கொண்டால் அதுவே விடுதலையாகிறது.

    cont…

  39. 5. ஜைமினியின் பூர்வ மீமாம்சம், பிரகிருதி என்பது ஒரு ஜட இயற்கை, உணர்வற்றது என்கிறது. ஆண்மாக்களின் பிராரப்த கர்மத்தினால் தூண்டப்பட்ட பிரகிருதியே இந்தப் பிரபஞ்சமாகப் பரிணாம வளர்ச்சி பெறுகிறது. தனித்தனி ஆன்மாக்களின் வெளிப்படுவதற்குத் தயாராக உள்ள முற்பிறவச் செயல்களின் பலன்களே பிராரப்த கர்மமாகும்.
    6. பாதராயணர் எனப்படும் வியாசரின் வேதாந்தக் கொள்கைப்படி பிரம்மம் என்ற முழுமுதற் பரம்பொருள் தன்க்குள்ளிருந்தே இந்தப் பிரபஞ்சத்தை வெளிப்படுத்தி, அதைப் பாதுகாத்து, இறுதியில் அதைத் தன்க்குள்ளேயே ஈர்த்துக் கொண்டுவிடுகிறது. இந்த மூன்று நிகழ்வுகளும் சக்கரம் போல் சுழன்று கொண்டே இருக்கின்றன. இருப்பது பிரம்மம் என்ற பரம் பொருள் ஒன்றுதான். அதற்குப் புறத்தே இரண்டாவது என்ற எதுவும் இல்லை. பிரம்மம் ஒன்றே பலவாகப் பரிணமித்து பிரபஞ்சம் ஆகிறது. பரிணாம வளர்ச்சியின் முடிவில் அது தன்னுடைய உண்மையான இயல்பான ஒன்றாகவே மீண்டும் ஆகிவிடுகிறது. சிலந்திப் பூச்சியின் வாயிலிருந்து மெல்லிய வலை உருவாவதுபோல பிரம்மத்திலிருந்து வருவதுதான் இந்தப் பிரபஞசம் என்ற பின்னல்; தீயிலிருந்து பொறி கிளம்புவதும், பூமியிலிருந்து புல் முளைப்பதும் மற்ற எடுத்துக்காட்டுகள்.
    எல்லாம் பிரம்மமே. இருப்பது அது ஒன்றன்றி வேறு இல்லை என்று வேதாந்தம் இந்த பிரபஞ்சத்திற்கு அடிப்படையானதொரு ஒருமைப்பாட்டை வழங்குகிறது.
    நவீன அறிவியல் கோட்பாடுகளும் பின்வருமாறு கூறுகின்றன. ஏலக்ட்ரான்கள் என்கிற மின்துகள்கள்தான் பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் அடிப்படையான துகள்கள்; இந்த எலக்ட்ரான்கள் பல்வேறு அளவுகளில் ஒன்றிணைந்து படைப்பில் காணப்படும் பல்வேறு பொருள்களாகின்றன. இதிலிருந்து நம்முடைய வேதாந்தம் கூறிய கருத்துகளை நோக்கித்தான் அறிவியல் இறுதியாக விரைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. இதுவரை அறிவியல் தெளிவாக விளக்க முடியாத விஷயங்கள் பல உண்டு. மனம் உணர்வு உயிர் ஆகியவற்றை விளக்குவது ஒருபுறமிருக்கட்டும் அவற்றை வரையறுக்கக் கூட அதனால் இன்னமும் முடியவில்லை. மனம் என்றால் என்ன, உணர்வு என்பது என்ன, உயிர் என்பது என்ன என்ற எதற்கும் அதில் பதில் இல்லை.
    வேதாந்தமோ பிரம்மமே எல்லாம் என்று அறுதியிட்டுப் பறை சாற்றுகிறது. அதன் இயல்பு என்றும் இருப்பது. அது தொடக்கம் முடிவு அற்றது அதுவே உணர்வு; அதுவே தூய அறிவு; அதுவே நிறைவான ஆனந்தம். இந்த சச்சிதானந்தப் பொருளே இருக்கிறது என்று சொல்லக்கூடிய ஒன்றே ஒன்று. இதிலிருந்துதான் மற்ற எல்லாம் வெளிப்படுகின்றன. நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்கும் அறிக்கைகளுக்கும் அப்பால் மிக உயர்ந்த ஒரு நிலையிலிருந்து நவீன அறிவியலுக்கு வேதாந்தம் விடுக்கும் அறைகூவல் ஒலிக்கிறது.

  40. //
    அப்படி யென்றால் ஆகாயத்தில் இக்குணங்கள் எல்லாம் உள்ளன என்று ஏதாவது செய்து காட்டுங்களேன்..
    //

    இது உங்கள் வாதத்தின் சாரம். இதை ஏன் நீங்கள் என் மீது திருப்ப வேண்டும் என்று திர்யவில்லை? நீங்கள் தான் அசத்திலிருந்து மட்டும் தான் ஜடம் வரும் என்று சொன்னது. அதற்கு உதாரணம் சொல்லிக்கொண்டே வந்தால் கடைசியில் அதே வாதம் திரும்ப வருகிறது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. வாதத்தினம் சாரத்தை உள்வாங்கவில்லையோ என்று தோன்றுகிறது. என்னுடைய வாதத்தின் சாரமே ஒன்றிலிருந்து இன்னொன்று வருவதற்கு, பின்னால் உள்ள பொருளின் தன்மை எல்லாம் முன்னாள் உள்ளதில் இருக்க தேவை இல்லை என்பது தான்.

    உங்களது கேள்வியை பார்த்தால், இப்பொழுது நீங்களே அதை ஒத்துகொண்டீர்கள் போல தெறிகிறது.

    திருஷ்டாந்தம் பேசும் போது, பெரியவர்கள் இதை எங்கள் சித்தாந்தம் ஒத்துக் கொள்வதில்லை என்று சொல்வது கிடையாது. இதை முன்னிட்டே, சைவ சித்தாந்தம் ஒத்துக் கொண்டால் தான் திருஷ்டாந்தம் எடுபட வேண்டி இல்லை என்று சொன்னேன். மற்றபடி சித்தாந்தகளில் நுழைவது எனது பதிலின் நோக்கமல்ல.

    இதில் எதற்கு தமிழ் சான்றோர் உபநிஷத்துக்கள் என்று பிரித்து கழகங்கள் போல நாம் பேச வேண்டும். உபநிஷத்தில் முரண்பாடு இருந்தால், நமக்கு வேண்டும் போது மட்டும் அதை பிரமாணமாக கொள்ளக் கூடாது (புருஷன் யார் என்று சொல்ல வேதத்தில் காயத்ரியை நோக்கினாப் போலே)

    //
    1. உயிரினங்களிடமிருக்கும் குறைகளுக்கும் மலினங்களுக்கும் அவற்றையுடைய பிரமமே காரணமாவதன்றி, ஏனைய மக்களையோ உயிரினங்களையோ குறை கூறக் கூடாது. அறநூல்கள் எல்லாம் மலினமுடைய பிரமத்துக்கே உரைக்கப்பட்டன அன்றி அவற்றிற்குக் காரணமாகாத உயிர்களுக்குக் கூறப்பட்டதன்று! நீங்கள் கூறும் பிரமம் மலினமுடையதாக இருக்க, சாமவேத மைத்ராயண்யுபநிஷத் _” ஆன்மா யார்? சுத்தன், நின்மலன், சூனியன், சாந்தன் முதலிய இலக்கணங்கள் உள்ளவன்தான் ஆன்மா. இயல்பான இவ்விலக்கணங்களாலேயே அவனறியத் தக்கவன்’ என்று கூறுகின்றது.
    //

    உங்கள் கொள்கை படி பார்த்தல் தான் பிரம்மத்திர்க்கு தோஷம் நேர்கிறது. அதை தான் சுட்டிக் காட்டினேன். அதற்கு நீங்கள் தந்த பதில் எனக்கு புரியவில்லை.

    //
    சுத்தன், நின்மலன், சூனியன், சாந்தன் முதலிய இலக்கணங்கள் உள்ளவன்தான் ஆன்மா. இயல்பான இவ்விலக்கணங்களாலேயே அவனறியத் தக்கவன்’ என்று கூறுகின்றது.
    //

    இது ஒரு உப கேள்வி. இப்படி இருக்க ஒரு ஆன்மா தாயின் கற்பத்தில் பிறந்தால் மலினமடைவானோ? பிறந்ததாலேயே ஒரு ஆன்ம தனது தன்மையை இழக்காது என்று தெரிகிறதல்லவா?

    //ஆத்மாவாகிய பிரமம் சடமன்று என்று அறிதல் நன்று//

    அப்படி எனில் இங்கு காணும் ஜடத்திற்கு இந்த ஆன்மா காரணம் இல்லையா? இல்லை என்றால் பிரம்மத்திர்க்கு சர்வஞன் என்ற வேடம் கூறும் குணம் பொருந்தாது. ஆம் என்றால் நமது விவாதம் இனிதே முற்றுப்பெற்றது, நீங்களும் ஜடத்திற்கும் காரணம் அஜடம் என்பதால்.

    //
    ச்த் ஒன்றே இருந்தது என்பதற்கு இதுவே விளக்கம்
    //

    இதை தான் முதல் இருந்தே சொல்கிறோம். சத் ஒன்றே இருந்தது என்றால் ஜடம் எங்கே இருந்தது

  41. // மாறுபடுதல் தத்துவ உலகில் காண்படுவதே. உரிமையும் கூட.//

    இது வாதத்தைத் திசைதிருப்பும் கருத்து. உரிமை இல்லை என்று யார் சொன்னார்? வேதத்தைப் பிரமாணமாக ஒத்துக் கொள்ளாத மதங்களுக்குக் கூட இங்கு உரிமை உண்டு. “ஆகாயத்திலிருந்து வாயு தோன்றிற்று” இத்யாதி வேத வாக்கியங்களை ஏற்கவில்லை என்பவர்களுக்கு வேதம் ப்ரமாணம் அல்ல என்று தான் கூற வேண்டி வருமே. அப்படிக் கூறுபவர்கள் ஏன் மற்றொரு உபநிடத வாக்கியத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்? இது தான் கேள்வி.

    // ஒரு குணமே உடைய ஆகாயம் ஐந்து குணமுடைய பிருதிவியின் தோற்றத்துக்குக் காரணமாக இருக்க முடியாது . இது சிந்தனையின் வளர்ச்சி. //

    அப்படி அல்ல. சிந்தனையின் வளர்ச்சியோ இல்லையோ, இதற்கு எளிதில் சமாதானம் கூற முடியும்.

    மூலப் பிரகிருதி சூக்ஷ்மமான நிலையிலும் அனைத்து குணங்களையும் மறைந்திருக்கும் நிலையில் கொண்டுள்ளது. ஆகாயத்தில் வெளிப்படையாக சப்தமும் மற்ற நான்கும் மறைமுகமாகவும் உள்ளன. வாயு, அக்னி, அப்பு ஆகியவற்றில் முறையே அந்தந்த குணங்கள் மறைமுகமாகவும் (dormant) மற்ற குணங்கள் வெளிப்படையாகவும் (active) உள்ளது. ஏன், ஆகாயத்திலிருந்தே ஸ்பர்ச தன்மாத்திரமும், வாயுவிலிருந்து ரூப தன்மாத்திரமும், அக்னியிலிருந்து ரஸ தன்மாத்திரமும் தோன்றுகிறது என்கிற புராண வாக்கியம் கூட இருக்கிறது.

    ரூப-ரஸ தன்மாத்திரங்கள் (வெளிப்படையாக) இல்லாத ஹைட்ரஜனும் பிராணவாயுவும் சேர்ந்து ரூப ரஸ தன்மாத்திரங்களைக் கொண்ட தண்ணீர் ஆகவில்லையா?

  42. // ஒரு வினையை அரசனுடைய ஏவலர்கள் செய்து முடிப்பினும் தலைமை பற்றி அரசன் செய்தான் என்று கூறுவர். //

    இது அனைவரும் அறிந்ததே. “தாஜ் மகாலை யார் கட்டினார்?” என்றால் “கொத்தனார் கட்டினார்” என்று கூறுவதில்லை – இதை ஆரம்பப் பள்ளிச் சிறுவர்கள் கூட நகைச்சுவையாகக் கூறக் கேட்டுள்ளேன்.

    இந்த “சிரேஷ்ட நியாயம்” கர்த்துருத்வத்துக்கே பொருந்தும், காரணத்துவத்திற்குப் பொருந்தாது. மண்ணை விட குயவன் உயர்ந்தவன், ஆனால் “குயவனே பானையாக ஆனான்” என்று யாராவது கூறக் கேட்டுள்ளோமா? இதை வைத்து “பிரம்மமே பிரபஞ்சம் ஆனது” என்னும் வேத வாக்கியத்தை விளக்குவது நன்றன்று.

  43. நமது தளத்தில் இந்த அற்புதமான கருத்துப்பரிமாற்றம் திரு கந்தர்வன் மற்றும் திரு Sarang மற்றும் திரு கிருஷ்ணகுமார் மற்றும் திரு முத்துக்குமாரசாமி ஆகியோரால் மிக சிறப்பாக எடுத்து செல்லப்படுகிறது.

    மனிதனுடைய அறிவு பல எல்லைகளுக்கு உட்பட்டது. இருப்பினும் அந்த எல்லைகளுக்குள்ளேயே இவ்வளவு தெளிந்த கேள்விகளை கேட்டு , இவ்வளவு தீர்க்கமாக அலசிய பதில்களை படிக்கும் போது, அதிகமான மன மகிழ்ச்சி ஏற்படுகிறது. பங்கேற்று பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

    கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதே என் கருத்து.

  44. மேல் பதியப்பட்ட விவாதங்கள் அனைத்துமாதலின், உண்மை என்னவென்றால் வாசகர்கள் அகண்ட வெளி சிந்தனைக்கு பயணித்து கொண்டிருக்கிறார்கள். அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

  45. ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்,
    வழிப்போக்கன் ஒருவன் சாப்பாடு கட்டிக்கொண்டு போகிறான். அப்போது அவன் வேறு உணவு வேறு; அது த்வைதம்.

    பிறகு ஒரு இடத்தில் அமர்ந்து உணவைச் சாப்பிடுகிறான். இப்போது உணவு அவனுக்குள் இருக்கிறது; ஜீரணமாகி அவன்மயம் ஆகவில்லை எனினும் அவனுக்குள் இருக்கிறது; இது விசிஷ்டாத்வைதம்.

    உணவு ஜீரணமாகி அவனோடு கலந்துவிடுகிறது; இது அத்வைதம்.

  46. /இந்த “சிரேஷ்ட நியாயம்” கர்த்துருத்வத்துக்கே பொருந்தும், காரணத்துவத்திற்குப் பொருந்தாது. மண்ணை விட குயவன் உயர்ந்தவன், ஆனால் “குயவனே பானையாக ஆனான்” என்று யாராவது கூறக் கேட்டுள்ளோமா? இதை வைத்து “பிரம்மமே பிரபஞ்சம் ஆனது” என்னும் வேத வாக்கியத்தை விளக்குவது நன்றன்று/
    பிரபஞோற்பத்திக்கு குயவன் பானை உதாரணம் பொருந்தாது, முண்டகோபநிஷத்தில் உள்ள ஊர்ணநாபி உதாரணமே பொருந்தும் என முன்னர்க் குறிப்பிட்டிருந்தேன். குயவன் மண்ணிற்கு வேறாய் ஒரு உடம்பினனாய் இருப்பதுபோல் சிவபரமம் இராமே எப்பொருட்ளிடத்தும் உடங்கியைந்து வியாபியாய் நிற்கும். ஊர்ணநாபியின் உடலே உபாதானம் என்னும் முதற்காரணம்; அதன்கண்ணூள்ள உயிரே நூலினைச் செய்யும் நிமித்தகாரணம். எனச் சித்திக்கின்றது. வலைக்கு முதற்காரணம் சடம்; அந்தச் சடம் நூலாக இழைக்கப்படுவதற்குச் சிலந்திப் பூச்சியே நிமித்தம்.பூச்சியின் சங்கற்பமின்றி நூலிழை பூச்சியின் உடலிலிருந்து தோன்றாது. உடலாகிய சடத்திலிருந்து பூச்சியின் சங்கற்பத்தால் தோன்றிய நூல, சித்தாகிய (சங்கற்பித்த) பூச்சியிலிருந்து தோன்றியது எனக் கூறுவது உலக் வழக்கு. சேறு தாமரைக் கிழங்குக்கு ஆதாரம்; கிழங்கிலிருந்து தோன்றிய தாமரையை ஆதாரமாகிய சேற்றிலிருந்து தோன்றியது என்பதற்குச் சான்று தாமரையைப் பங்கஜம் என்று கூறுவது. காரணம் கர்த்தவின்றிக் காரியமாவதில்லை. அதுபோலக் கர்த்தாவும் காரியம் ஆவதில்லை. கர்த்தாவாகிய பிரமத்தைக் காரியத்திற்கு முதற்காரணம் (material cause) ஆகக் கூறுவதுதான் சிரேஷ்ட நியாய்ம் சுருக்கமாகக் கூறுகின்றது. இது பிரமத்திற்கும் பொருந்தும்.

  47. வாதத்தைத் திசை திருப்புவதோ, எள்ளல் நடையில் இகழ்ச்சிக் குறிப்புடன் மறுமொழியிட்டு அடக்குக் கீழ்மைக் குணமோ என்னிடம் இல்லை. தெளிவுக்காக என் மறுமொழிகளில் கூறப்பட்ட பொருள்களை வரையறுத்துத் தந்துள்ளேன். விவாதம் செய்தல் என் அறிவு விளக்கத்திற்கே..
    1. முதற்காரணத்தின் (material cause) குணமெல்லாம் அதனால் ஆகிய காரியங்கடகும் உளவாகும். (செம்மண்- பானை: 24காரட்டு தங்கம்- அதனால் ஆகிய நகை)
    2. சித்து என்றும் ஒருபடித்தாக இருக்கும். பரிணமியாது.
    3. சித்தாகிய பிரமத்தில் தோன்றிய பிரபஞ்சமும் சித்தாதல் வேண்டுமே யன்றிச் சடமாதல் பொருந்தாது.
    4. பானை உடைந்தால் மண்ணாகும், பொன்னாலாகிய நகையை உருக்கினால் அதே மாற்றுள்ள பொன் கிடைக்கும். ஆனால் தயிராகப் பரிணமித்த காரியத்தின் குணமும் அதற்கு முதற்காரணமாகிய பாலின் குணமும் தம்முள் வேறுபட்டுள்ளனவே எனும் தடைதோன்றும். காரணத்தின் குணமே காரியத்திற்கும் உளவாக வேண்டும் என்பதன் கருத்து, காரணத்தின் ஒத்த குணங்களே காரியத்திலும் இருக்கும்; அதற்கு மாறுபட்ட எதிரிடையான குணங்கள் உளவாகா என்பதாம். எனவே, சித்தாகிய முதற்காரணத்தினின்றும் தோன்றிய காரியமாகிய பிரபஞ்சம் சித்தாகவே இருக்கவேண்டும். மாறாகச் சடத்தன்மை அதில் காணப்படுவதால் பிரபஞ்சத்திற்குச் சடமே முதற்காரணமாகும். சித்தாகிய பிரமம் முதற் காரணம் அன்று. (“காரணாபிந்ந்ரூபேண கார்யம் காரணமேவ ஹி|தத்ரூபேண ஸதாஸத்யம் பேதே நோக்திர் ம்ருஷகாலு” பஞ்ச்ப்ரஹ்மோ பநிஷதம். பொருள்: காரணம் காரியத்தினின்றும் வேறன்று; காரியம் அதன் காரன ரூபத்தில் எஞ்ஞான்றும் நிலைபேறுறுகின்றது. இதற்கு வேறு கூறுதல் தவறே.)
    5. முதற் காரணமாகிய சடம் தானே காரியமாகாது. கருத்தாவையின்றிக் காரியமில்லை.. கருத்தா சித்தாகத்தான் இருக்க முடியும். எனவே, சித்தாகிய பிரமம் கர்த்தா. பிரமமாகிய கருத்தவால் காரியமாகிய பிரபஞ்சம் படைக்கப்பட்டது.
    6. குறைவிலா நிறைவு பிரமம். ஆகையால், தனக்கென இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துக்கொள்ள வேண்டிய தேவை அதற்கில்லை. வேறொரு பொருளின் பயனைக் கருதிய கருணையுடைய பிரமம் பிரபஞ்சத்தைப் படைத்திருக்க வேண்டும். பிஅபஞ்சப் படைப்பினால் பயன் பெறுவன சீவர்களாகிய உயிர்களே.
    7. “அறிவுளானென்னும் ஞன்னும் அறிவிலான் என்னும் அஞனுமாமிருவரும் உற்பத்தி யில்லாதவர்களாகிய ஈசனும் அநீசனுமாவர் (உயிர்கள்); உற்பத்தி இல்லாத ஒருத்தி (+மாயை) சீவர்களாகிய போக்தாக்களுக்குப் போகத்தின் பொருட்டுத் தனு கரண புவனங்களாக (உடல், கருவிகள், உலகங்கள்) ஆகக் கூடுகின்றனள்” எனும் பொருள்தரும் வசனம் சுவேதாச்வதரோ பநிஷத்தில் உள்ளது.( ஜ்ஞாஜ்ஞெளத்வா வஜா வீசநேசா| வஜாஹ்யேகா போக்தரு போகார்த்த யுக்தா| அநந்தச்சாத்மா விச்வரூபோஹ்யகர்த்தா”)
    8. இன்னும், “மாயையைப் பிரகிருதி யென்றறிக; மாயையை உடையவன் மகேசுரன்” என்றும் வேதம் பகுத்து ஓதுகின்றது. குயவனுக்கு மண் உடைமையானாற்போல மாயை என்னும் சடம் மகேசனுக்கு உடைமையாகும்.
    9. குயவனுக்கு அந்நியமாக மண் இருப்பதைப் போல அன்றி சூக்குமமாகிய பிரம ஆதாரத்திலேயே சூக்குமமாகிய மாயை என்னும் சடமும் உள்ளது. இந்த மாயையைப் பிறர் ‘தமசு’ என்றும் கூறுவர்.
    10. இந்த மாயை ஈசுவரனின் விசிட்டமாகிய குணம் அன்று. மாயை, பிரபஞ்சமாகத் தோன்றி நின்று அழியும் விகாரம் உடையது. இதனை பிரமத்துக்கு விசிட்டமாகக் கொண்டால் விகாரப்படும் மாயையுடன் கூடி விசிட்டனாகிய பிரமமும் விகாரப்படும் எனும் தோஷம் தோன்றும். இது பிரமம் நிவிகாரி என்ற சுருதியுடன் மாறுபடும்.
    11. நிமித்த காரணனாகிய முதல்வன் பிரபஞ்சோற்பத்திக்கு முதற்காரணமாகிய மாயைக்கு ஆதாரமாவன். தன்னிடம் உடைமையாகிய மாயையினின்றும் பிரபஞ்சம் உயிர்களின் பொருட்டுத் தோன்ற சங்கற்பிக்கின்றான். இங்கு, முன் மறுமொழிகளில் எடுத்துக்காட்டிய ஊர்ணநாபி நியாயம், பங்கஜ நியாயம், சிரேஷ்ட நியாயம் ஆகியவற்றைக் காண்க.
    12. பரசிவமாகிய பிரமத்தின் ஆதாரத்தில் மாயை தங்கியிருத்தலுக்கு, குழ்ந்தையுடம்பின் முதற்காரணமாகிய உதிர சுக்கிலங்களுக்கு ஆதாரம் அதற்கு நிமித்த காரணமாகிய தாய் தந்தையும், சிலம்பிநூலின் முதற்காரணத்திற்கு ஆதாரம் அதற்கு நிமித்த காரணமாகிய சிலம்பியாதலும் அறிக.
    13. “அந்தச் சத்தாயுளது நான் அனேஎகமாகத் தோன்றுவேன் என்று தேஜசைப்படைத்தது. அக்கினி நான் அனேகமாகத் தோன்றுவேன் என அப்புவைச் சிருட்டித்தது’ எனும் சாந்தோக்கியத்திற்கு, பிரமம் அவ்வப்பொருள் அளவாக ஆதார அந்தர (புறமும் உள்ளும்) வத்துவாக , நிற்பேன் என மாயாகாரியமாகச் சிருட்டித்தது என்றே பொருள் கொள்ள வேண்டும்.
    14. வேதம் பிரமாணமே. வேதம் 108 என்று கூறப்பட்டாலும் பிரம்ம சூத்திரப் பாடியக்காரர்கள் தங்கள் கருத்துக்கு ஏற்ற சிலவற்றையே மேற்கோளாகக் காட்டுகின்றனர். அவையே உண்மையான உபநிடதங்கள் என்றும் பிற கற்பிதம் என்றும் கூறத் துணிகின்றனர். இக்கருத்து இந்திய தத்துவ ஞானத்தின் அடித்தளத்தையே தகர்க்கும். ஒன்றற்கொன்று முரணுவன போன்ற கருத்துடைய உபநிடதங்களும் உள. வேதம் பொய் சொல்லாது என்றால் இவற்றிடையே கருத்தொற்றுமை காணுவதே சித்தாந்தப் பயிற்சி. சைவம் அதனையே செய்தது.
    15. அனுமானம் முதலிய வழியளவைகளைக் காட்டிலும் ஆகமப்பிரமாணமே வலியுடையது. ஆகமப்பொருள்கள் தம்முள் முரணுவன போலத் தோன்றியவழி அவற்றுள் வன்மை மென்மை உணர்ந்து பொருள் கொள்ளுவதற்கு வைத்ததே வழியளவை.

  48. திரு முத்துகுமாரசாமி அய்யா அவர்களின் விளக்கங்கள் மிக அருமை.

  49. இப்படி த்ருஷ்டாந்தமாக சொல்வதால் தான் நமக்கு எதையுமே ஸ்திரமாக அறிவது கடினமாகிறது. திருஷ்டாந்தம் என்பது ஒரு விஷயத்தை எளிதில் புரிய வைக்கவும் பூர்வ பக்ஷி இப்படி இருக்கவே முடியாது என்று சொல்லும் பொழுது இல்லை அப்பா இப்படியும் இருக்கிறதே என்று காட்டுவதற்காகவும் தான் பெரியவர்கள் பயன் படுத்தினார்கள். நாம் த்ருதடாந்த்தையே இன்று சித்தாந்தமாக்கி விடுகிறோம்.

    இனி நீங்கள் கூறிய த்ருஷ்டாந்தங்களை வேறு த்ருஷ்டாந்தங்கள் கொண்டு மறுப்போம்

    //முதற்காரணத்தின் (material cause) குணமெல்லாம் அதனால் ஆகிய காரியங்கடகும் உளவாகும். (செம்மண்- பானை: 24காரட்டு தங்கம்- அதனால் ஆகிய நகை) //

    நீரில் ஆவி குனமிருக்கிறதா. சூடேற்றினால் ஆவியாவதேன்? ஆவியில் நீர் குணம் இருக்கிறதா ஒரு பாத்திரத்தில் பிடித்தால் மறுபடியும் நீராவதேன்?

    பேனாவில் மையேற்றி ஒரு குழந்தை எதோ கிருக்குகிறது அதை படித்த மற்ற ஒருவருக்கு இது தூண், இது முயல் போன்ற அறிவு வருகிறது கிறுக்கல் வருவதில்லை.

    ஜ்யோதிஷ்ட ஹோமம் செய்தால் ஒருவருக்கு பலனாக புகை கிடைப்பதில்லை சுவர்க்கம் கிடைக்கிறது “ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்ககாமோ யஜேத”

    //சித்து என்றும் ஒருபடித்தாக இருக்கும். பரிணமியாது//

    இப்படி என்றால் பல வேதா வாக்கியங்கள் பொய்க்கும். “ததேவ இதம் அக்ரே ஆசீத்”, “யதோ வா இமானி பூதானி ஜாயந்தே ஏன ஜாதானி ஜீவந்தி யத் பிரயந்தி அபிசம்விஷந்தி தத் விஜிஞாஸஸ்வா தத் பிரம்மேதி”

    பிரமம் வேறு மற்றவை வேறு என்றால் த்வைதம் சித்திக்கும். அடுத்து பல ஸ்ருதி த்ருஷ்டாந்தங்கள் கொண்டு த்வைதத்தை நாம் மறுபரிசீளிக்க வேண்டிவரும்.

    // சித்தாகிய பிரமத்தில் தோன்றிய பிரபஞ்சமும் சித்தாதல் வேண்டுமே யன்றிச் சடமாதல் பொருந்தாது.//

    இதை முன்பே மறுத்தாகிவிட்டது. பிராண வாயு ஹய்ட்ராஜன் சேர்ந்து நீர் உருவாகிறது. மேலும் இது பல ஸ்ருதி வாக்யங்களுக்கு விரோதமாகும்.

    கருப்பு பாக்கு, சிவப்பு வெற்றிலை, வெள்ளை சுண்ணாம்பு சேர்ந்து நாக்கு சிவப்பாவது போல. கறுப்பாடு வெள்ளை குட்டியை ஈன்றேடுப்பது போல. [உடனே நாம் ஜெநடிக்சுக்குள் புகாண்டாம்]

    கடலின் உப்பு நீர் உப்பில்லாத சுவையான மழை நீராவது போல

    சேற்றில் அழகிய தாமரை மலர்வதை போல

    பிரம்மம் வேறு பிரபஞ்சம் வேறு என்ற சுத்த த்வைத ஞானமே இதற்கு காரணம்

    “மத்தப் பரதரம் ந அன்யத் கிஞ்சித் அஸ்தி தண்ஞ்ஜய மயி சர்வம் இதம் ப்ரோதம் சூத்ரே மனிகானா இவ” பகவத் கீதை 7.7

    என்னை விட வேறாக பிரிந்து எதுவும் இல்லை. இருப்பது அனைத்தும் என்னிலே உள்ளன. நூலில் முத்துக்கள் கோற்றுள்ளது போல.

    பகவத் கீதையை வெகு சிலர் ஒத்துக் கொள்ளாத போதிலும். பரவலாக சுமார் 99.5 % வேதாந்திகள் ஒப்புக்கொள்கின்றனர்

    //
    பானை உடைந்தால் மண்ணாகும், பொன்னாலாகிய நகையை உருக்கினால் அதே மாற்றுள்ள பொன் கிடைக்கும். ஆனால் தயிராகப் பரிணமித்த காரியத்தின் குணமும் அதற்கு முதற்காரணமாகிய பாலின் குணமும் தம்முள் வேறுபட்டுள்ளனவே எனும் தடைதோன்றும். காரணத்தின் குணமே காரியத்திற்கும் உளவாக வேண்டும் என்பதன் கருத்து, காரணத்தின் ஒத்த குணங்களே காரியத்திலும் இருக்கும்; அதற்கு மாறுபட்ட எதிரிடையான குணங்கள் உளவாகா என்பதாம். எனவே, சித்தாகிய முதற்காரணத்தினின்றும் தோன்றிய காரியமாகிய பிரபஞ்சம் சித்தாகவே இருக்கவேண்டும். மாறாகச் சடத்தன்மை அதில் காணப்படுவதால் பிரபஞ்சத்திற்குச் சடமே முதற்காரணமாகும். சித்தாகிய பிரமம் முதற் காரணம் அன்று.
    //

    இதே இரண்டு த்ருஷ்டாந்தங்களை கொண்டு வேதாந்தத்தை முடித்துவிட இயலாது.

    இதை மறுக்க நீர் ஆவி திருஷ்டாந்தம் ஒன்றே போதுமானது.
    ஜடத்திற்கு ஈஸ்வரன் காரணமில்லை எனில் அவன் சர்வஞனாகமாட்டான். ஜடம் அவனிலும் வேறு எனில் அவன் சர்வ சக்தி படைத்தவனாகமாட்டான் (no omni potency)
    இப்படி வரும் இரண்டு தோஷங்களை உங்களால் தீர்க்கவே முடியாது.

    இப்படி இருவிடமாகவும் நிர்ணயித்த பின் மீண்டும் சத்திலிருந்து சத் மட்டுமே வரும் என்றால் நாம் ஒன்றும் சொல்வதிற்கில்லை.

    //
    குறைவிலா நிறைவு பிரமம். ஆகையால், தனக்கென இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துக்கொள்ள வேண்டிய தேவை அதற்கில்லை. வேறொரு பொருளின் பயனைக் கருதிய கருணையுடைய பிரமம் பிரபஞ்சத்தைப் படைத்திருக்க வேண்டும். பிஅபஞ்சப் படைப்பினால் பயன் பெறுவன சீவர்களாகிய உயிர்களே.
    //

    தன்னை விட வேறாக ஜீவர்களோ பிரபஞ்சமா இருந்தால் சர்வஞத்தமும் சர்வ ஷக்தித்வமும் மறுபடியும் அடிபடும். பிறருக்காக பிரம்மம் படைத்ததேனில் வைஷ்ம்ய தோஷம் வரும். எதற்காக இந்த ரீதியில் படைத்தது. எதற்காக தார தம்யத்துடன் படைத்தது என்பன போன்ற ஏக்க சக்க பிரச்சனைகள்

    //
    அறிவுளானென்னும் ஞன்னும் அறிவிலான் என்னும் அஞனுமாமிருவரும் உற்பத்தி யில்லாதவர்களாகிய ஈசனும் அநீசனுமாவர் (உயிர்கள்); உற்பத்தி இல்லாத ஒருத்தி (+மாயை) சீவர்களாகிய போக்தாக்களுக்குப் போகத்தின் பொருட்டுத் தனு கரண புவனங்களாக (உடல், கருவிகள், உலகங்கள்) ஆகக் கூடுகின்றனள்” எனும் பொருள்தரும் வசனம் சுவேதாச்வதரோ பநிஷத்தில் உள்ளது.( ஜ்ஞாஜ்ஞெளத்வா வஜா வீசநேசா| வஜாஹ்யேகா போக்தரு போகார்த்த யுக்தா| அநந்தச்சாத்மா விச்வரூபோஹ்யகர்த்தா”)
    //
    நமக்கு தேவை படும்போது நேர அர்த்தமும் தேவை இல்லாத போது குறிப்பர்தமும் கொள்வது தான் மரபு. அங்ஙனம் எனில் எதுவும் தேவை இல்லாத பிரம்மம் எதற்கு பிள்ளைகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முன் கேள்விக்கும் பதில் தர வேண்டியிருக்கும். இப்படி பார்த்தல் பிரம்மத்திர்க்கு உருவமில்லை என்று தேறுகிறது. உருவமில்லாத பிரம்மம் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து அவதாரம் செய்தால் மட்டும் தோஷமில்லை, மனித உருவெட்த்தாலே தோஷம் வந்து சேரும்.

    //
    இன்னும், “மாயையைப் பிரகிருதி யென்றறிக; மாயையை உடையவன் மகேசுரன்” என்றும் வேதம் பகுத்து ஓதுகின்றது. குயவனுக்கு மண் உடைமையானாற்போல மாயை என்னும் சடம் மகேசனுக்கு உடைமையாகும்.
    //
    மாயை ஜடமெனில் ஜடாத்தால் ஞானமுருவான ஜீவன் மறைப்படுகிரானா. காருண்யம் கொண்ட பிரம்மம் மாயையை ஏன் படைத்து வைசம்ய தோஷம் கொள்கிறார்.

    //
    இந்த மாயை ஈசுவரனின் விசிட்டமாகிய குணம் அன்று. மாயை, பிரபஞ்சமாகத் தோன்றி நின்று அழியும் விகாரம் உடையது. இதனை பிரமத்துக்கு விசிட்டமாகக் கொண்டால் விகாரப்படும் மாயையுடன் கூடி விசிட்டனாகிய பிரமமும் விகாரப்படும் எனும் தோஷம் தோன்றும். இது பிரமம் நிவிகாரி என்ற சுருதியுடன் மாறுபடும்.
    //

    மாயையே பிரபஞ்சத்தின் காரனமெனில் அதில் (ஜடத்தில்) சித்திலிருந்து தோன்றும் ஜீவர்கள் ஏன் சிக்கிக் கொள்கிறார்கள். சித் வேறு ஜடம் வேறு என்றால் இரண்டும் எப்படி ஒட்டிக்கொள்கிறது? மாயை பிரமத்திடமிருந்து வேறுபட்டது என்றால் பிரம்மத்தால் மாயையை கட்டுப்படுத்த முடியாது (சர்வஷக்தித்வம் இல்லாதால்) அதனால் ஜீவர்களால் என்றும் மாயையிலிருந்து விடுபட முடியாது.

    //
    வேதம் பிரமாணமே. வேதம் 108 என்று கூறப்பட்டாலும் பிரம்ம சூத்திரப் பாடியக்காரர்கள் தங்கள் கருத்துக்கு ஏற்ற சிலவற்றையே மேற்கோளாகக் காட்டுகின்றனர். அவையே உண்மையான உபநிடதங்கள் என்றும் பிற கற்பிதம் என்றும் கூறத் துணிகின்றனர்.
    //

    இந்த நூத்தி எட்டு கணக்கே பிற சேர்க்கை. முன்னாள் உள்ள எந்தா ஆசார்யர்களும் இதை ஒத்துக் கொள்வதில்லை. இதற்க்கு சிஷ்டாசார பலம் இல்லை. இந்த நூத்தி எட்டு என்பதே வேதத்தில் இல்லாததை எப்படியாவது நிறுவ வேண்டும் என்று சிலர் எண்ணியதால் வந்த எண்ணிக்கை. இதை படிப்பதில் தப்பில்லை.

    //
    ஒன்றற்கொன்று முரணுவன போன்ற கருத்துடைய உபநிடதங்களும் உள. வேதம் பொய் சொல்லாது என்றால் இவற்றிடையே கருத்தொற்றுமை காணுவதே சித்தாந்தப் பயிற்சி. சைவம் அதனையே செய்தது.
    //

    இதை தான் எல்லா வேதாந்த ஆசார்யர்களும் மத ஸ்தாபகர்களும் சொல்கிறார்கள்.

    //
    15. அனுமானம் முதலிய வழியளவைகளைக் காட்டிலும் ஆகமப்பிரமாணமே வலியுடையது. ஆகமப்பொருள்கள் தம்முள் முரணுவன போலத் தோன்றியவழி அவற்றுள் வன்மை மென்மை உணர்ந்து பொருள் கொள்ளுவதற்கு வைத்ததே வழியளவை
    //
    ஆகமம் என்று நீங்கள் எதை முன் வைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இதை ஒத்துக் கொள்பவர்களின் குழுவிளியே இது செல்லும்.
    வேதாந்தம் அனுமானத்தால் நிலைநாட்டப் படும் மதம் அல்ல. நியாய மதமே அங்ஙனம். வேதாந்தத்திற்கு ஸ்ருதி வாக்கியம் மட்டுமே பிரமாணம்.

    நையாயிகன் இந்த உலகில் காணப்படும் பொருளெல்லாம் படைக்கப்பட்டது அதனால் படைத்த கர்த்த வேண்டும் என்று அனுமாநித்தால், வேதாந்தி வந்து கேட்பான் – “அப்பா நீ சொல்வதெல்லாம் சரி நீ சொல்வதை கொண்டு உலகத்தை படைத்தது ஒரு பிரம்மமா அல்லா பலவா என்று தேராதே, நாங்கள் ஸ்ருதி வாக்யமான ஜன்மாத்யஸ்ய என்பதை கொண்டு பிரம்மம் ஒன்று என்கிறோம்”

    ஆதாலால் வேதாந்தம் அனுமாநிக்கிறது என்பது தவறான புரிதலாகும்.

  50. /வேதாந்தத்திற்கு ஸ்ருதி வாக்கியம் மட்டுமே பிரமாணம்./
    வேதமும் ஆகமமும் இறைவனால் மொழியப்பட்டது. இவைகளுக்கு திருமுறைகளும் சித்தாந்த சத்திரங்களும் தான் நாங்கள் பிரமாணமாக கருதுகின்றோம்.
    வேதத்தில் உள்ளவற்றை திருமுறைகள் மூலமே அறிந்து கொள்கின்றோம்.

    பாரத கண்டம் முழுவதற்கும் தென்னாடு கொடுத்த கோடை “சைவசித்தாந்தம்” .


    /எதற்காக இந்த ரீதியில் படைத்தது. எதற்காக தார தம்யத்துடன் படைத்தது என்பன போன்ற ஏக்க சக்க பிரச்சனைகள்/
    உயிர்களின் ஆணவ மலத்தை அடக்கி (முழுவதும் நீக்க முடியாது) இறைவனின் திருவடியில் சச்சிதானந்தத்தை அனுபவிற்பதர்க்கு தான்.
    இதில் ஒன்றும் பிரச்சனைகள் இல்லை.

  51. /நீரில் ஆவி குணமிருக்கிறதா. சூடேற்றினால் ஆவியாவதேன்? ஆவியில் நீர் குணம் இருக்கிறதா ஒரு பாத்திரத்தில் பிடித்தால் மறுபடியும் நீராவதேன்/

    முதற்காரணத்தினின்றும் காரியம் வேறன்று. முதற்காரணத்தில் காரியம் சூக்கும நிலையில் உள்ளது. நிமித்தகாரணமும் துணைக்காரணமும் சூக்கும நிலையில் உள்ள காரியத்தைச்த் தூலநிலக்குக் கொண்டு வருகின்றன. நீராவி சுக்கும நிலையில் உள்ள நீர்… தண்ணீரின் நிலையான குணம் தட்பமும் சுவையும். அதனால் தான் நீரைத் தண்ணீர் என்கிறோம். தண்ணிரைச் சுடுவதனால் அதற்கு வெப்பம் எனும் மாறுபட்ட குணம் உபாதையாகின்றது. அது செயற்கை. அந்தச் செய்ற்கை நீங்கினால், அதாவது நீராவி குளிர்ந்தால் தண்ணீராகின்றது. நீராவியில் உள்ள சூடு அதன் குணம் அன்று. நீராவியைத் தவிர வேறு எந்த திரவியங்களின் ஆவியும் தண்ணீர் ஆகாது. தத்துவத்தின்படி ஆவியும் காரியமே. வைசேடிகர் நீரணுக்களின் காரியம் தண்ணீர் என்பர். வைதிகர் ரசம் என்னும் தன்மாத்திரையின் காரியம் தண்ணீர் என்பர். தன்மாத்திரைகள் எப்படி பூதமாகின்றன, அவற்றின் குணங்கள் பற்றிப் பஞ்சீகரணம் என பிரம்மசூத்திரப் பாடியங்கள் பேசும். நீங்கள் எந்தப் பாடியத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும் அது பொதுவான செய்தியாகலின் எப்பாடியத்தாலும்அறியலாகும்.

  52. /பேனாவில் மையேற்றி ஒரு குழந்தை எதோ கிருக்குகிறது அதை படித்த மற்ற ஒருவருக்கு இது தூண், இது முயல் போன்ற அறிவு வருகிறது கிறுக்கல் வருவதில்லை.

    ஜ்யோதிஷ்ட ஹோமம் செய்தால் ஒருவருக்கு பலனாக புகை கிடைப்பதில்லை சுவர்க்கம் கிடைக்கிறது “ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்ககாமோ யஜே/இவற்றிற்கும் முத்ற்காரண காரியத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

  53. //சித்து என்றும் ஒருபடித்தாக இருக்கும். பரிணமியாது//

    இப்படி என்றால் பல வேதா வாக்கியங்கள் பொய்க்கும். “ததேவ இதம் அக்ரே ஆசீத்”, “யதோ வா இமானி பூதானி ஜாயந்தே ஏன ஜாதானி ஜீவந்தி யத் பிரயந்தி அபிசம்விஷந்தி தத் விஜிஞாசித்தாகிய முதற்காரணத்தினின்றும் தோன்றிய காரியமாகிய பிரபஞ்சம் சித்தாகவே இருக்கவேண்டும். மாறாகச் சடத்தன்மை அதில் காணப்படுவதால் பிரபஞ்சத்திற்குச் சடமே முதற்காரணமாகும். சித்தாகிய பிரமம் முதற் காரணம் அன்று. (“காரணாபிந்ந்ரூபேண கார்யம் காரணமேவ ஹி|தத்ரூபேண ஸதாஸத்யம் பேதே நோக்திர் ம்ருஷகாலு” பஞ்ச்ப்ரஹ்மோ பநிஷதம். பொருள்: காரணம் காரியத்தினின்றும் வேறன்று; காரியம் அதன் காரன ரூபத்தில் எஞ்ஞான்றும் நிலைபேறுறுகின்றது. இதற்கு வேறு கூறுதல் தவறே.ஸஸ்வா தத் பிரம்மேதி”//. இதுவும் வேத வாக்கியமே.

  54. /இனி நீங்கள் கூறிய த்ருஷ்டாந்தங்களை வேறு த்ருஷ்டாந்தங்கள் கொண்டு மறுப்போம்/ என்னால் எடுத்துக் காட்டப்பட்ட ‘திருஷ்டாந்தங்கள்’ உபநிடதங்களில் காணப்படுவனவே. இந்தியத் தத்துவஞானத்தில் எடுத்துக் காட்டப்பட்டனவே.

  55. /இதை மறுக்க நீர் ஆவி திருஷ்டாந்தம் ஒன்றே போதுமானது.
    ஜடத்திற்கு ஈஸ்வரன் காரணமில்லை எனில் அவன் சர்வஞனாகமாட்டான். ஜடம் அவனிலும் வேறு எனில் அவன் சர்வ சக்தி படைத்தவனாகமாட்டான் (no omni potency)/
    பிரமம் ஈசுவரன். அவன் உடையான். பிரபஞ்சமாகிய சடத்திற்கு மாயை முதற்காரணம். அதாவ்ஃஅது மாயை அவனது உடைமை. உடைமையை உடையானுக்கே முதன்மை. மாயையை யாகிய உடைமை சித்தாகிய பிரமத்தின் ஆதாரத்தில் உள்ளது. பிரமம் சங்கற்பித்தாலே சடமாகிய உபாதானத்திலிருந்து பிரபஞ்சம் பரிணமிக்கும்.. இதனால் பிரம்மத்தின் ஆற்றலுடைமை என்னும் குணத்திற்கு எவ்விதக் குறையும் இல்லை. பிரமமாகிய சித்துப் பரிணமித்தது என்று கூறினால்தான் சித்து விகாரப்பட்டது என்ற குற்றம் ஏற்படும்.

  56. /மாயை ஜடமெனில் ஜடத்தால் ஞானமுருவான ஜீவன் மறைப்படுகிரானா. காருண்யம் கொண்ட பிரம்மம் மாயையை ஏன் படைத்து வைசம்ய தோஷம் கொள்கிறா/ பிரமமாகிய இறைவன் சடமாகிய மாயியும் படைக்கவில்லை. சித்தாகிய சீவனையும் படைக்கவில்லை.. இந்த வினாவுக்கு நான் மறுமொழியிடுமுன் , பிரமம் ஏன் எதற்காக பிரபஞ்சமாக்க் காரியப்பட வேண்டும்? /”எந்த ஒரு உருவாக்கப்பட்ட பொருளும் அதன் அதன் மூலப்பொருள் அதன் உள்ளேயே இருந்தாலும் அந்த மூலப்பொருள் அதன் தன்மையை இழந்துவிடுகிறது அல்லது உருவாக்கப்பட்ட பொருள் மூலப்பொருளின் தன்மையை கொள்வதில்லை/ இந்தத் தொடர் சுவாமிகளின் கட்டுரையிலிருந்து விவாதத்திற்கு எடுக்கப்பட்து. இதனைத் தொடர்ந்தே விவாதங்கள் எழுந்துள்ளன. மூலப்பொருள் எது? சித்தாகிய பிரமமா? அது ஏன் பிரபஞ்சமாகிய சடமாகித் தன் நிலையை இழக்க வேண்டும்? இவ்வாறு பிரபஞ்சமாகிய சடமாக உருமாற்றம் எய்தியது தன் பொருட்டா? பின் எதற்காக?இதற்கு விளக்கம் பெற்றாலே உங்கள் வினாவுக்கு மறுமொழியிட வியலும்.

  57. /இப்படி என்றால் பல வேதா வாக்கியங்கள் பொய்க்கும். “ததேவ இதம் அக்ரே ஆசீத்”, “யதோ வா இமானி பூதானி ஜாயந்தே ஏன ஜாதானி ஜீவந்தி யத் பிரயந்தி அபிசம்விஷந்தி தத் விஜிஞாஸஸ்வா தத் பிரம்மேதி”/
    பொய்க்கும் என்பது எனக்கு உடன்பாடன்று. முரண்படும். முரணப்டும் என்பதே உண்மை. முரண்படும் உபநிடத வாக்கியங்களை மேற்கோளாகக் கொண்டே பாடியக்காரர்கள் பாடியம் செய்துள்ளனர். இந்தவடமொழி வாக்கியத்ஹின் தமிழத் தந்தாலே என்னால் இதற்கு மறுமொழி தரவியலும்.

  58. /நமக்கு தேவை படும்போது நேர அர்த்தமும் தேவை இல்லாத போது குறிப்பர்தமும் கொள்வது தான் மரபு. அங்ஙனம் எனில் எதுவும் தேவை இல்லாத பிரம்மம் எதற்கு பிள்ளைகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முன் கேள்விக்கும் பதில் தர வேண்டியிருக்கும். இப்படி பார்த்தல் பிரம்மத்திர்க்கு உருவமில்லை என்று தேறுகிறது. உருவமில்லாத பிரம்மம் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து அவதாரம் செய்தால் மட்டும் தோஷமில்லை, மனித உருவெட்த்தாலே தோஷம் வந்து சேரும்./இதே கேள்வியைத்தான் நானும் கேட்கின்றேன். எதுவும் தேவையற்ற ஞானசொரூபமான பிரம்மம் ஏன் பிரபஞ்ச ரூபமாக மலினப்பட வேண்டும்? அதற்குத் தேவையென்ன?

    //

  59. /மாயை ஜடமெனில் ஜடாத்தால் ஞானமுருவான ஜீவன் மறைப்படுகிரானா. காருண்யம் கொண்ட பிரம்மம் மாயையை ஏன் படைத்து வைசம்ய தோஷம் கொள்கிறார்./ஜீவன் சித்து. மாயை ஜடம். ஜடம் சித்தைப் படைக்காது வைசம்ய தோஷம் என்றால் என்ன? மாயை பிரமமாகிய் ஈசுவரனின் ஐசுவரியம்; உடைமை. பிரமத்தின் விசிட்டம் என்றும் கூறுவர். மாயை சீவனுக்கு அறிவூட்டவே அளிக்கப்படுகின்றது.சப்த ச்ப்ரிச ரூப ரச கந்த உணர்வுகளும் இதன் தொடர்பாக விளையும் மன உணர்வுகளும் மாயை சம்பந்தத்தாலே யே தோன்றுகின்றன. உடலை ‘மாயா ய்ந்திர தனு விளக்கு’ என்பர். இந்த மாயா காரியமான உடலும் கருவிகளும் இல்லாத சீவனின் அறிவு இருட்டில் உள்ள கண்போலத்தானிருக்கும். சீவனின் அறிபு கருவிகளோடு கூடினால்தான் வெளிப்படும். இது அனுபவமாகவும் அறியலாம்.

  60. /மாயையே பிரபஞ்சத்தின் காரனமெனில் அதில் (ஜடத்தில்) சித்திலிருந்து தோன்றும் ஜீவர்கள் ஏன் சிக்கிக் கொள்கிறார்கள். சித் வேறு ஜடம் வேறு என்றால் இரண்டும் எப்படி ஒட்டிக்கொள்கிறது? மாயை பிரமத்திடமிருந்து வேறுபட்டது என்றால் பிரம்மத்தால் மாயையை கட்டுப்படுத்த முடியாது (சர்வஷக்தித்வம் இல்லாதால்) அதனால் ஜீவர்களால் என்றும் மாயையிலிருந்து விடுபட முடியாது/சீவனுக்கு மாயா காரியமாகிய தனுகரணபுவன போகங்களைக் கருணையினால் கொடுத்து அறிவளித்துத் தன்னையும் காட்டி பரஞானம் ஊட்டி மாயையிலிருந்தும் அஞ்ஞானத்திலிருந்தும் விடுவிப்பவன் இறைவனே. மாயை பிரமத்திலிருந்து வேறுபட்டதன்று. பிரமத்தின் உடைமை. பிரம ஆதரத்திலேயே உள்ளது. அது பிரமத்தின் பரிக்கிரக சக்தி. அதாவது வேண்டும்போது பயன்படுத்திக்கொள்ளும் சகதி. சிவத்தின் தாதான்மிய சம்பந்த முடிய சிவசக்தியினால் தொழிற்படுத்தப்படுகின்றது. இக்கருத்தைப் பல மறுமொழிகளிலும் வலியுறுத்தியுள்ளேன். அஞ்ஞானம் ஆன்மாவிடத்திலும் மாயை என்னும் பரிக்கிரக ஜடசக்தி பிரமத்திடமும் உள்ளன. இதனால் பிரமத்தின் ஆற்றலுடைமைக்கு எக்குறைவுமில்லை.

  61. /இந்த நூத்தி எட்டு கணக்கே பிற சேர்க்கை. முன்னாள் உள்ள எந்தா ஆசார்யர்களும் இதை ஒத்துக் கொள்வதில்லை. இதற்க்கு சிஷ்டாசார பலம் இல்லை. இந்த நூத்தி எட்டு என்பதே வேதத்தில் இல்லாததை எப்படியாவது நிறுவ வேண்டும் என்று சிலர் எண்ணியதால் வந்த எண்ணிக்கை. இதை படிப்பதில் தப்பில்லை./ தாங்கள் மேற்கொண்டு வலியுறுத்த விரும்புக் கோட்பாடுகளுக்கு எந்த உபநிடதங்கள் இடையூறாக இருக்கின்றனவோ அவற்றைப் புறந்தள்ளுவதும் அவை வேதமல்ல என்று கூறுவதும் அபிமானத்தால் விளைவனவே. பாடியங்கள் செய்த ஆசாரியர்களும் இந்த அபிமானத்தால் பாதிக்கப்பட்டவர்களே. சுவேசுவதரம், கைவல்யம், காலாக்நி ருத்திரம், அதர்வசிரசு, அதர்வசிகை யெனுமைந்தும் வைதிக சைவத்தை இனிது விளக்கும்.ஆதலின் இவை பஞ்சருத்திரோபநிடதம் எனப்படும். ஆதிசங்கரர் ஈசாவசியம், கேனம், கடவல்லி , பிரசினம், முண்டகம், மாண்டூக்கியம், தைத்திர்ரியம் சாந்தோக்கியம், பிரகதாரண்யகம் என்னும் பத்து உபநிடதங்களுக்கு ஏஎகான்மவாத பட்சமாக பாடியம் வரைந்தார். இவைதசோபநிடதம் என்பர். விசிட்டாத்துவித வைஷ்ணவபாடியக்காரரும் அப்பத்து உபந்டதங்களையே மேற்கோள்காட்டி விசிட்டாத்துவைதத்தை போதித்துள்ளார். ஸ்ரீகண்டப்பாடியப் பொருளை விரித்து இப்பத்து உபநிடதங்களைக் கொண்டே ஸ்ரீமத் அப்பைய தீக்ஷிதேந்திரர் சிவார்க்கமணி தீபிகை எனவொரு வியாக்கியானம் செய்தார். இத்திறவுரகளினால் சிலர் இப்பத்து உபநிடதமே முக்கியம் என்பர். சைவர் 108ம் பிரமாணமென்பர். இந்தப் பாடியக்காரர்களிம் உரைவேற்றுமையால் இந்தியத் தத்துவஞானம் அபேதம் பேதா பேதம், பேதம் என வேறுபட்டது. அடுத்தவர் பாடியம் பிழைபட்டது எனவும் பேசப்பட்டது.

  62. /வேதாந்தத்திற்கு ஸ்ருதி வாக்கியம் மட்டுமே பிரமாணம்/ வேதாஃந்தம் என்று நீங்கள் எதைச் சொல்லுகின்றீர்கள் என்று தெரியவில்லை. ஏகான்மவாதம் அல்லது மாயாவாதத்தைத்தான் நீங்கள் வேதாந்தம் எனக்கருதிகின்றீகள் போலுளது. நான்வேதாந்தம் என்று குறிப்பிடுவது வேதத்தின் ஞானகாண்டமாகிய உபநிடதங்களை. அவையே ஆகமப் பிரமாணம், அவை முதல்வனாகிய சிவனின் வாக்காகக் கருதப்படுவதால்

  63. //
    மாயை பிரமத்திலிருந்து வேறுபட்டதன்று. பிரமத்தின் உடைமை. பிரம ஆதரத்திலேயே உள்ளது. அது பிரமத்தின் பரிக்கிரக சக்தி.
    //

    மாயை என்பது மிக கொடூரமானது. அது பிரம்மத்தின் சொத்து அதை பிரம்மம் விரிக்கிறது என்றால் பிரம்மத்திர்க்கு வைசம்ய தோஷம் வருமே? ஒருவனை அடித்துவிட்டு அவன் பால் கருணை கொண்டு மாயையை விளக்குவான்.

    மேலும் கேள்விகள் – மாயை என்பது ஒன்றா அல்லாது பலவா? ஒவ்வொரு ஜீவனுக்கும் மாயை வேறுபட்டு வேலை செய்கிறதா இல்லை ஒரே மாதிரியா?

    மாயை ஒன்றே என்றால் ஒரு ஜீவனுக்க்கு கருணையின் பால் மாயை விளக்கப்படுமாகில் அனைத்து ஜீவர்களுக்கும் விளக்கப்பட்டு விடுமே? இல்லை ஒவ்வொரு ஜீவனுக்கும் தனி தனி எனில் அது ஜீவனின் சொத்தா பிரம்மத்தின் சொத்தா? ஒவ்வொரு ஜீவனுக்கும் தனி தனி எனில் அதை பிரமமே பிரித்து தந்ததேனில் வைசம்ய தோஷம் வருமே?

    //
    மாயை ஜடமெனில் ஜடாத்தால் ஞானமுருவான ஜீவன் மறைப்படுகிரானா. காருண்யம் கொண்ட பிரம்மம் மாயையை ஏன் படைத்து வைசம்ய தோஷம் கொள்கிறார்./ஜீவன் சித்து. மாயை ஜடம். ஜடம் சித்தைப் படைக்காது
    //

    மாயை ஜீவனை படைக்கிறது என்று நான் சொல்லவில்லை, மறைக்கிறது என்று சொன்னேன் (அதுவும் நீங்கள் சொன்னதை வைத்து). ஜீவாத்மா என்பது ஞான ஸ்வரூபி, மாயை என்பது ஜடம். அப்படிப்பட்ட ஜடம் ஜீவாத்மா ஞானத்தை மறைக்குமா? ஜடம் (ஞானம் இல்லாமை) ஞானத்தை மறைக்குமா என்பதே கேள்வி. இதற்கு மறுபடியும் மாயை பரமனின் சொத்து என்றால் அதை ஏற்க முடியாது. ஏன் என்பது தாங்கள் அறிவீர்கள் ஏன நினைக்கிறேன். ஒரு ஜடம் இருந்தால் அதை பிரயோகிப்பவன் வேண்டும், பிரயோகிக்க சக்தி வேண்டும், தானே அது செயல்படாது. மாயை சொத்தாக இருந்தாலும் அதை பயன்படுத்துபவரின் சக்தியாலேயே அது இயக்கம் கொள்கிறது. எனவே சொத்து என்று கொள்வது வ்யர்தமே ஆகும். இங்கே இப்பொழுது சொன்ன விஷயத்தை நன்கு ஆலோசித்தால் அதன் சூட்சுமம் தெரியவரும். வைசம்ய என்றால் விஷமத்தன்மை என்று பொருள். இதை தமிழில் சரியாக மொழி பெயர்க்க இயலாது, எனக்கு நிச்சயம் வராது.

    //
    1. /நமக்கு தேவை படும்போது நேர அர்த்தமும் தேவை இல்லாத போது குறிப்பர்தமும் கொள்வது தான் மரபு. அங்ஙனம் எனில் எதுவும் தேவை இல்லாத பிரம்மம் எதற்கு பிள்ளைகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முன் கேள்விக்கும் பதில் தர வேண்டியிருக்கும். இப்படி பார்த்தல் பிரம்மத்திர்க்கு உருவமில்லை என்று தேறுகிறது. உருவமில்லாத பிரம்மம் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து அவதாரம் செய்தால் மட்டும் தோஷமில்லை, மனித உருவெட்த்தாலே தோஷம் வந்து சேரும்./இதே கேள்வியைத்தான் நானும் கேட்கின்றேன். எதுவும் தேவையற்ற ஞானசொரூபமான பிரம்மம் ஏன் பிரபஞ்ச ரூபமாக மலினப்பட வேண்டும்? அதற்குத் தேவையென்ன?
    //
    ஞான ஸ்வரூபம் தான் என்று நான் சொல்லவில்லையே? நான் கேட்ட கேள்வியை நீங்கள் சரியாக பார்க்கவில்லை என்பது தேறுகிறது. இந்த மலினப்படுவது என்பது உங்களது தரப்பு கொள்கை உண்மையில் நீங்கள் எடுக்கும் முக்கிய கொள்கை. இந்த கொள்கைக்கு வேதாந்த ஆகம சான்று ஏதும் இல்லை, ஏன் சில முன்னோர்கள் எடுத்தார்கள் என்று நான் சொன்னால் பிறகு கஷ்டம் சம்பவிக்கும். மலினப்படும் என்பது எமது கொள்கையல்ல, அதனால் இந்த பிரச்சினைக்கே இடமில்லை. “எதோவா இமானி…” என்பது பிரபலமான தைத்ரிய உபநிஷத் வாக்கியம். அதை தமிழ்படுத்துமலவுக்கு எனக்கு தைரியம் இல்லை. நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். “ததேவ சௌம்ய இதமக்ரே அசீத்” என்பது மிக பிரபலமான சாந்தோக்ய ஸ்லோகம்.

    //
    /இதை மறுக்க நீர் ஆவி திருஷ்டாந்தம் ஒன்றே போதுமானது.
    ஜடத்திற்கு ஈஸ்வரன் காரணமில்லை எனில் அவன் சர்வஞனாகமாட்டான். ஜடம் அவனிலும் வேறு எனில் அவன் சர்வ சக்தி படைத்தவனாகமாட்டான் (no omni potency)/
    பிரமம் ஈசுவரன். அவன் உடையான். பிரபஞ்சமாகிய சடத்திற்கு மாயை முதற்காரணம். அதாவ்ஃஅது மாயை அவனது உடைமை. உடைமையை உடையானுக்கே முதன்மை.
    //

    எனக்கு உடமையாக பத்து மோதிரம் இருக்கலாம் அதை எல்லாம் நான் கொஞ்சம் குண்டானால் அணியமுடியாது (இது திருஷ்டாந்தம் உடனே பிரம்மத்திர்க்கு விகாரமில்லை அதனால் அந்த தோஷம் இல்லை என்று சொல்ல வேண்டாம்). சொத்து என்று இருந்தாலும் அது நமது இசைவுக்கு வராது. எனக்கு நூறு மாடு இருந்தாலும் அவை எல்லாம் நான் சொல்லும்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏன் ஒரு பேனா கூட என்னை விட வேறாக இருந்தால் நான் நினைத்தபடிஎல்லாம் எழுதாது, அதில் மை இல்லாமல் போகலாம், மொக்கு உடையலாம். இப்படி பல பிரச்சனைகள். இதனால் தான் சர்வ ஷக்தித்வம், சர்வஞத்வம் அடிபடுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள்

    //நூத்தி எட்டு உபநிஷத்//

    சங்கர பகவத் பாதாளுக்கு முன்பே பலர் வேதாந்தம் வாசித்து இருக்கிறார்கள். வ்ருத்தி கிரந்தங்கள், விளக்க உரைகள் எழுதி உள்ளார்கள்.

    பாதாராயனரின் சிஷ்யர் செய்த போதாயன வ்ருத்தி க்ரந்தம், தங்கர், திராமிடர் அப்புறம் பல பல பூர்வாசார்யர்கள் உள்ளனர் அவர்கள் அனைவருமே இந்த பத்து உபநிஷத்துகளையே பிரதானமாக எடுத்துள்ளனர்.

    நூத்தி எட்டாக விரித்தது அவரவர் சௌகர்யத்திர்காகவே, வேறு வழி இல்லாததால் என்று நன்கறிந்த சான்றோர்கள் சொல்கிறார்கள். இந்த பத்திலுமே சாந்தோக்யமும், ப்ரிஹதாரன்யகமும் தான் முதன்மை வாய்ந்தன.

    இந்த நூத்தி எட்டி விட்டால் நல்லது,. இது இந்த விவாதத்தின் முக்கிய அம்சமல்ல.

  64. இங்கே பெரியவர்கள் மிகப்பெரும் ஞான விளக்க விவாதத்தில் ஈடுபட்டிருப்பதை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில், என் மனதில் படுவதை இங்கே கூற முற்படுகிறேன். தவறாயிருப்பின் பெரியவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்! எனக்கென்னவோ இங்கு வெவ்வேறு விதங்களில் அர்த்தங்களைக் கூறி செய்யும் வாதங்கள் அனைத்துமே ஒன்று தான் என்று தோன்றுகின்றது. இந்த உலக வாழ்வே ஒரு மாயை தான் என்று கொண்டால், செயல்களே அற்றுப் போய் விடும். செயல்களே அற்றுப் போதல் என்பதை தான் ஞானிகள் முற்றும் துரத்தல் என்று கூறுகிறார்கள். ஆயினும் உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே படைக்கப்படுகிறது. அது மாயையாகவே இருந்தாலும் கூட ஒரு குழந்தை பசியால் அழுகிறது என்றால் அதன் பசியை அந்தக் கணத்தில் போக்கவே மனம் பதைக்குமே தவிர “எல்லாம் மாயை. குழந்தை அழுகிறது என்பது வெறும் இறைவன் நடத்தும் கூத்து”, என்று அப்படியே விட்டு விட முடியாது. அப்படி விட்டு விடவும் கூடாது. ஏன் என்றால் மாயை எனப்படும் உலகையும், உலக வாழ்வையும் படைத்த இறைவன் அதை வாழத் தான் சொல்லியிருக்கிறார். கீதை சொல்வது அதைத்தான். மேலும் கீதையில் ஒருவன் சம்சார வாழ்விலிருந்து கொண்டே முக்திக்குச் செல்ல முடியும் என்றும் இறைவன் வலியுறுத்துகிறார்.

    மேலும் ஆழமாக உட்புகுந்தால் பிள்ளைப் பேறு இல்லாமல் இறந்தவனுக்கு திதி கொடுக்க யாரும் அற்றுப் போனால் அவனுக்கு மேலுலகில் இடம் கிடைக்காது என்றும் ஹிந்து மதத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. மகாபாரதத்தில் பாண்டு மகன்களைப் பெறுவதும் அதன் பொருட்டே! எனவே இறைவன் மனிதனைப் படைத்தது சம்சாரம் நடத்த வேண்டும் என்ற விஷயத்திற்காகவே தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். சரி சம்சாரம் நடத்துவதற்கு பொருள் வேண்டுமே. அதற்கு தொழில் வேண்டுமே! என்ன தொழில் செய்வது? இதை ஒருவன் முடிவு செய்கிற போது தான் அவனின் வர்ணம் நிச்சயிக்கப்படுகிறது. அவன் மனம் எதனை விரும்பி தொழிலாக ஏற்றுக் கொள்கிறதோ அதை அவன் தேர்ந்தெடுக்கிறான். அந்தத் தொழிலில் அவன் ஸ்ரத்தையுடன் பலனை எதிர்பார்க்காமல் ஈடுபட்டால் அவனுக்கு முக்தி சித்திக்கும் என்கிறார் பகவான்.

    இது போதுமே! அத்வைதமும், த்வைதமும், விஷிச்டாத்வைதமும் ஒரே விஷயத்தையே வேறுவேறு கோணங்களில் பார்க்கின்றன என்று தான் நான் கருதுகிறேன். ஹிந்து மதத்தில் காணப்படும் பற்பல மறைகளும், உபநிடதங்களும், அதன் விளக்கங்களும் இந்த உலகைப் பற்றியும், சிருஷ்டியைப் பற்றியும், மனித வாழ்வின் அநித்யத்தைப் பற்றியும் எவ்வளவு தான் கூறியிருந்தாலும், மனிதன் ஒரு அர்த்தபூர்வமான வாழ்க்கை வாழ பகவத் கீதை ஒன்று போதும் என்று தான் முடிவுக்கு வர வேண்டியுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு உபநிடதமும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுக்கிறது. அவை சில சமயங்களில் அனுமானதிற்கும் இடம் அளிக்கின்றன. At the end of the day, நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதையும் எதைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் நாம் தான் முடிவு செய்ய வேண்டியதாய் உள்ளது. இதில் ஒன்று சரி என்றும், பின்னது தவறென்றும் யாராவது சொல்வாராகில் (யாரும் இங்கே அப்படி இதுவரை சொல்லவில்லை என்றாலும் ஒரு flow வைக் கருதி சேர்த்துக் கொள்கிறேன்) அதை ஏற்றுக்கொள்வதற்கு இல்லை. நமக்கு எந்த விளக்கம் திருப்தி அளிக்கிறதோ அதை நாம் பின்பற்றி செல்லலாம். இதற்கு ஹிந்து மதத்திலே நிச்சயம் சுதந்திரம் உண்டு என்று பெரியவர்கள் கூறக் கேள்வி.

  65. //
    வேதாந்தத்திற்கு ஸ்ருதி வாக்கியம் மட்டுமே பிரமாணம்/ வேதாஃந்தம் என்று நீங்கள் எதைச் சொல்லுகின்றீர்கள் என்று தெரியவில்லை. ஏகான்மவாதம் அல்லது மாயாவாதத்தைத்தான் நீங்கள் வேதாந்தம் எனக்கருதிகின்றீகள் போலுளது. நான்வேதாந்தம் என்று குறிப்பிடுவது வேதத்தின் ஞானகாண்டமாகிய உபநிடதங்களை. அவையே ஆகமப் பிரமாணம், அவை முதல்வனாகிய சிவனின் வாக்காகக் கருதப்படுவதால்
    //

    ஸ்ருதி என்றால் என்ன ஏகாந்மாவாதமா அல்லது மாயாவாதமா? நான் அப்படியா சொன்னேன். இவை இரண்டும் தர்சன கர்த்தாக்களின் நிலைப்பாடு என்று உங்களுக்கு தெரியும். எனக்கும் தெரியும் என்றும் உங்களுக்கு தெரியும். பிறது இதை நீங்கள் எழுத காரணாம், உங்கள் கருத்தை ‘அவை முதல்வனாகிய சிவனின் வாக்காகக் கருதப்படுவதால்” கூற நீங்கள் தேடிபிடித்து பதில் தருவது அழகாக இருக்கிறது.

    நீங்கள் இப்பொழுதான் விஷயத்துக்கே வருகிறீர்கள். இதற்காகத்தானே திடீர் என்று சம்பந்தமில்லாமல் நூத்தி எட்டு விவாதமும் தொடங்கப்பட்டது என்பது தெளிவு.

  66. அய்யா

    //
    /இந்த ஜகத் என்பது ஈஸ்வரனின் விரிவாக்கமே அன்றி உருவாக்கம் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்./ ஈசுவரனின் விரிவாக்கமே இந்த ஜகத் என்றால், காரியத்தில் காணப்படும் அனைத்துக் கேடுகளும் குறைகளும் நலிவுகளும் ஈசுவரனிடத்திலிருந்தே, அந்த மையத்திலிருந்தே விரிவடைந்தனா என்ற குற்றம் வருமே. ஈசுவரனின் பரிணாமமே இந்த ஜகத்தா. சித்து பரிணமிப்பது உண்டா? விரிவும் சுருக்கமுமாகிய நிலைமாற்றம் சடத்துக்கே யன்றி சித்துக்கில்ல. சித்து என்றும் நிலைமாறாது என்றும் கூறக் கேட்டுள்ளேன். அடுத்து வருக் கட்டுரையில் இந்த ஐயங்களுக்கு விளக்கம் கிடைக்கும் என நம்புகின்றேன்.
    //

    ஒரு விதை விடையாக ஆகாச சம்பந்தத்துடன் ஆகாசத்திலே இறுகிறது. அவ்விதை ஆகாசத்தில் உள்ள பூமியில் நடப்படுகிறது (இப்பொழுதும் ஆகாச சம்பந்தம்). அவ்விதை விரிவடைகிறது, பெரிய மரமாக ஆகாச சம்பந்தத்துடன் வளர்கிறது, பின்னர் வயதாகி ஆகாசத்திலே சுருங்கி மடிகிறது, இப்படி நீங்கள் கூறும் விகாரம் ஆகச சம்பந்தம் உள்ள பொருள்களுக்கே. ஆகாசம் பரினாமி நித்யம். பூமி கூட பரினாமி நித்யம், இந்த பரினாமி நித்யத்திர்க்குள் எல்லாம் பரிணமிக்கும்.

    இந்த விதை பரிணமித்தால் அந்த விடையை கொண்ட ஆகாசம் மாறுதல் (விகாரம்) அடைந்ததா? இல்லையே. இந்த விடயினால் புவி மாறுதல் (விகாரம்) அடைந்ததா
    இந்த விதை இறந்தால் ஆகாசம் இறந்ததா ? இந்த விதைக்கு உள்ள தோஷம் ஆகசத்திர்க்கு வந்ததா?

    பிரம்மமோ ஆகாசத்தையும் விட வேறானது. பரினாமி நித்யத்திர்க்கே தோஷமில்லை என்றால். பிரம்மம் தான் சத்ய நித்யம், அதற்கு தோஷம் வருமா?

    நீங்கள் தவித்த சிந்தநியிலேயே சுற்றிக் கொண்டுள்ளதால் வரும் கஷ்டம் இது, புவியில் மலிவான இடங்களில் கூட ஜீவ ராசிகள் உள்ளன. அவைகளுள் அந்தர்யாமியாக ஈஸ்வரன் இருக்கிறாரா இல்லையா? இருக்கிறார் என்றால் அப்பொழுது அந்த தோஷம் அவருக்கு ஒட்டிக் கொள்ளுமா என்ன? இல்லை என்றால் உங்களது த்வைத வாதமும் எடுபடாது, உபநிஷத் கூறும் அந்தர்யாமி பிராமணமும் தவறு என்றாகும்.

  67. திரு சாரங் அவர்களுக்கு,
    தயவு செய்து கீழே உள்ள ஐயங்களுக்கு விளக்கம் அழிக்கவும். (இது விவாதிப்பதற்காக அல்ல விளக்கி கொள்வதற்காக மட்டும்).
    1. உயிர்கள் எதற்காக படைக்க பட்டன?
    2. உயிர்கள் எங்கிருந்து படைக்க பட்டன? (மூலகாரணமும் துணைக்காரனமும் ?)
    3. இறுதில் உயிர்கள் எதை சென்று அடைகின்றன?
    4. இந்த பிரபஞ்சம் எதற்காக படைக்க பட்டன?
    5. பிரபஞ்சம் எங்கிருந்து படைக்க பட்டன? (மூலகாரணமும் துணைக்காரனமும் ?)
    6.. இறுதில் பிரபஞ்சம் எதை சென்று அடைகின்றன?

    இதற்க்கான சைவ சித்தாத்தின் விடை.
    உயிர்கள் பிரமத்தை போலேவே அநாதி. அவைகள் படைக்கபடுவதில்லை. மலபரிபாகம் அடைந்த நிலையில் உயிர்கள் பிரமத்திடம் இருந்து பேரானந்தத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கும்.
    உயிகளிடத்து உள்ள அநாதி மலத்தை நீக்குவதற்காக, இந்த பிரபஞ்சம் மாயையில் இருந்து படைக்க படுகின்றது.

  68. ஒரு விதை விடையாக ஆகாச சம்பந்தத்துடன் ஆகாசத்திலே இறுகிறது. அவ்விதை /ஆகாசத்தில் உள்ள பூமியில் நடப்படுகிறது (இப்பொழுதும் ஆகாச சம்பந்தம்). அவ்விதை விரிவடைகிறது, பெரிய மரமாக ஆகாச சம்பந்தத்துடன் வளர்கிறது, பின்னர் வயதாகி ஆகாசத்திலே சுருங்கி மடிகிறது, இப்படி நீங்கள் கூறும் விகாரம் ஆகச சம்பந்தம் உள்ள பொருள்களுக்கே. ஆகாசம் பரினாமி நித்யம். பூமி கூட பரினாமி நித்யம், இந்த பரினாமி நித்யத்திர்க்குள் எல்லாம் பரிணமிக்கும்.

    இந்த விதை பரிணமித்தால் அந்த விடையை கொண்ட ஆகாசம் மாறுதல் (விகாரம்) அடைந்ததா? இல்லையே. இந்த விடயினால் புவி மாறுதல் (விகாரம்) அடைந்ததா
    இந்த விதை இறந்தால் ஆகாசம் இறந்ததா ? இந்த விதைக்கு உள்ள தோஷம் ஆகசத்திர்க்கு வந்ததா? / என்னுடைய மறுமொழிகளில் இந்தத் தொடர்கள் எங்கு வந்துள்ளன .வாசகர்கள் ற்கண்டு அறிவித்தால் நலம். விருத்தி, பரிணாமம் இவற்றின் வேறுபாடுகளை முதலில் தெரிந்து கொள்ளுதல் நலம்.

  69. விதை பூமியில்தான் விளைகின்றது, பூமியில்தான் விதைக்கப் படுகின்றது என்று என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் அறிகிறேன், விதை ஆகாசத்தில் இருக்கின்றதென்றும் ஆகாசத்தில் விளைகின்றதென்றும். பரிணாமம் என்றாலே தோற்றக் கேடுகளாகிய நிலைமாற்றத்துக்கு உட்படுவது என்று பிழைபட படித்துள்ளேன். இப்பொழுதுதான் பரிணாம நித்தியம் என ஒன்று உண்டு என அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

  70. பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றியும் பேத வாதக் கோட்பாடு பற்றியும் அறிந்த வாசகர்கள் தாங்கள் கற்றறிந்த அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.

  71. அய்யா

    //
    விதை பூமியில் தான் விளைகின்றது, பூமியில் தான் விதைக்கப் படுகின்றது என்று என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் அறிகிறேன், விதை ஆகாசத்தில் இருக்கின்றதென்றும் ஆகாசத்தில் விளைகின்றதென்றும். பரிணாமம் என்றாலே தோற்றக் கேடுகளாகிய நிலைமாற்றத்துக்கு உட்படுவது என்று பிழைபட படித்துள்ளேன். இப்பொழுதுதான் பரிணாம நித்தியம் என ஒன்று உண்டு என அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
    //

    ஹிந்து மதத்தில் ஆகாசம் என்றால் நாம் அண்ணாந்து பார்த்தால் தெரியுமே அது அல்ல. ஆகாசம் என்றால் ether.

    ஆகாஷ: என்ற சம்ஸ்க்ருத பதத்திற்கு இது தான் அர்த்தம். இது பால பாடம்.

    பரிணாமி நித்யம் என்பது வேதாந்தத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தே.

    என்னைப் போல சிறியவன் மூலம் கூட உங்களைப் போன்ற அனுபவம் உள்ளவர்கள் தெரிந்து கொள்வதென்பது நமது தர்மத்தின் ஆழத்தைத் தான் காட்டுகிறது.

    உங்களது விடையில் இது எங்கு வந்தது என்று கேட்கிறீர்கள். ஒன்றை ஆதாரமாகக் கொண்டு மற்றொன்று இருப்பதானாலேயே ஒன்றுக்குள்ள தோஷம் மற்றொன்றை ஒட்டாது. இதை தான் இந்த திருஷ்டாந்தம் விளக்கிற்று. இந்து உங்களது பல கேள்விகளுக்கு (இங்கு கேட்டது முன்னாள் கேட்டது) பதில்.

    மற்றபடி நாம் ஆகாசத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டி உள்ளதால் இதை இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

  72. திரு சோமசுந்தரம் அவர்களே.

    //
    இதற்கான சைவ சித்தாந்தத்தின் விடை.
    உயிர்கள் பிரமத்தைப் போலேவே அநாதி. அவை படைக்கப் படுவதில்லை. மலபரிபாகம் அடைந்த நிலையில் உயிர்கள் பிரமத்திடம் இருந்து பேரானந்தத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கும். உயிர்களிடத்து உள்ள அநாதி மலத்தை நீக்குவதற்காக, இந்த பிரபஞ்சம் மாயையில் இருந்து படைக்கப் படுகின்றது.
    //

    சைவத்தில் வேதாந்த விசாரம் அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத ரீதியில் உள்ளது என்று நம்புகிறேன். நீங்கள் இங்கு சொல்வது நிச்சயம் சைவ அத்வைதம் கிடையாது என்பது தெரிகிறது.

    மற்றபடி உயிர்கள் எதற்காக தோன்றுகின்றன என்பதற்கு எல்லோரும் ஒத்துக் கொள்ளும்படி ஒத்த பதில் இன்னும் இல்லை

    //உயிர்கள் பிரமத்தைப் போலேவே அநாதி. அவை படைக்கபடுவதில்லை// – இதை த்வைத விசிஷ்டாத்வைத வேதாந்திகள் ஒத்துக் கொள்வர். அத்வைதிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அங்கு ஜீவாத்மா என்ற ஒன்றே கிடையாது, வெறும் உபாதி தான்.

    // உயிர்களிடத்து உள்ள அநாதி மலத்தை நீக்குவதற்காக, இந்தப் பிரபஞ்சம் மாயையில் இருந்து படைக்க படுகின்றது//

    இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

    இவ்வளவு மட்டுமே இப்பொழுதைக்கு சொல்லிக்கொண்டு நிறுத்திக்கொள்கிறேன்.

  73. //சைவத்தில் வேதாந்த விசாரம் அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத ரீதியில் உள்ளது என்று நம்புகிறேன்.//
    நான் அறிந்தவரை சைவத்தில் வேதாந்த விசாரப் பிரிவுகள் இல்லை. சைவ சித்தாந்தம் ஒன்றே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  74. //கடவுள் என்ற சொல் பல பாதிப்புக்களை உடையதால் புனிதமான சமஸ்கிருத சொல்லான ஈஸ்வரன் என்ற சொல்லை பயன் படுத்துவோம்.//

    இது ஏற்புடைய கருத்தல்ல. கடவுள் என்ற தமிழ் சொல் எப்படி பாதிப்புகளை உடையதாக இருக்கிறது? ஈஸ்வரன் என்ற சமஸ்கிருத சொல் மட்டும் எப்படி புனிதமாக மாறியது? தமிழைவிட சமஸ்கிருதம் உயர்ந்தது என்ற கண்ணோட்டம் அல்லவா இதில் தெரிகிறது! எந்த மொழியும் மற்ற எந்த மொழிகளைவிட எந்த வகையிலும் உயர்வோ தாழ்வோ கிடையாது.

  75. //ஈசாவாஸ்ய உபநிடதம் ”ஈசாவாஸ்யம இதம் சர்வம்” (இங்கே உள்ளது அனைத்தும் ஈசனே) என்கிறது.//

    // இங்கே இருப்பதெல்லாம் ஈஸ்வரன்தான், ஈஸ்வரன் அல்லாது வேறு ஒன்று இல்லை.//

    //வேதம் இங்கே இருப்பது ஒரு ஈஸ்வரன் என்று சொல்லவில்லை இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரன்தான் என்கிறது. (The Veda is not saying there is one Ishwara; its says there is only Ishwara ) .//

    வேதமும் உபநிடதமும் கடவுள்(ஈஸ்வரன்) என்பது என்ன என்பதை மிக தெளிவாக கூறியிருக்கின்றன. இந்த சுலோகங்களை இயற்றிய ரிஷிகள் கடவுளின் தன்மையை , அதன் யதார்த்தத்தை உணர்ந்து அவ்வாறு கூறியிருக்கிறார்கள்.

    இருப்பது எதுவோ அது கடவுளாக இருக்கிறது. ஒவ்வொரு அணுவும் கடவுள்தான். எல்லாமே கடவுள்தான். கடவுளும் படைப்பும் ஒன்றே. கடவுளையும் படைப்பையும் பிரிக்க முடியாது. எனவே கடவுளை வெளியே தேட வேண்டிய அவசியம் இல்லை.

  76. அன்புள்ள திரு ஆனந்த சாகர் ,

    சுவாமி தயானந்த சரஸ்வதியின் உரை ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டது ஆகும்.GOD- என்ற ஆங்கில சொல்லுக்கு பதிலாக ஈஸ்வரன் என்ற சொல்லை பயன்படுத்துவது மிக ஏற்றது என்பதை அவர் காரண காரியங்களுடன் விளக்கி உள்ளார். கடவுள் என்ற தமிழ் சொல்லை பற்றி சுவாமிகள் சொல்லவில்லை. மொழி மாற்றம் செய்த திரு வேதம் கோபால் அவர்கள் GOD- என்ற ஆங்கில சொல்லை கடவுள் என்று மொழிமாற்றம்செய்ததால் தாங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள். அவ்வளவுதான். சுவாமிகளுக்கு எல்லா மொழிகளும் கருவிகளே ஆகும்.

  77. கடவுள் என்று கூறும்போது ( ஆணுமல்ல பெண்ணுமல்ல ) பொதுப்படையாக தெரிகிறது ஈஸ்வரன் அல்லது ஈஸ்வர் என்று கூறும்போது ஒருதலையாக இருப்பதாக எனக்கு படுகிறது

  78. திரு.ஆனந்சாகர் (கடவுள் என்ற சொல் பல பாதிப்புகளை உடையதால் புனிதமான சமிஸ்கிருத சொல்லான ஈஸ்வரன் என்ற சொல்லை பயன்படுத்துவோம்)
    இது ஏற்புடைய கருத்தல்ல. கடவுள் என்ற தமிழ் சொல் எப்படி பாதிப்புகளை உடையதாக இருக்கிறது? ஈஸ்வரன் என்ற சமஸ்கிருத சொல் மட்டும் எப்படி புனிதமாக மாறியது? தமிழைவிட சமஸ்கிருதம் உயர்ந்தது என்ற கண்ணோட்டம் அல்லவா இதில் தெரிகிறது! எந்த மொழியும் மற்ற எந்த மொழிகளைவிட எந்த வகையிலும் உயர்வோ தாழ்வோ கிடையாது.

    ஸ்ரீமதி.அத்விகா சொல்வது சரியே. தவறான மொழி பெயர்பு என்றால் வருந்துகிறேன். சுவாமிகளின் ஆங்கில உரை கீழே கொடுத்துள்ளேன்.

    // If God is a Reality, then definitely I have to discover that. We will replace the word God with the word Ishvara because it is an unabused Sanskrit word. //

    இங்கே அவர் புனிதம் என்ற சொல்லை உபயோகிக்கவில்லை – ஈஸ்வரன் என்ற சமிஸ்கிருத வார்தை எந்த பாதிப்பும் இல்லாததால் (GOD ) கடவுள் என்ற வார்தைக்கு பதிலாக நாம் உபயோகிக்கலாம் -( என்றாலும் கடவுள் என்ற சொல் பாதிப்பு ……………. அதுவும் தமிழகத்தில் …………… பெரியார்..அண்டு கோ …….. (சுவாமிகள் – GOD – என்பதை விதேசிய கிருஸ்துவ இஸ்லாமிய கடவுள்களை குறித்துதான் சொல்லியிருப்பாரே அன்றி தமிழ் கடவுள் என்ற சொல்லை அல்ல )

  79. திரு பிரேமதாசன் திருமேனி , திரும்பவும் மேலே நான் தெரிவித்த விஷயத்தை தயவு செய்து படிக்கவும். திரு தயானந்த சரஸ்வதி ஆற்றியது ஆங்கில உரை. அதில் GOD – என்ற ஆங்கில சொல்லை பற்றித்தான் சுவாமிகள் சொன்னார். கடவுள் என்ற தமிழ் சொல்லை பற்றி சொல்லவில்லை.

  80. அன்பின் ஸ்ரீ ஆனந்த்சாகர்,

    தமிழ் ஹிந்து தளத்தின் மூத்த பங்களிப்பாளர் ஸ்ரீ வேதம் கோபால் அவர்கள். இந்த மொழி உயர்ந்தது இந்த மொழி தாழ்ந்தது போன்றபடிக்கான கருத்துக்களைக் கொண்டவரல்ல அவர். தமிழ் ஹிந்து தளத்தில் பங்களிப்போர் யாருமே அப்படியான கருத்தாக்கங்களைக் கொண்டவர்கள் அல்லர்.

    சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாரும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் என்பது தானே மூத்த சான்றோர்களின் வாக்கு.

    மொழியாக்கம் செய்யப்புகும் போது நிச்சயமாக சில சமயம் சில வாசகங்களை நாம் முழுதும் அவதானிக்க முடியாமற் போகலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக ஸ்வாமி ஜி அவர்களது கருத்துக்களை குறையில்லாமலேயே இந்த வ்யாசம் பகிர முனைகிறது என்பதில் தங்களுக்கு அபிப்ராய பேதம் இருக்கலாகாது எனவே நினைக்கிறேன்.

    ம்…………. மாமாங்கத்துக்கு முன்னால் தலை காட்டிய ஸ்ரீ வேதம் கோபால் ஜீ இந்த வ்யாஜத்தில் தமிழ் ஹிந்து தளத்தில் தலை காட்டியதில் மகிழ்ச்சி தான் 🙂

  81. அன்பார்ந்த திருமதி.அத்விகா,

    //சுவாமி தயானந்த சரஸ்வதியின் உரை ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டது ஆகும்.GOD- என்ற ஆங்கில சொல்லுக்கு பதிலாக ஈஸ்வரன் என்ற சொல்லை பயன்படுத்துவது மிக ஏற்றது என்பதை அவர் காரண காரியங்களுடன் விளக்கி உள்ளார்.//

    God என்ற ஆங்கில சொல்லும், கடவுள் என்ற தமிழ் சொல்லும், ஈஷ்வர் என்ற சமஸ்கிருத சொல்லும் ஒரே யதார்த்தத்தை(reality) குறிக்கின்ற வெவ்வேறு மொழி சொற்கள். எனவே ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றை பயன்படுத்துவது சிறந்தது என்று கூறுவதில் அர்த்தம் ஏதும் இல்லை. எந்த மொழியில் பேசுகிறோமோ அந்த மொழி சொற்களை பயன்படுத்துவதுதான் சரியான உரையாடல்/சொற்பொழிவு. ஸ்ரீ தயானந்த சரஸ்வதி அவர்களை நான் குறை காண்பதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  82. திரு.பிரேம தாசன் திருமேனி,

    //கடவுள் என்று கூறும்போது ( ஆணுமல்ல பெண்ணுமல்ல ) பொதுப்படையாக தெரிகிறது ஈஸ்வரன் அல்லது ஈஸ்வர் என்று கூறும்போது ஒருதலையாக இருப்பதாக எனக்கு படுகிறது//

    கடவுள் என்பது ஆணுமல்ல, பெண்ணுமல்ல. அதை அவரவர் விருப்பப்படி ஆணாகவோ பெண்ணாகவோ பாவிப்பது தவறல்ல.

  83. திரு.வேதம் கோபால்,

    // If God is a Reality, then definitely I have to discover that. We will replace the word God with the word Ishvara because it is an unabused Sanskrit word. //

    மேற்கண்டதை நான் இவ்வாறு மொழியாக்கம் செய்கிறேன் :

    “கடவுள் என்பது ஒரு யதார்த்தமாக இருந்தால், பிறகு அதை நான் நிச்சயம் கண்டுபிடித்தாக வேண்டும். கடவுள் என்ற வார்த்தைக்கு பதிலாக ஈஸ்வரன் என்ற வார்த்தையை முன்வைப்போம். ஏனெனில் அது தவறாக பயன்படுத்தப்படாத ஒரு சமஸ்கிருத வார்த்தை.”

    இது அர்த்தமுள்ள கருத்தல்ல. ஒருவன் தன்னுடைய தாயை பற்றி யாரோ ஒருவன் தன்னிடம் வந்து உன் அம்மா மோசமானவள் என்று அவதூறு பேசியதால் அம்மா என்ற தன்னுடை தாய் தமிழ் வார்த்தை தவறாக பயன்படுதப்பட்டுவிட்டது. எனவே இனிமேல் அம்மா என்று சொல்லமாட்டேன், அதற்கு பதிலாக மம்மி என்று ஆங்கில வார்த்தையைத்தான் பயன்படுத்துவேன் என்று கூறுவதற்கு ஒப்பானது சுவாமிஜியின் வாதம்.

    தமிழோ ஆங்கிலமோ பேசும் நாத்திகர்கள் கடவுள், God என்ற வார்த்தைகளை பயன்படுத்தி நாத்திகம் பேசுகிறார்கள். அவர்கள் சமஸ்கிருதம் பேசினால் ஈஸ்வரன் என்ற வார்த்தையை பயன்படுத்தி நாத்திகம் பேசுவார்கள். அப்பொழுது ஈஸ்வரன் என்ற வார்த்தையை விட்டுவிட்டு அல்லாஹ்/யெஹோவா என்ற வார்த்தையை பயன்படுத்த முனைய வேண்டுமா?

  84. அன்புள்ள திரு.கிருஷ்ணகுமார்,

    //தமிழ் ஹிந்து தளத்தின் மூத்த பங்களிப்பாளர் ஸ்ரீ வேதம் கோபால் அவர்கள். இந்த மொழி உயர்ந்தது இந்த மொழி தாழ்ந்தது போன்றபடிக்கான கருத்துக்களைக் கொண்டவரல்ல அவர். தமிழ் ஹிந்து தளத்தில் பங்களிப்போர் யாருமே அப்படியான கருத்தாக்கங்களைக் கொண்டவர்கள் அல்லர்.//

    ஒவ்வொருடைய மனதில் இருப்பது நமக்கு தெரியாது. நீங்கள் சொல்வதுபோல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

  85. அன்பின் ஸ்ரீ ஆனந்த்சாகர்

    \\ ஒவ்வொருடைய மனதில் இருப்பது நமக்கு தெரியாது. நீங்கள் சொல்வதுபோல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. \\

    பங்களிப்பாளர்கள் பலரது கருத்துக்களிலும் சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும் மிகப்பெரும்பான்மையோருக்கு தத்தம் சமயத்தின் மீதும்………… ஹிந்து மதத்தின் மீதும் உள்ள ஈர்ப்பினையும்……… அதன் பாற்பட்டே இங்கு கருத்துப் பதிய விழைவதையும் நான் கவனித்து வருகிறேன்.

    விதிவிலக்காக ஓரிரு பங்களிப்பாளர்கள் மட்டிலும் தவிர்த்து 🙂

    ஆகையினாலேயே பெரும்பாலும் ஒத்த கருத்து உள்ள அன்பர்கள் ………. ப்ரமையின் பாற்பட்டு அபிப்ராய பேதம் கொண்டால் ………. அதை அவ்வப்போது துலக்க முனைகிறேன்.

    \\ God என்ற ஆங்கில சொல்லும், கடவுள் என்ற தமிழ் சொல்லும், ஈஷ்வர் என்ற சமஸ்கிருத சொல்லும் ஒரே யதார்த்தத்தை(reality) குறிக்கின்ற வெவ்வேறு மொழி சொற்கள். எனவே ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றை பயன்படுத்துவது சிறந்தது என்று கூறுவதில் அர்த்தம் ஏதும் இல்லை. எந்த மொழியில் பேசுகிறோமோ அந்த மொழி சொற்களை பயன்படுத்துவதுதான் சரியான உரையாடல்/சொற்பொழிவு. \\

    “God” என்ற சொல்லை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதற்கும் அந்த சொல்லை உபயோகிக்கும் ஆங்க்லேயர்கள் அதை எந்தக் கருத்தாக்கத்துடன் கையாளுகிறார்கள் என்பதில் நிச்சயம் வேறுபாடு உண்டு இல்லையா?

    பரங்கியர் “God” என்ற சொல்லை தங்களது ஆப்ரஹாமியக் கடவுளைச் சுட்ட உபயோகிக்கிறார்கள்.

    ஆப்ரஹாமியம் – யஹூதியம், க்றைஸ்தவம், இஸ்லாம் – பற்றி தமிழ் ஹிந்து வாசகர்களில் தங்களுக்கு நல்ல தெளிவு உண்டு என்பது என் புரிதல்.

    ஆப்ரஹாமியம் விவரிக்கும் “God” என்ற பொறாமை மிகுந்த சகிப்புத்தன்மையற்ற ஒரு வ்யக்தி விசேஷத்தினை……………. ஹிந்து மதத்தின் (வைதிகம், சைவம், வைஷ்ணவம், ஜைனம், பௌத்தம், சீக்கியம், நாட்டார் வழிபாடுகள்) கருத்தாக்கங்களுடன் ஒப்பிட வேண்டுமானால்…………… கடவுள்……….. ஈஸ்வரன்………. போன்ற ஒரு கருத்தாக்கத்துடன் அல்லாது………….****ராக்ஷஸ*** என்ற வ்யக்தி விசேஷத்துடன் மட்டிலும் தான் ஒப்பிட முடியும்.

    நேரடியான ஒரு உதாரணம் சுட்ட வேண்டுமானால் ஹிரண்யகசிபு. என்னை வணங்காது வேறெதையும் வணங்குபவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். அது என் மகனாகவே ஆனாலும் சரி.

    ஆப்ரஹாமியத்தில் உயர்வாகச் சொல்லப்படும் ” கருத்தாக்கத்தினால்……… சுட்டப்படும் ஒரு வ்யக்தி விசேஷத்திற்கும்………… ஹிரண்யகசிபு என்ற கருத்தாக்கத்திற்கும் வித்யாசம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

    நம் ஹிந்துஸ்தானத்தின் அனைத்து மொழிகளிலும் கடவுள்………. ஈஸ்வரன்……… தேவுடு……….. என எந்த சொல்லைச் சொன்னாலும்……….. அதனால் சுட்டப்படும் ஒரு பொருள்……….. அதீத கருணை உடையவராகவும்……….. அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவராகவுமே நாம் அறிவோம்.

    தன்னை வணங்காதவர்களை ……….. அவர்கள் தன்னை வணங்கவில்ல என்ற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டிலுமே……….. அவர்களை அழித்தொழிக்க முயலும் இழிவுச் சிந்தனையை உடைய ஒரு அரக்கன் இல்லை நாம் *கடவுள்* அல்லது *ஈஸ்வரன்* அல்லது *தேவுடு* போன்ற சொற்களால் சுட்ட விழையும் ஒரு பொருள்.

    ஆங்க்லத்திலேயே உரையாட வேண்டும் என்றாலும் கூட…………..*God” என்ற சொல் சுட்டும் பொருள் நம்முடைய ஹிந்து மதத்தின் இறைக்கருத்தாக்கத்துக்கு நேர் எதிரானது என்பதால்………. அந்த சொல்லை நிர்தாக்ஷண்யமாக நிராகரித்து………. ஆங்க்லத்தில் நாம் கடவுள் என்று சுட்ட விழையும் ஒரு சொல்லுக்கு வேறொரு பதம் இல்லாததையும் சுட்டி………. அப்படிப்பட்ட நிர்ப்பந்தத்தின் பேரில் ஹிந்துஸ்தான மொழிகள் எதிலிருந்து ஆனாலும் நம்முடைய இறைக்கருத்தாக்கத்தை முழுமையாக ப்ரதிபலிக்கும் ஒரு சொல்லை உபயோகிப்பது மட்டிலும் தான் சரி.

    ஸ்வாமி ஜி “God” என்ற சொல்லை நிராகரிப்பதை *மொழி* என்ற கூறு சாராது………….

    *கருத்தாக்கம்* என்ற கூறு சார்ந்து………………. நீங்கள் ஆராய்ந்தால் அவர் அந்த சொல்லை ஏன் நிராகரிக்கப்புகுகிறார் என்பது தெளிவாகும்.

  86. சைவ அன்பர்களுக்கு இணையத்தளத்தில் raga musig dv ramani சிவன் பக்தி பாடல்கள் என்று தேடினால் மிக அருமையான இனிமையான சிவனார் பாடல்கலைக்கேட்கலாம் திரு d v ரமணி அவர்கள் உடன் திரு சிற்பி அவர்கள் எழுதி பாடகர்கள் திரு ரகுபதி திருமிகு பிரியா பிரகாஸ் அவர்கள் பாடிய கபாலீச்சரமே என்று ஆரம்பிக்கும் பாடலை கேட்டுப்பாருங்கள் 45.38 நிமிடங்கள் ஒலிக்கும் வேகமான இசைகொண்ட பாடலுடன் வேறு இனிமையான பாடல்களும் உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *