அஞ்சலி – டோண்டு ராகவன்


நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்
 என்ற கட்டுரையின் இரண்டாம் பகுதி.

முதல் பகுதி இங்கே

எனது இரண்டாவது இழப்பு டோண்டு என்னும் விசித்திரமான பெயரில் உலவிய ராகவன் அவர்கள். அவரை எனக்கு அறிமுகப் படுத்தியதே திருமலை ராஜன் தான். நான் சென்னை  புற நகர் மடிப்பாக்கத்தில் இருந்த போது ஒரு நாள் திடீரென திருமலை ராஜன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறார். அவரை அன்று தான் முதலில் பார்க்கிறேன். உடன் டோண்டு ராகவனும். வயதானவர் ஆனால் என்னிலும் இளையவர்.  நல்ல தாட்டியான உடம்பு. திருமலை ராஜனை சில இணைய குழுமங்கள் மூலம் தான் தெரியும். எனக்கு கம்ப்யூட்டர் வாங்கி அதில் கொஞ்சம் தட்டுத் தடுமாறி கற்றுக்கொண்டு பின்னர் இணைய தளங்களில் அலைய ஆரம்பித்து அரவிந்தன் தான் என்று நினைக்கிறேன், சில இணைய குழுமங்களில் அறிமுகப்படுத்தி, பின்னர் தான் திருமலை ராஜனைத் தெரியும். ஆனால் இணையத்தில் தனக்கென ஒரு சாம்ராயத்தையே உருவாக்கி ஒரு மாதிரியான சர்வாதிகார ஆட்சி செய்து கொண்டிருந்த டோண்டு வைத் தெரியாது. அன்றைய சந்திப்பு மிக முக்கியமான சந்திப்பாக அப்போது தெரியாவிட்டாலும் பின்னாட்களில் விரிந்த உறவும் நட்பும் அதன் முக்கியத்துவத்தைப் பின்னர் உணர்த்தியது.

dondu_raghavanடோண்டு ராகவனுக்கு மடிப்பாக்கத்தை அடுத்த நங்கநல்லூரில் வீடு. வந்த முதல் நாளே அவரை எனக்கு கம்ப்யூட்டரில் ஏற்பட்ட சிக்கல்களைச் சொல்லி ஒரு அரை மணிநேரம் அவரிடம் பாடம் கற்றேன். அப்படியெல்லாம் ஒரு தடவை சொல்லி விளங்கிக் கொள்கிறவன் இல்லை நான். இதற்கு முன் அரவிந்தனிடமும்  பாடம் கேட்டிருக்கிறேன். ”என்னடா இது?, அவர் அப்பாவையும், அவருடன் வந்த நண்பரையும் உட்கார்த்தி வைத்துவிட்டு அரவிந்தனை அழைத்துக்கொண்டு கம்ப்யூட்டரின் முன் உடகார்ந்து விட்ட குற்ற உணர்வு இருந்த போதிலும், அதைக் கொஞ்சம் தட்டித் துடைத்தேன்.  அதே காரியம் தான் திருமலை ராஜனுடன் டோண்டு வந்த போதும். இது எப்போதும் யார் வந்தாலும் ஒவ்வொருத்தரிடமிருந்தும் கொஞ்சம் கற்றுக் கொள்ளும் அல்லது கற்றதை நினைவு படுத்திக் கொள்ளும் காரியம் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

முதல் சந்திப்பிற்குப் பின் கொஞ்சநாள் கழித்து ஒரு முன் காலை நேரம் டோண்டு மறுப்டியும் தரிசனம் தந்தார்  ”சும்மா இப்படி வாக்கிங் வந்தேன். அப்படியே உங்களையும் பாத்துட்டுப் போலாம்னு” என்றார். அப்போதிருந்து அந்த கணத்திலிருந்து நான் அவரை மிக நெருக்கமானவராக உணர்ந்தேன். நங்க நல்லூரி லிருந்து வாக்கிங் போகிறவர்கள் மடிப்பாக்கம் வருவதென்றால் அது வாக்கிங் என்கிற காரியத்தை அதன் இயல்புக்கு மீறி இழுக்கும் காரியம்.  வாக்கிங் போன உற்சாகத்துப் பதிலாக மனிதம் கால்களைத் துவள வைத்துவிடும். ஆனால் அதை அவர் வெகு அனாயாசமாகச் செய்பவர். அனேகமாக தினம் செய்பவர். அதிலும் பார்க்க அவர் கொஞ்சம் கனத்த சரீரி. ஒரு வேளை அதற்காகவே அப்படி  ஒரு காலை நடைபயணத்தை மேற் கொண்டாரோ என்னவோ. அப்போது தான் அவர் வாக்கிங் பற்றிப் பேச்செடுத்தேன். “என்ன ஸ்வாமி இது, காலாற நடக்கிற நடையா இது? எப்படி ஸ்வாமி உம்மால் இது முடிகிறது? என்று கேட்டால், அதை “அதொன்னும் பெரிய விஷயமில்லை என்று ஒதுக்கி விடுவார்.

அப்போது முதலாக அவர் வரும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பற்றியும் நான் அறிந்தேன். எதுவும் துருவிக் கேட்டதில்லை. பேச்சு வாக்கில் வந்து விழும் செய்திகள் தான். ஆனால் ஆர்வமுடன் எங்கள் சம்பாஷணைகள் தொடரும். அவர் எங்கெங்கோ வெல்லாம் வேலை செய்திருக்கிறார். எங்கெங்கெல்லாமோ சுற்றி இருக்கிறார். அதெல்லாம் எனக்கு இப்போது நினைவில் இல்லை. இப்போது அவர் இத்தாலியன், ப்ரெஞ்ச், ஜெர்மன் மொழிகளிலிருந்து இங்கிலீஷ் மொழிக்கு எதானாலும், technical papers, projects, reports எல்லாம் மொழி பெயர்த்துத் தருகிறார்.  பணம் வருகிறது. குடும்ப க்ஷேமம் நடக்கிறது. எப்படி இவ்வளவு மொழிகள் கற்றுக்கொள்ள முடிந்தது. என்ன அவசியம் பற்றி? தெரியாது. நான் கேட்க வில்லை. இதெல்லாம் போக அவர் தன் பெயரில் ஒரு தளம் இணையத்தில் வைத்திருக்கிறார். Dondu.blogspot.com Dos and Don’ts of Dondu சொன்னார். அதில் வேறு நிறைய, உலக விஷயங்கள், அரசியல் நிகழ்வுகள், குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல் அலங்கோலங்கள் பற்றியெல்லாம்.  நிறைய எழுதுவார். டோண்டு என்று பெயர் வைத்துக்கொண்டு அதற்கேற்றாற் போல் தான் அவருடைய மொழியும், அதுக்கு வரும் பின்னூட்டங்களும் அந்த பின்னூட்டங்களின் மொழியும். உண்மையில் அவர் தொடாத விஷயம் கிடையாது. தன்னைத் தாக்கி வன்முறையில் நாகரீகமற்ற மொழியில் எழுதுபவர்கள் அனைவருக்கும் இவரும் சளைக்காது பதில் சொல்லிக்கொண்டிருப்பார். இவருக்கு ஏன் இந்த வீண் வேலை என்று எனக்குத் தோன்றும்.

இடையில் ஒரு நாள், ”நான் நேத்திக்கு எழுதினதைப் படித்தேளா?” என்பார். ”இல்லை சார் இனிமேல் தான் படிக்கணும்,” என்பேன். ”ஆமாம் படிக்கறேளா,” என்று என் பதிலில் சந்தேகம் வந்து கேட்பார். ”எல்லாத்தையும் படிக்கிறதில்லை சார். நீங்க எழுதறது அத்தனையும் படிக்க நேரம் வேண்டும். அதோட நீங்க ஊரில் இருக்கற கழிசடைகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண் டிருக்கிறீர்களே, உங்களுக்கு நேரம் எங்கேயிருந்து கிடைக்கிறது?” என்று கேட்பேன். “ஜனங்கள் இப்படித்தான் இருக்கான்னா அவாளோட தானே நாம் காலம் தள்ளியாகணும். பதிலுக்குப் பதில் கொடுத்துடணும். இல்லாட்டா, ”பாரு, வாயடைச்சுப் போச்சு பாரு பாப்பானுக்கு”ன்னு கும்மாளம் போடுவாணுங்க” என்றார்.

”இருந்தாலும் சார் வேறு உருப்படியான காரியம் நிக்கக் கூடிய காரியமா செய்யலாம். இப்ப இவங்களுக்கு உங்களைச் சீண்டறதிலே தான் குறி. இவனுகள்ளே ஒத்தனாவது உங்க பேச்சைக் கேட்டு மாறியிருக்கானோ?” என்று கேட்பேன். பாவம் மனுஷன் அனாவசியமா தன் நேரத்தை வீணாக்குகிறாரே என்று எனக்குத் தோன்றும்.

ஒரு நாள் இந்த ஆளை நம்பிப் பயனில்லை என்று என் ப்ளாக்கை சரி செய்து கொடுக்கறேன் பேர்வழி என்று, என் ப்ளாக்கின் ஃபார்மாட்டை மாற்றி, (எனக்கு என்று ப்ளாக் ஒன்று ஆரம்பித்துக் கொடுத்ததே அவர் தான் Ve saa Musings என்றும் என்னை வெ.சா என்றும் வெங்கட் சாமிநாதன் என்றும் அழைப்பார்கள் என்றும் என்னை விமர்சகன் என்றும் சொல்வார்கள் என்றெல்லாம் எழுதிக்கொடுத்ததும் அவர் தான். அத்தோடு என் ப்ளாகிலேயே தன் ப்ளாக், இட்லிவடை ப்ளாக்கையும் சேர்த்து என் ப்ளாகைத் திறந்தாலேயே இட்லிவடையும் டோண்டுவையும் திறக்கத் தூண்டும் வகை செய்து கொடுத்துவிட்டுப் போனார். “உங்களுக்கு சிரமமில்லாமல் செய்து கொடுத்து விட்டேன்,” என்றார்.

அவர் மாதிரி ஒருவர் சளைக்காமல் சலித்துக்கொள்ளாமல், அவரைச் சீண்டும் சில்லுண்டிகளின் மொழியிலேயே அவர்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டும் இருப்பவரை எங்கு பார்க்கமுடியும்?

எப்படி இவரால் இவ்வளவும் செய்ய முடிகிறது? வியந்து வியந்து நான் ஒன்றுக்கும் மேற்ப்ட்ட தடவைகள் கேட்டுவிட்டேன். சரியல்ல தான். ஆனாலும் கேட்டுவிட்டேன். ஒரு தடவை சிரித்துக்கொண்டே, “உங்களுக்குத் தெரியுமோ, நான் இப்போ திருக்குறளுக்குப் பரிமேலழகரின் உரையின்  ஆங்கில மொழிபெயர்ப்பைத் திருத்தி சரி செய்துகொண்டிருக்கிறேன்.” என்றார். எனக்கு பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது. “என்ன ஸ்வாமி இது, இப்படி ஒரு வேலையா?. பரிமேலழகர் உரை, அதை ஆங்கிலத்தில்?” எதற்கு?” என்று கேட்டேன். “ஆச்சரியமா இருக்கு இல்லையா? யார் என்ன பண்ணினா எனக்கென்ன வந்தது?. என் சொந்தக்காரன் ஒருத்தன் தில்லிலே இருக்கான். அவன் பண்ணீண்டு இருக்கான். திருத்திக் கொடூன்னான். ”அப்பா, நான் இந்த வேலையெல்லாம் காசுக்குத் தான் பண்ணுவேன். இவ்வளவு ஆகும். முதல்லே காசு கொடுன்னேன். அனுப்பினான். பண்றேன். அவ்வளவு தான்”: என்றார். எனக்கு அவர் சொன்ன பெயரைத் தெரியும். ஒரு மாதிரியான உறைந்த பண்டிதத் தனம். ஆங்கில அறிவு பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. இன்னொரு சுயப்ரதாப கல்லறைத் தமிழ்ப் பண்டிதத்திடம் நீண்ட கால சிக்ஷை.  எப்படி இருக்கும் எல்லாம்?. “ஸ்வாமி அந்த ஆளுக்கு என்ன ஆங்கிலம் தெரியும்ணு நிச்சயமா ஒண்ணும் சொல்றதுக்கில்லை. அதிலும் பரிமேலழகர் உரையை என்னத்து இப்போ ஆங்கிலத்தில்? அதுக்குப் போய் உங்கள் நேரத்தைச் செலவிடுவானேன்?”

”எதானால் என்ன? அவன் உறவுக்காரன். கேக்கறான். நான் எல்லா வேலையையும் போல காசு வாங்கிண்டு பண்றேன். என்னவோ பண்ணீட்டுப் போறான்.” என்றார்.

ஆர்வத்துடன் குறிப்பெடுக்கும் டோண்டு ராகவன்
ஆர்வத்துடன் குறிப்பெடுக்கும் டோண்டு ராகவன்

அவர் நேரம் இப்போது எழுதும் முக்கியமானவர்களின் எழுத்துக்களையும் படித்துத் தான் வந்திருக்கிறார். ஜெயமோகன், பி.ஏ. கிருஷ்ணன் உட்பட.  ஒரு முறை திண்ணையில் தான், நான் எழுதும் நினைவுகளின் சுவட்டில் தொடரைப் படித்து வந்தவர், பொறுமை இழந்து “எப்போது இவர் ஹிராகுட்டை விட்டு நகரப்போகிறார்?” என்று ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். யாரையும் விட்டு வைப்பதில்லை. அவரையும் மலர்மன்னனையும் சென்னையில், வாதம், விவாதம்” வெளியீட்டு அரங்கத்தில் பார்த்தேன். டிபிகல் டோண்டு தான்.

துரதிர்ஷ்டம் தான். என் துர்ப்பாக்கியம். நான் ஹிராகுட்டை விட்டு நகர்வதற்கு முன் டோண்டு நம்மை விட்டே ந்கர்ந்து விட்டார். அவர் அளவில் ஒரு போராளி தான். எல்லா அராஜக சிந்தனைகள் செயல்களுக்கும் தார்மீகமற்ற சொல்லாடல்களுக்கு அயராது தன் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்திருக்கிறார். ஒரே குறை. அவர்கள் எல்லோரும் நான் பார்த்த வரை நாகரீகமும் பண்பும் அற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அது ஒரு சோகம் தான். நல்ல மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். தன்னை அநாகரீமாகச் சாடியவர்களுக்கு அவர் நட்புக் கரம் நீட்டியவர். ஆனால் அந்த நட்புக் கரம் பற்றியவர்களோ  “ பார்ப்பன “ என்ற துவேஷ அடைமொழி இல்லாது எந்த உறவையும் பேணத் தெரியாதவர்கள். இவர்களுடன் போராடித் தான் அவர் காலம் பெரும்பாலும் கழிந்தது என்பது ஒரு சோகம்.

 

vesa-150x1501

வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள்

இங்கே.

 

17 Replies to “அஞ்சலி – டோண்டு ராகவன்”

  1. வெ சா ஐயாவின் அற்புதமான பதிவுகளில் இதுவும் ஒன்று. டோண்டு ஒவ்வொருவர் மனதிலும் ஒரு வரலாறு எழுதிச் சென்றிருக்கிறார்.அவரை மறக்க முடியாது.

  2. பல முதிய தலைமுறைகள் மடிகின்றன. இளைய தலைமுறைக்கு வழிவகுத்து. உணர்வார்களா இளைய சமுதாயம்?

  3. இந்த டோண்டுவை எனக்கு முன்னர் தெரியாது. ஐயா வெ சா அவர்களின் அஞ்சலி செய்திக்கட்டுரையை படித்த பின்னர், தமிழ் நாட்டில் இவர்போன்ற அபூர்வ மனிதர்கள் பற்றி அறிந்தேன். டோண்டு ராகவன் அவர்களின் வலைத்தளங்களை படித்து மகிழ்ந்தேன். டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், அவருடைய உற்றார் உறவினர் அடைந்துள்ள துயரம் நீங்கவும் எல்லாம் வல்ல சக்தி வேலனை வணங்குகிறேன்.

  4. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக. அவருடைய பணியை இளைய சமுதாயத்தினர் தொடருவதே அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.

  5. Only that person who has moved with late DR closely, known him intimately. and read his blog posts, thereby came to know his thoughts, can write his obituary.

    VeSa’s acquaintance with DR was casual and he has confessed here he hadn’t read DR’s blog even after DR asked him, and has the opinion that the blog was a kind of street brawling. An obituary from such a person on DR can only be casual.

    Of many topics DR touched, only one was on caste. Others are:

    Hindutva ideology
    Modi’s fitness
    Ruling Congress’ depravity
    Terrorism in India and abroad
    Tamil flims
    Personal experiences in translation
    Sri Lankan Tamil issue.
    Selective attack on Tamil brahmins by dravidian brigade
    and many more.

    But VeSa saw only one – caste. Even in that, he has assumed that DR waged a quarrel with the anti brahmins blindly.

    It is untrue. DR was not for castes. He said caste is an identity which one was given at birth out of destiny; and which one can’t give up however much one wished. The brahmin baiters assumed that the brahmins flaunted their caste out of casteist ideology, whereas it is just an identity. Just because the brahmins were crticised, they need not give up using their caste tag names. He harshly criticised those brahmins who succumbed to pressure and concealed their identity.

    VeSa makes us believe here that DR was close to Brahmins and moved with them only. it is doing disservice to DR memory. Because

    DR was a warm person to all. His warmth was enjoyed more by non brahmins than by brahmins. Indeed some Brahmins hated him for criticising them and exhorting them not to conceal caste identity.

    Among his friends are counted Muslims, Christians and many many non brahmin Hindu bloggers. DR was the only person who wrote an obituary in his blog about Anto of Arumuganeri. Anto’s service to Tamil blogging was remembered in that obit. He wrote a piece on another Christian who was a paraplegic and dying. The piece was very moving.

    He prayeth best who loveth best all things both great and small;
    for the dear God who loveth us, he made and loveth all.

    DR loved all. May his soul rest in peace. Om Shanti…Om Shanti…Om Shanti

  6. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நம்பெருமானை பிரார்த்திப்போமாக. அவருடைய பணியை இளைய சமுதாயத்தினர் தொடருவதே அவருக்கு செய்யும் அஞ்சலியாகும். ஓம் சாந்தி, சாந்தி ,சாந்திகி

  7. But VeSa saw only one – caste. Even in that, he has assumed that DR waged a quarrel with the anti brahmins blindly.

    இதெல்லாம் போக அவர் தன் பெயரில் ஒரு தளம் இணையத்தில் வைத்திருக்கிறார். Dondu.blogspot.com Dos and Don’ts of Dondu சொன்னார். அதில் வேறு நிறைய, உலக விஷயங்கள், அரசியல் நிகழ்வுகள், குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல் அலங்கோலங்கள் பற்றியெல்லாம். நிறைய எழுதுவார

    by the way, Why the man hiding himself behind the mask Tamil, is scared off or ashamed of showing his identity. What is shameful about his person? there are many of his ilk. Suvanapriyan is another.

  8. தமிழ் இணைய உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு

  9. kargil_jay says:
    February 15, 2013 at 3:18 am

    //பார்ப்பனர்களிலேயே பலருக்கு டோண்டு சாரை பிடிக்காது//

    – ஒருவரின் மறைவில் கூட அவரின் ஜாதியை இழிவுபடுத்தும் சொல்லை உபயோகப் படுத்த்திய சாமர்த்தியத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன்”.

    கார்கில் ஜே குறிப்பிடும் இன்னொரு முகமூடி, சுவனப்ரியன். இந்த மாதிரி முகமூடிகள் வீரவசனம் பேசும் முகமூடிகள் தமிழ் நாட்டில் நிறைய. இந்த முகமூடிகள் தான் “ தமிழ்” என்று பர்தாவில்வாழும் இன்னொரு முகம் காட்ட வெட்கப்படும் ஜீவன், தம்மை மறைக்காது உலவுகிறவர்களை, குற்றம் சொல்லும். தம் அசிங்கங்களை பர்தாவில் மறைத்துக்கொள்ளும் அவசியம் நிறைய இவர்களுக்கு. முதல் அறிமுகத்திலேயே “ புன்சிரிப்போடு முதுகைத் தடவி பூணூல் அணிந்தவரா என்று முதலில் தெரிந்து கொள்ள ஆசைப்படும் ஜீவன்கள் தான் மற்றவரை ஜாதி சொல்லி குற்றம் கூறும்.

  10. என்னுடைய இப்போதைய உழைப்பனைத்தும் பிறிதொரு வ்யாசத்தில் உள்ளதால் ஸ்ரீ வெ.சா அவர்களின் இரண்டு அஞ்சலிகளையும் வாசிக்க இயலவில்லை. வாசிப்பேன்.

    மகரநெடுங்குழைக்காதனிடம் ஆராக்காதல் கொண்டிருந்த டோண்டு சாரைப் பற்றி அன்பர் ஸ்ரீமான் தமிழ் அவர்கள் சொல்லியுள்ளமை முற்றிலும் சரி.

    திருநாடேகிய அவர் “சதா பச்யந்தி சூரய:” – (எப்போதும் அவன் தன் திருமேனி கண்டுமகிழ்வர்) என்ற படிக்கு திருநாட்டிலும் அவர் மகரநெடுங்குழைக்காதனையே கண்டு மகிழும் பேறு பெற்றவராக இருக்க கரியமாணிக்கப் பெருமானை இறைஞ்சுகிறேன்.

  11. ஒருவர் இறப்பில் இழப்பும் துயரமும் இருவகையாகப்பார்க்கப்படும்.

    1. அன்னாரின் குடும்பத்தாரின் துயரம்
    2. அன்னாரின் பொது வாழ்க்கை. அதில் தொடர்புடையோரின் துயரம்

    இருவகையில் வெவேறுவிதமான அனுபவிப்புக்கள் வரும்.

    முதல்வகையை நாம் ஒரு சொல்லில் முடித்துவிடுவது வழக்கம்: அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள். இறைவன் அவர்களுக்கு இத்துயரத்தைத் தாங்கும் சக்தியைத்தருவார்.

    இரண்டாவது வகையைப்பற்றியே இந்த அஞ்சலி அமையும். அமைய வேண்டும்.

    அதன்படி, மறைந்த டோண்டு இராகவன் அவர்கள் நம்மெல்லாரும் ஏதாவது தகவல் விட்டுச்சென்றாரா? அதைப்பெற்று நாம் வாழ முடியுமா?

    ஆம், நான் பார்த்தவகையில் இரு செய்திகளை விட்டுச்சென்றிருக்கிறார். அவை:

  12. என் ஆங்கிலப்பின்னூட்டத்தில் ஒன்றைச் சொல்லிவிட்டேன். அதாவது –

    அவர் தன் பதிவுகளில் ஜாதியைப்பற்றி எழுதினார். அஜ்ஜாதியைச்சேர்ந்தோரை ஏன் பிறர் நக்கலுக்குப் பயந்து வாழ்கிறீர் என்றார். அதே சமயம். வருணாஷ்ரத்தைப்பற்றி அவர் எழுதி அதே சிறந்தது என எழுதவில்லை. ஆக, நான் முன்பு சொன்ன மாதிரி, ஜாதி ஒரு அடையாளம். பிறந்தோம். என்னைக்கேட்டு என் தாய் தந்தை படைத்தாரா? ஆக, இயற்கைச்செயலுக்கு நான் ஏன் வெட்கப்படவேண்டும் எனபதே அவரின் வாதம்.

    இதை தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியைக்காட்டி விவரிக்கிறார். பொறியாளர் நேர்முகத்தில் ஒரு திராவிடச்சார்புடையவர் இருக்கக்கண்டார். அவர் இவரின் பயோவைப்பார்த்து, ‘பார்ப்ப்னராஅ?’ என்று கேட்க, ஆம் எனறேன். ஏனென்றால், நான் ஏன் வெட்கப்படவேண்டும்? என் வேலை போனாலும் பரவாயில்லை. பின்னர், திரு முருகையன் அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவர். முருகையைந்தான் அக்கேள்வியைக்கேட்டவர்.

    அவர் தன்னை ஒரு பெரிய அறிவாளியாகக் காட்டிக்கொள்ளவே இல்லையென்பதை அவர் அறிவுச்சர்ச்சைகளில் இறங்காதததிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இதற்காகவே அவரின் பதிவைப்பற்றி சிலர் வைக்கும் விமர்சனம்: டோண்டு வின் வலைபதிவு சிந்தனையாளர்கள் அனுபவிப்பதற்கன்று. அதை டோண்டு மறைமுகமாக ஏற்க‌க்காரணம், அவர் தான் ஒரு பெரிய இன்டெலகுசுவல் என கருதியதில்லை.

    அனைத்துமே ஒரு பாமரனின் ஒளிவுமறைவு இல்லாத தனம். அதுவே அவரின் சிறப்பு. நினைத்தால் இந்துமதம், இந்துவா கருத்துக்கள், உபநிடதங்களின் உட்பொருட்கள், வேதங்கள் என்றெல்லாம் அவர் போகவில்லை. அதற்கு ஒரு சமயம் அவரிட்ட காரணம்: என் வாணாள் அரசுப்பணியில் போய்விட்டது. அங்கே இதற்கெல்லாம் இடமில்லை. என்பதுதான்.

    நம்மில் பலபேர் – என்னையும் சேர்த்துதான் – அரைகுறைகள். ஆனால் முழுக்குடங்களாக நடிக்கிறோம். டோண்டுவுக்கு பொய், புரட்டு, இல்லாததை இருப்பதாகக்காட்டி மற்றவரை ஏமாற்றும் குணமில்லை. என்னைப்போல எங்குபார்த்தாலும் இந்த நடிகர்களைக்காணும்போது டோண்டு போன்றவர்கள் எங்கிருந்தோ வந்த தென்றலாக வீசுகிறார்கள். உண்மையும் நேர்மையும்.

    ஒரு முறை அவர் டாக்டர் ருத்ரனிடம் வாதத்தில் அவரை ஒரு அரைகுறை வைத்தியர் என்று விட்டார். அது பெரிய மன வேதனையை அந்த டாக்டருக்கும் உண்டாக்கியதை பின்னூட்டங்களில் பார்த்தோம். டாக்டரின் துணைவி உமா அவர்களும் தன் கணவருக்கு நேர்ந்த கஷ்டத்தை டோண்டுவின் பின்னூட்டங்களில் போட்டார்.

    எதையும் விட்டுக்கொடுககாதே என்ற முரட்டுத்தன்மும் மூர்க்கமும் உடையோர் என்ன செய்திருப்பார்?

    வாதத்தைப்பெரிதாக்கி அத்தம்பதிகளை மேலும் மேலும் வாட்டியிருப்பர்.

    டோண்டு அங்கேதான் சிறக்கிறார். மனதார வருந்தி மன்னித்துவிடுங்கள் என்கிறார். அதோடு விட வில்லை. பின்னர் நடந்த பதிவர் கூட்டத்தில் டாக்டரைப்பார்க்கிறார். அவ்ரைக் கட்டித்த்ழுவி உசாவுகிறர். அப்படத்தையும் தன்பதிவுகளில் போடுகிறார்.

    முரட்டுப்பார்ப்பான் எனவழைக்கப்பட்ட டோண்டு ராகவனின் உண்மை முகம் என்னதெரியுமா? இதுதான். முரட்டுப்பார்ப்பான் எனபது ஒரு பொய் முகம். உண்மை முகம் எவரையும் மனிதாபின்மானத்தோடு அனைத்துக்கொள்வதே அவரின் உண்மை முகம். எனவேதான் சுவன்பபிரியனுடனும் ஒரு கிறித்துவரிடம் நலம் விசாரிக்க முடிகிறது.

    இன்னும் வரும்..ஏனென்றால், நான் கற்ற் பாடங்களை இன்னும் சொலலவில்லை. முடிவுரையில் வரும்.

  13. உண்மைதான். என்றுமே அவர் தன்னை பெரிய அறிவாளி என்று காட்டிக் கொண்டதில்லை. இரண்டு மணி நேரம் விமான நிலையத்தில் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கும் அலுப்பு தட்டவில்லை. எனக்கும் தாத்தா வரும் வரை நேரம் போனதே தெரியவில்லை. சமீப காலம் வரை தொலைபேசியில் அவரோடு தொடர்பிலேயே இருந்தேன். அவரது சாதி சம்பந்தமான கருத்துக்களில் உடன்பாடு இல்லா விட்டாலும் சிறந்த மனிதர்.

  14. ஆம், வெங்கட் சுவாமிநாதன் அவர்களை முதன் முதலாகச் சந்திக்கச் சென்ற பொழுது டோண்டு அவர்களுடன் சென்றிருந்தேன். அவருக்கு டோண்டுவையும் அறிமுகம் செய்து வைத்தேன். அபூர்வமான ஒரு ஆளுமை டோண்டு ராகவன். அவரது ஆன்மா ஆண்டவனுடன் கலந்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.

    ச.திருமலைராஜன்

  15. வணக்கம் வெ.சா ஐயா.\\இன்றைக்கு எங்கெங்கோ போய் இங்கே வந்து சேர்ந்தேன்.

    டோண்டு…வாசித்ததும் மனம் கனத்தது.

    பதிவுலகில் நீண்டகால நண்பர்.

    என்னுடைய அஞ்சலிகள் இங்கே.

    நேரம் கிடைத்தால் பாருங்கள்…

    https://thulasidhalam.blogspot.co.nz/2013/02/blog-post_8.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *